லோகமாதேவியின் பதிவுகள்

Month: August 2021

ஸ்கோவில் அளவீடு

கோவிட் பெருந்தொற்றினால் உலகடங்குவதற்கு  முன்பாக 2019’ல் தெற்கு கரோலினாவின் ஃபோர்ட் மில் நகரில் ஒரு திறந்த வெளி மைதானத்தில் ஏற்பாடாகியிருந்த  பக்கர் பட் நிறுவனம் (Puckerbutt Pepper Company)  நடத்திய  அந்த சர்வதேச உண்ணும் போட்டியை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரளாக காத்துக் கொண்டிருந்தார்கள். காணொளி எடுப்பவர்களும் போட்டியை நடத்துபவர்களுமாக அந்த மேடை சந்தடியாக இருந்தது ஒரு சிறு மேடை.யிலிருந்த நான்கு பெண்கள் உள்ளிட்ட 11 போட்டியாளர்களும். ஒவ்வொருவராக பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.

பல வருடங்களாக இப்போட்டியில் தொடர்ந்து வெற்றி பெற்றுவரும் சித் பார்பரை பலருக்கு தெரிந்திருந்ததால், அவரை பலரும் உற்சாகப்படுத்தி கூச்சல் இடுகிறார்கள். போட்டியாளர்களும் இன்னும் பலரும் அடர் சிவப்பு மிளகாயின் சித்திரம்  இருக்கும் கருப்பு நிற சட்டை அணிந்திருக்கின்றனர்.

 போட்டியாளர்களின் முன்பு குளிர்ந்த பால் ஒரு கிண்ணமும், சிறு கூடையொன்றில் சமமான எடையில் உலகின் அதிக காரமான  மிளகாய்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆம் அது ஒரு சர்வதேசஅளவிலான  அதிக காரமான மிளகாய்கள் உண்ணும் போட்டிதான்.

மிளகாய்களின் வண்ணங்கள் மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்பு, கருப்பு, அடர்சிவப்பு என வேறு பட்டிருக்கின்றன. மொத்தம் 12 தகுதி சுற்றுக்களில் சுற்றுக்கு ஒன்றாக  குறைந்த பட்ச கார அளவிலிருந்து, மெல்ல மெல்ல அதிக கார அளவிற்கு மிளகாய்கள் போட்டியாளர்களுக்கு உண்ணத் தரப்படுகின்றன 

முதல் சுற்றில் Scotch Bonnet எனப்படும் 3,50000 SHU  கார அளவுள்ள மிளகாய்கள் . அடுத்ததாக 60000 SHU, அளவுள்ள ரீப்பர் நீரா  (Reaper Neeraa) தொடர்ந்து பூத் ஜலாக்கியா என்னும் 1000000 SHU கொண்ட  இந்திய பேய் மிளகாய், அடுத்து  மஞ்சள் நிறத்திலிருக்கும் 1,600000 SHU  கார அளவுள்ள மிளகாய் ( Yellow 7 pot), பின்னர் 2,000000 SHU, கொண்டிருக்கும் கொக்கோ லோகோ ஸ்பைசி மிளகாய் (Cocoa Loco Spicy Chile) ஆகியவைகள் கொடுக்கப்படுகின்றன.

 இரண்டாம் சுற்றில் ஒருவர் தன்னால் தொடர முடியாது என்று சொல்லி போட்டியில் இருந்து விலகுகிறார். போட்டியாளர்களுக்கு ஏராளமாக  வியர்க்கிறது, குமட்டுகிறது கண்ணில் நீர் வழிகிறது ஆனாலும் அத்தனை காரமான புதிய மிளகாய்களை கடித்து மென்று விழுங்கி கொண்டே இருக்கிறார்கள். சிலர் குளிர்ந்த பாலை அருந்தி போட்டியிலிருந்து விலகிக் கொள்கிறார்கள் 

 ஆறாம் சுற்றில் 1,6000000 SHU கார அளவுள்ள கரோலினா ரீப்பர் கொடுக்கப்படுகையில் மொத்தம் 7 போட்டியாளர்கள்தான் இருக்கிறார்கள், ஏழாம் சுற்றில்  சாக்கலேட் (Chocolate) மிளகாய்கள் 1,80000 SHU அளவில் கொடுக்கப்படுகிறது, எட்டில் 2,200000 SHU உள்ள நெஞ்செரிப்பான் (Heartburn) மிளகாய்கள் கொடுக்கப்பட்ட போது ஐந்தே போட்டியாளர்கள் மட்டும் இருக்கின்றனர்.

ஒன்பதாம் சுற்றில் 2,300000 SHU உள்ள  ஒற்றை சக்கரம் (One ring) கொடுக்கப்பட்டபோது  மற்றொரு போட்டியாளரும் வெளியேறுகிறார். அலற வைக்கும் பீச் மிளகாய்கள்  (Peaches & Scream)  கார அளவு குறிப்பிடப்படாமல் பத்தாவது சுற்றில் கொடுக்கப்பட்ட போது இறுதி போட்டியாளர்களாக சித், பெல்லா மற்றும் ஜஸ்டின் ஆகிய மூவர் மட்டுமே இருக்கிறார்கள்

 பின்னர் உலகின் மிக அதிக காரமான2,600000  SHU அளவுள்ள  பெரிய வகை மிளகாயான Giant Carolina Reaper கொடுக்கப்பட்டு 20, 10 5 என குறைந்து கொண்டே வரும்  விநாடிகளுக்குள் கொடுக்கப்பட்ட மிளகாய்கள் அனைத்தையும்   விழுங்குபவர்களே வெற்றியாளர்கள் என்று அறிவிக்கப்பட்ட சில விநாடிகளில் எதிர்பாராமல் முன்னணி போட்டியாளர் சித் தன்னால் முடியாது சைகை காண்பித்துவிட்டு குளிர்ந்த பாலை  அருந்தி விலகுகிறார். அழகிய ஒப்பனையில் இருந்த பெல்லாவும், ஜஸ்டினும் மட்டுமே மேடையில்

  கடைசி வரை அலட்டிக்கொள்ளாமல் தனக்கு பிடித்தமான சிற்றுண்டியைப் போல அத்தனை மிளகாயையும் உண்டு முடித்து வெற்றியாளராகிறார் ஜஸ்டின். அவருக்கு பரிசாக ஓராயிரம் டாலர்களுக்கு காசோலையும் உலக உருண்டையின் மீது  சிவப்பில் கரோலினா ரீப்பர் மிளகாயின் சிறு சிற்பம் இருக்கும் கோப்பையும்  கொடுக்கப்படுகிறது. 

பெல்லா இரண்டாவது வந்தாலும் பார்வையாளர்களில் ஒருவர் பெல்லாவை பாராட்டி ஓராயிரம் சன்மானம் கொடுத்ததுடன் அப்போட்டி முடிவுக்கு வருகிறது.1

 போட்டியின் போது அவசர உதவிக்கான மருத்துவ வாகனங்களும், மருந்துகளும், போட்டியிலிருந்து விலகுபவர்கள் வாயுமிழவென்றே பக்கட்டுகளும் தயாராக இருக்கின்றன. பல போட்டியாளர்களுக்கு உதடும் நாக்கும் புண்ணாகி ரத்தம் கசிகிறது. சிலர் வாயுமிழ்ந்தபடி இருக்கிறார்கள். 

இதுபோல விநோதமான காரம் கூடிய மிளகாய்களை உண்ணும் போட்டி உலகெங்கிலும் வருடா வருடம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆயிரம் டாலர் என்னும் சிறு தொகைக்காவா தங்களை இத்தனை வருத்திக்கொண்டு இந்த போட்டியில் கலந்து கொள்கிறார்கள்?   பல நாடுகளில் பரிசாக சன்மானம்  கூட கொடுப்பதில்லை மாறாக கோப்பைகளும், பல மூட்டை மிளகாய்களும், நட்சத்திர விடுதி தங்கல்களும் கூட பரிசாக கொடுக்கப்படுகிறது. இப்போட்டியின் வசீகரத்துக்காகவும் பிரபல்யத்துக்கவுமே இவை தொடர்ந்து நடைபெறுகின்றன.புதிய மிளகாய் கலப்பினங்களை உருவாக்கும் நாடுகள் தங்கள் பெருமையை பறை சாற்றிக்கொள்ளவும் இப்போட்டிகளை முன்நின்று நடத்துகின்றன..

 நாக்கை எரிய செய்து  கண்ணில் நீர் வடிய செய்யும் மிளகாய்களையும் அதன் சுவையையும்   அறிந்திருந்த உலகம், கனெக்டிசுட்டில் 1865 ஜனவரி 22ல் பிறந்த வில்பர் ஸ்கோவிலுக்கு (Wilbur Scoville) பிறகுதான் மிளகாய்களின் காரத்தை அளவிட முடியுமென்பதையும் அறிந்து கொண்டது. 

 வில்பர் ஸ்கோவில் ஒரு பிரபல வேதியியலாளரும், பல விருதுகளுக்கு சொந்தக்காரரும், மருந்தாளுமையில் பேராசிரியருமாவர். அமெரிக்க மருந்தக அமைச்சகத்தின் இரண்டாம் துணைத் தலைவராகவும் இருந்த  இவரின் The Art of Compounding என்னும்  பிரபல நூலில்தான் முதன்முதலாக ’’மிளகாய் காரத்துக்கு  முறிமருந்து பால்தான் நீரல்ல’’  என குறிப்பிட்டிருந்தார். இவரது Extracts and Perfumes  என்னும் நூலும்  வேதியியலில்  மிக முக்கியமானது

திரு. ஸ்கோவில் டெட்ராய்டில் அமைந்திருந்த பிரபல பார்க் டேவிஸ் (Parke-Davis) மருந்தகத்தின் தலைவராக இருக்கையில் மிக அதிகமாக தயாரிக்கப்பட்ட’’ ஹீட்’’ (Heet) என்னும் பெயரிலான வலிநிவாரண பசையில் முக்கிய வேதிப்பொருளாக மிளகாயின் கேப்ஸெய்சின் (Capsaisin) இருந்தது. தேவையான கேப்ஸெய்சினை பிரித்தெடுக்க ஆய்வக கருவிகள் கண்டுபிடிக்க பட்டிருக்காததால் மிள்காய்களிலிருந்தே சாறெடுத்து தயாரித்தனர். ஆனால் இதில் காப்ஸெய்சினின் அளவை துல்லியமாக மருந்தில் கலப்பதில் நடைமுறை சிக்கல்கள்  இருந்த வந்தது.

