கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாகவே சமூக ஊடகங்கள் அனைத்தும் NEET மற்றும் JEE நுழைவுத்தேர்வுகள் குறித்தே பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கின்றன. பெற்றோர்களில் 99 சதவீதத்தினரும் இவை இரண்டைத்தவிர உலகில் தங்கள் குழந்தைகள் கற்றுக் கொள்ளவும் பொருளியல் ரீதியாக வெற்றியடையவும் வேறு வழியே இல்லை என்று மூர்க்கமாக நம்புகிறார்கள்.
இனி அப்படி முழுக்க முழுக்க பொறியியலாளர்களும் கணினி மேதைகளும் மருத்துவர்களும் மட்டுமே நிறைந்திருக்கும் பொன்னுலகு ஒன்று வரப்போகிறதா என்ன? நிச்சயமாக இல்லை . எல்லா விதத்திலும் உலகின் சமநிலையைக் குறைக்க நம்மால் ஆனதை செய்துகொண்டே இருக்கிறோம்.
வானொலிகளில் அனைத்து எஃப் எம் சேனல்களிலும் பள்ளிக்கூடங்கள் குறித்த விளம்பரங்களில் JEE NEET க்கான சிறப்புப்பயிற்ச்சி அளிக்கும் பள்ளிகள், 8-ம் வகுப்பிலிருந்தே IIT க்கு தயாராக்கும் பள்ளிகள், போதாக்குறைக்கு ஆண்கள் பெண்களுக்கு தனித்தனி வளாகமும் விடுதிகளும் இருக்கும் பள்ளிகளை விளம்பரப்படுதுகிறார்கள்.
அந்தப்பள்ளிகளை விரும்பித்தேர்ந்தெடுக்கும் முட்டாள் பெற்றோர்களும் ஏராளமாக இருக்கிறார்கள். எதிர்பாலினத்தவரைக் குறித்த அறிதலே இல்லாமல் பிள்ளைகள் வளர்வது அவர்களின் எதிர்காலத்தை எப்படி பாதிக்கும் என்ற சிறு அறிதல் கூட இல்லாத அவர்களை நினைத்து கவலைப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. தென்தமிழகத்தின் பிரபல பள்ளி ஒன்றில்படித்த என் நண்பரின் மகன் மாணவிகளின் தனித்த வளாகத்தில் அவர்கள் மைதானத்தில் விளையாடுவதை திரும்பிப்பார்த்ததற்காக மணிக்கணக்காக வெயிலில் முட்டி போடவைக்கப்பட்டான்.
பள்ளிகளைச்சொல்வானேன் நான் பணிபுரியும் கல்லூரி உட்பட பல கல்லூரிகளுக்கு benchmark institute என்று சொல்லபடும் ஒரு கல்லூரிக்கு அவர்களிடமிருந்து ஏதேனும் கற்றுக்கொள்ள அனுப்பப்பட்ட பேராசிரியர்களில் நானும் இருந்தேன். அந்தக்கலூரியில் ஆண்கள் பெண்கள் இருவருக்கும் அங்கு தனித்தனி மாடிப்படிகள் இருந்தன ஒருபோதும் அவர்கள் வகுப்பிலோ வளாகத்திலோ ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது இல்லையாம் பெருமையாக அதன் தாளாளரும் முதல்வரும் சொல்லிக்கொண்டார்கள்.
மற்றொரு கல்லூரியில் வளாகத்தில் நின்று ஒரு மாணவனிடம் பேசிக்கொண்டிருந்ததால் அவர்களின் அடையாள அட்டையை வாங்கிக்கொண்டு, மறுநாள் பெற்றொர்களை அழைத்துவரச்சொன்னதால் பயந்து போன அந்த 20 வயதுகூட நிரம்பி இருக்காத மாணவி தற்கொலை செய்துகொண்டாள். வீட்டிலும் குழந்தைகளுக்கு அரவணைப்போ அன்போ கிடைப்பதில்லை, படி படி படி படி, உனக்காக கடன் வாங்கி இருக்கிறேன் உனக்காக கடுமையாக உழைக்கிறேன் என்பதைத்தான் திரும்பத்திரும்ப கேட்கிறார்கள் பதினமவயதின் குழப்பங்களுக்கு தீர்வு சொல்லவோ இனம்புரியாத அச்சங்களை, முதிரா வாய்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பகிர்ந்துகொள்ளவோ காதுகொடுக்கவோ யாரும் இல்லாத லட்சக்கணக்கான வீடுகளில்தான் நமது அடுத்த தலைமுறையினர் வளர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் ஜெ தனக்கு வந்த ஒரு கடிதத்தைப் பற்றி அவரது தளத்தில் எழுதி இருந்தார். வயதான காலத்தில் தங்களை வந்து பார்க்காமல் வெளிநாட்டிலேயே இருக்கும் தங்களின் மகனைப்பற்றிக் குற்றம் சொல்லிய பெற்றொர்களின் தரப்பும், படிப்பதை தவிர வேறொன்றுக்கும் இடமில்லாத தன் இளமைக்காலத்தின் கசப்பான நினைவுகளால் பெற்றோர்களை தவிர்க்கும் மகனின் தரப்பும் விரிவாக சொல்லப்பட்டிருந்த கட்டுரை அது. அப்படித்தான் அப்படியேதான் நடக்கும்.
