லோகமாதேவியின் பதிவுகள்

Month: November 2025

லைக்கன்கள்-Lichens!

இன்று காலைதான் புன்னை மரத்தில் crustose லைக்கன்கள் வளர்ந்திருப்பதைப்பார்த்தேன். ஏகத்துக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. பாசிகளும் பூஞ்சைகளும் இணைந்து வாழும் கூட்டுயிரிகளான லைக்கன்கள் எனப்படும் கீழ்நிலைத்தாவரங்கள் தூய சூழல்களில் மட்டுமே வளர்பவை. வேர்களற்ற இவை நேரடியாகக்காற்றிலிருந்து உணவையும் நீரையும் உறிஞ்சிக்கொள்பவை எனவே மாசுபட்ட்ட சூழலில் இவை வளரவே வளராது. இந்தத் துண்டு நிலத்தில் 17 வருடங்களாக உரங்களோ பூச்சிக்கொல்லிகளோ ரசாயன மருந்துகளோ எதுவுமே பயன்படுத்தாமல் இருந்ததில் இப்போது லைக்கன்கள் வளர்ந்திருக்கின்றன. தூய சூழல் இருக்கும் இடம் இந்த வீடுஎன்பதை இந்த லைக்கன்கள் காட்டுகின்றன.

இயற்கையான இடங்களில் வளர்ந்திருக்கும் லைக்கன்கள் அந்தசூழல் மாசுபடும் போது,மெல்ல மெல்ல அங்கிருந்து மறைந்துவிடுவதால் அவற்றிற்கு pollution indicatorஎன்றே பெயருண்டு. crustose, foliose fruticose எனப்பலவகை லைக்கன்கள் உண்டு வீட்டில் இருப்பது crustose.

தேவி ஹேப்பி!

Dr.B ஜெயமோகன்

ஜெ தளத்தில் மதிப்புறு முனைவர் பட்டம் அவருக்கு வழங்க விருப்பதாக செய்தி வந்ததுமே  அவருக்கு ஒரு வாழ்த்துச்செய்தி மின்னஞ்சலில் அனுப்பிவிட்டு  தக்‌ஷசீலா பல்கலைக்கழகத்துக்குச் செல்லவேண்டும் என முடிவெடுத்தேன். ஜெ மீது இருக்கும் மரியாதை ஒரு பக்கம், முனைவர் பட்டத்தின் மீது இருக்கும் மரியாதை மறுபக்கம் என எனக்கு இந்த நிகழ்வு மிக முக்கியமானதாக இருந்தது. 

முனைவர் பட்டத்தின் மீதான வசீகரம் எனக்கு இன்னுமே குறையாமல் அப்படியே இருக்கிறது. பாரதியார் பல்கலைக்கழகத்துக்குச் சென்று முதுகலை தாவரவியல் படிப்பில் சேரும் போது முனைவர் பட்ட ஆய்வுகளைக் குறித்தெல்லாம் எதுவுமே தெரியாது. அங்கு சென்று அதைத் தெரிந்துகொண்டு அந்தபட்டத்தின் மீது பித்துப்பிடித்ததை ஒரு கட்டுரையாகவே எழுதியிருக்கிறேன். 

நான் முதுகலை வகுப்பில் சேர்ந்து ஒரு வாரத்திலேயே  tribal pulse -ல் ஆய்வு செய்த ராஜாராம் என்பவரின் முனைவர் பட்டத்துக்கான வாய்மொழித்த்தேர்வு நடந்தது.  எல்லா மாணவர்களும் வரவேண்டும் என்று சொல்லப்பட்டது, என்னவோ மீட்டிங் என நானும் போய் உட்கார்ந்திருந்தேன்,   அப்போது துணைவேந்தராக ஜெனிடிக் எஞ்சினீயரான மாரிமுத்து இருந்தார்.அவரும் அரங்கில் இருந்தார். ராஜாராம் அண்ணன் அவரது ஆய்வு முடிவுகளை வழங்கினார் நான் அசுவராஸ்யமாக கையில் என்னவோ சாப்பிடக் கொடுத்திருந்தார்கள் அதை பின் வரிசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். 

திடீரென இனிமேல் ராஜா ராம் டாக்டர் ராஜாராம் என அழைக்கப்படுவார் என்று துணைவேந்தர் சொல்ல அனைவரும் பலமாக கைதட்டியதும் பித்துபிடித்தது போலானது. 12ம் வகுப்பு முடிந்ததும் டாக்டருக்கு படிக்க விரும்பினேன்.லட்சக்கணக்கில் செலவாகும் முடியவே முடியாது என்று வீட்டில் சொல்லிவிட்டார்கள். பிறகு கால்நடை மருத்துவமாவது படிக்கக்கேட்டேன் விவசாயப் பல்கலைக்கழகத்தில் அந்தப்படிப்பு படிப்பவர்கள் காக்கி பேண்ட் ஷர்ட் போடவேண்டும். நம்ம குடும்பத்துப் பெண்கள் பேண்ட் ஷர்ட் போடுவதா என அதுவும் கைவிட்டுப் போனது. 

எனவே தாவரவியல் படித்தும் டாக்டர் ஆகலாம் என்பது அன்றிலிருந்து ஒரு ஜுரம் போல என்னைப் பிடித்துக்கொண்டது, பிறகு நான் தென்னை நார்க்கழிவில் ஆய்வு செய்து மூன்றே வருடங்களில் முனைவராகி டாக்டர் என்று பெயருக்கு முன்னால் போட்டுக்கொண்டது தனிக்கதை.  இந்தக்கல்லூரியில் வேலைக்குச்சேர்ந்த புதிதில் கையெழுத்திடுகையிலும்  பெயருக்கு முன்னால் dr என்று போட்டு அப்போது துறைத்தலைவராக இருந்த ss sir  லோகமாதேவி, இங்க வா என்ன  சைன் போடும்போதும் இப்படி  டாக்டர்னு போடுவியா என்று ஒரு நாள் கடிந்துகொண்டபோதுதான் அது தவறென்று தெரிந்தது.;)

எனினும் நான் ஊசி போடும் டாக்டராக இல்லாமலிருந்தது மிகத்தாழ்வாக எண்ணப்பட்ட கதையும் நடந்தது அதை எழுதிப்பிரசுரித்திருக்கிறேன்.(https://solvanam.com/2021/02/27/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae/)

 எனவே இந்த விழாவுக்குப் போவதென்று முடிவு செய்து கோவையிலிருக்கும் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் ஒருவர் என்னை அழைத்துப்போவதாகவும் மற்றொருவர் உடன் இணைந்துகொள்வதகவும் சொன்னார்கள். நம்பினேன்.  

நவம்பர் விடுமுறைக்காலம் என்பதால் ஒத்துக்கொண்ட ஒரு நிகழ்வுக்காக இடையில் சென்னை செல்லவேண்டி இருந்தது சென்னையிலிருந்து வந்த அன்று கல்லூரியில் விடைத்தாள் திருத்தும் பணி. மறுநாள் திண்டிவனம் செல்லவேண்டும். சென்னையிலிருந்தே  கோவை நண்பர்களிடம் பேசியபோது கட்டாயம் போகலாம் என்று சொன்னதால் அதைக்குறித்து கவலையில்லாமல் இருந்தேன், ஆனால் அன்று மாலையில், என்னை அழைத்துச் செல்வதாக சொன்னவர்  பல்கலைக்கழக நிகழ்வன்றே அவரது தொழில் சார்ந்த ஒரு மீட்டிங் இருப்பதால் அநேகமாக வர முடியாது என்றார். திகைப்பாக இருந்தது அப்படி கட்டக்கடைசியில் சொன்னால் நான் மாற்று ஏற்பாடுகள் கூட செய்யமுடியாது.

உடன் வருவதாகச்சொன்ன மற்றொருவர் நான் அழைத்துக்கேட்ட பின்னர் கேப்பிட்டல் லெட்டரில் NO என்று பதில் அனுப்பினார். 

அத்தனை தூரம் தனியே செல்வதும் தனியே அறை எடுத்துத்தங்குவதும் எளிதல்ல. ஒரே நாள் நிகழ்வுகளுக்கு நான் யாரையும் சார்ந்திருப்பதில்லை ஆனால் இது அப்படியல்ல எனவே நிஜமாகவே மனமுடைந்தேன். 

மாலை சரண் தருணிடம் வீடியோ அழைப்பில் பேசும் போது கண்கலங்கினேன். சரண் ’’உனக்கு தனியா போக என்ன கஷ்டம்? நான் ரூம் போட்டுத்தரேன்’’ என்றான், மகன்கள் ஒருபோதும் நான் மனக்கஷ்டப் படுவதை  அனுமதிப்பது இல்லை. கூடவே சரண் நான் கோவை நண்பர்களைக் குறித்து குறைப்பட்டுக் கொண்டபோது ’’யாரையும் குறையா சொல்லாத மீ, அவங்களுக்கு என்ன நெருக்கடியோ  விடு, நான் உன்னை எப்படியும் அனுப்பறேன் , பாண்டிச்சேரிக்கு போய் அங்கே தங்கிட்டு அங்கிருந்து 1மணி நேரத்தில் அந்தபல்கலைக்கழகம் இருக்கும் போயிட்டு வந்துரு செலவைப் பத்தியெல்லாம் கவலைப்படாதே உனக்கும்,  டிரைவருக்கும் தனித்தனியா நல்லரூம் போட்டுத்தறேன்’’ என்றான் சரணின் மனமுதிர்ச்சி எப்போதுமே என்னை ஆச்சர்யப்படுத்தும்,

 நான் தயங்கினேன், உடனே தருண் ’’ மீ நான் 3 நாள் லீவ் போடறேன் இன்னைக்கு நைட் கிளம்பி பஸ்ஸில்  பொள்ளாச்சி வரேன் காலியில் நேரத்திலயே புறப்படலாம் நான் உன் கூட வரேன் கவலைப்படாமல் வா ஜாலியா போயிட்டு வரலாம்’’ என்றான். தருண் எப்போதுமே சரணைப்போலவே படிப்பில் அக்கறை கொண்டவன் வருகை 100 சதவீதம் இருப்பதில் மிகக் கவனமாக இருப்பவன் ஆனாலும் 3 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு இரவே புறப்பட்டான். 

நானும் கல்லூரியில் விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து வெளியூரிலிருந்து வந்த பேராசிரியர்களுக்கெல்லாம் சன்மானத்தொகையை வாங்கிக் கொடுத்து அவர்களை அனுப்பவே பின்மாலையானது. பின்னர் கார் டயர் சோதித்து பெட்ரோல் டேங்க் நிரப்பி வீடுவந்து சேர்ந்து  கைக்குக்கிடைத்த உடைகளை அவசரமாக எடுத்து வைத்து உறங்கச் செல்லும்போது, டிரைவர் அழைத்து தனக்கு காய்ச்சலென்றும் பாண்டிச்சேரி வரமுடியாதென்றும் சொன்னான்.  அயர்ந்துபோனேன். எத்தனை தடங்கல்கள்

பிறகு 10, 15 ஆக்டிங் டிரைவர்களைக் கேட்டு அலுத்துப்போய் எப்படியோ ஒருவனைப்பிடித்தேன். தருண்  டிரைவர்  கிடைக்கலைன்னா நானே ஒட்டிட்டுவரேன் என்றான் எனினும் இரவெல்லாம் பயணித்து வந்து மீண்டும் 450கிமீ ஓட்டுவது எளிதல்ல என்பதால் ஒரு டிரைவரை அமர்த்திக்கொண்டேன். 

மறுநாள் காலை நல்ல மழை. 8 மணிக்குப் புறப்பட்டு அருமையான சாலையில் பொறுமையாகப்  பிடித்த பாடல்களைக்கேட்டபடி பயணித்து மதியம் 3 மணிக்கு பாண்டிச்சேரி வந்தோம். 

சரண் ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலும்  அறையும் மிக நன்றாக இருந்தது. நல்ல குளிர், மாலை கடற்கரைக்கு சென்றோம் நானும் தருணும்.  

பாண்டிச்சேரி அத்தனை ஜனத்திரள் இல்லாமல் இருந்தது டீக்கடைகளில் துணிக்கடைகளில் சாலைகளில் எங்குமே கூட்டமில்லை, 70-களில் சென்னை இருந்தது போல் என்று நினைத்துக்கொண்டேன். கடற்கரையிலும்  கூட்டமில்லை.

கடலைப்பார்த்தபடி ஒரு தம்பதி பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள். அந்தி சாய்ந்துகொண்டிருந்தது மேகமூட்டமாகவும் இருந்ததால் வானும் கடலும் இணைந்து அவர்களுக்கெதிரே கருநீலத்தில் ஒற்றைப்பெரும் பரப்பாய் விரிந்திருந்தது. தருண் அவர்களை பின்னாலிருந்து அழகாக ஒரு புகைப்படம் எடுத்தான்.  முகம் தெரியவில்லை என்றாலும் அவர்கள் அனுமதி இல்லாமல் எடுத்ததால் அவர்களிடம் நானும் அவனுமாகப்போய் அதைக்காட்டி அவர்கள்  வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி விட்டு புகைப்படத்தை அழித்துவிடுகிறோம் என்று சொன்னோம் இருவரும் ஒரே குரலாக போட்டோ எங்களுக்கு வேண்டாம்  அழித்துவிடுங்கள் என்றார்கள். 

எனக்கு ஒரே ஆச்சர்யம் ’’அத்தனை அழகான புகைப்படம் அது அதைப்போய் வேண்டாம்னு சொல்றாங்களே? என்னை யாராவது இப்படி எடுத்திருந்தா அதை ஃப்ரேம் போட்டு வீட்டில் மாட்டி இருப்பேன்’’ என்று புலம்பிக்கொண்டெ வந்தேன் தருண் மெதுவாக ’’இல்லம்மா ஒருவேளை அவங்க கணவன் மனைவியா இல்லாமல் கூட இருக்கலாமில்லையா ஏதோ நிம்மதியா உட்கார்ந்து பேசிட்டிருந்தாங்க நாம போட்டோ எடுத்திருக்கக்கூடாது விடு’’ என்றான்.  இந்த மனமுதிர்ச்சியும் ஆச்சர்யமாக இருந்தது.

கடற்கரையில்தான் விஷ்ணுபுரம் நண்பர்கள் ஒரு பெரும் கூட்டமாக பாண்டிச்சேரி வந்திருப்பதை தெரிந்துகொண்டேன், எல்லாருமே கடற்கரையில் இருந்தார்கள். ஜெ அத்தனை நேரம் அங்கே இருந்துவிட்டு அப்போதுதான் புறப்பட்டார் என்றார்கள்.

நடந்து, டீ குடித்து புகைப்படமெடுத்துக்கொண்டு பிரிந்தோம். 

கடற்கரை முழுக்க கற்பாறைகள் இருந்ததால் கடல்நீரில் கால் நனைக்க முடியவில்லை. கால் நனைக்காமல் பிறகென்ன கடல்? நான் ஆர்வமிழந்து திரும்பலாம் என்றேன். கடற்கரையெங்கும் கொகோலோபா யுவிஃபெரா என்னும் கடல் திராட்சை மரங்கள் நின்றன கூடவே தென்னையும் புன்னையும் பூவரசும் கொஞ்சமாக.

