நூல் : மரங்களின் மறைவாழ்வு ஆசிரியர் : பீட்டர் வோலிபென் மொழியாக்கம் : லோகமாதேவி பக்கம் : 318 விலை : ரூ. 390 பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம், 669,கே.பி.சாலை, நாகர்கோவில்.
ஒரு கைப்பிடிக் காட்டு மண்ணில் இந்த பூமியில் இருக்கும் அனைத்து மனிதர்களை விடவும் அதிகமான நுண்ணுயிர்கள் இருக்கின்றன. ஒரு தேக்கரண்டி காட்டு மண்ணில் பல மைல் நீளமுள்ள பூஞ்சை இழையங்கள் இருக்கின்றன. – பீட்டர் வோலிபென்
வாழ்க்கையின் சில தருணங்கள் நமக்குப் புதிதாக சில விஷயங்களைக் காட்டும் போது உணர்த்தும் போது நாம் வியப்படைவோம் ; சில சமயங்களில் ஆழமான அதிர்ச்சியும் அடைவோம். பீட்டர் வோலிபென் எழுதிய ‘’மரங்களின் மறைவாழ்வு’’ என்னும் நூலை வாசித்த போது நான் வியப்படையவும் செய்தேன். அதிர்ச்சி அடையவும் செய்தேன். இதுநாள் வரை மரங்கள் குறித்து அறிந்திருந்தது எத்தனை எல்லைக்குட்பட்டது என்பதை இந்நூலின் வாசிப்பு எனக்குக் காட்டியது. இந்தப் புத்தகத்தை வாசிக்கும் முன் மரங்களை நான் நோக்கிய விதத்துக்கும் இந்தப் புத்தகத்தை வாசித்த பின் மரங்களை நான் நோக்கும் விதத்துக்கும் மிகப் பெரும் வித்தியாசம் இருக்கிறது.
ஒரு தனி மனிதனைப் போல மரத்தை தனி மரம் என்று அத்தனை தீர்க்கமாக வரையறுத்துக் கூற முடியாது. எந்த மரமும் தனி மரம் அல்ல. அதன் பூக்கள் காற்றில் பறந்து பரவுகின்றன. விதைகள் பறவைகள் மூலமும் பிராணிகள் மூலமும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்து செல்கின்றன. புவியின் மேற்பரப்பில் சற்று இடைவெளியுடன் இருக்கும் மரங்கள் கூட புவிக்குக் கீழே வேர்வெளியில் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் பிணைந்தும் இருக்கின்றன. மரங்களின் வேர் முடிச்சுகளில் இருக்கும் பூஞ்சைகள் ஓர் வனத்தில் இருக்கும் ஒட்டு மொத்த மரங்களையும் இணைக்கின்றன.
மரங்கள் கூட்டு வாழ்க்கையே வாழ்கின்றன. ஒரு மரம் இன்னொரு மரம் பலவீனமாக இருந்தால் அதற்கு உணவளித்து உதவுகிறது. தான் சேகரித்து வைத்திருக்கும் ஸ்டார்ச் சர்க்கரையை மண்ணுக்கு அடியில் இருக்கும் பூஞ்சைகள் மூலம் பலவீனமாக இருக்கும் மரத்துக்கு அனுப்புகிறது. அதே பூஞ்சை வலைப் பின்னல் மூலம் காட்டில் வெட்டப்பட்டு துண்டாகக் கிடக்கும் மரங்களுக்கும் உணவளித்து அவை உயிருடன் இருக்க உதவுகிறது.
தண்ணீருக்காக மரங்களின் வேர்கள் ஒலியெழுப்புகின்றன. மரங்கள் தங்களுக்குள் மீயொலி மூலம் பேசிக் கொள்கின்றன. பட்டை உரிந்து வலியுடன் இருக்கும் மரங்களுக்கு மற்ற மரங்கள் ஆதரவளிக்கின்றன. தங்கள் நிழலில் வளரும் மரங்கள் நீண்ட காலம் உயிர்த்திருக்கவும் தேவை ஏற்பட்டால் இடம் பொருள் ஏவலைப் பொறுத்து தனது வளர்ச்சி பாணியை புதிதாக மாற்றிக் கொள்ளவும் உதவுகின்றன.
மாந்தரின் இனப் பெருக்கத்தில் லட்சக்கணக்கான அணுக்களில் ஒன்று மட்டும் கருவாக உருவாவதைப் போல ஒரு மரத்தின் ஆயிரக்கணக்கான விதைகளில் ஒன்று மட்டுமே முளைத்து மரமாகும் வாய்ப்பைப் பெறுகிறது.
நூற்றுக்கணக்கான ஜீவராசிகள் தன்னைச் சார்ந்து வாழும் நிலையை அந்த உயிர்களுக்கு வழங்குகிறது வனத்தின் ஒவ்வொரு மரமும்.
இந்தப் புத்தகத்தை வாசிக்கும் தோறும் நாம் இதுவரை மரங்கள் குறித்த அறியாமையையே இத்தனை நாள் கொண்டிருந்தோம் என்னும் உண்மையை உணர்வோம்.
நாம் ஒரு மரம் குறித்து முழுமையாக அறிந்தோம் என்றால் புவியின் சாரம் குறித்து ஒரு கைப்பிடியளவு அறிகிறோம் எனத் துணிந்து சொல்லலாம்.
ருஷ்ய மொழியில் ‘’ராதுகா’’ என்றால் வானவில் என்று பொருள். சோவியத் யூனியன் ’’ராதுகா பதிப்பகம்’’ என ஒரு பதிப்பகத்தை நடத்தியது. உலகின் பல்வேறு மொழிகளில் குழந்தைகளுக்கான நூல்களை அப்பதிப்பகம் வெளியிட்டது. ராதுகா பதிப்பகத்தின் பல நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. கெட்டியான அட்டை, தடிமனான தாள்கள், அழுத்தமான அச்சமைப்பு ஆகியவை அந்நூல்களின் சிறப்பம்சங்கள். அந்நூல்களின் வடிவமைப்பே அவற்றை மீண்டும் மீண்டும் எடுத்து வாசிக்கத் தூண்டக்கூடியவை. ராதுகா பதிப்பகத்தின் வெளியீடுகளில் ஒன்றான ‘’Mathematics can be fun” என்ற நூலை வாசித்தது நினைவில் பசுமையாக இருக்கிறது. அந்நூலின் பல புதிர்கள் பல தகவல்கள் கற்பனையைத் தூண்டக் கூடியவை. சிந்திப்பதற்கு இனிமையானவை .
அதில் ஒரு புதிர் வரும் : நம் முன் ஒரு சதுரங்கப் பலகை இருக்கிறது. அதில் 8 X 8 என்ற அளவில் 64 கட்டங்கள் உள்ளன. முதல் கட்டத்தில் ஒரு கோதுமை தானியம் வைக்கப்படுகிறது. இரண்டாம் கட்டத்தில் இரண்டு கோதுமை தானியம் வைக்கப்படுகிறது. மூன்றாம் கட்டத்தில் நான்கு தானியம் வைக்கப்படுகிறது. இவ்விதம் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரித்துக் கொண்டே சென்றால் 64 வது கட்டத்தில் எத்தனை தானியங்கள் இருக்கும் என்பது புதிர்.
அந்த புதிருக்கான விடைய அளித்திருப்பார்கள் . அதாவது ஆழி சூழ் உலகு முழுவதையும் மேலும் ஆழியின் பரப்பளவையும் கோதுமை வயலாக்குவதுடன் சந்திரனின் பரப்பு முழுவதையும் கோதுமை வயலாக்கினால் எவ்வளவு கோதுமை விளையுமோ அவ்வளவு கோதுமையை சதுரங்கப் பலகையின் கடைசி கட்டத்தில் வைக்க வேண்டியிருக்கும் என்று கூறியிருப்பார்கள். முதல் கட்டம் ஒரு கோதுமை தானியம் என்பது 2ன் அடுக்கு பூஜ்யம். 64 வது கட்டம் என்பது 2ன் அடுக்கு 64. அது அத்தனை அதிகமானது.
எனக்கு இந்த புதிர் அளித்த இனிமை என்பது அளப்பரியது.
அத்தகைய இனிமையை பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு தாவரவியல் நூல் ஒன்றை வாசித்து இன்று அடைந்தேன். அந்த நூலின் பெயர் ‘’கல்லெழும் விதை’’. அதன் ஆசிரியர் அறிஞர் லோகமாதேவி. உண்மையில் அவரது இந்த நூலை தாவரவியல் நூல் என்று மட்டும் குறிப்பிடுவது அந்நூலின் முழுமையான பெருமையை எடுத்துரைக்காது ; அந்நூல் அறிவியல் நூல். இருப்பினும் அதில் இலக்கியம், வரலாறு, மானுடவியல், புவியியல் ஆகியவையும் உள்ளன.
காஃபி குறித்த அத்தியாயமே நூலின் முதல் அத்தியாயம். காஃபி பயிர் குறித்து ஏகப்பட்ட சுவாரசியமான நுண்ணிய விவரணைகள் இதில் உள்ளன. இந்திய தேசத்துக்கு காஃபி பயிர் வந்தது குறித்து உலவும் கதை ஒன்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம் நாட்டின் மேற்கு கடற்கரைக்கு அருகில் இருக்கும் சிக்மகளூர் பகுதியைச் சேர்ந்த சூஃபி துறவியொருவர் மெக்காவுக்கு செல்கிறார். அங்கே அளிக்கப்படும் பானம் அவர் அதுவரை அருந்தியிராதது. அந்த பானத்தின் சுவையால் ஈர்க்கப்பட்டு அதனை தன்னுடன் இந்தியாவுக்குக் கொண்டு வர எண்ணுகிறார். ஆனால் அந்த பானம் எந்த தாவரத்தின் கொட்டையிலிருந்து தயாராகிறதோ அதனை அராபியர்கள் அதன் பச்சைத்தன்மையை நீக்கி வறுத்தே மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அந்த பானத்தின் கொட்டை தங்கள் வழியே வேறு எந்த நாட்டுக்கும் சென்று விடக் கூடாது என்பதில் அவர்கள் தீவிரமாக இருக்கின்றனர். சூஃபி துறவி எப்படியோ அந்த தாவரத்தின் ஏழு பச்சைக் கொட்டைகளை தன்னுடைய நீண்ட அடர்த்தியான தாடியில் மறைத்து இந்தியாவின் மேற்குக் கரைக்கு சிக்மகளூருக்குக் கொண்டு வந்து விடுகிறார். அந்த 7 கொட்டைகள் முளைக்க வைக்கப்பட்டே இந்தியாவில் காஃபி உற்பத்தி துவங்கியது என்கிறார் நூலாசிரியர். கர்நாடகாவின் பிரபலமான காஃபித்தூள் நிறுவனங்களும் காஃபி கடைகளும் நீண்ட அடர்தாடி கொண்ட சூஃபி ஒருவரின் படத்தை தங்கள் சின்னமாக வைத்திருப்பதை சுட்டுகிறார் ஆசிரியர்.
மெக்காவில் ஹஜ் பயணம் வரும் யாத்ரிகர்களுக்கு காஃபி அளிக்கப்படுகிறது. திடீரென காஃபி ஒரு போதைப்பொருள் என ஒரு கருத்து பரவுகிறது. அரேபிய அரசாங்கம் காஃபியை நாடு முழுவதும் தடை செய்கிறது. காஃபி தடை செய்யப்பட்டதைக் கண்டித்து அரேபியா முழுவதும் மக்கள் பெரும் ரகளையில் ஈடுபடுகின்றனர். பின்னர் அரேபிய அரசாங்கம் காஃபி தடையை ரத்து செய்து ஆணை பிறப்பிக்கிறது.
மேற்படி இரு சம்பவங்களும் பொது யுகம் 15ம் நூற்றாண்டில் நிகழ்ந்திருக்கக் கூடும்!
நீலகிரி மலைப்பகுதியில் பழங்குடிகள் ‘’ஆரோக்கியப் பச்சை’’ என்னும் தாவரத்தை ஆற்றல் தரும் உணவாக உண்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மலையேற்றம் சென்ற குழு ஒன்று அந்த தாவரத்தின் மகத்துவத்தை உலகுக்கு பறைசாற்றுகிறது. ‘’ஜீவனி’’ என்ற பெயரில் அந்த தாவரத்தின் பொடி பல்வேறு சவால்களை சமாளித்து விற்பனைக்கு வருகிறது. இதைக் குறித்த கட்டுரை நூலின் இரண்டாம் அத்தியாயம்.
பாப்பரஸ் என்ற தாவரம் பதப்படுத்தப்பட்டு அதில் மனிதர்கள் மசி கொண்டு எழுதியிருக்கிறார்கள். இந்த விபரத்தை கிளியோபட்ரா வாழ்வில் அவருக்கு அளிக்கப்பட்ட பரிசு ஒன்றிலிருந்து தொடங்கி மூன்றாம் அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.
வினாடி வினாக்களில் அதிகம் கேட்கப்படும் கேள்வி ‘’ சாக்ரடீஸுக்கு அளிக்கப்பட்ட நஞ்சின் பெயர் என்ன?’’ என்பது. ஹெம்லாக் என்பது அந்த வினாவுக்கான விடை. ஹெம்லாக் தாவரம் குறித்த கட்டுரையில் ஒட்டு மொத்த சாக்ரடீஸின் வாழ்வை மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். இதனை வாசிப்பவர்கள் சாக்ரடீஸையும் மறக்க மாட்டார்கள்; ஹெம்லாக்கையும் மறக்க மாட்டார்கள்.
சில ஜப்பானிய உணவு வகைகளைக் குறித்த அத்தியாயங்களை வாசிப்பவர்களை ஜப்பான் தேசத்தில் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்களாகவும் சஞ்சரித்துக் கொண்டிருப்பவர்களாகவும் தன் சொற்களின் மாயத்தால் ஆக்கி விடுகிறார் ஆசிரியர். இந்த நூலை வாசிப்பவர்களில் கணிசமானோர் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கும் இந்த உணவு வகைகளுக்காகவேனும் வாழ்வில் ஒரு முறையாவது ஜப்பான் செல்வார்கள் என்று துணிந்து சொல்லலாம் !
தர்ப்பை புல் குறித்து எழுதப்பட்டிருக்கும் அத்தியாயம் மிகச் சிறப்பானது.
லினன் துணி குறித்து எழுதப்பட்டிருக்கும் அத்தியாயம் இந்நூலின் உச்சம்.
குற்றப் புலனாய்வுத் துறையில் தாவரவியல் எவ்விதம் உதவியிருக்கிறது என்பதைக் குறிப்பிடும் அத்தியாயம் ஒரு வேகப்புனைவு நாவலை வாசிக்கும் அனுபவத்தைத் தந்தது.
அரிசி, கடுகு, அன்னாசி, சோற்றுக்கற்றாழை ஆகிய்வை குறித்தும் சிறப்பாக சுவாரசியமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
இந்நூலை வாசித்த பின் எந்த வாசகனும் இதுவரை பார்த்த கவனித்த புரிந்து கொண்ட உள்வாங்கிக் கொண்ட எண்ணிக் கொள்ளும் தாவர உலகத்துக்கும் இனி அவன் காணப் போகும் கவனிக்க இருக்கும் புரிந்து கொள்ள இருக்கும் உள்வாங்க இருக்கும் எண்ணப் போகும் தாவர உலகுக்கும் பெரும் தூரம் இருக்கும்.
சதுரங்கப் பலகையின் முதல் கட்டத்துக்கும் 64ம் கட்டத்துக்கும் இருக்கும் தூரத்தைப் போல !
இன்று மாலதிக்கு பிறந்த நாள். அதிகாலையிலேயே வாழ்த்தினேன். என் நட்பு வட்டம் மிகமிகச்சிறியதும் குறுகியதும். கல்லூரியிலும் சரி வெளியிலும் சரி யாரிடமும் நெருங்கிப்பழகுவதில்லை ஒரு குறிப்பிட்ட தூரத்திலேயே அவர்களையும் நிறுத்தி நானும் கோட்டிற்கு வெளியே நின்று கொள்வதுதான் வழக்கம். அரிதாகவே நான் மிக நெருங்கி நட்பும் அன்பும் கொள்கிறேன்.
கல்லூரியில் மாலதியுடன் மட்டுமே நான் மிகுந்த பிரியமும் நட்பும் கொண்டிருந்தேன். வழக்கமாகவே நான் ஆசிரியர் அறையிலும் அமைதியாக என் வேலை, வகுப்பு. ஓய்வு நேரங்களில் வாசிப்பு என இருப்பேன். வம்பளப்பிலும் கலந்துகொள்வதில்லை. டீ காபி குடிக்க கேண்டீன் போவதே இல்லை. எப்போதாவது என்னைப்பார்க்க விருந்தினர்கள் வந்தால் அவர்களுடன் கேண்டீன் போய் காபி வாங்கிக்கொடுத்து நானும் குடிப்பதுண்டு இது வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை நடக்கும்.
ஒருமுறை அப்படி திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த ஒரு நண்பரை அழைத்துக்கொண்டு கேண்டீன் போய் காபிக்கு சொல்லிவிட்டு பேராசிரியர்களுக்கென்று இருக்கும் தனிப்பட்ட இடத்தில் அவருடன் அமர்ந்திருக்கையில் மேசையைத் துடைத்து சுத்தம் செய்யும் பணியாளர் ஒருவர் என்னை ‘’.. இங்கெல்லாம் உட்காரக்கூடாதும்மா இது டீச்சர்கள் உட்காரும் இடம்..’’ என்று அதட்டினார்.
பக்கத்து மேசையில் உணவருந்திக்கொண்டிருந்த பொருளாதாரத்துறை பேராசிரியர் பதறி ’’…ஏய்.ஏய் என்னப்பா இவங்க இங்கே 20 வருஷமா இருக்காங்க . அவங்களைபோயி..’’என்று அவரைக் கண்டிக்க எழுந்தார். நான் சிரித்தபடி அவருக்கு என்னைத்தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று சமாதானம் செய்தேன். அந்த அளவில் தான் நான் கல்லூரி வளாகத்தில் புழங்குகிறேன்.
அப்படி வெகுகாலம் முன்பு எதற்கோ வரலாற்றுத்துறைப் பேராசிரியருடன் கேண்டீனுக்குபோயிருக்கையில் நல்ல கூட்டமென்பதால் ஒருமேசையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த மாலதியின் எதிரே அதே மேசையில் அமரவேண்டி இருந்தது, மாலதியை வரலாற்றுத்துறைப் பேராசிரியர் அறிமுகம் செய்தார், ஹல்லோ சொல்லிக்கொண்டோம்.
மாலதி பணிபுரியும் ஆங்கிலத்துறையில் அன்று யாருக்கோ பிறந்த நாள் எனவே சக ஆசிரியர்களுக்குக் கேண்டீனில் மதிய உணவு ட்ரீட். மாலதிக்கு வகுப்பு இருந்ததால் தாமதமாகத் தனியாக வந்து உணவருந்திக்கொண்டிருந்தாள். மாலதி அழகாக நளினமாக சாப்பிட்டதைப் பார்த்தேன் கூடவே உணவை ரசித்தும் சாப்பிட்டாள்.
(ள் விகுதி நானும் மாலாவும் தோழிகள், இருவருக்கும் சமவயது மற்றும் அன்பினால்)
மிக அழகாகக் கைவிரல் நுனிமட்டும் சாப்பாட்டில் படும்படி மெதுவாக அவ்வபோது உதட்டைத் துடைத்துக்கொண்டு சாப்பிட்டுவிட்டு இறுதியாக ஒரு ஐஸ்கிரீமையும் சாப்பிட்டாள்.
