லோகமாதேவியின் பதிவுகள்

Month: August 2024

தம்பி விஜய் சந்திரசேகருக்கு,

உங்கள் த வெ கட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும். ஆனால் கட்சிக் கொடியில்  வெற்றிக்கு குறியீடு எனக்கருதி நீங்கள் பொறித்திருப்பது வாகை மலரல்ல ,அது தூங்கு வாகை, சீமை வாகை, பண்ணி வாகை,  செம்பட்டு வாகை,அயல் வாகை என்றெல்லாம் அழைக்கப்படும்  ஒரு அயல் மரத்தின் மலர்.

நம் முன்னோர்கள் வெற்றியின் போது சூடிக்கொண்டதும் அதன் பொருட்டு உருவான வாகை சூடல் என்னும் சொல்லாட்சியும் இம்மலரலினாலல்ல. அது அல்பிஸியா லெபெக் Albizia lebbeck என்னும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட வாகை மரத்தின் அழகிய இளம் பச்சை நிற மலர்கள்.

நீங்கள் வைத்திருப்பது சமன்னா சமன் –Samanea saman என்னும் தென் மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்விகமாக கொண்ட மரத்தின் இளஞ்சிவப்பு  மலர். 

உங்கள் கட்சியின் கொடியை டிகோடிங் செய்து கொண்டிருக்கும் உங்கள் ரசிகர்களில் யாருக்கும் தாவரவியல் தெரிந்திருக்க நியாயமில்லைதான் எனினும் கட்சிக்கொடியின் குறியீடுகளை தெரிவு செய்கையில் நீங்கள் கூகுளை சார்ந்திருக்காமல் தாவரவியலாளர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம்.

மேலும்  விழாக்களில் நீங்கள் யார் பக்கத்தில் அமர்கிறீர்கள் என்பதும் சமூக வெளியில் உற்று நோக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. சாதீய வன்முறையினால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் அருகிலும் திருநங்கை ஒருவரின் அருகிலும் அமர்ந்தது மூலம்  விளிம்பு நிலை  மக்களுக்கான தலைவர் நீங்கள் என்பதை காட்டியிருக்கிறீர்கள். அறிவியல் வெளியில் தாவரவியலும்  அழிவின் விளிம்பில் இருப்பதால்தான்  த   வெ க வின்  கட்சிச்சின்னம் குறித்த பிழையை இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.

கொடியின் 28 நட்சத்திரங்கள் குறிப்பிடும் 28 கொள்கைகளை பிற்பாடு அறிவிப்பீர்கள் என்று நம்புகிறேன். எனினும் ’’வாகைன்னா வெற்றி, விஜய்னாலும் வெற்றி’’ என ஆர்ப்பரிக்கும் உங்கள் ரசிகர்களுக்கு அது தென் அமெரிக்காவினரின் வெற்றியாகிவிடும் என்பதைச் சொல்லுங்கள். ஏனெனில்  தூங்கு வாகை இந்திய மரமல்ல அது தென் மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. அல்பிஸியா லெபெக் தான் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட நமது முன்னோர்கள் சூடிக்கொண்ட வாகைமலரை கொண்ட  மரம். 

எனக்கு அரசியல் நிலைப்பாடோ, அரசியல் குறித்த கூரிய பார்வையோ இல்லை, சுமாரான அல்லது மங்கலான பார்வை தான் இருக்கிறது. (நான் சொல்வது எனக்கிருக்கும் Keratoconus எனப்படும் அரிய  கண் கூம்புக் குறைபாட்டை அல்ல  என்பதை அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.)

நான் சொல்வது பொதுவானஅரசியல் அவதானிப்புப் பார்வையை. ஒரு முக்கிய கட்சிப் பிரமுகரின் சிலையை வீட்டு வாசலில்  எழுப்பி அதை மேற்படி தலைவரே வந்து திறந்து வைக்க அழைப்பு விடுத்து, அவருக்காக இரவுவரை காத்திருந்து அவர் பல வேலைகளில் இதை மறந்து விட்டதால் அவமானத்தால் சிலையை உடைத்து விட்டு அங்கேயே விஷமருந்தி, நிறைமாதக்  கர்ப்பிணியான  மனைவியை  விட்டுவிட்டு உயிரிழந்த  ஒருவரின் கொடிவழியில் வந்தவள் என்னும்  அளவுக்கே அரசியல் பார்வை இருக்கிறது.

ஏன் விஜய் சந்திரசேகர் என்றழைத்தேனென்றால்,  என் சொந்தத் தம்பியின் பெயரும் விஜய்தான் . அவனும் அடிக்கடி நான் பணிபுரியும் கல்லூரிக்கு வருவதால் அவன்தான் புதிய  கட்சி துவங்கி இருக்கிறான் என்று நினைத்து அவன் பின்னாலும் என்னை அறிந்த இளைஞர்கள் திரண்டால்  அவர்களைச் சமாளிக்கும் நல்மேய்ப்பன் அல்ல அவன் என்றுதான் உங்களின் மனஸ்தாபத்தையும் பொருட்படுத்தாமல் சந்திரசேகரையும் பின்னொட்டாகச் சேர்த்தேன். கட்சிக்கொடி வெளியீட்டு விழாவில் உங்கள் பெற்றோரும் முன்வரிசையில் அமர்ந்திருந்ததை உளவுத்துறையினரோடு சேர்ந்து நானும் உற்றுக்கவனித்தேன். மகிழ்ந்தேன்.

எனவே இந்தக் கட்சி கொடிச் சின்னத்தை மாற்றுவது தொடர்பாக உங்கள் முன்பாக இரு வாயில்களைத் திறந்து வைக்கிறேன். 

1. தவறை   ஒத்துக்கொண்டு சின்னத்தைச் சரியான வாகை  மலரைக் கொண்டு மாற்றுதல்.

 உங்கள் ரசிகத் தொண்டர்களுக்கு இத்தவறை மனப்பூர்வமாக    ஒத்துக்கொள்ளும் தலைவனாக உங்கள் தூய  மனதை திறந்துகாட்டும் ஒரு வாய்ப்பாக  இது  அமையலாம்.

2. ஒரு கட்சி தொடங்கப்பட்டால்  அதைகுறித்து எதையும் ஆராயாமல் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு அதில் இணையும் மரபு நமக்கிருப்பதால்   நுண்மையாகக் கட்சிக்கொடியின் சின்னம் தவறாக இருப்பதையெல்லாம் கவனித்திருக்க மாட்டார்கள், எனவே காதும் காதும் வைத்தது போல்  மலரையும் மலரையும் மாற்றி விடுங்கள்.

2026 என்பது  வெகுதூரத்தில் இல்லை , வியாழனுக்கும் வெள்ளிக்கும் இருக்கும்  தூரம்தான். எனவே நாளை த வெ க பெரும்பான்மையாக வாகை சூடி அரியணையில் அமரவேண்டி வரும் போது  உங்களின் எதிர்கட்சியினரும் பிறரும் அதிலிருப்பது அன்னிய தேச மலர் என்பதைக் கண்டுபிடித்துப் பெரும் சிக்கலை உருவாக்கலாம்.

 அப்போது அந்நிய நாட்டு சதி, அன்னிய நாட்டு நிதி என்றெல்லாம் சிக்கல்கள் எழக்கூடும், எனவே  ’’இளைதாக முள் மரம் கொல்க’’ அதாவது… இல்லை வேண்டாம் சுருக்கமாக சொல்கிறேனே தொடக்கத்திலேயே தவறை சரி செய்து விடுங்கள்.

உங்களுக்கு பகிரங்கக் கடிதம் எழுதியவகையில் நானும் நேரடி  அரசியலில் இறங்கி இருக்கிறேன் என்பதை இப்போதுதான் கவனிக்கிறேன். பகீரென்கிறது. ஒரு அரசுப்பணியாளராக நான் அரசியலில் ஈடுபடக்கூடாது  என்றுதான் நினைக்கிறேன்

இதைக் குறித்து கல்லூரிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் கேட்டுக்கொள்கிறேன்.அப்படி இது தவறான முன்னெடுப்பென்றால் என் பின்னால் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அணி திரளும் என்று நம்புகிறேன்,

நாங்கள்  அணி திரண்டு    போராடி  எங்களுக்கு வரவேண்டிய  பணிமேம்பாட்டு நிதியைக்கூட இதுவரை பெற்றதில்லை என்பதால் அரசு இந்த பிரச்னையையும்   கண்டுகொள்ளாது என்னும் நம்பிக்கையும் எனக்கிருக்கிறது.

தம்பி, ’’ அரியணை அமர்தல் போல் தீயூழ் பிறிதில்லை’’ என்கிறது வெண்முரசு. கட்சிக்கொடியை அறிவிப்பதன் வழியாக நீங்கள்  அதற்குத் தயாராகவே இருக்கிறீர்கள். அதற்கான மனக்கட்டியை தேவன் உங்களுக்கு அளிப்பாராக!.

உங்கள் கட்சிப்பாடலை கேட்டேன், மிகவும் சுமாராக இருக்கிறது. எழுச்சியூட்டும் படி இருந்தால் நல்லது என்பது என் அபிப்பிராயம்.

  வாகை என்றாலும், வெற்றி என்றாலும்,  விஜய் என்றாலும் ஒன்றுதான் எனவே  ’’ஜெய் விஜயீபவ” என்பதை ஏன் நீங்கள் உங்கள்  கட்சி முழக்கமாக வைத்துக்கொள்ளக் கூடாது?

சங்கீதாவுக்கும் குழந்தைகளுக்கும் என் அன்பை தெரிவியுங்கள்

 ’’ஜெய் விஜயீ பவ’’

இப்படிக்கு அன்பு அக்கா

லோகமாதேவி

ஜெய் விஜயீ பவ!

தம்பி விஜய் சந்திரசேகருக்கு,

உங்கள் த வெ கட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும். ஆனால் கட்சிக் கொடியில்  வெற்றிக்கு குறியீடு எனக்கருதி நீங்கள் பொறித்திருப்பது வாகை மலரல்ல ,அது தூங்கு வாகை, சீமை வாகை, பண்ணி வாகை,  செம்பட்டு வாகை,அயல் வாகை என்றெல்லாம் அழைக்கப்படும்  ஒரு அயல் மரத்தின் மலர்.

நம் முன்னோர்கள் வெற்றியின் போது சூடிக்கொண்டதும் அதன் பொருட்டு உருவான வாகை சூடல் என்னும் சொல்லாட்சியும் இம்மலரலினாலல்ல. அது அல்பிஸியா லெபெக் Albizia lebbeck என்னும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட வாகை மரத்தின் அழகிய இளம் பச்சை நிற மலர்கள்.

நீங்கள் வைத்திருப்பது சமன்னா சமன் –Samanea saman என்னும் தென் மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்விகமாக கொண்ட மரத்தின் இளஞ்சிவப்பு  மலர். 

உங்கள் கட்சியின் கொடியை டிகோடிங் செய்து கொண்டிருக்கும் உங்கள் ரசிகர்களில் யாருக்கும் தாவரவியல் தெரிந்திருக்க நியாயமில்லைதான் எனினும் கட்சிக்கொடியின் குறியீடுகளை தெரிவு செய்கையில் நீங்கள் கூகுளை சார்ந்திருக்காமல் தாவரவியலாளர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம்.

நீங்கள் கட்சிக்கொடி அறிமுக விழாவை பனையூரில் நிகழ்த்தியது  அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழகத்தின் மாநில மரமான பனையை காப்பாற்றத்தான் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

மேலும்  விழாக்களில் நீங்கள் யார் பக்கத்தில் அமர்கிறீர்கள் என்பதும் சமூக வெளியில் உற்று நோக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. சாதீய வன்முறையினால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் அருகிலும் திருநங்கை ஒருவரின் அருகிலும் அமர்ந்தது மூலம்  விளிம்பு நிலை  மக்களுக்கான தலைவர் நீங்கள் என்பதை காட்டியிருக்கிறீர்கள். அறிவியல் வெளியில் தாவரவியலும்  அழிவின் விளிம்பில் இருப்பதால்தான்  த   வெ க வின்  கட்சிச்சின்னம் குறித்த பிழையை இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.

கொடியின் 28 நட்சத்திரங்கள் குறிப்பிடும் 28 கொள்கைகளை பிற்பாடு அறிவிப்பீர்கள் என்று நம்புகிறேன். எனினும் ’’வாகைன்னா வெற்றி, விஜய்னாலும் வெற்றி’’ என ஆர்ப்பரிக்கும் உங்கள் ரசிகர்களுக்கு அது தென் அமெரிக்காவினரின் வெற்றியாகிவிடும் என்பதைச் சொல்லுங்கள். ஏனெனில்  தூங்கு வாகை இந்திய மரமல்ல அது தென் மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. அல்பிஸியா லெபெக் தான் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட நமது முன்னோர்கள் சூடிக்கொண்ட வாகைமலரை கொண்ட  மரம். 

மேலும் இந்த மரத்துக்குத் தூங்கு வாகை என்னும் பெயர் இருப்பதால் உங்கள் அரசியல் எதிரிகள் (? அதாவது  கட்சி வளருகையில் உருவாகும் சாத்தியமிருக்கும் எதிரிகள்) உங்களைத் தூங்கும் கட்சி என எள்ளி நகையாட வாய்ப்பளிக்காதீர்கள். 

இன்னொரு பெயரும் இருக்கிறது இம்மரத்துக்கு பண்ணி வாகை என்று. தமிழகத்தில் தமிழறியாதவர்களே பெரும்பான்மையாக இருப்பதால்அந்த மூணு சுழி ’ண்’  என்பதை இரண்டு சுழியாகக் கருதி உங்களை அவர்கள் வேறு வகையிலும் இழிவு படுத்தக்கூடும்.

மேலும் நீங்கள் யோசிக்கக்கூடும் ஏன் நான் விஜய் சந்திரசேகர் என்று நீங்கள் உபயோகிக்காத உங்கள் அப்பாவின் பெயருடன் உங்களைக் குறிப்பிட்டிருக்கிறேன் என்று. உஙகளுக்கும் அப்பாவுக்கும் மனஸ்தாபங்கள் இருப்பதை நானுமறிவேன், அதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான் ஏனெனில் நீங்கள் சிறுவனாயிருக்கையிலிருந்தே (செந்தூரப்பாண்டி க்கும்  முன்பு ) அப்பா உங்களை திரைக்குக் கொண்டு  வர அரும்பாடு பட்டதை  நானறிவேன். 

அவர் மீது எனக்கு நல்ல மரியாதை உண்டு. சட்டம் ஒரு இருட்டறையெல்லாம்   என்ன ஒரு படம். இங்கு  என்ன என்பது கேள்விக்குறியல்ல, ஆச்சர்யக்குறி என்பதையும்  அடிக்கோடிடுகிறேன்.  கதை ஷோபாம்மாவுடையது, திரைக்கதையும் இயக்கமும் உங்கள் அப்பாவுடையது. எப்பேர்ப்பட்ட வணிக வெற்றி வாகையை அது அடைந்தது ,எத்தனை  எத்தனை ரிமேக்குகள் கண்டது அது இல்லையா?

நீங்கள்  வாகையை தவறாகச் சித்தரித்ததில் மற்றொரு சிக்கலும் எழலாம் பல வெற்றிப்படங்களின் மூலம் வாகை சூடியவராகையால் உங்கள் தந்தையின் பெயர் வாகை சந்திரசேகர் என்று யாரேனும் எண்ணக்கூடும். அப்போது நீங்கள் தலையிட்டு அது ’’ஆறும் அது ஆழமில்லை’’ என்று ஒற்றைக்கையுடன்  ஏரிக்கரையில் பாடி   ரம்யா  கிருஷ்ணனை  குற்ற  உணர்வில் கொல்பவர் என்று விளக்கமளிக்க வேண்டி இருக்கும்.

 உங்களின் குடும்ப விஷயத்தில் நான்  அதிகம் தலையிடக் கூடாது  அது நாகரீகமல்லை, எனினும் இப்போது இந்தக் குறைந்த  பட்ச தலையீடென்பதை    பொதுவெளியில் இருக்கும் ஆளுமையாக நீங்கள் தவிர்க்க முடியாதது என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.  