அறைக்கு வந்து ஐஸ் கட்டிபோல் சில்லிட்டிருந்த தரைக்குப் பயந்து கட்டிலிலேயே அமர்ந்துகொண்டு இரவுணவை வரவழைத்து சாப்பிட்டோம்.

மறுநாள் காலையில் மணக்குளம் விநாயகர் கோவில் போனோம். பிரபலமான கோயில் என்றார்கள். அல்லியும் தாமரையும் அருகும் கட்டுக்கட்டாக விற்றுக்கொண்டிருந்தார்கள். சேவித்துவிட்டு வெளியே வருகையில் கொஞ்சம் செவ்வல்லி மலர்களை வாங்கிக்கொண்டேன். கோவிலுக்கு உள்ளே போகையில் அல்லிகளைக் கொண்டுபோனவர்கள் என்னை விநோதமாகப் பார்த்தார்கள். 

வாசலில் வெண்பொங்கல் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நானும் தருணும் தங்கி இருந்த ஹோட்டலில் காம்ப்ளிமென்ட் காலை உணவை சாப்பிட்டிருந்தோம். அதிலும் இந்த வாரம் சொல்வனத்துக்கு ஜெ வும் அருணாவும் மேப்பிள் மரங்களுக்கிடையில் நின்றிருந்த புகைப்படங்களைப் பார்த்ததால் உணவு குறித்த தொடருக்கு அடுத்ததாக மேப்பிள் சிரப் பற்றி எழுதலாம் என்று முந்தினநாள் இரவுதான் தருணிடம் சொன்னேன். காலை உணவில் மேப்பிள் சிரப்பும் பேன்கேக்கும் வைத்திருந்தார்கள். நான் முதன்முதலாக அங்குதான் சுவைத்தேன் அதை.  எனவே பசிக்கவில்லை.

பொங்கலை தொன்னையில் நிறைத்து அடுக்கி வைத்திருந்தார்கள் அத்தனை வேண்டாம் ஆனால் கோயில் பிரசாதம் சாப்பிடவேண்டும் என்பதற்காக கொஞ்சமாக வாங்கிக் கொள்ளலாம் என்று அருகில் சென்றேன். 

பொங்கலைக் கொடுத்துக்கொண்டிருந்த இருவரில் ஒரு பெண் முகத்தை சிடுசிடுவென வைத்துக்கொண்டு ’’அந்தப்பக்கம் வாங்க’’ என்றார். நான் ’’எனக்கு அத்தனை வேண்டாம் எனவே காலித்தொன்னையை எடுத்துக்கொண்டு கொஞ்சமாக வாங்கிக் கொள்கிறேன்’’ என்று சொல்லி தொன்னையை எடுத்தேன் அவர் மீண்டும் நான் புரிந்துகொள்ளவில்லை என்று நினைத்து ’’அந்தப் பக்கம் வச்சிருக்கும்மா’’ என்றர் சிடுசிடுப்புடன் நான் பொறுமை இழக்காமல் எனக்கு அத்தனை வேண்டாம் என்று சொல்லி ஒரு ஸ்பூன் அளவு வாங்கிக் கொண்டேன். நானும் தருணுமாகச்சாப்பிட்டோம். சுவை அபாரமாக இருந்தது. உணவு அளிப்பவர்கள் கொஞ்சம் மனமுவந்து முகத்தில் சிரிப்பை கொண்டு வந்தாலென்ன? 

பின் அச்சுபிச்சு என்று என்னன்னவோ விற்கும் கடைகளுக்குச் சென்று சுற்றிப் பார்த்தோம். எங்கெங்கிலும் மதுபானக்கடைகள் இருந்தன வடிசாலைகளும் நிறைய. பெண்கள் எல்லோருமே பேரழகாக, மிகப்பொருத்தமாக அழகிய நவீன உடைகளில் இருந்தார்கள். தருணை விட நான்தான் பெண்களை அதிகமாக வேடிக்கை பார்த்தேன். தருண் பாண்டிச்சேரி போன்ற ஒரு இடத்திற்கு தனது  இளமையின் உச்சத்தில் அம்மாவுடன் வரவேண்டி இருந்த துயரை அவ்வப்போது சொல்லிச் சொல்லி வருந்தினான். ’’இன்னொரு நாள் நண்பர்கள் கூட வந்துக்கோடா இப்ப என்ன பெங்களூருவில் இருந்து பக்கம்தானே?’’ என்று சமாதானம் பண்ணினேன். 

முற்பகல் 11. 45-க்கு 5 கார்களில் பாண்டிச்சேரி நண்பர்கள் இணைந்து பல்கலைக்கழகம் செல்லலாம் என நண்பர் சிவாத்மா தெரிவித்திருந்தார். எனவே குறிப்பிட இடத்துக்கு வந்தோம். அங்கிருந்து எல்ல்லாருமாக பல்கலைக்கழகம் சென்றோம். மாபெரும் கட்டிடங்களால் ஆகி இருந்தது பல்கலைக்கழகம்.

வாசலிலிருந்தே ஜெ வுக்கான வாழ்த்துப்பதாகைகள் வரிசையாக இருந்தன. அகரமுதல்வன், அரங்கசாமி, சக்திகிருஷ்ணன், ஈரோடு கிருஷ்ணன், விஜயசூரியன்,ரேணு,  வேணு வேட்ராயன், குளித்தலை ஷண்முகம், மூர்த்தி, மணிமேகலை,  அஜிதன், தன்யா , சைது, நவீன், மானஸா, க்ருபா, செல்வேந்திரன், சிறில் அலெக்ஸ், குருதிப்பலி செந்தில் என எல்லாருமே இருந்தார்கள்;  

எல்லோருமே குடும்ப விழாவுக்கான மனநிலையில் இருந்தோம். நான் உள்ளே வரும்போது ஜெ வும் அருணாவும் மதிய உணவுக்காக அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நான் ஜெ வுக்கு வாழ்த்துச் சொன்னேன். தருண் அவருக்கு கைகுலுக்கி வாழ்த்தி தெரிவித்தான். 

எங்கள் அனைவருக்குமே உணவு தயாராக இருந்தது. சாப்பிட்டுவிட்டு நிகழ்வு அரங்கிற்கு வந்தோம். முந்தின நாளே அந்தப்பல்கலைக் கழகத்தைச்சேர்ந்த மகாகவி என்னும் ஒரு பெண் என்னை அழைத்துப் பேசி இருந்தாள். நாங்கள் அவசரமாக இடம்பிடித்து அமர்ந்து கொண்டோம்.விழா சிறப்பாக நடந்தது. ஜெ வரும்போதும் பேசும் போதும் அவரைக்குறித்து ஆவணப்படம் போடப்பட்டபோதும் பட்டம் அளிக்கப்பட்ட போதும் ரஜினி படத்துக்கு ரசிகர்கள் செய்வதுபோல் நாங்கள் கூச்சலிட்டு கைதட்டி கத்திக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். மாணவர்கள் கூட அமைதியாக இருந்தார்கள்.

ஜெ சுருக்கமாக ஆங்கிலத்தில் பேசினார். பி டி உஷாவும் இருந்தார் அவரும் சுருக்கமான உரைதான்.  விழா முடிந்து ஜெ வும் முக்கியஸ்தர்களும் உள்ளே சென்றார்கள். ஜெ கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு சென்றார்.

நானும் தருணும் இன்னும் சிலருமாக அவரைச்சந்திக்க அங்கே செல்லமுயன்றபோது ஒரு பெண் குறுக்கிட்டு தடுத்து ’’யாரைப் பார்க்கணும்? என்றாள் நான் ’ஜெ’ வை என்று சொன்னேன். அவரைப்பார்த்து ’’விஷ் பண்ணவா? என்றாள்.  ‘’ஆம்’’ என்றேன். ’’மேம் அவர் இப்போ கான்ஃபெரென்ஸ் ஹாலில் இருக்கார் அங்கெல்லாம்’’ என்று அவள் சொல்லத் துவங்கையிலேயே உள்ளிருந்து விஷ்ணுபுரம் நண்பர் ஒருவர் வேகமாக வெளியே வந்து என்னிடம் ’’ஜெ எல்லாரையும் உள்ளே வரச்சொல்லறார்’’ என்று கூவினார். திகைத்துப்பார்த்துக் கொண்டிருந்த அந்தப்பெண்னை சற்றே விலகி இரும் பிள்ளாய் என்று சொல்லிவிட்டு நானும் மற்றவர்களும் திமு திமுவென உள்ளே போய் ஜெ வை சூழ்ந்துகொண்டோம்

ஜெ உற்சாகமாக இருந்தார். முகம் கொள்ளாத சிரிப்பு வழக்கம் போல. அவருக்கு பொன்னாடை போர்த்துவதும் புகைப்படம் எடுப்பதும் வெடித்துச் சிரிப்பதுமாக டிபிகல் விஷ்ணுபுர கூடுகை அது. ’’எல்லாரையும்  உள்ளே வரச்சொல்லுங்க  எல்லாரையும் வரச்சொல்லுங்க’’ என்று  ஜெவும் மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டிருந்தார். 

அந்தப்பல்கலைக்கழகம் இப்படி ஒரு முக்கியஸ்தரைச் சுற்றி இந்தனை பேர்  கூட்டமாக நின்று கட்டித் தழுவிக் கொண்டாடுவதை அதுவரையிலும் பார்த்திருக்க மாட்டர்கள் இனியும்  பார்க்கப்போவதில்லை. அன்பெனும் பெரு வெளி அது.

பாண்டிச்சேரி நண்பர்கள் சார்பாக ஜெ வுக்கு ஒரு சாக்லேட் மாலை போடப்பட்டது. நான் முதன்முதலாக இப்படி சாக்லேட்டில் மாலை போடுவதைப் பார்க்கிறேன். அந்த மாலையை ஜெ கழற்றிய மறுநிமிடம் நண்பர்கள்  அதிலிருந்து சாக்லெட்டுகளை பிய்த்தெடுத்து சாப்பிட்டு எனக்கும் ஒன்று கொடுத்தார்கள்.கட்டற்ற அன்பும் பிரியமும் ஜெ’வை சூழ்ந்திருந்தது. 

நான் அவருக்கு பொன்னாடை அளித்தபோது ’’தருண் எங்கே’’ என்று கேட்டு அவனை வரச்சொல்லி இறுகத் தழுவிக்கொண்டார். எனக்கு பெருமிதத்தில் மூச்சடைத்தது.

பிறகு விடைபெற்றுக்கொண்டு அறைக்கு வந்தோம். சிவாத்மா இரவுணவை சேர்ந்து சாப்பிடலாம் என்று சொல்லி இருந்தார். ஆனால் தருண் அசைவம் சாப்பிட விரும்பினான்.  சிவாத்மாவுடன் அசைவம் சாப்பிடுவது அத்தனை சரியாக இருக்காது என்பதால் அவரிடம் சொல்லி விட்டு அகரமுதல்வன் பரிந்துரையின் பேரில் மன்னா மெஸ்ஸில் சாப்பிட்டோம். உணவு சுவையாக இருந்ததோடு பரிமாறிய பெண்களும் அத்தனை வாஞ்சையுடன் அருகிருந்து பார்த்துப்பார்த்து பரிமாறினார்கள். என்னவோ உறவினர்கள் வீட்டுக்கு போய்ச் சாப்பிட்டதுபோல் இருந்தது. 

தருணை அங்கிருந்தே பெங்களூரு அனுப்பி விட்டு  மறுநாள்  காலை புறப்பட்டு 3 மணிக்கு வீடுவந்தேன். என்னமோ நானே மீண்டும் ஒரு பெரிய பட்டம் வாங்கினதுபோல பூரித்திருந்தேன்.  

சிவாஜி, பிரமிளா மற்றும் IOB.

பிரமிளாவைத் தெரியும் தானே? 70- 80களில் தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நாயகி, மகள், மருமகள், தங்கை வேடங்களில் நடித்து ஒரு அமெரிக்கரைக்  காதல் திருமணம் செய்துகொண்டு கலிஃபோர்னியாவில் செட்டில் ஆகியவர். 

ஒருவேளை மறந்திருந்தாலும்  இதைச்சொன்னால் நிச்சயம் தெரியும் தங்கப்பதக்கத்தில் ஓவராக உணர்ச்சிவசப்படும் சிவாஜியிடம்(அவர் எல்லாப்படங்களிலும் தான் ஓவர் இல்லையா) “… மாமா காஞ்சு போன நதியெல்லாம்…“ வசனம் பேசியவர். முகத்தில் பருக்கள் நிறைந்திருக்கும் அழகி.  பிரமிளா என்னும் பெயரும் இப்போது அதிகம் புழக்கத்திலில்லை. எனக்குத்தெரிந்து பிசிக்ஸ் ஷண்முகப்பிரியாவின் மகள் பெயர் தான் பிரமிளா என் இத்தனை பெரிய உலகில். ஆச்சர்யம்தான்.

இன்று பிரமிளாவையும் அந்த வசனத்தையும் நினைத்துக்கொள்ள வேண்டி வந்தது. கல்லூரி வளாகத்துக்குள்ளேயே ஆசிரியர்களுக்காக  இந்தியன் ஓவெர்சீஸ் வங்கிக்கிளை ஒன்று இருக்கிறது. திருமணத்துக்கு முன்பு நான் இங்கு பணி புரிகையில் சம்பளம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பொள்ளாச்சிக்கிளையில் சேர்ப்பிக்கப்படும். அப்போதெல்லாம் டிஜிட்டல் பரிவர்த்தனை இல்லையே எனவே பஸ் ஸ்டேண்ட் தாண்டி நடையாய் நடந்து நேரில் சென்று தேவுடுகாத்து பணம் எடுப்போம். 

மெய்யாலுமே வங்கிப்பணியாளர் அவரது இருக்கைக்கு வர 11 மணி ஆகிவிடும், வந்து அமர்ந்து வரிசையில் நிற்பவர்களை அவர் ஏறிட்டுப்பார்க்க மேலும் ஒரு அரைமணிநேரமாகும் பின்னரே பரிவர்த்தனை நடக்கும். பிற்பாடு இந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கிளை வளாகத்துக்குள்ளேயே வந்தது எங்களுக்கு வசதியாக இருந்தது. எங்களைப்போலவே  வங்கி அலுவலர்களும் நேரத்துக்கு வந்துவிடுவார்கள் சிறிய கிளை, சொற்பமான அலுவலர்கள் என்பதால் எங்களுடன் நட்புடன் இருப்பார்கள், துறைசார்ந்த விழாக்களுக்கு அவர்களை அழைப்பதும் அவர்கள் கலந்துகொள்வதுமாக ஒரு பெருங்குடும்பத்தின் அங்கத்தினர்களாக்த்தான் இருக்கிறோம். 