இப்போது மகன்களையும் மகள்களையும் தாங்கள் விரும்பும் துறையில் சேர்ப்பதற்காக, அடுத்தவீட்டினரின், சுற்றத்தாரின் பொறாமையை சம்பாதித்துக்கொள்ள, அதுதான் கெளரவம் என்று அசட்டுத்தனமாக நம்பிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் அனைவருக்கும் இதுமட்டும்தான் நடக்கும்.
அதிகாலை 6 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு மாலை 8 மணிக்கு வீடு வந்து மீண்டும் படித்து எழுதி மனப்பாடம் செய்து நள்ளிரவு உறங்கப் போகும் குழந்தைகளை எனக்கு ஏராளமாகத் தெரியும். விடுதிகளில் சேர்ககப்ட்டிருப்பவர்களின் நிலைமை இதைக்காட்டிலும் மோசம் அதிகாலை எழுந்து குளித்து இரவு வரை ஒரே கேள்வியை 100 முறை எழுதி எழுதி மூளை மழுங்கடிக்கபப்ட்டு சிந்திக்கும் திறனை முற்றிலும் இழந்து, ஆனால் நல்ல மதிப்பெண் மட்டும் வாங்கி விடும் இவர்கள் எதிர்காலத்தில் இளமைக்கால ட்ராமாவால எத்தனை பாடுபடப்போகிறார்களோ எனபதைக்குறிது யாருக்காவது அக்கறை இருக்கிறதா?
தினமும் வீட்டில் அதிகாலையிலிருந்தே வானொலி கேட்பேன். அதில் தொடர்ந்து 7 மணி வரை பேசும் ஒரு நபரை பல்லாயிரக்கணக்கானோர் பின்தொடர்கிறார்கள். அவர் தினமும் அதிகாலை பிரார்தனைக்கென்று ஒரு நேரம் ஒதுக்குவார்.அந்நேரத்தில் அவருக்கு வரும் கடிதங்களில் சிலவற்றைச்சொல்லிக்கூட்டுப்பிரார்த்தனைச் செய்யச்சொல்லுவார். கடந்த சில மாதங்களாகவே பிரார்த்தனையில் பனிரெண்டாம் வகுப்பு பரீட்சைக்கும் JEE NEET எழுதவிருக்கும் தங்களின் குழந்தைகளின்வெற்றிக்குமாகத்தான் பிரார்த்திக்கசொல்லி கடிதங்கள் வந்தவண்ணம் இருக்கின்றது.
அந்த நபரும் பேச்சோடு பேச்சாக தன்மகனையும் அதே நுழைவுத்தேர்வுக்கு அழைத்துச் சென்றதாக இரண்டுநாட்கள் முன்பு சொல்கிறார். கேட்பவர்களுக்கு உலகம் ஓடும் பாதையில் தான் நாமும் ஓடவேண்டும் என்று தோன்றாதா? கேரளாவில் சொல்வார்கள் நாடோடும் போழ் நாம் நடுவில் ஓடனும் என்று. இப்படிச் செய்யலாமா கல்வி வெற்றிமட்டும்தான் வெற்றியா? சகதாபம் என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா ? அவர்களுக்கு வாழ்வில் அறம் வழித்துணையாக வேண்டாமா? குழந்தைகள் பல துறைகளையும் கற்றுக்கொள்ளவேண்டாமா? என்ன மாயை இது?
அத்தனைபேரும் இதையே படிக்க வேண்டும் என்றால் மற்ற துறையெல்லாம் என்னவாவது? அந்தத் துறைகளில் நடக்கவேண்டிய ஆய்வுகளெல்லாம் ? அந்த ஆய்வுகளினால் சமூகத்துக்கு கிடைக்கவேண்டிய பலன்கள் எல்லாம்?
