”என்னடா எந்நேரமும் அந்த ——-ஷா   கூடவே பேசிட்டு இருக்கியே, இதாவது சீரியஸா போகுதா?’

(ஷாவில் முடியும் எந்த பெயரானாலும் நீங்கள் நிரப்பிக்கொள்ளுங்கள். த்ரிஷா, ஹர்ஷா, வர்ஷா, மனிஷா, விதுஷா இப்படி!)

” சீரியஸ்னுதான் நினைக்கறேன் மீ, ஆனா கொஞ்சம் க்ளைமேக்ஸ் கஷ்டமாத்தான் இருக்கும் போல”

”கஷ்டமா? எதை சொல்லறே?”

”அவங்க வீட்டில் ஒத்துக்குவாங்களான்னு தெரியலை அனேகமா மாட்டாங்கன்னுதான் நினைக்கறேன்”

”ஏன் பெரிய லாடு வீட்டு லட்டா அவ? சொல்லப்போனா எனக்கு உண்மையில் அவளை அத்தனை பிடிக்கலை கேட்டுக்கோ, ஏன்னா நான் முன்னாடியே உங்க ரெண்டு பேருகிட்டயுமே சொல்லிருக்கேன் பொண்ணு பார்க்க முன்னப்பின்ன இருந்தாலும் தலைமுடி மயில் தோகை போல் இருக்கனும்னு. இவளுக்கு கொத்தமல்லி கட்டுமாதிரியில்ல இருக்கு? நானே ஒண்ணும் சொல்லாதப்போ இவங்களுக்கு என்னடா, பெரிய இதாட்டம் சும்மா இருக்கச் சொல்லிரு ஆமா!

”அய்யோ நீ வேற ஏம்மீ, அவ ஷார்ட்டா வெட்டிக்கிட்டா இல்லாட்டி நீ சொல்லுவியே அப்படி யக்‌ஷி மாதிரிதான் இருக்கும் அவ தலைமுடி”

”என்னமோ போ! நீயாச்சு அவளாச்சு.  எனக்கென்ன, ”அவங்க வீட்டில் எதுக்குடா வேண்டாம்பாங்க?  ஏன்? உன்னவிட நல்ல பையனா பார்த்துருவாங்களா? கிடச்சுருமா? இல்ல கேட்கறேன்! ”கிடைக்கவே கிடைக்காதுன்னு சொல்லி வை,  வேற கிரகத்தில் கூட உன்னைபோல ஒருத்தன் இருக்கமாட்டான்”

”மீ!! வேற கிரகத்தில என்னப்போல மட்டுமல்ல யாரப்போலவும் இருக்கவே மாட்டாங்க, மனுஷங்களே இல்ல அங்கே,  ரொம்ப பண்ணாதே நீயி”

”சரிடா விஷயத்துக்கு வா ,ஏன் ஒத்துக்க மாட்டாங்களாம், கொத்தமல்லி வீட்டில் சரி சரி முறைக்காதே, யக்‌ஷி வீட்டில்?

”அவங்கல்லாம் மலையாளிக மி!”

”அட என்னடா நாமளும் மலையாளிதானே? நாந்தான் நல்லா மலையாளம் பேசறேனே? இதை சொல்லிப்பார்க்கலாம் இல்லைனா நம்ம வீடு கூட பாலக்காட்டுக்கு பக்கத்தில்தான் இருக்குன்னு வேண்ணா சொல்லிப்பார்க்கலாமா?”

”அய்யோ மீ,   எதாவது உருப்படியா சொல்லேன் ப்ளீஸ்!’”

”மலையாளிகளில் நிறைய பிரிவு இருக்குமே அதில் இவ யாராம்?”

”போ, மீ அதெல்லாம் கேட்டுக்கிட்டா இருப்போம்?

”அட கேட்டு வைடா. நம்பூதிரியா இருக்க வாய்ப்பில்லை நம்பூதிரி பொண்ணுங்கெல்லாம் நல்ல வெள்ளையா, தலைமுடி கணுக்காலுக்கு இருக்கும், இவளுக்குத்தான்,,  ஓகே ஓகே விடு!

ஒருவேளை நாயர்னா பிரச்சனையே இல்லடா, நாமளும் நாயர்தானே, பேசி முடிச்சுக்கலாம்”

”என்னது  நாம நாயரா? கவுண்டர்னுதானே இத்தனை நாளா சொல்லிட்டு இருந்தே?”

”அதெல்லாம் ஜெ வை வாசிக்கறதுக்கு முன்னாடிடா, விவரமில்லாதவனா இருக்கியே, இப்போ ஜெ யாரு?”

”எழுத்தாளர்”

”டேய்!”

”சரி,  பெரிய எழுத்தாளர்”

”அட, அதில்லை அவரு நாயருடா!”

”அவரு நாயர்னா நாம எப்படி மீ நாயராவோம்?”

