லோகமாதேவியின் பதிவுகள்

Month: July 2025

தாலியா!

அகரமுதல்வனின் வாட்ஸ்அப் நிலைத்தகவலில்  ரத்தச்சிவப்பில் ஒரு குட்டி தாலியா மலரைப் பார்த்தேன். அத்தனை வசீகரமாக இருந்தது பார்க்க.  color wheel -ல் பச்சைக்கு நேர் எதிரில் இருப்பது சிவப்பு என்பதால் பச்சை இலைகளுக்கிடையில் தெரிந்த அந்த மலர் அழகான அழகாயிருந்தது.

எனக்குத் தாலியாக்கள் மீதும் பிரியம்தான். பள்ளி கல்லூரிக் காலங்களில் வீட்டு வாசலில் காலை நேரத்தில்   ஊட்டி ரோஜாவும் தாலியாக்களும் விற்கப்படும். நான் ஊட்டி ரோஜாக்களை விரும்பியதில்லை. அது ஒரு வாரம் வரை வாடாமலிருப்பதும் அடுத்தநாளில் இருந்தே இதழ்களில் விளிம்புகளில் கருப்புப் படிந்துவிடுவதும்,  கனமாக இருப்பதும் காரணமென்றாலும் முதன்மைக்காரணம் அது மலராமல் கூம்பியே இருப்பதுதான்.எனக்கு மலரென்றால் மலர்ந்திருக்க வேண்டும்.

தாலியா அப்படியல்ல குழந்தையொன்று சிரிப்பதைப் போல  முழுக்க மலர்ந்திருக்கும் அதில் பல நிறங்கள் இருந்தாலும் நான் அதிகம் தேர்ந்தெடுப்பது வெள்ளையும் இளஞ்சிவப்பும்தான். மித்ராவின் கல்லூரித்தோழர் அமல்ராஜ் கம்பீரமாக  ஒரு சைக்கிளில் பூக்களை விற்றுக்கொண்டு வருவார். கல்லூரிக்குச் செல்ல அரை மணி நேரம் முன்பு அவர் வீடு வீடாகப் பூக்களைச் சைக்கிளின் பின்னிருக்கும் கூடையில் வைத்துக்கொண்டு நிமிர்வுடன் வருவார். ஒருபோதும் அந்தச்செயலில் அவர் வருத்தமுற்றதும் தாழ்வாக உணர்ந்ததும் இல்லை. குளித்து நல்ல உடையணிந்து வரும் அவர் அப்படியே அதே உடையில் பின்னர் கல்லூரிக்கு குறித்த நேரத்தில் வந்துவிடுவார். பிற்பாடு அவர் உடற்பயிற்சி இயக்குனராகியதை அறிந்து கொண்டேன், அவரை, அவரது இளமைக்காலத்தை  அவருடன் பொருளாதாரம் படித்த   மித்ராவின் தங்கை நினைவு கூறுகிறாள் என்பதை  அவர் கற்பனை கூடச் செய்திருக்க  மாட்டார். தனக்கான செலவுகளுக்காகப் படிக்கையிலேயே ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்த அவர்மீது எனக்கு அப்போதும் இப்போதும் பெரும் மரியாதை உண்டு. 

தாலியாவுக்கு வருகிறேன். அப்படி நான் தாலியாக்களை பின்னலில் வைத்துக்கொண்டுதான் கல்லூரிக்குச் செல்வது வழக்கம். அரிதாக டிசம்பர் பூச்சரமும் வைப்பதுண்டு. பின்னல் நல்ல அடர்த்தியாக இடைவரை நீண்டிருக்கும். (அந்த அடர்ந்த நீண்ட கூந்தலைத்தான் சரணுக்கும் தருணுக்குமாகப் பிரித்துக் கொடுத்துவிட்டேன்).மித்ராவுக்கு என்னைக் காட்டிலும் நீண்ட அடர்ந்த பின்னல். இப்போது தாலியாக்களை பின்னலில் வைத்துக்கொள்ளும் பெண்களைப் பார்ப்பதில்லை.ஏன் பூச்சரம் வைத்துக் கொள்பவர்களும் அதிகமில்லை. 

அந்தப்புகைப்படத்தில் தாலியா அப்படி கொள்ளை அழகாக இருந்தது. அநேகமாக அகரமுதல்வன் அதை ஒரு மலை வாசஸ்தலத்தில் எடுத்திருக்கக்கூடும் ஏனெனில் உடனிருந்த புகைப்படத்தில் ஒரு ஆப்பிரிக்கன் லில்லியும் இருந்தது. இவையிரண்டுமே கடல்மட்டத்துக்கு 1000 அடி மேலே இருக்கும் பகுதிகளில் மட்டுமே செழிப்பாக வளரும்.

தாலியாக்கள் வெகுசுவாரஸ்யமான வரலாற்றைக் கொண்ட மலர்கள்.

மெக்ஸிகோவை பூர்வீகமாகக் கொண்ட இவை சூரியகாந்தியின் குடும்பமான அஸ்டரேசியைச் சேர்ந்தவை. தாலியா பேரினத்தில் சுமார் 50 சிற்றினங்களும் ஆயிரக்கணக்கான நிறங்களில் மலர்களும் இருக்கின்றன.

