இரவுகளில் பாடல் கேட்டுக்கொண்டோ கவிதைகள் வாசித்துக்கொண்டோ உறங்கச்செல்வது பலகாலமாக வழக்கத்தில் இருக்கிறது.விருப்பமான கவிஞர்களின் கவிதை நூல்கள் படுக்கைக்கு அருகிலேயே எப்போதும் இருக்கும்.
பாடல்களில் அதிகம் ஹிந்தியும் மலையாளமும் இருக்கும். ஒரு நாளின் அலுப்பு சோர்வு எல்லாம் போக இப்படி பாடல்களின் இனிமையான நினைவுகளுடன் உறங்கச்செல்வது பெரும் ஆறுதலளிக்கும். நான் புழங்கும் உலகு அத்தனையொன்றும் பிரியமானதல்ல புகைச்சலும் அறியாமையும் சில்லறைச்சச்சரவுகளும் மலிந்த ஒரு உலகத்தில் தான் 5 மணி நேரமிருக்கிறேன். எனவே இந்தப்பழக்கத்தைத் தவறவிடுவதில்லை. அன்றாடம் அதிகாலை வாசிப்பையும் கட்டாயமாக, ஆனால் உள்ளார்ந்த ஆர்வத்துடன் பிரியத்துடன் தொடர்கிறேன்.
மலையாள மொழியின்மீது எனக்கு சாய்வு அதிகம். நேற்றிரவு ’’எல்லாரும் சொல்லனு’’ பாடலைக்கேட்டேன். என் பிரியத்துக்குரிய மலையாளப்பாடல்களில் இதுவும் உண்டு. 1954-ல் வெளியான நீலக்குயில் என்னும் திரைப்படத்தின் பாடல். பாடலை எழுதியது புல்லூட்டுப்பாடத்து பாஸ்கரன்மாஷே.
ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியவர். 250 திரைப்படங்ளுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார்.இயக்குநரும் நடிகரும் கூட. கவிஞர் என்று சொல்ல வேண்டியதில்லை.இவரது 3000த்துக்குமதிகமான பாடல்களனைத்துமே நீள் கவிதைகள்தான்.நீலக்குயிலை இயக்கியதும் இவரே.இவரது தந்தையும் பெருங்கவிஞர்.
7ம் வகுப்பு படிக்கையிலிருந்தே கவிதைகள் எழுதிய இவர் துவக்கத்தில் கம்யுனிசப்பாடல்களை எழுதினார். இவரது முதல் சினிமாப்பிரவேசம் 1949- ல் வெளியான தமிழ்த்திரைப்படமான அபூர்வசகோதரர்களில் இருந்த பலமொழிப்பாடலொன்றின் மலையாளப் பகுதிகளை எழுதியதில் துவங்கியது.
2வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான அகில இந்திய தகுதிச் சான்றிதழை வென்று , இந்த விருதை வென்ற முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது நீலக்குயில். நீலக்குயில் ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்க விருதையும் பெற்று மலையாளச் சினிமாவின் முதல் அரசு அங்கீகாரம் பெற்ற படமாகியது.நீலக்குயிலில் பாஸ்கரன் மாஷே நடித்துமிருக்கிறார்.
கலாசித்ரா அகாதமியும் கேரள அரசும் இணந்து மலையாளச் சினிமாவில் பாஸ்கரன் மாஷேவின் பங்களிப்பை போற்றும் விதமாக இவரது மார்பளவு சிலையை திருவனந்தபுரத்தில் நிறுவி இருக்கிறது.
நீலக்குயிலில் கே. ராகவன் இசையமைத்து பி. பாஸ்கரன் எழுதிய ஒன்பது பாடல்கள் உள்ளன .இவை அனைத்தும் கேரள நாட்டுப்புற மரபுஇசை வகைகளில் மாப்பிளப்பட்டு , கோயித்துபட்டு என்னும் அறுவடைப் பாடல்,பாரம்பரிய பிரார்த்தனைப்பாடல்கள்ஆகியவற்றின் வடிவங்களில் அடங்குபவை.
வாழ்நாளின் இறுதியில்அல்ஸைமரினால் பாதிக்கப்பட்டிருந்த மாஷே மனிதர்களையும் அவரது பாடல்களையும் முற்றிலும் மறந்தார். இவரது இறுதிக்காலத்தில் இவரது பாடல்களை ஏராளமாகப் பாடிய S. ஜானகியம்மா இவர் முன்பாக அவரது பல பாடல்களைப்பாடியபோது அவரால் எதையும் நினைவுகூற முடியவில்லை. 83 வயதில் இறந்தார் மாஷே.
1954-ல் தலித் பெண்ணுக்கும் உயர் சாதி பள்ளிக்கூட ஆசிரியருக்குமான காதலைச்சொன்ன படம் நீலக்குயில். இந்த நீலக்குயிலின் ’’எல்லாரும் சொல்லனு” எளிய மொழியில் எழுதப்பட்ட மிக அழகிய கவிதை
மிஸ் குமாரியும் சத்யனும் வெகு இயல்பான உடல்மொழியுடன் நடித்திருக்கும் பாடல்காட்சி. கொய்யாக்காயை கடித்துக்கொண்டும் மேலே தூக்கிப்போட்டுப் பிடித்துக்கொண்டும் பாடும் காதல்பாடலை நான் இதற்கு முன்பும் பிறகும் கேட்டது இல்லை. ஒருவரை ஒருவர் தொட்டுக்கொள்ளாமல் முழுப்பாடலையும் பாடிவிட்டு இறுதிக்காட்சியில் ‘கல்லானு, கருங்கல்லானு’ என்று சொல்லப்பட்ட சத்யனின் நெஞ்சில் தன் இருகைகளையும் வைத்துக்கொள்வார் குமாரி. ஜானம்மாடேவிட்டின் குரலில் நீலக்குயில் கொஞ்சுகிறது.
’’எல்லாரும் சொல்கிறார்கள்
உங்கள் இதயம் கல் என்று,
அதுவும் பெரும்
கருங்கல்லென்று’
ஆனால் நானதைத்
தொட்டுப்பார்த்தபோது
எனக்கது
ஒரு கரும்பின் துண்டாகத்தான் இருந்தது.
நாட்டார் எல்லாரும்
உன் இதயம் காடு
அதுவும் கொடும்காடு என்றார்கள்,
ஆனால்
அதில் நுழைந்த போது
நான் பார்த்தது
ஒரு நீலக்குயிலின் கூட்டை ,
சின்னஞ்சிறியதோர் கூட்டை.
என்ன பார்க்கிறாய் நிலவே?
ஏன் எங்களை மேலிருந்து பார்க்கிறாய் ?
நான் மேலே உன்னிடம் வரப்போவதில்லை
என் மணவாளன்
இங்கே கீழே அல்லவா இருக்கிறான்?
பூச்செண்டு வாங்கனும்
கல்யாண முண்டு வாங்கி உடுத்தனும்
பூக்கள் அமைத்த பொன்தாலியை
கழுத்தில் கட்டனும்
நானொன்றும்
விளையாட்டுக்குச்சொல்லவில்லை
நல்ல சுவையான துளிர் வெற்றிலையை
மென்று தின்று
என் உதடுகளை
ரத்தச்சிவப்பாக்கிக்கொள்ளனும்
ஆம்
என் உதடுகளை
ரத்தச்சிவப்பாக்கிக்கொள்ளனும்’’
எத்தனை நேரடியான காதல் சொல்லல் இல்லையா?
இடையில் அந்த அய்யா என்னும் விளி அவன் மீது அவளுக்கிருக்கும் மரியாதை கலந்த அன்பைக்காட்டுகிறது.
முதலில் நேரடியாக அவன் இதயத்துக்குள் தான் நுழைந்ததைச் சொல்லும் அவள், அவன் எத்தனைஇனியவன் என்கிறாள் கரும்பைச்சொல்லி.
பின்னர் நிலவிடம் சொல்லுவது போல் தன் மணவாளன் அவனே என்கிறாள். பிறகு கல்யாணத்துக்கு தயார், முண்டும் தாலியும் கெட்டனும் என்பவள் மேலும் துணிந்து உதடுகளை சிவப்பாக்கிக்கொள்வதையும் சொல்கிறாள்.
ஊழின் இரக்கமற்ற விதி இந்தப்பாடலைக் கூட பாஸ்கரன் மாஷே மறக்கும்படி செய்துவிட்டது
லோஸர் எனப்படும் திபெத்திய புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் மிகத்தொன்மையான சடங்குகளுடன் ஒரு வாரம்வரை நடைபெறும். திபெத் மக்கள் பல நாட்களுக்கு முன்பிருந்தே வீடுகளை சுத்தம் செய்யத் தொடங்குவார்கள். வீட்டுச்சுவர்களுக்கு வர்ணம் அடித்து வீடெங்கும் மலர்களால் அலங்காரம் செய்து சுவர்களில் சூரியன், சந்திரன், தலைகீழ் ஸ்வஸ்திக் வடிவம் ஆகியவற்றை வரைந்து வைப்பார்கள்.
புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது ஊதுவர்த்திபோல எரிகையில் வாசனைப்புகை தரும் செடார், ரோடோடென்ரான் மற்றும் ஜுனிபர் மரங்களின் சிறுகிளைகள் ஒடிக்கப்பட்டுச் சேகரித்து வைக்கப்படும்
புத்தாண்டுக்கு முன்பே கடன்கள் அடைக்கப்பட்டு, குடும்பத் தகராறுகள் பெரியவர்களால் பேசித் தீர்த்து வைக்கப்படும். புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது மட்டும் உண்ணப்படும், கடலைமாவில் வெண்ணெயும் சர்க்கரையும் கலந்து, கழுதைக்காது வடிவில் பொறித்தெடுக்கப்பட்டு, மீண்டும் சர்க்கரை தூவி உருவாக்கப்படும் காப்ஷே (Khapse) எனப்படும் பிஸ்கட் போன்ற ஒரு பலகாரம் ஏராளமாக செய்து வைக்கப்படும். சாங் (chang) எனப்படும் பார்லி மதுவும் தயாரிக்கப்பட்டு சேமித்து வைக்கப்படும். ஆட்டுத்தலை என்னும் சொல்லும் புதுவருடத்துவக்கம் என்னும் சொல்லும் திபெத்திய மொழியில் ஏறக்குறைய ஒன்றே போல் இருக்குமென்பதால் வீடுகளில் வெண்ணையால் ஆட்டுத்தலைபோல உருவம் செய்து வைக்கப்படும்.
வாளி போன்ற பாரம்பரிய மரத்தொட்டியான, ஒரு மரக்கட்டையால் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கும் ஐந்து தானியம் எனப்பொருள்படும் ஃபைமெரில் (phyemar) ஒரு பாதியில் அரிசியும் மறுபாதியில் வறுத்த பார்லியைப் பொடித்த ஸாம்பாவும், பார்லி தானியங்களும், பார்லி தானியக்கதிரும், வர்ணமேற்றப்பட்ட வெண்ணெயும் நிறைத்து வீட்டுக்கு முன்பாக வைக்கப்படும். ஐந்து பொருட்களை நிறைத்து வைக்கப்படும் இந்த வாளி நல்ல அறுவடைக்கும் கடவுளின் ஆசிக்கும் அடையாளமாகக் கருதப்படுகிறது.
புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு வருகை தரும் விருந்தினர்கள் அந்த வாளியிலிருந்து கொஞ்சம் ஸாம்பாவை எடுத்து காற்றில் மூன்று முறை சுண்டி விட்டு விரல்களில் ஒட்டி இருக்கும் ஸாம்பாவை வாயிலிட்டுச் சுவைத்த பின்னர் ‘’தாஷி டெலெக்’’ ( Tashi delek.) என்று உரக்கச் சொல்லி ஆசியளிப்பார்கள். ’’தாஷி’’ என்றால் நல்ல விஷயங்கள் ’’டெலெக்’’ என்றால் ’’ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் ’’என்று பொருள்
இந்த ஸாம்பா திபெத்தியர்களின் வாழ்வில் மிக முக்கியமானது. திபெத்தியர்களின் வலிமை அவர்களின் வாழ்வு, பிரார்த்தனை எல்லாவற்றிலும் ஸாம்பாவின் பங்கு பெருமளவில் உள்ளது. ஸாம்பாவை அறிந்துகொள்வது திபெத்தை அறிந்து கொள்வது தான்.
ஸாம்பா என்னும் திபெத்தியர்களின் பிரதான உணவைக் குறித்த பல நூறு நாட்டுப்புறக்கதைகள் திபெத்தில் பலநூறு ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ளன. இது வெறும் உணவல்ல, திபெத்தின் வரலாறு, கலாச்சாரம், திபெத்தில் இதுநாள் வரை வாழ்ந்து மறைந்த மூதாதையைருடனான திபெத்தியர்களின் தொடர்பு என அனைத்துமே ஸாம்பாதான். ஸாம்பாவின் சுவைதான் திபெத்தின் சுவை என்கிறார்கள் திபெத்தியர்கள்
திபெத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பிரதான உணவாக இருந்து வரும் மிக எளிமையான இந்த ஸாம்பா என்னும் உணவு பார்லியை வறுத்துப் பொடித்து செய்யப்படுகிறது. ஸாம்பா எப்போதிலிருந்து திபெத்தின் முக்கிய உணவாக இருக்கிறது என்பதற்கான எழுத்துபூர்வமான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றாலும் புத்த மதம் அங்கு அறிமுகமாகும் முன்பே ஸாம்பா உருவாகியிருக்கும் எனக் கருதப்படுகிறது. 7-ம் நூற்றாண்டில் ஸாம்பாவை காற்றில் வீசி எறியும் வழக்கம் அரசர் முடிசூடிக்கொள்கையிலும் அமைச்சர்கள் பதவி ஏற்கையிலும், திருமண விழாக்களிலும் நடந்தது. 13-ம் நூற்றாண்டிலிருந்து பிறந்த நாள், புத்தாண்டு போன்ற எல்லா முக்கியத்தருணங்களிலும் ஸாம்பா பொடி தூவுதல் கடைப்பிடிக்கப்படுகிறது.
திபெத்தில் இறைச்சி உணவு மிகக் குறைவாகவே புழக்கத்தில் இருக்கிறது. 1993-லிருந்து வேட்டை தடை செய்யப்பட்டிருப்பதால், மிக குறைவான யாக் எனப்படும் இமயக்காளையின் இறைச்சியுடன் பெரும்பாலும் தானியங்களும் காய்கறிகளும் பால், நெய், வெண்ணெயுடன் சேர்ந்த உணவுதான் உண்ணப்படுகிறது.
திபெத்தின் தாழ்வான நிலங்களில் உருளைக்கிழங்கு, பட்டாணி, கோதுமை, டர்னிப், ஆப்ரிகாட் ஆகியவையும், மேட்டு நிலங்களில் பார்லி சாகுபடியும் நடைபெறும், இவற்றோடு திபெத் எங்கும் அபரிமிதமாக வளரும் Argentina anserina என்னும் பிரகாசமான மஞ்சள் மலர்களைக் கொண்டிருக்கும் செடியின் கிழங்குகளும் உண்ணப்படுகிறது.
திபெத்தில் ஸாம்பா என்னும் சொல் பார்லி தானியத்தையும் குறிக்கும் சொல்லாக இருக்கிறது. சுமார் 5600 ஆண்டுகளுக்கு முன்பிருந்து திபெத்தின் முக்கிய உணவாக இருந்துவரும் ஸாம்பா, பார்லி சாகுபடியின் வரலாற்றையும் உடன் கொண்டிருக்கிறது. திபெத்தில் ஸ்பிடி, சன்ஸ்கார், புராங், லடாக் மற்றும் பிர் பகுதிகளில் மேட்டு நிலப்பயிராக பார்லி அதிகமாக சாகுபடியாகிறது.
வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்து மேற்கில் கிரேக்க தீவுகளிலும் கிழக்கில் திபெத் வரையிலும் பரவி இயற்கையாகவே வளர்ந்திருந்த காட்டுபார்லியான Hordeum vulgare ssp. spontaneum தான் கிமு 9000-த்தில் மனிதர்களால் முதன்முதலாக சாகுபடி செய்யப்பட்ட தானியமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்தப்பயிரின் பூர்வீகம் மற்றும் பரவலுக்கான சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை எனினும் பாகிஸ்தான் இந்தியா, நேபாளம் வழியாக பார்லி திபெத்தின் தெற்குப் பகுதியில் அறிமுகமாகி இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.
திபெத்தில் மனிதக் குடியிருப்புகளுக்கருகே காட்டுபார்லி சாகுபடி செய்யப்பட்டது. அப்போதிலிருந்தே திபெத் பார்லி சாகுபடியின் மையங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. மேட்டு நிலத்தில் நன்கு வளரத்துவங்கிய பார்லியோடு மனிதர்களும் திபெத்தின் உயரமான நிலங்களில் வாழத்துவங்கினார்கள்.
ஆயிரக்கணக்கான வருடங்களாக பார்லியின் காட்டு மூதாதையில் தொடர்ந்து நடந்த கலப்பினச் சோதனைகளுக்குப்பிறகு கிடைத்த திபெத்திய மேட்டுநிலப்பார்லிதான் (Hordeum vulgare L., qingke) மனிதனின் தேவைக்காக மாற்றியமைத்துப் பயிரிட்டவைகளில் மிக முக்கியமானதென்று வேளாண் வரலாறு குறிப்பிடுகிறது. தொல்லியலாளர்களால் திபெத்தின் கடல்மட்டத்துக்கு மேல் 3400 மீ உயரத்தில் இந்த வகை பார்லியின் எச்சங்கள் கண்டறியப் பட்டிருக்கின்றன. திபெத்தின் மனிதக்குடியேற்றத்தை பார்லியின் சாகுபடிதான் தீர்மானித்தது என்று வரலாற்றாய்வாளர்கள் கருதுகிறார்கள்.
தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக சாகுபடியும் கலப்பின உருவாக்கமும் செய்யப்பட்டதால் பார்லியின் காட்டுமூதாதைச் செடிகளின் நீள் முட்டை வடிவ தானியங்கள் இப்போது உருண்டை வடிவமாகிவிட்டிருக்கிறது.
திபெத்தில் விளையும் பயிர்களில் 70% இருக்கும் இந்த மேட்டு நில பார்லிதான் திபெத்தின் தேசியபப்யிர். திபெத்தில் பயிராகும் அரிசி கோதுமை மற்றும் சோளப்யிர்களின் விளைச்சலைக் காட்டிலும் மேட்டுநில பார்லியின் விளைச்சல் சற்றுக்குறைவுதான் எனினும் சாகுபடியாகும் நிலபப்ரப்பு பார்லிக்குத்தான் மிக அதிகம்.
மிக அதிகக் குளிரையும் தாங்கும், ஐந்து மாதங்களில் அறுவடைக்குத் தயாராகும் இந்த திபெத்திய மேட்டு நிலப் பார்லி கடல் மட்டதிலிருந்து 4200- 4500-மீ உயரத்தில் மிகச் செழிப்பாக வளர்கிறது. கதிர்கள் மஞ்சள் நிறமாக மாறி, கதிர்மணிகளின் ஈரப்பதம் 20% to 22%. இருக்கையில் அறுவடை செய்யப்படுகிறது.
திபெத்தின் ஐந்து முக்கிய நிலப்பரப்புகளில் பயிராகும் மேட்டு நிலப்பார்லி, திபெத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புராங் நிலப்பரப்பில் மிக அதிக அளவில் பயிராகிறது. தெற்கு இமாலயப் பகுதியைச் சேர்ந்த இந்தப் பிரதேசத்தில் கடல் மட்டத்திற்கு மேலான உயரம் திபெத்தின் மற்ற பகுதிகளை விட குறைவாக 3900-மீ தான் இருக்கிறது என்றாலும் இங்குதான் மிக உயர் ரக பார்லி பயிராகிறது. பனியற்ற 100 நாட்களும் ஆண்டுக்கு 3270 மணிநேர சூரியஒளியும் கிடைப்பதால் இங்கு விளையும் முதல் தர பார்லி அரசகுடும்பத்தினருக்கும் மேட்டுக்குடியினருக்குமானதாக்க கருதப்படுகிறது.
