காலையிலேயே பெருங்கூச்சல் கேட்டது. சமையலறை ஜன்னலிலிருந்து பார்த்தால் தெரியும் தோட்டத்தின் உரிமையாளரின் காட்டுச்சாலை, வடக்கில் நம் வீட்டுச் சமையலறை ஜன்னலைப் பார்த்துத்தான் இருந்தது. ராசுக்கவுண்டர் பெரிதாகச் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்.
‘’.. போடு, கீழே போடு, இருக்கறது பூரா நீ வழிச்சுட்டுப் போயிட்டா நான் ஒரத்துக்கு என்ன பண்ணறது? அதுவும் கேட்கறதுமில்ல; என்னமோ கொப்பனூட்டிலிருந்து எடுக்கறவளாட்டம் போடு கீழே ..’’
முருங்கை இலைகளை பருப்பில் போட்டதும் அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு ஜன்னலில் எட்டிப்பார்த்தேன். ராசுவின் எதிரில் கையில் அள்ளிய சாணியுடன் மாரியம்மாள் தலை குனிந்து நின்றிருந்தாள். விளிம்பு நிலை மக்களில் ஒருத்தி மாரியம்மாள். சனி ஞாயிறுகளில் அடுத்த நிறுத்தத்தில் இருக்கும் ஏராளமான கடைகளின் வாசலில் ஒன்றிரண்டில் சாணி போட்டு வழித்துவிட்டால் நூறோ இருநூறோ கிடைக்கும். அவ்வப்போது இப்படி அருகிலிருக்கும் தோப்புகளில் சாணியை பலர் இப்படி எடுத்துக்கொள்வார்கள். அது ஒரு உபரி வருமானம்.
மாரியம்மாள் இன்று ராசுக்கவுண்டரிடம் அதற்குத்தான் திட்டு வாங்கிக்கொண்டிருக்கிறாள்.
ராசுக்கவுண்டர் தனி ஆள். ஒரு வகையில் எனக்கு உறவினரும் கூட. அவரின் நங்கையின் வகையில் ஒரு பெண்தான் என் அண்ணன் ஒருவர் கல்யாணம் செய்துகொண்டிருக்கிறார். ஆனால் நான் ராசுவிடன் பேசியது கூட இல்லை. ஒரு பழைய சைக்கிளில் நான் கல்லூரிக்குச் செல்கையில் என்னை கடந்து அவர் பால் ஊற்றச் செல்கையில் அவ்வபோது பார்த்திருக்கிறேன். ஏனோ அவர் திருமணம் செய்துகொள்ளாமல் அந்த கோடிக்கணக்கான பெறுமதி உள்ள வீட்டில் ஓலைச்சாலையில் வசிக்கிறார். மாடும் கன்றும் எருமையும் ஆடும் கோழியும் தேங்காயும் மாங்காயுமாகச் செழிப்பான தோட்டம் அது.
சாணி அள்ளியதற்கு கொஞ்சம் அதிகமாகவே திட்டு , சத்தமும் அதிகமென்பதால் அக்கம்பக்கத்து ஆட்கள் எட்டிப் பார்த்தார்கள். ராசு மேலும் மகிழ்ந்து குரலுயர்த்தி, “எடுபட்ட சிறுக்கி, இனி தோட்டத்துப் பக்கம் வந்தீன்னா காலை முறிச்சுப்புடுவேன், போடி!” என்று கத்தினார்.
மாரியம்மாள் ஒதுங்கி ஓரமாகச் சென்று சாணியைக் கீழே போட்டுவிட்டுத் திரும்பி நடந்தாள். பின்னால் “சிறுக்கி மக” என்ற ராசுவின் குரல் எனக்கும் கேட்டது.
கோவிட் தொற்று முடிந்து கல்லூரி திறந்து சில மாதங்களில் ஒருநாள் ஏற்காட்டுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. கல்லூரியிலிருந்தே காலை 5.30-க்குப் பேருந்து புறப்படுவதாக ஏற்பாடு. நான் வேடசந்தூரிலிருந்து புறப்படும் 5 மணி முதல் பேருந்தைப் பிடிக்க கருக்கிருட்டில் டார்ச் அடித்தபடி வெளியே வந்தேன். 200 அடிகள் பேருந்து நிறுத்தத்திற்கு நடக்க வேண்டும்.
தாத்தாரப்புச்சி மரத்திற்கருகில் ஏதோ ஒரு அசைவு, அப்படியே திடுக்கிட்டு நின்று விட்டேன். திரும்பி வீட்டுக்குச் செல்வதும் முடியாது. முதுகுக்குப் பின்னால் அந்த அசைவு மேலும் பயமுறுத்தும். அந்நேரத்துக்கு எந்த நடமாட்டமும் இல்லை, மையச் சாலையில் ஒரே ஒரு பைக் வெளிச்சமாக அகன்று போனதைத் தவிர.
தலையில் முக்காடிட்டுக்கொண்டிருந்த மாரியம்மாள் மெல்ல வெளியே வந்து என்னைச் சாதிப் பெயர் சொல்லி அழைத்து – “ச்சி நாந்தானுங்க” என்றாள்.
ஆச்சரியமாக இருந்தது, அந்த இருட்டில் அவள் அங்கே ஒளிந்திருந்தது. “என்ன மாரியம்மா, இந்நேரத்துல இங்கே?” என்றேன்.
அவள் சற்று நகர்ந்து முன்னே வந்து முக்காட்டை எடுத்துவிட்டாள். பொழுது துலங்கிக்கொண்டிருக்கையில், அவள் முகம் கொஞ்சமாகத் தெரிந்தது. தலையில் நெற்றியைச் சுற்றிப் போடப்பட்டிருந்த வெள்ளைநிறக் கட்டில் ரத்தம் ஊறிக்கசிந்திருந்தது.
சில நாட்களுக்கு முன் தான் அவள் புருஷன் மாரி அவள் மீது சந்தேகப்பட்டு பாட்டிலில் ஓங்கி தலையில் அடித்த ரத்தப் பெருக்கோடு அப்பா வீட்டிற்குப் பஞ்சாயத்துக்கு வந்தார்கள். சமாதானம் செய்து அம்பரம்பாளையம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தபோது போட்ட கட்டுதான் அது.
மாரியம்மாள் அந்தச் சமூகத்திலேயே கொஞ்சம் வெளுப்பும் லட்சணமுமாக அழகி. மாரி வழக்கமான புருஷன்மார்களைப் போலத்தான், ஊதாரி, குடிகாரன். ஆனால் மாரியம்மாள் மீது எப்போதும் சந்தேகம். இரண்டு பிள்ளைகள் வேறு.
மாரியம்மாளிடம் “இங்கே வா, என்ன இந்நேரத்தில் இங்கே இருக்கே? என்ன?” என்றேன்.
திகைப்பாய் இருந்தது. கீழ் சாதி மேல் சாதி எல்லாம் இந்தச்சுரண்டலுக்கு இல்லை போலிருக்கிறது. “என்ன மாரிம்மா? முதல்லயே வீட்டில் உனக்குப் பிரச்சனை, இப்படிப் பண்ணலாமா? மாரிக்குத் தெரிஞ்சா இன்னும் சண்டை ஜாஸ்தியாகுமில்ல?” என்றேன்.
’’..சரி வீட்டுக்குபோ யாராச்சும் பார்ப்பாங்க..’’ என்று சொல்லிவிட்டு விலகி பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தேன். அன்று முழுவதும் மாரியம்மாளின் கீழுதட்டில் ரத்தம் கசிந்த காயம் நினைவிலேயே இருந்தது.
அந்த மாரியம்மாள் தான் அதே ராசுக்கவுண்டரிடம் இன்று திட்டுவாங்குகிறாள் இருட்டில் நடப்பது யாருக்கும் தெரியாதுதான் என்றாலும் ஊரறிய இப்படி வேஷம்போட்டால் ,சந்தேகமும் வராதல்லவா?
அங்கிருந்து வீட்டை நோக்கி வந்த மாரியம்மாள் பின் வாசலில் நின்றிருந்த என்னைப்பார்த்து’’.. லீவுங்களாங்க –ச்சி?,,’’ என்றாள் . ’’..ஆமா மாரிம்மா என்றேன்..’’சிரித்தபடி அவளது மாட்டை இழுத்துக்கொண்டு போனாள். நெற்றியில் மாரி பாட்டிலில் அடித்த காயம் தழும்பாகி இருந்தது.
உள்ளே வந்தேன். அலைபேசியில் ஏராளமான மகளிர் தின வாழ்த்துக்கள் வந்திருந்தது. எல்லோருக்கும் ’’ஹேப்பி வுமன்ஸ் டே ’’என்று பதில் சொல்ல வேண்டும்.
இன்று இன்ஸ்டாவில் கும்ப்ளாங்கி நைட்ஸ் -ன் சில காட்சிகளை மீண்டும் பார்த்துக்கொண்டிருந்தேன். அது ஒரு எவர்கிரீன் படமாகிவிட்டிருக்கிறது கேரளத்திலும் என்னைபோல அரைமலையாளிகளுக்கும்.
இனி கேரளா இல்லை தெரியும் தானே? இந்த வாரத்திலிருந்து கேரளமானு.
அன்னா பென், கன்னக்குழியழகன் ஷான் நிகாமிடம் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளுக்கென வீண்டும் ஒருக்கில் மீன் வலையை வீசச்சொல்லிக் கேட்டுக்கொள்வதும், அநாயசமாக வலை வீசும் ஷான், அகலக்கண்ணி அன்னாவின் காதல் வலையில் சிக்கிக்கொள்ளும் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இன்னொரு முறை படத்தைப் பார்க்கவேண்டும் நேரம் கிடைக்கையில். பசுமை கண்ணை நிறைக்கிறது காட்சிக்கு காட்சி.
இன்னொரு துண்டு ரீல்ஸில் ஷெளபின் ஷாகீரிடம், ஷான் தனது காதலை லேசாகச்சொல்லி, காதலியின் அக்காள் கணவனாகிய ஃபகத்திடன் வந்து பேசச் சொல்லிக்கேட்கும் காட்சியைப்பார்த்தேன். உண்மையிலேயே ஷெளபின் அசாத்தியமான கலைஞன். அதே காட்சியை உலகின் வேறெந்த நடிகரும் அத்தனை சரியாக சிறப்பாக நடிக்கவெ முடியாது. சாம்பவியுடன் ஷாகிரின் மகள்(மனைவியின் மகள்) படிக்கிறாள் என்று எனக்கு இன்று பெருமையாக இருந்ததென்றால் பாருங்களேன். நான் அவரின் ரசிகை (டென்ஸைல் வாஷிங்டன், இட்ரிஸ் எல்பா, பார்த்திபன் மற்றும் டாம் க்ரூஸ் இவர்களுடன்).
சட்டையிலாமல் இடிந்த திண்ணையில் படுத்துக்கொண்டு தேங்காயை கரண்டியபடி, அவ்வப்போது கடித்துக்கொள்ள,வெற்று மார்பில் துண்டு வெல்லத்தை வைத்துக்கொண்டு நடிக்க தமிழில் யாராவது இருக்கிறார்களா என்ன? அப்படி ஒரு காட்சியை ஒரு நடிகரிடம் சொல்லும் துணிவு கொண்ட இயக்குநர்களோ உதவி இயக்குநர்களோ இருப்பார்களா முதலில்?
அண்ணன் என்று கூப்பிடச்சொல்லி, ஷான் அப்படிக் கூப்பிடுகையில் செளபினின் நடிப்பு அபாரம் அபாரம். இன்று நினைத்துப் பாரக்கையில் கும்பளாங்கி நைட்ஸுக்கு நான் எழுதிய திரைவிமர்சனம் அசட்டுத்தனமானது என்று தோன்றுகிறது ஆனால் படம் பார்த்ததும் உணர்வெழுச்சியில் அப்போதே எழுதியது என்பதால் மன்னிக்கலாம்.
தங்களுக்குக் கல்யாணம் ஆக வேண்டுமென்பதற்காகச் சொந்தச் சகோதரியின் 16 நாட்களேயான பெண் குழந்தையை கால்களால் மிதித்தே கொன்ற மூன்று சகோதரிகளைக் குறித்து நவம்பரில் செய்திகள் தொடர்ந்து வந்தன. எனக்கு அதற்குள் சென்று மேலும் அறிந்துகொள்ளும் துணிவில்லை. எனினும் இதற்கிணையான அல்லது இதைக்காட்டிலும் வன்முறையானவற்றை செய்தவர்களை இந்த வருடமும் அறிந்துகொண்டேன்.
துரோகங்களை அதிகம் மிக அண்மையில் சந்தித்தவளாதலால் கழுத்தறுபடுகையில் வெளியாகும் முதல் குருதிச்சொட்டின் பச்சை வீச்சத்தை என்னால் உடனே தெரிந்துகொள்ளமுடியும். புதிதாக வருந்த ஏதுமில்லை என்றாலும் அதே துரோகம் மகன்களுக்கும் நடப்பதுதான் துயரளிக்கிறது. இந்த உலகில்தான் அவர்களை நான் விட்டுச்செல்லவிருக்கிறேன் என்பதும் பெருந்துயரளிக்கிறது. எதுவுமே மாறவில்லை. சுழன்று சுழன்று வந்துகொண்டே இருக்கிறது. எனக்கு நிகழ்ந்ததே மகன்களுக்கும் நிகழ்கிறது.
தருண் சிறகு கொண்டவன் அவனுக்கு உலகே வீடு என்பதால் காயங்களை அவன் பெரிதாக கவனிப்பதில்லை, சொல்லப்போனால் புதிய காயங்களுக்காக மனதை திறந்து தயாராக வைத்துக்கொள்பவன் அவன். ஆனால் சரண் வேர்கொண்டவன் அவனுக்கு குடும்பமும் வீடும்தான் உலகு. மேலும் மனிதர்கள் மீது பெரும் நம்பிக்கை கொண்டவன் அவன். அவனால் காயங்களிலிருந்து விரைவில் விடுபடமுடிவதில்லை. எப்போதும் மானசீகமாக அவன் தலைகோதும் கரமொன்று எனக்கிருக்கிறது. ஆழமான அந்தத் தழும்புகளை அவ்வப்போது நிரடிப்பார்த்துக் புன்னகைத்துக் கொள்ளும் மனவலிமையுடன் அவன் முற்றிலுமாக மீண்டு வரவேண்டும் என்பதுதான் இப்போது என் ஒரே விருப்பமும் வேண்டுதலுமாக இருக்கிறது. தெய்வங்களே காத்துக்கொள்க!
வழக்கத்தைக் காட்டிலும் தீவிரமான வருடமிது. அதிகம் பயணித்த, அதிகம் வாசித்த, அதிகம் எழுதிய, அதிகம் கற்றுக்கொண்ட வருடமும் கூட.
அதிகம் மோசமான அனுபவங்களிலிருந்து ஆகச்சிறந்த பாடங்களைக் கற்றுக்கொண்ட வருடமும் கூட. இன்னும் அத்தகைய பாடங்களின் பொருட்டு ஆசிரியர்கள் எனக்கெதிரே நீண்ட வரிசையில் நிற்கிறார்கள் என்றும் அறிந்திருக்கிறேன்.
மிக முக்கியமாக நான் மகிழ்ந்திருந்த வருடமும் இதுதான். தன்னறம் வெளியீடாக வந்த இரு நூல்களுக்கு ஜெ எழுதிய முன்னுரையைக்காட்டிலும் ஆகப்பெரிய அங்கீகாரம் இனி வேறு ஏதுமில்லை. நிறைய மேடை உரைகள் நிறைய நிறைய அங்கீகாரங்கள் நிறைய விருதுகள் புதிய தோழமைகள், மகிழ்வளிக்கும் சில விலகல்கள் என கலவையான வருடமிதுவும்.
முத்தச்சிறுகிளை நூலுக்காக செந்தமிழ்க்கோதை விருது சிவகாசியில் அளிக்கப்பட்டது, இந்திய மருத்துவக்கழகம் ‘’women of wonder’’ விருதளித்தார்கள். டிசம்பர் இறுதியில் உலகத்தமிழ் பண்பாட்டுக்கழகத்தின் சிறப்பு விருதும் 50,000 காசோலையும் அளிக்கப்பட்டது. அந்தத்தேதியில் நான் வெள்ளிமலையில் (மூன்றாவது வகுப்பு இது) இருந்ததால் தருண் சென்று விருதை வாங்கிக்கொண்டான். அதே நாள் நான் திருமணத்திற்கு முன்பு இந்தத் துறையில் பணியாற்றிய போது படித்த மாணவர்கள் எனக்கு outstanding educator award அளித்தார்கள். அந்த நிகழ்விலும் கலந்துகொள்ள முடியாததால் அதையும் நான் திரும்ப வந்து பெற்றுக்கொண்டேன்.
