இரவு வெகுநேரம் உறக்கமில்லை. சரண் இத்தனை காற்று மாசு இருக்கும் இடத்தில் இருப்பது வேதனையளித்தது. எப்பவோ தூங்கினேன். அதிகாலையிலேயே எழுந்து இருவரும் தயாரானோம். வாசலில் நேற்று ஹோலிகா தகன் நடந்த சுவடே இல்லை, துப்புரவாக இருந்தது. சாம்பலை நெற்றியில் வைத்துக்கொள்ள எடுத்துக்கொள்வார்கள் என்று சரண் சொல்லியிருந்தான், அதன்பின்னர் சுத்தம் செய்திருப்பார்களாக இருக்கும்.
காற்று மாசு 300-க்கு அருகில் இருந்தது. இந்த புழுதிமண்டலத்தில் மூழ்கி இருக்கும் நகரில் ,முரணாகச் சாலைகளை உடனுக்குடன் சுத்தம் செய்துகொண்டே இருக்கிறார்கள். எந்த அடிப்படையில் இந்தப் பெருநகரம் இயங்குகிறது என்றே எனக்குப் புரியவில்லை.
விமான நிலையத்தில் சாப்பிடலாம் என்று நினைத்து வந்தோம், ஆனால் அங்கு எந்த உணவகங்களும் வெளியே இல்லை. சரணுக்கு ஹோலி விடுமுறை, எனவே அவன் வீட்டுக்குப்போய் சாப்பிட்டுக் கொள்வதாகச் சொன்னான். நான் உள்ளே சென்று டிஜி யாத்ராவின் உதவியால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் போர்டிங் பகுதிக்கு வந்தேன்.
பெண்களைச் சோதனையிடும் இடத்தில் இருந்த பெண்காவலர் ‘நமஸ்தே ஜி’ சொல்லி வணங்கி, “நீங்கள் சென்னையா?” என்றார். “இல்லை, கோயம்புத்தூர்” என்றேன். அவருக்கு ‘மனசிலாகவில்லை’. சென்னை நங்கநல்லூரில் சில வருடம் பணியாற்றியதாகச் இந்தியில் சொன்னார். எனக்குப்புரிந்தது இருவரும் பரஸ்பரம் புன்னகைத்துக்கொண்டோம்.
புத்தகக்கடை இருந்தது, ‘வெண்முரசு’ இருக்குமா என்று தேடினேன்; இல்லை. தமிழே இல்லை எந்த வரிசையிலும். புது தில்லி விமான நிலையத்திலெல்லாம் நிறைய தமிழ் நூல்கள் இருந்தன.
ஓர் இடத்தில் பலர் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஹோட்டல் என நினைத்து அங்கே செல்ல முயன்றபோது ஒரு பணியாளர் மிக மென்மையாக, “அங்கே லவுஞ்சில் இருக்க சிறப்பு அனுமதி பெற்றவர்கள் மட்டும்தான் வரலாம்” என்றார். சரி என்று திரும்பி வேறு உணவகத்தைத் தேடினேன். ‘Gully’ என்று ஒரு உணவகம் இருந்தது. என்ன பேரோ, என்ன அர்த்தமோ!
வரிசையில் நின்று ஒரு மசால் தோசையை 450 ரூபாய்க்கு ஆர்டர் கொடுத்தேன். அதிகாலைக் கொள்ளை! உணவகத்தின் பணிப்பெண் ஒருத்தி டோக்கன் எண்ணைக் கூவி கூவிச் சொல்லிக்கொண்டிருந்தாள். அழகி,இல்லையில்லை பேரழகி. கண்கள் முகத்தில் கால் பாகம் இருந்தன.காதில், மூக்கில் கழுத்தில் ஒன்றுமில்லை. கொண்டை போட்டு மேலே ஒரு தொப்பி, சாம்பல் நிறச் சீருடை. “உலக அழகிகள் கோடி உன் காலைக் கழுவலாம் வாடி” என்ற பாட்டை இவளுக்குத்தான் பாட வேண்டும்.
என் டோக்கன் 18. நான் அவளிடம் சென்று, “என்னைக் கூப்பிடுகையில் ஆங்கிலத்தில் எண்ணைச் சொல்ல வேண்டும், இந்தியில் வேண்டாம்” என்றேன். புன்னகைத்துத் தலையசைத்தாள். பத்து வரை இந்தியில் தெரியும், 18-க்கு என்ன செய்வது?
அந்த 450 ரூபாய் மசால் தோசை கால் கரண்டி மாவில் முறுகலாகச் செய்யப்பட்டிருந்தது. வெகு சுமாரான சட்னிகளுடன் கொடுத்தார்கள். வேடசெந்தூர் வந்து சமைத்துச் சாப்பிடுவதைப் பற்றி நினைத்துக்கொண்டே சாப்பிட்டேன்.
ஏர் பஸ்ஸில் அமர்ந்து தருண், சரணிடம் விமானம் ஏறப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். என் அருகில் ஓர் அம்மாள் ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார். நான் போன் பேசி முடித்ததும், “தமிழா?” என்று ஆர்வமாகக் கேட்டார். “ஆமாம்மா” என்றேன்.
“தமிழ் பேசிக் கேட்டு எத்தனை நாளாச்சு! சொந்த ஊர் சேந்த மங்கலம். இங்கே மகன் வீட்டுக்கு வந்து 26 வருஷமாச்சு. வீட்ல மராத்திதான் பேசறாங்க எல்லாரும். பேரப்பிள்ளைகளும் ஸ்கூல்லயும் மராத்தியும் இந்தியும்தான் படிக்கறாங்க, அதனால் வீட்ல தமிழ் பேசினா பாடம் படிக்கறது கஷ்டமாயிடும்னு பையனும் மருமகளும் சொல்றாங்க. எனக்கு தமிழே மறந்துபோயிருச்சு” என்றார்.எனக்கு அவரைப் புரிந்துகொள்ள முடிந்தது. மூன்று நாட்களே எனக்கு கண்ணைக்கட்டியதே!
அவர் கையைப் பற்றிக்கொண்டேன், மகன் ஏதோ ஒரு தனியார் வங்கியின் பெயரைச் சொன்னார், அங்கே உதவி மேலாளர். வீட்டு வாடகை, பிள்ளைகள் படிப்பு, போன் கட்டணம் எல்லாம் வங்கியே கொடுக்கிறதாம். கல்யாணம் செய்து கொடுத்த பெண் கோவைப்புதூரில் இருக்கிறாள், அங்கே ரொம்ப வருஷம் கழித்துப் போவதாகவும், பெண் வயிற்று பேரப்பிள்ளைகளின் கோடை விடுமுறை வரை அங்கே இருந்துவிட்டு மீண்டும் இங்கே வரப்போவதாகச் சொன்னார். என்னைக் குறித்து அவர் எதுவுமே கேட்கவில்லை, அவருக்குத் தமிழில் யாரிடமாவது பேச வேண்டும் என்னும் ஆதங்கம் இருந்திருக்கும் போல.
விமானத்தில் கூட்டமில்லை. என் மூன்று இருக்கை வரிசையில் இரண்டு இருக்கை காலி, எனவே பணிப்பெண்ணிடம் சொல்லிவிட்டு ஜன்னலோரம் அமர்ந்துகொண்டேன். விமானி சுஷீல் குமார், துணை விமானி பபிதா.
இறக்கைக்கு நேர் மேலே இருந்த இருக்கை என்னுடையது. எட்டி இறக்கையின் ஸ்க்ரூவெல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டேன். எனக்கு முன் வரிசையில் இளம்தம்பதி கைக்குழந்தையுடன் வந்து அமர்ந்தார்கள். அந்தப் பாப்பா கொள்ளை அழகு, குட்டி முகம், கண்கள் கழுவிய குருவிமுட்டை போல பளபளப்பாக.
அவ்வப்போது பாப்பா சிணுங்கியது. அப்படிச் சிணுங்குகையிலெல்லாம் அந்தப் பெண், “அச்சோ அத்தை வர்றா பாரு” என்று மிரட்டினாள். என்ன அநியாயம்? நாத்தனார் மீது அப்படி ஒரு விரோதம் போல.
விமானம் புறப்படுகையில் அந்தப் பெண் கணவன் தோள் மீது தலைசாய்த்துக்கொண்டாள்; நான் அவசரமாகக் கண்களை விலக்கிக்கொண்டு வெளியே வேடிக்கை பார்த்தேன். Physical intimacy-யின் இப்படியான சின்னச் சின்ன விஷயங்களுக்கு ஏக்கம் இருக்கும் லட்சக்கணக்கான பெண்களின் கணவர்களுக்கு அப்படி ஒன்று இருப்பதே தெரியாது. அந்தப்பாப்பா ஜன்னலோரம் எட்டி எட்டி வேடிக்கை பார்க்கையில் அதன் கருப்புவளையலிட்ட பிஞ்சுக்கைகள் தெரிந்தன.