ஸாம்பா தயாரிக்கும் முறை:
மேட்டுநில பார்லி முதிர்ந்த பின்னர் அறுவடை செய்யப்பட்டு தூய்மைப் படுத்தப்படுகிறது
பார்லி தானியம் சுடு மணலில் நல்ல வாசனை வரும் வரை வறுக்கப்படும்.
திபெத்திய காலநிலையில் இந்த உலர் மாவு கெட்டுப்போகாதென்பதால் வருடக்கணக்காக பிரத்யேகமான துணிப்பைகளில் சேமித்து வைக்கப்பட்டு தேவையானபோது ஸாம்பா தயாரிக்கப்படுகிறது.
ஸாம்பா மலையேறுபவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் சத்துணவாக இருக்கிறது. உலர் ஸாம்பாவை எடுத்துச் செல்பவர்கள் எளிதாக இதனுடன் பாலோ நீரோ கலந்து உண்ணலாம். சூடாகவோ குளிர்ந்தோ அப்படியே உண்ணலாம்.
ஸாம்பா பெரும்பாலும் தேநீருடன்தான் உண்ணப்படுகிறது. உலர்பொடியான ஸாம்பாவை தேநீரில்லாமல் விழுங்கச் சிரமமாக இருக்கும் என்பதாலும், திபெத்தியர்கள் தேநீர் பிரியர்களென்பதாலும் ஸாம்பாவுடன் தேநீரைக்கலந்து உண்பது அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும் அனுபவம் ஆகிவிடுகிறது.
அதிலும் வெண்ணெய்த் தேநீர் ஸாம்பாவுக்கு பொருத்தமான இணை உணவாகிறது. ட்ரீ (dri) எனப்படும் இமயப்பசுவின் பாலிலிருந்து கிடைக்கும் வெண்ணெய் கலந்த தேநீரும் திபெத்தின் சிறப்பு உணவுகளில் ஒன்று. வெண்ணெய்த் தேநீருக்கென்றே இருக்கும் ஒரு கிண்ணத்தில் சிறிது வெண்ணெய் விட்டு உப்புக்கலந்து அதில் தேநீரை ஊற்றி மரக் கரண்டியால் நன்கு அடித்துக் கலக்கி வெண்ணெயும் தேநீரும் ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்தபின்னர் சிறிது சர்க்கரை சேர்த்து வெறும் தேநீராகவோ அல்லது ஸாம்பாப் பொடியுடன் சேர்த்தோ இந்தப்பானம் அருந்தப்படும். காய்ச்சல், சளி தொந்தரவுகளுக்கு இந்த வெண்ணெய்த் தேநீர் மருந்தாகவும் அமைந்துவிடுகிறது. திபெத்திய யாக் வெண்ணெய் நல்ல புளித்த வாடையும், சுவையும் கொண்டிருக்குமென்பதால் ஸாம்பா வெண்ணெய்த் தேநீரின் சுவை பிரத்யேகமாக இருக்கும். திபெத்துக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகள் 8-10 யுவானுக்கு கிடைக்கும் இந்த தேநீரை அவசியம் சுவைத்துப் பார்க்க வேண்டும். ட்ரியின் வெண்ணெயுடன் ஸாம்பாப் பொடியைக் கலந்த உலர் கட்டிகளும் திபெத்தில் விற்பனையாகின்றன. கொதிக்கும் தேநீரில் அல்லது பாலில் கட்டிகளைப் போட்டு கலக்கி, உப்போ சர்க்கரையோ கலந்தால் ஸாம்பா தேநீர் தயரகிவிடும்
உலர் ஸாம்பாப் பொடியை சரி பாதி அளவுக்கு நீர் அல்லது பால் சேர்த்து கைகளால் மெதுவாக கட்டியில்லாமல் கலக்கி கொதிக்க வைத்தும் அருந்தலாம். அல்லது உலர் மாவைக் கொதிநீரில் மெல்ல மெல்லக் கலக்கி சர்க்கரை அல்லது உப்பு சேர்ந்து சிறு உருண்டைகளாகவும் உருவாக்கலாம்.
ஸாம்பாவின் சுவை எப்படி இருக்கும்? சாதா தேநீருடன் கலந்த ஸாம்பா தனிச்சுவையுடனும் யாக்கின் வெண்ணய்த்தேநீருடன் அருந்துகையில் பிறிதொரு சுவையுடனும் இருக்கும். எனவே ஸாம்பாவின் சுவையை இப்படித்தான் இருக்கும் என அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இப்போது ஸாம்பா, நெய், பால்வண்டல், மசாலா பொருட்கள் கலந்து பல்வேறு சுவைகளிலும் கிடைக்கிறது.
ஸாம்பா திபெத்தின் கலாச்சார அடுக்குகளில் இரண்டறக் கலந்து விட்டிருக்கிறது. புத்த மத விழாக்களில் படையலாக ஸாம்பா படைக்கப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களில் காற்றில் தூவப்பட்டு ஆசியளிக்கப் பயன்படுகிறது. இறந்தவரின் ஆன்மா பயணப்பட துணையாகிறது என்று நம்பப்படுவதால் தவறாமல் ஸம்பா உணவு இறப்புச் சடங்குகளில் இடம்பெறுகிறது. பிராந்திய வேறுபாடுகள் மற்றும் பேச்சுவழக்கு வேறுபாடுகளைக் கடந்து திபெத்தை ஒன்றிணைக்கிறது ஸாம்பா.
திபெத்திய அரசியலில் ஸம்பாவின் பங்கு மிக முக்கியமானது. உலகெங்கிலும் இருக்கும் திபெத்தியர்களின் ஒற்றை அடையாளமாக ஸாம்பா இருக்கிறது. ’’ஸாம்பா உண்பவர்கள்’’ என்னும் அழைப்பு திபெத்திய எழுச்சிப் போராட்டங்களின் போது அனைவரையும் ஒன்றிணைத்த ஒரு மந்திரச் சொல்லாக இருந்தது.
1950-களில் திபெத் சீனாவுடன் இணைக்கப்பட்டபோது, சீனா திபெத்தின் கலாச்சாரத்தை மாற்ற முனைந்தது. அப்போது திபெத்தியர்கள் ஒண்றிணைந்து ஸாம்பாவை தங்கள் அடையாளமாகக் கொண்டு போராடினார்கள். சீன உணவுகளில் அரிசியே பிரதானமாக இருந்ததால் ’’நாங்கள் ஸாம்பா உண்பவர்கள்’’ என்னும் முழக்கம் திபெத்தியர்களின் தனித்த அடையாளமாக இருந்தது. போராட்டத்தின் போது நாடு கடத்தப்பட்டவர்கள் தங்களுடன் ஸாம்பாவை எடுத்துச் சென்றார்கள், எங்கிருந்தாலும் ஸாம்பாவையே உண்டார்கள்
1957-ல் திபெத்தின் மிரர் நாளிதழ் (Mirror of News) ’’ஸாம்பா உண்பவர்கள் அனைவரும்! வாருங்கள்!’’ என அறைகூவியது. 1959 -ல் நிகழ்ந்த திபெத்திய எழுச்சியின் போது, ”சாம்பா-உண்பவர்கள்” என்ற பதாகையின் கீழ் புரட்சியாளர்கள் அணிவகுத்துச் சென்றதன் மூலம், திபெத்தின் சக்திவாய்ந்த அடையாளமாக ஸாம்பா மாறியது. 2008-லும் 2012-லும் நடந்த எழுச்சிப் போராட்டங்களின் போது ’’எழுந்திருங்கள் ஸாம்பா உண்னும் திபெத்தியர்களே’’ என்னும் முழக்கத்துடன் போராட்ட அணிவகுப்பில் உலர் ஸாம்பாப்பொடியை தூவிக்கொண்டே சென்றதும் ஸாம்பாவின் இன்றியமையை உலகிற்குக் காட்டியது. திபெத்திய எழுச்சிப் போராட்டங்கள் அனைத்துமே ஸாம்பாபோராட்டம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
புரட்சியாளர்கள்’’ நாங்கள் ’’ஸாம்பா உண்பவர்கள் எங்கள் வேர்களை மறக்கமாட்டோம்’’ என்று முழக்கமிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். நவீன திபெத்திய புரட்சி இயக்கங்களும் திபெத்தின் அடையாளமாக ஸாம்பாவையே குறிப்பிடுகிறது. வெகுவாக மாறிவிட்டிருக்கும் இன்றைய திபெத்திலும் ஸாம்பா மையப்புள்ளியாக இருக்கிறது .
தலாய் லாமா தனது உரையொன்றில் ’’நாம் ஸாம்பா உண்பவர்கள், நம் எங்கு சென்றாலும், வாழ்வு நமக்கு எத்தனை கடினமாக இருந்தாலும் நம்முடன் எப்போதும் ஸாம்பாவைக் கொண்டுசெல்வோம்’’ எனக் குறிப்பிட்டார்.
இப்போதும் திபெத்திய அரசியல் விவாதங்களில் ’’நான் ஸாம்பா உண்பவன்’’ என்று சொல்வது, எத்தனை எதிர்ப்பு வந்தாலும் திபெத்திய விழுமியங்கள் மீது மாறாத பற்றுக்கொண்டிருப்பதன் குறியீடாகச் சொல்லப்படுகிறது.
புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக ஸாம்பாச் சண்டை எனப்படும் ஒருவர் மீது ஒருவர் ஸாம்பா உலர்பொடியை எறிந்து விளையாடும் நிகழ்வு நல்ல அறுவடையின் வேண்டுதலாக நடைபெறும். விருந்தினர்கள் வருகையின் போது அளிக்கப்படும் முதல் உணவும் ஸாம்பாதான்.
ஸாம்பா உலர்பொடியைத் தயாரித்து அதன் தேநீரை அல்லது உருணடைகளை தயாரிப்பது ஒரு தியானம் போல் புத்த துறவிகளால் கவனம் சிதறாமல் மனதை ஒன்றுபடுத்தி ஒரு சடங்காகவே செய்யப்படும். ஸாம்பாவின் எளிமையும் தூய்மையும் புத்தமதத்தின் குறியீடாகவும் திபெத்தில் கருதப்படுகிறது. செல்வச்செழிப்பின் அடையாளமாகவும் கருதப்படும் பார்லிதான் குருதட்சணையாகவும் அளிக்கப்படுகிறது.
.இங்கு விளையும் பார்லியில் புரதம் கூடுதலாக இருக்கிறது எனவே அதிலிருந்து சங் பீர் தயாரிக்கப்படுகிறது. ஸாம்பாவில் மாவுச்சத்து, புரதம், வைட்டமின்கள்களோடு பல நுண்சத்துக்களும் நார்சத்தும் நிரம்பி இருக்கிறது.மிக அதிக அளவில் பீட்டா குளுக்கான் இருப்பதும் பார்லியில்தான்.
ஸாம்பா பார்லியின் ஏராளமான சத்துக்களால் இந்த எளிய உணவு இப்போது ஒரு Prebiotic உணவாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. Prebiotic உணவுகள் நம் வயிற்றில் இருக்கும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை மேலும் பலமடங்காக்கும் இயல்புடையவை . மேலும் ஸாம்பா குறைந்த க்ளைசீமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவாக இருக்கிறது. தொடர்ந்து பார்லி உண்ணுவது ரத்தச் சர்க்கரை அளவையும் ரத்தக் கொழுப்பு அளவையும் குறைப்பது ஆய்வுகளில் நிரூபணமாகியிருக்கிறது. உலகின் எந்த நாட்டையும் விட பார்லியின் தனி நபர் பயன்பாடு திபெத்தில் தான் அதிகமாக இருக்கிறது. திபெத்தியர்களின் அசாதாரண உடல் வலிமைக்கும் ஸாம்பாதான் காரணமாக இருக்கிற நவீன மயமாகி விட்டிருக்கும் இன்றைய திபெத்தியர்களுக்கும் ஸாம்பா இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடியாது. உலகின் அனைத்துப்பகுதிகளையும் போலவே திபெத்திலும் வாழ்க்கையின் போக்கிற்கு ஏற்ப உணவுக்கலாச்சாரமும் மாறிவிட்டிருந்தாலும் ஸாம்பா திபெத்திய உணவில் காலத்தைக்கடந்தும் அப்படியே மையப்புள்ளியாக நிலைத்து நின்றிருக்கிறது.
ஸாம்பா திபெத்தின் பிரதான உணவு மட்டுமல்ல திபெத்திய நாகரீகத்தின் அடித்தளமும் ஸாம்பாதான். இன்றும் ஸாம்பா உலகெங்கிலும் இருக்கும் திபெத்தியர்களை ஒண்றினைத்து அவர்களின் வேர்கள் இருக்கும் நிலப்பரப்பை நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.
இந்தோனேஷியாவின் தென் பகுதியில் அமைந்திருக்கும் சும்பவா தீவிலிருந்த மாபெரும் எரிமலையான தம்போரா 1815 ஏப்ரல் 5 அன்று மிக லேசாக அதிர்ந்து நடுங்கி சாம்பலையும் எரிமலைக் குழம்பையும் வாயுக்களையும் கொஞ்சமாகக் கக்கியபோது அது அடுத்து உண்டாக்கவிருந்த பேரழிவை அந்தத் தீவில் யாரும் எதிர்பார்த் திருக்கவில்லை. முந்தைய மூன்று ஆண்டுகளாக தம்போரா உறுமிக் கொண்டுதான் இருந்தது. அவ்வப்போது வாயுக்கள் கசிந்து, கரும்புகை மேகங்கள் எரிமலை உச்சியைச் சூழ்ந்திருந்தன. எனவே அதை தீவுவாசிகள் மிகச்சாதாரணமாக எடுத்துக்கொண்டார்கள்.
மெல்ல மெல்ல நில அதிர்வு அதிகமாகி தம்போரா ஏப்ரல் 10 அன்று மாலை பெரும் வெடியோசையுடன் வெடித்துச்சிதறிய போது சும்பவா தீவின் 35000 வீடுகளும் எரிமலைக் குழம்பில் மூழ்கி காணாமலாகி, அலறக்கூட நேரமில்லாமல் 110000 பேர் நெருப்பாற்றினால் விழுங்கப்பட்டார்கள்.
14,000 அடி உயரத்தில் இருந்த தம்போரா வெடித்தபோது அதன் 4,000 அடி உச்சி வானில் வெடித்துச் சிதறியது, நான்கு மைல் அகலமும் 2,000 அடி ஆழமும் கொண்ட ஒரு குழியையும் அந்த பெருவெடிப்பு உருவாக்கி இருந்தது
எரிமலையின் நெருப்புத் தூள், விமானங்கள் பறக்கும் உயரத்தை விட அதிகமாக, 40 கி மீ உயரத்தை அடைந்தது. எரிமலைத் தூசி மேகம் 1000 கி மீ தொலைவு வரை சென்றது. சுமார் 41 கி மீ³ DRE (dense rock equivalent) அளவுக்கு பாறைக்குழம்பு வெடித்துச் சிதறியது.
தொடர்ந்து 3 மணி நேர வெடிப்பிற்குப் பின்னர் இரவு 10 மணியளவில் நெருப்புத் தூண் வீழ்ச்சியடைந்தபோது எரிமலையின் சரிவுகளில் 100 மைல் வேகத்தில் ஓடத் தொடங்கிய நெருப்பாறுகள் கடலில் கலந்து அழிவுகரமான ஆழிப்பேரலையை ஏற்படுத்தின. தூசி மற்றும் சிதிலங்கள் பல வாரங்களாக விழுந்தன, பல கி மீ தொலைவில் உள்ள வீடுகள் இடிந்து வீழ்ந்தன. நன்னீர் ஆதாரங்கள் அசுத்தமாக்கப்பட்டன, பயிர்கள் அழிந்தன, கந்தக வாயு உருவாக்கிய நுரையீரல் தொற்றினால் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள்.
மேலும் பல்லாயிரக்கணக்கானோர் பசி மற்றும் நோயால் இறந்தனர், சும்பவா மற்றும் அருகிலுள்ள தீவுகளில் உயிரிழப்பு எண்ணிக்கை 60,000 முதல் 90,000 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எரிமலை வெடிப்பின் தீவிரம் 1-லிருந்து 8 வரையான கணக்கீட்டில் Volcanic Explosivity Index (VEI), என்று குறிப்பிடப்படுகிறது. கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் 8 அளவிலான எரிமலை வெடிப்புகள் ஏதும் உருவாகி இருக்கவில்லை. தம்போராவின் VEI 7 என்று அளவிடப்பட்டது.
எரிமலையியலாளர்கள் மனித குல வரலாற்றிலேயே தம்போரா எரிமலை வெடிப்புதான் ஆகப்பெரிய அழிவை, உலகளாவிய தாக்கத்தை உண்டாக்கிய அல்ட்ரா பிளினியன் வெடிப்பு என வகைப்படுத்துகிறார்கள்
கனமான தூசிப் பொழிவு சும்பவா, லொம்போக், பாலி தீவுகளையும் ஜாவாவின் மேற்குப் பகுதியையும் 20 முதல் 50 செ மீ தூசியால் மூடியது, மேலும் எரிமலையிலிருந்து 1000 கி மீ தொலைவில் கூட 1-2 செ மீ தூசி அடுக்கு காணப்பட்டது. தாம்போரா மலை வெடிப்பின் புகைமண்டலம் 27 மைல்கள் (43.5 கி மீ) உயரத்தை அடைந்தது.
தம்போரா வெடித்தபோது ஏறத்தாழ 150 சதுர மைல் அளவுக்கு அதிலிருந்து எரிமலைக் குழம்போடு சாம்பலும், ப்யூமிஸ் கற்களும், உடைந்த பெரும் பாறைகளும், பலவகையான வாயுக்களுடன் 60 மெகாடன் கந்தக வாயுவும் வெளியேறின.
தம்போரா வெடிப்புகள் கந்தக வாயுக்களை வளிமண்டலத்தில் உயர்த்தியது, அங்கு அவை நீராவியுடன் கலந்து கந்தக அமிலத்துளிகள் நிரம்பிய மேகங்களை உருவாக்கின. இந்தோனேஷியாவிற்கு வெகு தொலைவில் இருந்த நாடுகளிலும் சூரிய ஒளி இந்த மேகங்களால் மூடப்பட்டு சிவப்பு நிறமானது, காற்று மற்றும் மழையினால் மேகங்கள் சிதறவில்லை.
கந்தக அமிலம் சூரிய கதிர்வீச்சை மறைத்ததால் உலகளாவிய வானிலை மாறியது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சராசரியை விட குறைந்த வெப்பநிலையுடன் கூடிய கடுமையான குளிர் நிரம்பிய கோடையை எதிர்கொள்ள நேரிட்டது, உலகின் சராசரி வெப்பநிலை 3°C குறைந்தது.
தம்போரா வெடிப்பு மூன்று ஆண்டுகள் நீடித்து, உலகளாவிய வானிலை அழிவுகளை உண்டாக்கியது. தொடர்ந்து குளிர்ந்த வானிலை மற்றும் சூரிய வெளிச்சம் குறைவாக இருந்ததால் பயிர்கள் நாசமடைந்தன. பஞ்சம் மற்றும் குளிர்ந்த வானிலையை உலகின் பெரும்பகுதி அனுபவித்தது, எனவே 1816-ம் ஆண்டு “கோடை இல்லாத ஆண்டு” என அழைக்கப்பட்டது.
