லோகமாதேவியின் பதிவுகள்

Month: November 2023

420

 1971,ல் கலிபோர்னியாவின் சான் ராஃபெல் பள்ளியின் ஐந்து பேர் கொண்ட அந்தக் குழு  தங்களை ’வால்டோஸ்’ என்று அழைத்துக் கொண்டனர். அவர்கள் கையில் தற்செயலாக கிடைத்திருந்த ஒரு வரைபடம்  பள்ளியின் அருகிலிருக்கும் அடர் காட்டுக்குள் சட்டவிரோதமாக வளர்க்கப்படும் போதைச்செடிகளின் இருப்பிடத்தை காட்டியது.

ஸ்டீவ், டேவ், ஜெஃப்ரி, லேரி மற்றும் மார்க் ஆகிய அந்த ஐவரும் மாலை பள்ளி முடிந்த பின்னர் ரகசியமாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று கூடி அந்த செடிகளை தேடிக்கண்டுபிடிக்க முடிவெடுத்தனர்.

வால்டோஸ் குழுவினர் தற்போது

மறுநாள் பள்ளி வளாகத்தின் பின்புறமிருந்த லூயி பாஸ்டரின் வெண்கலச்சிலையின் அருகிலிருந்த பீச் மரப்பொந்திற்குள் 4;20 என்று மட்டும் எழுதியிருந்த     நீலகாகிதத்துண்டை வைத்துவிட்டு ஜெஃப்ரி சைக்கிளில் புறப்பட்டு சென்றான்   அந்த காகிதத்தை குழுவின் மற்ற நால்வரும் தனித்தனியே எடுத்துப்பார்த்துவிட்டு அவர்கள் முன்பே பேசி வைத்திருந்ததை போல பள்ளியின் பின்புறம் விரிந்திருந்த காட்டின் தொடக்கத்தில் இருந்த மாபெரும் ஓக் மரத்தடியில்  மிகச்சரியாக மாலை 4. 20 க்கு  சந்தித்தார்கள்

தினந்தோறும் மாலை  4.20க்கு தேடல் பயணத்தை துவங்கிய அக்குழுவின் முயற்சி  இரண்டு மாதங்களில் வெற்றியடைந்து, அங்கு வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகளின் இலைகளை போதைப்பொருளாக உருவாக்கி பயன்படுத்தவும் துவங்கிய அவர்கள் தங்களுக்குள் போதைக்கான ரகசிய குறியீடாக   4.20 என்பதை புழங்கினர். பிற்பாடு இந்த நேரம் பிறருக்கும் தெரிந்து 420, 4.20, 4:20 4/20 என்பவை கஞ்சா புகைத்தலுக்கான ரகசிய குறியீட்டு சொல்லாக மாறிவிட்டிருந்தது’

1991லிருந்து கஞ்சா புகைப்பவர்களின் கொண்டாட்டங்கள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 20 அன்று 4/20 வது தேதி என்பதை குறிக்க  அமெரிக்க தெருக்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது தொடர்ந்த வருடங்களில்  கஞ்சா போதையில் நடைபெறும் குற்றங்களையும், அவற்றை கட்டுப்படுத்துவதையும் காவல் துறையும் அதே 4.20 என்னும் என்பதை  சங்கேத குறியீடாக பயன்படுத்த துவங்கினர்

மே 1991ல்  கஞ்சா பயன்பாட்டிற்கான பிரத்யேக மாத இதழான ‘’High times ‘’முதன் முறையாக கஞ்சா பயன்பாட்டிற்கான குறியீட்டு எண்களாக 4.20 என்பதை குறிப்பிட்டது. கஞ்சா பயன்படுத்திய பல ராக் இசைக்குழுக்களும் இந்த எண்களையும் மாலை 4.20க்கு கஞ்சா பயன்படுத்துவதையும் பெருமளவில் பரப்பினார்கள்.

பின்னர் அமெரிக்காவெங்கிலும் கஞ்சா புகைப்பதற்கான நேரம் மாலை 4.20 என  குறிக்கப்பட்டது. உலகின் பல நாடுகளிலும் இந்த 4.20  கஞ்சா புகைத்தலை கஞ்சா உபயோகிப்பவர்களை, கஞ்சா குற்றங்களை குறிக்க பயன்படுத்தப்பட்டது.

கஞ்சா புகைப்பவர்களால் நேரிடும் வழிப்பறி உள்ளிட்ட அபாயம் இருக்கும் இடங்களில் 420 என்னும் எச்சரிக்கைப் பலகை காவல்துறையினரால் அப்போதிலிருந்து வைக்கப்படுகிறது. அப்பலகைகள் பெரும்பாலும் திருடப்பட்டு அகற்றப்படுகின்றன

2003ல் கஞ்சாவின் மருத்துவ உபயோகங்களுக்கான புதிய சட்டமும்  California Senate Bill 420  என்றே பெயரிடப்பட்டது. 2015ல் குறிப்பிட்ட அளவு கஞ்சாவை மனமகிழ்ச்சிக்கு பயன்படுத்துவதை அனுமதிக்கும் சட்டவரைவிற்கான போராட்டமான Initiative 71  என்பதை  முன்னெடுத்த  Adam Eidinger அதில்  வெற்றி பெற்றதும் தனது கார் லைசென்ஸ் எண்ணாக 420 என்பதை வைக்துக்கொள்ள அனுமதி பெற்றார்.

கஞ்சா பயன்பாட்டை குறித்தான பலநூல்களின் தலைப்புக்களிலும் 420 இடம்பெற்றது. 2018ல் டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க்  தனது நிறுவனத்தின் பங்குகளை 420 டாலர்களாக அறிவித்தபோது அவர் கஞ்சா பயன்பாட்டை மறைமுகமாக ஊக்குவிக்கிறார் என்னும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால் எலான் அந்த எண் கஞ்சா பயன்பாட்டுடன் தொடர்புள்ளதாக அமைந்தது தற்செயல் என்று சொல்லி அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பொதுவாக கஞ்சாவை பயன்படுத்துவோரும் கஞ்சா என்பதை அறிந்து கொண்டுமட்டும் இருப்போரும் கஞ்சா என்பது ஒரு இலை, இலைப்பொடி இலைப்பசை என்று மட்டுமே நினைக்கின்றனர்.

கஞ்சாப்பயிரென்பது  போதை அளிக்கும் வேதிச்சேர்மானங்களை கொண்டிருக்கும் கன்னாபிஸ் பேரினத்தின் மூன்று சிற்றினங்களான கன்னாபிஸ் சடைவா,இண்டிகா மற்றும் ருட்ராலீஸ் ஆகியவை. கஞ்சா ஆண் பெண் என தனித்தனி செடிகளாக இருக்கும். அரிதாக இருபால் மலர்களும் இருக்கும் கலப்பின வகைகளும் உண்டு.

இவற்றின் இலைகள், உலர்ந்த மலர்கள், தண்டு, மலரரும்பு  பிசின் மற்றும் விதைகள் கஞ்சா மாரிவானா, வீட், டோப் அல்லது பாட் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. உலகின் பல நாடுகளில் கஞ்சா செடியின் பாகங்களுக்கும், கஞ்சா பொருட்களுக்கும் பலவிதமான பெயர்கள் புழக்கத்தில் இருக்கின்றன.

கஞ்சா சாகுபடியில் சணப்பை (Hemp) நார்ப்பயிர்கள் தனியாகவும் போதைப்பண்புகள் கொண்டிருப்பவை தனியேவும் சாகுபடி செய்யப்படுகின்றது.

பொதுவாக கஞ்சா செடியிலிருந்து பாங், கஞ்சா, சரஸ், ஹஷீஷ் என்னும் நான்கு வகையான  போதைப்பொருட்கள் கிடைக்கின்றன.

  • பெண் கஞ்சா செடிகளின்  பிசின்  நிறைந்த உலர்ந்த மலர்த்தலை என்னும் மஞ்சரிகள் கஞ்சா எனப்படுகின்றன.   
  • உலர்த்தப்பட்ட இலைகள், இலைப்பொடி, இலைச்சாறு இலைப்பசை உருண்டைகள் பாங் எனப்படுகின்றது. இது கரும்பச்சை நிறத்தில் காணப்படும்.   
  • பச்சையாக பிரத்யேக நறுமணத்துடன் இருக்கும் சரஸ் இலை மற்றும் மலர்களின் பிசினை கொண்டு செய்யப்படுகிறது
  • மெல்லிய வளரிகள் கொண்டிருக்கும்  பிசின் நிறைந்த பெண்மலரரும்புகள் நன்கு அழுத்தப்பட்டு பிசைந்து உருவாவது ஹஷீஷ். இது பழுப்பு கருப்பு மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்

10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே மனித குல வரலாற்றுடன் நெருக்கமான தொடர்பிலிருக்கும் பல தாவரங்களில் கஞ்சாச்செடியை போல நெருக்கமான கலாச்சார  தொடர்புடையவை  வெகுசில தாவரங்கள் தான்.

கஞ்சா தனது காட்டுமூதாதையான  ஹாப்ஸ் எனப்படும் தாவரத்திலிருந்து பிரிந்து புதிய நிலப்பகுதிகளில் 28 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தனித்த தாவரமாக  தோன்றியது.  வளமான மண்ணும் சூரிய ஒளியும் இருந்த இடங்களில் கஞ்சா செழித்து வளர்ந்தது. 

மனிதகுடியிருப்புகள் தோன்றும் இடங்களிலெல்லாம் உடன் சென்று வளரும் “camp follower plants”. என்றழைக்கப்படும் தாவரங்களில் கஞ்சா செடியும் ஒன்று.

கஞ்சாச்செடி  மனிதர்களால் மட்டுமே மிக விரைவாக உலகின் பல இடங்களுக்கு பரவியது. இவற்றின் கனிகள் மிகச்சிறியவை, மேலும் சதைப்பற்றோ சுவையோ இல்லாதவை எனவே விலங்குகளும் பறவைகளும் கஞ்சா செடியின் பரவலில் அதிகம் பங்கெடுக்கவில்லை இவை உருண்டையாக இறகுகள் இல்லாமல் இருப்பவை என்பதால் காற்றில் பறந்து பரவும் சாத்தியமும் இல்லை. 

பெண் செடி

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாடோடிகளாக பல இடங்களுக்கு பெயர்ந்த மனிதர்களுடன் கஞ்சாசெடியின் விதைகளும் பயணித்து பலஇடங்களில் வளரத்துவங்கியது.  இந்த கூட்டுப்புலம்பெயர்தல் மனிதர்களுக்கும் தாவரங்களுக்குமான பகிர்வாழ்விற்கான மிகசிறந்த உதாரணங்களிலொன்று.  

ஒருமையப்புள்ளியில் இருந்து யூரேசியா முழுவதும் கஞ்சா பரவிப் பெருகியதை, இம்மாபெரும் நிலப்பரப்பின் பெரும்பாலான மொழிகளில்  கஞ்சாச்செடியின் பெயரைக்குறிக்கும்  ஒன்றுக்கொன்று வேர்த்தொடர்புடைய சொற்களைக்கொண்டும் அறியலாம்.

சணப்பை

கிரேக்க  ” kannabia ” மற்றும் லத்தீன  ” cannabis “ஆகிய பெயர்கள் சணப்பைக்கான அரேபிய சொல்லான “kinnab”லிருந்து தோன்றியிருக்கலாம்.

ஆங்கிலக்சொல்லான  “assassin”  என்பது ஹஷீஷ் உபயோகித்து போதையேற்றிக்கொள்ளும்  hashishin என்னும் சொல்லில் இருந்தே உருவானது என்றும் சொல்லப்படுகிறது

ஆங்கிலத்தில்  hemp ஜெர்மானிய மொழியில் Hanf ஆகிய இரண்டும் கிரேக்கத்தின் கவாபிக், லத்தீன கன்னாபிஸ், இத்தாலிய கனப்பா மற்றும் ருஷ்யாவின் கொனொப்லியா போன்ற சொற்களின் வேர்கொண்டவை.சணப்பையின் ஆங்கிலச்சொல்லான  hemp பண்டைய ஆங்கிலச்சொல்லான  hænep, லிருந்து வந்தது

அரபியில் இச்செடி qunnab, துருக்கியமொழியில் kendir,  ஜார்ஜிய மொழியில்  kanap’is  என்றும் பெயர் கொண்டிருக்கிறது.

ஆண் செடி

மத்திய ஆசியாவின்  அல்தாய் மலைத்தொடர்களில் 12000 ஆண்டுகளுக்கு முன்பு   தோன்றிய கஞ்சா மத்திய ஆசியாவின் நாடோடி இனங்களால் கிமு 700ல் கிழக்கு ஐரோப்பாவுக்கு அறிமுகமானது. ஆங்காங்கே பயிராகிக்கொண்டிருந்த கஞ்சா செடியின் நார் மற்றும் எண்ணெய் உபயோகங்களுக்கு பின்னர் தற்செயலாகவே கஞ்சாவின் போதைப்பண்புகள் தெரியவந்து அதன் சாகுபடி அதிகரித்திருக்ககூடும்.