தாலியாக்கள் 14-லிலிருந்து 16-ம் நூற்றாண்டுவரை மீசோஅமெரிக்கப் பகுதியில் பெரும்பான்மையாக இருந்த பழங்குடி இனக்குழுக்களின் தொகுப்பான ஆஸ்டெக்குகளின் தாவரமாக மட்டுமே இருந்தது. ஸ்பானிஷ் படையெடுப்பின் பின்னரே தாலியாக்கள் ஐரோப்பாவிற்கு அறிமுகமாயின.

1525-ல் மெக்ஸிகோவிற்கு வந்த ஸ்பேனியர்கள் இந்த அழகிய மலரைப் பார்த்தார்கள் 1570-களில் மெக்ஸிகோவிற்கு ஸ்பெயினின் இரண்டாம் பிலிப் மன்னரால் அனுப்பப்பட்ட அவரது தனிப்பட்ட மருத்துவர் ஃப்ரான்சிஸ்கோதான் முதன் முதலாகத் தாலியாக்களை எழுத்தில் விவரித்தவர். மன்னரால் அந்த ப்பிரதேசத்தின் இயற்கைப் பொருட்களைக் குறித்து விரிவாக அறிந்துகொண்டு வரும்படி பிரான்சிஸ்கோ ஆணையிடப்பட்டிருந்தார். அச்சமயத்தில் தாலியாவின் வகைகளில் சிலவற்றின் கிழங்குகளைப் பழங்குடியினர் உணவாகப் பயன்படுத்துவதையும் ஃப்ரான்சிஸ்கோ ஆவணபப்டுதினார். 

தண்டுகள் உள்ளே காலியாக இருப்பதைக்குறிக்கும் “water pipe”, “water pipe flower”, “hollow stem flower”, “cane flower” போன்ற பெயர்களில் தாலியாக்கள் அப்போது அஸ்டெக்குகளின் மொழியில் அழைக்கப்பட்டன. 7 வருடங்கள் மெக்சிகோவின் தாவரங்களை அறிந்து ஆராய்ந்து முடிவுகளை நான்கு தொகுதிகளாகப் பிரசுரித்த ஃப்ரான்சிஸ் மிக அழகிய சித்திரங்களையும் கைப்பட வரைந்திருந்தார்.

Nova Plantarum, Animalium et Mineralium Mexicanorum Historia, என்னும் அந்த நூல் 1578-ல் வெளியானது. அந்த நூலில் தாலியாவின் இரு சிற்றினங்களை பிரான்சிஸ்கோ விவரித்திருந்தார்.( Dahlia pinnata & Dahlia imperialis)1615-ல் அவை லத்தீன மொழியாக்கம் செய்யபட்டு இரு தொகுதிகளாக வெளியானது.

1787-ல் இரத்தச்சிவப்புச் சாயம் அளிக்கும் cochineal பூச்சிகளைத் திருடிவருவதற்காக மெக்சிகோவிற்கு அனுப்பபட்ட  ஃப்ரெஞ்ச் தாவரவியலாளர் நிக்கோலஸ் (Nicolas-Joseph Thiéry de Menonville) இந்தப் பிரகாசமான மலர்களைக் குறித்தும் ஆவணப்படுத்தினார். நிகோலஸ் அவருக்குச் சொல்லி அனுபியப்டி  cochineal  பூச்சிகளி திருடவில்லை மாறாக அவற்றை மெக்ஸிகோ பழங்குடியினரிடமிருந்து விலைக்கு வாங்கி அவை வளரும் சப்பாத்திக்கள்ளி வகைகளைத் தாவரவியல் பூங்காவில் வளர்த்து அந்தபூச்சிகளை பெருகச்செய்து அதற்கான பாராட்டையும் பெற்றார். இன்றும் அந்தப்பூச்சிகள் அந்த சப்பாதிகள்ளிகளில் தன் வாழ்கின்றன. இவற்றினல் தான் அடர்சிவப்பு நிறம் “coccineus,” எனப்பெயர் பெற்றது. தாவரங்களின அறிவியல் பெயர்களில் காக்சினியா என்று இருப்பவைகளின் மலர்கள் எல்லாம் குருதிச்சிவப்பில் இருப்பதைப் பார்கக்லாம்.  அகரமுதல்வன் எடுத்த புகைப்படத்தில் இருப்பது Dahlia coccinea மலர்தான். ரத்தச்சிவப்பு தெட்சி மலரின் அறிவியல் பெயர் இக்ஸோரா காக்சீனியா.

பின்னர் பல வருடங்கள் தாலியாவின் நறுக்கப்பட்ட தண்டுகளும் விதைகளும் தொடர்ந்து ஐரோப்பாவிற்கு மெக்ஸிகோவிலிருந்து அனுப்பப்பட்டன. பின்னர் படிப்படியாக உலகநாடுகள் அனைத்திற்கும் தாலியா அறிமுகமானது. ஆயிரக்கணக்கான கலப்பின வகைகளும் உருவாகின.

தாலியா என்னும் இதன் பேரினப் பெயரிலேயே குழப்பம் நிலவியது. தாவர வகைப்பாட்டியலை நிறுவியவரான லின்னேயஸ் அவரின் மாணவரான  Anders Dahl, என்பவரைச் சிறப்பிக்கும் பொருட்டு தாலியா என்னும் பேரினத்தை வைத்தார் என பரவலாக நம்பப்பட்டது. ஆனால் தாலியா ஐரோப்பாவுக்கு அறிமுகமான 1789-க்கு 11 வருடங்கள் முன்பே லின்னேயஸ் இறந்துவிட்டார். மேட்ரிட் தாவரவியல் பூங்காவின் இயக்குனரான  Abbe Cavanilles,  தான் Anders Dahl யின் பெயரைச் சிறப்பிக்கும் பொருட்டு தாலியாவுக்கு வைத்தார் என்பது பிற்பாடு அறியபட்டது.