மனித குல வரலாற்றில் பயங்கரமான எரிமலை வெடிப்புகள் ஏராளமாக நடந்துள்ளன. காலநிலைக்கு வெகுவாக குளிர்ச்சியைக் கொண்டு வந்த மவுண்ட் பினடுபோவின் “சிறிய உமிழ்வு” முதல், டோங்கா தீவுக்கூட்டத்தின் ஹுங்கா டோங்கா-ஹுங்கா ஹா’அபையின் அதிரடியாக நடந்த வெடிப்பு வரை எரிமலை வெடிப்புக்கள் உயிர்ச்சேதம், பொருட்சேதம் காலநிலை மாற்றம் போன்றவற்றை மட்டுமல்லாது வேறு வகையான தாக்கங்களையும் விளைவுகளையும் உண்டாக்கி இருக்கிறது. அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா பல காலகட்டங்களில் நிகழ்ந்த மூன்று மாபெரும் எரிமலை வெடிப்பினால் உருவான ஒரு பிரதேசம்தான்.
மாபெரும் எரிமலை வெடிப்புகள் அவை நிகழ்ந்த இடத்திலிருந்து மிக மிகத் தொலைவில் இருக்கும் பகுதிகளிலும் காலநிலையில் அதீத தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. 17-ம் நூற்றாண்டின் எரிமலை வெடிப்புகள் தீவிரமான விவசாய நெருக்கடிகளை உலக நாடுகள் பலவற்றில் உருவாக்கின. 18-ம் நூற்றாண்டில் இத்தாலி மற்றும் ஜப்பானில் குறிப்பிடத்தக்க வீரியம் கொண்ட பல எரிமலை வெடிப்புக்கள் நிகழ்ந்தன.
19-ம் நூற்றாண்டில் மிகத்தீவிரமான காலநிலைத்தாக்கத்தை உருவாக்கியது இந்தோனேஷியாவின் தம்போரா எரிமலை வெடிப்பு. உலகளாவிய அளவில், தாம்போரா வெளியிட்ட கந்தகம் விரைவாக உலகம் முழுவதும் பரவி, உலக வெப்பநிலையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியது, இது விவசாய உற்பத்தித்திறனைப் பாதித்தது,
அயர்லாந்தில் தொடர்ந்து நிலவிய குளிர் அதிகமான காலநிலை கோதுமை, ஓட்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு பயிர்களை அழித்து பஞ்சத்திற்கு வழிவகுத்தது. கோடை இல்லாத ஆண்டில் மலேரியா மற்றும் டைபஸ் நோய் பரவலும் உண்டானதால் அங்கு 40,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்தோனேஷியாவிற்கு வெகு தொலைவில் இருந்த பல நாடுகளிலும் வளிமண்டலத்தில் இருந்த வெடிப்புத் தூசியால் செம்பொன் நிற சூரியஸ்தமனங்கள் ஏற்பட்டன.
சூரிய உதயத்தை காணக் காத்திருக்கும் பெண்ணின் சித்திரங்கள் காஸ்பர் டேவிட் பிரெட்ரிக் உள்ளிட்ட பல கலைஞர்களால் அப்போது வரையப்பட்டன.
1816 -ம் ஆண்டு ஜூன் நடுப்பகுதியில் கடுங்குளிரினால் மேரி, பெர்சி ஷெல்லி, கவி பைரன் மற்றும் மற்ற இரு நண்பர்கள் சுவிட்சர்லாந்தில் சிக்கிக்கொண்டனர். அப்போது நேரம் போக்குவதற்காக பைரன் ஒவ்வொருவரும் ஒரு படைப்பை எழுதலாம் எனப் பரிந்துரைத்தார், அதுவே மேரி ஷெல்லி பிராங்கன்ஸ்டீனை உருவாக்கவும் பைரன் டார்க்னஸ் என்னும் புகழ்பெற்ற துன்பியல் கவிதையை எழுதவும் காரணமாக அமைந்தது.
ஜெ.எம்.டபிள்யு டர்னரின் அக்காலத்தைய ஓவியங்களில் சிவப்பு நிறம் அதிகமாக இருந்தது.
தாம்போரா மலை வெடிப்பு இந்தியத் துணைக் கண்டத்திற்கு கிழக்கே உள்ள வங்காள விரிகுடாவின் சுற்றுச்சூழல் நிலைமைகளையும் சூழலியலையும் பாதித்தது, இதனால் வங்காளத்தில் காலராத் தொற்று ஏற்பட்டது. இந்த நோய் விரைவாகப் பரவி, 1823 வரை நீடித்த உலகளாவிய தொற்றுநோயில் பல கோடி மக்கள் உயிரிழந்தனர். சென்னையில் கடும் கோடையில் மழைப்பொழிவும் பனியும் உண்டானது.
கிழக்கு ஆசியா முழுவதிலும் பருவமழைக் காலம் பாதிக்கப்பட்டது. சீனாவின் யுனான் மாகாணத்தில் விளைச்சல் காலம் முழுவதும் வெள்ளம் மற்றும் குளிர்ந்த வானிலை நிலவியதால் 1815-1818 வரை மூன்று ஆண்டுகள் கொடிய பஞ்சம் நிலவியது.
யுனான் பஞ்சத்திற்குப் பிறகு, பணப்பயிர்கள் அழிந்ததால் பல உள்ளூர் விவசாயிகள் பாப்பிச்செடிகளை விளைவிக்கத் தொடங்கினர். பின்னர் யுனான் மாகாணம் உலகின் முக்கிய அபின் உற்பத்தி செய்யும் பகுதியாக மாறியது.
தாம்போரா மலை வெடிப்பு வட அமெரிக்கக் கண்டத்தில் வறட்சியை ஏற்படுத்தியது, அதனால் அட்லாண்டிக் பெருங்கடலில் நுழைந்த நன்னீரின் அளவு குறைந்தது. இது நீரின் உப்புத்தன்மையால் இயக்கப்படும் கடலோட்டங்களை பாதித்தது, இதனால் வடக்கு பெருங்கடல் தற்காலிகமாக சூடாகி அட்லாண்டிக் பெருங்கடல் குளிர்ந்தது.
பயிர்கள் முற்றிலும் அழிந்ததால் சுவிட்சர்லாந்தில் உண்பதற்கு பூனை இறைச்சி மட்டுமே எஞ்சியிருந்தது,
நெப்போலியன் போர்கள் முடிவுக்கு வந்திருந்த காலத்தில் உண்டான தம்போரா வெடிப்பு ஐரோப்பாவில் பெரும் அழிவை ஏற்படுத்தியது. ஆண்டுக்கணக்காக தொடர்ந்த கடும் குளிர், பெருமழைக்காலங்கள் மற்றும் பனியினால் ஐரோப்பாவில் கோதுமை, ஓட்ஸ், புல்லரிசி விளைச்சல் முழுவதும் இல்லாமல் போய் பட்டினியும் கலவரமும் கொள்ளைகளும் நடந்தன. உணவின்றி ஏராளமான கால்நடைகளும் மடிந்தன. லட்சக்கணக்கானோர் நாடுவிட்டு உணவுக்காகவும் உயிர் வாழ்வதற்காகவும் புலம்பெயர்ந்தார்கள். பலர் தங்களைத்தாங்களே அடிமைகளாக விற்றனர். இந்த நிலைமை 1819 வரை தொடர்ந்தது.
இந்த நிகழ்வு உலக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்ததோடு உணவு உற்பத்தி முறைகளில், சமூக அமைப்புகளில் மாற்றமேற்படுத்தி இலக்கிய மற்றும் கலை வெளிப்பாடுகளிலும் தாக்கம் உண்டாக்கியது. தம்போரா வெடிப்புச் சுற்றுச்சூழல் அமைப்புகளின் மீது மிக ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது.
எரிமலை வெடிப்பினால் உண்டான மிக நேரடியான விவசாய நெருக்கடிக்கு வரலாறு 1816-ன் கோடையில்லா ஆண்டை உருவாக்கிய தம்போரா வெடிப்பையே உதரணமாகக் காட்டுகிறது.
தொடர்ந்த ஆண்டுகளில் இந்த நெருக்கடியினால் உண்டான உணவுப் பாதுகாப்பின்மையை களையும் பொருட்டு ஐரோப்பா முழுவதும் விவசாய வழிமுறைகள் மேம்படுத்தப்பட்டு பல புதிய முன்னெடுப்புகளும் மசோதாக்களும் உருவாகின.
அச்சமயத்தில்தான் ஐரோப்பாவில் குப்பை மட்குரமான ஹ்யூமஸ் மண் வளத்தை அதிகப்படுத்துவதை கண்டறிந்து அது தொடர்பான ஆராய்ச்சிகள் துரிதப்படுத்தப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஐரோப்பா முழுவதும் வேளாண் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டு மண்வளத்தை, பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கச் செய்யும் ஆய்வுகள் தீவிரப்படுத்தப் பட்டன,
19-ம் நூற்றாண்டில் குப்பை மட்குரமான ஹ்யூமஸ் என்னும் சொல் ஐரோப்பாவெங்கும் மிக அதிகமாக புழங்கியதற்கு தம்போரா உருவாக்கிய பேரழிவு ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது.
“Humus” என்னும் கிரேக்க வேர்களைக்கொண்ட லத்தீனச்சொல்லுக்கு பூமி, நிலம், மண் எனப் பலபொருட்கள் உள்ளன. மனிதர்கள், மண்ணில் வாழ்கிறவர்கள் என்னும் பொருள் கொண்ட இந்திய ஐரோப்பிய வேர்களைக் கொண்டிருக்கும் “Homo” என்பதுவும் இதனோடு இணைந்த சொல்தான்.
மண்ணிலிருந்து தோண்டி எடுத்தல் என்பதைக் குறிக்கும் Exhume மற்றும் மண்ணில் புதைக்கப்பட்ட பிற்பாடு என்பதைக் குறிக்கும் Posthumous ஆகிய சொற்களும் ஹ்யூமஸுடன் இணைந்தவைகளே.
18-ம் நூற்றாண்டின் இறுதியில் நிலத்தில் இருக்கும் தாவர மற்றும் விலங்குப் பொருட்களின் சிதைவால் உருவான, ஊட்டச்சத்துக்களும் நுண்ணுயிரிகளும் நிறைந்த, மண்ணில் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் மண்ணில் உள்ள கரிமப் பொருளுக்க மட்கு, மட்குரம், குப்பைமட்குரம் என்பவற்றைக் குறிக்கும் “Humus” என்ற ஆங்கிலப் பெயர் 18-ம் நூற்றாண்டின் இறுதியில் உருவாகி 1790-களில் விவசாய மற்றும் தாவரவியல் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள், நூல்களில் இடம்பெற்றது.
எனினும் மட்குரங்களினால் மண்வளம் மேம்படுத்தப்படுவதில் தீவிரமான ஆய்வுகள் தம்போரா வெடிப்பிற்குப் பிறகான உணவுப் பற்றாக்குறையின் போது ஐரோப்பா முழுக்க நடைபெற்றபோதுதான் Humus என்னும் சொல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது.
பண்டைய மெசபடோமிய, எகிப்திய சீன, மற்றும் இந்திய வேளாண் நாகரிகங்கள் சாணம், மற்றும் தாவரக் கழிவுகளைச் சேர்ப்பதால் பயிர் விளைச்சல் மேம்படுகிறது என்பதை அறிந்திருந்தனர்.
ஹ்யூமஸ் என்கிற மட்குரத்தின் வேதியியல் குறித்து அவர்கள் அறியாவிட்டாலும், மண் வளத்தைப் பராமரிக்க கழிவுகளைச் சேர்த்தல் மற்றும் பயிர் சுழற்சி ஆகியவற்றை நடைமுறைப்படுத்தினர்.
ரோமானிய எழுத்தாளர்களான கொலுமெல்லா மற்றும் பிளினி ஆகியோர் சாணம் மற்றும் சாம்பல் மூலம் மண்ணை வளப்படுத்தும் முறைகளைப் பற்றி எழுதினர்.
5,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்திய வேளாண்மை, இயற்கையாக மண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை வலியுறுத்தியது.
சுரபாலரால் எழுதப்பட்ட விருக்ஷாயுர்வேதம், கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம், 12-ம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட அபிலா சிதார்த்த சிந்தாமணி என்கிற மனஸோல்லாசா போன்ற பண்டைய இந்திய நூல்கள் உரம், தாவரக் கழிவுகள் மற்றும் கழிவுகளை உரமாக்கும் முறையின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டன.
சீன விவசாயிகள் பசுந்தாள் உரமிடும் முறையைப் பின்பற்றினர். ரோமானியர்கள் விலங்குச் சாணத்தையும், மூடுபயிர்களையும் பயன்படுத்தி மண் வளத்தை அதிகரிக்கலாம் என அறிந்திருந்தனர்.
இடைக்காலத்தில் பொதுமக்களின் அறிவுக்கு எட்டாத வகையில் மடாலயங்களில் மட்டும் மேம்படுத்தபட்ட வேளாண் அறிவு பாதுகாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
விவசாய நிலங்களில் மண்ணை வளமாக்கும் கழிவுப்பொருட்கள் திரட்டப்பட்டன என்றாலும் அதற்கான அறிவியல் புரிதல் அப்போது குறைவாக இருந்தது.
அக்காலகட்டத்தில் இந்தியாவில் விவசாயிகள் இயற்கை உரங்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். மண் பராமரிப்பு என்பது வாய்வழியாகவும் விவசாயிகளின் அனுபவ அறிவு மூலமாகவும் கடத்தப்பட்டது. பயிர்களின் விளைச்சல் மற்றும் வருவாயைப் பராமரிக்க விவசாயிகளை மன்னர்கள் மற்றும் ஜமீந்தார்கள் ஊக்குவித்தனர்.
கிருஷி-பராசரா போன்ற பிராந்தியக் கையேடுகள் மற்றும் கட்டுரைகள் இந்திய வேளாண்மையில் இயற்கை வேளாண் முறைகளை வலியுறுத்தின.
பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் (1757–1947) பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வணிக ஒற்றைப் பயிர்களான அவுரி, பருத்தி, தேயிலை ஆகியவற்றை அறிமுகப்படுத்தினர்.
அப்போது இந்திய வேளாண் முறை பாரம்பரிய உயிரியல் முறையிலிருந்து விலகி, ரசாயனங்கள் உபயோகிக்கப்பட்டு பல பகுதிகளில் மண் சோர்வுக்கு வழிவகுத்தது.
அச்சமயத்தில்தான் இந்தியாவில் பணியாற்றிய ஆங்கில தாவரவியலாளர் சர் ஆல்பர்ட் ஹோவர்ட் கழிவுகளை உரமாக்கி மண் வளத்தை அதிகப்படுத்துதலுக்கு முன்னுரிமை அளித்து மண் வளத்தைக்காக்கும் ஆய்வுகளை முன்னெடுத்தார்.
சுதந்திரத்திற்குப் பிந்தைய காலமான 1947–1980களில் பசுமைப் புரட்சி உருவாகி ரசாயன உரங்களையும் அதிக விளைச்சல் அளிக்கும் கலப்பின பயிர்களையும் அறிமுகப்படுத்தியது.
இந்திய வேளாண்மையின் கவனம் செயற்கை உரங்களின் பயன்பாட்டுக்கு மாறியதால் மட்குரம் மற்றும் உயிரி உரங்களில் இருந்து கவனம் குறைந்தது.
அதிக அளவிலான ரசாயன வேளாண்மை,மண் கரிம கார்பன் குறைப்பு,மண் சிதைவு மற்றும் பாரம்பரிய வேளாண் அறிவின் இழப்புக்கு வழிவகுத்தது. விளைவாக வேளாண் உற்பத்தித்திறன் அதிகரித்தாலும், நீண்டகால மண் ஆரோக்கியம் மற்றும் பல்லாண்டுகளாக உருவாகி வந்த குப்பை மட்குரத்தின் அளவு வெகுவாகக் குறைந்தது.
1990 களில் இருந்து தற்போதைய நவீன வேளாண் காலம் வரை சுபாஷ் பாலேகர் மற்றும் நம்மாழ்வார் போன்றோரால் உயிரியல் வேளாண்மை, இயற்கை வேளாண்மை முறைகள் மீட்டெடுக்கும் முயற்சிகள் தீவிரமடைந்திருக்கின்றன
அறிவியல் புரட்சி நிகழ்ந்த 17ம்-18ம் நூற்றாண்டுகளில்தான் “ஹியூமஸ்” என்ற சொல் இலத்தீன் மொழியிலிருந்து வந்தது.
1761-ல் வாலேரியஸ் ஹ்யூமஸ் என்கிற குப்பை மட்குரத்தை மண்ணின் ஒரு அங்கமாக அல்லாது மண்ணின் தனித கூறாக அங்கீகரித்தார். இவர் ஹ்யூமஸை “சிதைந்த இயற்கைக்கரிமப் பொருள்” என்று வரையறுத்தார். ஆனால் அந்த நேரத்தில் ஹ்யூமஸின் வேதியியல் தன்மை பற்றிய அறிதல்கள் தெளிவற்று இருந்தன. இருப்பினும், வாலேரியஸின் பங்களிப்பு பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளின் இறுதியில் வளர்ந்து வந்த அறிவியல் முறைகளால் சோதிக்கக்கூடிய கருதுகோள்களை வழங்கியது.
18-ம் நூற்றாண்டைச்சேர்ந்த ஜெத்ரோ துல் (1674 –1741,) மண் தாவர வளர்ச்சிக்கு ஒரு ஊடகம் மட்டுமே, தாவரங்கள் நீரில் கரைந்த ஊட்டச்சத்துக்களை மட்டுமே உறிஞ்சுகின்றன என்று அறிவித்து ஹ்யூமஸின் பங்கை குறைத்து மதிப்பிட்டார்.
ஜெர்மனியைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி ஆல்பிரெக்ட் தேயர் (1752-1828) ஹ்யூமஸை மண்வளத்திற்கான முதன்மை ஆதாரமாக மீண்டும் வலியுறுத்தினார், ஹ்யூமஸ்தான் தாவர ஊட்டச்சத்தின் முதன்மை ஆதாரம் என்று வலியுறுத்தினார். இதுவே “ஹ்யூமஸ் கருதுகோள்” என்று அழைக்கப்பட்டது.1809-ல் மட்குரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ‘’புத்திசாலித்தனமான வேளாண்மையின் கோட்பாடுகள்’’ என்ற நூலையும் அவர் வெளியிட்டார்.
இந்த கருதுகோள் அதிக கரிமப் பொருள் இருப்பு மற்றும் அதிக மண் வளம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளுக்கான விளக்கத்தை உருவாக்கிய ஆரம்ப முயற்சியாகப் பார்க்கப்பட்டது.
தொடர்ந்த ஆண்டுகளில் ஹ்யூமஸின் கார்பன், தாவரங்களுக்கு முக்கியமான கார்பன் ஆதாரம் என்று அறியப்பட்டது, ஜெர்மானியத் தாவரவியலாளர் ஸ்ப்ரெங்கல் (1787–1859) 1826-ல் ஹ்யூமஸில் உள்ள கரையக்கூடிய உப்புகள்தான் உண்மையான ஊட்டச்சத்துக்கள் என்பதை நிரூபித்தார்
19-ம் நூற்றாண்டின் மத்தியில் ஹ்யூமஸ் கோட்பாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தது.
வேளாண்மையில் ரசாயன புரட்சி உண்டான இக்காலகட்டத்தில் ஜெர்மன் வேதியியலாளர் ஜஸ்டஸ் வான் லீபிக் (1803 – 1873) 1840 களில் மண் அறிவியலை புரட்சிகரமாக மாற்றினார். இவர் தாவரங்கள் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவற்றைப் போல் மண்ணிலிருந்து நேரடியாக ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகின்றன, ஹ்யூமஸிலிருந்து நேரடியாக அல்ல என்பதை நிரூபித்தார். இவரே நவீன வேளாண் வேதியியலுக்கான அடித்தளத்தை அமைத்தார்.