எனக்கு அரசியல் நிலைப்பாடோ, அரசியல் குறித்த கூரிய பார்வையோ இல்லை, சுமாரான அல்லது மங்கலான பார்வை தான் இருக்கிறது. (நான் சொல்வது எனக்கிருக்கும் Keratoconus எனப்படும் அரிய  கண் கூம்புக் குறைபாட்டை அல்ல  என்பதை அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.)

நான் சொல்வது பொதுவானஅரசியல் அவதானிப்புப் பார்வையை. ஒரு முக்கிய கட்சிப் பிரமுகரின் சிலையை வீட்டு வாசலில்  எழுப்பி அதை மேற்படி தலைவரே வந்து திறந்து வைக்க அழைப்பு விடுத்து, அவருக்காக இரவுவரை காத்திருந்து அவர் பல வேலைகளில் இதை மறந்து விட்டதால் அவமானத்தால் சிலையை உடைத்து விட்டு அங்கேயே விஷமருந்தி, நிறைமாதக்  கர்ப்பிணியான  மனைவியை  விட்டுவிட்டு உயிரிழந்த  ஒருவரின் கொடிவழியில் வந்தவள் என்னும்  அளவுக்கே அரசியல் பார்வை இருக்கிறது.

ஏன் விஜய் சந்திரசேகர் என்றழைத்தேனென்றால்,  என் சொந்தத் தம்பியின் பெயரும் விஜய்தான் . அவனும் அடிக்கடி நான் பணிபுரியும் கல்லூரிக்கு வருவதால் அவன்தான் புதிய  கட்சி துவங்கி இருக்கிறான் என்று நினைத்து அவன் பின்னாலும் என்னை அறிந்த இளைஞர்கள் திரண்டால்  அவர்களைச் சமாளிக்கும் நல்மேய்ப்பன் அல்ல அவன் என்றுதான் உங்களின் மனஸ்தாபத்தையும் பொருட்படுத்தாமல் சந்திரசேகரையும் பின்னொட்டாகச் சேர்த்தேன். கட்சிக்கொடி வெளியீட்டு விழாவில் உங்கள் பெற்றோரும் முன்வரிசையில் அமர்ந்திருந்ததை உளவுத்துறையினரோடு சேர்ந்து நானும் உற்றுக்கவனித்தேன். மகிழ்ந்தேன்.

 நீர் அடித்து நீர் விலகுவதில்லைதானே தம்பி?

எனவே இந்தக் கட்சி கொடிச் சின்னத்தை மாற்றுவது தொடர்பாக உங்கள் முன்பாக இரு வாயில்களைத் திறந்து வைக்கிறேன். 

1. தவறை   ஒத்துக்கொண்டு சின்னத்தைச் சரியான வாகை  மலரைக் கொண்டு மாற்றுதல்.

 உங்கள் ரசிகத் தொண்டர்களுக்கு இத்தவறை மனப்பூர்வமாக    ஒத்துக்கொள்ளும் தலைவனாக உங்கள் தூய  மனதை திறந்துகாட்டும் ஒரு வாய்ப்பாக  இது  அமையலாம்.

2. ஒரு கட்சி தொடங்கப்பட்டால்  அதைகுறித்து எதையும் ஆராயாமல் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு அதில் இணையும் மரபு நமக்கிருப்பதால்   நுண்மையாகக் கட்சிக்கொடியின் சின்னம் தவறாக இருப்பதையெல்லாம் கவனித்திருக்க மாட்டார்கள், எனவே காதும் காதும் வைத்தது போல்  மலரையும் மலரையும் மாற்றி விடுங்கள்.

2026 என்பது  வெகுதூரத்தில் இல்லை , வியாழனுக்கும் வெள்ளிக்கும் இருக்கும்  தூரம்தான். எனவே நாளை த வெ க பெரும்பான்மையாக வாகை சூடி அரியணையில் அமரவேண்டி வரும் போது  உங்களின் எதிர்கட்சியினரும் பிறரும் அதிலிருப்பது அன்னிய தேச மலர் என்பதைக் கண்டுபிடித்துப் பெரும் சிக்கலை உருவாக்கலாம்.

 அப்போது அந்நிய நாட்டு சதி, அன்னிய நாட்டு நிதி என்றெல்லாம் சிக்கல்கள் எழக்கூடும், எனவே  ’’இளைதாக முள் மரம் கொல்க’’ அதாவது… இல்லை வேண்டாம், கடிதம் மிக நீண்டு விடும், சுருக்கமாக சொல்கிறேனே தொடக்கத்திலேயே தவறை சரி செய்து விடுங்கள்.

தமிழக அரசியல் என்னும் சந்தனக்குழம்பில் கால் வைத்து  விட்டீர்கள் எனவே இப்படியானவற்றில் நீங்கள் கவனத்துடனிருக்க வேண்டும்.

  கட்சிக்கொடியை அறிவித்தவுடனே இத்தனை சிக்கலா என நினைக்காதீர்கள், ஒரு அரசியல்வாதி என்பவர்  அரசியல்  கட்சி துவங்கி, அரசியல் பழம் தின்று கொட்டை போட்டவர் மட்டுமல்ல. கட்சிக்கொடியை   அறிவித்தவர்கள், அரசியல்வாதியாவதை கற்பனை செய்துகொள்பவர்களுமே அரசியல்வாதிகள்தான்.

 எனவே அரசியல்வாதியான உங்களுக்குச் சமூக ஊடகத்தில் பகிரங்கக் கடிதம் எழுதியவகையில் நானும் நேரடி  அரசியலில் இறங்கி இருக்கிறேன் என்பதை இப்போதுதான் கவனிக்கிறேன். பகீரென்கிறது. ஒரு அரசுப்பணியாளராக நான் அரசியலில் ஈடுபடக்கூடாது  என்றுதான் நினைக்கிறேன்

இதைக் குறித்து கல்லூரிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் கேட்டுக்கொள்கிறேன்.அப்படி இது தவறான முன்னெடுப்பென்றால் என் பின்னால் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அணி திரளும் என்று நம்புகிறேன்,

நாங்கள்  அணி திரண்டு    போராடி  எங்களுக்கு வரவேண்டிய  பணிமேம்பாட்டு நிதியைக்கூட இதுவரை பெற்றதில்லை என்பதால் அரசு இந்த பிரச்னையையும்   கண்டுகொள்ளாது என்னும் நம்பிக்கையும் எனக்கிருக்கிறது.

தம்பி, ’’ அரியணை அமர்தல் போல் தீயூழ் பிறிதில்லை’’ என்கிறது வெண்முரசு. கட்சிக்கொடியை அறிவிப்பதன் வழியாக நீங்கள்  அதற்குத் தயாராகவே இருக்கிறீர்கள். அதற்கான மனக்கட்டியை தேவன் உங்களுக்கு அளிப்பாராக!.

உங்கள் கட்சிப்பாடலை கேட்டேன், மிகவும் சுமாராக இருக்கிறது. எழுச்சியூட்டும் படி இருந்தால் நல்லது என்பது என் அபிப்பிராயம்.

  வாகை என்றாலும், வெற்றி என்றாலும்,  விஜய் என்றாலும் ஒன்றுதான் எனவே  ’’ஜெய் விஜயீபவ” என்பதை ஏன் நீங்கள் உங்கள்  கட்சி முழக்கமாக வைத்துக்கொள்ளக் கூடாது?

உங்களை கடிதத்தின் தொடக்கத்தில்  அன்புத்தம்பி எனக் குறிப்பிடவில்லை என்பதை  கவனித்திருப்பீர்கள், எங்கள் மீது அன்பிருந்தால் லியோ, சுறா மாதிரியான திரைப்படங்களை எங்களுக்கு அளித்திருப்பீர்களா?

ஆனால் எனக்கு உங்களின் மீது மூத்த சகோதரியாக அன்பிருப்பதால்தான்  இதையெல்லாம் இடித்துரைத்திருக்கிறேன் 

சங்கீதாவுக்கும் குழந்தைகளுக்கும் என் அன்பை தெரிவியுங்கள்

 ’’ஜெய் விஜயீ பவ’’

இப்படிக்கு அன்பு அக்கா

லோகமாதேவி

சுநீதி, நிர்மலா மற்றும்  நூரி!

 ஆகஸ்ட் 11, 2024  No Comments

சென்னை காட்பாடி இரவு ரயிலில் நிர்மலாவும் அவரது கணவரும்  கையில் வைத்திருந்த ஒரு சிறிய பெட்டியுடன் ஏறினார்கள். பெட்டியில் ஐஸ் துண்டங்களுக்கு மத்தியில்  ரத்த மாதிரிகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சீரம்   80 சோதனைக்குழாய்களில்  பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது. அதிகாலை வேலூர் போய்ச் சேர்ந்த இருவரும் அங்கிருந்து ஆட்டோவில் வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரிக்கு (CMC) சென்றனர்.

அங்கு  வைராலஜி துறையின் இயக்குநர் ஜேகப் (Jacob T John) அவர்களுக்காகக் காத்திருந்தார். நிர்மலா கொண்டு வந்திருந்த  மாதிரிகளைச் சோதனை செய்ய உதவிக்கு ஜார்ஜ் பாபு மற்றும் எரிக் சைமோஸ் (P George Babu and Eric Simoes) ஆகியோரை அனுப்பினார்.

அப்போது சென்னையில் ELISA சோதனை செய்யும் ஆய்வகங்கள் இல்லை எனவேதான் நிர்மலா வேலூர் வந்திருந்தார்.  காலை 8.30-லிருந்து சோதனைகள் ஆரம்பமாகின. நிர்மலாவின் கணவர் ஆய்வகத்துக்கு வெளியே பொறுமையாகக் காத்திருந்தார். மூவரும் மும்முரமாக ஆய்வைத் தொடர்ந்தனர். மதியம் மின்சாரம் தடைப்பட்ட போதுதான்  ஒரு சிறு இடைவெளி எடுத்துக் கொண்டு ஆய்வகத்திலிருந்து வெளியே சென்று  அனைவரும் தேநீர் அருந்தினார்கள். 

தேநீர்க் கடையிலிருந்து திரும்பி ஆய்வகத்துக்குள் முதலில் நுழைந்து, 80  மாதிரிகள் இருந்த அந்த  ELISA சோதனையின் தட்டுப் போன்ற அமைப்பின் மூடியை மெல்ல தூக்கிய ஜார்ஜ் பாபு, அதிர்ந்துபோய் உடனே அதை மூடினார். 

நிர்மலா அதன் அருகே சென்றதும் ’’விளையாடாதீர்கள் எடுக்க வேண்டாம்’’ என்று  ஜார்ஜ் பாபு எச்சரித்தார். ஆனால் அதற்குள் அதில் 6 மாதிரிகள் மஞ்சள் நிறமாகி இருந்ததை  நிர்மலா  பார்த்துவிட்டார். இந்த ஆய்வின் துவக்கத்திலிருந்தே இதை ஆரம்பிக்கக் காரணமாயிருந்த Dr.சுநீதியும், Dr நிர்மலாவும் இந்த முடிவுகள் இப்படி வராது என்றே நினைத்திருந்தனர். ஆனால்  அந்த 6 மாதிரிகள் இந்தியாவுக்குள் நுழைந்திருந்த பேராபத்தை அடையாளம் காட்டி இருந்தன.

பின்னர்  வந்த சைமோஸ் இதை அறிந்ததும் இயக்குநரை அழைக்க ஓடினார்.  அடுத்த நிமிடம் இயக்குனர் ஜேகப் அங்கே வந்தார். அந்த 6 மாதிரிகளும் அவர்கள் அனைவரின் முகத்திலும் அதிர்ச்சியை உண்டாக்கி இருந்தன.

ஜேகப் நிர்மலாவிடம் அப்போதுதான் ’’இந்த ரத்த மாதிரிகளை எங்கிருந்து எடுத்தீர்கள்’’? என்று கேட்டார்.

நிர்மலா அவற்றைச் சென்னையின் பாலியல் தொழில் செய்யும் பெண்களிடமிருந்து பெற்றதை சொன்னார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஜேகப் நிர்மலாவிடமும் அவரின் கணவரிடமும் அந்தச் சோதனையின் முடிவுகள் குறித்து உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கும் வரை ரகசியம் காக்கும் படி அறிவுறுத்தினார்.

அவர்கள் இருவரும் அதிர்ச்சி நீங்காமலேயே சென்னை திரும்பினார்கள். சென்னை வந்த உடனேயே நிர்மலா சுநீதியை சந்தித்து 6 மாதிரிகள் நிறம் மாறியதை தெரிவித்தார்.

ஆபத்தை உணர்ந்து கொண்ட சுநீதி உடனடியாக அந்த 6 பெண்களிடமும் மீண்டும் ரத்த மாதிரிகளைப் பெற்றுக்கொண்டு, அவற்றை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றார். அமெரிக்காவில் அந்த ரத்த மாதிரிகளில்  நடந்த  Western Blot ஆய்வு இந்தியாவில் எய்ட்ஸ் அறிமுகமாயிருப்பதை  உறுதி செய்தது.

உடனடியாக அந்த  முக்கியமான செய்தி அப்போதைய பாரத பிரதமர் ராஜீவ் காந்திக்கும் தமிழக சுகாதார அமைச்சர் எச்,வி ஹண்டேவுக்கும் தெரிவிக்கப்பட்டது. எச்,வி ஹண்டே தமிழக சட்டசபையில்  இதை அறிவித்தபோது பார்வையாளர்கள் அமரும் இடத்தில் சுநீதியும் நிர்மலாவும் இருந்தனர்.

38 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் எய்ட்ஸ் இருப்பதை சுநீதி, நிர்மலா என்னும் இந்த இரு பெண்களும் தான் முதலில் கண்டறிந்தவர்கள்.

1981, 82-ல்தான் எய்ட்ஸ் இருப்பது உலகுக்கு தெரியவந்தது.   அதிகாரபூர்வமாக   எய்ட்ஸ் தொற்று இருப்பது 1981, ஜூன் 5 அன்று அட்லாண்டாவில் இயங்கும் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்திலிருந்து அறிவிக்கப்பட்டது. 

18981-ல் லாஸ் ஏஞ்சலீஸ் மருத்துவமனையில் ஐந்து ஓரினச் சேர்க்கையாளர்களான இளைஞர்கள் அரிய வகை நிமோனியா மற்றும் சருமப்புற்றுக்காகச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். (Pneumocystis pneumonia (PCP) &  Kaposi’s sarcoma) அவர்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி மிக மிகக் குறைவாக இருந்தது.   மேலும் சில  மருத்துவமனைகளிலும் இப்படியான சிகிச்சைக்கு தொடர்ந்து இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டபோது,  இந்த உடல்நிலை பிரத்யேகமாக  ஓரினச் சேர்கையாளர்களுக்கானது எனக் கருதப்பட்டு GRID-Gay related immune disease  என்று  பெயரிடப்பட்டது. எனினும் தொடர்ந்த 18 மாதங்களில் எல்லாத் தரப்பினருக்கும் இந்த அறிகுறிகள் தென்பட்டன. 

எனவே  1982, ஜூனில்  இது பாலுறவின் வழி பரவும் நோய் அறிகுறிகளின் தொகுப்பு (Syndrome) எனக் கண்டறியப்பட்டு அந்த ஆண்டு ஆகஸ்டில் இது எய்ட்ஸ் என  நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தால் பெயரிடப்பட்டது.

1983-லிருந்து  ஃபிரான்ஸின் பாஸ்டர் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களால் ஆராயப்பட்டு, LAV, HTLV-III, ARV  ஆகிய பெயர்களில்  எய்ட்ஸ் வைரஸ் குறிப்பிடப்பட்டது. ஆனால்   வைரஸை இனங்காணும் சர்வதேச அமைப்பு அந்தப் பெயர்களை நிராகரித்து எய்ட்ஸ் உருவாக்கும் வைரஸுக்கு  HIV என்னும் பெயரை இறுதியாகப் பரிந்துரைத்தது.

பிறகு உலகெங்கும் எய்ட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுக் கொண்டே இருந்தார்கள். எய்ட்ஸ் 1930-1950-களிலேயே இருந்ததும் முதல் எய்ட்ஸ் நோயாளி காங்கோவைச் சேர்ந்த பழங்குடியினத்தவர் என்பது முன்பே  வேறொரு நோயின் பொருட்டு எடுக்கப்பட்டு சேமிப்பில் இருந்த அவரது ரத்த மாதிரியிலிருந்து  பின்னர் உறுதி செய்யப்பட்டது.