சுஷீல் குமார் பாதிப் பயணத்தில் தேவையில்லாமல் விமானம் எத்தனை ஆயிரம் அடி உயரத்தில் பறக்கிறது என்பதையெல்லாம் சொல்லி, வயிற்றில் உப்பு, புளி, காரமெல்லாம் கரைத்துக்கொண்டிருந்தார்.
கொஞ்சம் முன்னதாகவே கோவை வந்து சேர்ந்தேன். பெட்டிக்குக் காத்திருக்கையில், தன் சூட்கேஸை எடுக்கக் காத்திருந்த ஓர் இளம்பெண், கொஞ்சம் முன்னால் நின்று,பெல்ட்டில் வந்த அவளது சூட்கேஸைக் எடுத்துக்கொண்ட அப்பாவிடம் கோபித்துக்கொண்டு, தரையை உதைத்துச் சிணுங்கிக்கொண்டே சென்றாள். அவர் வேண்டுமென்றே செய்திருக்கிறார் போல. சிரித்துக்கொண்டு அவளை தழுவிக்கொண்டார். இப்படி அப்பாக்களும் இருக்கும் உலகுதான் இது. பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.
காரில் ஏறுமுன்பு, கல்லூரியில் நான் விடுப்பு எடுக்கையில் இந்த வருடப் படிப்பை முடிக்கவிருக்கும் ஒரு மாணவி, தன் காதலனுடன் திருமணம் நடக்க வீட்டில் எதிர்க்கிறார்கள் என்றும், தன் மனம் மாற அக்கா வீட்டில் கொண்டு விட்டிருக்கிறார்கள் என்றும், தனக்கு விருப்பமில்லாத வேறு திருமணம் செய்ய முயற்சிக்கிறார்கள் என்றும் என்னிடம் அழுதுகொண்டிருந்தது திடீரென நினைவுக்கு வந்தது. “அவரை வந்து நேரே பார்த்துப் பேசச்சொல்லு தேவைன்னா நான் வந்து பேசறேன், கவலைப்படாதே” என்று தைரியம் சொல்லிவிட்டுத்தான் வந்திருந்தேன்.
கோவையில் வெயில் தொடங்கி இருந்தது. மதிய உணவை ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு ஊர் வந்து சேர்ந்தேன். 3 நாள்தான் என்றாலும் நீண்டதாக இருந்தது இந்த மும்பைப் பயணம்.
மறுநாள் கல்லூரியில் பணியில் சேர்ந்தேன். அந்தப் பெண் முதல் ஆளாகத் துள்ளிக் குதித்து என் அறைக்கு வந்தாள். “மேம், எங்க வீட்டுல சரின்னு சொல்லிட்டாங்க, 6-ம் தேதி நிச்சயதார்த்தம்” என்றாள். அவளின் கையைப் பிடித்து வாழ்த்துச் சொன்னேன். அவள் கையில் புதிதாக மஞ்சள் நிற நோன்புக்கயிறு கட்டியிருந்தாள்.
இரவு டிமார்ட்டுக்கு ஆட்டோவில் போய் இறங்கி கொஞ்சம் பொருட்கள் வாங்கினோம். ஹேண்ட் பேக்கை வரிசையில் நின்று டேக் போடுகையில், எனக்கு முன்னே இருந்த ஒரு பெண் தோளில் போட்டுக்கொண்டிருந்த , இரண்டு இட்லிகளை கன்னத்துக்குள் திணித்தது போல புட்டு புட்டென்று, ரசகுல்லாவே குழந்தையானது போலிருந்த பாப்பா என்னைப் பார்த்துச் சிரித்தது. நான் அதன் கையை மெல்லத் தொடப் போகையில், சரியாய் சரண் குறுக்கே வந்து என் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு “வேண்டாம் மீ ப்ளீஸ்” என்றான். அந்தப் பாப்பா மறுபடியும் என்னைப் பார்த்துச் சிரித்தது. சரணிடம் கொஞ்ச நேரத்திற்கு கோபித்துக் கொண்டேன்.
திருவிழாக்கூட்டம் போல இருந்தது. கடைக்குள் டிராலியைத் தள்ளிக்கொண்டு வந்த சரண், நான் கூட்டத்தில் தொலைந்து போய்விடுவேன் என்று பதட்டமாக இருந்தான். நான் பாட்டுக்கு ஒவ்வொரு பிரிவாக வேகமாகத் தாண்டித் தாண்டி, எனக்குத் தெரிந்த பாஷையில் விசாரித்து, எனக்கு வேண்டியதைத் தேடி எடுத்துக்கொண்டிருந்தேன். சரண் என்னை விமானம் ஏற்றும் நேரத்திற்காக குலசாமியிடம் எல்லாம் வேண்டிக் கொண்டிருந்தான்.
வாங்கிய பொருட்களுடன் மீண்டும் ஆட்டோ பிடித்து, ஒரு பெரிய சைவக் கடையான ஜைன உணவகத்திற்குப் போனோம். அங்கே வாசலில் ஏராளமாக நாற்காலிகள் போட்டு, பார்சல் வாங்கக் காத்திருந்தார்கள். உள்ளேயும் கூட்டம். நாங்கள் எதிரெதிரே அமர்ந்து வேண்டியதை ஆர்டர் செய்தோம். கடைசியில் தயிர் சாதமும் ஆம் ரஸும் கேட்டேன். தயிர் அப்படி ஒரு புளிப்பு! ஊறுகாய் மகா கேவலமாக இருந்தது. ஆம் ரஸ் அதற்கும் மேல் புளிக்கவே முடியாது என்பது போல இருந்தது. நம்மூரில் கூட ஆம் ரஸ் அருமையாகக் கொடுப்பார்களே!
ஒரு வழியாகச் சாப்பிட்டு முடித்து வீட்டுக்கு வரும் வழியெல்லாம், எல்லா அடுக்குமாடி வீட்டு வாசலிலும் நாம் போகிக்குச் செய்வது போலக் கட்டைகளைக் கூம்பாக நிறுத்தித் கட்டிக்கொண்டிருந்தார்கள்; ஏதோ ஒரு சடங்கு போல. “என்ன இது?” என்றேன். “நாளைக்கு ஹோலின்னா, முந்தின நாள் ராத்திரி இப்படி ஹோலிகா தகன் செய்வாங்க” என்றான். “அப்படின்னா போய்ப் பார்க்கலாண்டா” என்றேன்.
எனவே, டாக்ஸியை அவன் அடுக்கத்துக்குச் சற்று முன்பாகவே நிறுத்திவிட்டு இறங்கி நடந்தோம். ஒரு சில தனி வீடுகளில் உள்ளேயே நெருப்பு எரிந்தது. சரண் தங்கியிருக்கும் அடுக்ககத்தின் வாசலில் பெருங்கூட்டம். எல்லா வீட்டினரும் அங்கே இருந்தார்கள். நல்ல ஜொலிக்கும் உடைகளில் பெண்கள்; எல்லாப் பெண்கள் கையிலும் தாம்பாளம், இனிப்பு, அகல்விளக்கு, மலர்சரங்கள் மற்றும் தேங்காய் இருந்தன.
நானும் சரணும் எதிரே நின்று வேடிக்கை பார்த்தோம். ஒரு ஒல்லி இளைஞன் என்னிடம் “நமஸ்தே ஜி” என வணங்கிவிட்டு, சரணிடம் என்னவோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான். அவன்தான் அந்தச் அடுக்கத்தின் மேற்பார்வையாளராம். பல கட்டைகள், அட்டைகள், மரப்பலகைகள் எல்லாவற்றையும் சேர்த்து கயிற்றால் கட்டி, தெருவில் ஒரு ஓரத்தில் நிறுத்தி, அது உறுதியாக இருக்கிறதா என்று ஆண்கள் சோதித்துக்கொண்டிருந்தார்கள்.
ஒரு சில இளைஞர்கள் ஓரக்கண்ணால் சுடிதார் அழகிகளைப் பார்த்துக்கொண்டு அவர்களுக்குள் சிரித்துக்கொண்டிருந்தார்கள். சின்னப் பிள்ளைகள் ஊடே ஓடிக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு என்னவோ ‘7G ரெயின்போ காலனி’க்குள்ளே இருப்பது போலத் தோன்றியது.