பிரமிளாவுக்கு வருகிறேன், கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து வங்கியிலிருந்து எனக்கு //நீங்கள் வாங்கி இருக்கும் கடனுக்கான வட்டியை சரியான தேதியில் செலுத்துங்கள்// என  என் வங்கிக்கணக்கு எண்ணைக்குறிப்பிட்டு குறுஞ்செய்தி வந்துகொண்டிருந்தது.  வங்கியில் கடனேதும் வாங்கியதில்லை எனவே நேரில் சென்று சொன்னபோது அது எதாவது கணினிப்பிழையாக இருக்கும்  அல்லது கடன் வாங்கியவர் தவறுதலாக உங்கள் தொடர்பு எண்ணைக்கொடுத்திருப்பாராயிருக்கும்,  கவலைப்பட வேண்டாம் விட்டுவிடுங்கள் என்றர்கள். 

ஆனாலும் சில நேரங்களில் இந்தத்தேதியில் கட்டனும் இல்லையென்றால்நடவடிக்கை வரும் என்றெல்லாம் செய்திவருகையில் பதறி மீண்டும்  வங்கிக்குச் செல்வேன் மீண்டும் திருப்பி அனுப்புவார்கள். 

இன்று காலை நீளமாக ஒரு செய்தி வந்திருந்தது -//வட்டியே  மாதா மாதம் ஒன்றரை லட்சம் கட்ட வேண்டும் நீங்கள் பலமுறை தகவலனுப்பியும் கட்டவில்லை, எனவே நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம்// என்று.  பதட்டமானேன் வட்டியே லட்சக்கணக்கில் என்றால் அசல் எத்தனை லட்சம் வாங்கி இருப்பார் அந்தப் பாழாய்போன  என்  தொடர்பு எண்ணை வங்கியில் கொடுத்த கடங்காரன்(!).  

11 மணிக்கு வங்கிக்குப் போய் “… என்னங்க இது இப்படியெல்லாம்  மெசேஜ் வருதே…“  என்றதும் நம்ம பிரமிளாவின் வசனம் போலவே அந்தப் பெண் அதிகாரி அவரது போனை எடுத்துக்காண்பித்து “…மேடம் என்னத்தை சொல்லறது ஒரு மாசமா எங்களுக்கும் இப்படி கடன் இருக்கு வட்டிகட்டனும்னு இஷ்டத்துக்கு மெசேஜ் வருது நீங்க அந்தச் செய்தியை எல்லாம் கண்டுக்காதீங்க எங்களுக்கே கடுப்பாத்தான் இருக்கு…“  என்றார். 

 “….மாமா வங்கிகணக்கு வச்சிருக்கறவங்க எல்லாம் ஒரு பிரச்சனைன்னா வங்கி அதிகாரிகளைத்தான் போய்ப்பார்க்கிறோம், ஆனா அந்த அதிகாரிகளுக்கே இப்படி பிரச்சனை வந்தா யாரால எங்களுக்குஆறுதல் சொல்ல முடியும்?…“

A Vacation well spent!

கல்லூரி விடுமுறை முடிந்து நாளை புதிய கல்விப் பருவத்துக்குக் கல்லூரி திறக்கிறது. இந்த விடுமுறையையும் வழக்கம்போல வாசிப்பு, எழுத்து, பாடல்கள், பயணம், மேடை உரைகள், நிகழ்வுகள் என்று செலவழித்தேன். சென்னை,பாண்டிச்சேரி, கோவை, பெருந்தலையூர் என்று பயணித்துக்கொண்டிருந்தேன். இடையில் கல்லூரியில் தேர்வுப்பணி, திருத்தும்பணி என்றும் செல்லவேண்டி இருந்தது.  

என்ன வேலையாக இருந்தாலும் எங்கு பயணித்தாலும் தமிழ்விக்கி பணியைத் தேங்க விடுவதில்லை அவ்வப்போது அதைத் திருத்தி விடுகிறேன்.

புதிதாகத் தமிழக அரசு ஆவணக் காப்பகத்தின் பழைய நூல்களிலிருந்து தமிழக மாவட்டங்களின் flora வைத் தொகுத்து திருத்தி, மேம்படுத்திப் புதிய ஆவணமாக்கிக்கொடுக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறேன். அதில் இப்போது 4 மாவட்டங்களைத் தொகுத்து முடித்து அனுப்பிவிட்டேன். மீதமுள்ளவற்றை செய்துகொண்டிருக்கிறேன்.

18-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பழைய நூல்களில் ஆவணப்படுத்தப் பட்டிருக்கும் விவரங்கள் மலைப்பேற்படுத்துகின்றன. அவற்றைப் பெரும்பாலும் முழுமையாகப் படித்துவிடுகிறேன். Hemingway , Baliga ஆகியோரின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்தையும் அத்தனை நுணுக்கமாக அலசி ஆராய்ந்து ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.

ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வு தான் மேலோங்கி இருக்கிறது படிக்கையில். அப்போது இருந்த ஜாதி அடுக்குகள், ஜாதி சார்ந்த சடங்குகள், உணவுப்பழக்க வழக்கங்கள், சமூக அமைப்பு என்று சங்கிலித் தொடர்போலச் சுவரஸ்யமாகப்  படிக்கப் படிக்க நல்லவேளை நான் இந்தப்பணியை ஒத்துக்கொண்டேன் என்று தோன்றிக்கொண்டே இருக்கும்.

 ஒரு குறிப்பிட்ட ஜாதியில் இறப்பு நிகழ்ந்தால் இறந்தவரைச் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லும் முன்பு அவரது வலதுகையை சாணத்தில் முக்கி அவர் வாழ்ந்த வீட்டின் சுவற்றில் கை அச்சைப் பதித்தபின்னரே கொண்டு செல்கிறார்கள் என்னும் தகவல், குகைஓவியங்களில் இருக்கும் கைச்சித்திரங்களை நினைவுக்குக் கொண்டு வந்தது. ரெஃபெரென்ஸ்க்கு அளிக்கப்பட்ட நூல்களை நானே வைத்துக்கொள்ளலாம் என்பது கரும்பு தின்னக்கூலி தான். 

புதிதாக மாறி இருக்கும் தாவரங்களில் பெயரைகளை மாற்றி,  பிழைகளைக் கண்டறிந்து திருத்தி, ஒவ்வொரு அறிவியல் பெயருக்கும் அந்தபெயரை வைத்தவரின் பெயரை இணைத்து. எல்லாப்பெயர்களையும் இட்டலைஸ் செய்து அட்டவணை இட்டு என ஏராளமான நேரம் ஒதுக்கி, கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது தவறு நேர்ந்துவிடாமல் கவனமாகவும் இருக்க வேண்டி இருக்கிறது என்றாலும் மிகுந்த மனநிறைவுடன் இந்தப்பணியைச் செய்கிறேன். சீமைக்கருவேலத்தின் பெயர் இப்போது ப்ரொசாஃபிஸ் ஜூலிஃப்ளோரா என்பதிலிருந்து நெல்டுமா ஜூலிஃப்ளோரா என மாற்றப்பட்டிருக்கிறது எனவே இப்படியான மாற்றங்களுக்காக ஒவ்வொன்றையும் சரிபார்த்து எழுதவேண்டி இருப்பது எனக்குப் புதிய கற்றலுக்கும் உதவியாக இருக்கிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்!

காலச்சுவடுக்காக ’’அலையிடைவெளியில்’’  மொழியாக்க நூலையும்  இரவு பகலாக எழுதிச் சரிபார்த்து முடித்து அனுப்பினேன்.  சென்ற வாரம் தருண் பெங்களூருவில் ஒரு காட்டுயிர் கருத்தரங்கில் கலந்துகொண்டு அங்கிருந்த புத்தகக்கடையில் எனக்குப்பரிசளிக்க ஒரு  நூலைத் தேடியிருக்கிறான். விற்பனையில் இருந்த பெண் ’’….உங்கள் அம்மாவுக்கு எந்த  மாதிரியான நூல் பிடிக்கும்…’’ என்று கேட்டபோது ’’…சூழல், தாவரங்கள், இயற்கை தொடர்பானவை…’’ என்று தருண் சொல்லி இருக்கிறான். 

அந்தப்பெண் ’’…அப்படியானால்  அவருக்கான மிகச்சிறந்த ஒன்றாக இதுதான் இருக்க முடியும்…’’ என்று இவான் ஏவ்ஸின் intertidal நூலை எடுத்துத்தந்திருக்கிறார், தருண் பெருமிதத்துடன் ’’…இந்த நூலை என் அம்மாதான் மொழிபெயர்த்திருக்கிறார்..’’ என்று சொல்லி அந்தப்பெண்ணை ஆச்சர்யப் படுத்திவிட்டு  ஜானகி லெனினின் எனது கணவரும் ஏனைய விலங்குகளும் இரண்டாம் பாகத்தையும், கண்ணுக்குப்புலப்படாத வைரஸ்களின் உலகம் குறித்த இன்னொன்றும் வாங்கி வந்தான். வாசிக்கத் துவங்கி இருக்கிறேன். மைந்தரால்  பொலியும் அன்னை.

தாவரவியல் அகராதிப்பணியை மீண்டும் தொடங்கி இருக்கிறேன். அதில் முழுக்கவனம் குவிக்க முடியாமல் தொடர்ந்து இருக்கும் பணிகள் அலைக்கழிக்கின்றன.

சரண் இந்தியா வந்துவிட்டிருக்கிறான் எனினும் இன்னும் வீட்டில் ஒரு நாள் கூட இருக்கவில்லை. அவன் இருந்து முடிக்க வேண்டிய முக்கியவேலை ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது.

 இரண்டு கட்டுரைத்தொகுப்புக்களை பிரசுரத்துக்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்திருந்தேன் ஆனால் முடியவில்லை. டிசம்பரில் சிலநாட்கள் விடுமுறை வருகையில் அதைச்செய்ய வேண்டும். 

விழாக்களில் அநேகமாக எல்லா நண்பர்களையும் சந்திக்க முடிந்தது பெருமகிழ்வளித்தது.

நல்ல மழை இருந்ததால் புதிய விதைகளையும் செடிகளையும் நட்டு வைத்திருக்கிறேன். சமீபத்தில் சென்ற ஒரு பயணத்தின் நினைவாக அந்த ஊரிலிருந்தே பிரகாசமான மஞ்சள் சிறு மலர்களை அளிக்கும் ஒரு புதர்ச்செடியின் செம்பு நிற உலர்வெடி கனிகளைக் கொண்டு வந்து விதைத்திருக்கிறேன். அந்த ஊரின், அந்தத் தங்கலின், அந்த நினைவுகளின், அந்த இனிமையின் சாட்சியாக அது இனி முளைத்து வளர்ந்து முதிர்ந்து மலரளிக்கவிருக்கிறது.

கல்லூரியில் இந்தப்பருவத்தில் தோட்டக்கலைப் பாடத்தையும், புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கும் தாவரங்களின் அடிப்படை இயல்புகள்குறித்த ஒரு பாடத்தையும் கற்றுக் கொடுக்கவிருக்கிறேன். மாணவர்களுக்கு எப்படியோ எனக்கு கல்லூரி திறப்பது வழக்கம்போல ஆர்வத்தைத்தான் எழுப்பி இருக்கிறது.

வகுப்பறைக்குச் சென்று சாக்பீஸ் பிடிக்காமல் இருக்கும் நாட்களின் பதட்டம் மெல்ல உருவாகி விட்டது., நாளைசரியாகிவிடும். 🙂

ப்ளுமீரியா!

இன்று நவம்பர் 22 , 2025 இந்த  வேடசெந்தூர் கிராமத்து வீட்டுக்கு 17 வருடங்கள் நிறைவு. அப்படி ஒன்றும் வேகமாகக் காலம் ஓடிப்போனதாகத் தோன்றவில்லை. துளித்துளியாகத்தான் நகர்கிறது நாட்கள். சரண் தருண் இருவரும் இங்கு வருகையில் மிகச்சிறியவர்கள்.வீடு கட்டுவது அதன் சிரமங்கள், தேவை குறித்தெல்லாம் எதுவும் அறியாத வயது.ஆனால் எந்தப்புகாரும் இல்லாமல் என்னுடன் இரவும் பகலுமாக அலைந்தார்கள்.

அவர்களையும் அழைத்துக்கொண்டுதான் மாலைநேரங்களில் பேருந்தில் இந்த வீட்டு கட்டுமானப்பணிகளைப்பார்க்க வருவேன். 

கல்லூரி முடிந்து நான் வீடு திரும்பி,  அவர்கள் இருவரும் பள்ளியில் இருந்து திரும்பி பின்னர் மூவருமாக பேருந்துநிலையத்துக்கு நடந்து வந்து பஸ் பிடித்து இங்கு வந்து இறங்கும் போதே இருட்டிவிட்டிருக்கும்.  எனக்காகச் சலித்துபோய்க் காத்திருக்கும் எஞ்சினியர்களிடம் பேசிவிட்டு மீண்டும் பொள்ளாச்சி வீட்டுக்குத் திரும்ப இரவாகிவிடும். எதேதோ கடைகளில் எதையோ வாங்கிக்கொண்டு வீடுவந்து பொட்டலங்களைப்பிரித்து மூவருமாகச் சாப்பிட்டுவிட்டு உறங்கச்செல்வோம்.

2000-ங்களில் அம்மா சோலையார் டேம் பள்ளியில் தலைமைஆசிரியராக பணியிலிருக்கையில் இந்த வழியே பஸ்ஸில் போகையில் கடலைக்காடாக இருந்த இந்த நிலம் விற்பனைக்கு என்று விளம்பரப்பலகை வைத்திருந்ததை பார்த்திருக்கிறார். எனவே அவர்களுக்கு ஒரு நிலம் வாங்க நினைத்து என்னிடமும் அதைச்சொன்னார்கள் நான் அப்போது அபுதாபியில் இருந்தேன். அந்தகாலத்தில் வீடோ நிலமோ எதைக்குறித்தும் எனக்கு சிந்தனையே இல்லை. சர்வைவல், அதுவே எனக்குப் பெரும் சவாலாக அப்போது இருந்தது. 

ஆனால் சரணுக்கு 1 வயது நிறைந்த போது இந்தியா வந்திருந்தேன். வாங்கிய அந்த நிலத்தில் அம்மா வீட்டுக்குப் பாலக்கால் போடும்போது சரண் அவன் பிஞ்சுக்கைகளால் நவதானியங்களை குழியிலிட்டான்.

அப்போது ’’… பக்கத்தில் இருக்கும் நிலத்தை நீ வாங்கு பின்னாடி உபயோகமாகும்…’’ என்று அம்மா  சொன்னதும் அந்த நிலத்துக்கு வந்து நின்றேன். சர்க்கரையின்( அவள் பேரே அதுதான்) மாடும் கன்றும் மண்ணில் ஊன்றிய கழியில் கட்டப்பட்டிருந்தது. மாடு மடி நிறைந்து கனத்திருந்தது.  செம்பு நிறத்தில், நெற்றியில் விபூதிப்பட்டைபோல ஒரு வெள்ளைத்தீற்றலும்,மைக்கண்களுமாக கன்று நின்ற இடத்திலேயே துள்ளிக்கொண்டிருந்தது. அருகும் கோரையும் அடர்ந்து பரவி கணுக்கால வரை புதைந்தது,  இடுப்பில் வைத்துக்கொண்டிருந்த சரணுடன் குனிந்து ஒரு கல்லைப்புரட்டிப்பார்த்தேன். புழுக்களும் சிற்றுயிர்களும் இருந்தன. உயிர் நிறைந்திருந்த நிலம்.

