லோகமாதேவியின் பதிவுகள்

Month: July 2023

குட்ஸு

உலகெங்கிலும் பிரபலமான ஒரு சிறார் கதை. “Jack and the Beanstalk’’. இதில் தகப்பனை இழந்த ஜேக் தனது அம்மாவுடன் வறுமையில் வாழ்கிறான். அவர்களது மாட்டையும் விற்க வேண்டி வந்தபோது சிறுவனான ஜேக் சந்தையில் மாட்டை விற்றுவிட்டு பதிலாக கிடைத்த ஐந்து  மந்திர பீன்ஸ் விதைகளை கொண்டு வருவான். கோபம் கொண்ட ஜேக்கின் அம்மா அவற்றை ஜன்னல் வழியே வீசி எறிவாள்.

ஆனால் மறுநாள் காலையில் ஜேக் அந்த பீன்ஸ் கொடி பிரம்மாண்டமாக வளர்ந்து வானுயர சென்றிருப்பதை  பார்க்கிறான், அந்த  பீன்ஸ் செடியில் ஏறி  சூனியக்காரியொருத்தியின்  மாயக்கோட்டைக்குச் சென்று  பொன்முட்டையிடும் கோழியை கொண்டு வரும் ஜேக்,  துரத்தி வந்த சூனியக்காரியை பீன்ஸ் கொடியை கோடாலியால் வெட்டி கொல்கிறான்.பின்னர் அவனும் அம்மாவும் செல்வச்செழிப்புடன் வாழ்கிறார்கள்.

1734  ல் வெளியான இந்த ஜேக் மற்றும் மந்திர பீன்ஸ் கொடியின் கதை பின்னர் பற்பல வடிவங்களில் உருமாறி உலகெங்கும் பரவியது. இதை கேட்காத குழந்தைகளே இல்லை எனலாம் 

இப்படி ராட்சஷத்தனமாக ஓரிரவில்  வளரும்  மந்திர செடிகள், மாயக்கொடிகள் குறித்த சிறார் கதைகள் ஏராளமுண்டு.

ஒரு வீட்டின் அளவில் பெரிதாக இருக்கும் மந்திர பண்புகள் கொண்ட இலைகள் கொண்டிருக்கும் மரம் குறித்த The Giving Giant,கதை.

அந்த மரத்தடியில் வந்து நிற்பவர்களை  கிளைகளை பெருக்கி கட்டித் தழுவி அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி அவர்களை அறிவாளியாக்கும் வில்லோ மரத்தின் கதையான The Wisdom Willow,

ஒரு பள்ளத்தாக்கு கிராமத்தில் வளரும்   மேகங்களுக்குள் மறையும் கிளைகளையும் பாதாளம் வரை செல்லும் வேர்களையும் கொண்ட மரங்களின் கதையான The Legend of Titan Sprout Valley.

மிக வேகமாக வளர்ந்து தனது பற்றுக்கம்பிசுருள்களால் அருகில் வருபவர்களை இழுத்து பிடிக்கும் ஒரு ஐவி கொடியை பற்றிய  Enchanted Ivy என்னும் கதை,

இது போன்ற தேவதைக்கதைகளில் கற்பனையில் உருவாக்கப்பட்ட தாவரங்களை காட்டிலும் மிக அதிகம் வளரும் தாவரங்கள்  உண்மையிலேயே இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் குட்ஸூ கொடி (Kudzu). இக்கொடியை குறிக்கும் ஜப்பானிய பெயரான  “kuzu”, என்பதன் ஆங்கில தழுவல்தான் Kudzu.

ஆசியாவை தாயகமாக கொண்ட பயறு வகை குடும்பமான ஃபேபேசியை சேர்ந்த   பல்லாண்டு கொடி வகை தாவரமான குட்ஸூ மிக வேகமாக வளரக்கூடிய ஆக்கிரமிப்பு தாவரம்

ஆசியாவிலிருந்து அறிமுகமாகி அமெரிக்காவின் சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை அளித்துக் கொண்டிருக்கிறது இந்த குட்ஸூ கொடி. இக்கொடிக்கு அமெரிக்காவில் ’’தெற்கை தின்ற கொடி’’ என்றே பெயர் .(the vine that ate the South) ஏனெனில் அமெரிக்காவின் தெற்கு பகுதியில் மிக வேகமாக பரவி ஆக்கிரமித்திருக்கும் இக்கொடியை அகற்ற  களைக்கொல்லிகள்  பயன்படுத்துவது, வெட்டியகற்றுவது ஆகியவற்றிற்கு மட்டும் ஆண்டுக்கு சுமார்  6 மில்லியன் டாலர்கள் செலவாகிறது. 