முன்பெல்லாம் பொறியியல் கல்லூரிகள் காளான்களைப்போல முளைத்தவண்னம் இருந்ததென்றால் இப்பதெல்லாம் புற்றீசல் போல அவை பெருகிக்கொண்டிருக்கின்றன. மிக வெளிப்படையாக கொள்ளை அடிக்கிறார்கள் என்றாலும் தங்களின் பொருளாதார தாங்கும் சக்தியைமீறி, தோட்டத்தை விற்று கடன்வாங்கி நகைகளை விற்றுக்கூட பிள்ளைகளை பொறியியல் படிக்க வைக்கும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
அத்தகைய பெற்றோர்களின் பேராசையும் அடிமுட்டாள் தனமும்தான் இப்படியான சுயநிதிக்கல்லூரிகளைப் பெருக வைக்கிறது. ஒரு செமஸ்டருக்கு 5 லட்சம் என 8 செமெஸ்டர்களுகு கல்விக்கட்டணம் செலுத்தி பொறியியல் படித்தபின்னர் மாதம் 10 ஆயிரம் ரூபாய்க்கு வேலைசெய்யும் பலரையும், அந்த வேலைகூட கிடைக்காமல் இருக்கும் மேலும் பலரையும் நாமெல்லோருமே அறிவோம்.
கலை அறிவியல் கல்லூரியில் மிகக்குறைந்த கல்விக்கட்டணம் செலுத்தி தாவரவியல் படித்துவிட்டு காபிவாரியம் ஏலக்காய் வாரியம் தேயிலை வாரியம் கரும்பு ஆராய்ச்சி பருத்தி ஆராய்ச்சி என பல மத்திய அரசு வேலைகளில் இளமையிலேயே இணைந்து கம்பீரமாக வேலைசெய்பவர்கள். விஞ்ஞானிகள் பேராசிரியர்கள் சுயமாக தொழில் செய்பவர்கள் நஞ்சில்லா விவசாயம் செய்பவர்கள் பயிர்நோயியலாளர்கள் எல்லாம் ஏன் வெளியுலகத்துக்கு தெரிவதேயில்லை?.
கடந்த ஆண்டுகளில் டெங்கி காய்ச்சல் வந்தபோது, கொரோனா பெருந்தொற்று வந்தபோது நாம் தேடிச்சென்ற பப்பாளி மரங்களும் நிலவேம்புச்செடிகளும் அதன்பின்னர் ஏன் மதிப்பிழந்தன ? அவற்றால் உயிர் பிழைத்த எத்தனை பேர் தாவரவியல் படிப்பு முக்கியம் என்று உணர்ந்தார்கள்? ஆனால் ஆன்லைன் வகுப்பில் கணினிப்பயன்பாட்டைப் பார்த்த பட்டிதொட்டிகளில் இருக்கும் பெற்றோர்கள் எல்லாம் கணினிதான் இனி எதிர்காலம் என்று முடிவுக்கு வந்து அந்தப்படிப்பில் பிள்ளைகளைச்சேர்த்தார்களே அது எப்படி?
எத்தனை ஆண்டுகளாக டிஜிடாலிஸ் செடி இதயநோயாளிகளுக்கு மருந்தளித்து அவர்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது? எத்தனை எத்தனை ஆண்டுகளாக கசகசா செடியிலிருந்து எடுக்கப்படும் மார்ஃபின் உச்சகட்ட வலிநிவரணியாக இருந்து வருகிறது ? எத்தனை புற்றுநோயாளிகளுக்கு நித்யகல்யாணிச்செடியிலிருந்து எடுக்கப்படும் நூற்றுக்கணக்கான வின்கா ஆல்கலாய்டுகள் சிகிச்சையளித்துக் கொண்டிருக்கின்றன?
இப்படி அட்ரோபின் நிகோடின் ஆஸ்பிரின் கொகெய்ன் என்று தாவரங்களிலிருந்து கிடைக்கும் மருந்துகளையெல்லாம் பயன்படுத்திக்கொண்டிருகும் நாம், நமது அடுத்த தலைமுறையினருக்கும் இவை தேவைப்படுகையில் இந்தத் தாவரங்களை அடையாளம் காணும் தாவரவியலாளர்கள் வேண்டும் என ஏன் நினைப்பதில்லை? பைட்டோகெமிஸ்ட்ரி துறைசார்ந்தவர்களே இந்தத்தாவரங்களில் இருந்து வேதிப்பொருட்களை பிரித்தெடுக்க முடியும் பொறியியலாளர்களும் மருத்துவர்களும் அல்ல. அந்தப்படிப்பை கற்றுக்கொள்ள யாருமே முன்வருவதில்லையே?