அம்மாவிடம் போய்  அவர்கள் வாங்கி இருக்கும் அளவுக்கே 11 செண்ட்  நானும் நிலம் வாங்க எத்தனை செலவாகும் என்று கேட்டேன். ஒரு தொகை சொன்னார்கள். அதையே இரட்டிப்பாக 22 சென்ட்  வாங்கினால் என்ன செலவாகும் என கணக்கிட்டேன். திருமணத்துக்கு வாங்கிய நகைகளில் பாதிக்கு மேல் நான் என் ஆய்வு உதவித்தொகையில் வாங்கியவை மீதி அம்மா செய்தது.அவற்றை அப்படியே விற்றால் 22 சென்ட் வாங்க முடியும் எனத் தெரிய வந்தது.  யோசிக்காமல் விற்றேன்.

 பொள்ளாச்சி வீட்டில் கீழே குடியிருந்த இரட்டைப் பெண்மக்களின் தகப்பனான ஒருவர் நகைக்கடைக்கே வந்து சந்தைவிலைக்கு நகைகளை வாங்கிக்கொண்டு பணத்தை அங்கேயே கையில் கொடுத்தார் . நிலத்தை வாங்கி பதிவு செய்தேன். பின்னர் அப்பா அம்மா வீடு கட்டி குடிபோகும் போது தருண் வயிற்றில் நிறைமாதம். அவன் பிரசவத்துக்கு இந்தியா வந்திருந்தபோதும் இங்கே வீடுகட்டும் எண்ணமேதும் இல்லை. வேலையிலிருந்து ராஜி வைத்துவிட்டு முழுக்க முழுக்க இன்னொருவரைச் சார்ந்து இருந்த காலமாதலால் வேறு சிந்தனைகள் ஏதுமில்லாமல் இருந்தேன்.

அபுதாபியில் இருக்கவே முடியாத ஒரு கட்டத்தில் தம்பி விஜியின் காதல் திருமணப்பிரச்சனை  தமிழ் சினிமாவில் கலப்புத்திருமண கிளைமாக்ஸ் போலவே சுடச்சுட நடந்துகொண்டிருந்தது. அதைச்சாக்காக வைத்துக்கொண்டு அவன் திருமணத்தை நடத்தி வைக்க இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு இந்தியா வந்தவள் பின்னர் அபுதாபிக்கு திரும்பவேயில்லை. 

அம்மா வீட்டில் மகன்களுடன் இருக்கையில் 2005-ல் மீண்டும் அதே கல்லூரிவேலை தெய்வாதீனமாக திரும்பக்கிடைத்து அதே நாற்காலியில் அமர்ந்து பல வருடங்களுக்குப்பிறகு நிம்மதியாக மூச்சு விட்டுக்கொண்டேன் . 

ஆனால் இரண்டு பெரும் சிக்கல்கள் எழுந்தன. அந்த வீட்டில் இருக்கவே முடியாத நிலை அப்பா என்பவராலும் இன்னொருவராலும் உண்டானது. பிறந்து வளர்ந்து வாழ்ந்த வீடு அந்நியமாகி இருந்தது. அந்த வீட்டின் கசப்பான நினைவுகள் haunting ஆக இருந்தாலும் வேறு போக்கிடம் இல்லாததாலும் அப்போது அரசு வேலை கிடைத்திருக்கவில்லை சொற்ப சம்பளத்தில் வாடகைக்கு போக முடியாது என்பதாலும் அங்கே 1 வருடம் 8 மாதங்கள் இருந்தேன்.

 சரணுக்கு இந்தியா வந்ததிலிருந்தே உடல்நிலை மிகவும் மோசமானது. எப்போதும் வாந்தி, மூச்சுவிட சிரமம் கையும் காலும் ஒல்லிக்குச்சியாக பாவமாக இருந்தான். எத்தனை மருத்துவம் பார்த்தும் சரியாகவே இல்லை. வாரா வாரம் மருத்துவமனையில் அனுமதிப்பேன்.  கோவையின் எல்லா மருத்துவமனைகளிலும் காண்பித்து யார் என்ன  மருந்து சொன்னாலும் கொடுத்து இரவெல்லாம் அவனை தொட்டுத்தொட்டுப் பார்த்துக்கொண்டு தூக்கமில்லாமல் உட்கார்ந்திருப்பேன்.

அற்றைத்திங்கள் அந்நிலவில் எனக்கொரு அக்காள் இருந்தாள். அவளது கணவரின் பி ஹெச் டி மாணவியின் தந்தை மசானிக் குழந்தைகள் மருத்துவமனையின் முன்னாள் தலைவர். அவர் பணி ஒய்வு பெற்றே  பலவருடம் ஆகி இருந்தது மிகுந்த தள்ளாமையில் இருந்தார். பி ஹெச் டி வழிகாட்டி என்னும் செல்வாக்கில் எனக்கு அக்காள் கணவர் அவரிடம் ஒரு அப்பாயின்மெண்ட் வாங்கிக்கொடுத்தார். 

சரணையும் தருணையும் அழைத்துக்கொண்டுஒரு வாடகைக்கார் வைத்துக்கொண்டு சென்றிருந்தேன். அவரது வீட்டுக்கே வரச்சொல்லி இருந்தார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. முழுதாக 2மணிநேரம் சரணுடன் அவர் செலவிட்டார்.அவன் உடைகளைக் களைந்து முழுக்கப் பரிசோதித்தார் அவனுடன் விளையாட்டும் வேடிக்கையும் பேசினார், வீட்டுபின்கதவு வழியாக கூட்டிச்சென்று அவரது தோட்டத்தில் அவனையும் தருணையும் விளையாடச்சொல்லி கவனித்துக்கொண்டிருந்தார்.

 விளையாட்டுக்குப் பின்னரும் அவனைப்பரிசோதித்தார். எல்லா முந்தைய மருத்துவப் பரிசோதனைகளையும் பார்த்தார்.இறுதியாக என்னை அழைத்து ’’….கவலைப்பட ஒன்றும் இல்லை மகன் ஆரோக்கியமாக இருக்கான் ஆனால் அவனை வீட்டுக்குள் அடைத்துவைத்து வளர்க்கவேண்டாம்,  இப்போதுஇருக்கும் வீட்டில் அவனுக்கு சுவாசக்கோளாறு உருவாக்கும் எதுவோ இருக்கிறது, நல்ல இயற்கையான சூழலில் ஓடியாடி வளர்ந்தால் காலப்போக்கில் முழுக்க குணமாகிவிடுவான்…’’ என்றார். அவரது  வார்த்தைகளை அப்படியே கெட்டியாகப் பற்றிக்கொண்டேன்.

பொள்ளாச்சி வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கானோர் குடியிருந்த போலீஸ் குடியிருப்பு இருந்தது. அன்றாடம் மாலையில் திறந்த சாக்கடையில் செப்டிக் டேங்க் கழிவுகளை வெளியேற்றுவார்கள்.  எனவே கதவை எப்போதுமே அடைத்தே வைத்திருப்பேன், பயங்கர கொசுக்கடியும்  நாற்றமுமாகவே இருந்தது.

மூச்சுக்கோளாறுக்காக சரண் எடுத்துக்கொண்டிருந்த ஸ்டீராய்டுகள் எனக்கு பெரும் கவலை அளித்தன. எனவே எப்பாடு பட்டேனும் இந்த வீட்டைக்கட்டுவது, கட்டுமுன்பே மரம் செடிகொடிகளை நட்டுவைப்பது என்று தீர்மானித்தேன்.

அதன்பிறகு ஏராளமான தடைகள், உள்ளம் தகர்க்கும் பிரச்சனைகள் மூளைச்சலவைகள் பயமுறுத்தல்கள் எல்லாத்தரப்பிலிருந்தும் வந்தன. நான் அசரவே இல்லை. சொல்லப்போனால் அதுவரையிலும் என் வாழ்வு மற்றவர்களால் தீர்மானிக்கப்பட்டது .   ஒரு அன்னையாக அந்தக்கணத்திலிருந்து என் வாழ்வை நான் தீர்மானித்தேன்.

 துரத்தி வருபவர்களிடமிருந்து தப்பிக்க ஓடிக்கொண்டே இருப்போம் முட்டுச்சந்தில் மாட்டிக்கொண்டால் வேறு வழியே இல்லாமல் திரும்பிப் பார்ப்போமல்லவா. அப்படி ஒரு புள்ளி அது.

‘’… நீ ஒரு கிறுக்கு உன் வாழ்க்கையை பாழாக்கறதோட மகன்களின் வாழ்க்கையையும் பாழாக்குகிறாய் அவர்கள் இருவரும் ட்யூஷனோ சிறப்பு வகுப்புகளோ எதுவும் போக முடியாமல் எதிர்காலமே பாழாகும் வெளிநாட்டில் இருந்துட்டு கிராமத்துக்கு வீடுகட்டிபோறேன்னு எவளாவது பைத்தியக்காரி சொல்லுவாளா?…’’ என்று கண்டித்துவிட்டு பாதிச்சாப்பாட்டில் கையை உதறிவிட்டு அதே முன்சகோதரி புறப்பட்டு சென்றாள்.

 தம்பியும் ’’….கோவையில் நல்ல செல்வாக்கான ஆர் எஸ் புரம் போன்ற இடத்தில்  ஒரு அபார்ட்மெண்டில் வீடு வாங்கி தருகிறேன் தயவு செய்து இங்கே வீடு கட்டாதே..’’ என்றான், அத்தனை பேரும் அதேதான் திரும்பத் திரும்பச்சொன்னார்கள்.

 உலகமே நகரமயமாக்கலுக்குப் பின்னால் மண்டியிட்டுத் தொழுது செல்கையில் நீ ஏன் கிராமத்துக்கு வருகிறாய் என்ற கேள்வி தொடர்ந்து என்னிடம் கேட்கப்பட்டுக்கொண்டே இருந்தது.

//  “பெருஞ்செயல்களுக்கு முன்னால் தெய்வங்களின் எதிர்ப்புகள் எழும் . இயலுமா, பயனுண்டா, இழப்பவை என்னவென்று அறிவாயா, மீள இயலாதென்று எண்ணுக, இதைவிடவும் சிறந்த வழி பிறிதுள்ளது, இயல்வதை ஏற்று அமைவதே சிறப்பு, இன்னும் சற்று பொறுத்தமைக, விளைவுகள் எவையென்று இப்போது உரைக்கமுடியாது, ஊழுடன் பொருதுகிறாயா, மூத்தோர் சொல் கேள், வெற்றாணவம் இது, பெருவிழைவன்றி மற்றல்ல என்னும் பன்னிரு தடைச்சொற்கள் எழும் என்று நூல்கள் சொல்கின்றன// குருதிச்சாரலில் சொல்லப்பட்டிருக்கும் இதை இந்த வீடு கட்டிமுடித்து சில வருடங்கள் கழித்தே வாசித்தேன்.

பிடிவாதமாக வீட்டைக்கட்டினேன். ஒருத்தியாக இரண்டு சின்னக் குழந்தைகளையும் கல்லூரி வேலையையும் பார்த்துக்கொண்டு வீடு கட்டிய கதையை ஒரு நாவல் நிரையாகவே எழுதலாம். சரணும் தருணும் எல்கேஜியிலிருந்து 12 ம் வகுப்பு வரை ட்யூஷனே சென்றதில்லை அதனால் ஒன்றும் கெட்டுபோய்விடவுமில்லை.

வீடு கட்டியதை அப்போது எழுந்த பிரச்ச்சனைகளையெல்லாம் திரும்ப  நினைக்கவே அச்சமாக இருக்கிறது. இரண்டு இளம் எஞ்சினியர்களின் முதல் புராஜக்ட் இது. அவர்கள் ஏமாற்றியது, அலைச்சல் சோர்வு பணக்கஷ்டம், எல்லாவற்றையும் தாண்டி இந்த வீடு பசுமை நிரம்பி இருக்கப்போகும் காட்சியை,  மகன்கள் ஆரோக்கியமாக அங்கே வாழ்வதை அவ்வப்போது எண்ணிப்பார்த்துக் கொள்வேன்.

LIC யில் வீட்டுக் கடன் வாங்கினேன். 2007-ல் கட்டிட வேலைகள் தொடங்கியது

கட்டிடம் எழும்ப எழும்ப ஒவ்வொரு ஸ்டேஜ் முடியும் போதும் புகைப்படம் எடுத்துக்கொண்டு போய் காட்டினால், அடுத்த தவணை பணம் அளிப்பார்கள். கல்லூரியில் அப்போது  காலை மட்டும் விடுப்பெடுத்துக்கொண்டு கோவை சென்று, அங்கிருந்து டவுன் பஸ் பிடித்து அந்த அலுவலகம் போய் எதிலெதிலோ கையெழுத்துப்போட்டு  செக் வாங்கிக்கொண்டு  திரும்ப வருவேன். பஸ்ஸில் அமர்ந்திருக்கையில் கடும் பசியில் துறைக்கு வந்து டிஃபன் பாக்ஸை திறந்து சாப்பிடுவதை நினைத்துப்பார்த்துக்கொண்டே வருவேன். பொள்ளாச்சி வந்து செக்கை பணமாக மற்றி, அந்த எல் ஐசி ஏஜென்ட் வங்கி வாசலில் காத்திருப்பார், அவரது 1 % கமிஷனை வாங்கிக்கொள்ள,அவருக்கு கொடுத்துவிட்டு ஓட்டமாக ஓடி  கல்லூரிக்குச் செல்வேன்.

இடையில் வீடு முக்கால் வாசி முடிந்திருந்த ஒரு கட்டத்தில் வாங்கிய வீட்டுக்கடன் போதாமலாகியது.  தனலக்‌ஷ்மி வங்கியில் மேலும் சில லட்சங்கள் கேட்டு விண்ணப்பித்து இருந்தேன்.

அங்கு ஒரு குறிப்பிட்ட நாள் வரச்சொல்லி இருந்தார்கள் அது ஒரு வேலைநாள் கல்லூரிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றிருந்தேன். வங்கி மேலாளர் கடன் கொடுப்பதில் பிரச்சனை இல்லை ஆனால் என் பொருட்டு யாரேனும் ஒருவர் உத்திரவாதம் தரவேண்டும் என்று சொன்னார். திகைத்துப்போய் அவரது அறையிலிருந்து வெளியே வந்தேன். உலகமே எனக்கு எதிராக இருந்த காலத்தில் யாரைப்போய்க் கேட்பது? எனக்கு வெளிஆட்கள்  யாரையுமே தெரியாது அப்போது.