வேடிக்கையாக ஒன்று நிகழ்ந்தது. திருப்பூரின் சக்தி விருது எனக்களிக்கப்பட்டிருப்பதாக அழைப்பிதழ் வந்தது. பலர் அவர்களுக்கும் செய்தி தெரிந்து வாழ்த்தும் தெரிவித்தனர். ஆனால் சம்பந்தபட்டவர்கள் என்னை இன்று வரையிலும் அழைத்து முறையாக விருது குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை. விருதுபெறுபவர்கள் விழா நடக்குமிடத்தை அழைப்பிதழிலிருந்து தெரிந்து கொண்டு நேரில் சென்று வாங்கிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. அந்த விருதை நான் பெற்றுக்கொள்ளவில்லை.
சரண் கல்லூரிக்கு வந்து ethics of AI என்று ஒரு உரையாற்றினான். அவனை உண்மையில் நான் என் கல்லூரிக்கு வரவேண்டாம் என்றுதான் சொன்னேன் ஆனால் அழைப்பு வந்தபோது ’’இல்லம்மா நான் வரேன் மாணவர்களுக்காக’’ என்று சொல்லி வந்தான். சிறப்பான உரை, அரங்கில் முன் வரிசையில் அமர்ந்து பெருமிதமாக கவனித்துக்கொண்டிருந்தேன்.
இறுதித்தளையொன்றிலிருந்தும் விடுபட்டேன். மிகுந்த தாமதமாகிவிட்டதுதான் இருந்தாலும் என் தரப்பில் தாமதிக்கச் சில காரணங்கள் வலுவாக இருந்தன. என்னை இந்த வெர்ஷனில் ஏற்றுக்கொள்ள பலருக்கு தயக்கமிருக்கிறது அதைக்குறித்து எனக்கெந்த ஆட்சேபணையும் இல்லை. இதுதான் நான் இப்படித்தான் இனி நான் இருக்கப்போகிறேன். ’’அறிக இவ்வுலகு இனி நான் தனியள் தன்னந்தனியள்’’ என்று ஏதேனும் ஒரு குன்றின் மீதிருந்து கூவலாமென்றிருக்கிறது. என் இந்த வெர்ஷனை எதிர்கொள்ளச் சங்கடப்படுபவர்கள் தள்ளிநில்லுங்கள் அல்லது விலகிச்செல்லுங்கள்.
வாழ்வு மொத்தத்தையும் பொருளற்ற சடங்குகளுக்காகவும் வற்புறுத்திப் போர்த்தப்பட்ட புனிதப்போர்வைகளுக்காகவும் என்னால் பலியிடமுடியாது .என் ஆத்தா, அம்மா, அத்தைகள், சித்திகள் அண்ணிகளைப் போல ஒருகூரைக்குக்கீழ் கடித்துக்குதறப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக வாழ்ந்து சமூகத்தின் முன்னால் பட்டுப்புடவையும் கூந்தலில் பூச்சரமும் கழுத்தில் காதில் நகைகளும் முகத்தில் வரவழைத்துக்கொண்ட புன்னகையுமாய் வாழும் நாடகத்தில் எனக்கு விருப்பமில்லை. அப்படியொரு முகமூடியை நான் இதுவரை அணிந்து கொண்டதுமில்லை. நான் அன்னை மட்டுமே என்று பெருமிதமாகத்தான் என்னை எப்போதும் முன்னிறுத்திக் கொண்டிருக்கிறேன்.
மேலும் மணவுறவின் பிணக்குகள் தீர்க்கமுடியாமலாகும் போது வெளியேறி மூச்சுவிட்டுக்கொண்டு மகிழ்ந்துவாழலாம் என்பதற்கு பின்வருங்காலத்துப் பெண்களுக்கு முன்னுதாரணமாகவும் நான் இருக்க விரும்புகிறேன்.
எனக்கு என் குடும்பத்தில் அப்படிச் சொல்லிக்கொள்ள யாருமில்லை. கழுத்தில் கயிறு இறுக்கிய அடையாளத்துடன் செத்துப்போய் சடலமாகக் கிடந்த பெண்கள் இருக்கிறார்கள், அம்மாவைப்போல் கடைசிநாள் வரை வதையனுபவித்து கண்ணீருடன் மின்மயானம் சென்றவர்கள் இருக்கிறார்கள், மனதில் ஒருவரை மறக்கவே முடியாமல் கணம் கணமாக நினைத்துகொண்டு வேறொருவருடன் வாழ்ந்து பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு செத்துப்போனவர்கள் இருக்கிறார்கள், படிப்பும் வேலையும் வெறும் ஏட்டுச்சுரைக்காயாகி இளமை, அழகு, பொருளாதாரம், ஆற்றல், ஓய்வு நேரம் என அத்தனையும் சுரண்டும் ஆணை முற்றிலும் சார்ந்து இருப்பதே குடும்ப தர்மம் என்னும் முட்டாள்தனத்தில் மூழ்கி மடிந்தவர்களும், வாழ்பவர்களுமான வரலாறு கொண்டது என் குடும்பம். நான் அவர்களில் ஒருத்தி அல்ல அல்லவே அல்ல .
பாதிக்கப்பட்டவர்கள் பலவீனமானவர்களல்ல, மேலும் பல மடங்கு வலிமையானவர்களும்தான். என் சுதந்திரம் என்பது வேலி சாடுவதல்ல எதுவரை போகலாம் என்றறிந்திருக்கிறேன், எத்தனை உயரம் பறக்கமுடியுமோ அத்தனைக்கு பறக்கவிருக்கும் சுதந்திரம் இது. எனக்கு பிடித்தமானவைகளை செய்தேன், செய்கிறேன் இனியும் செய்யவிருக்கிறேன்.
என்னவானாலும் மகன்களின் கைகள் என்னை இறுகப்பற்றிக் கொண்டிருப்பதை நான் அறிவேன். நான் அவர்களைப் பற்றிக் கொண்டிருந்த காலம் முடிந்துவிட்டது. சரண் இந்தியா வந்திருக்கிறான் இந்தியாவிலேயே இனி இருப்பதாகவும் இருக்கிறான் மும்பையில் பணியாற்றவிருக்கிறான். தருண் கடைசி செமஸ்டரில் இருக்கிறான், அவனுக்கும் வேலை கிடைத்திருக்கிறது காலூன்றி விட்டார்கள் இருவரும்.
முன்பொருமுறை தருணை தோளிலும் சரணை கையிலும் பிடித்துக்கொண்டு அம்பராம்பாளையம் செல்லும் பேருந்தில் நின்றுகொண்டு பயணிக்கையில் முழுப் பைத்தியக்காரனொருவன் (அப்படி தனித்து யாரையும் அடையாளப்படுத்த முடியாதென்றாலும்) ஒரு பெரிய பாறாங்கல்லை வேகமாகச்சென்று கொண்டிருந்த பேருந்தின் முன்னால் போட்டுவிட்டடான். திடீரென பிரேக் பிடித்து நின்ற பேருந்திலிருந்து வாசலுக்கருகில் நின்றிருந்த நானும் மகன்களும் தூக்கி எறியப்பட்டோம். பேருந்தின் படிக்கட்டுக்கு கீழே என் பாதி உடலிருந்தது ஆனாலும் பேருந்துக்குள்ளே இருந்த சரணையும் தருணையும் கைகளால் இறுகப் பற்றிக்கொண்டிருந்தேன். இனியும் இப்படி பாறாங்கற்களுடன் பைத்தியக்காரர்கள் குறுக்கே வருவார்களென்னும் கவனம் எனக்கும் மகன்களுக்குமிருக்கிறது. அவர்களின் நலனைத்தவிர வேறு எதுவுமே இவ்வுலகில் எனக்கு பொருட்டல்ல அல்லவே அல்ல.
அவர்களைப் புரிந்துகொள்ளாதவர்கள், அவர்களை ஏமாற்றுபவர்கள் அவர்களைச் சுரண்டுபவர்கள் அவர்களுக்கு துரோகம் செய்பவர்களுக்கு என் வாழ்விலும் இடமில்லை. சட்டையில் படியும் புழுதியைத் தட்டி உதறுவதுபோல எளிதாக நான் அவர்களை ஒரு சிறு தட்டலில் உதறிவிடுவேன்.
மனிதர்கள் குறைநிறைகளுடன் எனக்கும் தேவையாக இருக்கிறார்கள் தான். இப்படி பலரும் என் வாழ்வில் தோழமையுடன் இருக்கிறார்கள், எனினும் ஒரு கோடு இருக்கிறது எனக்கு அந்தக்கோட்டையும் தாண்டிச்செல்பவர்களுக்கு ஒருபோதும் என் வாழ்வில் இடமில்லை.
வெட்கப்படும் விஷயங்களையும் செய்திருக்கிறேன் இந்த வருடம். எங்களது SR (service register)-ல் பணிக்காலத்து தவறுகளை கரும்புள்ளியில் குறிப்பிடும் வழக்கமிருக்கிறது.
நான் பொதுவாக குரல் உயர்த்துவதில்லை எந்த சிக்கலான காலத்திலும் அப்படிச்செய்ததே இல்லை வருத்தத்துடன், கோபத்துடன் விலகி இருக்கிறேன் சொல்லிக்கொண்டும் சொல்லிக்கொள்ளாமல். ஒருபோதும் குரலுயர்த்திக் கத்தியதில்லை எனினும் கல்லூரியில் கடந்த செமஸ்டரில் ஒரு முக்கியமான மீட்டிங்கில் தலைமைப் பொறுப்பிலிருந்த ஒருவர் சிக்கலை எதிர்கொள்ள முடியாத போது தப்பிக்கும் விதமாக வழக்கமாகக் கத்துவதைப் போலத்தான் என்னிடமும் கத்தினார் என்றாலும் நான் எப்படியோ பொறுமையிழந்து எல்லாக்கட்டுக்களும் தளர்ந்து பதிலுக்கு கத்திவிட்டேன். குற்றவுணர்வு கொள்கிறேன் இப்போதும் அதன்பொருட்டு. போர்ட் ரூமுக்கு வெளியே காத்திருந்த ஆங்கிலத்துறை ராதா ’’…அக்கா நீயாக்கா ஏங்க்கா…’’ என்றாள் அந்தக்கேள்வி நானே என்னைக் கேட்டுக்கொண்டதுதான் என்பதால் பதிலளிக்கவில்லை.shame on me
அதுபோலவே வீட்டில் ஒரு போன் அழைப்பு எனக்கு உண்டாக்கிய குமுறல் அடங்காமல் ’’..மீ போனை எடுக்காதே..’’ என்று தருண் சொல்லச்சொல்லவே அந்தக் கணத்தின் உணர்வுநிலையில் அடித்துச்செல்லப்பட்டு போனை எடுத்து நானும் மறுதரப்புக்கு இணையாகவே பேசிவிட்டேன். அப்படிப் பேசியது வருத்தமென்றால் அதை தருணும் கேட்டது மேலும் வருத்தம் இந்த இரண்டு நிகழ்வுகளும் இந்த வருடத்தில் எனக்கு நானே வைத்துக்கொண்ட கரும்புள்ளிகள் தான்.
வழக்கம் போல ஆர்வமாகவும் விரிவாகவும் சமையல் செய்கிறேன் சாப்பிடுகிறேன். புதிய புதிய சமையல் செய்முறைகளையும் கற்றுக்கொண்டு முயற்சிக்கிறேன். 2025-ல் வீட்டுக்கு வெளியே சாப்பிட்டதில் சொல்லிக்கொள்ளும் படி சிறப்பான உணவுகள் ஏதுமில்லை. மிக நெருங்கிய நண்பர்களுடன் சாப்பிட்ட நினைவுகளை பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கிறேன் ஆனாலும் சிறப்பான உணவு என்றால் தீபாவளிக்கு தருண் சமைத்துக் கொடுத்ததுதான். அன்று அழுக்குசுவாமி கோயிலுக்குபோய் விட்டு வீடு திரும்பவே மதியம் 2 மணி ஆனது அதன் பின்னர் தருண் ஆட்டுக்கறி வறுவலும் சாதமும் உப்புப்பருப்பும் சமைத்து சாப்பிட 3,30 ஆனது நான் 1 மணிக்கப்புறமாக சாப்பிட்டதே இல்லை எப்போதுமே பசி தாங்காதவளான நான் அன்று மிகத்தாமதமாக தருணின் அந்தச் சமையலை ரசித்துச்சாப்பிட்டேன் இந்த வருடத்திற்கானது மட்டுமல்ல எப்போதைக்குமான மிகச்சிறப்பான அசைவ உணவு அதுதான்.
சாப்பிடுகையில் தருணைக் கல்யாணம் செய்து கொள்ளப்போகும் அந்தப் பெண்ணைக் குறித்த பொறாமை எழுந்துவந்து தழலாடியதை தவிர்க்கவே முடியவில்லை.
// தேவி கைகழுவின தண்ணியில் கறிவேப்பிலை கிள்ளிப்போட்டாக்கூட ரசம்னு ஊத்திச்சாப்பிடலாம்//போன்ற என்னைக்குறித்த அதிபுனைவுகளையெல்லாம் காற்றில் ஊதிப்பறக்க விட்டுவிட்டான்.
விரிவாகச் சமைத்து விரிவாக பேக் செய்து கல்லூரிக்கு கொண்டு செல்கிறேன். பலர் என்னிடம் எதிர்பார்க்கும் ’’…ஒருத்திக்கு என்னன்னு தனியா செய்யறது எலுமிச்சைசாதம், புளிசாதம் செஞ்சு கொண்டு வந்தேன்..’’ என்று சொல்லும் தியாகத்திருவுருத் தாயெல்லாம் நானில்லை எனக்குப் பிடித்தவற்றை செய்து சாப்பிடுகிறேன்.
உடல் எடையை கணிசமாக குறைத்து இருக்கிறேன். புதிதாக ஜப்பானிய நடைப்பயிற்சியை மேற்கொண்டிருக்கிறேன், உண்மையிலேயே பயனுள்ளதுதான். (தகவல் தேவைப்படுபவர்கள் தனியே கேட்டுக்கொள்ளவும்) அதிகாலையில் நடக்கிறேன் நானிருக்கும் தெருவில் 5 வீடுகளில் 3-ல் தான் புழக்கம், அதில் நான் சமையலை முடித்துவிட்டு,நடப்பேன் காமாட்சியின் வீட்டில் மட்டும் பருப்பும் காயும் புளியும் வேகும், சோறு வடிக்கும் மணமும் அடிக்கும். சமயங்களில் வீட்டிலிருக்கும் மகிழமோ பாரிஜாதமோ ட்ரசீனாவோ செண்பகமோ மணக்கும். இளையராஜா, யுவன், சங்கர் மகாதேவன், ரஹ்மான் அல்லது வித்யாசாகர் என்று குறிப்பிட்ட யாரோ ஒருவரின் பாடல்களைக் கேட்டுக்கொண்டு நடப்பேன்.
வெள்ளிக்கிழமைதான் விளக்கேற்றனும், வியாழக்கிழமைகளில் மட்டும் சாய்பாபா, செவ்வாயில் முருகன் என்றெல்லாம் எனக்கு நாள் கால பேதமில்லை எல்லா நாளும் விளக்கேற்றுவேன், கூட்டமில்லாத நாட்களில் தோன்றினால் கோவிலுக்குப் போவேன் எப்போதும் வீட்டைத்துடைத்து சுத்தமாக அழகாக உருளிகளில் மலர்களிட்டு அழகாக வைத்துக்கொள்வேன்,
வழக்கம்போல காலை 5-லிருந்து இரவு 11 வரை ஒருநாளுக்கான நேரமாக இருக்கிறது எனக்கு. எழுந்ததும் ஜெ தளத்தை முழுக்க வாசிக்கிறேன். வெண்முரசை மீள மீள வாசிக்கிறேன் நேரம் கிடைக்கையிலெல்லாம்.
