லோகமாதேவியின் பதிவுகள்

Category: நூலறிமுகம் (Page 1 of 2)

சமர்ப்பணங்கள்

வாசிப்பிற்குள் நான் மிக இளமையிலேயே நுழைந்துவிட்டேன் என்றாலும் அப்போது அவை திருட்டுத்தனமான வாசிப்பென்பதால் அத்தனை மகிழ்ந்து வாசித்திருக்கவில்லை அப்பாவுக்கு பெண்கள் கதைப்புத்தகம் வாசிப்பதில் பெரும் ஆட்சேபணை இருந்தது, வாரப்பத்திரிகைகளுடன் என்னையோ அக்காவையோ பார்த்துவிட்டால் வீடு இரண்டுபடும். அவர் வீட்டில் இல்லாத சமயங்களில் அவசரமாக படிப்பதுண்டு.

அப்போது பெரும்பாலும் காதல் கதைகள் தான் வந்துகொண்டிருந்தன என்பதும் காதல் திருமணத்தின் எல்லா பாதகங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர் என்பதையும், இப்போது நினைக்கையில் அப்பாவின் அந்த மூர்க்கத்தை கொஞ்சமாகவேனும் புரிந்துகொள்ள முடிகின்றது

சுதந்திரமாக வாசிக்க தொடங்கியது நூலகம் சென்ற கல்லூரிக் காலங்களில் தான் அப்போதும் வீட்டுக்கு பின்னே இருந்த கல்லூரி என்பதால் அதிக நேரம் செலவழிக்க முடிந்ததில்லை. கோவை பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களுக்காகச் சென்று விடுதியில் தங்கியிருந்தபோது தான் ஏராளம் வாசித்தேன். என்னை முழுக்கவே வாசிப்பு அப்போது மூடிக் கொண்டிருந்தது.

பல்கலைக்கழகத்துக்கு எதிரே   A-Z  என்று ஒரு இரவல் புத்தக நிலையம் இருந்து. அங்கே பெண்கள் கூட்டம் அலைமோதும் ரமணிசந்திரன் அங்கேதான் ஏராளமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தார். ஒரு வாரத்தில் திருப்பி கொடுக்கையில் புத்தகங்களில் குறிப்பிட்டிருக்கும் விலையில் 10 சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படும். பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு பேருந்தில்  பயணித்த அந்த சில வருடங்களில் எப்போதும் என்னுடன் எண்டமூரியோ, சுஜாதாவோ, பாலகுமாரனோ, லா சா ரா வோ , தி ஜாவோ உடனிருந்தார்கள். அப்போதுதான் அ முத்துலிங்கம் அவர்களையும் அறிந்து கொண்டிருந்தேன்

அ.முவின் கதைகளின் மாந்தர்கள், கதைக்கரு, நிலக்காட்சிகள் என்ற அத்தனை சுவாரஸ்யங்களைக் காட்டிலும் அவரது தூய இனிய மொழி என்னை கவர்ந்தது. இலங்கை தமிழின் மீது எனக்கு எப்போதும் தனித்த பிரியம் உண்டு. மொழியின்பத்துக்காகவேதான் நான் பிரதானமாக அவரது கதைகளை வாசித்தேன்

என்  ஆய்வு நெறியாளருக்கு கோத்தகரி வனக்கல்லூரிக்கு மாற்றலானதும்  இரண்டு வருடங்கள் பொள்ளாச்சி- கோவை- மேட்டுப்பாளையம்- கோத்தகிரி என்று கூடுதலாக பயணங்களும் கூடுதல் வாசிப்புமாக இருந்தேன். அட்டையிலிருந்து அட்டை வரை நிதானமாக வாசித்த அச்சமயத்தில்  புத்தகங்களை யாருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்கள் என்று பார்ப்பதும் விசித்திரமானவைகளை  குறித்து வைத்துக்கொள்வதும் வாடிக்கையாக இருந்தது.

தனக்கு பிரியமான சிவப்பு மதுவுக்கு, மனப்பிறழ்வு நோய்க்கு தானெடுத்துக் கொள்ளும் மருந்துக்கு, இறந்த தன் மனைவிக்கு போன்ற சமர்ப்பணங்கள் இருந்தன. தனது, ஏராளமான, நெருக்கமான காதலிகளுடனான  உறவைச் சொல்லிய நூலொன்று எழுதியவரின் மனைவிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது):. தன்னை முதன்முதலாக நூலகத்துக்கு அழைத்துச் சென்ற தனது அன்னைக்கு ஒரு நூல், தனக்கு பிரியமான முலாம்பழத்துக்கும் ஒருநூல் அர்ப்பணமாயிருந்தது.

2016 எனக்கு மிக முக்கியமான ஒரு ஆண்டு முதன் முதலாக வீட்டைவிட்டு, மகன்களை பிரிந்து  மற்றொரு இடத்தில் ஒரு மாதம் தங்கி இருந்து சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருந்த கொந்தளிப்பான காலமது.  ஒரு மாத கால துறை சார்ந்த பயிற்சியையும் அச்சமயத்தில் எடுத்துக் கொண்டிருந்தேன். பல்கலைக்கழக பேருந்தில் பயிற்சிக்கு செல்லுகையில் நட்பான பேராசிரியர் ஒருவர் எனக்கு அ. முவின் ‘’மகாராஜாவின் ரயில் வண்டி’’ தொகுப்பை வாசிக்கக் கொடுத்தார். நூலாகவோ அல்லது மின்னூல் வடிவிலோ அல்லாது நகலெடுத்த பக்கங்களை இணைத்து புத்தகமாக்கிய வடிவம் அது

நாள் முழுக்க நீண்ட பயிற்சியின் முடிவில் களைத்துப் போயிருந்த ஒரு நாள் இரவில் அதை பிரித்து வாசிக்கத் துவங்கினேன். மகாராஜாவின் ரயில் வண்டி என்னும் அந்த நூலை அ.மு  சமர்ப்பித்திருந்தது,  அவரால் உயிரிழந்த ஒரு பறவைக்கும் பிறக்காமல் போன அதன் சந்ததிக்கும். அவரே அது சமர்ப்பணமல்ல பிராயச்சித்தம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அந்த ஒரு பத்தி என்னை கசிந்துருகச் செய்துவிட்டது. இளமையின் வேகத்தில் நண்பனுடன் சேர்ந்து விளையாட்டாக செய்யப்போன ஒரு காரியம் விபரீதமாக முடிந்து ‘பாம்’மரத்தின் உச்சியில் அமர்ந்திருந்த ஒரு பாவமும் செய்திராத அந்த கொழுத்த பறவை உயிரிழந்ததை   சொல்லுகையில்:

//அந்தகாகம் ஒரு குற்றமும் செய்யவில்லை. அது செய்ததெல்லாம் அந்த நாட்டில் இருந்த அத்தனை காடுகளில், அந்த காடுகளில் இருந்த அத்தனை மரங்களில், அந்த மரங்களிலிருந்த அத்தனை ஓலைகளில், அந்த வளைந்த ஓலையை தேர்வு செய்து அங்கே தன் பாட்டுக்கு உட்கார்ந்திருந்துதான். இந்த புத்தகம் ஒருபாவமும் அறியாத அந்த பறவைக்கு,பிறக்காமல் போன அதன் சந்ததிகளுக்கு// என்று சொல்லி இருந்தார்.

 எத்தனை வாஞ்சையும், பரிவும், கருணையும், அறியாத செயலுக்கான குற்ற உணர்வும் கலந்த ஒரு சமர்ப்பணம்? இந்தவரிகளில் காணமுடிந்த அந்த மனதின் ஈரம் என்னால் ஜென்மத்திற்கும் மறக்க முடியாது. இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் அவ்விரவு முழுவதும் உறங்காமல், உறக்கம் வராமல் ஒரே மூச்சில் அத்தனை கதைகளையும் வாசித்து முடித்தேன்.  அத்தொகுப்பின்  75 கதைகளின் ஒவ்வொரு வரியும் அ.முவின் அந்த கனிவில் தோய்ந்தவைகளாகவே இருந்தன.

அப்போது எனக்கிருந்த பல சிக்கல்களிலிருந்து நான் எளிதில் அந்த தூய அன்பின் கையைப்பிடித்துக் கொண்டு கடந்தும்  வந்து விட்டிருந்தேன். இத்தனை நல்ல மனம் கொண்ட மனிதர்கள் இருக்கையில் நான் அஞ்சவும் நம்பிக்கையிழக்கவும் தேவையில்லை என்று ப் மனமார நம்பினேன்

 ’’ஓர் அவமானத்தை ஓர் இளவெயில் போக்க முடியுமானால், ஓர் இழப்பை ஒரு மென்மழை மறக்கச் செய்ய முடியுமானால், ஒரு நோயை பூவின் நறுமணத்தால் சமன் செய்து கொள்ள முடியுமானால், வாழ்க்கையில் அஞ்சக்கூடியதாக ஏதுமில்லை..!!என்று சொல்லி இருப்பார் ஜெயமோகன்

அப்படி என் முன்பாக ஒரு பெரிய மலையைப் போல நின்றிருந்து அச்சமூட்டிய ஒரு சிக்கலை  அ. முவின் அந்த கனிவினால் திரைச்சீலையை தள்ளி விலக்குவதுபோல் எளிதில் கடந்து வந்துவிட்டேன். உலகம் அப்படியொன்றும் அன்பின்மையால் வரண்டு விடவில்லை என்று அந்த சமர்ப்பணம் எனக்கு சொல்லியது.

அவரின் பல படைப்புக்களை நான் வாசித்திருந்தும் இந்த குறிப்பிட்ட தொகுப்பு என் தனித்த பிரியத்துக்குரியதானது.

கோடைமழையில் அவரது சொந்த ஊரான கொக்குவில்லிலிருந்து புறப்படும் மஹாராஜாவின் ரயில் வண்டி ’எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலையில் நிற்கும்’ வரை நான் வண்டியை விட்டு இறங்கவேயில்லை.

அடிக்கடி இடையில் சுருட்டு, புகையிலை, சிகரெட் வாடை வந்து கொண்டிருந்தது,  மழை பெய்தது, வெயிலடித்தது, புழுதி பறந்தது அதிக ரிக்டர்  அளவிலான பூகம்பம் வந்தது, போர் தொடர்ந்தது, ஏதேதோ ஒழுங்கைகள் வழியாக பயணம் ஆப்பிரிக்காவிலும் கொக்குவில்லிலும் சோமாலியாவிலும், நைரோபியிலும் தொடர்ந்தது.  இடையே யாழ்தேவி கணக்காய்  நேரத்துக்கு கடந்து சென்றது. கச்சான் காற்றும் சோளக்காற்றுகளும் அடித்தன

ரயிலெங்கும் குட்டிக்கூரா மணந்தது, இடைக்கு கல்பெஞ்சும், கவண்மேந்தும் வருகின்றன,  நாடன் பாட்டுக்களும் பழமொழிகளும் சிறார்களின் விளையாட்டுப் பாட்டுக்களும் காதில் கேட்டது.

இரண்டு பூ பூக்கும் ஒரே மரமென்னவென்னும் விடுகதையும் போடுகிறார் அ.மு.

 நல்ல பசி நேரத்தில் மாங்காய் சம்பலும் ஆப்பிரிக்காவின் வ்வூவ்வூ களியும் மணமடித்து அவற்றை உண்ணவேண்டும் என்னும் ஆவலை உருவாக்கியது. ஆட்டுச்செவி பருவத்தில் இளசாக உடையாமல் இருந்த தேங்காயின் வழுக்காய் சச்சதுரமாக வெட்டிபோடப்பட்டு செய்த குழம்பும், கணவாயுடன் ஒரு சொட்டு மையும் முருங்கைப்பட்டையும் போட்டு வேகவைத்த மணத்தையெல்லம் கூட சமாளித்துவிடலாம், ஆனால் அந்த  ஆட்டுக்கறி பிரட்டல் இருக்கிறதே! வாய்நீர் ஊறாமல் அதை கடந்து வந்திருக்கும்  அசைவ உணவுக்காரர்கள் இருக்கவே முடியாது.

கோலாகலமான  மஞ்சவனப்பதி தேர் திருவிழாவை மட்டுமல்ல, மக்களை மக்கள் அடித்துக் கொள்ளும் இனவெறியில் சிந்தும் கண்ணீர்த்துளைகளையும் ரத்தத்தையும் கூட காண நேர்ந்தது

இந்த ரயில் வண்டி பிரயாணத்தில் என்னை கவர்ந்தது அல்லது என்னை பேரலையென அடித்துக் கொண்டு சென்றது உடன் வந்த பெண்மைப் பெருக்குத்தான். எத்தனை எத்தனை வகையில் பெண்கள்! துணிச்சல்காரிகளும், துயரமே உருவானவர்களும், வடிவானவர்களும், அன்பான அக்காக்களும், பச்சிளம் குழந்தைகளும், சிறுமிகளும், சிறு மகள்களும், காதலிகளும் அன்னைகளும், மனைவிகளுமாக வரும் அவர்களுக்கெல்லாம்தான் எத்தனை வகையில் இடர்பாடுகள், சிக்கல்கள் கலைடாஸ்கோப்பின் வர்ணஜாலம் போல அவர்களின் இயல்புகளின் வண்ணக்கோலம் கண்முன்னே விரிந்தது

மனதில் ஒருவனை வைத்துக்கொண்டு, இன்னொருவனை மணமுடித்த சாந்தினி,  காதல் துயரை உவந்து ஏற்றுக்கொள்ளும் அனுலா,  மனதிற்குள் ரகசியமாக ’கொண’ மாமாவை காதலிக்கும் ஒரு அக்கா, சோதிநாதன் மாஸ்ரரை தவிக்க வைக்கும்,  பல்லி வயிற்றில் முட்டை தெரிவது போல விரல்களில் ஓடும் ரத்தம் கூட தெரியும் நிறத்திலிருக்கும் இளமை பொங்கும் அலமேலு, தண்ணீருக்காக காதலை மறக்கும் சோமாலியாவின் மைமூன், திறமான நிச்சயத்துடன் வருவேனென்று சொன்னவனுக்காக காத்திருந்து மட்கும் ஹொன்ஸாகூல், என ஒவ்வொரு நிறுத்தத்திலும் காதல் கொண்ட, காதல் கொள்ள வைத்த பெண்கள் பயணத்தில் இணைகிறார்கள்

  துயரமே உருவான பெண்கள் பலரையும் காணமுடிகின்றது பிள்ளைப்பாசத்தில் கட்டுண்ட பார்வதி, இனக்கலவரத்தில் உயிர்பிழைக்க ஓடிவருகையில் இறந்துபோய் புதைக்கவும் இல்லமால் எரிக்கவும் இல்லாமல் அப்படியே வீதியோரத்தில் விடப்பட்ட தங்தம், சிறு ஜாடையில் அவளைப்போலவே இருக்கும்  அவள் மருமகள். பயணச்சீட்டுக்களாக மாறிவிட்ட வளையல்கள்  இல்லாத மூளிக்கைகளை அசைத்து பிளேனில் போகும் மகனுக்கு விடைகொடுக்கும் ஒரு அன்னை,

எங்கோ நாதியற்று கிடக்கும் மகனுக்கு வயலட் கலர் பென்சிலை நாக்கில் தொட்டுத்தொட்டு ’’இப்போதெல்லாம் தென்னையிலிருந்து தேங்காய்கள் விழுவதில்லை, வானத்திலிருந்து மழை விழுவதில்லை ஆகாயத்திலிருந்து குண்டுகள் தான் விழுகின்றன’’ என்று கடிதம் எழுதும் அன்னையொருத்தியின் சித்திரமும், வீட்டை துடைத்துப் பெருக்கி, குழந்தைகளைக் குளிப்பாட்டுவது போல வாஞ்சையுடன் பாத்திரம் அலம்பி, துணிகளை துவைத்து அப்படியும் நேரம் எஞ்சி இருக்குமானால் அடுப்புக்கரி அணைந்த இடத்தில் படுத்துக்கொள்ளும்  பதிமூன்றே வயதான வேலைக்கர சிறுமி பொன்னியையும்,  நினைத்தாலே கிலி பிடிக்கும்படியாக ஒரு பிறந்த நாள் பரிசைப்பெறும் பாரதிராஜா பார்த்தால் பொறாமைப்படும் படியாக ஒரு  நீள  வெள்ளைத் துகில் உடையை வைத்திருக்கும் பத்மாவதியும்  மனதை கனக்க செய்து விடுகிறார்கள். ரயில் பெட்டியிலிருந்து நான் இறங்கி இத்தனை காலமாகியும். அந்த கனம் இன்னும் நெஞ்சில் தான் அழுத்திக் கொண்டிருக்கிறது

 நகை சுற்றிவரும் மெல்லியதாள் போன்ற காகிதத்தில் இரண்டு பக்கமும் இங்க் தெரிய அந்நிய தேசத்திலிருக்கும் கணவனுக்கு கடிதம் எழுதும் ஒரு பாவப்பட்ட மனைவி, பாயை விரித்துப்போட்டு  இரு பக்கத்திலும்  இரண்டிரண்டாக படுத்திருக்கும் பிள்ளைகளுக்கு  சரிசமமாக தன்னை பிரித்துக் கொடுத்து நடுவாக படுத்துக்கொள்ளுமொருத்தி, தனக்கு விதிக்கப்பட்ட வறுமையை ரகஸ்யமாக அனுபவிக்க விரும்பும் பாத்திமா, நாலு பிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு போகும் தொக்கையான ஒரு மனுஷி என இவர்களின் துயரத்தில்  ரயில் வண்டி  தளும்புகிறது.

குளிருக்கென அடைத்த வாத்துச்சிறகுகள் பிய்ந்து வெளியே வந்திருக்கும் மோசமான  காலணிகளுடன்  தினமும் ரெய்கி சிகிச்சைக்கு செல்லும்  இரண்டு கிழமைகளுக்கு முன்னர் மோசம் போய் விட்ட பரமசோதியின் அக்கா மேல்கோடடை மறந்து வைத்துவிட்டுபோகிறாள்.

கஷ்டப்பாடுகள் கீழ்மையின் எல்லை வரைக்கும் துரத்தி வந்ததில் சொந்த மகளிடமே  வட்டிக்கு காசுகொடுக்க துணியும் வெயிலில் உலர்த்தியது போலிருக்கும் சின்னாயிக்கிழவியும் ரயிலில் இருந்தாள்.  