”என்னடா இப்படி இருக்கே? நாம எங்கே இருக்கோம்,  விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில்தானே?”

”நாம இல்லை நீ இருக்கே”

”நான் இருந்தா அது நாம எல்லாரும் இருக்கறதுன்னுதான் அர்த்தம். ஜெ சொல்லிருக்காரே //அன்னையரை, அவர்களிடமிருந்து வரப்போகும் தலைமுறைகளையும் சேர்த்துத்தான் மதிப்பிடனும்னுட்டு//

”ஆனாலும் நீ ஜெ எழுதறதெல்லாம் மனப்பாடம் பண்ணிட்டு பண்ணற அட்டகாசமிருக்கே ! சரி சொல்லு”

”விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் யாரோடது ஜெவோடது,ஜெ  யாரு ? நாயர், குல நாயர்.  விஷ்ணுபுரம் வட்டம்ங்கறது ஒரு அமைப்பில்லடா குடும்பம் நாம ஜெ எல்லாம் ஒரே குடும்பம்னா நாமளும் நாயர்தானே! இதைச் சொல்லி பொண்ணு கேட்றலாம் கவலைப்படாதே!”

”போ மீ நீ, நான் என்னவோ நீ நிஜமா சொல்லறீயோன்னு நினச்சேன்”

”அட நிஜம்தாண்டா!  உங்கண்ணன் ஒரு பிராமின் பொண்ணோட அடிக்கடி பேசிட்டு இருக்கானே அது  ஒருவேளை செட் ஆச்சுன்னா ஒரு பிரச்சனையும் இல்லாம கல்யாணம் முடிஞ்சுரும். நீதான் நாயர் கீயர்னு குழப்பியடிக்கறே!”

”ஏன், நாமளும்  பிராமின்ஸ்னு சொல்லப்போறீயா?

”சொல்லறதென்ன நாம பிராமின்ஸ் தாண்டா!’

”மீ ,ரொம்ப ஒவரா பண்ணறே!’

”அட! நிஜமாத்தண்டா ” ”நீயே சொல்லு, இப்போ நம்ம  கணேஷ் மாமா யாரு?”

”எந்த கணேஷ் மாமா? ஜெனிவா மாமாவா?” தெரிலை நீயே சொல்லிரு

”ஆமா அவரேதான் யாரு ?அசல் பிராமணர்!”

’”ஓகே அதுக்கு நாம எப்படிம்மா பிராமின்ஸ் ஆவோம்?”

”இருடா ,வரேன்,  கணேஷ் மாமா யாரு?

”என்ன மீ , இப்போதானே சொன்னே, அசல் பிராமின்ன்னுட்டு? திரும்பத்திரும்ப பேசறே நீ ஆமா”

இல்லடா அது ஜெனிவா கணேஷ் மாமா, இப்போ கேட்கறது சிங்கை கணேஷ் மாமா மாதங்கி அத்தை, சுபா அத்தை, அந்த சிங்கை மாமா!

ஓ பாட்டு மாமாவா ? அவரு யாரு?

என்னடா நீ அவரும் அசல் பிராமணர்”

”ஓகே மீ அவங்கஎல்லாம் மாமாதான்னாலும் நம்ம ரத்த  சொந்தமில்லையே எப்படி நாம் பிரமின்ஸ்னு சொல்லறே?”

”வரென் வரேன், இரு . உங்க விஜி மாமனிருக்கானே அவன் யாருங்கறே?

”மீ , வேண்டாம் சொல்லிட்டேன் விஜி மாமா உன் கூட பிறந்த தம்பி அவரையும்  பிராமின்னு சொல்லிறாதே!”

”அவன் என் தம்பியா இருந்ததெல்லாம் உங்க லக்‌ஷ்மி அத்தையை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முந்தின நாள் வரைக்கும்தாண்டா,

”எப்போ பிராமணப்பொண்ணான அவளைக் கல்யாணம் பண்ணி முழுநேரமும் அவளுக்கு புருஷனாவும் ஒழிஞ்ச நேரத்தில் கம்பெனியை பார்க்கறதுன்னு ஆயிட்டானோ.  அப்போ அவனும் பாதி ப்ராமின் தானே? வர ஆவணி அவிட்டதுக்கு உங்க மாமன் பூணூல் போட்டுக்கப்போறானே, தெரியுமா தெரியாதா உனக்கு?.

இன்னும் கேளு!”நம்ம மாதவன் மாமா யாருங்கறே?”

பெல்ஜியம் மாமாவா?

”அவரேதான் ப்ரியா அத்தையை கல்யாணம் பண்ணி இருக்கறதால அவரும் பாதி பிரமின் தாண்டா! உண்மையை சொல்லப்போனா நம்மளை சுத்தி எல்லா வேண்டியவங்களும் பிராமின்ஸ்தான் இனி உங்க ரெண்டு பேருக்கும் கவுண்டர் வீட்டில் பொண்ணு கேட்டா தரமாட்டாங்க பிராமின்ஸ்கெல்லாம் நாங்க தரமாட்டோம்னு சொல்லிருவாங்க பாரேன்.”

