இன்று ஆசிரியர் தினம். உண்மையிலேயே நான் மகிழ்ந்து கொண்டாடும் தினம். மகன்களும் சாம்பவியும் வாழ்த்துச் சொல்ல மறந்துவிட்டால் கோபித்துக்கொள்வேன். ஆசிரியை ஆவது குறித்து எந்தச் சிந்தனையும் இல்லாமல் நல்ல ஆய்வாளராக மட்டுமே இருக்க விழைந்த என்னை, கொஞ்சமாக ஆய்வும் முழுக்க முழுக்க கற்பிப்பவளும் கற்றுக்கொள்பவளுமாக ஆக்கியிருக்கிறது ஊழ்.
ஆசிரியம் என்றால் என்னவென்றே தெரியாத பதின்ம வயதில், ‘கடலோரக் கவிதைகள்’ திரைப்படம், என்னை ஊட்டியில் ஒரு மேட்டு நிலத்தில் வெள்ளை ரீப்பர்களால் மறிவேலியிடப்பட்ட (picket fence) ஒரு சிறு சிமிழ் போன்ற வீடும், உதவிக்கு ஒரு முதியவளுமாக வாழ்ந்து, ஏராளமான வண்ணக் குடைகளும் ஆர்கண்டி புடவையுமாக இருக்கும் ஒரு மழலையர் பள்ளி ஆசிரியை ஆகும் விழைவை உண்டாக்கி இருந்தது. ஊட்டி இளமைப் பருவத்தில் என்னுடன் எப்போதும் இருந்தது, இப்போதும் என் கனவுகளில் உடனிருக்கும் நிலப்பரப்பு அதுவே. கலைந்த பலநூறு கனவுகளில் அதுவும் இருந்தது என்றாலும், பல்கலைக்கழக ஆய்வுக்கூடங்கள் எதிர்பாராமல் என்னை ஒரு ஆய்வாளராக்கியதை இனிமையுடன் நினைவுகூர்கிறேன்.
முதுகலை படிப்பில் இணைந்த முதல் வாரத்தில், ராஜாராம் அண்ணனின் முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு ஒரு சிறு வகுப்பறையில் நிகழ்ந்தது. அந்தத் தேர்வைக் குறித்து எந்தச் சிந்தனையும் அறிதலும் இல்லாமல், கடைசி வரிசையில் அமர்ந்து கொடுக்கப்பட்ட குளிர்பானத்தையும் பிஸ்கட்டையும் ருசித்துக்கொண்டிருந்தேன். பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு. மாரிமுத்துவும் அன்று உடனிருந்தார். ஒரு பழங்குடியினர் பயன்படுத்திய விதையின் ஊட்டச்சத்து குறித்து ராஜாராம் என்னவோ விளக்கிக்கொண்டிருந்தார்; நான் சுவாரசியமில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். பலரும் அவரிடம் என்னவோ கேள்விகள் கேட்டார்கள், அவரும் சலிக்காமல் பதிலளித்தார்.
பின்னர் இறுதியாக “இனிமேல் ராஜாராம், ‘டாக்டர் ராஜாராம்’ என அழைக்கப்படுவார்” என்று ஒருவர் சொன்னதும், அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து, ராஜாராம் அண்ணனைக் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த போது ‘டாக்டர்’ எனும் அந்த விளி என் மீது ஒரு காய்ச்சல் போல அந்த நிமிடம் பற்றிக்கொண்டது.
அன்று ராஜாராம் எங்களை ஒரு வேனில் கோவை ஆர். எஸ். புரம் அன்னபூர்ணாவிற்கு மதிய உணவுக்கு அழைத்துச் சென்றார். உணவு முடிந்து வெளியே வருகையில், அங்கே தள்ளுவண்டியில் இருந்த பீடாவை வாங்கிக்கொடுத்தார். அது ‘ஜர்தா பீடா’ என்பதை, எனக்கு தலைசுற்றி மயக்கம் வந்தபோதே அறிந்தேன்! அதுதான் அன்னபூர்ணா என்னும் உணவகத்திற்கு நான் முதன்முதலாகச் சென்ற நாளும் கூட.