தனியாக எடுத்து வைத்த சாமி படையல் போல சிரிக்கிற இரண்டே இரண்டு பாவாடைகளும் அவையிரண்டுக்குமாக சேர்த்து ஒரே  ஒரு நாடாவையும் வைத்திருக்கும், மேலுதட்டில் வெண்டைக்காய் மயிர்போல  ரோமம் கொண்டிருக்கும்  அம்மா ஒருத்தி  கண்களை நிறைக்கிறாள் ,மூன்றாவது அம்மாவின் மகளான, மூக்குத்தியும் முகப்பருவும் போட்டிருந்த , ஒரே நாள்  மூளைக்காய்ச்சலில் செத்துப்போன அழகு அக்காவை மறக்கமுடியுமா?

துயரமே உருவானவர்களுக்கிடையில் துணிச்சல்காரிகளும் புதுமைப் பெண்களும் கூட  இருந்தார்கள்  ஒரு காவாலியின் அசிங்கமான செய்கையை பார்த்து திகைத்து பயந்து போகாமல் கண்களை நேராகப் பார்த்து ’’அடுத்த ஷோ எப்போ வரும். என் தங்கையும் பார்க்கனும்’’ என்ற ஒரு துணிச்சல்காரி, .ஒப்பாரிப்பாட்டிலும் வம்புச்சண்டை வளர்க்கும் உறவுப் பெண்கள், வீட்டுவேலைக்கு வந்து எஜமானியாகிவிடும்  ஆப்பிரிக்க கருப்பழகி அமீனாத்து, தமிழ் படங்களில் ’’ஏன் கேர்ல்ஸ் எல்லாம் குனிஞ்ச படியே போகினம்?’’என்று கேட்கும் வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த ஒரு சிறுமி.

ஆங்கிலம், ரஸ்யன், பிரெஞ்சு எல்லாம் சரளமாக பேசும், பச்சை கண்கொண்ட மூச்சை நிறுத்தும் அழகில்லாவிட்டாலும் வசீகரமாயிருந்த, ஒரு பார்ட்டியின் முடிவில் இரு மார்புகளையும் கழட்டி வீசியெறியும் அனா என்கிற அன்னலட்சுமி, இவர்களுடன்  நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த நன்னடையும், துணிவும் சாதுர்யமும் கொண்ட, கற்பெனும் புனிதப்போர்வயால் மூச்சுமுட்டும்படி  போர்த்தப்படாத பல ஆப்பிரிக்க பெண்களும் இருக்கிறார்கள்.

ஸ்வென்காவின் 17 பெண் கருச்சிசுக்களில் ஒன்றாக காத்திருந்த காமாட்சி இனி வரப்போகும் காலங்களின் இனவிருத்தி எப்படி இருக்கும் என்று கோடு காட்டி அச்சமூட்டினாள்

பேரம் படியாத போது அலறும் ’யூ லவ்  மீ’’ மீன்காரியும் அவள் முதுகில் ஒட்டிக்கொண்டிருக்கும் கரிக்குருவிக் குழந்தையையும்  இந்த பிரயாணத்திலல்லாது வேறெங்காவது காணக்கிடைக்குமா என்ன?

பலவிதமான மனைவிமார்களையும் பார்க்கமுடிந்தது இந்த ரயில் பிரயாணத்தில்.

வெளிநாட்டுக்கு போகும் கணவனுக்கென்று பார்த்துப் பார்த்து சூட்கேஸில் சாமான்கள் அடுக்கும் ’’வாங்கும் நோய்’’ கொண்டிருந்த பட்டியல் போடும் மனைவி, கொஸ்டோரிக்கன் போலவே இருந்த பிடிவாதக்காரியும் சீனனிடம் மார்பில் டிராகனை பச்சை குத்திக்கொண்டவளுமான  தங்கராசாவின் மனைவி பத்மாவதி,  

தனது மூன்று மாத குழந்தைக்கு முலைப்பாலை கறந்து போத்தல்களிலடைத்து டேகேரில் குழந்தையுடன் கொடுத்துவிட்டு வரும் ஜமைக்காவின் எஸ்தர், உள்ளத்தின் குரலை கேட்காமல், உடலின் கட்டளைகளை மட்டும் செவிமடுத்து மருகும் கமலி, பணிவிடை செய்யும் கணவன் மீதுள்ள பிரேமையை சந்தேகமாக மாற்றிக்கொண்ட கமலா, உருண்டை வீட்டில் பிரியமில்லாததால் கணவன் மீது மயிர் வளர்வது போல கண்ணுக்கு தெரியாத விரோதத்தை வளர்க்கும் மனைவி, இவர்களின் துக்கம்   வாசிப்பிற்கு பின்னர் என் துக்கமாகிவிட்டிருந்தது.

ஆப்பிரிக்க யானைத்தந்தத்தின் மீது  எத்தனைதான் ஆசையிருந்தும் பேருயிரொன்று அதன்பொருட்டு அழிந்ததை அறிந்ததும் அன்னை மனம் துடிக்க கிடைத்த தந்தத்தை ஏறெடுத்தும் பார்க்கமல் ஊர் திரும்பு இன்னொருத்தியும் இருந்தாள்

குடியுரிமைக்கு பிறகே தாய்மை என முடிவு செய்து பெண்மையையும்  தாய்மையையும் தவறவிடும் சங்கீதா மனம் கனிய வயதும் காலமும் தடையில்லை என் உணர்கிறாள், அதற்கு சாட்சியாக அவளருகில் கிடக்கிறது  பெண்குழந்தை அய்சாத்து

இத்தனை பேருடன் பச்சிளம் குழந்தைகளும் பருவப்பெண்களும் சிறுமிகளுமாக மகள்களும் நிறைய பேர் இருந்தனர். ரயிலில் 75 பெட்டிகளல்லவா?

தங்கைக்கு பிறகு தாமதமாக மலர்ந்த ராசாத்தி, தேநீர் போல கோபத்தில் சிவந்த , தூக்கி வைத்துக் கொள்ள யாருமில்லாமல் தானாகவே தூக்கி வைத்துக் கொள்ளும் 14 வயது பள்ளி மாணவியொருத்தி, ஒழுங்காய் சடை நுனியில் நீல ரிப்பன் கட்டிக்கொண்டு கிலுகிலுவென்று சிரித்துக்கொண்டு பள்ளி செல்லும் சிறுமிகள், பாய்பிரண்டின் பிறந்த நாளை  மறந்த  அப்பாவை கோபித்துக்கொள்ளும், அவருடனான தன் இளமைப்பருவத்தின் அபூர்வ தருணங்களையெல்லாம் மறந்தே மறந்து விட்ட மகளொருத்தி,

ராட்சத்தனமான கருப்பு புழு போல் நெளியும் மூன்று மாதமேயான தில்லைநாயகி, விருந்தாளிகளுக்கு  ஆட்டுப்பால் கொடுத்து உபசரிக்கும் வீட்டைச்சேர்ந்த,  கண் இமைகளில் வைரத்துண்டுகள் ஒட்டியிருக்குமோர்  சிறுமி, ஐஸ்கிரீம் கடையை கண்டால்  வெட்டுக்கிளியை கண்ட நாய் போல் அசைய மறுக்கும் ஒரு இளமகள், இவர்களுடன் வரும் நீளமான கண்கள், நீளமான விரல்கள் கொண்ட அம்மாவிற்கு பிரசவம் பார்த்த பக்கத்து வீட்டுப் பெண். முதலில் தெரிந்த கால்களை பிடித்து இழுத்ததால் நீளமான கால்களும் கொண்ட டோல்ரஸை சொல்லுகையில் ‘’தின்னவேண்டும் என்று பட்டது’’ என்கிரார் அ.மு. எனக்கும் அவளைப்பார்க்கையில் அப்படித்தான் இருந்தது.

பஞ்சலோகத்தில் செய்ததுபோல் ஒரு 4 வயது மகளும் இருக்கிறாள். அள்ளியெடுத்து மடியிலிருந்திக்கொள்ள மனம் விழைந்த நிமோனியாவால்  மூச்சுவிட சிரமப்படும்  லவங்கிக்குட்டி, ஏன் தனக்கு சூரிய கிரகணம் பிடிக்காது என்பதை சொல்லாமலே மறைந்த பஸ்மினா, இடுப்பில்  குடத்திலேயே அடித்த அப்பனுக்கு  சோறாக்கிப் போடும் பூரணி மற்றும் தன் பெரியப்பனை கொழுத்த ஆடாக்கி, கொள்ளியால் சுடும் விஜயாவின் மகளான குண்டுப்பெண் ஆகியோருமுண்டு.(பல சினிமாக்களில் போடுவார்களே இருதயம் பலவீனமானவர்கள் கர்ப்பிணிகள் அதை பார்க்க வேண்டாமென்று,  அப்படி ,மனைவி மக்களை பிரிந்து நினைவில் வாழும் பலவற்றுடன் போராடிக்கொண்டு பொருள் வயிற்றின் நீங்கியிருப்பவர்கள் இந்த கதையை படிக்க வேண்டாமென்று டிஸ்க்ளெய்மெர் போடவேணுமென்கிற அளவுக்கு மனதை கலைக்கும் கதையது)

மிக அழகான பெண்ணாக வருவதற்கு திட்டம் போட்டிருந்த டொன் தம்பதினரின் சிறு மகளுடன், சிறிய சிவப்பு உருண்டை வாயுடன் இருக்கும் ஒரு குட்டியும், பாஸ்மதி அரிசியைப்போல நாலே நாலு பற்களைக் கொண்டிருக்கும்,  திராட்சைகளை சுவைக்கும், ஜெயமோகனின் ’’இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’’ புத்தகத்தை  மட்டும் சரியாய் தூக்கிக்கொண்டு ஓடிப் போகும் 26 இன்ச் உசரமான வாசகி i think அப்சரா குட்டியும் வருகிறார்கள்.

நான் கண்னை விரித்துக்கொண்டு பார்த்த சுவாரஸ்யமான  பல பெண்களும் பயணத்தில் உண்டு. பிரான்ஸிஸ் தேவசகாயத்தின் சவக்குழியை பிரான்ஸிஸ் தேவ சகாயத்திடமே சுட்டிக்காட்டும் செங்கூந்தலும் வெள்ளுடையுமாக  கனவில் வருமொருத்தி. ரம்புட்டான் பழம் போல சிவந்த உதடுகளுடன் சரசக்கா, நட்ட நடு நிசியில் வாடிக்கையாளரிடம் இனிக்க இனிக்க பேசும்  17 வருடமும் ஒன்பது மாதமும் வயதான ஸேர்லி, ஸ்கர்ட் உடுத்திய பெண் படம் வரைந்த  கதவு கொண்ட கழிப்பறைக்குள் தன்  பணிச்சூழலின் அழுத்தமனைத்தும் மறந்து உற்சாகமாகிவிடும் மீனுக்குட்டி.

ஆஸ்பத்திரியின் சக்கர நாற்காலியின் உராய்வுக்கும் பிணம் தள்ளிக்கொண்டு போகும் சில்லு வைத்த கட்டிலின் கரகர ஓசைக்கும் நடுவெ பொருத்தமில்லாத இனிமையுடன் ஒலிக்கும் குரலைக்கொண்ட யவனம் நிறைந்த, தேனிக் கூட்டம் போல சிவந்த கூந்தல் கொண்டிருக்கும் வெளிநாட்டு டாக்டர் பெண்ணொருத்தியும் உண்டு.

புன்னகையை ஸ்டிக்கர் பொட்டு போல ஒட்டி வைத்திருக்கும்  வரவேற்பாளினியும், கந்த சஷ்டி விரதத்திற்கு இரவு பாலும் பழமும் மட்டும் சாப்பிடுகிற, அந்த பழம் ஒரு முழு பலாப்பழம் என்பதை மறைத்துவிடும் அன்னமக்காவும் புன்னகைக்க வைக்கிறார்கள்.

மலர்வதற்கு இரண்டு நாள் இருக்கும் மல்லிகை மொட்டுக்களை  தலையில் சூடிக்கொள்ளும், தன் வனப்பை தொற்று வியாதி போல பரப்பிவிடும் மகேஸ்வரி, தலைமயிர் அவ்வளவு குவியலாக அவ்வளவு பொன்னிறமாக இருந்த ஸோரா , ட்ராஃபிக் சிக்னலைப்போல மஞ்சள் முகமும் ரத்தச் சிவப்பு உதடுகளும், பச்சைக்கீற்று கண்களுமாக ஒரு சீனப்பெண் என்று எத்தனை எத்தனை வகைப்பெண்கள்

’ம்வாங்கியை’ களவு செய்யத்தூண்டும் அழகுடன் இருந்த எமிலி, போறனையில் இருந்து இறக்கிய பாண் போல மொரமொரவென்று இளஞ்சூடும், மணமுமாக  இருக்கும் துப்புரவுக்காரியொருத்தி, ஜெனிஃபர் என்ற பெயருள்ள நாயுடன் வரும் பெயரிடப்படாத ஒரு அழகி ,  பச்சைப்பாவாடையும் பட்டுரிப்பனுமாக, உப்பு என்று சொல்வதுபோல் உதடுகளை எப்போதும் குவித்து வைத்திருக்கும் விசாலமான கண்கள் கொண்ட விசாலாட்சி,  தானாக கனிந்த அறுத்த, கொழும்பான் மாம்பழம் போலவும், அரிய வண்ணத்துப்பூச்சியை போலவும் இருப்பவளான,  வேகமான  யாமினி, கிட்டார் வாசிக்கிற பூனைக்குட்டிக்கு அரிஸ்டாட்டில் என பெயர் வைத்திருந்த ரோஸ்லின், மர அலங்காரியாக வேலை செய்யும் அமண்டா ஆகியோரும் ரயிலை அவர்களின் பேரழகாலும் ததும்பும் இளமையாலும் நிறைக்கிறார்கள்

ஒரே கரண்ட் கம்பியில்  வேலை செய்யும் பல்புகள் போல மூன்று உடலும் ஓருயிருமாக இருக்கும் மூன்று ஸ்நேகிதிகள் அவர்களில் ஒருத்தி அமெரிக்காவின் நட்சத்திர உணவகத்தில் தட்டில் வைக்கபட்ட முட்டையை பார்த்துக்கொண்டிருக்கையில் காதலனால்  முத்தமிடப்படும் மித்  என்கிற மைதிலி,

மண்ணெண்ணெய் வாடை அடிக்கும், மூக்குத்தியில் அழுக்கு சேர்ந்திருக்கும் கருத்த மாமி,  நாவல் பழம் பொறுக்குகையில் கதாநாயக சிறுவனுக்கு ராமு மாட்டுடன் அறிமுகமாகும் வத்ஸலா,  உடும்புப்பிடி போல குணம் கொண்ட சரசக்கா ஆகியோருடன் வரலாற்றிலிருந்து எழுந்துவந்து இணைந்து கொள்கிறார்கள்  பொத்தா தேவியும் குந்தியும். ரோட்டின் கீழே இருந்து வென்ற் வழியாக அடிக்கும் வெப்பக்காற்றில்  மேலே எழும்பி பறக்கும் இடையாடையை இரண்டு கைகளால் அமத்திப் பிடிக்கும் மர்லின் மன்றோ கூட  பிரயாணத்தில் இருக்கிறாள்

சிரிப்பால் வீட்டை நிறைக்கிற, அண்ணாந்து தண்ணீர் குடிக்கையில் சிந்தும் தண்ணீர் கழுத்துக்குழியில் தங்கிவிடும் அளவுக்கு ஒல்லியான,   இன்னும் நிரப்பப்படாத பல அங்கங்களைக் கொண்ட, காதுவரை நீண்ட ஓயாது வேலை செய்யும் கண்களைக் கொண்ட கனகவல்லி,  வெங்காய சருகு போல மெல்லிய சருமம் கொண்ட ஸ்வீடனின் மார்த்தா, மறைக்கப்படாத  மார்பகங்களுடன் மீன்களும் துள்ள, கார்களை துரத்தி  வரும் மீன்காரப்பெண்கள், பிறகு நினைத்துப் பார்க்கையில் ஒரு சொற்பொழிவு போல தோன்றும்படியாக  இடுப்பை வெட்டி காண்பித்த ஆப்பிரிக்க அழகியென அநேகம்பேர் வருகிறார்கள்

கிராமத்து மனுஷியும் நான்கு ஆதார சுவைகளை கலந்து பத்தாயிரம் சுவைகளை கொண்ட உணவுகளையும், தோசையில் விழும் துளைகள் கூட எண்ணினால் ஒரே மாதிரியாக இருக்கும்படி சமைப்பவளுமான  ஒரு அம்மாவும், அவரை சமையலறைக்குள்ளேயே நுழையவிடாத, சமையல் வகுப்புக்களுக்கு போய் கற்றுக்கொண்ட சமையலை செய்து பார்க்கும் அவரது மருமகளும் கூட உண்டு.

மனிதர்கள் மட்டுமல்லாமல்  எல்லா பயணங்களிலும் நான் தவறவிடாமல்  ரசித்துப் பார்க்கக்கூடிய விதம் விதமான மரங்களும் மலர்களும் கனிகளும் இந்தப் பயணத்திலும் காணக்கிடைத்தன. அனிச்சம்பூ ,ஓக், அகேஸியா, கிளுவை மரங்களுடன், சதி செய்யும் முசுட்டை மரங்கள், கணப்பு அடுப்பில் புகையின்றி சிறிது மணத்துடன்  எரியும் விறகைத் தரும் பேர்ச் மரங்களை எல்லாம் ரயில் கடந்து சென்றது. ஐந்து வருடத்துக்கு ஒரு முறை காய்க்கும் ’மொற’ மரமொன்றையும் கண்டேன்

பயணத்தில் எதிர்பாராமல் திடீரென தலை காட்டும்  கவிதைகளைப் போல சின்னப்பெண்கள் தங்களை கடக்குமுன்பாக அனைத்துப் பூக்களையும் அவர்கள் முன் கொட்டும் மரங்களும்,  மஞ்சளாக வழவழப்பாக  பார்க்க லட்சணமாக இருக்கும் தண்ணீர் பாங்கான இடங்களில் வளரும் ஃபீவர் மரமும்,  மரெண்டா கீரைகளும், நிலம் தெரியமல் பூக்களை சொரிந்திருக்கும் ஜகரண்டா மரங்களையும் காண முடிந்தது.  கதிரைகள் செய்யப்படும் காஷ்மீரி வால்நட் மரமும், வானத்தில் பறந்து வந்த வாழையிலைகளும் ஆழ்குளிரிலிருந்து எழுப்பிய மாவிலைகளையும் கூட பார்த்தேன். தோறாஇலையும் குயினைன் மரப்பட்டைகளும் இருக்கின்றன. எங்கோ கமகமவென்று இலுப்பைப்பூ மணமுமடித்தது

பேயின் கைவிரல்களைப்போல் பரவி வளரும் ஐவி செடியும் வழியில் இருந்தது. இதுநாள் வரை மணிப்ளாண்ட் என்றே சொல்லியும் கேட்டும் வாசித்தும் பழக்கமாயிருந்த , முதன் முதலில் அ. மு வால் மணிச்செடி என்று அழைக்கபட்ட அந்த செடியை கண்டதும் அத்தனை பிரியம் உண்டாகி விட்டிருந்தது. பயணத்தில்  இப்படி பல புதிய அழகிய சொற்கள் இடையிடையே வந்து எட்டி பார்த்து சந்தோஷப்படுத்தும்.