வனஸ்பதி பாக்கெட்டுகளைக் கொண்டு வந்து ஒருவர் கட்டைகளுக்குள்ளே கொட்டினார். பெண்கள் கட்டைகளுக்கு மலர்சரம் அணிவித்து, ஆரஞ்சு நிறக் குங்குமம் இட்டார்கள். சில மாமியார்கள் இளம் மருமகள்களிடம் நாரியல் எங்கே காணோம் பூரண் போளி எடுது வச்சியா என்றெல்லாம் கோபித்தார்கள். பின்னர் எல்லாரும் கூடி அந்தப் பெரிய கட்டைக் குவியலுக்கு நெருப்பு வைத்து, கைதட்டி ஆரத்தி காட்டி ஆரவாரம் செய்து இனிப்பு வழங்கினார்கள்.
ஒரு பெரியவர் அந்த எரியும் நெருப்பிற்கு முன்பாக நின்று மராத்தியில் உரையாற்றினார். எல்லோரும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். “என்னடா சொல்றாரு?” என்றேன். ஹோலிகா தகனம் பத்திச்சொல்லறாரு”
’’..எனக்குப் புரியலையே..’’
வா, நான் உள்ளே வந்து சொல்றேன்” என்றான்.
அப்படி ஒரு மூத்தவர் சடங்குகள் நிகழுகையில், இளையோருக்கு அந்தச் சடங்கைப் பற்றிச் சொல்வது மிக முக்கியமாக எனக்குப் பட்டது. நாம் அப்படி ஏதும் செய்வதில்லை. நமக்கே பல சடங்குகள் என்னவென்று தெரியாது. அதிகபட்சமாக, “அதை எடுக்காதே, சாமி கண்ணைக் குத்தும்” என்று மட்டும்தான் சொல்கிறோம். கொஞ்சம் வெட்கமாக இருந்தது. எல்லா கலாசாரச் சடங்குகளிலும் இப்படி அதன் பொருள் என்ன என்று மூத்தவர்கள் இளையோருக்குச் சொன்னால்தானே அது தலைமுறைகளாகத் தொடரும்?
உள்ளே சென்றோம். லிஃப்ட்டுக்காகக் காத்திருக்கும் இடத்திற்கு அருகில், கண்ணாடிக் சுவர்களாலான ஒரு அறை இருக்கிறது. அங்கே அமர்வதற்கு வெளுத்துப் போன சிவப்பு நிறத்தில் சோஃபாக்கள் போடப்பட்டிருக்கும். அங்கே அமர்ந்தோம். வெளியே மதிலுக்கு மேலே நெருப்பு கொழுந்துவிட்டு எரிவது இங்கிருந்தே தெரிந்தது.
“சொல்லுடா” என்றேன்.
’’பிரகலாதனை தெரியுமில்ல…’’
‘’ ஆமா’’
’’…அவனை அவங்க அப்பா ஹிரண்யகசிபு, தன்னை மட்டும்தான் வழிபடணும்னு சொல்லிட்டே இருந்தாரு. ஆனா அவன் நாராயணனை மட்டும்தான் வணங்கினான். எனவே அவனை கொல்ல பல முயற்சி செய்தார் ஹிரண்யகசிபு, ஆனா அவனை கொல்ல முடியலை. ஹிரண்யகசிபுவின் தங்கை ஹோலிகா. அவளுக்கு நெருப்பில் மரணம் சம்பவிக்காதுனு ஒரு வரம் இருக்கு. அதனால் வாடி தங்கம் அத்தை மடியில் உட்கார்ந்துக்கோனு சொல்லி பிரகலாதனை உட்கார வச்சுட்டுச் சுற்றிக் கட்டைகளை அடுக்கி நெருப்பு வச்சாங்க. அப்போ பிரகலாதன் கை கூப்பி “ஓம் நமோ பகவதே வாசுதேவாய” னு திரும்பத் திரும்பச் சொல்லிட்டே இருந்தான். அந்த நெருப்பு நாராயண நெருப்பா மாறி ஹோலிகாவைச் சுட்டுக் கொன்னுடுச்சு. பிரகலாதன் ஒண்ணுமே ஆகாம வெளியே வந்தான். இதை ஹோலிக்கு முந்தின நாள் கொண்டாடுறாங்க…’’ என்றான்.
’’…இன்னொரு வெர்ஷனில் ஹோலிகாகிட ஒரு ஷால் இருந்தது அது நெருப்பில் எரியாது அதை போர்த்திகிட்டு பிரகலாதனை மடியில் வச்சுகிட்டா ஆனா பிரகலாதன் அந்த மந்திரம் சொன்னதும் ஷால் பிரகலாதனமேல விழுந்து அவனை மூடிருச்சு ஹோலிகா எரிஞ்சுபோயிட்டா…’’
“இதெல்லாம் எப்படிடா உனக்குத் தெரிஞ்சுது?”
’’..இரு வர்றேன்… ஹோலிக்கு ஏன் கலர் பூசிக்கிறாங்கன்னு சொல்லேன்..’’
எனக்கு தெரியவில்லை. உண்மையிலேயே வெட்கம் அதிகமானது. என்னது ஒண்ணுமே தெரியாம இருக்கோமே என்று! ஹோலியைத் தான் வருஷக்கணக்கா கொண்டாடுறாங்க. ஆனா ஏன், என்னனு ஒரு நாளும் நினைச்சுப் பார்த்ததே இல்லையே!
’’….ஏன்னா கிருஷ்ணர் ஒருநாள் தான் ரொம்ப கருப்பா இருக்கோம்னு வருத்தப்பட்டாராம். ராதா அதுக்கு அவர் மேல பல வண்ணங்களைத் தூவி வண்ணமயமா ஆக்கினாளாம். கிருஷ்ணரும் அங்கிருந்த ராதைக்கும் கோபிகைகளுக்கும் பூசி எல்லாருமா விளையாடினாங்களாம். அதுதான் ஹோலி பண்டிகை.
’’…நிற பாகுபாடு இல்லாம எல்லோரும் ஒரே நிறம்னு சொல்லறதும் ஹோலியின் ஒரு அர்த்தம் மீ..’’
“முன்னடியெல்லாம் குளிர்காலம் முடிஞ்சு கோடைக்காலம் துவங்கும்போது ஹோலி கொண்டாடுவாங்க. பருவங்கள் மாறும்போது உடலில் உண்டாகும் மாற்றங்களைத் தணிக்க, கோடையில் ரத்தம் போல் மலரும் பலாச மலர்களின் சாற்றையும், மஞ்சள் மற்றும் வேம்பு அரைத்த சாற்றையும் உடலில் பூசி அறுவடையைக் கொண்டாடுவார்கள். அது அப்படியே மருவி இப்படி ஆயிருச்சு” என்றான்.
வழக்கமாகவே சரண் மீது, அவன் அறிதலின் மீது எனக்குப் பெரும் மரியாதை இருக்கும். இப்போது பெரும் பிரமிப்பு இருந்தது. எங்கே இவன் இதையெல்லாம் தெரிந்துகொள்கிறான்? எனக்கு வெட்கமாக இருந்தது, எனக்கு இதெல்லாம் ஒன்றுமே தெரியவில்லை என்று. பேசிக்கொண்டிருக்கையிலேயே தருண் கல்லூரியில் அன்றே ஹோலி கொண்டாடிய புகைப்படங்களை அனுப்பியிருந்தான்.
சரண் என் கண்களைப் பார்த்து ’’..மீ என்ன சொன்னான் பிரகலாதன் தீக்குள்ள உட்கார்ந்துட்டு” என்றான். நான் திகைத்து, திக்கித்திணறி ” வந்து ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்று எப்படியோ சொல்லிவிட்டேன்.
எனக்கு என்ன தெரியும் என்று என்னைச்சுற்றியிருக்கும் சிலருக்குத் தெரியும் ஆனால் எனக்கு என்ன தெரியாது என்று சரண் தருணுக்குத் தான் தெரியும்
சரண் மீண்டும் என் கண்களை உற்றுப் பார்த்து, “..வாசுதேவாய அப்படின்னா?” என்றான். “கிருஷ்ணர்டா, வசுதேவரின் மகன் வாசுதேவன்” என்றேன் பெருமையாக.
“இந்த நரசிம்ம அவதாரம் நடக்கிறப்போ வசுதேவரே இல்லை. பிறக்கலை அப்புறம் எப்படி வாசுதேவனும் கிருஷ்ணரும் வந்திருப்பாங்க? அவதார வரிசை தெரியும் இல்லையா உனக்கு? நரசிம்ம அவதாரத்துக்கு அப்புறம்தானே ராம, கிருஷ்ண அவதாரமெல்லாம்?” என்றான். அப்படியே திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தேன்.
