லோகமாதேவியின் பதிவுகள்

Category: பயணம்

பாண்டவதூத பெருமாள்- காஞ்சீபுரம்

இன்று மகன்களுடன் காஞ்சிபுரம் வந்து ஸ்ரீபாண்டவத்தூது பெருமாளை தரிசித்தோம். ஜெயமோகன் அவர்களின் காஞ்சி –ஊட்டி பதிவு வாசித்தபின்னர் இங்கு வரவேண்டும் என விரும்பினேன். கோடை விடுமுறை முடிந்து கல்லூரி திங்கட்கிழமை மீண்டும் திறப்பதால், இப்போது வராவிட்டால் இனி அடுத்தது நவம்பரில் தான் முடியும் எனவே சரண் அப்பாவை ராணிப்பேட்டைக்கு டிக்கட் போடச்சொல்லி நேற்று புறப்பட்டு வந்தோம். இத்தனை வருடத்தில் அவரின் உருக்காலை இருக்குமிடத்திற்கு நானாக வருவதாகச்சொன்னது இதுவே முதல் முறை என்பதால், ஏதோ காரணமிருக்குமென்று யூகித்திருந்தாலும் மனமகிழ்ந்து ரயிலடிக்கே எங்களை அழைத்துச்செல்ல வந்திருந்தார்.

வந்ததும் வராததுமாக பெருமாள் கோவிலுக்கு நாளை காஞ்சிபுரம் போகனும்னு சொன்னதும், எந்த உணர்ச்சியும் முகத்தில் காட்டாமல் ஜெயமோகன் எழுதியிருந்தாரே அந்த கோவிலுக்கா? என்றார். ஆமென்றேன் . ஜெ’வின் தளத்தில் அந்தகோவிலைப்பற்றி அவர் வாசித்திருக்க வாய்ப்பில்லை என் முகத்திலிருந்து வாசித்திருப்பார்.

ரோகிணி நட்சத்திரத்துக்குரிய நாள் இன்று , (13/6) என்பதால் கோவிலில் நல்ல கூட்டம். ரோகிணி நட்சத்திரத்துக்காரர்களும் அவர்களின் குடும்பமுமாக நெரிசலாக இருந்தது. அடிப்பிரதட்சணமும் அங்கப்பிரதட்சணமும் நிறையபேர் செய்துகொண்டிருந்தார்கள். நீண்ட வரிசையில் காத்திருந்து, பொறுமையாக தரிசித்தோம். அந்தக்கரியதிருமேனியின் அழகைச்சொல்ல வார்த்தையில்லை. திவ்யதேசங்களில் ஒன்றான, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மிகப்புராதானமான, மகாபாரதத்துடன் தொடர்புள்ள இக்கோவிலுக்கு, செந்நாவேங்கை வாசித்துக்கொண்டிருக்கும் போது வந்தது எனக்கு பெரும் மகிழ்வளித்தது. இதற்கு முன்னரும் காஞ்சி வந்திருந்தாலும் இக்கோவிலைப்பற்றி, ஜெயமோகன் அவர்கள் எழுதியதற்கு முன்னர் தெரிந்திருக்கவில்லை.

பலர் பெருமாளுக்கு பலவகைப்பாயசம் படைத்து வழிபட்டார்கள். வரிசையில் எனக்கு முன்பாக நின்றிருந்த ஒருவர் தீர்த்தம் வாங்கியபின்னும் நகராமல் கையை நீட்டியபடியே நின்றிருந்தார். நகருங்கோ, என பட்டர் சொன்னதும் விபூதி கொடுங்க என்றார். பட்டர் முறைத்துவிட்டு பெருமாள் ’’இந்த ஷேத்திரத்தில தீர்த்தம் மட்டும் தான் நீங்க இப்போ சொன்ன வார்த்தையை இங்கே எங்கயும் சொல்லப்படாது’’ என்றார்., கோவில்களில் அறிந்துகொள்ளவும் கடைப்பிடிக்கவும் வேண்டிய எளிய அடிப்படை விதிகளைக்கூட தெரிந்துகொள்ளாமல் இருப்பது நான் மட்டுமல்ல எனக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுக்குமளவிற்கு இன்னும் சிலர் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு ஒரே மகிழ்ச்சி. விபூதி கேட்டவரைப்பார்த்து மிகப்பிரியமாக புன்னகைத்துவிட்டு தீர்த்தம் வாங்கி, சடாரி வைத்துக்கொண்டு வெளியே வந்தேன்.

கோபுரத்தில், எங்கள் வீட்டு அகத்தி மரத்துக்கு வருபவை போலவே அளவில் பெரிய பச்சைக்கிளிகள் ஏராளமிருந்தன, கூடவே அணில்களும். பிராகாரமெங்கும் கிளிகளுடையதும், குளத்தின் சுற்றுச்சுவரில் பக்தர்கள் வைக்கும் தானியங்களுக்காக வரும் புறாக்களுடையதுமாக நிறைய இறகுகள் அங்குமிங்குமாக கிடந்தது. இங்கு வந்ததின் நினைவாகஅங்கிருந்த ஒரு குஞ்சுக்கிளியின் பூஞ்சிறகொன்றினை எடுத்துக்கொண்டேன். குருதிச்சாரல் புத்தகத்திற்குள் அச்சிறகிருக்கிறது இப்போது, இனி எப்போதும்

காஞ்சியில் இன்னும் பல கோவில்களுக்கும் சென்றோம். பெருமழை பெய்துகொண்டிருக்கும் பொள்ளாச்சியிலிருந்து புறப்பட்டு இங்கு முகத்திலறையும் வெயிலில் அலைந்து உடல் களைத்தாலும் உள்ளம் குளிர்ந்திருந்தது. இனி துவங்கப்போகும் கல்வியாண்டிற்கான ஒட்டுமொத்த உற்சாகத்தையும் சக்தியையும் இந்தக்கோவிலிலிருந்து திரட்டிக்கொண்டேன்.

வெண்முரசினுடனேயே வாழ்ந்துவருதாகவே எப்போதும் உணர்பவள் நான், குருதிச்சாரலில் தூது வந்த கிருஷ்ணரின் கோவிலுக்கு நானும்வந்ததில், வெண்முரசிற்கு இன்னும் நெருக்கமானதுபோல உணர்கிறேன், அதற்காகவேதான் வந்தேன்.