 1805-ல் ஜெர்மானிய தாவரவியலாளர்  கார்ல் (Carl Ludwig Willdenow, asserting) தாலியாவை  ஜார்ஜினா (Georgina) என்று பெயர் மாற்றம் செய்தார். 1810-ல் எழுத்துபூர்வமாக இம்மலர் மீண்டும் தாலியா எனக்குறிப்பட்டது.

கடல் மட்டதுக்கு மேல் 1,500 – 3,700 m உயரதில் செழித்து வளரும் தாலியாக்கள்  பனிப்பொழிவற்ற உலகின் எல்லா பாகங்களிலும் வளருகின்றன.

தாலியாக்கள் பல வருடம் மலரளிக்கும் பெரினியல் வகையைச் சேர்ந்தவை. அவற்றின் மலர் எனச் சொல்லப்படுவது உண்மையில் மலர்த்தலை என்னும் மஞ்சரிதான். மலர்த்தலைகள் பிரகாசமான வண்ணங்களில் இருக்கும் பெரும்பாலும் தாலியாக்களில் மணம் இருக்காது. மகரந்தச்சேர்க்கைக்கு பூச்சிகளைக் கவர பிரகாசமான அதன் வண்ணங்களே போதுமென்பதால் நறுமணம் இருப்பதில்லை.

இங்கிலந்தின் புகழ்பெற்ற ராயல் ஹார்டிகல்சர் அமைப்பு 1969-ல் சர்வதேச தாலியா பெயர்களின் பதிவேட்டை உருவாக்கியது இந்தp பதிவேடு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகிறது.(The International Register of Dahlia Names) தாலியாக்களின் உருவாக்கத்திலும் அவற்றின் உலகளாவிய பரவலிலும் மிக முக்கியப்பங்காற்றியவ்ராக நியூயார்க்கின் ஜார்ஜ் தோர் பர்ன் (George C. Thorburn) அறியபப்டுகிறார்.

1963-ல் தாலியா மெக்சிகோவின் தேசிய மலராக அறிவிக்கப்பட்டது.

ஒற்றை அடுக்கு, பல அடுக்கு , மிகப்பெரியவை, மிகக்குட்டியான மினி வகைகள், நாடாபோன்ற இதழ்கொண்டவை, வெளியடுக்கு பெரிதாகவும் உள்ளடக்கு சிறியதாகவும் இருப்பவை பந்துபோன்ற பொம்பன் (Pompon) வகைகள் என இப்போது சுமார் 5700 வகை தாலியாக்கள்  நீலத்தைத்தவிர மற்ற எல்லா நிறங்களிலும், நிறக்கலவைகளிலும் இருக்கின்றன.

எடின்பர்க் தோட்டக்கலைதுறை1846- ல் நீல நிற தாலியாக்களை உருவாக்குபவர்களுக்கு 2000 பவுண்டு பரிசு அறிவித்தது.அது இன்று வரை உருவாக்கபடவில்லை.

அதன் காரணம் தாவரவியலாளரல்லாதோருக்கு புரிந்துகொள்ளக் கடினமென்றாலும் எளிமையாகச் சொல்ல முயற்சிக்கிறேன்.

நீல நிறம் உருவாக ஆந்தோசையானின் என்னும் நிறமி தேவை. தாலியாக்களில் ஆந்தோசையானின்கள் உள்ளன எனினும் தூய நீல நிறம் உருவாக delphinidin என்னும் ஆந்தோசையானின் ஒரு வகை நிறமியில் 6 ஹைட்ராக்சைல் தொகுப்புகள் இருந்தாக வேண்டும் ஆனால்  இன்று வரையிலும் தாலியாக்களில் 5 ஹைட்ராக்சைல் தொகுப்புக்களே உருவாகி இருக்கின்றன.

பொதுவாகவே இயற்கையில் நீல நிற மலர்கள் மிக அரியவை . நூற்றாண்டுகளாகth தாவரப் பெருக்கவியலாளர்கள் முயற்சித்தும் இன்று வரை ட்யூலிப்களில் நீல நிற மலர்களைக் கொண்டு வர முடியவில்லை. இப்போது இருப்பவை எல்லாம் almost blue என்னும் வகையில் வருபவைதான். இயற்கையாக நீல நிறத்தில் ஹைட்ராஞ்சியா, கார்ன் மலர்கள், இமாலய பாப்பிகள் மற்றும் டெல்பீனியம் போன்ற  ஒருசிலமலர்களே இருக்கின்றன.

 பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்த தாலியா உலகின் மிக விரும்பப்படும் தோட்டமலராக  இருக்கிறது.

ரிதன்யா!

தற்கொலையாகி விட்டிருக்கும் ஒரு  ஆணவக்கொலை

ரிதன்யாவின் மரணம் செய்தித்தாளும் தொலைக்காட்சியும் இல்லாத வீடென்பதால் தாமதமாகத் தெரிந்தது. அவளது கடைசிக்குரல் பதிவுகளையும் துரதிர்ஷ்டவசமாகக் கேட்க வேண்டி வந்தது. 

