லோகமாதேவியின் பதிவுகள்

Month: November 2018

நவம்பர் நாடகவிழா

 பொள்ளாச்சி தமிழிசைச்சங்கம்,  48ஆவது ஆண்டுக்கான நிகழ்வுகளாக, தமிழ்நாடு அரசு கலை பண்பட்டுத்துறையுடன் இணைந்து   2018 நவம்பர் 19,20,21. மற்றும் 22 ஆகிய நான்கு நாட்களிலும்  மேடை நாடகங்களை அரங்கேற்றியது.

கணினிப்பயன்பாடும், தொலைக்காட்சியும், இணையமும், வணிகத்திரைப்படங்களும் மக்களின் வாழ்வில் இணைபிரியா அங்கமாகி விட்ட இக்காலத்தில் அழிந்து வரும் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான மேடை நாடகங்களை பொதுமக்களுக்கு கொண்டுவந்து சேர்த்து, அக்கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் புத்துயிர் அளித்தது தமிழிசைச்சங்கத்தின் ஆகச்சிறந்த ஒரு சேவையாகும்

பள்ளிப்பருவத்தில் சோ, கிரேஸீ மோகன் எஸ்.வி சேகர் ஆகியோரின் நாடகங்களை பார்த்திருக்கிறேன். அதன் பின்னர் பல வருட இடைவெளிக்குப்பிறகு இன்று பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும் மகன்களுடன் இப்போதுதான் நாடகம் பார்க்கிறேன்.

துவக்க நாளான 19 ஆம் தேதி அன்று மாலை  ‘’சாணக்ய சபதம்’’ என்னும் புராண நாடகம் அரங்கேறியது. நாடகச்செம்மல் அமரர் R.S  மனோகரின் சகோதரரின் மகனான திரு சிவபிரசாத் அவர்கள் இயக்கி சாணக்யனாக நடித்துமிருந்தார். மதுரை திருமாறன் அவர்களின் எழுத்தில் வசனங்களும், R.S   மனோகர் அவர்களின் சிறப்பம்சமான பிரம்மாண்ட அரங்க அமைப்புக்களுமாக நாடகம் மிகச்சிறப்பாக இருந்தது, சிறு பிழைகூட இல்லாமல் அத்தனை நடிகர்களும் நடித்ததும், துல்லியக்காட்சி அமைப்பும் அபாரமான உடைவடிவமைப்புமாய் கிரேக்க அலெக்ஸாண்டரும், செல்லுகஸ் நிகேடரும் ரோஷனாவும் சந்திரகுப்தனும் பிற வரலாற்றுக் கதாபாத்திரங்களும் கண்முன்னே  வந்து, அக்கதை நடைபெற்ற அக்காலத்திலேயே நாம் இருப்பதுபோல ஒரு பிரமையை உண்டாக்கியது.

இரண்டாம் நாளின் இசை நாடகம் ‘ சத்தியவான் சாவித்ரி’’  தமிழ் நாடக உலகின் முன்னோடியான தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகள் இயற்றியது. மதுரையைச் சேர்ந்த தமிழ்நாடு நாடக நடிகர் சங்கத்தினர் நடத்தினார்கள்.  ஒரு இசை நாடகத்தின் எல்லா அம்சங்களுடனும் அருமையான அன்னிகழ்வு இருந்தது,

மூன்றாம் நாளான 21 ஆம் தேதியன்று திருவண்ணாமலை மாவட்டம் ஸ்ரீ மாரியம்மன் தெருக்கூத்து நாடகக்குழுவினரின் ’’வாலி வதம் மற்றும் சுக்ரீவன் பட்டாபிஷேகம்’’ அரங்கேறியது மிகப்பிரமாதமான அந்நிகழ்வில் அனைத்து நடிகர்களின் திறமையும் அர்ப்பணிப்பும் வெளிப்பட்டது. இரவு  முழுவதும் நீளும் நாடகத்தை அன்றைய தேவைக்கேற்ப 2 மணிநேரமாக சுருக்கி அமைத்திருந்தனர்

 பொருத்தமான ஒப்பனை,  அழகிய வண்ண உடைகள், உரக்க வசனங்களை பேசுவது, அந்த பாத்திரமாகவே மாறி விடுவது என பார்வையளர்களை வேறொரு உலகிற்கு அழைத்துச்சென்றனர் நடிகர்கள். பள்ளியில் தமிழ்ப்பாடத்தில் வாலி வதமும் அதன்பின்னர் தாரை அழுதுபுலம்பும் படலமுமாக படித்து தாரை என்னும் ஒரு துயர பிம்பம் மனதில் இருந்தது. இத்தெருக்கூத்தில் தாரை அறிமுகப்படலத்தில்  நடனமிட்டுக்கொண்டெ வருவதும், பளபளக்கும் அவரது  உடையுமாக இன்னொரு மாறுபட்ட சித்திரம் மனதில் உருவாகி ஆழப்பதிந்தது