 யுனானி மருத்துவ முறையை உருவாக்கியவரான கேலன் (Claudius Galen AD 129-199/217) இத்தாலியில் இரவுணவுக்கு பிறகு சிறிய கஞ்சா கட்டிகள் இனிப்புக்களுடன் பரிமாறப்பட்டது வழக்கமாக இருந்ததை குறிப்பிடுகிறார். 

ஒரு காலகட்டத்தில் கஞ்சா உண்பதைக்காட்டிலும் புகைப்பது அதிக போதையளிக்கும் என கண்டறியப்பட்டிருக்க கூடும்.

ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹெரோடோட்டஸ் (c. 484-c. 425 bc) என்னும் வரலாற்றாய்வாளர் ஈரானிய தொல்குடிகளான சித்தியன்கள் (Scythians) சிறுசிறு நிலவறைகளுக்குள் தவழ்ந்து சென்று அமர்ந்து கம்பளியால் உடலை போர்த்திக்கொண்டு நெருப்பில் கஞ்சாசெடியின் விதைகளை இட்டு அந்த புகையை  நுகர்ந்து மகிழ்ச்சியாக இருந்தததை விவரித்திருக்கிறார். ரோமனிய ஆட்சிக்காலத்தில் கஞ்சாவின் மருத்துவ பயன்பாடுகள் இருந்ததை பிளைனி, டயாஸ்கொரிடஸ் கேலன் ஆகியோர் பதிவு செய்திருக்கின்றனர்.

அரேபிய நூல்களின் மொழியாக்கங்களின் வழியே ஐரோப்பா கஞ்சாவின் மருத்துவப்பயன்களை அறிந்து கொண்டது. கிமு 2700 ல் எழுதப்பட்ட உலகின் மிகப்பழமையான சீன மருத்துவ நூலான pen-ts’ao, கஞ்சா செடியின் மருத்துவப்பயன்களை குறிப்பிடுகிறது

பண்டைய இந்தியாவில் கஞ்சா தயாரிப்பான பாங் விருந்தோம்பலின் அடையாளமாக அளிக்கப்பட்டிருக்கிறது. கிமு 10ம்  நூற்றாண்டில் சிந்துச்சமவெளி நாகரிகத்திலும் ஓபியத்துடன் கஞ்சாவும் சாகுபடி செய்யப்பட்டு போதைப்பொருளாக பயன்பாட்டில் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றது. 

சுஷ்ருதர் கஞ்சாவை உடலின் திரவங்களை சமப்படுத்துவதன் பொருட்டும் பாலுணர்வை ஊக்குவிக்கவும் வலிநிவாரணியாகவும் அளித்திருக்கிறார். சித்தர்களில் ஒருவரான கோரக்கர் கஞ்சாவை முதன்முதலில் மனச்சிக்கல்களுக்கு மருந்தாக பயன்படுத்தினார்.

பல எகிப்திய பிரமிடுகளில் கஞ்சாப்பொருட்கள் கிடைத்திருக்கின்றன. இரண்டாம் ராம்சேயின் கல்லறையில் இருந்து கஞ்சா மலர்களின் மகரந்தங்கள் கிடைத்தன.

1253ல் சூஃபி துறவிகள் மிக வெளிப்படையாகவே கெய்ரோவில் கஞ்சாவை சாகுபடி செய்தனர். எகிப்திய அரசு சூஃபியிசம்  மக்களுக்கு அச்சுறுத்தலானது என்று அறிவித்து கஞ்சா வயல்களை முற்றிலுமாக அழித்தது. எனினும் நைல் நதிக்கரையோர விவசாயிகளுடன் உடன்படிக்கை செய்துகொண்ட சூஃபிக்கள் பிற பயிர்களுடன் கலந்து கஞ்சாப்பயிரை சாகுபடி செய்தனர். 

 

1378ல் எகிப்திய அரசு கஞ்சாவுடன் சேர்த்து விவசாயிகளின் அனைத்துப்பயிர்களையும் அழித்தார்கள். கஞ்சா சாகுபடிக்கு உடந்தையாக இருந்த விவசாயிகளை கைது செய்து தலை கொய்தார்கள். எனினும் கஞ்சாவின் தேவை எகிப்தில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தது. தொடர்ந்த நூற்றாண்டுகளுக்கு எகிப்தில்  கஞ்சா சட்டவிரோதமாக சாகுபடியானது. இன்று வரையிலுமே கஞ்சா சூபிக்களின் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. 

சீனாவிலும் ஜப்பானிலும் மந்திர தந்திரங்களுக்கெனவும் மருத்துவ சிகிச்சையிலும் கஞ்சா பெருமளவில் பயன்படுத்தபட்டது. சீன மந்திரவாதிகள் கஞ்சா செடியின் தண்டுகளை பாம்புகளை போல் வளைத்து ஆவிகளை விரட்டும் சடக்குகளில் உபயோகித்தனர்  

அஸிரியர்களின் களிமண்கட்டிகளில் கஞ்சாவின் மருத்துவ உபயோகங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றது

புகையிலையுடன் திரும்பி வந்த கொலம்பஸின் இரண்டாம் உலகப்பயணத்துக்கு பிறகுதான் கஞ்சா புகைத்தல் ஐரோப்பாவுக்கு அறிமுகமானது

 திபெத்திய தாந்த்ரீக மரபில் கஞ்சா புகைநுகர்வு தீயஆவிகளை விரட்டும் என நம்பிக்கை உள்ளது.

கெளதம புத்தர் 1நாளுக்கு ஒன்று என 6 நாட்களுக்கு கஞ்சாவிதைகளை ஞானம் பெறு முன்பு எடுத்துக்கொண்டாரென்றும் சொல்லப்படுகிறது.

ஆப்பிரிக்க பழங்குடியினரிடம் கஞ்சா புகைக்கும் கஞ்சா பொருட்களை பயன்படுத்தும் வழக்கம் நெடுங்காலமாகவே இருக்கிறது. பசியை தூண்டவும் பல்வேறு சிகிச்சைகளுக்கு, போதைப்பொருளாகவும் வழிபாட்டிலும் கஞ்சா பெருமளவு அங்கு பயன்பாட்டில் இருந்தது . ஆப்பிரிக்க இனக்குழுக்கள் கஞ்சா வழிபாட்டிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.

பண்டைய இந்திய கிரேக்க ரோமானிய அசிரிய நூல்கள் பலவற்றிலும் கஞ்சாச்செடியின் மருத்துவ பயன்பாடுகள் கூறப்பட்டிருக்கிறது.  

16ம் நூற்றாண்டில் பிரேசிலுக்கு கப்பலில் வந்த  போர்த்துக்கீசிய அடிமைகள் தங்கள் உடைகளில் தைக்கப்பட்டிருந்த கஞ்சா விதைகளை பிரேஸிலில் விதைத்து அங்கு கஞ்சாவை அறிமுகம் செய்தனர் பிரேஸிலின் நிலத்தில் அடிமைகள் கொண்டு வந்த அனைத்து வகை கஞ்சாவிதைகளும் செழித்து வளர்ந்தது .  

திபெத்திலிருந்து கஞ்சாச்செடி நாடோடிப் பழங்குடியினரால் இந்தியாவிற்குச் கிமு 2000த்தில்  அறிமுகமானது கஞ்சா பரவலில் இந்தியாவின் பங்கு பெரும்பான்மையானது.  

கன்னாபிஸ் இண்டிகா  சிற்றினம் நூற்றாண்டுகளாக இமாலயமலைப்பகுதியிலும் சுற்றுப்புறங்களிலும் இயற்கையாக செழித்து வளர்ந்திருந்தது 

கஞ்சா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் சடங்கு, மத, சமூக மற்றும் மருத்துவ பழக்கவழக்கங்களுடன் தொடர்புடையது .18ம் நூற்றாண்டில் சீக்கிய குரு கோவிந்த் சிங் மிகக்கடுமையான போர்களுக்கு செல்லும் வீரர்களுக்கு கஞ்சா உருண்டையான பாங் அளித்திருக்கிறார்

இந்தியாவில் கஞ்சா செடியின் உபயோகம் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பிருந்தே பக்தி மார்க்கத்திலும் மருத்துவத்திலும் இருந்தது. 

மனிதர்களுக்கும் கஞ்சாச்செடிக்குமான நீண்ட நெடிய உறவை பல நாகரிகங்களின் தொன்மங்களும் உறுதிசெய்கின்றன. இந்திய தொன்மங்களில் கஞ்சா சிவனுடன் தொடர்புடையாதாகவே சித்தரிக்கப்படுகிறது. மகாபாரதத்தில் சிவமூலி என்று கஞ்சா குறிப்பிடப்படுகிறது

ஆலகாலவிஷம் தொண்டையில் நின்றதால் அவதிப்பட்ட சிவனுக்கு வலி நிவரணமாக கஞ்சா பார்வதியால் அளிக்கப்பட்டது என்றும், பாற்கடல் கடையப்பட்ட போது கிடைத்த அமுத்தத்தை சிவன் தனதுடலில் இருந்து உருவாக்கிய கஞ்சாவை கொண்டு தூய்மை படுத்தினாரென்றும்,ன்பாற்கடலில் கிடைத்த அமுதத்தின் ஒரு துளி பூமியில் விழுந்து கஞ்சா செடியானது என்றும் இந்திய தொன்மங்களில் கூறப்படுகிறது, சைவம் சிவனை கஞ்சாவின் தலைவன் என்கிறது

பண்டைய இந்தியாவிலும் இப்போதும் கஞ்சா பொருட்கள் சிவபக்தர்கள் சைவ துறவிகளால் பயனபடுத்தப்படுகிறது.  சிவ வழிபாட்டில் கஞ்சா பரவலாக இந்தியாவெங்கிலும் உபயோகிக்கபடுகிறது  .

கனவுகளில் கஞ்சா செடியை கண்டாலும் பயணங்களுக்கு முன் கஞ்சா வைத்திருப்பவரை  காண்பதும் நல்ல சகுனம் என பண்டைய இந்தியாவில் நம்பப்பட்டது

நவராத்திரியின் போது சிவலிங்கங்கள் பாங்’கால் அபிஷேகம் செய்யப்படுவதும், பட்டினிவிரதம் இருக்கும் சாதுக்களுக்கு விரதம் முடித்து வைக்க பாங் பானம் அளிப்பதும் தொன்று தொட்டு மத்திய மற்றும்  வட இந்தியாவில் இருக்கும் வழக்கம்

 துர்கா பூஜையின் இறுதி நாளன்று வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு கஞ்சா கலந்த பானம் அளிப்பது இன்றும் வங்காளத்தில் வழக்கமாக இருக்கிறது. வங்காளத்தின் தாரகேஸ்வரர் ஆலயத்தில்  சிவராத்திரியில் கஞ்சா இலைகளால் சிவனை அர்ச்சனை செய்கிறார்கள்

ஒரிஸா ஜகன்னாதர் ஆலயத்தில் சிவராத்திரியின் போது இறைவனுக்கும் பக்தர்களுக்கும் கஞ்சா அளிக்கப்படுகிறது

இந்தியாவில் பல பாகங்களில் ஹோலி தீபாவளி மற்றும் திருமணம் உள்ளிட்ட விழாக்களில் கஞ்சா பொருட்கள் பயன்படுத்த படுகிறது. மார்வாரிகளும் சிவபூஜையில் கஞ்சாவை உபயோகிக்கின்றன.

19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பிய ஹோமியோபதி மருத்துவர்கள்  கஞ்சாவிதைகளை பல்வேறு சிகிச்சைகளுக்கு பயன்படுத்தினர். 1840களில ஐரிஷ்மருத்துவரன  வில்லியம் புரூக்  (William Brooke O’Shaughnessy) உள்ளிட்ட பல மருத்துவர்கள்  கஞ்சாவை சிகிச்சையளிக்க பயன்படுத்த துவங்கினர்

1960களில் ஹிப்பி கலச்சாரம் உருவானபோது கஞ்சா மேலும் பரவலாக பயன்படுத்தப்பட்டது அவ்விளைஞர்களின் அடையாளமாகவே கஞ்சா புகைத்தல் சித்தரிக்கப்பட்டது.   