அப்போது  ஸ்கோவிலால்  கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஸ்கோவில் புலனுணர்வு சோதனை (Scoville Organoleptic Test)  எனப்படும் இந்த காரவெப்ப அளவீடு முறை.

 ஒரு காரமான பொருள் சர்க்கரை நீரில் எவ்வளவு நீர்த்துப்போக வேண்டும் என்பதை இந்த சோதனை அளவிட்டது.  இம்முறையில் ஸ்கோவில் மதிப்பீடுகள் கார சர்க்கரை- நீர்த்தல்களுக்கு மனித எதிர்வினைகளைத்தான் அடிப்படையாகக் கொண்டிருந்தன

ஸ்கோவில் சுவைப்பவர்களின் நாக்கை எரிக்காத வரை கார சர்க்கரை கரைசல்களை படிப்படியாக நீர்த்துப்போகச் செய்வார், மிகச்சிறந்த கார வெப்பத்தை அறியும் நாவினைக்கொண்ட தன்னார்வலர்களுக்கு அவற்றை ருசிக்க கொடுத்து எந்த அளவிலான நீர்த்த கலவையில் ஐந்தில் மூன்று நபர்களால் காரத்தை கண்டறியவே முடியவில்லையோ அந்த அளவீட்டை குறித்துக்கொள்ளுவார். ஒரு மிளகாயின் கார வெப்பத்தை முழுமையாக நீக்குவதற்காக அக்கரைசல் எத்தனை முறை நீர்த்துப்போகச் செய்யப்பட்டது என்பதன் அடிப்படையில் அந்த மிளகாய்க்கு ஸ்கோவில் ஒரு எண் மதிப்பீட்டை வழங்கினார். உதாரணமாக, ஜலபெனோ மிளகாய் 10,000 ஸ்கோவில் அளவீட்டை கொண்டுள்ளது, அதாவது இதன் வெப்பம் நடுநிலையாக்கப்படுவதற்கு முன்பு ஜலபெனோ கரைசல் 10,000 முறை நீர்க்கப்பட வேண்டும்.  

 இம்முறை பரவலாக பயன்பாட்டில் இருந்தது என்றாலும் ஒவ்வொரு மனிதனின் காரம் தாங்கும் திறனென்பது வேறுபடுமென்பதால் இதில் முடிவுகள் மிகத்துல்லியமாக இருக்கவில்லை.

.1980 களில் இருந்து தான்   உயர் செயல்திறன் திரவ நிறப்பிரிகை (எச்பிஎல்சி),   (High-Performance Liquid Chromatography -HPLC),  முறையில் கேப்ஸெய்சினை பிரித்து கார அளவீடுகள் கணக்கெடுக்கப்படுகின்றன.

 1912 முதல் இந்த கார அளவீட்டு முறை அதை கண்டறிந்தவரான வில்பர் ஸ்கோவிலின் பெயராலேயே  ’’Scoville Heat Units,  SHU’’ என குறிப்பிடப்படுகிறது.

அமெரிக்க மருந்து சங்கம் 1922 இல் ஸ்கோவிலுக்கு எபெர்ட் பரிசையும், 1929 இல் ரெமிங்டன் ஹானர் பதக்கத்தையும் வழங்கியது..ஸ்கோவில் தனது 77 ஆவது வயதில் 1942ல்’ மரணமடைந்தார். கடந்த 2016 ஜனவரி 22ல் வில்பர் ஸ்கோவிலின் 151 ஆவது பிறந்த நாளை சில சிறப்பு விளையாட்டுக்களுடன் கூகுள் டூடுல் உண்டாக்கி அவரை சிறப்பித்திருந்தது.2

 சமகால பயன்பாடுகள் கார வெப்பத்துக்கு பொறுப்பான  கேப்ஸெய்சினின் அளவுகளை  அளவிட பலவித  இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றன. இவை மிக துல்லியமாக ஒவ்வொரு மிளகாய்க்கும் கார வெப்ப அளவீட்டை தெரிவிக்கின்றன. உதாரணமாக குடைமிளகாய் பூஜ்ஜியத்தின் ஸ்கோவில் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது அதாவது அதில் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவில் கேப்ஸெய்சின்கள் இல்லை, அதே நேரத்தில் ஹாபனேரோ மிளகாய்த்தூள் 300,000 ஸ்கோவில் மதிப்பீட்டை  கொண்டுள்ளது,

 ஸ்கோவில் காரவெப்ப அளவீடு மிளகாய்களின் காரவெப்பத்துக்கு காரணமாயிருக்கும் காப்சினாய்டுகளின்  (Capsaicinoids) தொகுதியில் உள்ள கேப்ஸெய்சினின் அளவையே கணக்கில் எடுத்துக் கொள்ளுகிறது. கேப்ஸெய்சின் நீரில் கரையாது எனவே அதிக மிளகாயின் காரத்துக்கு நீர் குடிப்பது ஒருபோதும் நிவாரணமாகாது. நீர் கேப்ஸெய்சினை மேலும் பரவச்செய்து கார வெப்பத்தை அதிகரிக்கும். எனவே இந்த காரத்தை மட்டுப்படுத்தும் ஒரே வழி, குளிர்ந்த பால், ஐஸ்கிரீம், சோடா அல்லது எலுமிச்சை சாறு, பாலாடைக்கட்டி போன்ற அமில உணவுகளுடன் அதை கலப்பதுதான்.

கரோலினா ரீப்பரை போல காரம் கூடிய அதிக SHU அளவீடுகளை  கொண்ட ’சூப்பர் ஹாட்’ மிளகாய்களை விளைவிக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்துமே முனைப்புடன் இருக்கிறது என்றாலும், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரெலியாவுக்கிடையேதான் 1990’களிலிருந்து இதில் கடும்போட்டி நிலவுகிறது.

 மிளகாய்களின் கார அளவீடுகளை குறிக்கும் ஸ்கோவில் அளவீடு கண்டறியப்பட்ட பின்னரே சூப்பர் ஹாட் மிள்காய்கள் அதிகம் உருவாக்கப்பட்டன. பொதுவாக  1,000,000 SHU க்களுக்கு மேல் இருப்பவையே  சூப்பர் ஹாட் மிளகாய்களாக கருதப்படுகின்றன. 

1990 களுக்கு முன்பு 3,50000 SHU களுக்கு அதிகமாயிருந்தவை  ஸ்காட்ச் போனெட் மற்றும் ஹேபனேரோ ஆகிய  (Scotch bonnet & habanero) இரண்டு மிள்காய் வகைகள் தான்

 1994 ல் கலிபோர்னியா விவசாயி ஃப்ரான்க் கார்சியா Frank Garcia  ஹேபனேரோவின் உட்கலப்பினமொன்றை ’’சிவப்பு சவினா’’ என்னும் பெயரில் (Red Savina,) 570,000 SHU அளவீட்டில்   உருவாக்கியபோது அதுவே உலகின் உயர்ந்தபட்ச கார அளவாக இருக்குமென கருதப்பட்டது.

 ஆனல் 2001ல் நியூ மெக்ஸிகோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் மிளகாய் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான பால் போஸ்டாண்ட் (Paul Bosland) இந்தியாவுக்கு வந்து அஸ்ஸாமில் விளையும்  பேய் மிளகாய், பூத் ஜலாக்கியா, நாகராஜ மிளகாய் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் பிரபல மிளகாய்களை ஆய்வு செய்து அவை 1 மில்லியன் SHU க்களுக்கு மேல் காரம் கொண்டிருப்பதை கண்டறிந்தார், 

 பல வருடங்களாக உலக நாடுகள் பல மும்முரமாக புதிய கலப்பின  மிளகாய் வகைகளை அதிக கார அளவுகளில்  உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. 1994ல் சிவப்பு சவினா உலகின் காரம் கூடிய மிளகாயாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டது, 2006’ல் டோர்செட் நாகாவும், (Dorset Naga), 2007ல் பேய் மிளகாயும்,(Ghost Pepper) முந்தைய சாதனைகளை முறியடித்தன.

  2011’ல் முதலில் இன்ஃபினிட்டி மிளகாயும் ,(Infinity) பின்னர் அதே வருடத்தில்  நாக வைப்பரும்,(Naga Viper,) பின்னர்  2 மில்லியன் SHU அளவுடன் ட்ரினிடாட் ஸ்கார்பியன் புட்ச் மிளகாய்களும்,(Trinidad Scorpion Butch T pepper) அடுத்தடுத்து  சாதனைப் பட்டியலில் இடம் பெற்றன. 

  2013  நவம்பரில் இருந்து இன்று வரையிலும் உலகின் காரம் கூடிய மிளகாயாக முதலிடத்தில் தொடர்ந்து இருந்து வருவது 1,400,000 லிருந்து  2,200,000 SHU அளவுகள் கொண்டிருக்கும் கரோலினா ரீப்பர் மிளகாய்களே, (Carolina Reaper) இவற்றில் பெரிய மற்றும் சிறிய வகை மிளகாய்கள் உள்ளன, 

கரோலினா ரீப்பர்

 காரம் குரைந்த மிளகாய்கள் காரத்துக்கு கரணமான கேப்ஸெய்சினை , மிளகாயின் நடுவிலிருக்கும் பஞ்சுபோன்ற நீண்ட பகுதியில் (pith) சேமித்து வைக்கின்றன ஆனால் சூப்பர் ஹாட் மிளகாய்கள் தங்களின் பித்’திலும் சதைப்பகுதியிலும் கேப்ஸெய்சினை சேமித்துவைகின்றன. எனவே பிற மிளகாய் வகைகளில் நடுவிலிருக்கும் பித்தையும் விதைகளையும் நீக்கும் போது கார அளவு  குறையும் என்பது,சூப்பர் ஹாட் மிளகாய்களுக்கு பொருந்தாது.