அமெரிக்க வனத்துறையும் விவசாயத்துறையும் குட்ஸூவை எத்தனை கட்டுப்படுத்தியும் ஆண்டுக்கு சுமார் 1, 50,000 ஏக்கர்களில் இவை விரைந்து செழித்துப் பரவுகிறது என 2015ல்  ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

வளையும் தன்மை கொண்ட உறுதியான தண்டுகளையும் பற்றுகம்பி சுருள்களையும் கொண்டு அருகில் இருக்கும் ஆதாரங்களை தழுவிப்பிணைத்து மிக வேகமாக அவற்றையே கம்பளியை போல் மூடி  வளரும் இலையுதிர்க்கும் இதற்கு Japanese arrowroot , Chinese arrowroot என்றும் பெயர்களுண்டு

Pueraria  பேரினத்தை சேர்ந்த இவற்றின் ஐந்து சிற்றினங்களுமே அகன்ற முக்கூட்டிலைகளை கொண்டிருப்பவை, ஆக்ரமிக்கும் இயல்பு கொண்டவை .(P. montana, P. lobata, P. edulis, P. phaseoloides, P. thomsoni)

Pueraria montana var. Lobata என்னும் சிற்றினம் இவற்றில் மிக அதிகம் காணப்படுமொன்று.

இக்கொடியின் தண்டுக்கணுக்கள் மண்ணில் பட்டால் வேர் பிடிக்கும் இயல்புடையவை என்பதால்  தண்டு மண்ணில் படும் இடங்களிலெல்லாம் இவை மிக வேகமாக வளர்ந்து அடர்த்தியாக பரவும்.. வேர்க்கிழங்குகள் மாவுச்சத்தும் நீர்சத்தும் நிரம்பியவை, வேர்தொகுப்பு மிக அடர்த்தியாக முழுத்தாவரத்தின் எடையில் 40 சதவீதத்தை கொண்டிருக்கும், அகன்ற இலைகள் வளிமண்டல நைட்ரஜனை ஈர்த்து தாவரத்துக்கு அளிக்கும்.

பொதுவாக தண்டுகள் மூலம் இவை பரவி வளருமென்றாலும் மகரந்த சேர்க்கை நடைபெறுகையில் விதைகளும் உருவாகும். விதைகள் வேர்க்கிழங்குகள் மூலமும் குட்ஸூ இனப்பெருக்கம் செய்யும். காடுகளின் விளிம்புகளில் இவை அதிகம் காணப்படும்

குட்ஸு ஜப்பானில் தோன்றி பின்னர் சீனாவுக்கும் கொரியாவுக்கும் அலங்காரத்தாவரமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஜப்பானிலும் அதை சுற்றியுள்ள பல தீவுகளிலும் , கொரியாவிலும் இவை செழித்து வளர்ந்திருக்கின்றன.  

உலகின் முதல் சர்வதேச கண்காட்சி பிலடெல்பியாவில் 1876, ல் நடைபெற்ற போது குட்ஸூ அங்கு காட்சிப்படுத்தபடுவதற்காக ஜப்பானிலிருந்து கொண்டுவரப்படடது. அதன் அழகிய  அகன்ற இலைகளுக்காகவும்  நறுமணமிக்க வண்ணமயமான மலர்களுக்காகவும் இவை பெரிதும் விரும்பப்பட்டன. பின்னர் வீடுகளில் அலங்கார செடிகளாக வளர்க்கவும் நிழல் தரும் செடிகளாகவும் இவை சந்தைப்படுத்தப்பட்டன. இதன் விரைவான வளர்ச்சியினால் ’அதிசயக்கொடி’ என்று அப்போது பரவலாக இதற்கு பெயர் இருந்தது. இவற்றின் அதிகப்படியான  புரதத்தினால் கால்நடை தீவனமாகவும்,  அதிகம் சாகுபடி செய்யப்பட்டன.

தாவரவியல் பண்புகள்

 ஒரு நாளில்  0.3 மீ வளரும் குட்ஸு புனைவுகதைகளில் வரும் ராட்ஷச தாவரங்களை காட்டிலும் அச்சுறுத்துவது.

ஒரு குட்ஸு கொடி சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரும். ஒரு நாளில் 3செ மீ தூரம் கீழ்நோக்கி வளர்ந்து கொண்டிருக்கும் இவற்றின்    வேர்கிழங்குகள் 200 கிலோ அளவு எடைகொண்டிருக்கும்,

இவற்றின் இலைகள் நல்ல அகலமாக அடர்பச்சை நிறத்தில் இருக்கும். இளஞ்சிவப்பு அல்லது ஊதா நிற  நறுமணம் மிக்க மலர்கள் நீண்ட தொங்கு மஞ்சரிகளில்  உருவாகும்.

மண் நிறத்தில் தட்டையான நீண்ட பீன்ஸ் போன்ற  மென்மயிர் போன்ற வளரிகள் சூழந்திருக்கும் கனிகள் 3 லிருந்து 10 கடினமான விதைகளை கொண்டிருக்கும்,

குட்ஸு அனைத்து விதமான காலநிலைகளையும் தாங்கி வளரும் இயல்புடையது அதிக பனிக்காலத்தில் கூட இவற்றின் மேல் பகுதி மட்டும் உலர்ந்து வாடிவிடும். சாதகமான காலம் திரும்புகையில் வேர்கிழங்குகளிலிருந்து இவை மீண்டும் முளைத்து வளரும். இவை வறட்சியையும் தாங்கி வளரக்கூடியவை.