மேட்டுப்பாளையத்தின் பிரபல உறைவிடப்பள்ளியில் படிக்கும் உறவினரின் மகனை அழைத்துச்செல்ல ஒரு விடுமுறையின் போது நானும் அவர்களின் குடும்பத்துடன் சென்றிருந்தேன். அந்தப்பள்ளியில் உயிரியல் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்கள் 13 பேர் மட்டும்தான், அவர்கள் அனைவருமே மருத்துவம் படிக்கும் உத்தேசத்துடன் தான் இருக்கிறார்கள்.
அந்தப் பள்ளியில் வளாகம் எங்கிலும் பல மரங்களுக்கு தவறான அறிவியல் பெயர்கள் எழுதப்பட்ட பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. அதை நான் புகைப்படத்துடன் என் கல்லூரி முகவரியிலிருந்து, தாவரவியல் துறைத் தலைவர் என்று குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டி கடிதம் எழுதியும் இப்போது வரை அவை திருத்தப்படவில்லை. ஏன் தாவரவியல் இத்தனை தாழ்வானதாக நினைக்கப் படுகிறது?
கூட்டுப்பிரார்த்தனை செய்தாவது மகனும் மகளும் மருத்துவராக வேண்டும் என நினைப்பவர்கள் அனைவரும் ஏன் தாவரவியல் என்று ஒரு துறை இருப்பதைக்கூட அறியாமல் இருக்கிறார்கள்?
மருத்துவர்களும் பொறியாளர்களும் வியாபாரிகளும் உயிருடன் இருக்க தாவர உணவைத்தானே சாப்பிட வேண்டி இருக்கிறது , எங்கே ஒரே ஒரு உணவைச்சொல்லுங்களேன் பார்ப்போம் தாவரங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்படாமல்?
சுனிதாவில்லியம்ஸ் வெண்வெளிக்குச் செல்லும் போதும் சமோசா தானே எடுத்துச்சென்றார்?
ஏன் தக்காளி கிலோ 8 ரூபாய்க்கும் ப்ரோக்கலி ஒன்று 125 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது? தேவைக்கு அதிகமான உற்பத்தியினால்தானே?
எத்தனை பொறியாளர்களுக்கு வேலை கொடுக்கும் நிறுவனங்கள் இருக்கிறது இப்போது? எல்லா மருத்துவர்களும் குறைந்த பட்சம் 12 ஆண்டுகளாவது கடும் உழைப்பைச் செலுத்தினால் மட்டுமே தனியே சிகிச்சையளிக்கும் கட்டத்துக்கு வரமுடியும், அதில் அத்தனை பேர் வெற்றிகரமான மருத்துவர்களாகிறார்கள்? உலகியல் வெற்றி அடைகிறார்கள். வெகுசிலர்தான் இல்லையா?
எத்தனைபேருக்கு சொந்தமாக மருத்துவமனை இருக்கிறது படித்து முடித்து அங்கேயே பணிபுரிய?
மூன்று தளங்கள் கொண்ட மாபெரும் மருத்துவமனையை வைத்திருக்கும் எங்கள் குடும்ப மருத்துவரின் மகள்கள் இருவரும் மருத்துவம் படிக்காமல் வேறு துறைகள் தான் படிக்கிறார்கள், என் மகன்களில் ஒருவன் சைபர் பாதுகாப்பும் மற்றொருவன் காட்டியலும் படிக்கிறார்கள்.
கலைஅறிவியல் கல்லூரிகளிலும் கணினி அறிவியலும் வணிகவியலும்தான் படிக்க விரும்புகிறார்கள். பிற அடிப்படை அறிவியல் துறைகள் அனைத்திலும் மாணவர்களே இல்லை
நான் பணிபுரியும் கல்லூரியில் இன்னும் 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரவில்லை ஆனாலும் கணினி அறிவியல் துறை மற்றும் வணிகவியல் துறைகளில் இடங்கள் பெரும்பாலும் நிரம்பி விட்டன. அறிவியல் துறைகளில் மொத்தமாகவே 10 விண்ணப்பங்கள் கூட வாங்கப்படவில்லை. எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் நாம்? எதை நோக்கி நம் சமூகம் போய்க்கொண்டிருக்கிறது?