கண் நிறைந்து வங்கியிலிருந்து வெளியே வந்தபோது பின்னாலிருந்து ’’…நில்லும்மா…’’ எனக் குரல் கேட்டது.  திரும்பினேன். அங்கே சோஃபாவில் அமர்ந்திருந்த கல்லூரியில் கெமிஸ்ட்ரி துறையில் பணியாற்றிய கலாமணி மேடத்தின் கணவர்தான் அழைத்தார். அவர் மேடத்தை காரில் கொண்டு வந்து கல்லூரியில் இறக்கி விடுகையில் என்னைப்பார்த்திருக்கிறார். ஒரு வார்த்தை என்றால் ஒரு வார்த்தை நான் அவரிடம் பேசியதில்லை, நான் அங்கு பணி செய்கிறேன் என்று மட்டும் தான் அவருக்குத்தெரியும். பெரும் பணக்காரர் கல்குவாரியும் தோப்பும் துரவும் வயலும் வரப்புமாக இருக்கும் குடும்பம் அவர்களுடையது.

‘’…என்ன விஷயம்மா?..’’ என்றார். துக்கம் தொண்டையை அடைக்கச் சொன்னேன். ’வா’ என்று ஒற்றை வார்த்தை சொல்லி விட்டு மேலாளர் அறைகதவைத் திறந்து உள்ளே சென்று என்னைக்காட்டி ’’…நம்ம பொண்ணுங்க இது, நான் கையெழுத்து போடறேன்..’’ என்று சொல்லி அவரிடம் நீட்டப்பட்ட எல்லா காகிதங்களிலும் அவரது சட்டைப்பாக்கெட்டிலிருந்து பேனா எடுத்து பொறுமையாகக் கையெழுத்துப் போட்டுவிட்டு ’’…கவலைப்படாதே,அதெல்லாம் நல்லபடியா வீட்டைக்கட்டிருவே, பத்திரமா வீட்டுக்குபோம்மா..’’ என்று சொல்லிவிட்டு புறப்பட்டுப் போய்விட்டார். இன்று வரை அவர் பெயர் எனக்குத்தெரியாது.

இப்போது இதை எழுதுகையில்கூட கண் நிறைந்து வழிகிறது.  

அப்போது  2008 -ல்அரசுப்பணியும் கிடைத்தது (அதில் நடந்த குளறுபடிகளைச் சொல்லத்துவங்கினால் அடுத்த நவம்பர் வந்துவிடும்.) எனவே புரோபேஷனரி காலத்தில் 2 வருடங்கள் விடுப்பு எடுக்க முடியாது. 

கல்லூரிவேலை முடிந்து மகன்களை நடந்துசென்று பள்ளியிலிருந்து அழைத்து வந்துவிட்டு, மீண்டும் மாலை 6 லிருந்து7 வரை கல்லூரியில் அண்ணாமலை பல்கலைக்கழகம் எங்கள் கல்லூரியில்   நடத்திய முதுகலை தாவரவியல்  வகுப்பெடுத்தால்  ஒரு வகுப்பிற்கு கணிசமான தொகை சன்மானமாக கிடைக்குமென்பதால் அதற்கும் வாரத்தில் சிலநாட்கள் போகவேண்டி இருக்கும்.

 அதன்பின்னர் வேடசெந்தூர் வருவதும் அலைவதுமாக கடும் உடல்சோர்வும் மனச்சோர்வுமான காலமது. வழக்கமாக வரும் ஒரு பஸ்ஸின் நடத்துனர் என் மீது இரக்கபட்டு  நிறுத்தத்தைத் தாண்டி வீட்டருகில் எங்களை  இறக்கி விடுவார், அவர் முகம் கூட  நன்றாக நினைவிருக்கிறது. 

எல்லாப்பிரச்சனைகளையும்  சந்தித்து சமாளித்தேன். இடையிடையே மரக்கன்றுகள் வாங்கி வந்து வீட்டில் சிமெண்ட் மூட்டைகளுக்கு காவலாக இருந்த ஒரு முதியவருக்கு பணம் கொடுத்து அவற்றை நட்டு வைத்தேன்.

அப்போது எனக்கு ஒரு பெரும் உயிராபத்து உண்டாக்கிய உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக செய்யவேண்டி இருந்த அறுவை சிகிச்சையை தள்ளிப்போட்டேன் எதுவானாலும் வீட்டைக்கட்டிவிட்டுத்தான் என்று உறுதியாக இருந்தேன். வீட்டை கட்டி முடித்தேன்.  பிறகுதான் அறுவைசிகிச்சை செய்து கொண்டேன். கிரகப்பிரவேசமும் ஒரு போராட்டமாகத்தான் இருந்தது.

கிரகப்பிரவேசத்துக்கு வந்திருந்த அப்போதைய கல்லூரி முதல்வரும் எனது ஆசிரியருமானவர் கூட சாப்பிட்டுமுடித்து கைகழுவுகையில் ’’…தப்புப்பண்ணிட்டே  லோகமாதேவி தனியா ரெண்டு பசங்களோட இந்த காட்டில போய் வீட்டைகட்டியிருக்கியே…’’ என்று கடிந்துகொண்டார். 

ஆனால்  அசையவே இல்லை லோகமாதேவி, ஒரே மாதத்தில் பொள்ளாச்சி வீட்டைக் காலி செய்து இங்கு 2008 டிசம்பரில் கல்லூரி விடுமுறைக்காலத்தில் குடி வந்தேன்.

யாரும் பொள்ளாச்சி வீட்டைக் காலிபண்ணவும் உதவவில்லை. நானே சந்தையில் கோணிப்பைகளையும் பெரிய ஊசியும் நூல்கண்டும் வாங்கினேன். இரவு மகன்கள் உறங்குகையில் ஒவ்வொன்றாக சாக்குகளில் பேக் செய்து வைப்பேன்.

கல்லூரிக்குச்செல்லும் வழியில் லாரிகள் நிற்கும் ஒரு இடத்துக்குப்போய் தயங்கியபடி ’’..வீடு காலி பண்ணனும் லாரி வேண்டும்..’’ என்று கேட்டேன். முரட்டு உருவமும் முறுக்கிய மீசையுமாக ஒருவர் வந்து தான் வருவதாகவும் 2000 ரூபாய் ஆகும் என்றும் சொன்னார்  மேலும் ஆயிரம் ரூபாய் தருகிறேன் ஏற்றி இறக்கி ஆட்களைக்கூட்டி வந்துச் எய்து கொடுக்க வேண்டும் என்றேன். ஒத்துக்கொண்டார்.  

அம்மா வீட்டில் மாடியில் இருந்ததால் ஒவ்வொரு பொருளாக மிகுந்த சிரமத்துடன்  லாரியில் ஏற்றினோம். உதவிக்கு வராத அப்பா ஒன்றே ஒன்று மட்டும் கடுமையாக சொல்லி இருந்தார். ’’காலி பண்ணறேனு வீட்டை உடைச்சுறாதே’’, எனவே சேமேதும் இல்லாமல் பொருட்களி கீழிறக்கும் பதட்டம் இருந்தது.

அப்போது உபயோகத்திலிருந்த ஒரு டெஸ்க் டாப் கம்ப்யூட்டரையும் மானிட்டரையும் கால்களுக்கு நடுவில் வைத்துப் பிடித்துக்கொண்டு இரண்டு பக்கமும் மகன்களை அணைத்துப் பிடித்துக்கொண்டு ஒரு ஆட்டோவில் லாரியை பின்தொடர்ந்து வேடசெந்தூர் வந்தேன்.

இதோ இங்கு தொலைக்காட்சியில்லாமல், காற்று மாசு இல்லாமல் மரங்களையும் மகன்களையும் வளர்த்து ஆளாக்கி 17 வருடங்கள் முடிந்துவிட்டது. மகளில்லாத குறையைத் தீர்க்க மகன்களுடன் சாம்பவியும் சேர்ந்து வளர்ந்தாள்.நிலவு பொழிகையில் எத்தனையோ நாட்கள் கயிற்றுக்கட்டிலில் மகன்களை மடியிலிருத்திக்கொண்டு நள்ளிரவு வரை கதை சொல்லி இருக்கிறேன். பாடல்கள் கேட்டுக்கொண்டு, சிரித்து விளையாடி பேசிக்கொண்டு மகன்களுக்கு எந்தக்குறையுமிருக்ககூடாது எனும் கவனத்துடன், அவ்வபோது மரத்தடியில் விறகடுப்பில் அவர்களுக்கு பிடித்தமானதை சமைத்துக் கொடுத்து சாப்பிடச் சொல்லி, மகிழ்ந்து கழித்த ஏராளமான நினைவிருக்கிறது இந்தவீட்டில் எனக்கு.

இந்த வீடு மகன்களுக்கிணையாகவே எனக்கு நிம்மதியையும் ஆசுவாசத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துக்கொண்டிருக்கிறது. புன்னை மரம் அறிந்த என் கண்ணீரை மகன்கள் கூட அறிந்திருக்க மாட்டார்கள். இங்கிருக்கும் ஒவ்வொரு இலையும் என்னை அறியும், அவற்றையும் தனித்தனியே நான் அறிவேன்.

 வீட்டை இருள் அணுகக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் தினமும் வீட்டைச்சுற்றிலும் தீபமேற்றுகிறேன். மாதம் 8 லிட்டர் தீப எண்ணெய் வாங்கும் ஒருத்தி நானாகத்தான் இருப்பேன். வீட்டில் பல இடங்களில் உருளிகளில் நீர் நிறைத்து  மலர்கள் நிறைத்து வைக்கிறேன்.

  என்னை இங்கேயே புன்னை மரத்தடியில் புதைக்கும்படி மகன்களிடம் சொல்லி இருக்கிறேன். அந்த துண்டு நிலத்தில் பெருஞ்செடிகள் ஏதும் வளர்க்காமல் காலியாக வைத்திருக்கிறேன்.

இது வெறும் கட்டிமல்லவே அல்ல. எங்கு சென்றாலும் வீட்டுக்கு திரும்பும்  மனநிலையில் தான் இருப்பேன்.  

இந்த வருடம் மேல் மாடி கட்டத்துவங்கி முன்னைக்காட்டிலும் பலகஷ்டப்பாடுகளைச் சந்தித்தும் கட்டி முடிக்க முடியவில்லை.இன்னும் 10% மீதமிருக்கையில் நிறுத்தி வைக்கவேண்டியதாகி விட்டது.

இன்று பால்கனியை மட்டும் முழுமையாக்கி ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.  சேமிப்போ வேறு வருமானமோ இல்லாத எளிய கல்லூரி ஆசிரியை வீட்டைக்கட்டுவது என்பது அத்தனை எளிதல்ல. மகன்கள் இனி அதை முழுமை செய்துவிடுவார்கள் . 

எனக்கு பிடித்தமான ப்ளுமீரியா மலரின் பெயரைத்தான் இன்னும் கட்டி முடிக்க முடியாத  வீட்டுக்கு வைத்திருக்கிறேன். விரைவில் முழுமையாக ப்ளுமீரியா மலரவிருக்கிறது.

மயிலாடுதுறை பிரபுவின் வலைத்தளத்திலிருந்து!

வனமும் மரமும்

நூல் : மரங்களின் மறைவாழ்வு ஆசிரியர் : பீட்டர் வோலிபென் மொழியாக்கம் : லோகமாதேவி பக்கம் : 318 விலை : ரூ. 390 பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம், 669,கே.பி.சாலை, நாகர்கோவில். 

ஒரு கைப்பிடிக் காட்டு மண்ணில் இந்த பூமியில் இருக்கும் அனைத்து மனிதர்களை விடவும் அதிகமான நுண்ணுயிர்கள் இருக்கின்றன. ஒரு தேக்கரண்டி காட்டு மண்ணில் பல மைல் நீளமுள்ள பூஞ்சை இழையங்கள் இருக்கின்றன. – பீட்டர் வோலிபென்

வாழ்க்கையின் சில தருணங்கள் நமக்குப் புதிதாக சில விஷயங்களைக் காட்டும் போது உணர்த்தும் போது நாம் வியப்படைவோம் ; சில சமயங்களில் ஆழமான அதிர்ச்சியும் அடைவோம். பீட்டர் வோலிபென் எழுதிய ‘’மரங்களின் மறைவாழ்வு’’ என்னும் நூலை வாசித்த போது நான் வியப்படையவும் செய்தேன். அதிர்ச்சி அடையவும் செய்தேன். இதுநாள் வரை மரங்கள் குறித்து அறிந்திருந்தது எத்தனை எல்லைக்குட்பட்டது என்பதை இந்நூலின் வாசிப்பு எனக்குக் காட்டியது. இந்தப் புத்தகத்தை வாசிக்கும் முன் மரங்களை நான் நோக்கிய விதத்துக்கும் இந்தப் புத்தகத்தை வாசித்த பின் மரங்களை நான் நோக்கும் விதத்துக்கும் மிகப் பெரும் வித்தியாசம் இருக்கிறது. 

ஒரு தனி மனிதனைப் போல மரத்தை தனி மரம் என்று அத்தனை தீர்க்கமாக வரையறுத்துக் கூற முடியாது. எந்த மரமும் தனி மரம் அல்ல. அதன் பூக்கள் காற்றில் பறந்து பரவுகின்றன. விதைகள் பறவைகள் மூலமும் பிராணிகள் மூலமும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்து செல்கின்றன. புவியின் மேற்பரப்பில் சற்று இடைவெளியுடன் இருக்கும் மரங்கள் கூட புவிக்குக் கீழே வேர்வெளியில் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் பிணைந்தும் இருக்கின்றன. மரங்களின் வேர் முடிச்சுகளில் இருக்கும் பூஞ்சைகள் ஓர் வனத்தில் இருக்கும் ஒட்டு மொத்த மரங்களையும் இணைக்கின்றன. 

மரங்கள் கூட்டு வாழ்க்கையே வாழ்கின்றன. ஒரு மரம் இன்னொரு மரம் பலவீனமாக இருந்தால் அதற்கு உணவளித்து உதவுகிறது. தான் சேகரித்து வைத்திருக்கும் ஸ்டார்ச் சர்க்கரையை மண்ணுக்கு அடியில் இருக்கும் பூஞ்சைகள் மூலம் பலவீனமாக இருக்கும் மரத்துக்கு அனுப்புகிறது. அதே பூஞ்சை வலைப் பின்னல் மூலம் காட்டில் வெட்டப்பட்டு துண்டாகக் கிடக்கும் மரங்களுக்கும் உணவளித்து அவை உயிருடன் இருக்க உதவுகிறது. 

தண்ணீருக்காக மரங்களின் வேர்கள் ஒலியெழுப்புகின்றன. மரங்கள் தங்களுக்குள் மீயொலி மூலம் பேசிக் கொள்கின்றன. பட்டை உரிந்து வலியுடன் இருக்கும் மரங்களுக்கு மற்ற மரங்கள் ஆதரவளிக்கின்றன. தங்கள் நிழலில் வளரும் மரங்கள் நீண்ட காலம் உயிர்த்திருக்கவும் தேவை ஏற்பட்டால் இடம் பொருள் ஏவலைப் பொறுத்து தனது வளர்ச்சி பாணியை புதிதாக மாற்றிக் கொள்ளவும் உதவுகின்றன. 