 1960களில் கஞ்சா பயன்பாடு உலகெங்கிலுமே அதிகரித்திருந்தது. பல்லாயிரக்கணக்கான அமெரிக்க  இளைஞர்களின் உதடுகளில் கஞ்சா சிகரெட் புகைந்தது. ஆனால் அறிவியலாளர்களுக்கு அச்சமயத்தில் கஞ்சா குறித்து அதிகம் தெரிந்திருக்கவில்லை

 அப்போது  30 வயதில் இருந்த இஸ்ரேலின் வைஸ்மேன் அறிவியல் நிறுவனத்தில் இளம் வேதியியலாளராக பணிபுரிந்த  ரஃபேல் மெக்குலம் ஆர்வமூட்டும் இயற்கைப்பொருட்களுக்கான தேடலில் ஈடுபட்டிருந்தார்.  1964ல் மெக்குலமும் அவரது குழுவும் முதன்முதலாக THC  எனப்படும் Delta-9-tetrahydrocannabinol  மற்றும் cannabidiol என்கிற CBDயையும் கஞ்சா செடியிலிருந்து கண்டறிந்தார்கள்

கஞ்சாவின் வரலாற்றில் கஞ்சாவுகெதிராகவும் கஞ்சா பயன்பாட்டை ஆதரித்தும் சட்டங்களும் சட்டத் திருத்தங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சமீப காலங்களில்  கஞ்சாவின் மருத்துவ பயன்பாடுகள் பல நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மருத்துவத்தின் பொருட்டு கஞ்சா சாகுபடியும் சட்டபூர்வமாக தொடங்கப்பட்டிருக்கிறது  

ஆச்சர்யமூட்டும் விதமாக மேற்கில் சமீபத்தில் துவங்கி இருக்கும் கஞ்சாவின் மருத்துவப்பயன்பாடுகள் குறித்த அறிதல் பண்டைய இந்தியாவில் பலநூறாண்டுகள் முன்பே புழக்கத்தில் இருந்திருக்கிறது 

சுவாசக்கோளறுகளுக்கு கஞ்சா தயாரிப்புக்கள் பயன்படுத்தப்பட்டதற்கான குறிப்புக்கள் சுஷ்ருத சம்ஹிதையில் குறிப்பிட்டிருக்கிறது.

பல்வலிக்கு சரஸை வலிக்குமிடத்தில் வைப்பதும் தூக்கமின்மை  மனஅழுத்தம் போன்றவற்றிற்கு கஞ்சா வீட்டு மருத்துவத்திலும் சாதாரணமாக  பண்டைய இந்தியாவில் உபயோகிக்காப்ட்டது கஞ்சா பாலுணர்வு ஊக்கியாகவும்  இந்தியாவில் பெரிதும் பயன்பாட்டில் இருந்தது 

கஞ்சா பலநூறாண்டுகளாக உலகில் வலிநீக்கியாக, வலிப்புகள் குணமாக பசிஉணர்வை தூண்ட பதட்டத்தை குறைக்கவென்று பயன்பாட்டில் இருந்தது. ஆஸ்பிரின் போன்ற வலி நிவரணிகளும் தூக்கமருந்துகளும் கண்டறியப்பட்ட பின்னர் கஞ்சாவின் மருத்துவப்பயன்பாடுகள் மெல்ல மெல்ல குறைந்தன. தற்போது மீண்டும் கஞ்சா சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுவது பல நாடுகளில் சட்டபூர்வமாக்க  அனுமதிக்கப்பட்டிருக்கிறது

2018,ல் கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்பட்ட Epidiolex,  வலிப்பு நோய்க்கான சிகிச்சைக்கென சந்தைப்படுத்தப்பட்டது

மேலும் மூளைப்பிளவாளுமைச்சிக்கல், புற்றுநோய், பார்கின்சன், OCD போன்றவற்றிற்கும் கஞ்சாபொருட்கள் உலகெங்கிலும் பரவலாக மருத்துவரின் பரிந்துரையுடன்  உபயோகிக்கப்படுகின்றன

கடந்த செப்டம்பர்  2020ல் அமெரிக்கா கஞ்சா பயன்பாட்டிற்கான சட்டங்களையும் கெடுபிடிகளையும் தளர்த்தியது 

THC மற்றும் THCக்கு இணையான செயற்கை பொருட்களை  FDA   புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் சிகிச்சையினால் உண்டாகும் பக்கவிளைவுகளுக்கான மருந்தாக அங்கீகரித்திருக்கிறது

ஆட்டிசம், வலி நிவாரணம், உறக்கம் வரவழைப்பது ஆகியவற்றில் கஞ்சா வேதிப்பொருட்களின் பங்கு குறித்து மேலும் ஆய்வுகள் தொடர்ச்சியாக நடந்த வண்ணம் இருக்கின்றன. 

இந்தியாவில் முதன்முதலாக CSIR-IIIM ல் கஞ்சா ஆய்வுத்திட்டம் 2023ல் கனடாவைச்சேர்ந்த ஆய்வு நிறுவனத்துடன் கூட்டாக துவங்கப்பட்டு ஜம்முவில் மருத்துவ உபயோகங்களுக்காக கஞ்சா சாகுபடி செய்யப்படுகிறது. ‘Cannabis Research Project’ of CSIR-IIIM  என்னும் இத்திட்டத்தின் முதன்மை நோக்கம்.  வலிப்பு, புற்று மற்றும் நரம்பு நோய்களுக்கான வலி நிவாரணியாக கஞ்சாவை பயன்படுத்துதல். இத்திட்டத்தில் சாகுபடியாகும் கஞ்சாப்பயிர் ஏற்றுமதித்தரம் வாய்ந்தது 

மனிதகுலத்துடன் பின்னிப்பிணைந்த கஞ்சாவின் பயன்பாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் இடையிலான  உறவு சிக்கலானதாவே இருக்கிறது

இனி வரும்காலங்களில் , ​​கஞ்சாவின் மருத்துவ உபயோகங்கள் மற்றும் கவனமான கஞ்சா நுகர்வு ஆகியவற்றிற்கான தீவிரமான ஆய்வுகள் தேவைப்படுகின்றது

  போதைப்பொருளாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறியப்பட்டிருக்கும் கஞ்சா முறையான விரிவான ஆய்வுகள் நடந்தால் மனிதகுலத்திற்கு வரப்பிரசாதமாக மாறவும் கூடும்

அகழ் இதழில் வெளியான இக்கட்டுரையின் இணைப்பு

மலமும் கலையும்!

’குருகு’வில்  ஜெயராமின் ’மலம் என்னும் ஊடகம்’  கட்டுரை வந்திருந்தது. சரண்  தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு ’’ஜெயராம் அண்ணா ஊடகங்களை மலம்னெல்லாம் சொல்லி என்னவோ எழுதியிருக்காங்க’’ என்று  எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான். மலம் என்னும் சொல்லையே அச்சில் கூட அவ்வளவாக பார்க்காததால் தலைப்பே புரிய சற்று நேரமாகிறது.

மிக சிறப்பான வித்தியாசமான கட்டுரை.  சரணிடம் மாலை கட்டுரை குறித்து விரிவாக பேசப் போகையில் ’அய்யே’ என்றான்.

பல ஆண்டுகளுக்கு முன்பு  படுகர் இனத்தவளான  என்  நெருங்கிய தோழி ராஜியின் வீட்டில் ஊட்டியில் இருக்கையில் அதிகாலையில் அவளது அப்பாவின்  உருளைக்கிழங்கு விளையும் வயலில் ஒரு லாரி முழுக்க மனிதக்கழிவுகளை கொண்டு வந்து கொட்டியதை பார்த்தபோது எனக்கும் அப்படித்தான்  இருந்தது. அதை என்னால் மறக்கவே முடியவில்லை இன்று வரை உருளைக்கிழங்கும் உண்பதில்லை. ஊட்டியில் கேரட் பீட்ரூட்டுக்கெல்லாம் கூட அதை போடுகிறார்கள் என்றாலும் நான் கண்ணில் பார்த்துவிட்டதால் உருளைகிழங்கு ஒவ்வாமை வந்துவிட்டிருக்கிறது.

பின்னர் இதுகுறித்து வாசித்தேன். இரவுகளில் குடியிருப்பு பகுதிகளில் செப்டிக் டேங்க்’களிலிருந்து சேகரிக்கப்படும் மனித கழிவுகளில் லாரி டேங்கின் மேற்புறம் மண்ணைக்கொட்டி மறைத்து இருள் விலகாதபோதே  வயல்களில் உரமாக போட்டுவிடுவதால் அந்த மனித கழிவு உரத்துக்கு  night soil என்றே பெயர்.

இப்போது கழிவுகளை சேகரித்து மட்க செய்து உரமாக்குகிறார்கள் என்று சொல்லப்பட்டாலும், இன்னும் அப்படியே untreated  மனிதகழிவுகளும் உரமாக உபயோகத்தில் தான் இருக்கிறது அவற்றில் இருக்கும் நோய்க்கிருமிகள் காய்கறிகளின் தோலில் மறைந்து தங்கியிருக்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.

மனிதக்கழிவுகளை பண்டைய பல நாகரீகங்களில் இப்படி உரமாக உபயோகித்திருக்கிறார்கள்.

ஏதென்ஸ் நகரில் மாபெரும் ஏரிபோன்று மனித கழிவுகள் சேகரிக்கப்பட்டு அவை விவசாய நிலங்களுக்கு கால்வாய்களில் அனுப்பப்பட்டன.

அப்படியே சீனா ஹாங்காங் சிங்கப்பூரிலும் முன்பு இப்படி மனித கழிவுகளை மட்கச் செய்யாமல் பயிர் சாகுபடியில் உரமாக பயன்படுத்தப் பட்டது.

ஜப்பானில் மனித கழிவுகளை உலரச்செய்து மலையாக குவித்து வைத்துக்கூட உரமாக விற்பனை செய்யப்பட்டது.ஜப்பனிய அடுக்ககங்களின் உரிமையாளர்களுக்கு இந்த உர விற்பனை ஒரு கூடுதல் வருமானமாக இருந்தது.டோக்கியோவில் இதற்கு  humanure என்று பெயரிருந்தது.

அதிலும்  சத்தான உணவை சாப்பிடும் செல்வந்தர்கள் வாழும் அடுக்ககங்களின் கழிவுகள் விலை உயர்ந்தாக இருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் செயற்கை உரங்கள்  புழக்கத்தில் வந்த பிறகு தான் இந்த கழிவு உரங்களின் பயன்பாடு மெல்ல மெல்ல குறைந்தது. உலகமெங்கிலும் இப்போது 1% மட்டுமே  மல உரம் பயன்பட்டில் இருக்கின்றன.

மெக்ஸிகோவிலும் மத்திய அமெரிக்காவிலும் இப்படி மனிதக்கழிவுகளை உரமாக்குவது பயன்பாட்டில் இருந்தது. ஆஸ்டெக் பழங்குடியினர் மணலையும் மனிதக்கழிவுகளையும் கொண்டு chinampas என்னும் செவ்வக மணல் மேடுகளை உருவாக்கி அவற்றில் பயிர்ச்சாகுபடி செய்து 7 முறை ஒரே பயிரில் அறுவடை செய்துவந்தார்கள்.

நவீன ஜப்பானில் இன்றும் மனிதகழிவுகளை சேகரித்து உரமாகும் வழக்கம் இருக்கிறது.

நான் சிறுமியாக இருக்கையில் என் தாத்தா வீட்டில் கழிப்பறை பக்கெட்டுகளை எடுத்துச்சென்று சுத்தம் செய்து மீண்டும் அதே இடத்தில் வைக்கவென்றே குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தமக்கள் இருந்தார்கள் அவர்களுடன், அவர்களின் குழந்தைகளுடன்  கலந்து பழக எங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது

அவர்களுக்கென்று தனித்த கொப்பரை காபியும் அந்நாட்களில் தயராகும். காலம் மாறி இப்போது மலக்கரைசலை  வயிற்றுக்குள் செலுத்திக்கொண்டு உயிர்பிழைக்கிறோம் சாதி மத பாகுபாடேதுமின்றி.

ஹவாயில் சோதனை விவசாய முயற்சியில் இப்போது மனிதக்கழிவுரங்களில் காய்கறிகள் வளர்க்கப்படுகின்றன. அப்படி மனிதகழிவுரங்கள் கொண்டு விளைவிக்கபட்ட குடைமிளகாய்கள் அங்கு விற்பனைக்கு வந்திருந்த புகைப்படம் இது

மல உம் போலவே மனிதர்களின் சிறுநீரும் அதன் நைட்ரஜன் காரணமாக வயல்களின் தெளிக்கப்படுவதும் பல நாடுகளில் புழக்கத்தில் இருக்கிறது.

ஜெர்மனியில் அப்படி இயந்திரம் மூலம் வயலில் சிறுநீர் பாய்ச்சப்படுகிறது

பிலிப்பைன்ஸின் ஸேவியர் பல்கழைக்கழகத்தில் மனிதச்சிறுநீர் கலந்த வயலில் செழிப்பாக கத்தரிக்காய்கள் உள்ளிட்ட பல காய்கறிகள் விளைவிக்கபட்டன. சிறிநீரை சேகரிக்கவென்றே நகரில் பிரத்யேகமாக  urine diversion  கழிப்பறைகள் உள்ளன.

1990களில் இருந்தே மனிதக்கழிவுரங்களை பயன்படுத்துவதற்கான விதிகள், தற்காப்பு நடவடிக்கைகள், எச்சரிக்கைகள் ஆகியவை பலநாடுகளில் அறிவியலாளர்களால் முன்வைக்கப்பட்டன.2006ல் உலகசுகாதார அமைப்பு மனிதக்கழிவுரங்களை பயனபடுத்துவதற்கான முறையான பரிந்துரைகளை, வழிமுறைகளை வெளியிட்டது.