பரவலும் ஆக்கிரமிப்பும்

இதன் அகன்ற வேர்த்தொகுப்பினால் தென்னமெரிக்காவில் மண் அரிப்பை தடுக்க சரிவான நிலங்களில் குட்ஸூ ஏராளமாக பயிரிடப்பட்டது, 1946ல் சுமார் 85 மில்லியன் குட்ஸு விதைகள் இதன்பொருட்டு சரிவுகளில் விதைக்கப்பட்டு 1,200,000 ஹெக்டேர்களில் குட்ஸு பரவியது, விவசாய நிலங்களின் விளிம்புகளில் இவை பசுமைவேலிகளாக பரவி வளர்ந்தன.  

பெரும்பாலான பருத்திப்பயிர்களில்  பூச்சித்தாக்குதல் உண்டாகி விளைநிலங்கள் கைவிடப்பட்டபோது குட்ஸு வேகமாக பரவி விளைநிலங்களுக்குள் ஊடுருவியது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியின்  காலநிலை குட்ஸுவுக்கு சாதகமாக இருந்ததால் அவற்றின் வளர்ச்சி கட்டுப்படுத்த முடியாமலாகியது.

அவற்றின் மண்ணரிப்பை தடுக்கும் பயன்கள் பலராலும் வியந்து பாரட்டப்பட்டு 1930–1940 களில் அமெரிக்க குட்ஸு கிளப் துவங்கப்பட்டு 1943ல் அதில் 2000  உறுப்பினர்கள் இணைந்திருந்தார்கள்.

இவற்றின் அச்சுறுத்தும் வளர்ச்சியினால் மண்ணரிப்பை தடுப்பதற்கென்று குட்ஸுவை பயிரிடுவது 1950களில் முற்றிலும் நிறுத்தப்பட்டது

இரண்டாம் உலகப்போரின் போது குட்ஸு அமெரிக்க படையினர் மறைந்துகொள்ள வசதியாக இருந்ததால் பசிஃபிக் தீவுகளின் அருகில் இருக்கும் வனட்டு மற்றும் பிஜி தீவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1970. ல் அமெரிக்க விவசாய துறை குட்ஸு ஒரு ஆக்கிரமிப்புக் களை என அறிவித்து சில விளைநிலங்களில் அவற்றை அப்புறப்படுத்தியது

1997ல் குட்ஸூ தொந்தரவு தரும் களைச்செடிகளின் பட்டியலில் அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்டது 

தற்போது குட்ஸூ அமெரிக்காவின் தென்கிழக்கு பிரதேசங்களில் மட்டும் சுமார் 7,400,000  ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறது

அச்சுறுத்தல்

குட்ஸூ அருகில் இருக்கும் மரங்களை கம்பளி போல மூடி அவற்றின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி கொல்கிறது பல மரங்கள் குட்ஸுவின் எடையினால் கிளைகள் முறிந்தும் வேரோடு பெயர்ந்தும் அழிந்திருக்கின்றன. கட்டுப்படுத்த முடியாத   வளர்ச்சியால் குட்ஸூ அமெரிக்காவின் இயல் தாவரங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

வளிமண்டல நைட்ரஜனை அம்மோனியாவாக மாற்றி அருகிலிருக்கும் தாவரங்களுக்கான நைட்ரஜனையும் குட்ஸூ  தான் எடுத்துக்கொள்கிறது. ஒரு ஆண்டில் சுமார் 235 கிலோ நைட்ரஜனை குட்ஸு எடுக்கிறது. இந்த வேகம் இயல் தாவரங்கள் நைட்ரஜனை எடுத்துக்கொள்ளும் வேகத்தை காட்டிலும் பல மடங்கு அதிகமென்பதால் இயல்தாவரங்கள் மெல்ல மெல்ல நைட்ரஜன் சத்து இல்லாமல் மடிகின்றன. அருகில் எந்த தாவரமும் வளராமல் மண்ணும் நல்ல நைட்ரஜன் சத்துடன் இருக்கையில் குட்ஸு ராட்ஷத்தனமாக வளர்கிறது.

குட்ஸு அமெரிக்காவின் 32 மாநிலங்களில் பெரும் சூழல் அச்சுறுத்தலை கொடுக்கிறது. 

ஆசிய பிரிவெட்களும், ஆக்ரமிப்பு ரோஜா செடிகளும் குட்ஸுவைகாட்டிலும் தீவிரமான அச்சுறுத்தலை அமெரிக்க சூழலுக்கு அளிக்கின்றன என்றாலும்  விரைந்து வளருவதால் குட்ஸுவே அதிக ஆக்ரமிப்பு தாவரமாக அமெரிக்க மக்களால் கருதப்படுகிறது. குட்ஸு ஒரு நாளில் 1 மைல் தூரம் வளரும் என்னும் கதைகளெல்லாம் கூட அமெரிக்காவில் உலவுகின்றன, 

வன எல்லைகளில் மரங்களினடியில் கவனிக்காமல் விட்டுவிட்ட வாகனங்களை குட்ஸு ஒரு வாரத்தில் முழுவதும் பரவி மூடிவிடுகிறது, கட்டிடங்களையும் இவை ஆக்கிரமித்து மூடிவிடுகின்றன.