1960-களில் மேற்கு ஆப்பிரிக்காவில் HIV-2 வகை வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. 

1983-க்கு பிறகு அடுத்தடுத்து உலகின் பல நாடுகளில்  எய்ட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு சிகிச்சைகளும் மருந்துகளுக்கான ஆராய்ச்சிகளும் முழுவேகத்தில் நடந்தன.

1985-ல் HIV வைரஸ் கண்டுபிடிப்பதற்கான சோதனையான ELISA (ELISA) பெருநகரங்கள் பலவற்றில் பயன்பாட்டுக்கு வந்தது. ரத்த வங்கிகளில் சேமிக்கப்பட்டிருக்கும் ரத்த வகைகளிலும் இந்த சோதனைமூலம் நோய்க்கிருமியைக் கண்டறிய முடிந்தது. 

உலகெங்கிலும் லட்சக்கணக்கானோர் இந்த வைரஸால்   பாதிக்கப்பட்டிருப்பதும் எய்ட்ஸ் ஒரு உலகளாவிய தொற்று (Pandemic) என்பதும் உறுதியானது. ஆனால் இந்தியாவில் எய்ட்ஸ் அப்போது கண்டறியப்பட்டு இருக்கவில்லை.

1984. 85-ல் உலகில் எய்ட்ஸ் தொற்று வேகமாகப் பரவிக் கொண்டிருக்கையில் இந்தியாவிலும்  எய்ட்ஸ் இருக்குமா என்னும் ஆய்வுகள் மும்பை மற்றும் பூனேவில்  நடத்தப்பட்டன, ஆனால் அந்த ஆய்வின் முடிவுகள் இந்தியாவில் எய்ட்ஸ் இல்லை என்று தெரிவித்தன.

அப்போதுதான் 1985-ல் மருத்துவரான நிர்மலா   மருத்துவர் சுநீதியிடம் தனது நுண்ணுயிரியல் மேற்படிப்பின் ஆய்வுக்காக இணைந்திருந்தார். சர்வதேச சஞ்சிகைகளில் உலகின் பிற நாடுகளில் பரவிருந்த எய்ட்ஸ் குறித்து வாசித்தறிந்திருந்ததால், இந்தியாவிலும் எய்ட்ஸ் இருக்குமா என அறிய விரும்பிய சுநீதி ’Surveillance for Aids in Tamil Nadu’ என்னும் தலைப்பில் சென்னையில்  எய்ட்ஸ் இருக்கிறதா என்று நிர்மலாவிடம் ஆய்வு செய்யச் சொன்னார்.

38 வருடங்களுக்கு முன்னர் பக்தி, கூட்டுக்குடும்பம், பாலியல் ஒழுக்கம் இவற்றுக்கெல்லாம் உதாரணமாக இருந்த இந்தியாவில் எய்ட்ஸ் வருவதற்கு சாத்தியமே இல்லையெனக் கருதப்பட்டது.

அப்போது 32 வயதாக இருந்த பள்ளி செல்லும் இரு குழந்தைகளின் தாயான நிர்மலா ஒரு பாரம்பரிய இந்துக்குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது கணவர்  நிர்மலாவை அந்த மருத்துவ ஆய்வில் ஈடுபடச் சொல்லி  ஊக்குவித்தார். 

நிர்மலாவும் அந்த ஆய்வைத் தொடங்கும்போது இந்தியாவில் எய்ட்ஸ் இருக்கும் என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று என்றுதான் நம்பி இருந்தார்.

இந்திய நாளிதழ்கள் அப்போது எய்ட்ஸ் என்பது   கட்டட்ற்ற பாலியல் சுதந்திரமும், ஓரினச் சேர்க்கையாளர்களும் நிறைந்த   மேற்குலகின் நோய் என்றுதான் குறிப்பிட்டன.

மேலும் சில பத்திரிக்கைகள் அப்படி ஒருவேளை இந்தியாவுக்கு எய்ட்ஸ் வருமேயானால் அதற்குள் அமெரிக்கா அதற்குச் சிகிச்சையளிக்க மருந்தைக் கண்டுபிடித்து விடும் என்றும் எழுதின.

மும்பையிலும் புனேவிலும் நடந்த சோதனைகள் அங்கு எய்ட்ஸ் இல்லை என்று தெரிவித்ததால் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் எய்ட்ஸ் வர வாய்ப்பே இல்லை என்று தான் நம்பப்பட்டது.

இந்த ஆய்வுக்காக ஆப்பிரிக்க மாணவர்கள்,  போதை அடிமைகள்,பாலியல் தொழிலாளிகள் மற்றும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் இளைஞர்களிடமிருந்து  200 ரத்த மாதிரிகள் நிர்மலா சேகரிக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டது. 

ஆனால் அது நிர்மலாவிற்கு அத்தனை எளிதாக நடக்கவில்லை.  இந்த ஆய்வுக்கு முன்பு நிர்மலா நாய்கள் மற்றும் கொறித்துண்ணிகளுக்கு உண்டாகும் பாக்டீரிய நோயைக் குறித்து ஆய்வு செய்திருந்தார். எய்ட்ஸ் குறித்து அவருக்கு எதுவும் அப்போது தெரிந்திருக்கவில்லை. 

மும்பை போன்ற நகரங்களில் இருப்பதுபோலப் பாலியல் தொழிலுக்கென்று குறிப்பிட இடம் சென்னையில் இல்லை. எனவே  நிர்மலா சென்னை அரசுப் பொது  மருத்துவமனைக்குப் பால்வினை நோய்களுக்குச் சிகிச்சை பெற வரும் பாலியல் தொழில் செய்யும் பெண்களைத் தேடிச் சென்றார். 

மருத்துவமனைக்கு வந்த   பாலியல் தொழில் செய்யும் இரு பெண்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் நட்பும் கொண்ட நிர்மலா அவர்களின் உதவியுடன் பாலியல் தொழிலுக்காகக் கைதுசெய்யப்பட்டு, அவர்களில் பெயில் தொகை கட்ட வசதி இல்லாதவர்கள் திருந்தி வாழ்வதற்காகச் சேர்க்கப்பட்டிருக்கும் (vigilance home) அரசுக் காப்பகத்தில்  இருந்த பெண்களைச் சந்தித்தார்.

நிர்மலா எய்ட்ஸ் ஆய்வுக்கான ரத்த மாதிரிகளைப் பல இடர்பாடுகளுக்கு மத்தியில்  சேகரித்தார்.  அந்தப் பெண்கள் காப்பகத்திலிருந்து மொத்தம் 102 மாதிரிகளைச் சேகரித்த நிர்மலா ஓரினச்சேர்க்கையாளர்களின் ரத்த மாதிரிகளுக்காகச் சென்னை சிறைச்சாலைக்குச் சென்றார். அங்கும் பலத்த முயற்சிக்குப் பிறகு  21 ஓரினச்சேர்க்கையாளர்களின் ரத்த மாதிரியைப் பெற்றார்.

ஒரே ஊசியை மாற்றி மாற்றிப் போட்டுக்கொள்ளும் போதை அடிமைகளை நிர்மலாவால் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் ஒரு ரத்ததான நிகழ்ச்சிக்கு வந்திருந்த 9 வெளிநாட்டு மாணவர்களிடமிருந்து பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸுக்கான பரிசோதனைக்காக  ரத்த மாதிரி தேவைப்படுகிறது என்று உண்மையைச் சொல்லி ரத்தம் பெற்றுக்கொண்டார்.

ரத்த மாதிரிகளை சேகரிக்க நிர்மலா ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அங்கு வந்து விடுவார். நிர்மலாவை அரசுக்காப்பகத்தில்  அவரது கணவர் ஸ்கூட்டரில் கொண்டு வந்து இறக்கிவிடுவார். 80-களில் சென்னை போன்ற   பெருநகரில் தமிழ்க்குடும்பத்தின் திருமணமான பெண் இப்படியான ஆய்வில் ஈடுபட்டிருந்ததும், அதற்கு அந்தப் பெண்ணின் கணவர் உறுதுணையாக இருந்ததும் அரிதினும் அரிது.

மூன்று மாதங்களில் நிர்மலா தேவையான ரத்த மாதிரிகளைக் கையுறையோ வேறு எந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளோ இல்லாமல் சேகரித்தார்.  ரத்தம் அளித்த பெண்களிடம் நிர்மலா எய்ட்ஸுக்கான ஆராய்ச்சியைக் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அந்தப் பெண்களுக்கும் எய்ட்ஸ் குறித்து அப்போது எதுவும் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் பால்வினை நோய் சிகிச்சைக்கென நிர்மலா ரத்தம் சேகரிக்கிறார் என்றே நினைத்துக் கொண்டிருந்தனர். 

ஒருவேளை நிர்மலா எய்ட்ஸ் குறித்து சொல்லி இருந்தாலும் படிப்பறிவற்ற அந்த ஏழைப் பெண்களுக்கு அதைப் புரிந்து கொண்டிருக்க முடியாது.

எய்ட்ஸின் தீவிரம் அறியாத நிர்மலா, சேகரித்த ரத்த மாதிரிகளைத் தனது வீட்டில் குளிர்ச்சாதனப்பெட்டியில் வைத்திருந்து பின்னர் சுநீதியிடம் கொண்டு வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.

சுநீதியின் கணவர் சாலமன்   இதயம் மற்றும் நுரையீரல் சிறப்பு மருத்துவர். அவர் உதவியுடன் சுநீதி ஒரு சிறிய ஆய்வகத்தை உருவாக்கி இருந்தார் அந்த ஆய்வகத்தில் நிர்மலா சேகரித்த ரத்த மாதிரிகளின் சீரத்தை பிரித்தெடுத்து சுநீதி சேமித்து வைத்திருந்தார். அவற்றைத்தான்  வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரிக்கு நிர்மலாவும் அவரது கணவரும் கொண்டு சென்றனர்.

வேலூர் ஆய்வகத்தில் எலிஸா சோதனையில்  மஞ்சள் நிறமாக மாறி    எய்ட்ஸ் இருப்பதை காட்டிய அந்த 6 மாதிரிகளை மீண்டும் இரண்டு முறை நிர்மலா சோதித்து உறுதிப்படுத்திய பிறகுதான் சென்னை திரும்பிச் சுநீதியை சந்தித்தார்.

இரு பெண் ஆய்வாளர்களும் பலரின் கண்டனங்களையும் கேள்விகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார்கள். பலர் அப்படி எய்ட்ஸ் இந்தியாவில் இருக்க வாய்ப்பே இல்லை என்றார்கள். ஆய்வு தவறாகச் செய்யப்பட்டிருக்கிறது என்றும்  பலர் கருத்து தெரிவித்தார்கள்.

பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான் என்றாலும் மகாராஷ்டிர தோல் வியாபாரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால்   ’எப்படி ஒரு வட இந்தியப் பெண் தமிழகப் பெண்களின் ஒழுக்க குறைவினால் நோய் வந்ததாகத் தெரிவிக்கலாம்’ என்றும் பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. மருத்துவப்படிப்பு முடித்தபின்னர் சிகாகோவிலும் லண்டனிலும் பணியாற்றி விட்டே சுநீதி சென்னை மருத்துவ கல்லூரியின் நுண்ணுயிரியல் பிரிவில்  1973-ல் இணைந்தார்.  அவரது ஆய்வின் நோக்கம்  பல்லாயிரக்கணக்கானோரை காப்பாற்றுவதுதான் என்பது அப்போது பலரால் புரிந்து கொள்ள பட்டிருக்கவில்லை  

இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் தலைவர் நிர்மலாவிடன் ’’நீங்கள் கண்டுபிடித்திருப்பது கடலின் மேற்பரப்பில் தெரியும் பனி மலையின் உச்சியை மட்டும்தான், பேராபத்தை நாம் இனி வரும் காலங்களில் சந்திக்கவிருக்கிறோம்’’ என்றார்.

பொதுமக்களுக்கும் அரசுக்குமிருந்த அதே அதிர்ச்சி இதை வெளிக்கொண்டு வந்த இரு பெண்களுக்கும் இருந்தது. உடனடியாக நாடு தழுவிய எய்ட்ஸ் கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பு நிகழ்வுகள்  1900-லிருந்து 2000 வரை ஒருங்கமைக்கப்பட்டன. அதன் முடிவுகள் எய்ட்ஸ்  என்னும் பெருந்தொற்று இந்தியாவின் மூலை முடுக்குகள் எங்கும் பரவி இருந்ததை உறுதிப்படுத்தின.

மேலும் சில வாரங்கள் காப்பகங்களுக்கும் சிறைச்சாலைக்கும் சென்று ரத்த மாதிரிகளைச் சேகரித்து, ஆய்வைத் தொடர்ந்து நடத்திய நிர்மலா 1987-ல் Surveillance for Aids in Tamil Nadu -தமிழ்நாட்டில் எய்ட்ஸ் கண்காணிப்பு என்னும் தனது ஆய்வேட்டை சமர்ப்பித்து அதற்கான் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றார். பின்னர் சென்னை கிண்டியில் அமைந்துள்ள  கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆய்வு நிறுவனத்தின் தடுப்பூசி ஆராய்ச்சிப் பிரிவில் இணைந்து பணியாற்றி 2010-ல் பணி ஓய்வு பெற்றார். 

தகுந்த நேரத்தில் எய்ட்ஸ் இருப்பதை கண்டுபிடித்துப் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களின் உயிரைக் காப்பாற்றிய இத்தனை முக்கியமான ஆய்வுக்கான  அங்கீகாரம் உங்களுக்குக் கிடைக்காததில் வருத்தம் இல்லையா? என்று கேட்கப்பட்டபோது நிர்மலா ‘’நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள் இப்படி அங்கீகாரங்கள் குறித்தெல்லாம் யோசித்ததில்லை சமுதாயத்துக்கு ஏதோ ஒன்றை செய்யமுடிந்த மகிழ்ச்சியே எனக்குப் போதும்’’ என்றார்.

அச்சமயத்தில் ஒரு சில நாளேடுகள் நிர்மலாவையும் சுநீதியையும் குறிப்பிட்டு  கட்டுரை வெளியிட்டது. சுநீதிக்கு கெளரவ டாக்டர் பட்டமும், தமிழகத்தின்  எய்ட்ஸ் அமைப்புகள் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியவையும் பிற்பாடு அளிக்கப்பட்டது. சுநீதியின் மறைவுக்குப் பிறகு தான் அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ அளிக்கப்பட்டது. சுநீதியும் நிர்மலாவும் மருத்துவ வரலாற்றிலும்  பொது சமூகத்திலும் பின்னர் மறக்கப்பட்டார்கள்.  

நிர்மலா சேகரித்த  6 ரத்த மாதிரிகளில் ஒன்று 13 வயதே ஆன ஒரு சிறுமியுடையது. கடத்தப்பட்டு பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்டு இருந்த அந்தச்  சிறுமி இந்த ஆய்வு முடிவுகள் வெளியான சில மாதங்களில் நோய் முற்றி மரணம் அடைந்தாள்.

அந்த முதல் 6 பெண்களில் நூரி என்னும் திருநங்கையும் இருந்தார் அவர் அந்த முடிவுகளுக்குப் பிறகு எப்படி எய்ட்ஸ் வந்தது என்னும் விசாரணையில் தாங்கள்  கடுமையாகத் தண்டிக்கப்பட்டதை இப்போதும் கசப்புடன் நினைவுகூறுகிறார்.

தமிழகத்தின் ராமநாதபுரத்தில் முகமது என்னும் பெயரில் இருந்த நூரி தனது 4-வது வயதிலிருந்தே தனக்குள் பெண்மையை உணரத் தொடங்கி இருந்தார். அவரது பெண்மை உணர்வை, நடவடிக்கைகளைச் சரியாக்க அவரின் அப்பா  கடும் வன்முறையைப் பிரயோகித்தார். 13 வயதில் அந்த வன்முறையின் குரூரத்தை தாங்க  முடியாமல் சென்னைக்கு ஓடி வந்த நூரி பிழைக்க வழி இல்லாமல் பாலியல் தொழிலுக்குத் தள்ளப் பட்டார்.