(13-ஜூன் -2016)

சர்க்கார்பதி – நிறைவு

மேற்குத்தொடர்ச்சிமலையின் ஒரு பகுதியான ஆனைமலையிலுள்ள கோழி கமத்தி, ஆழியார் அணை, நவமலை, பவர்ஹவுஸ், கொல்லத்திப்பாறை போன்ற இடங்களில் மலமலசர் என்ற பழங்குடிகள் காலங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். மலையில் வாழ்பவர்கள் மலைமலசர், மலையடிவாரத்தில் வாழ்பவர்கள் பதிமலசர் என்று இவர்களுக்குள்ளேயே இரண்டு பிரிவுகள் உள்ளது.

இவர்களில் மகா மலசர்கள் அல்லது மலமலசர்கள் கோவை, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் உள்ள சர்க்கார்பதி கிராமத்தில் பலதலைமுறைகளாக  வசித்து வருகின்றனர்.  மேல் சர்க்கார்பதி, கீழ் சர்க்கார்பதி என இரண்டு கிராமங்கள் இருக்கின்றன.  இரண்டு கிராமங்களிலும் சேர்த்து 130 பழங்குடியினர் குடும்பங்கள் இருக்கின்றன.  பெரும்பாலும் வருடத்தில் 10 மாதங்கள் மழைப்பொழிவு இருக்கும் கிராமமென்பதால் பசுமை அடர்ந்து கிடக்கும் வனப்பகுதியாக இருக்கிறது சர்க்கார்பதி. மழைவாழ்மக்கள் குழந்தைகளுக்கான் துவக்கப்பள்ளியும் அங்கு இருக்கின்றது.

மேல்சர்க்கார்பதியில் ஒருசில மலமலசர் பழங்குடியினரே இருக்கின்றன இவர்களின் தெய்வம் மகா மாரியம்மன். இவர்கள் ஒருசில சிறுதெய்வங்கள மூங்கில் தப்பைகளால் தடுக்கப்பட்ட பாறைமீது எழுப்பப்பட்ட எளிய சிறு கோவில்களில் வழிபடுவதோடு அனைவருக்கும் பொதுவான இறையாக மாகா மாரியையே வழிபட்டு வருகின்றனர்

பதிமலசர்கள் எனப்டும் கீழ்சர்க்கார்பதியை சேர்ந்த பழங்குடியினர் அங்குள்ள கோவிலில் அருள் புரிந்துகொண்டிருக்கும் குண்டத்து மாரியம்மனை வணங்குகிறார்கள்.

மேல்சர்க்கார்பதியின் மகாமாரியம்மனை பலஆண்டுகாலம் இப்பழங்குடியினர் சிற்றாலயமொன்றீலேயே வழிபட்டுவந்த நிலையில் கடந்த 1989 ஆம் ஆண்டு இங்கு கோவில் எழுப்பப்பட்டது.  மூன்று வருடங்களுக்கு முன்னரே குடமுழுக்கு நடைபெற்றிருக்கிறது.

சின்னதும் பெரியதுமாக அருவிகளும் சிற்றாறுகளும் நிறைந்த வனப்பகுதியென்பதால் இங்கு மின் உற்பத்தி நிலையமும் உள்ளது. இதன்பொருட்டான் தடுப்பணையொன்றின் அருகில் ஏரளமான கூந்தல்பனைகளும்,அரசும், வில்வமும், ஆலும், அத்தியும் இன்னபிற காட்டுமரங்களும் சூழ ,அருவியின் ஓசை பிண்னணியில் ஒலித்துக்கொண்டே இருக்க தொடர்மழையிலும், அடர்நிழலிலுமாக நிரந்தரமாக குளிர் நிரம்பியிருக்கும் அந்த இடத்தில்  மிகச்சிறிய அழகிய கோவிலில் மகாமாரியம்மன் அருள்பாலிக்கிறாள். கோவில் வளாகமெங்கும்  கால் வைக்க இடமின்றி வில்வமரத்தின் கனிகள் உதிர்ந்து தரையெங்கும் நிறைந்து கிடக்கின்றன. கோவில் வளாகமே இயற்கையான  சூழலில் காட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. பல்லாண்டு வயதுள்ள அரசப்பெருமரங்கள் அதிகம் இருப்பதால் அவற்றின் சின்னஞ்சிறு கனிகள் மணலைப்போல தரையெங்கும் நிறைந்துகிடக்கின்றன.

எதேதோ பச்சிலைகளின் வாசம் நாசியில் நிறைய கோவிலுக்கு சென்றால் நுழைவு வாயிலிலேயே வனக்காவலர்களின் காவல் கண்காணிப்புக்கோபுரம் அமைந்துள்ளது. ஏராளமான இடத்தில் சுற்றிலும் பரிவாரத்தெய்வங்கள் தனித்தனியே நல்ல இடைவெளியில் அமைந்திருக்க மத்தியிலிருக்கும் சிமிழ்போன்ற சிறு ஆலயத்தில் அம்மனிருக்கிறாள்

 சற்றுத்தள்ளி சிறிய பீடங்களில் துர்க்கையும், உயரமான மேடையில் நவக்கிரகநாயகர்களும் உள்ளனர். ஆலயத்திற்கு எதிரே பாசிபிடித்திருக்கும் கற்படிகளில் சற்று தாழ்வான பகுதியில் இறங்கிச்சென்றால் சப்தகன்னியரின் சன்னதி. ஆண்டாளைப்போல கொண்டையிட்ட சர்வலட்சணம் பொருந்திய  எண்ணைப்பூச்சில் மெருகேறி பளபளக்கும் சப்தகன்னியரின் சிலைகளிலிருந்து கண்ணை அகற்றவே முடியாது். அத்தனை அழகு. சற்றுத்தள்ளியிருகும் மிகபெரிய அரசமரத்தடி மேடையில் விநாயகர், மேடையின் வெளிப்புறமர்ந்திருக்கும் தக்‌ஷிணாமூர்த்தியுடன் அருள்பாலிக்கிறார்.