மாந்தரின் இனப் பெருக்கத்தில் லட்சக்கணக்கான அணுக்களில் ஒன்று மட்டும் கருவாக உருவாவதைப் போல ஒரு மரத்தின் ஆயிரக்கணக்கான விதைகளில் ஒன்று மட்டுமே முளைத்து மரமாகும் வாய்ப்பைப் பெறுகிறது. 

நூற்றுக்கணக்கான ஜீவராசிகள் தன்னைச் சார்ந்து வாழும் நிலையை அந்த உயிர்களுக்கு வழங்குகிறது வனத்தின் ஒவ்வொரு மரமும். 

இந்தப் புத்தகத்தை வாசிக்கும் தோறும் நாம் இதுவரை மரங்கள் குறித்த அறியாமையையே இத்தனை நாள் கொண்டிருந்தோம் என்னும் உண்மையை உணர்வோம். 

நாம் ஒரு மரம் குறித்து முழுமையாக அறிந்தோம் என்றால் புவியின் சாரம் குறித்து ஒரு கைப்பிடியளவு அறிகிறோம் எனத் துணிந்து சொல்லலாம்.

அறிஞர் காட்டும் உலகம் -மயிலாடுதுறைபிரபுவின் வலைத்தளத்திலிருந்து!

Saturday, 8 November 2025

ஓர் அறிஞர் காட்டும் உலகம்

 நூல் : கல்லெழும் விதை 

பக்கம் : 282 

ருஷ்ய மொழியில் ‘’ராதுகா’’ என்றால் வானவில் என்று பொருள். சோவியத் யூனியன் ’’ராதுகா பதிப்பகம்’’ என ஒரு பதிப்பகத்தை நடத்தியது. உலகின் பல்வேறு மொழிகளில் குழந்தைகளுக்கான நூல்களை அப்பதிப்பகம் வெளியிட்டது. ராதுகா பதிப்பகத்தின் பல நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. கெட்டியான அட்டை, தடிமனான தாள்கள், அழுத்தமான அச்சமைப்பு ஆகியவை அந்நூல்களின் சிறப்பம்சங்கள். அந்நூல்களின் வடிவமைப்பே அவற்றை மீண்டும் மீண்டும் எடுத்து வாசிக்கத் தூண்டக்கூடியவை. ராதுகா பதிப்பகத்தின் வெளியீடுகளில் ஒன்றான ‘’Mathematics can be fun” என்ற நூலை வாசித்தது நினைவில் பசுமையாக இருக்கிறது. அந்நூலின் பல புதிர்கள் பல தகவல்கள் கற்பனையைத் தூண்டக் கூடியவை. சிந்திப்பதற்கு இனிமையானவை . 

அதில் ஒரு புதிர் வரும் : நம் முன் ஒரு சதுரங்கப் பலகை இருக்கிறது. அதில் 8 X 8 என்ற அளவில் 64 கட்டங்கள் உள்ளன. முதல் கட்டத்தில் ஒரு கோதுமை தானியம் வைக்கப்படுகிறது. இரண்டாம் கட்டத்தில் இரண்டு கோதுமை தானியம் வைக்கப்படுகிறது. மூன்றாம் கட்டத்தில் நான்கு தானியம் வைக்கப்படுகிறது. இவ்விதம் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரித்துக் கொண்டே சென்றால் 64 வது கட்டத்தில் எத்தனை தானியங்கள் இருக்கும் என்பது புதிர். 

அந்த புதிருக்கான விடைய அளித்திருப்பார்கள் . அதாவது ஆழி சூழ் உலகு முழுவதையும் மேலும் ஆழியின் பரப்பளவையும் கோதுமை வயலாக்குவதுடன் சந்திரனின் பரப்பு முழுவதையும் கோதுமை வயலாக்கினால் எவ்வளவு கோதுமை விளையுமோ அவ்வளவு கோதுமையை சதுரங்கப் பலகையின் கடைசி கட்டத்தில் வைக்க வேண்டியிருக்கும் என்று கூறியிருப்பார்கள். முதல் கட்டம் ஒரு கோதுமை தானியம் என்பது 2ன் அடுக்கு பூஜ்யம். 64 வது கட்டம் என்பது 2ன் அடுக்கு 64. அது அத்தனை அதிகமானது. 

எனக்கு இந்த புதிர் அளித்த இனிமை என்பது அளப்பரியது. 

அத்தகைய இனிமையை பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு தாவரவியல் நூல் ஒன்றை வாசித்து இன்று அடைந்தேன். அந்த நூலின் பெயர் ‘’கல்லெழும் விதை’’. அதன் ஆசிரியர் அறிஞர் லோகமாதேவி. உண்மையில் அவரது இந்த நூலை தாவரவியல் நூல் என்று மட்டும் குறிப்பிடுவது அந்நூலின் முழுமையான பெருமையை எடுத்துரைக்காது ; அந்நூல் அறிவியல் நூல். இருப்பினும் அதில் இலக்கியம், வரலாறு, மானுடவியல், புவியியல் ஆகியவையும் உள்ளன. 

காஃபி குறித்த அத்தியாயமே நூலின் முதல் அத்தியாயம். காஃபி பயிர் குறித்து ஏகப்பட்ட சுவாரசியமான நுண்ணிய விவரணைகள் இதில் உள்ளன. இந்திய தேசத்துக்கு காஃபி பயிர் வந்தது குறித்து உலவும் கதை ஒன்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம் நாட்டின் மேற்கு கடற்கரைக்கு அருகில் இருக்கும் சிக்மகளூர் பகுதியைச் சேர்ந்த சூஃபி துறவியொருவர் மெக்காவுக்கு செல்கிறார். அங்கே அளிக்கப்படும் பானம் அவர் அதுவரை அருந்தியிராதது. அந்த பானத்தின் சுவையால் ஈர்க்கப்பட்டு அதனை தன்னுடன் இந்தியாவுக்குக் கொண்டு வர எண்ணுகிறார். ஆனால் அந்த பானம் எந்த தாவரத்தின் கொட்டையிலிருந்து தயாராகிறதோ அதனை அராபியர்கள் அதன் பச்சைத்தன்மையை நீக்கி வறுத்தே மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அந்த பானத்தின் கொட்டை தங்கள் வழியே வேறு எந்த நாட்டுக்கும் சென்று விடக் கூடாது என்பதில் அவர்கள் தீவிரமாக இருக்கின்றனர். சூஃபி துறவி எப்படியோ அந்த தாவரத்தின் ஏழு பச்சைக் கொட்டைகளை தன்னுடைய நீண்ட அடர்த்தியான தாடியில் மறைத்து இந்தியாவின் மேற்குக் கரைக்கு சிக்மகளூருக்குக் கொண்டு வந்து விடுகிறார். அந்த 7 கொட்டைகள் முளைக்க வைக்கப்பட்டே இந்தியாவில் காஃபி உற்பத்தி துவங்கியது என்கிறார் நூலாசிரியர். கர்நாடகாவின் பிரபலமான காஃபித்தூள் நிறுவனங்களும் காஃபி கடைகளும் நீண்ட அடர்தாடி கொண்ட சூஃபி ஒருவரின் படத்தை தங்கள் சின்னமாக வைத்திருப்பதை சுட்டுகிறார் ஆசிரியர். 

மெக்காவில் ஹஜ் பயணம் வரும் யாத்ரிகர்களுக்கு காஃபி அளிக்கப்படுகிறது. திடீரென காஃபி ஒரு போதைப்பொருள் என ஒரு கருத்து பரவுகிறது. அரேபிய அரசாங்கம் காஃபியை நாடு முழுவதும் தடை செய்கிறது. காஃபி தடை செய்யப்பட்டதைக் கண்டித்து அரேபியா முழுவதும் மக்கள் பெரும் ரகளையில் ஈடுபடுகின்றனர். பின்னர் அரேபிய அரசாங்கம் காஃபி தடையை ரத்து செய்து ஆணை பிறப்பிக்கிறது. 

மேற்படி இரு சம்பவங்களும் பொது யுகம் 15ம் நூற்றாண்டில் நிகழ்ந்திருக்கக் கூடும்!

நீலகிரி மலைப்பகுதியில் பழங்குடிகள் ‘’ஆரோக்கியப் பச்சை’’ என்னும் தாவரத்தை ஆற்றல் தரும் உணவாக உண்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மலையேற்றம் சென்ற குழு ஒன்று அந்த தாவரத்தின் மகத்துவத்தை உலகுக்கு பறைசாற்றுகிறது. ‘’ஜீவனி’’ என்ற பெயரில் அந்த தாவரத்தின் பொடி பல்வேறு சவால்களை சமாளித்து விற்பனைக்கு வருகிறது. இதைக் குறித்த கட்டுரை நூலின் இரண்டாம் அத்தியாயம். 

பாப்பரஸ் என்ற தாவரம் பதப்படுத்தப்பட்டு அதில் மனிதர்கள் மசி கொண்டு எழுதியிருக்கிறார்கள். இந்த விபரத்தை கிளியோபட்ரா வாழ்வில் அவருக்கு அளிக்கப்பட்ட பரிசு ஒன்றிலிருந்து தொடங்கி மூன்றாம் அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. 

வினாடி வினாக்களில் அதிகம் கேட்கப்படும் கேள்வி ‘’ சாக்ரடீஸுக்கு அளிக்கப்பட்ட நஞ்சின் பெயர் என்ன?’’ என்பது. ஹெம்லாக் என்பது அந்த வினாவுக்கான விடை. ஹெம்லாக் தாவரம் குறித்த கட்டுரையில் ஒட்டு மொத்த சாக்ரடீஸின் வாழ்வை மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். இதனை வாசிப்பவர்கள் சாக்ரடீஸையும் மறக்க மாட்டார்கள்; ஹெம்லாக்கையும் மறக்க மாட்டார்கள். 

சில ஜப்பானிய உணவு வகைகளைக் குறித்த அத்தியாயங்களை வாசிப்பவர்களை ஜப்பான் தேசத்தில் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்களாகவும் சஞ்சரித்துக் கொண்டிருப்பவர்களாகவும் தன் சொற்களின் மாயத்தால் ஆக்கி விடுகிறார் ஆசிரியர். இந்த நூலை வாசிப்பவர்களில் கணிசமானோர் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கும் இந்த உணவு வகைகளுக்காகவேனும் வாழ்வில் ஒரு முறையாவது ஜப்பான் செல்வார்கள் என்று துணிந்து சொல்லலாம் !

தர்ப்பை புல் குறித்து எழுதப்பட்டிருக்கும் அத்தியாயம் மிகச் சிறப்பானது. 

லினன் துணி குறித்து எழுதப்பட்டிருக்கும் அத்தியாயம் இந்நூலின் உச்சம். 

குற்றப் புலனாய்வுத் துறையில் தாவரவியல் எவ்விதம் உதவியிருக்கிறது என்பதைக் குறிப்பிடும் அத்தியாயம் ஒரு வேகப்புனைவு நாவலை வாசிக்கும் அனுபவத்தைத் தந்தது. 

அரிசி, கடுகு, அன்னாசி, சோற்றுக்கற்றாழை ஆகிய்வை குறித்தும் சிறப்பாக சுவாரசியமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். 

இந்நூலை வாசித்த பின் எந்த வாசகனும் இதுவரை பார்த்த கவனித்த புரிந்து கொண்ட உள்வாங்கிக் கொண்ட எண்ணிக் கொள்ளும் தாவர உலகத்துக்கும் இனி அவன் காணப் போகும் கவனிக்க இருக்கும் புரிந்து கொள்ள இருக்கும் உள்வாங்க இருக்கும் எண்ணப் போகும் தாவர உலகுக்கும் பெரும் தூரம் இருக்கும். 

சதுரங்கப் பலகையின் முதல் கட்டத்துக்கும் 64ம் கட்டத்துக்கும் இருக்கும் தூரத்தைப் போல !   

மாலா!

இன்று மாலதிக்கு பிறந்த நாள். அதிகாலையிலேயே வாழ்த்தினேன். என் நட்பு வட்டம் மிகமிகச்சிறியதும் குறுகியதும். கல்லூரியிலும் சரி வெளியிலும் சரி யாரிடமும் நெருங்கிப்பழகுவதில்லை ஒரு குறிப்பிட்ட தூரத்திலேயே அவர்களையும் நிறுத்தி நானும் கோட்டிற்கு வெளியே நின்று கொள்வதுதான் வழக்கம். அரிதாகவே நான் மிக நெருங்கி நட்பும் அன்பும் கொள்கிறேன்.

கல்லூரியில் மாலதியுடன் மட்டுமே நான் மிகுந்த பிரியமும் நட்பும் கொண்டிருந்தேன். வழக்கமாகவே நான் ஆசிரியர் அறையிலும் அமைதியாக என் வேலை, வகுப்பு. ஓய்வு நேரங்களில் வாசிப்பு என இருப்பேன். வம்பளப்பிலும் கலந்துகொள்வதில்லை. டீ காபி குடிக்க கேண்டீன் போவதே இல்லை. எப்போதாவது என்னைப்பார்க்க விருந்தினர்கள் வந்தால் அவர்களுடன் கேண்டீன் போய் காபி வாங்கிக்கொடுத்து நானும் குடிப்பதுண்டு இது வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை நடக்கும்.

ஒருமுறை அப்படி திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த ஒரு நண்பரை அழைத்துக்கொண்டு கேண்டீன் போய் காபிக்கு சொல்லிவிட்டு பேராசிரியர்களுக்கென்று இருக்கும் தனிப்பட்ட இடத்தில் அவருடன் அமர்ந்திருக்கையில் மேசையைத் துடைத்து சுத்தம் செய்யும் பணியாளர் ஒருவர் என்னை ‘’.. இங்கெல்லாம் உட்காரக்கூடாதும்மா இது டீச்சர்கள் உட்காரும் இடம்..’’ என்று அதட்டினார்.

பக்கத்து மேசையில் உணவருந்திக்கொண்டிருந்த பொருளாதாரத்துறை பேராசிரியர் பதறி ’’…ஏய்.ஏய் என்னப்பா இவங்க இங்கே 20 வருஷமா இருக்காங்க . அவங்களைபோயி..’’என்று அவரைக் கண்டிக்க எழுந்தார். நான் சிரித்தபடி அவருக்கு என்னைத்தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று சமாதானம் செய்தேன். அந்த அளவில் தான் நான் கல்லூரி வளாகத்தில் புழங்குகிறேன்.

அப்படி வெகுகாலம் முன்பு எதற்கோ வரலாற்றுத்துறைப் பேராசிரியருடன் கேண்டீனுக்குபோயிருக்கையில் நல்ல கூட்டமென்பதால் ஒருமேசையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த மாலதியின் எதிரே அதே மேசையில் அமரவேண்டி இருந்தது, மாலதியை வரலாற்றுத்துறைப் பேராசிரியர் அறிமுகம் செய்தார், ஹல்லோ சொல்லிக்கொண்டோம்.

