லோகமாதேவியின் பதிவுகள்

Month: November 2021

கொடிவழியும் குருதிக்கலப்பும்

”என்னடா எந்நேரமும் அந்த ——-ஷா   கூடவே பேசிட்டு இருக்கியே, இதாவது சீரியஸா போகுதா?’

(ஷாவில் முடியும் எந்த பெயரானாலும் நீங்கள் நிரப்பிக்கொள்ளுங்கள். த்ரிஷா, ஹர்ஷா, வர்ஷா, மனிஷா, விதுஷா இப்படி!)

” சீரியஸ்னுதான் நினைக்கறேன் மீ, ஆனா கொஞ்சம் க்ளைமேக்ஸ் கஷ்டமாத்தான் இருக்கும் போல”

”கஷ்டமா? எதை சொல்லறே?”

”அவங்க வீட்டில் ஒத்துக்குவாங்களான்னு தெரியலை அனேகமா மாட்டாங்கன்னுதான் நினைக்கறேன்”

”ஏன் பெரிய லாடு வீட்டு லட்டா அவ? சொல்லப்போனா எனக்கு உண்மையில் அவளை அத்தனை பிடிக்கலை கேட்டுக்கோ, ஏன்னா நான் முன்னாடியே உங்க ரெண்டு பேருகிட்டயுமே சொல்லிருக்கேன் பொண்ணு பார்க்க முன்னப்பின்ன இருந்தாலும் தலைமுடி மயில் தோகை போல் இருக்கனும்னு. இவளுக்கு கொத்தமல்லி கட்டுமாதிரியில்ல இருக்கு? நானே ஒண்ணும் சொல்லாதப்போ இவங்களுக்கு என்னடா, பெரிய இதாட்டம் சும்மா இருக்கச் சொல்லிரு ஆமா!

”அய்யோ நீ வேற ஏம்மீ, அவ ஷார்ட்டா வெட்டிக்கிட்டா இல்லாட்டி நீ சொல்லுவியே அப்படி யக்‌ஷி மாதிரிதான் இருக்கும் அவ தலைமுடி”

”என்னமோ போ! நீயாச்சு அவளாச்சு.  எனக்கென்ன, ”அவங்க வீட்டில் எதுக்குடா வேண்டாம்பாங்க?  ஏன்? உன்னவிட நல்ல பையனா பார்த்துருவாங்களா? கிடச்சுருமா? இல்ல கேட்கறேன்! ”கிடைக்கவே கிடைக்காதுன்னு சொல்லி வை,  வேற கிரகத்தில் கூட உன்னைபோல ஒருத்தன் இருக்கமாட்டான்”

”மீ!! வேற கிரகத்தில என்னப்போல மட்டுமல்ல யாரப்போலவும் இருக்கவே மாட்டாங்க, மனுஷங்களே இல்ல அங்கே,  ரொம்ப பண்ணாதே நீயி”

”சரிடா விஷயத்துக்கு வா ,ஏன் ஒத்துக்க மாட்டாங்களாம், கொத்தமல்லி வீட்டில் சரி சரி முறைக்காதே, யக்‌ஷி வீட்டில்?

”அவங்கல்லாம் மலையாளிக மி!”

”அட என்னடா நாமளும் மலையாளிதானே? நாந்தான் நல்லா மலையாளம் பேசறேனே? இதை சொல்லிப்பார்க்கலாம் இல்லைனா நம்ம வீடு கூட பாலக்காட்டுக்கு பக்கத்தில்தான் இருக்குன்னு வேண்ணா சொல்லிப்பார்க்கலாமா?”

”அய்யோ மீ,   எதாவது உருப்படியா சொல்லேன் ப்ளீஸ்!’”

”மலையாளிகளில் நிறைய பிரிவு இருக்குமே அதில் இவ யாராம்?”

”போ, மீ அதெல்லாம் கேட்டுக்கிட்டா இருப்போம்?