பின்னர் முழுநேரமும் துறையில் நடந்த ஆய்வுகளைக் கவனிப்பவளாக மாறியிருந்தேன். குறிப்பாக முதல் தளத்தில் இருந்த கடல்பாசிகளுக்கான ஆய்வு நடந்துகொண்டிருந்த Seaweed Lab-ல், முனைவர் பட்ட ஆய்வில் இருப்பவர்களுக்கு எடுபிடி வேலைகளை நான் முனமுவந்து செய்துகொண்டிருப்பேன் நேரம் கிடைக்கும்போதெல்லாம்.
ஒரு பின்னந்தியில் Tribal Pulse Lab-இல் நான் அந்த வயதில் பார்த்திருக்கக்கூடாத ஒரு காட்சியையும் அசர்ந்தமாகப் பார்த்தேன். அதுவுமொரு அறிதல்தான், ஒருபோதும் பிறருடன் பகிர்ந்துகொள்ளவே முடியாத அந்தக் காட்சி கணநேரம்தான் என்றாலும், அது எனக்குப் பெரும்திகைப்பை உண்டாக்கியது. அதன் பிறகு நான் மிகவும் அமைதியானவளாகவும், அதிகம் சிந்திப்பவளாகவும் மாறியிருந்தேன். விளையாட்டுக்கு நண்பர்கள் கை என் மீது பட்டாலும் விதிர்விதிர்த்துக்கொண்டிருந்தேன்.
பின்னர் நல்ல சித்திரம் வரைபவளாக, உன்னதமான ஆங்கிலம் இல்லாவிட்டாலும் சரியான ஆங்கிலம் பேசுபவளாக, எந்நேரமும் நூலகத்தில் பழிகிடப்பவளாக, எதையாவது எழுதிக்கொண்டிருப்பவளாக மாறிப்போனேன். வய்யூரு ராமகோடி ரெட்டி என்னும் VRKரெட்டி சைட்டாலஜிஸ்ட் ஆசிரியராகப் பணியில் இணைந்த பின்னர்—வெலிங்டன் கோதுமை வயால்களில் அதிகாலையில் கதிரெழுகையில் வானின் தங்க நிறப் பின்னணியில் கோதுமை மலர்களைச் சேகரித்தது, டால்ஃபின்கள் துள்ளி விளையாடும் அலைகளைக் கடந்து குருசடி தீவை அடைந்து பாசிகளைச் சேகரித்தது, ஊட்டிக்கும் மருதமலைக்கும் சென்று தாவரங்களைச் சேகரித்தது,எலக்ட்ரோபோரசிஸில் புரதங்களைப் பிரித்தெடுத்தது; அகாவே கள்ளிகளின் அழகிய மலரரும்புகளை மெழுகிலிட்டு கட்டிகளாக்கி மைக்ரோடோமில் மிக மெல்லிய செக் ஷன் எடுத்தது என ஆய்வுகளில் தீவிரமான விருப்பம் உண்டாகியிருந்தது.
என்னுடன் பல துறையைச்சேர்ந்த நண்பர்களின் ஒரு சிறு குழு எப்போதும் இருந்தது. கேன்டீன் போகும் வழியில் இருந்த ஒரு சிறு திட்டில் மாலை நேரங்களில் மணிக்கணக்கில் அமர்ந்து நான் எதையாவது பேசுவதும், அதை அவர்கள் கேட்டுக்கொண்டிருப்பதும் வழக்கமானது. கெமிஸ்ட்ரி விஜி ‘ .. டீ, நான் வேண்னா மத்தியானம் உனக்கும் சேர்த்து சாப்பாடு கொண்டு வரேன் நீ ஹாஸ்டலுக்கு போகாம எங்க கூடவே இருந்து எதாச்சும் பேசிகிட்டிரேன்…’ என்பாள். மேட்டுப்பாளையத்திலிருந்து உடன் படித்த செந்திலின் நண்பர் ஷரவண் அந்தக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வார். அவர் முதலில் செந்திலைப் பார்க்கவும், பிறகு நான் பேசுவதைக் கேட்கவே வெள்ளி மாலைகளில் தொடர்ந்து வந்தார் என்பதை நானும் அறிந்திருந்தேன்.
