லோகமாதேவியின் பதிவுகள்

Category: ஆன்மிகம்

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம் ஏன், எதற்கு, எப்படி நடத்தப்படுகின்றது என்பதையும் கும்பாபிஷேகத்தின் பின்னிருக்கும் அறிவியல் காரணங்களையும் இக்கட்டுரையில் காணலாம்.

வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி எழுப்பப்பட்ட ஆலயங்களில் யந்திரஸ்தாபனத்தில் தெய்வத் திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட  பின்னர் ஆலயங்களுக்கு     குடமுழுக்கு தேவையாகின்றது. குடமுழுக்கு செய்யப்பட்ட பின்னரே அந்த ஆலயம் வழிபாட்டுத் தலமாகின்றது.  குடமுழுக்கு அல்லது கும்பாபிஷேகத்திற்கான விதிகளை  வாமதேவர் என்னும் வடமொழி நூலாசிரியர்  தானெழுதிய வாமதேவ பத்தாதி’யில் சிவன் முருகனுக்கு சொன்னதாக விவரித்திருக்கிறார்

குடமுழுக்கு செய்ய நான்கு வகைகள் உள்ளன. அவை;

’ஆவர்த்தம்’ – புதிய கோவிலில் இறைவனின் திருவுருவத்தை அமைப்பது.

‘அனாவர்த்தம்’ – இயற்கை சீற்றங்களால் சேதமடைந்த கோவில்களை புதுப்பித்து, மறு பிரதிஷ்டை செய்வது.

‘புனராவர்த்தம்’ – காலத்தால் சிதிலமடைந்த கோவில்களை புதுப்பித்து புனர் நிர்மாணம் செய்வது.

 ‘அந்தரிதம்’ – மனிதர்களின் செயல்களால் ஏற்பட்ட குறைபாடுகளை சரி செய்து கோவிலை மீண்டும் புதுப்பிக்கும் பணியைச் செய்வது.

குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்பட்ட கோவில்களில், தெய்வத் திருமேனிகளின் மீது தெய்வ சக்திகளை எழுந்தருளும்படி செய்வதற்கான வழிமுறைகளை செய்வதுதான் கும்பங்களுக்கு புனித தீர்த்தங்களினால் முழுக்காட்டப்படும் குடமுழுக்கு அல்லது கும்பங்களுக்கு அபிஷேகம் செய்யும் கும்பாபிஷேகம்.

ஆகம விதிப்படியும் சாஸ்திர முறைப்படியும் தெய்வ விக்கிரகங்களின் சக்தியையும் கோபுர கலசத்தில் உருவேற்றிய சக்தியையும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிப்பித்து ஊக்கப்படுத்த நடைபெறுவதே மகா கும்பாபிஷேகம்.  இதனை சைவர்கள் ‘மகா கும்பாபிஷேகம்’ என்றும் வைணவர்கள் ‘மகா சம்ப்ரோக்ஷணம்’ என்றும் அழைக்கிறார்கள்.

சிதிலம் அடைந்திருந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, சீரமைக்கப்பட்டு கும்பாபி ஷேகம் செய்யப்பட்டால் அதை புனருத்தாரணம் என்பார்கள்!

கல்லினாலும், மண்ணினாலும், சுதையினாலும்,  மரத்தினாலும் உலோகங்களாலும் உருவாக்கப்பட்டவை தெய்வவிக்ரகங்களாகும். பிரதிஷ்டை செய்யப்படும் தெய்வ விக்ரகங்களுக்கு ஆறு வகையான வாசங்கள், அதாவது இருப்புக்கள் மேற்கொள்ளப்படுதாக ஐதீகம். இவற்றில் நீரிலும் தான்யங்களிலும் மூழ்கவைக்கும் , ஜலவாசம், தானிய வாசம் என்பவை முதல் இரு நிலைகள். நவரத்தினங்கள் பயன்படுத்தப்படும் ரத்தின வாசம்  மூன்றாவது நிலை. பொற்காசுகள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தன வாசம் நான்காவதாகும். பலவகையான பட்டாடைகள் சிலைக்கு அணிவிக்கப்படும் வஸ்திர வாசம் ஐந்தாவதாகும். கடைசியாக, ஹம்சதூளிகா மஞ்சம் என்ற அன்னத்தின் சிறகுகளால் உருவான படுக்கை மேல் மான் தோல் அல்லது புலித்தோல் விரிக்கப்பட்டு, அதன் மீது  விக்ரகம் வைக்கப்படுவது ஆறாவதான சயன வாசமாகும்.

மேற்கண்ட ஆறு வாசமும் 48 நாட்கள் வைக்கப்படும் என்ற நிலையில், விக்ரகம் மொத்தம் 288 நாட்கள் பல நிலைகளை கடந்து பிரதிஷ்டைக்கு தயாராக இருக்கும். ஜல வாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குறைகள் தெரிந்து விடும். ரத்தின வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெறும். தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெறுகின்றன என்பது ஐதீகம்.

ஒரு சில இடங்களில் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒரு வாரம் அல்லது 12 நாட்கள் வரையில் புஷ்பாதி வாசம், அதாவது, பல்வேறு விதமான நறுமண மலர்களில் சிலை மூழ்க வைக்கப்பட்டு இருக்கும் நிலையில், சிலைக்கு வாசனை ஏற்படுத்துவதும் உண்டு. புஷ்பாதி வாசத்துக்கு பிறகு, கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக  சயனாதி வாசம் மூலம் விக்ரகத்தின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படும். அதன் பின்னர்,  கண் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தகுந்த பூஜைகளுக்குப் பிறகு தலைமை ஸ்தபதி தங்க ஊசி மூலம் சிலையின் கண்ணில் மெல்லிய கீறல் வரைவார். அதன் மூலம் கருவிழி திறக்கப்பட்டு, விக்ரகத்துக்கு முழுமையான அழகு வருகிறது.

பின்னர் கும்பாபிஷேகம் நடக்கும் ஆறுகாலம் அல்லது எட்டு காலம் யாகசாலையில் மந்திர உச்சாரணம் செய்யப்பட்டு, அதை ஈர்த்துக்கொண்ட புனித கலச நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்கள் மூலம் விக்ரகத்துக்கு தெய்வீகத்தன்மை அளிக்கப்படுகிறது.

ஸ்பரிசவாதி என்னும்  கடைசி வாசத்தில், கருவறையில் இருக்கும் பிரதான ஆச்சாரியார் மூலம் ஐதீக முறைப்படி விக்ரகத்தின் ஒன்பது துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு, ஆன்மிக சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அளிக்கப்பட்ட பின்னர், தொடர்ந்த இவ்வகையான் ஆன்மீக வழிகளில், விகரகம் முழுமையான கடவுளாக மாறுகிறது.  

இறைவன் தனது அகண்டாகாரமான சக்தியை ஒரு விக்ரகத்திற்குள் நிலைபெறச் செய்ய அடியவர்களுக்கு இவ்வாறு முறையான ஆன்மீக வழிகளைக்காட்டியதால்தான், பிரபஞ்சமெங்கிலும் பரந்து விரிந்திருக்கிற இறைவனுடைய சக்தியை ஈர்த்துச் வைத்துக்கொள்ளும்  மூலஸ்தான  மூர்த்தியை வடிவமைப்பது எளிய மக்களான நமக்கு கைகூடிய காரியமாயிருக்கிறது.

மூல விக்ரகத்திற்கு அஷ்டபந்தனம் சாற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆலயங்களில்  12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்வார்கள். கோவிலைக் கட்டி முடித்த பிறகு, தெய்வவிக்ரகங்களை பிரதிஷ்டை செய்யப்படும்.  பீடத்தின் மீது வைத்து, அந்த இடத்தில் இருந்து சிறிதும் அசையாமல் இருப்பதற்காக, அஷ்டபந்தனம் என்ற எட்டு விதமான பொருட்கள் கலந்த மருந்தின் சாந்து சாற்றப்படும்.

விக்ரஹ பிரதிஷ்டைக்கு முன்பு அஷ்டபந்தன சாந்தை பீடத்தில் சாற்றூதல்

 அஷ்டபந்தன மருந்து கலவை தயாரிப்பதற்கு, ‘கொம்பரக்கு’, ‘சுக்கான் தூள்’, ‘குங்கிலியம்’, ‘கற்காவி’, ‘செம்பஞ்சு’, ‘சாதிலிங்கம்’, ‘தேன்மெழுகு’, ‘எருமை வெண்ணெய்’ ஆகிய எட்டுப் பொருட்கள் தேவைப்படுகின்றன. இந்த எட்டுப் பொருட்களையும் குறிப்பிட்ட வரிசை முறைப்படி ஒவ்வொன்றாக சேர்த்து, உரலில் இட்டு தக்கபடி இடித்து, குறிப்பிட்ட பதம் கொண்டதாக தயாரிக்கப்படும்.  இந்த அஷ்ட பந்தன மருந்து, தெய்வ மூர்த்தத்தைப் பீடத்துடன் அழுந்தப் பிடித்துக்கொள்ளும்.

அஷ்டபந்தன சாந்து இடித்தல்

இதன் பின்னர் முக்கியப் பீடத்தையும் துணைப் பீடத்தையும் இணைக்க திரிபந்தனம் என்னும் சுக்கான் தூள், கருப்பட்டிக் கசிவு, முற்றிக் கனிந்த பேயன்பழம் ஆகியவற்றை கலந்த சாந்தைச் சேர்ப்பார்கள்.  .இந்த அஷ்டபந்தன சாந்து  12 வருடங்களில், தன் சக்தியை இழந்துவிடும், எனவே அதனை எடுத்துவிட்டு புதிதாக அஷ்டபந்தனம் சாற்றி கும்பாபிஷேகம் செய்வார்கள். இதற்கு ஜீர்ணோத்தாரணம் என்று பெயர்.


பெரிய ஆலயங்களில் வெள்ளியை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ரஜிதபந்தனம் என்று பெயர். இந்த ஆலயங்களில் 25 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடக்கும்.

மிகப்பிரமாண்டமான ஆலயங்களில் தங்கத்தை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ஸ்வர்ணபந்தனம் என்று பெயர். இந்தஆலயங்களில் 50 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறும்.

கும்பாபிஷேகத்தில், கும்பம் – கடவுளின் உடலையும்,, கும்பத்தின் மீது சுற்றப்பட்ட நூல் – 72,000 நாடி, நரம்புகளையும்,, கும்பத்தில் ஊற்றப்படும் நீர் – ரத்தத்தையும், அதனுள் போடப்படும் தங்கம் – ஜீவனையும், மேல் வைக்கப்படும் தேங்காய், தலையையும், பரப்பட்ட தானியங்கள்: ஆசனத்தையும் குறிக்கின்றது.

இது மட்டும் இல்லாமல் யாக மேடையில் சந்தனம், மலர்கள் மற்றும் வஸ்திரம் ஆகியவையும் அமைக்கப்படுகின்றன

கும்பாபிஷேக வழிமுறைகளும் கிரியைகளும்;

ஆவாஹனம்;  ஆவாஹனம் என்றால் கும்பத்தில் உள்ள நீருக்குள் மூர்த்திகளை எழுந்தருள செய்தல் என்பது பொருள். கும்பத்தை முதலில் கோயிலில் உள்ள தெய்வத்திருவின் அருகில் வைத்து தர்ப்பை, மாவிலை ஆகியவற்றைக் கொண்டு மந்திரங்கள் ஓதி, பிம்பத்தில் விளங்கும் மூர்த்தியை கும்பத்தில் எழுந்தருளச் செய்வார்கள். பிறகு அந்த கும்பத்தை யாகசாலைக்கு எழுந்தருளச் செய்வார்கள். தர்ப்பையின் மூலம் கும்பத்தில் உள்ள தெய்வீக சக்தியை பிம்பத்திற்கு மீண்டும் செலுத்துவார்கள்.