இந்த வருடத்திய disaster என்றால் முதல் தளம் வீடு கட்டநினைத்து, அதை செயல்படுத்தியதுதான். மகன்கள் சிறுவர்களாக இருக்கையில் அப்போதிருந்த பொருளாதார மற்றும் வங்கிக்கடன் வாங்கும் வசதிக்கேற்ப சமையலறை உட்பட 4 அறைகள் கொண்ட சிறிய வீட்டைக் கட்டினேன். இப்போது ஊரிலிருந்து மகன்கள் வந்தால் சூட்கேஸ் வைத்தாலே வீடு நிறைந்துவிடுகிறது இனி கல்யாணம் காட்சி என்று சொந்தங்கள் அதிகரிக்கக்கூடும் எனவே மேல்தளம் எடுக்கலாம் என நினைத்தேன்.
பலரை சந்தித்துப் பேசியும், நம்பிக்கையூட்டும் பொறியாளர்கள் அமையவில்லை எனவே தள்ளித்தள்ளிப் போனது. சரண் ஜெர்மனியில் இருந்து சில நாட்கள் விடுமுறையில் வந்திருந்து வீடு கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தத்தைப் போட்டுவிட்டு செல்லவிருந்தான் எனவே தருணின் நண்பன் இன்னொரு தருண் கட்டுமானப் பொறியாளர், அவன் பரிந்துரைத்த இரு இளைஞர்களை முழுமையாக நம்பி கட்டிட வேலையை துவங்கினேன்.
சமீபத்தில் எனக்கேற்பட்ட ஆகப்பெரிய துயரம் வருத்தம் சங்கடம் எல்லாம் அந்த இளைஞர்களை நம்பியதுதான் என்றாகிவிட்டது. அவர்களுக்கு வழக்கமாகிவிட்ட துவக்கத்தில் நம்பிக்கையூட்டும் விதமாக நடந்துகொண்டு போகப்போக தேய்வதை இவர்களும் நடைமுறைப்படுத்தினார்கள். வீட்டு வேலைகளை நிறுத்தவும் முடியாமல் ஏகப்பட்ட பணத்தை முடக்கி, தொடரவும் முடியாமல் பெரும் சங்கடமாகியது.
தனியாக வீடு கட்டுவது பெரும் சவாலென்றால் எந்தத்திறமையும் பொறுப்புமில்லாத முடிந்தவரை ஏமாற்றுபவர்களிடம் வேலையை ஒப்படைத்தால் அது எப்படிப்பட்ட சவாலாக இருக்கும்?
மேல்வீட்டு பணியின் அதிர்வுகளை சமாளிக்க கீழ்வீடு முழுக்க பெரிய தூண்கள் நிறுவப்பட்டிருந்தன எனவே எனக்கு நடமாட்டம் மிகச்சிக்கலானது பணியாளர்கள் வீட்டுக்கெதிரே குடிசைபோட்டு தங்கி இருந்தார்கள் மாலைவேளைகளில் துவைக்கும் கல்லருகே அவர்கள் குளிப்பது வழக்கமாதலால் நான நடைசெல்வது வாசலில் அமர்வது எல்லாமே நின்றுபோனது. ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு புது பிரச்சனை உருவாகும் அதைச்சரி செய்வது குறித்து பொறியாளர்களுக்கும் வீட்டிலேயே தங்கிக்கொண்ட மேற்பார்வையாளர் என்று அமர்த்தப்பட்டிருந்த ஒருவருக்கும் மொத்தக்குழுவினருக்குமே எதுவும் தெரியாது.
திரும்ப அவற்றை நினைத்துப்பார்க்கவே எனக்கு கஷ்டமாக இருக்கிறது.
கடைசி நாளில் மதில்சுவற்றில் அவர்கள் அடைக்காமல் விட்டிருந்த ஒரு துளையை அடைக்கச் சொன்னதற்கு, மேற்பார்வையாளரான மேஸ்திரி, அவரது வெறும் கைகளில் சிமெண்ட் கலவையை எடுத்து அந்தத் துளையில் அப்பி அடைத்துவிட்டு கையைகழுவி விட்டுப் போன அந்த அலட்சியமாக செயல்தான் முழு வீட்டு கட்டுமானத்துக்கும் நடந்ததது. எலக்ட்ரீஷியனோ ப்ளம்பரோ மேசனோ ஒருவருக்கும் எந்த திறமையும் துறைசார்ந்த அறிவும் இல்லாமல் குழப்பி அடித்தார்கள் ஆனால் ஒப்பந்தப்படி பணம் மட்டும் சரியாக கொடுக்க வேண்டி இருந்தது.
என் சுபாவமே மாறிப்போய் கடும் தலைவலியும், பின் கழுத்தில் வேதனையும் பாரமுமாக எப்போதுமிருந்தேன். ஒப்பந்தத் தொகைக்கும் ஆன செலவுகளுக்கும் எந்தச் சம்பந்தமுமே இல்லமாலானது. இளமையின் மீதும் கல்வியின் மீதும் எனக்கிருந்த நம்பிக்கையை முழுவதுமாக அவர்கள் இருவருமழித்தார்கள்.
மனஅழுத்தம் தாங்க முடியாமல் வெண்ணிலாவிடம் கண்ணீர் விட்டு அழுத நாட்களும் உண்டு. கடைசியில் கையெடுத்து வணங்கி அவர்களை அனுப்பவேண்டி இருந்தது. இதோ இன்று வரை அவர்கள் செய்த தவறுகளை சரி செய்து கொண்டிருக்கிறேன். வீட்டுக்கு இப்போதைக்கு குடி போகவே முடியாது.
இந்த வருடத்தின் மாபெரும் தவறு அவர்களை நம்பியதுதான் காலம்காலமாக இதை நினைத்து வருத்தப்படப்போகிறேன்.
வீடு கட்டியதில் ஒரே ஒரு நல்ல நினைவு மற்றும் கிடைத்த உதவி என்றால் திரு பாலு மனைவி மகன்களுடன் இரண்டு நாட்கள் செலவழித்து வீட்டுக்குத் தேவையான டைல்ஸ் போன்றவற்றை கோவையில் வாங்கிக் கொடுத்ததுதான். அந்த உதவியை ஒருபோதும் மறப்பதற்கில்லை. வீடுகட்டிய நினைவுகளில் மற்ற எல்லாமே மறக்க வேண்டியவை. வாழ்நாள் முழுவதுக்குமான மிகக் கசப்பான நினைவு இதுதான். கட்டிடப்பணியின் பொது நிரந்தரமாக ல்யூகோபில்லம் ஃப்ரூட்டிகோசம், மொசுண்டா, ஒரு போன்சாய், தெபியா ஆரியா, சில ரோஜாக்கள் மற்றும் சில செம்பருத்திச்செடிகளை இழந்தேன். அன்னைமரமாக இருந்த நாவலைக் கொல்லவேண்டி வந்தது.
சில இறப்புகளும் மறக்கமுடியாதவைகள் இந்த வருடம். தாவரவியலாளர் டொனோவன் மலை உச்சியிலிருந்து தவறி விழுந்து இறந்தது பெரும் துக்கமளித்தது. 51 வயதுதான் அவருக்கு. அதிலிருந்து நான் இன்னும் மீளவே இல்லை. ஜேன் குடாலின் இழப்பும் துயரளித்தது என்றாலும் அவர் நிறை வாழ்வு வாழ்ந்து இயற்கையாக மரணித்தார். எனக்குப்பிரியமான மலையாளத் திரைப்பட நடிகர் சீனிவாசன் மறைந்தார்.
கரூர் நெரிசலில் இறந்தவர்களை நினைத்து பெரிதும் வருந்தினேன். துக்கம் விசாரிக்க குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டதும், அவர்கள் இறப்புக்கு பணம் வாங்கிக்கொண்டதும் எனக்கு பெரும் அவமானமாக இருக்கிறது இன்றும்.
கேரள நடிகை ஆக்கிரமிக்கப்பட வழக்கின் தீர்ப்புக்காக நானும் காத்திருந்தேன், ஆனால் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்தது . இத்தனை வெளிப்படையாக ஒருவர் சட்டத்திலிருந்து தப்பியது எனக்குத்தெரிந்து இதுதான் முதல்முறை. தீர்ப்பு நாளில் அந்த நபரின் கைகளில் ஏகப்பட்ட நிறங்களில் கோவில் கயிறுகள் நெற்றியில் குங்குமமும் சந்தனமும். அவரைக் காப்பாற்றிய கடவுளர்கள் நடிகையை ஏன் கைவிட்டார்கள்? அந்த மனக்குமுறல் எனக்கு இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
இடவேலா பாபுவும் சித்திக்கும் மொழிமாற்றியதில் எனக்கு ஆச்சர்யமேதும் இல்லை ஆனால் பிந்து பணிக்கர் செய்தது வருத்தமளித்தது ஒரு பெண்ணால் கூட நடந்த அநீதியை புரிந்துகொள்ள முடியவில்லை.
எல்லாவற்றையும் விட தீர்ப்பை ஒரு பெருங்கூட்டம் நீதிமன்றத்தின் வாசலில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிக்கொண்டாடியதுதான் பெரும் வெட்கக்கேடாக இருந்தது . எதைக் கொண்டாடினார்கள் அப்படிக் கூட்டமாக? அந்தகூட்டத்தில் சில பெண்களுமிருந்தார்கள், குழந்தை மிதிபட்டுச் செத்துபோன அன்னை ’’..விஜய வரச்சொல்லுங்க..’’ என்று கத்தியதற்கு இணையானதுதான் அதுவும்.
இந்த வருடத்துக்கான சில பயணங்களை திட்டமிட்டிருக்கிறேன். கோடையில் காஷ்மீர் ட்யூலிப் கொண்டாட்டத்துக்கு செல்லவிருக்கிறேன். நண்பர்கள் உடன் வரவிருக்கிறார்கள். ’’…காஷ்மீரா அங்கே போனால் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்று விடுவார்கள்…’’ என்று ஒருசிலர் பயப்படுத்தினார்கள், ட்யூலிப் தோட்டத்தில் இருக்கையில் நெஞ்சில் குண்டு பாயுமானால் அதைக்காட்டிலும் நல்லிறப்பு தேவிக்கென்ன இருக்கமுடியும்?
அந்தமான் செல்லவேண்டும் என்னும் விருப்பம் பல ஆண்டுகளாக இருக்கிறது அதை இந்த வருடம் செயலாக்கவேண்டும்
அடுத்து லவ்டேலுக்கு சென்று நான் சுற்றிய தெருக்களை, நீலப்பச்சை இலைகள் கொண்டிருக்கும் யூகலிப்டஸ் மரங்களை, பனிக்கட்டிபோல சில்லிட்டிருக்கும் சிற்றோடைகளை வழியெங்கும், குட்டிக்குட்டிப் பட்டுதலையணைகளைபோல மலர்ந்திருக்கும் ஹைட்ராஞ்சியாக்களை எல்லாம் மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு வரவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஏன் அதை ஒத்திப்போடவேண்டும் இப்போதே போகலாம் என்று மகன்கள் சொன்னதால் விஷ்ணுபுரம் விழாவிலிருந்து அப்படியே சாம்பவியையும் அழைத்துக்கொண்டு லவ்டேல் சென்றோம்.
எனக்கு பால்யத்தின் சொல்லிக்கொள்ளும்படியான நினைவுகளென்றால் அது லவ்டேலில் மட்டும்தான் இருந்தது. எல்லா பள்ளி விடுமுறைகளும் லவ்டேலில்தான் இருந்தேன். அத்தையின் அன்பு, லாரன்ஸ் பள்ளியின் ஆடம்பரம், அருமையான உணவு, கட்டுப்பாடுகளற்ற சுதந்திரம் என்று மகிழ்ந்திருந்தேன் அங்கு.
பிள்ளையில்லாத அபயமத்தை அந்தக்குளிரில் அண்டாவில் வெந்நீர் வைத்து அத்தனை தலைமுடிக்கும் அரப்பு போட்டுக் குளித்துவிட்டது, அப்போதுதான் அறிமுகமாயிருந்த கோன் ஐஸ்கிரீமை பெரிய பெரிய பாத்திரங்களில் வாங்கிவந்து சாப்பிட்டுவிட்டு, தனியே கோன் பிஸ்கட்டுகளை சேர்த்துவைத்து சாப்பிட்டது, 1 ரூபாய்க்கு கிடைக்கும் கோழிமுட்டை மிட்டாயை பலவண்ணங்களில் வாங்கி வாயில் அதக்கிக்கொண்டே திரிந்தது, பள்ளி சமையலறையில் எண்ணெய் சட்டியில் முட்டையை உடைத்து ஊற்றி பூரி போல ஆம்லெட் போடுவதையும், கஸ்டர்ட் என்று ஒன்றிருப்பதையும் தெரிந்துகொண்டது, தினந்தோறும் கஸ்டர்டுடன் விரிவான மதிய உணவு சாப்பிட்டது, அங்கே எனக்கென நான் தெரிவு செய்து வைத்துக்கொண்ட நீலவிளிம்பு கொண்ட குழிவான வெள்ளை பீங்கான் தட்டு(இன்னும் அப்படி ஒரு தட்டை தேடிக்கொண்டிருக்கிறேன்), மாலைவேளைகளில் புல்வெளியில் நாற்காலி போடப்பட்டு வெள்ளுடைப்பணியாளர்கள் பரிமாறிய தேநீரும் வாட்டிய ரொட்டியும், கமல் ,ஸ்ரீதேவி, தர்மேந்திரா, ஹேமமாலினி, அமிதாப் என தினமும் ஷுட்டிங் பார்த்தது. மலைரயில் பயணம், பொட்டானிக்கல் கார்டன் செல்வது, பெரிய பெரிய வெள்ளைப் பொத்தான்கள் வைத்த வான் நீலத்தில் ஒரு ஸ்வெட்டரை சேரிங் கிராஸ் நடைபாதைக்கடையில் வாங்கிப்போட்டுக்கொண்டது, பொட்டனிக்கல் கார்டனின் ரோலிங் க்ராஸிலிருந்து உருண்டு உருண்டு சரிந்து விளையாடியது என லவ்டேலின் நினைவுகளை மீண்டும் ஒருமுறை அங்கு சென்று பார்க்க ஆசையாக இருந்தது.
லாரன்ஸ் பள்ளியை மீண்டும் பார்த்தது அத்தனை பரவசமளித்தது. நான் விளையாடிய லவ்டேல் ரயில்வே ஸ்டேஷனில் நின்று புகைப்படமெடுத்துக்கொண்டேன்.
லவ்டேலில் தங்கி இருந்த வில்லாவில் காரை விட்டு இறங்கியதுமே புல்வெளி எங்கும் மலர்ந்துகிடந்த வெள்ளைக்ளோவரை பார்த்துவிட்டேன். அதைபறித்து முகர்ந்ததும் எனக்கு தெரிந்தது என் நினைவில் எங்கேயோ ஆழத்தில் இருந்த லவ்டேலின் வாசனை அந்த க்ளோவரின் வாசனைதான் என்று. எத்தனையோ மலைப்பிரதேசங்களுக்கு சென்றிருக்கும் நான் இதுவரை லவ்டேலில் அல்லாமல் அந்த க்ளோவரை வேறெங்குமே பார்க்காமலிருந்ததும் விநோதம்தான். க்ளோவர் மலர்களை தலையிலும் வைத்துக்கொண்டேன். நான் லாரன்ஸ் பள்ளி வளாகத்தின் பக்கவாட்டு எல்லையிலிருந்து சறுக்கி கீழிறங்கி ஒருபெட்டிக் கடைக்கும் செல்லும் வழியும், அந்தக்கடையும் இருந்தது அருகில் ஒரு பஸ் நிலையம் கூடுதலாக.
லாரன்ஸ் பள்ளியில் அத்தை மாமாவின் மரவீட்டுக்கருகே இருந்த வீட்டில் அப்பள்ளியின் ஃப்ரெஞ்ச் ஆசிரியரின் வீடு இருந்தது. அங்கேயும் சென்று விளையாடுவேன். அந்த வீட்டுப்பெண் நல்ல பருமனாக வெள்ளை வெளேரென்று இருப்பார் பெயர் நினைவிலில்லை. அவர் கணவர் தான் பிரஞ்ச் ஆசிரியர் மஞ்சள் நிறத்தில் இருப்பார் எப்போதும் ஏதோ எழுதிக்கொண்டும் வாசித்துக்கொண்டுமிருப்பார். அவரின் மயிரடர்ந்த புறங்கை எனக்கு நினைவிருக்கிறது. அடிக்கடி அந்தப்பெண் என்னை அதிகாலைகளில் அழைத்துக்கொண்டு பல ஏக்கரில் பரந்து விரிந்திருந்த லாரன்ஸ் பள்ளியின் பின்புறம் இருந்த பல சிற்றோடைகளின் கரையிலிருக்கும் கேலா லில்லிகளை
(சதைப்பற்றான புனல் வடிவ வெள்ளை இதழ்களைக் கொண்டிருக்குமே அது ) பறிக்க அழைத்து செல்வார்.