ஐரோப்பாவில் 2016ல் குட்ஸு, ஆக்ரமிப்பு களைகளின் பட்டியலில் இணைக்கப்பட்டது. ஐரோப்பாவில் குட்ஸுவை இறக்குமதி செய்வது, சாகுபடி செய்வது மற்றும்  அதன் விதைகளை சந்தைப்படுத்துவது  ஆகியவை சட்டப்படி குற்றம்

சமீபத்தில் குட்ஸூ வடகிழக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சுவிட்ஸர்லாந்து, வடக்கு இத்தாலி ஆகிய பிரதேசங்களில் ’’தேவையற்ற தாவரம்’’ என்று வகைப்படுத்தப் பட்டிருக்கிறது  

அமெரிக்க வனப்பொருட்களின் விளைச்சலில் குட்ஸுவினால் மட்டும் ஆண்டுக்கு  $100 லிருந்து $500 மில்லியன் நஷ்டம் உண்டாகிறது. குட்ஸுவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 2000 டாலர்களும்,  குட்ஸு,  தொழிற்சாலைகளின் நிலத்தடி குழாய்களை சுற்றி இறுக்கி உடைத்துவிடுவதை சரிசெய்யமட்டும் 1. 5 மில்லியன் டாலர்களும் ஆண்டு தோறும் செலவாகிறது.

அமெரிக்க தேசிய பூங்காக்களில்  பல ஏக்கர்களில் குட்ஸூ ஊடுருவியிருப்பதால் பூங்காக்களின் முக்கியத்துவமும் அழகும் குறைகிறது.

கட்டுப்படுத்தல்

குட்ஸுவை இயந்திரங்கள் கொண்டும் ரசாயனங்கள் கொண்டும் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றாலும், தண்டு,விதை, வேர்கிழங்குகளின் மூலம் இவை தொடர்ந்து பெருகி வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இதன் உடைந்த சிறு துண்டு வேர்க்கிழங்கு கூட மிக வேகமாக வளர்ந்து விடும்.

குட்ஸு ஆக்கிரமித்திருக்கும் பிற இயல் தாவரங்களை அதிகம் சேதப்படுத்தாமல் குட்ஸுவில் மட்டும் நோயுருவாக்கும் Myrothecium verrucariap பூஞ்சையை அறிமுகப்படுத்தி இவற்றை கட்டுப்படுத்தும் முயற்சி  1998லிருந்து அமெரிக்க விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டு இன்னும் ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றது.

வெற்றிகரமான முறையாக இப்போது நடைபெறுவது ஆடுகளும் பன்றிகளும் குட்ஸுவை மேய்வதுதான். ஒரு சிறு ஆட்டுக்கூட்டம் ஒருநாளில் ஒரு ஏக்கரில் பரவியுள்ள குட்ஸுவை உண்டு விடுகிறது.

உணவுப்பயன்கள்

கொரியாவின் பிரபல நுடுல்ஸ் உணவான naengmyon குட்ஸுவின் வேர்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படுகிறது

 இதன் வேர் கிழங்கு மாவு சீன, ஜப்பானிய, கொரிய உணவுகளில் அதிகம் பயன்படுகிறது, கொரியாவில் வேர் கிழங்கிலிருந்து தேநீர்  போன்ற பானம் தயாரிக்கப்படுகிறது. ஜப்பானில் இந்த மாவு சூப்களை கெட்டியாக்க உபயோகப்படுகிறது

இதன் மலர்களும் இலைகளும் கூட உணவாக பயன்படுத்தப்படுகிறது.

இதன் மலர்களிலிருந்து கிடைக்கும்  ஊதா நிற தேன் திராட்சையின் சுவை கொண்டிருக்கும்.

 மருத்துவப்பயன்கள்

குட்ஸுவின் மற்றொரு பயன் அதிலிருக்கும் மருத்துவகுணம் உள்ள வேதிப்பொருட்கள்  Puerarin, daidzein, daidzin,, mirificin, மற்றும் salvianolic அமிலம் ஆகியவை பாரம்பரிய சீன மருத்துவத்தில் பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது

சீன மருத்துவத்தில் மது அடிமைகளை மீட்க குட்ஸுவிலிருந்து எடுக்கப்படும் மருந்துகள் உபயோகிக்கப்படுகின்றன.

பிற பயன்கள்

குட்ஸு கால்நடை தீவனமாகவும்,  மட்கச்செய்தபின் பயிர்களுக்கு உரமாகவும் பயனாகிறது.

