நான் வாட்ஸாப்பில் அதிகம் தொடர்பிலிருப்பவள். குறிப்பாகத் தாவரவியல் தகவல்கள், தாவரங்களின் புகைப்படங்கள், ஜெயமோகன் அவர்களின் கருத்துகள் ஆகியவற்றை அதிகம் பகிர்வதுண்டு.அதிகாலை எழுந்ததும் முக்கியமான சிலருக்கு மட்டும் காலை வணக்கம் சொல்வது வழக்கம். எனக்கு வணக்கம் சொல்பவர்களுக்குப் பதில் சொல்லிவிடுவேன்.

மிக அழகிய தாவரங்கள், மலர்கள் அல்லது கனிகளுடன் தான் என் வாழ்த்துகள் இருக்கும். மிக அழகிய தகவல்கள் புகைப்படங்கள் அனுப்புபவர்களுக்கு பதிலுக்கு அழகிய இமோஜிக்களையும் அனுப்புவேன், அதிகம் பல நிறங்களில் இதய வடிவை பாராட்டாகவோ அன்பைத்தெரிவிப்பதற்கோ அல்லது மகிழ்ச்சி என்பதை உணர்த்தவோ அனுப்புவதும் உண்டு. பச்சை இதயம் அடிக்கடி என்னிடமிருந்து அனுப்பப்படும்.

வாட்ஸாப் புழங்கும் அளவுக்கு வந்திருப்பவர்களுக்கு இமோஜிக்களின் குறியீட்டு அர்த்தம் நாட்டு நடப்பு ஆகியவை ஓரளவுக்கேனும் தெரிந்திருக்கும் என்னும் ஒரு அடிப்படையான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.(இருந்தது)

தினமும் காலை வணக்கம் சொல்லும் ஒருவரில் ஒரு ஓய்வுபெற்ற பல்கலைக்கழகப் பெரியவரும் இருந்தார். அவரை நான் சந்தித்ததே இல்லை. அவருக்கு நடந்த ஒரு பாராட்டுவிழாவின் போது அவருக்கும் எனக்கும் பொதுவான ஒரு தோழி, நான் மிகவும் மதிப்பும் அன்பும் கொண்டிருப்பவர், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கச்சொல்லி அவரது தொடர்பு எண்ணை அனுப்பினார். வாழ்த்தினேன் அதன் பிறகு அவர் எனக்கு தினசரி காலை வணக்கம் அனுப்புவதும் நான் பதில் அனுப்புவதும் வழக்கமானது. ஒரு வருடத்க்கும் மேலாகிவிட்டிருக்கும் என்று நினைக்கிறேன். பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய போலி மலர்களின் படங்களை அனுப்புவார்.

கடந்த வாரம் அழகிய நிஜ மலர்களின் புகைப்படமொன்றை அனுப்பி இருந்தார். நான் பதிலுக்கு வணக்கமும் புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த மலர்களின் நிறங்களில் இரண்டு இதயவடிவங்களையும் அனுப்பியிருந்தேன்.

இதய வடிவங்களின் குறியீட்டு அர்த்தம் அவருக்கு முற்றிலும் வேறு போலிருக்கிறது. நான் அனுப்பிய இதய வடிவங்களின் தகவலை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து யாருக்கோ புளகாங்கிதமாக லோகமாதேவி இதை எனக்கு அனுப்பி இருந்தார் என்னும் செய்தியை அனுப்ப நினைத்து, அவர் கெட்ட நேரம் அதை யாருக்கோவும் கூடவே எனக்கும் அனுப்பி விட்டார்.

அதிகம் ஒன்றும் நான் திடுக்கிடவில்லை எனினும் ஆண்களின் இந்த தன்னம்பிக்கை இருக்கிறதே அதை எண்ணி வியந்தேன். சங்ககாலப்பாடல்களில் வருமே அரசன் என்னும் ஆண் மகன் வழியில் வரக்கண்டு பேதை பெதும்பை பேரிளம் பெண்கள் என எல்லா வயதுப்பெண்களும் அவன் மீது மையல், காதல், காமம் இன்னபிறவெல்லாம் கொண்டு மேகலை நழுவி வளையல் கழன்று இம்சைப்படுவார்களல்லவா, அப்படி பெண்கள் யாராக இருந்தாலும் ஆண் என்னும் ஒரு தகுதி உடையவர்களை விரும்புவார்கள் ஏதேனும் வாய்ப்புக்கிடைத்தால் அவர்மீதுள்ள மையலை, தாங்கள் கோட்டைத் தாண்டிவரவிருக்கும் செய்தியை எப்படியாவது தெரிவிப்பார்கள் என்று நம்புகிறார்கள் அல்லவா அந்த திண்ணக்கம் தான் ஆச்சர்யப்படுத்துகிறது.

லோகமாதேவிக்கு அப்படி யாரையேனும் பிடிக்க வேண்டுமென்றால் ஆண் என்னும் ஒரு தகுதி மட்டும் போதாது என்பதுவும் அவருக்குத் தெரியவில்லை பாவம்

இந்த வகை ஆண்கள் எல்லம் தாங்கள் அமர்ந்திருக்கும் ஆணாதிக்க குதிரை, அகம்பாவக் குதிரையிலிருந்து முதலில் இறங்கி, பின்னர் அதை அவர்கள் ஓட்டிக்கொண்டிருக்கும் குண்டுச்சட்டிக்குள்ளிருந்து வெளியேறினால் மீட்புண்டு.

அந்தப் பெரியவருக்குக் கோபித்துக்கொள்ளாமல் இதயவடிவத்தை நான் அனுப்பும் பொருள் என்ன என்பதை விளக்கிவிட்டு அவரது எண்ணை தடைசெய்தேன்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ,அப்பா!