அவரது கைகளில் சிறிய ஆனால் மிகக்கூரிய கத்தி இருக்கும், பத்துப் பதினைந்து மலர்களை அவற்றின் நீளக்காம்புகளுடன் நறுக்கி இருவருமாக எடுத்துக்கொண்டு வருவோம். அவர் உடைந்த தமிழில் பேசுவார் ‘’..உறக்கத்துக்காக அதிகாலைகளை தவறவிடக்கூடாது..’’ என்பார் என்னிடம். கண்ணாடிக் குடுவைகளில் நீர் நிரப்பி பூக்களை அதில் இருவருமாக அடுக்குவோம்,
அடிக்கடி தங்கச் சரிகை சுற்றிய சாக்லெட்டுகள் தருவார் அருமையாக இருக்கும். அவருடன் நடக்கையில் எனது நீலவார்களிட்ட ஹவாய்செருப்புகள் புல்லின் மீதிருக்கும் பனியில் ஒட்டிக்கொண்டு நடக்க சிரமப்பட்டது நினைவுக்கு வருகிறது.
அந்த நினைவுகளின் நீட்சிதான் நான் இன்று வீட்டில் மலர்களை அமைக்கிறேன் போலும்.
வழக்கம் போல வேடசெந்தூரில் மழையும்,வெயிலும்,குளிரும் இருந்தது.இந்த வருடம் ஏராளமாக சீம்பால் இனிப்பு சாப்பிட்டு ரத்தச் சர்க்கரை அளவைக் கூட்டினேன். வீட்டு மரங்களின் மாம்பழங்ளை கணக்கு வழக்கில்லாமல் ருசித்தேன். எனக்கு மிகப் பிரியமான முந்திரி நிறைந்த ஜப்பான் கேக்கை இந்த வருடம் சாப்பிடவே இல்லை, எப்படியோ தவறவிட்டுவிட்டேன்.
நான் மலையடிவாரத்திலிருந்து இத்தனையாண்டு காலமாக மெல்ல மெல்ல மேலேறி வந்துகொண்டிருந்தேன். வழியில் பல வகையான அனுபவங்கள், கைகோர்த்து இறுதிவரை உடன் பயணிப்பதாகச் சொன்னவர்கள் காணாமல் போனார்கள், பயணத்துணையாக சேர்த்து வைக்கப்பட்டவர்கள் லாயக்கில்லாதவர்களாக இருந்தார்கள், கடந்துசென்ற குளிர்மேகங்களைப் போல சிலர் இனிய நினைவுகளுடன் பிரிந்து போனார்கள், சிலர் முதுகுக்கு பின்னாலிருந்து தள்ளிவிட்டார்கள், சிலசமயம் நானே காலிடறி விழுந்திருக்கிறேன், தலைகுப்புற விழுந்த அனுபவங்களும், ஆழம் தெரியாமல் கால்விட்ட சம்பவங்களும் கொல்விலங்குகளிடமிருந்து மயிரிழையில் தப்பித்த, பிரியமான மலர்மரங்களுக்கருகில் மகிழ்ந்து கழித்த சமயங்களும் உண்டு.
இந்தப்பயணத்தில் இந்த வருடம் ஒரு சில மயிலிறகுகளையும் சேகரித்து மனப்பக்கங்களுக்கிடையே பத்திரமாக வைத்திருக்கிறேன். சமீபத்தில் கருக்கிருட்டில் சென்ற ஒரு கார்ப்பயணத்தில் அப்படியொரு மயிலிறகை எடுத்து வைத்துக்கொண்டேன். சென்னைத் தெருக்களில் 7 மணி நேரம் காரில் பிடித்த பாடல்களைக் கேட்டுக்கொண்டு கூடவே பாடிக்கொண்டு being judged என்னும் கவனமோ கவலையோ இல்லாமல் மகிழ்ந்து பயணித்த மற்றொரு கார்ப்பயணமும் நான் பாடம் பண்ணியிருக்கும் என்றைக்கும் வண்ணம் குறையாத மயிலிறகு. பூமார்க்கெட்டுக்குள் சுற்றிவந்த நாளொன்று, என சில மயிற்பீலிகள் என்றென்றைக்குமாக பாடமாகி பொக்கிஷமாக மனதிற்குள் இருக்கின்றன. மேலும் சில வண்ணச்சிறகுகளும் கூழாங்கற்களும் மினுங்கும் காக்கைப்பொன்னும் கண்ணாடிச்சில்லுகளுமாக மனதின் மூலையிலல்ல, நட்டநடுவிலொரு சிறு பெட்டியில் சேகரித்துவைத்திருக்கிறேன்.
பொதுவாகப் பரிசுகளை ஏற்றுக்கொள்வதில்லை என்றாலும் வழக்கத்துக்கு விரோதமாக இந்த வருடம் சில பரிசுகளை பெற்றுக்கொண்டேன். ,அதில் புடவைகள், புத்தகங்கள், மலர்ச்சரங்கள், இனிப்புகள் அடக்கம்.
எனக்கு மிகப்பிரியமான ஜகரண்டாவின் இளம் ஊதா நீறப்புடவையொன்று பரிசளிக்கப்பட்டது. மனமுவந்து பெற்றுக்கொண்டேன். எங்கள் குடும்பங்களில் பெண்களின் சடலத்தின் மீது அவர்களுப்பிரியமான அல்லது வளைகாப்பு, கல்யாணப் புடவையைப் போர்த்திய பின்னரே எரிக்க எடுத்துச்செல்வது வழக்கம். அப்படி அம்மாவுக்கு பிரியமான புடவையை கட்டிவிட முயன்று, உடல் விரைத்துவிட்டதால் தோற்று உடம்பில் சுற்றிக்கட்டிவிட்டோம். அந்தப்புடவை சுற்றப்பட்டிருந்த அம்மாவின் மீதுதான் விஜி மின்மயானத்தில் கற்பூரக்கட்டியை ஏற்றினான்.
இனி மலையுச்சியிலிருந்து மறுசரிவில் இறங்கும் காலமெனக்கு. மிக நல்ல நண்பர்கள் அமைந்திருக்கிறார்கள் அவர்களின் தோழமையில் இந்த இறங்குமுகப் பயணத்தை மகிழ்ந்து செல்லவிருக்கிறேன்.
‘’…ஏன் நானழைத்தபோது போன் எடுக்கவில்லை..’’ என்று குறைப்பட்டுக்கொண்டது ’’…தேவி என்னை ஒருமுறை அழைத்து நான் எடுக்கவில்லை என்றால் இரண்டாவது முறை அழையுங்கள் எடுக்கவில்லை என்றால் மூன்றாவது முறை அழையுங்கள் அப்போதும் எடுக்கவில்லை என்றால் நான் எடுக்கும்வரை தொடர்ந்து விடாமல் அழைத்துக்கொண்டே இருங்கள்…’’ என்று சொல்லும் நண்பர், ஏழு பேருந்துகள் மாறி மாறி ஊரிலிருந்து கோவை வந்து வீட்டுத்தோட்டத்துக்கு கொடுக்கவென உலர்ந்த வாழையிலைச் சருகுகளில் பாதுகாப்பாகச் சுற்றப்பட்டு மண்ணில் பொதியப்பட்ட 8 வாழைக்கன்றுகளை சுமந்துகொண்டு வந்து கையளித்த நண்பர், ஒன்றுமே சொல்லாமல் திடீரென ஒரு இடத்துக்கு அழைத்துச்சென்று பவோபாப் மரத்தைக்காட்டி நான் அதை வாயை பிளந்துகொண்டு வேடிக்கை பார்க்கையில் பின்னிருந்து என்னை புகைப்படமெடுத்து கொடுத்த நண்பர், நான் மிகப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உணரும் அண்மையை அளிக்குமொருவர், ’’…அம்மா வீட்டுக்குவர லேட் ஆயிருச்சு இங்கே ஒருபக்கம் பயணத்தில் இருக்கேன் என்று சொல்லுகையில்’’.. ஜாலியா இருடா மெதுவா வா ஒன்னும் பிரச்சனை இல்லை..’’ என்று சொல்லும் சரண்,’’… நீ ஏன் பாண்டிச்சேரி போகமுடியலைனு வருத்தப்படறே நான் இன்னிக்கே நைட் புறப்பட்டு வரேன் நான் கூட்டிட்டுப்போறேன்..’’ என்று கவனமாக இருக்கும் தனது அட்டெண்டன்ஸ் குறித்து கவலைப் படாமல் புறப்பட்டு வரும் தருண், என் மகிழ்ச்சியான வெர்ஷனாக நானே திரும்பப் பார்த்துக்கொள்ளும் சாம்பவி, லடாக்கில் இருந்து எனக்கென wind chimes வாங்கி வந்த, நான் வருடங்களாக தேடிக்கொண்டிருந்த காலையில் தூய வெள்ளையில் மலர்ந்து மாலை அது இளஞ்சிவப்பாகி, மறுநாள் குருதிச்சிவப்பாகும் மலர்களை அளிக்கும் ஹைபிஸ்கஸ் ம்யூட்டாபிலிஸ் செடியையும் வாங்கிக்கொடுத்த நண்பர், எந்தெந்த நாடுகளில் இருந்தோ இலைகளையும் மலர்களையும் பார்த்த உடனே எனக்கு புகைப்படமெடுத்து அனுப்பும் தோழமைகள் என்னுடன் இருக்கிறார்கள்.
எனக்குப் பிடித்தமான நான் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கும் இந்த தாவரவியல் துறை இன்னும் வாசிக்க வேண்டிய எழுதவேண்டியவைகள் என்று இப்போது மலையின் மறு சரிவிலிறங்குகையிலும் ஏராளம் பணிகள் காத்திருக்கின்றன.
புதிய வருடத்திற்கான தீர்மானங்கள் ஏதுமில்லை
வாழ்க்கை அத்தனை இனியது அத்தனை துயர் மிக்கது எப்படியாகினும் அதை மகிழ்ந்து வாழவிருக்கிறேன்.
என்னுடன் இருந்தவர்களுக்கும், என்னவானாலும் உடன் நிற்பவர்களுக்கும், விலகிச்சென்றவர்களுக்கும், இனி இணைந்து பயணிக்க விருப்பவர்களுக்கும், புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்பு!
இந்தப்பாடல்களையெல்லாம் நீங்களும் கேட்டிருப்பீர்கள் உங்களுக்கும் ஆட்சேபணை இருந்திருக்காது என்று நம்புகிறேன் .
இந்த கிருஸ்துமஸ் காலத்தில், சமீபத்தில் பிரபலமான காந்தா ஞானும் வரான் திருச்சூரு பூரம் காணாம் பாடலை சாந்தா, ஞானும் வராம் திருச்சூரு கரோல் காணாம் “என்று மாற்றி மெட்டமைத்ததும் கூட நன்றாகத்தான் இருந்தது என்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்
ஆனாலும் மன்மத ராசா மெட்டில் மன்மத ஏசு மன்மத ஏசு'' கொஞ்சம் வரம்பு மீறிவிட்டதுதானே ? இதையெல்லாம் கொஞ்சம் தட்டிக்கேட்கக்கூடதா?
பிதாவே இந்தப்பாவிகளை மன்னிக்காதீர்கள் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.
முன்னொரு காலத்தில் ஹவாய் தீவின் வடமேற்குப் பகுதியான கோஹலாவிலிருந்து ஹவாயின் பெருநகரமான கோனாவிற்கு ஒரு மரப்படகில் மீனவர்கள் பயணித்துக் கொண்டிருந்தார்கள். படகில் மூட்டை மூட்டையாக உலர்ந்த சேம்புக்கிழங்குகள் வைக்கப்பட்டிருந்தன. கோனாவிலிருக்கும் உறவினர்களுக்குக் கொடுக்கவும், அங்கு சந்தைப்படுத்தவும் அந்தக் கிழங்குகளை மீனவர்கள் கொண்டு சென்றனர்.
அவர்களது படகை ஒரு மாபெரும் சுறா தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. படகிலிருந்த மீனவர்கள் இதே சுறா கடந்த மாதப்பயணத்திலும் படகைத்தொடர்ந்ததை நினைவு கூர்ந்தர்கள். ஒரு மீனவர் கோபமாக சுறாவைப்பார்த்து ‘எதற்கு எங்களைப் பின்தொடர்ந்து வருகிறாய்? என்ன வேண்டும் உனக்கு? எங்களிடம் சேம்புக்கிழங்குகள் தான் இருக்கிறது இதோ எடுத்துக்கொள்’ என்று அதை நோக்கி ஒரு சேம்புக்கிழங்கு மூட்டையை வீசினார். சுறா அந்த மூட்டையை தன் மூக்கால் நகர்த்திக்கொண்டு கடற்கரையோரம் சென்றது. இப்படியே தொடர்ந்து அவர்கள் பயணிக்கையில் எல்லாம் நடந்துகொண்டிருந்தது, மீனவர்களுக்கு பெரும் மர்மமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.
மீனவர்களில் ஒருவரான அகாய்க்கு இந்த மர்மத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று தோன்றியது. அடுத்த பயணத்தில் கிழங்கு மூட்டையை தள்ளிக்கொண்டு போன சுறாவை அகாய் ஒரு சிறு துடுப்புப் படகில் தொடர்ந்து சென்றான். கரையில் அந்த சுறாவுக்காகக் காத்திருந்த வயதான தம்பதியினரிடம் சுறா அந்த மூட்டையை சேர்ப்பிப்பதை அகாய் பார்த்தான். அவர்களிடம் விசாரித்தபோது வயதாவதால் வேலைக்குச் செல்ல முடியாமல் பட்டினி கிடந்த தங்களுக்கு அந்தச் சுறாதான் உணவுக்காகச் சேம்புக்கிழங்குகளைக் கொண்டு வந்து தந்ததாகவும், அதில் ’போய்’ கஞ்சி தயாரித்து உண்டு தாங்கள் உயிர்வாழ்ந்து வருவதாகவும் தங்களுக்கு கடவுள்தான் கிழங்குகளை அனுப்புவதாக நினைத்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.
சுறாவின் இந்தச்செயலால் மகிழ்ந்துபோன மீனவர்கள் அதன்பிறகு வழக்கமாகக் கொடுப்பதைக்காட்டிலும் அதிக அளவு கிழங்கு மூட்டைகளை சுறாவுக்கு தந்தனர். இந்த வழக்கம் அந்த வயதான தம்பதிகள் உயிருடன் இருந்தவரையில் தொடர்ந்தது. அவர்கள் இறந்த பின்னர் சுறாவும் கண்ணிற்கே தெரியாமல் மறைந்து விட்டது.
“The Shark That Came For Poi” என்னும் இந்தக்கதையை ஹவாய் மக்கள் தலைமுறைகளாக கேட்டும் சொல்லியும் வருகிறார்கள். இந்தப் பிரபலக் கதையே சேம்புக்கிழங்குக்கும் ஹவாய்க் கலாச்சாரத்துக்குமான ஆயிரமாண்டுகளைக் கடந்தும் தொடரும் உறவைச் சொல்லி விடுகிறது. இந்தக்கதையில் சொல்லப்பட்டிருப்பதைப் போலவே போய் மற்றும் சேம்புக்கிழங்கு ஹவாய்த்தீவில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனிதர்களை அன்பினால் ஒன்றிணைத்துக் கொண்டிருகிறது.
இன்றும் ஹவாய் மரபுகளைச் சிறப்புப்பாடமாகப் பயிலும் காமேஹமேஹா பள்ளி மாணவர்கள் சேம்புச்செடிகளை வளர்த்தி, அறுவடை செய்து, அதன் கிழங்குகளை வேகவைத்து, தொன்மையான முறையில் அவற்றைப் பொடித்து ’போய்’ உணவை தரக்கட்டுப்பாட்டுடன் தயாரிக்கக் கற்றுக்கொள்கிறார்கள். இந்தப்பள்ளி மாணவர்கள், சேம்பு பயிரிடுவதற்கு நிலத்தைத் தயார் செய்வது, ’போய்’ உணவுடன் உறவுகளை ஒன்றிணைப்பது, மேலும் போய் உணவைக் கொண்டு சிகிச்சையளிப்பதையும் கற்றுக்கொள்கிறார்கள்.
