லோகமாதேவியின் பதிவுகள்

Category: அனுபவம் (Page 2 of 11)

மும்பை!

பிப்ரவரியில் ஏற்பட்ட சிறு உடல்நலக்குறைவு காரணமாக, வேறு வழியின்றி மருத்துவ விடுப்பு எடுக்க வேண்டிய சூழல் உருவானது. சிகிச்சைக்கு எடுத்துக்கொண்ட மருந்துகள் நல்ல உறக்கத்தைத் தந்ததால், வீட்டில் ஓய்வெடுத்தேன். விடுமுறையின் கடைசி நான்கு நாட்களை மும்பையில் உள்ள சரண் வீட்டுக்கு போகலாம் என நினைத்தேன். சரண் ஜனவரியில் மும்பை சரஸ்வத் இன்ஃபோ டெக்கில் பணியில் இணைந்தான் பிப்ரவரி முதல் வாரத்தில்தான் புதிய வீட்டிற்கு குடிபோயிருந்தான்.

பனைகாட்சனும் நீண்ட நாட்களாக அவர்களது மும்பை மெதடிஸ்ட் சர்ச்சில் ‘விவிலியத் தாவரங்கள்’ குறித்து உரையாற்றச் சொல்லி கேட்டுக் கொண்டிருந்தார். எனவே ஒரு வெள்ளிக்கிழமை காலை விமானத்தில் பயணம் உறுதியானது. எனக்கு எப்போதும் ரயில் பயணமும், விமானப் பயணமும் அவ்வளவாகப் பிடிப்பதில்லை. அதிலும் விமானப் பயணம் கடும் ஒவ்வாமை அளிப்பதுடன், அது இயற்கைக்கு மாறானது என்ற எண்ணம் இருப்பதால் எனக்கு எப்போதும் அச்சமூட்டுவதாகவே இருக்கும். தருண் டேராடூனில் படித்தபோது அவ்வப்போது சென்றதோடு சரி, கடந்த சில வருடங்களாக விமானப் பயணமே இல்லை. இப்போது வேறு வழியின்றி இண்டிகோ விமானத்தில் பயணம் . சரண் டிக்கட் போட்டான்.

சரணுக்குச் சில பொருட்கள் கொண்டு செல்ல வேண்டியிருந்தது, 15 கிலோதான் எடுத்துச் செல்ல முடியும் என்பதால், சாம்பவியும் நானுமாகச் சேர்ந்து எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து பேக் செய்தோம்.கைப்பை 7 கிலோ இருக்க வேண்டும். அதன் அளவுகளைச் சாம்பவி டேப் வைத்துத் துல்லியமாக அளந்து, “115 x 32 x 12 இந்த அளவில்தான் பை இருக்க வேண்டும் அத்தை, இல்லாவிட்டால் மேலே வைத்து மூட முடியாது என்பார்கள்; நீங்க தனியாகப் போறீங்க, தேவையில்லாமல் டென்ஷன் ஆவீங்க” என்று அக்கறையுடன் அனைத்தையும் செய்து கொடுத்தாள்.

சரியான நேரத்திற்கு விமான நிலையம் சென்றேன். டிஜியாத்ராவில் சாம்பவி முன்பே விபரங்களை ஏற்றியிருந்ததால், சிரமமில்லாமல் உள்ளே சென்று நுழைவு வாயிலின் அறிவிப்புக்காகக் காத்திருந்தேன். எனக்கு முன் ஒரு வட இந்தியக் குடும்பம் அமர்ந்திருந்தது. வயதான பெற்றோர், மகன், மருமகள் மற்றும் இரட்டை ஆண் குழந்தைகள். உடன் அவர்களின் பெண் இருந்தார்,

அந்த இரட்டையர்களில் ஒருவன், அவன் அம்மா அலுமினியம் ஃபாயிலில் சுற்றிக் கொண்டு வந்திருந்த எதையோ எடுத்துக் கொடுத்ததும் உடனடியாகக் கண்ணீர் மல்கினான். மற்றொருவன் சமத்தாக வாங்கிக் கொண்டான். அழுதவன் பிறகு தன் குட்டிப் பையிலிருந்து குர்குரேவை எடுத்துப் பொறுமையாக வயிறு நிறையச் சாப்பிட்டான். ஒரு பாப்கார்ன் வாங்கிக்கொண்டு அவர்கள் இருவரும் விளையாடுவதைப் பார்த்தபடி நேரத்தைக் கழித்தேன்.

பின்னர் 9-ம் எண் நுழைவு வாயில் வழியாக, சிரிப்போ முகமனோ காட்டாத பணிப்பெண்களைக் கடந்து என் இருக்கைக்குப்போனேன் ஜன்னலோரம் ஒரு மிலிட்டரிக்காரர் அமர்ந்திருந்தார். அவர் காலடியில் துணிக்கடைகளில் கொடுக்கும் கட்டைப்பையைத் திணறத் திணறத் திணித்து வைத்திருந்தார். எனக்கும் அவருக்குமிடையில் இருக்கை காலியாக இருந்தது. மற்றவர்களும் நல்ல பெரிய பெரிய சூட்கேஸ்களை வைத்திருந்ததைப் பார்த்தபோது, “சாம்பவி, பார்த்தியா அநியாயத்தை?” என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டேன்.

விமானம் டேக் ஆஃப் ஆகும்போது எனக்கு எப்போதும் வயிற்றைக் கலக்கும். அச்சத்தில் கந்தசஷ்டி கவசம் சொல்லிக் கொண்டு கண்ணை மூடிக்கொள்வேன். ஆனால், இந்த முறை அருகில் ஆஜானுபாகனாக, கட்டுமஸ்தாக, தாட்டியாக, கம்பீரமாக சீருடையில் பெரிய மீசையுடன் கூடிய ஒரு ராணுவ வீரர் அமர்ந்திருந்தது எனக்குக் கொஞ்சம் நம்பிக்கையூட்டியது. விமானி மற்றும் துணை விமானி இருவருமே பெண்கள். அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டபோது கவனிக்கத் தவறியதால், அவர்களுக்கு ‘லில்லி’ மற்றும் ‘ரோஸ்’ என்று நானே பெயர் வைத்துக் கொண்டேன்.

ஓடுதளத்தில் விமானம் தறிகெட்டு ஓடியபோது, மனதில் கவசம் சொல்லியபடியே ஒரு மாரல் சப்போர்டுக்காக திரும்பி அந்த ராணுவ வீரரைப் பார்த்தேன். அவர் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு, முகம் அஷ்டகோணலாக மாறி, கையில் ஒரு ருத்ராட்ச மாலையை உருட்டியபடி ஏதோ ஜெபித்துக் கொண்டிருந்தார்! ’’…ஒன்னுமில்ல சார் பயப்படாதீங்க..’’ என்று மானசீகமாக அவருக்கு தைரியம் சொன்னேன்.

லில்லி விமானத்தை வெண்ணெய்க்கட்டியில் கத்தி இறங்குவது போல அழகாக நவி மும்பையில் தரையிறக்கினாள். பெண்களுக்கு பைக் காரெல்லாம் தான் சரியாக ஓட்டத்தெரிவதில்லை.

வெளியே காத்திருந்த சரண் ஆச்சரியத்துடன், “என்னம்மா, வீடியோ கால் கூட வரலை, நீயே தைரியமா வந்துட்டயே!” என்றான். நான் புன்னகையுடன், “ஒரு மிலிட்டரிக்காரர் ஹெல்ப் பண்ணினாருடா” என்றேன்.

தொடரும்….

    Unnaturals!

    பொள்ளாச்சியில் நேச்சுரல்ஸ் அழகு நிலையத்தின் சில கிளைகள் அங்கும் இங்கும் இருக்கின்றன. அழகு நிலையம் என்றால் ரிஷப்ஷனிலும், உள்ளே சேவை செய்யவும் இருக்கும், அடர்த்தியான உதட்டுச்சாயமும் இறுக்கமான ஜீன்ஸும் அணிந்த ஒன்றிரண்டு அழகிய இளம்பெண்கள் இருக்குமிடம் என்றும் சொல்லலாம். மெய்யான அழகுச்சேவையெல்லாம் அங்கே கிடைப்பதில்லை. கட்டணமும் பெரும்பாலும் பகல் கொள்ளைதான்.

    மகன்கள் முடி வெட்டிக்கொள்ள அங்கே தான் செல்வது வழக்கம். கொள்ளைப்பணம் கொடுத்து பல மணி நேரம் செலவழித்து முடிவெட்டிக்கொண்டு வெளியே வந்தால் ஜெல் தடவி படிய வாரி முடி வெட்டியது போலவேதான் தெரியும். வீடு வந்து குளித்துத் தலை துவட்டினால் பழையபடி முடி காடாக திரண்டு கிடக்கும். மாயா மாயா எல்லாம் மாயாதான்!

    ஏற்கனவே நேச்சுரல்ஸில் கசப்பான அனுபவமொன்று இருந்தது. (கசப்பான அனுபவத்தை மனமுவந்து அளித்திராத நிறுவனங்களோ உறவுகளோ, மனிதர்களோ இருக்கிறார்களா என்ன?) சரண் தருண் பள்ளிக்காலத்தில் ஒரு கோடைவிடுமுறைக்கு முந்தைய , பள்ளியின் கடைசி தேர்வு நாளின் முடிவில் தருணுக்கு முடி வெட்ட அதே நேச்சுரல்ஸ்கு வந்தோம் . அவன் உள்ளே போய் நெடுநேரமானது.

    வரவேற்பில் (அபூர்வமாக இருக்கும்) ஒரு ஆணும் மற்றும் சிலரும் உள்ளே செல்வதும், வெளியே வந்து கூடிக்கூடி என்னைப் பார்த்தும் பார்க்காததுபோல எதையோ தாழ்ந்த குரலில் பேசுவதுமாக இருந்தார்கள். எனக்கு கிலி பிடித்துக்கொண்டது. தருணுக்கு முடி வெட்டுகையில் காயம் ஏதோ ஆகியிருக்குமோவென்று. சரண் ’’.. அப்படியெல்லாம் இருக்காதும்மா, கத்தியெல்லாம் இல்லை, மெஷினில் தான் வெட்டுவாங்க..’’ என்றான்.

    ஒருவழியாக இரண்டு பேர் என்னிடம் வந்து காத்திருக்கும் மற்ற வாடிக்கையாளர்களுக்கு கேட்காதபடி ’’…மன்னிக்கனும் மேம், உங்க மகனுக்கு முடி வெட்டினவர் புதுசு, தெரியாம பின்னந்தலையில் பெரிய சொட்டையை உருவாக்கி விட்டார், இந்த சேவைக்கு (?) நீங்கள் கட்டணம் தரவேண்டாம்..’’ என்றார்கள். நான் கடுமையாக ஒன்றும் சொல்லக்கூடாதென என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு மகன்களை அழைத்துக்கொண்டு வெளியேறினேன். அந்த விடுமுறையில் நாங்கள் திட்டமிட்டிருந்த பயணத்தை தருணின் இந்தசிகை அலங்காரத்தால் ரத்து செய்துவிட்டு வீட்டிலேயே இருந்தோம்.