அவள் குரலில் இருந்த குழந்தைத்தனம்தான் இப்போது வரை மனதைப் பிசைகிறது. உண்மையில் ரிதன்யாவுக்குத் தன்னை மாய்த்துக் கொள்வது என்றால் என்னவென்றே தெரியாமல் அதைச் செய்து கொண்டிருக்கிறாள்.

தன் அப்பாவுக்குத் தான் பூட்டி வைத்துவிட்டு வந்திருக்கும் ஒரு ட்ராயரில் இருக்கும் நகைகளை அத்தனை அறியாத்தன்மையுடன் மயில் தோடு ஒத்தை வளையல் அத்தை கொடுத்த செயின் என்று பட்டியலிடுகிறாள். அந்தக் குழந்தையின் அறியாமையை என்னவென்று சொல்வது?

அடுத்து தென்னைமரத்துக்கு வைக்கும் மிக வீரியமுள்ள விஷத்தை சாப்பிடப்போகிறாள், அந்த கொடும் நஞ்சு அவளை என்னவெல்லாம் செய்யும், சாவு என்றால் என்ன இதெல்லாம் ஒன்றுமே தெரியாமல் எல்லா கதவும் அவள் முன்னால் அறைந்து சாத்தப்பபட்ட தன்னிரக்கத்தில் நகைகளைப் பட்டியலிடுகிறாள் பாவம்.

அந்தக் குறிப்பிட்ட மருந்து மிகக் கொடுமையான விளைவுகளை உண்டாக்கியே உயிரைப்போக்கும் அதைச் சாப்பிட்டபின்னர் பிழைப்பது துர்லபம்.  பல வருடங்களுக்கு முன்பு   சின்னு மாமனின் மகன் மிக இளம் வயதில் கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட ஒரு தகராறில் மனமுடைந்து இதைச் சாப்பிட்டுவிட்டு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது நானும் உடன் இருந்தேன். அவன் துடித்த துடிப்பும் பட்டபாடும் அப்படியே இன்னும் நினைவிலிருக்கிறது. மருத்துவரிடம் அவனைக்காப்பாற்ற வழி இருக்கிறதாஎன்று கேட்டேன் ‘’ இல்லைங்க அந்த மருந்து உள்ளே போறப்பவே அது போற வழியெல்லாம் அழிச்சுட்டே போகும்’’ என்றார். ரிதன்யா சாப்பிட்டது  அதைத்தான்.

ரிதன்யா செல்வந்தர் வீட்டுப்பெண் என்பதாலும் இப்போது ஊடக வளர்ச்சி மிக விரிவாகியிருப்பதாலும் இந்த விஷயம் இத்தனை கவனம் பெற்றிருக்கிறது ஆனால் கொங்குப் பகுதியில் இது காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. பொள்ளாச்சி தென்னைநகரென்பதால் இந்த மருந்து மிக எளிதில் கிடைக்குமொன்றாகத்தான் இப்போது வரை இருக்கிறது. 

 முதுகலை படித்த, கார் ஒட்டத் தெரிந்த ரிதன்யா செய்துகொண்டது தற்கொலை அல்ல அவளுடையது ஆணவக்கொலைதான். அவளைப்போல் பலருக்கு இப்படி இங்கு நடந்திருக்கிறது நடந்துகொண்டிருக்கிறது நாளையும் நடக்கும்.

இன்றைய செய்தித்தாள்களில் மகள் வேற்றுச்சாதியில் கல்யாணம் செய்துகொண்டதால் ரயில் முன் பாய்ந்து இறந்து போன அரசு அதிகாரி தம்பதிகளைக் குறித்துப் பார்த்த போதும் இதுதான் தோன்றியது.  குடும்ப கெளரவம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் ஒன்றைக்காப்பாற்ற அந்தப் பெண்ணுக்கு வாழ்நாள் முழ்க்க வாழவே முடியாத அளவுக்குக் குற்ற உணர்வை அளிப்பதைத் தவிர அந்தத் தற்கொலைக்கு வேறெந்த நோக்கமும் இல்லை.

இந்தக் கிராமத்தில் நான் வீடு கட்டி வந்த புதிதில் பக்கத்தில் ஒரு வீட்டில் மகளுக்குக் கல்யாணம். வீடு கட்டத்துவங்கி பணமுடையால் அதை முடிக்க முடியாமல் அவசரமாகப் பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைத்தார்கள். பாதி முடிந்த அந்த வீட்டில் மணமக்களுக்கு முதலிரவு நடந்த அன்று இந்தப்பகுதி வழக்கமாகச் சந்தகை செய்து முதலில் மணமக்கள் சாப்பிட்டுவிட்டு அறைக்குச் சென்று விட்டார்கள் மீதமிருந்த சந்தகையில்   விஷம் கலந்து மணப்பெண்ணின் தம்பி மற்றும் பாட்டிக்கும் கொடுத்துத் தாங்களும் சாப்பிட்டுவிட்டு படுத்துக்கொண்டார்கள் பெற்றோர்கள் இருவரும்.