’போய்’ உணவு தொல் காலத்திலிருந்து இன்று வரையிலுமே நிலத்துக்கும் மனிதர்களுக்கும் கடவுளுக்குமான பாலமாக இருந்து வருகிறது. ’போய்’ சேம்பின் தரையடித் தண்டுக் கிழங்குகளிலிருந்து தயாரிக்கப்படும் போலினேசியாவின் மிக முக்கியமான பாரம்பரிய உணவு.
பசிபிக் கடற்தீவுகளில் வசிப்பதற்கான இடம்தேடிக் தேடல் பயணம் மேற்கொண்டிருந்த பாலிநேசிய மாலுமிகள் வளமான எரிமலைக் குழம்பு மண்ணிருந்த ஹவாய் தீவைச் செழிப்பான வாழிடமாக அடையாளம் கண்டார்கள். அவர்கள் கொண்டுவந்த சேம்பு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்குகளை உணவுக்காக அங்கே பயிரிட்டார்கள். அவர்களுடன் கோழி, பன்றி, நாய் மற்றும் வாழை, கரும்புப்பயிர்களும் அங்கே அறிமுகமாயின. அப்போதிலிருந்து சேம்பின் தரையடிக்கிழங்குகளை வேகவைத்து மாவாக்கி நீர் மட்டும் கலந்து சத்தான சுவையான ’போய்’ உணவை தயாரித்து உண்டார்கள். அகழ்வாய்வுகள் ஹவாய்த்தீவுகளில் ’போய்’ தயாரிப்பு ஹவாயில் மக்கள் வசிக்கத்தொடங்கிய 1000-1200 AD-யிலிருந்தே நடந்திருப்பதற்கான சான்றுகளை காட்டுகிறது.
ஆங்கிலத்தில் டாரோ (Taro) எனப்படும் சேம்பு பெரிய யானைக் காதுகளைப் போன்ற இதய வடிவ இலைகளைக் கொண்டிருக்கும் ஏரேசியே குடும்பத்தைச் சேர்ந்த சிறு செடி.
வெப்பமண்டல பசிபிக் கடல்சார் பகுதிகளின் மிக முக்கியமான உணவுத்தாவரம் சேம்பு. ஹவாயில் இதன் பெயர் Kalo, ஃபிஜித் தீவில் Dalo. இயற்கையாக வளருகையில் வெளிறிய பச்சைநிறத்தில் சதைப்பற்றான மஞ்சரிகளை அளிக்கும் சேம்பு, சாகுபடி செய்யப்படும்போது அரிதாகவே மஞ்சரியை உருவாக்கும். மஞ்சரி உருவாகும் போது இலைகளின், இலைக்காம்புகளின் நீளம் குறைந்து சிறிய அளவில் இலைகள் உருவாகும். இலைகள் நிறம் பச்சை, ஊதா நிறம் கலந்த பச்சையென வாழிடங்களைப் பொருத்தும் மரபணுக்கட்டமைப்பைப் பொருத்தும் வேறுபடும்.
இலைப்பரப்பிலிருக்கும் வரிகள், புள்ளிகள் மற்றும் திட்டுக்களும் வகைகளைப் பொருத்து வேறுபடும்.
அனைத்து விதமான மண் வகைகளிலும் வளரும் சேம்பு மிக அதிக நீர் தேவை கொண்ட தாவரம். இவை தனித்தும், வாழையுடன் ஊடுபயிராகவும் பயிரிடப்படுகிறது.
ஆசியாவைப் பூர்வீகமாக்கொண்ட சேம்பு, ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் பசிபிக்பகுதிகளின் தீவுக்கூட்டங்களைச் சேர்ந்த சுமார் 500 மில்லியன் மக்களின் பிரதான உணவாக இருக்கிறது. மத்திய தரைக்கடலின் தெற்குப் பகுதிகளில் உருளைக்கிழங்கை விட மிக அதிக அளவில் சேம்பு உண்ணப்படுகிறது.
சேம்பு அதன் கிழங்குகளுக்காகப் பிரதானமாகப் பயிரிடப்படுகிறது. பயிரிட்ட 6-10 மாதங்களில் அறுவடைக்கு தயாராகும் சேம்பு ஒரு ஹெக்டேருக்கு 5-லிருந்து 10 டன் வரை விளைச்சல் தரும். சேம்பு பிரேஸில் பகுதிகளில் சேனைக்கிழங்கு (yam) என்று அழைக்கப்படுவதால் உலகின் பல நாடுகளில் சேனைக்கிழங்கும் சேம்பு கிழங்கும் ஒன்றென நினைக்கப்படுகிறது.
இயற்கையான வாழிடங்களில் உலகெங்கும் இருக்கும் உண்ணப்படும் கிழங்குகளைக்கொண்ட சேம்பின் காட்டு மூதாதைகள் மொத்தம் 12 எனக் கண்டறியப்பட்டிருக்கின்றன. அவற்றில் 6 வடகிழக்கு இந்தியாவில் இருக்கின்றன.
சேம்பு ஏரேசி குடும்பத்தின் 106 பேரினங்களில் ஒன்றான கோலகேஷியா பேரினத்தைச் சேர்ந்தது. இப்பேரினத்தில் சுமார் 2500 சிற்றினங்கள் உள்ளன. உண்ணத்தகுந்த கிழங்குகளைக் கொண்டிருக்கும் அலகேஷியா, அமொர்போபேலஸ் மற்றும் சேந்தோசோமா ஆகிய தாவரங்களும் இந்தப் பேரினத்தைச் சேர்ந்தவையே. (Alocasia, Amorphophallus & Xanthosoma).
Colocasia esculenta என்னும் அறிவியல் பெயர் கொண்ட சேம்பு இதன் தரையடித் தண்டுக் கிழங்குக்காகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகமெங்கிலும் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் தண்டுக் கிழங்குகளிருந்தும் நறுக்கப்பட்ட முற்றிய தண்டுகளிருந்தும் இது இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
பசிபிக் கடல்சார் பகுதிகளில் குறிப்பாக ஹவாய் நியூசிலாந்து மற்றும் இந்தோனேசியப் பகுதிகளில் சேம்பு வரலாற்றுக் காலத்திலிருந்தே பிரதான உணவாக இருந்து வருகிறது. சேம்பின் ஆயிரக்கணக்கான வகைகள் உலகெங்கிலும் இருந்தாலும் அதிகம் சாகுபடியாவது :
எடோ வகை எனப்படும்
(1) “eddoe” , Colocasia esculenta var. antiquorum (syn. Colocasia esculenta var. globulifera )
மற்றும் டஷீன் வகையான
(2) “dasheen” ,Colocasia esculenta var. esculenta. இவையிரண்டும் தான்.
தரையடிக்கிழங்கின் அளவு மற்றும் வடிவங்களின் கொண்டுதான் இந்த இரு வகைகளும் வேறுபடுத்தப் படுகின்றன. esculenta வகை பெரிய நடுக்கிழங்கையும் சிறிய பக்கவாட்டுக் கிழங்குகளையும் கொண்டிருக்கும், antiquorum வகை சிறிய நடுக்கிழங்கையும் பெரிய பெரிய பக்கவாட்டுக் கிழங்குகளையும் கொண்டிருக்கும்.
இரண்டு வகைகளுக்கும் மரபணுக் கட்டமைபிலும் வேறுபாடுகள் இருப்பது தற்போது கண்டறியப்பட்டிருக்கிறது.
C. esculenta வகைச்சேம்புதான் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க பகுதிகளில் பயிராகிறது. சேம்பு உருளைவடிவக் கிழங்குகளும் மிக நீண்ட சதைப்பற்றான் இலைக்காம்பையும் கொண்டிருக்கும்
1.5 அடி உயரம் வரை வளரும் சேம்பில் மலர்கள் உருவாகும் போது இலைகளின், இலைக்காம்புகளின் நீளம் குறைந்து சிறிய அளவிலான இலைகள் உருவாகும். இலைகளின் நிறம் பச்சை, ஊதா நிறம் கலந்த பச்சையென வாழிடங்களளைப் பொருத்தும், மரபணுக்கட்டமைப்பைப்பொருத்தும் வேறுபடும்.
இலைப்பரப்பிலிருக்கும் வரிகள், புள்ளிகள் மற்றும் திட்டுகக்ளும் வகைகளைப் பொருத்து வேறுபடும்.
சேம்பின் உண்ணக்கூடிய பகுதியானது வெண்ணிற உட்பகுதியைக் கொண்ட தண்டடிக்கிழங்குதான் (underground stem) என்றாலும், நிலத்தடியில் இருப்பதால், சேம்புக்கிழங்கு வேர்க்காய்கறியாகவே கருதப்படுகிறது. சில வகைசேம்பில் கிழங்கின் உள்ளே ஊதா நிறம் காணப்படும். கிழங்கின் தோல் மண்ணிறத்திலிருக்கும்.
ஏரேசி (Araceae) குடும்பத்தின் பிற உண்ணக்கூடிய வேர்க்கிழங்குகளைத் தரும் தாவரங்களைப் போலவே சேம்பும் வேர்க்காய்கறிகளில் ஒன்றுதான் எனினும் இதன்கிழங்குகளில் இருக்கும் கால்சியம் ஆக்ஸலேட் குருணைகள் உண்டபின்னர் நாக்கில் நமைச்சலை உண்டாக்குவதாலும், இதில் நீரில் கரையும் ஊட்டச்சத்து எதிர்ப்பியான டேனின்கள் இருப்பதாலும் இந்தக்கிழங்கு பக்குவமாகச் சமைத்தபின்னரே உண்ணப்படும் காய்கறியாக இருக்கிறது.
ஆவியில் அல்லது நீரில் வேகவைத்த கிழங்குகளோடு விரியாத இளம் இலைகளும், நீண்ட சதைப்பற்றான இலைக்காம்பும் கீரையைப் போலச் சமைத்து உண்ணப்படுகிறது..
ஒருவருடப் பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது என்றாலும் சேம்பு ஒரு பல்லாண்டுப் பயிர். பிற வேர்க்காய்கறிகளைக் காட்டிலும் சேம்புக்கிழங்கு அதிகச் சத்துக்கள் கொண்டது
சேம்புக் கிழங்குகளின் மாவுச்சத்தின் அளவானது 12-லிருந்து 20 சதவீதம் வரை இருக்கும். சேம்புக்கிழங்கில் மாவுச்சத்துடன் ஏராளமான புரதம் வழவழப்பான பசைத்திரவமாக இருக்கிறது. நீரில் கரையும் தன்மை கொண்டிருக்கும் இந்த புரதங்கள்தான் சேம்பின் சுவைக்கு காரணமாகின்றன. சேம்பில் சாம்பல் சத்து, எண்ணெய்ச் சத்து, நார்ச்சத்து, சர்க்கரைச் சத்து, சோடியம், வைட்டமின் B, உள்ளிட்ட பல வைட்டமின்கள், கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் பலவகையான தாதுஉப்புக்கள் நிறைந்திருக்கிறது., ஹவாயில் குழந்தைகளின் முதல் திட உணவு எப்போதுமே ’போய்’தான்
இந்தக்கிழங்கு சமைத்தபின் மிகவும் மிருதுவாகிவிடுகிறது என்பதால் விரும்பத்தக்கஉணவாக இருக்கிறது.
ஹவாயில் kalo என்றழைக்கப்படும் சேம்பு ஹவாய் மக்களின் கடவுள்களுடனும் முன்னோர்களுடனும் தொடர்பிலிருக்கும் மிக முக்கியமான கலாச்சார அந்தஸ்து கொண்டிருக்கும் ஒரு உணவுத்தாவரம். ஹவாயில் சேம்புக் கிழக்கு பல மருத்துவ உபயோகங்களையும் கொண்டிருக்கிறது
சேம்பு ஹவாயின் கனகா மோலி (Kanaka Maoli) பழங்குடியினருடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. இப்பழங்குடியினர் சேம்பு மற்ற அனைத்து உணவுகளைக் காட்டிலும் வாழ்வதற்கு மிக அதிக சக்தியைக் கொடுப்பது என நம்புகிறார்கள்.
சேம்புக்கிழங்கிலிருந்துதான் பாலிநேசியாவின் பிரதான உணவான ’போய்’ (Poi) தயாரிக்கப்படுகிறது. ஹவாய் மக்களின் வாழ்வாதாரமாகவும் அடையாளமாகவும் சேம்பும், போய் உணவும் விளங்குகிறது.
போய் உணவு மக்களை ஒன்றிணைத்து, அதன் நெருங்கி அமைந்திருக்கும் இலைகளைபோல ஒஹானா (ohana) எனும் குடும்ப அமைப்பை உறுதிசெய்து, அமாக்குவா (aumakua) என்னும் மூதாதையரின் ஆசியைப் பெற்றுத்தருவதாக ஹவாய் மக்கள் நம்புகிறார்கள். எனவே அவர்களின் கலாச்சாரத்திலிருந்து பிரிக்கவே முடியாத உணவுப் பொருளாகச் சேம்புக்கிழங்கு இருக்கிறது.
ஹவாய்ப் பழங்குடியினரான கனகா மாலிகளின் தொன்மங்களில் வான் தந்தைக்கும் பூமித்தாய்க்கும் பிறந்த பெண் கருவுற்று, அவளது இறந்து பிறந்த முதல் குழந்தையாக சேம்பு கருதப்படுகிறது. இறந்து பிறந்த Haloa-naka என்னும் அந்த ஆண்குழந்தை மண்ணில் புதைக்கப்பட்டு அது சேம்புத்தாவரமாக வளர்ந்தது என்கிறது அவர்களின் தொன்மம். இரண்டாவதாகப்பிறந்து ஆரோக்கியமாக வளர்ந்த Hāloa தான் ஹவாயின் முதல் மனிதன் என ஹவாய் தொன்மங்கள் குறி[ப்பிடுகின்றன. சேம்புச்செடிக்கு ஹவாயில் Haloa என்றும் வழங்கு பெயருண்டு. Haloa என்றால் நீடித்திருக்கும் சுவாசம் என்று பொருள்.
இந்தத்தொன்மத்தினால்தான் சேம்புச்செடியும் அதன் கிழங்கிலிருந்து உருவாக்கப்படும் போய் உணவும் ஹவாய் கலாச்சாரத்தின் முக்கிய அங்கங்களாகி விட்டிருக்கிண்றன
போய் உணவு தயாரிப்பது மிக மிக எளிது. சேம்புக்கிழங்கு சுத்தமாக்கப்பட்டு நீராவியில் வேக வைக்கப்படுகிறது. பின்னர் தோல் நீக்கி சுத்தமாக்கப்பட்டு, மென்மையாகிவிட்டிருக்கும் கிழங்குகள் மரத்தொட்டி அல்லது கல்தொட்டிகளில் சிறிதளவு நீர் விட்டு பசையாக அரைக்கப்பட்டு சற்று இனிப்பாக இருக்கையில் அப்போதே உண்ணப்படுகின்றன அல்லது சிறிதுநாட்கள் நொதிக்க வைக்கபட்டு புளிப்புச்சுவையுடன் உண்ணப்படுகின்றன.
சாம்பல் கலந்த ஊதா நிறத்திலிருக்கும் போய் உணவு ஆழம் குறைவான தட்டையான சிறு கிண்ணங்களில் நறுக்கிய தக்காளி வெங்காயத் துண்டுகளுடன் பரிமாறப்படுகிறது. ஹவாய் மக்கள் போய் உணவை வெறும் நீரும் நிறைய அன்பும் சேர்த்துச் சமைக்கப்பட்ட சுவையான உணவு என்னும் பொருளில் அதை ‘ஓனோ’ என்பார்கள்.
பட்டமளிப்பு விழா, பிறந்தநாள், திருமணம் போன்ற நிகழ்வுகளில் போய் உணவு கட்டாயமாக இடம்பெறும் ஒரு முக்கிய உணவாக இருக்கிறது. கூழ் போலவோ அல்லது கஞ்சியாகவோ தயாரிக்கப்படும் போய் உணவு பன்றிக்கறி, சால்மன் மீன் கறி அல்லது கோழிக்கறி போன்ற உப்புசேர்க்கப்பட்ட உணவுகளுடனோ அல்லது தனியாகவோ உண்ணப்படுகிறது.