”அட கேட்டு வைடா. நம்பூதிரியா இருக்க வாய்ப்பில்லை நம்பூதிரி பொண்ணுங்கெல்லாம் நல்ல வெள்ளையா, தலைமுடி கணுக்காலுக்கு இருக்கும், இவளுக்குத்தான்,,  ஓகே ஓகே விடு!

ஒருவேளை நாயர்னா பிரச்சனையே இல்லடா, நாமளும் நாயர்தானே, பேசி முடிச்சுக்கலாம்”

”என்னது  நாம நாயரா? கவுண்டர்னுதானே இத்தனை நாளா சொல்லிட்டு இருந்தே?”

”அதெல்லாம் ஜெ வை வாசிக்கறதுக்கு முன்னாடிடா, விவரமில்லாதவனா இருக்கியே, இப்போ ஜெ யாரு?”

”எழுத்தாளர்”

”டேய்!”

”சரி,  பெரிய எழுத்தாளர்”

”அட, அதில்லை அவரு நாயருடா!”

”அவரு நாயர்னா நாம எப்படி மீ நாயராவோம்?”

”என்னடா இப்படி இருக்கே? நாம எங்கே இருக்கோம்,  விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில்தானே?”

”நாம இல்லை நீ இருக்கே”

”நான் இருந்தா அது நாம எல்லாரும் இருக்கறதுன்னுதான் அர்த்தம். ஜெ சொல்லிருக்காரே //அன்னையரை, அவர்களிடமிருந்து வரப்போகும் தலைமுறைகளையும் சேர்த்துத்தான் மதிப்பிடனும்னுட்டு//

”ஆனாலும் நீ ஜெ எழுதறதெல்லாம் மனப்பாடம் பண்ணிட்டு பண்ணற அட்டகாசமிருக்கே ! சரி சொல்லு”

”விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் யாரோடது ஜெவோடது,ஜெ  யாரு ? நாயர், குல நாயர்.  விஷ்ணுபுரம் வட்டம்ங்கறது ஒரு அமைப்பில்லடா குடும்பம் நாம ஜெ எல்லாம் ஒரே குடும்பம்னா நாமளும் நாயர்தானே! இதைச் சொல்லி பொண்ணு கேட்றலாம் கவலைப்படாதே!”

”போ மீ நீ, நான் என்னவோ நீ நிஜமா சொல்லறீயோன்னு நினச்சேன்”

”அட நிஜம்தாண்டா!  உங்கண்ணன் ஒரு பிராமின் பொண்ணோட அடிக்கடி பேசிட்டு இருக்கானே அது  ஒருவேளை செட் ஆச்சுன்னா ஒரு பிரச்சனையும் இல்லாம கல்யாணம் முடிஞ்சுரும். நீதான் நாயர் கீயர்னு குழப்பியடிக்கறே!”

”ஏன், நாமளும்  பிராமின்ஸ்னு சொல்லப்போறீயா?

”சொல்லறதென்ன நாம பிராமின்ஸ் தாண்டா!’

”மீ ,ரொம்ப ஒவரா பண்ணறே!’

”அட! நிஜமாத்தண்டா ” ”நீயே சொல்லு, இப்போ நம்ம  கணேஷ் மாமா யாரு?”

”எந்த கணேஷ் மாமா? ஜெனிவா மாமாவா?” தெரிலை நீயே சொல்லிரு

”ஆமா அவரேதான் யாரு ?அசல் பிராமணர்!”

’”ஓகே அதுக்கு நாம எப்படிம்மா பிராமின்ஸ் ஆவோம்?”

”இருடா ,வரேன்,  கணேஷ் மாமா யாரு?

