அரிதாக நேரம் கிடைக்கையில் வெப்சீரிஸ் பார்ப்பதுண்டு. மணிஹெயிஸ்டுக்குப்பிறகு நெட்ஃப்ளிக்ஸில் காலாபாணி தொடரைத்தான் வெகு சுவாரஸ்யமாக பார்த்தேன்.

மணி ஹெயிஸ்ட் வந்தபோது சரண் டெங்குக் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவன் உறங்கிக்கொண்டிருக்கையில் நான் அருகிலிருக்கும் பெஞ்ச்சில் அமர்ந்து தொடரைப் பார்ப்பேன். ஒருமுறை அவனுக்கு ட்ரிப்ஸ் கொடுக்கப்பட்டிருந்தது தீர்ந்துபோய், அவன் ரத்தம் அந்தக் குழாயில் மேலே ஏறத் தொடங்கியதைக் கடைசித் தருணத்தில்தான் கவனித்து அந்த வால்வை நிறுத்தினேன்.

சரண் இன்றும் இதைச் சற்று மிகைப்படுத்தி, “மகனுக்கு ரத்தம் போனாலும் மணி ஹெயிஸ்ட் பார்த்த ஆளாச்சே நீ!” என்பான். காலாபாணியும் அப்படித்தான், நம்பவே முடியாத அளவுக்கு விறுவிறுப்பாக இருந்தது. அதன்பிறகு அதர்வாவின் மத்தகம் என்னும் தொடர் கொஞ்சம் பரவாயில்லை ரகம்.

இப்போது அமேசான் பிரைமில் ‘சாம்பல்’ என்று இந்தியில் பொருள் கொண்ட ‘Raakh’ தொடர் வெகுகாலத்துக்குப் பிறகு வந்திருக்கிறது. இரண்டு வாரம் முன்பு முதல் சீசனின் 8 எபிசோடுகளையும் ஒரே நாளில், உட்கார்ந்த இடத்தில் லேப்டாப்பில் சார்ஜ் தீரத் தீர, தருணை அழைத்துப் போடச் சொல்லியும், சமையலறையின் மேடை மீது வைத்துக்கொண்டும் பார்த்து முடித்தேன்.

உணர்ச்சிவசப்பட்டு, “அடிப்பாவி! அவனுக்கு இப்பவே விஷம் வச்சிரு, இல்லைன்னா உன்னைக் கொன்னுருவான்” எனத் திரையைப் பார்த்து பேசிக்கொண்டிருக்கும் என்னை தருண் புன்னகையுடன் கடந்துசெல்வான். அபாரமான தொடர்!

ஏன் இப்படியெல்லாம் தமிழில் எடுப்பதில்லை?