வன உயிர்களை புகைப்படம் எடுக்க விரும்பும் தருணை அவன் விடுதியில் இருக்கையிலிருந்து ஏறக்குறைய 20 முறைக்கு மேல்  வனப்பகுதிகளுக்கு அழைத்துச்செல்வதாகச் சொல்லி திட்டமிட்டு ஏற்பாடும் பண்ணி அனுப்ப முடியாமல் எல்லாவற்றையுமே தவிர்க்க இயலாமலும் எதிர்பாரா காரணங்களாலும் ரத்துசெய்திருந்தேன். எனவே இந்த கொரோனா காலத்தில்  எப்படியும் போகத்தீர்மானித்து அது ரிசர்வ் ஃபாரஸ்ட் என்பதால் முறையான அனுமதி வாங்க முயற்சித்து ஏகப்பட்ட குழப்பங்களுக்கு பிறகு ஒரு வழியாக சிலநாட்கள் முன்பு, அந்த பகுதியில் பரிச்சயம் இருக்கும் தமிழ்த்துறை மாணவனும் எங்கள் உறவினருமாகிய சூர்யாவின் துணையோடு அதிகா்லையிலேயே எழுந்து விரிவான சமையல் பண்ணி எடுத்துக்கொண்டு  வெயிலேறத்துவங்கும் முன்பே காலையில் கிளம்பிப் போனோம்.

 அந்த வனத்தில் ஆதிதிராவிடபழங்குடியின நலத்துறையின் ஒரு பள்ளிக்கூடம் (துவக்கப்பள்ளி) இருக்கின்றது. அந்த பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் செல்லும் வழியில ஒரு கிராமத்தில் தான் இருக்கிறார் தானும் கூடவந்து உதவுவதாக சூர்யாவின் மூலமாக தகவல் சொல்லி அனுப்பியிருந்தார். எனவே அவரையும் அழைத்துக்கொள்ளச்சென்றோம்.  அவரது வீடும்  தோப்பும்   வீட்டிலிருந்து 20 நிமிஷம்தான் கார் பயணத்தில். தோப்பு முழுவதுமே கரைபுரண்டு ஓடும் அம்பராம்பாளையம் ஆற்றின் கரையில் இருந்தது, கடைசி ஒருவரிசை மரங்கள் எல்லாமே ஆற்றை நோக்கி தான் வளர்ந்திருந்தன.

தேங்காய்கள் முற்றி கீழே விழுந்து ஆற்றோடுபோய் விடாமல் இருப்பதற்காக ஒரு தடுப்பணைபோல விழுந்த மரங்கள் மட்டைகளை எல்லாம் போட்டு வைத்திருக்குமளவுக்கு செழுமை.

 அக்கா தங்கை அண்ணன் தம்பி என எல்லாம் சேர்ந்து கூட்டுக் குடும்பமாய் இருக்கும் அழகிய வீடு. நண்டும் சிண்டுமாக ஏழெட்டு குழந்தைகளுக்கும் 2 நாய்க்குட்டிகளுக்குமாக ஒரு அம்மாள் இப்போதைய  பெரும்பாலான இல்லத்தரசிகளின் default உடையாகிவிட்டிருக்கும் நைட்டியும் ( பகல்டி ) மேலே சம்பிரதாயத்துக்கு ஒரு துண்டுமாக உணவு  ஊட்டிக்கொண்டு இருந்தார்கள் மாஸ்க் எல்லாம் முறையாக போட்டுக்கொண்டு காரிலேயே சானிடைசரையும் கொண்டுபோயிருந்த எங்களுக்கு ’’கொரோனாவா ? கிராம் என்ன விலை’’ன்னு கேட்கும்படியான  அவர்களின் வாழ்வின் இயங்கியல் அதிர்ச்சியளித்தது.

 அரசு பள்ளி பள்ளிக்கூட தலைமை ஆசிரியரென்பதால்    அவரை குறித்த ஒரு சித்திரத்தை என் மனதில்  முன்கூட்டியே உருவாக்கி வைத்திருந்தேன்.

அதாவது என்னுடன் வந்த  தற்போது முதுகலை தமிழ் பட்டம் முடித்திருக்கும் மாணவனுக்கு அவர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக இருந்து இப்போது தலைமை ஆசிரியராக இருக்கிறாரென்பதால் என் வயதிலிருப்பாரென யூகித்திருந்தேன். இதை வாசிக்கையிலேயே உங்கள் மனதிலும் இப்படியான  சித்திரமே இருந்திருக்கும்

’’வெள்ளை வேட்டி சட்டை, கொஞ்சம் காதோரம் நரை, கண்ணாடி, சட்டை பாக்கட்டில் ஒரு பேனா இப்படி, (டெல்லி கணேஷ் சார், ராதாரவி சார்,ஆடுகளம் நரேன் சார்)’’ போல.