போய் உணவில் சேர்க்கப்படும் நீரின் அளவானது வேறுபடும். போய் உணவை எத்தனை விரல்களால் எடுத்து வாய்க்கருகில் கொண்டு செல்லமுடியும் என்பதைக் கொண்டு அதன் திரவ நிலை 3 விரல் போய், 2 விரல் போய் அல்லது 1 விரல் போய் என வகைப்படுத்தபப்டுகிறது.
சற்று கெட்டியான கூழ் போன்ற பதத்தில் இருக்கும் 1-விரல்போய் என்பது செல்வந்தர்களுக்கானதென்றும், நன்கு நீர்த்த 3- விரல்போய் என்பது ஏழைகளுக்கானதென்றும் பொதுவில் சொல்லப்படுகிறது.
ஹவாயில் 1970-களிலிருந்தே சுற்றுலாப்யணிகளுக்கென ’போய்’ தினமும் புத்தம் புதிதாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சேம்பு இலையில் பொதியப்பட்ட இமு எனப்படும் நிலத்தடி அடுப்பில் சமைக்கப்பட்ட பன்றி இறைச்சியுடன் ’போய்’ உணவைச் சுவைப்பதற்கென்றே உலகெங்கிலும் இருந்து ஹவாய்க்கு சுற்றுலாப்பயணியர் வருகைதருகிறார்கள்.
முதன் முதலில் போய் உணவைச்சுவைக்கும் வெளிநாட்டிஅன்ர் அதை போஸ்டர் ஒட்டும் பசைபோலிருப்பதாக கருதுவார்கள் என்றும் விருந்து முடியும்போது ஏராளமான போய்க் காலிக்கிண்ணங்கள் இருப்பது அங்கே வாடிக்கை எனவும் சொல்லப்படுகிறது.
ஹவாயில் Waiahole எனப்படும் உணவகம் இதற்குப் பிரபலமானது. சுற்றுலாப்பயணிகள் ’போய்’ உணவைச் சுவைக்க அங்கே வரிசையில் காத்திருப்பார்கள்.
இப்போது போய் புத்தம் புதிதாகத் தோண்டி எடுக்கப்பட்ட கிழங்குகளாகவும், கேக்குகள், தகடுகளாகச் சீவி வறுக்கப்பட்ட சிப்ஸ்கள் அல்லது தேங்காய்ப்பாலுடன் கலந்து அருந்தும் பானமாக, ரொட்டி அல்லது கஞ்சியாகவும் ஹவாயில் கிடைக்கிறது. உடனடி உணவாகவும் , ஒரு சிலநாட்கள் குளிர்பதனப் பெட்டியில் வைத்து உண்ணும் வகையிலும் போய் உணவு சந்தைப்படுத்தப்படுகிறது.
மருத்துவக் காரணங்களுக்காகவும் போய் அங்கு உண்ணப்படுகிறது. போய் உணவு சார்ந்த ஒவ்வாமைகளை குணப்படுத்துகிறது. ரத்தச் சர்க்கரை அளைவை, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் உடலெடையைக் குறைக்கவும், நோயெதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கவும், சருமப் பொலிவிற்கும் போய் உணவு இங்கே வழக்கமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. குடல் புற்றுநோயெதிர்ப்புக்கும் போய் உணவு பரிந்துரைக்கப்படுகிறது.
முன்காலத்தில் வேகவைக்கப்பட்ட கிழங்கு தோலுரிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு கல் அல்லது மரப்பலகைகளில் இடிக்கப்பட்டு மாவாக்கப்பட்டது. இப்போது ப்ரெஷர் குக்கர்களில் வேகவைக்கப்பட்டு மிக்ஸியில் அரைத்து கூழாக்கபடுகிறது .
சமைக்காத சேம்புக்கிழங்கை ஒருபோதும் சாப்பிடக்கூடாது என்பதை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்
பண்டைய ஹவாய் மக்களின் பிரதான உணவாக தானியங்களோ, பால்பொருட்களோ, இறைச்சியோ அல்லாது, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சேம்புக் கிழங்கு, மீன், தேங்காய் ஆகியவையே அவர்களின் உணவாக இருந்தது.
உலகில் சுமார் 100 மில்லியனுக்குமதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும் ’போய்’ மிக முக்கியமான உணவாக கருதப்படுகிறது.
உலகின் அதிகமாகப்பயிரடப்படுபவைகளில் 14 -வது பயிராக இருக்கும் சேம்பின் நோய் எதிர்ப்புச்சக்திகொண்ட வகைகளை இப்போது பயிரிடும் ஹவாய் விவசாயிகள், அமெரிக்கச் சந்தைகளில் சேம்புக்கு தொடர்ந்த தேவை இருப்பதை உறுதி செய்கிறார்கள்.
ஹவாய் மட்டுமல்லாமல் ஃபிஜி, சமோவா மற்றும் டோங்கா தீவுகளின் மிக முக்கியமான ஏற்றுமதி செய்யப்டும் தாவரப்பொருட்களில் ஒன்றாக சேம்புக்கிழங்குகள் இருக்கின்றன.
தலைமுறைகளாக போய் உணவு ஹவாய் மக்களின் ஆன்மாவுக்கும் உடலுக்கும் புத்துயுரூட்டிக்கொண்டிருக்கிறது.
ஹவாய் கலாச்சாரத்தில் சேம்புக்கிழங்குப் பயன்பாடு மற்றும் போய் உணவுத் தயாரிப்பு என்பது வெறும் விவசாயப்பலன்களுக்காக மாத்திரமல்ல, எரிமலைகுழ்மபு படிந்த அந்தத் தீவைச் செழிப்பாக்கி தலைமுறைகளின் வாழிடமாக மாற்றிய அவர்களின் முன்னோர்களின் மரபைக்காப்பற்றும் பொருட்டும் தான் தொடர்கிறது.
முதன்முதலாக பாலினேசியாவிலிருந்து ஹவாய்க்கு வந்த குடியேறிகள் அந்தத் தீவை அன்பிற்கான நிலம் என்று குறிப்பிட்டார்கள். சேம்பு விவசாயிகளின் பாதுகாப்பான கரங்கள், ஹவாய் கலாச்சாரத்தை கற்பிக்கும் ஆசிரியர்கள், துடிப்பான புதியதலைமுறை ஆகிய மூன்றும் இணைந்து சேம்பு மற்றும் போய் உணவைப் பாதுகாத்து ஹவாய் தீவு என்றென்றைக்குமே அன்புக்கான நிலமென்பதை அழியாத உண்மையாக்கிக்கொண்டிருகிறார்கள்.
இரவுகளில் பாடல் கேட்டுக்கொண்டோ கவிதைகள் வாசித்துக்கொண்டோ உறங்கச்செல்வது பலகாலமாக வழக்கத்தில் இருக்கிறது.விருப்பமான கவிஞர்களின் கவிதை நூல்கள் படுக்கைக்கு அருகிலேயே எப்போதும் இருக்கும்.
பாடல்களில் அதிகம் ஹிந்தியும் மலையாளமும் இருக்கும். ஒரு நாளின் அலுப்பு சோர்வு எல்லாம் போக இப்படி பாடல்களின் இனிமையான நினைவுகளுடன் உறங்கச்செல்வது பெரும் ஆறுதலளிக்கும். நான் புழங்கும் உலகு அத்தனையொன்றும் பிரியமானதல்ல புகைச்சலும் அறியாமையும் சில்லறைச்சச்சரவுகளும் மலிந்த ஒரு உலகத்தில் தான் 5 மணி நேரமிருக்கிறேன். எனவே இந்தப்பழக்கத்தைத் தவறவிடுவதில்லை. அன்றாடம் அதிகாலை வாசிப்பையும் கட்டாயமாக, ஆனால் உள்ளார்ந்த ஆர்வத்துடன் பிரியத்துடன் தொடர்கிறேன்.
மலையாள மொழியின்மீது எனக்கு சாய்வு அதிகம். நேற்றிரவு ’’எல்லாரும் சொல்லனு’’ பாடலைக்கேட்டேன். என் பிரியத்துக்குரிய மலையாளப்பாடல்களில் இதுவும் உண்டு. 1954-ல் வெளியான நீலக்குயில் என்னும் திரைப்படத்தின் பாடல். பாடலை எழுதியது புல்லூட்டுப்பாடத்து பாஸ்கரன்மாஷே.
ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியவர். 250 திரைப்படங்ளுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார்.இயக்குநரும் நடிகரும் கூட. கவிஞர் என்று சொல்ல வேண்டியதில்லை.இவரது 3000த்துக்குமதிகமான பாடல்களனைத்துமே நீள் கவிதைகள்தான்.நீலக்குயிலை இயக்கியதும் இவரே.இவரது தந்தையும் பெருங்கவிஞர்.
7ம் வகுப்பு படிக்கையிலிருந்தே கவிதைகள் எழுதிய இவர் துவக்கத்தில் கம்யுனிசப்பாடல்களை எழுதினார். இவரது முதல் சினிமாப்பிரவேசம் 1949- ல் வெளியான தமிழ்த்திரைப்படமான அபூர்வசகோதரர்களில் இருந்த பலமொழிப்பாடலொன்றின் மலையாளப் பகுதிகளை எழுதியதில் துவங்கியது.
2வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான அகில இந்திய தகுதிச் சான்றிதழை வென்று , இந்த விருதை வென்ற முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது நீலக்குயில். நீலக்குயில் ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்க விருதையும் பெற்று மலையாளச் சினிமாவின் முதல் அரசு அங்கீகாரம் பெற்ற படமாகியது.நீலக்குயிலில் பாஸ்கரன் மாஷே நடித்துமிருக்கிறார்.
கலாசித்ரா அகாதமியும் கேரள அரசும் இணந்து மலையாளச் சினிமாவில் பாஸ்கரன் மாஷேவின் பங்களிப்பை போற்றும் விதமாக இவரது மார்பளவு சிலையை திருவனந்தபுரத்தில் நிறுவி இருக்கிறது.
நீலக்குயிலில் கே. ராகவன் இசையமைத்து பி. பாஸ்கரன் எழுதிய ஒன்பது பாடல்கள் உள்ளன .இவை அனைத்தும் கேரள நாட்டுப்புற மரபுஇசை வகைகளில் மாப்பிளப்பட்டு , கோயித்துபட்டு என்னும் அறுவடைப் பாடல்,பாரம்பரிய பிரார்த்தனைப்பாடல்கள்ஆகியவற்றின் வடிவங்களில் அடங்குபவை.
வாழ்நாளின் இறுதியில்அல்ஸைமரினால் பாதிக்கப்பட்டிருந்த மாஷே மனிதர்களையும் அவரது பாடல்களையும் முற்றிலும் மறந்தார். இவரது இறுதிக்காலத்தில் இவரது பாடல்களை ஏராளமாகப் பாடிய S. ஜானகியம்மா இவர் முன்பாக அவரது பல பாடல்களைப்பாடியபோது அவரால் எதையும் நினைவுகூற முடியவில்லை. 83 வயதில் இறந்தார் மாஷே.
1954-ல் தலித் பெண்ணுக்கும் உயர் சாதி பள்ளிக்கூட ஆசிரியருக்குமான காதலைச்சொன்ன படம் நீலக்குயில். இந்த நீலக்குயிலின் ’’எல்லாரும் சொல்லனு” எளிய மொழியில் எழுதப்பட்ட மிக அழகிய கவிதை
மிஸ் குமாரியும் சத்யனும் வெகு இயல்பான உடல்மொழியுடன் நடித்திருக்கும் பாடல்காட்சி. கொய்யாக்காயை கடித்துக்கொண்டும் மேலே தூக்கிப்போட்டுப் பிடித்துக்கொண்டும் பாடும் காதல்பாடலை நான் இதற்கு முன்பும் பிறகும் கேட்டது இல்லை. ஒருவரை ஒருவர் தொட்டுக்கொள்ளாமல் முழுப்பாடலையும் பாடிவிட்டு இறுதிக்காட்சியில் ‘கல்லானு, கருங்கல்லானு’ என்று சொல்லப்பட்ட சத்யனின் நெஞ்சில் தன் இருகைகளையும் வைத்துக்கொள்வார் குமாரி. ஜானம்மாடேவிட்டின் குரலில் நீலக்குயில் கொஞ்சுகிறது.
’’எல்லாரும் சொல்கிறார்கள்
உங்கள் இதயம் கல் என்று,
அதுவும் பெரும்
கருங்கல்லென்று’
ஆனால் நானதைத்
தொட்டுப்பார்த்தபோது
எனக்கது
ஒரு கரும்பின் துண்டாகத்தான் இருந்தது.
நாட்டார் எல்லாரும்
உன் இதயம் காடு
அதுவும் கொடும்காடு என்றார்கள்,
ஆனால்
அதில் நுழைந்த போது
நான் பார்த்தது
ஒரு நீலக்குயிலின் கூட்டை ,
சின்னஞ்சிறியதோர் கூட்டை.
என்ன பார்க்கிறாய் நிலவே?
ஏன் எங்களை மேலிருந்து பார்க்கிறாய் ?
நான் மேலே உன்னிடம் வரப்போவதில்லை
என் மணவாளன்
இங்கே கீழே அல்லவா இருக்கிறான்?
பூச்செண்டு வாங்கனும்
கல்யாண முண்டு வாங்கி உடுத்தனும்
பூக்கள் அமைத்த பொன்தாலியை
கழுத்தில் கட்டனும்
நானொன்றும்
விளையாட்டுக்குச்சொல்லவில்லை
நல்ல சுவையான துளிர் வெற்றிலையை
மென்று தின்று
என் உதடுகளை
ரத்தச்சிவப்பாக்கிக்கொள்ளனும்
ஆம்
என் உதடுகளை
ரத்தச்சிவப்பாக்கிக்கொள்ளனும்’’
எத்தனை நேரடியான காதல் சொல்லல் இல்லையா?
இடையில் அந்த அய்யா என்னும் விளி அவன் மீது அவளுக்கிருக்கும் மரியாதை கலந்த அன்பைக்காட்டுகிறது.
முதலில் நேரடியாக அவன் இதயத்துக்குள் தான் நுழைந்ததைச் சொல்லும் அவள், அவன் எத்தனைஇனியவன் என்கிறாள் கரும்பைச்சொல்லி.
பின்னர் நிலவிடம் சொல்லுவது போல் தன் மணவாளன் அவனே என்கிறாள். பிறகு கல்யாணத்துக்கு தயார், முண்டும் தாலியும் கெட்டனும் என்பவள் மேலும் துணிந்து உதடுகளை சிவப்பாக்கிக்கொள்வதையும் சொல்கிறாள்.
ஊழின் இரக்கமற்ற விதி இந்தப்பாடலைக் கூட பாஸ்கரன் மாஷே மறக்கும்படி செய்துவிட்டது
வெள்ளிமலை தாவரவியல் குழுவினர் இன்று வரை தொடர்பில் இருக்கிறார்கள். நானே அதிகாலையில் எழுந்து நாளைத்துவங்கும் ஒருத்தி என்றால் அதில் சிலர் நான் எழும்போதே எனக்கென ஏதேனும் தகவலோ கேள்வியோ புகைப்படமோ வைத்திருப்பார்கள். ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். அவர்களுடன் இணைந்து நானும் புதிதுபுதுதாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
இன்று காலை பெங்களூர் பிரியா நிறைந்து பூத்திருந்த எள் வயலின் புகைப்படம் அனுப்பி எள்ளின் வகைகளைக்குறித்து கேட்டிருந்தார். நான் அதன் கருப்பு வெள்ளைபிரவுன் சிவப்பு வகைகளையும் அதன் ஆங்கிலப்பெயரான Sesame , தாவர அறிவியல் பெயரான Sesamum indicum (Sesamum indicum subsp. indicum)என்பதையெல்லாம் காரில் கல்லூரிக்கு வருகையில் சொல்லிக்கொண்டிருந்தேன்.
அறிவியல் பெயரிலிருந்து வந்த இதன் sesame என்னும் ஆங்கிலப்பெயருக்குப்பின்னால் ஒருசுவாரஸ்யம் இருக்கிறது.
எள் இந்தியாவுக்கு சொந்தமான பயிர்.மனிதர்கள் பயிரிட்ட முதல் எண்ணெய்பயிர் எள் தான். சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எள் இந்தியாவில் பயிராகிறது. இந்து மதம் விஷ்ணுவின் வியர்வையிலிருந்து உருவான பயிர் என்று எள்ளைச்சொல்கிறது. தரிசு நிலங்களில் கூட எள் பயிராகும். பல மதங்களில் எள்ளும் எள் எண்ணெயும்புனிதமானதாகக் கருதப்படுகிறது.