சரணின் முகத்தின் பின்னால் வெளியே எரியும் நெருப்பின் செந்நிறம் பூசியது போல ஒளிர்ந்தது. குருவின் முன்பாக அமர்ந்து பாடம் கேட்பது போல அமர்ந்திருந்தேன்.’’..என்னடா எனக்கு ஒன்னுமே தெரியலையே..’’
சிரித்து என் தோளைத் தழுவிக்கொண்டு, “சரி பரவாயில்லை, வா நாம் மேலே போய் மீதியப் பேசலாம். வசுதேவரின் மகன் வாசுதேவரைப் பிரகலாதன் அன்னைக்குக் கும்பிடலை. ‘வாசுதேவன்’னு அவன் அப்போ சொன்னது… ‘வசு’ன்னா வாழ்க்கை, ‘தேவா’ன்னா இறை. எங்கும் எல்லா உயிரிலும் நிறைந்திருப்பவனே வாசுதேவன் என்று வணங்கினான். சரியா? வா போய் வசு, வாசு மாதிரி என்னென்ன இருக்குன்னு பேசலாம்” என்றான். ஒரு மாதிரி மந்திரித்து விட்டது போல் மேலே போனேன்.
’’…அப்பாவோட பெயரில் முதல் எழுத்தைக் கொஞ்சமா மாத்தி மகன்பேரச் சொல்லற வழக்கத்தில்தான் நீ நினைச்ச வசுதேவரின் மகன் வாசுதேவன்கிறது,
ராமரோட காயத்ரியில சொல்றதைப்போல தசரதனின் மகனான தாசரதின்னு அந்த காயத்ரி தொடங்கும்” என்றான். பலர் தசரத ராமனு சொல்றாங்க, அப்படி இல்லை அது தப்பு. அவன் தாசரதி… தாசரத ராமன்” என்றான்…’’
கண்கள் கனிய’’… மீ ரொம்ப இல்லன்னாலும் அடிப்படையாவாவது சிலது நீ தெரிஞ்சுக்கணும். காயத்ரிங்கிறது அப்படி ஒரு குறிப்பிட்ட தெய்வத்துக்கான வழிபாட்டு மந்திரம் இல்லை. காயத்ரிங்கிறது ஒரு பொயடிக் மீட்டர் , மூணு 8 – 24 அக்ஷரங்களில் அமைந்த ஒரு பாட்டு, அல்லது கவிதை மாதிரி. அது எந்த சாமிக்கும் போட்டுக்கலாம். திருக்குறள் எப்படி எல்லா விஷயங்களையும் இரண்டு அடியில் சொல்லுதோ, அப்படி எந்தக் கடவுளுக்கு காயத்ரி சொல்லுறோமோ, அந்தக்கடவுளின் வீரத்தையோ, தோற்றத்தையோ, அவருக்குப் பிடிச்சமானவங்களையோ அல்லது அவர் யாருக்கு உறவோ, யார் அவர் கணவனோ அப்படிச் சொல்லிக்கலாம்.”
தசரதனின் மகனே… வித்மஹேன்னா அறிதல். உன்னை அறிகின்றோம். சீதா வல்லபாயன்னா சீதாவின் கணவனே… தீமஹின்னா தியானிக்கிறது. தன்னோ ராம… அந்த ராமச்சந்திர மூர்த்தி… ப்ரசோதயாத்… நமக்கு ஒளி அளிக்கட்டும் இல்லைன்னா நல்வழிகாட்டட்டும் இல்லைன்னா அறிவைத் தூண்டட்டும்னு அர்த்தம்” என்றான்.
அவன் ஸ்பஷ்டமாக அந்த மந்திரங்களைச் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. மானசீகமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்திடன் ’’ இதெல்லாம் எங்களுக்கு புரியாது ,நாங்க சொல்லகூடாது, சொல்ல முடியாதுன்னுதான, நீங்க மேல நாங்க கீழேன்னு சொல்லிட்டு இருக்கீங்க இதோ சொல்லறானே என் மகன்’’ என்று கேட்டேன்.
“ஆனா 24 அக்ஷரம்னு சொன்னியே, இதில் எழுத்து அதிகமா இருக்கே?” என்றேன்.
“இல்ல, அது ஒரு கணக்கு. அந்தச் சந்தத்தில் புள்ளி வச்ச எழுத்துகளைக் கணக்கில் எடுத்துக்கறதில்லை. அத்தனை தூரம் போன உனக்குத் தாங்காது விட்ரு” என்று புன்னகைத்தான்.
“இப்படி அப்பா பேரின் முதல் எழுத்தை மாத்தி, அம்மா பேரின் முதல் எழுத்தை மாத்தின்னு பேர் இருக்கு.
வேணும்னா வெண்முரசின் ரசிகையே இதைக் கேளு.
திருதராஷ்டிரனின் மகன்கள்தான் ‘தார்த்தராஷ்டிரர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். சமஸ்கிருத இலக்கணப்படி, ஒரு தந்தையின் பெயரிலிருந்து மகனின் பெயரைக் குறிக்கும்போது அந்தப் பெயரில் சின்ன மாற்றம் இருக்கும். திருதராஷ்டிர என்ற பேரிலிருந்து உருவான ‘தார்த்தராஷ்ட்ர’ என்ற சொல்லுக்கு ‘திருதராஷ்டிரனின் வாரிசு’ ன்னு அர்த்தம்.
கர்ணனுக்கு அவனது வளர்ப்பு அம்மா ராதையின் மகன் என்னும் அர்த்தத்தில் ராதேயன் என்று பெயர் இருக்கு.”
“இப்போ சொல்லு மீ ஆஞ்சநேயர் யாரு?”
நான் உற்சாகமாக, “அஞ்சனையின் மகன்” என்று ஏறக்குறைய கத்தினேன்.
“அவ்வளவுதான்! அஞ்சனையின் மகன் ஆஞ்சநேயன். கங்கையின் மகன் காங்கேயன் குந்தியின் மகன் கௌந்தேயன் அர்ஜுனனுக்கு அப்படி ஒரு பேர் இருக்கு, ஏன்னா அப்பா யாருன்னு தெரியாதே அதனால அம்மா குந்தி பேரு. அம்மா பேருக்கு முன்னாடி ஒரு ‘ஆ’ சேர்த்துக்கிட்டாலும் மகன்தான். பிருதையின் மகன் பார்த்தன்.”
வாய் பிளந்து என்பார்களே, அப்படி கேட்டுக்கொண்டிருந்தேன். “இதெல்லாம் எப்படிடா படிச்சே?
காயத்ரி படிச்சா ரொம்ப நல்லாருக்கும்மா? கேளேன்.”
“கிருஷ்ணருக்கு ‘ஓம் தாமோதராய வித்மஹே ருக்மிணி வல்லபாய தீமஹி’ன்னு வரும். தாம்புக் கயிறால் கட்டப்பட்டவன்னு அவர் லீலையைச் சொல்லி, ருக்மிணியின் கணவன்னு சொல்லுது இது.
முறைக்க வந்தவன் வெடித்துச் சிரித்து, “நீ வேற… மீ, இங்க பாரு. ராதா கிருஷ்ண பிரேமம்ங்கிறது ஒரு பரகீய ரசம். அதாவது ஆன்மா பரமாத்மாவோட கொண்டிருக்கும் காதல். நீ உலகியல் காதலோடு அதை கம்பேர் பண்ணக்கூடாது” என்று சிரித்தான்.
ஏண்டா இங்கே ஜனகனின் மகள் ஜானகினு தானே வரணும்? ஏன் ஜனகநந்தினினு வருது?”
“இதுல ‘ஜா’ போட்டா மீட்டர் உதைக்கும்னு நினைக்கிறேன். அதனால் ஜனகனின் மகளேன்னு சொல்லாம, ஜனகனுக்கு மகிழ்ச்சி அளிப்பவளே, ராமனுக்குப் பிரியமானவளேங்கிறாங்க.”
உனக்கு எல்லாமே மனப்பாடமா தெரியுமா சரணா? ’
’…மனப்பாடமெல்லம் இல்லை மனப்பாடமே பண்ணக்கூடாது,என்றவன் நெற்றியைத்தொட்டுக்காட்டி புரிஞ்சுகிட்டதெல்லாம் இங்கே இருக்கு, எல்லாம் தெரியாது ஆனா கொஞ்சம் தெரியும்..’’
” சரிடா கணபதிக்கு?”
“தத்புருஷாய வக்ரதுண்டாயன்னு வரும்.’’
இரு இரு… நானே சொல்லறேன். வக்ரதுண்டாயன்னா உடைஞ்ச கொம்புன்னு தானே அர்த்தம்?