மனித சஞ்சாரமற்ற அவ்விடத்தின் பரிபூரண தனிமையில்,  ஒவ்வொரு மரத்திலும் கிளையிலும் இலைகளினசைவிலும் இறைமையை உணரலாம்.  சுப்ரமணி என்னும் பூசாரி அம்மனுக்கு தினசரி 3 வேளை பூசைகளை செய்துகொண்டிருக்கிறார்.. ஏராளமான பறவைகளின் கீச்சிடல், மரங்களில் விளையாடிக்கொண்டிருக்கும் குரங்குகளின் ஓசை, அருவியின் பேரிரைச்சல் மூலிகைவாசம் இவற்றுடன் கோவில் மணியோசையும் இணைகையில் உடல் மெய்ப்பு கொள்கின்றது. அம்மன் மிக எளிய பச்சைப்புடவையில் மூக்குத்தி மின்ன காலடியின் இரு அகல்விளக்குகளிலும், ஒற்றை தொங்கு விளக்கிலும் தீபச்சுடர் மலர்மொட்டுப்போல் அசையாது சுடர்விட புன்னகை தவழ அமர்ந்திருக்கிறாள்

அன்று அமாவாசை. வனச்சரக உயரதிகாரியொருவரின் கட்டளையாக அம்மனுக்கும் சப்தகன்னியருக்கும் பிற  மூர்த்திகளுக்கும் அகன்ற அரசிலையில் சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் படைக்கப்பட்டிருந்தது. 

இந்த மகாமாரியமன் ஆனைமலை மாசாணியின் தங்கை என கருதப்படுகிறாள். உலகபுகழ்பெற்ற மாசாணியம்மன் பூமிதித்திருவிழாவின்  கொடியேற்றுதலுக்கு சர்க்கார்பதி வனத்திலிருந்தே பெருமூங்கில் பல்லாண்டுகளக வெட்டிவரப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் மூங்கிலை கொடிமரத்துக்கென வெட்டுகையிலேயே அடுத்த ஆண்டுக்கான மூங்கிலையும் தெரிவு செய்து மஞ்சள் துணி சுற்றி அடையாளம் செய்துவைத்து அடுத்த ஒரு வருடம் அதை கடவுளாகவே எண்ணி பூசிக்கிறார்கள் மலசப்பழங்குடியினர்.அந்த மிகநீளமான பருமனான கொடிமர மூங்கில்களை வெட்டி இங்கு மகாமரியம்மன் சன்னதியில் வைத்து பூசித்து அனைவருக்கும் அன்னதானமிட்டபின்னரே பலகிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஆனைமலைக்கு  கால்நடையாக பக்தர்களால், சுமந்து செல்லப்படுகின்றது. இந்நிகழ்வும் பன்னெடுங்காலமாகவே மிகப்பெரும் விழாவாக இங்குள்ள பழங்குடியினரால் கொண்டாடப்படுகின்றது.

எதிரிலிருக்கும் அருவிக்கரையில் ஏராளமான் காட்டு நாவல் மரங்கள் ,கொழுத்த, விரல்களில் அப்பிக்கொள்ளும் அடர் ஊதா சாறு நிரம்பிய கனிகளை உதிர்த்தபடி நின்றிருக்கின்றன. சுற்றிலும் காட்டு அத்திமரங்களும் நிறைந்துள்ளன. மரத்தடியில் கொழுத்த இளஞ்சிவப்பு அத்திபழங்கள் ஆயிரக்கணக்கில் கொட்டிக்கிடக்கின்றன.

PC Tharun

மிக நெருக்கத்தில் மான்கூட்டங்களையும், திமில் பெருத்த காட்டெருதுகளையும், பெயர்தெரியா பல பறவைகளையும், அரிதாகவே காடுகளில் காணக்கிடைக்கும் மரங்களிலிருந்து மரங்களுக்குத் தாவும் பறக்கும் பாம்புகளையும் இங்கு காணமுடிந்தது.

Chrysopelea ornata  Golden flying snake- @ sarkarpathi forest- PC Tharun
இரையை விழுங்கும் பாம்பு- Pc Tharun

ஆலயத்தின் உள்ளே மட்டுமல்ல மகாமாரியம்மனை அங்கு எல்லா இடத்திலும் உணரமுடிந்தது அடர்ந்த அந்தக்காடும் அதனுள்ளே வீற்றீருக்கும்  பேரியற்கையென்னும் சக்தியின் அங்கமான அம்மனுமாக அந்தத் தலம் அளிக்கும் உணர்வை அங்கு சென்றால்தான் உணர முடியும்.

அங்கே வழங்கப்பட்ட சர்க்கரைப்பொங்கலை அந்த இறையனுபவத்தின் சுவையுடன் கலந்து உண்டோம் நான் காட்டிற்குள் நுழைகையில் மிஸ், பின்னர் லெக்சரர், அதன்பின்னர் கல்லூரி புரஃபஸர், பின்னர் கோவிலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் அக்கா ஆகியிருந்தேன். எதிர்ப்படும் அனைவரிடமும் ’’அக்கா வந்திருக்காங்க’’ என்று வாயார மனமார சொல்லியபடியே வந்தார். அதுவும் மனநிறைவை அளித்தது. .துவாரகர் நல்ல கீர்த்தனைகள் பாடுவாரென்பதையும் அப்படி கோவில்களில் கீர்த்தனை பாடுகையில்தான் தன் வருங்கால மனைவியை சந்தித்திதாரென்பதையும் சொன்னார். அத்திப்பழங்களையும் மலைநெல்லிகளையும் நாவல்களையும் சேகரித்து கொடுத்தபடியே இருந்தார்.

 மீண்டும் பள்ளிக்கு சென்று மதிய உணவுண்டோம். கேரியரை பார்த்ததுமே “அக்கா அதிகாலை 4.30க்கு எழுந்திரிச்சாத்தான் இதெல்லாம் செஞ்சுகொண்டு வரமுடியும்” என்றார். ஆமென்றேன். வாழ்வின் இயங்கியலில் பிறரையும் அவர்களின் பக்கக்து நியாய அநியாயங்களையும் அறிந்தவர் என்று அவர் மீது கூடுதலாக மரியாதை வந்தது எனக்கு. உணர்ச்சி வசப்பட்டு 10 பேருக்கான் உணவை கொண்டு வந்திருந்தேன்