”என்ன மீ , இப்போதானே சொன்னே, அசல் பிராமின்ன்னுட்டு? திரும்பத்திரும்ப பேசறே நீ ஆமா”

இல்லடா அது ஜெனிவா கணேஷ் மாமா, இப்போ கேட்கறது சிங்கை கணேஷ் மாமா மாதங்கி அத்தை, சுபா அத்தை, அந்த சிங்கை மாமா!

ஓ பாட்டு மாமாவா ? அவரு யாரு?

என்னடா நீ அவரும் அசல் பிராமணர்”

”ஓகே மீ அவங்கஎல்லாம் மாமாதான்னாலும் நம்ம ரத்த  சொந்தமில்லையே எப்படி நாம் பிரமின்ஸ்னு சொல்லறே?”

”வரென் வரேன், இரு . உங்க விஜி மாமனிருக்கானே அவன் யாருங்கறே?

”மீ , வேண்டாம் சொல்லிட்டேன் விஜி மாமா உன் கூட பிறந்த தம்பி அவரையும்  பிராமின்னு சொல்லிறாதே!”

”அவன் என் தம்பியா இருந்ததெல்லாம் உங்க லக்‌ஷ்மி அத்தையை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முந்தின நாள் வரைக்கும்தாண்டா,

”எப்போ பிராமணப்பொண்ணான அவளைக் கல்யாணம் பண்ணி முழுநேரமும் அவளுக்கு புருஷனாவும் ஒழிஞ்ச நேரத்தில் கம்பெனியை பார்க்கறதுன்னு ஆயிட்டானோ.  அப்போ அவனும் பாதி ப்ராமின் தானே? வர ஆவணி அவிட்டதுக்கு உங்க மாமன் பூணூல் போட்டுக்கப்போறானே, தெரியுமா தெரியாதா உனக்கு?.

இன்னும் கேளு!”நம்ம மாதவன் மாமா யாருங்கறே?”

பெல்ஜியம் மாமாவா?

”அவரேதான் ப்ரியா அத்தையை கல்யாணம் பண்ணி இருக்கறதால அவரும் பாதி பிரமின் தாண்டா! உண்மையை சொல்லப்போனா நம்மளை சுத்தி எல்லா வேண்டியவங்களும் பிராமின்ஸ்தான் இனி உங்க ரெண்டு பேருக்கும் கவுண்டர் வீட்டில் பொண்ணு கேட்டா தரமாட்டாங்க பிராமின்ஸ்கெல்லாம் நாங்க தரமாட்டோம்னு சொல்லிருவாங்க பாரேன்.”

”நீவேணா, இந்த  – ஷா செட் ஆகலைனா பிராமின் யாராவதை பாரேன், தலை முடி கொஞ்சம் நீளமா இருக்கறாப்பல”

”மீ என்ன மீ ,என்னமோ இந்த கடை இல்லைனா, வேற கடைங்கறா மாதிரி ஈஸியா சொல்லிட்டு இருக்கே காதல் மீ, காதல்!

”சரி சரி விடு நாயருக்கே வரலாம், என்ன பண்ணறாங்க அந்த லாடு வீட்டில்?”

”அப்பா காலேஜ் ப்ரொஃபஸர், அம்மா எழுத்தாளர்

”பார்ரா! இனி என்ன எல்லாமே முடிஞ்சுருச்சுன்னு நினச்சுக்கோ, நானும் எழுத்தாளர், அதாவது கட்டுரையாளர்னா எழுத்தாளர்னும் சொல்லிக்கலாம்னு ஜெ  சொல்லிருக்காரு, நானும் ப்ரொஃபஸர், ஒரே குடும்பம் வாத்தியர் குடும்பம் அவ்வளவுதான். இனி என்ன சொல்லு”

”போமீ, உருப்படியா எதாச்சும் சொல்லு, ப்ளீஸ்’”

’”சரிடா, அவங்களை வெண்முரசு வாசிக்க சொன்னீன்னா, நாம எல்லாரும் ஜெ ஸ்கூலில் ஒண்ணா படிக்கறவங்க ஆயிடுவோம், அப்புறம் ஜாதியாவது இனமாவது குலமாவதுன்னு ஒண்ணு மண்ணா கலந்து சொந்தக்காரங்களாயிருவோமே! சொந்தத்தில் கட்டிக்க பிரச்சனையே இல்லையே!