மறுபடி ஒரு கனிந்த புன்னகையுடன் ‘’..இல்லை மீ, வக்ரதுண்டாயன்னா வளைஞ்ச தும்பிக்கை கொண்டவனே!
சே! வெட்கம் வேதனை அவமானம்!
தொடர் தோல்வியில் நான் புண்பட்டுவிடக்கூடது என்பதற்காக உடனே “இரு மீ… உன் ஏரியாவுக்கே வரேன். மரத்துக்குக் கூட விருக்ஷ காயத்ரி இருக்கு” என்று போனில் எடுத்து காண்பித்தான்.
காடுகளின் அரசனான இறைசக்தியை அறிவோமாக. பிரம்மாண்டமான விருட்சமாக இருப்பவரை நாம் தியானிப்போமாக. அந்த மரம் போன்ற உறுதியான சக்தி, நம்மை நல்வழிப்படுத்தட்டும்.
திகைப்பும் பெருமிதமுமாக ஆக இருந்தேன். சரண் சமஸ்கிருதக் கட்டுரைகளை ஆங்கிலமாக்கி இருக்கிறான் முன்பே. அவன் வாசிப்பின் தீவிரம் என்னால் எட்ட முடியாதது அல்ல, கற்பனை கூட செய்ய முடியாதது. இருந்தும் இன்று பெரிய திகைப்பும், ஒரு தத்புருஷன் முன்னால் அமர்ந்துகொண்டிருக்கிறோம் என்னும் உணர்வையும் அளித்தது.
இவனது மேதாவித்தனத்திற்கு இணையாக ஒரு பெண் கிடைக்கணும். அல்லது இவன் மேதாவித்தனத்தைப் புரிந்துகொண்டு இவன் சொல்வதைக் கேட்டுக்கொள்ளும் பக்குவம் உள்ளவளாகவாவது இருக்கணும்.
“நாளைக்கு நேரமே ஏர்போர்ட் போகணும், போய் தூங்குவோம்” என்றான்.
காலை உணவைச் சரணுக்குச் சமைத்துக்கொடுத்து, மதிய உணவையும் அழகிய சிறு கண்ணாடித் கிண்ணங்களில் அடைத்துக் கொடுத்து அனுப்பினேன். பொறுமையாகக் குளித்து, எனக்குப் பிடித்த இலைப்பச்சை நிறப் புடவையை கட்டிக்கொண்டேன். வீட்டில் நிறைய மலர்ந்திருந்த ராமபாண மல்லிகைப் பூக்களைத் தொடுத்துக் கொண்டுவந்து, பிரிட்ஜில் வைத்திருந்தேன். எடுத்துத் தலையில் வைத்துக்கொண்டேன். ஒன்றிரண்டு வேலைகளை முடித்துவிட்டு, பால்கனி வழியே கிரிக்கெட் விளையாடுபவர்களின் உற்சாகக் கூச்சல்களை ரசித்துக் கொண்டிருந்தேன்.
என்னைச் சந்திக்க வருபவர் நண்பரா என்றால் இல்லை. தெரிந்தவரா என்றால், அதுவும் இல்லை; இதுவரை நான்கு முறைதான் சந்தித்திருக்கிறேன். வேண்டியவரா என்றால், இல்லவே இல்லை .வெறும் ஒருவர் வருகிறார்.
தில்லியில் 1997 பிப்ரவரி 13-ம் தேதி விடைபெற்றுக்கொண்ட பிறகு, அவரை இன்று சந்திக்கவிருக்கிறேன். எனக்கு எதுவானாலும் சரியான closure வேண்டும். அதற்காகத்தான் இந்தச் சந்திப்பை ஒத்துக்கொண்டேன். நெஞ்சில் உறுத்திக்கொண்டிருக்கும் அந்தப்பூ முள்ளை எடுக்க வேண்டும்.
முகவரி அல்லது கூகுள் லொகேஷன் அனுப்பும்படி செய்தி வந்தது
அனுப்பினேன் 10.15க்கு வருவதாக தகவல். 10.20க்கு வாசலில் இருந்த செக்யூரிட்டி இண்டர்காமில் அழைத்து எனக்கு விருந்தினர் வந்திருப்பதாகத் தெரிவித்தார்கள், அனுமதிக்கும்படி சொன்னேன். சரணுக்கும் தகவல் போயிருக்கிறது, அவனும் அனுமதிக்கும்படி சொல்லியிருக்கிறான்.
வந்தவர் வேறு மாதிரியான எதிர்பார்ப்புகளோடு, உணர்வுபூர்வமான ஒரு சந்திப்பை அல்லது கண்ணீரால் மிதக்கும் ஒரு சந்திப்பைக் கற்பனை செய்துகொண்டிருந்திருக்கலாம்.
மராத்தியிலும் “…கோப்பால் கோப்பால், ஏன் இப்படி செய்தீர்கள் கோப்பால்? எப்படி உங்களுக்கு மனசு வந்தது…” போன்ற கண்ணீர்க் காட்சிகள் கொண்ட படங்கள் இருக்குமாயிருக்கும். நான் கதவைத் திறந்து வைத்திருக்கவில்லை; அவர் வந்து அழைப்பு மணியை அழுத்தவும் திறந்தேன். மிக இயல்பாக “ஹலோ வாங்க” என்று சொல்லி, மருதாணியிட்டுச் சிவந்திருந்த கைகளை நீட்டிக் கைகுலுக்கினேன். இரண்டு கைகளிலும், கூடுதலாக பாதங்களிலும் மருதாணி வைத்துக்கொண்டிருந்தேன். அவர் கொஞ்சம் ஸ்தம்பித்துப் போன மாதிரிதான் இருந்தது; இத்தனை மகிழ்ச்சியான ஒருத்தியை அவர் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்தானே!
கதவைச் சாத்தும்போது கவனித்தேன், அவர் போட்டிருந்தது புத்தம் புதிய செருப்புகள். ‘இம்ப்ரெஸ்’ பண்ணுவதற்காக இருக்கலாம்.
உள்ளே வந்ததும் “என்னம்மா அப்படியே இருக்காய், ஒரு சேஞ்சுமே இல்லாம” என்று ஒரு மகா பொய் சொன்னார். நான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் “அப்படியா?” என்று புன்னகைத்தேன். தண்ணீர் பாட்டில் கொண்டு வந்து கொடுத்தேன். “காபி சாப்பிடுறீங்களா?” என்றேன். “காத்தாலதான் சாப்பிட்டேன், வேண்டாம்” என்றார். ஒரு “நல்ல காபி போட்டுத் தர்றேன், சாப்பிடுங்க” என்று ஒரு காபி போட்டுக் கொடுத்தேன்.சொன்னதில் இருந்த சின்னப்பகடியை கவனித்தமாதிரி தெரியவில்லை
“எங்க ஆத்துக்கு உன்னைக் கூட்டிண்டு போகணும்னு நினைக்கிறேன், நீ என்ன சொல்றாய்?” என்று கேட்டார். “எனக்கு உங்க வீட்டுக்கு வர்றதுக்கு இஷ்டமில்லை, வெளியே எங்காவது பொது இடத்தில் உட்கார்ந்து பேசலாம்” என்றேன். “சரி, ஒரு பெரிய நல்ல மால் இருக்கு, அங்கே கூட்டிண்டு போறேன். மும்பையைச் சுத்திக் காமிக்கிறேன் நோக்கு” என்றார். “சரி போலாம்” என்று எழுந்தேன்.
வீட்டைப் பூட்டி லிஃப்டில் இறங்கி வாசலுக்கு வரும்வரைக்கும் நான் ஏதோ உணர்வுபூர்வமாகச் சொல்லப்போகிறேன் என்று அந்த முகத்தில் எதிர்பார்ப்பு இருந்தது. நான் மிக இயல்பாக இருந்தேன். உண்மையிலேயே மனம் துடைத்துச் சுத்தம் செய்தது போல நிச்சலனமாக இருந்தது; திரும்பி வரமுடியாத தொலைவிற்கு வந்துவிட்டேனல்லவா.
ஒரு நீல பஸ் கடந்துசென்றது. “இதோ இந்த பஸ்ஸில் போனா நன்னாச் சுத்திக் காமிப்பான். ஏசி பஸ், நன்னாயிருக்கும், கூட்டமும் இருக்காது.” “வேண்டாம், நான் பஸ்ஸில் வரவில்லை, டாக்ஸியில் போலாம்.” “இல்லைம்மா, உங்க ஊர் பஸ் போல இல்லை, இது நல்ல பஸ்ஸாக்கும்.”
“இல்லை வேண்டாம், டாக்ஸின்னாதான் ஓகே.” “சரி வா, உன் இஷ்டம்.”