நிறைய உணவு மீந்துவிட்டிருந்தது. காரில் அவற்றை எடுத்துக்கொண்டுபோய் மழைவாழ்மக்கள் குடியிருப்பில் நிறுத்தி ’’சந்திரா’’ என்று  துவாரகர் குரல்கொடுத்ததும் 10/12 வயதுச்சிறுமி எட்டிப்பார்த்தாள். அவளது தூய அழகை எப்படி எழுதியும் விளக்கிவிட முடியாது. மிகச்சரியான பளபளக்கும் மான் நிறம்,.மாவடுபோல சிறிய பளிச்சிடும் அழகிய கண்கள், சின்ன மூக்கு சின்னஞ்சிறு குமின் உதடுகள். மையிட்டுக்கொள்ளவில்லை பவுடர் பூச்சோ வேறு எந்த ஒப்பனைகளுமோ இல்லை ஒரு சின்ன சாந்துபொட்டு புருவ மத்தியில் ,வெள்ளைப்பிண்னணியில் நீலப்பூக்கள் போட்ட மலிவுவிலை நைட்டி, கையில் எதற்கோ ஒரு சின்னத் தடி. உயரமான இடத்திலிருந்து துள்ளலாய் இறங்கி வந்து ’’என்ன சார்’’ என்றாள். சாருடன் புதியவர்களைக்கண்ட வெட்கம் உடனே கண்களில் குடியேறியது. எனக்கு அவள் மீதிருந்து கண்களை விலக்கவே முடியவில்லை. அவளை தொட்டுக்கொண்டு மீதமிருக்கும் உணவுகளை வாங்கிக்கொள்வாளா என்று கேட்டேன் மகிழ்ந்து சரியென்று சொல்லி மீண்டும் துள்ளிக்கொண்டு மேலேறிச்சென்று சில பாத்திரங்களுடன் வந்தாள். உணவுகளை அதில் மாற்றிவிட்டு நான் வழக்கமாக கல்லூரிக்கு ஊறுகாய் கொண்டுபோகும் ஒரு சிறு எவர்சில்வர் சம்புடத்தை ஊறுகாயுடன் அவளிடம் கொடுத்து ’’என் நினைவா இதையும் நீயே வச்சுக்கோ’’ என்று கொடுத்தேன் கண்களில் ஒரு கூடுதல் மின்னலுடன் சரியென்று தலையாட்டிவிட்டு மேலே ஏறிச்சென்று அங்கிருந்த குட்டிகுட்டி தடுப்புக்களுடன் கூடிய மண்சுவர்களாலான வீடு என்னும் அமைப்புக்குள் சென்று மறைந்தே விட்டாள்.

என்னதான் நாம் உரமிட்டு நீரூற்றி பராமரித்து வளர்த்தாலும் காட்டுச்செடிகளின் தூய அழகை வீட்டுசெடிகளில் காணவே முடியதல்லவா? சந்திராவின் சருமப்பளபளப்பு ஒளிவிட்ட சின்னக்கண்கள், துள்ளல், முகமே சிரிப்பாக வந்துநின்றது, அவளது கள்ளமின்மை எல்லாமாக என் மனதில் இனி என்றைக்குமாக நிறைந்திருக்கும். அம்மனை மீண்டும் தரிசித்தேனென்றுதான் சொல்லனும்

மகா மலசர்களின் வீடுகளுக்கு சென்று சிலரைச் சந்தித்து பேசினேன். பச்சை தென்னை ஓலை முடைந்துகொண்டிருந்த லச்சுமி என்னும் ஒரு மூத்த பெண்ணிடம்  பேசினேன்.

லச்சுமி

புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். தருணுக்கு தேவையான பல அரிய புகைப்படங்கள் கிடைத்தன. அருவியொன்றில் கேன் நிறைய தண்ணீர் பிடித்துக்கொண்டு சூடாக இட்லி வைத்து சாப்பிட அகன்ற பசும் தேக்கிலைகளையும் நிறைய பறித்துக்கொண்டு சேம்புச்செடிகளும் விதைகளுமாக  காரையே ஒரு சின்ன வனமாக மாற்றியபின்னர்  அனைவருமாக கிளம்பினோம்.

கிளம்புகையில் 2 கீர்த்தனை பாடுவதாக சொல்லிக்கொண்டே இருந்த துவாரகரிடம் நான் ’’அட கீர்த்தனையா, பாடுவீங்களா’’ என்று கேட்கவே இல்லியே!  

துவாரகரை அவரது தோப்பில் விட்டுவிட்டு சூர்யாவையும் அவனது வீட்டில் விட்டுவிட்டு விடைபெற்றுக்கொண்டு வந்தோம்.

இரவு நல்ல களைப்பில் சீக்கிரம் உறங்கப்போகையில் தான் நினவு வந்தது அந்த பிரதாப்  வரவே இல்லை டிசி வாங்க.

இந்த பள்ளிக்கு மாறுதலை வேண்டி விரும்பிக் கேட்டு வாங்கி 8 வருடங்களாக வேலை செய்துகொண்டிருக்கும் துவாரகரின் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் அன்பும் ஏற்பட்டுவிட்டது Ethnobotany யில் ஆய்வுமாணவிகள் என் வழிகாட்டுதலில் பல பழங்குடியினரின் தாவரப்பயன்பாடுகள் குறித்து ஆய்வு செய்திருப்பதால் பல மழைவாழ் மக்களின் வாழிடங்களுக்கு பலமுறை சென்றிருக்கிறேன் எனினும் சர்க்கார்பதி ஒரு புதிய நிறைவான அனுபவம்.

——————————————————-x————————–

சர்க்கார்பதி -2

வனத்துவக்கத்தின் சாலை

அவரின் தோப்பிலிருந்து காடு 30 கிலோ மீட்டர்தான். பத்து கிலோ மீட்டர் தாண்டியதும் ஊரெல்லைகள் முடிவுற்று காடு துவங்கிவிட்டது. சீவிடுகளின் இடையறாத சத்தம் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது பச்சிலை வாசனையும் காட்டின் எல்லையில் social forestry செயல்பாடுகளால் நட்டுவைக்கப்பட்டிருக்கும் யூகலிப்டஸ் மரங்களின் வாசனையுமாக பசுமை  நுரையீரலை நிறைத்தது.  20 கிலோ மீட்டருக்கும் மனித சஞ்சாரமே இல்லை. இணையாகவோ எதிரிலோ ஒரு வாகனம்கூட வரவில்லை மயில்கள் அடிக்கடி எதிர்ப்பட்டன. யானைச்சாணமும் வழியெங்கும் இருந்தது

.