எனக்குச் சாப்பாட்டை ரசித்துப் பிகுபண்ணிக்கொள்ளாமல் சாப்பிடுபவர்களைப் பிடிக்கும். ’’….சாப்பிடறீங்களா…’’ என்று யாரேனும் கேட்டால் உடனே சரி என்று சொல்லுபவளாதலால், அப்படி என்னைப்போலவே சரி என்பவர்களையும் பிடிக்கும். அந்தக்கணத்திலிருந்து நானும் மாலதியும் தோழிகளானோம். நாஞ்சில் நாடனை ,ஜெவை, சுந்தரராமசாமியைல்லாம் வாசிக்கும் ஒருவரை நான் கல்லூரியில் சந்திப்பேனென்று நினைத்திருக்கவே இல்லை.
சிலநாட்களில் இருவருக்கும் பொதுவான தோழியான (சுதந்திரா அம்மா) உமாவுடன் மாலதியின் வயலூர் தோட்டத்துக்கு போயிருந்தேன். முதுகலைப் பட்டதாரியான மாலதியின் கணவர் கிருஷ்ணமூர்த்தி அண்ணன் தென்னைமரங்களின் நிழலில் கயிற்றுக்கட்டிலைபோட்டுக்கொண்டு அமர்ந்து ஜெ வின் ஒரு நூலைப் படித்துக்கொண்டிருந்தார். அந்தக்காட்சி அப்படியே ஒரு புகைப்படம் போல என் மனதில் பதிந்திருக்கிறது. அவர்மீது அன்று கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. அபி நிலாவும் இனிய மதியும் சுதந்திராவும் வாய்கொள்ளாமல் அத்தை அத்தை என்றழைக்கும் மருமகள்களாகினர். சரணும் தருணும் அத்தை மாமாவென்று அவர்களுடன் ஒட்டிக்கொண்டார்கள்.
நாங்களிருவரும் கல்லூரியில் தினமும் பார்த்துக்கொள்வது, மாலதியின் தோட்டதுக்கு நாங்களும், இங்கே வீட்டுக்கு மாலதி குடும்பத்தினரும் அடிக்கடி சென்று வந்துகொண்டும் புத்தகங்களைப் பகிர்ந்துகொள்வதுமாக இருந்தோம். தாவரவியல் ஆசிரியர்கள் அறைக்கு நேர் கீழே மாலதியின் அறை இருந்தது. சில சமயம் நான் எனக்குக் கீழே மாலா இருப்பாள் என்று நினைத்துக்கொண்டு புன்னகைத்துக்கொள்வேன்.
மாலதி சுயநிதிப்பிரிவில் பணியாற்றியதால் 10-4pm அவளது பணிநேரம். எனக்கு 9-3pm. பெரும்பாலும் நான் 9 மணி வகுப்பிலிருப்பேன். புத்தம் புதிதாக மாணவர்களைச் சந்திப்பதிலும் அவர்கள் சோர்வடையும் முன்னரே உற்சாகமாகக் கற்பிப்பதிலும் நான் கவனமாக இருப்பேன், டைம்டேபிள் போடும்போதே சொல்லிவிடுவேன் எல்லா முதல் வகுப்பும் எனக்குக் கொடுக்கும்படி.
இன்றுவரையிலும் அது தொடர்கிறது. எனவே 10 மணிக்கு வகுப்பை முடித்துவிட்டு சாக்பீஸ் கறைபடிந்த கையும் எல்லா வகுப்பிலும் கரும்பலகைக்கு முன்பாக ஃபேன் இருப்பதால் சாக்கட்டித்தூள் படிந்த தலைமுடியுமாக நான் வருகையில் தாவரவியல் துறைக்குப் படியேறும் இடத்தில் மாலதி ’நீட்டாக’ புடவை உடுத்திக்கொண்டு நின்றிருப்பாள். கொஞ்ச நேரம் பேசிவிட்டே இருவரும் பிரிவோம்.
நானும் மாலதியும் சகோதரிகளா என்று கல்லூரியில் பலரும் கேட்கத்துவங்கினார்கள்.
மாலதியின் கைகளில் எனக்குக்கொடுக்கவென்று எதாவது கட்டாயம் இருக்கும். சின்னச்சின்ன டப்பாவில் அன்று காலைச் செய்த சிவப்பரிசிப்புட்டோ எனக்கு (இன்றுவரை செய்யத்தெரியாத) எண்ணெய்க் கத்தரிக்காய்க்குழம்போ, காட்டுக்கீரையோ, காயோ, கனியோ, புத்தகமோ தலைக்குவைத்துக் கொள்ள மலர்ச்சரமோ இருக்கும்.
வகுப்பில்லாதபோது ஆங்கிலத்துறைக்கெதிரில் இருக்கும் சின்னச் சிமெண்டுத்திட்டில் அமர்ந்து பேசுவோம். சில சமயம் நூலகத்தில் சந்திப்பதும் உண்டு. மாலதியின் அம்மா பிரமாதமாகச் சமைப்பவர்கள். சரண் தருணுக்கு பிடித்த பலகாரங்கள் செய்து கொடுத்தனுப்புவார்கள். எனக்குபிடித்த கோதுமை மாவில் சர்க்கரையும் கனிந்த வாழைப்பழமும் கலந்து செய்யும் பழப்பணியாரம் அடிக்கடி செய்து கொடுத்தனுப்புவார்கள். வாயில் கரையும் அது.
இன்று வரை மாலாவீட்டில் மிக்ஸி உபயோகப்படுத்துவதில்லை என்பதும் அவர்கள் வீட்டுணவின் அபாரமான சுவைக்குக்காரணம். ஆட்டி ஆட்டி மினுங்கும் பளபளப்பான ஆட்டுக்கல்லும் அம்மிக்கல்லும் சமையலறைக்குபின்னால் இருக்கும் நேர்த்தியாகப்பராமரிக்கப்படும் தோட்டம், உருளியில் மிதக்கும் மலர்கள் என்று மாலதியின் வீடு அழகாக இருக்கும்.
கல்லூரியில் மாலதி என்னைப்போலவேதான், நேரத்துக்கு வருவதும் மிகுந்த ஈடுபாட்டுடன் வகுப்பெடுப்பதும் வாக்ஸ் பாப்புலை போன்ற கல்லூரி நேரம் முடிந்தபின்னர் செய்யும் வேலைகளையும் மனதார இழுத்துபோட்டுக்கொண்டு செய்வதுமாக எந்நேரமும் வேலையாகவே இருப்பாள்.
அரசுவேலை ஆங்கிலத்துறைக்கு வந்தபோது தான் விண்ணப்பிக்கவில்லை என்று மறுத்த மாலதியை நண்பர்கள் வற்புறுத்தி விண்ணப்பிக்கசெய்தோம்.
22 வருடங்களாக அயராது பணியாற்றிய, துறை சார் அறிவில் யாருக்கும் நிகர் கூடச் சொல்லமுடியாத, அந்த வேலைக்கான எல்லாத்தகுதிகளும் இருந்த, ஏராளமான வேலைகளைக் கல்லூரிக்கு அந்தச் சொற்பச் சம்பளத்தைப் பற்றி எண்ணாமல் செய்துகொடுத்த மாலதிக்கு அரசு வேலை கிடைக்கவில்லை. இத்தனைக்கும் ஆங்கிலத்துறையில் பல இடங்கள் அப்போது நிரப்பப்பட்டன, வெளியிலிருந்து கூட 3 பேர் தேர்வானர்கள். ஒரு தனி மனிதரின் காழ்ப்பால் மாலதிக்கு அரசுவேலை தரப்படவில்லை. அந்தக்காழ்ப்பு மாலதியின் செயலாற்றலால் தான் அவருக்குஉருவானது,
தீச்சொல்லிடும் உரிமை தெய்வங்களுத்தான் இருக்கிறது இல்லையா? சரி போகட்டும்.
மாலதி மனமுடந்துவிடவில்லை நான்தான் பெருங்கோபமடைந்திருந்தேன். மாலா வழக்கம்போல வேலைகளில் மூழ்கி இருந்தாள் ஆனால் ஊழ் என்ற இரக்கமில்லாத ஒன்று இருக்கிறதல்லவா?
கிருஷ்ணமூர்த்தி அண்ணன் சுகவீனப்பட்டதும் மண் மறைந்ததும் எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்டது. புங்கைமரங்கள் பூத்து முடிந்திருந்த ஒருநாளில் அதனடியில் கண்ணீருடன் மாலா அதைப்பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்தது நினைவிருக்கிறது. மாலா அவரை அடிக்கடி அழைத்துக்கொண்டு சிசிகிச்சைக்கெனக் கேரளாசெல்லவேண்டி இருந்தது. கல்லூரி வேலை, மருத்துவச்செலவுகள், கல்யாண வயதிலிருந்த மருத்துவம் படித்துக்கொண்டிருந்த அபி, பள்ளி இறுதியிலிருந்த இனியா, வயதான அம்மா என எல்லாப்பொறுப்பையும் மாலா பார்த்துக்கொண்டாள். கொச்சிக்கு சிகிச்சைக்குச் சென்ற ஒருநாளில் வழியில் விற்றுக்கொண்டிருந்த சுவற்றில் பதிக்கும் பூந்தொட்டிகளிரண்டை எனக்கென வாங்கி வந்த மாலாவின் அன்பை என்னவென்று சொல்வது?
என் இன்ப துன்பங்கள் எல்லாவற்றிலும் எப்போதும் என்தரப்பில் என்னுடனிருந்த மாலா, அண்ணன் மறைந்த பின்னர் எந்தப் புகாரும் இல்லாமல் வேலையை ராஜி வைத்தாள். 25 வருட ஆசிரியப்பணியின் அனுபவம், முனைவர் பட்டம், கற்பித்தலில் இருந்த ஆர்வம் எல்லாவற்றையும் நொடியில் ஒதுக்கி வைத்துவிட்டு குடும்பத்தை மகள்களை விவசாயத்தை முழுமனதுடன் ஏற்க மாலாவுக்கு இருந்த மனக்கட்டி லட்சக்கணக்கான பெண்களுக்கு இல்லை. இப்போது பல ஏக்கர்கள் விரிந்திருக்கும் தோட்டத்தை தான் ஒருத்தியாகபார்த்துக்கொள்கிறாள். காலை 6 மணிக்குத் தோட்டம் சென்றால் இரவுதான் வீடு திரும்புகிறாள்.
நானும் சிலநாட்கள் மாலாவுடன் தோப்பில் இருப்பதுண்டு. சரியாக நேரத்துக்குச் சாப்பிடாமல் விவசாய வேலைகளைப் புதிதாகக் கற்றுக்கொண்டு முழு விவசாயத்தையும் தானே சிறப்பாகச் செய்கிறாள்.
வர்ஜீனியா வுல்ஃபின் படைப்புக்களில் முனைவர் பட்டம் பெற்ற மாலா தன் துறைசார் அறிவை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தென்னை மரங்களுக்கு உரமிடுவதும், சாம்பு புற்களைக் களை எடுப்பவர்களை மேற்பார்வையிடுவது, மிளகாய் பறிக்க ஆட்களை ஏற்பாடுசெய்வதும், தோட்டப் பணியாளருக்குமாகச் சேர்த்து சமைத்து எடுத்துக்கொண்டு போவதுமாக முழுமையாக வேறொரு ஆளுமையாக மாறி இருக்கிறாள்.
நாங்கள் தினமும் பேசிக்கொள்வதில்லை. வாட்ஸ்ஸாப்பிலும் தொடர்பிலில்லை எப்போதாவது பேசிக்கொள்வோம் ஆனால் முந்தினநாள் விட்ட இடத்திலிருந்து பேசுவதுபோல் பேசிக்கொள்வோம். மாலதிக்குப்பின்னர் கல்லூரியில் எனக்கு யாருடனும் தோழமை இல்லை. அவளுக்கான இடம் நிரந்தரமாகக் காலியாகத்தான் இருக்கிறது. அதை மாலதியால் மட்டுமே நிரப்ப முடியும்.
மாலதி இன்று கார் ஓட்டக் கற்றுக்கொண்டிருக்கிறாள். மகள்களைப் பார்க்கச் செல்லவோ, உரம்வாங்கவோ, வங்கி வேலைகளோ, நல்லதுகெட்டதுக்கோ எங்கு வேண்டுமானாலும் மாலதி யாரையும் சார்ந்திராமல் தனியே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறாள். சுதந்திரா, அபி, இனியா, சரண், தருண் சாம்பவி ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக ஒன்றாக ஆரோக்கியமான நட்புடன் இருக்கிறார்கள்.நானும் மாலதியும் உமாவும் மூச்சுலகிலிருந்து இதைமட்டுமே பார்க்க விழைகிறோம்.
பெண்களை அழகாக்குவது அவர்கள் கொண்டிருக்கும் விடுதலையே. மாலா என்னும் பேரழகிக்கு அன்பும் கட்டிமுத்தங்களும்.
இன்று ஜெ தளத்தில் தமிழ் விக்கியில் இருக்கும் என் பக்கம் வந்திருந்தது. பலர் அழைத்துப்பாராட்டினார்கள். இன்றிருக்கும் இந்த இடத்துக்கு ஜெ வைத்தவிர வேறு யாருமே காரணமில்லை. நன்றியுடன்அவரை நினைத்துக்கொள்ளாத நாளுமில்லை.
இன்றென்னவோ நான் திரும்பிப் பார்த்துக்கொண்டே இருந்தேன். கடந்து வந்த காலங்களை கடினப்பாதைகளை, விழுங்கிய கசப்புக்களை பிடுங்கப்பட்ட வாய்ப்புகளை, தலைகுப்புற தள்ளிவிடப்பட்ட படுகுழிகளை, பறிக்கப்பட்ட மகிழ்வுகளை இப்போதிருக்கும் கண்ணியமான வாழ்வை என்று வேகமாக காணொளிக்காட்சிகளை ஓட்டி ஓட்டி பார்ப்பதுபோல மனம் பார்த்துக்கொண்டது. கடந்து வந்த மனிதர்களை குறித்த புகார்கள் பெரிதாக இல்லை. அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன் என்பதால் அவர்களுக்கும் என் அன்பு . இதோ விரைவில் என்னை இறுகப்பிடித்துக்கொண்டிருக்கும் ஒரு தளையிலிருந்து முற்றாக வெளியேறவிருக்கிறேன்.
சரியான மனிதர்களுடன் வாழக்கொடுத்து வைக்காததைக் காட்டிலும் சரியில்லாதவர்களோடான வாழ்வுதான் வதையாகிவிடுகிறது. அன்னைமையும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு தளையிடுகிறது.
நான் அன்னைமையை ஒருபோதும்உணர்ந்ததில்லை எனவே அதை அத்தனை இழக்கவேயில்லை. எனினும் அன்னையை இழந்தேன் மூன்று வருடங்களுக்கு முன்னர்.
இழந்துகொண்டிருக்கும் இளமையை குறித்த வருத்தமேதும் இல்லை. சரண் தருண் இருவரின் தோளும் நெஞ்சும் அகமும் விரிந்திருப்பதில் என் இளமையின் பங்களிப்பு இருக்கிறதே! நான் தான் அவர்களும்.
நான் இழந்தவை அவர்களில் மெல்ல மெல்ல நிரம்புவதை மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இளமையை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடுவதில்லை மாறாக இந்த வயதிற்கான தோற்றத்தின் கண்ணியத்திலும் கம்பீரத்திலும் கவனமாக இருக்கிறேன். i am aging gracefully. முன்னெப்போதைக்காட்டிலும் நம்பிக்கையுடன் உள்ளொளியுடன் நிறைவுடனும் இருக்கிறேன். சொல்ல மறந்துவிட்டேன். மிகுந்த மகிழ்வுடனும் இருக்கிறேன்.
வெண்முரசில் ஒரு வரி இருக்கும் மீட்டப்படாத யாழும் இசையாலானதே என்று.அப்படி எனக்குள்ளும் நாதம் இருந்தது . நானே அதை வெகு தாமதமாக அறிந்துகொண்டேன். புழுதியில் எறியப்பட்டிருந்த நல்லதோர் வீணையை எடுத்தேன். தூசி தும்புகளை துடைத்துச் சுத்தம் செய்தேன் தந்திகளை சீராக்கினேன். அரிதாக மீட்டினேன் எழுந்த சுகநாதத்தை மனமகிழ்ந்து ரசித்தேன். மீட்டாதபொழுதுகளிலும் நினைவில் இருக்கும் அவ்விசையை நினைத்துக்கொண்டேன்.
இந்தக்கொரியர் நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மையினால் ஏராளமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நான் வசிக்கும் வேடசெந்தூருக்கு அரை கி.மீ தூரத்தில் இருக்கும் ஒரு நிறுவனம் வீட்டில் கொண்டு வந்து கொடுக்க விதிகள் இல்லையென்பார்கள் நான் போய் நேரில்தான் வாங்கி ஆகவேண்டும். கேட்டால் ’’நான் சர்வீஸ் ஏரியாவாம்’’. அரைகிமீ தொலைவில் இருப்பது எப்படி சேவைக்கு அப்பாற்பட்ட இடமாகும்?.
முன்பே ப்ரொஃபெஷனல் கொரியரின் அலட்சியத்தைக் குறித்து எழுதி இருக்கிறேன். இருந்தாலும் அனைத்து பொறுப்பற்ற நிறுவனங்களுக்கும் நல்லபெயர் வாங்கித்தந்துவிடும் இந்த DTDC -Desk to Desk courier and cargo என்கிற நிறுவனம்.
ஆகஸ்டில் சரணுக்கு ஒருசில பொருட்கள் தேவையாக இருந்ததால் இந்த நிறுவனத்தை அணுகினேன். ’’எல்லாம் அனுப்பிடலாம் கொண்டு வாங்க’’ என்றார்கள். ஆகஸ்ட் 6ம் தேதி ’’ஓனர்’’ என்று சொல்லி எனக்குத்தரப்பட்ட ஒரு அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு ………’’அங்கே வந்து பேக் செய்யவேண்டுமா?’’….. எனக்கேட்டேன், …’’என்ன என்ன பொருட்கள் இருக்கிறது என்று ஒரு பட்டியலுடன் நீங்களே பேக் பண்ணி கொண்டு வந்துவிடுங்கள்’’…. என்றார்.
சரணுக்கு வேண்டியவற்றை கடைகடையாக அலைந்து வாங்கி ஒழுங்காகப் பேக்பண்ணி சுமார் 15 ஆயிரம் மதிப்புள்ள முறையான பிராண்டட் பொருட்களை அழகாக அடுக்கி கல்லூரியிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கும் அந்தக் கண்ணாடிச் சுவர்களும் வேலையாட்களும் ஒரு வரவேற்பாளினியும் இருந்த அலுவலகத்துக்கு ஆகஸ்ட் 7 அன்று போனேன். உள்ளே இருப்பவற்றின் பெயர் அளவுபோன்றவைகள் இருந்த பட்டியலையும் ஆதார் நகலையும் அந்த ரிஷப்ஷன் பெண் வாங்கிக்கொண்டாள்.
பார்சலை எடைபார்த்துவிட்டு 8450 ரூபாய் கேட்டாள், 5-கிலோவுக்கு மேல் இருந்தால் 10 கிலோவுக்கானதுதான் தொகை செலுத்தவேண்டும் என்றாள், சரி என்று ஜிபே செய்து விட்டு பார்சலையும் கொடுத்தேன். ரசீது கேட்டபோது வாட்ஸேப்பில் வரும் என்றாள் அந்தப்பெண்.