    பின்னரும் சென்ற வாரம் வரை நேச்சுரல்ஸ்க்கே ஏன் சென்றோமென்றால் பொள்ளாச்சியில் எரியும் கொள்ளிகளில் நேச்சுரல்ஸ் கொஞ்சம் நல்ல கொள்ளி எனவேதான் அதில் சுட்டுக்கொண்டோம்.

    நானும் அங்கே செல்வதுண்டு உறுப்பினர் அட்டைகூட இருந்தது. (கவனிக்கவும் past tense) அழகு சிகிச்சை, சேவைக்கெல்லாம் போவதில்லை. அவ்வப்போது புருவங்களைத் திருத்திக்கொள்வதும், தினமும் சாக்பீஸ் பிடித்தும், தேங்காய் உரித்தும், காய்கறி வெட்டியும் கைகள் காய்ந்துபோய், எப்போதும் தோட்டத்து மண்ணில் வேலைசெய்து பாதங்கள் வறண்டு போவதால் அடிக்கடி பெடிக்யூர் மெனிக்யூர் செய்துகொள்வதுண்டு.

    அரிதாகவே சருமப்பாதுகாப்புக்கு செல்வேன். கடந்த மாதம் கடும்பனியில் லவ்டேலிலும் வெள்ளிமலையிலும் இருந்து , வீட்டிலும் அதிகாலை நடைப்பயிற்சி சென்று, வழக்கமாக கருத்திருக்கும் முகம் இப்போது இருண்டுவிட்டிருந்தது. எனவே நேச்சுரல்ஸ் சென்று அவர்கள் காட்டிய விலைப்பட்டியலில் இருந்த எனக்குப்பிடிக்கவே பிடிக்காத கரீனா கபூரின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து,சரும pH யை சற்றுக் குறைத்து, சருமத்துளைகளின் அழுக்கை நீக்கி, cleansing செய்து, கொலாஜனை பூஸ்ட் செய்வதாகச்சொன்ன ஒருசிகிச்சையை கணிசமான தொகையொன்று போனாலும் பரவாயில்லை என்று தேர்வு செய்தேன்.

    நிச்சயமாக 1 மணி நேரத்தில் முடித்து விடுவேன் என்று வாக்குறுதி அளித்து இரண்டரை மணிநேரமெடுத்துக் கொண்ட அந்த சிகிச்சையில் என்னை பாடாய்ப்படுத்தி சருமத்தை பெரும் வன்முறைக்குள்ளாக்கினார்கள்.

    நான் ’’…மெதுவா பண்ணுங்கம்மா வலிக்குது….’’ என்று சொன்னபோது சருமம் தளர்ந்திருப்பதால் அப்படி வலிக்கிறது என்று அவள் சமாதானம் செய்ததைக்கூட மன்னித்து விட்டேன் (சருமம் நன்றாக இருந்தால் ஏன் நேச்சுரல்ஸ் வருகிறோம்?) நீங்க அடிக்கடி அரசன் ப்ளூ சோப் போட்டு முகம் கழுவினா நல்லது என்று அந்த சேவை (?????) செய்த பெண் சொன்னபோதுதான் தேவியின் கட்டுக்கள் தளர்ந்தன.

    அரசன் சோப் போட்டுக்கச் சொல்லும் பரிந்துரையை குக்கிராம தெருமுனை அழகு நிலையங்களில் கூட பரிந்துரைக்க மாட்டார்களே! இதற்கெதற்கு நேச்சுரல்ஸ்? என்று கடுமையாக எதிர்வினையாற்றிவிட்டு உறுப்பினர் அட்டையை ரிஷப்ஷன் டெஸ்கில் உடைத்துப்போடலாமேன்னும் முடிவை’’ மீ அதிகமா கோபப்படாதே ப்ளீஸ் ‘’ என்னும் சரணின் குரல் காதில் கேட்டதால் செய்யாமல் வீடு வந்து சேர்ந்தேன். வீடு வந்து அதை உடைத்துபோட்டேனென்று பாருங்கள்!

    இது பல மூடுவிழாக்களுக்கான காலம் போலிருக்கிறது. சகித்துக்கொண்டு தக்கவைத்துக் கொண்டிருப்பவற்றின் கதவுகளை ஒவ்வொன்றாக அறைந்து சாத்திப்பூட்டி சாவியை தலையைச்சுற்றித் தூர வீசிக்கொண்டிருக்கிறேன்.

    Highly unnatural!

    இளமைக்காலங்கள்!

    தேர்வுக்காலம் இப்போது கல்லூரியில்.வளாகமே மாணவர்களால் நிறைந்து வண்ணமயமாக இருக்கிறது. எனது துறைக்கருகில் பழுத்து வாடிய இலைகளை கொட்டிக் குவித்துக்கொண்டிருந்த புங்கை மரத்தடியில் என்னை இரு மாணவிகள் கைகோர்த்த படி கடந்து செல்கிறார்கள். ஒருத்தி மற்றவளிடம் ‘’.. சொல்லறதைச்சொல்லிட்டேண்டி, மாட்னேன்னு வைய்யி அவ்வளவுதான் பெரிய பிரச்சனையாயிரும் ..’ என்கிறாள். ஓங்கு தாங்காக பெருங்கூட்டுக்காரியாயிருந்த மற்றவள் கனவில் அழ்ந்த கண்களுடன்’’… என்னா ஆனாலும் சரிடிநான் பார்த்துக்கறேன்..’’ என்கிறாள். இந்த இளமை அளிக்கும் துணிச்சல் இருக்கிறதே!

    புதிய தொடர்!

    தாவரவியலில் இருந்து சற்றே விலகி உலகெங்கிலும் பிரபலமான உணவு வகைகளைக் குறித்த ஒரு தொடர் எழுதி அந்தக் கட்டுரைகளை ஸம்பா என்னும் தலைப்பில் நூலாக வெளியிட ஒரு பதிப்பகத்தில் கொடுத்திருக்கிறேன். அவர்கள் இன்னும் பதிலளிக்கவில்லை. அகநியில் ஒன்றும் பரிசீலனையில் இருக்கிறது. காலச்சுவடின் ’அலையிடைவெளியில்’ மொழியாக்க நூலும் வரவேண்டும்.

    ஸாகேவுக்குப்பிறகு பெல்லடோனா, கஞ்சா, கொகெய்ன், சோமக்கொடி என்று மேலும் சில போதைத்தாவரங்கள் குறித்த கட்டுரைகள் எழுதியிருக்கிறேன், அவற்றையும்  ஸாகே கட்டுரைகளுடன் இணைத்து மறுவெளியீடு செய்யவேண்டும். அறிவியலில் பெரும் பங்காற்றிய ஆளுமைகளைக் குறித்த கட்டுரைகளையும் தொகுத்து தயாராக வைத்திருக்கிறேன் நல்ல பதிப்பாளரிடம் கொடுக்கவேண்டும். அறிவியல் இலக்கியத்தை வெளியிட பெரும்பாலும் பதிப்பகத்தார் தயாராக இல்லை. எனக்கிதில் ஆச்சரியமோ வருத்தமோ இல்லை.தெரிந்த பழகிபோன விஷயம் தான்.

    ஒரு சில ஆளுமைகளின் தன்னம்பிக்கை நூல்கள் நூற்றுக்கணக்காக வெளியிடப்பட்டிருந்ததை இந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் பார்த்தேன் அவைதான் பொது வாசகர்களுக்கு போய்ச்சேர்கிறது போல. உரைநடையை மடக்கி மடக்கி எழுதப்பட்ட கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டிருந்த நூல்களும் ஏராளம் இருந்தன.

    லின்னேயஸ் தன்னை இரண்டாம் ஆதாம் என்று கருதி அதை வெளிப்படையாகச் சொல்லவும் சொல்லி, தாவர வகைப்பாட்டியலைக்கொண்டு வந்தார், அவரது பெயரே அவரது குடும்பத்துக்கு சொந்தமான ஒரு மரத்தின் பெயரிலிருந்து பெறப்பட்டது என்பதை, கார்வர் என்னும் கறுப்பினத்தவர் பயிர்சுழற்சி முறைகளை அறிமுகப்படுத்தி  பழமையான விவசாயமுறைகளின் பிழைகளை சரிசெய்ததை, இந்தியாவில் ஹெச் ஐ வி தொற்று இருப்பதை 80 களில் முதலில் கண்டறிந்த சுநீதியை நிர்மலாவை,டைபாய்டு மேரியை. சூழியலை டார்வினுக்கு பல நூற்றாண்டுகள் முன்னரே தனது இயற்கை வண்ண ஓவியங்களால் நிறுவிய, தன் சிறுமகளுடன் சுரினாம் பூச்சிகளைச் சேகரிக்க ஒரு   படகில் நீண்ட கடற்பயணம் மேற்கொண்ட  மரியா சிபில்லாவை,சாவா மூவா மருந்துக்கான தேடலில் சீஸ் கண்டுபிடிக்கப்பட்டதை,

    ஒரு கடற்பயணத்தில் ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட தளபதி ஒருவரால் பறவைக்கூடு சூப் கண்டுபிடிக்கப்பட்டதை, ரேபிஸ்க்கு லூயி எப்படி தடுப்பு மருந்து கண்டுபிடித்தாரென்பதை, வேக்சினேஷனை கண்டறிந்த ஜென்னரை அவரது காதல் கதையை, கண்வருக்கு உதவிசெய்யப் போய் அகார் அகாரை ஃபேனி ஹிஸ்ஸ கண்டறிந்ததை,, கங்கை நீர் எப்படி மாசடையாமல் இருக்கிறது என்று ஆய்வு செய்து அதற்குக் காரணமாக பாக்டீரியோ பாஜ் இருப்பதை கண்டறிந்து, காலரா பாதிப்பிலிருந்த இந்தியக்கிராமங்களுக்கு அந்த நீரைக்கொண்டு போய், காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்திருந்த, படிப்பறிவற்ற கிராமத்தவர்களிடன் கிணற்றுநீரில் அதைச்சேர்க்க மனறாடிய  ஆங்கிலேய அறிவியலாளரைப் பற்றியெல்லாம் எழுதபட்ட கட்டுரைகள் யாருக்கும் தேவையிருக்காதுதான். எனினும் இரண்டாம் ஆதாம் என்னும் தலைப்பிட்டு அவற்றைத் தொகுத்து வைத்திருக்கிறேன்.  

    கோடையில்லா ஆண்டைச்சொல்லி குப்பைமட்கான ஹ்யூமஸை விவரிக்கும் கட்டுரை, காடழித்தலை, தனிப்பயிர் விவசாயத்தின் பாதகங்களை, செர்ரி மலர்க் கொண்டாட்டங்களை, தாலியாவை,ஜப்பானியத் தேநீர் விருந்தை, லக்கி க்ளோவரை விவரிக்கும் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு லக்கி க்ளோவர் என்னும் பெயரிலேயே வெளியாக வேண்டி இருக்கிறது. 