இவர் ஹ்யூமஸ் மண்ணின் இயல்புகளை மேம்படுத்துகிறது மற்றும் ஊட்டச்சத்துக்களைத் தக்கவைக்கிறது என்பதை நிரூபித்தார், ஆனால் அது நேரடியாக தாவர உணவல்ல என்பதையும் காட்டினார்.
இவரது ஆய்வு முடிவுகள் வேதியியல் உரங்களின் மீது கவனம் செலுத்த வழிவகுத்தது, ஆனால் மண் ஆரோக்கியத்திற்கு ஹ்யூமஸ் முக்கியமானதாக இருந்ததென்பதை அவர் மறுக்கவில்லை.
அவரது ஆய்வுகள் ஹ்யூமஸ்:
மண்ணின் பல்வேறு இயல்புகளை மேம்படுத்துகிறது
நீர் தக்கவைப்பை அதிகரிக்கிறது
மண் pH ஐ சமநிலைப்படுத்துகிறது
நுண்ணுயிர் செயல்பாட்டை ஆதரிக்கிறது என்பதை நிறுவின.
இவரது ஆய்வு முடிவுகள் பெருமளவில் வேளாண் மாற்றங்கள் உருவாக்கி, செயற்கை உரங்களின் வளர்ச்சி மற்றும் பரவலான பயன்பாட்டுக்கு வழிவகுத்ததால், வேளாண்மை உயிரியல் முறைகளிலிருந்து விலகி ரசாயன அடிப்படியிலானது. பயிர் விளைச்சல் அதிகரித்தது, ஆனால் நீண்டகால அதிகபட்ச ரசாயனப் பயன்பாடு மண் சிதைவுக்கு வழிவகுத்தது.
19-ம் நூற்றாண்டின் இறுதிகளில் ரஷ்ய புவியியலாளரும் மண் அறிவியலின் அடித்தளங்களை அமைத்த பெருமைக்குரியவருமான வாசிலி வாசிலியேவிச் டோகுசேவ் (1846–1903) தீவிரமான களப்பணிகளுக்குப் பின்னர் மண்ணை வகைப்படுத்தினார். இவரது பங்களிப்பு மண் உயிரியல் ஆய்வுகளில் மிக முக்கியமானதாக இருந்தது
அதே காலகட்டத்தில் அமெரிக்க நவீன மண் அறிவியலின் தந்தையான யூஜின் வோல்ட்மர் ஹில்கார்ட் (1833 – 1916) தனது மண் வளம் குறித்த விரிவான ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். மண் வேதியியலில் இவரது பங்களிப்பு உலகளாவிய கவனம் பெற்றது.
இவற்றைப்போன்ற 20- ம் நூற்றாண்டின் மண் நுண்ணுயிரியல் ஆராய்ச்சிகள் ஹ்யூமஸின் பங்களிப்பை மறுமதிப்பீடு செய்தன. ஹ்யூமஸ் நேரடி தாவர உணவல்ல என்றாலும் மண்ணின் இயல்புகளை மேம்படுத்துதல், ஈரப்பதத்தைத் தக்கவைத்தல், நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளுக்கு உணவளித்தல் ஆகிய மிக முக்க்கியமானவற்றைச் செய்கிறது என்பது கண்டறியப்பட்டது.
மண் நுண்ணுயிரிகளின் கண்டுபிடிப்பு ஹ்யூமஸ் எவ்வாறு ஆரோக்கியமான மண் சூழலமைப்பை உருவாக்குகிறது என்பதை வெளிப்படுத்தியது.
1950 களின் நடுப்பகுதியில் சர் ஆல்பர்ட் ஹோவர்ட் உள்ளிட்டவர்களால் தலைமை தாங்கப்பட்ட உயிரியல் வேளாண்மை இயக்கத்தினால் கழிவுகளை உரமாக்கல், குப்பைமட்குரம், மற்றும் இயற்கை மண் வளம் ஆகியவற்றின் மீதான ஆர்வம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
20- நூற்றாண்டின் இறுதிகளில் யூத அமெரிக்க கண்டுபிடிப்பாளர், உயிர்வேதியியளாலர், மற்றும் நுண்ணுயிரியலாளரான செல்மன் ஆபிரகாம் வாக்ஸ்மேன் (Selman Waksman) (1888-1973) மண்ணில் வாழும் உயிரினங்களின் சிதைவு குறித்த ஆராய்ச்சியின் போது ஸ்ட்ரெப்டோமைசின் உள்ளிட்ட பல நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் கண்டுபிடித்தார். இவரே “மண் நுண்ணுயிரியல்” என்ற சொல்லை உருவாக்கினார், இவரது ஆய்வு மட்குரங்கள் மண் வளத்தில் உண்டாக்கும் தாக்கம் பற்றிய பெரும் புரிதலை அளித்தது.
ஆங்கிலேய தாவரவியலாலரும் இயற்கை வேளாண்மையின் தந்தை எனக் கருதப்படுபவருமான சர் ஆல்பெர்ட் ஹோவர்ட் (1873 – 1947) இந்திய விவசாயிகளுடன் தங்கி இருந்து மட்குரம் குறித்த பல ஆய்வுகளின் கண்டுபிடிப்புக்களை வெளியிட்டார், அவர் இந்திய பயிர் நோயியலில் பெரும் பங்காற்றினார்.
மட்குரங்களால் மண்வளம் பெருகுவதை நிரூபித்தவர்களில் இவர் மிக முக்கியமானவர். இந்தியாவின் மத்திய பிரதேச, இந்தூரில் உள்ள பாரம்பரிய இந்திய வேளாண் முறைகளை ஆய்வு செய்தார். இந்தூர் கழிவுகளை உரமாக்கும் முறையை உருவாக்கினார்.ஆரோக்கியமான மண்ணுக்கு ஹ்யூமஸ் கட்டுமானம் அவசியம் என்று வலியுறுத்தினார். “அன் அக்ரிகல்சரல் டெஸ்டமெண்ட்” (1940) என்ற நூலை எழுதி உலகளாவிய உயிரியல் வேளாண்மையை வலியுறுத்தினார்.
இதன் விளைவாக இந்திய பாரம்பரியக் கழிவுகளை உரமாக்கும் முறைகள் உலகளாவிய நவீன மட்குரத்தின் அடிப்படையிலான உயிரியல் வேளாண்மைக்கு பங்களித்தது. இக்காலகட்டதுக்குப் பிறகே உயிரியல் வேளாண்மை பிரபலமடைந்து மண் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
21-ம் நூற்றாண்டின் சுற்றுச்சூழல் நெறிமுறைகள், நீடித்த வேளாண்மை, காலநிலை எதிர்ப்புத்திறன், மற்றும் கார்பன் சேமிப்பிற்கு குப்பை மட்குரம் மிக அவசியம் எனக் கருதுகிறது.
நவீன மண் அறிவியல் ஹ்யூமஸை மண் நுண்ணுயிரியல், கார்பன் சுழற்சி, மற்றும் காலநிலையோடு இணைந்து செயல்படும் வேளாண்மைக்கு அத்தியாவசியம் என்கிறது
நிலத்தின் மேற்பரப்பில் தான் இந்த மட்குதல் என்னும் செயல் நுண்ணுயிரிகளால் நடைபெறுகிறது. குப்பை மட்குரமான ஹ்யூமஸ் உருவாகும் நிகழ்வு ஹ்யூமிஃபிகேஷன் (Humification) எனப்படுகிறது
ஹ்யூமிஃபிகேஷன் என்பது இறந்த உடல்கள் அழுகி மட்குதல் என்னும் செயல்பாட்டின் (decomposition) ஒரு பகுதியாகும். இது மண்ணில் உள்ள உயிரினங்களின் சடலங்கள் மற்றும் செடியின் கழிவுகள் மண்ணில் விழுந்து அழிந்தபின்பு நிகழும் ஒரு முக்கியமான நிலை.
ஹ்யூமிஃபிகேஷன் செயல்முறை:
முதலில், செடி மற்றும் விலங்குகளின் சடலங்கள் மண்ணில் விழுகின்றன.
இவைகள் பாக்டீரியா, பூஞ்சைகள் போன்ற சிதைக்கும் நுண்ணுயிரிகளின் (decomposers) மூலம் சீரான முறையில் நொறுக்கப்படுகின்றன.
இதனால், கார்பன், நைட்ரஜன் போன்ற மூலக்கூறுகள் சிதைவடைகின்றன.
இதன் பின், மிகக் குறைவாக முற்றிலும் சிதைவடையாத கழிவுகள் மண்ணிலேயே இருந்து விடுகின்றன – இதுவே ஹ்யூமஸ் எனப்படும் குப்பை மட்குரமாகிறது.
ஹ்யூமஸ் என்பது கருமை நிறமுடைய, நைட்ரஜனும் கார்பனும் நிறைந்த ஒரு சீரான இணைபொருள். இது மண்ணின், காற்றோட்டம், ஈரப்பதம், நீரைத் தக்கவைத்துக்கொள்ளும் இயல்பு மற்றும் வளத்தை மேம்படுத்துகிறது. ஹ்யூமிஃபிகேஷன் மிக மெதுவாக நடக்கும் ஒரு இயற்கை செயல்முறை ஆகும், மட்குரம் உருவாக பல ஆண்டுகளாகும்.
அனைத்து குப்பை மட்குரங்களும் ஒன்று போல் இல்லை. மண் அறிவியலில், மட்குரங்கள் மண்ணில் அது நீடித்திருக்கும் காலத்தின் அடிப்படையில் இரண்டாக வேறுபடுத்தப்படுகிறது.
ஊட்டச்சத்து மட்குரம் என்பது மண் உயிரினங்களால் விரைவாக நுகரப்படும் உயிரியல் பொருட்களைக் கொண்டுள்ளது.
மாறாக, நிரந்தர மட்குரம் என்பது உடைக்கப்படுவதற்கு கடினமான ஹியூமிக் பொருட்களால் ஆனது, இது மெதுவாக அழிக்கப்பட்டு மண்ணில் நீண்ட காலம் தங்கி இருக்கிறது. இந்த மட்குரம்தான் ஊட்டச்சத்துக்களையும் நீரையும் பிணைத்து வைத்து, வளமான மட்குர மண்ணின் உயிரியல் கட்டமைப்பின் சுமார் 90 சதவீதத்தை உருவாக்குகிறது.
நிரந்தர மட்குரம் நிறைந்த மண் ’களிமண்-மட்குரம்’ தொகுப்புகளால் செழித்துக் காணப்படுகிறது. மட்குரப் பொருட்கள் மற்றும் களிமண் தாதுக்களுக்கு இடையேயான பிணைப்பானது மண் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டால் உருவாக்கப்படுகிறது.
நிரந்தர மட்குரம் தாவரங்களின் வேர்களுக்கருகே எப்போதும் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை கிடைக்கச் செய்கிறது. குப்பை மட்குரம் இல்லாத மண்ணில், இந்த தொகுப்புகள் பெரும்பாலும் இல்லை. எனவே உரமிடல் மூலம் மண்ணுக்கு சேர்க்கப்படும் ஊட்டச்சத்துக்கள் பெரும்பாலும் தாவரங்களால் பயன்படுத்தப்படாமல் நீர்மட்டத்தில் இறங்குகின்றன, இதனால் தாவரங்கள் பலவீனமடைந்து நோய்க்கு ஆட்படுகின்றன.
பூமியின் மேற்பரப்பில் கிடைக்கக்கூடிய 4-12 அங்குல குப்பை மட்குரம் கொண்ட மண் எனும் விலைமதிப்பற்ற வளம் கவனமாக பாதுகாக்கப்பட வேண்டி இருக்கிறது.
ஒவ்வொரு தாவரமும் மண்ணில் வளர்ந்து பின்னர் அறுவடை செய்யப்படுகையில் மண் கணிசமான அளவில் ஊட்டச்சத்துக்களையும் மட்குரத்தையும் இழக்கிறது. காடுகள் மட்டுமே தங்கள் நுகர்வை விட அதிக மட்குரத்தை உருவாக்க முடியும். மற்ற அனைத்து மண்ணும் தொடர்ந்து மட்குரத்தை இழக்கிறது.
உலகெங்கிலும் உள்ள விளைநிலங்களில் ஏற்கனவே மட்குரம் குறைவாக உள்ளது, அதாவது குறைந்த 1 முதல் 2 சதவீதம் அல்லது மிகக் குறைந்த < 1 சதவீதம்.
எனவே, நமது விளைநிலங்களில் இருக்கும் மட்குரத்தை பாதுகாப்பது மட்டும் போதாது. உலகளாவிய மட்குர அளவுகளை அதிகரிக்கக் கூடிய வகையில் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றால், மட்குர மேலாண்மை மற்றும் மண்ணின் உயிரியல் அமைப்பு பற்றிய ஆழமான புரிதல் தேவைப்படுகிறது.
விளைநிலங்களில் மட்குரத்தை பெறுவதற்கான எளிய முறை உயிரியல் கழிவுகளை திரட்டிச்சேகரிப்பது, ஊடு பயிர்கள் மற்றும் துணைப் பயிர்களின் பயிரிடல், உயிரி உரங்களின் சீரான விநியோகம் மற்றும் நிலத்தைத் தரிசாக விடுவதை தவிர்த்தல் ஆகியவை அடங்கும். நிரந்தர மட்குர உருவாக்கத்தில் ஹ்யூமிக் அமிலங்களைப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்க பயனை அளிக்கும்.
ஹியூமிக் அமிலங்கள் மட்குரம் நிரம்பிய மண்ணில், பீட், கடல்நீர் மற்றும் லியோனார்டைட் என்று அழைக்கப்படும் மென்மையான லிக்னைட்டில் காணப்படுகின்றன. அதிக ஆக்சிஜனேற்றம் அடைந்த லியோனார்டைட்டிலிருந்து பெறப்படும் ஹ்யூமிக் அமிலங்கள் பாரம்பரிய ஆதாரங்களிலிருந்து பெறப்படும் ஹ்யூமிக் அமிலங்களை விட ஐந்து மடங்கு அதிக உயிரியல் செயல்பாட்டைக் கொண்டுள்ளன.
மண்ணில், ஹ்யூமிக் அமிலங்கள் பயிர்களின் தாவர வளர்ச்சி மற்றும் வேர் வளர்ச்சியை மேம்படுத்துவதன் மூலமும், விரும்பத்தக்க மண் நுண்ணுயிரிகளின் பெருக்கத்தை தூண்டுவதன் மூலமும் மட்குர உருவாக்கத்தைத் தூண்டுகின்றன. அவை தேவையான களிமண்-ஹ்யூமஸ் தொகுப்புகளின் உருவாக்கத்தை செயல்படுத்தி நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை பிணைத்து வைத்து, தேவைப்படும்போது தாவரங்களுக்கு அளிக்கின்றன.
மண்ணில் ஒரு சதவீதம் மட்குர அதிகரிப்பு ஒரு ஹெக்டேருக்கு 170,000 லிட்டர் அதிக நீர்த் தக்கவைப்புத் திறனை வழங்குகிறது, இது வறட்சி எதிர்ப்புத்தன்மை மற்றும் நீர் பாதுகாப்பில் ஹ்யூமஸின் முக்கியமான பங்கை நிரூபிக்கிறது.
மண் கட்டமைப்பை மேம்படுத்துதல், ஊட்டச்சத்துக்களை சேமித்தல், நீர் வளங்களை நிர்வகித்தல், கார்பனை தக்கவைத்தல், மற்றும் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளுக்கான வாழ்விடமாக செயல்படுவது- ஆகிய ஐந்து முக்கிய செயல்பாடுகள் மூலம் ஹ்யூமஸ் வேளாண்மையில் மிக முக்கியப்பங்காற்றுகிறது
கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் நாம் ஹியூமஸின் இருபங்கை இழந்திருப்பது வேளாண்மை நடைமுறைகளை மறுகட்டமைப்புச் செய்யவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
வேளாண் அறிவியல் ஹ்யூமஸின் சிக்கலான மூலக்கூறு கட்டமைப்புகள் மற்றும் தொடர்புகள் பற்றிய நமது புரிதலை ஆழப்படுத்திக் கொண்டிருக்கிறது என்றாலும் நமது உணவுப்பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டிருக்கிறது என்னும் உண்மை நம் முன்னே தெளிவாக உள்ளது.
குப்பை மட்குரத்தின் முக்கியத்துவம் வெறும் மண் சேர்ப்புப் பொருள் என்பதற்கும் அப்பால் நீண்டு விரிகிறது, மீட்டெடுக்கப்பட்டிருக்கும் பாரம்பரிய வேளாண் முறைகளும் புதிய ஆராய்ச்சிகளும் ஹ்யூமஸ் நிறைந்த மண்ணை உருவாக்கி வேளாண் உற்பத்தித்திறனை மாற்றுவதற்கான அற்புதமான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தியுள்ளன.
எதிர்காலத்தில் உலக உணவுப்பாதுகாப்பு பெரும் அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும். மக்கள் தொகைப் பெருக்கத்தினாலும் விளைநிலப்பற்றாக்குறையாலும் உணவுக்கான தேவை அதிகரிப்பது, முக்கிய வேளாண் பகுதிகளில் நீர்வள மூலங்கள் குறைதல், மற்றும் காலநிலை மாற்றத்தின் காரணமாக கடுமையான வானிலை மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு இவை அனைத்தும் இந்த அழுத்தங்களுக்கு காரணமாக இருக்கும்.
இந்த சவால்களை எதிர்கொள்ள பல வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன, அவற்றில் செயல்திறன் குறைந்த நிலங்களில் பயிர் விளைச்சலை அதிகரிப்பதும், வேளாண் வளங்களின் பயன்பாட்டு செயல்திறனை மேம்படுத்துவதும் (அதாவது நீர், உரம் மற்றும் உயிரிப் பூச்சிக்கொல்லிகள்), உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றுவதும், உணவுக்கழிவுகளைக் குறைப்பதும் அடங்கும் இந்த வழிமுறைகள் பயனுள்ளவை என்றாலும், உலக உணவுப்பாதுகாப்பில் ஏற்படும் பாதிப்புக்கு இவை நேரடியாக தீர்வு காணவில்லை.
எனவே மண்ணில் உள்ள ஹ்யூமஸினால் மேம்படும் மண்ணின் வளமென்பது தொடர்ந்து நீடிக்கக்கூடிய மற்றும் உறுதியான வேளாண் அமைப்புகளுக்கான அடித்தளமாக இருக்கிறது.
வேளாண் அறிவியல் தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வளர்ந்து வரும்போதும் மேம்படுத்தப்படும்போதும், ஹ்யூமஸ் வேளாண்மையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மேலும் முக்கியமான பங்கு வகிக்கும். இதன் பொருட்டு ஹியூமஸ் மேலாண்மை உத்திகளில் ஆய்வுகள் தொடர வேண்டியது மிக முக்கியமான தேவையாயிருக்கிறது.
ஹ்யூமஸ் நிறைந்த மண்ணின் மூலம் நாம் நிலத்தின் வளமையை மட்டும் மேம்படுத்தவில்லை உணவுப் பாதுகாப்பிற்கான நாளைய சவால்களை சமாளித்து, எதிர்கால தலைமுறைகளுக்கான சுற்றுச்சூழல் வளங்களைப் பாதுகாத்து, நீடித்த உணவு உற்பத்திக்கான அடித்தளத்தையும் கட்டியெழுப்புகிறோம்.