துவாரகரும் செந்திலும்,

காடு வர 20 நிமிடங்கள் ஆனது அதற்குள் துவாரகநாதரின் சுயசரிதையை 400 /500 பக்கங்களுக்கு எழுதும்படியான அளவுக்கு எனக்கு அவரைக்குறித்த தகவல்கள் கிடைத்திருந்தது. அவரது குடும்பம் சகோதர சகோதரிகள் அவர்களின் திருமண உறவுகள் குழந்தைகள், குழந்தைகளின் இயல்புகள், குறும்புகள். அண்ணன் மகள் தேசிய அளவில் விளையாட்டு வீராங்கனை; விவசாயியாக தன் வாழ்வு அவர் படிப்பு வேலை காதல் (ஆம் காதலியைத்தான் கைப்பிடிக்க விருக்கிறார்)  சில வருடங்களுக்கு முன்பாக இறந்துபோன அவரின் தந்தை சமீபத்தில் இறந்த அவரது தாய், அவருக்கும் வேதியியலுக்கும் உள்ள தொடர்பு (அவர் chemistry mphil.)  அவருக்கும் பெருமாளுக்கும் உள்ள நெருங்கின தொடர்பு (இறைவன் பெருமாளே தான்) இப்படி அநேகம் தெரிந்தாகிவிட்டது.

சிற்றாறுகளும் ஓடைகளும் குறுகிட்டன. கொஞ்சம் பெரியதாகவே இரைச்சலுடன்  இருந்த ஒரு ஆற்றின் கரையில் செக்போஸ்ட் இருந்தது 3 சீருடை வனக்காவலர்கள் இருந்தார்கள். துவாரகரை அவர்கள் புன்சிரிப்புடன் வரவேற்றனர். தகவல் சொல்லி அனுமதி வாங்கி உள்ளே சென்றோம். காவலர்களிடம் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்யும் தன் உறவினர் என்று என்னை அறிமுகப்படுதினார் துவாரகர்.

ஒற்றையடிப்பாதை கற்களும் குழிகளுமாக, நீண்டு சென்று கொண்டே இருந்தது 10 /12 வயதுடைய  ஒருசில  பழங்குடிச்சிறுவர்கள் எதிர்ப்பட்டார்கள். காரை நிறுத்தி துவாரகர் இறங்கி அதில் உயரமான ஒருவனை தோளைப்பிடித்து உலுக்கி ’’டே, கெளசிக்கு, பிரதாப்ப வரச்சொல்லுடா ஸ்கூலுக்கு, அவன் இன்னும் tc வாங்கலை நேத்தும் வந்தேன் ஆளே வரலை’’ என்றார். அவன் இவருக்கு எந்த பதிலும் சொல்லவில்லை அவன் உடல்மொழியிலும் ஒரு ஆசிரியரை, அதுவும்  தலைமைஆசிரியரை கண்ட பாவனை ஏதும் தெரியவே இல்லை கண்களில் மட்டும் புதியவர்களை. வெளியாட்களைக்கண்ட வெட்கம் கொஞ்சூண்டு, அவ்வளவுதான்.வழியில் அவ்வப்போது எதிர்ப்பட்ட ஒரு சிலரிடமும் அந்த பிரதீப் இன்னும் tc வாங்கலைன்னும் அவனை வரச்சொல்லியும் அதை வாங்கினாலே அவன் 6 ஆம் வகுப்பில் சேரமுடியுமென்றும் சொல்லிச்சொல்லி மன்றாடினார்.

எனக்கு என்ன ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்ததென்றால் இவரைக்கண்டால் அங்கிருப்பவர்களிடம் தெரியவேண்டிய அந்த பணிவுகலந்த உடல்மொழி இல்லவே இல்லை.

அடர்ந்த காடு, காட்டு மாமரங்கள், அத்திகள், நாவல்பெருமரங்கள் இந்தனை வருட தாவரவியல் அனுபவத்தில் நான் பார்த்தும், கேட்டும், அறிந்துமிராத  பெயர் தெரியா பல மரங்கள், செடி கொடிகள் என்று நல்ல சூழல் தருண் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல இருந்தான் இப்படி ஒரு காட்டில் நாளை செலவழிக்க வேண்டும் என்பது  அவனின் கனவு. நினைத்துக்கொண்டாற்போல சடசடவென மழையும் பின்னர் இளவெயிலுமாக காலநிலை விளையாட்டுக்காட்டிக் கொண்டிருந்தது

.

காட்டின் முகப்பில் காட்டிற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் பாழடைந்த என்று சொல்லுவதற்கு கொஞ்சம் முந்தின நிலையிலிருக்கும்  வனக்காவலர்கள் மற்றுமதிகாரிகளின் சில குடியிருப்புக்கள், ஒன்றையொன்று தழுவிக்கொண்டிருக்கும் இரண்டு  நெட்டிலிங்க மரங்களால் பந்தலிடப்பட்ட அழகிய முகப்புடன்  சின்னதாக சிமிழ் போல வனச்சரக அலுவலகம் இவற்றை கடந்தால் ஒரு அஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த கட்டிடம் , அதன் வாசலிலிருந்த கம்பிக்கதவு பிய்த்தெறியப்பட்டிருந்தது. சிவப்பு சிமெண்ட் போட்ட வழவழப்பான் திண்ணையும், சற்று தூரத்தில் 3 நாய்களும்

பள்ளிக்கூடம்

 அந்த திண்ணை, உள்ளே இரண்டு நாற்காலிகளும் ஒற்றை மேசையும் போட்டிருக்கும் ஒரு ஆசிரியர் அறை , இரண்டு வகுப்பறைகள்,  ஒரு சின்ன இடைநாழியை கடந்தால் விறகடுப்புடன் ஒரு சமையலறை. யூகலிப்டஸ் மரங்களின் விறகுகள் உள்ளிருக்கும் பிசினின் பளபளப்புடன் அடுக்கி வைக்கபட்டிருந்தது.அதுதான் பள்ளிக்கூடம்.