”நீவேணா, இந்த  – ஷா செட் ஆகலைனா பிராமின் யாராவதை பாரேன், தலை முடி கொஞ்சம் நீளமா இருக்கறாப்பல”

”மீ என்ன மீ ,என்னமோ இந்த கடை இல்லைனா, வேற கடைங்கறா மாதிரி ஈஸியா சொல்லிட்டு இருக்கே காதல் மீ, காதல்!

”சரி சரி விடு நாயருக்கே வரலாம், என்ன பண்ணறாங்க அந்த லாடு வீட்டில்?”

”அப்பா காலேஜ் ப்ரொஃபஸர், அம்மா எழுத்தாளர்

”பார்ரா! இனி என்ன எல்லாமே முடிஞ்சுருச்சுன்னு நினச்சுக்கோ, நானும் எழுத்தாளர், அதாவது கட்டுரையாளர்னா எழுத்தாளர்னும் சொல்லிக்கலாம்னு ஜெ  சொல்லிருக்காரு, நானும் ப்ரொஃபஸர், ஒரே குடும்பம் வாத்தியர் குடும்பம் அவ்வளவுதான். இனி என்ன சொல்லு”

”போமீ, உருப்படியா எதாச்சும் சொல்லு, ப்ளீஸ்’”

’”சரிடா, அவங்களை வெண்முரசு வாசிக்க சொன்னீன்னா, நாம எல்லாரும் ஜெ ஸ்கூலில் ஒண்ணா படிக்கறவங்க ஆயிடுவோம், அப்புறம் ஜாதியாவது இனமாவது குலமாவதுன்னு ஒண்ணு மண்ணா கலந்து சொந்தக்காரங்களாயிருவோமே! சொந்தத்தில் கட்டிக்க பிரச்சனையே இல்லையே!

”இல்லைன்னா அரங்கா மாமா, விஜயசூரியன் மாமாவவிட்டு நாம வெண்முரசு கொடி வழியில் வந்தவங்கன்னு அந்த நாயர்ட்ட  சொல்லச்சொல்லிட்டா அவங்களும் என்னமோ ஏதோ பெரிய கொடி வழிபோலன்னு நினச்சுக்கிட்டு பொண்ண தந்துருவாங்க,

அட எதுவுமே வேலைக்காகலைன்னு வச்சுக்கோ, இருக்கவே இருக்கு பிரம்மாஸ்திரம் அதை எடுத்துரலாம்”

”என்ன மீ அது?”

நான் நேரா ஜெ வீட்டுக்கே போய், சார், இப்படி இப்படி விஷயம் நீங்க பார்க்க வளர்ந்த பையன், அவனும் பிடிச்ச பொண்ணை கல்யாணம பண்ணி உங்களையும அருண்மொழியையும் போல கல்யாணதுக்கப்புறமும் தொடரும் பேரன்போட இருக்க வேண்டாமா? நம்மைச்சுற்றிலும் அறிவார்ந்த ஒரு உலகம் இயங்கிட்டு இருக்குன்னே தெரியாத ஆளுங்க இருக்காங்கன்னு சொல்லுவீங்களே, அப்படியாப்பட்ட வீட்டில் லவ் பண்ணிட்டான், அதனால நீங்க ஒருவார்த்தை பொண்ணு வீட்டில் பேசுங்கன்னு, வேண்டிக்கேட்டுகிட்டா நிச்சயமா சார் போனிலாவது பேசுவார்,

அவர் பொண்ணோட அம்மா அப்பாட்டெ ’’இங்க பாருங்க உண்மையில் குருதி கலப்பில்லா குலம்னு எதாச்சும், இருக்கா? இப்போ உலகளாவிய பெருந்தொற்றுக்கப்புறம் பிழச்சுகிடக்கற நாமெல்லாம் ஊழை உச்ச விசையுடன் எதிர்த்து நின்று, குலம் இனம் மொழியையெல்லாம் மறந்து  கல்யாணம் பண்ணி சந்ததியை பெருக்கினாதானே உலகம் உய்யும், பாசிமணிகளுக்குள் பட்டுச்சரடு போல வாழ்க்கைக்குள் விதி ஊடுருவியிருக்குங்கறத மறந்துட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னே வாழ்ந்துட்டு இருக்கீங்களே’’ன்னெல்லாம் பேசினா,  கதறிட்டு உனக்கு மட்டுமல்ல ,இன்னொரு பொண்ணிருந்தா உங்க அண்ணனுக்கும் சேர்த்து கொடுத்துருவாங்களே!

”நான் பார்த்துக்கறேன் கவலையில்லாம இரு, ஆனா அந்த கொத்தமல்லியை மட்டும் கொஞ்சம் கீரைக்கட்டாட்டமாவது வளர்க்க சொல்லு போ போ!”