    இதற்கிடையில் வரும் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஒரு புதிய தொடர் எழுத உத்தேசித்திருக்கும் என் மனக்கட்டியை என்னவென்பது?

    ஐந்து கண்டங்களிலும் தேடித்தேடி மக்கள் பஞ்சம் போக்கும் உணவுப்பயிர்களின் விதைகளைச் சேகரித்து, உளவாளி என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டு மாதக்கணக்காக பட்டினி போட்டுக் கொல்லப்பட்ட நிகலோவ், தொழுநோய்க்கான எளிய மூலிகை சிகிச்சையை கண்டறிந்து அந்த ஆய்வை மற்றொருவர் திருடக்கொடுத்து மிக இளம் வயதிலேயே இறந்து போன ஆலிஸ் பால், டி என் ஏ வின் இருசுழற்சி அமைப்பை முதலில் கண்டுபிடித்து, அதை வாட்சனும் க்ரிக்கும் தங்களுடையது என்று சொல்லி வெளியிட்டு அதற்காக நோபல் விருதும் வாங்கும்  முன்னரே ஒவேரியன் கேன்சர் வந்து மறைந்துபோன அதிபுத்திசாலிப் பெண்ணான ரோஸலிண்ட் என்று  பல ஆளுமைகளின்  பட்டியலை கைவசம் வைத்துக்கொண்டு எழுதத்துவங்குகிறேன். 

    கட்டுரைகளை   இணைய இதழ்கள் வரவேற்று வெளியிடுகின்றன எனினும் நூல்களை வெளியிடத்தான் யாருமில்லை. எனக்கு  இன்னும் 500 ஆண்டுகளுக்காவது தொடர்ந்து எழுதப் புதிய அறிவியல் விஷயங்கள் இருக்கின்றன. ஒருவேளை இவை எதுவுமே பிரசுரமாகாமலும் நூலாக வெளிவராமல் போனாலும் பாதகமில்லை என் இணையதளத்தில் அவற்றை தொடர்ந்து வெளியிடுவேன், கட்டுரைகளை ஆர்வமாக வாசிக்கும் சிலர் இருக்கிறார்கள், மகன் சரண் இணைய தளத்துக்கான கட்டணத்தை வருடா வருடம் கட்டிவிடுகிறான்.😌 

    எழுதுக என்னும்  ஜெ வின் கட்டளை எப்போதும் எனக்கு அசரீரி போல கேட்டுக்கொண்டே இருக்கிறது,  எனவே எழுதுகிறேன்.

    சாம்பல் பூசணி!

    மற்றுமோரு தினமணி நினைவு. என் முதல் சிறுகதை கல்லூரியில் படிக்கையில் தினமணிக்கதிரில் வெளியானது.

    3-ம் வகுப்பு முடிந்து வரும் பெரிய விடுமுறையில் வெங்கடேசா காலனி வீட்டிலிருந்து ராஜா ராமண்ணா நகர் சொந்த வீட்டுக்கு குடிவந்துவிட்டிருந்தோம். அந்த வீட்டிலிருந்துதான் இப்போதிருக்கும் இந்தக்கல்லூரிக்குச் சென்றதும்.

    அப்போதுதான் அந்த புறநகர் குடியிருப்பு உருவாகிக்கொண்டிருந்தது. தெருவின் எல்லையில் விவசாயநிலங்கள் இருந்தன.

    நான் அப்போது கல்லூரியில் 2 ம் வருடத்திலிருந்தேன். அங்கு வந்த நாளிலிருந்தே வீடிருந்த தெரு முடியும் பிரதான சாலையில் இருந்த பாபு என்னும் பன்றி மேய்ப்பவரின் குடும்பத்தை அறிவேன். கருத்த பெரிய உடலும் மிகப்பெரிய தொப்பையுமாய் இருப்பார் பாபு. ஏராளமான பன்றிகளும் குழந்தைகளும் அவருக்கு இருந்தது நினைவிருக்கிறது.

    பாபுவுக்கு மூன்று மனைவிகள். சனிக்கிழமைகளில் குடிசைக்கு முன்பாகஅவரை ஒரு கல்லில் அமரவைத்து மூவருமாக உடலெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவார்கள் கொஞ்ச நேரத்தில் வாசலில் கல்லுக்கூட்டிய அடுப்பில் பெரிய அலுமினியப் பாத்திரத்தில் மசாலாவில் வேகும் பன்றிக்கறியின் வாசனை கமகமக்கும். இப்போது நினைத்துப்பார்த்தால் பாபு சொர்க்க வாழ்வு வாழ்ந்ததை உணரமுடிகிறது.

    பாபுவின் மகள்களும் மகன்களும் பல வயதிலும் இருந்தார்கள் ஒரு சிலர் என் வயதில் என் விளையாட்டுத்தோழர்களாக இருந்தார்கள் அம்மாவுக்குத்தெரியாமல் விளையாடவேண்டும் அவ்வளவுதான். சாயங்காலங்களில் சிறு தூக்குப்போசியுடன் வீடுவீடாகச்சென்று அக்குழந்தைகள் ’’..சாப்பாடுங்ங்ங்..’’ என்று ராகம் போடுவார்கள். வீடுகளில் மீந்தவற்றைக்கொடுத்தால் வாங்கிப்போவார்கள். வெகுநாட்கள் கழித்துத்தான் எனக்குத்தெரியும் அப்படி வாங்கியவற்றை அவர்கள் சாப்பிடுவதில்லை பன்றிகளுக்கு கரைத்து ஊற்றுவார்கள் என்பது. அதில் என் வயதிலிருந்த ஒருத்தி நான் இந்தக்கல்லூரியில் சேர்ந்த அன்றே அங்கே துப்புரவுப்பணியிலிருந்ததை அறிந்தேன். அங்கேயேதான் இன்றுமிருக்கிறாள். தி ஜா கதைகளின் நாயகியைபோல வாளிப்பானவள். அவளைக்குறித்து ஒரு சில நல்ல சிறுகதைகளை எழுதமுடியும் . அத்தனை சுவாரஸ்யமானவள்.

    கல்லூரியில் பேராசிரியப்பணியில் சேர்ந்தபிறகு ஒரு நாள் கோ ஆப்பரேட்டிவ் ஸ்டோருக்கு எதிரில் இருந்த நடுச்சோலை மாமரத்துக்குஅடியில்( இப்போது மாமரம் இருந்த இடத்தில் வகுப்பறைகள் இருக்கின்றன) நானும் அவளுமாய் நின்று சிரித்துப்பேசிக்கொண்டு நான் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு போயிருந்த கன்னிமாங்காய் ஊறுகாயை டிபன் பாக்ஸிலிருந்து எடுத்துச்சாப்பிட்டுக்கொண்டிருந்ததை அப்போதைய கல்லூரி முதல்வர் பார்த்து என்னை அழைத்து கன்மையாக வண்டித்தார் சீ வன்மையாகக்கண்டித்தார்.(’’… லோகமாதேவி,ஒரு ப்ரொஃபெஸர் என்ன இடத்தில் இருக்கனும்னு தெரியாதா உனக்கு?…’’)

    என் கல்லூரிக்காலத்தில் தெரு முடிந்த இடத்திலிருந்த , முள்கம்பி வேலியிட்ட நிலத்தில் சாம்பல்பூசணிகள் விளைந்திருந்தன. ஒரு ஞாயிறன்று பாபுவின் சிறுமகன்கள் இருவர் அந்த முள்கம்பிக்குள் நுழைந்து சட்டையணிந்திருக்காத உடலைக்கிழித்துக்கொண்டு ஒரு சில பூசணிக்காய்களைத் திருடி வந்து வீடுகளில் விற்றார்கள் அப்படி அடிக்கடி அவர்களும் மேலும் சிலரும் வயல்களில் விளைபவற்றை திருடிவிற்று சில்லறைக்காசுகளை வாங்கிச்செல்வது உண்டு.

    அன்று வாசலில் நாங்கள் தேங்காய் போட்டு எண்ணி எடுத்த்து வைத்துக்கொண்டிருந்தோம். அப்பாவுமிருந்தார் . ஆளுக்கொரு பூசணிக்காயுடன் சிறுவர்கள் இருவரும் அப்பாவிடம் வந்து ’’..சார் பூசணிக்காய் வேணுமா..’’ என்றார்கள்.

    அப்பா வழக்கமான உருட்டல் மிரட்டலுடன் ’’…ஏண்டா இந்த சின்ன வயசிலேயே திருடிப்பழகறீங்களா? நான் யார் தெரியுமா? போலீஸ், பிடிச்சு ஜெயில்ல போடட்டா? உங்கப்பன் பாபுவை வரச்சொல்லி இதைசொல்லட்டுமாடா?..’’ என்றதும் அவர்கள் பயந்துபோய் பூசணிக்காய்கள் இரண்டையும் வாசலிலேயே போட்டுவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிப்போனார்கள். அப்பா சாவதானமாக அம்மாவிடம் ’’..பாப்பாத்தி பூசணிக்காயை எடுத்து உள்ளே வை..’’ என்றார்

    நான் அந்தசிறுவர்களின் தோளிலும் முதுகிலும் வரிவரியாக இருந்த ரத்தக்கீறல்களை பலநாட்கள் நினைத்துக்கொண்டே இருந்தேன். கல்லூரி நூலகத்தில் தினமணிக்கதிரில் இருந்த முகவரிக்கு என் கிறுக்கல் கையெழுத்தில் நடந்ததை அப்படியே ஒரு சின்னக்கதைபோல சாம்பல்பூசணி என்று தலைப்பிட்டு எழுதிப்போட்டேன். அடுத்த சிலவாரங்களிலேயே அது பிரசுரமாகி கல்லூரி முகவரிக்கு சன்மானமும் வந்தது.

    ஆனால் கதைப்புத்தகங்கள் வாசித்தாலே அப்பாவிடம் அடிகிடைக்கும் ஆம் கல்லூரிக்காலத்திலும் அடிப்பார். அவரது முறம்போன்ற கையால் அடிவாங்கி பலநாட்கள் எனக்கு மூக்குச்சில்லு உடைந்து ரத்தம் கொட்டும், இப்படி பத்திரிக்கையில் எழுதியதற்கு இன்னமும் அதிகமாக அடிகிடைக்கும் அதிலும் அவரை, அவர் செய்த தவறைக்குறிக்க சாம்பல் பூசணி என்று குறிப்பிட்டு எழுதியது தெரிந்தால் ரத்தக்களறிதான் என்பதால் பிரசுரம் குறித்து யாரிடமும் சொல்லவேஇல்லை.

    அந்த முதல் பிரசுரத்தை இன்று நினைக்கையில் அப்போதும் தலைப்பில் தாவரவியல் இருந்திருக்கிறது என்று சந்தோஷப்பட்டுக்கொள்கிறேன்.

    கதிரக்கா!