பல நாடுகளின் கேள்விகளுக்கும், கண்டங்களுக்கும் இப்போட்டிகள் உட்பட்டு இருப்பினும்,.மிள்காய் சாஸ்களும் மிளகாயின் காரத்தை அடிப்படையாக கொண்ட உணவுப்பொருட்களின்  விற்பனையையும் அதிகரிக்க செய்யும் பொருட்டு இப்படியான கலப்பின வகைகளை உருவாக்கும் நாடுகள் இரக்கமின்றி தொடர்ந்து போட்டிகளை நடத்திக்கொண்டே தான்  இருக்கின்றன. 

இம்மிளகாய்களின் விதைகளும் பெரும் விலைகொடுத்து வாங்கப்படுபவதால் விதை வணிகமும் இப்போது மிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. மிளகாய் உண்ணும் போட்டிகளை நடத்தி யூ ட்யூபில் வெளியிட்டு அதில் பணம் பார்ப்பவர்களும்  பெருகிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் நாகலாந்தில் மிகப்பிரபலமான ஹார்ன்பில் திருவிழாவிலும் காரமிளகாய்களை உண்ணும் போட்டி வருடா வருடம் நடைபெறுகிறது.

கண்ணீர் புகைக்குண்டுகளைப்போல கலவரம் நடக்கும் இடங்களில் கூட்டத்தை கலைக்க அஸ்ஸாமின் பேய் மிளகாயின் தூள் நிரப்பப்பட்டிருக்கும் கையெறி குண்டுகள் இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்படுகிறது. இந்த கையெறி குண்டுகள் (Chilli Grenades) விஷமற்ற ஆயுதங்களின் பட்டியலில் வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பிருந்து, இந்த மிளகாய் கையெறி குண்டுகள் அஸ்ஸாம் படைப்பிரிவில் புழக்கத்தில் இருக்கிறது.  இந்த பேய்மிளகாய் கலவையை பெண்கள் தங்களது தற்காப்பிற்காக பயன்படுத்தும் ஸ்ப்ரேக்களில் சேர்க்கும் யோசனையும்  அரசுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது 

 இந்த காரத்தை உணர்தல் என்பது பாலூட்டிகளுக்கு மட்டுமேயான திறன் என்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பறவைகளுக்கு இந்த காரம் உரைப்பதில்லை. நாம் சாதரணமாகவே வளர்ப்புக்கிளிகள் மிளகாய்ப்பழங்களை விரும்பி உண்ணுவதை பார்த்திருக்கிறோம்.

இதனால்தான் தாவரங்களை உண்ண வரும் விலங்குகள் காரமுள்ள பழங்களை கொண்ட தாவரங்களை தவிர்த்துவிடுகின்றன,. ஆனால் பறவைகள்  காரமுள்ள பழங்களை உண்டு எந்த பிரச்சனையும் இன்றி விதை பரவலுக்கும் மகரந்த சேர்க்கைக்கும் உதவுகின்றன. இயற்கையின் அதிசயங்களில் இதுவுமொன்று

 மிக மிக அதிக காரம் விரும்பி உண்ணும் நபர்களுக்கு  “Pyro-Gourmaniac என்று பெயருண்டு. Pyro என்றால் நெருப்பென்றும் Gourmaniac என்றால் உணவின் மூலம் தன்னை வருத்திக்கொள்ளுபவர்கள் என்றும் பொருள். இவர்கள் படிப்படியாக தங்களின் கார வெப்பம் தாங்கும் அளவை அதிகரித்துக் கொண்டுவிடுகிறார்கள். இயற்கையாகவே சிலரின் ஜீன் கட்டமைப்பிலேயே அதிக காரம் தாங்கும்படியும் இன்னும் சிலருக்கு மிக குறைந்த அளவே தாங்கும் திறனும் இருக்கும் 

  ஒரு நாளின் உணவில் ஒரு நபருக்கு 50 கிராம் கேப்ஸெய்சின் என்பது பக்க விளைவுகளும் ஆபத்துமற்றதென்கிறது பல ஆய்வுகள் அதற்கு அதிகமாகும்போது உயிரிழப்போ அல்லது கடும் உடல் பிரச்சனைகளோ வராது. இரைப்பை மற்றும் உணவுக்குழாய் வீக்கம், அழற்சி, இரைப்பை புண்ணாகுதல், வாயுமிழ்தல், கண்ணெரிச்சல் மற்றும் வலி, வியர்வை பெருக்கு, வயிற்றுபோக்கு நெஞ்செரிச்சல் மற்றும் தலைவலி ஆகியவை அதிக கேப்ஸெய்சினை உட்ள்வதால் வரும் பக்கவிளைவுகள்.  நீடிக்கும் உடலாரோக்கிய பிரச்சனைகளை கேப்ஸெய்சினின் கூடுதல் அளவுகள் உருவாகுவதில்லை.  

பேய்மிளகாய்

 உலகின் மிக அதிக மிளகாய் சாகுபடி செய்யும் நாடாக சீனாவே இருந்துவருகிறது இந்தியாவின் பங்கு மொத்த மிளகாய் உற்பத்தியில் 36 சதவீதம்தான். கடந்த 2008 ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு பெற்றிருக்கும் நாகலாந்த்தின்  பேய்மிளகாய்கள்  ஜூலை 2021ல் தான் முதன் முதலாக லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட துவங்கியிருக்கின்றன..3  சுமார் 2.71 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ஒரு $3.68 பில்லியன்) ஆக உள்ள உலகளாவிய காரஉணவுகளின்  சந்தை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக வளர்ந்துள்ளது. இது மேலும் 2028 க்குள் $4.38 பில்லியனிலிருந்து $5.95 பில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல மிளகாய் வகைகளின் ஸ்கோவில் அளவீடுகள்:

  •    Bell Pepper (0 SHU/ 0 SCU)
  •    Ghost Pepper (855,000 to 1,041,427 SHU)
  •    7 Pot Jonah (800,000 to 1,200,000 SHU)
  •    Trinidad 7 Pot Pepper (1,000,000 to 1,200,000 SHU)
  •     Infinity Pepper (1,067,286 to 1,250,000 SHU)
  •     7 Pot Primo (800,000 to 1,268,250 SHU)
  •    7 Pot Barrackpore (1,000,000 to 1,300,000 SHU)
  •   7 Pot Brain Strain (1,000,000 to 1,350,000 SHU)
  •   Naga Viper (900,000 to 1,382,118 SHU)
  •   Trinidad Scorpion “Butch T” (800,000 to 1,463,700 SHU)
  •     Naga Morich (1,000,000 to 1,500,000 SHU)
  •     Dorset Naga (1,000,000 to 1,598,227 SHU)
  •     7 Pot Douglah (923,889 to 1,853,986 SHU)
  •     Trinidad Moruga Scorpion (1,200,000 to 2,000,000 SHU)
  •      Komodo Dragon Pepper (1,400,000 to 2,200,000 SHU)
  •     Carolina Reaper (1,400,000 to 2,200,000 SHU)

வருடா வருடம் புதிய இனங்கள் கண்டு பிடிக்கபட்டு கொண்டிருப்பதால் இந்த பட்டியல் மாறிக்கொண்டே இருக்கும், இந்த வரிசையில்  இன்னும் சேர்ந்திருக்காத    சிறப்பிடம் பெற்றவை என சொல்லப்படும்  2,480,000 SHU கொண்ட  டிராகன் மூச்சு மிளகாய்களையும், (Dragon’s Breath Pepper), பெப்பர்  X எனப்படும் (Pepper X) 3,180,000 SHU கொண்ட  சூப்பர் ஹாட் மிளகாய்களையும் வெறும் கைகளால் தொட முடியாது. அவற்றை கையுறைகளை அணிந்து கொண்டு கண்களில் விதைகள் தெறித்து விடாமலிருக்க பாதுகாப்பு கண்ணாடிகளையும் அணிந்துதான் கையாளவேண்டும். 

 ஸ்கோவில் அளவீட்டு முறையில் மிளகாய்களின் காரம் மட்டுமல்ல குருமிளகின் பைப்பெரின் (Piperine) இஞ்சியின் ஜிஞ்சரோல் (Gingerol). ஆகியவற்றையும் அளவிடலாம்.

தாவரங்களிலிருந்து கிடைக்கும் வேதி பொருட்களில் மிக மிக காரமானது என்று அறியப்பட்டிருக்கும்   Resinifera Toxin  (RTX) என்னும் நச்சுப்பொருள் மொராக்கோ மற்றும் நைஜீரியாவில் வளரும் Euphorbia resiniferaஎன்னும் கள்ளிச்செடியின் பிசினில் இருந்து கிடைக்கிறது இதன் ஸ்கோவில் அளவானது மிளகாயிலிருக்கும் கேப்ஸெய்சினைவிட ஆயிரம் மடங்கு அதிகமாகும். (சுமார் 16 பில்லியன் ஸ்கோவில் யூனிட்டுக்கள்). இனி மிளகாய் சாஸ்களை வாங்குகையில் அதில் அதன் கார வெப்ப அளவீடுகள் எத்தனை SHU  என்பதை கவனிக்கலாம்.

அடிக்குறிப்புகள்:https://www.youtube.com/embed/fC0sMIue5qk?version=3&rel=1&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&fs=1&hl=ta-IN&autohide=2&wmode=transparent

  1.  2019 ல் நடந்த போட்டியின் காணொளி இணைப்பு : https://youtu.be/fC0sMIue5qk
  2. கூகுள் டூடுல்: https://www.google.com/doodles/wilbur-scovilles-151st-birthday
  3. https://www.republicworld.com/world-news/uk-news/india-exports-shipment-of-bhut-jolokia-worlds-hottest-chilli-to-england.html

துருவத்தாவரங்கள்

 தாவரங்கள் என்று  நமக்கு தெரிந்தவை எல்லாமே இலையும் கிளையும்  மலரும், வேரும் கொண்ட பெருமரங்களும், பச்சைக் கொடிகளும் பசுங்கத்திகளென இலை கொண்டிருக்கும் புற்களும், புதர்களும் செடிகளும்தான், ஒரு சிலரே பாசிகளும் பெரணிகளும் அடங்கிய  பூக்காத கீழ்நிலைத்தாவரஙகளை அறிந்திருப்பார்கள். துருவக்கரடிகளையும், பென்குவின்ப றவைகளையும், உறைபனிநீரில் மீன்பிடிக்கும் எஸ்கிமோக்களையும் மட்டுமே நம்மில் பலர் துருவப்பகுதியின் வாழ்வாக அறிந்திருப்போம் ஆனால் கடுமையான குளிர், அதிக காற்று மற்றும் மிகக் குறைந்த ஈரப்பதம் கொண்டிருக்கும் அண்டார்டிகா மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில்  -125.8 டிகிரி பாரன்ஹீட் வரை  வெப்பநிலை குறைவாக பதிவு செய்யப்பட்டிருக்கும் சுற்றுச்சூழலிலும், தாவர -விலங்கு வாழ்க்கை  இருக்கிறது. 