அவரும், ஒரு மதிய வேளையில், துறையின் தாவரவியல் பூங்காவில் மண்ணைக் கொத்திக்கொண்டிருக்கையில், மேலே வெள்ளி மீனாக நீந்திக்கொண்டு சென்ற விமானத்தை வாய்பிளந்து வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தவளிடம் சக மாணவர் ஒருவரும், ஆங்கில இலக்கியம் படித்த படுகரான தேயிலைத்தோட்ட உரிமையாளர் ஒருவரும் என்னை விரும்புவதாக நேரடியாகச் சொன்னபோதும், எனக்கு அந்த நேசத்திலும், அந்தப் பையன்களிடம் எந்த ஈடுபாடும் உருவாகவில்லை. அதை அவர்களிடமே புன்னகையுடன் சொல்ல முடிந்தது. ஆனந்தலட்சுமி (சிறகு) சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொண்டது போல எனக்கு ஆய்வில் மட்டுமே பெருவிருப்பம் இருந்தது. மேலும் அன்று ஆய்வகத்தில் நான் கண்ட காட்சி எனக்கு ஆண்-பெண் உறவைக் குறித்த நுட்பமான ஒரு விலக்கத்தையும் உள்ளே உண்டாக்கியிருந்தது. ஆய்வின் மீது மட்டுமே பெருங்காதல் கொண்டிருந்த காலம் அது.
பின்னர் வேறு பல்கலைக்கழகம், அங்கே 10 மாதங்களில் எம்.பில் முடித்தேன். மற்ற துறை மாணவிகள் எம்.பில் ஆய்வுக்காக வெளியே செல்ல வார்டனிடம் அனுமதி வாங்க வரிசையில் நிற்கையில், நான் ஆய்வை முடித்து , அவற்றைச் சமர்பிக்க ஆய்வேடுகளுடன் Registrar அலுவலகத்திற்கு அவர்களுக்கு எதிர்த் திசையில் சென்றுகொண்டிருந்தேன். பின்னர் 3 வருடங்களில் முனைவர் பட்ட ஆய்வை முடித்து, மிகத் தீவிரமான ஆய்வாளராகும் கனவுகளுடன் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியே வந்தேன்.
அச்சமயத்தில் உண்மையிலேயே காதல் வயப்பட்டிருந்தேன். ராணுவ வீரர் என்பதாலும், அவரது போர்ச் சாகசக் கதைகள் உண்டாக்கிய கிளர்ச்சியினாலும், அந்தக் குடும்பம் எங்களின் ஜாதிப் பிடிமானக் குடும்பத்தை விடவும் வேறுபட்டிருந்ததாலும், அவர்கள் என் மீது பொழிந்த அன்பினாலும், 45 பக்க பிரிண்டரின் தொடர்ச்சியான காகிதங்களில் வந்த கடிதங்களாலும், இளமைக்கே உரித்தான அசட்டுத்தனத்தினாலும் அந்த நேசத்தில் நானும் தீவிரமாக இருந்தேன். வலுக்கட்டாயமாக அந்த நேசமும் எங்களிடமிருந்து பிடுங்கி எறியப்பட்டது.