 நூரியின் அந்த இருள் நிறைந்த நாட்களின் ஒரே வெளிச்சக்கீற்றாக ஒரு ராணுவ வீரரின் காதல் இருந்தது. முறையாகப் பாலினமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறிய நூரி அவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த மகிழ்சியும் அதிக காலம் நீடிக்கவில்லை அவரது கணவர் அந்தமான் பகுதிக்குப் பணி மாற்றம்  செய்யப்பட்டபோது நூரி அவருடன் செல்லாமல் சென்னையில் தங்கிவிட்டார் 

அப்போதுதான் சுநீதியின் ஆய்வுக்கென நூரியின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. நூரி தனக்கு எய்ட்ஸ் இருப்பது தெரியவந்த அந்த 1987-ன் ஜுலை 22-ம் , நாளை மறக்க முடியாமல் நினைவில் வைத்திருக்கிறார்.  

அதிகபட்சமாக இன்னும் இரண்டு வருடங்கள் தான் உயிர் வாழ முடியும் என்னும் செய்தியும் பேரிடியாக அவர்மேல் அப்போது விழுந்தது. மனம் உடைந்து போனவரைத் தேற்றி அரவணைத்துக் கொண்டது  உஷா ராகவன் என்னும் மருத்துவர்.  சிகிச்சை எடுத்துக்கொண்ட  நூரியை தையல் வேலையில் சேர்த்து  மாதம் 750 ரூபாய் வருமானம் கிடைக்க வழி செய்தார் உஷா ராகவன்

உஷா ராகவனுடன் இணைந்து நூரி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். ஒரு மருத்துவமனையில் உதவியாளராக இருந்த   நூரி அங்கு பணிபுரிந்த மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின் பேரில்   தானே சொந்தமாக எய்ட்ஸ்  நோயாளிகளின்   நலனுக்காக     2001 அக்டோபர் 10 அன்று  South India Positive (SIP) Network என்னும் அரசு சாரா அமைப்பை  முறையாகப் பதிவு செய்து உருவாக்கினார். 

அந்த அமைப்பின் மூலம் இன்று வரை நூரி எய்ட்ஸ் இருப்போருக்கு ஆரோக்கிய வழிகாட்டல், சிகிச்சை, கைத்தொழில் பயிற்சி மற்றும் நிலையான  வருமானத்துக்கு உதவி பலரை பாலியல் தொழிலிருந்தும் மீட்டிருக்கிறார்.

எய்ட்ஸினால் இறந்து போன தனது மூன்று தோழிகளான  செல்வி, இந்திரா  மற்றும் பழனி ஆகியோரின் நினைவாக ஒரு அறக்கட்டளையையும் நூரி உருவாக்கி இருக்கிறார். 

மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் நூரி இப்போது தென்னிந்திய எய்ட்ஸ் விழிப்புணர்வு அமைப்பின் தலைவராக இருக்கிறார். நூரியின் 2 அறைகள் மட்டும் கொண்டிருக்கும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான அலுவலகம் முழுக்க எய்ட்ஸ் தினத்திலும் சர்வதேச மகளிர் தினத்திலும் திருநங்கயர் தினத்திலும்  அவருக்கு  அளிக்கப்பட்ட பல்வேறு விருதுகளும் பதக்கங்களும் பரிசுகளும் நிறைந்திருக்கிறது.

நூரிக்கு 2005-ல் வந்த ஒரு தகவல் அவரது சேவை அமைப்பை மேலும் விரிவாக்கியது. குப்பைத்தொட்டியில் ஒரு குழந்தை கிடப்பதாகச் செய்திவந்தவுடன் நூரி  அங்கு சென்று, பிறந்து 2 நாட்களாயிருந்த அந்தப்பெண் குழந்தையை எடுத்துக்கொண்டார். அதனருகில் இருந்த கடிதத்தில் அதன் தாய்க்கு எய்ட்ஸ் இருந்த தகவல் எழுதப்பட்டிருந்தது.

இளமைப்பருவம் என்ற ஒன்று இல்லாத தன் வாழ்க்கையின் பிழையீடாக அந்தக் குழந்தையை நன்றாக வளர்க்க முடிவு செய்த நூரி உடனடியாக எய்ட்ஸ் இருக்கும் குழந்தைகளுக்காக ஒரு அமைப்பையும் உருவாக்கினார். குழந்தைகள் நல அமைப்புடன் இணைந்து செயல்படும் இந்த அமைப்பு  200-க்கும் அதிகமான குழந்தைகளின் வளர்ச்சி, கல்வி மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை  பொறுப்பெடுத்துக் கொண்டிருக்கிறது.  

அவர்களில் பல பெண்கள் திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழ்கிறார்கள். அவர்களின் குழந்தைகளும் பேரக்குழந்தைகளுமாக நூரி ஒரு மகிழ்ச்சியான தாயும், பாட்டியும், கொள்ளுப்பாட்டியுமாக வாழ்கிறார்.

இப்போது எய்ட்ஸுக்கான சிகிச்சைகள் மேம்படுத்தப்பட்டு வாழ்நாளை நீட்டிக்கும் மருந்துகளும் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கிறது. இந்தியாவில் எய்ட்ஸ் கண்டுபிடிக்கப்பட்டபோது உச்சத்தை தொட்டிருந்த எய்ட்ஸ் இருப்போரின் எண்ணிக்கை இப்போது வெகுவாகக் குறைந்திருக்கிறது. கடந்த 25 வருடங்களில் எய்ட்ஸ் சிகிச்சை. தடுப்பு மற்றும் விழிப்புணர்வில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும்  எய்ட்ஸ் சிகிச்சை  பெறுவோர் கண்ணியக்குறைவாக நடத்தப்படுவதும் அவர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

2009-ல் ஒரு நேர்காணலில் சுநீதி எய்ட்ஸ் இருப்பவரைக் கொல்வது வைரஸ் மட்டுமல்ல இந்தச் சமூகம் அவர்களை நடத்தும் விதமும்தான் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தியாவின் எய்ட்ஸ் வரலாறை சுநீதிக்கு முன்னும் பின்னுமென இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம். 

அந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகு சுநீதி இந்தியாவின் முதல்  எய்ட்ஸ் ஆலோசனை மற்றும் சோதனைக்கான தன்னார்வ அமைப்பைச் சென்னை மருத்துவக் கல்லூரியில் துவங்கினார். 1988-93 வரையில் எய்ட்ஸ் வைரஸ்குறித்த கல்வி, சிகிச்சை மற்றும் விழிப்புணர்வில் இந்த அமைப்பு தீவிரமாகச் செயல்பட்டது  1993-ல் சுநீதி சொந்தமாக லாபநோக்கமற்ற  Y. R. Gaitonde Centre for AIDS Research and Education (YRGCARE) என்னும் அமைப்பைச் சென்னையில்   தோற்றுவித்தார். 

2015-ல் தனது 76-வது வயதில் கணையப் புற்று நோயினால் சுநீதி  மறைந்த பிறகு அவரது மகனும் மருத்துவருமான சுனில் சாலமன் அதை நிர்வகித்துத் தாயின் சேவையைத் தொடர்ந்து செய்கிறார். 

இந்த அமைப்பு எய்ட்ஸ் இருப்போரின் பள்ளிக்கல்வி,  நோய்த் தடுப்பு, சிகிச்சை, நிதியுதவி, வழிகாட்டுதல் இவற்றோடு எய்ட்ஸ் இருப்போருக்கான திருமண தகவல் மையத்தையும் நடத்துகிறது. இதுகுறித்து 2017-ல் வெளியான ஆவணப்படம் Lovesick பெரும் கவனம் பெற்றது.

எய்ட்ஸ் இருப்போருடன் கைகுலுக்கவும் கண்ணீர் துடைக்கவும் கூடத் தயங்கும் மறுக்கும் உலகில் சுநீதி அவர்களுக்கிடையே  மண உறவை அமைத்துக் கொடுத்தார். 3 பேருடன் துவங்கிய இந்த அமைப்பு இந்தியாவின் 28 மாநிலங்களில், பரவி விரிந்து ஆயிரக்கணக்கான பணியாளர்களுடன் இந்திய அரசு மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து எய்ட்ஸ் நோய்த் தடுப்பு சிகிச்சையில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறது. 2022-ல் அகார் வளர்ப்பு ஊடகத்தில் உருவங்கள் அமைக்கும் போட்டியில் சுநீதியின் உருவம பரஸ்மிதா என்பவரால் உருவாக்கப்பட்டிருந்தது. உலக அறிவியல் தளத்தில்  இந்திய நுண்ணுயிரியல் முக்கியமான இடத்திற்கு  கொண்டு வந்த சுநீதிக்கு இந்த அகார் ஊடக உருவ அமைப்பு பொருத்தமான கெளரவம் தான்.

2011-க்குப் பிறகு எய்ட்ஸ் தொற்றும் வேகம் வெகுவாகக் குறைந்திருந்தாலும், இப்போது இந்தியாவில் சுமார் 24 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் இருக்கிறது.

இவர்களில் 77%த்தினருக்கு தங்களுக்கு HIV தொற்று இருப்பது தெரிந்திருக்கிறது  65%த்தினர் எய்ட்ஸுக்கான சிகிச்சையை எடுத்துக்கொள்கின்றனர்  55%த்தினரின் உடலில் இருக்கும் HIV  வைரஸின் அளவு குறைக்கப்பட்டு அவர்களின் வாழ்நாள் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது

HIV மற்றும் எய்ட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டுத் திட்டத்தின் குறிக்கோளான 2025-ல் சிகிச்சை, உடலின் வைரஸ் அளவை குறைப்பது மற்றும் எய்ட்ஸ் குறித்த அறிதலை தொற்று இருப்பவர்களுக்கு உண்டாக்குவது  ஆகிய மூன்றிலும் 95%த்தை எட்டுவது என்னும் குறிக்கோளை நோக்கித்தான்  இந்தியாவும் பயணிக்கிறது. 

சுநீதி இந்தியாவில் எய்ட்ஸ் இருப்பதை அப்போது கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் ஆயிரக்கணக்கான பாலியல் தொழிலாளிகளும், பிராத்தல் அமைப்புக்களும், லட்சக்கணக்கில் வெளிமாநிலங்களில் வீட்டைப்பிரிந்து வேலை செய்வோரும் லாரி ஓட்டுநர்களுமாக எய்ட்ஸ் இந்தியாவில் பெருகி மாபெரும் அழிவைக் கொண்டு வந்திருக்கும் 

இப்போது எய்ட்ஸ் தொற்றுக்காளானவர்களை அதிகம் கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தாலும் தொற்று உண்டாகும் வேகம் மிகக்குறைவாகத்தான் இருக்கிறது. இதற்கு நிச்சயம் சுநீதி மிக முக்கியமான பங்களித்திருக்கிறார். நூரி சொல்வது போலச் சுநீதி அறிவியல் உலகின் முக்கியமான கண்டுபிடிப்பை மட்டும் செய்யவில்லை, ஆயிரக்கணக்கில் எய்ட்ஸ் தொற்றுக்காளானவர்கள் ஆரோக்கியமாக வாழவும் கற்றுக்கொடுத்தார்,

அறிவியல் கண்டுபிடிப்புகள் சாதனைகள் என்றால் மேரி க்யூரியைத் தவிர வேறு பெண்களின் நினைவு வருவதே இல்லை. அப்படி  வளர்ப்பு ஊடகங்களில் பயன்படும் அகார் அகாரை கண்டுபிடித்த ஃபேனி ஹெஸ்ஸி, DNA-வின் வடிவத்தை முதன் முதலில் கண்டுபிடித்த ரோஸலிண்ட், சூழியலை தனது ஓவியங்களில் முதன்முதலாகச் சித்தரித்த மரியாசிபில்லா போன்றோரின் நீண்ட வரிசையில் சுநீதியும் நிர்மலாவும் இருக்கிறார்கள்.

எய்ட்ஸ் இருப்போருடன் கைகுலுக்கவும் கண்ணீர் துடைக்கவும் தயங்கிய காலத்தில் அவர்களுக்குத் தொடர்ந்து வாழ நம்பிக்கை அளித்த சுநீதி, தனக்கு எய்ட்ஸ் இருந்தும் அதனுடன் போராடிக்கொண்டே தன்னைப் போன்றோருக்காகச் சேவை செய்யும் நூரி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு முக்கிய ஆய்வைச் செய்த நிறைவுடன் தனது வாழ்வை அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிர்மலா ஆகியோரை  தமிழ்நாட்டிலேயே பலர் அறிந்து கொள்ளாமல் இருப்பதும்.  இவர்களைத் தாமதமாக அறிந்துகொள்வதற்கான பிழையீடாகவும் தான் இந்தக் கட்டுரை உருவா கியது.

 .

மேலதிக தகவல்களுக்கு:

பெனிசிலியமும் பெனிசிலினும்!

கோக்கனட் க்ரூவ் இரவு விடுதி அன்று வழக்கத்துக்கு மாறாக நிரம்பியிருந்தது. அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டு ஒரு வருடமாயிருந்த 1942-ன் அந்த நவம்பரில் அமெரிக்கர்கள் நன்றி தெரிவிக்கும் வார இறுதி கொண்டாட்டத்தில் இருந்தார்கள். 

பாஸ்டனில் கோக்கனட் க்ரூவ் என்னும் அந்த இரவு விடுதி மிகப் பிரபலமானது. அங்குத் திரை நட்சத்திரங்களும் அரசியல் பிரமுகர்களும் பாடகர்களும் வழக்கமாகக் கூடுவார்கள். நவம்பர் 28 அன்று 600 பேர் மட்டும் இருக்க முடிந்த அந்த இடத்தில் போரிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு வந்திருந்த ராணுவ வீரர்களும், புதுமணத் தம்பதியினரும் பாடகர்களுமாகச் சுமார் ஆயிரம் பேர் கூடியிருந்தனர். 

சமீபத்தில் விரிவாக்கப்பட்ட தரைத்தளமும் ஒரு சிறு முதல்தளமும் கொண்டிருந்த அந்த விடுதியின் உரிமையாளர் நிழலுலக தாதாக்களுடன் தொடர்பில் இருந்தவர், எனவே அவ்விடுதிக்கான உரிமம் பெறப்பட்டிருக்கவில்லை, பாதுகாப்பு விதிமுறைகளும் வெகுவாக மீறப்பட்டிருந்தன. உலகப் போர் சமயமாதலால் தட்டுப்பாட்டில் இருந்த குளிரூட்டிகளில் பயன்படுத்தப்படும் ஃப்ரியானுக்கு (Freon) பதில் எளிதில் தீப்பிடிக்கும் மெத்தைல் குளோரைடு பயன்படுத்தப்பட்டிருந்தது.

தரைத்தளத்தின் விதானம் எடையற்ற காகித அட்டைகளால் உருவாக்கப்பட்டிருந்தது. அன்றைய கொண்டாட்டத்திற்கு விடுதி ஒரு கடற்கரை தீவைப் போலக் காட்சிப்படுத்தப் பட்டிருந்ததால் நியான், துணி, காகிதம் மற்றும் பிளாஸ்டிக்கால் செயற்கையாக உருவாக்கப்பட்ட, காய்ந்த ஓலைகள் இணைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்களும், தேங்காய்க் கொப்பரைகளில் அமைக்கப்பட்ட பிரகாசமான விளக்குகளுமாக விடுதி ஜொலித்தது.

தரைத்தளத்தின் ஒரு மூலையில் தன் காதலியை முத்தமிட விரும்பிய ஒரு இளம் ராணுவ வீரர் அங்கிருந்த பிரகாசமான குமிழ் விளக்கொன்றை கழட்டி அந்த இடத்தை இருட்டாக்கி இருந்தார்.

இரவு 10.15க்கு அந்த இருட்டான மூலையை கவனித்த மது பரிமாறிக்கொண்டிருந்த ஒருவர் தனக்கு உதவி செய்துகொண்டிருந்த 16 வயது சிறுவனான ஸ்டான்லியிடம் அந்த விளக்கை மீண்டும் மாட்டச்சொன்னார். இருட்டில் விளக்கைப் பொருத்த முயன்ற ஸ்டான்லி தீக்குச்சியை உரசி வெளிச்சம் உருவாக்கி அந்த விளக்கை மாட்டினான்.