மலம் இப்போது மருத்துவத்துறையிலும் பயன்பட ஆரம்பித்திருக்கிறது. நுண்ணுயிரியல் துறையில் Fecal microbiota transplantation (FMT) என்னும் ஒரு புதிய சிகிச்சை முறை இப்போது வெற்றிகரமாக பலரை குணமாக்கிக்கொண்டு இருக்கிறது

நம் அனைவரின் உடலிலும் உடலுக்குள்ளும் நுண்ணுயிரிகள் பல இருக்கின்றன. அவற்றில் குடற்பகுதியில் இருப்பவற்றில் பல நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. நாம் எப்போதாவது ஆன்டிபயாடிக்குகள் எடுத்துக்கொள்ளுகையில் அவை பெனிசிலின் போல  உடலின் மொத்த நுண்ணுயிரிகளையும் அழிக்கும் அகலக்கற்றை நுண்ணுயிரெதிர்ப்பியானால் நமக்கு மீண்டும் குடல் பகுதியில் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் குழாம் அமைய சிறிது நாட்கள் பிடிக்கும். அவை இருந்தால் மட்டுமே ஜீரணம் சரியாக நடக்கும்

இந்த FMT எனப்படுவது நல்ல ஆரோக்கியமான ஒருவரின் மலக் கரைசலை, நோயுற்ற குறிப்பாக செரிமானக் கோளாறு குடல் தொடர்பான தீவிர சிக்கல்கள் இருக்கும் நோயாளிகளின் குடலுக்குளேயே செலுத்தி அவரது குடலில் அந்த நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை வளர்த்து நோயாளியை குணப்படுத்தும் ஒரு சிகிச்சைமுறை.

இந்த முறையில் உடல்பருமன், இரைப்பை மற்றும் குடல் அழற்சி உள்ளிட்ட பல உடல்நிலைகள்  வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்படுகின்றன.

4 ம் நூற்றாண்டில் சீன மருத்துவர் Ge Hong இந்த மலமாற்று சிகிச்சையை பல வயிற்றுக்கோளாறுகளுக்கு முயற்சித்து வெற்றி பெற்றிருக்கிறார்.

1958ல் சோதனைமுயற்சியாக சிகிச்சையளிக்கப்பட்ட இந்த மலமாற்ற சிகிச்சையான FMT கடந்த பத்தாண்டுகளில் உலகெங்குமே பல வகையான சிகிச்சைகளுக்கு பயன்படுகிறது.

மற்ற சிகிச்சைகள் பயனளிக்காத போது நோயாளிக்கு இந்த மல சிகிச்சை குறித்து விளக்கமாக எடுத்துச்சொல்லி அவர் சம்மதத்தின் பேரிலேயே இதை செய்யவேண்டும் என FDA அனுமதியளிதிருக்கிறது.

இந்த மலசிகிச்சையில் புற்றுநோய்க்கும் ஆட்டிஸத்துகும் கூட சிகிச்சையளிக்கும் பரிசோதனைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன பல நாடுகளில் விந்து வங்கி ரத்த வங்கி இருப்பதைபோல் ஆரோக்கியமான மல டோனர்கள் மல வங்கி என்றழைக்கபப்டும் வங்கிகளில் பெயரை பதிவு செய்துகொண்டு காத்திருக்கிறார்கள் மல மாத்திரைகள் கூட சிகிச்சையில் பயன்பாட்டில் இருக்கிறது.

பன்னிரு படைக்களத்தில் ரம்ப கரம்பர்களின் நோயைகுறித்த அத்தியாயத்தில் சபரர் ’’நோய் என்பதே மருந்துக்கான கோரிக்கை மட்டும்தான். எங்கோ மருந்து உள்ளது.” என்பார் அப்படி நோய்களுக்கு தாவர, ஜங்கம, தாது. நுண்ணுயிரி மருந்துகள் தேடித்தேடி கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது மலத்திலிருக்கும் மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது

மேலதிக தகவல்களுக்கு:

https://www.livescience.com/61044-poop-pills-effective-cdiff.html
https://www.hopkinsmedicine.org/health/treatment-tests-and-therapies/fecal-transplant

கேரளம்

பொள்ளாச்சிக்கு வெகுஅருகில் தான் கேரளா இருக்கிறது. இங்கிருந்து கொழிஞ்சாம்பாறை வண்ணாமடைக்கெல்லாம் உள்ளூர் பேருந்துகள் இயங்குகின்றன. ஓணத்துக்கு விடுமுறையும்  எங்களூருக்கு உண்டு. கல்லூரியிலும் கேரள மாணவிகள் கணிசமாக இருக்கிறார்கள்.  பாலக்காட்டுச்சாலையில்தான் கல்லூரி என்பதால் கல்லூரி வாசலில் கேரளப் பேருந்துகள் நின்றுசெல்லும்.

 தாவரவியல்  சுற்றுலாவுக்கும் அடிக்கடி வயநாடு, திருச்சூர், கொச்சி என்று நாங்களும் போவதுண்டு

எனக்கு கேரளா மீதான சாய்வு அதிகமுண்டு  மலையாளம் பேசவும் கேட்கவும் பிரியப்படுவேன். வேடசெந்தூர் வீடும் கொஞ்சம் கேரள பாணியில் தான்  இருக்கிறது ஏராளம் செடி கொடி மரங்களும் வீட்டு முகப்புச் சுவற்றில் பதிக்கப்பட்டிருக்கும் கதகளி முக மரச்சிற்பமும், வீட்டைச்சுற்றிலும் கல்விளக்குகளும் மாலைநேரங்களில் விளக்கேற்றலுமாக,

சமீபத்தில் இருநாட்கள்  தருணுக்காக கேரளா செல்ல வேண்டி வந்தது. 50 நாட்கள் காடுறையும் பயிற்சியின் போது பெருமழையில் தனது காமிராவுடன் நனைந்தான் அதில் காமிரா லெனஸில் நீர்புகுந்து பூஞ்சை தொற்று உண்டாயிருந்தது

முன்பும் இப்படி ஆகும் போது கோவையிலிருந்து சென்னைக்கு அனுப்பி சரி செய்வது வழக்கம். இம்முறையும் அப்படியே அனுப்பினான், எனினும் கட்டணம் 16 ஆயிரம் ஆகும் என்றார்கள். திரும்ப வாங்கிக் கொண்டு  புகைப்படக்கலையில் இருக்கும் தன் நண்பர்களிடம் விசாரித்தான்.  விஷ்ணு என்னும் மணவிழாக்களை புகைப்படம் எடுக்கும் தருணின் மலையாளி நண்பன் திருச்சூரில் நியாயமான கட்டணத்தில் சரிசெய்பவர்கள் இருக்கிறார்கள் என்றதால் லென்ஸை கொடுக்கவும், சரிசெய்து வாங்கவும் என இருமுறை திருச்சூர் சென்றோம்

பொள்ளாச்சியில் இருந்து  2 மணி நேரத்தில் செல்ல நல்ல அகலமான தேசிய நெடுஞ்சாலை   NH 544, (முன்பு   NH 47) இருப்பதால் சுகமான பயணம்.  இருவரும் பிடித்த பாடல்களை மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டு சென்றோம்.தருணின் பிரியப்பட்ட ’’படே அச்சே லகத்தே ஹே’’ எனக்கும் பிடித்திருந்தது பலமுறை கேட்டோம். 

’’ஹம் தும் கித்னே பாஸ் ஹே

கித்னே தூர் ஹே சாந்த் சித்தாரே’’

திருச்சூரில் நுழையுமுன் மெர்சி, செயிண்ட் தாமஸ் உள்ளிட்ட பல பெண்கள் கல்லூரிகளையும் சில உயர்நிலைப்பள்ளிகளையும் கடந்தோம். இப்போது பருவத்தேர்வுகள் நடப்பதால் 12 மணிவாக்கில் ஒருவர் கைகளை ஒருவர் பிடித்துக்கொண்டும், அண்ணனோ அப்பாவோ முன்னால் அமர்ந்திருக்க இருசக்கரவாகனங்களில் பின்னால் அமர்ந்துகொண்டும் பேருந்துக்காக காத்துக்கொண்டுமிருந்த பல அழகிகளை கண்டோம். தருண் முகம் மலர்ந்து விகசித்து நிறைந்து காரோட்டினான் . 

தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளித்த, அலையலையான கூந்தலுடன் (சிற்றலைகள்) சேச்சிகள் கைப்பையுடன் பேருந்துக்காக காத்திருந்தனர். தினக்கூலிக்கு செல்லும் பல பெண்கள் தோளில் துண்டும் நைட்டியுமாகவே சென்றார்கள். இதை சில வருடங்களாகவே கேரளத்தில் பார்க்கிறேன். தமிழ்நாட்டில் அப்படி ஆண்களின் சட்டையை புடவைக்கு மேலே போட்டுக் கொள்கிறார்கள் சமீபகாலமாக.

வழியெங்கும் ஏத்தம் பழங்களும் அவற்றின் சிப்ஸ்கடைகளும் நிறைந்திருக்கின்றன. அவற்றிற்கு இணையாகவே கிரில் சிக்கன் கடைகளும் முளைத்திருக்கின்றன.

சந்தடியான மிக குறுகிய ஒரு கடைத்தெருவில் லென்ஸ் கடை இருந்தது. காரை நிறுத்த தேடித்தேடி ஒரு இடம் கண்டுபிடித்தோம்.பிடரி வரை வழியும் கேசமும், ஒற்றைத்தோடுடைய செவியனும் ஒல்லியான ஒல்லியுமாக தருணின் நண்பன் விஷ்ணு காத்திருந்தான்ன் . லென்ஸ்காரரும் அவனுமாக மலையாளத்தில் சம்சாரித்தனர் ( யே ஞான் வைல்ட்லைஃப் இல்லியா.ஞான் கல்யாணமா, தே ஆ புள்ளியா வைல்ட் லைஃப்) 

லென்ஸ் தூய்மையாக்கப்பட்டு சிலநாட்களில் கிடைக்கும் என்று சொல்லபட்டபின்னர்  நாங்கள் புறப்பட்டோம்

விஷ்ணு எங்களை பிரபல திருச்சூர் பூரம் விழா நடக்கும்  வடக்குநாதர் (சிவன்)  அம்பலத்துக்கு அழைத்துச் சென்றான்

 

புராணங்கள் அக்கோவில் பரசுராமரால் உருவாக்கப்பட்டது என்கிறது. சங்கரரின் பெற்றோர் வடக்குநாதர் முன்பாக செய்துகொண்ட பிரார்த்தனைகள் பேரில்தான் அவர் பிறந்தார் என்றும் சொல்லப்படுகிறது

கோவிலுக்கு எதிரில் இரு தேவி ஆலயங்கள் உள்ளன.பார மேட்டு காவு பகவதியும் திருவெம்பாடி பகவதியும் அருள்பாலிக்கிறார்கள். 

சிவராத்திரியின் போது கோவிலில் லட்ச தீபம் ஏற்படுமென்று சொன்னான் விஷ்ணு. பூரம் விழாவின் போது நூற்றுக்கணக்கில் அலங்கரிக்கபட்ட யானைகள் நிற்கும் இடமும் வலிய மற்றும் சிரிய வெடிகள் வெடிக்கப்படும் பரந்த வெளியும் புல் பரவிக் காணப்பட்டது.

வாகைமரங்கள் வெகுதூரம் கிளைகளோடி நின்றது, அதனடியில் காரை நிறுத்தினோம்.

கேரளாவின் மேற்கு பார்த்த சிவாலயங்களில் இதுவுமொன்று. அடுத்தமுறை அதிகாலை வரவெண்டும் என நினைத்துக் கொண்டேன்

அன்று வார இறுதிஎன்பதால் கோவிலை சுற்றிலும் நல்ல கூட்டம். கார்களும் பைக்குகளும் ஏராளம் நின்றன. பல காதல் ஜோடிகள். அருகிலிருக்கும் பள்ளியின் சிறுமிகள் பள்ளிச்சீருடையில்  தத்தமது காதலர்களுடன் அமர்ந்து ஐஸ்கிரீம் சுவைத்துக்கொண்டிருந்தனர். 

உச்சிவேளை என்பதால் கோவில் நடை அடைத்திருந்தது. சாத்திய நடையையும் , பெருமதில்களுக்கு பின்னிருந்து கரும்பாறையென தெரிந்த யானை முதுகுகளையும் கோவில் கூரையின் உயரத்துக்கு இருந்த வெண்கல சுற்றடுக்கு விளக்கு கம்பத்தையும் மட்டும் பார்த்தோம்.