அந்தக் காயமாறுவதற்குள், ஆய்வாளராகப் பணிபுரியும் பல வாய்ப்புகள் வந்தன. ஊட்டியில் ஒரு எஸ்டேட்டில், அதன் மிகப்பெரிய செல்வந்தரான உரிமையாளர் மேஜையில் இருந்த தேநீர்க் கோப்பையை ‘சர்’ என ஓசை வரும்படி அருந்திக்கொண்டே, “உங்க படிப்பெல்லாம் பார்த்தேம்மா, உங்களுக்கு இங்கே என்ன வேலை கொடுக்கிறதுனு எனக்குத் தெரியலை… என்ன வேலை நீங்கள் செய்ய முடியுமோ அதைச் செய்யலாம், என்ன சம்பளம் கேட்கிறீர்களோ அதைத் தருகிறேன்” என்றது நினைவிலிருக்கிறது. அதையும் வீட்டில் மறுத்தார்கள்.
ஒரு மத்திய அரசுத் தேர்வு எழுதி, நல்ல மதிப்பெண்களுடன் தேர்வாகி, ஹைதராபாத்தின் சணல் ஆய்வு மையத்தில் ஆய்வாளராக வேலை கிடைத்தபோது, “நம்ம வீட்டுப் பொண்ணு ஆந்திரா வரைக்கும் போறதா?” என்று மறுக்கப்பட்டது.
பின்னர், இந்தக் கல்லூரியில் ’’நம்ம பொண்ணெல்லாம் எதுக்கு அவ்வளவு தூரம் போகணும்? சங்கரன் ரிட்டையர் ஆகிறார்; அந்த இடத்துக்கு நம்ம பொண்ண வரச் சொல்லுங்க” என்று சொல்லப்பட்டதால், மனம் உடைந்து வேண்டா வெறுப்பாக இங்கே இணைந்தேன்.
கல்லூரியில் இணைந்து 2 மாதங்களில் கல்லூரி அலுவலகத்திலிருந்து எனக்கு போன் வந்திருப்பதாகச் சொன்னார்கள். எடுத்துப் பேசினேன். வினுதா என்னும் பெங்களூரு இந்துஸ்தான் லீவரின் காரியதரிசி பேசினாள். இரண்டு நாட்களுக்குள் அங்கே நேர்காணலுக்கு வர முடியுமா என அவள் கேட்டாள், “சரி” என்று சொல்லிவிட்டு வைக்கும்போது, உன் பெயர் மிக அழகு என்றேன். சற்றுத்தயங்கி “தேங்க்யூ ” என்று சொன்னாள்.
அந்த போனை மற்றொரு இணைப்பிலிருந்து ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த கல்லூரியின் மேற்பார்வையாளர், “என்னம்மா… ராஜினாமா பண்ணிட்டு போகப் போறியா பெங்களூருக்கு?” என்றார். “தெரியலை” என்று மட்டும் பதில் சொன்னேன்.
மறுநாள் இரவெல்லாம் பேருந்தில் பயணித்து, அதிகாலை பெங்களூருவில் இறங்கி, இந்துஸ்தான் லீவருக்கு ஆட்டோவில் போய், அங்கிருந்த கழிவறையில் முகம் கழுவிக்கொண்டு, அதே பயண உடைகளுடன் காலை 10 மணிக்கு ஒரு மாபெரும் போர்டு ரூமுக்குச் சென்றேன். அந்தக் குளிரூட்டப்பட்ட அறையையும், கோட் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்த பலரையும் பார்த்து நான் திகைத்துப் போய்விட்டேன். பேனலில் 7 பேர் இருந்தார்கள். என் முனைவர் பட்ட ஆய்வையும், சால்ஃபோர்டில் ஒரே சஞ்சிகையில் பிரசுரமான எனது 6 சர்வதேச ஆய்வறிக்கைகளையும் என் எளிமையான தோற்றத்தையும் பொருத்திப்பார்க்க அவர்கள் சிரமப்பட்டார்கள். என்னிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் நான் எளிதாகப் பதிலளித்தேன்.