மறுநாள் 8 ம் தேதி ரசீது வரவில்லை. காத்திருந்துவிட்டு 9 அன்று அழைத்துக்கேட்டபோது பார்சலே ஜெர்மனிக்கு போய்ச் சேர்ந்துவிட்டது என்றாள் அதே வரவேற்பாளினி. சரி இனி எதுக்கு ரசீது என்று நானும் விட்டுவிட்டேன். சரணைக் கேட்டபோது ட்ராக் செய்து பார்த்துவிட்டு அருகிலிருக்கும் ஒருநகருக்கு வந்துவிட்டதாகவும் தன்னை இன்னும் யாரும் அழைக்கவில்லை என்றும் சொன்னான்
1 வாரமானதும் மீண்டும் ’’வந்துச்சாடா’’ என்று கேட்டேன், …’’இப்படி லேட் ஆகாது என்னன்னு தெரியலை என்றவன் மீண்டும் சரிபார்த்து குவாரண்டைனில் இருக்கு போலிருக்கு’’… என்றான். நான் மீண்டும் அந்த ஓனருக்கு அழைத்துக்கேட்டேன் …’’போயிரும் மேம் இன்னிக்கோ நாளைக்கோ’’… என்றார்.
ஆனால் செப்டம்பர் முழுவதும் இப்படியே போன் பண்ணிக்கேட்பதும் அவர்கள் எதோ சொல்லுவதுமாகவே கழிந்தது. பார்சலில் இருந்தது எல்லாம் உணவுப் பொருட்கள் வீணாகிவிடும் என்றும் எனக்குப் பதட்டமாக இருந்தது.
பிறகு அவர்கள் ஒருநாள் அழைத்து என் இமெயில் வாங்க மறந்து விட்டதால் அதை கொடுக்கச்சொன்னார்கள் கொடுத்தேன். பின்னர் 10 நாட்கள் அமைதி. செப்டம்பரே முடியும் தருவாயில் சரண் அழைத்து …’’அந்தப் பார்சல் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாக தகவல் இருக்கு, என்னையும் யாரும அழைக்கவில்லை, உன்னை அழைத்தார்களா?…’’ என்றான். இல்லை என்றேன்.
பொள்ளாச்சி DTDC கொரியர் அலுவலகத்துக்குப் போனில் கேட்டபோது அவர்களுக்குப் பார்சலைக்குறித்து எதுவுமே தெரியவில்லை. அப்படியா?திருப்பி அனுப்பிட்டாங்களா? என்று என்னைக் கேட்டார்கள். பிற்பாடு பட்டியலிட்டீர்களா? ஆதார் கொடுத்தீர்களா என்று ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டு என்னை வெறுப்பேற்றினார்கள். பின்னர் ’’அப்படியெல்லாம் திருப்பி அனுப்ப மாட்டாங்க நாங்கள் பார்க்கிறோம்’’ என்றார்கள்.
அடுத்த வாரம் கடும் கோபத்தில் அந்த ஓனருக்கு பலமுறை அழைத்தேன் அவர் எடுக்கவேஇல்லை . அந்த அலுவலகதுக்கு நேரில் சென்றேன். அதே வரவேற்பாளினி மட்டும் இருந்தாள். ஓனர் எங்கே என்றேன். போன் பண்ணுங்க என்றாள், அவர் எடுக்கலை நீ கூப்பிடு என்றேன். அவள் அவருக்கு போன் பண்ணினதும் எடுத்தார் ஓனர், எனக்கு போனைக் கொடுத்தாள் …’’ நான் இத்தனை நேரம் போன் பண்ணினேன் எடுக்கவேயில்லையே நீங்க என்றேன், அவர் நான் பேசுவது கேட்காதது போல் ’’ஹலோ ஹல்லோ’’ என்று மீண்டும் மீண்டும் சொல்லிகொண்டிருந்தார். கடுப்பாகி சத்தமாக ‘’ஏன் நான் அத்தனை முறை கூப்பிட்டு எடுக்கவில்லை ஆனால் இப்போ ரிஷப்ஷனில் கூப்பிட்டா மட்டும் எடுக்கறீங்க ,பார்சலை திருப்பி அனுப்பினது கூட தெரியலையா உங்களுக்கு ?’’… என்று கேட்டேன்
பதிலுக்கு அந்த ஒனர் ’’… கூப்பிட்டீங்கன்னா உடனே எடுக்கனுமா என்ன? கார் ஓட்டிக்கொண்டிருக்கையில் யார் கூப்பிட்டாலும் எடுக்கும் வழக்கம் இல்லை…’’ என்றார்.
கோபம் எனக்குக் கட்டுக்கடங்காமல் போனது, ஒரு அலுவலகம் வைத்து நடத்தும் ஒருவர் வாடிக்கையாளரிடம் பேசும்முறைஅல்ல அது. கோபமாக போனை அணைக்காமலேயே அந்தப்பெண்ணின் மேசையில் வைத்துவிட்டு வந்துவிட்டேன்
அதன்பிறது அந்தத் திருவாளர் ஓனர் என்னை அழைத்து …’’பணம் கட்டினீங்கன்னா என்னவேணா செய்வீங்களா? என்றும் பார்சலை அப்படி ட்ராக் செய்து சொல்லிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் போனை அப்படியெல்லாம் கோபமாக மேசையில் வைக்கக்கூடாது என்றும் அதட்டினார். பதிலுக்கு அவரைப்போன்ற நபர்களிடம் அப்படிக் கீழே இறங்கிப்பேசும் வழக்கமில்லை என்பதால் நான் இதைக்குறித்து புகார் அளிக்கப்போகிறேன் என்று மட்டும் சொல்லி போனை கட் செய்தேன். அதன்பிறகு வேறொரு பெண் கோவையிலிருந்து அழைத்து அதிலிருக்கும் ஒரு பாக்கெட்டின் அளவு குறித்த சந்தேகத்தால் அது திருப்பி அனுப்பப்பட்டது என்றும் என் இமெயில் இல்லாததால் அதை சரிபார்க்க முடியாமலானதாகவும் சொன்னாள். நான் அவர்கள் என்னிடம் இமெயில் கேட்டு நான் அனுப்பிய தகவலை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பினேன் பிறகு மரண அமைதி.
நான் பெங்களூர் தலைமை அலுவலகத்துக்கு பல புகார் மெயில் அனுப்பியும் எந்தப் பலனும் இல்லை. ரசீது இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்றார்கள். ரசீதை மீண்டும் கேட்டு வாங்கி அனுப்பினேன். ஒரு பலனும் இல்லை, ஒரு பதில் கூட இல்லை.
நேற்று நவம்பர் 1ம் தேதி அந்தப்பார்சலை கோவையில் இருந்து பணம்கட்டி நான் மீண்டும் திருப்பி எடுத்துகொள்ளும்படி தகவல் வாட்ஸேப்பில் வந்தது.
நான் பதிலளிக்கவில்லை , சரணே இப்போது இந்தியாவுக்கு வந்துவிட்டான் அதை மீண்டும் செலவு செய்து திருப்பி எடுத்துகொள்ளும் எண்ணமும் இல்லை.
இந்தியா முழுக்க இப்படி பொறுப்பற்றவர்களால்தான் பல பெயர்பெற்ற நிறுவனங்கள் இயங்குகின்றன. பார்சலை வாங்கும்போதே என்ன என்ன தேவை எனக்கேட்டு வாங்கத்தெரியவில்லை, பார்சல் எங்கு இருக்கிறது என்று ட்ராக் செய்யவும் தெரியாமல் வாடிக்கையாளாரிடம் மரியாதையாக பேசவும் தெரியமல் பொறுப்பாக பார்சல் போய்ச்சேர்ந்ததை உறுதிப்படுத்தவும் தெரியாமல் இவர்கள் இப்படி அலுவலகம் எல்லாம் வைத்துகொண்டு இருப்பதை நினைத்தால்….
வாழ்கையில் இந்த DTDC பக்கமே இனி போகமாட்டேன். செலவுசெய்து வாங்கியவை சரணுக்குப் போய்ச்சேரவில்லை, தேவையில்லாமல் அந்த ’ஒனர்’ என்னை மரியாதைக்குறைச்சலாக பேசியதைக் கேட்டுக்கொள்ள வேண்டி வந்தது, அந்தப்பொருட்கள் எல்லாம் வீணாகியது எல்லாவற்றையும் விட அந்தப்பார்சலில் ஒரு வெள்ளை அட்டையில் அழகாக ஒரு இதயம் வரைந்து அன்பு என எழுதி அனுப்பி இருந்தேன். யாராலும் கவனிக்கப்படாமல் போன அந்த அன்பையும் நினைத்துத்தான் இப்போது மன உளைச்சல்.
பொறுப்பற்றவர்களுக்கு மத்தியில் வாழ்வதும், மூடர்களை அன்றாடம் எதிர்கொள்வதும்தான் இப்போதிருக்கும் பெரும் பிரச்சனைகள். 25 ஆயிரம் ரூபாய் யாரோ பிக்பாக்கட் அடித்துவிட்டார்கள் திருட்டுக்கொடுத்துவிட்டேன் என்று நினைத்துக்கொள்கிறேன்.
பிரிடிஷ் விலங்கியலாளரும், சிம்பன்ஸிகளின் பாதுகாவலரும், மானிடவியலாளருமான ஜேன் குடால் தனது 91 –வது வயதில் நேற்று அக்டோபர் 1, 2025 அன்று லாஸ் ஏஞ்சலீஸில் ஒரு மரம் நடும் நிகழ்வுக்கான பயணத்திலிருக்கையில் இயற்கையாக மறைந்தார்.
அவரை நினைக்கையில், அவரது காணொளிகளையும் உரைகளையும் கேட்கையில், சிம்பன்ஸிகளுடன் அவர் இருக்கும் புகைப்படங்களைப் பார்க்கையில் எல்லாம் பேரன்னை என்றுதான் என் மனதில் தோன்றும். அன்னைமை அவரது உடல்மொழியில் அப்படி பொங்கிப்பிரவாகிக்கும். உலகில் சிம்பன்ஸிகளை குறித்த மிக நீண்ட கால, மிக விரிவான ஆய்வுகள் செய்த ஒரே ஒருவர் ஜேன்.
ethologist என்னும் ஒரு சொல்லையே அவரைக் குறித்து அறிந்துகொண்ட போதுதான் முதன்முதலாக தெரிந்து கொண்டேன். விலங்குகளை, அவற்றின் சமூக கட்டமைப்பை, அவற்றின் உயிர்வாழ்தல், தேவைகள், பரிணாம வளர்ச்சியை எல்லாம் அவற்றின் இயற்கையான வாழிடங்களிலேயே அறிந்துகொள்ளும் துறைதான் ethology.
ஜேன் 1960-களில் உலகளாவிய அளவில் இந்தத்துறையில் பிரபலமாயிருந்த ஒரு விலங்கியலாளராக இருந்தார். இவரது சிம்பன்ஸி ஆய்வுகள் விலங்குகள் பற்றிய உலகின் புரிதலையே அடியோடு மாற்றியது.மனிதர்களுக்கு மட்டும் உரியது என்று பலகாலமாக நம்பப்பட்ட பலவற்றை சிம்பன்ஸிகள் அறிந்து கொண்டிருப்பதையும், செய்வதையும் அவர் நிரூபித்தது அறிவியல் உலகில் பெரும் திருப்புமுனையாக இருந்தது.
நீர்நிலைகளுக்கு பெயர் பெற்ற லண்டனின் மிக புராதன, மிக மிக அழகிய நகரமான Hampstead –ல் பந்தயக்கார் ஓட்டுநரான (Morris-Goodall) அப்பாவுக்கும் எழுத்தாளரான (Margaret Myfanwe) அம்மாவுக்கும் பிறந்த ஜேன் அவரது குழந்தைப்பருவத்தில் பரிசாகக் கிடைத்த ஒரு சிம்பன்ஸி பொம்மையிலிருந்து தொடங்கிய தனது விலங்குகள் மீதான பேரன்பை வாழ்நாள் முழுக்க தொடர்ந்தவர்.
மனிதரல்லாத முதன்மை உயிரினங்களின் அறிவியலில் ( primatology) உலகளவில் இவரே முதன்மையானவர். சிம்பன்ஸிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதை தன் வாழ்நாள் கடமையாகக் கொண்ட ஜேன் ‘’ மனிதர்களை விலங்கு உலகிலிருந்து பிரிக்கும் தெளிவான கோடு ஏதும் இல்லை’’ என்றார். 65 ஆண்டுகள் சிம்பன்ஸிகளின் வாழிடங்களைப் பாதுகாப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஜேன் காலப்போக்கில் மனிதர்களால் இயற்கை வாழிடங்கள் தொடர்ந்து அழிக்கப்படுவதன் ஆபத்தையும், அதற்கு தீர்வு மிக அவசரமாக தேவைப்படுகிறது என்பதையும் வலியுறுத்தும் காலநிலை செயற்பாட்டாளர் ஆகினார்.
1957 –ல் பள்ளிப்படிப்பை மட்டும் முடித்திருந்த ஜேன் கென்யாவின் விலங்குகளைக் குறித்து அறிய ஆர்வம் கொண்டிருந்தார் . கென்யா செல்ல தேவையான செலவுகளுக்காக ஒரு உணவகத்தில் பரிசாரகராக வேலைசெய்து பொருளீட்டினார். கென்யா சென்று தொல்லியலாளரும் புதைபடிம மனிதவியலாளருமான Dr.லூயி மற்றும் தொல்லியலாளரான அவரது மனைவி மேரியையும் சந்தித்தார். லூயி ஜேனை நைரோபி தேசிய அருங்காட்சியகத்தில் உதவியாளராகப் பணியமர்த்தினார். மனிதப்புதைபடிமங்களின் தேடலில் ஜேனின் பொறுமையையும் அவரது இயற்கை மீதான ஆர்வத்தையும் கண்ட லூயி ஜேனை தான்சானியாவின் கோம்பே காடுகளில் சிம்பன்ஸிகளைக் குறித்த ஆய்வில் ஈடுபடச் சொன்னார்.
1960 ஜுலை 14-ம் தேதி ஜேன் கோம்பே காடுகளுக்குள் முதன்முதலில் நுழைந்தார். அங்கு பணியாற்றுகையில்தான் சிம்பன்ஸிகளுடனான அவரது பரிச்சயமும் ஈடுபாடும் உண்டானது. லூயி தம்பதிகளுடன் இணைந்து ஜேன் சிம்பன்ஸிகளின் பாதுகாப்புக்கான ஒரு அமைப்பை அங்கு துவங்கினார்.
அந்த அமைப்பிலிருந்து ஆய்வுகளைச் செய்கையில் தான் சிம்பன்சிகள் அது நாள் வரை உலகம நினைத்திருந்ததுபோல் தாவரவுண்ணிகள் மட்டுமல்ல அவை இறைச்சி உண்பதையும், மழைநடனமிடுவதையும், படுபயங்கரமான போர்களில் ஈடுபடுவதையும், எல்லாவற்றையும் விட முக்கியமாக புற்றிலிருந்து கரையான்களை எடுத்து உண்பதற்கான கருவிகளை அவை தயாரிப்பதையும் கண்டறிந்து உலகிற்குச் சொன்னார்.
சிம்பன்ஸிகளைப் பற்றிய உலகின் பல தவறான அறிதல்களையும் நம்பிக்கைகளையும் உடைத்து உண்மையில் சிம்பன்ஸிகள் மனிதனுக்கு மிக மிக நெருங்கிய உயிரினங்கள் என்பதை ஜேன் தெரிவித்தார். 1963-ல் 29 வயதான ஜேனின் 7500 சொற்களையும், 37 பக்கங்களையும் கொண்ட சிம்பன்ஸிகளைக் குறித்த பல முதல் நிலைத்தகவல்களைக் கொண்ட ஆய்வறிக்கையை நேஷனல் ஜியோகிராஃபிக் சஞ்சிகை வெளியிட்டது.
அந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருந்த கோம்பே காடுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை எடுத்தவர்தான் அவரது காதல் கணவர் ஹியூகோ. அந்தக்கட்டுரை சிம்பன்ஸிகளின் வாழ்வை மட்டும் காட்டவில்லை கோம்பே காடுகளில் ஆய்வுகளின் போது ஜேனுக்கு உண்டான நோய்கள், உடல்நலகுறைவு, அதிலிருந்து அவர் மீண்டது, சிம்பன்ஸிகளை நெருங்குவதில் இருந்த சிக்கல்கள், தடைகள், காட்டிலிருந்த கொல்விலங்குகளால் உண்டான ஆபத்துகள் ஆகியவையும் விவரிக்கப்பட்டிருந்தது. அந்தக்கட்டுரை இன்றுவரையிலும் உலகின் மிக முக்கியமான அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
சிம்பன்ஸிகளின் இணைசேர்தல், கருவுறுதல், குட்டிகளை ஈனுதல், பாதுகாத்தல் போன்ற பல விஷயங்களை ஆய்வு செய்து உலகிற்கு புதிய பல உண்மைகளை ஜேன் தெரிவித்தார்.சிம்பன்ஸி அன்னைகள் நாலரை வருடத்திலிருந்து 6 வருடத்துக்கொருமுறைதான் கருத்தரித்து, ஒன்றிலிருந்து இரண்டு குட்டிகளை மட்டும் அளிப்பவை, முதல்முறை அன்னைகள் ஆண் சிம்பன்ஸிகளிடமிருந்து குட்டிகளை மறைத்து வைக்கின்றன, அனுபவம் வாய்ந்த அன்னைகளே ஆண் சிம்பன்ஸிகளுக்கு குட்டிகளைக் காட்டுகின்றன போன்ற புதிய தகவல்களை ஜேன் உலகிற்கு சொன்னார்.
தன் மகன் க்ரப்பை வளர்ப்பதற்கான பல படிப்பினைகளை சிம்பன்ஸிகளிடமிருந்து கற்றுக்கொண்டதாகச் சொல்லும் ஜேனின் மீது அத்தனை பிரியமுண்டாகியது எனக்கு. க்ரப்புடன் அடர் காட்டில் ஆய்வுகளைச் செய்த ஜேன் அவனை காட்டுவிலங்குகளிடமிருந்து பாதுகாக்க கூண்டில் அடைத்து வைத்திருப்பார். அர்ப்பணிப்புடன் ஆய்வுகளைச் செய்பவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருபபோம் எனினும் ஜேன் போல மகனை கூண்டில் வைத்துவிட்டு சிம்பன்ஸிகளை ஆய்வுசெய்யும் அர்ப்பணிப்பை நான் வேறெங்குமே கேள்விப்பட்டதில்லை.
அவரது கண்டுபிடிப்புக்களைப்பற்றி சொல்கையில் லூயி ’’சிம்பன்ஸிகளும் மனிதகளைப் போலத்தான் என்பதை ஒத்துக்கொள்ளும் முன்பு நாம் கருவி என்பதையும், ஏன் மனிதன் என்பதையுமே மறுவரையறை செய்யவேண்டியது அவசியமாக இருக்கிறது’’ என்று குறிப்பிட்டார்.ஜேனின் பங்களிப்பை, கண்டுபிடிப்புக்களின் முக்கியத்துவத்தை உலகம் அவர் கல்விக்கூடத்துப் பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே அங்கீகரிக்கும் என லூயி உணர்ந்திருந்தார் எனவே இளங்கலை படித்திருக்காத ஜேனை கேம்ப்ரிட்ஜில் முனைவர் பட்டம் படிக்க ஏற்பாடு செய்தார்.