தீக்குச்சியிலிருந்து பறந்த ஒரு தீப்பொறி காய்ந்த ஓலைகளில் பற்றி மளமளவென அந்த விடுதியின் விதானமும் தென்னை மரங்களும் பற்றிக்கொண்டன. கொண்டாட்டத்தில் இருந்தவர்கள் தீயை கவனிக்கும் முன்பு தீ முதல் தளத்துக்குப் பரவியது.

கூடுதலாக ஆட்கள் உள்ளே வரக் கூடாது என்பதற்காக வாசல் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. குளிர்சாதனப்பெட்டியின் மெத்தைல் குளோரைடும் பிளாஸ்டிக்கும் காகிதங்களுமாக 12 நிமிடங்களில் அந்த விடுதி முழுக்க தீக்கிரையானது. ஒரே ஒரு சிறு வாசல் வழியே தப்பிக்க முயன்றவர்களால் அந்த வாசலும் அடைபட்டு தீப்பிடித்த சிறிது நேரத்திலேயே அன்று மதியம் திருமணம் செய்து கொண்டிருந்த புதுமணத்தம்பதிகள், 15 வயதேயான ஒரு சிறுவன் உள்ளிட்ட 492 நபர்கள் உடல் கருகியும் விஷப்புகையை சுவாசித்தும் இடிபாடுகளில் சிக்கியும் உயிரிழந்தார்கள்.பலர் நாற்காலிகளில் உட்கார்ந்தபடி கையில் மதுக்கோப்பையுடன் அப்படியே இறந்திருந்தார்கள்.

எரிந்து கருகிய கோக்கனட் க்ரூவ் விடுதி.

பொதுமக்களும் காவல் துறையினரும் முழுவீச்சில் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். தப்பிப்பிழைத்த பலருக்கு தீவிரமான தீக்காயங்கள் இருந்தன.

1993- சிக்காகோவின் திரையரங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து 602 உயிர்களைப் பலி கொண்டது அதன் பிறகு அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான இரண்டாவது பெரிய தீ விபத்து இதுதான்.

தீக்காயமுற்று உயிருக்குப் போராடியவர்கள் மாசசூசெட்ஸ் (Massachusetts) பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். அந்தத் தீ விபத்து நடந்த உடனயே அரசு Merck பன்னாட்டு மருந்து நிறுவனத்தை எத்தனை பெனிசிலின் கையிருப்பில் இருக்கிறதோ அத்தனையையும் போஸ்டனுக்கு அனுப்ப உத்தரவிட்டது. அப்படியே கையிருப்பில் இருந்தவற்றை அனுப்பிய அந்நிறுவனம் மேலும் அதிக பெனிசிலினை தயாரிக்கவும் முனைந்தது.

இரவும் பகலுமாக மிகக்கடுமையாகப் பல பணியாளர்கள் உழைத்து 3 நாட்களுக்குப் பிறகு 1942 டிசம்பர் 1 அன்று ஒரு குளிரூட்டபட்ட வாகனத்தில் 32 லிட்டர் பெனிசிலின் ஊசி மருந்து நியூஜெர்ஸி மருந்து நிறுவன வளாகத்திலிருந்து போஸ்டனை நோக்கிப் பயணித்தது. அந்த வாகனத்துக்கு முன்னும் பின்னும் காவல் வாகனங்கள் பாதுகாப்பளித்து தொடர்ந்து வந்தன. அதிகாலை இருட்டில் அந்த வாகனத்தின் மருந்துகள் மாசசூசெட்ஸ் மருத்துவர்களால் பெறப்பட்டு உடனடியாகப் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஏறக்குறைய மரணத்தைச் சந்தித்திருந்த பலர் காப்பாற்றப்பட்டார்கள். மறுநாள் போஸ்டன் குளோப் மற்றும் டைம் நாளேடுகள் விலைமதிப்பற்ற அற்புத மருந்து எனப் பெனிசிலினைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டது.

இதுதான் பெனிசிலின் என்னும் முதல் நுண்ணுயிர்க்கொல்லி மருந்து அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களைக் காப்பாற்றிய முதல் நிகழ்வு. உலக மருத்துவ வரலாற்றின் மிக முக்கியமான சிகிச்சை அளிக்கப்பட காரணமாயிருந்த அந்த விபத்து பல முதல்முறையானவைகளை தொடங்கி வைத்தது பெனிசிலினின் முதல் பரவலான உபயோகம், விடுதிகள் அடுக்ககங்கள் மற்றும் கட்டிடங்களுக்கான முறையான பாதுகாப்பு விதிகளின் ஒழுங்கமைப்பு, மருத்துவமனைகளிலேயே செயல்பட துவங்கிய ரத்தவங்கிகள், எல்லாக் கட்டிடங்களிலும் அவசரகால வழிகள் அமைக்கப்படுவது ஆகியவை அப்போதிலிருந்துதான் கட்டாயமாக்கப்பட்டன.

அதன்பிறகு அமெரிக்க அதிபரின் நேரடிப் பார்வையில் உலகப் போர் வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பெருமளவில் பெனிசிலினை தயாரிக்க Merck, Squibb, Pfizer மற்றும் Lederle நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

I4 மாதங்களில் ஏராளமாகப் பெனிசிலின் தயாரிக்கப்பட்டு சந்தைப் படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் பல்லாயிரம் வீரர்களின் உயிரைப் பெனிசிலின் காப்பற்றியது. பெனிசிலின் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதோடு Merck, Pfizer, Glaxo and Sandoz போன்ற மிக முக்கியமான மருத்துவ மற்றும் அறிவியல் நிறுவனங்கள் உருவாகவும் உதவியது. மருத்துவ வரலாற்றின் இந்தக் குறிப்பிடத்தக்க நிகழ்வு அத்தனை எளிதில் நடந்துவிடவில்லை

உலகின் முதல் நுண்ணுயிர் எதிர்ப்பியான பெனிசிலினை 1928-ல் தற்செயலாகத்தான் அலெக்சாண்டர் ஃபிளெமிங் பெனிசிலியம் பூஞ்சையிலிருந்து கண்டறிந்தார்.

எனினும் நுண்ணுயிர் திர்ப்பிகளை அதற்கு முன்பே பலர் பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிரான சிகிச்சையில் உபயோகப்படுத்தி இருக்கின்றனர்.

பூஞ்சையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட முதல் இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பி பெனிசிலின்தான். ஆனால் 1910-ல் பெனிசிலின் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாகவே சால்வர்சன் (Salvarsan / 606) என்னும் சந்தைப்பெயரில் பால் எர்லிச், சா ஹசிரோ ஹட்டா (Paul Ehrlich & Sa Hachiro Hata) ஆகியோரால் நோயெதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங்.

சிபிலிஸ் என்னும் பால்வினை நோயை உருவாக்கும் பாக்டீரியாவுக்கு (Treponema pallidum) எதிரான சிகிச்சையில் சால்வர்சன் வெற்றிகரமான நுண்ணுயிரெதிர்ப்பியாகப் பயன்பாட்டில் இருந்தது. பெனிசிலின் புழக்கத்துக்கு வந்தபின்னர்தான் இதன் பயன்பாடு வெகுவாகக் குறைந்தது.

பண்டைய நாகரிகங்கள் பலவற்றில் பூஞ்சைகளைக்கொண்டு பாக்டீரியா தொற்றை குணமாக்குவது அதன் அறிவியல் அடிப்படை தெரியாமலேயே புழக்கத்தில் இருந்தது.

பண்டைய கிரேக்கம், இந்தியா மற்றும் எகிப்தில் சமையலறையில் பூசணம் பிடித்த நீலப்பச்சை நிறத்திலிருந்த ரொட்டித் துண்டுகளைச் சேமித்து வைத்திருந்து. வெட்டுக்காயங்கள், கொப்புளங்களுக்கு அதன் சிறு துண்டை நீரில் கரைத்துப் பூசி சிகிச்சையளிக்கப்பட்டது. 16-ம் நூற்றாண்டில் இந்தியா, எகிப்து மற்றும் கிரேக்கத்தில் போர் வீரர்களின் காயங்களுக்குப் பூசணம் பிடித்த ரொட்டித் துண்டுகளைக் கரைத்துப்பூசி சிகிச்சை அளித்தற்கான ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன. 

17-ம் நூற்றாண்டில் போலந்தில் சிலந்தி வலையையும் பூசணம் பிடித்த ரொட்டித்துண்டையும் குழைத்துப் பூசி பல வெட்டுக்காயங்களுக்கும் கொப்புளங்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டதை ஹென்ரிக் (henryk Sienkiewicz) அவரது ’’with fire and sword’’ என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். சிலந்தி வலையில் பூஞ்சைக்காளான் ஸ்போர்கள் சிக்கிக்கொண்டிருக்கும் என்பதை அவர்கள் எப்படியோ அறிந்திருந்தனர்.

இப்படி பூஞ்சைகளைக் கொண்டு சிகிச்சையளிப்பதை முதலாம் சார்லஸின் மருந்தாளுனரும், அரசாங்க தாவரவியலாளருமான ஜான் பார்கின்சன் 1640-ல் அவரது தியேட்ரம் பொட்டானிகம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். 

அறிவியல் ரீதியாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் கண்டுபிடிப்புக்கள் 1870-லிருந்தே ஐக்கியநாடுகளில் தொடங்கி இருந்தது. சர் ஜான் ஸ்காட் (Sir John Scott Burdon), உயிர்களின் தன்னிச்சையான தோற்றம்குறித்த ஆய்வுகளின்போது பூசணம் பிடித்த வளர்ப்பு ஊடகங்கள் பாக்டீரிய வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதை கண்டறிந்தார்.

இவரது அறிக்கைகளை வாசித்த (கிருமிநாசினியை கண்டு பிடித்தவரான) ஜோசஃப் லிஸ்டரும் (Joseph Lister), பூசணம் பிடித்த சிறுநீர் பாக்டீரியாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதை கண்டறிந்து தெரியப்படுத்தினார். அந்தப் பூஞ்சை Penicillium glaucum என்பதையும் 1871-ல் லிஸ்டர் கண்டறிந்தார், மேலும் இந்தப் பூஞ்சையின் நுண்ணுயிர் எதிர்க்கும் செயல்பாட்டை லிஸ்டர் மனிதர்களுக்கும் சோதனை செய்து பார்த்தார்.

1877-ல் எல்லென் ஜோன்ஸ் என்னும் பெண்மணியின் ஆறாக்காயங்களுக்கு பெனிசிலியம் க்ளாக்கம் பூஞ்சையை ஆய்வகத்தில் வளர்த்தி அதன் சாறெடுத்து அந்தக் களிம்பைப் பூசி குணப்படுத்திய லிஸ்டர் அவரது அந்தக் கண்டுபிடிப்பைப் பிரசுரிக்கவில்லை.

இவரைப்போலவே 1873-ல் வில்லியம் ராபர்ட்ஸ் (என்ஸைம் என்னும் பெயரை உருவாக்கியவர்) 1875-ல் ஜான் டிண்டல், 1876-ல் ராபர்ட் கோச், லூயி பாஸ்டர் ஆகியோரும் பூஞ்சைகள் பாக்டீரியாவுக்கு எதிராகச் செயல்படுவதை கண்டறிந்தார்கள். 

1895-ல் நேபிள்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவரான வின்சென்ஸோ (vincenzo tiberin) அர்சானோ (Arzano) பிரதேசத்தின் ஒரு குடிநீர்க்கிணற்றின் சுவர்களில் படிந்திருக்கும் பூஞ்சைகளைச் சுத்தம் செய்து அகற்றிய பின்னர் அந்த நீரைக் குடித்தவர்களுக்கு கடும் வயிற்றுப்போக்கும் வலியும் இருந்ததையும் மீண்டும் கிணற்றின் சுவர்களில் பூஞ்சை வளர்ந்த பின்னர் அப்படி வயிற்றுப்போக்கும் வலியும் ஒருபோதும் வராமலிருந்ததையும் கவனித்தார். தொடர்ந்த ஆய்வுகளுக்குப் பின்னர் கிணற்றுச்சுவரில் வளர்ந்த பூஞ்சைகள் பெனிசிலியம் மற்றும் அஸ்பர்ஜில்லஸ், இவை பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அழித்தன என்ற இவரின் ஆய்வறிக்கை யாருடைய கவனத்திற்கும் வரவில்லை. 

கனடாவை சேர்ந்த உயிரியலாளர் கிளிஃப் (A E Cliffe) 1908-ல் ஐரோப்பாவின் பெரும்பாலான பண்ணை வீடுகளின் சமையலறையில் பூசணம் பிடித்த கஞ்சியும் ரொட்டியும் சேமிக்கப்பட்டிருந்ததையும் காயங்கள், கீறல்கள், கொப்புளங்களுக்கு அதன் சிறு துண்டை நீரில் கரைத்து பூசி சிகிச்சை அளிக்கப்படுவதையும், அப்படி பூசிய பின்னர் அந்தக் காயம் விரைவில் ஆறிவிடுவதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

மத்திய ஐரோப்பாவில் பூசணம் பிடித்த தானியங்களைக் கொண்டு சமைக்கப்பட்ட கஞ்சியையும் இப்படி புண்களை ஆற்றும் சிகிச்சையில் பயன்படுத்தினர்.

1929-ல் பிரண்டா என்னும் பெண்ணின் முகத்தில் உண்டாகி இருந்த பாக்டீரியா தொற்று எந்தச் சிகிச்சைக்கும் கட்டுப்படாமல் அதிகரித்துக்கொண்டே போனபோது கடைசி முயற்சியாக அவர்களின் குடும்ப மருத்துவரான ஜேம்ஸ் (James Twomey) மாவுக்கஞ்சியை கொதிக்க வைத்துப் பல நாட்கள் ஆறவைத்து அது பூசணம் பிடித்தபின்னர் அந்தக் கஞ்சியை குழைத்து முகத்தில் பூசியபோது ஒரு வாரத்தில் அவள் முழுக்க குணமானாள். 1989-ல் பிரிட்டிஷ் நுண்ணுயிரியலாளர் மில்டன் (Milton Wainright) அந்தக் கஞ்சியில் வளர்ந்திருந்தது பெனிசிலியமாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.

பெனிசிலின் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங்கினால் கண்டுபிடிக்கப்பட்ட அதே காலகட்டத்தில் (1924) பெல்ஜிய பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆன்றே (Andre Gratia) மற்றும் சாரா (Sara Dath) பூஞ்சைகளின் பாக்டீரியாவுக்கெதிரான செயல்பாடுகுறித்து ஆய்வறிக்கை வெளியிட்டார்கள், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த வளர்ப்பு ஊடகம் தொலைந்துபோனது.

பெனிசிலின் கண்டறியப்படும் வரைக்கும் இந்த ஆய்வுகள் எந்த முக்கியத்துவமும் பெறவில்லை.

1921-ல் லண்டன் செயின்ட் மேரி மருத்துவமனை ஆய்வகத்தில் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் பணிபுரிந்துகொண்டிருந்தார் ஸ்காட்லாந்தின் இயற்கை அழகு மிகுந்த ஒரு பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த அவர் சூழலைக் கூர்ந்து கவனித்து ரசிக்கும் இயல்பை இளமையிலேயே பெற்றிருந்தார்.

நிதிப் பற்றாக்குறையால் மருத்துவம் படிக்க முடியாமல் இருந்த ஃபிளெமிங்கிற்கு அவரது உறவினர் ஒருவரின் சொத்து கிடைத்தபோது தாமதமாக மருத்துவ படிப்பில் சேர்ந்தார்.

மருத்துவப்படிப்பை முடித்தபிறகு, நோய்க்கிருமிகளுக்கெதிரான ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆல்ம்நாத் ரைட் என்பவரிடம் ஃபிளெமிங் உதவியாளராகச் சேர்ந்தார். சால்வர்ஸன் அப்போதுதான் சிபிலிஸ்க்கு எதிரான சிகிசையில் பயன் பட்டுக்கொண்டிருந்தது. ரைட் ஆய்வுக்குழுவினரின் முறிமருந்துகளால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருந்தனர், எனினும் அப்போது சிகிச்சையில் இருந்த ரசாயன நச்சுமுறி மருந்துகளால் இரத்தத்தின் வெள்ளையணுக்கள் அழிந்து இறப்பு மேலும் அதிகமாவதை ஃபிளெமிங் நிரூபித்தார்.