ஆர்க்டிக் (Arctic) என்பது பூமியின் வட முனையில் அமைந்துள்ள பகுதியாகும். இது தென் முனையில் உள்ள அண்டார்டிகாவுக்கு எதிர்ப்புறத்தில் உள்ளது. ஆர்க்டிக் பகுதியானது, ஆர்க்டிக் பெருங்கடல், மற்றும் கனடா, கிரீன்லாந்து (டென்மார்க்கின் பகுதி), ரஷ்யா, அலாஸ்கா (ஐக்கிய அமெரிக்கா), ஐஸ்லாந்து, நார்வே, சுவீடன், பின்லாந்து ஆகியவற்றின் சில பகுதிகளை  உள்ளடக்கியது.ஆர்க்டிக்கின் பெரும் பகுதி பனிக்கட்டிக் கடலையே கொண்டுள்ளது. இங்கு பொதுவாக பனிப்பகுதியில் வாழத் தகுதியான உயிரினங்களே (மனிதர் உட்பட) வாழுகின்றன. ஆர்க்டிக் பழங்குடி மக்களின் வாழ்க்கை குளிர் பிரதேசங்களின் வாழ்க்கை முறைகளுக்கு ஒத்ததாக அமைந்துள்ளது. ஆர்க்டிக் என்ற சொல் கிரேக்க மொழிச் சொல்லான ஆர்க்டிகோஸ் என்பதிலிருந்து  “கரடிக்கு அருகே,,ஆர்க்டிக், வடக்கே”என்னும் பொருளில் வைக்கப்பட்டது. 

 பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதியான அண்டார்டிகா (Antarctica) பூமியின் தென் முனையை சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும்.புவியின் தென்முனையில் அமைந்திருப்பதனால் இப்பகுதிக்கு சூரிய வெப்பம் மிகக் குறைந்த அளவே வந்து சேர்கிறது. இதன் காரணமாக கண்டம் முழுவதும்  பனிக்கட்டியினால் மூடப்பட்டிருக்கும். வருடத்தின்  ஆறு மாதங்கள் சூரிய  வெளிச்சமே இருக்காது. அண்டார்டிக்கா என்ற பெயர்  கிரேக்க மொழியில்   “ஆர்க்டிக்கிற்கு எதிரிடையான”, கரடி இல்லாத, “வடக்கிற்கு எதிரிடையாக” என்னும் பொருள்களை கொண்டிருக்கிறது.

 துருவப் பகுதிகளில் வாழ்க்கை நம்பமுடியாத அளவுக்கு கடினமாக இருக்கும். கடுமையான குளிர்ந்த காற்று நிலப்பரப்பு முழுவதும் சாட்டை போல் வீசி அடித்துக் கொண்டிருக்கும். மிக குறைந்த குளிர்கால வெப்பநிலை கொண்ட குளிர்கால இரவு பல மாதங்களுக்கு  நீடிக்கும். ஆனால் இந்த கடின, வறண்ட, வெற்று நிலப்பரப்புகளில் உயிர்கள் வாழ்கின்றன.

அண்டார்டிகாவின் பெரும்பகுதி  பனியால் மூடப்பட்டிருப்பதால், கண்டத்தின் நிலப்பரப்பில் 1 சதவிகிதம் மட்டுமே தாவரங்களின் வளர்ச்சிக்கு ஏற்றது. இச்சூழலில்  தாவரங்கள் தீவிர காலநிலையுடன் போராட பல தகவமைப்புகளைக் கொண்டுள்ளன.

துருவ நிலங்களில் இரண்டு முக்கிய தாவர மண்டலங்கள் காணப்படுகின்றன. தெற்கில், போரியல் காடுகளால் உருவாக்கப்பட்ட துணை ஆர்க்டிக் உள்ளது. வடக்கே இருக்கும் ஆர்க்டிக்கில் பொதுவாக துந்த்ரா தாவரங்கள் உள்ளன  ’’tundra’’  என்பது  “tunturia” – துந்திரியா அதாவது வெற்று நிலம் என்னும்  ஒரு திறந்த  சமவெளிக்கான ஃபின்னிஷ் வார்த்தையிலிருந்து உருவான சொல்.  துந்திரா காடுகள் உலகின் 20 சதவீத நிலப்பரப்பை ஆக்கிரமித்திருக்கிறது. ஆர்க்டிக் துந்த்ரா வில் மணிக்கு 97 கி மீ வேகத்தில் பனிப்புயல் வீசும் 

ஆர்டிக்

ஆர்க்டிக் தாவரங்கள் குறைந்த வெப்பநிலை, கோடை காலத்தில் தொடர்ச்சியான பகல், வளமற்ற மண் மற்றும் நிரந்தரமாக உறைந்த நிலம், வலுவான, வறண்ட காற்று மற்றும் வீசும், பனிப்பொழிவு உள்ளிட்ட கடுமையான சூழலுடன் போராட வேண்டும். இத்தனையும் தாங்கி வளருவதால் இத்தாவரங்கள் பெரும்பாலும் வளர்ச்சி குன்றி காணப்படும் 

இத்தாவரங்களின் வாழ்வு சுழற்சிக்காலம் மிக குறுகியது. இவற்றில் annuals எனப்படும் வருடாந்தர தாவரங்கள் மிக அரிது, Perennials எனப்படும் பல்லாண்டுத்தாவரங்களே இங்கு அதிகம் வளரும் இவையும் சிறு வேர்க்கிழங்குகள் மூலம் பாலிலா இனப்பெருக்கம் மட்டுமே   செய்யும்

 பல தாவரங்கள் துருவப்பகுதியில் மோசமான காலநிலையில் இருந்து தப்பிக்க ஒன்றுடன் ஒன்று இணைந்து மெத்தை போல கூட்டமாக வளரும் துருவப்பகுதியில் வசந்த காலமன்பது பனிப்பொழிவும் உறைபனியும்  நிலத்தை மூடியிருக்கும் போதே தொடங்கும். மலர்தளும் விதை உருவாதலும் மிக குறுகிய காலத்திற்கு, சுமார் 6 வாரங்கள் வரை இருக்கும்.  ஒரே சமயத்தில் இத்தாவரங்கள் மலர்வது மிக சிறப்பான ஒரு நிகழ்வாக இருக்கும் பனிமூடிய வெற்று நிலம் திடீரென்று வண்ணமயமாக மாயவித்தையால் மாற்றப்பட்டது போல் காட்சி தரும்

மண்ணில்லாத பனி மூடிய ஆர்க்டிக் பனிப்பாலை வெற்று நிலம் என்று பார்வைக்கு தோன்றினாலும் கூர்ந்து கவனித்தால் பல சிறு தாவரங்கள் இங்கு வாழ்வதை காணமுடியும்.

துந்திரா பகுதியில் லைக்கன்கள், mosses எனப்டும் பிரையோபைட்டுகள், சில சிறு பூக்கும் தாவரங்கள் ஆகியவை காணப்படும் பசும்புற்களும், குட்டை வில்லோ மற்றும் பிர்ச் மரங்களும் கூட  மேற்குப்பகுதியில் வளர்கின்றன. அலாஸ்காவின் வடக்குப்பகுதி வரையிலுமே இந்த தாவரங்களின் பரவலை காணமுடியும்.

துந்த்ரா காடு

பாறைகளில் திட்டுக்களாக பாசிகளும் பூஞ்சைகளும் இணைந்து வாழும் உயிரினங்களான லைக்கன்ஸ் வளர்ந்திருக்கும். இவற்றில் பஞ்சுபோல வளர்ந்திருக்கும் “rock tripe.” எனப்படும் கருப்பு லைக்கன்கள் உண்ணத்தகுந்தவை.இங்கு வரும் ஆராய்ச்சியாளர்கள் பலருக்கு  இவையே பல சமயங்களில் உணவாக இருந்திருக்கிறது பாறைப்பிளவுகளில் பிற பூக்கும் சிறு தாவரங்கள் வளரும். ஆர்க்டிக்கின் தெற்கு முனையில்  பாறைக்கூட்டங்களின் மறைவில் பனிப்புயலிலிருந்து பாதுக்காப்பாக  சிறு சிறு புதர்க்கூட்டங்களும் இருக்கும்.

கருப்பு லைக்கன்

 மித வெப்பம் இருக்கும் ஆர்க்டிக் பகுதிகளில் சிறு புதர்களும் வில்லோ, பிர்ச், ஜூனிபர் மற்றும் ஆல்டர் மரங்களும் வளர்கின்றன. தெற்கு நோக்கிய மலைச்சரிவுகளில் உயரமான வில்லோ, பிர்ச் மற்றும் ஆல்டர் மரங்கள் வளர்கின்றன. இவற்றையே எஸ்கிமோக்கள் விறகுக்காவும், பாய்களை பின்னவும் பயன்படுத்துகின்றனர்.

ஆல்டர்

துந்த்ரா தாவரங்களே இங்கிருக்கும் விலங்குகளுக்கும் உணவாகின்றன.தென் ஆர்க்டிக் பகுதியில் பனிமூடிய நிலத்தில்  பல வகை பழங்கள் ஏராளம் சிதறிக்கிடக்கும். இங்கு வசிக்கும் மக்கள் அதிகம் உண்ணுவது கருப்பு காக்காய் பழம்-  black crowberry (Empetrum nigrum), முகில் பழம்- cloudberry (Rubus chamaemorus), கருநீலப் பழம்- bilberry (Vaccinium uliginosum), மலைப்பழம்-  mountain cranberry (V. vitisidaea minus) ஆகியவற்றையே. காளான்களும் இங்கு பரவலாக வளர்கின்றன.

