பொள்ளாச்சியில் நேச்சுரல்ஸ் அழகு நிலையத்தின் சில கிளைகள் அங்கும் இங்கும் இருக்கின்றன. அழகு நிலையம் என்றால் ரிஷப்ஷனிலும், உள்ளே சேவை செய்யவும் இருக்கும், அடர்த்தியான உதட்டுச்சாயமும் இறுக்கமான ஜீன்ஸும் அணிந்த ஒன்றிரண்டு அழகிய இளம்பெண்கள் இருக்குமிடம் என்றும் சொல்லலாம். மெய்யான அழகுச்சேவையெல்லாம் அங்கே கிடைப்பதில்லை. கட்டணமும் பெரும்பாலும் பகல் கொள்ளைதான்.
மகன்கள் முடி வெட்டிக்கொள்ள அங்கே தான் செல்வது வழக்கம். கொள்ளைப்பணம் கொடுத்து பல மணி நேரம் செலவழித்து முடிவெட்டிக்கொண்டு வெளியே வந்தால் ஜெல் தடவி படிய வாரி முடி வெட்டியது போலவேதான் தெரியும். வீடு வந்து குளித்துத் தலை துவட்டினால் பழையபடி முடி காடாக திரண்டு கிடக்கும். மாயா மாயா எல்லாம் மாயாதான்!
ஏற்கனவே நேச்சுரல்ஸில் கசப்பான அனுபவமொன்று இருந்தது. (கசப்பான அனுபவத்தை மனமுவந்து அளித்திராத நிறுவனங்களோ உறவுகளோ, மனிதர்களோ இருக்கிறார்களா என்ன?) சரண் தருண் பள்ளிக்காலத்தில் ஒரு கோடைவிடுமுறைக்கு முந்தைய , பள்ளியின் கடைசி தேர்வு நாளின் முடிவில் தருணுக்கு முடி வெட்ட அதே நேச்சுரல்ஸ்கு வந்தோம் . அவன் உள்ளே போய் நெடுநேரமானது.
வரவேற்பில் (அபூர்வமாக இருக்கும்) ஒரு ஆணும் மற்றும் சிலரும் உள்ளே செல்வதும், வெளியே வந்து கூடிக்கூடி என்னைப் பார்த்தும் பார்க்காததுபோல எதையோ தாழ்ந்த குரலில் பேசுவதுமாக இருந்தார்கள். எனக்கு கிலி பிடித்துக்கொண்டது. தருணுக்கு முடி வெட்டுகையில் காயம் ஏதோ ஆகியிருக்குமோவென்று. சரண் ’’.. அப்படியெல்லாம் இருக்காதும்மா, கத்தியெல்லாம் இல்லை, மெஷினில் தான் வெட்டுவாங்க..’’ என்றான்.
ஒருவழியாக இரண்டு பேர் என்னிடம் வந்து காத்திருக்கும் மற்ற வாடிக்கையாளர்களுக்கு கேட்காதபடி ’’…மன்னிக்கனும் மேம், உங்க மகனுக்கு முடி வெட்டினவர் புதுசு, தெரியாம பின்னந்தலையில் பெரிய சொட்டையை உருவாக்கி விட்டார், இந்த சேவைக்கு (?) நீங்கள் கட்டணம் தரவேண்டாம்..’’ என்றார்கள். நான் கடுமையாக ஒன்றும் சொல்லக்கூடாதென என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு மகன்களை அழைத்துக்கொண்டு வெளியேறினேன். அந்த விடுமுறையில் நாங்கள் திட்டமிட்டிருந்த பயணத்தை தருணின் இந்தசிகை அலங்காரத்தால் ரத்து செய்துவிட்டு வீட்டிலேயே இருந்தோம்.
பின்னரும் சென்ற வாரம் வரை நேச்சுரல்ஸ்க்கே ஏன் சென்றோமென்றால் பொள்ளாச்சியில் எரியும் கொள்ளிகளில் நேச்சுரல்ஸ் கொஞ்சம் நல்ல கொள்ளி எனவேதான் அதில் சுட்டுக்கொண்டோம்.