மேடையின் பக்கவாட்டில் காட்சி மாறும் இடைவெளிகளில் அனுமன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததும், இராவணன் தொடர் வசனங்களால் காய்ந்துபோன  தொண்டைக்காக அடிக்கடி தேனீர் அருந்துவதும், லக்‌ஷ்மணராக நடித்த இளைஞர், வாட்ஸ் அப்பில் முழ்கி இருந்ததும் கவனிக்க முடிந்தது. ராவணன் பல முகங்களுடன் அந்தர் பல்டி அடிப்பதும்,  பேச்சு வழக்கில் வாலி ’அதொன்னும் problem இல்லை’ எனச்சொல்வதும், மேடையிலேயே மறைந்திருந்து வாலியை ஸ்ரீராமர் அம்பெய்து கொல்வதுமாக பல   சுவாரஸ்யமான காட்சிகளும் காணக்கிடைத்தது

நான்காம் நாளான 22அன்று  ‘’ நிதர்சனம் ‘’ என்னும் சமூக நாடகம் மாலி அவர்களின் இயகக்த்தில் கே. எஸ் . என் . சுந்தர் அவர்களின் கதை வசனத்தில் நிகழ்ந்தது. வழக்கமான அறிவுரை சொல்லும் உத்தியை மேற்கொள்ளாமல் இக்காலத்துக்கு ஏற்றபடி பல அழகிய வசனங்களும்,  எதிர்பாரா முடிவுமாக இருந்தது நாடகம். சாதிய வித்தியாசங்கள், கலப்புத்திருமணம், இட ஒதுக்கீடு, ஆச்சாரம், மத நம்பிக்கைகள் என பல மிக  முக்கியமான ஆனால் கவனத்துடன் அணுக வேண்டிய சமூக பிரச்சனைகளை சாதுர்யமாக கையாண்டு நாடகத்தை அழகாக நடத்தினார்கள். ஈஸ்வரன் IAS   அவர்களின் தந்தையாக நடித்தவரின் நடிப்பும் வசன உச்சரிப்பும் பிரமாதம். இவரெல்லாம் வெள்ளித்திரையில்  இருக்கவேண்டியவர். அவரின்  உடல்மொழியும் அபாரம். லக்ஷ்மியாக நடித்த செளம்யா ராம் நாராயண் ஒவ்வொரு காட்சிக்கும் அழகிய பல வண்ணப்புடவைகளையும் பொருத்தமான அணிகலன்களையும் மாற்றிக்கொண்டு வந்து அரங்கிலிருந்த பெண்களின் பெருமூச்சுக்களுக்கு காரணமானார்

காதலை பேசுபொருளாககொண்ட அனைத்து  நாடகங்களும், அது கல்யாணத்தில் முடியும்  சுபம் எனும் முடிவுக்கே வரும் வழக்கத்திற்கு மாறாக இந்நாடகம் வாழ்வின் நிதர்சனம் என்னவென்பதை அழகாக உணர்த்தியது பாராட்டத்தக்கது

 பார்வையாளர்கள்  திரளாக வந்திருந்ததும், நிகழ்வு முடியும் வரை அரங்கிலிருந்து ரசித்ததும் , பல கைதட்டல்களுக்கு இடையில் நாடகங்கள் நிகழ்ந்ததும் இதுபோன்ற ஆதாரக்கலைகள் முற்றிலும் அழியாது,  புத்துயிர் பெற்று மீள எழுந்து வரும் என்னும் நம்பிக்கையை தோற்றுவித்தது.

இசை நாடகம் மற்றும் தெருக்கூத்துக்கலைஞர்களின் உடைகள்  நைந்திருந்ததும், ராவணனுக்கு 8 தலைகளே இருந்ததும் அதுவும் cardboard அட்டையில்  செய்தவையென்பதும், அக்கலையும் கலைஞர்களின் வாழ்வும் நலிந்திருப்பதைக்காட்டும் குறியீடாகவே தோன்றியது. தெருக்கூத்து நடத்தியவர்கள் முப்பாட்டன் கால்த்திலிருந்து பல  தலைமுறைகளாக இக்கலையை தொடர்வதும், நாடகத்தின அங்கத்தினர் அனைவரும் ஒரே குடும்ப உறுப்பினர்களே என்பதும் வியப்பிலும் வியப்பு. பொருளாதார மேம்பாட்டை பெரிதாக நினைக்காமல் உண்மையான கலையார்வத்துடனிருக்கும் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