”இல்லைன்னா அரங்கா மாமா, விஜயசூரியன் மாமாவவிட்டு நாம வெண்முரசு கொடி வழியில் வந்தவங்கன்னு அந்த நாயர்ட்ட  சொல்லச்சொல்லிட்டா அவங்களும் என்னமோ ஏதோ பெரிய கொடி வழிபோலன்னு நினச்சுக்கிட்டு பொண்ண தந்துருவாங்க,

அட எதுவுமே வேலைக்காகலைன்னு வச்சுக்கோ, இருக்கவே இருக்கு பிரம்மாஸ்திரம் அதை எடுத்துரலாம்”

”என்ன மீ அது?”

நான் நேரா ஜெ வீட்டுக்கே போய், சார், இப்படி இப்படி விஷயம் நீங்க பார்க்க வளர்ந்த பையன், அவனும் பிடிச்ச பொண்ணை கல்யாணம பண்ணி உங்களையும அருண்மொழியையும் போல கல்யாணதுக்கப்புறமும் தொடரும் பேரன்போட இருக்க வேண்டாமா? நம்மைச்சுற்றிலும் அறிவார்ந்த ஒரு உலகம் இயங்கிட்டு இருக்குன்னே தெரியாத ஆளுங்க இருக்காங்கன்னு சொல்லுவீங்களே, அப்படியாப்பட்ட வீட்டில் லவ் பண்ணிட்டான், அதனால நீங்க ஒருவார்த்தை பொண்ணு வீட்டில் பேசுங்கன்னு, வேண்டிக்கேட்டுகிட்டா நிச்சயமா சார் போனிலாவது பேசுவார்,

அவர் பொண்ணோட அம்மா அப்பாட்டெ ’’இங்க பாருங்க உண்மையில் குருதி கலப்பில்லா குலம்னு எதாச்சும், இருக்கா? இப்போ உலகளாவிய பெருந்தொற்றுக்கப்புறம் பிழச்சுகிடக்கற நாமெல்லாம் ஊழை உச்ச விசையுடன் எதிர்த்து நின்று, குலம் இனம் மொழியையெல்லாம் மறந்து  கல்யாணம் பண்ணி சந்ததியை பெருக்கினாதானே உலகம் உய்யும், பாசிமணிகளுக்குள் பட்டுச்சரடு போல வாழ்க்கைக்குள் விதி ஊடுருவியிருக்குங்கறத மறந்துட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னே வாழ்ந்துட்டு இருக்கீங்களே’’ன்னெல்லாம் பேசினா,  கதறிட்டு உனக்கு மட்டுமல்ல ,இன்னொரு பொண்ணிருந்தா உங்க அண்ணனுக்கும் சேர்த்து கொடுத்துருவாங்களே!

”நான் பார்த்துக்கறேன் கவலையில்லாம இரு, ஆனா அந்த கொத்தமல்லியை மட்டும் கொஞ்சம் கீரைக்கட்டாட்டமாவது வளர்க்க சொல்லு போ போ!”

ஜெய்பீம்

ஜெய்பீம்

நீதிமன்ற வழக்குகளை அடிப்படையாக கொண்ட திரைப்படங்களில் சமீபத்தில் மிக அதிகம் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டதும், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட வெற்றிப்படமுமான ஜெய்பீம் வெகுநாட்களுக்கு பிறகு வந்திருக்கும் நல்ல தமிழ்ப்படம்.