குட்ஸுவின் தண்டுகளிலிருந்து நார் எடுக்கப்பட்டு ஆடைகளும் காகிதங்களும் உருவாக்கப்படுகின்றன .இவற்றை தொழிற்சாலைகளில் தயாரிக்கும் முன்னெடுப்புகளும் நடந்துகொண்டிருக்கின்றன. குட்ஸுவிலிருந்து அழகுசாதன பொருட்கள், எத்தனால் ஆகியவையும் கிடைக்கின்றன 

உலகின் மாபெரும் சவால்களான காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு அகியவற்றுடன் இந்த  அயல் ஆக்கிரமிப்புக்களைகள், அயல் ஆக்கிரமிப்பு உயிரினங்களின் அச்சுறுத்தலும் இணைந்திருக்கிறது எனினும் இதுகுறித்து போதுமான கவனம் இன்னும் உலக நாடுகள் பலவற்றில் உண்டாகி இருக்கவில்லை

 இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்கின் மனைவி ஹூக்ளி நதியில்  அறிமுகப்படுத்திய ஆகாயத்தாமரைகள் இப்போது இந்தியாவின் நீர் நிலைகள் பலவற்றை மாசுபடுத்தி பல நீர்வழித்தடங்களை அடைத்திருக்கிறது

குட்ஸுவை போலத்தான் தென்னமெரிக்காவில் இருந்து லண்டானா அழகுத்தாவரமாக உலகின் பல நாடுகளுக்கு அறிமுகமாகி உலகின் முதல் பத்து ஆக்ரமிப்பு களைகளின் பட்டியலில் இருக்கிறது

 தென்னமரிக்காவிலிருந்து நமக்கு விறகுக்காக  சீமைக்கருவேலம் அறிமுகமாகி இப்போது கட்டுக்கடங்காமல் வளர்ந்துகொண்டிருக்கிறது.  

இந்தியாவுக்குள் கோதுமை தானியங்களுடன் கலந்து வந்ததுதான் பார்த்தீனியம்.

கருங்கடலில் இருந்து வட அமெரிக்காவுக்கு கப்பல்களின் அடியில் ஒட்டிக்கொண்டு வரிக்குதிரை சிப்பி உயிரினங்கள் சென்று  பல்கிபெருகி இன்று ஆக்கிரமிப்பு உயிரினங்களாக, பல கடல்வாழ் இயல் உயிர்களுக்கு அச்சுறுத்தலாகி விட்டிருக்கின்றன

1949ல் இந்தியபெருங்கடலின் தென்பகுதியின் மரியோன் தீவுக்கு ஐந்து பூனைகள் எலிகளை கட்டுப்படுத்தும் பொருட்டு கொண்டுவரப்பட்டன. 1977ல் மூவாயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் அப்பூனைகள் பல்கிப்பெருகி அங்கிருந்த இயல் பறவைகள் பலவற்றை  வேட்டையாடி அழித்தன.

வளர்ப்பு பிராணியாக வைத்திருந்த மலைப்பாம்புகளை ஃப்ளோரிடாவில் காடுகளுக்குள் சிலர் கொண்டு வந்து விட்டனர். 6 மீட்டருக்கும் அதிகமான நீளம் வளரக்கூடிய அப்பெரும் பாம்புகள் அப்பிரதேசத்தின் இரு முக்கிய பறவை இனங்களை வேட்டையாடி முற்றிலும் அழித்தன

Bighead மற்றும் silver carp  எனப்படும் இரு பெரிய மீன் வகைகள் மீன் பண்ணைகளில் இருந்து தப்பி மிஸோரி ஆற்றுக்கு வந்தன. அவை அங்கிருந்த சிறு மீன்களின் உணவுகளை வேகமாக உண்டு அவற்றை பெருமளவில் அழித்தன.

இப்படி ஏராளமான அயல் உயிரினங்கள் தெரிந்தும் தெரியாமலும் புதிய இடங்களில் அறிமுகமாகி இயல் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் பொருளாதாரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறுகின்றன.

ஜேக் ஏறிச்சென்று மாயக் கோட்டையிலிருந்து பொன்முட்டையிடும் கோழியை கொண்டு வந்தது போலல்ல இதுபோன்ற அயல் ஆக்கிரமிப்பு தாவரங்களின் பரவல். இவை  சூழல் படுகொலைக்கு  காரணமாகிவிடுகின்றன.

பல நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்களின் காலணிகளின் அடியிலிருக்கும் மண்ணிலிருந்தும் பல அயல் தாவர விதைகளும் மகரங்தங்களும் புதிய பிரதேசங்களுக்கு அறிமுகமாகின்றன, எனவே உலக நாடுகள் அனைத்தும் மிக கவனமுடன் இருந்து இந்த அயல் உயிரினங்களின் அறிமுகத்தை, ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்த வேண்டும். 