பிண்ணனித்திரைச்சீலையை மாற்றியே அரங்கை சிறைச்சாலையாகவும் கோவிலாகவும் அந்தப்புரமாகவும் வீட்டுக்கூடமாக்வும் அழகாக மாற்றுவதும், நாடகத்துக்கு தேவையான் மிகை ஒப்பனையையும்  மிக நடிப்பையும் தேவை அறிந்து அளவுடன் கொடுப்பதுமாக வெற்றிகரமாக நடந்தன அத்தனை நாடகங்களும்

நிகழ்வு முடிந்து அவர்கள் பாராட்டப்படுகையில் போர்த்தபட்ட  அந்த எளிய பொன்னாடை அவர்களின் முகத்தில் தோற்றுவித்த உணர்வெழுச்சிகளை என்றென்றைக்கும் மறக்க முடியாது. நாடகத்தில் ’ரீடேக்’ என்பதே இல்லயென்பதால் கடும் பயிற்சியின் பின்னரே அவர்கள் அதை வெற்றிகரமாக செய்யமுடியும். எனவே இந்த நாடகங்களில் நடித்த அனைவருமே உண்மைக்கலைஞர்கள் . கேரளத்தைப்போல நாடகக்கலையை  தமிழ்நாடு ஊக்குவிப்பதில்லை என்னும் குற்றச்சாட்டைப்பொய்யாக்க இனி இதுபோன்ற முயற்சிகள் தமிழகமெங்கும் நடைபெறவேண்டும்

பார்வையாளர்களில் கல்லூரியில் படிக்கும் என் மகனும் பள்ளிக்குழந்தைகளுமாக கலந்து கொண்டிருந்தது  இன்னும் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. இனி தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகளைக்காண முதல் நாளே தமிழைசைச்சங்கத்தில் உறுப்பினராக சந்தா கட்டினேன். இப்பதிவினை படிக்கும் அனைவரையும் தொடர்ந்து நாடகங்கள் பார்க்கவேண்டும் என்றும் பரிந்துரைக்கிறேன். இந்த விடுமுறையை  தொடர் வாசிப்பிலும் நாடகங்கள் பார்ப்பதிலுமாக செலவழிக்கும் படி நான் அருளப்பட்டிருப்பதில் மகிழ்கிறேன்

ஈட்டி

 

 

நண்பர் குமார் அம்பாயிரத்தின் ஈட்டி என்னிடம் வந்து சேர்ந்து சற்றேறக்குறைய ஒரு மாதமே ஆகிவிட்டது எனினும் கல்லூரி வேலை நாட்கள் முடிந்து விடுமுறை துவங்கிய பின்னர் வாசிக்கலாமென்றே இத்தனை காலம் எடுத்துக்கொண்டேன்.  ஆனால் கூர் நுனிகளைக்காண்கையிலும்,  வெண்முரசுபோர்க்களககாட்சிகளில் அவற்றைக்குறித்து வாசிக்கையிலும்  எப்போதும் என் வீட்டைக்கடக்கும் ஏராளமான பறவைக்கூட்டம் ஈட்டிமுனை வடிவில் பறக்கையிலும் அந்த புத்தகம் பிரிக்கப்படவும் வாசிக்கப்படவும் காத்திருபப்தை நினைத்துக்கொள்வேன்

புத்தகத்தின் முகப்புப்படம் எப்படியோ எனக்கு வாட்ஸப்பில் விளையாட்டிற்கான காகிதத்தொப்பிகளை வைத்துக்கொண்டு இருக்கும் எளிய குழந்தைகள் சூழ அம்பாயிரம் இருக்கும்  படத்தை  நினைவூட்டியது . தொகுப்பை வாசித்து முடித்ததும்தான் இத்தொகுப்பில் உள்ள  அனைத்துக்கதைகளுமே மாய யதார்த்தக்கதைகள் என்பதை முன்னரே அப்படம் சொல்லியிருக்கிறது என்றறிந்தேன்

.இதுபோலக்கதைகளை அவ்வப்போது யுவன், கோணங்கி இவர்கள் எழுத்தில் வாசித்திருந்தாலும்  ஒரு தொகுப்பாக  எட்டுக்கதைகளை இப்போதுதான் சேர்ந்தாற்போல வாசிக்கிறேன்,

காணாமற்போகையில் அவரைத்தேடுபவர்களுக்காக இத்தொகுப்பை சமர்ப்பித்திருப்பது  புன்னைகையை வரவழைத்தது  அவரை கொஞ்சம் அறிந்திருப்பவள் என்னும் வகையில்

