லோகமாதேவியின் பதிவுகள்

Month: February 2025

சீடையும் பீடையும்!

வீட்டில் நாங்கள் மூவருமே தினசரி காலண்டரில் தேதி கிழிக்கையில் அன்றைய ராசிபலன் பார்ப்போம். ஸ்கூல் வேனுக்குக்காத்திருக்கையில் அதைக்குறித்து விரிவாகப்பேசிக்கொள்வோம்.

எஃப் எம்ரேடியோவில் சிவல்புரி சிங்காரம் சொல்லும் ராசிபலன்களையும் கேட்டு அவர் அன்று என்ன நிறப்புடவை உடுத்தச்சொல்கிறாரோ அதைத் தேர்வு செய்து உடுத்துவதும் வழக்கம். இன்று கூடச் சிவல்புரியார் மேஷ ராசிக்கு பிரகாசமான மஞ்சள் என்றார். நான் மஞ்சளில் தான் கல்லூரி வந்தேன்.

காலண்டரில் இன்று என் ராசிக்கு பீடை என்றிருந்ததைப் பார்த்ததும் பழைய நினைவுகள் எழுந்தன

மகன்களின் பள்ளிக்கூட நாட்களில் சரணுக்குத்தமிழ் அவ்வளவாக வராது. அவன் அதிகம் திட்டு வாங்கியது அவனது தமிழாசிரியையிடம் தான். அவனுக்கு மட்டுமல்லாது பெற்றோர் சந்திப்பின்போது எனக்கும் மானாவாரியாகத் திட்டுக்கிடைக்கும்

(“நீங்களே டீச்சரா இருந்துட்டு இப்படி விட்டுருக்கீங்க?)

100 க்கு 11 என்றெல்லாம் வரலாற்றுச்சிறப்பு மிக்க மதிப்பெண்கள் வாங்கிய சரண், அந்த ஆசிரியை வேலையை விட்டுவிட்டு போனபின்பு சங்கீதா என்னும் ஒரு ஆசிரியை வந்தபின்னால் தமிழ்மகனாகி தமிழில் நல்ல மதிப்பெண்கள் பெறத்துவங்கினான்.

பின்னர் வெண்முரசு 26 நாவல் நிரைகளையும் வாசித்து நீலம் தொகுப்பை எப்போதும் மார்போடணைத்துக்கொண்டே இருப்பவனாகினான், ஜெ தளத்தில் நல்ல தமிழில் அவனது கடிதங்கள் எல்லாம் வரத்துவங்கின காலமும் வந்தது.

மகன்களின் பள்ளிக்காலத்தில் ஒருநாள் சரண் முதலில் சாமிகும்பிட வந்து காலண்டரில் தேதியைக் கிழிக்கையில் அவனுக்கான மீன ராசிக்கு பீடை என்று இருந்தது.

அவன் …….`தருணிடம் பீடைன்னா என்னடா……? என்றான்

தருணுக்கும் தமிழ் தகராறுதான். அவன் அண்ணனிடம்.

“… அது வந்து அம்மா செய்யுமே பலகாரம் ஒன்னு, குட்டியா பந்து மாதிரி கடிக்கவே முடியாம கெட்டியா இருக்குமே அதோட பேரு....“என்றான்.

நான் சமையலறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தென். சரண் மீண்டும் ….அதுவா ஆனா அதை ஏன் ராசி பலன்ல போட்டுருக்காங்க....என்றான்

தருண் ….“அப்படின்னா இன்னிக்கு உனக்கு ஸ்நேக்ஸ் அதான் கிடைக்கும்…..“ என்றான்.

பீடைக்கு என்ன பொருள் சொல்வதென்று தெரியாமல் நானும் இடைபடவில்லை அன்று

இப்போதும் இருவரையும் இந்த சீடை-பீடையை சொல்லிக்கிண்டல் செய்வேன்.

சரண் ஐந்தில் படிக்கையில் ஒருநால் நூலக அலமாரியைச் சுத்தம் செய்துகொண்டிருந்தோம் நான் ஸ்டூலில் ஏறி நின்று அடுக்கினேன் தருண் துடைத்துத்துடைத்துச் சரணிடம் தருவான்.சரண் புத்தகங்களின் பெயரச்சொல்லிச்சொல்லி என்னிடம் எடுத்துக்கொடுப்பான்

ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்த சரண் …இது வந்து சீக்கிரம் தொடு... என்றான்

நான் அதிர்ந்துபோய் .... ச்சீ அப்படி ஒரு புக்கே இல்லடா வீட்டில், கருமம் என்ன அது கொண்டு வா.... என்று வாங்கிப்பார்த்தேன்.

அந்தப் புத்தகத்தின் பெயர் சிகரம் தொடு.🙃

இன்றைய பீடை பலவற்றை நினைவுக்குக் கொண்டு வந்துவிடது

அந்தச் சீக்கிரம் தொடு சரண் இப்போது அர்த்தசாஸ்திரம் முழுமையாகப் படித்து முடித்து அதைத் தமிழில் கொண்டு வரலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறான்.

தருண் இசையின்

“நீ ஏன் அவ்வளவு தூரத்தில் இருக்கிறாய்

வந்து பார்க்கும் அளவுக்கு “

என்னும் காதல் கவிதையை எனக்கனுப்பிச் சிலாகிக்கிறான்

மகன்களுக்கு அன்பு!

இதயம் இதயம் இதயம்!