Pet poisons

வளர்ப்புப்பிராணிகள் நம் வாழ்வில்  மகிழ்ச்சியையும் தோழமையையும் நிறைவையும் தருகின்றன, ஆனால் அவற்றின் உரிமையாளர்களாக, அவற்றைப் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதும் மிக முக்கிய கடமையாகும். வளர்ப்பு பிராணிகளுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய நச்சுப்பொருட்கள் நம் வீட்டிலும் வீட்டுதோட்டத்திலும் நாம் பிரியம் என்னும் பேரில் அவற்றிற்கு அளிக்கும் உணவுபொருட்களிலும் இருக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன

 நச்சுத்தன்மையுள்ள தாவரங்கள் அல்லது சில உணவுகள் என  செல்லப்பிராணிகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அல்லது உயிருக்கே ஆபத்தான பல பொருட்கள் நம்மை சுற்றிலும் அநேகமாக அனைத்து வீடுகளிலும் உள்ளன.  

வீடுகளில் தோட்டம் வைத்திருப்பவர்கள் பலர் செடிகொடிகளை செல்லமாக வளர்ப்பதுண்டு. செடிகளுக்கு நீரும் உரமும் அளித்தால் போதும் ஆனால் செல்லப்பிராணிகளுக்கு எதை உணவாக்க கொடுக்க வேண்டும் என்பதை அறியாதவர்களும் உண்டு. 

கோடைவிடுமுறைக்கென சமீபத்தில் ஊட்டி சென்றிருந்த போது தங்கி இருந்த விடுதி ஒன்றில் தங்கள் வீட்டு பொமரேனியன் நாயையும் உடன் அழைத்து வந்திருந்த ஒரு குடும்பத்தினர், ரமேஷ் என்று பெயரிடப்பட்டிருந்த அதை மடியில் அமர்த்தி மூன்று வேளையும் தயிர் சாதம் ஊட்டினார்கள்.  நல்லவேளை தொட்டுக்கொள்ள ஊறுகாய் கொடுக்கவில்லை.

பிராணிகளின் உடலியல்புக்கு தகுந்த. மனிதர்களின் சீரண மண்டலத்தை காட்டிலும் வேறுபட்ட சீரணமண்டலத்தை கொண்டிருக்கும் விலங்குகளுக்கு, அவற்றின் உடலியக்கங்களுக்கு தேவையான மற்றும் ஏற்ற உணவுகளை அளிப்பதுதான் சரி

அவற்றை நம் குடும்பத்தின் உறுப்பினர் போல நடத்துவதும் நினைப்பதும் அன்புமிகுதியால் தான் எனினும் அவற்றின் உணவுத்தேவைகள் மனிதர்களை காட்டிலும் வேறானது என்பதை நாம் அறிந்திருப்பது அவசியம். மேலும் பல உணவுப்பொருட்கள் செல்லப்பிராணிகளுக்கு மிக ஆபத்தானதாகி விடுவதுமுண்டு. அப்படியான சிலவற்றின் பட்டியல் இங்கே:

  • அவகேடோ-அல்லது பட்டர் பழம் (Avocado): (Persea americana) அவகேடோவின் இலைகள், கனிகள் மற்றும் விதைகளில் இருக்கும் பெர்சின் (persin,) என்னும் வேதிப்பொருள் பறவைகளின் உயிருக்கு ஆபத்தானது 
  • ரோடோடென்ரான்  (Rhododendron)செடிகளில்  இருக்கும் க்ரேயான் (grayantoxins,)  நஞ்சு பறவைகளின் இதயத்தை செயலிழக்கச் செய்யும்
  • Lily of the Valley என்றழைக்கப்படும் மிக அழகிய  வெண்ணிற மணிகளை போன்ற மலர்களைக் கொண்டிருக்கும் செடியில்   (Convallaria majalis) கார்டியாக் கிளைகோசைடுகள் எனப்படும் இதயத்துடிப்பை நிறுத்தும் பொருட்கள் உள்ளன. அவை பறவைகளுக்கு மிகவும் ஆபத்தானது
  • டேஃபோடில்கள் எனப்ப்டும் மிக அழகிய மலர்களை கொண்டிருக்கும் அலங்கார செடியின் (Daffodils,Narcissus spp.) வேர்க்கிழங்குகள் லைகோரின் (lycorine) என்னும் ஆல்கலாய்டை கொண்டிருக்கும் இது பறவைகளின் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும்
  • தென்னிந்தியாவில் மிக சாதாரணமாக காணப்படும் கோவில்களில் பூஜைக்கு பயன்படுத்தும் அழகிய நறுமணமுள்ள மலர்களை அளிக்கும் அரளிச் (Oleander Nerium oleander) செடியின் அனைத்து பாகங்களுமே மிக மிக நஞ்சுகொண்டது. இவையும் பறவைகள் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கும் ஆபத்தை உண்டாக்கும் கார்டியாக் கிளைக்கோசைடுகள் கொண்டிருக்கின்றது.
  • பல நிறங்களில் மிக அழகிய மலர்களை அளிக்கும் லில்லிகள் உண்டு (Lilium spp.) ஈஸ்டர் லில்லி, டைகர் லில்லி, டே லில்லி என பலவகைகளில் இருக்கும் இவை பூனைகளுக்கு மிக ஆபத்தானது இவற்றின் இலை மலர் மகரந்தம் என எதை பூனைகள் சாப்பிட்டலும் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழப்பு உண்டாகும்
  • மதன காமராஜ மரம் என்றழைக்கப்டும் சிறிய தென்னை மரங்களை போலிருக்கும் சைகஸ்  மரங்கள் (Sago Palm ,Cycas spp )  உலகெங்கிலும் மிக அதிகமாக விரும்பி வளர்க்கப்படும்  பிரபலமான  அலங்கரவகை தாவரங்கள். இதன் கொட்டைகள் நாய்கள் மற்றும் பூனைகளுக்கு ஈரல் செயலிழப்பை, வலிப்பை உண்டாக்கி உயிரிழக்கச் செய்யும்
  • ட்யூலிப் மற்றும் வெங்காயத்தாமரை செடிகளும் (Tulips and Hyacinths) ட்யூலிபாலின் மற்றும் ஹையாசிந்தின் என்னும் நஞ்சினை கொண்டிருக்கின்றன. இவை செல்லப்பிராணிகளுக்கு உடலுபாதைகளை உண்டாக்கும்
  • சோற்றுக்கற்றாழை மனிதர்களுக்கு பல நன்மைகளை அளிக்கும் ஒரு மூலிகை தாவரம் ஆனால் இது நாய்களுக்கும் பூனைகளுக்கும் வயிற்று உபாதைகள் உண்டாக்க்கி அதிகமான அளவில் உட்கொள்ளப்பட்டால் உயிரிழப்பையும் உண்டாக்கும்
  • மிக சாதாரணமாக வீடுகளில் அழகிய இலைகளுக்காக பூந்தொட்டிகளில் வளர்க்கப்படும்  ஊமைப்பிரம்பு என்றழைக்கப்படும் (Dieffenbachia (Dieffenbachia spp, Dumb Cane) செடியில் ஆக்ஸலேட் கிரிஸ்டல்கள் உள்ளன. இவை வாய் மற்றும் தொண்டையில் அழற்சி மற்றும் வீக்கம் உண்டாக்கி குரல் இழப்பை தற்காலிகமாக உண்டாக்கும். இச்செடிகள் வளர்ப்பு பிராணிகள் மற்றும் மனிதர்களுக்கும் மிக ஆபத்தானவை
  • மிக மிக குறைந்த அளவில் கொடுக்கப்பட்டாலும் தியோபுரோமின், காஃபின் ஆகியவற்றை கொண்டிருக்கும் சாக்கலேட்டுகள் கிளி உள்ளிட்ட அனைத்து பறவைகளுக்கும் நஞ்சாகி உயிராபத்தை உண்டாக்கும்
  • இவற்றோடு மிக அதிக உப்பு, கொழுப்பு, வெங்காயம் பூண்டு, திராட்சை, ஈஸ்ட் கலக்கப்பட்ட மாவு ஆகியவைகளும் செல்லப்பிராணிகளுக்கு உடல்நல கோளாறுகள் உண்டாக்கும்.

செல்லப்பிராணிகள் இப்போது காவலுக்கு மட்டுமல்ல  நடைபயணத்தோழமைக்கும்  விழியற்றவர்களுக்கு வாழ்க்கைத் துணையாகவும் பலருக்கு பெற்ற பிள்ளைகளுக்கிணையாகவுமே இருக்கின்றன. அவற்றின் உணவுத்தேவையை சரியாக அறிந்துகொண்டு அவற்றிற்கு உணவளிக்க வேண்டும்.  அவற்றிற்கு ஆபத்துண்டாக்கும் உணவுகளைக்குறித்தும் நாமறிந்திருக்க வேண்டியது மிக அவசியம்

குருதி மரம்

 இந்தியப்பெருங்கடலில் ஆப்பிரிக்க கடற்கரைக்கு அடுத்து அமைந்திருக்கும் நான்கு தீவுகள் அடங்கியது  சொகோட்ரோ தீவுக்கூட்டம். இது 34 மில்லியன் வருடங்களுக்கு முன்பே அரேபிய நிலப்பரபிலிருந்து தனியே பிரிந்த நிலப்பரப்பு. யேமான் குடியரசின் பகுதியாகிய இங்குள்ள தாவரங்களில் மூன்றில் ஒரு பங்கு உலகின் பிற பகுதிகளில் காணப்படுவதில்லை.

டிராகன் குருதி மரங்கள் என்பவை தாவர உலகின் அதிசயங்களில் ஒன்று.இத்தீவுக்கூட்டங்களில் ஒரு தீவில் மட்டுமே காணப்படும் இவற்றை நாம் விரைவில்   நிரந்தரமாக இழக்கவிருக்கிறோம். 

இம்மரங்கள் 1835ல்    அத்தீவுக்கூட்டங்களுக்கு சென்ற கிழக்கிந்திய கம்பெனியின் லெஃப்டினண்ட் வெல்ஸ்டெட் (Lieutenant Wellsted) என்பவரால்  முதன் முதலில் விவரிக்கப்பட்டது. முதலில் இவை Pterocarpus draco என்று பெயரிடப்பட்டன. பின்னர் 1880ல்தான் ஸ்காட்லாந்து  தாவரவியலாளர் ஐஸக் பேலே இதை   Dracaena cinnabari என்று  முறையாக மறுபெயரிட்டார். டிரசீனா பேரினத்தின் 100 சிற்றினங்களில் சின்னபரி உள்ளிட்ட 6 சிற்றினங்களே மரமாக வளரக்கூடியவை.