கும்பம்; யாகசாலையில் மந்திரம், கிரியை, தியானம் ஆகியவற்றுடன் வளர்க்கப்பட்டு எழும் புகையுடன் வேத ஒலி, சிவாகம ஒலி, மறை ஒலி ஆகியவற்றுடன் பக்தர்களின் நல்ல எண்ணங்களும், எங்கும் நிறைந்திருக்கின்ற திருவருள் சக்தியை தூண்டிவிட்டு கும்பத்தில் விளங்கச் செய்யும். அப்போது கும்பம் தெய்வீக சக்தி பெறும். இந்த கும்பத்தை சிவனின் வடிவமாக ஆகமங்கள் கூறுகின்றன.

பாலாலயம்; கும்பத்தை கோயிலில் உள்ள தெய்வச்சிலை அருகில் வைப்பார்கள். தர்ப்பை, மாவிலை கொண்டு மந்திரங்கள் ஓதி, தெய்வ வடிவில் விளங்கும் மூர்த்தியை கும்பத்திற்கு மாற்றுவார்கள். பின்பு அதை வேறிடத்திற்கு எழுந்தருளச் செய்வார்கள். இதை  பாலாலய பிரவேசம் என்பர்.

கிரியைகள்

கும்பாபிஷேகம் நடக்கும்போது ஒரு காலத்தில் 64  கிரியைகள் செய்யப்பட்டன. காலப்போக்கில் 55 கிரியைகள் செய்யப்பட்டன. ஆனால் தற்போது எல்லா கிரியைகளும் செய்யப்படுவதில்லை. 64ல்  பின்வரும் முக்கியமான கிரியைகளை மட்டும் தேர்ந்தெடுத்து  இபோது கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர்.

  • ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்தெடுத்து இறைவனின் அனுமதி பெற்று நியமனம் செய்யும்,. அனுக்ஞை .
  • இறைவனிடம் நமது தேவைகளைக் கோரிக்கையாக வைக்கும் சங்கல்பம் .
  • பூஜை பாத்திரங்களுக்குரிய தேவதைகளுக்குப் பூஜை செய்யும் பாத்திர பூஜை .
  • கணபதியை வழிபடும் கணபதி பூஜை .
  • வருண பகவானையும், சப்த நதி தேவதைகளையும் வழிபடும் வருண பூஜை.
  • பசு மூலமாக கிடைக்கும் பால், தயிர், நெய், பசு நீர், பசு சாணம் ஆகியவற்றை வைத்துச் செய்யப்படும் கிரியையான பஞ்ச கவ்யம் .
  • தேவர்களை வழிபடும் வாஸ்து சாந்தி 
  • திக்பாலர்களை வணங்கும் பிரவேச பலி 
  • ஆலயம் நிர்மாணம் செய்கையில் கஷ்டப்படுத்திய பூமா தேவியை மகிழ்விக்கச் செய்யப்படும் பரிகாரம். மண் எடுத்து வழிபடும் மிருத்சங்கிரஹணம் ..
  • எடுத்த மண்ணில் விதைகளைப் பயிரிட்டு முளைப்பாரி வளரச் செய்து , அதில் 12 சூர்யர்களான வைகர்த்தன், விவஸ்வதன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகபிரகாசன், லோகசாட்சி, திரிவிக்ரமன், ஆதித்யன், சூரியன், அம்சுமாலி, திவாகரன் போன்றவர்களையும் ,சந்திரனையும் வழிபடும் அங்குரார்ப்பணம் 
  • ஆசாரியனுக்கும் மற்ற உதவி ஆசாரியர்களுக்கும் கையில் காப்புக் கட்டும் ரக்ஷாபந்தனம் .
  • கும்பங்களை இறைவன் உடலாக நினைத்து அலங்காரம் செய்யும் கும்ப அலங்காரம்.
  • விக்கிரகத்தில் இருக்கும் சக்தியை கும்பத்துக்கு மந்திரப் பூர்வமாக அழைக்கும் கலா கர்ஷ்ணம் .
  • கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வரும் யாகசாலை பிரவேசம் ..
  • யாகசாலையில் உள்ள சூரிய சந்திரனை வழிபடும் சூர்ய, சோம பூஜை .
  • யாகசாலையை பூஜை செய்யும் மண்டப பூஜை .
  • விக்கிரகங்களை மந்திரத்தின் மூலமாக சுத்தம் செய்யும் பிம்ப சுத்தி .
  • மிக முக்கியமானதான இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை ஒரு இணைப்பு மூலமாக விக்கிரகங்களுக்குக் கொண்டு சேர்க்கும் நாடி சந்தானம் .
  • 36 தத்துவத் தேவதைகளுக்கும், உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கும் சாந்தி செய்யும் விசேஷ சந்தி 
  • பூத (மனித) உடலை தெய்வத்தின் உடலாக மந்திரப் பூர்வமாக மாற்றி அமைக்கும் பூத சுத்தி 
  • 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்கிரகங்களுக்குக் கொண்டு சேர்க்கும் ஸ்பர்ஷாஹுதி 
  • எட்டு பொருள்களால் மருந்தினால் மூர்த்தியையும், பீடத்தையும் ஒன்று சேர்க்கும் அஷ்டபந்தனம்.
  • யாகத்தைப் பூர்த்தி செய்யும் பூர்ணாஹுதி .
  • யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட கும்ப நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யும் கும்பாபிஷேகம் .
  • கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்கிரகத்துக்கு முறைப்படி அபிஷேகம், அலங்காரம் செய்யும் மஹாபிஷேகம் 
  • இறைவனை 48 நாட்கள் விசேஷ அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்யும் மண்டலாபிஷேகம் .

இவற்றோடு யாக குண்டங்களை அமைக்கவும் நெறிகள் உள்ளன.

 ஏக குண்டம் – ஒரு குண்டம் அமைத்தல்.

 பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைத்தல்.

 நவாக்னி – ஒன்பது குண்டம் அமைத்தல்.

உத்தம பக்ஷம் – 33.குண்டம் அமைத்தல்.

 யாக குண்டத்திற்கான மணல் பெரும்பாலும் புனித நதிப் படுகையிலிருந்தே பெறப்படும். கிடைக்காத பட்சத்தில் கிடைக்கின்ற மணலை நன்கு சுத்தப்படுத்தி கங்கை, காவிரி போன்ற புனித நீரைத் தெளித்து, மிருத்திகா பூஜை செய்த பிறகே அதனை ஹோம குண்டத்தின் அடித்தளமாகப் பயன்படுத்துதல் வேண்டும்.

ஹோமத்திற்காக சுத்தமான பசு நெய்தான் ஆஹுதி அளிக்கப்பட வேண்டும். உலோகப் பாத்திரங்களைத் தவிர்த்து மரக்கிண்ணம், மரப்பாத்திரம் அல்லது  வெள்ளி, தங்க கிண்ணங்களையோ, தென்னை, பனை ஓலையினால் ஆன தொன்னைகளையோ பயன்படுத்தலாம் .

யாகத்தில் ஆஹுதியை இடும் பொழுது மரக்கரண்டியை அல்லது மாவிலையை மட்டும் பயன்படுத்துதல் வேண்டும். யாக மரக்கரண்டியும். மா, பலா, தேக்கு, சந்தனம், வேங்கை போன்ற மரங்களில் செய்யபட்டிருக்கவேண்டும் . யாகத்தில் இடப்படும் ஆஹுதிகள், அரசு, ஆல், வேம்பு போன்ற மூலிகை மரப் பொருட்களாக இருக்க வேண்டும். ஆண்டாண்டு காலமாக மனதில் நெஞ்சிலும் உள்ள தீயவினைப் படிவுகளை யாக புகை  நீர் வடிவில் வெளியேற்றுகின்றது

யாக குண்டங்களும் தெய்வங்களைப் பொறுத்து மாறுபடுகின்றன. அவை;

விநாயகர் – பஞ்சகோணம்

முருகர் – ஷட்கோணம்

சிவன் – விருத்தம்

அம்மன் – யோணி

பரிவாரம் – சதுரம்.

கும்பாபிஷேகத்திற்கு செய்யப்படும் யாகங்களை எத்தன முறை செய்ய வேண்டும் என்றும் விதிமுறை உள்ளது. அது 2.காலம், 4.காலம், 8.காலம், 12.காலம் வரை செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை (ஒரு மாமாங்கம் = 12 வருடங்கள்) கும்பாபிஷேகம் செய்வது என்பதே மிகவும் விசேஷமானது.. அஷ்டபந்தனங்களின் சக்தியை மீண்டும் பெறுவதற்காக மட்டுமன்றி இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வதற்கான வேறு சில அறிவியல் ரீதியான காரணங்களையும் பார்க்கலாம்.

 பழங்காலக் கோயில்களில் இடிதாங்கிகள் என்று தனியாக ஒன்றும் கிடையாது.  இடிதாங்கியை பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் 18 ஆம் நூற்றாண்டில் தான் கண்டுபிடித்தார்.

இடி மின்னல்கள் கோபுரத்தைத் தாக்கும் போது கோபுரங்கள் இடிந்து விழ வாய்ப்புகள் ஏராளமாக இருந்தும் நம் கோயில் கோபுரங்கள் பாதிக்கப்படாமல் இருந்திருக்கின்றன. ஏனெனில்,  இடி மின்னல்களில் இருந்து கோபுரத்தையும் கோயிலையும் காக்க, கும்பங்களில் காற்றுப்புகாதபடி  நவதானியங்களை நிரப்பி வைத்து விடுவார்களாம். அப்படி வைக்கப்படும் கும்பமும் அதில் உள்ள தானியங்களும் இடி தாங்கியாக செயல்பட்டு இடி மின்னலை நீர்த்துப் போக வைத்து விடும் தன்மையை  பன்னிரண்டு ஆண்டுகள் மட்டுமே கொண்டிருக்கும்.. மீண்டும் கோயில் புனரமைப்பின் போது கும்பமும் உள்ளிக்கும் தானியங்களும் புதிதாக மாற்றப்படுவதால் இடி தாங்கியாக மீண்டும் அது செயல்பட ஆரம்பித்து விடும்.

உறைபனியினடியில் உலகின் மிக முக்கிய தாவரங்களின் விதைகளை சேமித்து வைத்திருக்கும் விதைவங்கிகள் உலகின் முக்கியமான இடங்களில் இருக்கின்றன. பேரழிவு எற்பட்டு உலகத்தின் மொத்த தாவரங்களும் அழிந்து போனாலும் மீண்டும் அனைத்தையும் பயிரிட்டு உருவாக்கிக் கொள்வதற்காகத்தான் இப்படி விதைகள் சேமித்து வைக்கப்படுகின்ற்ன. பழங்காலத்தில் இத்தைய விதை சேமிப்பு வங்கிகளாக இந்த கலச கும்பங்களே இருந்திருக்கின்றன. கும்பங்களின் உள்ளிருக்கும் (மூன்று முதல் ஐந்து கிலோ அளவுள்ள நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள் அல்லது சில பகுதிகளில் ராகி,கம்பு,சோளம்,நெல், சாமை, திணை, தட்டைப்பயிறு, பாசிபயறு, துவரை)  தானிய விதைகள், 12 வருடங்களுக்கு முளைக்கும் திறனுடன் இருக்கும் பின்னர் அவை மீண்டும் புதிதாக மாற்றப்படும். இயற்கைப்பேரழிவுகள் ஏற்பட்டு கோவில் இருக்கும்  இடத்தின் தாவரங்கள் அனைத்தும் அழிந்தாலும், அந்ந்ததக் கோவில்கள்  இருக்குமிடங்களில் மீண்டும் அவற்றை சாகுபடி செய்து மனித குலத்தை காக்கும் இறைவழியிலான ஏற்பாடே இந்த கும்பங்களில் தானியங்களை சேர்த்துவைக்கும் வழக்கமென்கிறது மற்றுமொரு  அறிவியல் காரணம்.