யானைகள் சேதப்படுத்திய கேட் இருந்த இடம்

சர்கார்பதிக்கு காலையும் மாலையுமாக 2 முறைகள் மட்டும் வரும் ஒரே அரசுப்பேருந்தை தவறவிட்டால் இங்கேயே அவர் தங்கிக்கொள்ள வசதியாக அக்கட்டிடம் வீடும் பள்ளியும் இணைந்த ஒரு அமைப்பாக இருந்தது. கட்டிடத்தை ஒட்டி கழிவறை குளியலறை. பின்புறமாக காட்டுநெல்லிப்பெருமரமொன்று. சொப்பிக்காய்த்தலென்று கொங்கு வட்டாரத்தில் சொல்லிக் கேட்டிருக்கவில்லையெனில் அம்மரத்தைப் பார்த்துக்கொள்ளலாம். கீழே நிலமெங்கும் கொட்டிக்கிடந்த சிறு மலைநெல்லிக்கனிகளின் சுவையை எழுதியெல்லாம் தெரிவிக்க முடியாது. உண்மையில் இயற்கையின் சுவையது.

 எல்லாருமாக திண்ணையில் அமர்ந்து  கொண்டு வந்திருந்த  மசாலா தேநீரை அருந்தினோம் இளமழை திடீரென பெய்தது அந்த மழைக்கு, குளிருக்கு தேநீர் மிக இதமாக இருந்தது. நாய்கள் மூன்றும் மெல்ல நடந்து வந்து திண்ணைக்கு அருகில்  சுருண்டு படுத்துக்கொண்டு சோம்பலாக கொட்டாவி விட்டன. சமீபத்தில் ஜெ சொல்லியிருந்தார் நாய்கள் இப்படி மனிதர்களின் அரு்காமையில்  இருக்க பிரியப்படும் என்று.

கேட்டை சமீபத்தில் யானைகள் பிய்தெறிந்துவிட்டது என்றார் துவாரகர். பள்ளியைச்சுற்றிலும் யானைச்சாணம் கிடந்தது. எப்போதும் யானைகள் சுற்றித்திரியும் சூழல் என்பது ஆர்வமூட்டியது. கூடவே இந்த மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு கற்றுத்தரவென அவர் மெனக்கெடுவதையும் அங்குவிரும்பி மாற்றல் கேட்டுக்கொண்டு தினம் அந்த அத்துவானக்காட்டுக்கு வந்து பணிசெய்துகொண்டிருப்பதையும் நினைத்து மனம் கனத்தது. ஆசிரியமென்பது ஒரு தொழிலல்ல வாழ்வுமுறையென்பதை எனக்கு உணர்த்திய வெகுசிலரில் துவாரகரும் ஒருவர். அந்த சூழலே கற்றலுக்கானது அல்ல, ஆயினும் அக்குழந்தைகள் படித்து எப்படியும் முன்னேறவேண்டும் என நினைக்கும் நல்லுள்ளம் கொண்டஅவரை நி்னைத்து பெருமிதமாயிருந்தது.

பூட்டியிருந்த பள்ளியின் சாவியை ஒரு பெண்ணிடம் கொடுத்திருக்கிறார் அந்த பெண்ணை அழைத்தால், தான் இன்னொரு ஊரில் இருப்பதாகவும், சாவியை தன் மகள் சந்திராவிடம் வாங்கிக்கொள்ளூம்படியும் சொல்லிவிட்டாள்.  அந்த சந்திராவை சாரல் மழையில் தேடிச்சென்றோம்..

எனக்கு ஜெ வின் கொரோனாக்கால நூறுகதைகளில் ஒன்றான யானையில்லா’வின் சந்திரி நினைவுக்கு வந்தாள். சந்திரா ஆற்றுக்கு குளிக்க போயிருந்ததால்  காத்திருப்பதைத்தவிர வேறு வழியில்லையென்றானது. தருணும் சூர்யாவும் காட்டுக்குள் சென்றுவிட்டார்கள் நானும் செந்திலும் துவாரகரும் அங்கிருந்த  அகன்ற கால்வாயையும் அங்கு பெருக்கெடுத்தோடிய நீரையும் பார்த்தபடிக்கே நடை சென்றோம்.  பேச்சில் எங்களை முழுக்காட்டிக்கொண்டே உள்ளே அழைத்துச்சென்றார்.

வழியில் ஒரு பரட்டைத்தலை சிறுவன் எதிர்ப்பட்டான். அவனை பார்த்ததும் இவர் பரவசமாகி ‘’டே கொஞ்சும் குமரா, (அதான் பெயரே! என்ன அழகுப்பெயர்  இல்லையா?) பிரதாப்ப வரச்சொல்லுடா’’ என்றார்.

அந்த கொஞ்சும் குமரன் என்னும் 6/7 வயதிருக்கும் முந்திரிக்கொட்டை கேட் வாக் குமரிகளைப்போல ஒரு காலை லேசாக முட்டிபோட்டு தெற்குநோக்கியும் இன்னொரு காலை  நீட்டி வடக்கிலும் வைத்துக்கொண்டு ஒரு கையை பின்னே வளைத்து தலையை தொட்டுக்கொண்டு ‘இன்னா’’ என்னும் தொனியில் இவரை பார்க்கிறான். எனக்குள் இருந்த ஆசிரிய ரத்தம்’’ டேய் காட்டுப்பயலே, HM டா ‘’ என்று கொந்தளித்தது. அவனோ இவருக்கு பதில் கூட சொல்லாமல் மேலேறி எங்கோ சென்றான். பிரமிப்பாக இருந்தது இவர்களின் ஆசிரிய மாணவ உறவு. சிலநாட்களாக ஜெ தளத்தில் எஸ்ரா ஞானி கட்டுரை, ஆசிரிய மாணவ உறவு சர்ச்சை எல்லாம் ஒடிக்கொண்டிருக்கே, இவர்கள் நாமிருக்கும் யுகத்திற்கு பலயுகங்களின் தொலைவில் இருக்கிறார்கள் என்று தோன்றியது.

துவாரகர் எதிர்ப்படும் பலருக்கு இவராக வணக்கம் சொல்லுவதும் அந்த டிசி வாங்காத கடங்காரன் பிரதாப்பை வரச்சொல்லி தூதுவிடுவதுமாகவே இருந்தார்.

எனக்கு இதற்குள் துவரகரைக்குறித்த ஒரு சுமாரான சித்திரம் கிடைத்திருந்தது. எளிமையான மனிதர். அவருக்கென்று சில நியமங்களையும் நம்பிக்கைகளையும் உருவாக்கிக்கொண்டு அவற்றை தீவிரமாக நம்பி வாழ்வை மிக எளிமையாக வாழ்ந்து வருபவர். இந்தகாட்டுப்பள்ளிக்கு விருப்ப மாறுதல் வாங்கிக்கொண்டு வந்திருப்பதில் இப்போது கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது.