“தேயிலைக் கழிவுகளில் உங்களால் வேலை செய்ய முடியுமா?” எனத் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டது. அதிலிருக்கும் டானின்களின் நிறமியைப் பிரித்தெடுப்பது பற்றிய ஆய்வில் என்னை இணைத்துக்கொள்வதுதான் அந்த நேர்காணல் என்று எனக்குத் தெரிந்ததும், நான் பாலிஃபெனால், தியோப்ரோமின், தியோஃபிலின்கள் பற்றி விளக்கிக் கூறி, என் தாவரவியல் அறிவை அவர்கள் முன்பாகச் சந்தேகமில்லாமல் முன்வைத்தேன்.
“விரைவில் தொடர்புகொள்கிறோம்” என்று சொல்லி, அதிலொருவர் எனக்கு முதன்முதலாகக் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். என் வாழ்வின் முதல் கைகுலுக்கல் அதுதான்! காலையில் உணவருந்தாததால் களைத்துப்போய் அந்த கட்டிடத்திலிருந்து வெளியே வருகையில், கைகுலுக்கிய அந்த இளம் அதிகாரி (அடர் நீல கோட் அணிந்திருந்தார்) பின்னால் வேகமாக வந்து, எங்களை கேன்டீனுக்குக் கூட்டிப்போய், அங்கிருந்தவர்களிடம் சொல்லி எங்களுக்கு உணவளிக்கச் சொல்லிவிட்டு, கனிந்த புன்னகையுடன் என்னை மீண்டும் ஒருமுறை பார்த்து விடைபெற்றுக்கொண்டார்.
அப்போது எனக்கு 26 வயது முடிந்திருந்தது. அடுத்த வாரம், மிக அழகிய வான் நீல நிற உறையில் எனக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. என்னை 3 வருடங்கள் என்று முன்தீர்மானிக்கப்பட்ட தேயிலைக் கழிவு குறித்த ஆய்வில், மாதம் 18 ஆயிரம் சம்பளத்துடன் ‘ஜூனியர் சயின்டிஸ்ட்’ ஆக இணைந்துகொள்ள விரும்புகிறீர்களா என்றும், சம்மதமென்றால் 10 நாட்களுக்குள் வரவேண்டுமென்றும், நிர்வாகம் நினைத்தால் பதவியை நீட்டிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே நீலத்தில் இருந்த கடிதத்தாளின் ஒரு மூலையில் இளஞ்சிவப்பில் மூன்று சிறு மலர்கள் இருந்தன.
அந்த வாய்ப்பையும் ’கர்நாடகாவுக்கெல்லாம் நம்ம வீட்டுப்பொண்னை எப்படி அனுப்புவது’ என்று நிராகரித்தார்கள்.நானும் அச்சமயத்தின் மனமுடைதலில் எதன்பொருட்டும் வீட்டில் விவாதிக்க மனமற்றவளாக இருந்தேன். இப்போது நினைத்துப் பார்க்கிறேன்… 26 வயதில் இந்துஸ்தான் லீவரில் இருந்திருந்தால் எத்தனையெத்தனை முக்கிய ஆய்வுகளை நான் செய்திருக்கக்கூடும்!
ஆனால், இந்தக்கல்லூரியில் பணியில் இணைந்து சில வருடங்களிலேயே கற்பிப்பதில் ஆர்வம் கொண்டுவிட்டேன். அவ்வப்போது ‘கிஸான் வேர்ல்ட்’ என்னும் சஞ்சிகையில் சிறு கட்டுரைகள் எழுதி, அதற்கான சன்மானமாக 400 ரூபாய்கள் வாங்கிக்கொண்டிருந்ததை கல்லூரி ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தது. இந்தக்கல்லூரியின் முதல்முனைவர் பட்டம் கொண்டிருந்த பேராசிரியை நான்தான்.