இன்று காலை எனக்கு குப்பைமேனிச்செடியின் புகைப்படம் அனுப்பி இது என்ன செடி என ஒருவர் கேட்டிருந்தார். அவருக்கு இரு மகள்கள் இருவரும் மருத்துவத்தில் முதுகலை படிக்கிறார்கள் அவரும் கணினி அறிவியல் பேராசிரியர். நம் சுற்றுப்புறங்களில் இருக்கும் முக்கியமான மூலிகைகள் பற்றிக்கூட அறிதல் இல்லாத இப்படியான் குடும்பங்கள் ஆயிரமாயிரம் இருக்கின்றன.
குப்பைமேனிக்கு போவானேன்? செம்பருத்திச்செடியே அடையாளம் தெரியாமல் என்வீட்டிலிருந்து அலமண்டா மலர்களைப் பறித்து தலைக்கு தேய்க்கும் எண்ணெய் காய்ச்சி எடுத்தாள் பின்வீட்டுக்கார 30 வயதைத்தாண்டிய பெண்ணொருத்தி. இனி வரப்போகும் காலத்தில் என்ன என்ன நடக்கவிருக்கிறது?
பலவீடுகளில் அலங்காரச் செடியாக வளர்க்கப்படும் கவிழ்ந்து தொங்கும் ஊமத்தைகளைப்போன்ற மலர்களைக் கொண்டிருக்கும் ஏஞ்சல் ட்ரம்பெட் செடி கடும் நஞ்சுகொண்டது அதைத்தொட்ட கைகளால் கண்ணைத்துடைத்தால் கூட பார்வையிழப்பு உண்டாகும்.
சுற்றுப்புறமெங்கும் வளரும் குன்றிமணிக்கொடியின் கருப்பும் சிவப்புமான விதைகளில் இருக்கும் நஞ்சான ஏப்ரினுக்கு இன்னும் முறிமருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, அதைக்கடித்தால் உடனடியாக மரணம் உண்டாகும். ஆமணக்குச்செடியின் கனிகளில் இருக்கும் ரிசின் என்னும் புரதநஞ்சும் மிகக்கடுமையான உயிரைப்போக்கும் வீரியம்கொண்டது என்பதையெல்லாம் இனி கற்றுக்கொடுக்க தாவரவியலாளர்கள் வேண்டாமா?
நீர்நிலைகளிருந்து நிலம் காற்று என அனைத்தும் மாசுபட்டு இருக்கையில் அவற்றைச் சரிசெய்ய சூழியலாளர்கள் வேண்டாமா? பால் 40 ரூபாய்க்கும், குடிநீர் அதில் பாதி 20 ரூபாய்க்கும் வாங்க்கிக்கொண்டிருக்கும் நாம் ஏன் இதை யோசிப்பதில்லை.பேரூர் நதியில் நீத்தார் கடன் செலுத்த வருபவர்களுக்கு ஆற்றில் நீர் இல்லாததால் பாட்டிலில் நீர் விற்கப்படுகிறது. இந்த அவலத்துக்குப்பிறகும் நாம் இயற்கையைக் குறித்துச் சிந்திப்பதில்லை
இனியொரு பெருந்தொற்று வந்தால் அதற்கு மருந்தளிக்க தாவரங்களும் அந்தத் தாவரத்திலிருந்து சிகிச்சையளிக்கத் தாவரவியலாளர்களும் வேண்டவே வேண்டாமா?
எனக்குத் தெரிந்து ஒரு பேராசிரியர் தென்னந்தோப்பில் 4 ஏக்கரை விற்று மகனை ஒரு செமஸ்டருக்கு 8 லட்சம் கட்டி ( 8 செமஸ்டர்களுக்கு) பொறியியல் படிக்க வைத்து அவன் கல்லூரியிலேயே ப்ளேஸ்மெண்டில் வேலைகிடைத்து சென்னையில் வீடுபார்த்து நண்பர்களுடன் தங்கி சமைத்துச் சாப்பிட்டு வேலைக்குபோய் மாதம் 50 ஆயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறான். கணக்குப் போட்டுப் பார்த்தால் என்ன ஒரு முட்டாள்தனமென்று புரியும். ஆனால் அவர் பெருமையாக மகன் சென்னையில் வேலை செய்துகொண்டிருக்கிறான் என்கிறார்.