    இன்று தினமணியில் திரு அருள் செல்வன் அவர்களுக்கு அளித்த நேர்காணல் வெளியாகியிருக்கிறது. நான் நாளிதழ்கள் எதுவும் வாங்குவதில்லை .ஏதேனும் குறிப்பிட்ட செய்தி வாசிக்கவேண்டியிருந்தால் நூலகம் சென்று வாசிக்கிறேன். அதுவும் அரிதினும் அரிதாகத்தான். 

    இப்போதெல்லாம் இந்து தமிழில் வெளியாகும்  நண்பர் ஸ்ரீராமின் வியாழக்கிழமை கட்டுரைகளுக்காகச்செல்கிறேன். நாளிதழ்களும் தொலைக்காட்சித்தொடர்பும் இல்லாத இயற்கையுடன் இணைந்த வாழ்வின் ஆடம்பரம் இது.

    முன்பு தினமலர் பட்டம் நாளிதழில் தொடர்ச்சியாகக்கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்ததற்குப்பிறகு அறவே  நாளிதழ்கள் வாசிப்பதில்லை. எல்லாச்சேதியும் யாருடனும் தொடர்பிலில்லாமல்  தனியறையில் கல்லூரியிலும், தன்னந்தனிமையில் வீட்டிலும் இருக்கையிலும் எனக்கு வந்து சேர்ந்துவிடுகிறது. 

     இன்று தினமணியில்  என்னைக்குறித்த பதிவை வாசிக்கையில் தினமணிக்கும் எனக்குமான தொடர்பு நினைவுக்கு வந்தது.

    நான் சிறுமியாக இருக்கையில் பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் வாடகை வீட்டில் குடியிருந்தோம். அந்த வீடு அங்குலம் அங்குலமாக எனக்கு நினைவிருக்கிறது. வீட்டைஒட்டி இருக்கும் ஐய்யப்பன் கோயிலில் தான் பெரும்பாலும் இருப்பேன். விறகடுப்பு பம்ப் ஸ்டவ் திரிஸ்டவ் என்று படிப்படியாக மேலே வந்ததும் நினைவிலிருக்கிறது.  வாரா வாரம் செவ்வாய்க்கிழமை ஒரு ட்ரம் இணைக்கப்பட்ட தள்ளு வண்டியில் ’’….கிஷ்ணாயில்ல்ல்ல்ல்ல்ல்ல்…’’ என்று கூவி விற்றுக்கொண்டு ஒருவர் வருவார் அவரிடம் காத்திருந்து வாங்கிக்கொள்வது வழக்கம்.

    அந்த தெருவின் கோடியில் இருந்த கொஞ்சம் வசதியான ஒரு வீட்டில் மட்டும்தான் தினமணியும்  மாதாமாதம் ராணிமுத்துவும் வாங்குவார்கள். காலை 11 மணி வாக்கிலிருந்து அந்ததெருவே ஒவ்வொருவராக அவர்கள் வாசித்து முடித்த தினமணிப்பேப்பரை கடன்வாங்கி வாசித்து மாலை திருப்பிக்கொடுப்போம் பெரும்பாலும் நான் தான் போய் வாங்கிவருவேன். ஞாயிற்றுக்கிழமை இணைப்பான கதிர் பலர் வீட்டில் வாரக்கணக்காக இருக்கும் அதில் வரும் குறுக்கெழுத்துப்போட்டிகளை அம்மாமார்கள் சமையலறை வேலை முடிந்தபின்னர் குழுவாக அமர்ந்து போடுவார்கள். செல்போனும் தொலைக்காட்சியும் இல்லாத பொற்காலமது.

    அந்த வீட்டில் ஒரு அக்கா இருந்தார்கள் அவர்களின் பெயரே கதிரக்காதான் ஏனெனில் கதிர் புத்தகத்தை  கடன் கேட்ப்பவர்களுக்கு அவர்தான் எடுத்துக்கொடுப்பது வழக்கம். அவரது அசல் பெயர் எனக்கு நினைவிலில்லை. அந்தக்கதிரக்காவுக்கு கத்தரித்து விட்டபின்னரும் கணுக்கால்வரை நீண்ட பின்னல் இருக்கும்.  ஞாயிற்றுக்கிழமைகளில் அவரது வீட்டுக்கு ஓட்டமாய் ஓடிப்போய் அவரது யக்‌ஷிபோல விரிந்திருக்கும் நீண்ட தலைமுடியை துவைக்கும் கல்லில் பரப்பி கதிரக்காவின் அம்மா அரப்புபோட்டு அலசுவதை வேடிக்கைப்பார்ப்பேன். அதைக்குறித்து வீட்டுக்கு வந்து நான் கண்கள் விரிய’’.. எத்தனை நீளம் தெரியுமா ..’’என்று பேசுகையில் அம்மா ’’…ஆமா சீவக்கட்டையாட்டம் எதுக்கு ஒருத்திக்கு அத்தனை முடி’’அதிகமுடி ஆளைக்கொல்லும்டீ’ என்பார்கள்.

    பின்னர் ஒரு கூடையில் சாம்பிராணி போட்டு அக்காவின் முடியை அதில் விரித்துப்போட்டு உலர்த்துகையில் நானும் கூட ஒத்தாசை செய்வேன். கதிரக்காவின் கறுத்த களையான முகம் எனக்கும் அப்படியே நினைவில் இருக்கிறது. ஒருநாள் புளியை சர்க்கரையும் உப்பும் கலந்து உருட்டி ஈர்க்குச்சியில் செருகி அவருக்கும் எடுத்துக்கொண்டு எனக்கும் ஒன்று கதிரக்கா கொடுத்ததும் அதன் ருசியும் நினைவிருக்கிறது. கதிரக்காவுக்கு எப்போது கல்யாணம் ஆனது என்பதெல்லாம் எனக்கு நினைவிலில்லை நான் எப்போதிலிருந்து அந்த வீட்டுக்கு கதிரை தினமணியை வாங்கச்செல்வதையும் தலைமுடி அலசுவதை வேடிக்கை பார்ப்பதையும் நிறுத்தினேன் என்பது நினவிலில்லை. 

    ஆனால் கல்யாணம் ஆன சில நாட்களிலேயே அம்மாவீட்டுக்கு விருந்துக்கு வந்த கதிரக்கா, உடலெல்லாம் மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு வைத்துக்கொண்டு தெருவுக்கு வந்து சம்மணமிட்டு அமர்ந்து ஒரு சின்ன கதறலோ கூவலோ சத்தமோ இல்லாமல் எரிந்தழிந்துபோனதையும், அதற்கு முந்தின நாள் பொள்ளாச்சியின் மிகப்பிரபலமான மற்றொரு குடும்பத்து இளைஞரொருவர் விஷமருந்திச் செத்துப்போனதையும்  பிற்பாடு அம்மாவும் அத்தையுமாய் மாய்ந்துமாய்ந்து பேசிக்கொண்டிருக்கையில் கேட்டுத்தெரிந்துகொண்டேன். சண்முகம் என்னும் அந்த இளைஞரின் புகைப்படத்துடன் அஞ்சலிப் போஸ்டர்கள் பல இடங்களில் தெருவெல்லாம் ஒட்டப்பட்டிருந்தது.

    கற்றலும் கற்பித்தலும்!

    இன்று அஜிதனின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவை எதிர்பார்த்திருந்த நாளில் தொடங்கி அவன் பள்ளிக்காலத்தைக் குறித்து ஜெ எழுதி இருந்த தேர்வு என்னும் பதிவை மீள வாசித்தேன்,(https://www.jeyamohan.in/488/#.VSOmPdyUf0d)

    மகன்களின் இளமைக்காலத்தையும் பள்ளிக்காலத்தையும் மீண்டும் நினைத்துப் பார்த்துக்கொண்டேன். மகன்களின் பள்ளிப்பருவத்திலும் கொந்தளிப்பான காலம்தான்.. கடும் பொருளாதார நெருக்கடி, ஆனாலும் மகிழ்ந்திருந்தோம். எப்போதும் கதை கேட்பதும், சொல்வதுமாகவே கழியும் மாலைநேரங்களும் விடுமுறைநாட்களும். 

    சிரிப்புச்சத்தம் கேட்டபடியே இருக்கும் வீட்டிலிருந்து .ரேடியோவில் பாடல்கள் கேட்டுக்கொண்டு வாசலில் மரத்தடியில் விறகடுப்புக்கூட்டி சமைப்போம் அடிக்கடி, மகன்களை அப்படி நட்புடன் நடத்தக்கூடாது என அப்பா என்னை கடுமையாக விமர்சிப்பார். முன்சகோதரி சங்கமித்ராவும் அதே எண்ணம் கொண்டிருந்தாள் எனினும் நேரடியாக தெரிவித்ததில்லை. 

    எனினும் இவர்களின் சகோதரனும் முன்சகோதரியின் மகனுமான சாந்தனுபரீக்‌ஷித் 11,12ம் வகுப்புகளுக்கு நாமக்கல்லில் ஒரு கோழிப்பண்ணைப் பள்ளியில் சூட்கேஸில் பெரும்பணத்துடன் வரிசையில் காத்து நின்று சேர்க்கப்பட்டபோது சங்கமித்ரா என்னிடம் எந்தக் கூச்சமும் இல்லாமல் நேரடியாக’’… தேவி நீ அவன் ஸ்கூல் முடிச்சு வரவரைக்கும் அவனைப்பார்க்க வேண்டாம்,பேசவேண்டாம் லெட்டெர் கூட எழுதிராதே…’’ என்றாள். அப்படியே செய்தேன். மகன்களை எந்த சீரியஸ்னெஸும் இல்லாமல் விளையாட்டுத்தனமாக வளர்க்கும் கிறுக்கு அம்மாவாகத்தான் நான் பார்க்கப்பட்டேன். (பார்க்கப்படுகிறேன்)

    அம்மாவின் புடவையைப் பிடித்துக்கொண்டே வளர்ந்த ஆண்கள் உருப்பட்டதில்லை என்னும் விமர்சனத்தை நான் பெரும்பாலும் மாதா மாதம் கேட்பேன். 

    பள்ளிக்கூடத்தில் பெரிய பிரச்சனை இல்லை என்றாலும் சரணுக்கு தமிழில் எழுதுவது பெரும் சிரமமாக இருந்தது தமிழ்ப்பாடமும் அவனுக்குப் புரியவில்லை. மதிப்பெண்கள் மிகக்குறைவாகவே வாங்கினான். ’’…..எனக்கு ழ ள ல ன ண இதெல்லாம் எங்கே எழுதனும்னு  தெரியலைம்மா யாரும் சொல்லிக்கொடுக்க மாட்டேங்கறாங்க…’’ என்பான் வீட்டில். 