ஈட்டியை வாசித்துமுடித்த பிரமிப்பிலிருக்கிறேன் இன்னும். நிலவடிவமைப்பாளராக வாசு சாரால் அறிமுகம் செய்யபட்டு பின் நேரில் பார்க்கையில் அலையலையாகப்படிந்த சிகையும், ஒற்றைக்காதுக்கடுக்கனும் கனவில் தோய்ந்த கண்களுமாக இசைக்கலைஞரைபோலிருந்த, கைவிடபப்ட்ட பாழ்நிலங்களில், வறண்ட பூமிகளில் மறைந்திருக்கும் உயிரைத்தேடிக்கண்டுபிடித்து அதை வளமானதாக மட்டுமன்றி அழகானதாகவும் வஞ்சமின்றி விளையும் மண்ணாகவும் மாற்றும், அழைக்காத பாதைகளையெல்லாம் தேடித்தேடிச் சென்று வாழ்வைத்தொடரும், , அவ்வப்போது அழகியகவிதைகள் சொள்லும், வெட்டப்பட்ட இரண்டு ஆரஞ்சு மரங்களுக்காக துக்கிக்கும் ஒருவரான குமாரிடமிருந்து இப்படி ஒரு ஆழ்ந்த படைப்பினை நான் எதிர்ப்பார்க்கவேயில்லை  என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்

பல ரகசிய உலகங்களுக்கு கைப்பிடித்துகூட்டிச்செல்கிறார். கதைகளின் தலைப்புக்களும் கதாபாத்திரங்களின் பெயர்களும் மர்மமாகவும் கேள்விப்படாததாகவும் வசீகரிப்பதாகவும் உள்ளன, ’’ன்யாக், டிங்கோ(சைக்கிளீல் வரும் ’’டிங்கா எனப்பெயரிடப்பட்ட அந்த கரிய அழகியை நினைத்துக்கொண்டேன் இதை வாசிக்கையில்), அக்,  தேடூ, என்று

தொகுப்பு முழுவதும் என்னுடனேயே, காகங்களும், காக்கட்டான் பூக்களூம், சுற்றிக்கட்டப்பட்ட துணியுடன் குழியிலிருந்து மேலெலும்பிய பிரேதமும், நாய்களும், கன்றை இழந்த பசுவும், பனையும், எருமையும் பன்றியும், ஆச்சா  மரமும், குறிசொல்பவனும், தேள்களும் நட்சந்திரங்களும், குதிரையும், குர்தையும், கழுதையும், ’’ன்யாக்’’ ஆவிகளும், புறாக்களும் அலைந்துகொண்டிருந்தன.

கதைசொல்லியான குமார் புனைவு மற்றும் மர்மத்தன்மை கொண்ட இக்கதைகளை  இவ்வுலகிற்கு வெளியேயிருந்துதான் எழுதியிருப்பார் நிச்சயம்

சில இடங்களில் அவரின் மொழிநடையும் விவரிப்பும் வியப்பளித்தது மேலும் அவை என்றென்றைக்கும் மறக்கவியலாதவையாகவும்  ஆகிவிட்டன மனதில்

பாழடைந்த இரவுகளின் கருநீலம் நொறுங்கிக்கிடக்கும், வயிறு கிழிந்து இறந்துபோன் புறாக்களின் கண்கள்,  மயானத்தின் சூரை முட்களில் மாட்டிக்கொண்டு வா வா என அழைத்துக்கொண்டிருக்கும்  கிழிந்த சவத்தின்மேல் போர்த்தப்பட்ட துணிகள்,கண்ணாடியின் குறுக்கே வழியும் நீரொழுக்கைபோல கண்ட ‘ன்யாக்’, அது  இதயத்திற்கருகே வந்து கிசுகிசுப்பது, ஒரு போர்வையைப்போல கதப்பாக அது அளிக்கும் ஸ்னேகிதம், அன்பின் பெயரால் கட்டாயப்படுத்தலும், கட்டாயப்படுத்தலே அன்பாகவும் நொறுக்கப்படும் ஒரு பெண், பற்கள் தடுத்ததால் உதிராமல் வாய்க்குள்ளேயே  நிறைந்து விட்ட மரணப்பூ,, எதிர் எதிர் திசையில் கிளம்பி ஒன்றையொன்று தழுவிக்கொள்ளும் நெருப்புவரிகள் எச்சுவையும் இல்லாத ன்யாக்கின் தேனீரைக்குடித்ததும்  நொறுங்கும் இரவுகளின் ஆழத்தால் பின்னப்பட்ட உணர்வுகளின் உறைநிலை , காலையில் அழைதத ஒலி மாலையில் எதிரொலித்துக் கேட்பது, மேகங்களில் தங்கியும் விடுபட்டும் தொடரும்  நிலா, வாழ்வின் சகலத்த்தையும் இழந்த பின்னும் உயிர் தரித்திருப்பதற்கான உந்துதல், நம் சக்திகளுக்கு அப்பாற்பட்ட நியதிகளால் கிழித்தெறியப்படும், வாழ்தலுக்கான கதகதப்பின் வெண்ணிறப்போர்வை, காகங்களின் இறகு மடிப்புகளுக்குள்  மின்னும் கருத்த ஆழங்கள், காகத்தை ’கருஞ்சாந்து’ என்பது, பிச்சைப்பாத்திரத்தில் பூக்கும் ரத்த நிற மலர்கள், சுனைகளைக்கடந்து வரும் காற்றின் குளிர்மை, சாராயக்கடையில் நீந்தமுடியாமல் சிதறிக்கிடக்கும் மீனின் எலும்புகள் இப்படி ஏராளம் சொல்லிக்கொண்டேயிருக்கலாம். ஏன் குமார் தொடர்ந்து எழுதுவதில்லை என்னும் கேள்வி எனக்குள் 2 பக்கங்களுக்கு ஒருமுறை  எழுந்துகொண் டேயிருந்தது.