பெடாலியேசியைச்சேர்ந்த (Pedaliaceae) எள்ளின் கனி எனப்படும் pods மிகச்சுவாரஸ்யமானது. பல நாகரீகங்களில் சத்துக்கள் அடங்கிய இதன் சிறு விதைகள் அந்த கனியிலிருந்து வெடித்து திறந்து வெளியாவதைப் புதையல் கிடைத்தது போல் எனக்கொள்வார்கள். எனவேதான் open sesame என்பது புதையல் இருக்கும் இடம் திறப்பதற்கான மந்திரச்சொல்லாக இருக்கிறது.
அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் குகையை திறக்க அலி ’’திறந்திடு சீசேம்’’ என்று சொல்வது இதனால்தான். பாபிலோனியாவில் பல மந்திர தந்திர வித்தைகளில் எள் எண்ணெய் எனப்படும் நல்லெண்ணெய் உபயோகத்திலிருக்கிறது. யூதர்களின் மாயாவாத சடங்குகளில் எள் சொர்க்கத்தின் இன்னொரு பெயராகக் கருதப்படுகிறது. ஹீப்ரூ மொழியிலும் எள்ள்ளுக்கு கடவுள் என்னும் பொருள் இருக்கிறது
sesame என்னும் கிரேக்கச்சொல் பழமையான செமிடிக் மொழிகள் ஒன்றான, இப்போது புழக்கத்தில் இல்லாத பண்டைய மெசபடோமியர்களின் மொழியான அக்காடியனின் (Akkadian) தாவர எண்ணெய் என்னும் பொருள் கொண்ட் šamaššamu என்னும் சொல்லில் இருந்து உருவானது.
57% எண்ணெய் அளவு கொண்டிருக்கும் எள்ளின் பல பயன்களில் ஒன்று அதிலிருக்கும் லிக்னன்களான sesamin & sesamolin ஆகியவற்றின் ரத்தக்கொழுப்பைக்குறைக்கும் இயல்பு. இதன் தமிழ்ப்பெயரில் ஒன்றான திலம் என்பதிலிருந்துதான் ஆங்கிலப்பெயரான் til என்பது வந்திருக்க வேண்டும்.எள் தான் எண்ணெய்ப்பயிர்களின் ராணி.
நேற்று Dr செளமியா அவரது தோட்டதில் இருந்த எள் சக்களத்தி என்று சொல்லப்படும் எள் பயிரைப்போலவே இருக்கும் Cleome monophylla வின் புகைப்படத்தை அனுப்பி இருந்தாள். எத்தனை எத்தனை சுவாரஸ்யங்கள் தாவரங்களில் !
கல்லூரியில் கோடை விடுமுறை சுமார் 40 நாட்கள். பொதுவாக விடுமுறையிலும் தேர்வுப்பணி, ஆய்வுப்பணி, விடைத்தாள் திருத்துதல் , ஜூன் மாதம் புதிய மாணவர் சேர்க்கை என ஓடியே போய்விடும்.பத்து நாள் சேர்ந்தாற்போல வீட்டில் இருந்தாலே அதிசயம்தான். ஆனால் இந்தமுறை மேனகாவின் ஆய்வு முடிந்துவிட்டது. தேர்வுப்பணியை முதல்நாளே முடித்துவிட்டேன். விடைத்தாள் திருத்தும் பணிக்கும் மாணவர் சேர்க்கைக்கும் முதன்முறையாக என்னைக்காட்டிலும் இளைய, இன்னும் பல ஆண்டுகள் துறையில் பணியாற்றவிருக்கும் பேராசிரியர்களைப் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டேன். சொல்லப்போனால் இதுதான் 22 வருட ஆசிரியப்பணியில் முதல் விடுமுறை என்றும் சொல்லலாம்.
சமீப காலங்களில் மாணவர் சேர்க்கையும் பெரும் அயர்ச்சியளிக்கிறது. காமர்ஸ் கணினி துறைகளுக்கான நீண்ட வரிசையில் காத்திருப்பவர்கள் தாவரவியல் துறை என்னும் ஒன்று இருப்பதே அறியாதவர்களாக கல்லூரி நிறைந்திருப்பதை இப்போதெல்லாம் பார்க்க பெரும் துயரேற்படுகிறது.
அழிந்து போகத்தான் போகிறது அடிப்படை அறிவியல் துறைகள் எல்லாம் என்றால் நடக்கட்டும். என்னால் ஆனவற்றை நான் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறேன் மேலும் செய்வதற்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.
கல்லூரி கடைசி வேலைநாள் 24 ஏப்ரல் அடுத்த நாள் ரயிலேறி சென்னை வந்தேன். வீட்டில் முதல்தளம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒப்பந்த அடிப்படை என்பதால் என் இருப்பு அங்கு தேவைப்படவில்லை என்றாலும் வீடு முழுக்க கட்டுமானப் பொருட்கள் இறைந்துகிடக்க சிமெண்ட் பட்டு பல செடிகள் வாடியும் உயிரிழந்தும் போயிருக்கும் கடும் கோடையில் ஏறக்குறைய 1 மாதம் வீட்டை விட்டு போவது என்னும் கலக்கம் இருந்தது.
தோட்டதுக்கு இரண்டு நாட்களுக்கொருமுறை நீரூற்ற ஒருவரையும் வராந்தாவில் இருக்கும் நிழல் விரும்பிகளுக்கு மாணிக்காவை நீருற்றவும் ஏற்பாடு செய்துவிட்டு வாசல் மேசையில் வைத்திருந்த இரண்டு போன்சாய் மரங்களையும் மாணிக்காவிடமே ஒப்படைத்து தினமும் நீர் ஸ்ப்ரே செய்து பாதுகாத்து வைக்கும் படி கேட்டுக் கொண்டேன்
கோவை புறப்படுகையில் பால் பீச்சும் மாட்டை விட்டு, பஞ்சாரத்தில் கோழியை விட்டு புறப்படும் பொன்னுத்தாயைபோலவே கலங்கினேன்.
முதலில் சென்னை அங்கிருந்து பெங்களூர் அங்கிருந்து வெள்ளிமலை அங்கிருந்து குக்கூ காட்டுப்பள்ளி சென்று மே 28 வீடு திரும்ப உத்தேசம்.
சென்னையில் வேணுவை , அகரமுதல்வனின் மகன் அங்கணனை வெண்ணிலாவை சந்திக்கவேண்டி இருந்தது. சென்னை மாம்பாக்கத்தில் ஒரு அடுக்ககத்தில் மீனாட்சி ரவீந்திரன் தம்பதியினர் ஒரு நாள் தாவரவியல் பயிற்சிக்கு அழைத்திருந்தார்கள். மகன்கள் ’’இந்த வெயிலில் ஒரு நாள் பயிற்சிக்காக சென்னை வரை போறியா?’’ என்றார்கள். ’’ஆம்’’ என்றேன். செயலாக இருக்கும் வரைக்கும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தாவரவியலின் முக்கியத்துவத்தை இயற்கையை அறிதலை கற்றுக்கொடுக்கத்தான் போகிறேன். வெள்ளிமலை வகுப்புக்குப் பிறகு இப்போது பலருக்கு இயற்கையை அறிதலுக்கான விருப்பமிருக்கிறது.
மதிய ரயிலாதலால் இரவு 10.30க்கு சென்னை வந்துசேர்ந்தேன். மீனாட்சி ரவீந்திரன் மற்றும் குக்கூ சத்யா எனக்காக ரயிலடியில் காத்திருந்தார்கள். மேலும் 35 கி மீ அந்நேரத்துக்கிருந்த வாகன நெரிசலில் நீந்தி பின்னிரவில் அந்த அடுக்ககம் வந்து சேர்ந்தேன். நல்ல அசதியும் கால்வலியும் இருந்தது. நான் கேட்டுக்கொண்டிருந்த படி தனியறை ஒதுக்கித்தந்திருந்தார்கள். குளித்து உடைமாற்றி உறங்க நள்ளிரவானது. 100 பேர் வரை பங்கேற்பார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்து 15 பேர் கூட தயாராக இல்லை . எனவே முதல்நாள் நான் ஓய்வெடுத்துக்கொண்டு அங்த பிரம்மாண்டமான அடுக்கத்தின் தாவரங்களைப்பார்த்தேன் அருகில் இருந்த பெரிய புகழ்பெற்ற பள்ளியில் அனுமதி வாங்கி அங்கும் வகுப்பை நடத்த திட்டமிட்டோம். பள்ளி வளாகத்தில் இருந்த ஆலமரத்தடிவகுப்புக்கென சுத்தம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.
ஒரு மாமரத்தில் பெயர்ப்பலகை இருந்தது. அருகில் சென்று பார்த்தேன். அறிவியல் பெயர் சரியாகவும் குடும்பம் தவறாக மால்வேசி என்றும் இருந்தது . அனகார்டியேசி என திருத்தச் சொன்னேன்.
இப்படி பல முக்கியமான இடங்களில் தவறாக பெயர்ப்பலகைகளைப் பார்க்கிறேன்.
வேதாரண்யம் சென்றிருந்த போது பிறவி மருந்தீஸ்வரர் கோவில் ஸ்தல மரத்தின் அறிவியல் பெயர் தவறாக எழுதபட்டிருந்ததைப் பார்த்தேன் அதை திருத்த யாரிடம் சொல்வதென தெரியவில்லை தருணின் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலையில் கூட ஒரு மாபெரும் ட்ரீ ஃபெர்ன் மரம் சில்வர் ஓக் என தவறான பெயரிடப்பட்டு இருந்தது. மேட்டுப்பாளையம் பள்ளி ஒன்றிலும் பல மரங்கள் மிகத்தவறாக பெயரிடப் பட்டிருந்தன நான் அந்தபள்ளியின் தாளாளருக்கு புகைப்படங்களுடன் தகவல் சொல்லியும் எந்த பலனும் இல்லை.
வெயில் முதுகில் அறைந்துகொண்டிருந்தது. ஏராளம் விசிறி வாழைகளும் ப்ளுமீரியாக்களும் அங்கிருந்தன. காலை மதியம் மீனாட்சி வீட்டில் உணவு.அன்றைய அந்தி மிக இனியது. மறக்கமுடியாதது.என்றேனும் அதைக்குறித்தெழுதுவேனாயிருக்கும்.
மறுநாள் எப்படியோ 20 பங்கேற்பாளர்கள் வந்திருந்தனர். போர்டு ரூம் போலிருந்த ஒரு குளிரூட்டப்பட்ட அறையில் ஒரு துவக்க உரை அவர்களுக்கு தெரிந்த vegetable insult குறித்தும் பொதுவான தாவரவியல் குறித்தும் சில கேள்விகள் பின்னர் குழந்தைகளுக்கான ஒரு ppt பின்னர் அடுக்கக வளாகத்தில் களத்தாவரவியல். ஆலமரத்தடியில் 45 நிமிட வகுப்பு பின்னர் மரம் தழுவல் . குளிர்ச்சியாக லிச்சி குளிர்பானம் ஒன்றை குடித்த பின்னர் மீண்டும் அரங்கில் பெரியவர்களுக்கான ppt.
மதிய உணவு பின்னர் ஓய்வு . மாலை வெயில் தாழ botanical hunt 1 மணி நேரம். அதில் அனைவரும் ஆர்வமாக கலந்துகொண்டனர். பின்னர் அங்கிருந்த ஒரு அரைவட்ட வடிவ திறந்த வெளி அரங்கில் அமர்ந்து இருட்டும் வரை அன்றாட வாழ்வில் தாவரங்களைக் குறித்துப் பேசியும் விவாதித்தும்கொண்டிருந்தோம். எனக்கு நிறைவாக வகுப்பாக இருந்தது. மீனாட்சி ரவீந்திரன் தம்பதியினர் அவர்களின் சொந்தச்செலவில் இதை முன்னெடுத்துச்செய்தார்கள்.
மறுநாள் அதிகாலை அங்கிருந்து விடைபெற்று அகரமுதல்வன் வீட்டுக்கு சென்றேன். முழுநாளும் அங்கிருந்துவிட்டு அங்கிருந்து வெண்ணிலா வீடு. 3 நாட்கள் அங்கிருந்து விட்டு பெங்களூருக்கு வந்து சேர்ந்தேன்.
சர்வதேச மகளிர் தினம் இன்று. இப்படியொரு தினத்தைப் பிரத்யேகமாகக் கொண்டாடுவதே உலகில் பெண்களின் நிலை என்ன என்பதைக்காட்டுகிறது.
நான் பதின்ம வயதில் இருக்கையில் தொலைக்காட்சியில் HBO`வில் ஏதோ ஒரு ஆங்கிலப்படம். படத்தின் பெயர் நினைவிலில்லை ஆனால் ஒரு காட்சி மட்டும் அச்சடித்தது போல் நினைவிலிருக்கிறது.
கணவன் கூடத்தில் அமர்ந்து நாளிதழ் வாசித்துக்கொண்டிருப்பான், குழந்தை கீழே விளையாடிக்கொண்டிருக்கும். மனைவி சமையலறலையில் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருப்பாள். கொஞ்சநேரத்தில் கணவன் உள்ளே வந்து மனைவியிடன் நெளிந்துகொண்டே “நீ தள்ளிக்கோ நான் பாத்திரம் தேய்க்கிறேன்“ என்பான். அவள் அவனை விசித்திரமாகப்பார்த்துக்கொண்டே “என்ன திடீர்னு வேண்டாம் நானே செய்யறேன்“ என்பாள் மீண்டும் கணவன் “இல்லை நீ வேணா போய்க் குழந்தையப் பார்த்துக்கோ, நான் இதைச்செய்யறேன்“ என்பான். மனைவி கையைக்கழுவிக்கொண்டு கூடத்துக்குச்செல்வாள்.அங்கு குழந்தை மலம் கழித்திருக்கும். கணவனை அருவருப்புடன் பார்த்தபடி குழந்தையை எடுக்கச்செல்வாள்,
இது அமெரிக்கா என்கிற வல்லரசில் பல ஆண்டுகள் முன்பு நடந்தைக்காட்டிய ஒரு திரைக்காட்சி. இன்னும் அப்படியேதான் அல்லது அதைக் காட்டிலும் கேவலமாகத்தான் இருக்கிறது பெண்களின் நிலைமை.
கல்லூரியில் அலுவலக நேரம் முடிந்தும் சில சமயம் கூட்டங்கள் நடக்கும். அப்போது பெண் பேராசிரியர்கள் அனைவருமே நிலைகொள்ளாமல்தான் இருப்போம், ஏனென்றால் மாலை குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்துவருவது. பால்காரரிடம் பால் வாங்குவது, வீட்டில் இருக்கும் பெரியவர்ளைக் கவனித்துக்கொள்வது, காலையில் ஊற வைத்த உளுந்து அரிசியை மாவாக்குவது, கூட்டிப்பெருக்கி, விளக்கேற்றி, என பல நூறு வேலைகள் எங்களுக்குக்காத்திருக்கும்.
ஆண்களோ எந்தக்கவலையுமின்றி மேலும் மேலும் தேவையற்றவைகளைப் பேசிக்கொண்டு காலம் தாழ்த்திக்கொண்டிருப்பார்கள் ஏனென்றால் எத்தனை தாமதமாகப்போனாலும் அவர்கள் உடைமாற்றிக்கொண்டதும் காபியோ தேநீரோ இரவுணவோ கொண்டு வந்துகொடுக்கப்படும் எனவே அவர்களுக்கு நேரம்குறித்த கவனம் இருப்பதே இல்லை.
மகன்கள் பள்ளியில் படிக்கையில் நானும் அப்படியான கூட்டங்களிலிருந்தோ, கல்லூரியின் கடைசி வகுப்பிலிருந்தோ அப்படியே கார் நிறுத்துமிடத்துக்கு பாய்ந்து செல்வேன். வகுப்பறைகளில் மின் விசிறி இருப்பதால் கைகள்,தலையெல்லாம் சாக்கட்டியின் தூள் படிந்திருக்கும் , அப்படியே பள்ளிக்குச்சென்று காத்திருக்கும் மகன்களை அழைத்துக்கொண்டு அவர்களின் அன்றைய நாளைக்குறித்துக் கேட்டுதெரிந்துகொண்டு வழியில் நிறுத்தி நிறுத்தி காய்கறியோ திண்பண்டங்களோ வேறுஏதாவதோ வாங்கிக்கொண்டு வீடு வருவேன்.