நானும் அங்கே செல்வதுண்டு உறுப்பினர் அட்டைகூட இருந்தது. (கவனிக்கவும் past tense) அழகு சிகிச்சை, சேவைக்கெல்லாம் போவதில்லை. அவ்வப்போது புருவங்களைத் திருத்திக்கொள்வதும், தினமும் சாக்பீஸ் பிடித்தும், தேங்காய் உரித்தும், காய்கறி வெட்டியும் கைகள் காய்ந்துபோய், எப்போதும் தோட்டத்து மண்ணில் வேலைசெய்து பாதங்கள் வறண்டு போவதால் அடிக்கடி பெடிக்யூர் மெனிக்யூர் செய்துகொள்வதுண்டு.
அரிதாகவே சருமப்பாதுகாப்புக்கு செல்வேன். கடந்த மாதம் கடும்பனியில் லவ்டேலிலும் வெள்ளிமலையிலும் இருந்து , வீட்டிலும் அதிகாலை நடைப்பயிற்சி சென்று, வழக்கமாக கருத்திருக்கும் முகம் இப்போது இருண்டுவிட்டிருந்தது. எனவே நேச்சுரல்ஸ் சென்று அவர்கள் காட்டிய விலைப்பட்டியலில் இருந்த எனக்குப்பிடிக்கவே பிடிக்காத கரீனா கபூரின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து,சரும pH யை சற்றுக் குறைத்து, சருமத்துளைகளின் அழுக்கை நீக்கி, cleansing செய்து, கொலாஜனை பூஸ்ட் செய்வதாகச்சொன்ன ஒருசிகிச்சையை கணிசமான தொகையொன்று போனாலும் பரவாயில்லை என்று தேர்வு செய்தேன்.
நிச்சயமாக 1 மணி நேரத்தில் முடித்து விடுவேன் என்று வாக்குறுதி அளித்து இரண்டரை மணிநேரமெடுத்துக் கொண்ட அந்த சிகிச்சையில் என்னை பாடாய்ப்படுத்தி சருமத்தை பெரும் வன்முறைக்குள்ளாக்கினார்கள்.
நான் ’’…மெதுவா பண்ணுங்கம்மா வலிக்குது….’’ என்று சொன்னபோது சருமம் தளர்ந்திருப்பதால் அப்படி வலிக்கிறது என்று அவள் சமாதானம் செய்ததைக்கூட மன்னித்து விட்டேன் (சருமம் நன்றாக இருந்தால் ஏன் நேச்சுரல்ஸ் வருகிறோம்?) நீங்க அடிக்கடி அரசன் ப்ளூ சோப் போட்டு முகம் கழுவினா நல்லது என்று அந்த சேவை (?????) செய்த பெண் சொன்னபோதுதான் தேவியின் கட்டுக்கள் தளர்ந்தன.
அரசன் சோப் போட்டுக்கச் சொல்லும் பரிந்துரையை குக்கிராம தெருமுனை அழகு நிலையங்களில் கூட பரிந்துரைக்க மாட்டார்களே! இதற்கெதற்கு நேச்சுரல்ஸ்? என்று கடுமையாக எதிர்வினையாற்றிவிட்டு உறுப்பினர் அட்டையை ரிஷப்ஷன் டெஸ்கில் உடைத்துப்போடலாமேன்னும் முடிவை’’ மீ அதிகமா கோபப்படாதே ப்ளீஸ் ‘’ என்னும் சரணின் குரல் காதில் கேட்டதால் செய்யாமல் வீடு வந்து சேர்ந்தேன். வீடு வந்து அதை உடைத்துபோட்டேனென்று பாருங்கள்!
இது பல மூடுவிழாக்களுக்கான காலம் போலிருக்கிறது. சகித்துக்கொண்டு தக்கவைத்துக் கொண்டிருப்பவற்றின் கதவுகளை ஒவ்வொன்றாக அறைந்து சாத்திப்பூட்டி சாவியை தலையைச்சுற்றித் தூர வீசிக்கொண்டிருக்கிறேன்.
Highly unnatural!
Leave a Reply