30 அடி உயரம் வளரும் 600 வருட வாழ்வை கொண்டிருக்கும் இம்மரங்கள் அத்தீவின் மலைக்குன்றுகளில் வளர்கின்றன. மரங்களில் இருந்து வடியும் குருதி போன்ற  அடர்சிவப்புநிற  கசிவு  இம்மரத்தின் பெயருக்கு காரணமாகிவிட்டிருக்கிறது.  டிராகனின் குருதி என்றழைக்கப்படும் இக்கசிவை அத்தீவு வாசிகள் ’emzoloh’ என்றழைக்கிறார்கள். 

அத்தீவின் பழங்குடியினரால் அந்த செஞ்சாறு உதட்டுக்கு சாயமிடுவதிலிருந்து மருந்துப்பொருளாக, வயலினுக்கு மெருகேற்ற என பல நூறு பயன்பாடுகளை நூற்றாண்டுகளாக கொண்டிருக்கிறது.

அத்தீவின் தொல்குடிகளின் பாரம்பரிய இசைகக்ருவியான Stradivarius violin எனப்படும் செந்நிற வயலின் இம்மரத்தின் செந்நிற கசிவினால் நிறமேற்றப்படுகிறது.

மாபெரும் குடைக்காளான்களை போலவும் பெரிய மழைக்குடை போலவும் அமைந்திருக்கும் இம்மரங்களின் தோற்றம் பிரமிக்க வைக்கும்.

இயற்கையில் எந்த ஒரு உயிரினத்தின் பாதுகாப்பு, பலநூறு பிற உயிர்களின் வாழ்விற்கும் பாதுகாப்பிற்கும் காரணமாக இருக்கின்றதோ அவை குடை உயிரினங்கள் – umbrella species  எனப்படுகின்றன. டிராகன் குருதி மரங்கள் பார்ப்பதற்கு குடை போலிருப்பது மட்டுமின்றி அப்பிரதேசத்தின் குடை உயிரினங்களாகவும் இருக்கின்றன. எனவேதான் அழியும் ஆபத்திலிருக்கும் இவற்றின் பாதுகாப்பு தற்போது உலகின் கவனத்துக்கு வந்திருக்கின்றது.

நேரடியாகவும் மறைமுகமாகவும்  அவற்றின் வாழ்விடங்களிலும். அவற்றிற்கு அருகிலும்  இருக்கும் பல உயிரினங்களின் பாதுகாப்பிற்கும் வாழ்விற்கும் காரணமாக இருக்கும் குடை உயிரினங்களின் பட்டியலில் புள்ளி ஆந்தைகள், பாண்டா கரடிகள் மற்றும் மலை கொரில்லாக்கள் போன்ற பறவை விலங்கினங்களும் இருக்கின்றன.

அஸ்பரகேசி (Asparagaceae) குடும்பத்தை சேர்ந்த ஒருவித்திலை தாவரமான  டிராகன் குருதி மரங்களின் அறிவியல் பெயர் Dracaena cinnabari. Dracaena என்பதன் கிரேக்க பொருள் டிராகன், cinnabari  என்பது செங்குழம்பு அல்லது சிவப்புக் கசிவு என பொருள்படும். இம்மரங்கள்  இத்தீவை வறளச்செய்து கொண்டிருக்கும் காலநிலை மாற்றம், விதைகளையும் இளம் செடிகளையும் மேய்ச்சல் விலங்குகள் உண்பது மற்றும் வாழ்விட அழிப்பு ஆகியவற்றால் அழியும் ஆபத்திலிருக்கிண்றன. ஆய்வாளர்கள் தற்போது 10 சதவீத வாழ்விடங்களில்  மட்டும் வளரும் இவை 2080ல் முற்றிலும் அழியும் என்கிறார்கள்.

 பச்சை வெள்ளை நிறங்கள் கலந்த சிறுமலர்களின் கொத்துக்கள் மார்ச் மாதத்தில் தோன்றி ஐந்து மாதங்களில் ஆரஞ்சு நிற சிறுகனிகள் உருவாகும். கனிகளில் 1லிருந்து 4 விதைகள் இருக்கும். கனிகளிலும் சிவப்பு சாறு இருக்கும். பறவைகளின் விருப்ப உணவு இக்கனிகள்.

இவற்றின் நாற்றுக்களை வளர்த்து பாதுகாக்கும் திட்டமும் தற்போதைய ஏமானின் அரசியல் காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இயற்கையியலாளர்கள் இவற்றை பாதுகாப்பதின் அவசியத்தை வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

இவற்றை குறித்து மேலும் அறிந்துகொள்ள : https://youtu.be/hnIBdNqx2So

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