அங்கு ஜேன் முனைவர் பட்டத்திற்காக மிகக்குறுகிய காலத்தில் செய்த The Behaviour of Free-living Chimpanzees in the Gombe Stream Reserve என்னும் தலைப்பிலான ஆய்வு விலங்குலகின் பல புதிய கதவுகளை உலகிற்கு திறந்துவைத்தது. இளங்கலை படிக்காமல் கேம்ப்ரிட்ஜில் முனைவர் பட்டம் பெற்ற வெகு சிலரில் ஜேனும் ஒருவர்
அடர் வனங்களில் பலவருடங்களை ஆய்வுக்காகச் செலவழித்த ஜேனின் முதல் கணவர் நேஷனல் ஜியோகிராஃபியின் முதன்மை வன உயிர்ப்புகைப்படக்கலைஞரும் ஜேனின் ஆய்வை படம்பிடிக்க வந்தவருமான ஹியூகோ வான்(Hugo van Lawick.) அவர்கள் காடுகளில் சந்தித்து காதல் கொண்டு 1964-ல் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களது மகன் Grub என்று செல்லப்பெயர்கொண்ட Hugo Eric Louis van Lawick.
ஹுயூகோவுடன் 1974-ல் விவாகரத்தானபின்னர் இரண்டாவதாக 1975-ல் தான்சானிய அரசியல்வாதியும் தான்சானிய தேசியப் பூங்காவின் முன்னாள் இயக்குநருமான டெரெக்கை (Derek Bryceson ) மறுமணம் புரிந்து கொண்டார், டெரெக் 1980-ல் மறைந்தார்.
அதுவரை விலங்கியலாளர்களின் வழக்கமாயிருந்ததைப் போல விலங்குகளுக்கு எண்களை இடுவதில் விருப்பமில்லாத ஜேன் சிம்பன்ஸிகளுக்கு, டெஸ் , ஃப்ளோ, பிஃபி, டேவிட் போன்ற பெயர்களை வைத்தார்.1977-ல் அவரது பெயரிலேயே ஜேன்குடால் நிறுவனத்தை வாஷிங்டனில் துவங்கினார். அந்த அமைப்பு சூழல் பாதுகாப்பு, சூழல் ஆரோக்கியம் மற்றும் வாழிட அழிப்புக்கெதிரான விழிப்புணர்வு ஆகியவற்றுக்கான உலகளவிய விரிந்த பிரச்சாரத்தையும் அது குறித்த கல்வியையும் ஆய்வையும் மேற்கொண்டிருந்தது.ஜேன் இந்த அமைப்பின் பொருட்டு வருடத்தின் 300 நாட்கள் அவரது இறுதிநாள் வரையிலுமே தொடர் பயணத்திலிருந்தார். இந்நிறுவனத்தின் 25 கிளைகள் உலகெங்கும் இயங்குகின்றன.
2014 –ல் நியூயார்க் டைம்ஸுக்களித்த நேர்காணலில் ‘’ சிம்பன்ஸிகளுக்காக ஒருவர் ஆண்டு முழுவதும் பயணம் செய்து, மிக முக்கிமான செயல்களைச் செய்கிறார் என்பது எனக்கு தொடர்ந்து வியப்பை அளிக்கிறது. அந்த ஒருவர் நான்தான்’’ என்றார்.
அதே நிறுவனத்தின் நீட்சியயாக 1991-ல் பள்ளிக்குழந்தைகளும் பங்களிக்கும் Roots & Shoots, என்னும் அமைப்பையும் சூழல் பாதுகாப்புக்காக உருவாக்கினார் ஜேன். துவக்கத்தில் 12 பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்களுடன் இருந்த அந்த அமைப்பு இப்போது 75 நாடுகளில் மிகத்தீவிரமான செயல்பாடுகளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது.
2025-ல் அமெரிக்க அதிபரின் சுதந்திர விருது உள்ளிட்ட மிக உயரிய ஏராளமான விருதுகளையும் ஜேன் பெற்றிருக்கிறார். விலங்குகள் குறித்த அவரது அவதானிப்புகளை பல நூல்களாக எழுதியிருக்கும் ஜேனின் மிகப்பிரபலமான நூல் Reason For Hope: A Spiritual Journey.
அவரது The Book of Hope: A Survival Guide for Trying Times, என்னும் மற்றொரு நூல் உலகின் மிக முக்கியமான 20 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.ஜேனின் In the Shadow of Man (1971). மற்றும் The Chimpanzees of Gombe: Patterns of Behavior (1986). ஆகிய இரு கட்டுரைகளும் உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவை.
ஆப்பிரிக்க காடுகளில் ஜேன் நெருக்கமாகச் சந்தித்த மலேரியா, முதலைகள், விஷம் துப்பும் நாகப்பாம்புகள், கொல்விலங்குகள், ராட்சஷ விஷ மரவட்டைகள் ஆகியவற்றையும் சொல்லும் அவரது கட்டுரைகள் உலகப் பிரசித்தி பெற்றவை.அவரது விலங்குலகம் குறித்த பலநூறு ஆவணப்படங்களும், திரைப்படங்களும் ஜேனின் கண்கள் .வழியாக நமக்கு விலங்குலகைக் காட்டுபவை.
20-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான மிகப்பிரபலமான இயற்கை அறிவியலாளராக இருந்த ஜேன் ஆண்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த இயற்கை அறிவியல் துறையில் அவரைத்தொடர்ந்து பல பெண்களும் வர காரணமாயிருந்தார் என்பதுவும் அவரது முக்கியப் பங்களிப்புகளில் ஒன்று. அவர்களில் சிம்பன்ஸிகளின் ஆய்வில் பெரும்பங்காற்றிய பெண்களான Dian Fossey, Biruté Galdikas, Cheryl Knott மற்றும் Penny Patterson,ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அவரது இறுதிப் பயணத்திட்டம் லாஸ் ஏஞ்சலீஸ் காடுகளின் நெருப்பு பிடிக்கும் எல்லைகளில் நெருப்புத் தடுப்பாக 5000 மரங்கள் நடும் நிகழ்வுதான். அவரது மரணத்திற்குப்பின்னர் இன்று நடப்பட்ட முதல் மரம் ஜேன் குடால் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.
ஜேன் மீது பெரும் அபிமானம் கொண்டிருக்கும் ஜாஜாவிடம் ஜேனின் மறைவு குறித்து இன்று பேசிக்கொண்டிருக்கையில் ஜேன் தனது பாட்டியின் சாயலில் இருப்பதாக சொன்னார் ஜாஜா. இயற்கை வளங்களைத் தொடர்ந்து சுரண்டுகிற, யானை வழித்தடங்களில் பெருநிருவனங்களை அமைக்கிற, பனைமரங்களை செங்கல் சூலைகளில் எரிக்கக்கொண்டு செல்கிற, அரசியல் ஆதாயங்களுக்காக பலநுறு மரங்களை வெட்டுகிறவர்களுகு மத்தியில் அர்ப்பணிப்புடன் கடைசி நொடி வரை. இயற்கையின் பாதுகாப்புக்காக உழைக்கும் ஜேன் போன்றவர்கள்தான் நமது சொந்தமாக இருக்கமுடியும். எனக்கும் ஜேன் பேரன்னையாகத்தான் தெரிகிறார்.
நம்பிக்கை மற்றும் மன உறுதிக்கான தூதராக ஜேன் உலகெங்கும் அறியப்பட்டார். அவரது முக்கியச் செய்தியாக ’’நம்பிக்கை கொள்வது என்பது நமது கையில், என் கையில், உங்கள் கையில் இருக்கிறது நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் சின்னஞ்சிறு மாற்றங்களைச் செய்யமுடியும்’’ எனச் சொன்ன ஜேன் அவரது வாழ்க்கையையே அந்த செய்திக்கான உதாரணமாக விட்டுச் சென்றிருக்கிறார்.ஜேனுக்கு அன்பும் அஞ்சலியும்
தென்னாப்பிரிக்காவின் கேப் பகுதி பல்லுயிரிய மையத்தில், அழிவின் விளிம்பில் இருக்கும் தாவரங்களைப் பாதுகாக்கும் பணியில் தன்னை முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டவர் டோன் என்கிற டோனோவன். (Dr. Donovan Kirkwood)
உலகின் அணுக முடியாத, மிகக் கடினமான சூழல்களில் வாழும் தாவரங்கள் பற்றி அறிந்து கொள்ளவும், அவற்றை கைகளால் மகரந்தச் சேர்க்கை செய்யவும்,அவற்றை அழிவிலிருந்து பாதுகாக்கவும், கடுமையான மற்றும் ஆபத்தான பணிகளைக் தாவரவியலாளர்கள் மேற்கொள்வது Extreme Botany எனப்படுகிறது.
அழிவின் விளிம்பில் உள்ள தென்னாப்பிரிக்காவின் அரிய தாவர இனங்களைக் மிக ஆபத்தான அவற்றின் வாழ்விடங்களுக்குச் சென்று கண்டறிந்து, சேகரித்து, ex situ conservation எனப்படும் கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் அவற்றை வளர்த்து மீண்டும் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களுக்கு மாற்றுவதை பல்லாண்டுகளாக டோன் செய்துவந்தார்.
தென்னாப்பிரிக்காவின் பழமையான பல்கலைக்கழகம் தாவரவியல் பூங்காவின் ஸ்டெல்லென்போஷ் பூங்காவின் பொறுப்பாளராக 2018-லிருந்து டோன் பணிபுரிந்து வந்தார். இந்தப் பூங்கா தென்னாப்பிரிக்காவின் இயல் தாவரங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு தாவரங்களின் மிகப்பெரிய தொகுப்பைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக போன்ஸாய் சேகரிப்பு இங்கு மிகப் பிரபலம். ஒரு திறந்தவெளி ஆய்வகமாகவும் செயல்படுகிறது இந்த பூங்கா.
டோன் தேடிச்சென்ற தாவரம்
தென்னாப்பிரிக்காவின் ஓரிடத்தாவரமான Marasmodes undulata என்னும் சூரியகாந்திக் குடும்பம் தாவரமொன்று 1946-க்கு பிறகு 34 ஆண்டுகளாக எங்குமே தென்படவில்லை எனவே அது அழிந்துவிட்ட இனமாக கருதப்பட்டிருந்தது. 1980-ல் 300 தாவரங்கள் மீண்டும் தென்னாப்பிரிக்காவின் மலைக்காடுகளில் கண்டுபிடிக்கபட்டு பின்னர் கவனமாகப் பாதுகாக்கப்பட்டன. எனினும் 2005-ல் அது வெறும் 20 மட்டும் இருந்தது செய்தியான போதுதான் நான் அதைக் குறித்து அறிந்துகொண்டேன்.
2017-ல் 17 ஆக இருந்தன அவை பிறகு அபாயகரமாக 2020ல் உலகில் மூன்றே மூன்று என்னும் மிகக்குறைந்த எண்ணிக்கையில் ஏறக்குறைய அழிந்துவிட்ட நிலையில்தான் டோன் அந்த பூங்காவில் பணியேற்றுக்கொண்டார். உடனடியாக அதைக் காப்பாற்றும் முயற்சியில் டோன் ஈடுபட்டார். மூன்றுதான் இருந்தன என்பதால் இயற்கை வாழிடங்களிலிருந்து அவற்றை எடுப்பது அவற்றின் அழிவுக்கு கரணமாகலாம் எனவே லண்டன் கியூ விதை வங்கியிலிருந்த அதன் 90 விதைகளை தருவித்து அதை பல சவால்களுக்கிடையில் வெற்றிகரமாக நூற்றுக்கணக்கில் வளர்த்து, மீண்டும் அவற்றின் இயற்கையான வாழிடத்தில் அறிமுகப்படுத்தி டோன் அதைக் காப்பாற்றினார். இப்படி ஏராளமான தாவரங்களை டோன் அழிவிலிருந்து பாதுகாத்திருக்கிறார்.
இந்த Species recovery என்பது மிக மிகச் சவாலான ஒன்று. ஆனால் டோன் 1.7 ஹெ பரப்பளவு இருக்கும் இந்தச் சிறிய பூங்காவில் தென்னாப்பிரிக்காவின் அழிந்துகொண்டிருக்கிற, அபாயத்தின் விளிம்பிலிருக்கிற சிவப்புப்பட்டியலிடப்பட்ட தாவரங்களில் 40 சதவீதத்தை காப்பாற்றி அந்தப் பூங்காவில் வளர்த்திருதார். கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஒரு சிறு குழுவினருடன் தென்னாப்பிரிக்காவின் மிக ஆபத்தான, செங்குத்தான, கரடுமுரடான ஜோங்கெர்ஷோக் மலைத்தொடரில் தென்னாப்ரிக்கவின் கேப் பகுதிக்கு சொந்தமான, உலகில் ஐம்பதுக்கும் குறைவான எண்ணிக்கையில் இருந்த Penaea formosa என்னும் தாவரத்தை தேடி மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 51 வயதான டோன், கால் இடறி மலையிலிருந்து விழுந்து இறந்தார்.
இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் வரைக்கும் அவர் உடல் கிடைத்ததாக தகவல்களில்லை. எப்பேர்ப்பட்ட இழப்பு .
He slipped, fell, and did not return.
இப்படி வாசித்தபோது பெரும் அதிர்ச்சியடைந்தேன். அரிய தாவரங்களின் புகைப்படங்களையும். அவரது களப்பணியையும், அரிய தகவல்களையும் டோன் பகிரும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரைப் பின் தொடர்ந்த 1500 பேர்களில் நானும் ஒருத்தி.
பூபதி
டோன் போல ஆபத்துக்களைச் சந்தித்து துணிச்சலாக அழிந்துகொண்டிருக்கும் தாவரங்களை அணுகமுடியாத அவற்றின் வாழ்விடங்களுக்குச் சென்று தேடிக்கண்டடைந்து பாதுகாப்பவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கின்றனர். அவர்களை அறிந்தவர்கள் அதைவிடக்குறைவு. இவரைப்போலவே 2014-ல் மிக அரிய களப்பணி ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த தென்னிந்திய உயிரியலாளர் ஒருவரும் 51 வயதில் மலையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.டோன் போல ஆபத்துக்களைச் சந்தித்து துணிச்சலாக அழிந்துகொண்டிருக்கும் தாவரங்களை அணுகமுடியாத அவற்றின் வாழ்விடங்களுக்குச் சென்று தேடிக்கண்டடைந்து பாதுகாப்பவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கின்றனர். அவர்களை அறிந்தவர்கள் அதைவிடக்குறைவு.
இவரைப்போலவே 2014-ல் மிக அரிய களப்பணி ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த தென்னிந்திய உயிரியலாளர் ஒருவரும் 51 வயதில் மலையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.டோனும் பூபதியும் எதை மிக முக்கியமானது எனக் கருதினார்களோ அதைச் செய்து கொண்டிருக்கையிலேயே உயிரிழந்தார்கள். இப்படித் தீவிரமான அர்ப்பணிப்புடன் உயிரினங்களை நேசிப்பவர்கள் உயிருடன் இருக்கும் போது உலகம் அவர்களை அறிந்து கொள்வதே இல்லை. டோனோவனின் இறப்பை செய்திகளில் அறிந்துகொண்ட அன்று நான் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருக்கும் தாவரவியல் துறை மாணவர்களிடம் அவரைப்பற்றி கேட்ட்டேன். ஒருவருக்கும் அவரைத் தெரியவில்லை. அவர் இருந்ததும் இறந்ததும் யாருக்குமே தெரியவில்லை.
டோன் தான் நேசித்த தென்னாப்பிரிக்க மண்ணில், அழிந்துகொண்டிருந்த ஒரு தாவரத்திற்கான தேடலில் மறைந்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவின் தாவரச் செல்வத்தின் எதிர்காலம், ஒவ்வொரு சிறு விதையாக, ஒவ்வொரு அங்குல மண்ணாக, இப்படித்தான் பாதுகாக்கப்படவேண்டும் என அவர் திடமாக நம்பினார்
டோனோவன் இந்தப் பூங்காவின் பொறுப்பேற்றுக்கொண்ட போது இப்படிச் சொன்னார்.
“Most of all, I just want to get people to fall hopelessly in love with plants and nature.”
அவர் வாழ்நாளெல்லாம் செய்து கொண்டிருந்ததைத்தான் செய்தியாகச் சொல்லிச்சென்றிருக்கிறார்.
சீனாவின் யுனான் மாகாணத்தில் 1371-ல் இஸ்லாமியரான ஹாஜி மா’ வுக்கும் வென்’னுக்கும் பிறந்தார் மா ஹெ.
மா என்பது முகமது என்பதின் சீனப்பெயர். இளம் மா, கன்ஃபூஷியஸ், மென்சியஸ் உள்ளிட்ட பல அறிஞர்களின் நூல்களை விரும்பிப் படித்தான். அவனது தந்தையும் சகோதரர்களும் சென்று திரும்பிய மெக்காவின் ஹஜ் புனித யாத்திரைகளைக் குறித்தும் உலகநாடுகள் குறித்தும் ஆர்வமாக கேட்டுத்தெரிந்து கொள்வான். மாவிற்கு உலகைச்சுற்றிப்பார்க்கவேண்டும் என்னும் பேராவல் இருந்தது.
1381-ல் மா’விற்கு 11 வயதானபோது மிங் சாம்ராஜ்யத்தின் பேரரசர் ஹோங் வு’வின் ராணுவம் யுனான் பிரதேசத்தை தாக்கிக் கைப்பற்றியது. யுனானிலிருந்து மா உள்ளிட்ட ஏராளமான சிறுவர்கள் மிங் அரசவையில் அடிமைகளாகப் பணியற்ற பிடித்துச்செல்லப்பட்டார்கள்.
பண்டைய சீனத்தில் அரசரின் அந்தப்புரத்தில் இருந்த அவரது ஏராளமான மனைவியர் மற்றும் ஆசைநாயகிகளுக்கு பணிவிடைசெய்ய ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட ஆணிலிகளைத்தான் அனுமதிப்பார்கள். ஆணிலிகளால் அந்தப்புரப் பெண்களுக்கு வாரிசு உண்டாகும் வாய்ப்பில்லை என்பதால் எதிர்காலத்தில் அரசரின் வாரிசுகளுக்கு போட்டியாக வேறு குழந்தைகள் உருவாகாமல் இருக்க இப்படிச் செய்யப்பட்டது. அப்படி மா’வும் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டு அந்தப்புரத்தில் பணியமர்த்தப்பட்டான்.
மா மிகக் கடினமாக உழைக்கும் சிறுவனாக இருந்தது பேரரசரின் கவனத்துக்கு வந்தது. அவர் மா’வுக்கு ராணுவப் பயிற்சி அளிக்க ஆணையிட்டார். மா பிற்பாடு இளவரசர் ஜு டி-யின் பாதுகாவலராக நியமிக்கப்பட்டு மங்கோலியர்களுக்கெதிரான பல போர்களில் அவருடன் இருந்து அவரைப் பாதுகாத்தார். பின்னர் இளவரசர் ஜு டி மிங் சாம்ராஜ்யத்தின் பேரரசரான பின்னர், பதவி உயர்வு பெற்று ஜெங் என்னும் அரசவைப் பெயரிடப்பட்டு மா ஹெ ஆக இருந்தவர் ஜெங் ஹெ ஆனார். (“Zheng” He)
ஏராளமான அதிகாரங்கள் கொண்டிருந்த ஜெங் ஹெ அரண்மனைக் கட்டுமானம் மற்றும் கப்பல் கட்டுமானங்களில் புகழ்பெற்றவரானார். சீனாவின் மாபெரும் கப்பற்படையை அவர் உருவாக்கினார். ஒரே சமயத்தில் இணையாக பல கப்பல்கள் இணைந்து செல்லும் கப்பற்தொகுதிகளில் 7 மாபெரும் கடற்பயணங்களை 1405-லிருந்து 1433 வரை ஜெங் ஹெ ஒருங்கிணைத்தார். செல்வங்களைத் தேடிச்செல்லும் 62 பொக்கிஷக்கப்பல்கள் உள்ளிட்ட நான்கு அடுக்குகள் கொண்ட 208 மரக்கப்பல்களில் 27800 வீரர்கள், அறிஞர்கள் உடைமைகளுடன் அவரது கப்பற்படை புறப்பட்டது.