இப்படி ஆன்மிகக் காரணங்களோடு பல அறிவியல் காரணமும் கும்பாபிஷேகத்தின் பின்னணியில் உண்டு

 கும்பாபிஷேகத் தினத்தன்று ஆலயத்துக்குச் சென்று வழிபட்டால், முப்பது முக்கோடித் தேவர்களின் ஆசியும் அருளும் கிடைக்கும்..  கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள இயலாதவர்கள், 48 நாட்கள் நடக்கும் மண்டல பூஜையில் கலந்துகொண்டும் அதே நன்மைகளைப் பெறலாம்.. ஒரு கும்பாபிஷேகத்தைக் காண்பது மூன்று ஜென்மங்களில் நாம் செய்த பாவத்தைப் போக்கக் கூடியது என்கிறது ஐதீகம்

வடதுருவத்திலிருக்கும் விதைப்பெட்டகம்

கொடிமரம்- (த்வஜஸ்தம்பம்)

ஆலயங்களின் வடிவமைப்பு, அவை அமையவிருக்கும் நிலத்தை தேர்ந்தெடுக்கும் நியதிகள், விக்ரகங்களின் வடிவம், கட்டிட அமைப்பில் இருக்க வேண்டிய சமன்பாடுகள், மண்டபம், பிராகாரம், ஆகியவற்றிற்கான நீள, அகல, உயர விகிதங்கள், விமானங்களின் வகைகள், ஸ்தலவிருக்‌ஷங்கள், தீர்த்தங்களை உருவாக்குதல், உற்சவ விக்ரகங்களின் அளவுகள், அம்சங்கள், நித்யபூஜை விதிகள், உற்சவ முறைகள், அர்ச்சகர்கள், ஸ்தபதிகள் ஆகியோரின் தகுதிகள் போன்றவற்றையெல்லாம் நிர்ணயித்து நமக்கு வழிகாட்டுபவையே ஆகமங்கள் எனப்படும்.

 தெய்வ வடிவங்களை அமைப்பதற்கும், தெய்வத்தின் இருப்பிடமான ஆலயங்களை நிர்மாணிப்பதற்கும் அவற்றில் நடத்தப்படும் நித்ய பூஜைகளுக்கும், மரபுகளுக்குமான  முறையான விதிகளும், சட்டதிட்டங்களும், கட்டுப்பாடுகளையும் சொல்லும்  இந்த ஆகமங்கள் சைவ ஆகமங்கள், வைஷ்ணவ ஆகமங்கள் (வைகானசம், பாஞ்சராத்ரம்) என இருவகைப்படும். கிராமதேவதைகளுக்கான ஆலயங்களை அமைப்பதற்கும், தனிப்பட்ட மனிதர்கள் தங்கள் குடும்ப நலனிற்காகவும், வேறு பலன்களுக்காகவும் மேற்கொள்ள வேண்டிய ஜபம், பூஜை, ஹோமம் ஆகியவற்றிற்கும் இந்த ஆகமங்களே வழிகாட்டுகின்றன.  

சில்பசாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம், கட்டிடக்கலை ஆகியவையும் ஆகமங்களுக்குள்ளே அடக்கம். அவற்றையும் ஒருங்கிணைத்துத்தான் பெரும்பாலான ஆலயங்கள் பாரத நாட்டில் நிர்மாணிக்கப்பட்டன. 

ஆலயம் புருஷாகாரம் என்கிறது இந்த ஆகமங்கள், அதாவது மனித உடலின் அமைப்பை போன்றதே ஆலயங்களின் அடிப்படை கட்டுமான அமைப்பும்.  ஒரு ஆலயமென்பது  மனிதன் மேற்கே தலை வைத்து கிழக்கே கால் நீட்டி மல்லாந்து படுத்திருப்பதுபோல் கட்டப்படுகிறது.

 உடம்பினை இருப்பிடமாகக் கொண்டு ஜீவாத்மா உறைவது போல, ஆலயத்தை இருப்பிடமாகக் கொண்டு பரமாத்மா விளங்குகிறார். தோல், குருதி, ஊன், எலும்பு, மஜ்ஜை, கொழுப்பு, சுக்கிலம் ஆகிய ஏழுவகைத் தாதுக்களால் மனித உடல் அமைந்திருப்பது போல, கருங்கல், வெண்கல், செங்கல், மணல், சாம்பல், நீர், சுண்ணாம்பு எனப்படும் ஏழு வகைப் பொருள்களால் ஆலயங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.  

ஆலயத்தின் கர்ப்பக்கிகம் முகமாகவும், அர்த்த மண்டபம் கழுத்தாகவும், இருதோள்கள் துவார பாலகர் நிற்குமிடமாகவும், கொடி மரம் வரையுள்ள பாகம் உடம்பாகவும், கொடிமரம் முதுகுத்தண்டாகவும், பாதங்கள் வாயிற் கோபுரமாகவும் இருக்கின்றன. உடம்பில் உள்ள முதுகெலும்பு போன்றது கோவிலுக்கு கொடிமரம் என்று ஆகமங்கள்  சொல்கின்றன. நம் முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன. அது போலவே 32 வளையங்களுடன் கோவில் கொடி மரம்  அமைக்கப்படுகிறது. 

மனித உடலுக்கு முதுகெலும்பைப் போலக் கொடிமரத்துக்கு அதன் தண்டுப் பகுதி இன்றியமையாதது. முதுகெலும்பின் நடுத்தண்டு மூலாதாரத்திலிருந்து பிரம்மாந்திரம் வரை இருப்பதுபோல கொடிமரமும் மூலலிங்கத்தின் மட்டத்திலிருந்து ஸ்தூபியின் அளவு வரை இருக்கும். கொடிமரத்துக்கு வீணா தண்டம், மேரு தண்டம் என்னும் பெயர்களும் உண்டு. குண்டலினி சக்தி சுழுமுனை நாடி வழியாக எழுவது போல் கொடி மரத்தில் இடபக் கொடி ஏற்றப்படுகையில்தான் கோவில்  விழாக்கள் துவங்குகின்றன.

கொடிமரம்  இந்துக்கோவில்களில் பலிபிீடத்திற்கு  அருகே,  கருவறைக்கு முன் நிறுவப்பட்டிருக்கும். இதற்கு சமஸ்கிருதத்தில் துவஜஸ்தம்பம் என்று பெயர். த்வஜ- என்றால் கொடி, ஸ்த- ம்ப-  என்றால் தூண். இதை நிறுவுவதற்கும், வணங்குவதற்கும், சமயச் சடங்குகளும், நியம நியதிகளுமுள்ளன.

மரத்தினால் செய்யப்பட்டு  பித்தளை, செம்பு, வெள்ளி, பொன் போன்ற உலோகத்தகடுகள் வேயப்பட்டிருக்கும் கொடிமரங்கள் விருக்ஷ சாஸ்திரத்தின் அடிப்படையில்  முதிர்ந்த உயரமான ஒற்றை மரத்தில் செய்யப்படுகின்றன. சந்தனம், தேவதாரு, செண்பகம், தேக்கு வில்வம், மகிழம் முதலிய மரங்களிலிருந்துதான் கொடி மரங்கள் தயாரிக்கப்படுகின்றன. வைரம் பாய்ந்த செண்பகம், வில்வம், மகிழம்  போன்றவற்றிலிருந்து கொடிமரங்களை உண்டாக்குவது உத்தமம் , அதாவது அதிக பலன்களை இம்மரம் பக்தர்களுக்கு அளிக்கும், நன்கு விளைந்த  பலா, மா ஆகியவற்றிலிருந்து கொடிமரங்கள் செய்வது மத்திமம், அதாவது குறைவான பலன்களை அளிக்கும், உறுதியான கமுகு பனை ஆகிய மரங்களிலிருந்து கொடிமரங்களை உருவாக்குவது அதமம், அதாவது மிக சொற்ப பலனையே தரும் என்கின்றது ஆகமங்கள். மரத்தின் மேலே வேயப்பட்டிருக்கும் உலோகப்பட்டைகள் கொடிமரத்தை இடி, மின்னல் மழை, வெயிலிலிருந்து காக்கும்,

கொடி மரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காதபடியும்,கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும்படியுமே அமைக்க்கப்படும். அதுபோல கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் எவ்வளவு தூரத்தில், எவ்வளவு உயரத்தில் கொடி மரம் அமைந்திருக்க வேண்டும்  என்பதற்கும் விதிகள் உள்ளன. இது கோவிலுக்கு கோவில் மாறுபட்டாலும்,  கொடி மரத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமிக்குள் இருக்கும்படிதான் எங்குமே நிறுவப்படும். பெரும்பாலான சிவாலயங்களில் கொடி மரம், நந்தி மற்றும் பலிபீடம் ஆகிய மூன்றும் மூலவரை  நோக்கியே அமைக்கப்படுகின்றன.

கொடி மரம், மும்மூர்த்திகளையும், அவர்களின் மூன்று தொழில்களையும் உணர்த்துகின்ற குறியீடாக திகழ்கிறது.  அகலமாகவும், சதுரமாகவும் இருக்கும் பத்ரபீடம் எனப்படும் அடிப்பகுதி, படைப்பு தொழிலுக்கு உரியவரான பிரம்மாவையும், அதற்கு மேல் உள்ள எண்கோணப் பகுதியான விஷ்ணு பாகம் காத்தல் தொழிலுக்கு உரியவரான விஷ்ணுவையும், அதற்கு மேல் உள்ள நீண்ட ருத்ர பாகம், சம்ஹாரத் தொழிலை செய்யும் சிவபெருமானையும் குறிக்கும். 

கொடிமரத்தின் தண்டு எனப்படும் நீண்ட உருளை வடிவ உயர்ந்த தூணின் உச்சியில்  மேகலை எனப்படும் மூன்று குறுக்குச் சட்டங்கள் கருவறை தெய்வத்தை நோக்கி இருக்கும்படி அமைந்திருக்கும். இதை ஏர் பலகை, திருஷ்டிப் பலகை என்றும் அழைப்பார்கள்  இதில் சிறு சிறு மணிகளும் இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஆலயத்துக்கு ஏற்ப இந்த அமைப்பு வேறுபட்டு காணப்படும். ஒரே பட்டையுடன் இருக்கும் கொடி மர அமைப்பை கருடஸ்தம்பம் என்று சொல்வார்கள்.  

எல்லா கொடிமரங்களும் ஒரே மாதிரியான அமைப்பில் இருப்பதில்லை சிலவற்றில் தீபமேற்றும் பிறைகள்  அமைந்திருக்கும். சில பீடங்களில் தாமரை மலர்கள் இதழ் விரித்திருக்கும் சிலவற்றில் சதுரபீடத்தின் நான்கு பக்கங்களிலும் புடைப்புச்சிறபங்களாக தெய்வங்கள் வீற்றிருப்பதும் உண்டு.