அடடா பட்சிகள் உச்சியில் அமர்ந்திருக்கும் மிமோசா விருட்சங்கள்.முதலில் இலைகளை கொட்டும் பேர்ச் மரமும் இலைகளை கொட்டவே கொட்டாத மேப்பிள் மரமும், தோட்டத்தின் சிவப்பு வத்தகப்பழமரம்,  அக்லனீமா செடிகளும், தோலுரித்து வைத்த தோடம்பழங்களுமாய் பசுமைப்பெருக்கும் பயணத்தில்  கூடவே வந்தது

நம்மூர் தீக்கொன்றை மரத்தை அவர் தீச்சுவாலை மரம் என்கையில் அதற்கொரு ஆப்பிரிக்கத்தனம் வந்துவிட்டிருந்தது. வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பரமசோதியின்  சாமான்களுடன் நிற்கிறது  ஒரு வாகைமரம்

இடிமுழக்க துண்டுகளை  கட்டி இழுப்பது போல் சத்தம் போடும் ஒரு மோட்டர் சைக்கிளும், கோபத்துடன் உறுமி எழுந்த சிங்கம் போல ஒரு ஓஸ்டின் காரும் ரயிலை கடந்து சென்றன. வழியில் மகரந்த துள்களை பரப்பி வைத்ததுபோல பரவிக்கிடந்த மணலைப்பார்க்க முடிந்தது. பிரயாணத்தின் ஓரிரவில் குழைத்து வைத்ததுபோல் கலங்கலாக தெரிந்தான் சந்திரன். யாரோ ராட்சஷன் அடித்து வீழ்த்தியது போல சிவந்திருக்கும் ஆகாயத்தையும் அந்தியொன்றில் கடந்தது ரயில்.

பிரயாணத்தில் கந்தபுராணமும், சிவபுராணமும்,சிலப்பதிகாரமும், ராமாயணமும் மகாபாரதமும் கூட கேட்கிறது. துரியோதனன் மனதை கெடுக்கிறது  ஒரு சடைக்கார சிறுக்கி நாய்

’’அம்மணத்துகு கோமணம் மேல்’’ போன்ற முதுமொழிகள் இடையிடையே வந்து விழுகின்றன. பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு நெருக்கமாக வந்து அணில்கள் பொறுக்கிச் சாப்பிடுகின்றன. அந்த செகரட்டரி பறவை தான் என்ன வினோதம், அப்படியொன்றை கேள்விப்பட்டது கூட இல்லையே!

அதைப்போலவே சாளரம் 2000 என்பது முதலில்  என்னவென்று மனசில் தைக்கவே இல்லை அத்துடன் சேர்ந்து நின்ற பில்கேட்ஸை பார்த்ததும்தான் அது விண்டோஸ் 2000 என்பது உரைத்தது . Veloy don என்கிற வேலாயுதமும் வருகிறார்.

 சாளரம் உள்ள கடித உறையும் அப்படித்தான் வியப்பூட்டிய மற்றொன்று.  அப்படியான கடித உறையை இதுவரை பலநூறு பயன்படுத்தி இருப்பேன் அதை கவனித்து இப்படி ஒரு பெயர் இருக்கலாமென்று ஒருபோதும் எண்ணியதில்லையே!

அ.முவுக்கே உரித்தான அங்கதங்களும் வேடிக்கையான மனிதர்களும்  குறைவில்லாமல் உண்டு  குறிப்பாக அடைப்புக்குறிக்குள் சொல்லப்பட்டிருப்பவைகள்.(கடைசி மூச்சில் இருந்த பேட்டரி) நாலு பியருக்கு மேல் நாப்பது வாட்டில் மூளை வேலை செய்கையில் மட்டும் அரசியல் பேசும் தம்பிராசா, சிவராத்திரி கந்த சஷ்டியையெல்லாம் தீவிரமாக சிந்திக்கும் மாரியோ இவர்களுடன் இடது கைப்பழக்கம் கொண்ட ஒரு கரப்பான் பூச்சியும் இருக்கிறது, ஆம் நிஜம்தான்.

கனடிய அரசுக்கு அனுப்பும் குரல் பதிவில் வசந்தம் வந்து, தோட்டத்தில் முதல் பூ பூத்ததையும்,  பெண்ணின் சடைபோல் பின்னப்பட்ட பிரெஞ்ச் ரொட்டியை பிய்த்து தின்றதையும், தட்டில் கிடந்தபடி  தன்னையே பார்த்துக் கொண்டிருந்த  வதக்கபட்ட பெரிய மீனை உண்ணமால் விட்டதையும் சொல்லும் ஒருவர் எத்தனை சுவாரஸ்யமான மனிதராயிருப்பார்?

மைமலான மழைநாளில்  காதலிக்கு முதல் முத்தம் பதிக்கும் காதலனும் ஸ்ட்ராபெரி ஜாம் வாசனையுடன் கொட்டாவி விடும் மனிதர்களையும் போல  அ.மு அவர் வாழ்க்கையில் சந்தித்த,  அறிந்துகொண்ட சுவாரஸ்யமானவர்களை உலகில் வேறு யாருமே சந்தித்திருக்க மாட்டார்கள்

ஒரு பிரயாணம் இப்படி ரசிக்கத்த விஷயங்களுடன் மட்டும் முடிந்து விடாதில்லையா?

தோலைச்சீவுகையில் பூரணமாக ஒத்துழைப்பு கொடுத்து  இறைச்சி வெட்டப்படுகையிலும் கண்களை அசைத்துக்கொண்டே இருந்த உடும்பையும், அந்நியமான ஊருக்கு வந்து அடிபட்டு செத்துப் போகிற பறவையொன்றையும், நிலவறையில் விறைத்துக்கிடப்பவரையும் அ.மு சொல்லிக்கேட்கையில் என்னையறியாமல் கண் நிறைந்து வழிந்தது.

தில்லை அம்பல பிள்ளையார் கோவில் கதையை கேட்டு முடித்ததும். கல் மனசுக்காரர் என்று அ. முவை மனதில்  மரியாதையுடன் கடிந்து கொண்டேன்.

இத்தனை சுவாரஸ்யமான பிரயாணமொன்றை இதுவரையிலும் நான் செய்ததில்லை இனிமேலும் செய்யப்போவதுமில்லை.. அ.மு இத்தொகுப்பில் உள்ளதை பெரிதாக்கவில்லை, இல்லாததை இட்டுக்கட்டவில்லை, ஏன் உள்ளது உள்ளபடிகூட சொல்லவில்லை நம்மை கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு போய் கதைகளின் நடுவில் நிறுத்தி விடுகிறார். எல்லாக்கதைகளும் நம்மைச்சுற்றித்தான் நடக்கிறது நாம் கதைகளை  பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

கன்னத்து உப்பலில் கூர்பார்க்கப்படும் கல்லுப்பென்சிலும், பென்னம் பெரிய காரில் பொம்பளை பார்க்க வருபவர்களுமாக நிறைந்திருக்கும் கதைத்தொகுப்பை அ. முவல்லாது வேறு யாரால் அளிக்க முடியும்?

‘திரு அ முத்துலிங்கம் அவர்கள் இன்னுமோர் நூற்றாண்டு நல்ல தேக ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் இருக்கட்டும். அவருக்கு என் வணக்கங்கள்

அன்புடன்

லோகமாதேவி.

-விஜயா பதிப்பகம் 2022ல் அ மு அவர்களுக்காக கொண்டு வந்த சிறப்பி நூலில் வெளியான எனது கட்டுரை

மைத்ரி

அஜிதனை நான் முதலில் பார்த்தது பல வருடங்களுக்கு முன்னர் ஊட்டி காவிய முகாமில், அப்போதுதான் அருண்மொழியை முதலில் பார்த்ததும்.

நானும், அடர் நீலச் சதுரங்கள் கொண்ட வெண் பருத்தி புடவையில் அருண்மொழியும் குருகுலத்தின் உணவுக் கூடத்திற்கு செல்லும் வழியில் இருந்த ஒரு மண் மேட்டில் அமர்ந்திருந்தோம், உணவுக் கூடத்திலிருந்து நண்பர்களுடன் மேலேறி வந்து கொண்டிருந்த ஜெ அருணாவின் முதுதில் ஒரு தட்டு தட்டி ’வா நேரமாச்சு’ என்றபடியே கடந்து சென்றார். அடி கொஞ்சம் பலமாக விழுந்துவிட்டது. அருணா ’இதை பிடிங்க’ என்று என்னிடம்  கைப்பையை  கொடுத்துவிட்டு எழுந்து, உங்களை தொடர்ந்து வந்து பலமாக ஒரு அடி முதுகில் வைத்து ’எதுக்கு ஜெயன் அடிச்சே’? என்றார்கள். ஜெ திரும்பி’ ’இல்லடி செஷனுக்கு நேரமாச்சு அதான்’ என்றதும் ’அதுக்கு? அடிப்பியா? வலிக்குது தெரியுமா? என்று  சொல்லிக் கொண்டிருக்கையில் இருவருக்கும் இடையில் எங்கிருந்தோ அஜிதன் வந்து நின்றான்.  (வெண்முரசில் இதுபோலவே பீமனும் இடும்பியும் பேசிக்கொண்டிருக்கையில் கடோத்கஜன் இருவருக்கும் இடையில் வந்து நிற்பான்). பின்னர் விஷ்ணுபுரம் விழாக்களில் சில சமயம் அஜிதனை பார்த்திருக்கிறேன்

அஜிதன் எடுத்த குறும்படத்தை பார்த்தபோது அந்த அஜிதனா என்று பிரமிப்பாக இருந்தது. சென்ற மாதம் ஒரு கூடுகையில் தத்துவ விளக்கங்கள் குறித்து உரையாற்றிய அஜிதன் அதுவரை நான் பார்த்திருந்த, நான் கொஞ்சமாக வேணும் அறிந்திருந்த அஜிதனே இல்லை.

அஜிதன் அன்று பேசியவை அனைத்தும் மிகப்பெரிய விஷயங்கள் என்பது மட்டும்தான் எனக்கு புரிந்தது. அவற்றை பேசுகையில் அஜிதனின் உடல்மொழியும் ஆச்சர்யமூட்டியது மிக மிக சாதாரணமாக, எளிய அன்றாட நிகழ்வுகளை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பது போல தான் அத்தனை தீவிரமான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தான்.

இளைஞர்கள் முக்கியமான, தீவிரமான விஷயங்களை பேசிக் கேட்கையில் நான் பிறரைக் காட்டிலும் மிக அதிகம் மகிழ்ச்சியடைவேன். ஏனெனில் ஏழாயிரம் இளைஞர்கள் படிக்கும் கல்லூரியில் பல வருடங்களாக பணியிலிருக்கிறேன். தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்துகொண்டு கொஞ்சம் அதிகப்படியான அறிவுடன் இருப்பவர்கள் என்றுகூட விரல்விட்டு எண்ணிச் சொல்லக் கூடிய அளவில்தான் சிலர் இருக்கிறார்கள். எனவே அஜிதனை போன்ற அரிதினும் அரிய இளைஞர்கள் எனக்களிக்கும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளப்பரியது.

ஆனால் மைத்ரியில் கண்ட அஜிதன் முற்றிலும் வேறு. ஹரனின் பேருந்து பயணத்தின் தொடக்கத்திலேயே அஜிதன் என்னும் அரிய  படைப்பாளியை கண்டுகொள்ள முடிந்தது.  ஹரனின் பயணம் வாசிப்பவர்களின் பயணமும் ஆகிவிடுகிறது.

உடல் சூட்டை இருக்கைக்கு அளித்து அதை வாழ்விடமாக்க வேண்டும் என்னும் வரியில் இது நான் முன்பு அறிந்திருந்த அஜிதனல்ல என்று மீண்டும் எனக்கே சொல்லிக்கொண்டேன் .

மிக புதிய நிலப்பரப்பில் நாவல் விரிவதால் அக்கதையுடன் இன்னும் அணுக்கமாகி கதையையும் நிலப்பரப்பையும் சேர்ந்தே ரசிக்கவும் முடிந்தது அது மேலும் சுவாரஸ்யம் ஆக்கிவிடுகிறது வாசிப்பனுபவத்தை.

முழுவதும் வாசித்து முடித்த பின்னர் சில நாட்கள்தான் அந்த பயணமும் அக்கதை நிகழ்வதும் என்பதை நம்ப முடியவில்லை. பல நூறு வருடங்களுக்கான பயணம் அது. கதையை முழுக்க சொல்லி இன்னும் வாசிக்காதவர்களுக்கு வாசிப்பின்பத்தை குலைக்கவிரும்பவில்லை.

ஹரனை பசுமைப் பெருக்கும் பெண்மைப்பெருக்கும் தொடர்ந்து சூழ்ந்து வந்து கொண்டிருக்கிறது. கெளரியும், அன்னையும், ரிது பெரியம்மாவும், சிவப்பு ஆடை அணிந்த சிறுமிகளும், மணப்பெண்ணும் மைத்ரியும் இன்னும் பலருமாக.

உணவை, கட்டிடங்களை, மனிதர்களை, நிலப்பரப்பை, வசந்த காலத்தை, காதலை, உறவுகளை, பிரிவை, வலியை என்று  ஹரன் வாழ்வை முழுக்க அறிந்துகொள்ளும் அந்த அழகிய அரிய பயணத்தில் அஜிதன் என்னையும் கைப்பிடித்தும் கச்சரில் ஏற்றியும், பேருந்திலும், ஜீப்பிலும் கூட்டி செல்கிறான்.

பைன் மரங்களின் ஊசியிலை சருகுகளும், கோன்களும் நிறைந்த அந்த பாதை வழியே சோனியாவின் கடிவாளக் கயிற்றை பிடித்துகொண்டு ஹரனையும் அவன் மொத்த வாழ்வையும் அத்தனை அழகாக அவள் எடுத்துச் செல்கிறாள்.  மறக்க முடியாத பயணம் எனக்கும்.

அன்னையை நினைத்துக் கொள்கையில் ’’தூய அன்பென்னும் திரைக்கு அப்பால் தன்னை மறைத்து வைத்திருந்தார்’’ என்னும் வரிகள்  கண்ணீர் விடச் செய்தன.

குழந்தை போன்ற உடல் கொண்ட தெய்வ வடிவங்களை,  காதில் கேட்கும் இசையை, புதிய உணவை, கண்கூசும் பின்னொளியில்  நிழலுருவாக  தெரியும் கோவிலை சொல்லுகையிலும். இளமைக்காலத்தை சொல்லிக்கொண்டிருக்கும் மைத்ரியை  மேய்ச்சல் நிலமகள் என்கையிலும் அஜிதன் என்னும் திரைவிலகி  ஜெ தெரிந்தார்.

மைத்ரி முழுவதுமே எனக்கு தனித்த பிரியத்தை உண்டாக்கி இருக்கும் படைப்பு தான் எனினும் ஹரன் நினைப்பதுபோல் ’’ஒளியாலான, மனதில் என்றும் தங்கிவிடும் தருணமாக’’ எனக்கிருப்பது இருவரும் திரும்பும் வழியில் அந்த உன்னத  பின்மதியவேளையில் பொன்மழையின் ஆயிரம் ஊசிகள் புல்வெளியில் பெய்திறங்குவதை பார்த்தபடி குளிரில் இனிப்பை கொரித்துக்கொண்டு  நெருங்கி அவர்கள் இருவரும் அமர்ந்திருக்கும்  அந்த சித்திரம்தான்  கூடவே .ஃபெர்ன்களின் அந்த சுருண்ட இளம் குருத்திலை உணவும், அந்த புக்யால் புல்வெளியும்.

மைத்ரிக்கு ஹரன் கஸ்தூரி மிருகு, மாயப்பொன்மான். அவனுக்கு அவள் வனதேவதை ஜீதுவைப்போல  அந்த 3 நாட்கள் ஹரனுக்கும் பலநூறு வருட வாழ்வு. அந்த நினைவுகளுடன் அந்த பெரு வலியுடன் ஹரன் வாழ்ந்துவிடுவான். அவனுக்கான மீதமிருக்கும் வாழ்வை என்றும், மைத்ரி மற்றுமொரு ரிது என்றும் எனக்கே நான் சொல்லிக்கொள்கிறேன்.

கோட் பைக்குள் ஹரனறியாமல் மைத்ரி வைத்திருந்த  வாடியிருந்தும் நிறம் இழக்காமலிருந்த  புல்வெளியின் பலவண்ண மலர்கள் மைத்ரி அவனுக்கு மீட்டுக்கொடுத்த கெளரி 

இந்த வாசிப்பனுபவம் எனக்கும் ஒரு பெருங்கனவுதான். எழில் நிறைந்த கனவு, என்றென்றும் மனதில் எஞ்சி நிற்கும் கனவு.

அன்பும் ஆசிகளும் அஜிதனுக்கு

மைத்ரி

அஜிதனை நான் முதலில் பார்த்தது பல வருடங்களுக்கு முன்னர் ஊட்டி காவிய முகாமில், அப்போதுதான் அருண்மொழியை முதலில் பார்த்ததும்.

நானும், அடர் நீலச் சதுரங்கள் கொண்ட வெண் பருத்தி புடவையில் அருண்மொழியும் குருகுலத்தின் உணவுக் கூடத்திற்கு செல்லும் வழியில் இருந்த ஒரு மண் மேட்டில் அமர்ந்திருந்தோம், உணவுக் கூடத்திலிருந்து நண்பர்களுடன் மேலேறி வந்து கொண்டிருந்த ஜெ அருணாவின் முதுதில் ஒரு தட்டு தட்டி ’வா நேரமாச்சு’ என்றபடியே கடந்து சென்றார். அடி கொஞ்சம் பலமாக விழுந்துவிட்டது. அருணா ’இதை பிடிங்க’ என்று என்னிடம்  கைப்பையை  கொடுத்துவிட்டு எழுந்து, உங்களை தொடர்ந்து வந்து பலமாக ஒரு அடி முதுகில் வைத்து ’எதுக்கு ஜெயன் அடிச்சே’? என்றார்கள். ஜெ திரும்பி’ ’இல்லடி செஷனுக்கு நேரமாச்சு அதான்’ என்றதும் ’அதுக்கு? அடிப்பியா? வலிக்குது தெரியுமா? என்று  சொல்லிக் கொண்டிருக்கையில் இருவருக்கும் இடையில் எங்கிருந்தோ அஜிதன் வந்து நின்றான்.  (வெண்முரசில் இதுபோலவே பீமனும் இடும்பியும் பேசிக்கொண்டிருக்கையில் கடோத்கஜன் இருவருக்கும் இடையில் வந்து நிற்பான்). பின்னர் விஷ்ணுபுரம் விழாக்களில் சில சமயம் அஜிதனை பார்த்திருக்கிறேன்

அஜிதன் எடுத்த குறும்படத்தை பார்த்தபோது அந்த அஜிதனா என்று பிரமிப்பாக இருந்தது. சென்ற மாதம் ஒரு கூடுகையில் தத்துவ விளக்கங்கள் குறித்து உரையாற்றிய அஜிதன் அதுவரை நான் பார்த்திருந்த, நான் கொஞ்சமாக வேணும் அறிந்திருந்த அஜிதனே இல்லை.