பக்க விளைவுகளற்ற நச்சு முறிமருந்துகளின் மீது ஃபிளெமிங்கின் கவனம் திரும்பியது. செயிண்ட் மேரி ஆய்வகத்தில் பணியில் இணைந்த ஃபிளெமிங் பல பெட்ரி தட்டுக்களில் நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களை வளர்த்து அவற்றிற்கெதிராகச் சீழ், கண்ணீர், உமிழ்நீர், சளி போன்ற உடல் திரவங்களின் செயல்திறனை ஆராயத் துவங்கினார். 1922-ல் அப்படியான ஒரு நச்சு முறிமருந்தான லைசோஸைம் நொதியை அவர் கண்டுபிடித்தார்,

அந்த ஆய்வின் ஒரு பகுதியாகத்தான் Staphylococcus aureus என்னும் பாக்டீரியா, ஊடகத்தில் வளரும் விதங்களில் இருந்த வேறுபாட்டை அவர் ஆராய்ந்து கொண்டிருந்தார். ஆய்வின் முடிவுகளை System of Bacteriology சஞ்சிகையில் கட்டுரையாகப் பிரசுரிக்கவும் ஒப்புக்கொண்டிருந்தார். ஆய்வகத்தில் பல பெட்ரி தட்டுக்களில் அந்தப் பாக்டீரியா வளர்ந்து கொண்டிருந்தது.

1928, ஆகஸ்ட்டில் தன் குடும்பத்தினருடன் விடுமுறைக்காகச் சொந்த ஊரான சஃபோல்க்’கிற்கு ஃபிளெமிங் சென்றிருந்தார். ஊருக்குப் போகும் முன்பு அந்தப் பாக்டீரியாக்கள் இருந்த பெட்ரி தட்டுக்களை சூரிய ஒளி படாத இடத்தில் மேசையில் வைத்துவிட்டு சென்றிருந்தார்.

விடுமுறைக் காலத்தில் பதவி உயர்வு அளிக்கப்பட்டு அந்த மருத்துவமனையின் உயர் பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்ததால் செப்டம்பர் 1-ம் தேதி புதிய பணியில் சேர ஃபிளெமிங் மருத்துவமனைக்குத் திரும்பினார். 

அவருடன் முன்பு மருத்துவ உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த டேனியலும் (Daniel Merlin Pryce) அன்று உடனிருந்தார். இருவருமாகப் பாக்டீரியாக்கள் வளர்ந்திருந்த பெட்ரி தட்டுக்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கையில் அவற்றில் ஒன்றின் மூடி திறந்திருந்ததையும் அந்தத் தட்டு முழுக்க நீலப்பச்சை பூசணம் பிடித்திருப்பதையும் டேனியல் பார்த்தார்.

அதை ஃபிளெமிங்கிற்கு அவர் சுட்டிக்காட்டியபோது பூஞ்சை வளர்ந்திருந்த அந்தத் தட்டில் பாக்டீரியா வளரவில்லை என்பதை இருவரும் கண்டார்கள். அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் அப்போது டேனியலிடம் ’’இது வேடிக்கையாக இருக்கிறது’’ என்றார். டேனியல் பதிலுக்கு ’ஆம் இப்படித்தான் நீங்கள் லைசோஸைமையும் கண்டுபிடித்தீர்கள்’’ என்றார்.

மீண்டும் விடுமுறையை தொடர்ந்த, அந்தக் கண்டுபிடிப்பின் தீவிரத்தை அப்போது உணர்ந்திருக்காத, ஃபிளெமிங் தன் ஆய்வகத்துக்கு செப்டம்பர் இறுதியில் திரும்பினார்.

முன்பு வளர்ந்திருந்த அந்த நீலப்பச்சை பூஞ்சையான பெனிசிலியத்தை உபயோகித்து மீண்டும் பாக்டீரியா வளர்ச்சியை ஆராய்ந்தபோது அந்தப் பெனிசிலியத்தின் ஏதோ ஒன்று பாக்டீரியாக்களை வளரவிடாமல் அழிப்பதை உறுதி செய்தார். 

தொடர்ந்து அந்த ஆராய்ச்சியில் பல வகையான பாக்டீரியாக்களை வளர்த்த அவர் இறுதியாகப் பெனிசிலியம், குறிப்பிட்ட சில பாக்டீரியாக்களுக்கு எதிராக மட்டும் செயல்புரிவதை உறுதி செய்தார். 

ஃபிளமிங் பாக்டீரியாக்களில் ஆராய்ச்சி செய்துவந்த வல்லுநர் என்பதால் பூஞ்சைகளைக் குறித்த அந்த ஆய்வில் அவரால் ஆழமாக ஈடுபடமுடியவைல்லை. பெனிசிலியத்தின் எது பாக்டீரியாக்களை அழிக்கிறது என்று அவருக்குத் தெரியவில்லை. இருந்தும் 1929, மார்ச் 7-ல் அந்தக் குறிப்பிட்ட (அப்போது ஆன்டிபயாடிக் என்று பெயரிடப்பட்டிருக்காத) ஒன்றுக்கு பெனிசிலின் என்று பெயரிட்டார். பிற்பாடு ஒரு நேர்காணலில் ’’ஏன் பெனிசிலின் என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்தீர்கள்?’’ என்ற கேள்விக்கு ’எப்படி டிஜிட்டாலிஸிலிருந்து டிஜிடாலின் கண்டுபிடிக்கப்பட்டதோ அதுபோலவே பெனிசிலியத்திலிருந்து பெனிசிலின்’ என்றார்.

ஆனால் ஃபிளெமிங் கண்டுபிடித்தது பெனிசிலியத்தின் எந்தச் சிற்றினம் என்பதில் குழப்பம் நிழவியது அது நொட்டேட்டம், ரூப்ரம், கிரைசோஜீனம், கிரைசோஜினத்திலேயே சிறிய கொனிடியாக்களை கொண்டது, சயனோஃபல்வம், மீலியாகிரைனம் அன்று பலர் பலவிதமாகக் குறிப்பிட்டார்கள்.

ஃபிளெமிங் இந்த ஆரய்ச்சியை குறித்து சக ஆராய்ச்சியாளர்களிடமும் நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டபோது யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை, மாறாக அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்று சொன்னார்கள். 

ஃபிளெமிங் 1929, பிப்ரவரி 13 அன்று இதைக் குறித்த ஆய்வுக்கட்டுரையை மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் முன்பாகச் சமர்ப்பித்து தனது கண்டுபிடிப்பையும் விளக்கினார், அந்தக் குழுவினர் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

மே 1929-ல் ஃபிளெமிங் மீண்டும் அந்த ஆராய்ச்சியைக் குறித்த கட்டுரையை British Journal of Experimental Pathology-க்கு அனுப்பினார். அந்தக் கட்டுரையில் பெனிசிலியத்தின் பாக்டீரியாவுக்கெதிரான செயல்பாட்டைக் குறித்து அதிக கவனம் கொண்டிருந்த ஃபிளெமிங் அதன் மருத்துவ உபயோகங்கள் குறித்த தனது தெளிவின்மையையும் குறிப்பிட்டிருந்தார்.

பெனிசிலின் தனியே பிரித்தெடுத்தல்

ஃபிளெமிங்கிற்கு வேதியியல் ஆய்வுகளில் அத்தனை பரிச்சயமில்லை அவரே ’’நான் ஒரு பாக்டீரியாலஜிஸ்ட் மட்டும்தான் வேதியியலாளரல்ல’’ என்று சொல்லியும் இருக்கிறார். எனவே பெனிசிலியம் பூஞ்சையின் வேதியியல் இயல்புகளை ஆராய டிசம்பர் 1928-ல் ஸ்டூவர்ட் (Stuart Craddock), என்பவரை ஆய்வக உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார். 

அடுத்து ஜனவரி 1929-ல் உயிர்வேதியியலாளரான ஃப்ரெட்ரிக்கையும் (Frederick Ridley) இணைத்துக்கொண்டார். ஆனால் பெனிசிலின் அடையவிருந்த உலகப்பிரசித்தி குறித்து எந்த யூகமும் இல்லாத இருவரும் ஃபிளெமிங்கை விட்டுவிட்டு வேறொரு ஆய்வகத்தில் பணியில் சேர்ந்து கொண்டனர்.

எனவே ஃபிளெமிங் பெனிசிலியத்தின் வேதிப்பண்புகளை ஆராயாமல் அப்படியே விட்டுவிட்டு அதன் உயிரியல் பண்புகளை மட்டும் ஆராய்ந்தார்.

ஆனால் ஆய்வகத்துக்கு வெளியே பெனிசிலியம் எப்படி பெட்ரி தட்டுகளுக்கு வந்திருக்கக்கூடும் எனப் பலவிதமான யூகங்கள் உருவாகின. ஃபிளெமிங் ஆய்வகத்தை அத்தனை தூய்மையாக வைத்திருக்காதவர் என்று அனைவருக்கும் தெரியும்.

ஒரு சாரார் ஃபிளெமிங் குடித்துவிட்டு கழுவ மறந்த காபி கோப்பையிலிருந்து பெனிசிலியம் உருவாகி இருக்கலாம் என்றார்கள். 1945-ல் ஃபிளெமிங் அந்தப் பூஞ்சையின் ஸ்போர்கள் பிரேய்ட் (Praed) சாலையை நோக்கித் திறந்திருந்த ஜன்னல் வழியே வந்திருக்க கூடும் என்றார். இந்த ஜன்னல் கருத்து அதன்பின்னர் பல கட்டுரைகளிலும் 1945-ல் வெளியான நூலான The Story of Penicillin -லும் இடம்பெற்றது எனினும் ஃபிளெமிங்கின் உதவியாளரான டேனியல் அந்த ஜன்னல் அப்போது மூடியே இருந்தது என்பதை பிற்பாடு தெரிவித்தார்.

அந்த இரண்டடுக்கு மாடி கட்டிடத்தின் மற்றொரு தளத்தில் பணிபுரிந்த ரொனால்டு (Ronald Hare) அந்த ஜன்னலின் முன்பாக இருந்த மிகக் கனமான மேசையினால் அந்த ஜன்னல் ஒருபோதும் திறக்கப்படவே இல்லை என்பதை 1970-ல் குறிப்பிட்டார்.

ஃபிளெமிங்கின் ஆய்வகம் இருந்த தளத்தின் கீழ்த் தளத்தில் இயங்கிய ஆய்வகத்தில் ஆஸ்துமாவுக்கு காரணமானவை என்று கருதப்பட்ட பெனிசிலியம் உள்ளிட்ட பல பூஞ்சைகளில் ஆய்வு நடந்தது, பூஞ்சைகள் பல பெட்ரி தட்டுக்களில் அங்கு வளர்க்கப்பட்டன. அந்த மருத்துவமனையில் அப்போதுதான் இணைந்திருந்த பூஞ்சையியலாளர் ஜான் பேட்ரிக் (John Patrick La Touche) பெனிசிலியத்தின் ஸ்போர்கள் காற்றில் பறந்து வந்து கதவு வழியே ஃபிளெமிங்கின் ஆய்வகத்துக்குள் நுழைந்திருக்கலாமென யூகித்தார். அவர் ஃபிளெமிங்கின் ஆய்வக பெட்ரி தட்டுக்களில் வளர்ந்திருந்தது பெனிசிலியம் ரூப்ரம் (Penicillium rubrum) என்பதை உறுதிப்படுத்தினார். ஆனால் அது நொட்டேட்டம்தான் என்னும் உறுதியான கருத்தும் நிலவியது.

பெனிசிலியம் பூஞ்சையின் சாற்றைக் கொண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஃபிளெமிங் அந்தப் பூஞ்சைச்சாறு பல பாக்டீரியாக்களுக்கு எதிராகச் செயல்புரிவதை அறிந்தார். அப்போது உலகெங்கிலும் பாக்டீரியா தொற்றுக்கெதிரான முறிமருந்துகளை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

1933-ல் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் நோயியல் பிரிவில் பணியாற்றிய ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளரான ஃப்ளோரேவிடம் (Howard Florey), வேதியியலளரான செயின் (Ernst boris chain) உதவியாளராக நுண்ணுயிர் எதிர்ப்பிகளை கண்டுபிடிக்கும் ஆய்வில் இணைந்தார். ஃப்ளொரே அவரிடம் ஃபிளெமிங் 1922-ல் கண்டுபிடித்திருந்த லைசோஸைமின் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகளை ஆராயச்சொல்லி இருந்தார்.

1929-ல் ஃபிளெமிங் பெனிசிலியம் பூஞ்சையின் பாக்டீரிய எதிர்ப்பைக் குறித்து எழுதிய பழைய கட்டுரையை இருவரும் வாசித்தார்கள். அதன்பின்னர், ஃப்ளோரேவும் செயினும் பெனிசிலினின் மருத்துவ உபயோகங்களை முன்கூட்டியே யூகித்தார்கள்

எனவே நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கண்டுபிடிக்கும் ஆராய்சிக்காக ராக்ஃபெல்லர் அறக்கட்டளையில் (Rockefeller Foundation) 25000 டாலர் உதவித்தொகையை பெற்று, ஒரு ஆராய்ச்சி குழுவை அமைத்து ஆய்வில் ஈடுபட்டார்கள். 

அக்குழுவில் அவர்கள் இருவருடன் நார்மன் ஹீட்லி (Norman Heatley) உள்ளிட்ட 6 பேர் இருந்தார்கள். அக்குழு பெனிசிலியம் ரூபென்ஸிலிருந்து (P. rubens) பழுப்புப் பொடியை உருவாக்கி அந்தப் பொடி பாக்டீரிய வளர்ச்சியை ஆய்வகத்திலும், பாக்டீரிய நோய்களை எலிகளிலும் குணமாக்கியதை கண்டறிந்தார்கள்.1939-ல் நடைபெற்ற இந்த ஆய்வுகளை 1940-ல் The Lancet மருத்துவ சஞ்சிகையில் இக்குழுவினர் வெளியிட்டனர்

1941-ல் பெனிசீலியம் பூஞ்சையிலிருந்து அதிக அளவில் பெனிசிலினை உற்பத்தி செய்யும் வழிமுறைகளை இக்குழு வெளியிட்டது.1942-ல் அக்குழு துய பெனிசிலினை பிரித்தெடுத்து அதன் மூலக்கூறு சூத்திரமான C24H32O10N2Ba என்பதையும் வெளியிட்டது.

இந்த மூலக்கூறு சூத்திரத்தில் பெனிசிலினின் சல்ஃபர் குறிப்பிடப் பட்டிருக்காததால் பல மாதங்களுக்குக் குழப்பம் நிலவியது. பின்னர் அதே குழு அந்த மூலக்கூறை திருத்தி C5H11O2SNHCl என்று சரியாக வெளியிட்டது. 

1942 ஜூனில் அக்குழு British Journal of Experimental Pathology- யில் வெளியிட்ட கட்டுரையில் இந்தத் தூய பெனிசிலின் பிரித்தெடுக்கப்பட்டதையும், அதன் பாக்டீரிய தொற்றுகளுக்கெதிரான மருத்துவ உபயோகங்களையும் விவரித்திருந்தது.

பெனிசிலினின் மருத்துவ சிகிச்சைகள்

ஜனவரி 1929-ல் ஃபிளெமிங்கின் உதவியாளராக இருந்த கிரடோக்கிற்கு மூக்கு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மூக்கினுள் பாக்டீரியத் தொற்று உண்டாகி இருந்தது. ஃபிளெமிங் அவருக்குப் பென்சிலின் ஊசியை அளித்தார் ஆனால் அவருக்கு அந்தச் சிகிச்சை பலனளிக்கவில்லை. பிற்பாடு அந்தத் தொற்று பெனிசிலினால் குணப்படுத்த முடியாத (Haemophilus influenzae) பாக்டீரியாவினால் உண்டானது என்பது தெரிய வந்தது.