காலையில் தன்னை வந்து யாரேனும் கதவைத்தட்டி எழுப்புவார்கள் என்று வெட்கத்துடன் காத்திருந்து காத்திருந்து வேறு வழியின்றி கதவைத் தானே திறந்துகொண்டு வந்த அந்தப்பெண் பார்த்தது சடலமான பெற்றோர்களையும் உயிருக்குப்போராடும் தம்பியையும் பாட்டியையும்தான். எத்தனை முட்டாள் தனம் அத்தனை கடன் வாங்கி வீடுகட்டி மேலும் கடன் வாங்கி கல்யாணம் செய்துவைத்து அந்தக் கல்யாணத்தில் அந்தப்பெண் வாழவே முடியாதபடிக்கு அன்றைக்கே செத்துப்போனார்கள். அந்த முட்டாள் பெற்றோர்கள். உலகம் போய்க்கொண்டிருக்கும் திசைக்கு நேர் எதிர் திசையில் செல்பவர்கள் கொங்குப் பகுதி ஆட்கள்.

உலகம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்னுமறிதல் சிறிதும் இல்லாமல் தாங்கள் காலம் காலமாக  வசிக்கும் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள் இவர்கள்.

உண்மையில் ரிதன்யாவின் புகுந்தவீட்டினரையும் கணவன் கவினையும் வரிந்துகட்டிக்கொண்டு குற்றம் சொல்லும் அவளது சுற்றம் உட்பட்ட பொதுமக்கள் பலருமே அவள் அப்படி செய்ததற்கு காரணமான கொங்குப் பகுதியினரின் குடும்ப கெளரவத்திற்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்னும் முட்டாள்தனத்தினால் தான் இது நடந்தது என்பதைக் கவனிக்கவே இல்லையா? உண்மையில் ரிதன்யாவைக் கொன்றது இந்த வெற்றுஆணவம்தான். 

நம்ம வீட்டுப் பெண் நம் சாதியில்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் கல்யாண வாழ்க்கையில் என்ன இடர் வந்தாலும் அவள் ஒருபோதும் கணவன் என்னும் கடவுளை விட்டுவிட்டு திரும்ப வந்துவிடக்கூடாது என்பதை சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்ட, அப்படியும் தாங்கமுடியாமல் 5 முறை புகார் சொல்லி ஒவ்வொரு முறையும் அறிவுரையும் அறவுரையும் சொல்லி திருப்பி அனுப்பப்பட்ட ரிதன்யாதான் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள்.

இப்படி எனக்குப் பல பெயர்களில் பிறந்து , தற்கொலை செய்துகொண்ட ரிதன்யாக்களைத் தெரியும். இன்னும் செத்துப்போகமால் தென்னை மர விஷத்தை குடித்தால் உண்டாகும் விளைவுகளைக்காட்டிலும் நூறுமடங்கு துயரை, வேதனையை உள்ளுக்குள் சகித்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் ரிதன்யாக்களையும் அறிவேன். 

இந்க்த கொங்குப்பகுதி ஆட்களைக் காட்டுமிராண்டிகள் என முன்பு எண்ணியதுண்டு. ஆனால் பழங்குடித்தாவரவியலில் ஈடுபட்டப் பின்னர் காட்டில் இருப்பவர்களை கொங்குப்பகுதியினருடன் ஒப்பிட்டுக் கேவலப்படுத்தியதை எண்ணி வருந்தி இருக்கிறேன். ரிதன்யாவின் அப்பா அம்மா பேசுவதை அவ்வப்போது பல்லைக் கடித்துக்கொண்டுதான் பார்க்கிறேன். முத்தம் கொடுத்ததை, செல்லம் கொடுத்ததை, கல்வி கொடுத்ததை எல்லாம் சொல்லிச் சொல்லி அழும் அவர்கள், வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் தைரியத்தை அவளுக்கு அளிக்கவேயில்லை. என்னவானாலும் சகித்துத்கொண்டிருக்க வேண்டும் இல்லாவிட்டால்

எத்தனையோ செலவழித்துச் செய்த கல்யாணம் கேள்விக்குரியதாகிவிடும் குடும்ப கவுரவம் என்னும் மண்ணாங்கட்டி உடைந்துவிடும் என்றுதான் இங்கு எப்போதும் சொல்லப்படுமொன்று.இப்படியான பஞ்சாயத்துகள் இங்கு வாராவாரம் நடப்பதை நானறிவென். 

உடலெங்கும் கடித்துவைத்த ஒரு கணவனுடன் சகித்துக்கொண்டு வாழும்படி சொன்ன ஒரு தகப்பன் இருக்கிறார் அதைச் சொல்லிவிட்டு உடலிலிருந்த கடிபட்ட காயங்களுக்கு அந்தப் பெண்ணை மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றது அந்தக்குடும்பம்.

பெண்கள் மடியில் கட்டிக்கொண்டிருக்கும் ஒரு பெருஞ்சுமை இங்கு பெற்றோர்களுக்கு, அவர்களை கல்யாணம் செய்து கொடுத்து விட்டால் தீர்ந்தது சுமை. இதோ இந்த வாரம், இறுதி ஆண்டில் தாவரவியல் படித்துக்கொண்டிருக்கும் மாணவிக்கு கல்யாணம் என்று வந்தார்கள். எத்தனையோ எடுத்துச் சொன்னேன் மிக இளம் வயது இன்னும் அவள் டிகிரி முடிக்கச் சில மாதங்கள் தான் இருக்கிறது. கொஞ்சம் தாமதிக்கக்கூடாதா? அவள் டிகிரி முடித்து அக்கம்பக்கம் குழந்தைகளுக்கு ட்யூஷன் சொல்லிகொடுத்து   3000. 4000 சம்பாதிக்கும் வாய்ப்பையும் ஏன் கெடுக்கிறீர்கள் என்று எத்தனை சொல்லியும் கேட்கவில்லை.  இப்படி வருடா வருடம் நடந்துகொண்டே இருக்கிறது.