திரைப்படங்கள் கேளிக்கைக்கானவைகள் மட்டுமல்ல மக்களுக்கு பல முக்கிய விஷயங்களையும், சகமனிதர்களுக்கு நிகழும் அநீதிகளையும், சொல்லவும் இந்த சக்திவாய்ந்த ஊடகம் பயன்படுமென்பதை ஜெய்பீம் சமீபத்தில் நிரூபித்திருக்கிறது.

நீதிமன்ற வழக்கை அடிப்படையாக கொண்டு ஜோதிகாவை வைத்து  எடுத்த  ’பொன்மகள் வந்தாள்’ படத்திற்கான பிழையீடாக இந்த திரைப்படத்தை சூர்யா சொந்த தயாரிப்பில் எடுத்திருக்கிறார் என்றும் சொல்லலாம்.

நீண்ட வழக்கு விசாரணைகளை, சோர்வடைய வைக்காமல் பார்வையாளர்களையும் விசாரணையுடன் ஒன்றச்செய்யும் விதமாக அமைத்திருக்கிறார்கள். கதாபாத்திர தேர்வு, திரைக்கதை, பின்னணி இசை, ஒளி இயக்கம், படத்தொகுப்பு,  இயக்கம் ,சூர்யாவின் நடிப்பு என அனைத்துமே வெகு சிறப்பு

 நீதிமன்ற வழக்கை அடைப்படையாக கொண்டு வந்திருக்கும் முந்தைய திரைப்படங்களிலிருந்து ஜெய்பீம் வேறுபடுவது எடுத்துக்கொண்ட வழக்கில் வெற்றி பெறுவது மட்டுமல்லாது  இதில் பழங்குடியினப் பெண்ணுக்கு நீதி கிடைப்பதும், அந்த இனத்துக்கு நடந்துகொண்டிருக்கும் அநீதிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருப்பதிலும்தான்.

  1995’ல் ஹேபியஸ் கார்பஸ் ஆட்கொணர்வு மனு சமர்ப்பிபிக்கபட்ட வழக்கொன்றை நீதியரசர் சந்துரு என்பவர் கையிலெடுத்து, அவ்வழக்கில் நீதியை பெரும் போராட்டத்துக்கு பின்னர் வாங்கிக்கொடுத்தார் அந்த உண்மை வழக்கையே ஜெய்பீம் ஆக்கி இருக்கிறார் சந்துருவாக நடித்திருக்கும்  சூர்யா.

அப்பாவியான ராஜாக்கண்ணு என்னும் பழங்குடியின இளைஞனொருவனை திருட்டு வழக்கில்  முறையின்றி கைதுசெய்து, பின்னர்  லாக்கப்பிலிருந்து அவன் தப்பி விட்டதாக சொன்ன காவல்துறைக்கெதிரே வழக்கு தொடர்ந்து, தன் கணவனை கண்டுபிடிக்க போராடிய கர்ப்பிணியான செங்கேணியின் கதை இது

.சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்து கொண்டிருப்பவர்களிடம் நேரிடையாக அவரவர் ஜாதியை கேட்டு அதன்படி அவர்களை  வரிசையில் நிற்க வைக்கும் காட்சியும், விடுதலையாகி வரப்போகும் கைதிகளுக்காக குழந்தைகளுடன் காத்திருக்கும் அவர்களின் எளிய பின்னணியை சேர்ந்த குடும்பத்தினரும், அவர்கள் கண்முன்னே கைதிகளுக்கு நடக்கும் கொடுமையுமாக தொடக்க காட்சியிலேயே  நம் மனதை கலங்கடிக்கிறார்கள்

எண்ணெய் காணாத தலைமுடியும், ஒட்டி உலர்ந்த தேகமுமாக இருக்கும் அவர்களின் மீது காட்டப்படும் அதிகார துஷ்பிரயோகமும் வன்முறையையும்  பார்வையாளர்களால் மறக்க முடியாத வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது

திரைப்படம் காட்டுவது உண்மையில் நடந்தவற்றில் மிக்குறைவு என்பதையும் நம்மால் உணரமுடிகின்றது.