 சில கொடிமரங்கள் கருங்கல்லிலும் கூட உருவாக்கப்படுகின்றன.ஆனால்  நரம்போட்டமில்லாத விரிசலில்லாத உறுதியான  ஒற்றைக்கல்லால் மட்டுமே உருவாகியிருக்கும். இப்படியான கல்கொடிமரங்களை அதிகம் கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் காணலாம். நார்கோண, அறுகோண, எண்கோண உருளைப்பகுதிகளும் உண்டு.

 பிரபஞ்ச கதிர்களை கருவறை விமானக் கலசங்கள் ஈர்த்து கருவறையில் இருக்கும் மூலவ‌ர்மீது பாய்ச்சும். இந்த பிரபஞ்ச சக்தியை அப்படியே நேரடியாக  ஏற்றுக் கொள்ளும் தன்மை சாதாரண மனிதர்களுக்கு இல்லை. இந்த கொடிமரமானது இந்த பிரபஞ்ச சக்தியை ஈர்த்து, பக்தர்களின் உடல் ஏற்றுக் கொள்ளும் தன்மைக்கு இந்த சக்தியைமாற்றி கருவறைக்கு முன்னின்று கடவுளை வணங்கும் பக்தர்கள் மீது பாய்ச்சும் எனப்படுகின்றது.

சைவ வைணவ கோவில்களின் கொடிமரங்களுக்குள் வேறுபாடுகளும் இருக்கும். சிவாலயங்களில் கொடிமரத்தின் உச்சியில் நந்தியும் வைணவாலயங்களில் சுதர்சன சக்கரமோ அல்லது ஹனுமான் உருவமோ பொறிக்கப்பட்டிருக்கும்.

கம்போடியகோயில் கொடிமரம்

இவை மாறாத விதிகளல்ல, பல கோவில்களில் கருவறை தெய்வத்திற்கு உகந்த பல உருவங்களும், துணைதெய்வங்களும், வாகனங்களும் கொடியிலும், கொடிமரத்திலும், பீடத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். உச்சியில் கலசங்கலும் வேலும் அமைந்திருக்கும் கொடிமரங்களும் உண்டு. கேரளகோவில்களில் கம்போடியக்கோயில்களில்  தமிழகக்கோயில் கொடிமரங்களினின்றும் வேறுபட்ட உச்சிப்பகுதிகளைக்கொண்ட கொடி மரங்களை காணலாம்.

குருவாயூர் கோயில் கொடி மரம்

சிலபெருமாள்கோயில்களில் கருடனும், அம்பாள்  ஆலயங்களில் சிம்மமும், முருகர் ஆலயத்தில் மயிலும், விநாயகர் ஆலயங்களில் மூஷிகமும், துர்கை ஆலயத்தில் சிம்மமும், சாஸ்தாவிற்கு குதிரையுமாக, கொடிமரத்தின் மேற்புறத்தில் கொடிச் சின்னங்கள்  பொறிக்கப்பட்டிருக்கும்.

மூல விக்ரகம், உற்சவ விக்ரகங்களைப்போலவே ஒர் கோவிலின் சக்தி மையமாக கொடிமரமும் விளங்குகின்றது, அதனாலேயே கோவிலில் நுழையுமுன்னர் கொடிமரத்தை வணக்கிவிட்டு உள்ளே நுழைகிறோம்.

 கொடிமரத்தை வணக்குவது, வலம் வருவதுமட்டுமல்ல, பார்ப்பதே புண்ணியமென்கின்றது சாஸ்திரங்கள். கருவறை குடிகொண்டிருக்கும் தெய்வங்களுக்கான சேவைகளில்  பெரும்பாலானவை கொடிமரத்திற்கும் செய்யப்படுகின்றன. சில கோவில்களில் கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் ஆகாசதீபத்தை கொடிமரத்தில் ஏற்றும் வழக்கமும் உண்டு.  கொடிமரமில்லா கோவில்களில் உற்சவங்களும் நடைபெறாது

 ஒவ்வொரு சிவாலயத்திலும் ஐந்து வகையான லிங்கங்கள் இருப்பதாக ஐதீகம் 1. விமானம்- ஸ்தூல லிங்கம்; 2. கர்ப்பக்கிரகம்-சூக்ஷ்மலிங்கம்; 3. பலிபீடம்-அதிசூக்ஷ்மலிங்கம்; 4. கொடிமரம்-காரணலிங்கம்; 5. மூலலிங்கம்-மஹாகாரணலிங்கம்.

 துவஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரத்தில் திருவிழாவின் முதல்நாள் கொடியேற்றுவது துவஜாரோகணம் என்றும், விழா முடிந்து கடைசி நாள் கொடியிறக்குவது துவஜாவரோகணம் என்றும் அழைக்கப்படுகிறது. கொடிமரத்தின் முன் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும். கொடிமரம்,நந்தி,பலிபீடம் இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது என்றும் சொல்லபடுகின்றது.

நந்தி

சிவாலங்களில் விநாயகரை வணங்கிய பின் நந்தி பகவானை வணங்கிய பின்னரே ஈசனை வணங்கச் செல்வது வழக்கம். அதோடு நந்தியிடம் சிவ பெருமானை வணங்க அனுமதி கேட்டுவிட்டு, அவரிடம் வைக்கப்போகின்ற குறைகளையும் முதலில் சொல்ல வேண்டும். அவரின் அனுமதியை மானசீகமாக  வாங்கிய பின்னரே சிவனை வணங்க செல்ல வேண்டும்

 உடல் வலிமையும், ஞானமும், செல்வச் செழிப்பும் மேன்மையும் பெற்றவர்கள் நந்திகள் என்று  அழைக்கப்படுகின்றனர். அவர்களது கூட்டமே நந்தி கணம் என்று அழைக்கப்படுகிறது. உலகின் அனைத்து ஆற்றலுக்கும்,  ஞானத்திற்கும் முழுமுதற்  பொருளாக இருப்பதால், சிவபெருமான் நந்தி எனப்படுகிறார்.  அவரது பேரருளைப் பெற்றவர்களும், அவரைச்சார்ந்திருப்பவர்களும் நந்தி என்றே அழைக்கப்படுகின்றனர்.

அனைத்து சிவாலயங்களிலும் கருவறை இறைவனை நோக்கியபடி அமந்திருக்கும் நந்தி,  கணத்தினரில் முதன்மை பெற்றவராக இருப்பதுடன், சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலை மலையைக் காத்து நிற்கும் அதிகாரம் பெற்றவராகவும் இருப்பவர். சைவ சமயத்தில் முதல் குருவாகவும் சிவனின்  வாகனமாகவும் கருதப்படுபவரும்  திருநந்தித் தேவரே ஆவார்

.  இவர் சித்தராகவும், சிவனுக்கு ஏற்ற வாகனமாகவும் கருதப்படுகிறார்.  நந்தி உருவம் பதித்த கொடி சைவ சமயத்தவரின் கொடியாகக் கருதப்படுகிறது.

 சிவன் கற்பித்த  அகமிக்  மற்றும் தான்ரீக  ஞானத்தின் தெய்வீக அறிவை பார்வதியிடமிருந்து நந்தி பெற்றார். நந்திநாத சம்பிரதாயத்தின் முன்னோடிகளாக அடையாளம் காணப்பட்ட சனக, சனாதன, சனந்தன, சனத்குமார,  திருமூலர், வியாக்ரபாகர், பதஞ்சலி , மற்றும் சிவயோக முனி ஆகிய   தனது எட்டு சீடர்களுக்கு அந்த தெய்வீக அறிவை அவர் கற்பித்தார். நந்தி என்பதற்கு வளர்வது என்பது பொருள் ஞானத்தாலும்,  செல்வச்செழிப்பாலும், வலிமையாலும், வளர்ந்து கொண்டே இருப்பதையே நந்தி எனும் சொல் குறிக்கின்றது.

சிவாயநம எனும் ஐந்தெழுத்தின் உருவத்தைக் கொண்டவரும், ஒப்பில்லாத நான்கு வேதங்களையும் நான்கு பாதங்களாகக் கொண்டவருமாவார் நந்திதேவர் என்கின்றன புராணங்கள்.

சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்திற்கு எதிரில்  அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுகிறார். அழிவே இல்லாதது தருமம். அது ரிஷப வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த தர்ம வடிவான நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார்.  இறைவனைத் தாங்கும் தர்மத்தின்  மூச்சுக்காற்றுதான் அவருக்கு உயிர்நிலை தருகிறது. இதனால்தான் மூலவரின் தொப்புள் பகுதியை உயிர் நிலையாகக் கொண்டு, அதன் நேர்க்கோட்டில் நந்தியின் நாசி அமையுமாறு அமைக்கப்படுகிறது. இம்மூச்சு தடையேதுமின்றி மூலவரைச் சென்றடையத்தான் நந்தியின் குறுக்கே போவதும் விழுந்து வணங்குவதும் கூடாது என்பது வழக்கத்தில் இருக்கிறது.

ருத்ரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்க வாத்யப்ரியன், சிவவாஹனன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன், நந்தீசர், நந்தீஸ்வரர், நந்தியெம் பெருமான் இப்படி பல்வேறு சிறப்புப் பெயர்கள் நந்திக்கு உள்ளன.

 நந்தி வழிபாடு பல்லாயிரம் ஆண்டுகளான பாரம்பரியமாக இருந்து வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சிவன் மற்றும் நந்தியின் வழிபாடுசிந்து பள்ளத்தாக்கு நாகரீக காலத்தில் இருந்திருக்கிறது. மேலும் மொகங்சதாரோ மற்றும்  ஹரப்பாவிலும் பல காளை முத்திரைகள் கண்டறியப்பட்டிருகின்றன..

 புராணங்களில் நந்தி, சிலாத  முனிவரின் மகன் என்று கருதப்படுகிறார். வீதஹவ்யர்  என்னும் முனிவர்,அறியாச்சிறு வயதில் சிவனடியாரின் அன்னப் பாத்திரத்தில் கல்லைப் போட்ட தீவினையால், இறந்த பிறகு பெரும் பாறை ஒன்றைத் தின்று தீர்க்க வேண்டும் என்ற தண்டனை இருப்பதை யமதூதர்கள் மூலம் முன்னரே அறிந்து, இறப்பதற்கு முன்னரே பாறையைத் தின்று தன் பாவம் போக்கி “சிலாத முனிவர்’ என்ற பெயர் பெற்றார். இவரது மனைவி சித்திரவதி.

 ஆண்டுகள் பலவாகியும் மகப்பேறின்மையினால் மிகுந்த வருத்தமுற்ற சிலாதமுனிவர், யாகம் புரிய அகழ்ந்தெடுத்த மண்ணிலிருந்து கிடைத்த மகவே செப்பேசன். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய செப்பேசன் ஈசனையே அகத்தில் நினைத்திருந்தார். இடுப்பளவு நீரில் காலின் மேல் காலையூன்றி ஒற்றைக் காலில் நின்று, பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்தபடியே நீண்ட காலம் தவம் செய்த செப்பேசுவரரின்   திருமேனியை நீரில் வாழும் ஜந்துகள் அரித்துத் தின்றன. செப்பேசுவரரின் தவவலிமையையும் உறுதியையும் கண்டு மகிழ்ந்த இறைவன்,  அவருக்குக் காட்சியளித்தார். செபேசுவரர் கேட்டுக்கொண்டதற்கிணங்க நிலைத்த பதினாறு பேறுகளையும் வரமாக அருளி,  செப்பேசனுக்கு நந்தீசன் என தீட்ச நாமம் சுட்டி தமக்கு சமமான அதிகாரத்தையும், சிவ கணங்களுக்கு, தலைமை தாங்கும் பதவியினையும், முதல் குருநாதன் என்ற தகுதியினையும்  அளித்தார்.