ஒரு டாக்ஸி பிடித்து என்னவோ மராத்தியிலோ அல்லது இந்தியிலோ பேசி எங்கோ போகச் சொன்னார். நான் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
“நோக்கு மும்பை பிடிச்சிருக்கா?”
“இல்லை, சுத்தமா பிடிக்கல.”
“ஏன்ம்மா?”
“தூசி, சத்தம், கூட்டம், பாஷை புரியலன்னு நிறைய காரணம் இருக்கு.”
“நல்ல பிளேஸ்மா, நீ இருந்தேன்னா பிடிச்சுடும்.”
“நான் தான் இங்க இருக்கப் போறதில்லையே. அப்புறம் எதுக்கு எனக்குப் பிடிக்கணும்? நான் என் ஊரில் சந்தோஷமா இருக்கேன், அதுவே போதும்.”
பேச்சை மாற்ற “பாஷை என்னம்மா பாஷை? இங்கே எல்லாருமே இங்கிலீஷும் பேசுவா.” என்று சொல்லிய கையோடு டாக்ஸி ஓட்டுநரிடம் “பையா ஆப்கோ…” என்று துவங்கி, “இங்கிலீஷ் தெரியும் தானே? இந்த மேடம் பேசினா புரியும் தானே?” என்று கேட்டார். அதற்கு ஓட்டுநர், “நஹி சாப், எனக்கு அட்சரம் கூடத் தெரியாது. சில கஸ்டமர் இப்படி வந்து என்னைச் சோதிக்கிறார்கள்” என்றார். நான் சிரிப்பை அடக்கச் சிரமப்பட்டேன்..
மால் வந்துவிட்டது. முந்தின நாள் நானும் சரணும் போய் ‘ஹல்திராம்’ஸில் பூரி சாப்பிட்ட அதே மால். டாக்ஸிக்குப் பணம் கொடுத்துவிட்டுத் திரும்பி, “இந்த மால்…” என்று அவர் தொடங்குவதற்குள், “இதுக்குத்தான் நான் நேத்து வந்து ரொம்ப நேரம் இருந்தேனே” என்றேன்.
“என்னம்மா சொல்றாய்? ஏன் முன்னாடியே சொல்லலை? வேற எங்கேயாவது கூட்டிப் போயிருப்பேனே!”
“எனக்கெப்படி இந்த இடத்துக்கு நீங்க கூட்டிட்டு வரப்போறீங்கன்னு தெரியும்?”
முகம் சுண்டிப்போய், “சரி வாம்மா” என்று உள்ளே கூட்டிப்போனார். வேலைநாள் என்பதால் அத்தனை கூட்டமில்லை. மஞ்சளாக நாற்காலிகள் ஏராளம் போட்டிருந்த உணவுக் கூடத்தில் (Food Court) ஒரு மேசையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தோம்.
“என்ன சாப்பிடறே?”
“எதுவானாலும்.”
“இங்க ஊர் பண்டம் ஒன்னு வாங்கித் தர்றேன், நோக்கு பிடிக்கும்.”
“சரி.”
“போய், என்னவோ ஆர்டர் கொடுத்து விட்டு வந்து. ’’அவா டோக்கன் சொல்லி கூப்பிடுவா, அப்போ போய் வாங்கணும்” என்றார்.
எனக்கு இப்படியான மால்களுக்குச் சென்று பழக்கமிருக்காது என அவர் நினைப்பது அப்போதுதான் புரிந்தது. “ஓ அப்படியா!” எனக்கேட்டு வைத்தேன்.
பிறகு ’97-ல் 47 லட்சத்துக்கு தான் வாங்கிய புனே வீட்டு மதிப்பு, இப்போது கோடிக்கணக்கில் உயர்ந்திருப்பதைச் சொன்னார். அவரது ‘டிசாஸ்டர் மேனேஜ்மெண்ட்’ பயிற்சிகளின் எண்ணிக்கை நாலாயிரத்தைத் தாண்டியதை, அந்தப் பயிற்சி குறித்த சிலரின் புகழுரைகளை போனில் காட்டிக் கூறினார்.
“அப்படியா! எங்கே… காட்டுங்க, பிரமாதமாச் சொல்லியிருக்காங்களே!” என்று சிலாகித்தேன்.
மனிதன் தான் எத்தனை எளிய உயிர்!
“அதற்குள் அந்த கொத்தம்பரி வடா எனப்பட்ட ‘கொத்தமல்லி வடை’ என்கிற கடலைமாவில் சோம்பு, உப்பு, நறுக்கிய மல்லி இலைகள் போட்டு, கட்டம் கட்டமாக வெட்டி எண்ணெயில் பொரித்தெடுத்த வடை வந்தது. சுமாராக இருந்தது. எனக்கு சாஸ் தொட்டுச் சாப்பிடப் பிடிக்காது என்பதால் ஒன்றை மட்டுமே எடுத்துக்கொண்டேன். அதன் அருமை பெருமைகளைச் சொல்லிக்கொண்டே வந்தார்.
பின்னர் மெதுவாகப் பேச்சு அவரது ராணுவக் காலத்திற்கு வந்தது. நான் அதற்குக் காத்துக்கொண்டிருந்தேன். கார்கிலில் என்ன நடந்தது, தான் அமிர்தசரஸ் போனது, அங்கே எப்படி மிகக் கடுமையான நாட்கள் என்றெல்லாம் அந்தப் பேச்சுப் போனது.
“நான் அமிர்தசரஸில் இருந்தேன், தெரியுமோல்லியோ?”
“தெரியும் சரண் பிறந்து 1வருஷம் ஆனப்போ’’,
’’ரொம்ப ரொம்பக் கஷ்டம் அங்கே வேலை செய்யறது’’
’’அப்படியா?’’
இப்போது சரண், தருண், சாம்பவி யார் உடன் இருந்திருந்தாலும் நான் ஃபார்முக்கு வந்துவிடேன் இனி அங்கே இருப்பது ஆபத்து எனப் புரிந்துகொண்டிருப்பார்கள்.ஒரே ஓட்டமாக ஓடிப்போயிருப்பார்கள்
’’பின்னே பொற்கோவில் பாதுகாப்புன்னா சும்மாவா? எப்போ வேணும்னாலும் என்ன வேணும்னாலும் நடக்கும். அங்கே சும்மா ஏப்பைசாப்பையான ஆளெல்லாம் போட மாட்டாங்க, திறமையானவங்க மட்டும்தான் அங்கே போக முடியும்.”
“நம்பின பெண்ணுக்கு ஒரு பதிலைச் சொல்ல முடியாமல் ஓடி ஒளிஞ்சுக்கிறவங்களுக்கும் அங்கே இடம் இருக்கு இல்லையா? சொந்த வாழ்க்கையைத் திட்டமிட முடியாமல், குடும்பமாக மூன்று சிட்டிங் உட்கார்ந்து பேசினப்புறம், அந்தப் பெண்ணுக்கு ஒரு முறையான பதிலோ அல்லது விடைபெறுதலோ கூடக் கொடுக்காமல் ஓடிப் போயிட்டு, எப்படி உங்களால் இதெல்லாம் பெருமையாகப் பேச முடியுது?” என்றேன், நேரடியாகக் கண்களைப் பார்த்துக் கொண்டு, குரலைச் சற்றும் உயர்த்தாமல்.
அப்படியே ஷாக் ஆயிட்டார்னு வடிவேலு சொல்லுவாரே, அதுதான் நடந்தது.
“என்னம்மா நீ இப்படி அரோகண்ட்டாஆயிட்டாய்? எனக்கென்ன தெரியும்? அந்த வயசில் பெரியவங்க எல்லாம் என்ன சொன்னாங்களோ அதைக் கேட்கணும்னுதான் நினைச்சேன். நீ ஏன்மா இப்படி ஹார்ஷாப் பேசறாய்?”
“பெரியவங்க என்ன சொன்னாலும் செய்யறவர், இந்த விஷயத்துக்கு வந்திருக்கக் கூடாதல்லவா?”
“அப்போ சின்ன வயசு, மெச்சூரிட்டி இல்லைம்மா. அதுக்கு என்ன பண்ணச் சொல்றாய்?”
வெண் முரசில் பெண்ணின் கண்ணீருக்கு ஏழு தலைமுறை பதில் சொல்லவேண்டி இருக்கும் என்று இருப்பதை சொல்லலாமா என்று யோசித்தேன். இவருக்கு வெண்முரசெல்லாம் மகா ஒவர் டோஸாகிவிடும். வீணாக கொலைப்பழிக்கு ஆளாவானேன் என்று அந்த யோசனையை கைவிட்டேன்.