பலர் வெட்டியாக அமர்ந்துகொண்டும், லாட்டரி சீட்டுக்கள் விற்றுக்கொண்டுமிருந்தனர். இரு வயசாளிகள் ஒரு கல்திட்டில் அமர்ந்து மும்முரமாக செஸ் விளையாடிக்கொண்டிருந்தனர். இருவருக்கும் முள்முள்ளாக தாடி, அழுக்கு வேட்டி பழுப்பேறிய சட்டை ஆனால் உற்சாகமாக காய்களை நகர்த்தி கொண்டிருந்தனர். அவர்களை பார்த்தது மகிழ்சியளித்தது. ஏற்ற இறக்கங்களுடன் வாழ்வை ஏறக்குறைய வாழ்ந்து முடித்து,  மீதமிருக்கும் வாழ்வை இப்படி  பொருள் கொண்டதாக மாற்றிக்கொண்டு விடுபவர்களை எனக்கு பிடிக்கும்.

எங்களூரில் அரசமரத்தடி விநாயர்கோவில் கல்திட்டில் வீட்டிலிருந்து ஏறக்குறைய துரத்தப்பட்ட ஊர்கவுண்டரும் இன்னும் சிலரும் அரிதாக ஓரிருசொற்கள் பேசிக்கொண்டு வந்துபோகும் பேருந்துகளை வேடிக்கை பார்த்தபடிக்கு சிலைகளை போல சாப்பாட்டு நேரத்துக்கு அழைப்பு வரும்வரை  நாளெல்லாம் அமர்ந்திருப்பார்கள். அவர்களை அப்படி பார்ப்பது துயரளிக்கும்

வடக்குநாதர் கோவிலுக்கெதிரே இருந்த கிளைச்சாலையில் நல்ல உணவகங்கள் அடுத்தடுத்திருந்தன அவற்றில் அக்‌ஷயாவுக்கு சென்றோம் மிக்சுவையான கப்பையும் மீன்கறியும் கிடைத்தது

பிரியாணியை அரிசிச்சோறு தனியாகவும் மசாலா தனியாகவும் இறைச்சி தனியாகவும் அடுக்கடுக்காக வைத்து தருகிறார்கள்.  நல்ல   சுத்தமான உணவகம். 

கல்லாவில் கண்ணாடிப் பெட்டியில் பழம்பறிகள் காத்திருந்தன மிருதுவாக பொன்மஞ்சளில் மினுங்கிக்கொண்டு (கன்னிப் பெண்ணின் கன்னம் போல் -ஜெ)

அவற்றில் இரண்டை வாங்கிக்கொண்டேன். அவ்வபோது சிறுமழை தூரலாக பெய்வதும் உடனே இளவெயிலடிப்பதுமாக இருந்தது.  2 மணிக்கெல்லாம் வெயில் முதுகை அறைந்தது தமிழகத்தை விட கேரளத்தில் வெயில் உக்கிரமாக இருந்தது.

பாலக்காடு வனப்பகுதியில்  பணிசெய்யும்  யானைசிவா அவனது ஆசிரியை என்பதால் ஒரு பிரத்யேக விஷயத்துக்கென அனுமதி வாங்கி என்னை  அழைத்திருந்தான். எனவே திருச்சூரிலிருந்து பாலக்காடு சென்று அங்கு மாலை வரை இருந்துவிட்டு ஊர் திரும்பினோம் வழியெங்கும் லண்டானா, கம்யூனிஸ்ட் பச்சை செடிகள் ஏராளமாய் பரவி இருந்தன.

அங்கு  கிடைத்த அந்த அனுபவத்தை சிவாவின் பணி நிமித்தம் பொதுவெளியில் பகிரமுடியவில்லை அது ஒரு அற்புதமான அரிய அனுபவம். அன்பு அதுவும் கள்ளமற்ற தூய அன்பு அதில் திளைத்தது என என் வாழ்வில் மறக்கவே மறக்க முடியாத இனிய அனுபவம். டாப்ஸ்லிப் யானைப்பாகன்  (கல்பனா) பழனிச்சாமியின் மனைவி சாந்தி அங்கிருந்தார் அவரளித்த எலுமிச்சை இலை கிள்ளிப்போட்ட அருமையான கட்டஞ்சாயா குடித்தோம்

வீடுவர பின்னிரவானது. பழம்பறியும் பானைத்தண்னீருமாக இரவுணவு முடித்தேன். 

நேற்று லென்ஸ் சரியாகிவிட்ட தகவல் வந்ததால் மீண்டும் இன்று திருச்சூர். இம்முறை அதிகாலை ஐந்துமணிக்கே புறப்பட்டோம், காலை 7 30க்கு கோவிலில் இருந்தோம் அந்நேரத்துக்கே கோவிலில் ஓரளவுக்கு கூட்டம் இருந்தது

 மிக மிக அழகிய, மிகப்பழைய மிக தூய்மையாக பராமரிக்கப் படும் கோவில்.  நியதிகள் எழுதிவைத்திருக்கும் நீல நிற போர்டுகளை தவிர யாருமே எந்த கெடுபிடிகளையும் செய்யவில்லை. மிக அமைதியாக இருந்தது வளாகம். கார்த்திகை மாத மென்பதால் கருப்புச் சேலையும் கருப்பு வேட்டியுமாக சபரிமலைக்கு மாலையிட்ட பலருமிருந்தனர்,

அங்கே  வேண்டிக்கொண்டால் தேர்வில் நல்ல மதிப்பெண் வரும் என்னும் நம்பிக்கை இருப்பதால் மாணவ மாணவிகள் அதிகமிருந்தனர்

பல கேரள கோவில்களைப்போலவே மேல்சட்டை, லுங்கி அணிந்து வர இங்கும் அனுமதியில்லை. ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கும் அனுமதி இல்லை

கோவிலை சுற்றுகையில் அர்ஜுனன் வில்லுக்குழி என்று ஒரு தீர்த்தம் இருந்தது அதை பச்சைவலையிட்டு மூடிவைத்திருந்தனர். வலையின் கிழிசல் வழி எட்டிப் பார்த்தோம் நீண்டவிழி போல அல்லது வில்போன்ற வடிவ பாறைக்குழியில் நீர் நிறைந்திருந்தது. அதன் ஒரு நுனியில் பிரகாசமான நட்சத்திரவடிவ  மஞ்சள் மலர்களுடன் ஒருசிறுசெடி இருந்தது.

 அந்த தீர்த்தத்தில் கைகால்களை தூய்மைசெய்தபின்னரே கோவிலுக்குள் நுழைய வேண்டும் என்னும் வழக்கம் முன்பிருந்து பிற்பாடு அவற்றை பாதுகாக்க இப்படி மூடி வைத்திருப்பதாக பின்னர் கேட்டறிந்தேன். 

மிக தொன்மையான மிகமிக அரிய ஒவியங்கள் சுவர்களெங்கும் இருந்தன நல்ல தடித்த உருவத்துடன்  குட்டையான நீலக்கண்னன் ஒரு பாறையில் அமர்ந்து குழலூத மல்லிகைமலர்ச்சரம் சுற்றிய கொண்டையிட்ட பேரிளம்பெண்கள் சிலர் அவனை தோளுக்கு பின்னிருந்து குனிந்து பார்க்கும் சித்திரம் வசீகரமாயிருந்தது,அனைத்து ஓவியங்களும் அடிப்பக்கம் விளக்குப்புகையால் அழிந்தும் சேதமுற்றும் இருந்தன,

சுற்றும் வழியெங்கும் விளக்கேற்றும் சிறு பள்ளத்துடன் இரண்டடியில் தரையில் பதிக்கப்பட்ட கல்தூண்கள் இருந்தன. கல்பாவையரும் ஆங்காங்கே இருந்தனர்.  முன்வாசலின் மாபெரும் வெண்கல விளக்குகளிலிருந்து  கல்தூண் பள்ளம் எல்லாமே கண்ணாடிபோல் மழைநீர் தெங்கி இருந்தது

சுவற்றில் புடைப்பாக செதுக்கப்பட்டிருந்த ஒரு கல்பாவையின் கைவிளக்குக்குழியின் நீர்பரப்பில்  நீலவானம் தேங்கி இருந்தது.

பச்சை பூக்களிட்ட வெள்ளை புடவையும் பச்சைரவிக்கையுமாக ஒரு அம்மை சுற்றி வந்து கொண்டிருந்தார். வெகுநாட்களாக அப்படி புடவை எடுக்க நினைத்திருந்தேன். அவரிடம் நேரே சென்று அதுபோன்ற  புடவை எனக்கும் வேண்டும் எங்கு கிடைக்கும் என்று கேட்டேன்.  செட் சாரி என்று கேட்டால் எங்கும் கிடைக்குமென்றார். அந்த புடவை அவருக்கு மிக அழகாக இருப்பதையும் சொன்னேன்

கருப்புபுடவையில் சபரிமலைக்கு மாலையிட்டிருந்த ஒரு அம்மை புதுவெண்ணெயின் நிறத்திலிருந்தார். எலுமிச்சம்பழம் போன்ற அவரது சிறுகொண்டையில் துளசி சூடியிருந்தார்.சச்சதுரமாகவும் நல்ல வட்டத்திலும் தனித்தனி சன்னதிகள், சன்னதிகளின் கூரை முகப்பு விளிம்புகளில், படமெடுக்கின்றன வெண்கல நாகங்கள். 

மலையாளத்தில் என்னவோ இடியாப்பம் போல பெயரெழுதியிருந்த போர்டின் பின்னால் மஞ்சள் பூசப்பட்ட கல்தெய்வங்கள் நான்கிருந்தன அவற்றின் அருகிலிருந்த அலரி மரக் கிளைகளில் சபரிமலை சென்று திரும்பியவர்களின் மாலைகள் தொங்கவிட பட்டிருந்தன

 வடக்குநாதர் நெய்லிங்கத்தால் ஆனவர் லிங்கத்தின் மீது பொன்காப்பிட்டிருந்தனர். அவருக்கு பின்புறம் நெய் சிறு மலைபோல் சேர்ந்திருந்தது.

அமர்நாத் பனிலிங்கம் போல வடக்குநாதரின் நெய்லிங்கமும் உலக பிரசித்தம். அந்த நெய்யின் ஒரு துள்ளியை துண்டு வாழையிலையில் செஞ்சந்தனக்குழம்பும் மலர்களும் வைத்து பிரசாதமாக அளித்தார்கள் அந்த நெய் உடல்நோய்களை போக்கும் என்று அங்கு நம்பிக்கை

கோவிலெங்கும் நீளமாக  தொங்கவிடப்பட்டிருந்த சாமந்தி மாலைகள் வாடியிருந்தன.  கழுவப்பட்ட மாபெரும் வெண்கல உருளிகள் கவிழ்த்தும் சாய்த்தும் வைக்கப்பட்டிருந்தன

அவ்வளவாக புழக்கத்தில் இல்லாத  வெளிச்சுற்று பிரகார  கல்திண்ணைகளில் பெரிய பெரிய மட்டை அரிசி மூட்டைகளும் கோகுலகிருஷ்ணா அக்மார்க் நெய் தகரடின்களும் அடுக்கி  வைக்கப்பட்டிருந்தன

பச்சைப்பட்டு விரிக்கபட்டிருந்த  துலாபார தராசுகள் ஒழிந்திருந்தன.அந்த தட்டுக்களைம்  தொட்டு வணங்கினார்கள்.

மழைதூறிக்கொண்டே இருந்தது. ஒரு கல்தூணில் கைப்பிடியுடன் ஒரு பனையோலைக்குடை சாத்தி வைக்கப்பட்டிருந்தது

வடக்குநாதரின் பின்புறம் ஸ்ரீ பார்வதி அருள்பாலிக்கிறாள்.

விருஷபன், ராமன், அய்யப்பன், சங்கர நாராயணன், கணபதி என அனைத்து சன்னதிகளிலும் விக்ரகங்களை சுற்றி ‘ப’ வடிவில் பெருஞ்சுடரொளிரும் தீபங்கள் எரிந்தன

அங்கிருக்கும் அனைத்து சன்னதிகளிலும் ஒரே நேரத்தில் வழிபாடு நடக்குமென்றார்கள்

நெய் விளக்கேற்றும் பிரார்த்தனை நடந்துகொண்டே இருந்தது. தமிழக கோவில்களில் இருக்கும் தண்ணீர் பாட்டில் மூடியளவுக்கான மைக்ரோ விளக்குகளை போலல்லாமல்  அங்கு விற்பனை செய்யப்பட்ட, சற்றுப்  பெரிய குழிக்கரண்டி நெய் பிடிக்கும் விளக்குகளில் சுத்தமான  பசு மஞ்சள் நெய்யில் பக்தர்கள் தீபமேற்றினார்கள் 

அங்கிருந்த பல மரங்கள் நூற்றாண்டுகள் பழமையானவை. மரங்களை சுற்றிலும் உயரமான அகலமான மேடை அமைக்கப்பட்டிருந்தது; ஒரு அரசமரத்திற்கு சந்தான கோபாலகிருஷ்ண மரம் என்று பெயர்ப்பலகை இருந்தது .