உலகின் மிக முக்கியமான பிரதேசங்களுக்கு சென்று திரும்பிய அக்கப்பல்களில் ஜெங் ஹெ உணவு, மசாலாப்பொருட்கள், உடை மேலும் பல வினோதப்பொருட்களை ஏராளமாகக்கொண்டு வந்து மன்னருக்கு அளித்தார். அவரது கடற்பயணங்களின் நோக்கம் போரோ, நாடுகளை கைப்பற்றுதலோ அல்லாமல் புதியபொருட்களை சேகரிப்பதும், வணிகமுமாக இருந்ததால் சென்ற அனைத்து இடங்களிலும் அவருக்கு வரவேற்பு இருந்தது. தென்கிழக்காசியாவுக்குச் சென்ற அவரது ஒரு கடற்பயணத்தில் தனித்தனித் தீவுகளில் இருந்த ஆட்சியாளர்கள் அவருக்கு மிக வினோதமான ஒரு உணவுப்பொருளைப் பரிசளித்தார்கள்.
அத்தீவுகளில் நூற்றாண்டுகளாக புழக்கத்தில் இருந்த ஒரு உணவுப்பொருளான அது பறவைகள் எச்சிலால் கட்டும் சிறு கிண்ணம் போன்ற உண்ணக்கூடிய கூடுகள்.
அக்கூடுகள் தீவின் சுண்ணாம்புக் குகையின் சுவர்களில் அமைக்கப்பட்டிருந்தன. சின்ன உழவாரப்பறவைகள் (swiftlets) முட்டையிட்டு குஞ்சுகள் வெளிவந்ததும் கைவிடப்பட்ட ஏராளமான கூடுகளைச்சேகரித்து உணவாக உண்பதை அத்தீவுவாசிகள் பலகாலமாக செய்துகொண்டிருந்தார்கள். அக்கூடுகள் சுவையாக இருந்ததோடு உண்பவருக்கு நல்ல ஆற்றல் அளித்து அவர்களை இளமையாக வைத்திருக்கவும் உதவின. மிகவும் அதிசயித்துப்போன ஜிங் ஹெ அந்தப்பறவைக்கூடுகளை அப்போது பதவியேற்றிருந்த மிங் சாம்ராஜ்யத்தின் புதிய இளம் பேரரசருக்குக் கொண்டு வந்தார்.
அரண்மனைச்சமையல்காரர்கள் அந்தப் பறவைக் கூட்டை கண்ணாடிபோல மின்னும் சூப்பாக செய்துகொடுத்து அதன் சுவையில் மயங்கிய இளம் பேரரசர் அப்பறவைக்கூடு உணவை அரச குடும்பத்துக்கான பிரத்யேக உணவாக அறிவித்தார். அப்போதிலிருந்து பறவைக் கூடு சூப் செல்வச் செழிப்பு, ஆரோக்கியம், நீளாயுள் மற்றும் புத்தம்புதிய சுவையின் அடையாளமானது. சமூகத்தின் மேல்தட்டு மக்களும் அதை சுவைக்கத்தலைப்பட்டனர். இந்த பறவைக்கூடு ஆயுளை அதிகரித்து ஆற்றல் அளிக்கும் என்பதோடு பாலுணர்வைத் தூண்டும் என்னும் கதையும் சேர்த்துப்பரப்பி விடப்பட்டபோது அதற்கான தேவை மிக அதிகமாகியது.
ஆறு நூற்றாண்டுகள் கடந்தும் அந்த உணவின்மீதான விருப்பம் இன்றும் உலகெங்கிலும் தொடர்கிறது.
இந்தக்கூடுகளை உருவாக்கும் சின்ன உழவாரன்கள் தெற்காசியா, ஓசியானியா, வடகிழக்கு ஆஸ்திரேலியா மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் வாழ்கின்றன. இந்திய சின்ன உழவாரன் (Aerodramus unicolor) இந்தியா மற்றும் இலங்கையில் மட்டும் காணப்படுகிறது. கூட்டமாக குகைகளில் வாழும் இவை கூட்டமாக அதிகாலை வெளியே சென்று மாலை அந்தி சாய்கையில் கூடு திரும்பும் தினசரி ஒழுங்கைக்கொண்டவை.
தாய்லாந்து, வியட்நாம், போர்னியோ மற்றும் பிலிப்பைன்ஸ் பகுதிகளின் சுண்ணாம்புக்குகைகளில் இந்த சின்ன உழவாரன்கள் இனப்பெருக்கம் செய்கின்றன.
உலகின் மிகப்பழமையான மழைக்காடுகளுக்கும் ஒராங்குட்டான் உள்ளிட்ட விதம் விதமான வன உயிரினங்களுக்கும் பெயர்பெற்ற உலகின் மூன்றாவது பெரிய தீவான தென்கிழக்காசியாவின் போர்னியோ தீவுகளில் மாபெரும் கோமந்தோங் சுண்ணாம்புக் குகைளின் உச்சியில் இந்தப்பறவைகள் ஏராளமான கூட்டை அமைக்கின்றன.
அபோடிடே பறவைக் குடும்பத்தைச்சேர்ந்த Aerodramus, Collocalia, Hydrochous மற்றும் Schoutedenapus ஆகிய பேரினத்தைசேர்ந்த சின்ன உழவாரன் பறவைகளின் கூடுகளே இப்படி உணவாகப்பயன்படுகிறது. இவற்றின் ஏராளமான சிற்றினங்களில் 6 சிற்றினங்களின் கூடுகளே உணவாகப்பயன்படுகின்றன.
இந்த உழவாரப்பறவைகள் 9 லிருந்து 16 செ மீ நீளமும் 8 லிருந்து 35 கிராம் எடையும் கொண்ட சிறு உடல் கொண்டவை. இவற்றின் இறகுகள் மங்கலான கருமை, மண் நிறம் அல்லது சாம்பல் நிறம் கொண்டிருக்கும். குறுகிய இறகுகளும் குட்டைக்கால்களும் கொண்டிருப்பதால் இவற்றால் வேகமாக பறக்கவும் குகைகளின் ஆபத்தான சரிவுகளில் அமர்ந்து கூடு கட்டவும் முடிகிறது.
சின்ன உழவாரன் பறவைகள் காற்றில் பறக்கையிலேயே பூச்சிகளைப் பிடித்து உண்பதோடு இணைசேர்வதையும் உறங்குவதையும் காற்றில் பறக்கையிலேயே செய்கின்றன. இனப்பெருக்கக்காலத்தில் முட்டையிடத்தான் குகைகளில் இடம் தேடி வருகின்றன இப்பறவைகள்
சின்ன உழவாரன்கள் ஒலியை எதிரொலிக்கச்செய்வதின் மூலம் இருண்ட குகைகளின் உட்புறச் சுவர்களை உணர்கின்றன( echolocation)
வாழ்நாள் முழுக்க ஒரே இணையுடன் மட்டும் வாழும் இவற்றின் இனப்பெருக்கக்காலம் 92-120 நாட்கள். கூடுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கையில் பிற சின்ன உழவாரன்களின் கூடுகளிலும் இவை முட்டையிடும் வழக்கம் கொண்டிருக்கின்றன.
அடுக்கடுக்காக எச்சில் இழைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி ஆண் பறவைகளால் இந்தக்கூடு கட்டப்படுகிறது. சுமார் 30 நாட்களில் எச்சில் உலர்ந்து கெட்டியானபின் கூடுகளுக்குள் பழைய இறகுகளைக்கொண்டு வந்து வைத்து முட்டைகளுக்கு மென்மையான படுக்கையை ஆணும் பெண்ணுமாக உருவாக்குகின்றன. கூடு தயாரானவுடன் பெண் பறவை இரண்டே இரண்டு வெண்ணிற முட்டைகளை கூட்டினுள் இடுகிறது. ஆண் பெண் இருபறவைகளும் நாளொன்றுக்கு ஒருவர் என்னும் சுழற்சி முறையில் முட்டைகளை அடைகாக்கும்.
குஞ்சுகள் வளர்ந்து பறந்தபின்னர் இந்தக்கூடுகள் கைவிடப்படுகின்றன. ஒரே கூட்டில் சின்ன உழவாரன்கள் மறுமுறை கூடுகட்டுவதில்லை.
கைவிடப்பட்ட கூடுகளே சேகரிக்கப்படுகின்றன. கூடுகள் வெள்ளை, மஞ்சள், சிவப்பு என மூன்று வண்ணங்களில் இருக்கும்.
உலகின் மிக விலைகொண்ட உணவுகளில் ஒன்றான இந்தப்பறவைக்கூடு சூப்புக்காக மிக அதிகமாக சேகரிக்கப்படுவதும் மதிப்பு மிக்கதும் (Aerodramus fuciphagus), என்னும் உழவாரன்களின் வெண்ணிறக் கூடுகள்தான். வெள்ளை மற்றும் மஞ்சள் நிறக்கூடுகள் கிலோவுக்கு 1500-லிருந்து 200 டாலர்கள் விலையென்றால், ரத்தக்கூடு என்றழைக்கப்படும் சிவப்புநிறக் கூடுகளின் விலை 10000 டாலர்களாக இருக்கிறது. பறவைக்கூடு சூப் ஒரு கிண்ணம் 100 டாலர்களிலிருந்து 500 டாலர்வரை இருக்கிறது.
இந்த பறவைக்கூடுகள் அமைந்திருக்கும் குகைச்சுவற்றில் இருக்கும் இரும்புச்சத்து கூடுகளின் புரதங்களுடன் வினை புரிந்து சிவப்பு நிறத்தை உருவாக்குகிறது
கருப்பு உழவாரன் எனப்படும் (Aerodramus maximus), மற்றும் இந்திய சின்ன உழவாரனான (Aerodramus unicolor). ஆகியவற்றின் கூடுகளும் பிரதானமாக சேகரிக்கப்படுகிறது.
இம்மூன்றைத்தவிர மற்ற சின்ன உழவாரங்களின் கூடுகளில் குச்சிகள் இலைகள் போன்ற தாவரபாகங்களும் இருப்பதால் அவை சேகரிக்கப்பட்டாலும் தரம் குறைவானதாக கருதப்படுகின்றன.
இந்தப் பறவைக்கூடுகளை சேகரிப்பவர்கள் “busyadors,” எனப்படுகின்றனர். கடற்பறவைகளின் எச்சங்களின் கடும்நெடி நிரம்பியிருக்கும், உழவாரன்கள் கூடுகட்டியிருக்கும் குகைப்பகுதியில் ஆயிரக்கணக்கான சிறகடிப்புச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். உழவாரப்பறவைகள் குகையின் கூரைச்சுவற்றில் பொன் சரிகைப்பட்டுப்போல மினுங்கும் பிறை நிலவின் வடிவத்தில் இருக்கும் கையகலக் கூடுகளை அமைக்கின்றன.
ஆசியாவின் மிக ஆபத்தான பணியாகக்கருதப்படும் இந்தப் பறவைக்கூடு சேகரிப்பில் பலநூறு பேர் உயிரைப்பணயமாக வைத்து தலைமுறைகளாக ஈடுபட்டுவருகின்றனர்.
ஒரு பறவைக்கூடு சுமார் 14 கிராம் எடைகொண்டிருக்கும் .எனவே ஒரு கிலோ அளவுக்குக்கூடுகளைச் சேகரிக்கப் பலமணிநேரம் அவர்கள் இந்த ஆபத்தான வேலையை செய்யவேண்டி இருக்கும்
பலநூறு அடி உயரமுள்ள கூரைகளில் இருக்கும் கூடுகளைச் சேகரிக்க மூங்கில் கழிகளிலும் ஏணிகளிலும் கட்டப்பட்டிருக்கும் கயிறுகளில் தொங்கியபடி அடிதப்பினால் மரணம் நிச்சயம் என்னும் நிலையில் வெள்ளைத்தங்கம் எனப்படும் இந்தகூடுகள் சேகரிக்கப்படுகின்றன.
சின்ன உழவாரன்களின் இனப்பெருக்கக்காலம் துவங்கியதும் கூடுகளைச்சேகரிப்போர் கடவுளுக்கு காணிக்கைச் செலுத்தி நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி தங்கள் உயிருக்கு பாதுகாப்பளிக்கும் வேண்டுதல்களைச் செய்வார்கள்.
குகையின் சுவர்களையும் கூட்டையும் கைகளால் தொடுவது கடவுளுக்கு கோபம் உண்டாக்கும் என்னும் நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. இவர்கள் திரிசூலம் போல மூன்று முனைகள் கொண்ட ராடா எனப்படும் ஒரு தடியையும் கையோடு எடுத்துச்சென்று அதைக்கொண்டுதான் கூட்டைச் சுவற்றிலிருந்து உரித்து எடுக்கிறார்கள். சூலம் போன்ற ராடா தடி கடவுளாக உடனிருந்து அவர்களை காப்பாற்றும் எனவும் நம்புகிறார்கள்.
இத்தனை ஆபத்து இருந்தும் தவறமல் திரும்பத் திரும்ப இவர்கள் பறவைக்கூடுகளை உயிரைப் பணயம் வைத்து சேகரிப்பது பறவைக்கூடுகளுக்கிருக்கும் சந்தை மதிப்பினால்தான்.
சேகரித்த கூடுகளைச் சுத்தம் செய்வது அடுத்த கட்ட கடினமான பணி. கூடுகளை நீரில் ஊறவைத்து மிருதுவாக்கியபின்னர் ஊசிகளால் அதில் ஒட்டியிருக்கும் இறகுப்பிசிறுகளும் அசுத்தங்களும் பிரித்தெடுக்கப்படுகிறது.
பறவைக்கூட்டில் சுமார் 62% புரதம் 27% மாவுச்சத்து, கால்சியம் பாஸ்பரஸ் சோடியம் பொட்டாஷியம் மற்றும் வைட்டமின்கள், சில கனிமங்கள் கொழுப்பு இரும்புச்சத்து ஆகியவை இருக்கிறது.
மிக அதிகவிலைக்கு விற்கப்படும் எல்லா உணவுப்பொருட்களையும் போலவே இதிலும் கலப்படங்களும் போலிகளும் இருக்கிறது. கடற்பாசிகள் சில பூஞ்சைக்காளான்கள் மற்றும் சில மரப்பிசின்களைச் சேர்த்து பறவைக்கூடு சூப் எனச்சொல்லி பிரபல உணவகங்களில் கூட ஏமாற்றுகிறார்கள்.
தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியாவின் கடற்கரையோரங்களில் கான்கிரீட் கட்டிடங்களின் மொட்டைமாடிகள் முழுக்க தகடுகளால் மூடி இருட்டாக்கி, பறவை நுழைய சிறு கீறல்கள் மட்டும் உண்டாக்கி பதிவு செய்யப்பட்ட பறவைக்குரலை எப்போதும் ஒலிக்கச்செய்து சின்ன உழவாரப்பறவைகளை அங்கு வந்து கூடுகள் கட்டச்செய்யப்படுகிறது. இந்த வீட்டுக்குகைகளில் கூடுகளை சேகரிப்பது, குகைகளில் சேகரிக்கும் ஆபத்தை இல்லாம்லாக்குகிறது.
வீட்டு உரிமையாளர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கிறது எனினும் அகற்றவே முடியாத பறவை எச்சங்களின் கடும் நெடியும் தொடர்ந்து கேட்கும் அவற்றின் குரலும் பெரும் தொந்தரவாகத்தான் அனைவருக்கும் இருக்கிறது.
பறவைகளால் வரும் நோய்கள் மக்களுக்கு இதனால் வெகுஎளிதில் பரவும் அபாயம் இருப்பதாக பறவையியலாளர்கள் தொடர்து எச்சரித்தவண்ன்ணம் இருக்கிறார்கள், ஆனால் குகைகளில் சேகரிக்கப்படும் கூடுகளுக்கு கிடைக்கும் அதே விலை, கட்டிடங்களில் எடுக்கப்படும் கூடுகளுக்கும் கிடைப்பதால் மேலும் பலர் இந்தக் கூடுகளை அவரவர் வீடுகளில் அமைக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
இந்தப்பறவைக்கூடுகளின் தேவை மிக அதிகரித்திருப்பதால் முட்டைகள் இருக்கும், பறக்கமுடியாத இளம் குஞ்சுகள் பாதுகப்பாக இருக்கும் கூடுகளும் சேகரிக்கப்படுவதால் சின்ன உழவாரன்களின் எண்ணிக்கை அபாயகரமாக குறைந்து வருவதாகவும், கூடுகளைச் சேகரிப்போர் சந்திக்கும் ஆபத்துகள் மனித உரிமை மீறல்கள் எனவும் பறவைக்கூடு சூப்பின் பயன்களாகச் சொல்லப்படுபவைகளைக்காட்டிலும் தாவரசூப்களில் அதிக ப்பயன்கள் உள்ளது என்னும் கருத்துக்களும் தீவிரமாக முன்வைக்கப்படுகின்றன.
எச்சசரிக்கைகளும் கண்டனங்களும் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தாலும் பறவைக்கூடு சேகரிப்பும் அதன்தேவையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
மலேஷியாவில் மட்டும் சுமார் 60000 பேர் இநந்தப்பறவைக்கூடு சேகரிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள். மலேசிய அரசு இந்த ஆபத்தான பணியில் ஈடுபட்டிருப்போருக்கு கடனுதவிகளும் வழங்குகிறது.,
இத்தொழிலில் தலைமுறைகளாக ஈடுபட்டிருக்கும் மலேசியப்பழங்குடியினர் பத்து வருடங்களுக்கொருமுறை சீட்டுக்குலுக்கிப்போட்டு அடுத்த பத்து வருட ஒப்பந்ததாரரை முடிவு செய்கிறார்கள். இப்போது சீன முதலாளிகள் குகைகளை பெருந்தொகைக்கு ஏலம் எடுப்பதால் இதை நூற்றுக்கக்கான வருடங்களாக வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த பழங்குடியினர் பாதிப்படைந்திருக்கிறார்கள். பெருந்தொகைக்கு குகைகள் ஏலம் எடுக்கப்படுகின்றன. ஏலம் எடுத்த முதலாளிகள் ஆயுதமேந்திய காவலர்களைக்ளைக்கொண்டு குகைகளைப் பாதுகாக்கின்றன்ர்.
பல லட்சங்கள் புழங்கும் இந்த பறவைக்கூடு தொழில் போட்டியில் கொல்லப்பட்டவர்கள், குகைகளில் தொங்கிக்கொண்டு கூடு சேகரிப்பில் இருக்கையில் உயிரிழப்பவர்கள் ஆகியோரின் விவரங்கள் வெளிஉலகிற்கு தெரிய வராமல் மறைக்கப்படுகிறது..
இந்தப் பறவைகூடு உணவு வீடுகளில் சூடுபடுத்தி அருந்தும் திரவ வடிவில் பாட்டில்களிலும், உலர் பொடியாகவும் இருவிதங்களில் சந்தைப்படுத்தப்படுகிறது, சுத்தப்படுத்தப்பட்ட கூடுகள் அப்படியேவும் விற்பனையாகின்றன.
உணவாக மட்டுமல்லாமல் இவற்றின் சருமத்தைப்பாதுகாக்கும் இயல்புகளால் அழகுசாதனப் பொருள் தயாரிப்பிலும் இக்கூடுகள் பயன்படுத்தப்படுகின்றன. வருடத்திற்கு சுமார் 200 டன் பறவைக்கூடுகள் உலகின் பலபாகங்களிலும் உண்ணப்படுகிறது. இதில் ஹாங்காங்கின் அளவே மிக அதிகம்.