ஆசிரியர் பணியில் மெல்ல மெல்ல ஆர்வம் ஏற்பட்டிருக்கையில், அரசு வேலை தேடி வந்த தருணத்தில் அதிலிருந்தும் தடுக்கப்பட்டு,வேலையை ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டு, மண்முடித்து வைக்கப்பட்டேன். வளைகுடா நாடொன்றிற்கு அனுப்பட்டேன். அங்கு அந்தப்பாலையிலும், “இப்போது ஜிம்னோஸ்பெர்ம் எடுக்கும் ஆசிரியர் அதன் இனப்பெருக்க உறுப்புகள் பற்றிச் சரியாகச் சொல்வாரா? சைகஸின் இலைகளின் மெழுகுப் பூச்சு பற்றிச் சொல்லியிருப்பாரா?” என்றெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டே, சரணுக்குப் பால்பொடியைக் கரைத்துக்கொண்டிருப்பேன்.
அந்தக் கொடும் வாழ்வு முடிந்து 5 வருடங்களில், தப்பித்து இந்தியா வந்து, மீண்டும் அதே கல்லூரியில் அதே துறையில் இணைந்தேன். இன்று வரை ‘ஆசிரியை’ என்பதை விட, “அன்றாடமும் தாவரங்கள் குறித்துக் கற்றுக்கொண்டிருப்பவள்” என்றுதான் சொல்ல வேண்டும். தாவரங்கள் குறித்த அபிமானம் மேலும் மேலும் எனக்குப் பெருகிக்கொண்டே இருக்கிறது. இன்னும் 500 வருடங்களுக்காவது அவற்றைக் குறித்துக் கற்கவும் கற்பிக்கவும் எழுதவும் விஷயமிருக்கிறது,யாரும் கற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்றாலும்.
அன்னையும், ஆசிரியையும், வாசகியுமாய்தான் என்னை எங்கும் எப்போதும் முன்வைக்கிறேன். கல்லூரியில் எனக்குச் சௌகரியமான சூழல் இல்லைதான்; என்றாலும் என் தனியறையில் நான் மகிழ்ந்து பணியாற்றுகிறேன். 1950-களில் கட்டப்பட்ட கட்டிடத்தில் துறை இயங்குகிறது. என் மேஜைக்குப் பின்னால் அந்தக் காலத்துக் கம்பிகளற்ற திறந்த சாளரம் வழியே புங்கை வாகை பெருமரங்களின் மரக்குடை பிரம்மாண்டமாகத் தெரிய, அவற்றின் உலர்ந்த இலைகள் அவ்வப்போது ஆசியளிப்பது போல் என் மேஜையில் வந்து விழ, ஒருநாளும் சலித்துக்கொள்ளாமல் மிகுந்த விருப்பத்துடன் வகுப்புகளுக்குச் சென்றுகொண்டிருக்கிறேன்.
நான் தாவரவியல் கற்றுத் தருபவளாக மட்டுமல்லாது, மாணவிகளுக்கும் சக ஆசிரியர்கள் சிலருக்கும் அந்தரங்கத் துயரைப் பகிர்ந்துகொள்ளும் முகமாகவும் இருக்கிறேன் என்பதில் மகிழ்கிறேன். உடன் பணியாற்றும் பல ஆசிரியர்கள் ஆசிரியப்பணியின் முக்கியத்துவத்தை உணராதவர்கள் என்னும் வருத்தமும் எனக்குண்டு.