மேலும் அவருடனான உரையாடலை, எப்படி கொண்டு போகிறாரென்றூம் பிடிகிடைத்தது. ஓயாத பயிற்சியாயிற்றே!

பேசிக்கொண்டிருக்கையிலேயே எதாவது ஒரு முக்கியமான பாயிண்ட் சொல்லும்போது ( அதாவது அவரைப்பொருத்த வரைக்கும் முக்கியமானது) அதை மீண்டும் சொல்லத்துவங்கி  பாதியில் அந்த வாக்கியத்தை நிறுத்தி என்னைப்பார்த்து ’’எப்படி, எட்டாம் கிளாசிலேயே?’’ என்பார் நான் சுதாரித்துக்கொண்டு ’’ஃபெயிலானப்புறமும்’’ என்று அதை முடிப்பேன் அகமலர்ந்து மீண்டும் தொடருவார். எதிரிலிருப்பவர் பேச்சை கவனிக்கிறாரா என்று சோதிக்கும் அற்புதமான உத்தி இது.

உமாகரன் ராசையா என்னும் இலங்கைப் பேச்சாளரின் உரைகளை கேட்டிருக்கிறீர்களா?  துவாரகரின் இதேஉத்தியைத்தான் அந்த இளைஞனும் கடைப்பிடிக்கிறான், பேச்சின் இடையே’’ எப்படி’’? என்பான் நம்மிடம் பின்னர் முன்பு சொன்னதை மீண்டும் ஒருமுறை அழுத்திச்சொல்லுவான்.  அத்தனை   அ ழகாக இருக்கும் அவன் தமிழைக்கேட்பது. இணையத்தில் கிடைக்கும் அவனது உரைகள், கேட்டுக்கொண்டிருங்கள். நான் மீண்டும் தொடருகிறேன்

சர்க்கார்பதி

வன உயிர்களை புகைப்படம் எடுக்க விரும்பும் தருணை அவன் விடுதியில் இருக்கையிலிருந்து ஏறக்குறைய 20 முறைக்கு மேல்  வனப்பகுதிகளுக்கு அழைத்துச்செல்வதாகச் சொல்லி திட்டமிட்டு ஏற்பாடும் பண்ணி அனுப்ப முடியாமல் எல்லாவற்றையுமே தவிர்க்க இயலாமலும் எதிர்பாரா காரணங்களாலும் ரத்துசெய்திருந்தேன். எனவே இந்த கொரோனா காலத்தில்  எப்படியும் போகத்தீர்மானித்து அது ரிசர்வ் ஃபாரஸ்ட் என்பதால் முறையான அனுமதி வாங்க முயற்சித்து ஏகப்பட்ட குழப்பங்களுக்கு பிறகு ஒரு வழியாக சிலநாட்கள் முன்பு, அந்த பகுதியில் பரிச்சயம் இருக்கும் தமிழ்த்துறை மாணவனும் எங்கள் உறவினருமாகிய சூர்யாவின் துணையோடு அதிகா்லையிலேயே எழுந்து விரிவான சமையல் பண்ணி எடுத்துக்கொண்டு  வெயிலேறத்துவங்கும் முன்பே காலையில் கிளம்பிப் போனோம்.

 அந்த வனத்தில் ஆதிதிராவிடபழங்குடியின நலத்துறையின் ஒரு பள்ளிக்கூடம் (துவக்கப்பள்ளி) இருக்கின்றது. அந்த பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் செல்லும் வழியில ஒரு கிராமத்தில் தான் இருக்கிறார் தானும் கூடவந்து உதவுவதாக சூர்யாவின் மூலமாக தகவல் சொல்லி அனுப்பியிருந்தார். எனவே அவரையும் அழைத்துக்கொள்ளச்சென்றோம்.  அவரது வீடும்  தோப்பும்   வீட்டிலிருந்து 20 நிமிஷம்தான் கார் பயணத்தில். தோப்பு முழுவதுமே கரைபுரண்டு ஓடும் அம்பராம்பாளையம் ஆற்றின் கரையில் இருந்தது, கடைசி ஒருவரிசை மரங்கள் எல்லாமே ஆற்றை நோக்கி தான் வளர்ந்திருந்தன.

தேங்காய்கள் முற்றி கீழே விழுந்து ஆற்றோடுபோய் விடாமல் இருப்பதற்காக ஒரு தடுப்பணைபோல விழுந்த மரங்கள் மட்டைகளை எல்லாம் போட்டு வைத்திருக்குமளவுக்கு செழுமை.

 அக்கா தங்கை அண்ணன் தம்பி என எல்லாம் சேர்ந்து கூட்டுக் குடும்பமாய் இருக்கும் அழகிய வீடு. நண்டும் சிண்டுமாக ஏழெட்டு குழந்தைகளுக்கும் 2 நாய்க்குட்டிகளுக்குமாக ஒரு அம்மாள் இப்போதைய  பெரும்பாலான இல்லத்தரசிகளின் default உடையாகிவிட்டிருக்கும் நைட்டியும் ( பகல்டி ) மேலே சம்பிரதாயத்துக்கு ஒரு துண்டுமாக உணவு  ஊட்டிக்கொண்டு இருந்தார்கள் மாஸ்க் எல்லாம் முறையாக போட்டுக்கொண்டு காரிலேயே சானிடைசரையும் கொண்டுபோயிருந்த எங்களுக்கு ’’கொரோனாவா ? கிராம் என்ன விலை’’ன்னு கேட்கும்படியான  அவர்களின் வாழ்வின் இயங்கியல் அதிர்ச்சியளித்தது.

 அரசு பள்ளி பள்ளிக்கூட தலைமை ஆசிரியரென்பதால்    அவரை குறித்த ஒரு சித்திரத்தை என் மனதில்  முன்கூட்டியே உருவாக்கி வைத்திருந்தேன்.

அதாவது என்னுடன் வந்த  தற்போது முதுகலை தமிழ் பட்டம் முடித்திருக்கும் மாணவனுக்கு அவர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக இருந்து இப்போது தலைமை ஆசிரியராக இருக்கிறாரென்பதால் என் வயதிலிருப்பாரென யூகித்திருந்தேன். இதை வாசிக்கையிலேயே உங்கள் மனதிலும் இப்படியான  சித்திரமே இருந்திருக்கும்

’’வெள்ளை வேட்டி சட்டை, கொஞ்சம் காதோரம் நரை, கண்ணாடி, சட்டை பாக்கட்டில் ஒரு பேனா இப்படி, (டெல்லி கணேஷ் சார், ராதாரவி சார்,ஆடுகளம் நரேன் சார்)’’ போல.