“இல்லை, நான் மூணு தரம் உங்காத்துக்கு போன் பண்ணினேனாக்கும். உங்க அக்கா எடுத்து இனிமே போன் பண்ணப்படாதுன்னுட்டா.”
அத்தனை சீரியஸான உரையாடலில் எனக்கு ‘மைக்கேல் மதன காமராஜன்’ நினைவு வந்தது. “திருப்பு திருப்புன்னு சொல்லி நான் ஸ்கூட்டரைத் திருப்பி, இதோ முழங்கால்ல அடிபட்டு…”
சிரிப்பை விழுங்கிக்கொண்டேன்.
“சரி, எத்தனை லெட்டர் போட்டிருக்கீங்க? எத்தனை போன் பண்ணி இருக்கீங்க? அப்படி ஒரு லெட்டர் போட்டு, ‘இப்படி இப்படி மிரட்டுறாங்க, எனக்குப் பயமா இருக்கு, நான் அமிர்தசரஸ்க்கு ஓடிப் போறேன்’னு சொல்லிட்டுப் போயிருக்கலாமே!”
பேச்சை மாற்ற,”என்னம்மா உன் புள்ளாண்டான் சரண்? நான் நாலு வார்த்தை கேட்டா, ஒரு வார்த்தையில பதில் சொல்றானே!”like mom like son”
நான் கொஞ்சம் சேரில் முன்னால் நகர்ந்து அமர்ந்து, “ஊரில் எங்க வீட்டுக்கு ரைட் சைடுல ஒரு வீடு இருக்கு” என்று ஆரம்பித்தேன். அவர் அகமகிழ்ந்து, “ஆஹா! இப்பதான் கூட்டிலிருந்து எட்டிப் பார்க்கிறாய் பெண்ணே, சொந்தக் கதையையெல்லாம் சொல்லப்போகிறாய்” என்று நினைத்து ஆவலாக, “சரி சொல்லு” என்றார்.
“அந்த ரைட் சைடு வீட்ல இருக்கார் பாருங்க, அவர் பேரு பழனிச்சாமி.”
“சரி.”
“அவர் மனைவி பேரு செல்வி.”
“சரி.”
“அந்தச் செல்வி மாதிரியா சரண் இருப்பான். என்னை மாதிரித் தானே இருப்பான்?
“நான் ஏற்கனவே பல ராஜஸ்தான் சாப்பாடு சாப்பிட்டிருக்கேன். நாம மராத்தி உணவகம் போலாம்” என்றேன்.
இடையில் சரண், “All good?” என்று கேட்டிருந்தான். “எல்லாம் நல்லாத்தான் போகுது, கவலைப்பட ஒண்ணுமில்லை. ஒரு மராத்தி பவன்ல சாப்பிட்டுட்டு வீட்டுக்கு வந்துருவேன்” என்று பதில் சொன்னேன்.
தருண், “I hope you can handle the situation very well. If you are not comfortable, please leave the place” என்று செய்தி அனுப்பினான்.
நான் உற்சாகமாக ஒரு குரல் பதிவை அந்த ‘கொத்தமல்லி வடை’யைக் குறித்துச் சொல்லி அனுப்பிவிட்டு, அந்தப் பண்டத்தைப் புகைப்படமும் எடுத்ததையும் அனுபினேன் . நான் நிகழ்வை ‘left hand’-இல் டீல் பண்ணிக்கொண்டிருக்கிறேன் என்பது அவனுக்குப்புரியும்
“டேக் கேர்” என்று இருவரும் செய்தி அனுப்பினார்கள்.
மற்றொரு டாக்ஸி பிடித்து உட்கார்ந்ததும், ‘மராத்தி பவன்’ போகுமாறு சொல்லிவிட்டு என் பக்கம் திரும்பி, “இப்போ சொல்லேன், என்னைப்பத்தின உன் ஒப்பினியன் மாறியிருக்கான்னு?” என்று கேட்டார்.
அதாவது லிஃப்டில் என்னை முதலில் போகச்சொன்ன, கார்க்கதவை நான் ஏறுவதற்காக திறந்து பிடித்துக்கொண்ட, எனக்கு சாப்பிட என்னத்தயோ வாங்கிக்கொடுத்த, டாக்ஸிக்கு எதையும் யோசிக்காமல் பணம் செலவு செய்த,கோடிக்கணக்கில் மதிப்புள்ள வீடு வைத்திருக்கிற, பலர் பாராட்டிப் புகழும் ஒரு முக்கியப்பணியில் இருக்கிற. இப்போது தன்னந்தனிமையில் இருக்கும் ஒருத்தரைப் பற்றிய என் ஒப்பினியன்!!!!!!
வான்டடா வண்டியில் ஏறுபவர்களை என்னதான் செய்வது?
’’ ஒப்பினியன் மாறறதுக்கு முதல்ல ஒப்பினியன்னு ஒன்னு இருக்கணுமே! அப்படி ஒன்னு இல்லவே இல்லை. நீங்க பார்க்கணும்னு நினைச்சீங்க, எனக்கும் சிலதையெல்லாம் கேட்கணும்னு இருந்தது, அவ்வளவுதான்!” எனக்கு இந்த கொங்கு பெல்ட்டில் இருந்து தப்பிக்கனும்னு தோணிருக்கு அதான் நானும் உங்களை விரும்ப காரணமாயிருந்திருக்கும். சோ ஒப்பினியனெல்லாம் ஒன்னுமே இல்லை
(“என்னடா… எப்படிப்போனாலும் கேட்டுப் போடறாளே!”) மீண்டும் பேச்சை மடை மாற்றி,
“நன்னாச் சமைப்பாயாமே! சரண் சொன்னான். ஒருநாள் உன் கையால சாப்பிடணும்.”
“அந்த வாய்ப்பே இல்லை. நீங்க எங்கேயோ இருக்கீங்க, நான் எங்கேயோ இருக்கேன்.”
சின்ன உணவகம். தடியாய் ஒரு அம்மா தான் ஓனர் போல முன்னால் உட்கார்ந்திருந்தாள். ஒரு உயரமான திட்டில் பூனை ஒன்று தூங்கிக்கொண்டிருந்தது. மெல்ல அதன் காதில் மியாவ் என்றேன் திடுக்கிட்டு விழித்து கோபமாய்முறைத்தது. அதை போட்டோ எடுத்துக்கொண்டேன்.
உள்ளே போய் எதிரெதிரே போடப்பட்டிருந்த இரண்டு நாற்காலிகளில் அமர்ந்தோம் ஓரளவுக்கு கூட்டம் இருந்தது.
“என்ன சாப்பிடறாய்?
‘’அதுதான் மகாராஷ்டிரா சாப்பாடுன்னு சொன்னீங்களே?’’
’’இல்லம்மா, நான் வெஜ் சாப்பிடறியான்னு கேட்டேன்.”
(என்ன ஒரு பெருந்தன்மை!).
“இல்லை வேண்டாம், நான் வீட்லதான் அசைவம் சாப்பிடறேனே. வெஜ் போதும்.”
“இல்லை, நீ சாப்பிடு. நன்னா இருக்கும்னு சொல்லுவா இங்கே எல்லாரும். மீன் சாப்பிடறியா?”
“சரி சொல்லுங்க.”
ஆர்டர் எடுக்க வந்தவன் அச்சு அசல் தனுஷின் ஜாடையிலேயே இருந்தான். ’’அவனிடம், தனுஷ் மாதிரி இருக்கான்னு நான் சொன்னேன்னு சொல்லுங்க” என்றேன். சொன்னதும் அவனுக்குப் பிடிபடவில்லை. “அரே, ரஜினி மருமகன்” என்று மராத்தியில் சொன்னதும், அவன் ஒளிர்ந்தான், வெட்கி மேலும் வசீகரமானான். நிஜமாகவே தனுஷின் சாயல் அப்படியே இருந்தது அவனுக்கு.
இரண்டு மீல்ஸ், ஒரு மீன் வறுவல் சொன்னார்.
மீல்ஸ் பெரிய தட்டில் ஏராளமான தொடுகறிகளுடன் வந்தது. தட்டின் நடுவில் காம்பஸ் வைத்து வரைந்தது போல நல்ல வட்டத்தில், மிக மிக மிருதுவான சோள ரொட்டிகள் இருந்தன. தணலில் வாட்டியவை.அப்படி ஒரு மிருதுவான சோள ரொட்டியை நான் செய்யக் கற்றுக்கொள்வேனானால், என் வாழ்நாள் முழுக்க அதைமட்டுமே சாப்பிடுவேன்.