சூர்யாவுடன் திரைக்கதையும் இணைநாயகனன்று சொல்லுமளவுக்கு கச்சிதமாக, சிறப்பாக  இருக்கிறது. பலகோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருக்கும் நீதிமன்றமும் படத்துக்கு பலம் சேர்க்கிறது.கலை இயக்குனருக்கு தனித்த பாராட்டுக்கள்.

மணிகண்டனின் திரைவாழ்வில் என்றென்றைக்குமாக அவர் பேர் சொல்லப்போகும் முக்கியமான திரைப்படம் இது. மகேஷிண்டெ பிரதிகாரத்தில் குட்டிப்பெண்ணாக வந்த லிஜோமோளா செங்கேணியாக  இத்தனை சிறப்பாக நடித்திருப்பது என்றூ வியக்காமல் இருக்கமுடியவில்லை.

பிரகாஷ்ராஜ் மகுடத்தில் ஜெய்பீம் மேலுமொரு அருமணி. நிதானமான, கம்பீரமான  மனசாட்சியுடனிருக்கும் காவலதிகரியாக பிரமாதப்படுத்தியிருக்கிறார்

 காவல்துறையின் அதிகார எல்லைகள், விசாரணைக்கொலைகள்,  சாதீய அடக்குமுறைகள் மற்றும் அநீதிகளை குறித்து தமிழில் இத்தனை விரிவாக, இத்தனை சிறப்பாக முன்பு திரைப்படங்கள் வந்ததில்லை.

பாடல்கள் அனைத்துமே திணிக்கப்பட்டவைகளாக இல்லாமல் கதையுடன் காட்சியுடன் இணைந்து படத்துக்கு இன்னும் வலுசேர்க்கின்றன.
 

ஆவணப்படமாக மாறக்கூடிய சாத்தியங்கள் வெகுவாக இருந்தும் கதை சொல்லும் சாமார்த்தியத்தால் சுவாரஸ்யம் குறையாமல் இதை அழகிய திரைப்படமாக்கியதற்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். தொடக்க காட்சிகளுக்கு பிறகு திரைப்படம் பார்க்கும் உணர்வு காணமல் போய், கதாபாத்திரங்களின் உணர்வுகளும், இழப்பும் வலியும் துயரும் அச்சமும் எல்லாமுமே நமக்கே உண்டானதைப் போல படத்துடன்  ஒன்றிப் போகிறோம்.  பிரச்சாரநெடியும் இல்லாமல் கவனமாக படமாக்கப்பட்டிருப்பதும் கூடுதல் சிறப்பு.

நகைச்சுவையும், பாட்டும்.நடனமும், மசாலாவுமான படங்களில் நடித்து தமிழ்திரையுலகில் வெற்றிகரமான கதாநாயகனாயிருக்கும் சூர்யா இந்த சந்துரு பாத்திரதை ஏற்று சிறப்பாக நடித்திருப்பதும், இந்த படத்தை சொந்த தயாரிப்பில் உருவாக்கியிருப்பதும் பாராட்டுக்குரியது..

 முதல் ஒருமணிநேர திரைக்கதை நம் மனதில் உண்டாக்கும் வலியும் தொந்தரவும் இனி எப்போதும் நீடித்திருக்கும், அத்தனைக்கு  அசலான காட்சிகள் அசலான நடிப்பு. அலறல் நிஜம் அடி நிஜம் துயரம் நிஜம் என்று மனதை கசக்கும் காட்சிகள். அதுவும் ராஜாக்கண்ணுவின் அக்காவுக்கு லாக்கப்பில் நடப்பதை பார்க்க மனோதைரியம் வேண்டும்.