(தாம்போரா இன்னும் உயிருடன் இருக்கிறது. அதன் கடைசி வெடிப்பு 1967-ல் நிகழ்ந்தது, 2011, 2012 மற்றும் 2013 களில் தம்போரா மெல்ல உறுமியபடி கசிவுகளையும் வாயுக்களையும் வெளியேற்றியது)
சமீபத்தில் ஒரு நிகழ்வுக்காக வெளியூர் சென்றிருந்தேன், விஷ்ணுபுரம் அமைப்பல்லாத நிகழ்வுகளின் நேரமேலாண்மை குறித்து முன்பே அறிந்திருப்பதால் கையோடு லக்ஷ்மி சரவணகுமாரின் பன்றிவேட்டையை எடுத்துச்சென்றிருந்தேன். யூகித்தபடியே குறித்த நேரத்துக்கு 2 மணி நேரம் தாண்டித்தான் விழா தொடங்கியது.
அதுவரை இசைக்கக்சேரி நடந்தது. நான் பன்றிவேட்டையை பொறுமையாக அடிக்கோடிட்டு வாசித்து முடித்துப் பன்றி வேட்டை என்னும் தலைப்புக்குள் லக்ஷ்மி சரவணகுமார் என்னவெல்லாம் சொல்லி இருக்கிறார் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதும் பாடல்கள் இசைக்கப்பட்டன. 2 மணிநேரத்துக்குப்பின்னர் அறிவிப்பாளர் வந்து விழா `குறித்த நேரத்துக்கு` துவங்கவிருப்பதால் அரங்கிற்கு வெளியே இருப்பவர்கள் உள்ளே வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் திகைத்து `சீரியஸ்லி`? என்றது `மன் கி பாத்` என்பதால் அவருக்குக் கேட்கவில்லை.
விழா துவங்கியது. எனக்கு வலது புறம் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியிடம் நல்ல அகடமிக் வாசனை வீசியது. 20 ஆண்டுகால பழக்கத்தில் அந்த வாசனை எனக்கு அத்துப்படி. அவர் என்னிடம் பன்றி வேட்டையைச் சுட்டிக்காட்டி“நீங்க இந்தப் புத்தகத்துக்குத்தான் விருது வாங்கறீங்களா?“ என்று கேட்டார். “இல்லைங்க என் நண்பரின் புத்தகம் இது. நான் எழுத்தாளர் இல்லை கட்டுரையாளர்தான் என் கட்டுரைத்தொகுப்புக்குத்தான் விருது“ என்றேன். “ தமிழ்த்துறையா ஆங்கிலத்துறையா?“ என்றார். “இரண்டும் இல்லை தாவாவியல் துறை“ என்றேன். குழப்பமானார்.
“பின்னே உங்க பேருக்கு முன்னாடி எழுத்தாளர்னு பத்திரிக்கையில் போட்ருக்காங்களே?“ என்றார். அவரை நன்றாக நிமிர்ந்து பார்த்தேன். ஆய்வு மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் தலைக்குக்குளித்து ஜிமிக்கியும் மல்லிகைப்பூவுமாக வருகையில் அவர்களைப்பார்க்கும் பெண் நெறியாளர்களின் (அந்தப்பட்டியலில் லோகமாதேவி இல்லை) கண்களில் தெரியும் அதே உக்கிரம் இருந்தது. அவரை மலையிறக்குவதற்காக “தவறுதலாபோட்டிருப்பாங்கம்மா“ என்றேன். அந்த அம்மா விகுதியும் அவரை எரிச்சலூட்டியதை அவரது உடல்மொழியிலிருந்து அறிந்தேன். பணிஓய்வு பெற்று 20 வருடமானவராதலால் அப்படி அழைக்கும் உரிமையை நானாக எடுத்துக்கொண்டிருந்தேன்.
அமர்ந்திருந்த நாற்காலி மிகச்சிறியதாக, அசெளகரியமாக அமரும்பொருட்டு பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டது என்பதால் முதுகு விண் விண் என்று தெறித்தது. எனக்கே அப்படி என்றால் விழாநாயகரும் பேருடல்கொண்டவருமான …… சரி வேண்டாம் சாமி கண்ணைக்குத்தும்.
எனவே கையில் இருந்த பன்றிவேட்டையையும் போனையும் கட்டிப்பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். “அப்ப இது என்னபுக்கு“ என்று மீண்டும் அவர் கேட்டதும் “இது என் நண்பர் எழுதினது“ என்றேன். “கொடுங்க“ என்றவர் நான் அதைக்கொடுக்க யத்தனிப்பதற்குள் கையிலிருந்து தட்டிப்பறித்தார். என் மனம் தின்னப்பழம் கொண்டு தருவானுக்குத் தாவியது.
அட்டையைத் தடவிப்பார்த்தவர் “ஓ இதுவா நல்லாருக்கும் நான் 50 வருஷம் முன்னாடியே படிச்சுருக்கேன் மறு பிரசுரமா?“என்றார். நான் “இல்லைங்க இது வர வெள்ளிக்கிழமைதான் வெளியாகுது;; என்றேன். “அப்ப உங்களுக்கு மட்டும் எப்படி கிடைச்சுது?“ என்றார். “எழுதினவர் என் நண்பரென்பதால் எனக்கு முன்னாடியே அனுப்பி இருக்காரு“ என்றேன். மீண்டும் பின்னட்டையை தொட்டுத்தடவியவர் “இல்லை இதை நான் வாசிச்சுருக்கேன் அதே புக்தான்“ என்றார்.
அட்டையை வைத்து நூலைஎடைபோடாதே என்று ஆங்கிலத்தில் சொல்லப்பட்டிருப்பதை சார்ந்திருந்த தமிழ்த்துறையினால் அவருக்கு ஒருவேளை தெரிந்துகொண்டிருக்க வாய்ப்பில்லை என்பதால் என் கோபத்தை காட்டிக்கொள்ளாமல் “இல்லைங்க இது சினிமாவா வரப்போற கதை அவர் சினிமாவில் இருக்காரு நிச்சயமா இதை நீங்க படிச்சிருக்க முடியாது“ என்றேன்.அகங்காரம் சீண்டப்பட்டவராக“இல்லை வாசிச்சுருக்கேன் ஒரு காட்டில் நடக்கற பன்னி வேட்டையைப்பத்தித்தான கதை?“ என்றார்.
என்ன சாமர்த்தியம்!! பன்னி வேட்டை காட்டில் நடக்காமல் மும்பை தாஜ் ஹோட்டலிலா நடக்கும்?. சரிங்கம்மா என்று மட்டும் சொல்லிவிட்டு மறக்காமல் புத்தகத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தேன்.
இடதுபக்கம் வந்தமர்ந்த ஒரு பெண் என்னைப்பார்த்து புன்னகைத்து “மேடம் நீங்க——– கல்லூரியின் கரஸ்பான்டென்டா? என்றார். அச்சச்சோ முகத்தில் அத்தனை கடுமையா தெரிகிறது என்று துணுக்குற்று முகத்தை சாந்தமாக்கிக்கொண்டு “இல்லைங்க நான் வெறும் பேராசிரியர்தான்“ என்றேன்.
வலது பக்க அம்மாள் மேடையின் அச்சுபிச்சு நகைச்சுவைக்கெல்லாம் மகிழ்ந்து சிரித்துக்கொண்டும் கூடக்கூட அங்கிருந்தே மேடையில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டுமிருந்தார்.
எனக்கு மூச்சுலகில் தேவனிடம் கேட்கவென்று பல கோரிக்கைகள் இருக்கின்றன. அதில் இன்னார் இன்னாராக இன்னாருக்கு ஆகவேண்டும் என்னும் மறுபிறவிக்கான கோரிக்கைகள் தான் பிரதானமாக இருக்கும். எனக்குத் தனிப்பட்டதாக- எங்கேனும் ஒரு மலைஉச்சியில் நீலமாக மலர்களைச் சொரிந்துகொண்டிருக்கும் ஜகரண்டா மரமாக, தப்பிப்போனால் கணேஷ்பெரியசாமிக்கு மகளாகப் பிறக்கவேண்டும் என்னும் இரண்டுகோரிக்கைகள் தான் இருக்கிறது,
எனக்குத்தெரிந்த ஒருவர் அடுத்த பிறவியில் பின் வீட்டில் இருக்கும், தன் கணவரைச் சட்டைக்காலரோடு கழுத்தை சுவற்றோடு சேர்த்துப்பிடித்து அடி சாத்தும் ஒரு பெண்ணின் கணவராகி விடவேண்டும் என்னும் விருப்பம் என் மன்றாட்டுகளில் அடிக்கடி இடம்பெறுமொன்று.
என்னையே பூமர் என்று சொல்லும் சரணையும் தருணையும் அடுத்த பிறவியில் எப்படியாவது இந்த வலதுபக்க அம்மாளின் மகனாக்கிவிடுங்கள் தேவனே என்று கண்ணீருடன் பிரார்த்தித்துக்கொண்டேன்,
’’என் கிராமத்தில் இருந்து வந்திருக்கும் மதிப்பிற்குரியவரே, உங்களுக்கு கிராமத்தில் நடப்பவை எல்லாம் தெரிந்திருக்கும் தானே? சொல்லுங்கள், நீங்கள் அங்கிருந்து புறப்பட்ட நாளில் என் வீட்டின் பனி படர்ந்த ஜன்னலின் எதிரே இருக்கும் அந்த ப்ளம் மரம் மலர்ந்திருந்ததா?’’
இந்த புகழ்பெற்ற கவிதை சீன ஓவியரும் கவிஞருமாகிய வாங் வெய் எழுதியது.
சீன அரசவையின் உயர் பொறுப்பில் இருந்த வாங் வெய் போர்க்கைதியாக கொண்டு செல்லப்பட்டு சிறைவைக்கப்பட்டு இருக்கையில் எழுதிய கவிதைகளும் கடிதங்களும் உலக பிரசித்தி பெற்றவை. அவற்றிலொன்றுதான் ப்ளம் மரங்கள் மலர்ந்திருந்ததா? என்று கேட்கும் இந்த கவிதை.
வாங் வெய் தன்னிடமிருந்த அரசியல் ரகசியங்கள் எதுவும் போராளிகளுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக செவிடர் போல நடித்துக் கொண்டிருந்தார். வதைக்கு ஆளாகி எதையும் சொல்லாமலிருக்கும் பொருட்டு மருந்துகளை விழுங்கி தன் குரலை சேதப்படுத்திக் கொண்டார்.
பல்வேறு சித்ரவதைகளுக்கிடையிலும் தன்வீட்டின் எதிரே இருந்த ப்ளம் மரம் பூத்ததா என்று கேட்கும் இக்கவிதை சொந்த நிலத்தை பிரிந்து புதியதோர் இடத்தில் வாழும் பழைய நினவுகளின் இனிமையிலும் புதிய இடத்தில் தன்னை பொருந்திக் கொள்ள முடியாத துயருக்கும் இடையே அலைவுறும் ஆன்மாவின் விசும்பல்தான்.
இதைப்போலவே தன் ஈழத்து வீட்டின் ’’முருங்கைப்பூ உதிரும் முற்றம் நமக்கு இனி இல்லை கண்ணே’’ என்று துயர் கொள்ளும் புலம்பெயர் கவிதை ஒன்றுண்டு. போதமும் காணாத போதத்தில் இயக்கத்துக்கு சேரப் போகையிலும் தேமா மரத்தை பார்த்துக்கொள்ள சொல்லி கடிதம் எழுதும் தாயமும் வாங்வெய்யின் மற்றுமோர் வடிவம்தான்
புலம்பெயர் இலக்கியங்கள் அனைத்தும் ‘diasporic war literature’ எனப்படுகின்றன. பண்டைய கிரேக்க மொழியில் Diaspora என்பதற்கு ‘சிதறுண்ட’ என்று பொருள். சொந்த நிலத்தை விட்டு பல்வேறு காரணங்களால் வேறு புதிய பகுதிகளில் தனித்தனியே சிதறுண்டவர்களின் படைப்புக்களுக்கு இதைக்காட்டிலும் பொருத்தமான பெயர் வேறென்ன இருக்க முடியும்? புலம்பெயர் இலக்கியங்கள் உலகெங்குமே இருக்கின்றன என்றாலும் பெரிதும் அவை ஈழத்து புலம்பெயர் படைப்புக்களை குறிப்பதாகவே இருக்கின்றன.
அகரமுதல்வனின் கடவுள் பிசாசு நிலத்தை ஒரு மலைத் தங்குமிடத்தில் ஒரே நாளில் கண்ணீருடன் வாசித்து முடித்தேன். கடவுள் பிசாசு நிலத்திலிருந்து முளைத்த விதைதான் போதமும் காணாத போதம்
இரண்டிலுமே அகரமுதல்வனின் மொழிவன்மை திகைப்பூட்டுவது. இரண்டிலுமே வாழ்வும் தாழ்வும் சரிக்கு சரியான கலவையில் இருக்கும். துயரைச் சொல்லும் அதே மொழியின் வீச்சில் காதலும் சொல்லப்பட்டிருக்கும் படைப்புக்கள் இரண்டுமே
போரை செய்தித்தாள்களிலும் பிற ஊடகங்களிலும் மட்டுமே அறிந்திருக்கும் என் போன்றோருக்கு போதமும் காணாத போதும் காட்டும் அசல் போர்ச்சூழலும் கொடுமையும், துயரமும், வதையும், உயிரிழப்பும் அதிர்ச்சியையும் குற்றவுணர்வையும் ஊட்டுபவை.
போர்ச்சூழல் படைப்புக்கள நாவல், கதை, கட்டுரை, கவிதை, திரைப்படம் என பல வகைகளில் இருக்கின்றன. அனைத்துமே போரின் அழிவை, போரினால் உண்டான இழப்புக்களை, வலியை, புலம்பெயர்தலின் அவலத்தை வலுவாக உணர்வுபூர்வமாக சொல்லி இருப்பவைதான் எனினும் போதமும் காணாத போதத்தில் அகரமுதல்வன் மற்றுமொன்றையும் சொல்லுகிறார்
சமீபத்தில் உறவினர் ஒருவரின் இறப்பு வீட்டிலிருக்கையில் இறந்தவரின் மனைவி அவர்களின் மகளின் பெயரைச்சொல்லி ‘எங்க சித்ரா பெரியவளான பின்னாடி என் விரலைக்கூட தொட்டதில்லியே எஞ்சாமீ’ என்று பெருங்குரலெடுத்து கதறினார். துக்க வீட்டின் பெண்கள் அனைவரும் ஒரு கணம் திடுக்கிட்டனர்.அதை அவர் ஒரு புகாராகத்தான் சொன்னதாக எனக்குப் பட்டது.
கணவனை போரில் இழந்த பெண்களின் உடலின் சமரையும் போதமும் காணாத போதம் சொல்லுகிறது. உடலின் போரில் அமானுஷ்யமாக வெல்லுகிறார்கள் இதில் வரும் யசோவின் அம்மாவைபோன்ற பெண்கள்
ஒவ்வொரு ஞாயிறன்றும் போதமும் காணாத போதம் நள்ளிரவில் வலையேற்றப்படும். அதன் இணைப்பு வரும் வரை உறக்கமின்றி காத்திருந்து வாசித்திருக்கிறேன்.வெண்முரசு வாசித்த நாட்களுக்கு பிறகு போதமும் காணாத போதம் வாசிக்கத்தான் இரவுகளில் உறங்காமல் காத்திருந்தேன்.
வாசித்தபின் உறக்கம் முற்றிலும் நீங்கி பல இரவுகளை கண்ணீரில் கரைத்திருக்கிறேன். பல பத்திகளை தொடர்ந்து வாசிக்க முடியமால் நிறுத்தி நிறுத்தி உணர்வெழுச்சிகளை மட்டுப்படுத்தி பின்னர் வாசித்திருக்கிறேன்.
25 வாரங்கள் வெளிவந்த தொடரின் நூல் வடிவம் இது. நூல்வனம் வெளியீடு. ஒவ்வொரு வாரமும் காத்திருந்து ஏராளமானோர் வாசித்தோம் என்பதை விடவும் போதமும் காணாத போதம் காட்டிய துயரில் பங்கு கொண்டோம் என்றுதான் சொல்லவேண்டும். கண்கள் ஈரமாகாமல் இதை ஒருவரும் வாசிக்கவேயில்லை.
20 வருடங்களுக்கு முன்னர் கணவனை ஆர்மிக்காரர்களிடம் பறிகொடுத்து, பலநூறு இரவுகளை தனிமையில் கழித்த ஒருத்தி சாவிற்கு பின்னர் மகளாய் கலவியின் சுகம் காணும் அந்த உக்கிர இரவை சொல்லும் அத்தியாயம் பல இரவுகளின் உறக்கத்தை தின்றது.
காதலி நறுமுகையுடன் ஊரைவிட்டுசெல்லும் அப்பனிடம் கேட்கப்படும் ‘’சின்னஞ்சிறுசுகளாக இருக்கிறீர்களே’’ என்னும் கேள்விக்கு ’’எங்கள் நாட்டில் எல்லோரும் சீக்கிரம் வளர்ந்து விடுவோம் துவக்கேந்த வேண்டுமே” என்னும் அவன் பதிலில் முடியும் ஒரு அத்தியாயம் தொடர்ந்த பல இரவுகளையும் பல பகல்களையும் தின்று தீர்த்தது
’’தேவனே ஏன் என்னை கைவிட்டீர்’’ என்னும் விவிலிய வரிகளுடன் ஈரோடு கிருஷ்ணன் அவர்களின் மிகபொருத்தமான அணிந்துரை அமைந்து விட்டிருக்கிறது. //போதமும் காணாத போதம் ஈழத்தின் ஆழத்துக்குள் சென்று துழாவும் பலமுள் தரித்த பாதாளக்கரண்டி// என்னும் கிருஷ்ணனின் வரிகளுக்கு மேலாக இந்நூலை குறித்து மேலதிகம் யாரும் சொல்லமுடியாது.
ஈரோடு கிருஷ்ணனின் அணிந்துரையை வாசிக்கையில் யூத வதை முகாமின் சுவற்றில் யாராலோ எழுதப்பட்டிருந்த ‘’ கடவுள் என ஒருவர் இருப்பாராயேனால் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டு இறைஞ்ச வேண்டும்’’ என்னும் வாசகம் நினைவுக்கு வந்தது.
என்ற ஆரூரனின் கேள்வியை இந்த வாசகத்துடன் இணை வைக்கலாம்.
’’உலகம் போற்றும் மனுஷத்துவம் முகம் குப்புற நந்திக்கடலில் வீழ்ந்துகிடந்தது’’ என்னும் அகரமுதல்வனின் ஒருவரியின் நீட்சிதான் மொத்த நூலும்.
போதமும் காணாத போதம் காட்டும் மனிதர்கள் ஒவ்வொருவரும் மிக தனித்துவமானவர்கள். போரென்பதை ஊடகங்களில் மட்டும் அறிந்திருக்கும் நமக்கெல்லாம் அவர்களில் ஒருவரைக்கூட சந்திக்க சாத்தியமில்லை.
அஞ்சு இன்ச் ஷெல் விழுந்ததில் தலையில் பள்ளமுண்டான ஒருவரை நாம் ஒருபோதும் பேருந்துப் பயணமொன்றில் சந்தித்திருக்க மாட்டோம்தானே? துயிலில்லத்தின் விதைகுழிகளை தயார் செய்ய ஊதியம் வேண்டாமென மறுக்குமொருவரை கற்பனையிலும் கண்டதில்லை நாம்
அது போலத்தான் நாலே நாளில் பங்கரை உருவாக்கியது சாதரணமாக உரையாடலில் பேசப்படுமொன்று என்பதயும் நாமறிந்திருக்கமாட்டோம். ஏனெனில் பங்கர்கள் அவர்களின் அன்றாட வாழ்வில் இணைந்திருந்தவை.