நவம்பர் 1930-ல் இங்கிலாந்தின் தெற்குப் பகுதி மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த நோயியலாளரும் ஃபிளெமிங்கின் முன்னால் மாணவருமான பெய்னி (Cecil George Paine), ஃபிளெமிங்கிடமிருந்து பெனிசிலின் இருந்த பூஞ்சைச்சாற்றை கேட்டுப்பெற்று மூன்று குழந்தைகள் உட்பட சிலரின் கண் நோயைக் குணப்படுத்தினார்.

அதற்கு 9 வருடங்கள் கழித்துத்தான் ஆக்ஸ்போர்டு குழுவினர் 1940, ஆகஸ்ட் 24-ல் லேன்செட் சஞ்சிகையில் “Penicillin as a chemotherapeutic agent என்னும் ஆய்வுக்கட்டுரையில் பெனிசிலின் மருத்துவ உபயோகத்தை வெளியிட்டனர்.

அடுத்த ஆண்டு ரோஜா பாத்தியில் தலைகுப்புற விழுந்து முகமெங்கும் முட்கள் கிழித்த காயம் புரையோடிப்போன ஆல்பெர்ட் அலெக்ஸாண்டர் (Albert Alexander) என்னும் காவலர் இந்த ஆய்வுக்குழுவினரிடம் சிகிச்சைக்கென 1941 பிப்ரவரி 12 அன்று அழைத்து வரப்பட்டார்.

அவருக்கு முன்பு அளிக்கப்பட்ட அனைத்து வகையான சிகிச்சைகளும் பயனற்றுப்போய் முகம் மற்றும் தலையெங்கும் சீழ் பிடித்திருந்தது. மிக மோசமான பாக்டீரியத் தொற்றினால் பாதிக்கப்பட்டதால் அவரது ஒரு கண் அறுவை சிகிச்சையில் நீக்கப்பட்டிருந்தது.

அதுவரை மனிதர்களில் தீவிர சிகிச்சைக்கெனப் பெனிசிலினை உபயோகப்படுத்தி இருக்காத அக்குழுவினர் தயங்கினாலும் அலெக்ஸாண்டரின் கவலைக்கிடமான நிலையை உத்தேசித்து அவருக்குப் பெனிசிலினின் முதல் ஊசியை அளித்தார்கள்.

முதல் ஊசியிலேயே உடல்நிலையில் நலல முன்னேற்றம் இருந்தது எனினும் துரதிர்ஷ்டவசமாகப் பெனிசிலின் கையிருப்பு சில நாட்களுக்கு மட்டுமே இருந்ததால், ஐந்து நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது, மீண்டும் பெனிசிலினை உருவாக்கும் முயற்சியில் ஆய்வுக்குழுவினர் இருந்தபோது சிகிச்சை தொடராததால் அலெக்ஸாண்டர் 1941 மார்ச் 15 அன்று அன்று நோய் முற்றி மரணமடைந்தார்.

பிறகு கிடைத்த குறைந்த அளவிலான பெனிசிலினைக் கொண்டு அதிக மருந்து தேவைப்படாத குழந்தைகளுக்கு அக்குழுவினர் வெற்றிகரமாகச் சிகிச்சையளித்தனர். பெனிசிலின் மிக மிகக் குறைந்த அளவில் கிடைத்துக் கொண்டிருந்த இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பொதுமக்களுக்கும் ராணுவத்தினருக்கும் சிகிச்சை அளிக்கப் பெனிசிலின் தட்டுப்பாடு நிலவியது

1942 ஆகஸ்டில் முதல் வெற்றிகரமான பெனிசிலின் சிகிச்சை நடந்தது. நரம்பு மண்டலத்தில் தீவிரமான பாக்டீரியா தொற்று உருவாகி இருந்த ஹேரி (Harry Lambert) என்பவருக்கு ஃபிளெமிங் சிகிச்சை அளித்தார். ஃப்ளோரேவிடமிருந்து தூய பெனிசிலின் ஊசியைப் பெற்று ஃபிளெமிங் அவருக்கு முதுகுத்தண்டுவடத்தில் செலுத்தினார். மறுநாளே உடல்நிலையில் நல்ல முன்னேற்றமிருந்தது, ஹேரி ஒரு வாரத்தில் முழுக்க குணமடைந்தார். இந்தச் சிகிச்சையின் விவரங்களை 1943-ல் லேன்செட் சஞ்சிகையில் வெளியிட்டார்.

உடனே அரசு ஃபிளெமிங்கை தலைவராகக் கொண்ட பெனிசிலின் குழுவை அமைத்தது. அக்குழுவில் ஃப்ளோரேவும் ஹீட்லியும், செயினும் பிற விஞ்ஞானிகளும், மருந்து நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக இருந்தார்கள். 

ஃப்ளொரேயும் ஃபிளெமிங்கும் ஹீட்லியும் எத்தனை முயன்றும் மருந்து நிறுவனங்கள் பெனிசிலினை தயாரிக்க அதிகஅளவில் முன்வரவில்லை. ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் பெனிசிலினின் அளவுக்கும் பெனிசிலின் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கும் இடையே பெரிய இடைவெளி இருந்தது.

குழுவில் இருந்த நார்மன் ஹீட்லி உயிர்வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றிருந்தார். அந்த ஆய்வகத்தில் ஆராய்ச்சி மட்டுமல்லாது பெனிசிலின் தயாரிப்புக்கான எல்லா வேலைகளிலும் ஹீட்லி தன்னை மனமுவந்து ஈடுபடுத்திக்கொண்டார். மின்சாரப் பழுது, குழாய்கள் பதிப்பது இவற்றோடு மரவேலைகளைக்கூட அவர் செய்தார்.

பெனிசிலியம் வளர்க்க கொள்கலன்கள் பற்றாக்குறையானபோது ஹீட்லி நோயாளிகளின் கழிகலன்களில் கூடப் பெனிசிலியம் பூஞ்சையை வளர்த்தார்.

1940-ல் சீனக்களிமண்ணில் 500 வளர்ப்புக்கலங்களை வடிவமைத்து 6 பெண்களை உதவிக்கு அமர்த்திக்கொண்டு அவற்றில் பெனிசிலியத்தை வளர்த்தார். (அந்தப் பெண்கள் மருத்துவ வரலாற்றில் ‘penicillin girls’ எனக் குறிப்பிடப்பட்டனர்) 

வளர்ந்த பெனிசிலியத்திலிருந்து பெனிசிலினை பிரித்தெடுக்க அவரே தயிர் கடையும் மத்து, குடிநீர் பாட்டில்கள், ரப்பர் மற்றும் கண்ணாடிக் குழாய்களை இணைத்து ஒரு கருவியை வடிவமைத்தார். அதில் பெனிசிலின் தயாராகி புட்டி நிறைந்ததும் தெரிவிக்க ஒரு அழைப்பு மணியையும் இணைத்திருந்தார். அந்தக் கருவி 6 அடி உயரத்தில் ஒரு நூலகத்திலிருந்து வாங்கிவந்த புத்தக அலமாரியுடன் இணைத்து நிற்க வைக்கப்பட்டிருந்தது. 

1941-ல் ஹீட்லியின் இந்த ஆய்வகத் தயாரிப்பிலிருந்து மட்டுமே சுமார் 2 மில்லியன் யூனிட் பெனிசிலின் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் பின்னரே ஹீட்லியும் ஃப்ளோரேவும் அமெரிக்காவிற்கு பெனிசிலின் தொழிற்சாலை உற்பத்திக்கான பேச்சுவார்த்தைக்கெனப் புறப்பட்டுச் சென்றார்கள்.

போர்க்காலமென்பதால் ஃப்ளோரேயும் ஹீட்லியும் பெனிசிலியம் பூஞ்சையைச் சோதனைக்குழாய்களில் எடுத்துச்சென்றால் பிடிபடும் சாத்தியங்கள் இருந்தன. எனவே அவர்கள் இருவரும் அணிந்திருந்த கோட்டின் உட்புறத்தில் பெனிசிலியம் பூஞ்சையைத் தேய்த்துக்கொண்டு அமெரிக்காவிற்கு பயணித்தார்கள்.

அமெரிக்க மருந்து நிறுவனங்களின் முதலாளிகளைச் சந்தித்து பென்சிலின் தயாரிப்பின் சந்தை நிலவரத்தை விளக்கியபோது அவர்கள் வெகு ஆர்வமாக அதைத் தயாரிக்க முன்வந்தார்கள். 

எனினும் ஜூலை மாத இறுதியில் அந்தப் பெனிசிலியத்தின் சிற்றினமான நொட்டேட்டம் மிகக் குறைவாகவே பென்சிலினை அளித்தது. பூஞ்சையியலாளர் கென்னெத் (Kenneth Briyan Reper) பென்சிலியத்தின் பல சிற்றினங்களை மருந்து நிறுவனங்களுக்கு அளித்தார். 

பெனிசிலின் வரலாற்றில் குறிப்பிடப்படும் பெனிசிலியம் கிரைசோஜீனம் எனப்படும் பொன்னிறப் பூஞ்சை அப்போதுதான் பெனிசிலின் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டது. 

அந்தப் பெனிசிலியத்தை ஆய்வக உதவியாளர் மேரி கொண்டுவந்தார், அவரே பூசாண மேரி (Moldy mary) என்று புகழ்பெற்றார் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று சொல்லிய கென்னெத் அந்தப் பூசணம் பிடித்த பழம் அருகிலிருந்த பழக்கடையிலிருந்து ஒரு பெண்ணால் கொண்டு வரப்பட்டது என்றார். P. notatum சிற்றினத்தைவிட P. chrysogenum 6 மடங்கு அதிக பெனிசிலினை அளித்தது.

1941-லிருந்து 43-க்குள் கென்னெத்தும் பிற விஞ்ஞானிகளும் இணைந்து பெருமளவில் பெனிசிலின் தயாரிப்பதை சாத்தியமாக்கினார்கள். பின்னர் நடந்ததெல்லாம் வரலாறு 

1942, ஆகஸ்டில் ஃப்ளோரே streptococcal meningitis எனும் பாக்டீரியத் தொற்றினால் இறக்கும் தருவாயில் இருந்த ஒரு நோயாளியைப் பெனிசிலின் அளித்துக் குணப்படுத்தினார். இந்தச்செய்தியை வெளியிட்ட டைம்ஸ் நாளிதழ் ஆக்ஸ்ஃபோர்டிலிருந்து பெனிசிலின் உருவாகியதாகக் குறிப்பிட்டிருந்தது. ஃப்ளொரே, செயின் ஆகியோரின் பெயர்கள் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருக்கப்படவில்லை.

செயின்ட் மேரி மருத்துவமனையில் ஃபிளெமிங்கின் மேலதிகாரி உடனடியாகத் தலையிட்டு இந்த விஷயத்தில் ஃபிளெமிங்கிற்கே எல்லாப்புகழும் சேரவெண்டுமென நாளிதழ் அலுவலகத்தில் தெரிவித்தார். ஃபிளெமிங் மகிழ்ச்சியுடன் நிருபர்களுக்குப் பெனிசிலின் கண்டுபிடிப்பைக் குறித்து பேட்டியளித்தார்.

ஃப்ளோரே பேட்டியளிக்காததோடு ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சி குழுவினர் யாரும் எந்தப் பேட்டியும் கொடுக்கக் கூடாது என்று கட்டுப்பாடுகளையும் விதித்தார். எனவே பெனிசிலின் கண்டுபிடிப்பு முழுக்க ஃபிளெமிங் என்னும் ஒற்றை மனிதரால் தான் சாத்தியமானது எனும் சித்திரம் பொதுவெளியில் உருவானது. உண்மையில் ஃபிளெமிங் 1931-ல் பெனிசிலியம் குறித்த ஆய்வை நிறுத்திக்கொண்டார். அதன்பின்னர் புளோரேவும், செயினும்தான் முழுவீச்சில் அந்த ஆய்வில் இருந்தனர்.

அப்போதுதான் துரதிர்ஷ்டவசமாக 1942 நவம்பரில் கோக்கனட் க்ரூவ் தீவிபத்து உண்டாகி பெனிசிலினின் உயிர்காக்கும் செயல்பாடு உலகிற்கு தெரிய வந்தது.

பிற்பாடு காதலர்கள் ’’என்னை எல்லா துயரங்களிலும் இருந்து விடுவிக்கும் பெனிசிலின் நீ’’ என்றெல்லாம் கடிதம் எழுதிக்கொண்டார்கள்

பெனிசிலினின் வேதிவடிவம் 1942-ல் எட்வர்ட் ஆப்ரஹாமினால் (Edward Abrahaam) கண்டறியப்பட்டது. பின்னர் மூன்று வருடங்கள் கழித்து பெனிசிலினின் திருத்தப்பட்ட வேதிவடிவத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த டோரதி மேரி (Dorothy mary Hodgkin) கண்டறிந்தார். 

அதே சமயத்தில் பல பல்கலைக்கழகங்கள், மருந்து நிறுவனங்கள் மற்றும் ஆய்வுக்கூடங்களில் பெனிசிலினின் வேதி வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது.

அத்தனை முடிவுகளும் science இதழில் வெளிவந்த போதுதான் பல விதமான பெனிசிலின்கள் இருப்பதும் அவை அனைத்திற்கும் beta-lactam என்னும் வடிவம் பொதுவாக இருப்பதும் தெரியவந்தது.

ஐக்கிய பேரரசில் பெனிசிலின் Penicillin I, Penicillin II, Penicillin III மற்றும் Penicillin IV என அவை கண்டுபிடிக்கப்பட்ட காலத்தை வரிசைக்கிரமமாக ரோமானிய எண்களால் குறிப்பிடப்பட்டு பெயரிடப்பட்டது.

அமெரிக்க விஞ்ஞானிகள் பெனிசிலினை, F G, K, X என்று அவை எதிலிருந்து பெறப்பட்டதோ அதைக்குறிக்கும் ஆங்கில எழுத்துக்களுடன் குறிப்பிட்டார்கள்.

இப்படி பெனிசிலினுக்கு இரண்டு விதமான பெயர்கள் இருந்தது குழப்பத்தை உண்டு பண்ணியது.1948-ல் செயின் இந்தக் குழப்பத்தைப் போக்க ரோமானிய எண்களையும் ஆங்கில எழுத்துக்களையும் நீக்கிவிட்டு பெனிசிலினுக்கு பின்னொட்டாக அதன் வேறுபட்டிருக்கும் R பக்கச்சங்கிலியை குறிப்பிடலாம் என்னும் முறையை அறிமுகப்படுத்தினார்.

பின்னர் ஆஸ்திரியாவில் வாய்வழி மருந்தாக எடுத்துக் கொள்ளும் வடிவத்தில் பெனிசிலின் v 1952-ல் கண்டுபிடிக்கப்பட்டது. 1957-ல் வேதிப்பொருட்களிலிருந்து செயற்கை பெனிசிலின் தயாரிப்பும் கண்டறியப்பட்டது.

பெனிசிலினின் பெயரில், வேதி வடிவத்தில், மூலக்கூறு சூத்திரங்களில் குழப்பம் இருந்ததைப் போலவே பெனிசிலினுக்கு காப்புரிமை பெறுவதிலும் சிக்கல்களும் குழப்பங்களும் இருந்தன. 

செயின் பெனிசிலினுக்கு காப்புரிமை வாங்க முயன்றார். ஆனால் ஃப்ளோரேவும் பிறரும் அப்படி பெனிசிலின் கண்டுபிடிப்பை ஒருவர் சொந்தம் கொள்வது சரியல்ல பெனிசிலின் பொதுமக்களின் பயன்பாட்டில் இருக்க வேண்டும், காப்புரிமை பெற வேண்டியதில்லை என்று வாதிட்டனர்.

மேலும் பல முக்கியஸ்தர்களை செயின் சந்தித்து இதுகுறித்து கேட்டபோதும் பெனிசிலின் என்னும் உயிர்காக்கும் மருந்துக்கு அப்படி அவர் காப்புரிமை பெறுவது அறமற்ற செயல் என்றுதான் சொல்லப்பட்டது. மனம் தளராத செயின் மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தலைவரை அணுகினார் அவரும் அறமில்லாத செயல் என்று குறிப்பிட்ட பின்னர் செயின் அந்த முடிவைப் பல கசப்பான அனுபவங்களுக்குப் பின்னர் கைவிடுவதாக அறிவித்தார்.