இங்கு இது எனது 24-வது வருடம். ஆசிரியையாக எத்தனையோ கசப்பான அனுபவங்களும் இருக்கின்றன. குறிப்பாக, ஓர் ஆசிரியை தனக்கேற்பட்ட ஒரு சிக்கலிலிருந்து தப்பிக்க என் மீது அபாண்டமாகப் பொய்ப் பழி சுமத்தி, மிகச் சமர்த்தியமாகத் தன்னை விடுவித்துக்கொண்ட சூழலில், நான் மனம் கலங்கிப்போனேன். அத்தகைய சூழ்ச்சிகளைச் செய்யக்கூடியவள் அந்தப் பெண் என்று நான் நினைத்திருக்கவில்லை. ஆனால் அவளை நான் வெறுக்கிறேன் என்றோ, அவள் எனக்கு எதிரி என்றோ இல்லை. எனக்கு எதிரியாக இருக்கும் தகுதி கொண்டோர் இந்தக் கல்லூரியில் இல்லவே இல்லை. அவளை முற்றிலுமாக என் வாழ்விலிருந்து விலக்கிவிட்டிருக்கிறேன், எனினும் அந்தக் காலத்தில் நான் கடும் துயருற்றேன் என்பது உண்மைதான்.
நான் அடிக்கடி பயணப்பதும், அவ்வப்போது போனில் பேசிக் கொண்டிருப்பதாலும், எப்போதும் வாசிப்பதாலும், மேடைகளில் பேசுவதாலும் என் ஒழுக்கம் குறித்த சான்றிதழைக் கேட்காமலேயே அளிக்கும் சக ஆசிரியர்களும் இருக்கிறார்கள். அவர்களனைவரையும் சுகக்கேடுள்ள பிள்ளைகள் மீதான அன்னையின் கனிவுடன் பார்க்கிறேன்.
இங்கு பணிபுரியும் யாரைக் காட்டிலும் நான் உயர்ந்தவள் அல்ல; ஆனால் நிச்சயம் அவர்களிடமிருந்து வேறுபட்டவள் என்பதை அறிவேன். அதிலெனக்குச் சற்று அகந்தையும் இருக்கிறது! நான் இருக்கும் அறிவார்ந்த உலகை அவர்கள் ஒருபோதும் அறியமாட்டார்கள் என்பதில் எனக்குத் துயருமுண்டு.
மாணவர்களில் எனக்குப் பெண்கள் மீது தனிப் பரிவுண்டு. காலம் காலமாகக்கல்வியும் சுதந்திரமும் மறுக்கப்பட்டு, இப்போதுதான் வீட்டை விட்டு வெளியே வந்து கற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதால் அவர்கள் மீது தனிப் பரிவு கொண்டிருக்கிறேன். ஆசிரியராக எப்போதும் ஒரு கையில் கனிவும், மறுகையில் கண்டிப்புமாகவே இருக்கிறேன், மகிழ்ந்தும் இருக்கிறேன்.
கலாமணி மேம், தனா மேம், சண்முகசுந்தரம் சார், ரவீந்திரன் சார் மற்றும் சங்கரன் சாரை எப்போதும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். நல்லாசிரியர்களால் செதுக்கப்பட்ட மாணவி நான்.
அவர்களிடமிருந்து மட்டுமல்ல, ‘ஜெ’ என்னும் ஞானகுருவிடமிருந்து பெற்றவைகளே என்வாழ்வை முழுவதுமாக உருவாக்கியிருக்கிறது. சரணும் தருணும் எனக்கு ஆசிரியர்கள் தான், நான் அவர்களுக்கல்ல, அவர்களே எனக்கு அன்னையர். அற்று விழ எல்லாக் காரணங்களும் இருந்தபோதும் இந்த வாழ்வைத் தொடரும் பிடிப்பை எனக்கு உண்டாக்கியவர்கள் அவர்களிருவருமே,
எப்போதும் ஒளியை நோக்கியும், களைகளைப் பொருட்படுத்தாமலும் வளர்வது, எங்கு விழுந்தாலும் முளைத்து மலர்வது எனப் பலபாடங்களைக் கற்றுக்கொடுத்த தாவரங்களும் ஆசிரியர்களே! அனைவருக்கும் என் வந்தனங்கள்!



