இக்கதைகளிலிருக்கும் மாயத்தன்மைகளை, மர்மங்களை , புனைவுகளை வெளியில் நம்பமுடியாதென்று சொல்லிக்கொண்டே என் உள்மனம் ரகசியமாய் அவற்றில் ஆழ்ந்து அவ்வுலகிலேயே ஊறும் நிழல்களையும், உதிரும் மலர்களையும் பார்த்தபடி , பால்பிடித்த கதிர்களை நெருப்பில் வாட்டி தின்றுகொண்டு, கரையில் கையைப்பிசைந்தபடி  காத்திருக்கின்றது வெளியேறும் விருப்பையும் விருப்பமின்மையையும் ஒருசேர சுமந்துகொண்டு

பல கவிதைக்கணங்களுமிருக்கின்றது தொகுப்பில்.//சூரிய ஒளியில் வண்ணமாகத்தெறிக்கும்  நீர்த்தெறிப்பில் டிங்கோ துள்ளிக்கொண்டிருப்பது,,  முன்கால் முடங்கிய வீனஸுடன் நிலவின் புலத்தில் திரும்பிவருவது,, நரிகளுக்கெட்டாத திராட்சைகளைப்போல நட்சத்திரங்கள் முளைவிடுவது, இலைகள் மேல்காற்றிலும், இரவுகள் கீழ்க்காற்றிலும் உதிர்வது, கூர்மையான வளைந்த சொற்களால் சதையைக்கீறுவது//  இப்படி. எல்லாம் அழகு

க அத்தனைகதைகளிலும் எனக்கு ஈட்டி அந்தரங்கமாகப்பிடித்திருக்கிறது.

பாலுறவுச்சித்தரிப்புக்களும் பாலுறுப்புக்களின் வர்ணனைகளும் சில கதைகளில் அதிகமிருப்பதை தவறென்றோ சரியென்றோ சொல்லத்தோணறவில்லை , இதுபோன்ற அப்பட்ட விவரிப்புக்கள் அதிகம் இருக்கும் கதைகளை முதல்முறையாகப்படிக்கிறேன் என்பதைத்தவிர

குறைகள் என்றால் அதிகம் தட்டச்சுப்பிழைகள் இருக்கின்றன. மறுபதிப்பு செய்யபடுமேயானால் அவற்றை கட்டாயம் தவிர்க்கவேண்டும். (’அவன்’ பல இடங்களில் ’அவளாகி’ வருவதும் மாயக்கதைச்சூழலில் சரிதான் என்பதுபோல ஒரு மயக்கத்தைத் தந்தது. )

குமார் இன்னும் நிறைய எழுத வேண்டும்

பரியேறும் பெருமாள்

பரியேறும் பெருமாள் பார்த்து முடித்த அடுத்த கணத்திலிருந்து இதை எழுதுகிறேன். காலச்சுவடில் விமர்சனம் வாசித்தேன் எனினும் உண்மையில் திரைமொழியைவிட  வேறெதுவும் இத்தனை வீரியமாக இக்கதையைச்சொல்லிவிடமுடியாது என்பதை பார்த்தபின்பே உணர்ந்தேன். இது  ஒரு திரைப்படம், பொழுதுபோக்குவதற்கானது என்னும் எண்ணத்தில்தான் ஒரு தன்ணீர்பாட்டிலும் கொஞ்சம் நொறுக்குத்தீனியுமாய்  நொச்சிமரத்தடி மேசையில் என் மடிகணினியுடன் பார்க்கத் துவங்கினேன்

இது பொழுதைபோக்கும் படமல்ல  விளிம்பு நிலை மக்களின் வாழ்வை, அதன் அவலங்களை  ஆதிக்கச்சாதியினரின் வெறியை, இவற்றை அறியாமல் முகிழ்க்கும் ஒரு பதின்பருவக்காதலை இப்படிப்பலதை நம் இதயத்தைக்கீறிக்கீறி , அழுத்தமாகச்சொல்லும் படம் என்பதை  படம்  துவங்கிய சில காட்சிகளிலேயே அறிந்தேன்.