ஜின்செங் மற்றும் சர்க்கரை கலந்து எளிதாகத் தயாரிக்கப்படும் இந்த சூப் இளமையை தக்கவைத்து ஆற்றலை அதிகரித்து சருமப்பொலிவுக்கும் கண்பார்வை கூர்மைக்கும் உதவுகிறது என்று சொல்லப்படுகிறது.
இந்தோனேஷியா வருடத்திற்கு 2000 மெ டன் பறவைக்கூடுகளைச் சேகரித்து உலகின் முதல் இடத்திலும் தொடர்ந்து 600 டன் சேகரிக்கும் மலேசியாவும் மூன்றாம் இடத்தில் 400 டன் தாய்லாந்தும் இருக்கிண்றன.
இனி பறவைக்கூடு சூப்பை அருந்தும் வாய்ப்பு கிடைத்தால், மேசையில் நம் முன்பு கிண்ணத்தில் கண்ணாடி போல இருக்கும் அந்தத் திரவம் விலையுயர்ந்த ஒரு உணவு மட்டுமல்ல, பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஜென் ஹெ பயணித்த பொக்கிஷ கப்பல்களின் மீது போதிய அலைகளின் ஓசை, உயிரைப்பணயம் வைத்து கயிற்றில் தொங்கிக்கொண்டு கூடுகளைச் சேகரிக்கும் தொழிலாளர்களின் நிழல், இதன் பட்டுப்போன்ற நூழிலைகள் ஆரோக்கியத்தையும் வாழ்நாளையும் நீட்டிக்கும் என் பேரரசர்கள் கொண்டிருந்த நம்பிக்கை இவை எல்லாம் கலந்த கலவைதான் அது என்பதை எண்ணிக்கொள்ளுங்கள்.
இரண்டடுக்குகளுடன் ஒரு மாபெரும் தீவைப்போலிருந்த HMS எண்டேவர் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் மிதமான வேகத்தில் தஹிதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இங்கிலாந்தின் பிளைமவுத் துறைமுகத்திலிருந்து கப்பல் புறப்பட்டு 12 நாட்கள் ஆகி இருந்தது.
HMS எண்டேவரில் கேப்டன் ஜேம்ஸ் குக்கின் அந்த முதல், அறிவியல் மற்றும் ஆய்வுகளுக்கான முக்கியமான பயணம் 1768 முதல் 1771 வரை திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் பயணத்திற்கு வெளிப்படையான மற்றும் இரகசியமான நோக்கங்கள் இருந்தன. இந்தப்பயணத்துக்கான பல ரகசியக்கடல் வழிகளை குக் மட்டுமே அறிந்திருந்தார்.
இந்தப் பயணத்தின் அதிகாரப்பூர்வ நோக்கம் 1769-ம் ஆண்டு வீனஸ் கோள் சூரியனை கடந்து செல்லும் நிகழ்வை (transit of Venus) பசிபிக் கடலின் நடுவில் உள்ள தஹிதி தீவிலிருந்து பார்ப்பது. இந்த நிகழ்வைப் பூமியின் பல்வேறு இடங்களிலிருந்து ஒரே நேரத்தில் பார்ப்பதன் மூலம், பூமியிலிருந்து சூரியனுக்கான தூரத்தைத் துல்லியமாகக் கணக்கிட முடியும் என அறிவியலாளர்கள் நம்பினர்.
இந்த நிகழ்வை முடித்தபிறகு, தெற்கு நோக்கிப் பயணித்து, அப்போது நில வரைபடங்களில் இல்லாத, ‘டெரா ஆஸ்ட்ராலிஸ் இன்காக்னிட்டா’ (Terra Australis Incognita) என்று அழைக்கப்பட்ட பெரிய தெற்கு நிலப்பரப்பை குக் தேட வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு அவரிடம் ரகசியமாகக் கூறியிருந்தது. அப்படி ஒரு நிலப்பரப்பைக் கண்டால், அதன் கடற்கரைகளை வரைபடமாக்கி, அங்குள்ள மக்களைப் பற்றி ஆய்வு செய்து, பொருத்தமான இடங்களை இங்கிலாந்திற்காக உரிமை கொள்ள வேண்டும் என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
கப்பல் மறுநாளிலிருந்து வேகமெடுக்கும் என்னும் அறிவிப்பைத் தொடர்ந்து முந்தைய நாள் அவர்கள் புதிதாகக் கண்டடைந்த தீவு குறித்த விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை என்னும் சத்திய பிரமாணத்தை கப்பலில் இருந்த 95 பேரும் எடுத்துக் கொண்டார்கள். பிறகு மதிய உணவுக்காக அனைவரும் கூடினார்கள்.
வழக்கமாக உணவுண்ணும் கீழ்த்தளத்து உணவுக்கூடத்திலல்லாமல் கப்பலின் கமாண்டர் ஜேம்ஸ் குக் ஆணையிட்டபடி அன்று கப்பலின் மேல் தளத்தில் திறந்த வெளியில் மேசைகள் அமைக்கப்பட்டிருந்தன. மாலுமிகளுக்கும் பிற அதிகாரிகளுக்குமான மேசைகள் நடுவிலும், அதைச்சுற்றி நீள் வட்ட வடிவில் மற்றவர்களுக்கான மேசைகளும் போடப்பட்டிருந்தன. அவரவருக்குத் தேவையான உணவை எடுத்துக்கொண்டு அமர்ந்த பின்னர் கமாண்டர் குக் தலைமை சமையைல்காரரை அழைத்து ’’அதைக் கொண்டு வந்து அதிகாரிகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் மட்டும் பரிமாறுங்கள்’’ என்று சொன்னதும் அழகிய சிறு தட்டுகளில் புளித்த முட்டைகோஸான ’சாவெர்கிராட்’ பரிமாறப்பட்டது.
குக் அதைச் சுவைத்துப் பார்த்து விட்டு உரத்த குரலில் ’’ஆஹா! என்ன அற்புதமான சுவை’’ என்று பாராட்டினார். அதைச் சாப்பிட்ட அனைவருமே அதன் சுவையையும் அதனால் உண்டாகவிருக்கும் உடல் நலனையும் வெகுவாகப் பாராட்டினர்.
மற்ற வீரர்களும் பயணிகளும் அதைக் கவனித்தும் கவனிக்காதது போல இருந்தனர். ஒருவாரத்தில் அந்தப் புளித்த முட்டைகோஸ் உணவான ’சாவெர்கிராட் அந்தக் கப்பலில் இருக்கும் உயரந்தஸ்து கொண்டவர்களுக்கானது என்பது கப்பல் முழுக்க பேசு பொருளானது.
சில நாட்களுக்குப் பிறகு ஒரு வீரர் மட்டும் குக்கிடம் எனக்கும் ’சாவெர்கிராட்டைத் தருவீர்களா என்று கேட்டார். குக் மிகவும் சலித்துக் கொள்வதுபோல் பாவனை செய்து ’’பொதுவாக இந்த ஆற்றல் அளிக்கும் உணவு உயரதிகாரிகளுக்கு மட்டும் தான் இருந்தாலும் நீ கேட்பதால் கொஞ்சம் தரச் சொல்கிறேன்’’ என்று அவனுக்கு அதைக் கொடுக்கச் சொன்னார். கப்பலில் அவனுடைய மரியாதை கிடு கிடுவென உயர்ந்தது. ’சாவெர்கிராட் உண்பது உயரதிகாரிகளுக்கிணையான அந்தஸ்தை அளிப்பது என்னும் எண்ணம் உருவாகி வளர்ந்து அனைவரும் அதைச் சாப்பிட விரும்பிக் குக்கிடம் வேண்டிக்கொண்டார்கள். பின்னர் ’சாவெர்கிராட் அனைவருக்கும் அன்றாடம் அளிக்கப்பட்டது.
அந்த மாபெரும் கப்பல் புறப்படுகையில் அதில் 8000 பவுண்டு ’சாவெர்கிராட்’ (sauerkraut) எனப்படும் நொதித்த முட்டைக்கோஸ் அடைக்கப்பட்டிருந்த பீப்பாய்கள் ஏற்றப்பட்டிருந்தன. பல காரணங்களால் அதைச் சாப்பிட விரும்பாத பிரிட்டிஷ் வீரர்களை, அதை விரும்பிச் சாப்பிட வைக்கத்தான் கமாண்டர் ஜேம்ஸ் குக் இந்த நாடகத்தை நடத்தினார்.
18 -ம் நூற்றாண்டு கடற்பயணிகளுக்கு நீண்ட கால கடற்பயணத்தில் சத்தான புதிய காய்கறி மற்றும் பழங்கள் அடங்கிய உணவுகளின் பற்றாக்குறையால் ஸ்கர்வி எனப்படும் வைட்டமின் சி குறைபாட்டால் உண்டாகும் நோய்த் தொற்று தவிர்க்க முடியாததாக இருந்தது.
வைட்டமின் சி குறைபாடு நீண்ட நாட்களுக்கு நீடித்தால் இந்த நோய் வரும். பழங்காலத்தில், நீண்ட கடல் பயணங்களுக்குச் செல்லும் மாலுமிகளுக்கு இது ஒரு பொதுவான மற்றும் ஆபத்தான நோயாக இருந்தது. ஏனெனில், நெடுங்காலம் கடலில் பயணிக்கும் அவர்களின் உணவில் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் இருக்காது.
மனித உடல் வைட்டமின் சி-யை தானாக உற்பத்தி செய்யாது. எனவே, வைட்டமின் சி-யை உணவின் மூலம் மட்டுமே பெற முடியும். வைட்டமின் சி, கொலாஜன் (collagen) என்ற புரதத்தை உற்பத்தி செய்ய மிகவும் முக்கியமானது. இந்தக் கொலாஜன் மனிதர்களின் தோல், ஈறுகள், இரத்த நாளங்கள் மற்றும் எலும்புகள் போன்ற இணைப்புத் திசுக்களுக்கு ஒரு முக்கியமான கட்டுமானப் பொருளாகும்.
வைட்டமின் சி குறைபாடு ஏற்படும் போது, கொலாஜன் உற்பத்தி பாதிக்கப்பட்டு, இந்த திசுக்கள் பலவீனமடைகின்றன. இதுவே ஸ்கர்வி நோய்க்கு வழிவகுக்கிறது.
கண்கள் பிதுங்கி, சருமம் செதில் செதிலாக உரிந்து ரத்தம் கசிந்து, கேசம் வறண்டு போவது ஆகியவை ஸ்கர்வியின் விளைவுகள். நூற்றண்டுகளாகக் கடல் போரிலும். கப்பல் விபத்துகளிலும், கப்பலில் பரவும் பிற நோய்களிலும் இறந்தவர்களைக் காட்டிலும் ஸ்கர்வியினால் இறந்தவர்களே அதிகம்.
பல காலமாக மாலுமிகள் கப்பலில் திரியும் எலிகளைப் பிடித்துச் சாப்பிட்டு எலியின் உடம்பில் தானாகவே உருவாகி இருக்கும் வைட்டமின் சி யை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அறிவியலாளர் மற்றும் வரைபட நிபுணரான ஜேம்ஸ் குக் ஸ்கர்விக்குத் தீர்வு காணத்தான் வைட்டமின் சி உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கிய, நெடுநாட்களுக்கு சேமித்து வைக்கக்கூடிய ’சாவெர்கிராட்’ எனும் முட்டைக்கோஸ் உணவைக் கப்பலில் ஏராளமான பீப்பாய்களில் கொண்டு வந்திருந்தார்.
அந்தக் கடற்பயணத்தில் கேப்டன் குக்கிற்கு பிரச்சனையாக இருந்தது ஸ்கர்வி மட்டுமல்ல ’தார்கள்’ என அழைக்கப்பட்ட பிரிட்டிஷ் கடற்படை வீரர்கள் (தார்பாலின் துணிகளாலான ஆடைகளை இயற்கைச் சீற்றங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அணிவதால் அவர்கள் அப்பெயரில் அழைக்கப்பட்டனர்) தாங்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக் கூடாது என்பதில் மிகப் பிடிவாதமாக இருந்ததும் அவருக்குப் பெரும் தலைவலியாக இருந்தது.
பிரிட்டிஷ் வீரர்கள் அவர்களின் வழக்கமான உணவான செங்கல்லின் அளவு கொண்ட, மிகக்கடினமாக இருக்கும் பிஸ்கெட்டுக்களையும் உப்பிலிட்ட பன்றி இறைச்சியையும் மட்டுமே சாப்பிட்டார்கள்.
ஜெர்மெனி பாணியிலிருந்த முட்டைக்கோஸ் ஊறுகாயான ’சாவெர்கிராட்’டை சாப்பிடுவதில் அவர்களனைவருக்கும் விலக்கமும், புதிய உணவான அதைக் குறித்த சந்தேகமும் இருந்தது . அவர்களில் பலருக்கு ஸ்கர்வி தொற்று உருவாகி இருந்தாலும் அந்த விநோதமான, கடும் நெடிகொண்ட முட்டைக்கோஸை சாப்பிடுவதைக் காட்டிலும் ஸ்கர்வியின் பாதகங்களே பரவாயில்லை என்னும் மனநிலையில் இருந்தார்கள்.
நேரடியாக ’சாவெர்கிராட்’டை சாப்பிடச்சொல்லி ஆணையிட்டால் அவர்கள் மறுத்து ஒரு கிளர்ச்சியோ, எதிர்ப்போ கப்பலில் உண்டாவதற்கான சாத்தியங்களை அறிந்திருந்த கேப்டன் குக் இந்த உளவியல் நாடகத்தை நடத்தி அனைத்து வீரர்களும், ’சாவெர்கிராட்’டை சாப்பிடும்படி செய்தார்.
கட்டாயப்படுத்தியிருந்தால் தண்டனையாகிப் போயிருக்கும் விஷயத்தைக் குக் பெருமைக்குரியதொன்றாக மாற்றிவிட்டார். அந்தப்பயணம் முழுக்கவே ஸ்கர்வியை குணமாக்கும் வைட்டமின் சி கொண்டிருக்கும் அந்த உணவு அனைவருக்கும் அன்றாடம் வழங்கப்படுவதை குக் உறுதி செய்தார் அதன் விளைவு அற்புதமாக இருந்தது. மூன்றாண்டுகள் நீடித்த அந்த முதல் கடற்பயணத்தில் ஒரே ஒருவர் கூட ஸ்கர்வியினால் இறக்கவில்லை.
இதுமட்டுமல்லாது குக் கப்பலில் சுத்தம் பேணப்படுவதற்கும் மிகவும் முக்கியமளித்தார் போர்வை உள்ளிட்ட படுக்கையறைத் துணிகள் அவ்வப்போது வெயிலில் உலர்த்தப்படுவதை குக் கட்டாயமாக்கியிருந்தார்.
சாவெர்கிராட் மட்டுமல்லாமல் இறைச்சிப்பசையை கலந்து தயாரிக்கும் உடனடி சூப், பார்லிச்சாறு, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சைச் சாறு ஆகியவற்றையும் அன்றாட உணவில் இடம்பெறச்செய்திருந்தார். எந்தத் தீவில் கப்பல் நின்றாலும் அங்கிருந்து புத்தம் புதிய காய்கறிகள் கிழங்குகள், பழங்கள் மற்றும் இறைச்சியை முடிந்தவரை கப்பலில் ஏற்றிக்கொண்டார் குக்.
குக் தனது கப்பலில் இருந்தவர்களின் உடலாரோக்கியத்தை சாவெர்கிராட் அளித்துப் பாதுகாப்பது குறித்த ஒரு ஆய்வறிக்கையை லண்டன் ராயல் சொசைட்டிக்கு சமர்ப்பித்தார். நூற்றாண்டுகளாக இருந்து வந்த, பல லட்சம் மாலுமிகளின் உயிரைக் காவு வாங்கிய ஸ்கர்வி நோய்க்கு இந்த எளிய நொதித்த முட்டைகோஸைக் கொண்டு கேப்டன் குக் தீர்வு கண்டதற்காக அவருக்கு லண்டன் ராயல் சொசைட்டியின் அறிவியல் சாதனைகளுக்காக அளிக்கப்படும் பிரசித்தி பெற்ற ’கோப்லே பதக்கம்’ அளிக்கப்பட்டது. சார்லஸ் டார்வின் மற்றும் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோரும் இந்த விருது பெற்றிருக்கிறார்கள்.
எனினும் ஸ்கர்வியை சாவெர்கிராட் குணப்படுத்தும் என்பதைக் கண்டுபிடித்தது கேப்டன் குக் அல்ல. நூற்றாண்டுகளாகவே ஸ்கர்விக்கான தீர்வுகளுக்கு ஆய்வுகள் நடந்தவண்ணமிருந்தன.
1622-ல் கடலாய்வாளர் ரிச்சர்ட் ஹாக்கின்ஸ் ’’ஸ்கர்வியை எலுமிச்சை குணப்படுத்தும், யாரேனும் இதை ஆராய்ந்து எழுதலாம்’’ என்று தெரிவித்திருந்தார்.
ஒரு நூற்றாண்டு கழித்து 1730-களில் அரசுக் கடற்படையில் மருத்துவ உதவியாளராகப் பணியாற்றிய ஜேம்ஸ் லிண்ட்’தான் ஸ்கர்விக்கு தீர்வளித்தார். 1742-ல் ஸ்கர்வியினால் பாதிக்கப்பட்டிருந்த 12 கடற்பயணிகளுக்கு தொடர்ந்து வைட்டமின் சி இருக்கும் உணவுகளைக் கொடுத்து அவர்கள் குணமானதை ஆதாரத்துடன் லிண்ட் நிறுவினார். 1753-ல் அவரது ஆய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு லிண்ட் எழுதிய , A Treatise on the Scurvy, என்னும் நூல் வெளியானது என்றாலும் அந்த வழிமுறைகளை யாரும் பின்பற்றவில்லை. அதை ஜேம்ஸ் குக் முயற்சி செய்யவே மேலும் இருபதாண்டுகள் ஆயின.
கடற்பயண நோய்களுக்கான சிகிச்சை உணவுகளில் கேப்டன் குக் அறிமுகம் செய்த இந்தப் புளித்த முட்டைக்கோஸான சாவெர்கிராட் பின்னர் வெகுவாகப் பிரபலாமானது.
கேப்டன் குக் உண்மையில் இந்த சாவெர்கிராட் ஸ்கர்வியை குணப்படுத்தும் என்பதை அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் செய்திருக்கவில்லை. பயணிகளின் நல்வாழ்வில் அவருக்கிருந்த அக்கறையினால் தான் இதை அவர் செய்தார். அதன் பிறகு சாவெர்கிராட்டில் பல ஆய்வுகள் நடந்து அதன் பல பயன்கள் வெளிச்சத்துக்கு வந்தது. பிரிடிஷ் கடற்படையிலிருந்தே ஸ்கர்வி முற்றிலும் நீங்கியது
ஐரோப்பாவையும் அண்டோலியா தீபகற்பத்தையும் சேர்ந்ததுதான் முட்டைக்கோஸ் என்றாலும் ஜெர்மானிய மொழியில் புளித்த முட்டைக்கோஸ் என்று பொருள் படும் சாவெர்கிராட் (sauer -sour -kraut -cabbage)) ஐரோப்பிய உணவல்ல. இதன் வரலாறு சீனாவிலிருந்து தொடங்குகிறது.
2500 வருடங்களுக்கு முன்னர் சீனப்பெருஞ்சுவரை உருவாக்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கடுங்குளிர் காலத்திலும் உணவைச் சேமிக்க முட்டைக்கோஸை உப்பிலிட்டு ஊறவைத்த ஊறுகாயைக் கண்டுபிடித்தார்கள். சீனாவுக்குள் ஊடுருவிய செங்கிஸ்கானின் படையில் இருந்த மங்கோலிய நாடோடிகள் இந்த ஊறுகாயை அரிசி மதுவிலிருந்து தயாரித்த வினிகரில் ஊற வைத்து மேலும் பல மாதங்களுக்கு முட்டைகோஸ் கெட்டுப் போகாமலிருக்கும் வழியைக் கண்டறிந்தார்கள்.