அஜிதன் அன்று பேசியவை அனைத்தும் மிகப்பெரிய விஷயங்கள் என்பது மட்டும்தான் எனக்கு புரிந்தது. அவற்றை பேசுகையில் அஜிதனின் உடல்மொழியும் ஆச்சர்யமூட்டியது மிக மிக சாதாரணமாக, எளிய அன்றாட நிகழ்வுகளை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பது போல தான் அத்தனை தீவிரமான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தான்.

இளைஞர்கள் முக்கியமான, தீவிரமான விஷயங்களை பேசிக் கேட்கையில் நான் பிறரைக் காட்டிலும் மிக அதிகம் மகிழ்ச்சியடைவேன். ஏனெனில் ஏழாயிரம் இளைஞர்கள் படிக்கும் கல்லூரியில் பல வருடங்களாக பணியிலிருக்கிறேன். தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்துகொண்டு கொஞ்சம் அதிகப்படியான அறிவுடன் இருப்பவர்கள் என்றுகூட விரல்விட்டு எண்ணிச் சொல்லக் கூடிய அளவில்தான் சிலர் இருக்கிறார்கள். எனவே அஜிதனை போன்ற அரிதினும் அரிய இளைஞர்கள் எனக்களிக்கும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளப்பரியது.

ஆனால் மைத்ரியில் கண்ட அஜிதன் முற்றிலும் வேறு. ஹரனின் பேருந்து பயணத்தின் தொடக்கத்திலேயே அஜிதன் என்னும் அரிய  படைப்பாளியை கண்டுகொள்ள முடிந்தது.  ஹரனின் பயணம் வாசிப்பவர்களின் பயணமும் ஆகிவிடுகிறது.

உடல் சூட்டை இருக்கைக்கு அளித்து அதை வாழ்விடமாக்க வேண்டும் என்னும் வரியில் இது நான் முன்பு அறிந்திருந்த அஜிதனல்ல என்று மீண்டும் எனக்கே சொல்லிக்கொண்டேன் .

மிக புதிய நிலப்பரப்பில் நாவல் விரிவதால் அக்கதையுடன் இன்னும் அணுக்கமாகி கதையையும் நிலப்பரப்பையும் சேர்ந்தே ரசிக்கவும் முடிந்தது அது மேலும் சுவாரஸ்யம் ஆக்கிவிடுகிறது வாசிப்பனுபவத்தை.

முழுவதும் வாசித்து முடித்த பின்னர் சில நாட்கள்தான் அந்த பயணமும் அக்கதை நிகழ்வதும் என்பதை நம்ப முடியவில்லை. பல நூறு வருடங்களுக்கான பயணம் அது. கதையை முழுக்க சொல்லி இன்னும் வாசிக்காதவர்களுக்கு வாசிப்பின்பத்தை குலைக்கவிரும்பவில்லை.

ஹரனை பசுமைப் பெருக்கும் பெண்மைப்பெருக்கும் தொடர்ந்து சூழ்ந்து வந்து கொண்டிருக்கிறது. கெளரியும், அன்னையும், ரிது பெரியம்மாவும், சிவப்பு ஆடை அணிந்த சிறுமிகளும், மணப்பெண்ணும் மைத்ரியும் இன்னும் பலருமாக.

உணவை, கட்டிடங்களை, மனிதர்களை, நிலப்பரப்பை, வசந்த காலத்தை, காதலை, உறவுகளை, பிரிவை, வலியை என்று  ஹரன் வாழ்வை முழுக்க அறிந்துகொள்ளும் அந்த அழகிய அரிய பயணத்தில் அஜிதன் என்னையும் கைப்பிடித்தும் கச்சரில் ஏற்றியும், பேருந்திலும், ஜீப்பிலும் கூட்டி செல்கிறான்.

பைன் மரங்களின் ஊசியிலை சருகுகளும், கோன்களும் நிறைந்த அந்த பாதை வழியே சோனியாவின் கடிவாளக் கயிற்றை பிடித்துகொண்டு ஹரனையும் அவன் மொத்த வாழ்வையும் அத்தனை அழகாக அவள் எடுத்துச் செல்கிறாள்.  மறக்க முடியாத பயணம் எனக்கும்.

அன்னையை நினைத்துக் கொள்கையில் ’’தூய அன்பென்னும் திரைக்கு அப்பால் தன்னை மறைத்து வைத்திருந்தார்’’ என்னும் வரிகள்  கண்ணீர் விடச் செய்தன.

குழந்தை போன்ற உடல் கொண்ட தெய்வ வடிவங்களை,  காதில் கேட்கும் இசையை, புதிய உணவை, கண்கூசும் பின்னொளியில்  நிழலுருவாக  தெரியும் கோவிலை சொல்லுகையிலும். இளமைக்காலத்தை சொல்லிக்கொண்டிருக்கும் மைத்ரியை  மேய்ச்சல் நிலமகள் என்கையிலும் அஜிதன் என்னும் திரைவிலகி  ஜெ தெரிந்தார்.

மைத்ரி முழுவதுமே எனக்கு தனித்த பிரியத்தை உண்டாக்கி இருக்கும் படைப்பு தான் எனினும் ஹரன் நினைப்பதுபோல் ’’ஒளியாலான, மனதில் என்றும் தங்கிவிடும் தருணமாக’’ எனக்கிருப்பது இருவரும் திரும்பும் வழியில் அந்த உன்னத  பின்மதியவேளையில் பொன்மழையின் ஆயிரம் ஊசிகள் புல்வெளியில் பெய்திறங்குவதை பார்த்தபடி குளிரில் இனிப்பை கொரித்துக்கொண்டு  நெருங்கி அவர்கள் இருவரும் அமர்ந்திருக்கும்  அந்த சித்திரம்தான்  கூடவே .ஃபெர்ன்களின் அந்த சுருண்ட இளம் குருத்திலை உணவும், அந்த புக்யால் புல்வெளியும்.

மைத்ரிக்கு ஹரன் கஸ்தூரி மிருகு, மாயப்பொன்மான். அவனுக்கு அவள் வனதேவதை ஜீதுவைப்போல  அந்த 3 நாட்கள் ஹரனுக்கும் பலநூறு வருட வாழ்வு. அந்த நினைவுகளுடன் அந்த பெரு வலியுடன் ஹரன் வாழ்ந்துவிடுவான். அவனுக்கான மீதமிருக்கும் வாழ்வை என்றும், மைத்ரி மற்றுமொரு ரிது என்றும் எனக்கே நான் சொல்லிக்கொள்கிறேன்.

கோட் பைக்குள் ஹரனறியாமல் மைத்ரி வைத்திருந்த  வாடியிருந்தும் நிறம் இழக்காமலிருந்த  புல்வெளியின் பலவண்ண மலர்கள் மைத்ரி அவனுக்கு மீட்டுக்கொடுத்த கெளரி 

இந்த வாசிப்பனுபவம் எனக்கும் ஒரு பெருங்கனவுதான். எழில் நிறைந்த கனவு, என்றென்றும் மனதில் எஞ்சி நிற்கும் கனவு.

அன்பும் ஆசிகளும் அஜிதனுக்கு

கடவுள் பிசாசு நிலம்

2022 விஷ்ணுபுரம் விழா அமர்வுகளில் ஒன்றில்தான்  முதன்முதலில் அகர முதல்வனை கண்டேன். அதற்கு  முன்பு அவரைச் சந்தித்ததில்லை.  ஈர நெற்றியில் திருநீற்றுப் பட்டை துலங்க, நெஞ்சு நிமிர்த்தி கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார். தொடர் கேள்விகளுக்கு அசராத தெளிவான எதிர்வினைகள், இலங்கை என்று சொல்லப்பட்ட போதெல்லாம், ஈழம்  என்ற கறாரான திருத்தல்கள்,   பொருத்தமான இடங்களில்  சைவத்திருமுறைகளின் கம்பீர முழக்கங்கள், போருக்கு எதிரானவன் என்பதை சொல்லுகையில்  குரலில் இருந்த அழுத்தம் என அந்த அமர்வு முடிகையில் அகரமுதல்வனின் மீது பெரும் மரியாதையும் அன்பும் உண்டானது.  அதன்பிறகு என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன்.

அவருக்கு என்னை கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற தூரன் விருது விழாவிலேயே தெரிந்திருக்கிறது

முன்பு எப்போதோ ஒரு புலம்பெயர் இலக்கியமொன்றிலிருந்த  பல கவிதைகளில் ’’முருங்கைப்பூ உதிரும் முற்றம் இனி நமக்கில்லை கண்ணே’’ எனும் ஒரு வரி என்னை பல காலம் இம்சித்தது. அந்த உணர்வை, அந்த பிரிவின் வலியை, தாய் மண்ணை, அதிலிருக்கும் தாவரங்களை சொந்த பந்தங்களை,  பிரிவதென்பதின் பெருவலியை அந்த வரி எனக்கு சொல்லிக் காட்டிக் கொண்டே இருந்தது.

திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து 6 வருடங்கள் கொழும்புவில் வசிக்க நேர்ந்த போது நான் கண்ட இலங்கையில் போர்ச்சூழல் தீவிரமாக இருந்தது எனினும் பாதுகாப்பான பகுதியில் இருந்ததால் அதன் குரூரங்கள் எனக்கு முழுக்க தெரிந்திருக்கவில்லை. செய்தித்தாள்கள், பிற ஊடகங்கள் செவிவழிச் செய்திகள் அளித்தவற்றையே உண்மை என கருதினேன்.அவ்வப்போது வேவு விமானங்கள் பருந்தைப்போல வட்டமிடுவதை பார்க்க முடிந்தது.

பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்திருந்தது. ஒரு சுருள் கருவாப்பட்டை வாங்கியபோது அதன் விலை எனக்கு அதிர்ச்சி அளித்தது, ஏன் அத்தனை அதிக விலை? என்று அந்த சிறு கடைக்கரரிடம் கேட்டபோது ’’எல்லாம் போரால்’’ என்றார்.

கொழும்பு வீட்டிற்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து செல்லும் வழியெங்கும் ராணுவ வீரர்கள் மணல்மூட்டை தடுப்புக்கு பின்னால் துப்பாக்கி ஏந்தியபடி நின்றிருப்பார்கள். விசேஷ நாட்களில் வெண் தாமரைகளுடன் புத்தர் ஆலயங்களுக்கு செல்லும் வழியிலும், வீட்டருகிலும் கடைவீதியிலும் எங்கும் ராணுவம் இருந்தது. ஒருமுறை கடைவீதியில் இருந்து வீடு செல்லும் வழியில்  அப்படி ஒரு மணல்மூட்டை தடுப்பின் பின்னர் இருந்த கம்பிவேலி ஒன்றில் செங்காந்தள் கொடி அடர்ந்து படர்ந்து ஏராளமாக மலர்ந்திருந்தது. வழக்கமாக தாவரங்களை கண்டால் உண்டாகும் குதூகலத்துடன் ’’காந்தள் மலர்’’ என்று உரக்க சொல்லி அதை பறிக்க சென்றபோது கடுமையாக குடும்பத்தாரால் கண்டிக்கப்பட்டு வீட்டுக்கு ஏறக்குறைய இழுத்து வரப்பட்டேன். ஒரு மலரின் பெயரை சொல்லியது குற்றமாவென அன்று அது ஒரு பெரும் மனக்குறையாக இருந்தது.

சென்னை புத்தக விழாவில் வாங்கி வந்த சில முக்கிய புத்தகங்களில் அகரமுதல்வனின்  கடவுள் பிசாசு நிலமும் ஒன்று. அதை வாசிக்கையில்தான் அன்று அச்சூழலில் காந்தளின் பொருள் என்னவாயிருந்திருக்கும் என்பதை அறிய முடிகிறது. கண்டியின் அழகும், பேராதனை பல்கலைக்கழக தாவரவியல் தோட்டத்தின்  விரிவும், ரம்புட்டான் மரங்கள் அடர்ந்திருந்த அசங்க ராஜபக்‌ஷேவின் அழகிய வீடும், உதய தென்னக்கோனின் நாலுகட்டு வீட்டின் விசாலமும், மஞ்சுள ரணதுங்கவின் வீட்டின் விதைகளில்லா எலுமிச்சைகளும் எனக்கு அளித்திருந்த நிறைவையும் மகிழ்வையும் கடவுள் பிசாசு நிலம் முற்றிலுமாக துடைத்து அழித்ததோடில்லாமல் அக்காலகட்டத்தில் எனக்கிருந்த மகிழ்வை காட்டிலும் பல மடங்கு அதிக குற்ற உணர்வையும் அளிக்கிறது

அப்போதிருந்த இலங்கையின், யுத்தத்தின் உண்மை நிலவரமென்ன என்பதை இத்தனை காலம் கழித்து அகரன் மூலமாகத்தான் அறிந்து கொண்டிருக்கிறேன்

முதல் பக்கத்திலேயே //ஒரு பெருவேக அழிவுச் சூழலில் விழுந்து அதிலிருந்து பண்பு நலனால் அல்லாமல் நல்லூழ் காரணமாக மீண்டு வந்தவன்// என்னும் நாஜிகள் சித்திரவதைகளுக்கு உள்ளான இத்தலிய யூதரான  பிரைமோ லெவியின் வரிகள் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வரிகள் அகரனுகும் ஆதீரனுக்கும் முழுமையாக பொருந்துபவை.

போராளிகளுக்கு மரண வீட்டிலும் உணவளிக்கும்  அடைக்கல மாதாவான அன்னையர், வன்முறையை தவிர்க்க வேண்டும் என அன்றாடம் பிரார்த்தனையின் போது சொல்லும்  பள்ளி அதிபர், அம்புலி வளரும் இரவுகளில் சாமியாடி வாக்கு சொல்லும் பூட்டம்மா போன்ற பல வடிவங்களில் இருக்கும் கடவுளரையும்,  மது வெறியில் பைலா பாடல்களை கூச்சலிட்டு பாடிக்கொண்டு, கையறிகுண்டுகளை அப்பாவி சனங்களின் மண்டையோட்டுக்குள் எறியும், பல தந்திரங்கள் செய்து, அமைதி என்னும் போர்வைக்குள் பதுங்கி இருந்த, குருதி வெறி கொண்டிருக்கும் விலங்குகளா,ன அரசின் ஆர்மிக்கார பிசாசுகளையும், குருதியால் சிவந்து,ஓயாது அழுது துயர் புழுதி படிந்திருந்த நிலத்தையும் காணும், படிக்க போகாமல் ’’உந்த ஆர்மிக்காரங்களை கொழும்புக்கு அடிச்சு துரத்த போறேன்’’ என்று சொல்லும் பத்து வயது  ஆதிரனின்  கதையாக விரிகிறது கடவுள் பிசாசு நிலம்

ஒவ்வொரு வரியும் துயரிலும் குருதியிலும் தோய்ந்திருப்பினும் அவற்றையும் தாண்டி கொண்டு கவனிக்கச் செய்கிறது  நூலை உருவாக்கி இருக்கும் அழகு தமிழ் மொழி

போராளியான அண்ணன், வீட்டிற்கு வந்து போய் கொண்டிருக்கும் மற்றொரு போராளி மருதன், அவர் மீது நேசம் கொள்ளும் பின்னர் கால ஓட்டத்தில் போராளியாகும் அக்காள் என ஆதீரனுக்கு குடும்பமே இலங்கையின் போர்ச்சூழலை முழுக்க தெரிவித்துக் கொண்டிருக்கும் அமைப்பாக இருக்கிறது.

ஆர்மிக்காரங்களை எதிர்த்துப் பேசும், எப்போதும் வீடு தங்காமல் சுற்றித் திரிந்து கண்ணில் பட்டவை, காதில் கேட்டவைகளின் மூலம் நாட்டு நடப்பை மேலும் அறிந்து கொள்ளும் ஆதீரனுக்கு இயல்பாகவே போர்க்குணம் உருவாகிறது. போராளியாக வேண்டும் என்று துடிக்கும் ஆதீரனுக்கு அண்ணனின் கைத்துப்பாக்கியின் எதேச்சையான தீண்டல் வேட்கையின் குளிரை உண்டாக்குகின்றது.

பன்னிச்சையடி கிராமத்தின் அத்தனை பேருக்கும் ஆதரவாக, ஆறுதலாக, பற்றிக்கொள்ள பிடிப்பாக, தெய்வமாக இருக்கும் பன்னிச்சை மரமும் ஒருநாள் ஷெல்லடித்து சாம்பலாகிறது. அச்சாம்பலையும் நெற்றியிலிட்டு கொள்ளும் மக்களை, அவர்களின் மரபுகளை, வேர்களை,  வாழ்வின் இயங்கியலை, இடம் பெயருதலை, மரணங்களை, காதலை, நம்பிக்கைகளை, கனவுகளை காட்டுகிறது கடவுள் பிசாசு நிலம்

வாசகசாலைக்கு சென்று வாசிக்கும், போராளிகளோடு நட்பிலிருக்கும், மெல்ல வளர்ந்து வரும், போராளியாக வேண்டும் என ஒவ்வொரு கணமும் விரும்பும் ஆதீரன் பதின்மவயதில் காதல் கொள்கிறான்.

போரை, போராளிகளின் வாழ்வை, குருதியை, குப்பி கடித்தும், வெட்டியும் தூக்கிட்டும்,  கையறிகுண்டிலும் நிகழும் மரணங்களை போரின் துயர்களை, மேலும் பலகொடுமைகளை, இழப்பின் வலியை சொல்லும் அகரனும் அம்பிகையுடனான ஆதீரனின் காதலைச் சொல்லும் அகரனும் ஒரே ஆளுமை என்பதை சிரமப்பட்டுத்தான் நம்ப வேண்டியிருக்கிறது.