வியட்நாம் பெரியப்பா, வீரன், செவிடன் ரத்தினம், கிபிர் அடிச்சு வீரச்சாவடையும் மேஜர் பகீரதன் , புன்னகையுடன் வன்கவர் படையினரிடம் ’’அரசனுடையதை அரசனுக்கும் கடவுளுடையதை கடவுளுக்கும் கொடுக்கும் நீங்கள் எங்களுடையதை எங்களுக்குத்தான் அளிக்க வேண்டும்’’ என்னும் புண்ணியன்,
இயக்கத்துக்கு தான் போகாமல் அக்காவை அனுப்பிவிட்டு குற்றவுணர்வில் கதறும் அமலன், சாக்குப்பையில் சடலமாக மூட்டை கட்டப்படும் செட்டித்தாத்தா, ஊத்தைமாமா, ‘’நான் பயப்படலே, அதிகபட்சம் சுடுவாங்கள் அதானே நடக்கும்’’ என்கிற சங்கிலி பெரியப்பா
கழுத்திலும் உள்ளிலும் நஞ்சு கொண்டிருக்கும் சந்தனன், சந்தனனின் தந்தையை சுட்ட சரித்திரன், கொக்குவில் மாமா, அம்மாவை வேசி என்று வைய்யும் தகப்பனை கன்னத்தில் அறையும் அப்பன் என்னும் பெயர்கொண்ட மகனொருவன்
கோவிலில் திருடிவிட்டு முருகனிடமே ’இத்தனை துன்பத்தை தந்த அரசாங்கத்தை தண்டிக்காத நீ என்னையும் தண்டிக்க மாட்டாய்’ என உரையாடும் சங்கன்
தீக்காயம் பட்ட கரியன், பச்சை தூஷணத்தில் மருத்துவனைக்காரர்களை வசைபாடும் கால்கள் நீக்கப்பட்ட ஒருவர், அடுத்த படுக்கையிலிருந்தபடி ’’மரணத்தினாலும் நான் மீதம் வைக்கப்படுவேன் நன்றி வணக்கம்’’ என்று பேருரையாற்றும் போராளி ஒருவர், என அகரமுதல்வன் காட்டும் மனிதர்கள் நமக்கும் உறவாகி விடுகிறார்கள். காந்தி மாமாவை கண்டதும் ’’அட, இவர் கடவுள் பிசாசு நிலத்தின் மாமா’’ என்று மனம் கூவியது
ஷெல்லடியும், கிபிர் தாக்குதலும் தோக்கு சத்தங்களும் நிறைந்து தாய்மண்ணும் முழங்காலிடும் போதும் ஒன்றும் செய்ய முடியாத கடவுள்களும் இருக்கின்றனர் இதில்
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர், காந்தள் மலர் சூடிய கொட்டடிக்காளி, தேக்கங்காட்டு வீரபத்திரர், வறாப்பளி அம்மன்,முல்லைதீவு தேவாலயத்தின் இறைவன், கருங்காலி முனி, பொக்கணை நாக தம்பிரான் சண்டைக்கு செய்தியேதும் அனுப்பாத ஆதிசேஷன், களவவோடை அம்மன், தெல்லிப்பழை துர்க்கை என இடையிடையே அத்தனை துயரிலும் ஒன்றும் செய்ய முடியாத கடவுள்களும் வருகின்றனர்.காளியின் தலையிலும் ஷெல்லடிக் காயமிருக்கிறது.
’’கர்த்தாவே எதுவரைக்கும் நீங்கள் எங்களை உதாசீனபப்டுத்துவீர்? எனும் கேள்வியை புண்ணியனுடன் சேர்ந்து நாமும் ஒருகட்டத்தில் கேட்டுவிடுகிறோம்
இறந்த கணவனின் மூக்கிலும் வாயிலும் பெருகும் குருதியை தன் கர்ப்ப வயிற்றில் எடுத்தெடுத்து பூசிக்கொள்ளும் சுமதியக்கா, கொற்றவை என்னும் பெயர்கொண்ட அவளுக்கு பிறக்கும் பெண்குழந்தை
போர் வெளியேற்றிய பாஸ்பரஸினால் புற்றுநோய் உண்டாகியிருந்த, பங்கருக்குள் மயங்கிக்கிடந்தவனை எந்த பதற்றமும் இல்லாமல் காணும் திலகா
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்ய்பட்டவர்களின் பத்துநாள் குழந்தை புலித்தேவனின் பசியழுகைக்கு வற்றிய முலைகளை அளித்து போக்கு காட்டுகிறாள் பேரன்னை ஒருத்தி
மீள் குடியமர்த்தப்பட்ட நிலத்தின் மண்ணை அள்ளி உடலெங்கும் பூசிக்கொண்டு, ‘’இந்த இடம் ராணுவத்துக்கு சொந்தமானது’’ என்னும் அறிவிப்பு பலகையை மிதித்தேறுகையில் கண்ணிவெடியில் உடல்சிதறி சாகும் சின்னாசி
சின்னாசியின் உடலைதிரட்டி எரிக்கையில் ’தீமூளும் தீமூளுமென’ பாடியபடி முலைதிருகி வான் பார்த்து எறிவதைபோல பாவிக்கும் பெண்கள்
கொல்லப்பட்ட அப்பாவுக்கு கொள்ளி வைத்துவிட்டு ’’துரோகமென்றால் என்னம்மா? என்று கேட்கும் மகனை அணைத்துக்கொண்டு ‘’மனுஷராய் பிறந்தது அதுவும் இந்த மண்ணில் பிறந்ததுதான் துரோகம்’’ என்று கதறுகிறாள் ஒர் அன்னை
வீரச்சாவடைந்து சகிக்கமுடியாத கெடுநாற்றத்துடன் பேழையில் கிடக்கிறாள் போராளி அனலி, கூந்தலை அவிழ்த்து விட்டு ஒற்றைக்காலில் நின்றபடிக்கு உணவுண்னும் மனம் பிறழ்ந்த அக்கா, ‘’இஞ்ச எல்லா பிள்ளயளும் பாரம்தான் சுமக்கினம் அது சிலுவையோ துவக்கோ கவலைப்பட ஏதுமில்லை’’ என்று சொல்லும் அம்மா,சமர்க்களத்தில் கருப்பை சிதைந்த ஈகை இவர்களுடன்’’அதியமான் உனக்கு துரோகியோ தியாகியோ அல்ல உன் தந்தை’’ என்று மகனிடம் சொல்லும் ஒரு அன்னையும் இருக்கிறாள்
’’இவ்வளவு யுத்தத்துக்கு மத்தியிலும் எங்கட ஆஸ்பத்திரியில் குழந்தைகள் பிறக்கிறார்கள்’’ என்று சொல்லும், கூந்தலில் காட்டுப்பூச்சூடி காமக்களிறை உருவேற்றும் ’’ யுத்தம் ஒழிக ஒழிக ‘’ என்றபடி முயங்கும் யசோ என்று அகரமுதல்வன் இதில் காட்டும் பெண்கள் பிரத்யேகமும் விசேஷமுமானவர்கள்.
பங்கருக்குள் நேசத்துக்குரியவரின் ஆன்மாவை கண்டுகொள்ளும் மூன்று கால் வீமனும் ஒரு பாத்திரம்தான் இதில். இத்தனை துயரிலும் மாமரங்கள் பூக்கின்றன, குளத்து மீன் ருசிக்கின்றது .
தெய்வங்கள் உறைந்த வெளியில் பிள்ளைகள் பலிகொடுக்கப்பட்ட கொடுங்காலங்கள் நாம் ஒருபோதும் அறிந்திடாதவை.
அகரமுதல்வனின் மொழியில் காடுறை தெய்வங்கள் கண் மலர்த்தி கசிந்த கண்ணீர் எரியூட்டும் இரவுகளை, உக்கிரமான தாக்குதல்களின் போது காலடியில் இறைஞ்கும் சொற்களை மிதித்து நசுக்கிவிட்டு முன்னேறி ஓடுகின்ற சனங்களை, போர்க்களத்தில் பூ மாதிரி கிடக்கும் போராளி ஒருவனின் மூளையை, காற்றில் அசையும் கருங்காலி மரத்திலிருந்து உதிரும் ரத்தம் கண்டிய பெருவிரலொன்றை, ஆலமரத்தின் வேர் இடுக்கில் கிடக்கும் கால்துண்டொன்றை காணும் நெஞ்சுரமும் நமக்குண்டாகி விடுகின்றது
பொய்யாய் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போனவைகளை சொல்லிச்செல்லும் கதையோட்டத்தில் காதல் முகிழ்க்கிறது காமம் தகிக்கிறது. காதலின் வெம்மை பொங்கும் ஐந்து அத்தியாயங்களும் இருக்கின்றன இதில்.
ஃப்ளாண்டர்ஸ் பெருவெளியில் நடந்த போரில் பீரங்கி தாக்குதலில் உடல்சிதறி இறந்த உற்ற நண்பனின் உடலை திரட்டி இறப்புச் சடங்குகள் செய்த பின்னர் அங்கேயே ஒரு மருத்துவ ஊர்தியின் அருகில் அமர்ந்து லெஃப்டினெண்ட் ஜான் மெக்ரே எழுதிய
“ஃபிளாண்டர்ஸ் கல்லறைச்
சிலுவைகளுக்கிடையில்
காற்றில் ஆடுகின்றன பாப்பிச்செடிகள்,
என்று தொடங்கும் கவிதை மிகப்புகழ் பெற்றது, அக் கவிதைக்கு பின்னரே மாவீரர் நினைவு நாளில் செம்பட்டு பாப்பி மலர்களை அணிந்துகொள்ளும் வழக்கம் வந்தது. மரணத்துக்கிடையில் மலர்ந்திருந்த பாப்பிச்செடிகள் இந்த கவிதையை மிகச்சிறப்பாக்கி விட்டிருக்கி்னறன.
அவளருளாலே அவள் தாள் வணங்கி, மஞ்சள் வண்ணத்துப்பூச்சிகளின் தாலாட்டில் மலர்ந்திருக்கும் பிரதீபாவை புதைத்த மேட்டில் படுத்துக்கொள்ளும் காதலனை, காயங்களின் தழும்பில் முத்தம் ஈன்று மூர்ச்சையாகி போகும் வரை முயங்கும் ஆதாவை, அங்கவீனமாய் போனபின்னும் புல்லாங்குழலின் கீதம் கேட்கும் நறுமுகையின் உடலை தகிக்கும் தீவெளியில் அணைத்துகொண்டு முத்தமிடும் காதலனை , உதிரும் மலரை மீண்டும் ஏந்தும் மலரினும் மெல்லிய காமத்தை, மஞ்ஞையின், யசோவின் காதலை சொல்லும் மொழியும் துயரை சொல்லிய அதே அகரமுதல்வனுடையதுதான் என்பதை வாசித்தாலே நம்ப முடியும்.
நெஞ்சுரத்தில் நிலம் விளைவிக்கும் அதிபத்தன் எனும் நண்பனுக்காக அணையாவிளக்கொன்றை ஏந்தும் அம்மாவை சொல்கிறான் ஒரு மகன். அச்சுடரை அணையாமல் பாதுகாக்கும் அவளின் உயிருருகிய வெளிச்சத்தில் வன்னியெங்கும் ஒளிபெருகுகிகிறது.
வித்துடல்கள் பொலிகின்றன என்பதை போர்ச்சூழலில் பிறந்த அகரமுதல்வன் சொல்லுவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது
ஈழத்தமிழின் இனிமையையும் தாண்டி தெரியும் துயரம், துயரின் மத்தியிலும் பெருகித் தகிக்கும் காமம், இறப்பினாலும் பிரிக்க முடியாத காதல், சொந்த நிலத்தின் பேரில் போராளிகளுக்கிருக்கும் பிணைப்பு என இந்த படைப்பின் கலவை வேறெதிலும் கண்டதில்லை, அகரமுதல்வனுக்கு அன்பும் வாழ்த்துக்களும்!
துயரின் இருளிலும் போதமும் காணாத போதம் காட்டும் போர் முற்றும், தாய்நிலமும், வாழ்வும் மீளும் என்னும் நம்பிக்கையையும், ஆயுதங்களுக்கு மத்தியில் இரண்டு தோமா மலர்களையும் வைத்துக் கொண்டிருக்கிற ஒருவனையும் வாசிக்கையில்
தெற்குப்புறத்தில் கிளைகளெங்கும் அடர்ந்து பழுத்திருக்கும் செங்கனிகளை நம் காதலின் குறியீடாக கை நிறைய அள்ளிக்கொண்டு என் பொருட்டு வீட்டுக்கு போகிறாயா?
என்னும் வாங் வெய்யின் ஒற்றை இதயம் என்னும் தலைப்பிடப்பட்ட மற்றுமொரு கவிதை நினைவுக்கு வருகிறது.
இரண்டு வெவ்வேறு வகையான தாவரங்கள் இணைத்து உருவாக்கப்படும் கலப்புயிரி தாவரங்களுக்கான் வலிமை மிகுதியாகவே இருக்கும். அப்படித்தான் சொந்த நிலத்தின் நினைவுகளுடன் புதிய நிலத்தில் வாழும் அகரமுதல்வனின் வலிமையும், .
குமர குருபர சுவாமிகள் அருளிய திருச்செந்தூர் கந்தர் கலி வெண்பாவின் போதமும் காணாத போதம் எனும் வரி இப்படைப்பிற்கு வெகு பொருத்தமான தலைப்பாக அமைந்திருக்கிறது.
சொந்த நிலம் பாவித்த சுகப்பொழுதுகளை மீளத் தீண்டுகிறேன் என் அகமெரியும் சந்தம் இசைக்கிறேன் செவியுள்ளோர் கேட்கட்டும் என்று சொல்லும் அகரமுதல்வன் ’’ஈழமண்ணில் தீ என உறையும் திசைகளின் ஒளிக்கதிர்களை தான் இப்படைப்பில் படர விட்டிருக்கிறேன், சனங்களின் சீவிதத்தில் ஒளி பெருகுக’’ என்கிறார்இறுதியில்.
வெள்ளிமலை தாவரவியல் குழுவினர் இன்று வரை தொடர்பில் இருக்கிறார்கள். நானே அதிகாலையில் எழுந்து நாளைத்துவங்கும் ஒருத்தி என்றால் அதில் சிலர் நான் எழும்போதே எனக்கென ஏதேனும் தகவலோ கேள்வியோ புகைப்படமோ வைத்திருப்பார்கள். ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். அவர்களுடன் இணைந்து நானும் புதிதுபுதுதாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
இன்று காலை பெங்களூர் பிரியா நிறைந்து பூத்திருந்த எள் வயலின் புகைப்படம் அனுப்பி எள்ளின் வகைகளைக்குறித்து கேட்டிருந்தார். நான் அதன் கருப்பு வெள்ளைபிரவுன் சிவப்பு வகைகளையும் அதன் ஆங்கிலப்பெயரான Sesame , தாவர அறிவியல் பெயரான Sesamum indicum (Sesamum indicum subsp. indicum)என்பதையெல்லாம் காரில் கல்லூரிக்கு வருகையில் சொல்லிக்கொண்டிருந்தேன்.
அறிவியல் பெயரிலிருந்து வந்த இதன் sesame என்னும் ஆங்கிலப்பெயருக்குப்பின்னால் ஒருசுவாரஸ்யம் இருக்கிறது.
எள் இந்தியாவுக்கு சொந்தமான பயிர்.மனிதர்கள் பயிரிட்ட முதல் எண்ணெய்பயிர் எள் தான். சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எள் இந்தியாவில் பயிராகிறது. இந்து மதம் விஷ்ணுவின் வியர்வையிலிருந்து உருவான பயிர் என்று எள்ளைச்சொல்கிறது. தரிசு நிலங்களில் கூட எள் பயிராகும். பல மதங்களில் எள்ளும் எள் எண்ணெயும்புனிதமானதாகக் கருதப்படுகிறது.
பெடாலியேசியைச்சேர்ந்த (Pedaliaceae) எள்ளின் கனி எனப்படும் pods மிகச்சுவாரஸ்யமானது. பல நாகரீகங்களில் சத்துக்கள் அடங்கிய இதன் சிறு விதைகள் அந்த கனியிலிருந்து வெடித்து திறந்து வெளியாவதைப் புதையல் கிடைத்தது போல் எனக்கொள்வார்கள். எனவேதான் open sesame என்பது புதையல் இருக்கும் இடம் திறப்பதற்கான மந்திரச்சொல்லாக இருக்கிறது.
அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் குகையை திறக்க அலி ’’திறந்திடு சீசேம்’’ என்று சொல்வது இதனால்தான். பாபிலோனியாவில் பல மந்திர தந்திர வித்தைகளில் எள் எண்ணெய் எனப்படும் நல்லெண்ணெய் உபயோகத்திலிருக்கிறது. யூதர்களின் மாயாவாத சடங்குகளில் எள் சொர்க்கத்தின் இன்னொரு பெயராகக் கருதப்படுகிறது. ஹீப்ரூ மொழியிலும் எள்ள்ளுக்கு கடவுள் என்னும் பொருள் இருக்கிறது
sesame என்னும் கிரேக்கச்சொல் பழமையான செமிடிக் மொழிகள் ஒன்றான, இப்போது புழக்கத்தில் இல்லாத பண்டைய மெசபடோமியர்களின் மொழியான அக்காடியனின் (Akkadian) தாவர எண்ணெய் என்னும் பொருள் கொண்ட் šamaššamu என்னும் சொல்லில் இருந்து உருவானது.
57% எண்ணெய் அளவு கொண்டிருக்கும் எள்ளின் பல பயன்களில் ஒன்று அதிலிருக்கும் லிக்னன்களான sesamin & sesamolin ஆகியவற்றின் ரத்தக்கொழுப்பைக்குறைக்கும் இயல்பு. இதன் தமிழ்ப்பெயரில் ஒன்றான திலம் என்பதிலிருந்துதான் ஆங்கிலப்பெயரான் til என்பது வந்திருக்க வேண்டும்.எள் தான் எண்ணெய்ப்பயிர்களின் ராணி.
நேற்று Dr செளமியா அவரது தோட்டதில் இருந்த எள் சக்களத்தி என்று சொல்லப்படும் எள் பயிரைப்போலவே இருக்கும் Cleome monophylla வின் புகைப்படத்தை அனுப்பி இருந்தாள். எத்தனை எத்தனை சுவாரஸ்யங்கள் தாவரங்களில் !
அகரமுதல்வனின் வாட்ஸ்அப் நிலைத்தகவலில் ரத்தச்சிவப்பில் ஒரு குட்டி தாலியா மலரைப் பார்த்தேன். அத்தனை வசீகரமாக இருந்தது பார்க்க. color wheel -ல் பச்சைக்கு நேர் எதிரில் இருப்பது சிவப்பு என்பதால் பச்சை இலைகளுக்கிடையில் தெரிந்த அந்த மலர் அழகான அழகாயிருந்தது.
எனக்குத் தாலியாக்கள் மீதும் பிரியம்தான். பள்ளி கல்லூரிக் காலங்களில் வீட்டு வாசலில் காலை நேரத்தில் ஊட்டி ரோஜாவும் தாலியாக்களும் விற்கப்படும். நான் ஊட்டி ரோஜாக்களை விரும்பியதில்லை. அது ஒரு வாரம் வரை வாடாமலிருப்பதும் அடுத்தநாளில் இருந்தே இதழ்களில் விளிம்புகளில் கருப்புப் படிந்துவிடுவதும், கனமாக இருப்பதும் காரணமென்றாலும் முதன்மைக்காரணம் அது மலராமல் கூம்பியே இருப்பதுதான்.எனக்கு மலரென்றால் மலர்ந்திருக்க வேண்டும்.