1945-ல் மோயர் பெனிசிலியம் பூஞ்சையிலிருந்து பெனிசிலினை பெருமளவில் தொழிற்சாலைகளில் தயாரிக்கும் முறைகளுக்குக் காப்புரிமையை பிரிட்டிஷ் காப்புரிமை அலுவலகத்திலிருந்து பெற்று அமெரிக்க மருந்து நிறுவனங்களுக்கு விற்றார். 

இதைக்கேள்விப்பட்ட ஃபிளெமிங் “பெனிசிலினை நான் கண்டறிந்து மக்களின் நலனுக்காக அளித்தேன் அதை ஏன் இன்னொரு நாட்டின் லாபம் சம்பாதிக்கும் வணிக முதலாளிகளுக்கு அளிக்க வேண்டும்?“ என்று கேட்டார்.

பெனிசிலின் இரண்டம் உலகப்போரின் ஆயிரக்கணக்கான இறப்புக்களையும், ஆயிரக்கணக்கானோருக்கு ஆறாத புண்களால் கைகால்கள் வெட்டியகற்றப்படுவதையும் நிறுத்தியது. பெனிசிலின் கண்டுபிடிப்புக்காக ஃபிளெமிங், ஃப்ளோரே மற்றும் செயின் 1945-ல் நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டார்கள்.

ஃபிளெமிங் தனது நோபல் ஏற்புரையில் வருங்காலத்தில் பெனிசிலின் எல்லோரும் வாங்கக்கூடிய வகையில் மருந்துக்கடைகளில் கிடைக்கலாம் அப்போது அதைக் குறித்து அறிந்திருக்காத சாமான்யர்கள் பெனிசிலினை அதிகமாக உபயோகித்து பெனிசிலினால் எதிர்க்கப்படவேண்டிய பாக்டீரியாக்கள் பெனிசிலினுக்கான எதிர்ப்பைப் பெற்று விடும் அபாயம் இருப்பதாக எச்சரித்திருந்தார். அந்த ஆபத்து பின்னர் நிகழ்ந்து விட்டிருந்தது

அவர்களுக்கு நோபல் பரிசுடன் பலநூறு விருதுகளும் பாராட்டுகளும் அங்கீகாரங்களும் குவிந்தன. ஃபிளெமிங்கிற்கு ஆறாம் ஜார்ஜ் மன்னரால் நைட் பட்டம், 25 கெளரவ பட்டங்கள், 26 பதக்கங்கள், 18 விருதுகள், 13 அலங்கார பதக்கங்கள்,89 அறிவியல் அமைப்புக்களின் உறுப்பினர் பதவிகள் ஆகியவை அளிக்கப்பட்டன.

1999-ம் ஆண்டில் டைம் சஞ்சிகை வெளியிட்ட 20-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான 100 நபர்களின் பட்டியலில் ஃபிளெமிங் இருந்தார். 2002 ஆம் ஆண்டில் பிபிசியால் மக்களின் வாக்களிப்பின் மூலம் தேர்வுசெய்யப்பட்ட பிரித்தானியாவின் முக்கியமான 100 நபர்களின் பட்டியலிலும் ஃபிளெமிங் இருந்தார். செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களின் சுற்றுப்பாதைக்கு இடையே அமைந்துள்ள ஒரு சிறுகோளுக்கு 91006 ஃபிளெமிங் எனப் பெயரிடப்பட்டது. 

பாராட்டுகளிலும் புகழிலும் ஆர்வமற்றிருந்த ஃப்ளோரேவுக்கு நைட் பட்டம் அளிக்கப்பட்டது. எடின்பர்க் பலக்லைக்கழகத்தின் கேமரூன் பரிசு, லிஸ்டர் பதக்கம், பல்வெறு பல்கலைக்கழகங்களின் கெளரவ பட்டங்கள், ராயல் மருத்துவ சொஸைட்டியின் தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல கெளரவங்கள் அளிக்கபட்டன.

செயினும் ஸ்வீடன் மருத்துவக்கழகத்தின் வெள்ளிப்பதக்கம், பாஸ்டர் நிறுவனத்தின் பதக்கம், பல நினைவு விருதுகள், பால் எரிலிச் நூற்றாண்டு விருது. லண்டன் மருந்து நிறுவனங்களின் தங்கப்பதக்கம், இத்தாலியின் பதக்கவிருது, ராயல் சொசைட்டியின் உறுப்பினர் பதவி, பல பல்கலைக்கழகங்களின் கெளரவ பட்டங்கள் ஆகியவற்றை பெற்றார்.

ஆனால் ஹீட்லியின் பெயரும் பெனிசிலின் கண்டுபிடிப்பில் அவரது பங்களிப்பும் முற்றிலும் மறக்கப்பட்டது.

1990-ல் அவரது 79-வது வயதில்தான் மருத்துவர் அல்லாத ஒருவருக்கு வழங்கப்பட்ட மருத்துவத்துறைக்கான கெளரவ டாக்டர் பட்டம் 800 வருடங்களுக்குப் பின்னர் முதன்முறையாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தினால் அளிக்கப்பட்டது

1964-ல் ஹோட்கின் மேரி எக்ஸ்ரே கதிர்களை உபயோகித்து பெனிசிலின் உள்ளிட்ட பல உயிர்வேதிப்பொருட்களின் வடிவங்களைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றார்.

2000-ம் ஆண்டின் இறுதியில் ஸ்வீடனின் புகழ்பெற்ற மூன்று சஞ்சிகைகள் பென்சிலினை கடந்த ஆயிரமாண்டு காலத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக அறிவித்திருந்தன. 

பெனிசிலினுக்குப் பிறகு ஸ்ட்ரெப்டோமைசின் உள்ளிட பல நுண்ணுயிர் எதிர்ப்பிக்கள் கண்டுபிடிக்கபட்டன. எனினும் பிற்காலத்தில் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு விதியின் கரங்களால் நகர்த்தப்பட்டு திறந்திருந்த கதவின் வழியே அந்தக் கீழ்த்தளத்து ஆய்வகத்திலிருந்து காற்றில் ஃப்ளெமிங்கின் ஆய்வகத்துக்கு வந்து சேர்ந்து, வளர்ந்து ஃப்ளெமிங்கினால் காணப்படவேண்டி காத்துக்கொண்டிருந்த பெனிசிலியப் பூஞ்சை மருத்துவ வரலாற்றை மாற்றியமைத்தது.

மேலதிகத் தகவல்களுக்கு:

உள்ளொழுக்கு!

 பலர் இது மனதை கனக்கச்செய்ததாகச் சொல்லி இருந்தார்கள் எனக்கென்னவோ படம் பார்த்து முடிந்ததும் பெரிய விடுபடல் இருந்தது. படத்தின் இறுதிக்காட்சி காட்டும் காதலை துறத்தல்,மன்னித்தல் மறத்தலினால் அல்ல. இன்னாது அம்ம இவ்வுலகு என்பதை மீண்டும் நினைவு படுத்திய திரைப்படம் என்பதால்.

தாமஸ் குட்டியின் அந்த நீல நிற ஃபைலை பார்த்துவிட்டுப் பார்வதி சவப்பெட்டியின் முன்னமர்ந்து ஊர்வசியிடம் பேசுவதும்,  ’’நின்ன கட்டியவனாடி இவிட கிடக்குன்னது’’ என்னும் ஊர்வசிக்கு பார்வதி திரும்பச்சொல்வதும் நிறைவளித்தது.

அந்த சிஸ்டர் தெரிவிக்கும் உண்மையும், பிறகு  இருட்டில் சமையலறையில் பார்வதியின் அம்மா சொல்லுவதும் எனக்கு அதிர்ச்சியாகவே இல்லை. இங்கும் ஒரு ’சிஸ்டர்’ இங்கும் ஒரு அன்னை என்று நினைத்துக்கொண்டேன்.புன்னகைத்தும் கொண்டேன். இறுதியில் பார்வதிக்காவது பற்றிக்கொள்ள ஊர்வசியின் தளர்ந்த கைகள் இருந்தது ஆசுவாசம் அளித்தது. எனது உள்ளொழுக்கின் வேகம் இனி மட்டுப்படலாம்.

பாப்பட்டாங்குழல் நோம்பி!

இன்று ஆடிப்பெருக்கு. தொடர் மழையில் ஆறு குளம் அணைக்கட்டு எல்லாம் நிரம்பி இருக்கிறது. அம்பராம்பாளையம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. ஆழியார் அணையின் கொள்ளளவை நீர் எட்டிவிட்டதால் 11 மதகுகளிலும் நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது, ஆற்றையும்அணையையும்  வேடிக்கை பார்க்க  இன்று ஏராளமானோர்  வந்து கொண்டிருக்கின்றனர்.

தென்னிந்தியா முழுக்க ஆடிப்பெருக்கு என்றால் ஓடும் நீரை பார்ப்பதும் கலந்த சாதம் சமைத்து எடுத்துச்சென்று ஆற்றங்கரைகளில் அமர்ந்து உண்பதுவும் தான் வழக்கம்

ஆனால் வேட்டைக்காரன் புதூர் ஆனைமலை கிராமங்களில் மட்டும் இன்றைய தினம் குழம் நோம்பி எனப்படும். நான் சிறுமியாக இருக்கையிலிருந்தே இங்கு மூங்கிலில் சிறிய குழல் போலச் செய்து அதில் பாப்பட்டாங்காய் எனும் சிறு மணி போன்ற காய்களை நுழைத்து ஒரு குச்சியால் அடித்து டப் என்னும் ஓசை வருவது விளையாட்டாக மகிழ்ந்து கொண்டாடப்படும்

அந்தப் பாப்பட்டாங்குழல் இன்றும் வேட்டைக்காரன்புதூரில் மட்டுமே செய்யப்படுகிறது. இதைக் கைத்தொழிலாகச் செய்துகொண்டிருக்கும் ஒரு சில வயதானவர்கள்  இதை அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் பயிற்றுவித்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் இந்தப் பண்பாடு  அழிந்துபோகக்கூடும்.

காடுகளில் மிகச்சரியாக இந்தச் சமயத்தில் பச்சைக்குண்டுகளாகக் கொத்துக்கொத்தாகக் காத்திருக்கும் பாப்பட்டங்காயை  இதற்கெனப் பறித்துக் கொண்டு வந்து இந்தக் குழலுடன் சேர்த்து விற்பார்கள்.

இந்தக் குழல் பாப்பட்டாங்குழல் இந்தக் காய் பாப்பட்டாங்காய்.

இதன் தாவர அறிவியல் பெயர் பாவெட்டா இண்டிகா.

ரூபியேசி குடும்பத்தைச் சேர்ந்த இதன் தமிழ்ப்பெயர் காட்டுக்கரணை, மலையாளத்தில் இது மல்லிகை முட்டி. மராத்தியில் பாப்பட்.தெலுங்கில் பாப்பிடி. இந்தப் பாப்பட்டாங்காய் என்பதும் பாவெட்டா என்னும் லத்தீன் பெயரின் மருவூதான். பாவெட்டா என்பது எப்படியோ வேட்டைக்காரன் புதூர்க்காரர்களுக்கு தெரிந்து இதைப் பாவட்டாங்காய் என்று அழைக்கத்துவங்கி அது இப்போது பாப்பட்டாங்காய் ஆகி இருக்கிறது. 

இப்படித்தான் ஒரைஸா என்னும் நெல்லின் லத்தீனப்பெயர் தமிழின் அரிசியிலிருந்து வந்தது.

இந்தப் பாப்பட்டாங்காய் வெடிக்கும் விளையாட்டுத் தமிழர் பண்பாட்டில் இணைந்த ஒன்று அதுவும் குறிப்பாக வேட்டைக்காரன் புதூரில் ஆனைமலையில் மட்டும்தான் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது இந்தியவில் வேறெங்கும் இது இல்லை 

இப்படி பண்பாட்டுடன் இணைந்த இது போன்ற இயற்கை கொண்டாட்டங்களை அவசியம் நாம் தொடர வேண்டும்

இளம் மூங்கில் குச்சிகளில் சிறு குழல்போலச் செய்யப்படும் இந்த விளையாட்டுக் கருவியில் சிறுகாய்கள் உடைகையில் உருவாகும் ஒலி பெருக்கிக்கேட்கவெனக் குழலின் வாய்ப்பகுதி அகலமாகப் புனல் போலச் செய்யப்பட்டிருக்கும். வண்ணக்காகிதங்களால் அந்த வாய்ப்பகுதி அலங்கரிக்கப்பட்டிருப்பதால் குழந்தைகளுக்கு இது மிகவும் பிடித்தமான விளையாட்டாக இருக்கும். பொட்டு வெடி என்னும் ஒரு பட்டாசை கல்லில் கொட்டுகையில் உண்டாகும் ஒலியைப்போலவெ இதிலும் உருவாகும் என்பதால்ல  இதைக் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் விளையாடுவார்கள். ஆடி 18 அன்று உறவினர்களின் குழந்தைகள் ஒன்றிணைந்து ஒருவர் மீது ஒருவர் இதை அடித்து விளையாடி மகிழ்வார்கள்.

ஆபத்தற்ற, சூழல் மாசுண்டாக்காத,  இயற்கையோடு இணைந்த  இந்த விளையாட்டுத்தான் எத்தனை இனிது!!

நான் ஒவ்வொரு வருடமும் மகன்கள் வீட்டில் இருந்தாலும் இல்லையெனினும் இவற்றை வாங்கி வந்துவிடுவேன். பண்டிகையன்று இதில் காய்களை நுழைத்து அடித்து விளையாடுவேன்.

இந்தப் பாவட்டா  2 லிருந்து 4 மீ உயரம் அவரை வளரும் புதர் செடி. நல்ல நறுமணமுள்ள வெண்ணிற மலர்கள் கொத்துகளாக உண்டாகும்.மலர்களைத் தேடி எண்ணற்ற பட்டாம்பூச்சிகளும் சிறு வண்டுகளும் ஈக்களும் வரும். பச்சை நிற காய்கள் தான் இந்தக் குழலில் அடித்து விளையாடப்படுகின்றன

காய்கள் பழுத்துக் கனிகையில் கருப்பு நிறமாகி விடும்.இதன் வேர் இலை மரப்பட்டை ஆகியவை பல்வேறு சிகிச்சைகளுக்குக் கைவைத்தியமாகக் கிராமங்களில் பயன்படுத்தப்படுகிறது.

ஜுலையில் மலர்கள் முதிர்ந்து சரியாக ஆடிமாதத்தில் இந்தப்பண்டிகையின்போது காய்கள் திறண்டு காத்திருக்கும். வேட்டைக்காரன்புதூரை சுற்றியுள்ள காடுகளில் இந்தப் பண்டிகை காலத்தில்  இவை ஏரளமாகக் காய்த்துக்கிடக்கும்.

எழுத்தாளர் அகரமுதல்வன் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கையில் ஈழத்தில் பாலைப்பழம் பழுக்கும் காலத்தில் காடுகளுக்குள் மொத்த கிராமமே கூட்டமாகச் சென்று பாலைப்பழம் உண்பார்களாம். இது அவர்களின் பண்பாட்டின் ஒரு பகுதி என்றார். அப்படியான பண்பாடுகளை எல்லாம் நாம் ஏறக்குறைய இழந்து விட்டிருக்கிறோம். இந்தப் பாவட்டங்காய் அடித்து விளையாடும் பண்டிகை இயற்கையுடன் இணைந்திருக்க வேண்டியதன் மகிழ்சியையும் அவசியத்தையும் உணர்த்தும் ஒன்று. இன்று சரணும் தருணும் சாம்பவியும் இல்லை எனினும் அவர்கள் எப்போது விடுமுறைக்கு  வந்தாலும் அவர்கள் விளையாட வென்று குளிர்சாதனப்பெட்டியில் காய்களைச் சேமித்து வைத்திருக்கிறேன்.

எதிர்காலத்தில் இந்த வீட்டுவாசலில் சிறு  குழந்தைகள் பாப்பட்டாங்குழலால்  ஒருவர் மீது  ஒருவர்  காய்களை அடித்து விளையாடிச் சிரித்து பூசலிட்டுக்கொள்வதை பார்க்கக் காத்திருக்கிறேன். இன்று விஜியும் ஜோதியும் வந்திருந்து விளையாடினார்கள் மாலை புதுப்புனல் காண உறவினர்களுடனும்  நண்பர்களுடனும் செல்லவெண்டும்.

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