பிளவாளுமையாக இருந்தே அவற்றை அகரன்  எழுதியிருக்க முடியும். யுத்தத்தின்  தீவிரத்தை சொல்லும் வேகமும் உணர்வுபூர்வமும் காதலை சொல்லுகையில் பல மடங்கு அதிகரித்து விடுகிறது. அம்பிகாவிற்கும் ஆதீரனுக்குமான காதலை சொல்லுகையில் மற்றொரு அழகிய வடிவெடுத்து விடுகின்றது அகரனின் மொழி

தாகம் பெருகிய வழிப்போக்கனின் கையில் கிடைத்த செவ்விளநீர் போல காதல் ஆதீரனை கைகளில் ஏந்திக் கொள்கிறது பெண்ணின் கண் மொழியில் ஆயிரமிருக்கிறது ஆயுத எழுத்துக்கள் என்கிறான் ஆதீரன். கூழாங்கல் போல அடியாழத்தில் கிடந்து, பின்னர் மெல்ல மெல்ல ஒடும் நீரில் மேலேறி வரும் அம்பிகாவை காண்கையில் ஆதிரனுக்கு காதலைச்சொல்லவும் பொருத்தமாக சைவப்பாடல்களே தோன்றுகிறது. அப்பாடல்களை எல்லாம் அகரனின் கணீர் குரலிலேயே கேட்டேன்.

அம்பிகா எனும் கூழாங்கல்லை சுமந்து ஓடும் நதியாகிறான் ஆதீரன். அம்பிகா கூந்தலை சுழற்றுகையில் ஆதீரனின் ஞானத்தின் பசுந்தரையில் விதை வெடித்து செடி எழுகிறது.ஆதீரனால் முத்தமிடப்படும் அம்பிகா மேலும் வடிவு கொள்கிறாள்.

அம்பிகாவுடனான காதலை சொல்லும் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு எழுத்தும் இனிப்பில் தோய்ந்திருக்கிறது. இந்த நூலில் அம்பிகா ஆதீரன் பகுதிகளை மட்டும் தனியே வாசிக்க வேண்டுமென்றிருக்கிறேன், நான் வாசித்த  ஆகச்சிறந்த காதல் கதைகளில் ஆதீரன் அம்பிகை கதையுமொன்று

உப்புக்காட்டில் நெடுவல் ராசனுடன் ஆதீரன் செல்லும் உடும்புவேட்டைகள் இதுவரை நான் வாசித்திராத தீவிரத்தன்மை கொண்டிருந்தன. அப்படியொரு வேட்டை குறித்து நான் முன்பெப்போதும் கேட்டிருந்ததுமில்லை

வெயிலில் காய்ந்து நாறும் உடும்பின் தோல்கள், அவற்றால் உருவாக்கப்படும் மேளம், காளி எழுந்து நின்றாடும் நெடுவல் ராசனின் தோள்கள், குப்பைத்தண்ணி வார்த்தல்,சமைந்த பெண்ணுக்கு அருந்த தரப்படும் கத்தரிக்காய் சாறு,  உடன் புக்கை,புட்டும் சொதியும் அப்பங்களும், முசுறு எறும்புகள், மரவள்ளிக்கிழங்கு, மரமடுவங்கள், இதரை வாழைகளும் இலுப்பையடி சுடலைலைக்காடும்,  சம்பா அரிசிச் சோறும் உடும்புகுழம்பும், பச்சை மிளகாய் சம்பலும், பூவரசங்குச்சிகளும்,  பருப்பும், பாகற்காய் குழம்பும், மோர்மிளகாய் பொரியலுமாக நானறிந்திருக்காத இலங்கை  ஆதீரனின் கண்கள் வழியே ஒவ்வொரு பக்கத்திலும் விரிந்து மலர்கிறது. பல் விழும் கனவு  கண்டால் துயர்மிகுந்த ஏதோ நிகழும் என்னும் நம்பிக்கையை போல நமக்கும் பொதுவான சிலவற்றையும் ஆதீரன் மூலமறிய முடிகின்றது.

கணபதிபிள்ளையும், தணிகை மாறனும்,தவா அண்ணனும், பழமும்,  அரிய ரத்தினம் கோபிதனும், பவி மாமனும், தாமோதரம்பிள்ளையும், காந்தியண்ணாவும், அல்லியக்காவும்,  ஓவியனும், கபிலனும்,  ’பட்டாம்பூச்சி’ வாசிக்கும் மருதனும், சலூன் இனியனும்  இலங்கைப்போரின் பல குருர பக்கங்களை காட்டுகிறார்கள். கபிர் அடிக்கும் இடங்களிலிருந்து மனிதர்கள் தொடர்ந்து இடம் பெயருகிறார்கள், எறும்புகள் கூட போரைப்பற்றியே யோசித்துக்கொண்டு மரங்களிலிருந்து கீழிறங்குகின்றன.

நிகழப்போவதை முன்பே யூகிக்கிறாள் பூட்டம்மா, குன்றிமணிகளையும் செங்கற்களையும் அரைத்து மண்ணுக்காய் நஞ்சுண்டு மடிந்த பொன்னாச்சியும் நஞ்சின் மீதியை நிலமுண்ண போகிறது என்கிறாள். வீரச்சாவும், வித்துடல்களும் விழுப்புண்களும் எரிதழல் வெளியில் ஒரு சொல்லைப்போல் அலர்கின்றன.

ஆதீரன் வீட்டிலும் அல்லியக்கா வீட்டிலும் இன்னும் பல வீடுகளிலும் மரணம் அழையா விருந்தாளியாக கதவை திறந்து வந்து கொண்டே இருக்கிறது

அமைதிப் பேச்சுவார்த்தை, சமாதான உடன்படிக்கை எனும் போர்வை களையெல்லாம் கிழித்தெறிந்துவிட்டு யுத்தம் துவங்கி விடுகிறது.  யேசுதாஸ் குரலில் வளர்ந்து கொண்டிருந்த ஒரு காதல் கருகிச்சாகிறது. யார் முதலில் வீரச்சாவடைவது என்று பேசிக்கொள்ளும்  இளவெயினியும் பூம்பாவையும் தூரிகையும் பெண்போராளிகளின் உலகை காட்டுகிறார்கள்.

கிபிர் தாக்குதலும்,  ஷெல்லடிப்பும், இயக்கத்தின் பின்னடைவும்,  விழுந்துகொண்டே இருக்கும் வித்துடல்களும்,அதிகரித்துக்கொண்டே இருக்கும் காயம்பட்டவர்களும், ஊரையே மூடும் கந்தகமணமுமாக ஆதீரன் காட்டும் போர்  உச்சம் மனதை கலங்கடிக்கிறது. அந்த மண்ணில் அப்போது வாழ்ந்த ஆதீரன் மீது கனிவும் தனித்த பிரியமும்  பொங்கிப்பெருகிறது.

யுத்தம் அமைதியை விட மேலானது என்று ஆதீரன் எழுதி வைக்கிறான். எளிய மனிதர்களின் பல வாழ்க்கை கணக்குகளை யுத்தம் தன் கோரக்கரங்களால் கிழித்தெறிகிறது.

அம்பிகையின் இறுதிச்சடங்கின் போது ஆதீரனின் தெளிவையும்,  பூட்டம்மா அடிவயிற்றில் மண் வைத்து நீரூற்ற சொல்வதையும், பன்னிச்சை மரத்துடனும் உப்புக்காட்டுடனும் நடுகற்களுடனும் ஆதீரனுக்கிருக்கும் உணர்வுபூர்வமான பந்தத்தையும் மனமும் கண்களும் கலங்க வாசித்தேன்.

அவ்வளவு நடந்தும் பெண்கள் கூந்தலில் காந்தளைச் சூடும் நாள் வரும், நிலம் விடியும் என்று  கதை முடிகின்றது. தூரிகையின் பதுங்கு குழிக்குள் அசைந்தாடுகிறது ஒரு தளிர்.

நேரடியாக யுத்தத்தை சொல்லாமல், யுத்தப் பின்னணியில் அந்நிலத்தை, அம்மனிதர்களின் வாழ்வை, புலம்பெயர்தலின் அவலத்தை சொல்லும் கதை இது. இதில் எத்தனை உண்மை, எத்தனை புனைவு எத்தனை சொல்லாமல் விடப்பட்டவை  என்பது ஆதிரனுக்கும் அகரனுக்கும்தான் தெரியும் எனினும் இந்நூல் ஒவ்வொரு பக்கம் வாசிக்கையிலும் அளித்த துயரம் நூறு சதவீதம் உண்மை.

இத்தனை உணர்வுபூர்வமாக  புலம்பெயர்ந்தவர்களின், யுத்தத்தின் போராளிகளின்,  இயக்கத்தின், காதலின் கதையை வாசித்ததில்லை.அகரனின் மொழி வன்மை திகைக்க வைக்கிறது.

விஷ்ணுபுரம் விழாவில் அகரனிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர்கள் குடும்பத்துக்கு பரம்பரையாக சொந்தமாயிருந்த  வாள் ஒன்றை அவரது பூட்டம்மா போர்ச்சூழலில் எங்கோ மறைத்து வைத்தாரென்றும் அதை பின்னர் ஒருபோதும் கண்டுபிடிக்க  முடியவில்லை என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்.

அது வேறெங்குமில்லை, யுத்தகாலத்திலான தன் வாழ்வை   இத்தனை கனம் கொண்ட  மொழியில் சொல்லும்  அகரமுதல்வனாகத்தான்  அவ்வாள் கூர் கொண்டிருக்கிறது

அம்மாவின் கண்களை கொண்டிருக்கும் பொன்னாச்சி சொல்லியபடியே அகரனின் கால்கள் இனி சோர்வில்லாது நடக்கட்டும். அகரனுக்கு அன்பும் நன்றியும்.

கஞ்சிக்கிழங்கு

கி.ரா, கஞ்சிக்கிழங்கு- லோகமாதேவி

கி ராவின் மிச்சக்கதைகள் வெளியீட்டு விழாவில் (June 29, 2021) கலந்துகொண்டு ஜெ ,, நாஞ்சில் சா ர் உள்ளிட்ட பல எழுத்தாளர்களையும், விஷ்ணுபுரம் குழும நண்பர்களையும் சந்தித்ததும், நூலைக் குறித்தும் கி.ராவைக் குறித்தும் ஜெ வின் பிரமாதமான உரையைக் கேட்டதுமாக, சென்ற வருட விஷ்ணுபுர விழாவை கொரோனாவால் தவறவிட்டதின் வருத்தமே காணாமல் ஆகிவிட்டது. வீடு வந்த கையோடு புத்தகத்தை வாசித்து முடித்தேன்.

’’மிச்சக்கதைகள்’’ என்ற தலைப்பு கிராவின் வயதை நினைத்து வைக்கப்பட்டிருக்கலாம், இன்னுமவர் எழுதவேண்டுமே என்று நானும் நினைத்தேன். கதைகளை வாசிக்கையில்தான் கி.ராவின் பல கதைகளின் தொடர்ச்சியை போலவும், துண்டு துண்டாக கிடக்கும் அவரது வாழ்வின் பல அற்புதக்கணங்களின் தொகுப்பென்றும் தெரிந்தது, முழுவதுமாக படித்து முடித்ததும் பெரும் பிரமிப்பு உண்டாகியது. அவரது கிராமத்துக்கே வீட்டுக்கே, வாசலுக்கே, தெருவுக்கே என்னையும் கூட்டிச்சென்று விட்டிருக்கிறார். புத்தகத்தை மூடினதும்தான் நான் பொள்ளாச்சிக்கு திரும்பியிருந்தேன். எத்தனை இயல்பான கதைசொல்லல்!

இந்தக்கதைகளை ஒருவர் எழுதி, அவை அச்சிடப்பட்டு, ஒரு புத்தகத்தின் பக்கங்களில் வாசிக்கும் உணர்வே இல்லாமல் கி.ராவுடன் அவர் வீட்டுதிண்ணையில் அமர்ந்து ஒன்றுக்கொன்று சம்பந்தா சம்பந்தமில்லாத, ஆனால் வெகு சுவாரஸ்யமான சங்கதிகளை அவர் மனம் விட்டுப் சொல்லச்சொல்ல கேட்டுக்கொண்டிருந்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.

புதுப்புது வட்டாரவழக்கு சொற்களை அதிசயித்து வாசித்து குறித்துக்கொண்டேன். தேங்காய் உடைப்பது குறித்து சொல்லுகையில் பெருவிரலால தேங்கா கண்ண பொத்திகிட்டு நரம்பின்மீது தட்டி கீறல் விட்ட தேங்காயின்//கீறலுக்குள்ளே மேஜைக்கத்தியோட நுனியை விட்டு கத்தியை குத்தி அகலிச்சா,  தோ வந்தேன்னு இறங்கிடும் தண்ணி// என்கிறார். கீறலுக்குள் கத்தியை விட்டு விரிசலை பெரிதாக்குவதை அகலிச்சா என்பதுதான் எத்தனை பொருத்தமாயிருக்கிறது.

இதைப்போலவெ பக்கரை, போக்காளி, கால்கள் லத்தாடின, இரிசி, தடபுதல், என்றும் சில சொற்கள் வருகின்றது.

காதோர நரை, லட்சுமிகாந்தன் கொலை, பிராமணாளுக்கு தனி தடுப்பறை இருந்த ஹோட்டல்கள், குழந்தைகளை பெண்களிடம் கொடுத்து கொஞ்சச்சொல்லிவிட்டு, மறைந்திருந்து அவர்கள் கொஞ்சுவதை பார்ப்பது, காணாமல் போன எருமைமாடு, உருண்டை உருண்டையான மணமில்லா மலர்களுடன் தொட்டாச்சிணுங்கி செடிகள், புதுமாப்பிள்ளைக்கு இவர் அந்தரங்கமாக உதவியது, குத்தாலம் , விருந்துக்கு போன இடத்தில் பொண்ணு மாப்பிளைக்கு நடந்த விநோதங்கள், ரசிகமணி ஆண்களின் எச்சில் இலையில் பெண்கள் சாப்பாடு நடக்கவிடாமல் செய்த சம்பவமென்று என  ஒவ்வொன்றும் ஒரு ரகம் , ஒவ்வொன்றும் ஒரு சுவை, ஒரு புதுமை.

வெற்றிலைக்கதைகளாக  இடையிடையே  பாலுறவக்கதைகளும்  கலந்து வந்துகொண்டே இருக்கிறது.கஞ்சிகெட்டலு என்னும் பஞ்சகாலத்துக்கிழங்கு, மலைமேலே இலைபோட்டுச்சாப்பிட்டால் குப்பை சேரும் என்று உருவாக்கப்பட்டிருந்த குத்தாலத்தின் திருவோட்டுப்பள்ளங்கள் என்று ஏராளம் அதிசயவிஷயங்களும் இருக்கின்றது,

எதுமாதிரியும் இல்லாத புதிமாதிரியான கதைகள் இவையனைத்துமே. புதுவை இளவேனிலின் புகைப்படங்கள் வெ்கு அற்புதம், கருப்பு வெள்ளையில் காலங்களை கடந்த புகைப்படங்கள். உண்மையில் அத்தனை அருமையான இயல்பான புகைப்படங்களால்தான் கதைகளை கி ரா சொல்லச்சொல்ல கேட்கும் அனுவபவம் வாய்த்ததென்றும் சொல்லலாம்.

பஞ்ச காலத்தில் சாப்பிடப்பட்ட பூண்டைப்போலிருக்கும் அந்த கிழங்கைக்குறித்து அறிந்துகொள்ள நிறைய தேடினேன். 1968ல்   journal of agricultural traditions என்னும் சஞ்சிகையில் எழுதப்பட்ட Plants used during scarcity and famine periods in the dry regions of India என்னும் கட்டுரையொன்றில்  Ceropegia bulbosa  என்னும் செடியின் பூண்டைப்போலிருக்கும் கிழங்குளை பஞ்சகாலத்தில் மக்கள் வேக வைத்து கஞ்சியாக்கி உண்டது குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுவாகவும் இருக்கலாம் அதன் தமிழ்ப்பெயரைக்குறித்த தகவலை தேடிக்கொண்டிருக்கிறேன்,

கடலைப்போல பெரிய, சின்ன கதைகளில் அடங்காத ரசிகமணி சமாசாரங்களை, இன்னொரு முறை பார்ப்போமென்கிறார் கிரா இதில்.

காத்திருக்கிறேன்

ஜன்னல் சிறுமி

தளத்தில் மாற்றுக் கல்வி குறித்த பதிவில் ஜெ குறிப்பிட்டிருந்த  ”டோட்டோ –சான்  ஜன்னலில் சின்னஞ்சிறுமி” புத்தகத்தை வாங்கி  வாசித்தேன்.   

இருபது ஆண்டுகளாக என் ஆசிரியப்பணியில்  வழக்கமான கல்வியின் போதாமைகளை நான் அநேகமாக தினமுமே உணர்கிறேன். சராசரி குடிமகன்களை உருவாக்குவதாக சொல்லப்படும் பொதுக்கல்வியில் எனக்கு நம்பிக்கை அற்றுப்போய் பல வருடங்களாகி விட்டிருக்கிறது. 

பள்ளிக்கல்வியில் மதிப்பெண்கள் வாங்கும்படிமட்டும் தயாரிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் மனனம் செய்யப் பழகி, சுயமாக சிந்திக்கும் திறனை இழந்த, மூளை மழுங்கடிக்கப்பட்ட  மாணவர்களே  அதிகம் கல்லூரிக் கல்விக்கு வருகிறார்கள்.  12 ஆம் வகுப்பில் முதலிடம் இரண்டாமிடம் வந்த மாணவர்கள் கூட கல்லூரியில் வழக்கமான பாணியில் இருந்து சற்று மாறுபட்டு கேட்கப்படும் கேள்விகளை புரிந்து கொள்ளத் தடுமாறுவதை பார்க்கிறேன். தன்னை சுற்றி என்ன நடக்கிறது, தன் வீட்டில் என்ன நடக்கிறது, தன் ஊரில் உலகில் என்ன நடக்கிறது என்பதையெல்லாம் குறித்து எந்த அறிதலும் இல்லாமல்தான் 3 வருடங்களும் படித்துப் பட்டமும் வாங்கி வெளியில் வருகிறார்கள். ஆசிரியர்களும் எந்த மாறுதலும் இல்லாமல் அரைத்த மாவையே அரைக்கிறோம்.  