சாம்பவிக்கு நாங்கள் நேரடியாக இப்படி எதேனும் நடந்தால் சரி செய்யவே முடியாதென்றால் புறப்பட்டு வந்துவிடு நாங்கள் இருக்கிறோம் என்று ஒருபோதும் சொல்லிக் கொடுக்கவில்லை.   ஆனால் அவள் வாழ்வில் சவால்களைச் சந்திக்க போதுமான தைரியம் உள்ளவளாக வளர்ந்திருப்பதை உறுதி செய்திருக்கிறோம். 

இன்னொரு சாதியில் காதல் மணம் செய்து கொண்ட பெண்களை அடித்துக் கொன்றவர்களின் கதைகளை நான் இளமை முதலே கேட்டிருக்கிறேன்.

பல காதலை முறித்து, அந்தக் காதலை உறவினர்களின் முன்பாக   கூட்டம்போட்டுச் சொல்லும் பழக்கமும் இங்கு உண்டு. இப்படி விவாதித்து அந்தப் பெண்ணைச் சுயசாதியில் கல்யாணம் செய்துகொடுத்து அந்தக் கணவனுக்கு வெகுசீக்கிரம் விஷயம் தெரியவந்து பின்னர் காதலித்தவனை மறக்க முடியாமல், சந்தேகப்படும் கணவனுடன் வாழவும் முடியாமல் பிணம்போல் வாழும் மகளுக்கு வருடா வருடம் தவறாமல் சீர் செய்யும் பெற்றோரால்  ஆனதுதான் இந்தச் சமூகம். இந்தச் சமூகத்தில் வெற்று ஆணவம் மட்டுமே இருக்கிறது. அறிவென்பது  துளியும் இல்லை  உணர்வுகளுக்கோ உயிருக்கோ வாழ்க்கைக்கோ எந்தப்பொருளுமில்லாத ஒரு முட்டாள் சமூகம்இது. இதை இந்தச் சமூகத்தின் உள்ளிருந்துகொண்டே தான் சொல்கிறேன்.

சென்ற மாதம் கூடச் சொந்தத்தில்  ஒரு திருமணம், அந்த மாப்பிள்ளைப் பையன் வேறு சமூகப் பெண்ணுடன் காதலில் இருந்தான். காதலை முறித்து, என் பிணத்தைத் தாண்டித்தான் அவளைக்கலயாணம் செய்யப்போகனும் போன்ற அரதப்பழசான பொய்யான மிரட்டல்களால் அவனைப்பணிய வைத்து சொந்தச்சாதியில் கல்யாணம் நடந்தது.

மாப்பிள்ளை முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. அந்த அறியா மணப்பெபெண் மலர்ந்து சிரித்தபடி மேடையில் இருந்தாள். எப்படி அவளுடன் அவன் மகிழ்ந்து வாழ்க்கையை நடத்துவான்? மாப்பிள்ளையின் பெற்றோர் வாய்கொள்ளாச் சிரிப்புடன் வரேவேற்பில் இருந்தார்கள். சாப்பாடெல்லாம் பரவாயில்லிங்களா? என்று என்னிடம் கேட்டார், தலையசைத்துவிட்டு வந்தேன். அந்த முறிந்த காதலில் இருக்கும் அந்தப் பெண்ணின் மனநிலையையும், அவளை ஏமாற்றியதாகி விட்டிருக்கும் நிலையில் இருக்கும் அந்தப் பையனின் மனதையும் எண்ணிக்கொண்டேன்

எனக்கு ஏதேனும் ஒரு அதிகாரம் கிடைத்தல் இந்தச்சாதியின் பெருசுகளை ஆண் பெண் வேறுபாடில்லாமல்    அப்படியே அள்ளிப் போட்டு அந்தமானுக்கப்பால் இருக்கும் ஒரு தனித்தீவில் கொண்டு போய் விட்டுவிடுவேன்.

என் மாணவர்களிடம் இதைக் குறித்து பேசினேன். ஒருவேளை துரதிர்ஷ்டவசமாக மணவாழ்வில் இடர்கள் வந்தால், சரி செய்யவே முடியாதென்றால் வெளியே வந்துவிடுங்கள் பெற்றோரிடம் செல்ல முடியாதென்றால் என் வீட்டுக்கு எந்நேரமானாலும் வந்துவிடுங்கள் கதவுகள் திறந்திருக்கும். ஒருவேளை அச்சமயத்தில் நான் உயிருடன் இல்லை என்றால் இந்தச் சமூகத்தின் சாயல்கூட இல்லாத என் மகன்கள் என்னைக் காட்டிலும் கதவை அகலத்திறந்து வைத்திருப்பார்கள் என்றேன்.

நண்பர் கார்த்திக் வேலு (சிட்னி) எழுதியிருக்கும் பதிவையும் இணைத்திருக்கிறேன்.

https://www.facebook.com/share/19LbTT4U1V/?mibextid=wwXIfr

அம்மச்சியுட கைப்புண்ணியம்!