தாலியா அப்படியல்ல குழந்தையொன்று சிரிப்பதைப் போல முழுக்க மலர்ந்திருக்கும் அதில் பல நிறங்கள் இருந்தாலும் நான் அதிகம் தேர்ந்தெடுப்பது வெள்ளையும் இளஞ்சிவப்பும்தான். கல்லூரி முதல் அவ்ருடம் படிக்கையில் (நானும் மித்ராவும் ஒன்றாகத்தான் கல்லூரிக்குள் நுழைந்தோம்)மித்ராவின் கல்லூரித்தோழர் அமல்ராஜ் கம்பீரமாக ஒரு சைக்கிளில் பூக்களை விற்றுக்கொண்டு வருவார். கல்லூரிக்குச் செல்ல அரை மணி நேரம் முன்பு அவர் வீடு வீடாகப் பூக்களைச் சைக்கிளின் பின்னிருக்கும் கூடையில் வைத்துக்கொண்டு நிமிர்வுடன் வருவார். ஒருபோதும் அந்தச்செயலில் அவர் வருத்தமுற்றதும் தாழ்வாக உணர்ந்ததும் இல்லை. குளித்து நல்ல உடையணிந்து வரும் அவர் அப்படியே அதே உடையில் பின்னர் கல்லூரிக்கு குறித்த நேரத்தில் வந்துவிடுவார். பிற்பாடு அவர் உடற்பயிற்சி இயக்குனராகியதை அறிந்து கொண்டேன், அவரை, அவரது இளமைக்காலத்தை அவருடன் பொருளாதாரம் படித்த மித்ராவின் தங்கை நினைவு கூறுகிறாள் என்பதை அவர் கற்பனை கூடச் செய்திருக்க மாட்டார். தனக்கான செலவுகளுக்காகப் படிக்கையிலேயே ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்த அவர்மீது எனக்கு அப்போதும் இப்போதும் பெரும் மரியாதை உண்டு.
தாலியாவுக்கு வருகிறேன். அப்படி நான் தாலியாக்களை பின்னலில் வைத்துக்கொண்டுதான் கல்லூரிக்குச் செல்வது வழக்கம். அரிதாக டிசம்பர் பூச்சரமும் வைப்பதுண்டு. பின்னல் நல்ல அடர்த்தியாக இடைவரை நீண்டிருக்கும். (அந்த அடர்ந்த நீண்ட கூந்தலைத்தான் சரணுக்கும் தருணுக்குமாகப் பிரித்துக் கொடுத்துவிட்டேன்).மித்ராவுக்கு என்னைக் காட்டிலும் நீண்ட அடர்ந்த பின்னல். இப்போது தாலியாக்களை பின்னலில் வைத்துக்கொள்ளும் பெண்களைப் பார்ப்பதில்லை.ஏன் பூச்சரம் வைத்துக் கொள்பவர்களும் அதிகமில்லை.
அந்தப்புகைப்படத்தில் தாலியா அப்படி கொள்ளை அழகாக இருந்தது. அநேகமாக அகரமுதல்வன் அதை ஒரு மலை வாசஸ்தலத்தில் எடுத்திருக்கக்கூடும் ஏனெனில் உடனிருந்த புகைப்படத்தில் ஒரு ஆப்பிரிக்கன் லில்லியும் இருந்தது. இவையிரண்டுமே கடல்மட்டத்துக்கு 1000 அடி மேலே இருக்கும் பகுதிகளில் மட்டுமே செழிப்பாக வளரும்.
தாலியாக்கள் வெகுசுவாரஸ்யமான வரலாற்றைக் கொண்ட மலர்கள்.
மெக்ஸிகோவை பூர்வீகமாகக் கொண்ட இவை சூரியகாந்தியின் குடும்பமான அஸ்டரேசியைச் சேர்ந்தவை. தாலியா பேரினத்தில் சுமார் 50 சிற்றினங்களும் ஆயிரக்கணக்கான நிறங்களில் மலர்களும் இருக்கின்றன.
தாலியாக்கள் 14-லிலிருந்து 16-ம் நூற்றாண்டுவரை மீசோஅமெரிக்கப் பகுதியில் பெரும்பான்மையாக இருந்த பழங்குடி இனக்குழுக்களின் தொகுப்பான ஆஸ்டெக்குகளின் தாவரமாக மட்டுமே இருந்தது. ஸ்பானிஷ் படையெடுப்பின் பின்னரே தாலியாக்கள் ஐரோப்பாவிற்கு அறிமுகமாயின.
1525-ல் மெக்ஸிகோவிற்கு வந்த ஸ்பேனியர்கள் இந்த அழகிய மலரைப் பார்த்தார்கள் 1570-களில் மெக்ஸிகோவிற்கு ஸ்பெயினின் இரண்டாம் பிலிப் மன்னரால் அனுப்பப்பட்ட அவரது தனிப்பட்ட மருத்துவர் ஃப்ரான்சிஸ்கோதான் முதன் முதலாகத் தாலியாக்களை எழுத்தில் விவரித்தவர். மன்னரால் அந்த ப்பிரதேசத்தின் இயற்கைப் பொருட்களைக் குறித்து விரிவாக அறிந்துகொண்டு வரும்படி பிரான்சிஸ்கோ ஆணையிடப்பட்டிருந்தார். அச்சமயத்தில் தாலியாவின் வகைகளில் சிலவற்றின் கிழங்குகளைப் பழங்குடியினர் உணவாகப் பயன்படுத்துவதையும் ஃப்ரான்சிஸ்கோ ஆவணப்படுத்தினார்.
தண்டுகள் உள்ளே காலியாக இருப்பதைக்குறிக்கும் “water pipe”, “water pipe flower”, “hollow stem flower”, “cane flower” போன்ற பெயர்களில் தாலியாக்கள் அப்போது அஸ்டெக்குகளின் மொழியில் அழைக்கப்பட்டன. 7 வருடங்கள் மெக்சிகோவின் தாவரங்களை அறிந்து ஆராய்ந்து முடிவுகளை நான்கு தொகுதிகளாகப் பிரசுரித்த ஃப்ரான்சிஸ் மிக அழகிய சித்திரங்களையும் கைப்பட வரைந்திருந்தார்.
Nova Plantarum, Animalium et Mineralium Mexicanorum Historia, என்னும் அந்த நூல் 1578-ல் வெளியானது. அந்த நூலில் தாலியாவின் இரு சிற்றினங்களை பிரான்சிஸ்கோ விவரித்திருந்தார்.( Dahlia pinnata & Dahlia imperialis)1615-ல் அவை லத்தீன மொழியாக்கம் செய்யபட்டு இரு தொகுதிகளாக வெளியானது.
1787-ல் இரத்தச்சிவப்புச் சாயம் அளிக்கும் cochineal பூச்சிகளைத் திருடிவருவதற்காக மெக்சிகோவிற்கு அனுப்பப்பட்ட ஃப்ரெஞ்ச் தாவரவியலாளர் நிக்கோலஸ் (Nicolas-Joseph Thiéry de Menonville) இந்தப் பிரகாசமான மலர்களைக் குறித்தும் ஆவணப்படுத்தினார். நிகோலஸ் அவருக்குச் சொல்லி அனுபியப்டி cochineal பூச்சிகளி திருடவில்லை மாறாக அவற்றை மெக்ஸிகோ பழங்குடியினரிடமிருந்து விலைக்கு வாங்கி அவை வளரும் சப்பாத்திக்கள்ளி வகைகளைத் தாவரவியல் பூங்காவில் வளர்த்து அந்தபூச்சிகளை பெருகச்செய்து அதற்கான பாராட்டையும் பெற்றார். இன்றும் அந்தப்பூச்சிகள் அந்த சப்பாதிக்கள்ளிகளில் தான் வாழ்கின்றன. இவற்றினல் தான் அடர்சிவப்பு நிறம் “coccineus,” எனப்பெயர் பெற்றது.
தாவரங்களின அறிவியல் பெயர்களில் காக்சினியா என்று இருப்பவைகளின் மலர்கள் எல்லாம் குருதிச்சிவப்பில் இருப்பதைப் பார்கக்லாம். அகரமுதல்வன் எடுத்த புகைப்படத்தில் இருப்பது Dahlia coccinea மலர்தான். ரத்தச்சிவப்பு தெட்சி மலரின் அறிவியல் பெயர் இக்ஸோரா காக்சீனியா.
பின்னர் பல வருடங்கள் தாலியாவின் நறுக்கப்பட்ட தண்டுகளும் விதைகளும் தொடர்ந்து ஐரோப்பாவிற்கு மெக்ஸிகோவிலிருந்து அனுப்பப்பட்டன. பின்னர் படிப்படியாக உலகநாடுகள் அனைத்திற்கும் தாலியா அறிமுகமானது. ஆயிரக்கணக்கான கலப்பின வகைகளும் உருவாகின.
தாலியா என்னும் இதன் பேரினப் பெயரிலேயே குழப்பம் நிலவியது. தாவர வகைப்பாட்டியலை நிறுவியவரான லின்னேயஸ் அவரின் மாணவரான Anders Dahl, என்பவரைச் சிறப்பிக்கும் பொருட்டு தாலியா என்னும் பேரினத்தை வைத்தார் என பரவலாக நம்பப்பட்டது. ஆனால் தாலியா ஐரோப்பாவுக்கு அறிமுகமான 1789-க்கு 11 வருடங்கள் முன்பே லின்னேயஸ் இறந்துவிட்டார். மேட்ரிட் தாவரவியல் பூங்காவின் இயக்குனரான Abbe Cavanilles, தான் Anders Dahl யின் பெயரைச் சிறப்பிக்கும் பொருட்டு தாலியாவுக்கு வைத்தார் என்பது பிற்பாடு அறியபட்டது.
1805-ல் ஜெர்மானிய தாவரவியலாளர் கார்ல் (Carl Ludwig Willdenow, asserting) தாலியாவை ஜார்ஜினா (Georgina) என்று பெயர் மாற்றம் செய்தார். 1810-ல் எழுத்துபூர்வமாக இம்மலர் மீண்டும் தாலியா எனக்குறிப்பட்டது.
கடல் மட்டத்துக்கு மேல் 1,500 – 3,700 m உயரதில் செழித்து வளரும் தாலியாக்கள் பனிப்பொழிவற்ற உலகின் எல்லா பாகங்களிலும் வளருகின்றன.
தாலியாக்கள் பல வருடம் மலரளிக்கும் பெரினியல் வகையைச் சேர்ந்தவை. அவற்றின் மலர் எனச் சொல்லப்படுவது உண்மையில் மலர்த்தலை என்னும் மஞ்சரிதான். மலர்த்தலைகள் பிரகாசமான வண்ணங்களில் இருக்கும் பெரும்பாலும் தாலியாக்களில் மணம் இருக்காது. மகரந்தச்சேர்க்கைக்கு பூச்சிகளைக் கவர பிரகாசமான அதன் வண்ணங்களே போதுமென்பதால் நறுமணம் இருப்பதில்லை.
இங்கிலந்தின் புகழ்பெற்ற ராயல் ஹார்டிகல்சர் அமைப்பு 1969-ல் சர்வதேச தாலியா பெயர்களின் பதிவேட்டை உருவாக்கியது இந்தp பதிவேடு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகிறது.(The International Register of Dahlia Names) தாலியாக்களின் உருவாக்கத்திலும் அவற்றின் உலகளாவிய பரவலிலும் மிக முக்கியப்பங்காற்றியவராக நியூயார்க்கின் ஜார்ஜ் தோர் பர்ன் (George C. Thorburn) அறியபப்டுகிறார்.
1963-ல் தாலியா மெக்சிகோவின் தேசிய மலராக அறிவிக்கப்பட்டது.
ஒற்றை அடுக்கு, பல அடுக்கு , மிகப்பெரியவை, மிகக்குட்டியான மினி வகைகள், நாடாபோன்ற இதழ்கொண்டவை, வெளியடுக்கு பெரிதாகவும் உள்ளடக்கு சிறியதாகவும் இருப்பவை பந்துபோன்ற பொம்பன் (Pompon) வகைகள் என இப்போது சுமார் 5700 வகை தாலியாக்கள் நீலத்தைத்தவிர மற்ற எல்லா நிறங்களிலும், நிறக்கலவைகளிலும் இருக்கின்றன.
எடின்பர்க் தோட்டக்கலைதுறை1846- ல் நீல நிற தாலியாக்களை உருவாக்குபவர்களுக்கு 2000 பவுண்டு பரிசு அறிவித்தது.அது இன்று வரை உருவாக்கபடவில்லை.
அதன் காரணம் தாவரவியலாளரல்லாதோருக்கு புரிந்துகொள்ளக் கடினமென்றாலும் எளிமையாகச் சொல்ல முயற்சிக்கிறேன்.
நீல நிறம் உருவாக ஆந்தோசையானின் என்னும் நிறமி தேவை. தாலியாக்களில் ஆந்தோசையானின்கள் உள்ளன எனினும் தூய நீல நிறம் உருவாக delphinidin என்னும் ஆந்தோசையானின் ஒரு வகை நிறமியில் 6 ஹைட்ராக்சைல் தொகுப்புகள் இருந்தாக வேண்டும் ஆனால் இன்று வரையிலும் தாலியாக்களில் 5 ஹைட்ராக்சைல் தொகுப்புக்களே உருவாகி இருக்கின்றன.
பொதுவாகவே இயற்கையில் நீல நிற மலர்கள் மிக அரியவை . நூற்றாண்டுகளாகத் தாவரப் பெருக்கவியலாளர்கள் முயற்சித்தும் இன்று வரை ட்யூலிப்களில் நீல நிற மலர்களைக் கொண்டு வர முடியவில்லை. இப்போது இருப்பவை எல்லாம் almost blue என்னும் வகையில் வருபவைதான். இயற்கையாக நீல நிறத்தில் ஹைட்ராஞ்சியா, கார்ன் மலர்கள், இமாலய பாப்பிகள் மற்றும் டெல்பீனியம் போன்ற ஒருசிலமலர்களே இருக்கின்றன.
பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்த தாலியா உலகின் மிக விரும்பப்படும் தோட்டமலராக இருக்கிறது.
ரிதன்யாவின் மரணம் செய்தித்தாளும் தொலைக்காட்சியும் இல்லாத வீடென்பதால் தாமதமாகத் தெரிந்தது. அவளது கடைசிக்குரல் பதிவுகளையும் துரதிர்ஷ்டவசமாகக் கேட்க வேண்டி வந்தது.
அவள் குரலில் இருந்த குழந்தைத்தனம்தான் இப்போது வரை மனதைப் பிசைகிறது. உண்மையில் ரிதன்யாவுக்குத் தன்னை மாய்த்துக் கொள்வது என்றால் என்னவென்றே தெரியாமல் அதைச் செய்து கொண்டிருக்கிறாள்.
தன் அப்பாவுக்குத் தான் பூட்டி வைத்துவிட்டு வந்திருக்கும் ஒரு ட்ராயரில் இருக்கும் நகைகளை அத்தனை அறியாத்தன்மையுடன் மயில் தோடு ஒத்தை வளையல் அத்தை கொடுத்த செயின் என்று பட்டியலிடுகிறாள். அந்தக் குழந்தையின் அறியாமையை என்னவென்று சொல்வது?
அடுத்து தென்னைமரத்துக்கு வைக்கும் மிக வீரியமுள்ள விஷத்தை சாப்பிடப்போகிறாள், அந்த கொடும் நஞ்சு அவளை என்னவெல்லாம் செய்யும், சாவு என்றால் என்ன இதெல்லாம் ஒன்றுமே தெரியாமல் எல்லா கதவும் அவள் முன்னால் அறைந்து சாத்தப்பபட்ட தன்னிரக்கத்தில் நகைகளைப் பட்டியலிடுகிறாள் பாவம்.
அந்தக் குறிப்பிட்ட மருந்து மிகக் கொடுமையான விளைவுகளை உண்டாக்கியே உயிரைப்போக்கும் அதைச் சாப்பிட்டபின்னர் பிழைப்பது துர்லபம். பல வருடங்களுக்கு முன்பு சின்னு மாமனின் மகன் மிக இளம் வயதில் கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட ஒரு தகராறில் மனமுடைந்து இதைச் சாப்பிட்டுவிட்டு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது நானும் உடன் இருந்தேன். அவன் துடித்த துடிப்பும் பட்டபாடும் அப்படியே இன்னும் நினைவிலிருக்கிறது. மருத்துவரிடம் அவனைக்காப்பாற்ற வழி இருக்கிறதாஎன்று கேட்டேன் ‘’ இல்லைங்க அந்த மருந்து உள்ளே போறப்பவே அது போற வழியெல்லாம் அழிச்சுட்டே போகும்’’ என்றார். ரிதன்யா சாப்பிட்டது அதைத்தான்.
ரிதன்யா செல்வந்தர் வீட்டுப்பெண் என்பதாலும் இப்போது ஊடக வளர்ச்சி மிக விரிவாகியிருப்பதாலும் இந்த விஷயம் இத்தனை கவனம் பெற்றிருக்கிறது ஆனால் கொங்குப் பகுதியில் இது காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. பொள்ளாச்சி தென்னைநகரென்பதால் இந்த மருந்து மிக எளிதில் கிடைக்குமொன்றாகத்தான் இப்போது வரை இருக்கிறது.
முதுகலை படித்த, கார் ஒட்டத் தெரிந்த ரிதன்யா செய்துகொண்டது தற்கொலை அல்ல அவளுடையது ஆணவக்கொலைதான். அவளைப்போல் பலருக்கு இப்படி இங்கு நடந்திருக்கிறது நடந்துகொண்டிருக்கிறது நாளையும் நடக்கும்.
இன்றைய செய்தித்தாள்களில் மகள் வேற்றுச்சாதியில் கல்யாணம் செய்துகொண்டதால் ரயில் முன் பாய்ந்து இறந்து போன அரசு அதிகாரி தம்பதிகளைக் குறித்துப் பார்த்த போதும் இதுதான் தோன்றியது. குடும்ப கெளரவம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் ஒன்றைக்காப்பாற்ற அந்தப் பெண்ணுக்கு வாழ்நாள் முழ்க்க வாழவே முடியாத அளவுக்குக் குற்ற உணர்வை அளிப்பதைத் தவிர அந்தத் தற்கொலைக்கு வேறெந்த நோக்கமும் இல்லை.
இந்தக் கிராமத்தில் நான் வீடு கட்டி வந்த புதிதில் பக்கத்தில் ஒரு வீட்டில் மகளுக்குக் கல்யாணம். வீடு கட்டத்துவங்கி பணமுடையால் அதை முடிக்க முடியாமல் அவசரமாகப் பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைத்தார்கள். பாதி முடிந்த அந்த வீட்டில் மணமக்களுக்கு முதலிரவு நடந்த அன்று இந்தப்பகுதி வழக்கமாகச் சந்தகை செய்து முதலில் மணமக்கள் சாப்பிட்டுவிட்டு அறைக்குச் சென்று விட்டார்கள் மீதமிருந்த சந்தகையில் விஷம் கலந்து மணப்பெண்ணின் தம்பி மற்றும் பாட்டிக்கும் கொடுத்துத் தாங்களும் சாப்பிட்டுவிட்டு படுத்துக்கொண்டார்கள் பெற்றோர்கள் இருவரும்.
காலையில் தன்னை வந்து யாரேனும் கதவைத்தட்டி எழுப்புவார்கள் என்று வெட்கத்துடன் காத்திருந்து காத்திருந்து வேறு வழியின்றி கதவைத் தானே திறந்துகொண்டு வந்த அந்தப்பெண் பார்த்தது சடலமான பெற்றோர்களையும் உயிருக்குப்போராடும் தம்பியையும் பாட்டியையும்தான். எத்தனை முட்டாள் தனம் அத்தனை கடன் வாங்கி வீடுகட்டி மேலும் கடன் வாங்கி கல்யாணம் செய்துவைத்து அந்தக் கல்யாணத்தில் அந்தப்பெண் வாழவே முடியாதபடிக்கு அன்றைக்கே செத்துப்போனார்கள். அந்த முட்டாள் பெற்றோர்கள். உலகம் போய்க்கொண்டிருக்கும் திசைக்கு நேர் எதிர் திசையில் செல்பவர்கள் கொங்குப் பகுதி ஆட்கள்.