வழக்கமாக லத்தீன அறிவியல் பெயர்களே பரிச்சயமாயிருந்த எனக்கு இந்தப்பெயரும் அந்த மரமும் பார்க்கவே மகிழ்ச்சி அளித்தது. சுற்றத்துவங்குகையிலேயே எனக்கு வலதுபுறம் இளஞ்சிவப்பு தளிரிலைளுடன் இருந்த ஒரு மரத்தை பார்த்திருந்தேன். அதை எனக்கு அடையாளம் தெரியவில்லை.இலைகள் பளபளத்தன. அதே யோசனை உள்ளே ஓடிக்கொண்டிருந்தது பொதுவாக செம்புநிறத்தில் தளிரெழுவதுதான் வழக்கம். இந்த மரம் என்னவாக  இருக்குமென யோசித்துக்கொண்டே வந்தேன்

சட்டையில்லாமல் வேஷ்டியின் ஒரு நுனியை தூக்கிபிடித்துக்கொண்டு வந்த தருண் மலையாளிகளைப்போலவே இருந்தான். ரோமாபுரியில் ரோமானியனாகத்தானே இருக்கனும்?

சுற்றி முடிக்கையில் அருகில் வந்தபோதுதான் அம்மரம் அதுநாள் வரைநான் பார்த்தேயிருக்காத பார்க்க பெரிதும் காத்திருந்த அசோகமரமென்று அதன் தீக்கொழுந்துகளை போன்ற ஆரஞ்சு மஞ்சள் மலர்கள் கொண்ட மஞ்சரிகளை கொண்டு அறிந்தேன். பரவசத்தை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. தருணிடம் நூறுமுறையாவதுது ’’அசோகமரம்டா’’ என்று சொல்லியிருப்பேன். மகிழ்ச்சியில் மரத்தடியில் கொஞ்சம் நேரம் அமர்ந்திருந்தேன், மலர் மஞ்சரிகள் ஒன்றிரண்டு தான் இருந்தன. 

அம்மரத்தை குறித்து அதழில் ஒரு பதிவும் முன்பு எழுதியிருந்தேன். 

 கர்ப்பகிருக வாசல் மணி பாற்கடலைகடைந்த வாசுகி என்று ஐதீகம் எனவே அதை பிரதோஷ மாலைவேலைகளில் தலைமை நம்பூதிரி மட்டுமே ஒலிக்க செய்வாராம் அன்று பிரதோஷம் எனவே மாலை அது ஒலித்திருக்குமாயிருக்கும்.

நந்தி  சிவனின் நேரெதிரே இல்லாமல் சற்று விலகி  தனி மண்டபத்தில் இருந்தது

இத்தலத்தின் வடக்குநாதரையும் பார்வதியையும் பரசுராமர் பிரதிஷ்டை செய்தாரென்றும், கணபதி ராமர் சங்கரநாராயணன் திருவுருவங்களை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தாரென்றும் சொல்லப்படுகிறது.

அனைத்து விக்ரகங்களும் பொற்காப்பிடப்பட்டிருந்தன. பெருவிளக்குகளின் சுடரொளியில் அப்பொன்னும் நெருப்பென சுடர்ந்தது.

கோவிலின் அமைதி தவிர்க்கமுடியாமல் தமிழக கோவில்களின் கூச்சல்களை நினைக்கவைத்தது. பெருங்கற்கள் பதித்த தளம் கோவிலைச்சுற்றிலும். பல கற்களில் நெடுஞ்சாண்கிடையாக பலதிசைகளில் விழுந்துவணங்கும்  மேலாடையின்றி அரையாடை மட்டும் அணிந்த ஆண் சிலைகள் சிறியதாக செதுக்கப்பட்டிருந்தது

வடக்குநாதர் சன்னதியில் சபரிமலைக்கு மாலையிட்டிருந்த ஒரு அம்மை ’’சுவாமியே சரணம் அய்யப்பா’’ என்று பக்திமேலிட கூவினார், சரிதானே சபரிமலைக்கு மாலையிட்டால் மாலையிட்டவரும் பிறரும் அய்யப்பன் தானென்றால் வடக்குநாதனும் ஐயப்பன்தானே அவருக்கு?

எங்கும் தீபாராதனைதட்டு நீட்டப்படவில்லை. விருப்பப்பட்டவர்கள் சன்னிதியின் படிக்கட்டில் ரூபாய்களை வைத்துச்செல்கிறர்கள்.  பிரகாரத்தின் விருஷபன் என்னும் கடவுள். அப்பெயரை முதன்முதலில் பார்க்கிறேன் அங்கு மூன்று முறை கைதட்டி வணங்குகிறார்கள்

ஆங்காங்கே நெற்றுத்தேங்காய்கள் குவித்துவைக்கப்பட்டிருந்தன.

ஏராளமான செம்மந்தாரை மரங்கள் மலர்கொண்டிருந்தன. கல்தரையெங்கும் அதன் தாமரையிதழ்களை ஒத்த இளஞ்சிவப்பிதழ்கள் சிதறிக்கிடந்தன. பெருமரங்களின் பாசம்பிடித்த கிளைகளில் ஆர்கிடுகள் மண்டிக்கிடந்தன.

ஸ்ரீ மூலஸ்தானம் என்று பெயர் பலகை வைக்கப்பட்டிருந்த மகிழமரம் முகப்பிலேயே இருந்தது.அதை சுற்றிவிட்டே பிரகாரத்தை சுற்றத் துவங்குகிறார்கள். அதுதான் தலமரமாயிருக்கும் என நினைத்தேன்.

 தாழ்ந்த கூரைகொண்ட மண்டபத்தின் கல்பாவியதிண்ணையின் தரையில் சற்று அமர்ந்துவிட்டு கோவிலைவிட்டுப் பிரிய மனமில்லாமல் புறப்பட்டோம்

கோவிலின் வெளிவாசலிலும் பெரும் வெண்கலவிளக்கு கம்பமிருந்தது, பலசுற்றுத்தட்டுக்களை கொண்டிருந்த அவ்விளக்கின் அடியில் ஒரு ஆமை வடிவம் தாங்கிக்கொண்டிருப்பது போல அமைந்திருந்தது.

கோவிலுக்கு வெளியே புதுமணத்தம்பதிகளின் போட்டோஷூட் நடந்துகொண்டிருந்தது  கிளிப்பச்சை பட்டுடுத்தி கைகளில் விரிந்த தென்னம்பாளையை  பிடித்துக்கொண்டிருந்த மணப்பெண் கொள்ளையழகு. 

 ’’தருண் ஒரு கேரளா பெண்ணை பாரேன்’’ என்றேன் ’’பார்க்கலாம் பார்க்கலாம்’’ என்றான் அமர்த்தலாக

 இந்த வீட்டில் மாலை வேளையில் செட்டு முண்டுடுத்தி அகலக்கண்னில் பட்டையாய் மையெழுதிக்கொண்டு  அலையலையான கூந்தலில் மலர்சூடிக்கொண்டு வெண்கல விளக்கேற்றும் மருமகளை மணக்கண்ணில் ஆசையாக பார்த்துக்கொண்டேன.

உணவகங்களில் பதிமுகப்பட்டையிட்டு இளஞ்சிவப்பிலும் சீரகமிட்ட பழுப்பிலும் வெதுவெதுப்பான நீரருந்த தந்தார்கள். இப்படி தமிழகத்துக்கென்று பிரத்யேக அடையாளங்கள் ஏதாவது இருக்கிறதா என்று யோசித்தேன்.யானை, தென்னை, தென்னம்பாளை,  பதிமுக தண்ணீர், சீரகவெள்ளம் தேங்காயெண்ணய் தேய்த்து குளித்த கூந்தல், செட்டுப் புடவை பனையோலைக்குடை, மட்டைஅரிசி, லாட்டரி, பழம்பறி  நேந்திரம்பழம் என்று இங்கு ஏராளம் இருக்கிறதே. 

கோவிலுக்கு எதிரே சிவா பரிந்துரைத்திருந்த உணவகமான ’பாரத்’தில் காலையுணவு, புட்டும் கடலைக்கறியும்  நல்ல சுவையிலும் தரத்திலும் இருந்தது.

வழியில் ஒரு மாபெரும் பதாகையில் குருதிச்சிவப்பில் உடைகளும் ஆபரணங்களுமாக பகத் ஃபாஸிலும் நஸ்ரியாவும் ஐஸ்கிரீம் விளம்பரமொன்றில் காட்சியளித்தார்கள்  

அங்கிருந்து கல்யாண் சில்க்ஸ் சென்று  கருப்பில் மலர்கள் வரையப்பட்ட வெள்ளை செட் புடவை எடுத்தேன்.விலை தமிழ்நாட்டை விட பல மடங்கு குறைவு. இந்த கல்யாண் சில்க்ஸ் காரர்கள் ஏன் கோவையில் மட்டும் கொள்ளைவிலை வைத்து விற்பனை செய்கிறார்கள் என்று ஆதங்கமாக இருந்தது. செட் புடவைக்கு துணையாக நாவல் பழநிறப்புடவையொன்றையும் எடுத்தேன்.

கேரளா ஆண்கள் அணியும் தொள தொள ஜீன்ஸ் ஒன்று தருணும் எடுத்துக்கொண்டான்

. பின்னர் கேரளா  பயணத்தை முழுமையாக்க லாட்டரி சீட்டும் . லாட்டரியில் கோடிகள் பரிசு விழுந்தால் வேலையை ராஜி வைத்துவிட்டு மீதமிருக்கும் நாளெல்லாம் வாசித்துக்கொண்டு எழுதிக்கொண்டு தாவரங்களை தேடிபயணித்து கொண்டிருமிருக்கும் பகல் கனவிற்குபின்னர் சரணை அழைத்து பரிசு கிடைத்தபின்னர் முதல்வர் அறைக்குச்சென்று ராஜி வைப்பதை பற்றி எப்படி பேசப்போகிறேன் என்று சொல்லிக்காட்டினேன். அவன் சிரிக்காமல் இப்படியேதான் நாவிதராக  நடித்த கவுண்டமணி நம்பியார் வீட்டில் லாட்டரி பரிசு விழுந்ததும் பேசுவார் என்றான்.

கசைத்தெருவை கொஞ்சம் சுற்றினோம்.பலகாலத்துக்கு பிறகு அடர்மஞ்சள் சாமந்தி மாலையிடப்பட்டிருந்த புட்டபர்த்தி பாபாவின் கட் அவுட் ஒன்றை வழியில் பார்த்தேன்

தமிழகத்தை விட இங்கு அழகிய டிசைன்களில் நைட்டிகள்விற்பனையிலிருந்தன.  ரத்தச்சிவப்பில் அதிகம் இருந்தன. கேரளத்தின் சீஸ் நிறப்பெண்களுக்கு அந்த சிவப்பு  எடுப்பாக இருக்கும்.

பிறகு சுத்தமாக்கப்பட்டிருந்த லென்ஸ் வாங்கினோம். 16 ஆயிரங்கள் ஆகுமென்று சென்னையில் சொல்லப்பட்ட அது வெறும் 800 ரூபாய்களில் சரிசெய்யப்பட்டு கிடைத்தது. (கேமரா லென்ஸ் பிரச்சனைகளுக்கு அணுகவும் கேமரா சிட்டி திருச்சூர்).

அங்கிருந்து தோட்டதுக்கு வைக்க  கூரையிட்ட இரும்பு ஊஞ்சல் வாங்கலாமென்று திருச்சூரின் பிரபல புள்ளோக்காரன் பர்னிச்சர்ஸ் போனோம்

 வரவேற்ற பெண்ணிடம் கார்டன் ஸ்விங் வேண்டுமென்றேன் அவளுக்கு மனசிலாகவில்லை, ஊஞ்சல் வேணும் என்றேன். ஓ ஊஞ்சாலா வரு’’ என்று மாடிக்கு அழைத்து சென்றாள். எனக்கு தேவையான மூவர் அமரும் ஊஞ்சல் அங்கு இல்லாததால் திரும்பினோம்.  பிரமாண்டமான கடை மரச்சாமன்கள் உன்னதமாக இருந்தன. கோவையைக்காட்டிலும் இங்கு நன்றாக இருக்கின்றது விலையும் பரவாயில்லை

அருகிலேயே மற்றொரு புள்ளோக்காரன் கடை, மற்றொரு பிரம்மாண்டம் சகோதரர்களாம் ஒருவருக்கொருவர் போட்டிபோலிருக்கிறது.ஒரு கடையில் 24 ஆயிரம் சொல்லப்பட்ட ஒரு ஊஞ்சல் மற்றொரு கடையில் 19 ஆயிரம். 

மீண்டும் பாலக்காடு . வழியில் தருணின் பிரேக் அப் கலெக்‌ஷன் பாடல்கள் கேட்டோம்.அவனது பிரியத்துகுகந்த ’’எங்கிருந்தாலும் வாழ்க’’ வை பலமுறை,

 ’இங்கே ஒருவன் காத்திருந்தாலும் 

இளமை அழகை பார்த்திருந்தாலும் 

சென்ற நாளை நினைத்திருந்தாலும் 

திருமகளே நீ வாழ்க!’