அவசானக்காட்சிகளில், ‘’ கொல்லுடா அவனை’’ என ஈரக்கண்களுடன் உரக்க சத்தமிட்டுக்கொண்டிருந்தது நான்தான் என்பதை இப்போதும் எந்த கூச்சமும் இன்றி நினைவு கூறுகிறேன்.  புகழாரங்களுக்கும், பரபரப்புக்களுக்கும் மத்தியில் வலம்வரும் சர்க்காரும், 96ம் , திரையிடப்படுகையில் அவற்றுடன் வெளியாகியிருக்கும் இதுபோன்ற படங்களுக்கு என்னுடையதைபோல  மனமார்ந்த ஒரு சில எதிர்வினைகளாவது வேண்டுமல்லவா!

எப்படியோ துவக்ககாட்சியிலேயே அந்த கருப்பியின் அறியாக்கண்களை கண்டதும் அதன் முடிவை மனம் யூகித்துவிட்டது. காலடியில் எச்சில் சோற்றுக்கு வாலாட்டிக்கொண்டிருக்க வேண்டிய நாய்கள் உருவிவிட்ட உடலுடன் துள்ளும் இளமையும் திமிறும் உடலுமாய்  நேர்க்கொண்ட பார்வையுடன் வேட்டைக்கு சென்றால், ரயிலுக்கடியில் கூழாக வேண்டும் என்பதை ஆதிக்கச்சாதியினரின் பார்வையில்  நமக்கு சொல்லிவிடுகிறது படம்

பாத்திரத்தேர்வு மிக அருமை. செல்வத்தின் செழுமை கன்னத்தில் பளபளக்க அறியாப்பெண்ணாய் அவள், கொதிக்கும் குருதியுடன்  இளமைக்கெ உரிய ஆர்வமும், தாழ்த்தபப்ட்ட சாதியினருக்கான தயக்கமும் , இயல்பானநேர்மையும் , நடக்கும் காரியங்களின் குழப்பம் கண்களிலுமாக, கதிர், அந்த வாடகைக்கொலையாளியைப்போல சித்தரிக்கப்பட்டிருக்கும் நபர் உண்மையிலேயே திகிலைக்கிளப்பினார் எனக்கு. துளிதயக்கமும் இல்லமல் உறுதியான காலடிகளுடன் அவர் இரையை நெருங்குவது, உயிருடன் இருக்கும் பெண்ணையும் சாகடித்து தூக்கில் மாட்டுவது, பேருந்தில், மிக இயல்பாக ஒரு கைநகர்த்தலில் அந்த இளைஞனை கொல்வது,  நீரில் மூழ்கியபபடியே இன்னொரு அறியாச்சிறுவனைக் கொல்வது, கெளரவக்கொலையை குலச்சாமிக்கு வேண்டுதலைப்போல பெருமையுடன் செய்வது, எந்த உணர்ச்சியுமின்றி தவலையில் வாய் வைத்து விலங்குபோல நீரருந்துவது, அவரின் உடல்மொழியும் பட்டைபெல்ட்டும் கட்டுமஸ்தான உடலும் என்னைக்கலக்கியது

ஹாலிவுட் படங்களில் கூட இப்பாத்திரத்துக்கு இத்தனை சரியான தேர்வு இருந்ததில்லை. இறுதிக்காட்சிகலில் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் சண்டையிட உருண்டுவரும் காட்சிகளிலெல்லாம் அபாரமாக  நடித்திருந்தார்

கல்லூரிக்காட்சிகளும் இயல்பாக இருக்கின்றது, ஆங்கிலவழிப்போதனையில் சிரமப்படும் முதலாமாண்டுமாணவர்கள், அந்த பேராசிரியை ’’ஆத்திச்சூடி’’ படி போ’’ என்று கத்தியபொழுது, கடந்த மாதம் எங்கள் மத்தியில் நாஞ்சில் சார் சொன்னதை நினைத்துக்கொண்டேன்.  நிலவின் பிறை போலிருக்கும் வெள்ளை ஆத்திமரத்தின் ( அகத்தி ) மலரைச்சூடியவனே! என்னும் பொருளறியாது ஒரு ‘’ச்’’ இடையில் சேர்த்து தப்பாகவே இன்னும் அது கற்றுக்கொடுக்கப்படுகின்றது என்றும் ’ச்’ சேர்க்காமல் ஆத்தி சூடி’ யென்றே அது சொல்லப்படவேண்டுமென்றும் சொல்லிக்கொடுத்தார்

ஆங்கிலத்துக்கு தமிழ் பரஸ்ரம் உதவிக்கொண்டு பரீட்சையில் பாஸாவது, சின்ன பெரிய C ,  இதெல்லாம் வெகு இயல்பு மற்றும் உண்மை