நான் வாட்ஸாப்பில் அதிகம் தொடர்பிலிருப்பவள். குறிப்பாகத் தாவரவியல் தகவல்கள், தாவரங்களின் புகைப்படங்கள், ஜெயமோகன் அவர்களின் கருத்துகள் ஆகியவற்றை அதிகம் பகிர்வதுண்டு.அதிகாலை எழுந்ததும் முக்கியமான சிலருக்கு மட்டும் காலை வணக்கம் சொல்வது வழக்கம். எனக்கு வணக்கம் சொல்பவர்களுக்குப் பதில் சொல்லிவிடுவேன்.

மிக அழகிய தாவரங்கள், மலர்கள் அல்லது கனிகளுடன் தான் என் வாழ்த்துகள் இருக்கும். மிக அழகிய தகவல்கள் புகைப்படங்கள் அனுப்புபவர்களுக்கு பதிலுக்கு அழகிய இமோஜிக்களையும் அனுப்புவேன், அதிகம் பல நிறங்களில் இதய வடிவை பாராட்டாகவோ அன்பைத்தெரிவிப்பதற்கோ அல்லது மகிழ்ச்சி என்பதை உணர்த்தவோ அனுப்புவதும் உண்டு. பச்சை இதயம் அடிக்கடி என்னிடமிருந்து அனுப்பப்படும்.

வாட்ஸாப் புழங்கும் அளவுக்கு வந்திருப்பவர்களுக்கு இமோஜிக்களின் குறியீட்டு அர்த்தம் நாட்டு நடப்பு ஆகியவை ஓரளவுக்கேனும் தெரிந்திருக்கும் என்னும் ஒரு அடிப்படையான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.(இருந்தது)

தினமும் காலை வணக்கம் சொல்லும் ஒருவரில் ஒரு ஓய்வுபெற்ற பல்கலைக்கழகப் பெரியவரும் இருந்தார். அவரை நான் சந்தித்ததே இல்லை. அவருக்கு நடந்த ஒரு பாராட்டுவிழாவின் போது அவருக்கும் எனக்கும் பொதுவான ஒரு தோழி, நான் மிகவும் மதிப்பும் அன்பும் கொண்டிருப்பவர், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கச்சொல்லி அவரது தொடர்பு எண்ணை அனுப்பினார். வாழ்த்தினேன் அதன் பிறகு அவர் எனக்கு தினசரி காலை வணக்கம் அனுப்புவதும் நான் பதில் அனுப்புவதும் வழக்கமானது. ஒரு வருடத்க்கும் மேலாகிவிட்டிருக்கும் என்று நினைக்கிறேன். பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய போலி மலர்களின் படங்களை அனுப்புவார்.

கடந்த வாரம் அழகிய நிஜ மலர்களின் புகைப்படமொன்றை அனுப்பி இருந்தார். நான் பதிலுக்கு வணக்கமும் புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த மலர்களின் நிறங்களில் இரண்டு இதயவடிவங்களையும் அனுப்பியிருந்தேன்.

இதய வடிவங்களின் குறியீட்டு அர்த்தம் அவருக்கு முற்றிலும் வேறு போலிருக்கிறது. நான் அனுப்பிய இதய வடிவங்களின் தகவலை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து யாருக்கோ புளகாங்கிதமாக லோகமாதேவி இதை எனக்கு அனுப்பி இருந்தார் என்னும் செய்தியை அனுப்ப நினைத்து, அவர் கெட்ட நேரம் அதை யாருக்கோவும் கூடவே எனக்கும் அனுப்பி விட்டார்.

அதிகம் ஒன்றும் நான் திடுக்கிடவில்லை எனினும் ஆண்களின் இந்த தன்னம்பிக்கை இருக்கிறதே அதை எண்ணி வியந்தேன். சங்ககாலப்பாடல்களில் வருமே அரசன் என்னும் ஆண் மகன் வழியில் வரக்கண்டு பேதை பெதும்பை பேரிளம் பெண்கள் என எல்லா வயதுப்பெண்களும் அவன் மீது மையல், காதல், காமம் இன்னபிறவெல்லாம் கொண்டு மேகலை நழுவி வளையல் கழன்று இம்சைப்படுவார்களல்லவா, அப்படி பெண்கள் யாராக இருந்தாலும் ஆண் என்னும் ஒரு தகுதி உடையவர்களை விரும்புவார்கள் ஏதேனும் வாய்ப்புக்கிடைத்தால் அவர்மீதுள்ள மையலை, தாங்கள் கோட்டைத் தாண்டிவரவிருக்கும் செய்தியை எப்படியாவது தெரிவிப்பார்கள் என்று நம்புகிறார்கள் அல்லவா அந்த திண்ணக்கம் தான் ஆச்சர்யப்படுத்துகிறது.

லோகமாதேவிக்கு அப்படி யாரையேனும் பிடிக்க வேண்டுமென்றால் ஆண் என்னும் ஒரு தகுதி மட்டும் போதாது என்பதுவும் அவருக்குத் தெரியவில்லை பாவம்

இந்த வகை ஆண்கள் எல்லம் தாங்கள் அமர்ந்திருக்கும் ஆணாதிக்க குதிரை, அகம்பாவக் குதிரையிலிருந்து முதலில் இறங்கி, பின்னர் அதை அவர்கள் ஓட்டிக்கொண்டிருக்கும் குண்டுச்சட்டிக்குள்ளிருந்து வெளியேறினால் மீட்புண்டு.

அந்தப் பெரியவருக்குக் கோபித்துக்கொள்ளாமல் இதயவடிவத்தை நான் அனுப்பும் பொருள் என்ன என்பதை விளக்கிவிட்டு அவரது எண்ணை தடைசெய்தேன்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ,அப்பா!

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