P C Sri Harsha Digesh

ஆனால் அங்கே எங்களை வரவேற்றது  முழு மொட்டைத்தலையும் பெரிய செந்தூர திலகமும் பெரிய மூக்குமாக (மொட்டைத்தலையும் செந்தூரமும் பார்த்தாலே எனக்கு தெலுங்கு அம்மன் வில்லன் ஜண்டாடாடாடா!!!!!!! நினைவு வந்து பயமாகிவிடும் ஆனா இவர் நல்லவேளையாக அத்தனை புஷ்டியாக இல்லை) நம்ம தமிழ் திரை நடிகர் rs shivaji  நினவிருக்கின்றதா? (பார்க்க, புகைப்படம் ) அவரின்  இன்னொரு வடிவம் போல அல்லது பத்து விட்ட தம்பி போல ஒருவர் அவருக்கு கொஞ்சமும் பொருந்தாத  பிரகாசமான மஞ்சளும் கருப்புமாக பெரிய கட்டங்கள் போட்ட சட்டையிலும் டக் இன் பண்ணியும் கால்சட்டையின் அரணை மீறிக்கொண்டு வெளிவர முயற்சிக்கும் தொப்பையுமாக இருந்தார். அந்த சட்டை அவருக்கல்ல, ஒட்டுமொத்த ஆண்குலத்துகே பொருந்தாத அநியாய கலர் காம்பினேஷனில் இருந்தது

R S Shivaji

இவற்றுக்கும் மேலே அவர் என்னை மிஸ் என்று அழைத்ததில் இன்னும் கொஞ்சம் அசெளகரியமாக உணர்ந்தேன் எனக்கு இந்த விளி எபோதுமே பயங்கர ஒவ்வாமையை கொடுக்கும். ஆனால் இந்த துவக்க பிரச்சனைகள் அதிர்ச்சிகள் எல்லாத்தையுமே மறக்கடித்துவிட்டது சூழல்

கரைபுரண்டோடும் ஆறு காலெட்டும் தூரத்தில்,  ஆங்காங்கே அடர் ஊதா நிற  பூங்கொத்துக்களுடன் வெங்காயத்தாமரைகளின் கூட்டம். மேடான பகுதியிலிருந்து குட்டி குட்டியாக அருவிகள் கொட்டிக்கொண்டிருந்தது

சேம்பும் தெங்கும் கமுகும் மூலி்கைகளூம், உதிர்ந்து சேகரிக்கப்படாமல் சிதறிக்கிடக்கும் ஏராளமான தேங்காய்களுமாக வளமை கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும். காலடி அழுந்திய தடத்தில் உடனே நீர் நிரம்பும் வளம் அங்கே! கண்ணைக்கட்டும் பசுமையின் நிறைவு அது

அங்கேயே தருண் ஏராளமாக புகைப்படம் எடுத்தான். 2மணி நேரங்கள் அங்கே செலவழித்த பின்னர் சர்க்கார்பதி போக பயணித்தோம். காரில்  ஓட்டுநர் செந்திலுக்கு அருகில் அவர் முன்சீட்டில், நான் தருண், சூர்யா பின் சீட்டில்

கார் கிளம்பியதும் அவர் துவங்கினார்  பெருமழை பெய்வதைப்போல ஓயாத பேச்சை.

ஆனால் அவர் மீது தவறில்லை, என் பேரென்னவென்று அவர் கேட்டதும் சொல்லிவிட்டு பதிலுக்கு நானும் கேட்காவிட்டால் மரியாதையாக இருக்காதல்லவா எனவே ‘’ சார் உங்க பேரு?’’ என்று கேட்டேன்

அவர் துவாரகநாதன்னு சொன்னதும் சரின்னு சொல்லிட்டு உரையாடலை முடிச்சிருக்கனுமில்லியா அங்கேதான் நான்  வெண்முரசால அகப்பட்டுக்கொண்டேன் ’’ஆஹா, அருமையான பேராச்சே’’ன்னு குழாயை மொத்தமாக திறந்து விட்டுட்டேன். அதன்பின்னர் ஓயாத பிரவாக பேச்சு மாலை வரை. இப்போது என் தலையை லேசாக சாய்க்க சொன்னீர்களென்றாலும் அவர் பேசினதெல்லாம் என் காதிலிருந்து பொலபொலவென்று கொட்டும் அப்படி நிறைந்திருக்கின்றது காதுகள்.

 மகாபாரதத்தில் பீஷ்மரின் இறுதிகடன்கள், ராமாயணத்தில் ல‌ஷ்மணனின் அண்ணனுக்கு அடங்கிய  குணம், சீதையின் குணநலன்கள், பெருமாள் மகிமை, கொரோனாவின் தீவிரம், அம்மாவுக்கு உதவ வேண்டியதின் அவசியம் (இது தருணுக்கு) இப்படி ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு இன்னதுதானென்று முன்கூட்டியே யூகிக்க முடியவே முடியாத தலைப்புக்களில் தாவித் தாவி பேசிக்கொண்டே இருந்தார். வயது 43 தடைபட்டுக்கொண்டே போன திருமணம் இப்போதுதான்  கூடி வந்து வரும் 30 அன்று திருமணமாம். மனதார வாழ்த்தினேன் அந்த மணப்பெண்ணுக்கு கூடுதலாக சில ஜோடி காதுகள் இருந்தால் பிழைத்தாள்

P C Sri Harsha Digesh

ஆனால் அவர் எத்தனை தன்மையானவரென்றும் , அன்புள்ளவரென்றூம், அவரைப்போன்றவர்களை இப்போது பார்ப்பதென்பது அரிதினும் அரிதென்பதையும் சில மணி நேரங்களிலேயே உணர்ந்தேன்.பேச்சு சுவாரஸ்யத்தில் ஊர்களையும் வயல்வரப்புக்களையும் தாண்டி வனப்பகுதி கண்ணில் தெரியும் தூரம்வரை வந்துவிட்டிருந்தோம். மிக அருகில் வனத்துறையினரின் செக்போஸ்ட் தெரிந்தது

மீண்டும் தொடருகிறேன்

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