நான் இளங்கலை தாவரவியல் படித்த அதே துறையில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிரியராக சேர்ந்தபோது நான் படித்த அதே பாடத்திட்டம் எந்த மாறுதலுமின்றி நடைமுறையில் இருந்தது. இன்று 20 வருடங்களாகியும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல் அதே பாடத்திட்டத்தை தான் நடத்துகிறோம். நினைத்துப்பாருங்கள் பொள்ளாச்சியை போன்ற பச்சை பிடித்த பல கிராமங்களால் சூழப்பட்டிருக்கும் ஓரிடத்தில்  நான்கு சுவர்களுக்குள் தாவரவியலை நடத்திக் கொண்டிருப்பதென்பது எத்தனை அநியாயமென்பதை.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சைகஸ் என்னும் ஒரு கீழ்நிலைத் தாவர குடும்பத்தை சேர்ந்த மரமொன்றை  குறித்து பாடம் நடத்த வேண்டி இருக்கும் அந்த சைகஸ் பெண் மரமொன்று கல்லூரியில் என் வகுப்பிற்கு பின்புறம் இருக்கிறது. ஆனால் அந்த மரமத்தினருகில் மாணவர்களை அழைத்துச் சென்று மரத்தை அவர்கள் தொட்டு உணர்கையில் பாடம் நடத்த நான் பல படிநிலைகளில் அனுமதி வாங்கவேண்டும். மாணவர்களின் ஒழுங்கு சீர்குலையும் என்றும், வகுப்பில் அமர்ந்திருக்கும் பிற துறை மாணவர்களை அது தொந்தரவுக்குள்ளாக்கும் என்றெல்லாம் எனக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்படும் ஆனாலும் நான் ஒவ்வொரு வருடமும் சைகஸ் மரத்தருகில் கூட்டமாக மாணவர்கள் வைத்துக்கொண்டுதான் பாடம் எடுப்பேன். கல்லூரியில் மேலும் பல இடங்களில் சைகஸ் மரங்களை நட்டும் வைத்திருக்கிறேன். இலைகள் செடிகள் கொடிகள் என  கைகளால் எடுத்துக்கொண்டு போக முடிந்த அளவில் வகுப்பிற்கு எடுத்துக்கொண்டுபோய்க் கூடக் கற்பிக்கிறேன் 

அருகம்புல் மண்டிக்கிடக்கும் கல்லூரி வளாகத்தின் ஒரு வகுப்பறைக்குள் அருகை  கரும்பலகையில் படமாக வரைந்து கற்றுக் கொடுக்கும் பொதுக்கல்விமுறை தான் இப்போது அளிக்கப்பட்டு வருகிறது. மாற்றுக் கல்வி குறித்த தயக்கங்களும் அச்சமும் பெற்றோர்களுக்குத்தான் இருக்கிறது. விரும்பும் படியான எந்த முறையில் கற்றலை அளித்தாலும் மாணவர்கள் ஆர்வமாகக் கற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை

நான் 8 ஆவதில் படிக்கையில்தான் எங்களூருக்கு முதன் முதலில் பிரஷர் குக்கர்கள் புழக்கத்தில் வந்தன. அறிவியல் ஆசிரியை துஷ்யகுமாரி வகுப்பிற்கு குக்கரையும், ஊறவைத்த கடலைகளையும் வீட்டிலிருந்து கொண்டுவந்து, எங்கள் முன்பு அதை விளக்கி வேக வைத்து சுண்டல் செய்து  குக்கரின் செயல்பாட்டை  விளக்கிய அந்த பாடம் இன்னும் என் மனதில் அப்படியே நினைவில் இருக்கிறது. 

குறிஞ்சி மலர்ந்திருந்த ஒரு கல்லூரிக்காலத்தில், தாவர வகைப்பாட்டியல் ஆசிரியருடன்  தொட்டபெட்டா சிகரத்தின் உச்சியில் இருந்து மலைச்சரிவெங்கும் நீலக்கம்பளமாய்  மலர்ந்திருந்த  குறிஞ்சி செடிகளை பார்த்ததும், காலடியில் இருந்த சிண்ட்ரெல்லா செருப்பென்னும் ஒரு சிறு மலர்ச்செடியை பார்த்ததும் எனக்கு நினைவில் இன்னும் பசுமையாக  இருக்கிறது. மிக மகிழ்வுடனும், நிறைவுடனும் நான் திரும்ப எண்ணிப்பார்க்கும் கற்றல் என்பது வகுப்பறைக்கு வெளியில்  அரிதாக எனக்கு கற்பிக்கபட்டவைகளையே.

டோபியரி என்னும் தாவர உயிர் சிற்பக்கலையை பூங்காக்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள், கம்பிச்சட்டங்களால் விலங்கு, பறவை உருவங்கள் செய்து, வளரும் சிறு செடி ஒன்றின் மீது இதை பொருத்தி வைத்து விடுவோம். செடி வளருகையில் சட்டத்துக்கு வெளியில் வளரும் இலைகளையும் கிளைகளையும் வெட்டி வெட்டி விரும்பிய வடிவில் உயிருள்ள பசுஞ்செடிகளை உருவாக்கும் இந்த முறைதான் இப்போது பொதுக்கல்வியில் இருக்கிறது. மாணவர்களின் தனித்திறன், அவர்களின் விருப்பம், தேவை, நிறைவு, லட்சியம் இவற்றை குறித்தெல்லாம் எந்த அறிதலும், கவலையும் இல்லாமல்  எங்கோ, யாரோ,  முன்னெப்போதோ முடிவு செய்த பாடத்திட்டங்களை திணித்து, ஒரு சராசரி குடி மகனை உருவாக்கும் முயற்சியில் தான்  நாங்களனைவருமே இருக்கிறோம். 

எனவேதான் எனக்கு டோட்டோ சானின் டோமோயி மாற்றுக்கல்வி பள்ளியை  அத்தனை பிடித்திருந்தது.  முன்பே தீர்மானித்திருக்கும் வடிவிலான ஆளுமைகளாக மாணவர்களை மாற்றும் பணியில் இருக்கும் எனக்கு இந்த பள்ளி அதன் செயல்பாடுகள், அங்கிருக்கும் குழந்தைகள், அவர்களின் மகிழ்ச்சி எல்லாமே பெரும் குதூகலத்தை அளித்தது. கூடவே பெரும் ஏக்கத்தையும்.

இப்படியான கல்விமுறையை எல்லாருக்கும் அளிக்கையில் உருவாகும் ஒரு சமூகத்தை எண்ணி பார்க்கையில் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று ஹோம் ஸ்கூலிங் பற்றி கொஞ்சம் பேச தொடங்கி இருக்கிறார்கள். எனினும் அதன் அடிப்படைகளை அறியாத பெற்றோர்களால் அக்கல்வியை முழுமையாக அளித்துவிட முடியாது. டோமோயி போன்ற   பள்ளிகளே நமக்கு இப்போது தேவையாக இருக்கிறது.

குருவிகளோடு பேசிக்கொண்டிருந்ததற்காகவும், மேசையறையை அடிக்கடி திறந்து மூடியபடி இருந்ததற்கும், வகுப்பு ஜன்னல் வழியே இசைக்கலைஞர்களை வரவழைத்து இசைகேட்டதற்காகவும் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட சிறுமி ஒருத்தி, அந்த மாற்றுக்கல்வி பள்ளியின் உயிருள்ள பசுமையான கதவுகள் திறந்து வரவேற்கப்பட்டு நுழைகிறாள்.

அங்கே அவள் பல மணி நேரம் தொடர்ந்து பேசுவதெல்லாம் செவிகொடுத்து கேட்க தலைமை ஆசிரியர் இருக்கிறார். அவளால் உடலூனமுற்றவர்களுடனும் உடல் வளர்ச்சி நின்று போனவர்களுடன் அவர்களைப் புரிந்து கொண்டு அன்புடன் இருக்க முடிகிறது, அவர்களுக்கு அவளாலான உதவிகளை மனப்பூர்வமாக செய்யவும் முடிகிறது.

இப்போதைய பெரும்பாலான பெற்றோர்கள் நினைப்பதும் விரும்புவதும் போல முழுக்க முழுக்க பாதுகாப்பை மட்டும் அளிக்கும் பள்ளியாக இல்லாமல் சின்ன சின்ன ஆபத்துக்களையும் அவள் அங்கே சந்திக்க வேண்டி இருக்கிறது.  மிக பத்திரமான, சுத்தமான இடங்களில் மட்டும் அவள் இருப்பதில்லை,  பள்ளியில் கழிவறை குழிக்குள் விழுந்த தொப்பியை அவளாக கம்பியைக் கொண்டு எடுக்க முயற்சிக்கிறாள், உயரமான மரத்தில் ஏணியை கொண்டு, இளம்பிள்ளை வாதத்தால் சூம்பிய காலுடன் இருக்கும் நண்பனுடன் ஏறுகிறாள், செய்தித் தாள் கொண்டு மூடப்பட்டிருக்கும் கழிவுநீர் தொட்டியில் தவறி  விழுகிறாள், கொக்கியில் தானே மாமிசமாக தொங்கி கீழே விழுந்து அடிபடுகிறாள். ஆனால் அவ்வனுபவங்களிலிருந்து அவள் ஆபத்தான சூழல்களை குறித்தும் எப்படி பாதுகாப்பாக இருப்பதென்றும் சுயமாகக் கற்றுக் கொள்கிறாள். 

தங்கள் பிள்ளைகளை மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும், வெயிலில் காய்ந்தால் தலைவலி வரும், பனியில் நின்றால் காய்ச்சல் வருமென்று பொத்தி பொத்தி  வளர்க்கும் பெற்றோர்கள் கட்டாயம் இப்பள்ளியைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

பள்ளிக்கு வெளியே சென்று மகரந்தச் சேர்க்கையை, பட்டாம் பூச்சிகளை, எல்லாம் நேரில் பார்த்து தாவரவியல் கற்றுக்கொள்ளும் டோட்டோசான் அருகில் இருக்கும் தோட்ட உரிமையாளர் ஆசிரியராக வந்தபோது விதைக்கவும், களையெடுக்கவும், கற்றுக்கொள்கிறாள்.

அந்த ரயில் பெட்டி வகுப்பறைகளே வெகு கொண்டாட்டமானதாக  இருக்கிறது அவளுக்கு. பள்ளிக்கு வரும் கூடுதல் ரயில் பெட்டி டிரெய்லர்களால் இழுத்து வரப்பட்டு மரப்பாளங்களில் உருட்டி  எடுத்து வைக்கப்படுகையில் இயற்பியலையும், சிறுவர்களனைவரும் நிர்வாணமாக நீச்சல் குளத்தில் குளிக்கையிலே, உடலறவியலையும்,  திறந்தவெளி சமையலின் போதும், தேநீர் விருந்தின்போதும் சமையலையும், விருந்தோம்பலையும்,, சென்காகுஜீ கோயிலுக்கு போகையில் வரலாறையும், பள்ளிப்பாடலை பாடிப்பாடி இசையையும், சபையினர் முன்பு எப்படி அச்சமின்றி பேசுவதென்பதையும், கடலிலிருந்தும் மலையிலிருந்தும் உணவுகளை சாப்பிடுவதால் சரிவிகித சமச்சீர் உணவு கிடைக்கும் என்பதையும், கப்பல் பயணத்தையும், பிறருக்கு உதவி செய்வதையும் இன்னும் பலவற்றையும் கற்றுக்கொண்டே இருக்கிறாள்.

சந்தையில் காய்கறிகள் வாங்கி வணிகத்தை அறிந்து கொள்வது, கூடாரமடித்து தங்குதல், கொதி நீர் ஊற்றுகளில் குளிப்பது. ஆரோக்கிய மரப்பட்டை வாங்குவது, தனந்தனியே ரயிலில் பயணிப்பது என டோட்டோ சானின் பள்ளி வாழ்க்கை ஒவ்வொரு நாளுமே கொண்டாட்டமாக, அற்புதமாக இருக்கிறது. போட்டியில் வென்றவர்களுக்கு கோப்பைகளுக்கு பதிலாக  காய்கறிகள் பரிசாக கொடுக்கப்பட்டு, அவற்றை அக்குழந்தைகளின் குடும்பம் உணவாக்குவதும் குழந்தைகளுக்கு கொடுக்கும் மகிழ்ச்சி அளப்பரியதாயிருக்கிறது.

டோட்டோசானும் பிற குழந்தைகளும் பள்ளி மைதானத்தின் மரங்களின் மீதமர்ந்த படி  கீழே நடப்பதை பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி தான் எத்தனை அழகானது. அங்கிருந்து அக்குழந்தைகள் அறிந்துகொள்ளுபவற்றை வெகு நிச்சயமாக வகுப்பறைக்குள் கற்பிக்க முடியாது. 

டோட்டா சான் மஞ்சள்நிறக்கோழி குஞ்சுகளிடமிருந்தும், தன் தோழன் ஒருவனிடமிருந்தும், தன் பிரிய நாயிடமிருந்தும், இழப்பின், மரணத்தின், பிரிவின், துயரையும் கூட அறிந்துகொள்கிறாள்

அவளுக்கென அளிக்கப்பட்ட அடையாள அட்டையும், “நீ மிகவும் நல்ல பெண் தெரியுமா” என அடிக்கடி அவளிடம் சொல்லப்பட்டதும் அவளது ஆளுமையில் உருவாக்கிய மாற்றம் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று. பேய்களைக் கொசு கடிப்பதும்,  இரண்டு பேய்கள் ஒன்றையொன்று முட்டிக்கொண்டு அழுவதும், பயந்துபோன பேய் கண்ணீர் விடுவதுமாக அந்த  தைரிய பரீட்சை வெகு சுவாரஸ்யம். 

அப்பள்ளிக்கு வெளியே போர்ச்சூழல் நிலவுவது குறித்து எந்த அறிதலும், அச்சமும்  இல்லாமல் அக்குழந்தைகள் அங்கு வாழ்வின் இயங்கியலை மகிழ்ந்து கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

குண்டு வீச்சில் அழிந்து போன அந்த பள்ளி அங்கு படித்த அத்தனை மாணவர்களின் மனதிலும், அவர்கள் சொல்லக் கேட்கும் அவர்கள் குடும்பத்தினர் மனதிலும் எந்த சேதாரமும் இல்லாமல் நிரந்தரமாக இருக்கிறது.  தற்போது மிகப் பிரபலமான திரை மற்றும் தொலைக்காட்சி நடிகையாகவும் புகழ்பெற்ற ஜப்பானிய ஆளுமையாகவும் இருக்கும்  டெட்சுகோ குரோயோ நாகி என்னும் டோட்டோ சான்  தன்னுடன் படித்த தோழர்கள் இப்போது என்னவாக இருக்கிறார்கள் என்னும் குறிப்பையும் இதில் தந்திருப்பது மிக சிறப்பானது.

டெட்ஸுக்கோ குரோயானகி

அவர்களின் ஆளுமை உருவாக்கத்தில் மாற்றுக் கல்வி முறையின் நேரடி தாக்கம் இருப்பதை வாசிப்பவர்கள் உணரமுடிகின்றது குறிப்பாக உடல் வளர்ச்சி நின்று போன தாகா ஹாஷி என்னவாயிருக்கிறான் என்பதே அப்பள்ளியின் மாற்றுக்கல்வி முறையின்  வெற்றிக்கு சான்றளிக்கிறது. 

டோமோயி பள்ளியை உருவாக்கிய திரு.கோபயாஷி போல தேர்ந்த கல்வியாளர்களால் மாற்றுக்கல்வி முறை உலகின் பல இடங்களில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும்  நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல மொத்தமாக பொதுக்கல்வி முறையை அப்படியே தலைகீழாக மாற்றிவிட முடியாது. ஆனாலும் மாற்றுக்கல்வியின்,  சில அம்சங்களையாவது பொதுக்கல்வியில் சேர்க்கலாம்.

வகுப்பறைக்கு வெளியேவும் கற்றலை அளிப்பது,  மாணவர்களின் தனித்திறமைகளை அடையாளம் காணும் முறைகளை கல்வித்திட்டங்களில் சேர்ப்பது, மதிப்பெண்கள் வாங்கும் இயந்திரங்களாக அவர்கள் கருதாமல் இருப்பது போன்றவற்றை நிச்சயமாக  செய்யலாம். தற்காலத்துக்கேற்றபடி பாடத்திட்டங்களை மாற்ற வேண்டியது மிக அவசியமானது.

பெற்றோர்களின் மனநிலையும் வெகுவாக மாற வேண்டி இருக்கிறது. தன் மகள் மருத்துவப்படிப்பு சேரும் அளவிற்கு மதிப்பெண்  வாங்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட  தாயொருத்தியை நானறிவேன். பிற  குழந்தைகளுடன் தங்கள் குழந்தைகளை ஒப்பிட்டு  கடிந்துகொள்ளும் பல்லாயிரம் பெற்றோர்கள் இங்கே இருக்கிறார்கள். 

குழந்தைகளின் தேவைகளும், விருப்பங்களும், சிக்கல்களும் என்னவென்று அறியாத, மருத்துவர்களாலும், பொறியாளர்களால் சமைக்கபட்டிருக்கும்  ஒரு பொன்னுலகை குறித்தான  தீவிர நம்பிக்கையுடன் இருக்கும் பெற்றோர்களில் பலருக்கு மாற்றுக்கல்வி உகந்ததல்ல.

என் மகன் பத்தாவது முடித்த பின்னர், 11 படிக்க  பலரால் ஆகச் சிறந்த பள்ளி என பரிந்துரைக்கபட்ட ஹைதராபாதிலிருக்கும் ஒரு பள்ளிக்கு சென்றிருந்தேன். அது ஒரு பள்ளிக்கூடம் கூட அல்ல ஒரு அடுக்ககம். அதன் குளிரூட்டப்பட்ட அறைகளில் அடைத்த ஜன்னல்களுக்கு உள்ளிருந்து பிராய்லர் கோழிகளை காட்டிலும் பாவமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்தனர். அந்த கட்டிடத்தில் இருந்து துரத்தப்பட்டவள் போல நான் வேகமாக வெளியேறினேன். டோமோயி பள்ளியில் முள் கம்பிகளுக்கு அடியில் படுத்தும், தவழ்ந்தும் வெளியேறும் விளையாட்டில் தனது ஆடைகள் மட்டுமல்லாது ஜட்டியும் கூட கிழியும்படி விளையாடும் டோட்டோ சானுக்கு கிடைக்கும் அனுபவங்களைக் குறித்து ஏதும் அறியாமல் IIT கனவுகளில் மூழ்கி இப்படி லட்சக்கணக்கான மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோவையில்  மகன்கள் படித்த பள்ளியும் பொது கல்வி முறையில் மாற்றுக் கல்வியின் அம்சங்களையும் கலந்த கல்விமுறையை தான் கொண்டிருக்கிறது. படிக்க சொல்லி  அழுத்தமோ கட்டாயமோ அங்கு எப்போதும் இருந்ததில்லை. சேர்க்கையின் போதே உங்கள் மகன் இங்கு படித்து பொறியாளராகவும் மருத்துவராகவும் ஆகவேண்டும் என உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதற்கானது இந்தப்பள்ளி அல்ல என்று சொன்னார்கள்.