துணை ஆர்க்டிக் பகுதியில் துந்த்ரா காடுகளில் ஊசியிலை மர வகைகளும், அகன்ற இலைகள் கொண்ட பிர்ச் மரங்களும் உள்ளன.சுமார்  60  பூக்கும் தாவரங்கள் ஆர்க்டிக் பகுதியில் காணப்படுகின்றன. ஆர்க்டிக்கில் மட்டும் சுமார் 1700  தாவரங்கள் வளர்கின்றன. இவற்றில் பூக்கும் தாவரங்களும், ,குட்டைப் புதர்களும், சிறு செடிகளும் பிரையோபைட்டுகளும், லைக்கன்களும் அடக்கம். இங்கிருக்கும் active layer எனப்படும் மிக மெல்லிய மண் படலத்தில் இவை வளருகின்றன.

active layer

 தடித்த இலைகளின் நீண்ட வடிவத்தினால் நாக்கு செடி என அழைக்கப்படும் குட்டை புதர் ஒன்று இங்கு வாழும் குழி முயல்களுக்கும் வேறு சில விலங்குகளுக்கும் உணவாகிறது

 பாஸ்க் செடி எனப்படும் சிறு மலர்களை உருவாக்கும் செடியும், கரடிப்பழம் எனப்படும் தடித்த தோல் போன்ற இலைகளும், கரடிகளுக்கு பிரியமான சிவப்பு பழங்களையும் கொடுக்கும் புதர்களும் (Bearberry) ஊதா நிறத்தில்  நட்சத்திரங்களைப் போன்ற சிறு மலர்களை கொடுக்கும் செடியான (Purple saxifrage), அழகிய கிண்ணம் போன்ற மலர்களுடன் ஆர்க்டிக் பாப்பி செடிகள்-Arctic poppy., பருத்திப்புல் எனப்டும்  வெண்ணிற புல் வகையான Cotton Grass,.இவற்றுடன்  Reindeer lichen எனப்படும் கொம்புகளைபொன்ற அமைப்புகளுடன் இருக்கும் துருவ கலைமான் லைக்கன்களும் அதிகம் இங்கு காணப்படும்.

ஆர்க்டிக்கை விட அண்டார்டிக்கா மிக குளிரான பிரதேசம் என்பதால் நிலம் எப்போதும் உறை பனிப்பொழிவால் மூடியே இருக்கும்.

10 இன்ச்களிலிருந்து 3 அடி ஆழம் வரை பனி உறைந்திருக்கும் நிலப்பரப்பை கொண்டிருக்கும் அண்டார்டிக்காவில் மரங்கள் வளர்வது சாத்தியமில்லை எனவே கீழ்நிலைத்தரங்களே இங்கு அதிகம் காணப்படுகிறன. அண்டார்டிகாவில் பாசிகள், பூஞ்சைகளுடன், சில பாக்டீரியாக்களும், 300 வகையான  பிரையோபைட்டுகளும், லைக்கன்கள் மட்டுமே சுமார் 800 வகைகளும், 300 பாசி இனங்களும் உள்ளன.

இரண்டு மீட்டர் உயரம் வரை வளரும் டுஸாக் (Tussock) புற்களை கொண்டிருக்கும் சிறு சிறு புல்வெளி திட்டுக்களும் இங்கு உண்டு. 

டுஸாக் புல்வெளி

  சிறு சிறு  கூட்டங்களாக வளரும்  இழைப்புல் வகையும், அண்டார்டிக் முத்துச்செடியும் அண்டார்ட்டிக் பிரதேசத்துக்கு சொந்தமானவை. Antarctic hair grass (Deschampsia antarctica) & Antarctic pearlwort (Colobanthus quitensis). 

அண்டார்டிக் முத்துச்செடி

இரு துருவப்பகுதிகளிலும்  பொதுவாக வளரும் தாவரங்கள்:

  • Acaena magellanica (Prickly burr (or burnet)) 
  • Acaena tenera (Lesser prickly burr) 
  • Acaena tenera x magellanica (Hybrid prickly burr) 
  • Callitriche antarctica (Antarctic water-starwort) 
  • Colobanthus quitensis (Antarctic pearlwort) 
  • Colobanthus sublatus (Emerald bog) 
  • Deschampsia antarctica (Antarctic hair grass) 
  • Hymenophyllum falklandicum (Falkland filmy-fern) 
  • Montia fontana (Water blinks) 
  • Poa annua (Annual meadow-grass)2006ல் கண்டுஇடிகபட்ட 2006 February 20 by Jon Shanklin
  • Poa flabellata (Tussac-grass) 
  • Ranunculus biternatus (Antarctic buttercup)
  • Rostkovia magellanica (Short rush)

துருவ தாவரங்கள் அந்த கடினமான சூழலுக்கேற்ற சில தகவமைப்புக்களை கொண்டிருப்பதாலேயே அங்கு தொடர்ந்து வாழ்வை தக்க வைத்துக் கொள்கின்றன

அவை அளவில் மிக சிறியவைகளாகவும், மிக மிக குறைந்த வேர் தொகுப்பையும் கொண்டிருப்பதனால், மிக மெல்லிய மண் படலத்தில் அவற்றால் வாழ முடிகிறது

நிலத்துக்கு வெகு அருகில் குட்டையாகவே  அவை வளர்வதால், காற்றின் வேகத்தில் சேதமடையாமல் தப்பிக்கும்

இலைகளிலும் தண்டுகளிலும் மெல்லிய ரோமங்களை கொண்டிருப்பதால் பனிக்காற்றிலிருந்து கூடுதல் பாதுகாப்பை அவை பெறுகின்றன

பனி பரப்பிற்கு அடியில் மறைந்து வாழ்வது, சூரிய ஒளி மலரின் மையத்துக்கு சென்று விடும்படி கிண்ணம் போன்ற மலரமைப்புக்களை கொண்டிருப்பது, சூரிய ஆற்றலை விரைவாக கிரகிக்கும்படி அடர் வண்ணங்களில் உடல் பாகங்களை கொண்டிருப்பது ஆகியவை இவற்றின் தகவமைப்புக்களில் முக்கியமானவையாகும்

 மேலும் பல தாவரங்கள் பல்லாண்டு வாழ்வதால் வெயில் காலத்தில் மட்டுமே பூத்து காய்த்து விட்டு  பனிக்காலத்தில் உறக்க நிலைக்கு சென்று விடுகின்றன.பெரும்பாலான தாவரங்கள் விதை உருவாக்கத்துக்கு ஆற்றலை வீணாக்காமல் பாலிலா இனப்பெருக்கத்தை  மெல்லிய சிறு வேர்க்கிழங்குகள் மூலம் செய்கின்றன.

தாவரங்களுடன் துருவ கலைமான்கள்,(ReinDeer), கஸ்தூரி எருதுகள்  (musk-oxen), ஓநாய்கள், துருவக்கரடிகள், (ஆர்க்டிக் பகுதியில்), முயல்கள் மற்றும் சில கொறித்துண்ணிகள் உள்ளிட்ட   48 வகையான விலங்குகள் துந்த்ரா காடுகளில் வாழ்கின்றன, சில பறவை இனங்களும்,பூச்சி இனங்களில் கருப்பு ஈ, மான் ஈ,கொசு,ஆகியவையும் உண்டு.  பென்குவின்களும், சீல்களும் அண்டார்டிக்காவில் வாழ்கின்றன,  

மில்லியன் கணக்கான மக்கள் ஆர்க்டிக்கில் வசிக்கின்றனர், ஆனால் 1959  உடன்படிக்கையால் அண்டார்டிகா கண்டம் அமைதி மற்றும் அறிவியலுக்கு மட்டுமே பயன்படுத்துவதற்கான இடமாக  பாதுகாக்கப்படுவதால் இங்கு நிரந்தர மக்கள் இல்லை.  இருப்பினும் பல ஆயிரம் விஞ்ஞானிகள் மற்றும் உதவி ஊழியர்கள் அவ்வப்போது ஆராய்ச்சிக்காக இப்பகுதியில் தற்காலிகமாக வசிக்கின்றனர். இந்தியாவின் தக்‌ஷிண் கங்கோத்ரி, மற்றும் மைத்ரி என்னும் இரு ஆய்வகங்கள் அங்கு அமைத்துள்ளன. பாரதி என்ற மூன்றாவது ஆய்வகத்தை சுமார் 140 கோடி செலவில் அமைக்க தற்போது முயற்சிகள் நடைபெற்று வருகிறது.அண்டார்டிக்காவின்  14,000,000 km2 பரப்பளவில் 2 சதவீதமே பனியால் மூடப்படாமல் இருக்கும். எனினும் அண்டார்டிகாவும் கூட காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு  உள்ளாகி இருக்கிறது.  ஆர்க்டிக் இதனினும்  கூடுதலாக, பாதிக்கப்பட்டுள்ளது.

தக்‌ஷிண் கங்கோத்ரி

கனிமச் சுரங்கப்பணி, திமிங்கல வேட்டை, அதிக மீன் பிடிப்பு, மாசு, ஓஸோன் அடுக்கு சேதம், ஓஸோன் ஓட்டை, பசுங்குடில் வாயு வெளியேற்றம், புவி வெப்பமடைதல் ஆகிய ஆபத்துக்களை துருவப்பகுதி யின் தாவரங்களும் விலங்குகளும்  சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இந்த ஆபத்துக்களால் பனிக்கரடிகள் மற்றும் பென்குவின்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து கொண்டிருக்கிறது

மைத்ரி

அண்டார்டிக்காவின் நிலப்பகுதி பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா டென்மார்க், பின்லாந்து மற்றும் நார்வே ஆகிய 6 நாடுகளுக்கு உரியதாக இருப்பதால் எந்த நாடு பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது என்று பல ஆண்டுகள் குழப்பம் நீடித்தது. 1961 அண்டார்க்டிக் உடன்படிக்கை (Antarctic Treaty System-1961) மற்றும் பல  சர்வதேச உடன்படிக்கைகளின் வழியே சட்டங்கள் இயற்றப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய நெறிமுறை பிற நாடுகளின் சட்டப்படி பின்பற்றப்பட்டு, ஜனவரி 14, 1998 அன்று அமலுக்கு வந்தது. அதன்படி அன்டார்க்டிக்கா வின் அனைத்து சுரங்கங்களும் தடைசெய்து, அண்டார்டிக்கா “சமாதானத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்ட இயற்கை பிரதேசம்” என்று அறிவிக்கப்பட்டது. இப்போது ஆய்வுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் வேகமாக நடக்கின்றன. 