ரோமானியர்களும் மத்திய ஐரோப்பாவைச் சேர்ந்த ‘செல்ட்ஸ்’ (Celts) பழங்குடிச் சமூகத்தினரும் ஐரோப்பா முழுவதும் இந்தப் புளித்த முட்டைக்கோஸை அறிமுகம் செய்தார்கள். 13-ம் நூற்றாண்டில் மங்கோலிய சாம்ராஜ்யம் ஐரோப்பாவுக்குள் விரிந்த போது பண்டமாற்றாகக் கொடுக்கப்பட்ட பொருட்களில் அரிசி மதுவின் வினிகரில் ஊற வைத்த முட்டைக்கோஸ் ஊறுகாயும் இருந்தது.
அறிமுகமானதோடு கிழக்கு ஐரோப்பியர்களின் உணவிலும் இது முக்கிய இடம் பிடித்தது. இந்த முட்டைக்கோஸ் ஊறுகாயை ஊற வைக்க அரிசி மது வினிகர் ஐரோப்பாவில் அச்சமயத்தில் இல்லாததால் லேக்டிக் அமில நொதித்தலுக்கு அதை உட்படுத்தி மேலும் காரமானதாகக் கடும் நெடி கொண்டதாக அதை மேம்படுத்தி இப்போதிருக்கும் இந்த சாவெர்கிராட் வடிவம் ஐரோப்பாவில் கண்டறியப்பட்டது.
இந்த சாவெர்கிராட் இலையுதிர் காலத்தில்தான் ஐரோப்பாவில் தயாராகிறது. கோடைக்காலம் முடிகையில் முழுக்க அறுவடையாகி இருக்கும் முட்டைக்கோஸ்கள் சாவெர்கிராட் ஆகக் குறுகிய காலத்திலேயே தயாரிக்கப்பட்டு பின்னர் மாதக்கணக்கில் ஊறிக் கொண்டிருக்கும்.
ஐரோப்பியர்கள் காய்கறிகள் கிடைக்காத குளிர்காலத்திற்கான உணவாகவும், அந்தப் பருவம் முழுவதும் ஆற்றல் அளிக்கும் சுவையான உணவு தடையின்றி கிடைக்கவும் நொதித்தலுக்கு உட்படுத்தப்பட்ட, நீடித்த அலமாரிவாழ்வு கொண்டிருந்த இந்த சாவெர்கிராட்டையே பிரதானமாக நம்பி இருந்தார்கள். 1960-களிலிருந்து ஜெர்மனியின் பிரதான உணவாக ஆகிவிட்டிருக்கும் சாவெர்கிராட் அங்கு சூப்பர் உணவுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
உலகப்போரின்போது ஜெர்மானியப் போர்க்கப்பல்களில் சாவெர்கிராட் எப்போதும் நிறைத்துக் கொண்டு வரப்பட்டதால் ஜெர்மானிய வீரர்களின் செல்லப் பெயராகவே ’க்ராட்’ என்பது இருந்தது. சாவெர்கிராட் என்னும் ஜெர்மானியப் பெயரால் அமெரிக்க வீரர்கள் இதை விரும்பாமல் போகக் கூடுமென்பதால் முதலாம் உலகப்போரின்போது சாவெர்கிராட் அமெரிக்கர்களுக்கு ’லிபர்டி முட்டைக்கோஸ்’ என்னும் பெயரில் அளிக்கப்பட்டது.
ஐரோப்பியக் குடியேறிகளால் 18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு அறிமுகமான இந்த சாவெர்கிராட் இப்போதுவரை அமெரிக்க உணவுகளில் மிக முக்கியமான இடம் பிடித்திருக்கிறது.
ஐயோவாவில் ’சாவெர்கிராட் நாள்’ பல நகரங்களில் வேறு வேறு நாட்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது அப்பலேச்சியன் மலைப்பகுதிகளின் முட்டைக்கோஸ் நடவு மற்றும் அறுவடை ஆகியவை ஜோதிடத்தின் அடிப்டையிலேயே நடக்கிறது. சாவெர்கிராட்டை தேய்பிறையில் தயாரித்தால் அது கெட்டுப் போய்விடும், வளர்பிறையில்தான் தயாரிக்க வேண்டும் என்னும் நம்பிக்கையும் அங்கு இருக்கிறது.
அப்பகுதி முழுவதும் முட்டைக்கோஸ் அறுவடை நாளில் நாம் தீபாவளிப் பலகாரம் செய்வது போல நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து சாவெர்கிராட்டைத் தயாரித்து அவரவர் வீடுகளுக்கு அவரவர் பங்கைக் கொண்டு செல்லும் வழக்கமும் இருக்கிறது. அதன் சுவையும் அதிலிருக்கும் சத்துக்களாலும் அமெரிக்க சூப்பர் உணவுகளின் பட்டியலிலும் முதலிடத்தில் இருப்பது இந்த சாவெர்கிராட் தான்.
பென்சில்வேனிய புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் சாவெர்கிராட்டை பன்றி இறைச்சியுடன் உண்பது நெடுங்கால மரபாக இருக்கிறது. பால்டிமோர் பகுதியில் நன்றி தெரிவிக்கும் நாள் விருந்துகளிலும் சாவெர்கிராட் தவறாமல் இடம் பெறுகிறது
தயாரிக்கும் முறை
நல்ல அழுத்தமாகக் கடினமாக இருக்கும் பச்சை நிற புத்தம் புதிய முட்டைகோஸ்கள் தேர்வு செய்யப்படுகின்றன. ஒரு சிலர் ஊதா முட்டைக்கோஸையும் உபயோகப்படுத்துகிறார்கள்.
பின்னர் முட்டைக்கோஸ் நீள நீளமாக ஒரே அளவிலான பட்டைகளாகச் சீவப்படுகிறது. ஒரு கிலோ முட்டைகோஸுக்கு 2% என்னும் அளவில் (அயோடின் இல்லாத) உப்பு சேர்க்கப்படுகிறது. பின்னர் இந்தக் கலவை ஒரு அகலமான (உலோகமல்லாத) பாத்திரத்தில் கொட்டப்பட்டு சுமார் 15 நிமிடங்களுக்குக் கைகளால் பிசைந்து பிழியப்படுகிறது.
அப்படிச்செய்கையில் முட்டைக்கோஸ் செல்களின் சுவர் உடைந்து அதன் சாறு வெளியே வருகிறது. இப்போது இந்தக் கலவை பாதி திரவ நிலையில் இருக்கும்.
பீங்கான் அல்லது கண்ணாடி பாட்டிலில் இந்தக் கலவையைக்கொட்டி கைகளால் இடைவெளி இல்லாமல் நன்றாக அழுத்தி நிறைக்க வேண்டும். இப்படி அழுத்துகையில் முட்டைகோஸ் துண்டுகள் பாட்டிலின் அடியிலும் அதிலிருந்து வெளியே வந்த சாறு மேலே அதனை மூடியும் இருக்கும்படி நிறைக்க வேண்டும்
சாற்றில் மூழ்காமல் ஒரே ஒரு முட்டைக்கோஸ் துண்டு வெளியே தெரிந்தாலும் அதில் பூஞ்சைக்காளான் தொற்று உண்டாகி விடும். எனவே முட்டைக்கோஸ் முழுமையாகச் சாற்றில் மூழ்கும் வரை பொறுமையாக இந்தச் செயல் செய்யப்படுகிறது.
ஜாடி அல்லது பாட்டிலின் வாயைச் சுத்தமான மெல்லிய துணியால் கட்டி நொதித்தலின் போது உள்ளிருந்து வெளியாகும் வாயு வெளியேற வசதியாக இறுக்கமாக இல்லாமல் சற்றுத் திறந்திருக்கும்படி மூடப்படும்இந்த பாட்டில் நல்ல காற்று இருக்கும், இருட்டான, குளிர்ந்த இடத்தில் 15-24°C வெப்பநிலை இருக்கும்படி வைக்கப்படுகிறது.
மற்ற நொதித்தலுக்கு தேவைப்படுவதைப் போல இதற்கு starter culture எனப்படும் நொதித்தலைத் துவக்கும் நுண்ணுயிர்கள் தேவையில்லை முட்டைகோஸிலேயே இந்த நொதித்தலுக்குத் தேவையான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. இந்த நொதிக்கச் செய்யும் பாக்டீரியாக்கள்தான் முட்டைகோஸின் மாவுச்சத்தை லாக்டிக் அமிலமாக மாற்றி சாவெர்கிராட்டின் பிரத்யேக புளிப்புச் சுவையை அளிக்கிறது
இந்த முட்டைக்கோஸ் உப்புக் கலவையில் நொதித்தல் நடந்து முடிய 3 நாட்களிலிருந்து பல வாரங்களாகும். இந்தக் காலத்தில் நன்கு நொதித்தல் நடந்து கொண்டிருப்பதன் அறிகுறிகளான கலவையின் மீது வெண்ணிறத் திரை உருவாதல், குமிழிகளும் நுரையும் வெளியேறுதல் ஆகியவை நடைபெறும். இளஞ்சிவப்பு நிற அழுக்கு உருவாகி மிதக்கையில் அது உடனே அகற்றப்படுகிறது.
தேவையான அளவு நொதித்தல் நடந்ததை உறுதிப்படுத்திய பின்னர் பாட்டில் நன்கு இறுக்கமாக மூடப்பட்டு குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்படுகிறது. குறைந்த வெப்பநிலையில் சாவெர்கிராட் சேமிக்கப்படுகையில் நொதித்தல் மேலும் நடக்காமல் தேவையான அளவில் அதன் சுவையும் மணமும் தங்கி நிற்கும்.
இதன் நன்மைகள்
நொதித்தலில் லேக்டோபேசில்லஸ் உள்ளிட்ட ஏராளமான நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் உருவாவதால் இதை ஒரு Probiotics ஆக உபயோகிக்கலாம். நோயெதிர்ப்பு திறனை அதிகப்படுத்தவும், ஜீரணசக்தியை மேம்படுத்தவும் இது வெகுவாக உதவுகிறது. இதில் வைட்டமின் சி மற்றும் கே, இரும்புச்சத்து மற்றும் மாங்கனீஸ் சத்து நிறைந்திருக்கிறது.
நாம் உண்ணும் பிற உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை உடல் விரைவாக உறிஞ்சிக்கொள்ள இதிலிருக்கும் நுண்ணுயிரிகள் உதவுகின்றன. முட்டைக்கோஸில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நொதித்தலின்போது மேலும் மேம்படுத்தப்படுவதால் புற்றுநோய் எதிர்ப்பு உள்ளிட்ட பல நலன்களும் கிடைக்கின்றன
கொரியாவில் முட்டைகோஸ், முள்ளங்கி, கேரட், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து நொதிக்கச் செய்த கிம்சி-(Kimchi)
முட்டைகோஸ், கேரட், வெங்காயம், ஓரிகேனோ, ஜலபினோ ஆகியவை கலந்து நொதிக்கச் செய்து pupusas எனப்படும் சோளமாவும் பாலடைக்கட்டியும் கலந்த ஒரு உணவுடன் சேர்ந்து உண்ணப்படும் எல் சால்வடோரின் கர்டிடோ-(Curtido)
சீனாவின் கடுகு முட்டைக்கோஸை உப்புச்சேர்த்து நொதிக்கச் செய்து கிடைக்கும் சுவான் காய் -(Suan Cai)
முட்டைக்கோஸுடன் இறைச்சி, உருளைக்கிழங்கு சேர்த்து நொதிக்கச் செய்து சாஸுடன் கலந்து உண்ணப்படும் ஃப்ரான்ஸின் சவுர் க்ரேட்- (Choucroute)
என இந்த சாவெர்கிராட் பல நாடுகளில் சிற்சில வேறுபாடுகளுடன் வேறு வேறு பெயர்களில் பயன்பாட்டில் இருக்கிறது.
சாவெர்கிராட்டை பாஸ்டுரைஸ் செய்யாமல் உண்ணும் போதுதான் இதன் பலன்கள் கிடைக்கிறது. பாஸ்டுரைஸ் செய்யும்போது கொடுக்கப்படும் வெப்பம் இந்த நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை அழித்துவிடுகிறது.
சாவெர்கிராட் பல நாடுகளின் முக்கிய உணவாகியிருப்பதற்கு முக்கிய காரணமாயிருந்த ஜேம்ஸ் குக் அவரது இரண்டாம் கடற்பயணத்தில் 98 பீப்பாய்களில் 36000 பவுண்ட் சாவெர்கிராட்டை எடுத்துச் சென்றார்.
துரதிர்ஷ்டவசமாகக் குக்கின் இறுதிப்பயணமுமாகி விட்டிருந்த மூன்றாவது பயணத்திலும் சாவெர்கிராட் ஏராளமாக எடுத்துச்செல்லப்பட்டது. குக்கின் HMS ரிசல்யூஷன், HMS டிஸ்கவரி ஆகிய இரண்டு பெருங்கப்பல்களில் பல்லாண்டுகளுக்கு திட்டமிடப்பட்டிருந்தது அந்த மூன்றாம் கடற்பயணம். 1779-ல் பழுதுகாரணமாக மாதக்கணக்கில் ஹவாய் தீவுகளிலேயே இரு கப்பல்களும் நிலை கொண்டிருந்தன.
ஹவாய் பழங்குடியினர் கேப்டன் குக்கின் குழுவினரை மரியாதையாக வரவேற்று உபசரித்தார்கள் என்றாலும் மாதக்கணக்காக பெருந்திரளான கப்பற்பயணிகளுக்கு உணவளிக்க வேண்டி இருந்ததும், கடற்பயணிகளால் பழங்குடியினப் பெண்களுக்கு பால்வினை நோய்கள் உருவாகி இருந்ததும் அவர்களைக் கோபம் கொள்ளச்செய்திருந்தது.
எனவே முதலில் கப்பலுக்குத் தேவையான எரிபொருளை அளிக்க ஹவாய் பழங்குடியினர் மறுத்தார்கள். குக்கின் குழுவினர் பலவந்தமாக பல மரங்களை வெட்டி எடுத்துக் கொண்டதும், மயானங்களில் இருந்த வேலிகளையும், ஹவாய் பழங்குடியினச்சமூகத்தின் தொல்மரபில் முக்கியமானவைகளாகக் கருதப்பட்ட மரச்சிற்பங்களை உடைத்து எரிவிறகாகக் கொண்டு சென்றதும் அவர்களை ஆத்திரமூட்டியது.
எனவே பழங்குடியினர் மாதக்கணக்காக நின்றுகொண்டிருந்த கப்பலிலிருந்து இரவில் சில பொருட்களைத் திருடினால் பாதுகாப்பின்மை காரணமாகக் கப்பல்கள் அங்கிருந்து புறப்படும் என நம்பினார்கள். 1779 பிப்ரவரி 13 அன்று இரவு டிஸ்கவரி கப்பலிலிருந்து ஒரு நீள் படகு ஹவாய் பழங்குடியினரால் திருடப்பட்டது.
கோபமடைந்த குக் முந்தைய பயணங்களில் செய்தது போலவே பழங்குடியினத் தலைவரைச் சிறைப்பிடித்து பதிலுக்குத் திருடப்பட்ட கப்பலைப் பெறும் திட்டத்தில் இறங்கினார். ஒரு சிறு குழுவினருடன் குக் பழங்குடியினத் தலைவரை கைது செய்துகொண்டு வர தீவுக்கு சென்றார். ஏற்கனவே கொந்தளித்துக் கொண்டிருந்த அவர்கள், தலைவர் கைதியாக பிடிக்கப்பட்டபோது பொறுமை இழந்தார்கள்
1779 பிப்ரவரி 14 அன்று பணயக்கைதியாக குக்கினால் பிடிக்கபட்ட பழங்குடியினத் தலைவர் குக்குடன் கப்பலுக்கு வரமறுத்து கடற்கரையில் அமர்ந்து கொண்டதும், ஏறத்தாழ 3000 ஹவாய் பழங்குடியினர் கப்பலைச் சூறையாடி அங்கிருந்த ஆயுதங்களுடனும் கட்டாரியும் அம்பும் வில்லுமாகக் குக்கின் சிறு குழுவைச் சூழ்ந்து கொண்டார்கள் தற்காப்புக்காக குக் துப்பாக்கியில் கூட்டதைப் பார்த்துச்சுட்டபோது ஒரு பழங்குடியினத்தவர் கொல்லப்பட்டார்.
அதன்பின்னர் கூட்டம் கட்டுக்கடங்காத வன்முறையில் இறங்கியது. நிலைமை கைமீறி விட்டதை உணந்த குக் அவசரமாகக் கப்பலுக்குத் திரும்ப முயற்சித்தார் ஆனால் வெறிகொண்ட கும்பல் அவரைப் பின்பக்கமிருந்து கத்தியால் பலமுறை குத்தியும் தலையில் கட்டையாலடித்தும் கொலை செய்தது. அவருடன் மேலும் நான்கு கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மூன்று கடற்பயணங்களிலும் பல தீவுகளில் பழங்குடியினருடன் சுமுகமான உறவைப்பேணி வந்த, கடற்பயணிகளின் ஆரோக்கியத்தைக் குறித்துப் பெரிதும் கவனம் கொண்டிருந்த பேரறிஞரான குக் கலாச்சாரப் புரிதலின்மையால் கொல்லப்பட்டது பெரும் சோகம்
கொல்லப்பட்ட எதிரிகளில் மிக உயரிய இடத்தில் இருப்பவர்களின் இறப்புக்குக் கொடுக்கப்படும் மரியாதையாக ஹவாய் பழங்குடியினத்தவரால் குக்கின் உடல் பல பாகங்களாக துண்டு போடப்பட்டு உரிய சடங்குகள் செய்யப்பட்டு ஹவாய்த் தீவில் புதைக்கப்பட்டது. பிற்பாடு கப்பலின் பிற அதிகரிகள் வேண்டிக்கொண்டதற்கிணங்கி சில எலும்புகள், துண்டாக்கப்பட்ட ஒரு கை ஆகியவை அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டது.
வாழ்நாளின் பெரும் பகுதியைக் கடலில் கழித்து, கடற்பயணியரின் ஆரோக்கியத்துக்காகப் பாடுபட்ட கேப்டன் ஜேம்ஸ் குக்கின் உடலின் மிச்சங்கள் பிப்ரவரி 22 அன்று உரிய மரியாதையுடன் கடலுக்கே அளிக்கப்பட்டது
கேப்டன் குக்கின் பயணங்களின் குறிப்பிடத்தக்க வெற்றிக்குக் காரணம், அவரது குழுவினரின் சிறந்த ஆரோக்கியமே. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது, ஸ்கர்வி நோயைத் தடுக்க சாவெர்கிராட் உள்ளிட்ட சமச்சீரான உணவை அவர் கட்டாயப்படுத்தியதே ஆகும்.
அவரது வாழ்க்கை ஒரு கலாச்சார மோதலில் முடிவடைந்தாலும், பசிபிக் கடலில் அவர் மேற்கொண்ட விரிவான பயணங்களும், அவர் வரைந்த பல புதிய தீவுகள் மற்றும் நிலப்பரப்புகளின் துல்லியமான வரைபடங்களும் மிகவும் முக்கியமானவை.