மாலதி பணிபுரியும் ஆங்கிலத்துறையில் அன்று யாருக்கோ பிறந்த நாள் எனவே சக ஆசிரியர்களுக்குக் கேண்டீனில் மதிய உணவு ட்ரீட். மாலதிக்கு வகுப்பு இருந்ததால் தாமதமாகத் தனியாக வந்து உணவருந்திக்கொண்டிருந்தாள். மாலதி அழகாக நளினமாக சாப்பிட்டதைப் பார்த்தேன் கூடவே உணவை ரசித்தும் சாப்பிட்டாள்.

(ள் விகுதி நானும் மாலாவும் தோழிகள், இருவருக்கும் சமவயது மற்றும் அன்பினால்)

மிக அழகாகக் கைவிரல் நுனிமட்டும் சாப்பாட்டில் படும்படி மெதுவாக அவ்வபோது உதட்டைத் துடைத்துக்கொண்டு சாப்பிட்டுவிட்டு இறுதியாக ஒரு ஐஸ்கிரீமையும் சாப்பிட்டாள்.

எனக்குச் சாப்பாட்டை ரசித்துப் பிகுபண்ணிக்கொள்ளாமல் சாப்பிடுபவர்களைப் பிடிக்கும். ’’….சாப்பிடறீங்களா…’’ என்று யாரேனும் கேட்டால் உடனே சரி என்று சொல்லுபவளாதலால், அப்படி என்னைப்போலவே சரி என்பவர்களையும் பிடிக்கும். அந்தக்கணத்திலிருந்து நானும் மாலதியும் தோழிகளானோம். நாஞ்சில் நாடனை ,ஜெவை, சுந்தரராமசாமியைல்லாம் வாசிக்கும் ஒருவரை நான் கல்லூரியில் சந்திப்பேனென்று நினைத்திருக்கவே இல்லை.

சிலநாட்களில் இருவருக்கும் பொதுவான தோழியான (சுதந்திரா அம்மா) உமாவுடன் மாலதியின் வயலூர் தோட்டத்துக்கு போயிருந்தேன். முதுகலைப் பட்டதாரியான மாலதியின் கணவர் கிருஷ்ணமூர்த்தி அண்ணன் தென்னைமரங்களின் நிழலில் கயிற்றுக்கட்டிலைபோட்டுக்கொண்டு அமர்ந்து ஜெ வின் ஒரு நூலைப் படித்துக்கொண்டிருந்தார். அந்தக்காட்சி அப்படியே ஒரு புகைப்படம் போல என் மனதில் பதிந்திருக்கிறது. அவர்மீது அன்று கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. அபி நிலாவும் இனிய மதியும் சுதந்திராவும் வாய்கொள்ளாமல் அத்தை அத்தை என்றழைக்கும் மருமகள்களாகினர். சரணும் தருணும் அத்தை மாமாவென்று அவர்களுடன் ஒட்டிக்கொண்டார்கள்.

நாங்களிருவரும் கல்லூரியில் தினமும் பார்த்துக்கொள்வது, மாலதியின் தோட்டதுக்கு நாங்களும், இங்கே வீட்டுக்கு மாலதி குடும்பத்தினரும் அடிக்கடி சென்று வந்துகொண்டும் புத்தகங்களைப் பகிர்ந்துகொள்வதுமாக இருந்தோம். தாவரவியல் ஆசிரியர்கள் அறைக்கு நேர் கீழே மாலதியின் அறை இருந்தது. சில சமயம் நான் எனக்குக் கீழே மாலா இருப்பாள் என்று நினைத்துக்கொண்டு புன்னகைத்துக்கொள்வேன்.

மாலதி சுயநிதிப்பிரிவில் பணியாற்றியதால் 10-4pm அவளது பணிநேரம். எனக்கு 9-3pm. பெரும்பாலும் நான் 9 மணி வகுப்பிலிருப்பேன். புத்தம் புதிதாக மாணவர்களைச் சந்திப்பதிலும் அவர்கள் சோர்வடையும் முன்னரே உற்சாகமாகக் கற்பிப்பதிலும் நான் கவனமாக இருப்பேன், டைம்டேபிள் போடும்போதே சொல்லிவிடுவேன் எல்லா முதல் வகுப்பும் எனக்குக் கொடுக்கும்படி.

இன்றுவரையிலும் அது தொடர்கிறது. எனவே 10 மணிக்கு வகுப்பை முடித்துவிட்டு சாக்பீஸ் கறைபடிந்த கையும் எல்லா வகுப்பிலும் கரும்பலகைக்கு முன்பாக ஃபேன் இருப்பதால் சாக்கட்டித்தூள் படிந்த தலைமுடியுமாக நான் வருகையில் தாவரவியல் துறைக்குப் படியேறும் இடத்தில் மாலதி ’நீட்டாக’ புடவை உடுத்திக்கொண்டு நின்றிருப்பாள். கொஞ்ச நேரம் பேசிவிட்டே இருவரும் பிரிவோம்.

நானும் மாலதியும் சகோதரிகளா என்று கல்லூரியில் பலரும் கேட்கத்துவங்கினார்கள்.

மாலதியின் கைகளில் எனக்குக்கொடுக்கவென்று எதாவது கட்டாயம் இருக்கும். சின்னச்சின்ன டப்பாவில் அன்று காலைச் செய்த சிவப்பரிசிப்புட்டோ எனக்கு (இன்றுவரை செய்யத்தெரியாத) எண்ணெய்க் கத்தரிக்காய்க்குழம்போ, காட்டுக்கீரையோ, காயோ, கனியோ, புத்தகமோ தலைக்குவைத்துக் கொள்ள மலர்ச்சரமோ இருக்கும்.

வகுப்பில்லாதபோது ஆங்கிலத்துறைக்கெதிரில் இருக்கும் சின்னச் சிமெண்டுத்திட்டில் அமர்ந்து பேசுவோம். சில சமயம் நூலகத்தில் சந்திப்பதும் உண்டு. மாலதியின் அம்மா பிரமாதமாகச் சமைப்பவர்கள். சரண் தருணுக்கு பிடித்த பலகாரங்கள் செய்து கொடுத்தனுப்புவார்கள். எனக்குபிடித்த கோதுமை மாவில் சர்க்கரையும் கனிந்த வாழைப்பழமும் கலந்து செய்யும் பழப்பணியாரம் அடிக்கடி செய்து கொடுத்தனுப்புவார்கள். வாயில் கரையும் அது.

இன்று வரை மாலாவீட்டில் மிக்ஸி உபயோகப்படுத்துவதில்லை என்பதும் அவர்கள் வீட்டுணவின் அபாரமான சுவைக்குக்காரணம். ஆட்டி ஆட்டி மினுங்கும் பளபளப்பான ஆட்டுக்கல்லும் அம்மிக்கல்லும் சமையலறைக்குபின்னால் இருக்கும் நேர்த்தியாகப்பராமரிக்கப்படும் தோட்டம், உருளியில் மிதக்கும் மலர்கள் என்று மாலதியின் வீடு அழகாக இருக்கும்.

கல்லூரியில் மாலதி என்னைப்போலவேதான், நேரத்துக்கு வருவதும் மிகுந்த ஈடுபாட்டுடன் வகுப்பெடுப்பதும் வாக்ஸ் பாப்புலை போன்ற கல்லூரி நேரம் முடிந்தபின்னர் செய்யும் வேலைகளையும் மனதார இழுத்துபோட்டுக்கொண்டு செய்வதுமாக எந்நேரமும் வேலையாகவே இருப்பாள்.

அரசுவேலை ஆங்கிலத்துறைக்கு வந்தபோது தான் விண்ணப்பிக்கவில்லை என்று மறுத்த மாலதியை நண்பர்கள் வற்புறுத்தி விண்ணப்பிக்கசெய்தோம்.

22 வருடங்களாக அயராது பணியாற்றிய, துறை சார் அறிவில் யாருக்கும் நிகர் கூடச் சொல்லமுடியாத, அந்த வேலைக்கான எல்லாத்தகுதிகளும் இருந்த, ஏராளமான வேலைகளைக் கல்லூரிக்கு அந்தச் சொற்பச் சம்பளத்தைப் பற்றி எண்ணாமல் செய்துகொடுத்த மாலதிக்கு அரசு வேலை கிடைக்கவில்லை. இத்தனைக்கும் ஆங்கிலத்துறையில் பல இடங்கள் அப்போது நிரப்பப்பட்டன, வெளியிலிருந்து கூட 3 பேர் தேர்வானர்கள். ஒரு தனி மனிதரின் காழ்ப்பால் மாலதிக்கு அரசுவேலை தரப்படவில்லை. அந்தக்காழ்ப்பு மாலதியின் செயலாற்றலால் தான் அவருக்குஉருவானது,

தீச்சொல்லிடும் உரிமை தெய்வங்களுத்தான் இருக்கிறது இல்லையா? சரி போகட்டும்.

மாலதி மனமுடந்துவிடவில்லை நான்தான் பெருங்கோபமடைந்திருந்தேன். மாலா வழக்கம்போல வேலைகளில் மூழ்கி இருந்தாள் ஆனால் ஊழ் என்ற இரக்கமில்லாத ஒன்று இருக்கிறதல்லவா?

கிருஷ்ணமூர்த்தி அண்ணன் சுகவீனப்பட்டதும் மண் மறைந்ததும் எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்டது. புங்கைமரங்கள் பூத்து முடிந்திருந்த ஒருநாளில் அதனடியில் கண்ணீருடன் மாலா அதைப்பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்தது நினைவிருக்கிறது. மாலா அவரை அடிக்கடி அழைத்துக்கொண்டு சிசிகிச்சைக்கெனக் கேரளாசெல்லவேண்டி இருந்தது. கல்லூரி வேலை, மருத்துவச்செலவுகள், கல்யாண வயதிலிருந்த மருத்துவம் படித்துக்கொண்டிருந்த அபி, பள்ளி இறுதியிலிருந்த இனியா, வயதான அம்மா என எல்லாப்பொறுப்பையும் மாலா பார்த்துக்கொண்டாள். கொச்சிக்கு சிகிச்சைக்குச் சென்ற ஒருநாளில் வழியில் விற்றுக்கொண்டிருந்த சுவற்றில் பதிக்கும் பூந்தொட்டிகளிரண்டை எனக்கென வாங்கி வந்த மாலாவின் அன்பை என்னவென்று சொல்வது?

என் இன்ப துன்பங்கள் எல்லாவற்றிலும் எப்போதும் என்தரப்பில் என்னுடனிருந்த மாலா, அண்ணன் மறைந்த பின்னர் எந்தப் புகாரும் இல்லாமல் வேலையை ராஜி வைத்தாள். 25 வருட ஆசிரியப்பணியின் அனுபவம், முனைவர் பட்டம், கற்பித்தலில் இருந்த ஆர்வம் எல்லாவற்றையும் நொடியில் ஒதுக்கி வைத்துவிட்டு குடும்பத்தை மகள்களை விவசாயத்தை முழுமனதுடன் ஏற்க மாலாவுக்கு இருந்த மனக்கட்டி லட்சக்கணக்கான பெண்களுக்கு இல்லை. இப்போது பல ஏக்கர்கள் விரிந்திருக்கும் தோட்டத்தை தான் ஒருத்தியாகபார்த்துக்கொள்கிறாள். காலை 6 மணிக்குத் தோட்டம் சென்றால் இரவுதான் வீடு திரும்புகிறாள்.

நானும் சிலநாட்கள் மாலாவுடன் தோப்பில் இருப்பதுண்டு. சரியாக நேரத்துக்குச் சாப்பிடாமல் விவசாய வேலைகளைப் புதிதாகக் கற்றுக்கொண்டு முழு விவசாயத்தையும் தானே சிறப்பாகச் செய்கிறாள்.

வர்ஜீனியா வுல்ஃபின் படைப்புக்களில் முனைவர் பட்டம் பெற்ற மாலா தன் துறைசார் அறிவை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தென்னை மரங்களுக்கு உரமிடுவதும், சாம்பு புற்களைக் களை எடுப்பவர்களை மேற்பார்வையிடுவது, மிளகாய் பறிக்க ஆட்களை ஏற்பாடுசெய்வதும், தோட்டப் பணியாளருக்குமாகச் சேர்த்து சமைத்து எடுத்துக்கொண்டு போவதுமாக முழுமையாக வேறொரு ஆளுமையாக மாறி இருக்கிறாள்.

நாங்கள் தினமும் பேசிக்கொள்வதில்லை. வாட்ஸ்ஸாப்பிலும் தொடர்பிலில்லை எப்போதாவது பேசிக்கொள்வோம் ஆனால் முந்தினநாள் விட்ட இடத்திலிருந்து பேசுவதுபோல் பேசிக்கொள்வோம். மாலதிக்குப்பின்னர் கல்லூரியில் எனக்கு யாருடனும் தோழமை இல்லை. அவளுக்கான இடம் நிரந்தரமாகக் காலியாகத்தான் இருக்கிறது. அதை மாலதியால் மட்டுமே நிரப்ப முடியும்.

மாலதி இன்று கார் ஓட்டக் கற்றுக்கொண்டிருக்கிறாள். மகள்களைப் பார்க்கச் செல்லவோ, உரம்வாங்கவோ, வங்கி வேலைகளோ, நல்லதுகெட்டதுக்கோ எங்கு வேண்டுமானாலும் மாலதி யாரையும் சார்ந்திராமல் தனியே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறாள். சுதந்திரா, அபி, இனியா, சரண், தருண் சாம்பவி ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக ஒன்றாக ஆரோக்கியமான நட்புடன் இருக்கிறார்கள்.நானும் மாலதியும் உமாவும் மூச்சுலகிலிருந்து இதைமட்டுமே பார்க்க விழைகிறோம்.

பெண்களை அழகாக்குவது அவர்கள் கொண்டிருக்கும் விடுதலையே. மாலா என்னும் பேரழகிக்கு அன்பும் கட்டிமுத்தங்களும்.

நினைவுகள்!

இன்று ஜெ தளத்தில் தமிழ் விக்கியில் இருக்கும் என் பக்கம் வந்திருந்தது. பலர் அழைத்துப்பாராட்டினார்கள். இன்றிருக்கும் இந்த இடத்துக்கு ஜெ வைத்தவிர வேறு யாருமே காரணமில்லை. நன்றியுடன்அவரை நினைத்துக்கொள்ளாத நாளுமில்லை.

இன்றென்னவோ நான் திரும்பிப் பார்த்துக்கொண்டே இருந்தேன். கடந்து வந்த காலங்களை கடினப்பாதைகளை,  விழுங்கிய கசப்புக்களை பிடுங்கப்பட்ட வாய்ப்புகளை, தலைகுப்புற தள்ளிவிடப்பட்ட படுகுழிகளை, பறிக்கப்பட்ட மகிழ்வுகளை இப்போதிருக்கும் கண்ணியமான வாழ்வை என்று வேகமாக காணொளிக்காட்சிகளை ஓட்டி ஓட்டி பார்ப்பதுபோல மனம் பார்த்துக்கொண்டது. கடந்து வந்த மனிதர்களை குறித்த புகார்கள் பெரிதாக இல்லை. அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன் என்பதால் அவர்களுக்கும் என் அன்பு . இதோ விரைவில் என்னை இறுகப்பிடித்துக்கொண்டிருக்கும் ஒரு தளையிலிருந்து முற்றாக வெளியேறவிருக்கிறேன்.