உலகம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்னுமறிதல் சிறிதும் இல்லாமல் தாங்கள் காலம் காலமாக வசிக்கும் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள் இவர்கள்.
உண்மையில் ரிதன்யாவின் புகுந்தவீட்டினரையும் கணவன் கவினையும் வரிந்துகட்டிக்கொண்டு குற்றம் சொல்லும் அவளது சுற்றம் உட்பட்ட பொதுமக்கள் பலருமே அவள் அப்படி செய்ததற்கு காரணமான கொங்குப் பகுதியினரின் குடும்ப கெளரவத்திற்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்னும் முட்டாள்தனத்தினால் தான் இது நடந்தது என்பதைக் கவனிக்கவே இல்லையா? உண்மையில் ரிதன்யாவைக் கொன்றது இந்த வெற்றுஆணவம்தான்.
நம்ம வீட்டுப் பெண் நம் சாதியில்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் கல்யாண வாழ்க்கையில் என்ன இடர் வந்தாலும் அவள் ஒருபோதும் கணவன் என்னும் கடவுளை விட்டுவிட்டு திரும்ப வந்துவிடக்கூடாது என்பதை சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்ட, அப்படியும் தாங்கமுடியாமல் 5 முறை புகார் சொல்லி ஒவ்வொரு முறையும் அறிவுரையும் அறவுரையும் சொல்லி திருப்பி அனுப்பப்பட்ட ரிதன்யாதான் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள்.
இப்படி எனக்குப் பல பெயர்களில் பிறந்து , தற்கொலை செய்துகொண்ட ரிதன்யாக்களைத் தெரியும். இன்னும் செத்துப்போகமால் தென்னை மர விஷத்தை குடித்தால் உண்டாகும் விளைவுகளைக்காட்டிலும் நூறுமடங்கு துயரை, வேதனையை உள்ளுக்குள் சகித்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் ரிதன்யாக்களையும் அறிவேன்.
இந்க்த கொங்குப்பகுதி ஆட்களைக் காட்டுமிராண்டிகள் என முன்பு எண்ணியதுண்டு. ஆனால் பழங்குடித்தாவரவியலில் ஈடுபட்டப் பின்னர் காட்டில் இருப்பவர்களை கொங்குப்பகுதியினருடன் ஒப்பிட்டுக் கேவலப்படுத்தியதை எண்ணி வருந்தி இருக்கிறேன். ரிதன்யாவின் அப்பா அம்மா பேசுவதை அவ்வப்போது பல்லைக் கடித்துக்கொண்டுதான் பார்க்கிறேன். முத்தம் கொடுத்ததை, செல்லம் கொடுத்ததை, கல்வி கொடுத்ததை எல்லாம் சொல்லிச் சொல்லி அழும் அவர்கள், வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் தைரியத்தை அவளுக்கு அளிக்கவேயில்லை. என்னவானாலும் சகித்துத்கொண்டிருக்க வேண்டும் இல்லாவிட்டால்
எத்தனையோ செலவழித்துச் செய்த கல்யாணம் கேள்விக்குரியதாகிவிடும் குடும்ப கவுரவம் என்னும் மண்ணாங்கட்டி உடைந்துவிடும் என்றுதான் இங்கு எப்போதும் சொல்லப்படுமொன்று.இப்படியான பஞ்சாயத்துகள் இங்கு வாராவாரம் நடப்பதை நானறிவென்.
உடலெங்கும் கடித்துவைத்த ஒரு கணவனுடன் சகித்துக்கொண்டு வாழும்படி சொன்ன ஒரு தகப்பன் இருக்கிறார் அதைச் சொல்லிவிட்டு உடலிலிருந்த கடிபட்ட காயங்களுக்கு அந்தப் பெண்ணை மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றது அந்தக்குடும்பம்.
பெண்கள் மடியில் கட்டிக்கொண்டிருக்கும் ஒரு பெருஞ்சுமை இங்கு பெற்றோர்களுக்கு, அவர்களை கல்யாணம் செய்து கொடுத்து விட்டால் தீர்ந்தது சுமை. இதோ இந்த வாரம், இறுதி ஆண்டில் தாவரவியல் படித்துக்கொண்டிருக்கும் மாணவிக்கு கல்யாணம் என்று வந்தார்கள். எத்தனையோ எடுத்துச் சொன்னேன் மிக இளம் வயது இன்னும் அவள் டிகிரி முடிக்கச் சில மாதங்கள் தான் இருக்கிறது. கொஞ்சம் தாமதிக்கக்கூடாதா? அவள் டிகிரி முடித்து அக்கம்பக்கம் குழந்தைகளுக்கு ட்யூஷன் சொல்லிகொடுத்து 3000. 4000 சம்பாதிக்கும் வாய்ப்பையும் ஏன் கெடுக்கிறீர்கள் என்று எத்தனை சொல்லியும் கேட்கவில்லை. இப்படி வருடா வருடம் நடந்துகொண்டே இருக்கிறது.
சாம்பவிக்கு நாங்கள் நேரடியாக இப்படி எதேனும் நடந்தால் சரி செய்யவே முடியாதென்றால் புறப்பட்டு வந்துவிடு நாங்கள் இருக்கிறோம் என்று ஒருபோதும் சொல்லிக் கொடுக்கவில்லை. ஆனால் அவள் வாழ்வில் சவால்களைச் சந்திக்க போதுமான தைரியம் உள்ளவளாக வளர்ந்திருப்பதை உறுதி செய்திருக்கிறோம்.
இன்னொரு சாதியில் காதல் மணம் செய்து கொண்ட பெண்களை அடித்துக் கொன்றவர்களின் கதைகளை நான் இளமை முதலே கேட்டிருக்கிறேன்.
பல காதலை முறித்து, அந்தக் காதலை உறவினர்களின் முன்பாக கூட்டம்போட்டுச் சொல்லும் பழக்கமும் இங்கு உண்டு. இப்படி விவாதித்து அந்தப் பெண்ணைச் சுயசாதியில் கல்யாணம் செய்துகொடுத்து அந்தக் கணவனுக்கு வெகுசீக்கிரம் விஷயம் தெரியவந்து பின்னர் காதலித்தவனை மறக்க முடியாமல், சந்தேகப்படும் கணவனுடன் வாழவும் முடியாமல் பிணம்போல் வாழும் மகளுக்கு வருடா வருடம் தவறாமல் சீர் செய்யும் பெற்றோரால் ஆனதுதான் இந்தச் சமூகம். இந்தச் சமூகத்தில் வெற்று ஆணவம் மட்டுமே இருக்கிறது. அறிவென்பது துளியும் இல்லை உணர்வுகளுக்கோ உயிருக்கோ வாழ்க்கைக்கோ எந்தப்பொருளுமில்லாத ஒரு முட்டாள் சமூகம்இது. இதை இந்தச் சமூகத்தின் உள்ளிருந்துகொண்டே தான் சொல்கிறேன்.
சென்ற மாதம் கூடச் சொந்தத்தில் ஒரு திருமணம், அந்த மாப்பிள்ளைப் பையன் வேறு சமூகப் பெண்ணுடன் காதலில் இருந்தான். காதலை முறித்து, என் பிணத்தைத் தாண்டித்தான் அவளைக்கலயாணம் செய்யப்போகனும் போன்ற அரதப்பழசான பொய்யான மிரட்டல்களால் அவனைப்பணிய வைத்து சொந்தச்சாதியில் கல்யாணம் நடந்தது.
மாப்பிள்ளை முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. அந்த அறியா மணப்பெபெண் மலர்ந்து சிரித்தபடி மேடையில் இருந்தாள். எப்படி அவளுடன் அவன் மகிழ்ந்து வாழ்க்கையை நடத்துவான்? மாப்பிள்ளையின் பெற்றோர் வாய்கொள்ளாச் சிரிப்புடன் வரேவேற்பில் இருந்தார்கள். சாப்பாடெல்லாம் பரவாயில்லிங்களா? என்று என்னிடம் கேட்டார், தலையசைத்துவிட்டு வந்தேன். அந்த முறிந்த காதலில் இருக்கும் அந்தப் பெண்ணின் மனநிலையையும், அவளை ஏமாற்றியதாகி விட்டிருக்கும் நிலையில் இருக்கும் அந்தப் பையனின் மனதையும் எண்ணிக்கொண்டேன்
எனக்கு ஏதேனும் ஒரு அதிகாரம் கிடைத்தல் இந்தச்சாதியின் பெருசுகளை ஆண் பெண் வேறுபாடில்லாமல் அப்படியே அள்ளிப் போட்டு அந்தமானுக்கப்பால் இருக்கும் ஒரு தனித்தீவில் கொண்டு போய் விட்டுவிடுவேன்.
என் மாணவர்களிடம் இதைக் குறித்து பேசினேன். ஒருவேளை துரதிர்ஷ்டவசமாக மணவாழ்வில் இடர்கள் வந்தால், சரி செய்யவே முடியாதென்றால் வெளியே வந்துவிடுங்கள் பெற்றோரிடம் செல்ல முடியாதென்றால் என் வீட்டுக்கு எந்நேரமானாலும் வந்துவிடுங்கள் கதவுகள் திறந்திருக்கும். ஒருவேளை அச்சமயத்தில் நான் உயிருடன் இல்லை என்றால் இந்தச் சமூகத்தின் சாயல்கூட இல்லாத என் மகன்கள் என்னைக் காட்டிலும் கதவை அகலத்திறந்து வைத்திருப்பார்கள் என்றேன்.
நண்பர் கார்த்திக் வேலு (சிட்னி) எழுதியிருக்கும் பதிவையும் இணைத்திருக்கிறேன்.
பெங்களூருவில் தங்கி இருக்கையில், தருணுடன் இப்போது கட்டிக்கொண்டிருக்கும் மேல் தளத்திற்கான உள் அலங்காரங்களுக்கென ஒருவரைப் பார்க்க நெடுந்தொலைவு பைக்கில் செல்ல வேண்டி வந்தது. எனக்கு பைக் பயணங்கள் உவப்பானதல்ல, பழக்கமில்லை என்பது முதன்மைக் காரணம் வேறு சில கசப்பான காரணங்களும் கூடவே உண்டு.
மூத்த சகோதரர்கள் யாருமில்லை எனவே அவர்கள் பைக் வாங்கி ஓட்டி என்னை அழைத்துசெல்லும் சாத்தியங்கள் அற்ற இளமைப்பருவமே வாய்த்தது. அப்பா என்பவர் வாய்ச்சொல்லில் மட்டும்தான் வீரர் அவருக்கு சைக்கிள் கூட ஓட்டத்தெரியாது, எதிர்க்கும் திராணியற்றவர்கள் மீது கட்டற்ற வன்முறையை செலுத்துவதைத்தவிர ஏதுமறியாதவர் அவர்.
என்னைவிட 7 வயது இளையவனாகிய தம்பி விஜி வளர்ந்து பைக் ஓட்டக் கற்றுக்கொண்டபோது துரதிர்ஷ்டவசமாக நான் திருமணமாகி அபிதாபியில் இருந்தேன். பலவருடங்களுக்கு முன்பு புதுதில்லியில் ஒரு பிப்ரவரி மாதம் நடந்த பைக் விபத்து பெரும் வடுவாக வாழ்க்கையில் தங்கி விட்டது, எனவே பைக் பயணங்கள் எனக்கு எப்போதுமே ஒத்து வருவதில்லை. சென்னையில் எழுத்தாளரான நண்பர் ஒருவருடன் சிலவருடங்களுக்கு முன்னர் ஓரிரவு நீண்ட பைக் பயணமொன்று சென்றேன். அதை மட்டுமே மகிழ்வுடன் நினைவு கூற முடிகிறது.
இத்தனை காலத்தில் பயந்தபடி ஒரு பத்துமுறை பைக்கில் பயணித்திருப்பேன் அவ்வளவுதான். டாக்ஸியில் போகலாம் என்றதை மறுத்து , வற்புறுத்தி என்னை அன்று தருண் பைக்கில் அழைத்துச்சென்றான். தருணுக்கு பைக் அலாதிப்பிரியம் மிகக்கவனமாக ஓட்டுவான். அவனது நேபாளத்தோழி ரெஜினியின் ஹெல்மெட் வீட்டில் இருந்தது அதை அணிந்துகொண்டு அவன் பின்னால் அமர்ந்து கொண்டேன்.சாலைப்போக்குவரத்து அசமஞ்சமாகத்தான் எப்போதும் போல் இருந்தது ஆனாலும் முழங்கால்களுக்கருகில் வரும் கார்க்கதவுகளும், பேருந்துகளின் மாபெரும் சக்கரங்களும் அச்சமூட்டின.
அதிகாலையில் இருந்து , புறப்படும் வரை பெரியதிரையில் சஞ்சய் சுப்ரமணியனின் பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தோம். சாலைக்காட்சிகளில் மனதைக்குவிக்காமல் ‘’ அன்பே இன்பம் சேர்க்க மாட்டாயா’’ என்று சஞ்சய் உருகுவதை மீள் மீள மனதில் நினைத்துக்கொண்டே பயணித்தேன்.
அந்த அலுவலகத்தில் எங்களது வேலை முடிய மதியமாகிவிட்டது. தருணுக்கு பைன்லேபில் (நாம் அட்டை பரிவர்த்தனை செய்யும் அந்த பெட்டியில் பைன்லேப் என்று எழுதி இருப்பதை பிற்பாடுதான் கவனிக்கிறேன்) இடைக்காலப்பயிற்சி நடந்து கொண்டிருப்பதால் அவனுக்கு உபகாரச்சம்பளம் அளிக்கப்பட்டிருந்தது.எனவே அன்று எனக்கு அவன் மதிய உணவு ட்ரீட் தருவதாக மேலும் தொலைவுக்கு அழைத்துச் சென்றான்.
பெங்களூருவின் புறநகர்ப்பகுதியின், புறநகரில் ஒரு காட்டின் எல்லையில் இருந்தது அம்மச்சியுடைய கைப்புண்ணியம் என்னும் அந்த அழகிய கேரள உணவகம். எல் வடிவில் அமைந்திருந்த சிவப்புச்செங்கல் கட்டிடம், நடுவில் கூடத்தில் வளர்ந்திருந்த ஒரு அத்தி மரத்துக்கு இடைவெளி விட்டு அமைக்கப்பட்டிருந்தது சிவப்பு ஓடுகளிட்ட கூரை.
முதல் தளத்தின் வெளிப்புறத்தில் பெரிய புகைப்படத்தில் ஃபகத் ஃபாஸில் மேசையில் கையூன்றிக்கொண்டு வருபவர்களை புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தார். தென்னை மரங்களும் புல்வெளியுமாக அப்படியே கேரளாவில் இருக்கும் உணர்வளித்தது அந்த இடம், குறையில்லாமல் இருக்க தென்னங்கீற்றை அசைபோடும் யானையை நானே மனத்தில் வடித்து முற்றத்தில் நிறுத்தினேன். உள்ளே சேட்டன்கள் கரை வேட்டி கட்டிக்கொண்டு ஓர்டர் எடுத்துக்கொண்டிருந்தார்கள். எல்லா மலையாளத்திரைநடிகர்களும் புகைப்படங்களாக சுவரில் இருந்தார்கள்
பெரும்பாலும் மலையாளிகளே சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். சிறு குழுவாக வந்திருந்த பெண்களில் வைன் சிவப்பில் உடையணிந்திருந்த ஒரு சுருட்டை முடிக்காரி தருணை அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள். பதிமுகப்பட்டையிட்ட செந்நீர் ஒரு கண்ணாடிக் குடுவையில் வெதுவெதுப்பாக இருந்தது அந்த அத்தி மரத்தின் கிளைகளில்செயற்கை பொன்கொன்றைச் சரங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. எங்கிருந்தோ ’’ஒன்னாம் ராகம் பாடி’’, கேட்டது தொடர்ந்து’’ பிரமதவனம் வீண்டும்’’, அதையடுத்து தாஸேட்டனின் குரலில் மம்மூட்டியும் லாலேட்டனும் சுரேஷ்கோபியுமாய் உடனிருந்தார்கள்.
ஒரு உருளிச்சோறும், கேரளா மீல்ஸும் கறிமீன் பொளிச்சதும் ஓர்டர் செய்தோம். இறுதியாக பாலடைப்பிரதமன். மறக்க முடியாத தருணின் ட்ரீட். முன்பு தருண் 10-ல் படிக்கையில் எனர்ஜி அம்பாஸடராக இருந்ததற்காக பத்தாயிரம் ரூபாய் பரிசை பள்ளியில் பெற்றான். அப்போது எனக்கு ஒரு அழகிய குளிர்கண்ணாடியும் குப்பண்ணாவில் ஒரு நல்ல அசைவ விருந்தும் பூமராங்கில் மரத்தட்டில் புகைந்துஎரிய கொண்டு வந்த ஒரு ஐஸ்கிரீமும் வாங்கிக்கொடுத்தான்.
சரண் ஐரோப்பாவில் வேலையில் சேர்ந்து சம்பளம் வாங்கியதும் என்னை தனிஷ்க் அழைத்துச்சென்று 6 இதழ் கொண்ட தாமரை வடிவ வைரமூக்குத்தியும், மரகதக் கற்கள் பதித்த மோதிரமும், உடன் லோகமாதேவி என்று பெயர் எழுதிய ஒரு காரும் வாங்கிக்கொடுத்தான். அதில்தான் மிகப்பெருமையாக இப்போது கல்லூரிக்குச்செல்கிறேன்.
எனவே நல்ல கேரள உணவுக்குப் பின்னர் கல்லாவில் விற்ற சக்கைச் சிப்ஸ் வாங்கிக்கொண்டு மீண்டும் ஹெல்மெட் அணிந்து வீடு திரும்பினோம். வழியெல்லாம் பெருநிறுவனங்களின் வாசலில் அடுக்கடுக்கான இலைகளுடன் நின்றிருந்தது டெர்மினாலியா மாண்டலி. ஏன் பங்களூர்காரர்களுக்கு இதன் மேல் இத்தனை பிரியம் என்று நினைக்குமளவுக்கு அந்த மரங்கள் அதிகமாக இருந்தன. சிக்னலில் வெகுநேரம் காத்திருக்கையில் ஒரு பெண் மனதிற்குள் எதையோ பாடிக்கொண்டு விரல்களால் தொடையில் தாளமிட்டபடி புன்னகையுடன் இருந்தாள், பையன்கள் எல்லா ஊர்களில் இருக்கும்படியே பொறுமையின்றி சந்துகளில் நுழைய முற்பட்டார்கள்,
ஒரு வளைவில் காத்திருக்கையில் குப்பைக் கூளங்களுக்குள்ளிருந்து ஒரு பூனைக்குட்டி கண்ணாடிக் கண்களால் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு பெரிய லாரியின் சக்கரங்கள் என் அருகில் வந்த போது நான் அதை பொருட்படுத்தாமல் வியர்வை பூத்திருந்த முகத்துடன் சஞ்சய் ’’கன்னத்தில் முத்தமிட்டால்’’ என்பதை நிறுத்தி நிதானமாக பாடுவதை எண்ணிக்கொண்டேன்.
ஒரு வழியாக மாலை வீடுவந்து சேர்ந்தபோது தருண் எப்படி இருந்தது இந்த நாள்? பைக் பயம் போயிருச்சா என்றான் ? என்றான். ’’நல்லாதான் இருந்தது ஆனா பயம் போகலை பயப்படாம இருக்க வழிபூரா நான் சஞ்சய் சுப்ரமணியணியனை நினைத்துக்கொண்டேன்’’ என்றேன்.
’’அடிப்பாவி கட்டிளங்காளை நான் முன்னாடி உட்கார்ந்திருக்கும் பொது நீ சஞ்சய்சுப்ரமணியனை நினைச்சுகிட்டு வந்தியா?’’ என்றான். நான் ’’ஆம்’’ என்றேன்.