 இரண்டாம் பாதியில் படம் இன்னும் வலுவாக, இன்னும் ஆழமாக செல்கின்றது. வாத பிரதிவாதங்களின் போது சூர்யா பிரமாதப்படுத்தி இருக்கிறார். 2.45 நிமிடம் நீளமென்றாலும் தொய்வின்றி இருக்கை நுனியில் நம்மை கொண்டு வரும் பல காட்சிகளுடன் இருக்கிறது ஜெய் பீம். பழங்குடியினருக்கு கல்வியளிக்கும் ஆசிரியை பாத்திரமும் சிறப்பு

 ஷான் ரோல்டனின் இசை திரைக்கதையுடன் இணைந்தே பயணிக்கிறது. கதாபாத்திரங்களின் உணர்வையும் வலியையும் பார்வையாளர்களுக்கும் கடத்துவதில்  இசையும் முக்கியப்பங்காற்றுகிறது.

எந்த எந்த காரணங்களுக்காக தங்களை காவல்துறை கைது செய்தார்கள் என்பதை சிறுவர்களும், பெண்களும் வயதானவர்களுமாக பழங்குடியினர் விவரிக்கையில் நம்மால் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியாது.

  இணையத்தில் ராஜாக்கண்ணுவின் வழக்கும், சந்துரு அவர்களின் விசாரணையும், தீர்ப்பும் பிற விவரங்களும் கிடைக்கிறது படத்தை பார்க்கும் முன்பு அவற்றை குறித்தும் அறிந்துகொள்வது படத்தை மனதுக்கு இன்னும் அணுக்கமாக்கும் சகமனிதர்களின் துயரை மிகச்சரியாக அறிந்துகொள்ளவும்  முடியும்.

செங்கேணியின் மகள் அல்லியாக வரும் சிறுமியின் இயல்பான நடிப்பும் குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியது. அத்தனை துயரங்களுக்கு இடையிலும் அல்லி எழுதப்படிக்க கற்றுக்கொள்ளுவதும் இறுதியில் சூர்யாவுக்கு இணையாக அவளும் நாற்காலியில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு நாளிதழை வாசிப்பதும் காலம் மாறும் என்னும் நம்பிக்கையை விதைக்கும் காட்சிகள்.

அமேஸான் பிரைமில் இருக்கும் ஜெய்பீம் அவசியம் அனைவரும் பார்க்கவேண்டிய படம். லாக்கப் வன்முறைக்காட்சிகள் பெரியவர்களுக்கே மன நடுக்கத்தை தருமென்பதால் குழந்தைகளுடன் பார்க்க உகந்ததல்ல.

தந்திச்செடி

தொட்டாச்சிணுங்கியை அறிந்திருக்கும் பலருக்கு தொழுகண்ணியை குறித்து தெரிந்திருக்காது.  Codariocalyx motorius எனப்படும் இந்த  தொழுகண்ணி  சூரியனை நோக்கி அசையும் இலைகளை கொண்டிருப்பதாலும் சூரிய ஒளியில் இலைகள் வேகமாக அசைந்துகொண்டே இருப்பதாலும் உலகின் அனைத்து மொழிகளிலும் இது நடனமிடும் செடி அல்லது தந்திச்செடி என்று அழைக்கப்படுகின்றது.( இணையறிவியல்பெயர்: Desmodium motorium)

   பட்டாணி குடும்பத்தை சேர்ந்த 25-35 இன்ச்உயரம் வரை வளரும் குறுஞ்செடிவகையை சேர்ந்த தொழுகண்ணி உலகெங்கிலும் வனப்பகுதிகளில் காண்படுகிறது. இவற்றின் அடர்பச்சை நீள்முட்டை வடிவ இலைகள் பெரியதும் சிறியதுமாக இரண்டு வகையிலும் காணப்படும். ஒவ்வொரு பெரிய இலையின் அடியிலும் இரண்டு சிறு இலைகள்அமைந்திருக்கும்

 காயகல்ப மூலிகயான இதன் சணப்பையை போலிருக்கும் இலைகள் அசைந்து அருகிலிருக்கும் இலையுடன் இணைந்து  தொழும் கைகளை போல கூப்பியும் விலகியும் அசைவதால் இதற்கு தொழுகண்ணி என்று பெயர்.