மதிய உணவிற்கு பின்னர் பெரும்பாலான நாட்களில் வகுப்பறைக்கு செல்ல வேண்டியதில்லை விடுதி அறையிலேயே இருக்கலாம், இசை கேட்கலாம், மிதிவண்டியில் சுற்றலாம், இசைக்கருவிகள் வாசிக்கலாம், பள்ளி வளாகத்தில் இருக்கும் கோயில்களுக்கோ அல்லது மைதானத்தில் விளையாட்டு பயிற்சிகளுக்கோ செல்லலாம், ஆணும் பெண்ணும் இயல்பாக பார்த்து, பேசிக் கொள்ளலாம்.  இங்கு மட்டும் தான் எனக்கு தெரிந்து   KTPI – Knowledge and traditional practices of India என்னும் ஒரு பாடத்தை 12 ஆம் வகுப்பில் கற்றுக்கொள்ள முடியும். இந்திய தொன்மங்கள், இலக்கியங்கள், இதிகாசங்களை இப்பாடத்தில் கற்பிக்கிறார்கள். இந்திய புராதன சின்னங்கள் இருக்கும் இடங்களுக்கும் கோவில்களுக்கும்  சுற்றுலா அழைத்து செல்கிறார்கள்.

இந்த பள்ளியில் மட்டுமே நான் ஆசிரியர்களின்  தோளில் கைகளை போட்டுக்கொண்டு  நடக்கும் மாணவர்களை பார்த்திருக்கிறேன். 

ஒரு முறை நான் பள்ளிக்கு சரணுடன்  சென்றிருக்கையில் தூரத்தில் இருசக்கரவாகனத்தில் கணவரின் பின்னால் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்த அப்பள்ளியின் முதல்வர் ”சரண் லவ் யூ சரண்” என்று கூச்சலிட்டபடி காற்றில் ஒரு முத்தத்தை பறக்க விட்டு சென்றார்கள். பள்ளிப்படிப்பை முடித்து சில வருடங்களுக்கு பின் ஒரு விழாவுக்கெனெ மீண்டும் பள்ளிக்கு சென்றிருந்த சரணை “looking handsome man” என்றபடி ஒரு ஆசிரியை இறுக்க அணைத்துக் கொண்டார்கள். அங்கே போலி பணிவும் பவ்யமும் இல்லவே இல்லை. டோமோயி பள்ளியின் மாணவர்கள் தலைமை ஆசிரியரின் மடியிலும், முதுகிலும், தோளிலும் ஏறி தொங்கிக் கொண்டிருப்பதை வாசிக்கையில் நான் அவற்றை நினைவுகூர்ந்தேன்.

நான்  மகன்களின் ஆளுமை உருவாக்கம் குறித்து இந்த பள்ளியில் சேர்த்த பின்னர்  ஒருபோதும் கவலைப்பட்டதே இல்லை. இப்படியான பள்ளியில் கற்றுக்கொள்வது அனைவருக்கும் சாத்தியமில்லை தான். நம் பொதுக் கல்வியில் மாற்றுக்கல்வியின் சாத்தியமான அம்சங்களை சேர்ப்பது குறித்து கல்வியாளர்கள் அரசியலாளர்கள் யோசித்து,  உலகின் பல பகுதிகளில் இருக்கும் மாற்றுக்கல்வி முறைகளை பற்றியெல்லாம் அவர்கள் அறிந்து கொண்டு ஆலோசித்தால், பரிசீலித்தால் மட்டுமே மெல்ல மெல்ல மாற்றம் வரும். 

ஆசிரியர்கள்  நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. இப்புத்தகத்தை நான் மிக மிக நேசிக்கிறேன்.  எனக்கு தெரிந்து வாசிப்பில் ஆர்வம் இருக்கும் பலருக்கும் இதை நான் பரிந்துரைத்தேன், பெற்றோர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்று இது. மிகச் சிறிய புத்தகம் ஆனால் இதன் பேசுபொருள் மிக மிக பெரியது.

டோமோயி பள்ளியின்  மாணவியும் இந்நூலின் ஆசிரியருமான டெட்சுகோ குரோயா நாகிக்கு  ஆசிரியராகவும் அன்னையாகவும் எனது பாராட்டுக்களை தெரிவிக்க அவரது முகவரியை தேடிக்கொண்டிருக்கிறேன்.

கிரானடா

ஜெ தளத்தில் கொள்ளுநதீமின் கிரானடா நாவலும் அச்சங்களும் வாசித்ததும் கிரானடாவை வாங்க அனுப்பாணை பிறப்பித்தேன். அவரின் நூலறிமுகம்  ஒரு திரைப்படத்தை பார்த்த அனுபவத்தை அளித்தது. கிரானடா என்று பெயரிட்டிருக்கப்பட்ட அந்த வீடும், கிரானடா என்னும் பெயரும் வசீகரித்தது. அவர் குறிப்பிட்டிருப்பது போல  pomegranate  எனப் பெயரிடப்பட்டிருக்கும்  மாதுளையின் அறிவியல் பெயர் Punica granatum. இந்த  பெயரில் பல மொழிகளின் கலப்பு இருக்கிறது.

லத்தீன மொழியில்  pōmum  என்றால் ஆப்பிள்   grānātum என்றால் விதைகள் செறிந்த என்று பொருள்.  ’’ஆப்பிளை போலவேயான கனி ஆனால் விதைகள் நிறைந்த’’ என்ற பொருளில் பழைய ஃப்ரென்சு சொல்லான pomme-grenade என்பதிலிருந்தே இந்த லத்தீன் சொல் பெறப்பட்டது…ஆங்கிலத்தில்  “apple of Grenada” என்றழைக்கட்ட இக்கனி  லத்தீன -granade என்பதை ஸ்பெயினின் நகரான ‘Granada’ வை தவறாக நினைத்திருக்கலாமென்றும் ஒரு கருத்து இருக்கின்றது.Pomegranate என்பதற்கான ஃப்ரென்ச் சொல்லான grenade, மாதுளம் கனிகள்  கையெறி குண்டுகளின் வடிவத்தை ஒத்திருப்பதால் வைக்கப்பட்டது என்றும் தாவரவியல் குறிப்புக்கள் உள்ளன.

பல பொருள்கள் கொண்ட லத்தீன grānātum  என்பதற்கு அடர் சிவப்பு நிறமென்றும் ஒரு பொருள் இருப்பதால் இது மாதுளங்கனியின் சாற்றின் நிறத்தையும் குறிக்கின்றது..மாதுளையின் நிறத்திற்கென்றே பிரத்யேகமாக  balaustine என்னும் சொல் இருக்கின்றது. ’இறப்பின் கனி’ எனப்படும் மாதுளை குறித்த ரோமானிய, கிரேக்க தொன்மங்களும் வெகு சுவாரஸ்யமானவை.. The Color of Pomegranates என்னும் 1969 ல் வெளியான ஒரு ஆர்மினிய திரைப்படம்  இசைஅரசனனான  18 அம் நூற்றாண்டைச்சேர்ந்த ஆர்மீனிய கவி Sayat-Nova வின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது.மாதுளைகளின் நாடான ஆஃப்கானிஸ்தானின் கந்தகாரின் அம்மண்ணிற்கே உரிய ஜம்போ மாதுளைகளுக்கு சர்வதேச கிராக்கி இருக்கின்றது.

மாதுளை - தமிழ் விக்கிப்பீடியா

கொள்ளு நதீமின் இந்த கட்டுரை மாதுளையின் பின்னால் என்னை போகச்செய்துவிட்து

பிழைத்தலும் வாழ்தலும்!

ஆள்தலும் அளத்தலும் | Buy Tamil & English Books Online | CommonFolks

என் தம்பி மகள் சாம்பவி   என்  இரு  மகன்களுடனே தான் வளர்ந்தாள்;  மூவருக்கும் அடிக்கடி வாய்ச்சண்டை, கைச்சண்டை, கால் சண்டையெல்லாம் நடக்கும்.  அப்போதுதான் பேச கற்றுக் கொண்டிருந்த  சாமபவி, கோபம் எல்லை மீறி போகும் போது முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு அவளுக்கு தெரிந்த கிண்ணம், வெள்ளைப்பூண்டு, சாதம் போன்ற வார்த்தைகளை ’’போடா கிண்ணம், போடா பருப்பு சாதம்’’ என்று பல்லை கடித்துக்கொண்டு வசவைப்போல சொல்லுவாள்.  வார்த்தைகளின் அர்த்தம் தெரியாவிட்டாலும் சொல்லும் விதத்தில் அவற்றை கெட்ட வார்த்தை ஆக்கிவிடுவாள் காளியின் திருவண்ணாமலை கதை இப்படி பழசை நினைவுபடுத்தி வாசிக்கையில் புன்னகைக்க வைத்துக் கொண்டே இருந்தது.

வசவை சர்வசாதாரணமாக புழங்கும்,தெலுங்கு பேட் வேர்ட்ஸ் இணையத்தில் தேடும் ரஙகன் ’’டேய் தோத்ரம்’’ என்று நிலைக்கண்ணாடி முன் நின்று நாலு முறை சொல்லிப்பார்த்து  அது மோசமான வார்த்தை தான் என்று உறுதி செய்து கொண்டு அத்தனை நாட்கள் புத்தரால் கொடுக்க முடியாத நிம்மதியுடன்    உறங்கச்செல்கிறான்

இந்த கதையில் மட்டுமல்ல பழனியிலிருந்து பராசக்தி வரை பத்துக்கதைகளிலும் நமக்கு தெரிந்தவர்களும் நம்மை தெரிந்தவர்களும் நாமும்தான் இருக்கிறோம்.  கதைமாந்தர்களின் அவஸ்தைகள், தடுமாற்றங்கள், குடும்ப சிக்கல்கள், பணியிட பிரச்சனைகள் வழியே  காளி பிரசாத் காண்பிப்பது நம் அனைவரின் வாழ்வைத்தான். வாசிப்போர் கடந்து வந்திருக்கும் பாதைகளில்தான் கதைகள் அவர்களை அழைத்துச் செல்கின்றன.

பழனியிலிருந்து பராசக்தி வரை கதைமாந்தர்கள் வேறு வேறு பெயர்களில் இருக்கும் நாமறிந்தவர்கள் என்பதாலேயே கதைகள் மனதிற்கு அணுக்கமாக விடுகிறது.. நாம் சந்தித்தவர்களும் கடந்துவந்தவர்களும் இனி சந்திக்க விரும்பாதவர்களுமாக  கதைகள் நமக்கு பலரை நினைவுக்கு  கொண்டு வருகிறது.

அத்தனை அடாவடி செய்த பழனி,   50 ரூபாய் பெறுமானமுள்ள ஸ்பேர் காயிலை திருடி மாட்டிக்கொண்டதை, அவன் குடும்பம் சிதைந்ததையெல்லாம் கேட்கையில் ஃபேக்டரி இயந்திரங்களின் சத்தத்தில் மண்டை கனக்கும் கதை சொல்லி,  பழனி நல்ல நிலைமையில் வீடும் காரும் குடும்பமுமாக இருப்பதை கேட்டபின்பு  இரைச்சல் உண்டாக்கிய தலைவலிக்கென  போட்டிருந்த தொப்பியை கழட்டிவிட்டு பறவகள் கூடடடையும் சத்தங்களை கேட்டபடி, தூரத்தில் சிறு வெளிச்சம் தெரியும் கோவில் வரை நடக்கும் கதை முடிவு பெரும் ஆசுவாசத்தையும் நிறைவையும் கொடுக்கிறது

எல்லாக்கதைகளிலும்  மனிதர்களின் இயல்புகளை அப்படியப்படியே ஏற்றங்களும் இறக்கங்களும் அல்லாடல்களுமாக இயல்பாக காட்டுகிறார் காளி. எதையும் உன்னதப்படுத்தாமல், எதையும் உச்சத்துக்குகொண்டு செல்லாமல் சொல்லப்பட்டிருக்கும் கூறுமொழி நம்மையும்  இயல்பாக கதையோட்டத்துடன் கொண்டுபோய், நம்மையறியாமலே கதைகளுடன் நம் வாழ்வை தொடர்புபடுத்தி பார்க்க வைத்துவிடுகிறது

. பகடிகள்  வாய்விட்டு சிரிக்கும் படி இல்லாமல்,  முகம் மலரும்படி இருக்கிறது, ஆட்டோ இடித்த தகராறு, ரின்ஸ் ஸ்பெனரரால் பழனி அடித்ததும் முடிவுக்கு வருவதும்,   ஆட்டோக்காரர் தலையை மூடி, அவரே ஆட்டோவை ஓட்டிபோய் அட்மிட் ஆவதும் அப்படியானவற்றில் ஒன்று.

அதைப்போலவே  திருவண்ணாமலையின் ’’திருச்சி டம்ப்ளரு’’ ஆர்வலர் கதையில் சம்பத் சொல்லும் குறள்,  ஷாக் அடிக்கும் போதும் பியூஸ் போகும்  சிரித்துக் கொண்டிருக்கும் புத்தர், ’அன்னிக்கு அம்மா நாப்பதுன்னு சொல்லும்பொது ஒன்னும் பேசாம  பெண்ணின் இடுப்பை பார்த்துட்டு இருந்தீங்க ’என்று மாப்பிள்ளையிடம் மனசுக்குள் கேட்கும் நீலகண்டன் என்று   இயல்பான சின்ன சின்ன பகடிகள்  கதை வாசிப்பை கூடுதல் சுவாரஸ்யமாக்குகின்றன

கதைகளில் சொல்லப்படும்  சிக்கல்கள், பரிதவிப்புகள், மீள முடியாத பிரச்சினைகளுக்கு மத்தியிலும், கதை மாந்தர்கள் அவர்களுக்கான் அறத்தை மீறாமல் அல்லது மீற முடியாமலிருப்பதையும் காளி காட்டுகிறார்.  அடுத்தவருக்கு கெடுதல் நினைக்காத  பழனியின் கதை சொல்லி, ஐந்து வேளை தொழுவதை கடைப்பிடிக்க முடியாவிட்டாலும், அன்னைபன்றிக்கு கேரட் போடும்,  பாம்புக்கு பாவம் பார்க்கும் குத்தூஸ்,,   ’’அநாதைபொணமா ரோட்டில் கிடக்காம என்புள்ளைய வீட்டில் கொண்டு வந்து சேத்திட்டியெப்பா’’ என்று ரவியிடம் கதறும் ராஜாவின் அம்மா, எத்தனையோ அலைச்சலுக்கு பிறகு,அசட்டு நம்பிக்கையில் தேடிப்போன ஒருவரிடம் வேண்டியது கிடைக்காமல், அந்த கிஃப்ட் பாக்ஸில் என்ன இருக்கிறதென்றும் தெரியாமல் வீடு வந்து,  கற்கள் பதிக்கப்பட்ட  வெள்ளி மரக்காலை கன்னத்தில் பளீர் பளீரென அடி வாங்கிய பெண்ணுக்கு சிரித்தபடி கொடுக்கும் கதை சொல்லி, வண்டியிலிருந்து இறக்கி விடுகையில் தனியாக இன்னும் ஒரு ஐநூறு கொடுக்கும் இருதயம் அண்ணன், என்று  நெஞ்சில் ஒளி கொண்டவர்கள் கதை முழுக்க வருகிறார்கள்.

இருப்பை தக்க வைத்துக்கொள்ள இடுப்பை நெளித்து ஆடும் அழகு ராணியும், கான்கிரீட் மூடியை மாற்றிய ஸ்ரீஜியும் ஒரே திரையில் தெரிவது, ஸ்கூட்டர் கேவலை சொல்லியிருக்கும் இடம், கேபிள் சுருளையும், கருமையான மலைப்பாம்பில் படுத்திருந்த அழகனையும் கதைசொல்லி பார்க்கும் கணங்கள் என காளி ஒரு கதாசிரியராக செல்லப்போகும் தூரங்களை  காட்டும் இடங்களும் உண்டு.

20 வருடங்களுக்கு முன் இருந்த, கோவிலின் பெயரும், கோபுரங்களும், புதிய டைல்ஸும்,  கடைகளும் எல்லாம் மதிப்பு கூடி மாறிவிட்டிருக்கையில், ரோஜாவையும் தாமரையையும் கொடுத்துவிட்டு பஞ்சாமிர்தத்தை  வாங்கி வாயில் இட்டுக்கொள்ளும் குருக்களும், நாப்பது பவுன் நகையை வாங்கிக்கொண்டு வீட்டை சகோதரனுக்கு கொடுத்துவிட்ட நீலகண்டனுமாக சன்னதியில் உமையுடனும் ஈஸ்வரனுடன் நிற்பதில் முடியும் கதையான பூதம் இந்த தொகுப்பில் எனக்கு மிகப் பிடித்தமான கதை

கழுத்தில் சங்குபுஷ்ப சரமும் உதட்டில் ஒரு சொட்டு தேனுமாக ஈசனை நீலகண்டன் பார்க்கும் காட்சிச் சித்தரிப்பு மனதுக்கு அளித்த சித்திரம் அற்புதமாக இருந்தது.

ஸ்பேனரும்  நட்டும், போல்ட்டும், ஸ்பேர் காயிலுமாக கதைக்களம் காளியின்  அனுபவக்கதைகள் இவை என  எண்ண வைக்கிறது.  கதைமாந்தர்களின் இயல்பை  விரிவாக சொல்லுவதிலேயே கதையையும் கொண்டு போவதும்  சிறப்பு.  மொழிநடையும் சரளம்.

புதிய இடங்களில் தங்களை பொருத்திக்கொள்ள முடியாமல் தடுமாறுகிறவர்கள், நிலுவைத்தொகை வாங்கமுடியாமல் அல்லாடுபவர்கள். இளைய தலைமுறையினரிடம், இழந்த தன் இருப்பை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள போராடுபவர்கள், தேடியவை கிடைக்காமல் ஏமாறுபவர்கள். ஜான் ஏறினால் முழம் சறுக்கி விழுபவர்கள், குற்ற உணர்வு கொண்டவர்கள்,  சிற்றின்பத்திலிருந்து  பேரின்பத்தை நோக்கி செல்பவர்கள், குடிகாரர்கள். திருடர்கள். அடிப்பவர்கள், அடிவாங்குபவர்கள் என கதைகளில் வரும் மாந்தர்களின்  பிழைத்தலுக்கான  போராட்டங்களையும்,  அவற்றிற்கிடையிலும்  அவர்களுக்கு ஆத்மார்த்தமாக வாழக்கிடைக்கும்  அரிய கணங்களுமாக கதைகள் மிக சிறந்த நிறைவான வாசிப்பனுபவத்தை அளிக்கின்றன.

பிழைத்தலும் வாழ்தலும்!