    பள்ளியில் இருந்து அடிக்கடி என்னை வரச்சொல்லி அனுப்புவார்கள். ஜெ சொல்லியிருப்பது போலத்தான், முதலில் தடித்த கண்ணாடி போட்டுக்கொண்டு உக்கிரமாக இருக்கும் பிரின்சிபாலின் அறைக்கு முன்பாக அழகிய வரவேற்பாளினியால் அமரச்சொல்லப்படுவேன் பின்னர் உள்ளே சென்று மிகக்கடுமையாக சரணின் தமிழ் மார்க்கைக் குறித்து விமர்சனம் செய்து நான் கவனம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்றும் தமிழாசிரியைப் பார்க்கனும் என்றும் அறிவுறுத்தப்படுவேன். மீண்டும் ஆசிரியர் அறைக்கு முன்னால் காத்திருத்தல் அந்த தமிழம்மா சரணை என்னவோ கூட்டுப், சரி வேண்டாம் அப்படி அவனைக் குற்றம் சொல்லி அதைக்காட்டிலும் கடுமையாக என்னையும் வசைபாடுவார்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு மகன்களை அழைத்துக்கொண்டு வீடு வருவேன்.

    அப்போது மாலைநேரத்தில் என்னிடம் சும்மா கூட இருக்கவென்று சித்தேஷ் என்று ஒரு சிறுவன் வருவான். அப்போது 8-லிலோ 9-லிலோ படித்துக்கொண்டிருந்த அவன் பிற்பாடு போட்டித்தேர்வுகள் எழுதவிருந்தான். அவன் அம்மா என்னை எப்படியோ தலையைச்சுற்றி மூக்கைத்தொடுவதுபோல தெரிந்துகொண்டு மாலைவேளைகளில்  என் செளகரியத்தை கேட்டுக்கொண்டு  என்னுடன் இருக்கவென்று காரில் அனுப்பி வைப்பார்.

      

    நான் அவனுடன் தாவரங்களையும் பொதுவான அறிவியலையும் பற்றிப்பேசிக்கொண்டெ வீட்டு வேலைகளைப் பார்ப்பேன். அவன் வாசிப்பில் ஆர்வமாக இருந்த சரணுக்கு ஹாரிபோர்ட்டர் வரிசை புத்தகங்கள் அனைத்தையும் மொத்தமாகப் பரிசளித்தான். அதில் தீவிரமாகியது சரணின் வாசிப்புப்பித்து. அவன் வாசிக்கும் வேகம் என்னைவிட பலமடங்கு அதிகம் என்னை இன்னும் ’’…..நிஜமாகவே வாசிச்சிங்களா இல்லை சும்மா மேலோட்டமா பார்த்தீங்களா…’’ என கேட்பவர்கள் உண்டு மிக விரைவாக வாசிப்பவள் நான்.

    சரண் என்னைக் காட்டிலும் வேகம். மாசக்கடைசிகளில் பொள்ளாச்சி எதிர்வெளியீடின் சின்ன புத்தகக்கடை  வழியாக அவனைக் கூட்டிக்கொண்டு போகவே தயங்குவேன் ஏதாவது புத்தகதை கட்டாயமாக  வாங்குவான். பள்ளியில் 5-ல் படித்துக்கொண்டிருந்த அவனது வகுப்பில் அப்போது மாலைநேரங்களில் ராமேஸ்வரத்திலிருந்து வரும் ஒரு ஆசிரியர் சில சிறப்பு வகுப்புகள் எடுத்தார், குறிப்பாக புதிய சொற்களை கற்றுக்கொண்டு வந்து எனக்கும் சொல்லிக்கொடுப்பான். எனக்கு நினைவிருக்கிறது biscuit என்னும் சொல்லுக்கு  twice baked, bi- scuit என்று பொருள் என்று அவன் சொல்லிக்கொடுத்தது.அறிதலில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தான். புதிய புத்தகம் வாங்காமல் இருக்கையில் வாசித்ததையே மீண்டும் மீண்டும் வாசிப்பான் ஆனால் ஆங்கிலம் மட்டுமே தான் எனவே ஆங்கிலம் வாசித்து வாசித்துத்தான் தமிழ் வரவில்லயோ என் சந்தேகமாக இருந்த எனக்கு,

    பேருந்துப்பயணங்களில் நின்றுகொண்டே கூட வாசிப்பான் கல்யணம் காட்சி என எங்கு அழைத்துச்சென்றாலும் ஒரு மூலையை கண்டுபிடித்து அமர்ந்து வாசித்துக்கொண்டிருப்பான்.

    நான் அவர்கள் இருவருக்கும் பாடம் சொல்லிக்கொடுத்ததே இல்லை ஆனால் உறவினர்களும் பள்ளியில் பிற பெற்றோர்களும் நான் ஸ்கேலும் கையுமாக மாலைவேளைகளில் ட்யூஷன் எடுப்பேன் என்று ஆணித்தரமாக நம்பினார்கள். நான் இருவரையும் எல்கேஜியிலிருந்து 12ம் வகுப்பு வரை எந்த ட்யூஷனுக்கும் அனுப்பாததற்கும் பலரால் வன்மையாக கண்டிக்கப் பட்டேன்.

    ’….ஒழுங்கா காலையிலயும் சாயங்காலமும் ட்யூஷன் அனுபினா 10த்லயும் 12த்லயும் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்து தெருமுனைகளில் பள்ளிவாசலில் போஸ்டரில் போட்டோ வரும் புத்திசாலிப்பசங்களைக் கதை சொல்லிச்சொல்லி கெடுக்கிறேன்…’’ என்பது என்மீதான பொதுவான குற்றச்சாட்டாகவே இருந்தது. 

    ’’..சரண்  உன் போட்டோ பேனரில் ஸ்கூல் வாசலில் வரணுமாடா? ட்யூஷனுக்கெல்லாம் போறியா?…’’

     ’’….வேண்டாம்மா. இந்த வருஷம் ஃபர்ஸ்ட் வந்தவங்க பேனரை இப்போ ஸ்கூல் ஆயாம்மா எல்லாம் மழை வந்தா நனையாம இருக்க கிழிச்சு ஒரு கூரை மாதிரி கட்டி இருக்காங்க , இதுமாதிரியெல்லாம் போட்டோவும் பேனரும் எனக்கு வேண்டாம், ட்யூஷனுக்கே நான் போகமாட்டேன்..’’

     கதை கேட்டுத்தான் வளர்ந்தார்கள் இருவரும் . ஒரே ஒரு சிறப்பு வகுப்பிற்கு கூட  இருவருமே போனதில்லை.

    இந்த தமிழம்மா தொல்லையை சரி செய்யவேண்டி இருந்தது. நான் சமையலறையில்  வேலையில் இருக்கையில் இருவரையும் கூடவே தரையில் அமரச்சொல்லி நாளிதழ்களின் தலைப்புசெய்திகளை உரக்க வாசிக்கச் சொல்லுவேன் மாலையில் எஃப் எம் ரேடியோவில் ஒலிக்கும் பாடல்களின் முதல்வரியை அடுத்த பாடல் ஒலிக்கும் முன்பு எழுதிக்காண்பிக்கச் சொல்லுவேன்.

     அதை ஆர்வமாகச் செய்தார்கள். தருணுக்கும் தமிழ் தகராறு தான் எனினும் புகார் சொல்லும் அளவுக்கு அவன் மதிப்பெண்கள் இல்லை அவன் ஆங்கிலமும் வாசிக்கவில்லை. ஆனால் தமிழை தப்புத்தப்பாகப் புரிந்துகொள்வான், ஒரு கூட்டத்தில் தாத்தா ஒருவர் (பள்ளிக்கு வந்து உரையாற்றிய பெரியவர்) சொன்னதாக கண்ணகி பட்டினி கிடந்து கஷ்டப்பட்டாள் என்று தருண் வீட்டுக்கு வந்து சொல்வதும் அவ பட்டினி இல்லடா பத்தினி என்று நான் திருத்தி பத்தினின்னா என்னவென்று பதிலுக்கு அவன்  கேட்டு உரையாடல் உக்கிரமாகப் போகும் அவனுடன்.

    நல்லவேளையாக தமிழம்மா வேறு பள்ளிக்கு மாற்றலாகிப் போய் சரணுக்கு எந்தக்காரணத்தாலோ மிகவும் பிடித்துப்போன  சங்கீதா என்னும் ஒரு இளம் ஆசிரியை வந்தார் அதன்பிறகு சரண் தமிழில் விருப்பம் கொண்டு நல்ல மதிப்பெண்கள் வாங்கினான். வெண்முரசு தொடர்ந்து கேட்பதும் அவனும் மெல்ல மெல்ல வாசிப்பதுமாக சரணுக்கு அறிமுகமே ஜெ வின் மிகச்செறிவான மொழிதான். 

    பிற்பாடு அவன் ஜெ வுக்கு எழுதிய கடிதங்கள் அவரது தளத்தில் பிரசுரமாகின அவன் 7லிலும் தருண் 5லும் படிக்கையில் இருந்தே விஷ்ணுபுரம் கூட்டங்களுக்கு என்னுடன் வர துவங்கினார்கள்.மகன்களை படிப்பில் சோடை போன காரணத்தைச்சொல்லி ஒருபோதும் நான் கடிந்துகொண்டதே இல்லை.

    ஆனால் இருவருமே பாடத்தைத்தவிர மற்றவற்றில் ஆர்வமாக இருந்தார்கள். 7ம் வகுப்பில் சரணுக்கு ஒரு போட்டியில் வெற்றி பெற்றதற்காக ஆஸ்திரேலியாவின் வேல்ஸ் பல்கலைக்கழகம் state level best student award அளித்து அப்போது நான் வாங்கிய சம்பளத்தில் 4 – ல் ஒரு பங்கை விருதுத்தொகையாகவும் அளித்தார்கள். சென்னைக்கு மூவருமாக ரயிலில் சென்று, எங்கேயோ தங்கி, எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் அந்த விருதை வாங்கினோம். ஒரு யோகா போட்டிக்கு தருணை வெளியூருக்கு அழைத்துசென்று நாள் முழுவதும் காத்திருந்து அலுத்துப்போய் போட்டி முடிந்ததும் முடிவுகளைக்கூட கேட்டுக்கொள்ளாமல் ஊருக்கு திரும்பிவிட்டேன் மறுநாள் பள்ளியில் முந்தைய நாளின் போட்டியில் மாநில அளவில் முதலிடத்துக்கான தங்கபதக்கத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு புழுதிபறக்க தருண் என்னைப்பார்த்ததும் ஓடிவந்தான். இப்படி பல போட்டிகள் பல வெற்றிகள் ஆனால் 9ம் வகுப்பு வரை பாடங்களில் இருவருமே சொல்லிக்கொளும் படியில்லைதான். அதைக்குறித்து மூவருமே கவலைப்பட்டதுமில்லை. இருவரும் வாங்கிய தங்கவெள்ளி வெண்கல பதக்கங்கள் குப்பையாக ஒரு பெட்டியில் போட்டு வைத்திருக்கிறோம்

     நல்லாசிரியர்கள் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை, நல்ல கல்விக்கூடம் வாசிப்புப்பழக்கம் இவையெல்லாம் இளமைப்பருவத்தில் எத்தனை முக்கியம் என்பதற்கு சரணும் தருணுமே உதாரணம். பள்ளிக்கூடம் ஒரு மாணவனை அடையாளப்படுத்துவதே அவனது மெய்யான அடையாளம் என்று நம்ப வேண்டியதில்லை என்பதற்கும்.