கோடைவிடுமுறையில் சென்னையிலும் பங்களூருவிலும் இருந்தேன். (https://logamadevi.in/4222).

பெங்களூருவில் தங்கி இருக்கையில், தருணுடன் இப்போது கட்டிக்கொண்டிருக்கும் மேல் தளத்திற்கான உள் அலங்காரங்களுக்கென ஒருவரைப் பார்க்க நெடுந்தொலைவு பைக்கில் செல்ல வேண்டி வந்தது. எனக்கு பைக் பயணங்கள் உவப்பானதல்ல, பழக்கமில்லை என்பது முதன்மைக் காரணம் வேறு சில கசப்பான காரணங்களும்  கூடவே உண்டு.

மூத்த சகோதரர்கள் யாருமில்லை எனவே அவர்கள் பைக் வாங்கி ஓட்டி என்னை அழைத்துசெல்லும் சாத்தியங்கள் அற்ற இளமைப்பருவமே வாய்த்தது. அப்பா என்பவர் வாய்ச்சொல்லில் மட்டும்தான் வீரர் அவருக்கு சைக்கிள் கூட ஓட்டத்தெரியாது,  எதிர்க்கும் திராணியற்றவர்கள் மீது கட்டற்ற வன்முறையை செலுத்துவதைத்தவிர ஏதுமறியாதவர் அவர்.

என்னைவிட 7 வயது இளையவனாகிய தம்பி விஜி வளர்ந்து பைக் ஓட்டக் கற்றுக்கொண்டபோது துரதிர்ஷ்டவசமாக நான் திருமணமாகி அபிதாபியில் இருந்தேன். பலவருடங்களுக்கு முன்பு புதுதில்லியில் ஒரு பிப்ரவரி மாதம் நடந்த பைக் விபத்து  பெரும் வடுவாக வாழ்க்கையில் தங்கி விட்டது, எனவே பைக் பயணங்கள் எனக்கு எப்போதுமே ஒத்து வருவதில்லை. சென்னையில் எழுத்தாளரான நண்பர் ஒருவருடன் சிலவருடங்களுக்கு முன்னர் ஓரிரவு நீண்ட பைக் பயணமொன்று சென்றேன். அதை மட்டுமே மகிழ்வுடன் நினைவு கூற முடிகிறது.

  இத்தனை காலத்தில் பயந்தபடி ஒரு பத்துமுறை பைக்கில் பயணித்திருப்பேன் அவ்வளவுதான். டாக்ஸியில் போகலாம் என்றதை மறுத்து , வற்புறுத்தி என்னை அன்று தருண் பைக்கில் அழைத்துச்சென்றான். தருணுக்கு பைக் அலாதிப்பிரியம் மிகக்கவனமாக ஓட்டுவான். அவனது நேபாளத்தோழி ரெஜினியின் ஹெல்மெட் வீட்டில் இருந்தது அதை அணிந்துகொண்டு அவன் பின்னால் அமர்ந்து கொண்டேன்.சாலைப்போக்குவரத்து அசமஞ்சமாகத்தான் எப்போதும் போல் இருந்தது ஆனாலும் முழங்கால்களுக்கருகில் வரும் கார்க்கதவுகளும், பேருந்துகளின் மாபெரும் சக்கரங்களும் அச்சமூட்டின. 

அதிகாலையில் இருந்து , புறப்படும் வரை  பெரியதிரையில் சஞ்சய் சுப்ரமணியனின் பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தோம். சாலைக்காட்சிகளில் மனதைக்குவிக்காமல் ‘’ அன்பே இன்பம் சேர்க்க மாட்டாயா’’ என்று சஞ்சய் உருகுவதை மீள் மீள மனதில் நினைத்துக்கொண்டே பயணித்தேன். 

அந்த அலுவலகத்தில் எங்களது வேலை முடிய மதியமாகிவிட்டது. தருணுக்கு பைன்லேபில் (நாம் அட்டை பரிவர்த்தனை செய்யும் அந்த பெட்டியில் பைன்லேப் என்று எழுதி இருப்பதை பிற்பாடுதான் கவனிக்கிறேன்) இடைக்காலப்பயிற்சி நடந்து கொண்டிருப்பதால் அவனுக்கு உபகாரச்சம்பளம் அளிக்கப்பட்டிருந்தது.எனவே அன்று எனக்கு அவன் மதிய உணவு ட்ரீட் தருவதாக மேலும் தொலைவுக்கு அழைத்துச் சென்றான்.

பெங்களூருவின் புறநகர்ப்பகுதியின், புறநகரில் ஒரு காட்டின் எல்லையில் இருந்தது அம்மச்சியுடைய கைப்புண்ணியம் என்னும் அந்த அழகிய கேரள உணவகம். எல் வடிவில் அமைந்திருந்த சிவப்புச்செங்கல் கட்டிடம், நடுவில்  கூடத்தில் வளர்ந்திருந்த ஒரு அத்தி மரத்துக்கு இடைவெளி விட்டு அமைக்கப்பட்டிருந்தது சிவப்பு ஓடுகளிட்ட கூரை.