பெற்றோர் ஆசிரியக்கூட்டங்களுக்கு கல்லூரியில் விடுப்பெடுத்துக்கொண்டு போவது, ப்ராஜெக்ட்களுக்கு மெனக்கெடுவது, ஸ்போர்ட்ஸ்டே, ஆன்னுவல் டேக்களுக்கு தயார்ப்படுத்துவது, ஏதேனும் புகார்களென்றால் உடனே பள்ளிக்குப்போய் என்னவென்று கேட்டுச் சரிசெய்வது, பதின்மவயதில் மகன்களின் மனக்குழப்பத்துக்கு, பிரச்சனைகளுக்கெல்லாம் உடன்நிற்பது, வளரும் வயதுக்கு தேவையான உணவைச் சுவையாகச் சமைத்துக்கொடுப்பது, கூடவே கல்லூரிவேலை, சமையல், இல்பேணுதல், நல்லது கெட்டதுகளுக்குச் செல்வது விருந்தினர்களின் வருகையைச்சமாளிப்பது, என இப்போது நினைத்துப்பார்த்தால் மலைப்பாயிருகிறது. கூடவே மாதாந்திர விலக்குநாட்களின் சுமையும் இருக்கும்.
பள்ளியில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு, சன்மானம் தரவேண்டியதில்லை என்பதால் மாணவர்களின் பெற்றோர்களை(non financial contribution) பேசுவதற்கு அடிக்கடி அழைப்பார்கள். அப்படியும் பலமுறை சென்றிருக்கிறேன்.
ஆனால் பள்ளியின் விழாக்களுக்கு வீட்டுக்கு அழைப்பிதழ் வருகையில் பள்ளி அதுவரை பார்த்தே இருக்காத அப்பாவின் பெயரில் மட்டும்தான் அழைப்பிதழ் அனுப்பப்படும்.
இன்றும் இதே நிலைதான் தொடர்கிறது. முன்பு ஆண்கள் மட்டுமே சம்பாதித்துக்கொண்டிருந்த நாட்களில் உண்டி சுருங்குதல் பெண்டிருக்கும் ,உத்தியோகம் புருஷர்களுக்கும் லட்சணமாகச்சொல்லப்பட்டது. பெண்களும் வேலைக்குச்செல்லும் இப்போதும் அதுவே தொடருவது துயரளிக்கிறது என்றால், ஒட்டுண்ணிகளாகப் பெண்களை உறிஞ்சி சக்கையெனத் துப்பும் ஆண்களும் பெண்கள் தினத்துக்கு எந்த வெட்கமும் இல்லாமல் வாழ்த்துவது எரிச்சலூட்டுகிறது.
எனக்குத்தெரிந்த பல குடும்பங்களில் வாழ்வின் இயங்கியல் சார்ந்த பல நம்பிக்கைகள் தடைகள் சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்படுகின்றன, அன்னக்கை எனப்படும் சாதம் எடுக்கப் பயன்படுத்தப்படும் கரண்டியை நீர் நிரம்பிய ஒரு தட்டில் தான் வைக்கவேண்டும் அது ஒரு போதும் காய்ந்துவிடக்கூடது என்பதில் மிகக்கவனமாக இருக்கும் ஒரு குடும்பம் அவர்கள் வீட்டுப்பெண்களை குடும்பத்து ஆண்கள் பலர் முன்னிலையில் தாழ்வாகவும் இழிவாகவும் நடத்துவதை பொருட்டாகவே நினைப்பதில்லை. பெண்கள் அப்படித்தான் நடத்தப்படவேண்டும் என்று நம்புகிறார்கள் போல.
சமீபத்தில் ஒரு குடும்பத்தில் குலதெய்வ விழா எனக்கும் அழைப்பிருந்தது போயிருந்தேன். குலத்தின் ஆண்கள் 11 நாட்கள் கடும் விரதமிருந்து கைக்காப்புக் கட்டிக்கொண்டு எங்கோ தொலைவிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்திருந்தனர். தீர்த்தக்குடங்களை கோவில் வளாகத்தில் அடுக்கி வைக்கையில் ஒருகுடும்பத்துப்பெண் செய்த சிறு கவனக்குறைவிற்காக அவரது கணவர், அந்த விரதம் இருந்து விபூதிப்பட்டையும் குங்குமமும் காவிவேட்டியுமாக தெய்வீகமாக தோற்றமளித்தவர், ஒரு பச்சையான கெட்ட வார்த்தையைச்சொல்லித் திட்டினார். அவரது குலத்தைக் காப்பதாக அவர் நம்பும் அவர்களது குலதெய்வமும் ஒரு பெண்தான். அந்த அம்மன் சிலை முன்புதான் இது நடந்தது.
என் மாணவி ஒருத்தி எனக்குத்தெரிந்த ஒரு நிறுவனத்தில் வரவேற்பாளினியாக இருக்கிறாள். அவளையும் அவளது அம்மாவையும் அவளது குடிகாரத்தகப்பன் எப்போதும் சந்தேகப்பட்டு மிகக்கொடுமை செய்வான். சமீபத்தில் வேலைக்குப்புறப்பட்டுச்சென்ற அவளை முழுப்போதையில் துரத்தி வந்து பேருந்துக்குள் நுழைந்து தென்னைமட்டையால் அடித்திருக்கிறான். பெண்களை வெளி உலகின் ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றுவதைப்போலவே குடும்பவன்முறையிலிருந்தும் காப்பாற்ற வேண்டி இருக்கிறது.இங்கெதற்கு பெண்கள் தினம்?
நான் முன்பிருந்த வீட்டருகில் பெண்களுக்காக இயங்கிய பெண்களால் நடத்தப்படும் காவல்நிலையம் இருக்கிறது. அங்கு அப்போது உதவிக்காவலராக இருந்த, குடும்ப வன்முறை கேஸ்களை எளிதாக ஹேண்டில் செய்யும், எஸ்தர் என்பவரை ஒருநாள், அவரது வேலைவெட்டி இல்லாமல் காவலர் குடியிருப்பில் குடித்துவிட்டு அலப்பறை செய்வதை மட்டுமே செய்துவந்த கணவன் ஸ்டேஷனுக்குள் நுழைந்து அடித்து அவரது கையை முறித்தான்.
காவலர் குடியிருப்புக்கருகில் வசித்த நான், எஸ்தரின் வீட்டுக்கு முன்பாக மனைவியை அடிக்கப்போன ஒருவனை எஸ்தர் காதோடு சேர்த்து அறைந்து அவன் தலைகுப்புற மண்ணில் விழுந்ததை ஒருமுறை பார்த்தேன்.
எத்தனை உயர்ந்த சமூக அந்தஸ்துள்ள பணியில் இருந்தாலும், குடும்பத்தினரால் இழிவு படுத்தப்படுவதை எந்தப்புகாரும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளவும் பெண்கள் நூற்றாண்டுகளாகப் பழக்கப்படுத்தப் பட்டிருக்கின்றனர்.
எங்கள் குடும்பத்திலேயே காதலித்ததற்காகக் கழுத்தில் சுருக்கு வைத்து கொல்லப்,பட்ட பெண்கள் இருந்தார்கள். பாம்பு கடித்ததாகச்சொல்லப்பட்டு வாசலில் மஞ்சள் நீரூற்றி ஈரமாகக் கிடத்தப்பட்டிருந்த அருக்காணி அத்தையின் மகளின் கழுத்தைச்சுற்றிலும் சிவப்பாக இருந்த கயிற்றின் தடம் ஒரு ரோஜா மாலையால் மறைக்கப்பட்ட போது நானும் அருகிலிருந்தேன்.
காதலை முறித்து வலுக்கட்டாயமாக வேறொருவருக்கு மணம் செய்துவைக்கப்பட்ட, முன்காதலையும் மறக்கமுடியாமல் கணவனுடன் மனதொன்றியும் வாழமுடியாமல் இருதலைக்கொள்ளியாய் அவஸ்தைப்படும் நூறு நூறு பெண்கள் எனக்குத்தெரிந்து இருக்கிறார்கள்.
காதலைச்சொல்லகூடத் துணிவில்லாமல் கழுத்தை நீட்டிக், குடும்பமென்னும் கற்பிதங்களுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்த பல நூறு பெண்களையும் நானறிவேன்.
கூடி இருப்பதால்தான் அது குடி என்றும் அதில் இயங்குவதுதான் குடித்தனம் என்றும் வகுக்கப்பட்டது. அப்படிக் கூடக் கூடி இருப்பதன் பாதகங்களை, சிரமங்களை, குடும்பச்சுமையை தோளில் ஏற்றிக்கொள்வதைத் தவிர்ப்பதற்காக, உடலில் இளமையும் கண்களில் கனவுகளும் நிரம்பி இருக்கும் மனைவிகளைத் தனியே இல்பேணவும், குழந்தைகளை வளர்க்கவும், வீட்டுப்பெரியவர்களை பராமரிக்கவும் பணித்துவிட்டு, வெளிநாட்டிலும் வெளியூரிலும் பணம் சம்பாதிக்கப் பிரிந்துசென்று, அங்கேயே வாழ்ந்து, விடுமுறைக்கு விசிட்டிங் கணவர்களாக வந்துசெல்லும், மடியில் வந்து விழுந்த வாழ்வெனும் கனியை ருசிக்கத்தெரியாத முழுமுட்டாள் கணவர்களும் பல நூறுபேர் இருக்கிறார்கள்.
பேருந்து நிலையங்களில் இன்றும் இங்கெல்லாம் சாதரணமாகப் பார்க்கமுடியும் பேருந்தைவிட்டு வேட்டியை, லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டோ, பேண்ட் பாக்கட்டில் கைகளை விட்டுக்கொண்டோ இறங்கி, விரைந்து முன்னே நடந்துசெல்லும் கணவர்களையும், இரண்டு கைகளிலும் பைகளையும் குழந்தைகளும் பிடித்துக்கொண்டு கணவன் சென்ற திசையில் ஓட்டமாக ஓடும் பெண்களையும்.
அரிதாகவே குழந்தைகளைத் தோளில் எடுத்துக்கொள்ளும், மனைவியுடன் இணையாக நடந்துசெல்லும் ஆண்களைப் பார்க்கமுடியும்.
பத்தாம் வகுப்புப்படிக்கும் தன் மகள் காலையில் வைத்துக்கொண்ட கனகாம்பரச்சரம் வாடியிருந்த பின்னலை மாலை பள்ளி விட்டு வந்து இயல்பாக கொண்டைபோட்டுக்கொண்டதற்கு “விலைமகளே கொண்டையைப்பிரி“ என்று தெருவில் நின்று கூச்சலிட்ட ஒரு தகப்பனை நானறிவேன். விலைமகள்கள் கனகாம்பரம் வைத்துக்கொள்வார்களென்பது அந்த ஆணுக்குதெரிந்ததுபோல அந்தச் சிறுமிக்கு தெரிந்திருக்கவில்லை.
நானும் எனது சகோதரியும் அம்மாவும் எதாவது ஒரு முக்கிய முடிவு எடுக்கப்படும் நாட்களில் வீட்டுக்கூடத்துக்கு கூட வர அனுமதிக்கப்பட்டதில்லை. எல்லா முடிவுகளையும் வெறும் ஆணாக மட்டுமே இருந்த அப்பா என்பவர் தான் எடுத்தார், நிறைவேற்றினார். அதில் பெரும்பாலான முடிவுகள் மகா கேவலமானவை.
எனக்கும் அக்காவுக்கும் அப்போதைய பெருங்கனவென்பது எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது செத்துப் போகவேண்டுமென்பதுதான். இரண்டுக்குமே துணிவில்லை என்பதால் இன்றும் உயிரோடு இருக்கிறோம். ஒரு போதும் சொன்னதில்லை என்றாலும் 50 வருட மணவாழ்வில் ஒரு தென்னிந்தியப் பெண்ணுக்கு சாதாரணமாக இழைக்கபப்டும் அனைத்து அநீதிகளையும் தாங்கிக்கொண்டு 82 வது வயதில் செத்துப்போன என் அம்மாவுக்கும் அதுதான் கனவாக இருந்திருக்கும்.
சிண்டெரெல்லா ஒருபோதும் ஒரு இளவரசனுக்காக காத்துக்கொண்டிருக்கவில்லை அவளுக்கு நல்ல உடை அணிந்துகொண்டு ஏதேனும் ஒரு நிகழ்வுக்கு வெளியே செல்லவேண்டுமென்பதுதான் கனவாக இருந்தது.இளவரசன் தான் ஒரு மணப்பெண்ணுக்காகக் காத்துக்கொண்டிருந்தான்.
நான் பதின்மவயதில் எப்படி இருந்தேனென்று எனக்குத்தெரியவே தெரியாது ஒரே ஒரு புகைப்படம் கூட எடுக்கப்பட்டதில்லை, எடுக்க அனுமதிக்கப்பட்டதும் இல்லை. இன்று அதற்குப் பிழையீடாகத்தான் ஆயிரமாயிரம் புகைப்படங்கள் அன்றாடம் எடுத்துக்கொள்கிறேன்.
சமூக ஊடகங்களிலும் பெண்கள் தொடர்ந்து இழிவுபடுத்தப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறார்கள்.
சிம்பு முன்பு ஏதோ ஒரு பாடலில் பெண்ணை இழிவு படுத்தும் ஒரு சொல்லை பீப் ஒலியால் மறைத்ததற்கு பெண்கள் அமைப்புக்கள் கொடி பிடித்து போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அந்த அமைப்புகள் ஒருபோதும் “புல்வெளியாகிறேன் இப்பொழுது என்னை ஆடுதான் மேய்வது எப்பொழுது“ போன்ற வெளிப்படையான ஆயிரமாயிரம் பாடல்வரிகளுக்கெல்லம் ஏன் எதிர்ப்புத்தெரிவிக்கவில்லை?
இப்போது ஒரு அரசியல் நகைச்சுவையாளர், விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சம் என்று பெயர் வைப்பதுபோல சற்றும் பொருத்தமில்லாத பெயரை வைத்துக்கொண்டிருக்கும் அவர், தனது முன்காதலியை விலைமகள் என்று சமூக ஊடகங்களில் பேட்டிகொடுக்கையில் அதைப் பெண்கள் ஆண்கள் என யாரும் எதிர்க்காதது மட்டுமல்ல, அவருக்குப் பின்னே கும்பலாக நின்று கேலியாகச்சிரிக்கும் கூட்டத்தினரும் அதிர்ச்சி அளிக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் வீட்டில் அன்னை மனைவி மகள் சகோதரிகள் இருக்கிறார்கள் என்பது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது.
உண்மையில் ஆண்கள் மகிழ்ந்துகொள்ள வேண்டும் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் இழிவு படுத்தப்பட்டும் பழிவாங்கப் புறப்படாமல் பெண்கள் சமஉரிமை மட்டும்தான் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு.
கல்லுரியில் இன்று படிகளில் ஏறி என் அறைக்கு வருகையில் எனக்கெதிரே கிளர்ந்தொளிரும் இளமையுடன் ரோஜ நிற ஈறுகள் தெரியச் சிரித்தபடி என்னைக்க்டக்கும் மாணவிகளைப் பார்க்கையில் கலக்கமாக இருக்கிறது இவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்னும் பதைப்பு எனக்குள் நிரந்தரமாக இருக்கிறது.
இதோ எனக்கு அடுத்த வகுப்பு stress physiology, ரெஃபெர் செய்ய ஒரு புத்தகத்தை எடுத்தேன். Biological clock என்பதற்கு உதாரணமாக //sleeping and awakening in man are caused by biological clock// என்றிருக்கிறது. ஏன் அது human என்று குறிப்பிடப்படவில்லை?
1863-ல் வெளியான தாமஸ் ஹென்றியின் Evidence as to Man’s Place in Nature. என்னும் நூலில் “March of Progress” என்னும் பிரபலமான தலைப்பில் வெளியான பரிணாம வளர்ச்சியில் குரங்கிலிருந்து மனிதகுலம் உருவானதைச் சித்தரிக்கும் படத்திலும் குரங்கிலிருந்து ஒரு ஆண் தான் உருவாகிறான் பெண்ணல்ல. 2025-லும் அறிவியல் புத்தகத்தில் ஆண் தான் இருக்கிறான்.
பெண்கள் இல்லவே இல்லையா இந்த உலகில்?பிறகென்ன பெண்கள் தினமும் கொண்டாட்டமும்? shame!