தம்மம் தந்தவன்

தாவர வகைப்பாட்டியல் பாடங்களை துவங்கும் முன்பு தாவரங்களின் வெளிப்புற தோற்றத்தை மட்டும் ஏறக்குறைய ஒரு மாத காலம்  மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டி இருக்கும். மலர்கள், இலைகள் கனிகள் , அவற்றின் பற்பல வடிவங்களை, வகைகளை சொல்ல வேண்டும். இலைகளின் பரப்பு, காம்பு, வடிவம், விளிம்புகள் இவற்றோடு இலைநுனிகளையும் விளக்க வேண்டி இருக்கும். இலைநுனிகளில்  கூர் நுனிகொண்டவை மற்றும் அகன்ற இலை பரப்பிற்கு சிறிதும் தொடர்பில்லாமல்  மிக்கூராக கீழிறங்குபவை என்று இரு வகைகளுண்டு. அக்யூட் அக்யூமினேட்(Acute & Acuminate) என்போம் இவற்றை. மிகக்கூராக கீழிறங்கி முடியும் நுனியுள்ள இலைக்கு, அரச இலையை உதாரணமாக காட்டுவேன்.

சாக்கிய அரசின் இளவலாக, வாழ்வின் கசப்புகள் அண்டாது வளர்க்கப்பட்ட சித்தார்த்தன் அந்த அகன்ற வெளியிலிருந்து படிப்படியாக கீழிறங்கி மெய்ஞானமென்னும்  மிகக்கூரான நிலைக்கு இறங்கி வந்ததை சொல்லும் அரசிலை இளம்பச்சையும் அடர்பச்சையுமாக கூர்நுனியுடன் தம்மம் தந்தவன் நூலின் முன்னட்டையில் இடம்பெற்றிருப்பது நூலின் உள்ளடக்கத்திற்கு மிகவும் பொருத்தமாகி விட்டிருந்தது

புத்தரை குறித்து என் அறிதல் என்பது மிக மிக குறைவுதான். சித்தார்த்தன் இளவரசன்,  மனைவியையும் மகனையும் விட்டுவிட்டு துறவியானான் போதிமரமான அரசினடியில் அமர்ந்து ஞானம் பெற்றான் இறப்புக்கு விஷ உணவே காரணம். இவ்வளவுதான் பள்ளிக்காலத்தில் அறிந்திருந்தேன்.திஷயரக்‌ஷ்தா என்னும் பெயரில் ஒரு தனித்த விருப்பம் இருந்து அதை புனைப்பெயராக  கொண்டு ஒரே ஒரு கதை எழுதினேன்

கல்லூரி முதல் ஆண்டில், ஒரு விழாவில் விதிவிலக்கின்றி அத்தனை மாணவர்களும் கவிதை எழுதியே ஆக வேண்டும் என்னும் ஒரு கட்டாயம் வந்தது.  தமிழ்த்துறை ஆசிரியர் ஒருவரின் பிடிவாதமது. அதுவும் துறைசார்ந்த ஒரு சொல்லேனும் கவிதையில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையுடன்.

கவிதையை எனக்கும், கவிதைக்கு என்னையும்  முற்றிலும் பரிச்சயமில்லாத காலமது, ஆனாலும் வளாகத்திலிருந்து தப்பித்து செல்ல வழியில்லாததால்

’’வெட்டிவிடுங்கள் போதி மரங்களை

வீதியில் எங்கேனும் காண நேர்ந்தால்

கட்டிய மனைவியையும்

தொட்டிலில் பிள்ளையையும்

துன்பத்திலாழ்த்தி விட்டு

ஆசையே துன்பத்துக்கு காரணம்

என அடுத்தவருக்கு புத்தி சொல்ல

என அடுத்தவருக்கு புத்தி சொல்ல

இனியொரு சித்தார்த்தன் வருவதற்குள்’’

என்று வாக்கியங்களை மடித்து  மடித்து அமைத்து கவிதைபோலொன்றை சமர்ப்பித்தேன். அதில்  கட்டிய மனைவி, தொட்டில் பிள்ளை எல்லாம் எம் ஜி ஆர் பாடலிலிருந்து எடுத்தாண்டது. கவிதைக்கு பரிசு கூட கொடுத்தார்கள்.

பின்னர்  புத்தர் மீண்டும் என் வாழ்வில் இடைபட்டது முதன் முதலாக இலங்கை சென்றபோது. அன்று புத்த பூர்ணிமா என்று பண்டார நாயக சர்வதேச விமான நிலையத்தில் தான் அறிந்துகொண்டேன் விமான நிலையமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அரைமணிநேர பிரயாணத்தில் வீடு சேர்ந்திருக்க வேண்டிய நாங்கள் சுமார்  2 மணி நேரத்துக்கும் மேலாக சாலைகளில்  இருந்தோம்.

50 அடிக்கு ஒரு முறை காரை நிறுத்தி இனிப்புக்களை வழங்கிக் கொண்டே இருந்தார்கள் பொதுமக்கள். .துணிகளுக்குள் அமைக்கபட்டிருந்த வண்ண வண்ண  விளக்குகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

புத்த பூர்ணிமா இப்படி கொண்டாடப்படுமென்றே அன்றுதான் தெரிந்துகொண்டேன். கொழும்பு வீட்டினருகே ஏரளமான புத்தர் கோயில்கள் இருந்தன. இலங்கை நண்பர் அசங்க ராஜபக்‌ஷ ஒருமுறை  மலை உச்சியில் இருந்த மிக புராதனமான புத்தர் குகை கோவிலுக்கு அழைத்துச் சென்றிருந்தார். அனந்த சயன புத்தர். அந்த அரையிருட்டில்,  சாய்வும் புன்னகை மிளிரும் முகமுமாக புத்தரை கண்டது கனவு போலிருந்தது

அங்கிருப்பவர்களை போலவே வெண்ணிற உடையுடன் வெண் தாமரைகளை எடுத்துக்கொண்டு புத்தர் கோவில்களுக்கும் சென்றிருக்கிறேன்.  ஆனால் தம்மம் தந்தவன் அளித்த திறப்பை கோவில்கள் எனக்கு அளிக்கவில்லை.

புத்தகத்தை  முதலில் நான் கையில் எடுத்தேன் பின்னர் புத்தகமும் காளியின் நிதானமான மொழியாக்கமும் முழுக்க முழுக்க என்னை கையில் எடுத்துக்கொண்டது

வாசித்து முடித்ததும் ’அடடா  இன்னும் அதிகம் பேருக்கு இது போய் சேர வேண்டுமே’’ என்பதே முதன்மையாக தோன்றியது..

விலாஸ் சாரங்கின் ஆங்கில வடிவத்தைதான்  காளி தமிழில் தந்திருக்கிறாரென்பது  முன்னுரை எல்லாம் வாசித்தல் தான் தெரியும் அத்தனைக்கு அழகான அசலான, மொழியாக்கம். வெகு நிதானமாக சொல்லிச் செல்லும் பாணி இந்த நூலின் உள்ளடக்கத்திற்கு மிக பொருத்தமானதாக இருக்கிறது.

மிக புதியதொரு வழியில் புத்தரை, அவர் வாழ்வை, அவருக்களிக்கப் பட்டவற்றை அவரடைந்தவற்றை எல்லாம் அறிந்துகொண்டேன்.

புத்தரின் வாழ்வை  சொல்லும் பிறவற்றிலிருந்து தம்மம் தந்தவன் வேறுபடுவது நவீன பாணியில் அவர் வாழ்வை  சொல்லி இருப்பதில்தான். புத்தரின் வாழ்வு நிகழ்ந்த காலத்திலும் இப்போதைய காலத்திலுமாக சொல்லப்பட்டிருப்பது சுவாரஸ்யமாகவும் புதுமையாகவும் இருக்கிறது.

புத்தரையும் பிம்பிசாரரையும் வாசிக்கையில்  ஷேக்‌ஷ்பியரும் வருவது, அவ்வப்போது இடைபடும் ,மாரனும் அவன் மைந்தர்களும், சின்ன சின்ன வேடிக்கை கதைகள்,  பசு துறவி, நாய் துறவி போன்ற கதாபாத்திரங்கள், குழந்தையை பார்த்து அவன் எதிர்காலத்தை கணிக்கும் அஸிதர் சொல்லும் விந்தையான விஷயங்கள், சால மரத்தடியில் நின்றபடியே பிள்ளை பெற்றுக்கொள்ளும் மாயா  என்று  சுவையான, விந்தையான, புதியதான  தகவல்களுடன் நூல் மிக அழகாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது

சால் மரத்தடியில் பிறந்து, அரசமரத்தடியில் ஞானமடைந்து மீண்டும் சாலமரத்தடியில் நிறைந்த புத்தரின் வாழ்வு புத்தம் புதிதாக என்முன்னே நூலில் திறந்து கிடந்தது.

ஆங்காங்கே அடைப்புகுறிக்குள் மேலதிக தகவல்களும் விளக்கங்களும் பிறமொழிப் பொருளும் கூறப்பட்டிருப்பது நூலை புரிந்து கொள்ள இன்னும் உதவுகிறது

தம்மம் தந்தவன் முதன்மையாக புத்தர் என்று  நான் அதுவரை கொண்டிருந்த  ஒரு பிம்பத்தை  உடைத்திருக்கிறது. புலால் உண்னும், சோலைகளை விரும்பும், 12 ஆண்டுகள், இல்லற கடமையை  ஆற்றிய,  பரிசுகளை, விருந்துகளை மறுக்காத, தான் எந்த அற்புதங்களையும் செய்துவிடவில்லை என்று சொல்லும் புத்தரை நான் இதில்தான் அறிந்துகொண்டேன்

புத்தர் தன்னை வருத்திக்கொண்டு செய்யும் சோதனைகள், மயான வாசம், விலங்கு கழிவுகளை உண்பது,  அவர் சந்திக்கும் குருமார்கள், பிம்பிசாரன் வாழ்வு , குகையில் புத்தருடன் சந்திப்பு முடிவதற்குள், முடிந்த அரசுப் பதவி என .பிரமிப்பூட்டும் தகவல்கள்.

// உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் ஒன்று, அனைத்து உயிர்கள் மீதும் அன்பு பாராட்டுமொன்று என்னுமிடத்தில் அனைத்து மதங்களும் கடவுள் என்னும் கற்பனையை வைக்கின்றன .ஆனால் அதே இடத்தில் நாம் நிதர்சனமாக உணரும் துக்கம் மற்றும் மனக்கிலேசம் ஆகியவற்றை பெளத்தம் வைக்கிறது// இந்த பத்தி  இந்நூலின் சாரம்.

புத்தரின் மனவுறுதியை

கம்பீரத்தை, மனதையும் உடலையும் கட்டுக்குள் வைத்திருந்ததை, சஞ்சலங்களிலிருந்து  முற்றாக விலகி இருப்பதை,  இயல்பாகவே அவருக்கு இருந்த அறிவுக்கட்டமைப்பை என  தம்மம் தந்தவன் காண்பிக்கும் புத்தர் எனக்கு  மிக மிக புதியவர்

200 பக்கங்கள் என்ன்னும் வசதியான பக்க  அளவு, மிகப்பெரிய விஷயங்களை எளிமையாக விளக்கும் அழகிய மொழி என கச்சிதமான , சிறப்பான நூல் தம்மம் தந்தவன்

தங்க இடம் கொடுப்பவர் அனைத்தும் தருகிறார்;

ஆனால் தம்மத்தை –

புத்தரின் அருமையான போதனைகளைக் கற்பிப்பவர் –

அப்படிப்பட்டவர் தருவது அமிர்தத்தை.

என்கிறது சுத்த பிடகம்

புத்தர் தன்னை விடுவித்துக்கொண்டு சென்றவைகளையும், அவர் கடந்துசெல்பவைகளையும் அவர் இறுதியாக அடைந்தவற்றையும் சொல்லும் தம்மம் தந்தவன் என்னும் அமிர்தம் தந்த காளிக்கும் அழகிய பதிப்பிற்காக நற்றிணைக்கும் நன்றி

பெருமாள் முருகனின் கூளமாதாரி

கூளையன் என்னும் மாதாரிச்சிறுவன் பண்ணையக்காரரிடம் வருடக்கூலிக்கு விடப்படுகிறான். ஆடுகளை மேய்ப்பதும் சில்லறைவேலைகளை செய்வதும் பழையதை உண்பதும் வசவுகளை வாங்கிக்கொள்வதுமாக செல்லும் அவலவாழ்வுதான் எனினும் அவனுக்கும் அவனையொத்த அடிமைகளுடன் நட்பும் உறவுமாக ஒரு உலகிருக்கிறது. அவ்வுலகில் அவன் மகிழ்ந்திருக்கிறான். ஆடுகளுக்கு பெயரிட்டு அவைகளுடன் ஒட்டி உறவாடிக்கொண்டு அவைகளுடன் தாய்மொழியில் எப்போதும் பேசிக்கொண்டும் அதட்டிகொண்டும் இருக்கும் எளியவன் கூளையன்

அதிகாலையில் சாணம் அள்ளி, வாசல் பெருக்கி கைபடாமல் துணிசுற்றி மேல்சாதியினருக்கு பால் போசியை கொண்டு சென்று,  பட்டி நீக்கி ஆடுகளை மேய்க்கக்கொண்டு போவது தேங்காய்சிரட்டையில் காபிகுடிப்பது, வசவுகளையும் அடிகளையும் சராமாரியாக வாங்கிக்கொள்வதுமாய்  இருக்கும் கூளையன் என்னும் அறியாச்சிறுவனே கதைநாயகன்

சட்டியில்  கிழவனின் மலமும் மூத்திரமும் அள்ளும் நெடும்பன், சீக்குபண்ணயக்காரியின் கைக்குழந்தையையும் இடுப்பில் வைத்துக்கொண்டு  ஆடுமேய்க்க வரும் செவுடி,அவளின் நோயில் வெளுத்திருக்கும் தங்கை பொட்டி,  எருமைகளையும் மேய்க்கும் வவுறி, கள் தரும் மணி, பூச்சி  நாய், வெயில் மழை இரவு நிலவு மண்ணில் குழிபறித்து விளையாடும் பாண்டி, கிணற்று நீச்சல் பனம்பழம் புளியங்காய் பாறைச்சூட்டில் வறுத்த காடை முட்டைகள், இவர்களாலும் இவைகளாலும் ஆனது கூளையனின் உலகு

நாவல் முழுக்க பரந்துவிரிந்திருக்கும் மேட்டாங்காடும் பண்ணயக்காரர்களின் அழிச்சாட்டியமும்   மாதாரிகளின் அவலவாழ்வும்  விரிவாக அக்களத்திற்கேயான வாழ்வுமுறைகளின் விவரிப்புடன் சொல்லப்பட்டிருக்கிறது

மாட்டுக்கறி உண்னும்பொருட்டு  கூளையனுக்கு கிடைக்கும் ஒரு ராத்திரி விடுதலையை இன்னுமொரு நாள் அவனாக நீட்டிப்பது, கிழங்குப்பணத்தை அவனையே வைத்துக்கொள்ள பண்ணயக்காரர் சொல்லுவது இந்த இரண்டு இடங்களே  நமக்கு கொஞ்சம் ஆசுவாசம் தருவதாக இருக்கின்றது முழு நாவலிலும்

பண்ணையக்காரரின் அத்தனை ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் கேளாதவன் போலவே இருக்கும் கூளையன் தேங்காய் திருடி எதிர்பாரா பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறான் கிணற்றில் கயிற்றில் கட்டித்தொங்கவிடப்படும் கூளையன் இறுதியில்  பன்ணையக்காரரின் மகன் செல்வத்தை கிணற்று நீரில் முக்கி கொல்வதில் முடிகின்றது கதை

விவசாயம் கூலிவாழ்க்கை, கிராமத்டு வாழ்வு, சாதி வேறூபாடுகள், ஆடுமாடு வளர்ப்பிலெல்லாம் பரிச்சயமுள்ளவர்களால் எளிதில் தொடரமுடியும் கதைஇது

அத்தைய வாழ்வில் அறிமுகம்கூட இல்லாதவர்களால் இந்நாவல் விரிக்கும் களத்தையும் விவரிக்கும் கதையையும் கற்பனையில் சித்தரித்துக்கொள்வது கடினமென்றே எனக்கு தோன்றுகிறது

 மைனாக்களை வேடிக்கை பார்ப்பது, மாட்டுக்கறி இரவிற்கு பிறகு தங்கைதம்பியை பிரிய மனமின்றி  தவிப்பது, பீடி குடித்துப்பழகுவது  ஆமரத்துக்கள் இறக்க கோவணத்தை அவிழ்த்துவிட்டு மரம்ஏறி அங்கிருந்து தெரியும் காட்டைப்பார்ப்பது  பனம்பழங்களை பொறுக்கி கிழங்குபோடுவது புளியம்பழம் உலுக்குவது இரவில் திருட்டுத்தனமாக பார்க்கும் தலைவர் படம் பட்டி ஆடு காணமால் போவது தேங்காய் திருடிமாட்டிக்கொள்வது என ஒரு மாதாரிச்சிறுவனின் வாழ்வை அப்படியே நம்மால் காணமுடியும்

கதையோட்டம் தொடர்ந்து சீராக இருப்பதில்லை சில சமயம் தேங்கி நிற்கிறது, சில சமயம் பீறீட்டு பாய்கிறது சில சமயம் வறண்டும் போகிறது

வளர்த்த வீரனின் கறியை திங்கமறுக்கும் கூளையன் நண்பனாகவும் இருந்து முள்ளுக்குத்தாமல் பழம் பொறுக்க செருப்பை தந்த, பட்டிக்காவலில் அப்பனுக்கு தெரியாமல் மச்சுக்குள் வந்து படுத்துக்கொள்ளச் சொன்ன,  கள்ளிறக்குகையில் துணை இருந்த, பள்ளிக்கூட கஷ்டத்தை கன்ணீருடன் பகிர்ந்துகொண்ட செல்வத்தை கிணற்று நீரில் அறியாமலும் தவிர்க்கமுடியாமலும் முக்கிக்கொல்வதுடன் முடியும் இக்கதை, வாசிக்கையில் பல இடங்களில்  காய்ந்த வயிற்றில் மிளகாய்கள் நீச்சம் போட்டு மிதக்கும் கம்மஞ்சோற்றுக்கரைசல்  இறங்குவது போல் குளுகுளுவென்றும் ஆங்கரமாய் அடிக்கும்வெயிலைப்போல கடுகடுவென்றும்  மாறி  மாறி கூளையனின் வாழ்வை சொல்கிறது, ஆசிரியரே சொல்லியிருப்பதுபோல் சொல்லாத பல கதைகளும் உள்ளது சொல்லப்பட்ட இக்கதையினுள்ளே

« Older posts

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