மனித இயல்புகளை நன்கு உணர்ந்திருந்ததால், உளவியல் ரீதியாக தனது குழுவினரை ஸ்கர்வி நோயிலிருந்து காப்பாற்றிய ஜேம்ஸ் குக், அறிமுகமில்லாத புதிய நிலப்பரப்பு மனிதர்களின் செயல்களை கணிக்கத் தவறியதால் கொல்லப்பட்டது அவரது வாழ்க்கையின் ஒரு பெரிய முரண்பாடு.
மனிதன் எத்தனை சாதனைகள் செய்திருந்தாலும் எவ்வளவு மகத்தானாவனாக இருந்தாலும் ஊழின் இரக்கமற்ற விதிகளுக்கு முன் மண்டியிட்டுப் பணியத்தான் வேண்டும் என்பதற்கு கேப்டன் ஜேம்ஸ் குக்கின் வாழ்வும் ஒரு உதாரணம்.
அந்த 6400 ஏக்கர் பரப்பளவில் இருந்த ரஜனீஷ்புரத்திலிருந்து சிறு பெட்டிகளில் பழுப்புத் திரவத்தை எடுத்துக்கொண்டு ரகசியமாக ஒரு சிறு குழு புறப்பட்டது.
அது 1984-ன் செப்டம்பர் மாதம். டாலஸ் நகரின் பிரபலமான அந்த பகுதி மக்கள் வழக்கமாகக் கூடும் உணவகங்களுக்குச் சென்ற அந்தக் குழு மிகச்சாதாரணமாக யாருக்கும் எந்தச்சந்தேகமும் வராதபடிக்கு, வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான சாலட்களை தாங்களே தேர்வு செய்து தட்டுக்களில் எடுத்துக் கொள்ளும் வசதி இருக்கும் ’சாலட் பார்’ பகுதிக்குச் சென்றார்கள். அங்கிருந்த காய்கறித்துண்டுகளில், தாங்கள் கொண்டுவந்திருந்த ’சல்சா’ என அவர்களால் குறிப்பிடப்பட்ட பழுப்புத் திரவத்தை யாருக்கும் தெரியாமல் கலந்தார்கள். செப்டம்பர் 9-லிருந்து 19-ம் தேதி வரையிலும் பின்னர் அக்டோபர் மாதம் 10-ம் தேதியிலுமாக பத்து உணவகங்களில் இதைச்செய்தார்கள்.
உணவகங்களின் கதவுக் குமிழ்களில் தடவப்பட்ட அந்தத் திரவம், குடிநீர்த்தொட்டிகளிலும் கலக்கப்பட்டது. சில நாட்களிலேயே டாலஸ் நகரிலிருந்த ஆயிரக்கணக்கோருக்கு காய்ச்சல், நடுக்கம், வயிற்றுப்போக்கு, கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டது. அது ஒரு சிறு நகரமென்பதால் மருத்துவமனை வசதிகள் போதாமல் நகரமே பதற்றத்துக்குள்ளானது. அருகிலிருந்த மருத்துவமனைகளுக்கு பலர் விரைந்தார்கள். பல நாட்களாக இந்தச் சதி நடந்ததால் தொடர்ந்து நோயுற்று 700-க்குமதிகமானோர் ஆபத்தான நிலையிலும் 45 பேர் மிக ஆபத்தான நிலையிலும் இருந்து சிகிச்சை அளிக்கப்பட்டார்கள்.
காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய ஆய்வுகளிலும் உணவுக் கூடத்தின் தொழிலாளர்களிடம் நடந்த விசாரணையிலும் எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை. சால்மோனெல்லா என்னும் பாக்டீரியாவினால் உணவு நஞ்சாகும் சால்மோனெல்லோசிஸினால் தான் நோயுண்டானது என்பதைக் கண்டுபிடித்தார்களே தவிர எப்படி அது உண்டானது என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.
குளிர்சாதனப் பெட்டியின் குளிர்வு சில உணவகங்களில் போதுமான அளவு இல்லாமலிருந்தாலும் அதனால் சால்மோனல்லோசிஸ் உண்டாயிருக்க வாய்ப்பில்லை என்பதால் அந்தக் காரணமும் சந்தேகப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
காரணம் தெரியாவிட்டாலும் அடுத்து நவம்பரில் அந்த மாகாணத்துக்கான தேர்தல் வரவிருந்ததால் யாரோ வேண்டுமென்றே இதைச் செய்திருக்க கூடும் என உள்ளூர் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருந்தார்கள். சாலட்களில் சால்மொனெல்லா கிருமி இருப்பது ஆய்வக சோதனையில் உறுதியானது என்றாலும் எப்படி அத்தனை உணவகங்களிலும் தொடர்ச்சியாக அது இருந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறியது.
Salmonella typhimurium (Salmonella enterica serovar Typhimurium ) என்னும் உணவை நஞ்சாக்கும் பாக்டீரியா அந்த விளைவுகளை உண்டாக்கியது, யாரும் மரணம் அடையவில்லை என்றாலும் நகரெங்கும் பெரும் அச்சம் நிலவியது. அமெரிக்க வரலாற்றிலேயே ஆகப்பெரிய உயிராயுதத் தாக்குதல் நடந்தது முதலும் கடைசியுமாக அதுதான்.
அமெரிக்காவின் CDC (நோய் தடுப்பு அமைப்பு) அதை சுகாதாரமற்ற முறையில் தயாரித்த உணவினால் உருவானது என்று சொன்னாலும் 751 பேர் ஒரே சமயத்தில் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தது பெரும் சந்தேகத்தை எழுப்பியது. ஏற்கனவே ரஜனீஷ் ஆசிரமத்தின் எல்லாமுமாக இருந்த மா ஆனந்த ஷீலாவின் மீது கடும்கோபத்திலிருந்த டாலஸ் மக்கள் நவம்பர் தேர்தலில் ஷீலாவுக்கு வேண்டிய ரஜனீஷ் ஆசிரமவாசிகள் போட்டியிட்டதால் இது ஒருவேளை அவரது சதியாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். ஆனாலும் அதற்குச் சான்றாக எதுவுமே அவர்களிடம் இல்லை.
1980- களில் ஆண்டிலோப் என்னும் பெயரில் இருந்த அந்நகரத்தில் ரஜனீஷ் ஆசிரமத்துக்காக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு அங்கு வசித்த அவரின் சீடர்கள் புதிய ஓட்டுரிமையும் பெற்றார்கள். 1984-ல் ஒரு அதிகாரபூர்வ வாக்கெடுப்பு நடத்தி உள்ளூர்வாசிகளைவிட ஆசிரமவாசிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு இருந்ததால் அந்நகர் ரஜனீஷ்புரம் என்று அழைக்கப்படுமென்று முடிவானது.
தேர்தலுக்கு முன்பு ஆதரவற்றோருக்கு அடைக்கலம் தரும் ‘’ sharing home’’ திட்டத்தை துவங்கிய மா ஷீலா பல பேருந்துகளில் (ஓட்டுரிமை கொண்ட) ஆயிரக்கணக்கான வீடிழந்தோரை ரஜனீஷ்புரத்துக்கு அழைத்துவர முயன்றார். ஆனால் தேர்தல் கமிஷன் அந்தத் திட்டத்தை முறியடித்தது.
நவம்பரில் தேர்தலும் வந்தது. ரஜனீஷ்புரத்தின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளருக்கு எதிராக டாலஸ் நகரின் அனைத்து மக்களும் வரலாறு கண்டிராத அளவுக்கு திரண்டு வந்து ஓட்டுப்போட்டார்கள். ரஜனீஷ் ஆசிரமத்தில் ஆயிரக்கணக்கானோர் சீடர்களாக இருந்தாலும் அவர்களில் அமெரிக்க பிரஜைகள் வெகு சிலரே என்பதால் அவர்களால் ஓட்டுப்போடமுடியாமல் டாலஸ் நகரவாசிகளே வெற்றிபெற்றார்கள்.
அம்மாகாணத்தின் பெரும்பாலான ஓட்டு டாலஸ் நகர வாசிகளுடையதுதான் எனவேதான் டாலஸைக் குறிவைத்து அந்த உயிரித்தாக்குதல் நடந்தது. டாலஸின் ஓட்டுப் போடும் வயதுள்ள கணிசமானோரை நோயாளிகளாக்கிவிட்டால், ஆசிரமத்தில் ஓட்டுப்போடும் தகுதியிலிருந்த சிறுகூட்டத்தினரை தங்களுக்குச் சாதகமாக ஓட்டுப்போடச்செய்து வெற்றி பெறும் நோக்கத்தில் அந்த சதி நடத்தப்பட்டது.
ஒரு வருடம் வரை காரணம் தெரியாமல் வெறும் சந்தேகமாக மட்டும் இருந்த விஷயம் ஆசிரமத்துக்குள் உண்டான அதிகார மோதல் மற்றும் உட்பூசலினால் மா ஆனந்த ஷீலா தன் ஆதரவாளர்களுடன் ஐரோப்பாவுக்கு சென்ற பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது.
1985-ல் ரஜனீஷ் ஆசிரமத்தின் மா ஆனந்த ஷீலா அந்த சால்மோனல்லோசிஸ் தொற்றை உருவாக்கியவர் என்று ரஜனீஷ் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
பல காலமாக மெளனமாகவே இருந்த பகவான் ரஜனீஷ் அமைதியை உடைத்து பேசத்தொடங்கினார். அளவற்ற அதிகாரமும் செல்வாக்கும் கொண்டிருந்த மா ஆனந்த ஷீலாதான் உணவில் சால்மோனெல்லா பாக்டீரிய நஞ்சைக்கலந்த குற்றச்செயலைச் செய்தார் என்றும் தனது பிரத்யேக மருத்துவரைக் கொலை செய்ய முயன்றதும் அவர்தான் என்றும் ரஜனீஷ் தெரிவித்தார்.
FBI-யின் தொடர்ந்த குற்றப்புலனாய்வு விசாரணையில் மா ஆனந்த ஷீலாவும் அங்கே செவிலியாக இருந்த மா ஆனந்த பூஜாவும் இந்த சதிக்கு முக்கியமான காரணமாயிருந்தார்கள். ஒரு மருந்துக் கடையிலிருந்து சால்மோனெல்லா பாக்டீரியாவைச் சிறிதளவு வாங்கிய அவர்கள் ஆசிரமத்திலிருந்த ஒரு ஆய்வகத்தில் அதை ஏராளமாக வளர்த்து சாலட்களில் கலந்தார்கள் என்பது தெரிய வந்தது.
ரஜனீஷ்புரத்தின் ஆசிரமத்துக்குள்ளேயெ இருந்த மிக வசதியான ஆய்வகமும் அதில் சாலட்களில் இருந்த அதே சால்மொனெல்லா கிருமிகள் வளர்த்தப்பட்டதும் கண்டுப்பிடிக்கபட்டது. ஆசிரமவாசிகளின் நேரடி சாட்சிகளுக்குப் பிறகு ஐரோப்பாவில் இருந்த மா ஆனந்த ஷீலா கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டார்.
விசாரணையில் ஷீலா குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நன்னடத்தை காரணமாக 29 மாதங்களில் விடுதலை செய்யப்பட்ட ஷீலா சுவிட்சர்லாந்துக்கு அனுப்பப்பட்டார்.
அந்த ஆசிரமவாசிகள் மேலும் பல குற்றசெயல்களில் ஈடுபட்டிருந்தது குற்றப்புலனாய்வு விசாரணைகளில் தெரியவந்ததால் மீண்டும் அந்நகரம் ஆண்டிலோப் என்றே பெயரிடப்பட்டது.
1949-ல் குஜராத்தில் ஒரு செல்வாக்கான குடும்பத்தில் 6-வது குழந்தையாக பிறந்த ஷீலா அம்பாலால் பட்டேல் தனது 18-ம் வயதில் நியூ ஜெர்ஸிக்கு பட்டப்படிப்பிற்கென வந்தார்.1968-ல் பகவான் ரஜனீஷை சந்தித்த அவர் ரஜனீஷ் இயக்தத்தினால் பெரிதும் கவரப்பட்டு அப்போதே அதில் இணைந்துகொண்டார்.
1972-ல் தனது முதல் கணவருடன் இந்தியாவில் இருந்து ஓஷோவின் ஆன்மீக ஆய்வுகளைச் செய்துகொண்டிருந்தவர் 1980-ல் கணவரின் மறைவுக்கு பிறகு ஜான் செல்ஃபெர் என்னும் ரஜனீஷின் மற்றொரு சீடரை திருமணம் செய்துகொண்டார். அமெரிக்கா திரும்பிய ஷீலாவை மா ஆனந்த ஷீலா எனப்பெயர் சூட்டி 1981-ல் தனது அந்தரங்கக் காரியதரிசியாக்கிக் கொண்டார் பகவான் ரஜனீஷ்.
மிகக்குறுகிய காலத்திலேயே ரஜனீஷ் இயக்கக்தின் தவிர்க்கமுடியாத பெரும் சக்தியாக மாறிய ஷீலா ஓரிகானில் 64000 ஏக்கர் நிலம் வாங்கி அங்கு ரஜனீஷ்புரம் அமைவதற்கு முதன்மைக் காரணமாக இருந்தார். ரஜனீஷின் மெளன காலத்தில் ஷீலாவே ரஜனீஷ்புரத்தின் ஒரே குரலாக இருந்ததோடு ரஜனீஷ் ஆசிரமத்தின் சர்வதேச அமைப்பின் தலைவராகவும் இருந்தார்.
அவரது மூர்க்கமான குணத்தினாலும் நிலஅபகரிப்பு முயற்சிகளாலும் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றவும் அவர் முயன்றதாலும் உள்ளூர்வாசிகளுடன் ஏற்பட்ட மோதலினால் விரைவில் அவர் அமெரிக்கர்களால் மிகவும் வெறுக்கப்பட்ட பெண்ணானார்.
இப்போது சுவிட்சர்லாந்தில் ஷீலா பிர்ன்ஸ்டீல் என்னும் பெயரில் இரு முதியோர் இல்லங்களை நிர்வகித்து வரும் அவரைக்குறித்து நெட்ஃபிளிக்ஸில் Searching for Sheela என்னும் ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. ரஜனீஷ்புரவாழ்வு குறித்து My Own Rules என்னும் நினைவுக் குறிப்பையும் அவர் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
ரஜ்னீஷ் என்னும் ஓஷோவின் மீதிருந்த அன்பினாலும் அபிமானத்தினாலுமே தான் பலவற்றைச் செய்ததாகவும் செய்தவற்றைக் குறித்து எந்த வருத்தமுமில்லை என்றும் சொல்லும் ஷீலாவுக்கு சீடர்கள் இருக்கிறார்கள்.
சால்மோனெல்லோசிஸ் உணவு நஞ்சை உருவாக்கும் இந்த Salmonellatyphimurium பாக்டீரியாவின் பேரினப்பெயர் இந்த பாக்டீரியாவை 1884-ல் முதலில் கண்டுபிடித்த Daniel E. Salmon என்பவரைக் கெளரவிக்க வைக்கப்பட்டது.(டேனியல் சால்மனின் உதவியாளரான Theobald Smith தான் பன்றிக்காலராவைக் குறித்த ஆய்வில் சால்மொனெல்லாவை முதலில் கண்டுபிடித்தாரென்றாலும்,).
இந்தப் பேரினத்தின் மற்றொரு சிற்றினமான Salmonella typhi தான் டைபாய்டு காய்ச்சலுக்கு காரணமாக இருக்கும் கிருமி.
Salmonella typhimurium விலங்குகள் வழியாகப் பரவி விலங்கு, பறவை இறைச்சி மற்றும் முட்டை உணவு வழியேவும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட தாவர உணவுகளாலும் சால்மோனல்லோசிஸை உருவாக்குகிறது.
சால்மோனெல்லோசிஸ் உலகளாவிய பல தொற்றுகளை உணவு நஞ்சாதல் மூலம் உருவாக்கி இருக்கிறது. 1985-ல் இல்லினாய்ஸில் முறையாக பாஸ்டுரைஸ் செய்யப்படாத பாலினால் பரவிய சால்மொனெல்லோசிஸினால் 2 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டார்கள்.
1989-ல் லண்டனில் சால்மோனெல்லாவால் கெட்டுபோயிருந்த முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மயோனேஸ் இருந்த சாண்ட்விட்ச் வழியாக பரவிய S. Typhimurium DT4 என்னும் வகை மிகப்பெரிய அளவில் நோய்த்தொற்றை உருவாக்கியது.
2005-ல் அமெரிக்காவின் பல மாகாணங்களில் ஆரஞ்சு பழச் சாற்றில் இருந்து சால்மோனல்லோசிஸ் பரவி பெருந்தொற்றை உருவாக்கியது.
1987-ல் நார்வே மற்றும் ஃபின்லாந்தில் சாக்லேட்டுகளில் இருந்த சால்மோனெல்லா கிருமி 350 பேர் வரையிலும் பெரும் பாதிப்பை உண்டாக்கியது.
2021-ல் ஃபின்லாந்தின் ஒரு குழந்தைகள் காப்பக விழாவில் மதிய உணவில் இருந்த லெட்யூஸ்களில் இருந்த சால்மொனெல்லாவினால் சுமார் 750-பேர் பாதிக்கப்பட்டனர்.
2021-ல் கனடாவில் சோயா பாலாடைக்கட்டியான டோஃபுவில் சால்மொனெல்லா இருந்ததால் ஒரு சிறு குழு நோய்வாய்பட்டதன் பின்பு சால்மோனெல்லா இறைச்சி உணவில் மட்டுமல்ல தாவர உணவுகளிலும் இருக்குமென்பது உறுதியாயிற்று.
2021-ல் பெல்ஜியத்தின் பிரபல சாக்லேட்டுகளில் சால்மொனெல்லா இருப்பது சாக்லேட்டுகள் விற்பனையாவதற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டதால் உலகளாவிய பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.
கடைசியாக 2023-ல் அமெரிக்காவில் பன்றிக் கொத்திறைச்சி மூலம் பரவிய சால்மொனெல்லா தொற்றுதான் மிகச்சமீபத்திய தொற்றுநிகழ்வு.
இன்று வரையிலும் உணவை நஞ்சாகும் பாக்டீரியாவாக சால்மோனெல்லா மிக குறிப்பிடத்தக்க ஆபத்தை உண்டு பண்னும் கிருமியாகத்தான் இருக்கிறது.
தொடர்ந்த ஆய்வுகளில் சால்மோனெல்லா, பன்றி மற்றும் கொறித்துண்னிகளில் அதிகம் தங்கி இருப்பதும் அவற்றிலிருந்து பிற விலங்குகளுக்கு பரவுவதும் கண்டறியப்பட்டிருக்கிறது.
மனிதர்களுக்கு முறையாக, சுகாதாரமாக சமைக்கப்படாத உணவுகளிலிருந்தும், வளர்ப்புப்பிராணிகள் மற்றும் பிற விலங்குகளிலிருந்தும் சால்மோனெல்லோசிஸ் பரவுகிறது.
உணவுத்தயாரிப்பு மற்றும் கையாளுவதில் சுகாதாரம் பேணப்பட வேண்டியதன் அவசியத்தை சால்மோனெல்லா பாக்டீரியா நமக்கு உணர்த்தியிருக்கிறது.
உணவைத்தயாரிக்கையிலும் கையாளுகையிலும் அடிக்கடி கைகளை கழுவிக்கொள்வது, உடல்சுத்தம் பேணுவது, சமைக்கப்பட வேண்டிய பொருட்களை நன்கு கழுவிப்பயன்படுத்துவது மற்றும் சமைத்த சமைக்காத பொருட்களை தனித்தனியே பிரித்து வைப்பது, இறைச்சி உணவுகளை முறையாகச் சமைப்பது ஆகியவற்றினால் சால்மோனெல்லோசிஸை தவிர்க்கலாம்.