அன்று முதல் சிவனை விட்டு எங்குமே நீங்காமல், அவர் வாகனமான ரிஷபமாகவும் ஆனார் செப்பேசர்.  சிவபெருமானே நேரடியாக சிவாகமங்களை நந்தி தேவருக்கு போதித்து அருள் செய்தார். இறுதியாக நந்தியைத் தன் அம்சமாகவே மாற்றி, தன் சிரசிலிருந்து மாலை எடுத்து நந்திக்கு அணிவித்து, அதிகார நந்தி என்ற பட்டத்தையும் அளித்து கயிலாயத்தில் அமர்த்திய இறைவன், நந்தீஸ்வரருக்கு வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயம்பிரகாசையை திருமணமும் செய்துவைத்தார். சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறுயாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.

சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது. கயிலாயத்தில் சிவபெருமானை நேரடியாகச் சென்று தரிசித்துவிட முடியாது. நந்தி உத்தரவு பெற்றுத்தான் கயிலைக்குள் நுழைய முடியும். அதனால்தான் நாம் செய்துகொண்டிருக்கும் வேலையில் யாராவது தடையிட்டால், “இவன் என்ன நந்தி மாதிரி தடுக்கிறான்’ என்கிறோம்.  

நந்திகேஸ்வரர்

நந்தி புராணத்தில் நானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்கிறார் சிவன் திவ்ய வடிவமும், நெற்றிக் கண்ணும், நான்கு புயங்களும், கையில் பிரம்பு உடைவாளும், சடைமுடியும், சந்திரகலையும், நீலகண்டமும், யானை புரியும், இருபுயங்களில் மானும் மழுவும் கொண்டு இன்னுமொரு சிவரூபனாகவே திகழும் நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதற்கு சமமானது ஆகும்.


          சிவன் கோயில்களில் சிவ ஆகமங்களின் அடிப்படையில் அமைந்திருக்கும்  ஐந்து நந்திகள்.

கைலாய நந்தி:

 அனைத்து சிவாலங்களிலும் மூலவருக்கு அருகே இருப்பவர். கைலாயத்தில் சிவபெருமானுக்கு அருகே எப்போதும் இருப்பதனால் இவருக்கு கைலாய நந்தி என்ற பெயர்.

அவதார நந்தி:

அவதார நந்தி சிவாலயங்களில் கைலாய நந்திக்கு அடுத்து இருப்பதாகும். சிவபெருமானுக்கு வாகனமாக திருமாலே நந்தியாக மாறியதால் இந்த நந்தியை விஷ்ணு அவதார நந்தி என்றும், விஷ்ணு நந்தி என்றும் அழைக்கின்றார்கள்.

அதிகார நந்தி:

அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் மூன்றாவது. கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம்  உள்ளதால் இவருக்கு அதிகார நந்தி என்ற பெயர் வந்தது. இவர் உட்கோபுர வாயிலில் வடக்கு நோக்கி இருப்பார்

சாதாரண நந்தி;

சாதாரண நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நான்காவதாக இருக்கும். ஐந்து நந்திக்கும் குறைவான சிவாலயங்களில் இந்த நந்தி அமைக்கப்பெறுவதில்லை.

மஹா (பெரிய) நந்தி:

பெரிய நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நுழைவுவாயிலில் காணப்பெறும் நந்தியாவார். கைலாயத்தின் விஸ்வரூபத்தில் எந்நேரத்திலும்  காவலனாக இந்த நந்தி இருப்பார். அதன் காரணமாக இவரை மஹா நந்தி என்றும் விஸ்வரூப நந்தி என்றும் அழைக்கின்றனர்.

லேபாக்‌ஷி

கொடிமரத்தருகில் இருப்பது ஆத்மநந்தி, கருவறை பின்புறம் இருப்பது விருஷப நந்தி ,  கொடிமரம் இல்லாத கோவில்களில் சிவனை நோக்கி  காட்சி தருவது பிரகார நந்தி இவையல்லாது இன்னும் பலவகை நந்திகள் சிவாலயங்களில் காணப்படுகின்றன.

சிவபெருமான் ஆலயங்கள்  என்றாலே சிறிய அளவிலான நந்தியாவது அமைந்திருக்கும். பல பெருமைகளை உடைய நந்திதேவருக்கு உலகம் முழுவதும் பல இடங்களில் சிலைகள் உள்ளன. இந்தியாவில், குறிப்பாக, தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நந்திகள் அமைந்துள்ள கோயில்கள் நிறைய உண்டு.        

ஐந்து  மிகப்பெரிய நந்திகள்:


1. பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் அமைந்திருக்கும் இந்த நந்தி சிலை நாயக்கர்களால் கட்டப்பட்டது. இந்தச் சிலை 13 அடி உயரமும், 16 அடி நீளமும் கொண்டது.


2. வீரபத்ரர் கோயில், லேபாக்ஷி

ஆந்திரப்பிரதேச மாநிலம் லேபாக்ஷியில் விஜயநகர மன்னர்களால் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வீரபத்ரர் ஆலயத்தில் இந்த நந்தி சிலை அமைந்திருக்கிறது. இந்த நந்திதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய நந்தி சிலையாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் உலகின் மிகப்பெரிய ஒற்றைக்கல் நந்தியும் இதுவே. இச்சிலை 15 அடி உயரமும், 27 அடி நீளமும் கொண்டது.


3. சாமுண்டி மலை, மைசூர்

மைசூரில் உள்ள சாமுண்டி மலையில்  1664-ஆம் ஆண்டு இந்த மிகப்பெரிய நந்தி நிர்மாணிக்கப்பட்டது. இது 15 அடி உயரமும், 24 அடி நீளமும் கொண்டது.


4.  பசவனகுடி பெங்களூர்

பெங்களூரின் தென்பகுதியில் உள்ள பசவனகுடியில் இந்த நந்தி சிலை அமைந்துள்ளது. இந்தக் கோயில் இருக்கும் இச்சிலை 15 அடி உயரமும், 20 அடி நீளமும் கொண்டது.

5. ஹோய்சாலேஸ்வரர் கோவில் ஹலேபீடு

 12-ஆம் நூற்றாண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே நின்று போனது. ஹோய்சாலேஸ்வரர் கோவிலில் 14 அடி உயரம் கொண்ட இரண்டு ஒற்றைக்கல் நந்தி சிலைகள் காணப்படுகின்றன.

 
நந்தி பகவானுக்கு அருகம்புல் மாலையை சாற்றி, அரிசிமாவில் வெல்லம் கலந்து நைவேத்தியம் செய்து  வழிபடலாம். இறைவனின் முதல்வன் விநாயகர். கோயிலில் முதல்வன் நந்தீஸ்வரர். எனவே தான் விநாயகருக்குரிய அருகம்புல் மாலை நந்தீஸ்வரருக்கும் அணிவிக்கப்படுகிறது.

இரட்டை நந்தி

   கோயில்களில் நந்தியை தரிசிக்காமல்  சிவபெருமானை தரிசிக்க முடியாது. ஆனால் நந்தியை மட்டுமே தரிசனம் செய்தால் கூட சிவபெருமானை தரிசித்த முழுபலனும் கிட்டும்.   

 ஆலயங்களைக் காவல் காக்கும் அதிகாரமும் நந்திக்கே உரியது என்பதால்தான்  கோவில்களின் மதில் சுவர்களில் நந்தியின் திருவுருவை அமைத்துள்ளனர்.

பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலத்தும் நாம் சிவபெருமானிடம் வைக்கும் வேண்டுதல்களை நந்திதேவரிடம் வைத்தால் போதும். அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.

நந்தியின் உருவமைப்பே தத்துவக் குவியல். சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் எனும் நான்கு  குணங்களை வெளிப்படுத்தும் கால்களில், முன்பக்கத்து வலது கால் சற்றே உயர்ந்திருக்கும். அது  ஞானமார்க்கத்தை குறிக்கும். சரியை, கிரியை, யோகம் என்ற மூன்று கால்களையும் மடித்து ஒடுக்கிக் கொண்டு நாலம் பாதமாகிய ஞானப்பாதத்தினால்  பரம்பொருளைக் கண்டு கொண்டிருக்கிறது என்கிறது ஆகம நூல்கள்.

  சில ஆலயங்களில் நந்தி நின்றகோலத்திலும் காட்சியளிக்கிறார். இன்னும் சில கோவில்களில்  கோவில் வாசலை நோக்கியபடி இருக்கும் நந்திகளும், காதற்ற. ஒரு காலற்ற, சற்றே ஈசனைவிட்டு விலகி நிற்கும்,  பக்தர்கள் தன் செவியில் குறைகளை சொல்ல ஏதுவாக தலையை சாய்த்தபடி, வாயிலிருந்து நீரூற்று வந்துகொண்டிருக்கும் நந்தி, இரட்டை நந்தி, ஒருபாதி மனித உருவிலும் பின்பாதி காளைவடிவிலும் இருக்கும் நந்தி, என பல்வேறு வடிவங்களிலும், அமைப்புக்களிலும், நிலைகளிலும் நதியை காணமுடியும்.

நின்ற நிலையில் நந்தி


    நந்தி இல்லாத சிவ ஆலயம் திருப்பெருந்துறையில் (ஆவுடையார் கோயில்) உள்ளது. இங்கு சிவனும் சக்தியும் கூட உருவமின்றி விளங்குகின்றனர். இத்தலம் மாணிக்கவாசகப் பெருமானால் கட்டப்பட்டது. நாகப்பட்டினம் திருநாங்கூரில் இறைவன் திருமணத்திற்கு சீர் கொண்டு வரும்பொருட்டு திரும்பி நிற்கும் நிலையில் சுவேத நந்தியும் இறைவனை பார்த்தபடி இருக்கும் மதங்க நந்தியையும் ஒருசேரக் காணலாம்.

மதங்கீஸ்வரர் ஆலய நந்திகள்

ஆந்திரப்பிரதேச மாநிலம், கர்னூல் மாவட்டத்தில், நந்தியாலுக்கு அருகிலுள்ள புண்ணிய க்ஷேத்திரம் மகாநந்தி. சிவபெருமான் மகா நந்தீஸ்வரராக அருள்புரியும் இத்தலத்திருக்கும் சுயம்பு  லிங்கத் திருமேனியில் பசுவின் குளம்படிகளை இன்றைக்கும் காணலாம். இந்த லிங்க மூர்த்தத்தின் அடிப்பகுதியில் சுரக்கும் தீர்த்தமே இத்தலத்தின் குளங்களில் நிரம்புவதாக நம்பிக்கை!

காநந்தி தலத்தைச் சுற்றி சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவில், விநாயக நந்தி, கருட நந்தி, சூரிய நந்தி, சோம நந்தி, சிவ நந்தி, விஷ்ணு நந்தி, பிரம்ம நந்தி, நாக நந்தி ஆகிய நந்திகளுடன் இந்த தல நந்தியையும் சேர்த்து மொத்தம் ஒன்பது நந்தி தலங்கள் அமைந்துள்ளன. இந்த ஒன்பது தலங்களும் ‘நந்தி மண்டலம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நந்திகளுக்கு நாயகனாக, மகாநந்தியில் உள்ள சிவன் மகாநந்தீஸ்வரர் திகழ்கிறார்.  

வழிபடும் முறை;  சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப்  பெருமானை வழிபட்டு, கொடிமரத்துக்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தியெம்பெருமானை வேண்டிக்கொண்ட பின்னரே சிவபெருமானை வழிபட வேண்டும். கொடிமரத்திற்கும் நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் நின்று,  இரண்டு கொம்புகளுக்கு நடுவில் இறைவனை தரிசிக்க வேண்டும்.  