சரியான மனிதர்களுடன் வாழக்கொடுத்து வைக்காததைக் காட்டிலும் சரியில்லாதவர்களோடான வாழ்வுதான் வதையாகிவிடுகிறது. அன்னைமையும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு தளையிடுகிறது.

நான் அன்னைமையை  ஒருபோதும்உணர்ந்ததில்லை எனவே அதை அத்தனை இழக்கவேயில்லை. எனினும் அன்னையை இழந்தேன் மூன்று வருடங்களுக்கு முன்னர்.

எழுதிக்கொண்டு வாசித்துக்கொண்டு பயணித்துக்கொண்டிருக்கிறேன். முன்னைக்காட்டிலும் ஏராளம் தோழமைகள். மகன்கள் வேர்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் வெகுவிரையில் காலூன்றி கொள்வார்கள். 

இழந்துகொண்டிருக்கும் இளமையை குறித்த வருத்தமேதும் இல்லை. சரண் தருண் இருவரின்  தோளும் நெஞ்சும் அகமும் விரிந்திருப்பதில்  என் இளமையின் பங்களிப்பு இருக்கிறதே! நான் தான் அவர்களும்.

 நான் இழந்தவை  அவர்களில் மெல்ல மெல்ல நிரம்புவதை மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இளமையை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடுவதில்லை மாறாக இந்த வயதிற்கான தோற்றத்தின் கண்ணியத்திலும் கம்பீரத்திலும் கவனமாக இருக்கிறேன். i am aging gracefully. முன்னெப்போதைக்காட்டிலும் நம்பிக்கையுடன் உள்ளொளியுடன் நிறைவுடனும் இருக்கிறேன். சொல்ல மறந்துவிட்டேன். மிகுந்த மகிழ்வுடனும் இருக்கிறேன்.

வெண்முரசில் ஒரு வரி இருக்கும் மீட்டப்படாத யாழும் இசையாலானதே என்று.அப்படி எனக்குள்ளும்  நாதம் இருந்தது . நானே அதை வெகு தாமதமாக அறிந்துகொண்டேன். புழுதியில் எறியப்பட்டிருந்த நல்லதோர் வீணையை  எடுத்தேன். தூசி தும்புகளை துடைத்துச் சுத்தம் செய்தேன்  தந்திகளை சீராக்கினேன். அரிதாக மீட்டினேன் எழுந்த சுகநாதத்தை மனமகிழ்ந்து ரசித்தேன். மீட்டாதபொழுதுகளிலும் நினைவில் இருக்கும் அவ்விசையை நினைத்துக்கொண்டேன்.

அன்பு!

DTDC-பொறுப்பின்மையின் மறுபெயர்.

இந்தக்கொரியர் நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மையினால் ஏராளமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நான் வசிக்கும் வேடசெந்தூருக்கு அரை கி.மீ தூரத்தில் இருக்கும் ஒரு நிறுவனம் வீட்டில் கொண்டு வந்து கொடுக்க விதிகள் இல்லையென்பார்கள் நான் போய் நேரில்தான் வாங்கி ஆகவேண்டும். கேட்டால் ’’நான் சர்வீஸ் ஏரியாவாம்’’. அரைகிமீ தொலைவில் இருப்பது எப்படி சேவைக்கு அப்பாற்பட்ட இடமாகும்?.

முன்பே ப்ரொஃபெஷனல் கொரியரின் அலட்சியத்தைக் குறித்து எழுதி இருக்கிறேன். இருந்தாலும் அனைத்து பொறுப்பற்ற நிறுவனங்களுக்கும் நல்லபெயர் வாங்கித்தந்துவிடும் இந்த DTDC -Desk to Desk courier and cargo என்கிற நிறுவனம்.

ஆகஸ்டில் சரணுக்கு ஒருசில பொருட்கள் தேவையாக இருந்ததால் இந்த நிறுவனத்தை அணுகினேன். ’’எல்லாம் அனுப்பிடலாம் கொண்டு வாங்க’’ என்றார்கள். ஆகஸ்ட் 6ம் தேதி ’’ஓனர்’’ என்று சொல்லி எனக்குத்தரப்பட்ட ஒரு அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு ………’’அங்கே வந்து பேக் செய்யவேண்டுமா?’’….. எனக்கேட்டேன், …’’என்ன என்ன பொருட்கள் இருக்கிறது என்று ஒரு பட்டியலுடன் நீங்களே பேக் பண்ணி கொண்டு வந்துவிடுங்கள்’’…. என்றார்.

சரணுக்கு வேண்டியவற்றை கடைகடையாக அலைந்து வாங்கி ஒழுங்காகப் பேக்பண்ணி சுமார் 15 ஆயிரம் மதிப்புள்ள முறையான பிராண்டட் பொருட்களை அழகாக அடுக்கி கல்லூரியிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கும் அந்தக் கண்ணாடிச் சுவர்களும் வேலையாட்களும் ஒரு வரவேற்பாளினியும் இருந்த அலுவலகத்துக்கு ஆகஸ்ட் 7 அன்று போனேன். உள்ளே இருப்பவற்றின் பெயர் அளவுபோன்றவைகள் இருந்த பட்டியலையும் ஆதார் நகலையும் அந்த ரிஷப்ஷன் பெண் வாங்கிக்கொண்டாள்.

பார்சலை எடைபார்த்துவிட்டு 8450 ரூபாய் கேட்டாள், 5-கிலோவுக்கு மேல் இருந்தால் 10 கிலோவுக்கானதுதான் தொகை செலுத்தவேண்டும் என்றாள், சரி என்று ஜிபே செய்து விட்டு பார்சலையும் கொடுத்தேன். ரசீது கேட்டபோது வாட்ஸேப்பில் வரும் என்றாள் அந்தப்பெண்.

மறுநாள் 8 ம் தேதி ரசீது வரவில்லை. காத்திருந்துவிட்டு 9 அன்று அழைத்துக்கேட்டபோது பார்சலே ஜெர்மனிக்கு போய்ச் சேர்ந்துவிட்டது என்றாள் அதே வரவேற்பாளினி. சரி இனி எதுக்கு ரசீது என்று நானும் விட்டுவிட்டேன். சரணைக் கேட்டபோது ட்ராக் செய்து பார்த்துவிட்டு அருகிலிருக்கும் ஒருநகருக்கு வந்துவிட்டதாகவும் தன்னை இன்னும் யாரும் அழைக்கவில்லை என்றும் சொன்னான்

1 வாரமானதும் மீண்டும் ’’வந்துச்சாடா’’ என்று கேட்டேன், …’’இப்படி லேட் ஆகாது என்னன்னு தெரியலை என்றவன் மீண்டும் சரிபார்த்து குவாரண்டைனில் இருக்கு போலிருக்கு’’… என்றான். நான் மீண்டும் அந்த ஓனருக்கு அழைத்துக்கேட்டேன் …’’போயிரும் மேம் இன்னிக்கோ நாளைக்கோ’’… என்றார்.

ஆனால் செப்டம்பர் முழுவதும் இப்படியே போன் பண்ணிக்கேட்பதும் அவர்கள் எதோ சொல்லுவதுமாகவே கழிந்தது. பார்சலில் இருந்தது எல்லாம் உணவுப் பொருட்கள் வீணாகிவிடும் என்றும் எனக்குப் பதட்டமாக இருந்தது.

பிறகு அவர்கள் ஒருநாள் அழைத்து என் இமெயில் வாங்க மறந்து விட்டதால் அதை கொடுக்கச்சொன்னார்கள் கொடுத்தேன். பின்னர் 10 நாட்கள் அமைதி. செப்டம்பரே முடியும் தருவாயில் சரண் அழைத்து …’’அந்தப் பார்சல் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாக தகவல் இருக்கு, என்னையும் யாரும அழைக்கவில்லை, உன்னை அழைத்தார்களா?…’’ என்றான். இல்லை என்றேன்.

பொள்ளாச்சி DTDC கொரியர் அலுவலகத்துக்குப் போனில் கேட்டபோது அவர்களுக்குப் பார்சலைக்குறித்து எதுவுமே தெரியவில்லை. அப்படியா?திருப்பி அனுப்பிட்டாங்களா? என்று என்னைக் கேட்டார்கள். பிற்பாடு பட்டியலிட்டீர்களா? ஆதார் கொடுத்தீர்களா என்று ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டு என்னை வெறுப்பேற்றினார்கள். பின்னர் ’’அப்படியெல்லாம் திருப்பி அனுப்ப மாட்டாங்க நாங்கள் பார்க்கிறோம்’’ என்றார்கள்.

அடுத்த வாரம் கடும் கோபத்தில் அந்த ஓனருக்கு பலமுறை அழைத்தேன் அவர் எடுக்கவேஇல்லை . அந்த அலுவலகதுக்கு நேரில் சென்றேன். அதே வரவேற்பாளினி மட்டும் இருந்தாள். ஓனர் எங்கே என்றேன். போன் பண்ணுங்க என்றாள், அவர் எடுக்கலை நீ கூப்பிடு என்றேன். அவள் அவருக்கு போன் பண்ணினதும் எடுத்தார் ஓனர், எனக்கு போனைக் கொடுத்தாள் …’’ நான் இத்தனை நேரம் போன் பண்ணினேன் எடுக்கவேயில்லையே நீங்க என்றேன், அவர் நான் பேசுவது கேட்காதது போல் ’’ஹலோ ஹல்லோ’’ என்று மீண்டும் மீண்டும் சொல்லிகொண்டிருந்தார். கடுப்பாகி சத்தமாக ‘’ஏன் நான் அத்தனை முறை கூப்பிட்டு எடுக்கவில்லை ஆனால் இப்போ ரிஷப்ஷனில் கூப்பிட்டா மட்டும் எடுக்கறீங்க ,பார்சலை திருப்பி அனுப்பினது கூட தெரியலையா உங்களுக்கு ?’’… என்று கேட்டேன்

பதிலுக்கு அந்த ஒனர் ’’… கூப்பிட்டீங்கன்னா உடனே எடுக்கனுமா என்ன? கார் ஓட்டிக்கொண்டிருக்கையில் யார் கூப்பிட்டாலும் எடுக்கும் வழக்கம் இல்லை…’’ என்றார்.

கோபம் எனக்குக் கட்டுக்கடங்காமல் போனது, ஒரு அலுவலகம் வைத்து நடத்தும் ஒருவர் வாடிக்கையாளரிடம் பேசும்முறைஅல்ல அது. கோபமாக போனை அணைக்காமலேயே அந்தப்பெண்ணின் மேசையில் வைத்துவிட்டு வந்துவிட்டேன்

அதன்பிறது அந்தத் திருவாளர் ஓனர் என்னை அழைத்து …’’பணம் கட்டினீங்கன்னா என்னவேணா செய்வீங்களா? என்றும் பார்சலை அப்படி ட்ராக் செய்து சொல்லிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் போனை அப்படியெல்லாம் கோபமாக மேசையில் வைக்கக்கூடாது என்றும் அதட்டினார். பதிலுக்கு அவரைப்போன்ற நபர்களிடம் அப்படிக் கீழே இறங்கிப்பேசும் வழக்கமில்லை என்பதால் நான் இதைக்குறித்து புகார் அளிக்கப்போகிறேன் என்று மட்டும் சொல்லி போனை கட் செய்தேன். அதன்பிறகு வேறொரு பெண் கோவையிலிருந்து அழைத்து அதிலிருக்கும் ஒரு பாக்கெட்டின் அளவு குறித்த சந்தேகத்தால் அது திருப்பி அனுப்பப்பட்டது என்றும் என் இமெயில் இல்லாததால் அதை சரிபார்க்க முடியாமலானதாகவும் சொன்னாள். நான் அவர்கள் என்னிடம் இமெயில் கேட்டு நான் அனுப்பிய தகவலை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பினேன் பிறகு மரண அமைதி.

நான் பெங்களூர் தலைமை அலுவலகத்துக்கு பல புகார் மெயில் அனுப்பியும் எந்தப் பலனும் இல்லை. ரசீது இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்றார்கள். ரசீதை மீண்டும் கேட்டு வாங்கி அனுப்பினேன். ஒரு பலனும் இல்லை, ஒரு பதில் கூட இல்லை.

நேற்று நவம்பர் 1ம் தேதி அந்தப்பார்சலை கோவையில் இருந்து பணம்கட்டி நான் மீண்டும் திருப்பி எடுத்துகொள்ளும்படி தகவல் வாட்ஸேப்பில் வந்தது.

நான் பதிலளிக்கவில்லை , சரணே இப்போது இந்தியாவுக்கு வந்துவிட்டான் அதை மீண்டும் செலவு செய்து திருப்பி எடுத்துகொள்ளும் எண்ணமும் இல்லை.

இந்தியா முழுக்க இப்படி பொறுப்பற்றவர்களால்தான் பல பெயர்பெற்ற நிறுவனங்கள் இயங்குகின்றன. பார்சலை வாங்கும்போதே என்ன என்ன தேவை எனக்கேட்டு வாங்கத்தெரியவில்லை, பார்சல் எங்கு இருக்கிறது என்று ட்ராக் செய்யவும் தெரியாமல் வாடிக்கையாளாரிடம் மரியாதையாக பேசவும் தெரியமல் பொறுப்பாக பார்சல் போய்ச்சேர்ந்ததை உறுதிப்படுத்தவும் தெரியாமல் இவர்கள் இப்படி அலுவலகம் எல்லாம் வைத்துகொண்டு இருப்பதை நினைத்தால்….

வாழ்கையில் இந்த DTDC பக்கமே இனி போகமாட்டேன். செலவுசெய்து வாங்கியவை சரணுக்குப் போய்ச்சேரவில்லை, தேவையில்லாமல் அந்த ’ஒனர்’ என்னை மரியாதைக்குறைச்சலாக பேசியதைக் கேட்டுக்கொள்ள வேண்டி வந்தது, அந்தப்பொருட்கள் எல்லாம் வீணாகியது எல்லாவற்றையும் விட அந்தப்பார்சலில் ஒரு வெள்ளை அட்டையில் அழகாக ஒரு இதயம் வரைந்து அன்பு என எழுதி அனுப்பி இருந்தேன். யாராலும் கவனிக்கப்படாமல் போன அந்த அன்பையும் நினைத்துத்தான் இப்போது மன உளைச்சல்.

பொறுப்பற்றவர்களுக்கு மத்தியில் வாழ்வதும், மூடர்களை அன்றாடம் எதிர்கொள்வதும்தான் இப்போதிருக்கும் பெரும் பிரச்சனைகள். 25 ஆயிரம் ரூபாய் யாரோ பிக்பாக்கட் அடித்துவிட்டார்கள் திருட்டுக்கொடுத்துவிட்டேன் என்று நினைத்துக்கொள்கிறேன்.

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