பஞ்சாபில் மால்வா பிரதேசத்தில் பரிந்துரைக்கப்பட்ட அளவைக்காட்டிலும் 40 மடங்கு அதிக பூச்சிக்கொல்லிகள் உபயோகிப்பதால் வீட்டுக்கு ஒரு புற்றுநோயாளி இருக்கிறார்கள் எனவே தினமும் சண்டிகருக்கு(cancer train) புற்றுநோய் ரயிலொன்று மருத்துவமனைகளுக்கென்றெ பல பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.அதில் நோயாளிகளுக்கு இலவசமாகவும் உடன் வருபவர்களுக்கு சலுகைவிலையிலும் கட்டணம் வாங்கப்படுகிறது
இனிமேல் பயிர்களுக்கு வரும் நோய்களுக்கு எத்தனை மருந்து எப்படி எப்போது அடிக்க வேண்டுமென யார் கற்றுக் கொடுக்க போகிறார்கள்? வீட்டுத்தோட்டம் பற்றி எப்படி தெரிந்துகொள்வார்கள்? சோயாப் பயிருக்கு அடிக்கும் கிளைபோசேட் மருந்தின் நஞ்சு சோயாவின் எல்லா உணவு ப்பொருட்களிலும் இருக்கிறது அதை அதிகம் சாப்பிடக்கூடது, சோயா கழிவுகளை கோழித்தீவனமாகக் கொடுப்பதால் கோழி இறைச்சியிலும் முட்டையிலும் அந்த நஞ்சு இருக்கிறது என்பதெல்லாம் யார் சொல்லிக்கொடுப்பர்கள் எப்படி தெரிந்து கொள்வது ?
கவலையாக இருக்கிறது எதிர்காலத்தை நினைத்தால். ஏன் இந்த மோகம்? ஏன் இப்படி இந்த ஆசை பிசாசாக எல்லோரையும் ஆட்டுவிக்கிறது? இதில் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொள்ளும் குழந்தைகள் வேறு இருக்கிறார்கள், அவர்கள் பயந்துகொள்வது தேர்வுத்தோல்வி குறித்தல்ல, ஒருவேளை தோல்வி அடைந்தால் எதிர்கொள்ளப்போகும் பேராசைக்கார பெற்றொர்களை நினைத்தே உயிரை மாய்த்துகொள்கிறார்கள். லட்சக்கணக்கான பெற்றோர்களுக்கு கவுன்சலிங் தேவைப்படுகிறது இப்போது.
பள்ளிக்குழந்தைகளின் அடிப்படைக் கல்வியில் A for apple சரிதான் ஆனால் N for neen, T for turmeric என்று சொல்லி கொடுக்க முடியாத நாம் எப்படி அமெரிக்கா நம் இயல் மரமான வேம்பிற்கு காப்புரிமை வாங்கியதற்காக நீதிமன்றத்தை நாடலாம்? நம் இயல் தாவரங்களை குழந்தைகளுக்கு இளமையிலேயே கற்றுக்கொடுக்க வேண்டாமா இதில் என்ன கஷ்டம் இருக்கிறது?
இந்தப்பரிந்துரையை எல்லாம் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர்களிடம் தெரிவிக்க இயலாத எளிய ஆசிரியை நான். அரசியல் செல்வாக்கும் அவரவர் குழந்தைகளின் எதிர்கால நன்மையைக் குறித்து அக்கறையும் கொண்டவர்கள் யாரேனும் முயற்சி செய்யலாம்.
தமிழகமெங்கும் அயல் ஆக்கிரமிப்புத்தாவரங்கள் அழகுத்தாவரங்களாக அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. இயல் தாவ்ரஙக்ளுக்கான வாழிடங்களை இழந்துகொண்டே இருக்கிறோம். பெரிய ஆபத்தை எதிர்நோக்கி இருக்கிறோம். எது அயல் தாவரம் அது இயல் தாவரம் என்று யார் கற்றுக்கொடுப்பார்கள்? அந்த தாவரத்தின் கெடுதல் என்ன என்பதை எப்படித் தெரிந்துகொள்வீர்கள்?
நம்மைச் சுற்றி இத்தனை தாவரவியல் சார்ந்த பயன்பாடுகளும் தேவைகளும் இருக்கையில் ஏன் பொறியாளர்களையும் மருத்துவர்களையுமே நாம் உருவாக்க வேண்டும்? யோசித்துப்பாருங்கள்.
If all flowers wanted to be roses, nature would lose her springtime beauty and the fields would no longer be decked out with wild flowers!