அந்த PTM   காட்சியில் அப்பா’’நடிகர்’’ அபாரமாக நடித்திருந்தார்

சேற்று மண் இறுகிகெட்டிப்பட்டதைபோல அதிகம் பச்சையில்லாத ஒரு கதைக்களம் பல சமயங்களில்   காமிரா பெரும்பாலும் சென்னிறப்பரப்பும்  இடையிடையே பச்சை சதுரங்களாக வயல்களுமாய் உயரத்திலிருந்து அந்த கிராமத்தை கவிதையாக காண்பிக்கிறது

அந்தப்பெண்னின் குறுகுறுப்பை  அகலக்கண்களின் வெளிப்பாடுகளை, காதலில் குழையும் உடலை, அறியா மழலைப்பேச்சை நாம் உடனிருப்பதுபோல் அத்தனை துல்லியமாக காமிரா காண்பிக்கின்றது

அதைப்போலவே அவ்விளிம்பு நிலை மனிதர்களின் வாழிடத்தை அத்தனை தத்ரூபமாகக்காண்பித்திருக்கிறார்கள்  அடிக்கடி கொண்டாட்டமாய் நடனம், குளித்து நாளான அழுக்கு உடைகள் பெரும்பாலும் மேல்சட்டையில்லா ஆண்கள்,  காவல் நிலையக்காட்சிகள்,

அந்த தூக்கில் மாட்டப்பட்டு இறக்கும் பெண்னின் வீட்டில் அவள் அம்மாவாக நடித்தவர் மிகப்பிரமாதம்.   தொழில் முறை நடிகைகள் கூட தோற்றுப்போகும் நடிப்பு

’’அவங்களுக்கு வயலும் வரப்பும், நமக்கு வாயும் வயிறும் ’’ ‘’ஒண்ணாப்படிச்சா ஒண்ணாயிருவீங்களாடா’’ எனும் வசனங்கள் மொத்தக்கதையின் சாராம்சம்

கல்யாணவீட்டில் கதிரை அடிக்கும் காட்சிக்குப்பின்னரான,  பிண்ணனியில் பாடல் ஒலிக்கும் காட்சியில் சாதியசாயம் நீலமாக நாய்க்கும் சின்னஞ்சிறு அம்மணக்குழந்தைக்கும் கூட பூசியிருப்பதும் காலம்காலமாக அவர்களை தளைக்கும் கயிறுகளால்  அவ்விளைஞன் கட்டப்பட்டிருப்பதும் அவன் அதிலிருந்து விடுபட திமிறுவதும்  நூற்றாண்டுகளாக அவர்களுக்குள் அடக்கப்பட்ட அந்த இழிவு நஞ்சென, நாகமென வழுக்கிக்கொண்டு அவன் காலடியில் செல்வதுமாய் அருமையாக கட்டமைக்கபட்டிருந்தது

அந்த ஸ்டோர் ரூமில் வாழைத்தாரிலிருந்து கைக்கு கிடைத்த எல்லவற்றிலும் கதிரை நிஜமாகவே அடிக்கிறார்கள். பதை பதைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தேன் அக்காட்சியை

பரியனின்/கதிரின் அப்பவைப்பற்றிய கேள்விக்கெல்லாம் எப்போதும் ஏன் மழுப்பலாக தடுமாறிக்கொண்டு பதிலளிக்கிறான் என்னும் கேள்விக்கும் மிக நெகிழ்சியான பதிலிருக்கின்றது கதையில்

அவருமென்ன அத்தனை அட்டகாசமாக நடித்திருக்கிறார்?

அந்த மனிதரின் நசுங்கியது போன்ற முகமும், ஒடுங்கிய தேகமும் வறுமையில் சுக்காக  காய்ந்திருக்கும் உடலும் கைவிடப்பட்டவர் போன்ற தோற்றமும் ஒட்டுமொத்தமாக பல யுகங்களாக காலடியின் கீழிட்டு மண்ணோடு மண்ணாக மிச்சமின்றி நசுக்கியும் இழிவுபடுத்தியும் வைத்திருக்கும் கீழ்த்தட்டு மக்களின் பிரதிநிதியாகவே  அவரைக்காட்டுகிறது என்றே எனக்குத்தோன்றியது

கண்கள் கசிய நான் திரைப்படம் பார்த்து பல ஆண்டுகளாயிற்று என்பதை அந்த அப்பா பாத்திரம் வரும்போதெல்லாம் உணர்ந்தேன்

அந்த ஜோவின் அப்பா பாத்திரமும் நல்ல தேர்வு, மகள் மேலுள்ள பாசமும், சாதீயபற்றும், அறத்தின் மீதான மிச்சமிருக்கும்  கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கையுமாக அவரும்  பிரமாதப்படுத்தியிருக்கிறார்