    தருணுக்கு மத்தகம் கதையின் கேசவன் குட்டி கற்பனை விளையாட்டுத் தோழனாக இருந்து ஒரு கட்டத்தில் தருண் தானே கேசவன் குட்டி யானை என நம்பத்தலைப்பட்டு நாலு காலில் நடந்து வீட்டில் என்னையும் சரணையும் முட்டித்தள்ளிக்கொண்டிருந்தான்.அதைக்குறித்து சரண் ஜெவிற்கு எழுதின தப்பும் தவறுமான கடிதம்தான் தளத்தில் முதன்முதலில் ஒரு சிறுவனின் கடிதம் என்று பிரசுரமானது. பின்னரே பலவருடங்கள் கழித்து நான் எழுதினேன். https://www.jeyamohan.in/18020/

    சரணின் அந்தக்கடிதத்துக்கு பதில் அளித்த ஜெ உங்கள் சகோதரர் சிறந்த காட்டிலாகா அதிகாரியாக ஆக வாழ்த்துக்கள் என்றிருந்தார்.

    தருண் யானை டாக்டரும் காடும் வாசித்து சொல்லக்கெட்டு காட்டியல் படிக்க விரும்பி இப்போது காட்டியலாளன் (அல்லது காட்டாளன்) ஆகியிருப்பதும் சரண் சின்மயா பள்ளியில் best outgoing student விருது கௌரவ் விருது என ஏகப்பட்ட விருது வாங்கியதும் வரலாறு.

    இப்போது 26 வயதாகும் சரண் 23 வயதிற்குள் அர்த்தசாஸ்திரம் முழுமையாக வாசித்து எனக்கும் அதன் சாரத்தை சொன்னான். காமசூத்ரா எனப்து ஒரு sex manual என்று  நினைத்திருந்த எனக்கு அது ஒரு தனி நூலல்ல  7 தொகுதிகளும்  பல அத்தியாயங்களுமாகச் சொல்லப்பட்ட art of living என்பதை அவனே விளக்கினான். பிரஜாபதி நந்திகேசர் உள்ளிட்ட பலர் அத்தியாயங்கள் எழுதி வாத்ஸ்யாயனர் அதை தொகுத்தார் என்பதையும் அவனிடமிருந்தே அறிந்தேன். அதன் பிறகு என் அறிதல்கள் எல்லாமே ஜெ அவருக்கு அடுத்தபடியாக சரண் ஆகிய இருவரிடமிருந்துதான். சில மாதங்களுக்கு முன் அரிஸ்டாட்டிலின்  Politiks (ஆம் k தான்) வாசித்து முடித்து அதைக்குறித்துப் பேசினோம். சமீபத்தில் அவன் பரிந்துரைத்த medical apartheid வாசித்து இன்னும் அந்த நூல் உருவாக்கிய குற்றவுணர்விலிருந்து மீளமுடியாமலிருக்கிறேன்.

    குழந்தைகளைக்குறித்து பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை, பள்ளிக்கூடங்களும் ஆசிரியர்களும் குழந்தைகளைக் குறித்து உருவாக்கும் பிம்பங்களை  நம்பாமல் இருந்தால் நல்ல இளமைப்பருவமும் அவர்களுக்கு மிக நல்ல எதிர்காலமும்  அமையும் என்று நான் நம்புகிறேன்..

    விவேகானந்தரும் விஜயகாந்தும்!

    இன்று விவேகானந்தர் ஜெயந்தி கல்லூரியில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. விவேகானந்தரையும், இளமையில் அவரைப் போலாக வேண்டும் என்று கனவுகொண்டிருந்த தருணையும் நினைத்துக்கொள்கிறேன்.

    சரண், தருணை நான்தான் பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துச்செல்வேன். அப்படியொரு மாலையில் 1-ம் வகுப்பிலிருந்த தருணின் வகுப்பாசிரியை கீதா மிஸ் என்னை அவசியம் சந்திக்க வேண்டும் எனத் தகவல் சொல்லி இருந்ததால் அவருக்காக ஆசிரியர் அறையில் காத்திருந்தேன். அவரது மேசை முழுக்க குழந்தைகள் வரைந்த படங்களும் திருத்தவேண்டிய தாள்களும் நிரம்பிக்கிடந்தன. களைத்துப்போய் தலையில் சாக்பீஸ் துகள்களுடன் வந்த அவர் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக்கொண்டே எதிரில் இருந்த நாற்காலியில் அமரும்படிச் சொன்னார். வழக்கமாக அவரது முகத்தில் இருக்கும் புன்னகை அன்று இல்லை என்பதை கவனித்தேன்.

    எடுத்த எடுப்பிலேயே ...வீட்டில் நிறைய டிவி பார்ப்பிங்களா... என்றார் ... இல்லைங்க எங்க வீட்டில் டிவியே இல்லையே!..என்றேன்

    . ... அப்போ அடிக்கடி பசங்களை சினிமாக்கு கூட்டுட்டு போவீங்களா?.. என்றார்.

    .. இல்லைங்க, எப்பவாவதுதான் போவோம்…“

    என்னை நம்பாமல் முறைத்துப்பார்த்துவிட்டு“ ..அப்புறம் எப்படிங்க வகுப்பில் மாணவர்களை எல்லாரும் எதிர்காலத்தில் என்னவாகப் போறீங்கன்னு வரிசையாச் கேட்டு, ஒவ்வொருத்தருனும் டாக்டர், இஞ்சினீயர், கலெக்டர், கண்டக்டர்னு சொல்லிட்டிருக்கறப்போ தருண் எழுந்து விஜயகாந்த் ஆகப்போறேன்னு சொல்லறான்?, ஏன்னு நான் கேட்டா எங்கம்மாதான் அப்படி ஆகனும்னு சொன்னாங்கன்னு சொல்லறான், சின்னக்குழந்தைகளை இந்த வயசிலெயெ சினிமாவை நோக்கித் தள்ளறது சரியா ? அதுவும் நீங்களே ஒரு டீச்சரா இருந்துகிட்டு?... என்றார்.

    அயர்ந்து போனேன். தருணுக்கு விஜயகாந்தைத் தெரியும் என்பதே எனக்குத்தெரியாது, அன்னையின் விழைவுகள் ஜீன் வழியாகக் கடத்தப்படுமென்பது உண்மையென்றால் அவன் பார்த்திபன் ஆக வேண்டும் என்றுதானே நியாயமாகச்சொல்லி இருக்க வேண்டும் ஆனால் எப்படி விஜயகாந்த்?

    கீதா மிஸ்ஸிடம் அப்படி நான் எதுவும் சொன்னதில்லை என்று சத்தியம் செய்துவிட்டு அது சம்பந்தமாகத் தருணைக்கண்டிக்கிறேன், சினிமா மோகத்திலிருந்து அவனைத் திருப்பித் திருந்திய குமரனாக்கி நல்வழிப்படுத்துகிறேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு வீட்டுக்கு மகன்களை அழைத்துக்கொண்டு வந்தேன்.

    தருணுக்கு எதிர்காலத்தில் ஒரு பன்றிகுட்டியாக வேண்டும் என்னும் ஒரு பெருவிருப்பம் இருந்ததுதான் எனக்குத்தெரியும், பள்ளியிலிருந்து வீடு செல்லும் வழியில் ஒரு சாக்கடையில் பன்றிக்குடும்பமொன்று இருந்தது, கட்டாயம் அங்கே காரை நிறுத்தி மனங்குளிர அவன் பன்றிகளைப் பார்த்து ரசித்தபின்னரே காரை எடுக்கமுடியும்.

    கொஞ்சம் வளர்ந்து, நம்மைப்போல எளியமானுடர்கள் பிற்காலத்தில் பன்றிகளாக முடியாது என்று தருண் அறிந்துகொண்ட போது அவன் 3-ம் வகுப்பு முடித்து விட்டிருந்தான். அப்போதும் மனம் தளராமல் கண்ணாடி முன்பு நின்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மட்டும் பன்றிக்குட்டியைப்போல மாற்றிக்கொள்ளும் சாத்தியங்களைப்பற்றி யோசிப்பான்.

    ஒரு ஞாயிறன்று உயரமாக தலையணைகளை அடுக்கி வைத்து அவற்றின் மேலிருந்து தரையில் குதிக்கும் பரிசோதனையொன்று நூழிழையில் பிசகிப்போய் தரையில் குப்புற விழுந்து உதடுகள் வீங்கி பத்துப்பதினைந்துநாட்கள் அசல் பன்றிக்குட்டியைப் போலவே முகம் இருந்ததை நொடிக்கொருதரம் கண்ணாடி முன்பு நின்று பார்த்துப்பார்த்துத் துயருற்றவன் பிறகு ஒருபோதும் பன்றிகுட்டிகளைப் பற்றிப் பேசவேயில்லை

    இரவு சமைக்கையில் அதே யோசனையில் இருந்தேன் கொஞ்சநாள் முன்பு ரமணா திரைப்படத்தை லேப்டாப்பில் மகன்களுடன்பார்த்து, கல்லூரிப் பேராசிரியராரன விஜயகாந்த் குற்றங்களைத் தட்டிக்கேட்பதை, சண்டைக்காட்சிகளில் எதிராளியின் நெஞ்சுக்குநேரே அவர் கால்கள் உயர்ந்ததை எல்லாம் சிலாகித்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது அதனால் சொல்லி இருப்பானோ என்றூ ஒரு சம்சயமும் உண்டானது.

    இரவு இருவருக்கும் கதைசொல்லித் தூங்கவைக்கையில் மெதுவாக“.. தருண், கீதா மிஸ் கிட்ட என்னடா சொன்னே?.. என்றேன்.

    ..அதுவா நான் பெரிசாகி விஜயகாந்த் ஆகப்போறேன்னு சொன்னேன், கீதா மிஸ் முறைச்சுப்பார்த்து இனிமே அப்படிச்சொன்னா அடிப்பேன்னாங்க..ஆனா நான் பயந்துக்கலை அவங்க அடிக்கவே மாட்டாங்கனு எனக்குத்தெரியும்..“ என்றான்.

    ``...எதுக்குடா அப்படிசொன்னே? உனக்கு விஜயகாந்த் பிடிக்குமா?..

    ..ஆமா பிடிக்கும் நீதான சொன்னே அவர் ரொம்ப நல்லவரு நமக்கு நிறைய நல்லது பண்ணி இருக்காருன்னு அதான் நான் சொன்னேன்..

    ..நானா, நான் எப்படா சொன்னேன்..?