அண்டார்டிகா

# Home

ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமேஸான் பிரைமில் வெளியாகி இருக்கும் # Home  ஒரு நல்ல நிறைவான, குடும்பத்தினர் அனைவரும் பார்க்கக் கூடிய  மலையாளத் திரைப்படம்..

இந்திரன்ஸ், ஸ்ரீநாத் பாஷி, மஞ்சு பிள்ளை, ஸ்ரீகாந்த் முரளி, நேஸ்லென் கே. காஃபூர்,ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்கம் ரோஜின் தாமஸ், தயாரிப்பு ஃப்ரைடே ஃபிலிம் ஹவுஸ் பேனரில் விஜய் பாபு,  இவரும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.இசை ராகுல் சுப்ரமணியன், ஒளி இயக்கம் நீல் டி’ சுன்ச்சா.

ஆலிவர் ட்விஸ்ட்டாக இந்திரன்ஸ் அவரின் அழகிய குடும்பமே கதைக்களம் மனைவி குட்டியம்மாவாக மஞ்சு பிள்ளை, ஒரு வெற்றிப்படம் கொடுத்து திரைப்பயணத்தை இயக்குநராக துவங்கிவிட்டு இரண்டாவது ஸ்கிரிப்டுக்காக முயன்று கொண்டிருக்கும் மூத்த மகன் ஆண்டனியாக ஸ்ரீநாத் பாஷி, எந்நேரமும் எதையாவது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கொண்டே இருக்கும் vlogger பதின்மவயது இளையவன் சார்லஸாக நேஸ்லென் கே. காஃபூர்

 இளையோரின்  உலகில் தானும் நுழைய முயன்று, இயலாமையும் தன்னிரக்கமுமாக வருந்தும் தந்தை ஒருவர், இளைய தலைமுறையினருடன் உருவாகி இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியாலாகிய இடைவெளியை நிரப்ப முயல்வதும், அதில் மகன்களுக்கும் தந்தைக்கும் ஏற்படும் உரசலும் முட்டலும் மோதலும் ,பின்னர் புரிதலுமே  கதை. 

ஆலிவர் என்னும் 60 வயது குடும்ப தலைவரொருவரின் கதை மட்டுமல்ல, இது நம்மில் பலரின் கதையும் தான். நம் வீடுகளிலுமே  புதிய திறன் பேசியை , மடிக் கணினியை இயக்கவும், கைப்பேசி வழியே வர்த்தகம் செய்வது குறித்தும் மகன்களிடமும் மகள்களிடமும் கேட்டறிந்து கொள்ளும் பெற்றோர்கள் அநேகம் பேர் இருப்போம்.

 இந்த தலைமுறை பிறந்து வளர்ந்ததே தொழில்நுட்ப அதீத  வளர்ச்சி காலத்தில்தான் எனவே அதில் அவர்கள் மூழ்கி திளைத்து முத்தெடுத்து கொண்டிருக்கின்றனர். சில்லறை காசுகளை  எண்ணி எண்ணி செலவழித்தவர்களான   சென்ற தலைமுறையை  சேர்ந்தவர்களின் தாத்தாக்களும் பாட்டிகளும் கையிலிருக்கும் சிறு பெட்டி போன்ற  கருவியில் வர்த்தகம் செய்வதும், உணவை வரவழைப்பதுமாக உலகமே உள்ளங்கைக்குள் வந்துவிட்டதை அறியாமலேயே மண் மறைந்தவர்கள். நாமோ இந்த தலைமுறையினரின் தொழில்நுட்பம் சார்ந்த, சிக்கல்கள் அற்றது போல தோன்றும் வாழ்க்கையை  பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.வேடிக்கை பார்த்துக் கொண்டும், மெல்ல மெல்ல  கற்றுக்கொண்டு இருக்கும் தலைமுறையினருக்கும், இமைக்கணத்தில் உலகை தொடர்பு கொள்ளும் இளைய தலைமுறைக்குமான உரசல்களை தான்  அழகிய கதையாக்கி இருக்கிறார்கள்.

ஸ்ரீநாத் பாஷி வழக்கம் போல சிறப்பான நடிப்பு,திரைத்துறையின் சவால்களில் சிக்கிக் கொண்டிருக்கும் அவர் பணப் பிரச்சனையிலும் இருக்கிறார். இரண்டாம் ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுக்க வேண்டிய காலக்கெடு கழுத்தை நெருக்குகையில் எப்படியும் எழுதிவிட வேண்டும் என சொந்த ஊருக்கு வருகிறார்.

வீட்டு வேலைகளில் எந்நேரமும் மூழ்கி இருந்தாலும் கணவனின் மனதை அறிந்திருக்கும், கணவனுக்கும் மகன்களுக்கும் இடையில் உண்டாகி இருக்கும் இடைவெளியை குறித்த கவலையுடன் குட்டியம்மா, மிக வயதான முழுநாளும் பிறரின் உதவியை நாட வேண்டி இருக்கும் தள்ளாத  ஆலிவரின் தந்தை, சமூகத்தில் பெரிய அந்தஸ்துடன் இருக்கும் மூத்த மகன், சமூக வலைத்தளங்களில் புகுந்து விளையாடும் விளையாட்டுப் பிள்ளையான இளையவன், இருவரின் அணுக்கமும் கிடைக்கப்பெற  தந்தையான ஆலிவரின் உணர்வுபூர்வமான போராட்டம் நம்மை கதைக்குள் கொண்டுவந்துவிடுகிறது.

 இந்திரன்ஸ் அநாயசமாக நடிக்கிறார்.அதிகம் வசனங்கள் பேசாமல் நுணுக்கமான முக பாவனைகள், உணர்வுபூர்வமான வெளிப்பாடுகள் என, எளிதில் அவரது மனவோட்டத்தை திரையில் கொண்டு வந்துவிடுகிறார். ஆலிவர் புண் படும்போதெல்லாம் பார்வையாளர்களும் புண்பட்டு விடுகிறோம். அப்பாவியாக அவர் முகநூல் பக்கத்தை பற்றி கேட்டுக்கொள்ளுவதும், உயிர்த் தோழனிடம் தன் மனக்குமுறல்களையும் மகிழ்ச்சிகளையும் பகிர்ந்துகொள்வதும், இரவில் மனைவியிடம் மட்டும் தன் அந்தரங்க துயரை ஒரு சில சொற்களில் சொல்லுவதுமாக அசத்தி இருக்கிறார். பண்பட்ட முதிர்ந்த நடிப்பு இந்திரன்ஸுடையது. பலநூறு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக வந்திருந்தாலும் இந்த திரைப்படம் இவரது திரைப்பயண அனுபவத்தில் அவருக்கும், நமக்கும்  கிடைத்திருக்கும் ஒரு அருமணி.

திறன்பேசியை சரியாக கையாளத் தெரியாததால் ஏற்கன்வே சிக்கலில் இருக்கும் மகனின் வாழ்வில் பெரும் இக்கட்டொன்றை கொண்டு வந்துவிடும் தந்தை, அது உண்டாக்கும் விரிசல், காதலியின் மனக்கசப்பு, தந்தையின் துயர், என்று குழப்பமில்லாமல் திரைக்கதை போகிறது. தயாரிப்பாளர் விஜய் பாபு மனநல மருத்துவராக வருகிறார் அவருக்கும் சொல்லிக்கொள்ளும்படியான பாத்திரம்.

 அசாதாரணமான அந்த பிளாஷ்பேக் கதை இல்லாவிட்டாலும் இந்த திரைக்கதை வெற்றி பெற்றிருக்கும். அந்த கதையைக் கொண்டு அமைத்திருக்கும் கிளைமேக்ஸ் தவிர்க்கப்பட்டிருக்கலாம். KPAC லலிதாம்மாவின் பாத்திரமும், அவர் இந்திரன்ஸின் வீட்டுக்கு வருவதுமாக அந்த வலுக்கட்டாயமாக இணைக்கபட்ட கடைசிப்பகுதி அழகிய இக்கதைக்கு திருஷ்டிப்பொட்டு போல அமைந்து விட்டது. 

குட்டியம்மாவும் இயல்பான நடிப்பு. அந்த மழை நாள் இரவில் ஒரே கூரையின் கீழ் சம்பந்தி வீட்டினரும் அமர்ந்திருக்கையில் உள்ளக் கொந்தளிப்பு தாங்கமுடியால அவர் உடைவது  சிறப்பு.,குடும்ப உறவுகளில் ஆண்டனிக்கும் அவனுக்கு திருமணம் செய்ய நிச்சயித்திருக்கும் பிரியாவுக்குமான் உறவும் சொல்லப்படுகின்றது.

ஆலிவரின் நண்பனாக வரும் ஜான் ஆண்டனியும் தயாரிப்பாளராக வரும் மணியன்பிள்ளை  ராஜுவும் நகைச்சுவைக்கு உதவுகிறார்கள்.

 தலைமுறை இடைவெளிகளை விரிவாக்கியிருக்கும் தொழிநுட்பங்களை மட்டுமல்லாது தொழில்நுட்பத்தின் மிகை பயன்பாடுகள் உருவாக்கி இருக்கும் உளச்சீர்கேடுகளையும், திறன்பேசிக்கு அடிமையாகி இருக்கும் இந்த தலைமுறையையும் இந்த திரைப்படம்   எளிமையாக, ஆனால் அழுத்தமாக சொல்லுகின்றது. திரைப்படம் துவங்கும் முன்னரே ’’தயவு செய்து இடையிடையே கைபேசியை பார்க்காதீர்கள்’’ என்னும் வேண்டுகோள் விடுக்கப்படுவது ஏனென்று படம் பார்க்க பார்க்க பார்வையாளர்களுக்கு புரிகின்றது.