நந்தி தேவர் இசை அறிஞராய்ப் போற்றப்படுபவர். அதனால் நாட்டியம் பயில்வோரும், இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி  சிறந்து வளரும். நந்தி தேவனை வழிபடுபவர்க்கு சிறந்த பக்தியும் நற்குணங்களுடைய குழந்தைச் செல்வங்களும்,  சகல காரிய சித்தியும், உயர்ந்த பதவியும், நல்ல எண்ணங்களும் நல்லொழுக் கமும் கிடைக்கும். எல்லா வற்றிற்கும் மேலாக முக்தியெனும் வீடு பேற்றையும் அவர்கள் அடைவர்.

’நந்திவழிபாடு நற்கதியளிக்கும்’

ஞானகுரு தக்‌ஷிணாமூர்த்தி

சதுஷஷ்தி மூர்த்திகள் என்று சமஸ்கிருத மொழியில் சொல்லப்படுகின்ற சிவபெருமானின்  அறுபத்து நான்கு வடிவங்கள் போக வடிவம்,யோக வடிவம், கோப வடிவம் (வேக வடிவம்) , பிற சிவ வடிவங்கள் என வகைப்படுத்தப் படுகின்றன.

இதில் போக வடிவங்கள்; உமாமகேஸ்வரர், சந்திரசேகரர், ரிஷபாரூடர், மாதொருபாகர், யோக வடிவங்கள்; தக்‌ஷிணாமூர்த்தி, ஞான தக்‌ஷிணாமூர்த்தி, யோக தக்‌ஷிணாமூர்த்தி, வீணா தக்‌ஷிணாமூர்த்தி, சுகாசனர், கோப வடிவங்கள்: கங்காளர், வீரபத்திரர்,  திரிபுராந்தக மூர்த்தி, கஜயுக்த மூர்த்தி, காலந்தக மூர்த்தி

கேசிமுனிவர் எழுதிய அஷ்டாஷ்ட விக்ரக லீலை, மற்றும் ஈக்காடு ரத்தினமுதலியார் எழுதிய சிவபராக்கிரமம் ஆகிய நூல்களில் இந்த 64 வடிவங்களைக்குறித்தும் விவரிக்கபட்டிருக்கின்றது.

சதாசிவ வடிவத்தின் ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் போன்ற ஐந்து முகங்களிலிருந்து, முகத்திற்கு ஐந்தாக இருபத்தியைந்து வடிவங்கள் தோன்றின. இவையே ’மகேசுவர மூர்த்தங்கள்’. இந்த மகேசுவர மூர்த்தங்களுடன் வேறு சில வடிவங்களும் இணைந்து அறுபத்து நான்கு வடிவங்களாகயின. முதல் வடிவமான லிங்க மூர்த்தியிலிருந்து  முருகனிடம் பிரணவப் பொருளைக்   கேட்க மாணவனாக மாறிய வடிவமான  ’சிஷ்யபாவ மூர்த்தி’  வடிவம்  வரையிலான 64 வடிவங்களில் ஒன்றுதான் தென் திசைக்கடவுளான  தக்‌ஷிணாமூர்த்தி  வடிவம்.

தக்‌ஷிணாமூர்த்தி தெற்குமுகமாக அமர்ந்த அறிவே உருவமான ஜோதி, எல்லையற்ற கருணைக்கு இருப்பிடம், மகரிஷிகளின் அஞ்ஞானத்தைப் போக்குகின்ற ஆதி ஆசார்யர், தத்தவமஸி என்னும் மஹா வாக்கியத்தின் ஞானம் விளங்கச் செய்பவர், பிரணவரூபமான வித்யையை உபதேசித்து அவித்யையாகிற இருட்டைப் போக்குபவர், சந்திரக் கலைகளால் செய்யப்பட்டது போன்ற அவயங்களை உடையவரும், முத்துக் கூட்டங்களால் கட்டப்பட்டது போன்ற மூர்த்தியை உடையவரும், அறிவுக்கு எட்டாதவருமானவர்

தனது வலது முழங்காலில் வைக்கப்பட்ட இடது காலை உடையவரும் பாதங்களிலும் வயிற்றிலும் சேர்த்து கட்டப்பட்ட யோக பட்டத்தை உடையவரும், அபஸ்மாரத்தின் மீது வைக்கப்பட்ட காலை உடையவரும், ஸமாதிநிலையில் இருப்பவருமான இறைவன்,.

ஒரு கையில் சின்முத்திரையையும் ஒரு கையில் பரசுவை (கோடரியையும்) ஒரு கையால் மானையும் தரித்தவரும், தன் முழங்காலில் வைத்த கையை உடையவர், மன்மதனை எரித்த சாம்பலைப் பூசிக் கொண்டவரும், புலித்தோலைப் போர்த்திக் கொண்டவரும், வீணையையும் தரித்தவரும், விரிந்த ஜடாபாரத்தை உடையவரும், நாதப்ரம்மாநுபவத்தினால் மிக்க சந்தோஷமடைந்தவருமான யோகி.

தனது சரீர மணத்தினால் தாமரையின் மணத்தை வென்றவரும் , மந்த புத்தி உள்ளவர்களை அனுக்கிரகம் செய்பவரும், தெற்கு முகமாய் அமர்ந்திருப்பவரும்   ஆனந்தம் கொண்டவரும், பாலசந்திரனை சிரஸ்ஸில் தரித்தவரும்,  நான்கு பக்கங்களிலும் தொங்குகின்ற ஜடைகளால் , சந்திரன் போன்ற முகத்துடனும் விளங்குகிற பிரசன்ன மூர்த்தி

தக்‌ஷிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து தன்னை வழிபடுபவர்க்கு ஞானத்தை வழங்கி அருள்பவர் தக்‌ஷிணாமூர்த்தி.  தக்‌ஷிணாமூர்த்தியை  பரமகுரு என்ற பெயரிலும் அழைக்கின்றார்கள்.

வக்கிரம், சாந்தம், வசீகரம், ஆனந்தம், கருணை  முதலிய குணங்களை பஞ்ச குணம் என்கிறோம். இந்த குணங்களின் அடிப்படையில் சிவனது ஐந்து மூர்த்தங்கள் பஞ்சகுண சிவமூர்த்திகள் என வகைப்படுத்தப்படும்.. இவற்றில் தக்‌ஷிணாமூர்த்தி சாந்த மூர்த்தி ஆவார்.

பிற நான்கு மூர்த்திகள்;

உக்ர மூர்த்தி – பைரவர்

வசீகர மூர்த்தி –  பிச்சாடனர்

ஆனந்த மூர்த்தி -நடராசர்

கருணா மூர்த்தி – சோமஸ்கந்தர்

பூமியில் மக்கள் தொகை பெருக்கத்திற்காக படைப்பின் கடவுளான  பிரம்மாவின் மனதால் படைக்கபட்ட நான்கு பிரம்ம  குமாரர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் எனப்படும் சனகாசி முனிவர்கள் ஞானம் பெறுவதற்காக குருவினை நாடிச் சென்றார்கள். பிரம்மா படைப்பு தொழிலில் மூழ்கியதாலும்,  திருமால்  இல்லறத்தில் ஈடுபடுவதாலும் அவர்களை விலக்கி வேறு குருவினை தேடிச் சென்றார்கள்.. சிவபெருமான் தானும் சக்தியுடன் இருப்பதை கண்டால் பிரம்ம குமாரர்கள் ஏமாற்றம் அடைந்துவிடுவார்கள் என்று பதினாறு வயது சிறுவனாக வடவிருட்சத்தின் கீழ் அமர்ந்து வரவேற்றார்.

பிரம்ம குமாரர்கள்

தட்சிணாமூர்த்தியாக, கல் ஆல மரத்தின் கீழ் அமர்ந்து பிரம்ம குமாரர்களின் ஞானத்தினைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்து, நான்மறைகளோடு ருக், யஜூர், சாமம், அதர்வணம்) ஆறு அங்கங்களையும் (சிக்ஷை (எழுத்திலக்கணம்), வியாகரணம் (சொல்லிலக்கணம்) , நிருக்தம் (நிகண்டு) , கல்பம் (கர்மாநுஷ்டான முறை), சந்தஸ் (பாவிலக்கணம்) , ஜ்யோதிஷம் (சோதிடம்) )  அவர்களுக்கு போதித்தார்.  எனவேதான் இந்த நான்கு முனிவர்களும் அவர் பாதத்தின் அடியில் வீற்றிருக்கின்றனர்.

ஞான தக்‌ஷிணாமூர்த்தி, வியாக்யான தக்‌ஷிணாமூர்த்தி, சக்தி தக்‌ஷிணாமூர்த்தி, மேதா தக்‌ஷிணாமூர்த்தி, யோக தக்‌ஷிணாமூர்த்தி, வீர தக்‌ஷிணாமூர்த்தி, லட்சுமி தக்‌ஷிணாமூர்த்தி, ராஜ தக்‌ஷிணாமூர்த்தி, பிரம்ம தக்‌ஷிணாமூர்த்தி,சுத்த தக்‌ஷிணாமூர்த்தி  என்று தக்‌ஷிணாமூர்த்தி பல வடிவங்களில் உள்ளதாக  ஆகமங்கள் கூறுகின்றன.

நான்கு கைகள் கொண்டு ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்துள்ள தக்‌ஷிணாமூர்த்தியின் வலதுகால் ‘அபஸ்மரா’ (முயலகன்) என்ற அரக்கனை மிதித்த நிலையில் அமைந்திருக்கும். அபஸ்மரா அறியாமையை / இருளை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் ,ஒரு பாம்பையும் பிடித்துள்ளார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பை கொண்டுள்ளார். அவருடைய கீழ் இடது கையில் தர்பைப் புல்லையும், ஓலைச்சுவடியையும் வைத்துள்ளார்,   வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கடவுளை குறிக்கும் கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, ஆசைக்கான நடுவிரல், கர்மமாகிய மோதிரவிரல், மாயைக்கான சுண்டுவிரல் ஆகிய மூன்றும் தனித்து நிற்கும்  சின்முத்திரை  காட்டியருள்பவர்.

  மாயை மனிதனுக்கு ஆசையை ஏற்படுத்தி, கெட்ட கர்மங்களை செய்ய வைக்கிறது. அந்த மூன்றையும் மறந்துவிட்டு, இறைவனை வணங்கினால், இறைவனோடு ஐக்கியமாகலாம் என்பதே இதன் பொருளாகும்

தக்‌ஷிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான த‌க்‌ஷிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் வழிபடப்படுகிறார். பெரும்பாலான கோயில்களில் விளங்குபவர் வியாக்யான தக்‌ஷிணாமூர்த்தி. வேதாகமங்களின் நுட்பமான உண்மைகளை இவரே விளக்கி அருள்கிறார்.

சிறப்பான  பத்து தக்‌ஷிணாமூர்த்திஆலயங்கள்

  • மிக அழகானது – பழனி பெரிய ஆவுடையார் கோயில்

  • தலை சாய்த்த கோலம் – திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)

  • சிற்ப அழகு – ஆலங்குடி

  • வீராசன நிலை – சென்னை திரிசூலம்

  • மிருதங்க தெட்சிணாமூர்த்தி – கழுகுமலை (தூத்துக்குடி)

  • யோகாசன மூர்த்தி – அனந்தபூர் (ஆந்திரா)

  • வீணா தெட்சிணாமூர்த்தி – நஞ்சன்கூடு (கர்நாடகா)

  • வியாக்யான தெட்சிணாமூர்த்தி – அகரம் கோவிந்தவாடி (காஞ்சிபுரம் அருகில்)

  • நந்தியுடன் தெட்சிணாமூர்த்தி – மயிலாடுதுறை வள்ளலார் கோயில்

  • நின்ற நிலையில் வீணையுடன் – திருத்தணி, நாகலாபுரம் வேதநாராயணர் கோயில்

குருவும் தக்‌ஷிணாமூர்த்தியும்

 குருவுக்கும் தக்‌ஷிணாமூர்த்திக்கும் உள்ள  வித்தியாசம் என்னவென்று அறிந்துகொள்ளுதல் அவசியமாகும்.  தக்‌ஷிணாமூர்த்தி என்பதற்கு தென்முகக் கடவுள் என்று பொருள். அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருப்பவர்.