முதல் தளத்தின் வெளிப்புறத்தில்  பெரிய புகைப்படத்தில் ஃபகத் ஃபாஸில் மேசையில் கையூன்றிக்கொண்டு வருபவர்களை புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தார். தென்னை மரங்களும் புல்வெளியுமாக அப்படியே கேரளாவில் இருக்கும் உணர்வளித்தது அந்த இடம், குறையில்லாமல் இருக்க  தென்னங்கீற்றை அசைபோடும் யானையை நானே மனத்தில் வடித்து முற்றத்தில் நிறுத்தினேன்.  உள்ளே சேட்டன்கள் கரை வேட்டி கட்டிக்கொண்டு ஓர்டர் எடுத்துக்கொண்டிருந்தார்கள். எல்லா மலையாளத்திரைநடிகர்களும் புகைப்படங்களாக சுவரில் இருந்தார்கள்

 பெரும்பாலும் மலையாளிகளே சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். சிறு குழுவாக வந்திருந்த பெண்களில் வைன் சிவப்பில்  உடையணிந்திருந்த ஒரு சுருட்டை முடிக்காரி தருணை அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள். பதிமுகப்பட்டையிட்ட செந்நீர் ஒரு கண்ணாடிக் குடுவையில் வெதுவெதுப்பாக இருந்தது அந்த அத்தி மரத்தின் கிளைகளில்செயற்கை பொன்கொன்றைச் சரங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. எங்கிருந்தோ ’’ஒன்னாம் ராகம் பாடி’’, கேட்டது தொடர்ந்து’’ பிரமதவனம் வீண்டும்’’, அதையடுத்து தாஸேட்டனின் குரலில் மம்மூட்டியும் லாலேட்டனும் சுரேஷ்கோபியுமாய் உடனிருந்தார்கள்.

ஒரு உருளிச்சோறும், கேரளா மீல்ஸும்   கறிமீன் பொளிச்சதும் ஓர்டர் செய்தோம். இறுதியாக பாலடைப்பிரதமன். மறக்க முடியாத தருணின் ட்ரீட். முன்பு  தருண் 10-ல் படிக்கையில் எனர்ஜி அம்பாஸடராக இருந்ததற்காக பத்தாயிரம் ரூபாய் பரிசை பள்ளியில் பெற்றான். அப்போது எனக்கு ஒரு அழகிய குளிர்கண்ணாடியும் குப்பண்ணாவில் ஒரு நல்ல அசைவ விருந்தும் பூமராங்கில் மரத்தட்டில் புகைந்துஎரிய கொண்டு வந்த ஒரு ஐஸ்கிரீமும் வாங்கிக்கொடுத்தான்.

 சரண்  ஐரோப்பாவில் வேலையில் சேர்ந்து சம்பளம் வாங்கியதும்  என்னை தனிஷ்க் அழைத்துச்சென்று 6 இதழ் கொண்ட தாமரை வடிவ வைரமூக்குத்தியும், மரகதக் கற்கள் பதித்த மோதிரமும், உடன் லோகமாதேவி என்று பெயர் எழுதிய ஒரு காரும் வாங்கிக்கொடுத்தான். அதில்தான் மிகப்பெருமையாக இப்போது கல்லூரிக்குச்செல்கிறேன். 

எனவே நல்ல கேரள உணவுக்குப் பின்னர் கல்லாவில் விற்ற சக்கைச் சிப்ஸ் வாங்கிக்கொண்டு மீண்டும் ஹெல்மெட் அணிந்து வீடு திரும்பினோம். வழியெல்லாம் பெருநிறுவனங்களின் வாசலில் அடுக்கடுக்கான இலைகளுடன் நின்றிருந்தது டெர்மினாலியா மாண்டலி. ஏன் பங்களூர்காரர்களுக்கு இதன் மேல் இத்தனை பிரியம் என்று நினைக்குமளவுக்கு அந்த மரங்கள் அதிகமாக இருந்தன. சிக்னலில் வெகுநேரம் காத்திருக்கையில் ஒரு பெண் மனதிற்குள் எதையோ பாடிக்கொண்டு விரல்களால்  தொடையில் தாளமிட்டபடி புன்னகையுடன் இருந்தாள், பையன்கள் எல்லா ஊர்களில் இருக்கும்படியே பொறுமையின்றி சந்துகளில் நுழைய முற்பட்டார்கள், 

ஒரு வளைவில் காத்திருக்கையில் குப்பைக் கூளங்களுக்குள்ளிருந்து ஒரு பூனைக்குட்டி கண்ணாடிக் கண்களால் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு பெரிய லாரியின் சக்கரங்கள் என் அருகில் வந்த போது நான் அதை பொருட்படுத்தாமல் வியர்வை பூத்திருந்த முகத்துடன் சஞ்சய் ’’கன்னத்தில் முத்தமிட்டால்’’ என்பதை நிறுத்தி நிதானமாக  பாடுவதை எண்ணிக்கொண்டேன். 

ஒரு வழியாக மாலை வீடுவந்து சேர்ந்தபோது தருண் எப்படி இருந்தது இந்த நாள்? பைக் பயம் போயிருச்சா என்றான் ? என்றான்.  ’’நல்லாதான் இருந்தது ஆனா பயம் போகலை பயப்படாம இருக்க வழிபூரா நான் சஞ்சய் சுப்ரமணியணியனை நினைத்துக்கொண்டேன்’’ என்றேன்.

’’அடிப்பாவி கட்டிளங்காளை நான் முன்னாடி உட்கார்ந்திருக்கும் பொது நீ சஞ்சய்சுப்ரமணியனை நினைச்சுகிட்டு வந்தியா?’’ என்றான். நான் ’’ஆம்’’ என்றேன். 

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