 புதியவற்றை கற்றுக்கொள்ள விழையும் தந்தை ஒருவரின் கதைஎன்பதுடன் 160 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படத்தின் பலம் கதையின் ஒவ்வொரு பாத்திரத்தின் நியாய அநியாயங்களை சரியாக எடுத்துக் காட்டி இருப்பதிலும் இருக்கிறது.

ஐந்து பாட்டு, ஐந்து சண்டைக்காட்சிகள், நடனம், வீர தீர சாகசங்கள் செய்யும் நாயகன், பேரழகாக ஒரு நாயகி என்னும் மரபான பொழுதுபோக்கு திரைப்படங்களை விரும்புவோருக்கானது அல்ல இந்த படம். மாறி வரும் திரைச்சூழலில் இப்போதைய காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் பல சிக்கல்களில் ஒன்றை எடுத்து விரித்து அழகாக காட்டும் திரைப்படம் இது.

மலர்கண்காட்சியிலிருக்கும் ஆயிரக்கணக்கான மலர்க்கூட்டங்கள் அழகுதானென்றாலும், மலைச்சரிவில்  காட்டுச்செடி ஒன்றில் மலர்ந்திருக்கும் ஒற்றைச் சிறு மலரும் அழகுதானே! அப்படி ஒரு எளிய அழகான உணர்வுபூர்வமான திரைப்படம் தான் # Home.

குடும்பம் என்பதற்கான வரைமுறைகள்  மாறிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இதுபோன்ற திரைப்படங்கள் மிக முக்கியமாகிவிடுகிறது.  அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது

ஊனுண்ணித்தாவரங்கள்

மண்ணிலிருந்து நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை  வேர்களால் உறிஞ்சிக்கொண்டு, பச்சை இலைகளால் உணவை தயாரிக்கும், நகர முடியாத, செயலற்ற உயிரினங்களாக அறியப்படும் தாவரங்களில் ஊனுண்ணுபவையும் இருக்கின்றன என்பது ஆச்சர்யமான விஷயம்.   

ஊனுண்ணித் தாவரங்கள் எனப்படுபவையும் பிற தாவரங்களை போலவே இலைகளின் பச்சையத்தினால், சூரியஒளியை கொண்டு உணவை தயாரிப்பவைதான் ஆனால் இத்தாவரங்கள் வளரும்  வளமற்ற நிலங்களில் இல்லாத சத்துக்களை பெறுவதற்காகத்தான் அருகில் வரும் பூச்சிகளையும் சிறு விலங்குகளையும் இவை பொறிகளில் பிடித்து ஜீரணித்து சத்துக்களை எடுத்துக் கொள்கின்றன. இத்தாவரங்கள் ஆங்கிலத்தில் சுருக்கமாக CPs எனப்படுகின்றன. (Carnivorous plants). பிரிடிஷ் இயற்கையாளரும் பரிணாமவியலின் தந்தையுமான சார்லஸ் டார்வின்தான் 1875 ல் insectivorous plants என்னும் இத்தாவரங்களைக்குறித்த முதல் புத்தகத்தை எழுதினார்.

பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று வகையான ஊனுண்ணித் தாவரங்கள் ஓரிடத்தில் சேர்ந்து வாழும். உதாரணமாக சாரசீனியா, டுரோசீரா மற்றும் பிங்க்யூக்குலா ஆகியவை, மிக நெருக்கமாக அருகருகே வளரும்.

இத்தாவரங்கள்  ஈரமான ஒளி நிறைந்த வளம் குன்றிய இடங்களில் தான் வாழ்கின்றன. இவை  வளரும் இடங்களின் நிலத்தில் பெரும்பாலும் நைட்ரஜன் சத்து இருக்காது அல்லது   மிகக் குறைவாகவே இருக்கும்.

வெண்ணிற இலைக்குடுவைகளுடன் சாரசீனியா லியூகோஃபில்லா

விதிவிலக்காக ட்ரோஸோஃபில்லம் லுஸிடேனியகம் (Drosophyllum lusitanicum ) மட்டுமே போர்ச்சுக்கல் மற்றும் மொரோக்கோவின் கனிம வளம் நிறைந்த மலைப்பகுதிகளில் வளருகின்றன

Drosophyllum lusitanicum

ஊனுண்ணி தாவரங்களின் பிரத்யேக மூன்று இயல்புகளே இவற்றை பிற தாவரங்களிலிருந்து வேறு படுத்துகின்றன

அவை:

  1. அருகில் வரும் இரையை அவை தப்பிக்க இயலாத படி பிடித்துக் கொள்ளுதல்
  2. சிக்கிக்கொண்ட பூச்சிகளை ஜீரணிக்க சிறப்பான அமைப்புக்களும் , நொதிகளும் கொண்டிருத்தல்
  3. இரையின் உடலில் இருந்து அவற்றிற்குதேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளுதல் 

ஊன் உண்ணும் அல்லது பூச்சியுண்ணும் தாவரங்கள் தங்களது இலைகளை இரை வந்து மாட்டிக் கொள்ளும் பொறியாக மாற்றி அமைத்து .வண்டு, தேனீ போன்ற சிறு பூச்சிகளையும் சிலந்திகள், மெல்லுடலிகள் மற்றும் நீர்வாழ் சிறு உயிரிகள், எலிகள், தவளைகள், பல்லிகள், சிறு பறவைகள் ஆகியவற்றையும் உண்ணும். 

சில இலைப்பொறிகள் இரையை கவர்ந்திழுக்க பிரகாசமான தனித்துவமான நிறங்களுடன் இருக்கும், இன்னும் சிலவற்றில் இனிப்பு திரவம் சுரக்கும் சுரப்பிகள் இருக்கும், அடர்ந்த முடிகளை போன்ற மெல்லிழைகள், குடுவை போன்ற நீட்சிகள், ஒட்டிக்கொள்ளும் பசை நுனிகளுடனிருக்கும் மொட்டுக்கள், கூரான முட்களுடன் கூடிய கிளிப் போன்ற அமைப்புகள் என்று பலவிதமான பொறிகளை இவை கொண்டிருக்கும்.

1859ல் ஜாவா தீவுகளுக்கருகிலிருக்கும் போர்மியோ தீவுகளில் மட்டும் காணப்படும் Nepenthes rajah கண்டுபிடிக்கபட்டது. இது ஒரு மிக அரிய வகை மிகப்பெரிய ஊனுண்ணித்தாவரமாகும். இதன் குடுவையில் 3 லிட்டர் வரை நொதிக்கும் திரவம் நிறைந்திருக்கும்.

Nepenthes rajah
நெபெந்தெஸ் ராஜா காணப்படும் போர்மியோ தீவுகள்

இலைகளை இரையை பிடிப்பதற்கு ஏதுவாக, தேவைகளுக்கேற்ற வடிவங்களிலும் அளவுகளிலும் இத்தாவரங்கள் மாற்றியமைத்துக் கொண்டிருக்கும். குடுவை தாவரங்கள் (Pitcher plants) இலையின் நுனியில் மூடிகளுடன் கூடிய ஆழமான குழிகள் உள்ள  குடுவைகளை கொண்டிருக்கும். குடுவையினுள் இரையாகும் பூச்சிகளை ஜீரணிக்கும் நொதிகளடங்கிய திரவம் நிரம்பியிருக்கும்.

பட்டர் வொர்ட் செடிகளின் (butterworts) இலைகளின் பரப்பெங்கும் ஒட்டிக்கொள்ளும் பிசுபிசுப்பான திரவம் இருக்கும்.   வீனஸ் பறக்கும் பொறி தாவரத்தில் இரண்டு பாகங்களாக இருக்கும் இலைகளின் ஓரத்தில் கூரிய முட்கள் இருக்கும் (Venus flytrap -Dionaea muscipula), சன் ட்யூக்களில் (sundews) சுரப்பிகளுடன் கூடிய மெல்லிழைகள் தாவர உடலெங்கும் நிறைந்திருக்கும், பிளேடர் வொர்ட்டில் (bladderwort) பைகளை போன்ற அமைப்பிருக்கும். லாப்ஸ்டர் குடுவை பொறித்தாவரமான  (Lobster-pot traps) ஜென்லிஸா பேரினங்களில் (genus Genlisea), மாட்டிக்கொண்ட் இரையை குடுவையின் ஆழத்திற்கு தள்ளிவிடும் கீழ்நோக்கி அமைந்திருக்கும் ஏராளமான் கூரிய முட்கள்  இருக்கும். 

Venus flytrap -Dionaea muscipula

மலேசியாவின் குரங்குதொப்பிசெடி எனப்படும் பெரும் நெஃபெந்தெஸ் செடிகளில் எலிகளும் பல்லிகளும் சுலபமாக சிக்கிக்கொள்ளும். கொலம்பியா மற்றும் பிரேசிலை சேர்ந்த ப்ரோச்சீனியாவின் (Brocchinia reducta) இளம் பச்சை இலைகளில் சிக்கிக்கொள்ளும் பூச்சிகளை அவை பாக்டீரியாக்களை கொண்டு ஜீரணிக்கின்றன.

Sarracenia alata

Darlingtonia மற்றும் Nepenthes போன்ற தாவரங்கள் சிக்கிக்கொண்ட இரையின் உடல் சத்துக்களை கிரகிக்க சில பாக்டீரியாக்களை சார்ந்திருக்கின்றன. சாரசீனியா அலாட்டாவில் (Sarracenia alata), ஒளிச்சேர்க்கைக்கெனவும் பூச்சிகளை பிடிப்பதற்கும் தனித்தனி இலைகள் ஒரே தாவரத்தில் அமைந்திருக்கும் 

விலங்குகளின் வயிற்றில் ஜீரணம் நடப்பது போலவே பாக்டீரியாக்களையும், நொதிகளையும் உபயோகித்து ஊனுண்ணித்தாவரங்கள் இரையை முற்றிலுமாக கரைத்து நைட்ரஜன் மற்றும் உப்புக்களாக சத்துக்களை எடுத்துக் கொள்கின்றன.

இவற்றில் மிக சிறிய டுரோசிராக்களிலிருந்து, கொடிகளாக வளரும்  நெஃபன்தஸை போல பெரிய தாவரங்களும் உள்ளன.