நவகிரகங்களில் ஒருவரான வியாழ (குரு) பகவானின் திசை வடக்கு. திசையின் அடிப்படையிலேயே இருவரும் வேறுபடுகின்றனர். அதே போல வியாழனுக்கு உரிய நிறம் மஞ்சள்.  உரிய தானியம் கொண்டைக்கடலை. தக்‌ஷிணாமூர்த்தியோ வெண்ணிற ஆடையை உடுத்தியிருப்பவர்.  ஞானம் வேண்டி தக்‌ஷிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை முக்கியமில்லை. வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. 

 ஞானத்தை போதிக்கும் குருவாக சனகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே தக்‌ஷிணாமூர்த்தி. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராக காட்சியளிக்கும் இவர் ஆதிகுரு அல்லது ஞானகுரு என்று போற்றப்படுகிறார்

 தேவர்களின் சபையில் ஆச்சாரியனாக, தேவர்களுக்கு ஆசிரியராக பணி செய்பவர் வியாழன் என்று அழைக்கப்படும் ப்ரஹஸ்பதி. ஆசிரியர் தொழில் செய்வதால் இவரை குரு என்று அழைக்கின்றனர்.

ஞானகுரு வேறு, நவகிரக குரு வேறு என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. வியாழ பகவானுக்கு உரிய அதிதேவதை மருத்வந்தன் என்றும், ப்ரத்யதி தேவதை பிரம்மா என்றும் தெளிவாகச் சொல்கிறது வேதம். எந்த விதத்திலும் தக்‌ஷிணாமூர்த்தியோடு வியாழ (குரு) பகவானை சம்பந்தப்படுத்தி வேதத்திலோ, புராணங்களிலோ சொல்லப்படவில்லை.

லிங்கம்-வரலாறு, அமைப்பு, வகைகள் மற்றும் வழிபாடுகள்

ஆதியோகியும் ஆதிகுருவுமான சிவபெருமான் உரு, உரு-அரு, அரு(வம்) என்ற மூன்று விதங்களிலும் வழிபடப்படுபவர். தொன்மையான சிவஸ்தலமான சிதம்பரத்தில் தாண்டவக்கோனாகிய நடராஜப் பெருமான் உருவாகவும், ஸ்படிக லிங்கமாக உள்ள சந்திரமௌளீஸ்வரர் அரு-உருவாகவும், சிதம்பர ரகசியம் எனும் வெட்டவெளி அருவாகவும் மூன்று விதமாகவும் வழிபடப்படுகிறார். இது மட்டுமல்லாமல், தக்ஷிணாமூர்த்தி, பைரவர், லிங்கோத்பவர், பிக்ஷாடனர் போன்ற பல்வேறு வடிவங்களிலும் கூட சிவபெருமான் வழிபடப்படுகின்றார்.

சிந்து சமவெளி அகழ்வாய்வில் கிடைத்த லிங்க வடிவம்

எனினும் உலகம் முழுவதுமே சிவவழிபாட்டில் லிங்க வழிபாடு தான் முக்கியமானது. இந்தியாவிலும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை  பரவியுள்ள லிங்க வழிபாடு மிகவும் பழமையானது. 

ஹம்பி

 ரிக் வேதத்தில் லிங்கம் பற்றீய குறிப்புக்களோ சொல்லோ இல்லை மாரக ருத்ரன் என்னும் சொல் இடம்பெற்றுள்ளது. ஆனால் அதர்வவேதத்தில்  சொல்லப்பட்டிருக்கும் ஸ்தம்ப வழிபாடு என்பது லிங்கத்தின் வடிவையே குறிப்பதாக கொள்ளப்படுகின்றது. உபநிஷங்களில்தான் லிங்கம் எனும் சொல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தம்பமே புத்த ஸ்தூபிகளீன் வடிவினை அடிப்படியாக கொண்டு லிங்க வ்டிவாகி இருக்கலாமென்றும் ஒரு கருத்து நிலவுகின்றது.

புத்த ஸ்தூபி

சிந்துவெளி நாகரிகக் காலத்தில் இவ்வழிபாடு இருந்திருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. பிரயபாஸ் (Prayapas) என்ற பெயரில் ரோமானியர்கள் சிவலிங்க வடிவத்தை வணங்கி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ரோமானியர்களுக்கு முன்னர் சிவலிங்க வடிவத்தை பாபிலோனாவிலும், பண்டைய காலத்து நகரமான மெசபடோமியா (Mesopotamia), ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோவிலும் வழிபாட்டு வந்திருக்கிறார்கள். அயர்லாந்தில் ’ஊழின் கல்’ என்றழைக்கப்படும் லிங்க வடிவினை 500 வருஷங்களுக்கு முன்பே வணங்கி வந்திருக்கிறார்கள்.  

stone of Destiny-Ireland

தொல்காப்பியத்தில் ‘கந்தழி’ என்றும், சங்க இலக்கியங்களில் ‘கந்துடை நிலை’என்றும் சிவலிங்கம் சுட்டப்படுகின்றது.

சிவலிங்கம் என்றால் சிவனின் அருவுருவ திருமேனி அதாவது உருவத்திற்கும் அருவத்திற்கும் இடைப்பட்ட ஒரு அடையாளமேயாகும். இதை,

காணாத அருவினுக்கும், உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்

                                                                                  -என்கிறார் சேக்கிழார்.

லிங்க புராணத்தில் சிவலிங்கத்தின் மேற்பகுதி அண்ட சராசரங்களையும் கீற்பகுதி அண்டசராசங்களை தாங்கி நிற்கும்  அளப்பரிய சக்தியையும் குறிக்கும் என செல்லப்படுகிறது. சிவ புராணத்தில் சிவலிங்கத்தின் மேற்பகுதி சிறிதிற்கும் சிறிதான – பெரிதிற்கும் பெரிதான சகலத்தையும் உள்ளடக்கிய ஒரு ஸ்தம்பம் எனக் குறிப்பிடுகிறது.  இதனையே மாணிக்கவாசகர் ”அணுவிற்குள் அணுவாய் அப்பாலிற்கும் அப்பாலாய்’’ என கூறுகிறார்.

சிவலிங்க வடிவம் சுயம்புவாக உலகம் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய ஒன்றெனும் கருத்தும் உள்ளது. இயற்கையோடு இசைந்த, நாதமும், விந்துவும் அதாவது ஒலியும், ஒளியும் இணைந்த சிவசக்தித் தத்துவமே லிங்கமாகும். லிங்கம் என்பது புலன்களிற்கு எட்டாத பரம் பொருளிற்கு சின்னமாக அமைந்தது. உண்மையான தியானத்தில் மனதில் எழும் வடிவத்திற்கு லிங்கம் என்று பெயர் என உபநிஷதங்கள் சொல்கின்கிறன.  தவஞானிகளின் ஆற்றல்களாலும், மந்திர உச்சாடனங்களின் வழியாகவும் ஏற்படும் அதிர்வலைகளைத் தன்னுள்ளே ஈர்த்து வைத்துக்கொள்ளக் கூடிய பிரம்மாண்டமான பேராற்றல் இயற்கையிலேயே லிங்க வடிவத்திற்கு உள்ளது என அறிவியலும் சொல்கின்றது.

25 அடி உயர லிங்கம்-ஜிரோ பள்ளத்தாக்கு அருணாச்சலபிரதேசம்

  சுவாமி விவேகானந்தர் பிரான்ஸில் 1900  ல் நடந்த ’சமயங்களின் சரித்திரங்கள்’ என்ற மாநாட்டில் சிவலிங்கம் என்பது யுப ஸ்தம்பம் அல்லது யுப கம்பம் அதாவது வேதங்களின் சாரங்களை அடிப்படையாகக் கொண்ட மகா பிரம்மத்தின் அடையாளச் சின்னமே எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

லிங்கம் என்றால் அடையாளம் என்று பொருள். அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்வதாலும் லிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. பேரூழிக் காலத்தில் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் சிவலிங்கத்திற்குள்ளேயே ஒடுங்குகின்றன. சிருஷ்டி தொடங்கும்போதும் சிவலிங்கத்தில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன. தவிர பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் சிவலிங்க உருவம் வெளிப்படுகின்றன. மூவரின் ஆற்றலையும் உள்ளடக்கிய வடிவமே லிங்க வடிவம் என்கிறது ஸ்ரீருத்ரம்.


சிவதியானத்தில் முதல்படி நாம் வீடுகளில் வைத்திருக்கும் படங்களில் இருக்கும் சிவனின் உருவம். இரண்டாவது படி சிவசக்தியான அருவுருவத் திருமேனியான லிங்கத் திருவுருவம். மூன்றாவது படி அருவத் தியானம். இது ஒரு குருவின் மூலம் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டியது.  அருணகிரிநாதர் இதனால்தான் “அருவாய் உருவாய் குருவாய்” என அருளியுள்ளார்.


உருவமாய், அருவுருவமாய், அருவமாய் படிப்படியாக தியானம் செய்த ஒருவர் சிவோகம் என்கிற, அதாவது நானே சிவம் என்ற நிலையை அடைகிறார். இதைத்தான் அத்வைத விளக்கமான  “தத்துவ மஸி” — நான் அது ஆதல். “அஹம் பிரமாஸ்மி” – நானே கடவுள் என வேதங்களும் சொல்கின்றன. ’தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம், கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே ’ என்கிறது  திருமந்திரம்.

இமயமலையில் பனி லிங்கமாகவும், இயற்கையில் விளைந்த பாணலிங்கமாகவும் சிவலிங்கங்கள் உள்ளன. மார்க்கண்டேயருக்கு  என்றும் பதினாறு ஆயுளைக் கொடுத்தது சிவலிங்க வழிபாடேயாகும். வேடுவனாக இருந்த ஒருவனை கண்ணப்பராக்கியதும் சிவலிங்கமே!

லிங்க வடிவின் அமைப்பு

அடிப்பகுதி, நடுப்பகுதி, ஆவுடையார், மேல்பகுதி ஆகிய நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும் லிங்கம் ஆண் வடிவம், பெண் வடிவம் என்ற இரு வடிவங்கள் இணைந்தது. லிங்கத்தின் தண்டுபோன்ற தோற்றத்துடன் இருப்பது ஆண் வடிவமாகும். ஆவுடையார் எனப்படும் பெண் பாகத்தினுள் இந்த ஆண் வடிவம் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண் வடிவம் ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என்ற மூன்றாக பிரிக்கப்படுகிறது. ருத்ர பாகம் என்பது லிங்க வடிவின் மேல் பாகமாகும், நடுவில் உள்ளது விஷ்ணு பாகமாக விளங்குகிறது. அடிப்பகுதியாக இருப்பது பிரம்ம பாகம்.

ஆவுடையாருடன் இருக்கும் லிங்கத்தில் வெளியில் தெரியும ருத்ர பாகத்திற்கு மட்டுமே பூசைகள் நடைபெறுகின்றன.