    ... மீ மறந்துட்டியா நீயே? அந்த பெட்ருமில் அவர் போட்டோ கூட இருக்கே நீ அதைக்காமிச்சு சொல்லி இருக்கே, தலையில் துண்டு கட்டிட்டு, கையை இப்படி கட்டிட்டு நிப்பாரே அந்த விஜயகாந்த்,,, என்றான்.

    ..அடப்பாவி அவர் விஜயகாந்த் இல்லடா விவேகானந்தர்..

    ... ஹி ஹி ஆமா வி- ல ஆரம்பிச்சதால நான் மாத்திச் சொல்லிட்டேன் நாளைக்கு கீதா மிஸ்கிட்ட சொல்லிடறேன் நான் விவேகானந்தராகப் போறேன்னு.. என்றான்.

    வேடசெந்தூ ர் வீடு கிரஹப்பிரவேசத்துக்கு வந்திருந்த என் ஆசிரியர் திரு ராஜகுமார் அவர்கள் விவேகானந்தரின் சட்டமிடப்பட்டிருந்த அந்தப் புகைப்படத்தைப் பரிசளித்திருந்தார் இன்றுமவர் அதே இடத்திலிருந்து சைடாக எங்களைப்பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்கிறார், அந்தப் புகைப்படத்தைக்காட்டி அவரைக் குறித்து மகன்களிடம் பேசி இருக்கிறேன்.அதில் வந்த வினை அது. இதையெல்லாம் இன்னுமே வீட்டில் பேசிப்பேசி சிரித்து தருணை கோபமூட்டுவோம்.

    சில வருடங்களுக்கு முன்பு இதே நாளில் என்னைத் தெரியாத்தனமாக விவேகானந்தரைக் குறித்து உரையற்றச் சொன்னார்கள். நானும் ஜெ வின் தளத்திலிருந்தும் விவேகானந்தரைக் குறித்த நூல்களிலிருந்தும் மிகத்தரமான ஒரு உரையைத் தயாரித்துகொண்டு போய் விவேகானந்தரின் பயணங்கள் என்னும் செறிவான உரையாற்றினேன்.

    அதுவரை அரைத்தமாவே அரைக்கப்பட்ட அந்த அரங்கில அது மிகப்புதியதோர் எழுச்சி உரை (என்பதையும் நானே சொல்லிக்கொள்கிறேன்). மேடையில் அமர்ந்திருந்த ஒரு பெரும் பேராசிரியர் பிரமை பிடித்ததுபோல் இருந்தார், வேறு வழியில்லாமல் என்னைப்பாராட்டி விட்டு, தான் அந்த உரையைப் பதிவு செய்திருப்பதாகவும், கல்லூரி நிர்வாகத்துக்கு அதைஅனுப்பி என்னைக்குறித்துச் சொல்லப்போவதாகவும் சொன்னார்.

    அவர் பணி ஓய்வு பெற்று இரண்டு வருடங்களாகிது பாவம் அவரால் அதை இன்று வரை செய்ய முடியவில்லை என்பதையும் என்னை அதன்பிறகு நிர்வாக அங்கத்தினர் இடம்பெறும் முக்கிய விழாக்களில் உரையாற்ற அழைப்பதில்லை என்பதையும் இந்த நன்னாளிலே புன்னைகையுடன் நினைவு கூறுகிறேன்.

    தருணுக்கு இன்னும் விவேகானந்தராகும் உத்தேசம் இருக்குமேயானால் அவனது ஏராளமான தோழிகள் அதற்கு அனுமதி தரவேண்டி இருக்கும் சிக்கலும் இப்போது இருக்கிறது என் பதை அவனுக்கு நினைவூட்ட வேண்டும்.

    // இன்னும் இருந்துகொண்டிருக்கிறது அந்த அழகிய முகம். என்றும் மாறாத இளமையிலேயே அவரை நம் நினைவுகளில் நீடிக்கச் செய்த விதி பெரும் கருணைகொண்டது//- ஜெ

    அம்மை அப்பன் அயோனிகன்!

    மிக மிக அரிதாகவே கண்ணீர் விட்டு அழுகிறேன். அப்படியான உறுதிப்பாடோ முன்முடிவோ எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் துயர்களுக்கும் கஷ்டப்பாடுகளுக்கும் immune ஆகிவிட்டிருக்கிறேன். அந்த shield ஐயும் கடந்து உள்ளே செல்லும் கூர்நுனிகள் உண்டாக்கும் காயங்களுக்கான கண்ணீரை மிக நெருங்கியவர்கள் மட்டுமே கண்டிருக்கிறார்கள். 

    ஆனால் அகரமுதல்வன் இயக்கத்தில் ரமேஷ் பிரேதனின் அம்மை, அப்பன், அயோனிகன் ஆவணப்படம் பார்க்கையில் என்னையுமறியாமல் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தேன். ரமேஷ் பிரேதன் இறந்த  செய்தியைக் கேட்டபோது மெய்யாகவே வருந்தினேன்தான். அதற்குச் சிலநாட்கள் முன்புதான் விருதுக்கான வாழ்த்து தெரிவித்த எனக்கு ’’நன்றி தோழர்’’ என்று ரமேஷ்பிரேதன் முதலும் கடைசியுமாகப் பதிலனுப்பி இருந்தார்.

    ஒரு அறைக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருக்கும் அவர், அத்தனை திரளான வாசகர்களையும் அந்த விழாவையும் அந்த அங்கீகாரத்தையும்  நேரில் அனுபவித்தபின், இந்த விருதை வாங்கிய பின் அவர் இறந்திருக்கலாமென்று நினைத்துக்கொண்டு இருந்தேன், எனினும் தேற்ற யாருமில்லாத தனிமையில் பெருகிய அந்தக்கண்ணீர்தான் ரமேஷின் இழப்புக்கான என் இதயபூர்வமான அஞ்சலி.

    இந்த ஆவணப்படப்படபிடிப்பின் பல வித்தியாசமான களங்கள், மாந்தர்கள். பிரபலங்களின் நினைவுத்தொகுப்புக்கள், மிகச்சிறப்பான இயக்கம், mystic ஆன ஒரு பொதுத்தனமை எல்லாவற்றையும் விட பிரேமாவின் இழப்பின் துயரும் அவரின் உடைந்த இதயத்தின் குருதிக் கசிவெனப் பெருகிய கண்ணீரும்தான் எனக்கு முதன்மையாகத் தெரிந்தது. ’’என்னைப் பிரேமான்னு கூப்பிடமாட்டாரு பன்னிக்குட்டின்னு, பூனைக்குட்டின்னு கூப்பிடுவாரு’’ என்று அவர் கண்ணீர் பெருக்கியபோது நானும் உடைந்து அழுதேன்.

    அவரைப்  பருமனான உடலுடன் கழிவறைக்கு அழைத்துச்செல்கையில்   எடை தாளாமல்   ஒருவர் மீது ஒருவர் விழுந்து விடுவதை கண்ணீரும் சிரிப்புமாகச்சொன்னதும், தான் கோபித்துக்கொண்டு இருந்தாலும் ’’பன்னிக்குட்டி வா உனக்கு வைன் வாங்கித்தரேன்’’ என்று ரமேஷ் சொல்லுவதையும், இன்னும் அவர் தன்னோடு தான் இருக்கிறார் என்ற அவரின் காதலில் தோய்ந்த நம்பிகையுமாக, ஜெ சொல்லி இருப்பது போல தமிழ் இலக்கிய உலகம் மட்டுமல்ல, அன்பென்பதை மறந்தே போயிருக்கும் மொத்த மானுடமே அவருக்கு கடமைப்பட்டிருப்பதாவே எண்ணுகிறேன். ரமேஷ் பிரேதனின் நூலில் பிரேமாவை மழையெனச் சித்தரித்திருப்பதுதான் எத்தனை பொருத்தம். அப்படித்தான் அன்பை அவர் ரமேஷ் பிரேதன் மீது பொழிந்துகொண்டிருந்தார்,

    ரமேஷ் செயலாக இருக்கையில் பிரேமா அவரிடம் சென்று சேரவில்லை அவர் படுக்கையில் இருக்கையில்தான் அவரிடம் சென்றிருக்கிறார். அவருக்குப் பணிவிடைகள் செய்வதன் மூலம்தான் அவரை நேசித்திருக்கிறார்.அந்த அன்பில், நேசத்தில், காதலில்   தளும்பிக் கொண்டிருந்த அவருக்கு இப்போது ரமேஷின் இழப்பு உண்டாக்கியிருக்கும் துயரைத்தான் என்னால் தாளமுடியவில்லை.

    அசலான காதலோ நேசமோ இப்போதெல்லாம் அரிதினும் அரிதாகவே நிகழ்கிறது, காணக்கிடைக்கிறது. சொல்லப்போனால் பெரும்பாலான இப்போதைய நேசம், உறவு,காதல் எனப்படுவதெல்லாமே மிக வெளிப்படையான கணக்கீடுகள் அல்லது ஏமாற்றுதல்கள் மட்டுமே. நம்பிக்கையூட்டும் அணுகுமுறைகள், மிக எளிய நாடகங்கள் மூலமே அன்பைப்பெறமுடிகிறது பலருக்கும். பின்னர் அணுகியதைக் காட்டிலும் எளிதாக விரைவாக அதிலிருந்து விடுபட்டுப் புதியவற்றை நோக்கிச் செல்கிறார்கள்.

    ஆகப்பெரிய நம்பிக்கைத்துரோகங்கள் படுக்கையிலல்ல இப்படியான விலக்குதல்களிலும் விலகிச்செல்லுதல்களில்தான் நிகழ்கின்றன. எனினும் ஆணும் பெண்ணுமாக இருபாலாருக்கும் நேசமென்பது மிகத்தேவையாக இருப்பதால் அதன்பொருட்டு தொடர்ந்து பலியாகிக் கொண்டும் பலிவாங்கிக்கொண்டும் இருக்கிறார்கள்.

    இளமையில் இருப்போருக்கும், ஆரோக்கியமானவர்களுக்கும் உண்மையான அன்பு கொண்டிப்பவர்களுக்கும் மிக நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கும் இதுவே நிகழ்கையில், இளமை இறங்கு முகத்திலிருக்கையில், குணப்படுத்த முடியாத மரபுரீதியான உடல்நிலையும், அசாதாரணமான உடலெடையும் கொண்ட சொல்லிக்கொள்ளும்படியான பொருளாதார நிலையுமில்லாத ரமேஷ் பிரேதன் மீதான பிரேமாவின் தூய அன்பு என்னை அசைத்துவிட்டது, I sway!

    விஷ்ணுபுரம் விழாவன்று பிரேமாவை  இறுகக்கட்டிக் கொள்ள முடியவில்லை. இந்த வருடத்திய பயணங்களின் பட்டியலில்  முதன்மையாகப் பிரேமாவைச் சந்திக்கவிருக்கிறேன் ஆரத்தழுவிக்கொள்ளப்போகிறேன்.

    அந்தத் தூய அன்பை, கண்ணீரையும் துயரத்தையும் விழுங்கும் முயற்சியில் தோற்று கட்டுக்கள் அவிழ்ந்து அவர் உடைந்தழுவதெல்லாம் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.  