ஊனுண்ணித்தாவரங்கள் லெண்டிபுலேரியெசியே-(Lentibulariaceae), ட்ரொஸீரேசியே (Droseraceae.),  ட்ரோஸோஃபில்லேசியே (Drosophyllaceae), ஸெஃபலோட்டேசியே,(Cephalotaceae) சாரசினியேசியே (Sarraceniacea), நெபெந்தேசியே (Nepenthaceae), பைப்லிடேசியே (Byblidaceae), அன்னாசி பழத்தின் குடும்பமான புரோமீலியேசியே (Bromeliaceae) என இந்த ஊனுண்ணி தாவரங்கள் சார்ந்திருக்கும் குடும்பங்களும் ஒன்றுக்கொன்று எந்த தொடர்பும் உறவும் இல்லாதவை என்பதும் ஒரு புதிர்தான்

 

 இவற்றின் பொறிகளின் வடிவங்கள் பல வகைப்படும். பாம்பின் படம் போலிருக்கும் நாக அல்லி, (Cobra lily), சக்கரம் போலிருக்கும்   Water wheel ஆகியவற்றுடன் ஸ்பெயின், மொராக்கோ மற்றும் போர்ச்சுக்கலில்  இலைகளிலிருந்து நல்ல நறுமணத்தை பரப்பி பூச்சிகளை கவர்ந்திழுக்கும் பனிப்பைன் போன்ற (dewy pine) ஊசியிலை தாவரங்களும் உள்ளன.

பனிப்பைன்

இவற்றின் வாழிடங்கள் பொதுவாக சேற்றுப்பரப்பு மற்றும் சதுப்பு நிலங்கள், அட்ரிகுலேரியா (Utricularia) மற்றும் ஆல்ட்ரோவாண்டா (Aldrovanda)  இவையிரண்டும் நன்னீர் வாழிடங்களின் ஊனுண்ணித்தாவரங்களாகும்.

இத்தாவரங்கள் பூச்சிகளை பிடித்து கொன்று உண்ணுவதை கண்களால் பார்க்க முடிவதால் இவற்றை ஊனுண்ணிகள் என அடையாளம் காணமுடிந்தது. எனினும் இவற்றின் பிரத்யேக செயற்பாடுகள் குறித்து முழுமையான அறிதல் தாவரவியலாளர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை, டார்வினின் காலத்திலிருந்தே இவற்றைக் குறித்து  ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இத்தனை ஆண்டுகளில் இத்தாவரங்களில் இரையை ஜீரணிக்க உதவும் பலநூறு நொதிகளில் (Enzymes) Nepenthesin என்னும் ஒரே ஒரு நொதிதான் இனங்காணப்பட்டுள்ளது.

உலக நாடுகள் எல்லாவற்றிலும் காணப்படும் 600க்கும் மேற்பட்ட இந்த ஊனுண்ணித் தாவரங்கள் அண்டார்டிகா மற்றும் பசிபிக் தீவுகளில் மட்டும் இல்லை. 

பூச்சிகளை பிடிக்கும் எல்லா தாவரங்களும் ஊனுண்ணிகளல்ல. அரிஸ்டலோக்கியாவை (Aristolochia) போல சில தாவரங்கள் மகரந்த சேர்க்கைக்காக  பூச்சிகளை கவர்ந்து அவற்றை  தாவரங்களின் பாகங்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்யும். இவை ஊனுண்ணித் தாவரங்கள் அல்ல .ஏனெனில் இவை பூச்சிகளை ஒருபோதும் கொல்லுவதில்லை. மேலும் ஊனுண்ணித் தாவரங்கள் எப்போதும் அவற்றின்  மலர்களை பொறிகளாக பயன்படுத்துவதில்லை. 

இதைப்போலவே மேய்ச்சல் விலங்குகளிடமிருந்தும், பூச்சிகள் இலைகளை  தாக்காதவண்ணம் பாதுகாத்துக்கொள்ளவும் இலைகளில் பிசினைசுரக்கும் தாவரங்களும் ஊனுண்ணித்தாவரங்களல்ல. அவை தங்களின் பாதுகாப்பிற்காக பிசினில் பூச்சிகளை சிக்க வைத்தாலும், அப்பூச்சிகளை கொன்று சீரணிப்பதில்லை. உதாரணமாக ஒட்டும் தன்மையுடைய இலைகளைக் கொண்டிருக்கும் ஐபிசெல்லா லூட்டியா ( Ibicella lutea), ப்ரொபோஸிடியா லூசியானிக்கா ( Proboscidea louisianica) மற்றும் ப்ரொபோஸிடியா பார்விஃப்ளோரா( P. parviflora) ஆகியவை ஊனுண்னிகளல்ல இவற்றின் ,இலைகளில் ஒட்டிக்கொள்ளும் பூச்சிகள் அப்படியே இறந்து உலர்ந்துவிடுகின்றன. இவைகளெல்லாம் pre carnivorous plants , அதாவது ஊனுண்னுவதற்கு முந்தைய நிலையிலிருப்பவையென்று கருதப்படுகின்றன. இவை காலப்போக்கில் ஊனுண்ணுபவைகளாக பரிணாம வளர்ச்சி அடையவும் வாய்ப்புள்ளது

பூச்சிகளை கொல்லும் நொதிகளை கொண்டிருக்காததால் பூச்சிகளை இலைகளில் பிடித்து மட்டும் வைத்துக்கொண்டு, சிக்கிய பூச்சிகளை உண்ண வரும் வண்டுகளின் கழிவுகளை உறிஞ்சி  அதிலிருக்கும் சத்துக்களை கிரகிக்கும் ரோரிடூலா (Roridula) எனப்படும் ஒரு தாவரம் விளிம்புநிலை ஊனுண்ணித்தாவரமென்று அழைக்கப்படுகிறது.(Marginal Carnivorous plant). இதுவும் மெல்ல மெல்ல முழுமையான ஊனுண்ணுபவைகளாக மாறக்கூடும்

ரோரிடூலா

இரைகள் கிடைக்காதபோது இவைகளும் பிற தாவரங்களைப் போல ஒளி சேர்க்கை செய்து மெதுவாக வளர்ந்து கொண்டுதான் இருக்கும், இரைகள் கிடைத்து அவற்றை ஜீரணித்து சத்துக்களை உறிஞ்சிய பின்னர் இவற்றின் வளர்ச்சி துரிதமாகும்.

உலக இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பான ‘’பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்’’ (International Union for Conservation of Nature – IUCN),   ஊனுண்னித்தாவரங்களில் 50 சதவீதம் அழியும் ஆபத்தில் இருப்பதாக சொல்கின்றது. 

சூழல் மாசுபாடு,  வாழிடங்கள் அழிந்து கொண்டு வருவது, மனிதர்களின் செயல்பாடு போன்ற பல காரணங்களுடன் வேறு சில பிரத்யேக காரணங்களாலும் இவை அழிந்து வருகின்றன,  பல ஊனுண்ணி தாவரங்கள் மிக மெதுவாக  வளர்வதால் தொடர்ந்து விழுந்துகொண்டே இருக்கும் இலைக் குப்பைகளால் மூழ்கடிக்கப்பட்டு அழிந்துவிடுகின்றன. பிங்யூக்குலா வேலிஸ்நீரிஃபோலியா   (Pinguicula vallisneriifolia) தாவரம் தனதருகில் மகரந்தசேர்க்கைக்கென வரும் பூச்சிகளையும் இரையென நினைத்து கொன்றுவிடுவதால் அழியும் அபாயத்தில் இருக்கிறது. இந்த தவறை செய்ய கூடாதென வீனஸ் பறக்கும் தாவரம் புத்திசாலித்தனமாக தனது மலர்களை இலைகளிலிருந்து வெகு உயரத்தில் தோற்றுவிக்கிறது,

பொறிகளிலிருந்து மிக உயரத்தில் மலர்களை தோற்றுவித்திருக்கும் வீனஸ் தாவரம்

அலபாமாவில் மட்டுமே வளரும் அரிய வகை ஊனுண்ணித்தாவரமாகிய சாரசீனியா (Sarracenia Rubra ssp. Alabamensis) மிக அழகிய மரூன் நிற மலர்களை தோற்றுவிக்கும் இவற்றினழகுக்காகவே இவற்றை தேடி தேடி சேகரிப்போரால் இவை இப்போது மிக குறைந்த  எண்ணிக்கையில் அழியும் ஆபத்தில் இருக்கிறது.

Sarracenia Rubra ssp. Alabamensis

இவற்றின் பிரத்யேக வாழிடங்களினாலும், வளர்ச்சிக்கு தேவைப்படும் சிறப்பான சத்துக்களினாலும் இவற்றை அழிவிலிருந்து பாதுகாப்பது கடினமாகி விட்டிருக்கிறது. எனினும் ஒருசில ஊனுண்ணித்தாவரங்களை தோட்டக்கலைத்துறையினர்  பசுமைக்குடில்களிலும், சிறப்பாக உருவக்கப்பட்ட வாழிடங்களிலும் வளர்க்கிறார்கள். வீனஸ் பறக்கும் பொறித்தாவரம் உள்ளிட்ட சில வகைகள் ஆன்லைன் வர்த்தகத்தில் விற்பனையாகின்றன.

கொல்லுதல், கொன்று தின்னுதல் என்னும் வார்த்தை பிரயோகங்களால் தாவரங்களை குறிப்பிடுவது பொருத்தமற்றதாக கூடத் தோன்றலாம் ஆனால் பலநூறு ஆண்டுகளாக சுய தேவைக்காக உள்நோக்கத்துடன் ஒரு உயிர் மற்றொரு உயிரை கொல்லுவதென்பது கொலைதான். ஆனால் டார்வின் சொல்லியிருப்பது போல எப்படியேனும் உயிர்பிழைக்க எந்த வழியையாவது கண்டுபிடிக்கும் போதுதான் உயிரினங்களில் பரிணாம்வளர்ச்சியென்பது உருவாகின்றது. தங்களுக்கு தேவையான சத்துக்களை ஒரே இடத்தில் இருந்தபடி பலவழிமுறைகளை மேற்கொண்டு நிறைவேற்றிக்கொள்ளும் இவற்றின் புத்திசாலித்தனத்தை பாராட்டவேண்டும் தானே!

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