இந்த ருத்ர பாகத்தின் மீது நீர் படும்படி  தாராபாத்திரம்  எனப்படும்  மூலவருக்கு மேல் தொங்கவிடப்பட்டிருக்கும் குடம்போன்ற பாத்திரத்தில் நீர் அல்லது பால் நிரப்பி லிங்கத்தின் மீது சொட்டும்படி அமைக்கப்படுகிறது. விஷ்ணு பாகம் ஆவுடையாருடன் பொருந்தியிருக்கும். இறுதியான பிரம்ம பாகம் முழுவதும் பூமியில் புதைக்கப்பட்டிருக்கும். எனவே, லிங்கம் என்பது மும்மூர்த்திகளின் வடிவாகும். ஆவுடையார் என்று அழைக்கப்பெறும் பாகமானது பெண் வடிவமாகும், இதற்கு சக்தி பாகம் என்று பெயர்.

’’பீடம் அம்பாயாம், சர்வம் சிவலிங்கஸ்ச சின்மயம்’’ என்று இதை விளக்குகின்றது சிவ புராண மந்திரம்

திருமுழுக்கு (அபிஷேகம்) செய்யும் போது, வழிந்தோடும் நீர் ஆவுடையார் வழியாகவே கொள்ளப்படும். ஆவுடையாருக்கு யோனி என்ற பெயரும் உண்டு..யோனி என்பதற்கு வழி, இடம் என்பது பொருள்!

“ஆத்ம யோனி ஸ்வயம் ஜாதோ, வைகான சம காயனக தேவகீ நந்தன ஸ்ரஷ்டா”
என்கிறது விஷ்ணு சகஸ்ரநாமம். “ஆத்ம யோனி” என்றால் ஆத்மா செல்லும் பாதை.

எல்லா சிவலிங்கத்திலும் ஆவுடையார் இருக்காது, மேல் பாகமான வெறும் லிங்கம் மட்டுமே கூட உண்டு. நர்மதை நதியில் இயற்கையாகக் கிடைக்கும் பாணலிங்க கற்கள் இந்த வகையைச் சேர்ந்தது. கல்லால் செய்யப்பட்ட ஆயிரம் சிவலிங்கங்களுக்கு, ஒரு ஸ்படிக லிங்கம் சமமானது. அதே போல் 12 லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு சமமானது ஒரு பாணலிங்கம் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள். பாணாசுரன், மந்திரங்கள் கொண்டு சிவ பூஜை செய்து வழிபட்டிருந்ததால்  அந்த லிங்கங்களில் எப்போதும் சிவசான்னித்தியம் இருப்பதாக ஐதீகம்.

பாணலிங்கம்

இராவணன் வழிபட்ட ஆத்ம லிங்கம் கூட இந்த வகை தான். நர்மதேஸ்வர சிவலிங்கம் எனப்படும் இவை கீறல் போன்ற ரேகையுடன், பளபளப்பாக, நீள் உருண்டை வடிவம் கொண்டதாக இருக்கின்றன. நாவற்பழத்தின் அடர்நிறம், தேன் நிறம், வண்டு நிறம், காவி, நீல, பச்சை, பழுப்பு  முதலிய பலவண்ணங்களில் பாணலிங்கம் இருக்கும்.

 திருப்பெருந்துறையில் மணிவாசகர் ஆலயத்தில் மேலே லிங்கமில்லாது வெறும் ஆவுடையார் மட்டும் இருக்கும்

சிவலிங்கத்தின் பீடமும் பலவகையான முறையில் அமைந்திருக்கும். பீடம் நாற்கோணமாயிருந்தால் இயக்கச் சத்தியாகும். பீடம் அறு கோணமாயிந்தால் கிடத்தற் சத்தியாகும். பீடம் வட்டமாயிருந்தால் இருத்தற் சத்தியாகும்

பிரம்ம பாகம், விஷ்ணு பாகம் ஆகியவை ஒரே அளவாகவும், ருத்ர பாகம் அவைகளைவிட இருமடங்கும் இருக்கும் லிங்கங்கள் வர்த்தமானக லிங்கம் எனப்படும்

ஆத்ய லிங்கம்  எனபவை பிரம்ம பாகம், விஷ்ணு பாகம், ருத்ர பாகம் ஆகியவை அனைத்தும் சம அளவு இருக்கும் லிங்கங்கள்.

சிவலிங்கத்தின் ருத்திர பாகமாகிய மேற்பகுதி உருண்டை அல்லது எட்டு மூலை அல்லது 16 மூலை என்ற முறையிலும் அமைவதுண்டு.

சிவலிங்கத்தின் உச்சி அமைப்பை அடிப்படையாகக் கொண்ட நான்கு வகை லிங்கங்களாவன;,

ஆட்யலிங்கம் – சிவலிங்கத்தின் உச்சி அர்த்த சந்திரன் வடிவில் இருக்கும்.

அநாட்யலிங்கம் – உச்சி வெள்ளரிப் பழம் போல் இருக்கும்.
சுரேட்யலிங்கம் – உச்சி கோழி முட்டை வடிவில் இருக்கும்.
சர்வசமலிங்கம் – உச்சி குடை வடிவில் இருக்கும்.

சர்வசமலிங்கத்தில் மட்டும் முகலிங்கங்கள் எனப்படும், நான்கு அல்லது ஐந்து முகங்களைக் கொண்ட லிங்கம் அமைக்கப்படும்.

சதாசிவமூர்த்தம் எனப்படும் சிவலிங்கம் ஈசானம் என்னும் நடு உச்சிமுகம், தற்புருடம் (கிழக்கு), அகோரம் (தெற்கு), வாமதேவம் (வடக்கு), சத்தியோசாதம் (மேற்கு) ஆகிய ஐந்து முகங்களைக் கொண்டதாகும்.

 நான்கு முகங்கள் கொண்ட சிவலிங்கம் – ஈசானம் என்னும் உச்சிமுகம் தவிர, ஏனைய  நான்கையும் கொண்டிருக்கும்

மும்முக லிங்கத்தில், தற்புருடம்,வாம்தேவம்,அகீரம் ஆகியவை மட்டுமே அமைந்திருக்கும்

இரண்டு முக லிங்கத்தில் தற்புருடம், சத்தியோசாதம் ஆகிய இரண்டு மட்டும் அமைந்திருக்கும் .

ஒருமுக லிங்கத்தில் தற்புருடம் மட்டும் இருக்கும். கிழக்கு நோக்கியுள்ள இந்த முகம் பொன் நிறமானது. கோயில்களில் ‘நிருதி’ என்னும் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள இவற்றை ‘நிருதி லிங்கம்’ என்பர். மனிதனை வாகனமாகக் கொண்டவர் நிருதி எனும் தேவன். அவரால் வழிபடப்படும் இந்த லிங்கத்தை வணங்குபவர்கள், ராஜயோகத்துடன், மனிதர்களை அடக்கி ஆளலாம் என்கிறார்கள்.

திருவண்ணாமலை அருணா சலேச்வரர் மூலஸ்தானம் அருகில் உள்ள நிருதி மூலையில் ஒருமுகலிங்கம் உள்ளது. சிதம்பரம் நடராஜர் சபையிலும் ஒருமுகலிங்கம் இருக்கிறது

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் லிங்கத்துக்கு முகம் இல்லா விட்டாலும், வெள்ளி, தங்கக் கவசங்களில் கண், மூக்கு, வாய் முதலியவற்றை அமைத்து அணிவிக்கிறார்கள். சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் கவசத்துடனான முகலிங்கம் உள்ளது.

.திருக்கோயில் கருவறையில் சிவலிங்கத்தின் மீது ஐந்துதலை நாகம் படம் எடுத்தாற்போல உலோகத்தால் அமைத்து வழிபடுவதும் பின்வரும் ஐந்து கலைகளைச் சுட்டுவதன் பொருட்டேயாகும்.

  1. ஆன்மாக்களைப் பாசத்திலிருந்து விடுவிக்கும் நிவிர்த்திக் கலை
  2. ஆன்மாக்களை முத்திக்குச் செலுத்தும் பிரதிட்டாக் கலை
  3. பந்த நிலை  நீங்கிய ஆன்மாக்களுக்கு அனுபவ ஞானத்தைக் கொடுக்கும் வித்தியா கலை
  4. அனுபவ ஞானம் பெற்ற ஆன்மாக்களுக்கு விருப்பு, வெறுப்பு முதலிய எல்லாவற்றையும் சாந்தமாகச் செய்வதற்கான சாந்தி கலை .
  5. விருப்பு, வெறுப்பு நீங்கிச் சாந்தமாக நின்ற ஆன்மாக்களுக்கு இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்ற நிலையை உண்டாக்கும் சாந்தியதீத கலை

தொன்மையான கோவில்களில் நான்முகலிங்கத்தினருகில் இரட்டைபாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்திருக்கும்  அமைப்பை அறிவியலாளர்கள் DNA Helix அமைப்புடன் ஒப்பிடுகிறார்கள்.  

சிவலிங்கத்திலேயே நமசிவாய என்ற மந்திரத்தை அமைத்துக் காட்டும் முறையும் உண்டு. மேற்குமுகம் ஆகிய சத்தியோசாதம் ‘ந’, வடக்கு முகம் ஆகிய வாமதேவம் ‘ம’, தெற்கு முகம் ஆகிய அகோரம் ‘சி’, கிழக்கு முகம் ஆகிய தற்புருடம் ‘வா’, உச்சி முகம் ஆகிய ஈசானம் ‘ய’ – என்ற ஐந்தெழுத்து, ஐந்து முகங்ளாயின.

  ..

சிவபெருமானை உருவ வழிபாடு செய்வதை விட, லிங்க ரூபத்தில் வழிபாடு செய்வதே சிறந்தது’ என்று மகாபாரதத்தில் வியாசர் அருளியிருக்கிறார்.  அண்ட சராசரங்கள் யாவும் ஒடுங்குவதும் மீண்டும் உற்பத்தியாகி வெளிப்படும் தன்மையும் கொண்டது  லிங்க வடிவங்கள் என்று சிவாகமங்கள் தெரிவிக்கின்றன.

அளப்பற்றிய ஆற்றலை பன்னெடுங்காலம் தன்னுள் இருத்தி காத்துவரும் ஆற்றலின் வடிவம லிங்கம்.. இக்கருத்து நவீன விஞ்ஞான யுகத்திலும் பொருந்தி வருவதை அணுக்கரு உலைகள்(Nuclear Reactors) லிங்க வடிவிலிருப்பதிலிருந்து அறிந்துகொள்ள முடியும்.

சிவலிங்கம் பற்றிய பல குறிப்புகள் லிங்க புராணம். சிவ புராணம், ஸ்கந்த புராணம் என எல்லாவற்றிலும் லிங்கத்தை பற்றிய வரலாறு உள்ளது! பிருகு முனிவரின் சாபத்தினால் ஈசனுக்கு உருவம் இல்லாத லிங்க வழிபாடு, பிரம்மனும் விஷ்ணுவும் அடி முடி காணாத அளவுக்கு ஓங்கிய தீப்பிழம்பு தான் லிங்க உருவம் ஆனது என்று பல கதைகள் வழங்கினாலும், அனைத்திலுமே லிங்கம் என்பது மிக உயர்ந்த அருவுருவக் குறியீடு என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.

“திருமூலர்” லிங்க வடிவத்தை   பல அழகிய தமிழ்ப் பாடல்களில் விளக்குகிறார்!

இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
இலிங்கம தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்தது உலகே”

அடுத்த பகுதியில் லிங்கங்களின் பல்வேறு வகைகளைக் குறித்து காணலாம்

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