காட்டில் ஒரு நீண்ட நடைசென்றேன். முந்தின நாள் இரவு மானை துரத்தி வந்தபோது பதிந்திருந்த சிறுத்தையின் கால்தடங்கள் மழைச்சேற்றில் கூடவே வந்தன. வட்டகண்ணிகளின் இலைகளில்  எறும்புகள் துளையிட்டிருந்தன,  கம்யூனிஸ்ட் பச்சையுடன் மிக்கானியா ஆக்ரமிப்பும் அங்கு அதிகமிருந்தது

 மிக்கானியா

கம்யூனிஸ்ட் கட்சி கேரளமெங்கும் பரவியதுபோல் அச்செடியும் பரவியதால் கம்யூனிஸ்ட் பச்சை என்று பெயர் வந்தது என்று நானும் சிவாவும் பேசிக்கொண்டோம்

ஒரு சிற்றாறு காட்டின் குறுக்கே ஆழமற்று ஓடியது. ஆற்றில் இறங்கி குளிர்ந்த நீரில் ஆற்றின் போக்கிலெயே கொஞ்சம் நடந்தேன். சீறுமீன்கள் காலடியில் மொய்த்தன, ஆற்றின் நடுவிலிருந்த பாறையொன்றின் மீதமர்ந்து காத்திருந்த கருந்தலை மீன்கொத்தியொன்று  சரேலென்று பாய்ந்து லாவகமாக  தன் சிற்றலகால் ஒரு மீனை கொத்தி விழுங்கிச் சென்றது அத்தனை மீன்களிலொன்றைக்கூட தன் இருகைகளால் பலமுறை முயன்றும் தருணால் பிடிக்கவே முடியவில்லை. இயற்கையின் கணக்குகள் அத்தனை சீக்கிரம் பிடிபடுவதில்லை,

வேங்கைமரத்தின் இறகுக்கனிகள், காட்டுகுருமிளகின் வால்போன்ற மஞ்சரிகள், காட்டுத்திப்பிலிச்செடியின் இதயவடிவஇலைகள், பெயர் தெரியாத பல செடிகளை பார்த்தவாறே நடந்தேன்,நீரில் மிதந்துவந்த தான்றிக்காய்களை  சேகரித்தேன். எங்கெங்கிருந்தோ யானைகளின் பிளிறலும் மயிலகவலும் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒரு கிலுகிலுப்பை செடியின் மலர்களில் நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சிகள் மொய்த்துக்கொண்டிருந்தன

காட்டின் நடுவில் மீண்டும் அசோக மரமொன்றை கண்டேன் அருகிலிருந்த பெருமரமொன்று முறிந்து வீழ்ந்ததில் கிளைகள் ஒடிந்து சேதமுற்றிருந்தது எனினும் அழகாக இருந்தது.ஒரே நாளில் இரண்டு மரங்கள்

அத்தனையடர்ந்த காட்டில் அப்படி நெருக்கமாக இருந்துவிட்டு அங்கிருந்து புறப்படவே எனக்கு மனமில்லை. வனக்காவலர்களில் பல பெண்கள் இருந்தனர் பின்ஸி, அஸ்வதி, சந்தியா, நித்யா என அவர்களின் பெயர்களை கேட்டுக்கொண்டேன்

பெண்கள் வேலையில் இருப்பது எனக்கு பிடிக்கும் அதுவும் இப்படி வன காவலர்களாக சீருடையில் இருந்தவர்களை பார்க்க அத்தனை பிடித்திருந்தது. காட்டிலிருந்த பழங்குயின பெண்ணொருருவர் அவருக்கென்று சேகரித்திருந்த சுருளிக்கீரையை எனக்களித்தார். அரிய உணவு. எங்கும் கிடைக்கவே கிடைக்காதது. அதைக்குறித்து தனியே ஒரு பதிவு எழுத வேண்டும்

ஆற்றிலிருந்துஒரு சிறுகல்லை நினைவுக்காக எடுத்துக்கொண்டு அதே பகிர்ந்துகொள்ள முடியாத அன்பில் மீண்டும் திளைத்து மனமின்றி புறப்பட்டேன்

பாலக்காடு பொள்ளாச்சி நெடுஞ்சாலையில்  ஒரு விளம்பர பலகையில் நெற்றி அகன்ற, கேசமிழந்த உடல்பருத்த சுரேஷ் கோபி இருந்தார். அயினிப் புளிக்கறியில் செம்பமூட்டு ஆச்சியிடம் ஆசான் கேட்டதுபோல ’இப்படி கோலங்கெட்டு போனிங்களே’ என்றதற்கு ’வயசாச்சுசில்ல’ என்றார்.காலம்தான் எத்தனை இரக்கமற்றது?

வழியெங்கும்  அழகிய சிவப்பு ஓட்டுக்கூரைகளுடன் அழகிய மரங்களடர்ந்த வீடுகள்.மா பலா வாழை நெல்லி இல்லாத வீடுகளே இல்லை கேரளத்தில். மாமரங்கள் அனைத்துமே மலர்ந்திருந்தன

நாட்டு மரங்களில் செந்துருவின் நிறத்தில் கிளைத்த மஞ்சரிகளும். கலப்பின மரங்களில் பசுமஞ்சள் மலர்களுடன் கூம்பு மஞ்சரிகளும் இருந்தன. எல்லா மலர்களும் சிறுபூச்சிகளும் ஈக்களும் எறும்புகளும் மொய்த்தன. இப்போது மகரந்தச்சேர்க்கை   நடந்துதான் கோடையில் கனிகளை உருவாகும்

மதிய உணவு  நெடுஞ்சாலையில் ஒரு சைவ உணவகத்தில். வல்லரிச்சோறும் ஊதா தட்டைக்காய் துவரனும் பிரமாதமாக இருந்தது 

சாலையின் ஒரு திருப்பத்தில் ஒரு அழகிய பெண் ஸ்கூட்டியில் எங்களை கடந்துசென்றாள், தருண் ’’எண்ட ஸ்டேட்டு கேரளமானு எண்ட சி எம் விஜயனானு’’ பாடலை ஒலிக்கச்செய்தான்.

மழை ஓய்ந்திருந்த பின்னிரவில் வீடு திரும்புகையில் புன்னை மரக்கிளைகளுக்கிடையில் நிலவு காத்திருந்தது. நீண்ட நிறைவான நாள்.

ஷின்ரின் – யோகு-வனக்குளியல்.

 

வன சிகிச்சை, நிலச் சிகிச்சை,பசுமை சிகிச்சை, இயற்கை சிகிச்சை என்னும் பெயரால் அழைக்கப்படுவது, உடல், உள்ளம் மற்றும் ஆன்மாவிற்கான இயற்கையோடு இணைந்த ஒரு சிகிச்சை. இச்சிகிச்சை வனக்குளியல் என்று பொருள் படும் ஜப்பானிய சிகிச்சையான Shinrin-yoku வை அடிப்படையாக கொண்டது.

பாரசீக பேரரசை தோற்றுவித்தவரான பேரரசர் சைரஸ் 6ம் நூற்றாண்டில் நகரின் மையத்தில் மக்களின் ஆரோக்கியம் மேம்படும் பொருட்டு ஒரு பெரும் பூங்காவை அமைத்தார். இதுவே  பசுமை சிகிச்சையின் தொடக்கமாக கருதப்படுகிறது. 16ம் நூற்றாண்டில்  ஸ்வீடனை சேர்ந்த இறையியலாளரும் மருத்துவருமான  பாராசெல்சஸ்  ’’நோயிலிருந்து குணமடைதல் மருத்துவரிடமிருந்தல்ல, இயற்கையிடமிருந்தே கிடைக்கிறது’’ என்றார். 

1950 களில் உலகெங்கிலும் இயற்கைச் சூழலில் வசிப்பவர்களின் ஆரோக்கியம் குறித்த ஆய்வுகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக 1982ல்  ஜப்பானின் மீன்வளம், விவசாயம் மற்றும் வன அமைச்சகத்தின் அப்போதைய தலைவரான தோமோஹைட் அகியாமா ’’வனக்குளியல் ‘’ என்று பொருள் படும் Shinrin-yoku ( shinrin, “forest”, yoku, “bath, bathing” ) என்னும் சிகிச்சை முறையை உருவாக்கி காடுகளை நோக்கி  அதிக அளவில் மக்களை வரச்செய்தார். 

இயற்கையிலிருந்து துண்டிக்கப்பட்ட மக்களை மீண்டும் அதனுடன் இணையச் செய்வதற்கும், தங்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் வனங்களை மக்கள் பாதுகாக்கவும் இது வழிவகுக்கும் என அவர் நினைத்தார்

தற்சமயம் உலகெங்கிலும் பொதுவாக கடைப்பிடிக்கப்படும் யோகா மற்றும் தியான முறைகளைப்பொல வனசிகிச்சையும் பரவலாயிருக்கிறது.

மிக குறைந்த நேரமாக ஐந்து நிமிடங்களும் அதிகபட்சமாக 120 நிமிடங்களும் இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

 குறிப்பிட்ட காலஅளவு வனச்சூழலில் இருப்பவர்களின் ஆளுமைச்சிக்கல்கள் விலகி,மனழுத்தம் குறைந்து தேக ஆரோக்கியம் கூடுகிறது என்கிறார்கள் இந்த சிகிச்சையை அளிப்பவர்களும் மேற்கொள்பவர்களும்.

இவற்றுடன் வைட்டமின் D  குறைபாடு மற்றும் கூடுதல் உடல் பருமன் ஆகியவையும் இதனால் குணமாகிறது .

சிகிச்சை முறை

  • வனங்களின் விதவிதமான ஒலிகளை மனம் குவித்து செவி கூர்ந்து கவனிப்பது
  • நிலத்தை, மரங்களை இலைகளை கைகளால் தொட்டுக் கொண்டிருப்பது
  • மலர்களையும் இலைகளையும் கனிகளியும் முகர்ந்து வாசனையை அறிந்து கொள்வது
  • வனச்சூழலை, அதன் அழகை ஆழ்ந்து கவனிப்பது
  • சுவாசத்தை கவனித்து தூய காற்றை மகிழ்ந்து அனுபவிப்பது

இந்த சிகிச்சையை இப்படி பொதுப்படுத்த முடியாது, காடுகளில் இருப்பதன் மூலம் மனநிலை மாற்றம் அடைவது என்பது மிக அந்தரங்கமானதும் தனி நபர்களின் மனநிலை சார்ந்துமாகும்,  மேலும் இப்படி காடுகளில் மனிதர்கள் நெருங்கிச் செல்வது இயற்கையின் அழிவிற்கு காரணமாகும் என் இச்சிகிச்சை குறித்து சில விமர்சனங்களும் எழுகின்றன.

உலகின் பல நாடுகளும் இந்த வன சிகிச்சையை அங்கீகரித்து ஆதரவு அளித்து வருகின்றன. ஃபின்லாந்தில் 5 மணி நேரம் வனங்களில் இருப்பது மிக நல்லது என ஆய்வாளர்கள் வலியுறுத்துகிறார்கள்

மொத்த நிலப் பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு வனங்களால் சூழப்பட்டிருக்கும் ஜப்பானில் இந்த சிகிச்சைக்கு அரசு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. தென்கொரியாவில் 2009ல் சிகிச்சைவனமொன்று துவங்கப்பட்டு  பலருக்கும் பயனளித்ததால் 2022ல் சுமார் 30க்கும் மேற்பட்ட சிகிச்சை வனங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மனாழுத்தம் தற்கொலை எண்ணம் ஆகியவற்றிற்கு இந்த வனங்கள் சிகிச்சை அளிக்கின்றன

சமிபத்தில் தீயணைப்பு வீரர்களுக்கு பணி சார்ந்த மனஅழுத்தம் நீங்க  இங்கு வனசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

சமீபத்தில் மரணமடைந்த பிரபல புகைப்பட நிபுணர் ஜான் ஐசக் போர்ச்சூழலில் புகைப்படமெடுத்து மனம் கலங்கிய தான் சூரியகாந்தி தோட்டங்களுக்குள் சென்ற பின்னர் மீண்டு வந்ததாக குறிப்பிட்டிருந்தார். கனடாவின் மருத்துவர்களும் பசுமை பரிந்துரையாக மனநல சிகிச்சைகளுக்கு  வனத்தில் நேரம் செலவழிக்க அறிவுரை கொடுத்து வருகிறார்கள்.