2 வருடங்கள் வரை வாழும் இச்செடியில்,வண்ணத்துப்பூச்சிகளை கவரும் சிறிய இளம்ஊதா நிற மலர்கள் குளிர்கால துவக்கத்தில் தோன்றும். அவரையை போன்ற இளம் பச்சை நிறக்காய்களில் சிறிய கருப்பு  நிற விதைகள் இருக்கும். விதைகளிலிருந்தும், நறுக்கிய  தண்டுகளிலிருந்தும் இச்செடியை வளர்க்கலாம். இவற்றின்விதைகள் கடிமான விதையுறையை கொண்டிருப்பதால் 10 லிருந்து 12 மணி நேரம் இவற்றை நீரில் ஊற வைத்தபின்னரே அவை முளைக்கும் திறனை அடையும்

 சூரியன் உச்சியில் இருக்கும் போது இலைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்தும் பிரிந்தும்  வேகமக அசைந்துகொண்டெ இருக்கும் சூரியனின் சக்தி இதற்கு அதிக ஆற்றல் அளிப்பதனால் இது நிகழலாம் என்கிறது தாவர அறிவியல். ஆசியாவை தாயகமாக கொண்ட இந்த தாவரம், சதுரகிரி மலையில் அதிகம் காணப்படுகின்றது. இந்த மூலிகை உடலில் வெட்டுப்பட்ட பாகங்களை உடனே இணைக்கும் என்று சித்தர் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

 சூரிய ஒளி படுகையில் சிற்றிலைகள் முதலில் வேகமாகவும், அவற்றை தொடர்ந்து பெரிய இலைகள் மெதுவாகவும் அசைந்து கொண்டே இருப்பது மனிதர்களுக்கு கேட்காத சங்கீத்தின் தாளத்துக்கேற்றாற்போல் அவை நடனமிடுவது போலிருக்கும். எப்போது அசையவேண்டும் என பெரிய இலைகளுக்கு, சிற்றிலைகள் தகவல் சொல்லுகிறது என்னும் பொருளில்  இவற்றிற்கு  தந்திச்செடி என்றும் பெயருண்டு

 அதிசயதக்க விதமாக அதிக அளவிலான ஒலியிலும் இவற்றின் இலைகள் அசைகின்றன. ஒலி மற்றும் ஒளிக்கேற்ப இலைகள் அசையும் காரணத்தை இன்னும் துல்லியமாக அறிவியலாளர்களால் கண்டறிய முடியவில்லை

Dr.  ஜகதீஷ் சந்திரபோஸ் இந்த தாவரத்தில்தான் பல ஆய்வுகளை செய்தார். அசையும் தாவரங்களின் ஆற்றல் என்னும் தனது நூலில் சார்லஸ் டார்வினும் இந்த செடிகளை குறித்து விவரித்திருக்கிறார் (The Power of Movement in Plants1880.)

இதன் வேர்கள் பாரம்பரிய மற்றும் நாட்டு மருத்துவத்தில் முடக்குவாதம், வெட்டுக்காயங்கள் மலேரியா, மற்றும் மஞ்சள் காமாலைக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது. இதன் பல வேதிச்சேர்மானங்கள் நச்சுத்தன்மை கொண்டிருப்பதால் மருத்துவர்களின் அறிவுரைப்படி மட்டுமே இதனை மருந்தாக உட்கொள்ள வேண்டும். இவை அலங்காரச்செடிகளாக உலகெங்கிலும்  தொட்டிகளிலும் வளர்க்கப்படுகிறது.

இலைகளின் நடனத்தை காண: https://youtu.be/m3-LJmFZ5X4

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