ஜோ அவளின் கையில் பேனாவால்  jo என்று எழுதிவிட்டு, அதன் கீழே மெல்ல  p எழுதுகையில் தயங்கி மெல்ல அவ்வட்டத்தினை பூர்த்தி செய்வது  ஒரு சிறு கவிதையின் அழகு

கல்லூரி துவக்கத்தில் பரியனின் மீது ஆச்சர்யமும் அவன் அறியாமையின் மீது பச்சாதாபமும் பின் மெல்ல நட்பும் பிரியமும் முகிழ்ப்பதை அழகாக உடல்மொழியில் காட்டியிருக்கிறார் நாயகி

பின்வரிசையிலிருந்து முன்வரிசைக்கு பரியன் வரும் காட்சிகள் எல்லாம் அருமை. கழிவறைக்குள் அவன் தள்ளிவிடப்பட்டபோது எனக்கே ஆயாசமாக இருந்தது மேலெழுந்து வருவது என்பது இனி எப்போதும் சாத்தியமில்லை எனும் அவநம்பிக்கையில் நொந்துபோனேன்

அவ்வப்போது கொச்சையான  குரலில் நாடன்பாடல்கள் பிண்ணனியில்  ஒலிப்பது கதைக்கு சொல்லவொன்னா துயரையும் வலுவையும் சேர்க்கின்றது. அந்த பரியனின் அப்பா நடிகர் பெண்வேடமிட்டு ஆடும் காட்சியிலும் காதலை பிரிவை ஏக்கத்தை சொல்லும் உச்ச்ஸ்தாயியிலான அப்பாடலும்  மனதைப்பிழிகின்றது

அந்த நடனத்தை நாமும் பரியனின் கண்களின் வழியே துயருடன் தான் பார்க்கிறோம்

காரின் கண்ணாடியை கல்லெறிந்து உடைத்துவிட்டு அந்த துவாரம் வழியெ  காறி உமிழ்ந்தபின்னர் பரியன்  கேட்பதெல்லாமே ஆதிக்கச்சாதியினரை, நாக்கைப்பிடுங்கிக்கொண்டு சாகச்சொல்லும் கேள்விகள்.

ஜோவின் அப்பா இறுதியில் ‘’ பார்க்கலாம் தம்பி நல்லாப்படிங்க, இனிமே என்ன நடக்கும்னு  யாருக்குத்தெரியும் மாறலாம் இந்நிலைமை’’ என்பதுபோல சொல்லும் ஒரு வசனத்தில் அடக்கபட்ட வர்க்கத்தினருக்கான ஒரு நம்பிக்கை இழை தெரியுதென்று நான் நினைப்பதற்குள், பரியன் ’’இல்லை நாங்க நாயா இருக்கனும்னு நினைக்கும் நீங்க நீங்களா இருக்கும் வரைக்கும் எதுவுமே மாறாது’’ என்று அந்நினைப்பில் மண்ணள்ளிப்போடுகிறார்

 கருப்பியைப்பாடையில் தூக்கிச்செல்லும் காட்சியிலும் பிண்ணனிப்பாடல் இதையே சொல்கிறது ‘’ நாயல்லடி நீ  நானல்லவா நீ’’ என்று

மாரிசெல்வராஜின் ’’ஆண்பால் பெண்பால் அன்பால் ‘’ வாசித்தபோது அவரை நேரில் பார்த்து வாழ்த்துச்சொல்லனும் பாரட்டுகக்ளைத் தெரிவிக்கனும்னு நினைத்திருந்தேன், இப்படத்தின் இறுதியிலும் வெள்ளை வேட்டிசட்டையில் ஆதிக்கச்சாதியினரான ஜோவின் அப்பாவும், மேலெழுந்துவரும், நேர்மையான அடக்கப்பட்ட ஆத்திரத்தையும், எதோ ஒரு நம்பிக்கையில் புதைத்துக்கொண்டு நிமிர்ந்துநடக்கும் அச்சமுதாயத்தின் பிரதிநிதியாக பரியனும் இவர்களுக்கிடையில் அறியாபபென்ணாய் பச்சைப்புடவையும் மல்லிகையுமாக துள்ளிக்கொண்டு சதிகளும் வஞ்சமும் சாதியும் தொட்டிருக்காத பிரியத்தின் தூய்மையுடன் அப்பெண்ணுமாய் முடியும்போது  மாரியைச்சந்தித்து அழுத்தமாக கைகுலுக்கனும் என்று விரும்பினேன்

சமீபத்தில் இப்படி ஒரு முழுநாளை ஒரு திரைப்படத்தை பார்க்கவும் அதைக்குறித்துச் சிந்திக்கவும் எழுதவுமாய் செலவழித்ததே இல்லை

மனம் நிறைந்தும் கனத்தும் இருக்கின்றது

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