    பிரேமாவையும் ரமேஷ்பிரேதனையும் நினைத்தால் பொறாமையாகவும் இருந்தது. மிகத்தூய அன்பை அளித்தும் பெற்றுக்கொண்டுமிருந்த  இருவரல்லவா?

    ஒரு பிழையீட்டைப் போலப் பிரேமாவின் காதலின்பொருட்டும் இழப்பின் பொருட்டும்   நானும் அழுது கொண்டிருந்தேன்

    13 வருடங்கள் ஒரே அறையில் படுக்கையிலேயே வாழ்ந்து, எழுந்து நடக்கவும் வெளி உலகை, வானைக்காண  பெருவிருப்பம் கொண்டிருந்தவரின் மறைவுக்குப் பின்னர்   அந்த வீட்டுக்கு வந்து, வீட்டிலேயே இரண்டு நாட்கள் இருந்த சிட்டுகுருவியை அது அவர்தான் என்று பிரேமா சொன்னது உண்மைதான். நான் நம்புகிறேன் அவரது ஆன்மா 16 நாட்கள் அங்கேயே தான் இருந்திருக்கும்.

    எடை கொண்டிருந்த உடலற்ற ஆன்மாவாகவாவது பரந்த வானை அந்தச் சில நாட்களில் பார்க்கவும் அனுபவிக்கும் வாய்ப்பிருந்தும், தன்னை எந்தக்  கணக்கீடும் நோக்கமும் இல்லாமல் நேசித்த பிரேமாவுடன் 2 நாட்கள்  இருக்கவும் சிட்டுகுருவியென வந்தது ரமேஷ் பிரேதன் தான்.

    அம்மா சிலவருடங்களுக்கு முன்பாக ஒரு பண்டிகை நாளில் இரவில் நெஞ்சடைத்து இறந்துபோனார்கள். தினமும் மாலையும் குளிக்கும் பழக்கம் அம்மாவுக்கும் இருந்தது என்னைப்போலவே அல்லது எனக்கிருக்கிறது அம்மாவைபோலவே.

    அன்று மாலையும் குளித்து, உடல் துவட்டிய ஈரிழைத்துண்டை இனி ஒருபோதும் உடலைத் துவட்டப்போவதில்லை, நெருப்புக்கு தின்னக்கொடுக்கபோகிறோம் என்றறியாமல். வராந்தா கம்பி மீது கடைசியாகக் காயப்போட்டிருந்தார்கள்.

    அம்மா இறந்து உடலை வீட்டுக்குக் கொண்டுவந்த நள்ளிரவில் எதேச்சையாகக் கவனித்தபோது அந்தத் துண்டில் வழக்கத்தைக் காட்டிலும் பெரிய அளவிலான வெட்டுக்கிளிஒன்று அமர்ந்திருந்தது. அதே துண்டின்  மீது 2 நாட்கள் அந்தப் பூச்சி அசையாமல் அமர்ந்திருந்து எங்கள் கதறலை, கண்ணீரை, பொருளற்ற சடங்குகளை, இனி யார் மீதும் பிரயோகிக்க முடியாத,  அச்சு முறிந்து கிடந்த அப்பாவின் ஆணவத்தையெல்லாம்   பார்த்துக்கொண்டிருந்தது.

    பின்னர் எங்கோ எப்படியோ மறைந்துவிட்ட அந்தப்பூச்சி அம்மாவின் அஸ்தியை  மின்மயானத்திலிருந்து  வாங்கிக்கொண்டு வருகையில் தம்பி விஜியின் முதுகிலும் அஸ்தியை பாரதப்புழாவில் கரைத்துவிட்டு திரும்புகையில் உடனிருந்த இன்னொருவரின்  தோளிலும் இருந்தது. அது அம்மாதான் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

    இந்த  ஆவணப்படத்தின் மிஸ்டிக்கான பகுதிகளாக கருப்புவெள்ளையில் காட்சிப்படுத்தப்பட்டவைகளும்  அந்த வண்ணத்துப்பூச்சியும் பறக்கும் பன்றியுமிருந்தன என்றாலும் பிரேமாவின் கண்ணீரும் அவர் சிட்டுகுருவியைப்பற்றி தொண்டையடைக்கச்  சொன்னதும் தான்  ஆவணப்படத்தின் உச்சம்.

     இந்த ஆவணப்படத்தின் இறுதியில்  இயக்கம் அகரமுதல்வனென்னும் பெயரைப் பார்க்க அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.  வெள்ளித்திரையில் இதே பெயரின் ஓரெழுத்து சிவப்பில் தனித்துத் தெரிகையில் முன்வரிசையில் அமர்ந்து பார்க்கக் காத்திருக்கிறேன்.

    பிரேமாவுக்கும் அகரனுக்கும் அன்பு.

    சிவாஜி, பிரமிளா மற்றும் IOB.

    பிரமிளாவைத் தெரியும் தானே? 70- 80களில் தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நாயகி, மகள், மருமகள், தங்கை வேடங்களில் நடித்து ஒரு அமெரிக்கரைக்  காதல் திருமணம் செய்துகொண்டு கலிஃபோர்னியாவில் செட்டில் ஆகியவர். 

    ஒருவேளை மறந்திருந்தாலும்  இதைச்சொன்னால் நிச்சயம் தெரியும் தங்கப்பதக்கத்தில் ஓவராக உணர்ச்சிவசப்படும் சிவாஜியிடம்(அவர் எல்லாப்படங்களிலும் தான் ஓவர் இல்லையா) “… மாமா காஞ்சு போன நதியெல்லாம்…“ வசனம் பேசியவர். முகத்தில் பருக்கள் நிறைந்திருக்கும் அழகி.  பிரமிளா என்னும் பெயரும் இப்போது அதிகம் புழக்கத்திலில்லை. எனக்குத்தெரிந்து பிசிக்ஸ் ஷண்முகப்பிரியாவின் மகள் பெயர் தான் பிரமிளா என் இத்தனை பெரிய உலகில். ஆச்சர்யம்தான்.

    இன்று பிரமிளாவையும் அந்த வசனத்தையும் நினைத்துக்கொள்ள வேண்டி வந்தது. கல்லூரி வளாகத்துக்குள்ளேயே ஆசிரியர்களுக்காக  இந்தியன் ஓவெர்சீஸ் வங்கிக்கிளை ஒன்று இருக்கிறது. திருமணத்துக்கு முன்பு நான் இங்கு பணி புரிகையில் சம்பளம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பொள்ளாச்சிக்கிளையில் சேர்ப்பிக்கப்படும். அப்போதெல்லாம் டிஜிட்டல் பரிவர்த்தனை இல்லையே எனவே பஸ் ஸ்டேண்ட் தாண்டி நடையாய் நடந்து நேரில் சென்று தேவுடுகாத்து பணம் எடுப்போம். 

    மெய்யாலுமே வங்கிப்பணியாளர் அவரது இருக்கைக்கு வர 11 மணி ஆகிவிடும், வந்து அமர்ந்து வரிசையில் நிற்பவர்களை அவர் ஏறிட்டுப்பார்க்க மேலும் ஒரு அரைமணிநேரமாகும் பின்னரே பரிவர்த்தனை நடக்கும். பிற்பாடு இந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கிளை வளாகத்துக்குள்ளேயே வந்தது எங்களுக்கு வசதியாக இருந்தது. எங்களைப்போலவே  வங்கி அலுவலர்களும் நேரத்துக்கு வந்துவிடுவார்கள் சிறிய கிளை, சொற்பமான அலுவலர்கள் என்பதால் எங்களுடன் நட்புடன் இருப்பார்கள், துறைசார்ந்த விழாக்களுக்கு அவர்களை அழைப்பதும் அவர்கள் கலந்துகொள்வதுமாக ஒரு பெருங்குடும்பத்தின் அங்கத்தினர்களாக்த்தான் இருக்கிறோம். 

    பிரமிளாவுக்கு வருகிறேன், கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து வங்கியிலிருந்து எனக்கு //நீங்கள் வாங்கி இருக்கும் கடனுக்கான வட்டியை சரியான தேதியில் செலுத்துங்கள்// என  என் வங்கிக்கணக்கு எண்ணைக்குறிப்பிட்டு குறுஞ்செய்தி வந்துகொண்டிருந்தது.  வங்கியில் கடனேதும் வாங்கியதில்லை எனவே நேரில் சென்று சொன்னபோது அது எதாவது கணினிப்பிழையாக இருக்கும்  அல்லது கடன் வாங்கியவர் தவறுதலாக உங்கள் தொடர்பு எண்ணைக்கொடுத்திருப்பாராயிருக்கும்,  கவலைப்பட வேண்டாம் விட்டுவிடுங்கள் என்றர்கள். 

    ஆனாலும் சில நேரங்களில் இந்தத்தேதியில் கட்டனும் இல்லையென்றால்நடவடிக்கை வரும் என்றெல்லாம் செய்திவருகையில் பதறி மீண்டும்  வங்கிக்குச் செல்வேன் மீண்டும் திருப்பி அனுப்புவார்கள். 

    இன்று காலை நீளமாக ஒரு செய்தி வந்திருந்தது -//வட்டியே  மாதா மாதம் ஒன்றரை லட்சம் கட்ட வேண்டும் நீங்கள் பலமுறை தகவலனுப்பியும் கட்டவில்லை, எனவே நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம்// என்று.  பதட்டமானேன் வட்டியே லட்சக்கணக்கில் என்றால் அசல் எத்தனை லட்சம் வாங்கி இருப்பார் அந்தப் பாழாய்போன  என்  தொடர்பு எண்ணை வங்கியில் கொடுத்த கடங்காரன்(!).  

    11 மணிக்கு வங்கிக்குப் போய் “… என்னங்க இது இப்படியெல்லாம்  மெசேஜ் வருதே…“  என்றதும் நம்ம பிரமிளாவின் வசனம் போலவே அந்தப் பெண் அதிகாரி அவரது போனை எடுத்துக்காண்பித்து “…மேடம் என்னத்தை சொல்லறது ஒரு மாசமா எங்களுக்கும் இப்படி கடன் இருக்கு வட்டிகட்டனும்னு இஷ்டத்துக்கு மெசேஜ் வருது நீங்க அந்தச் செய்தியை எல்லாம் கண்டுக்காதீங்க எங்களுக்கே கடுப்பாத்தான் இருக்கு…“  என்றார். 

     “….மாமா வங்கிகணக்கு வச்சிருக்கறவங்க எல்லாம் ஒரு பிரச்சனைன்னா வங்கி அதிகாரிகளைத்தான் போய்ப்பார்க்கிறோம், ஆனா அந்த அதிகாரிகளுக்கே இப்படி பிரச்சனை வந்தா யாரால எங்களுக்குஆறுதல் சொல்ல முடியும்?…“

    « Older posts Newer posts »

    © 2026 அதழ்

    Theme by Anders NorenUp ↑