P C Sri Harsha Digesh

ஆனால் அங்கே எங்களை வரவேற்றது  முழு மொட்டைத்தலையும் பெரிய செந்தூர திலகமும் பெரிய மூக்குமாக (மொட்டைத்தலையும் செந்தூரமும் பார்த்தாலே எனக்கு தெலுங்கு அம்மன் வில்லன் ஜண்டாடாடாடா!!!!!!! நினைவு வந்து பயமாகிவிடும் ஆனா இவர் நல்லவேளையாக அத்தனை புஷ்டியாக இல்லை) நம்ம தமிழ் திரை நடிகர் rs shivaji  நினவிருக்கின்றதா? (பார்க்க, புகைப்படம் ) அவரின்  இன்னொரு வடிவம் போல அல்லது பத்து விட்ட தம்பி போல ஒருவர் அவருக்கு கொஞ்சமும் பொருந்தாத  பிரகாசமான மஞ்சளும் கருப்புமாக பெரிய கட்டங்கள் போட்ட சட்டையிலும் டக் இன் பண்ணியும் கால்சட்டையின் அரணை மீறிக்கொண்டு வெளிவர முயற்சிக்கும் தொப்பையுமாக இருந்தார். அந்த சட்டை அவருக்கல்ல, ஒட்டுமொத்த ஆண்குலத்துகே பொருந்தாத அநியாய கலர் காம்பினேஷனில் இருந்தது

R S Shivaji

இவற்றுக்கும் மேலே அவர் என்னை மிஸ் என்று அழைத்ததில் இன்னும் கொஞ்சம் அசெளகரியமாக உணர்ந்தேன் எனக்கு இந்த விளி எபோதுமே பயங்கர ஒவ்வாமையை கொடுக்கும். ஆனால் இந்த துவக்க பிரச்சனைகள் அதிர்ச்சிகள் எல்லாத்தையுமே மறக்கடித்துவிட்டது சூழல்

கரைபுரண்டோடும் ஆறு காலெட்டும் தூரத்தில்,  ஆங்காங்கே அடர் ஊதா நிற  பூங்கொத்துக்களுடன் வெங்காயத்தாமரைகளின் கூட்டம். மேடான பகுதியிலிருந்து குட்டி குட்டியாக அருவிகள் கொட்டிக்கொண்டிருந்தது

சேம்பும் தெங்கும் கமுகும் மூலி்கைகளூம், உதிர்ந்து சேகரிக்கப்படாமல் சிதறிக்கிடக்கும் ஏராளமான தேங்காய்களுமாக வளமை கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும். காலடி அழுந்திய தடத்தில் உடனே நீர் நிரம்பும் வளம் அங்கே! கண்ணைக்கட்டும் பசுமையின் நிறைவு அது

அங்கேயே தருண் ஏராளமாக புகைப்படம் எடுத்தான். 2மணி நேரங்கள் அங்கே செலவழித்த பின்னர் சர்க்கார்பதி போக பயணித்தோம். காரில்  ஓட்டுநர் செந்திலுக்கு அருகில் அவர் முன்சீட்டில், நான் தருண், சூர்யா பின் சீட்டில்

கார் கிளம்பியதும் அவர் துவங்கினார்  பெருமழை பெய்வதைப்போல ஓயாத பேச்சை.

ஆனால் அவர் மீது தவறில்லை, என் பேரென்னவென்று அவர் கேட்டதும் சொல்லிவிட்டு பதிலுக்கு நானும் கேட்காவிட்டால் மரியாதையாக இருக்காதல்லவா எனவே ‘’ சார் உங்க பேரு?’’ என்று கேட்டேன்

அவர் துவாரகநாதன்னு சொன்னதும் சரின்னு சொல்லிட்டு உரையாடலை முடிச்சிருக்கனுமில்லியா அங்கேதான் நான்  வெண்முரசால அகப்பட்டுக்கொண்டேன் ’’ஆஹா, அருமையான பேராச்சே’’ன்னு குழாயை மொத்தமாக திறந்து விட்டுட்டேன். அதன்பின்னர் ஓயாத பிரவாக பேச்சு மாலை வரை. இப்போது என் தலையை லேசாக சாய்க்க சொன்னீர்களென்றாலும் அவர் பேசினதெல்லாம் என் காதிலிருந்து பொலபொலவென்று கொட்டும் அப்படி நிறைந்திருக்கின்றது காதுகள்.

 மகாபாரதத்தில் பீஷ்மரின் இறுதிகடன்கள், ராமாயணத்தில் ல‌ஷ்மணனின் அண்ணனுக்கு அடங்கிய  குணம், சீதையின் குணநலன்கள், பெருமாள் மகிமை, கொரோனாவின் தீவிரம், அம்மாவுக்கு உதவ வேண்டியதின் அவசியம் (இது தருணுக்கு) இப்படி ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு இன்னதுதானென்று முன்கூட்டியே யூகிக்க முடியவே முடியாத தலைப்புக்களில் தாவித் தாவி பேசிக்கொண்டே இருந்தார். வயது 43 தடைபட்டுக்கொண்டே போன திருமணம் இப்போதுதான்  கூடி வந்து வரும் 30 அன்று திருமணமாம். மனதார வாழ்த்தினேன் அந்த மணப்பெண்ணுக்கு கூடுதலாக சில ஜோடி காதுகள் இருந்தால் பிழைத்தாள்

P C Sri Harsha Digesh

ஆனால் அவர் எத்தனை தன்மையானவரென்றும் , அன்புள்ளவரென்றூம், அவரைப்போன்றவர்களை இப்போது பார்ப்பதென்பது அரிதினும் அரிதென்பதையும் சில மணி நேரங்களிலேயே உணர்ந்தேன்.பேச்சு சுவாரஸ்யத்தில் ஊர்களையும் வயல்வரப்புக்களையும் தாண்டி வனப்பகுதி கண்ணில் தெரியும் தூரம்வரை வந்துவிட்டிருந்தோம். மிக அருகில் வனத்துறையினரின் செக்போஸ்ட் தெரிந்தது

மீண்டும் தொடருகிறேன்