அமெரிக்க வன அமைச்சகம் இதற்கென பயிற்சி பெற்ற நிபுணர்களைக்கொண்டு அடர் வனங்களில் இரண்டு மணி நேரம்  சிகிச்சை அளிக்கிறது

தமிழகத்தில் இது பன்னெடுங்காலமாக வழக்கத்தில் இருந்திருக்கிறது. ஒரு சிறு முள் குத்தினால்கூட முள் நீக்குகையில் வலி தெரியாமலிருக்க பச்சையை பார்க்க சொல்லும் வழக்கம் இங்கு இருக்கிறது. பசுமை நிறம் குணமாக்கும் நிறம் என்பது தமிழர்களுக்கு  முன்பே தெரிந்திருக்கிறது

இப்போதைய அடுக்கக வாழ்வில் அனைவருக்கும் வீடுகளில் பசிய செடிகளுடன் கூடிய தோட்டங்கள் வைத்திருக்க முடியாதென்றாலும் அருகிலிருக்கும் காடுகளுக்கு குடும்பத்துடன் சென்று  அங்கு குறிப்பிட்ட நேரம் செலவழிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

ப்ரொபெஷனல்?

சமீப காலங்களில் கொரியர் அனுப்புவது, வாங்குவது என்பதெல்லாம் பெரும் தொல்லை தரும் விஷயமாகிவிட்டிருக்கிறது.  கோவிட் தொற்றுக்கு பிறகுதான் இப்படி . அதற்கு முன்பு சரியாகத்தான் இருந்தது. சரணும் தருணும் நானுமாக நிறைய பொருட்களை வாங்குவதும் அனுப்புவதுமாக இருப்போம். வீட்டில் யாரும் இல்லாதபோது பேக்கரி செல்வம் வாங்கி வைத்து பின்னர் கொடுப்பதுண்டு ஆனால் இப்போது அப்படி இல்லை, எப்படியோ யாரோ வேடசெந்தூர் என்னும் இக்கிராமம் இனிமேல் non service area என்று முடிவு செய்துவிட்டார்கள். 

உலகம் சுருங்கிக் கொண்டிருக்கிறது, சிறிய உலகம், உலகம் உள்ளங்கைகளில் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம் அதுவும் இந்த வேடசந்தூர் கிராமம் தூங்கா நகரமாகி அதிகாலை வரையிலும் பேக்கரிகள் லாரிடிரைவர்களுக்காக நடை திறந்து உயிர்ப்புடன் இருக்கிறது. மருத்துவமனை ஒன்றை தவிர மற்ற எல்லா வசதிகளுமே இருக்கிறது கடந்த பத்து வருடங்களில் மிக வேகமாக வளர்ந்திருக்கும் இந்தப் பகுதி எப்படி திடீரென்று ’’நான் சர்வீஸ் பகுதி’’யானது என்பதும் தெரியவைல்லை.

சரி வீட்டுக்கு வருவதுதான் கஷ்டம் கல்லூரி முகவரிக்கு அனுப்ப சொல்லலாம் என்றால் அங்கும் சிக்கல். கல்லூரியின் வாசலில் நின்று கொண்டு என்னை அழைப்பார்கள் நான் அப்போது வகுப்பிலோ அல்லது மீட்டிங்கிலோ இருந்தால் டெலிவரி செய்யாமல் திரும்பி போவதும், விடுமுறை நாட்களில் வீட்டிலிருக்கும் என்ன அழைத்து கல்லூரிக்கு பார்சல் வந்திருக்கிறது என்ன செய்வது  என கேட்பதுமாக ரகளையாக இருக்கிறது

பார்சல்களை, தபால்களை அனுப்புவதும் முன்பு கல்லூரிக்கு அருகிலேயே ப்ரொபெஷனல் கொரியரின் கிளை இருந்ததால் வீட்டுக்கு திரும்பும் வழியில் அனுப்பிவிட்டு வர வசதியாக இருந்தது. சில மாதங்களுக்கு முன்னர் அங்கு சென்றிருக்கையில் அந்த கடையின் உரிமையாளர் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து உடல்நலமின்றி இருந்தது அதிர்ச்சியளித்தது எதிர்பார்த்ததுபோல் கடை இப்போது இல்லை.

பொள்ளாச்சியின் ப்ரொபெஷனல் கொரியரின் தலைமை அலுவலகம் விசித்திரமாக  ஒரு மிகக் குறுகிய சாலையின்  இறந்த முனையில் அமைந்திருக்கும். அந்தச் சாலை அந்த தலைமை அலுவலக கட்டிடத்துடன்  முடிவடைவதால் அங்கு காரில் சென்றால் காரை  திருப்பி எடுக்க முடியாது எனவே நெடுந்தூரம் நடந்து செல்லவேண்டும் அல்லது காரை திருப்ப  படாத பாடு படவேண்டும். 

 சமீபத்தில் சென்னை நண்பரொருவருக்கு ஒரு சிறிய பொதியை வேறொரு கொரியர் சேவை மூலம் அனுப்பி அது அவருக்கு 10நாட்களுக்கும் மேலாக போய்ச்சேராமல் இழுத்தடித்து அவருக்கும் செலவும் சிரமமும் உண்டாகியது. எனக்கும் கொரியருக்கும் நேரம் சரியில்லை போலிருக்கிறது. 

சமீபத்தில் வெண்ணிலாவின் சென்னை  வீட்டிலிருந்து எனக்கொரு பார்சல் வந்திருந்தது. திங்கட்கிழமையன்று  ’’வீட்டுக்கு அனுப்ப முடியாது தலைமை அலுவலகம் வந்து வாங்கிக்கொள்ளவேண்டும் காலை 9- இரவு 8 மணிக்குள்’’ என்று குறுஞ்செய்தி வந்திருந்தது. 

கல்லூரி விடுமுறையில்  ஃப்ளூ விலிருந்து மீண்டு ஓய்வில் இருந்தேன். தருணை அழைத்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை பொள்ளாச்சிக்கு இதற்கென்று சென்றபோது அன்றைய பகல் வேலை நேரம் முடிந்து இரவு வேலைக்கான ஒரு நபர் மட்டும் இருந்தார். அவர் நான் போனபோது சாவகாசமாக வீட்டில் யாருடனோ அலைபேசிக்கொண்டிருந்தார் என்னை அசிரத்தையாக கவனித்து என்னவென்று கேட்டார் நான் தகவல்சொல்லி குறுஞ்செய்தியை காட்டிய போது அதை சரியாக கூட பார்க்காமல் ’’சென்னையா இன்னும் வந்திருக்காது நாளைக்கு வாங்க’’ என்றார்

நான் பொறுமையை இழக்காமல் எனக்கு தகவல் வந்தபின்னர் தான் வந்திருக்கிறேன் என்றதும் கிளிப்பிள்ளை போல சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். அவர் போனை அணைத்திருக்கவில்லை எதிர்முனை உயிருடனேயே இருந்தது. ’’போன் மெசேஜ் எல்லாம் பார்த்துட்டு வராதீங்க நாங்க போன் பண்ணி கூப்பிட்டு சொன்னாதான் வரணும்’’ என்று உபரிதகவல் வேறு கொடுத்தார் . என்ன ஒரு பொறுப்பில்லாத்தனம்?

அவர் நெடுநாட்களாக இரவுப்பணியில் வேலைஏதுமில்லமால்  சுகமாக இருந்திருக்கிறார் இப்படி என்னைப்போல துரதிர்ஷ்டசாலிகள் வந்தால் விரட்டிவிடுவதும் வழக்கமாயிருக்கிறது. 

இப்படி பொறுப்பற்றவர்கள் எந்த நிலையில் எந்தப்பணியிலிருந்தாலும் பலருக்கு பெரும் சிக்கல்கள் ஆபத்துக்கள் உண்டாகும்

அந்த அசிரத்தை திலகத்திடம் பேசிக்கொண்டிருக்க முடியாமல் கசந்துபோய் வீடு திரும்பினேன்

மீண்டும் எனக்கு அதே குறுஞ்செய்தி 2 நாட்களாக வந்துகொண்டிருந்தது கூடுதலாக 3 நாட்களில் வாங்காவிட்டால் அனுப்பியவருக்கே திரும்ப அனுப்பிவிடுவோம் என்று அச்சுறுத்தல் வேறு.

எனவே இன்று காலையே புறப்பட்டு போனோம் இரவு அதே அசிரத்தை ஆசாமி இருந்தால் என் பொறுமை எல்லைதாண்டும் சாத்தியமிருந்ததால் காலையில் போவதே உசிதம்  என்று பட்டது.

மிகச்சரியாக காலை 9 மணிக்கு போனபோது அங்கு கதவு திறந்திருக்கவில்லை வாசலில் ஸ்டூலில் ஒரு பெரியவர் கொரியர்கள் அனுப்ப வந்தவர்களுக்கென  பணியிலிருந்தார்

நான் விவரம் சொன்னதும் ’’10 மணிக்குத்தான் வருவாங்க காத்திருங்க’’ என்றார்

தெள்ளத் தெளிவாக காலை 9 மணியிலிருந்து இரவு 8 மணி வரை என்று செய்தி வந்திருந்தது.

பொறுமையாக காத்திருந்தேன். உடன் மேலும் சிலர் வந்து காத்திருந்தார்கள். மருந்துபார்சலுக்காக  இரண்டாவது நாளாக காத்திருந்த ஒரு பெரியவர் முன்பு இதே ப்ரொபெஷனல் கொரியர் அதன் சேவைக்கு புகழ்பெற்றிருந்ததை வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார்.

9.30க்கு ஒரு பெண்மணி தோளில் ஹேண்ட்பேக்கும் கையில் மதிய உணவுப்பையும் காதில் செல்போனுமாக மெல்ல நடந்து வந்தார் அவரது  சாவகாசமான உடல்மொழியிலேயே அவர் அங்குதான் பணிபுரிகிறார் என்பது தெரிந்தது. வந்தவர் கதவை திறக்காமல் கட்டிடத்தின் பின்புறம் சென்று மறைந்தார். பின்னர் 10 மணிக்கு மீண்டும் காட்சியளித்து கதவை திறக்க முற்பட்ட போது அவருக்கு மீண்டும் போன் வந்தது. போனில் பேசிக்கொண்டே (சாப்பிட்டீங்களா? பாப்பா போயிட்டாளா? ம் ம் ம் அதான் சொன்னேனில்ல ம் சரி அதுக்கென்ன  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்) 

தருண் பொறுமையிழந்து உள்ளே சென்றதும் போனை அணைக்காமலேயே கண்களால் என்ன காரியம் என்று வினவினார் நான் அலைபேசி குறுந்தகவலை காட்டியதும் கம்ப்யூட்டரை உயிர்ப்பித்து போனில் பேசிக்கொண்டும் கேட்டுக்கொண்டும் என் எண்ணை தட்டச்சிப் பார்த்தார். பார்சல் அங்குதான் திங்கட்கிழமையிலிருந்து காத்திருக்கிறது என்றது கணினி

போனில் பேசுவதை நிறுத்தாமலேயே. அங்கும் இங்கும் தேடிக்கொண்டிருந்தவரிடம் சென்னையிலிருந்து  வாட்ஸ் ஆப்பில் அனுப்பட்டிருந்த பார்சல் புகைப்படத்தை காட்டியதும் ’’பேரு என்ன லோகமாதேவியா?’’ என்று 8 வது முறையாக கேட்டுவிட்டு உள்ளே சென்று 10 நிமிடங்களில் பார்சலை கொண்டு வந்தார். அப்போதும் போனில் பேசிக்கொண்டேதான் இருந்தார்  எதிர்முனைக்கு உம் கொட்டியவாறே என்னிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டார்.

பெருமூச்சுடன் வாங்கிகொண்டு காருக்கு வந்தேன்

இப்படி அசட்டையாக சோம்பேறிகளாக எப்படி இவர்களால் இருக்க முடிகிறது?  

முன்பு ஸ்டேட்பேங்கில் எங்கள் சம்பளம் போடப்படும் அப்போதும் இப்படித்தான் சம்பந்தப்பட்டவர் இருக்கைக்கு வரவே 11மணியாகும் பின்னர்  கம்பிக்கு வெளியே காத்திருப்பவரை அவர் நிமிர்ந்துபார்க்க 12 மணி ஆகும் நிமிர்ந்துபார்த்துவிட்டு அவர் காபி குடிக்க போய்விட்டு திரும்பி வருவதற்குள் 10 20 வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று கொண்டிருப்பார்கள் மெத்தனமென்றால் அப்படி ஒரு மெத்தனமாக பணி செய்வார்கள்  இதை திண்ணக்கம் அல்லது தடித்தனம் என்பார்கள் இங்கெல்லாம். அதன்பிறகு கல்லூரி வளாகத்திலேயே இப்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை செயல்படுவதால் பிரச்சனை இல்லாமல் இருக்கிறது.

ப்ரொபெஷனல் கொரியர் தொலைபேசி எண் மற்றும் வாடிக்கையாளர் சேவை என் இரண்டையும் குறித்துக்கொண்டு வந்து இப்போது வரை அழைக்கிறேன் யாரும் எடுக்கவில்லை

இப்படியான பணியாளர்களை மாற்ற வேண்டும் அல்லது கண்டிக்கவாவது வேண்டும். இல்லாவிட்டால் ப்ரொபெஷனல் என்னும் பெயரையாவது  அசிரத்தை, அசட்டை, அல்லது மெத்தன கொரியர்  சேவை என்று  மாற்றி வைக்க வேண்டும்

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