ஒரு கத்தரிக்காய் கிரேவி மிகச் சுவையாக இருந்தது. பாசிப்பருப்பு கடைந்ததும், கடலைப் பருப்பைக் கரைத்துச் சாம்பார் போல இருந்ததும் ஓகே. நம்மூரிலும் செய்வதுதான்.
“நீ நான்-வெஜ் சாப்பிடறதில் நேக்கொன்னும் பிரச்சனை இல்லை” என்று மீண்டும் சொன்னார். அந்த மீன் கிழங்கு வேகவைத்தது போல மிக மென்மையாக கொஞ்சம் தித்திப்பாகவேறு இருந்ததால், (நேக்கே) பிடிக்கவில்லை என்று அப்போதே சொல்லிவிட்டேன்.
என் நண்பருக்கு செய்தி அனுப்பி என்னை கூப்பிடச் சொன்னேன்.அவரிடம் நான் இவருடன் வெளியெ வந்ததைச் சொல்லி இருந்தேன் முன்னாடியே. என்ன கவலையானாலும் உடனே பகிர்ந்துகொள்ளும், கண்ணீரை வெட்கமின்றி காட்ட முடியும் நண்பர் அவர்.
உடனே அழைத்தார். எப்போதுமிருக்கும் அதேஅணுக்கத்துடன் பேசி வைத்தேன்
எதிர்பார்த்தபடியே.’’ ஆராக்கும்’’
என் நண்பர் நெருங்கிய நண்பர் என்றவள் அவர் யாரென்றும், அவர் இருக்கும் இடத்தையும் சொன்னேன். பேச்சுமூச்சே இல்லை கொஞ்ச நேரத்துக்கு.
குடம்புளியை எதிலோ கரைத்துக் கலந்து உப்பிட்டு ரசம் போல இளஞ்சிவப்பில் ஒரு கிண்ணத்தில் கொடுத்தார்கள். எனக்குக் குமட்டியது.அதற்குப் பெயர் என்னவோ! அதைத் தனுஷிடம் கேட்டுகேட்டு வாங்கிப் பருகினார்கள் அவர் உள்ளிட்ட எல்லோருமே.
நம்மூரில் அன்லிமிட்டட் சாப்பாடு போல அங்கே அந்தச் சோள ரொட்டி கேட்கக் கேட்கக் கொண்டு வந்து அடுக்கினார்கள்.
“எனக்குச் சாதம் வேண்டும்” என்றேன். ஒரு சின்னக் கிண்ணத்தில் குழைய வேகவைத்த, கலங்கலான நிறம் கொண்டிருந்த அரிசி சாதத்தை லேசாக நெய்விட்டுக் கொண்டு வந்து தந்தான் தனுஷ். பார்க்கவே பிடிக்கவில்லை எனக்கு; மல்லிகைப்பூ போல இருக்கும் நம்மூர் பொன்னி எங்கே என்று நினைத்துக்கொண்டே, “தயிர் வேணும்” என்று சொல்லிவிட்டு கொஞ்சமாக எடுத்து வாயில் போட்டேன்;
என் வாழ்க்கையிலேயே அப்படி ஒரு சுவையான அரிசிச் சாதம் சாப்பிட்டதே இல்லை,இனி சாப்பிடப் போவதுமில்லை. என்ன மணம் என்ன சுவை. அன்றைய நாள் அப்படி ஒருவருடன் கழிந்ததற்கான பிழையீடு என்று சொல்லலாம் அந்தச் சாதத்தை.
தனுஷ் தயிர் கொண்டு வந்ததும் நானே அவனிடம் “இது என்ன அரிசி?” என்று தமிழில் கேட்க, அவனுக்கும் அது புரிந்தது. “இது மகாரஷ்டிராவில் விளையும் இந்திரயாணி அரிசி” என்றான். பொருத்தமான அழகுப் பெயர்; சுவையென்றால் அப்படி ஒரு சுவை! வெறும் சாதத்தை அப்படியே சாப்பிடலாம். வரும்போது வாங்கிவர நினைத்தேன், நேரமில்லாமல் போனது. ஆன்லைனில் கிடைத்தால் வாங்கவிருக்கிறேன். Love you Indrayani!
வெளியே வந்தோம். வாசலில் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. மறுநாள் ஹோலி என்பதால் இளைஞர் பட்டாளம் ஒன்று வர்ணங்களை வீசி எறிந்து, தப்பித்து ஓடி, துரத்திப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். “போலாம்” என்றேன்.
டாக்ஸிக்கு காத்திருக்கையில் கட்டக்கடைசி முயற்சியாக “நோக்கு என்கிட்ட எதுனா கேட்கணுமா?” என்று கேட்டார். கொஞ்சம் யோசித்துவிட்டு “ஆமா” என்றேன்.
முகம் வாடிப் போய், “சரி… ஆனா அப்படி டாக்ஸியில் அனுப்பி வைக்க முடியுமா? நான் வந்து ஆத்தில் விட்டுட்டுதான் போவேன். அடுத்த முறை நீ மும்பை வந்தியானா எங்காத்துக்குக் கட்டாயம் வரணும். ஒரு மாமி நன்னாச் சமைக்கறா, நோக்கு அவளைச் சமைச்சுப் போடச் சொல்றேன்” என்றார்.
“வந்தால் பார்க்கலாம்” என்றேன்.
டாக்ஸி பிடித்து அமைதியாகப் பயணித்தோம். தெருவெங்கும் வண்ணமயமாக இருந்தது. வீடு வந்து இறங்கியதும், “நான் வீட்டுக்குள்ளே வரவேணாமா? இங்கேயே பை சொல்றியே?” என்றார்.
“இல்லை, சரண் வந்ததும் நான் வெளியே கிளம்பணும். நீங்களும் ரொம்பத் தூரம் போகணுமே, அதான்” என்றேன்.
“அப்போ சரி… பை, பை!”
முடிந்தது.
வாழ்கையையே புரட்டிப்போட்டதாக நினைத்த,முழு வாழ்க்கையையுமே பலியிடத் துணிந்த ஒன்று வெறும் இளமையின் அசட்டுத்தனங்களில் ஒன்று அவ்வளவுதான். அவ்வளவேதான். உண்மையில் அடுப்பில் இருந்து தப்பித்தான் வாணலியில் விழுந்திருக்கிறேன். முழுக்க கருகுவதற்குள் வாணலியிலிருந்தும் வெளியே தப்பித்து வந்துவிட்டேன்.
16-வது தளத்திற்கு ஏறுகையில் என் முகம் புன்னகையில் மலர்ந்திருந்ததை லிஃப்ட் கண்ணாடியில் பார்த்தேன்.
ஆத்துக்குள், சீ ….வீட்டுக்குள் நுழைந்து கைகால் கழுவிவிட்டு, அலெக்ஸாவை ஏசி போடச் சொல்லிவிட்டு ஆழ்ந்து உறங்கினேன். மாலை எழுந்து குளித்து விளக்கேற்றுகையில், நெஞ்சில் உறுத்திக்கொண்டிருந்த அந்தப் பூமுள் இருக்கிறதா என்று தடவிப் பார்த்தேன்; இல்லவே இல்லை!
சரண் சீக்கிரமே வந்துவிட்டான். மறுநாள் நான் கோவை புறப்பட வேண்டியிருந்ததால், இரவு எங்கேயாவது நல்ல பெரிய ஹோட்டலில் போய்ச் சாப்பிடலாம் என்று சொன்னான்.
என் முகத்தைப் பார்த்து, “நல்லாதானே இருக்கே?” என்றான். “ரொம்ப நல்லா இருக்கேன். இங்கே ‘ஆம் ரஸ்’ கிடைக்கும் இடத்திற்கு போய் சாப்பிடலாம்” என்றேன்.
உரை முடிந்ததும் காட்சன் நன்றி சொன்னார். “இப்படி ஒரு உரை இந்தத் தேவாலயத்தில் இனி ஒருபோதும் நடக்கப் போவதில்லை” அவ்வளவு நன்றாக இருந்தது என்றார். கிறிஸ்தவரல்லாத என்னை அங்கே அழைப்பதற்கு அவர் பெரிதும் மெனக்கெட்டிருந்தார். அவர் பெயரையும் காப்பாற்றவேண்டி இருந்தது.
பலரும் வந்து உரையின் சில குறிப்பிட்ட பகுதியைச் சொல்லிப் பாராட்டிப் பேசினார்கள். ஒரு பெண்மணி முக்காடிட்டுக்கொண்டு, “ஆண்டவரே! இந்த அம்மாள் (நான்தான்), அவர் மகன் (சரண்) ஆகியோருக்கு இந்த அருமையான உரையின் பொருட்டு அருள் புரியுங்கள்” என்றார். ஒருவர் வந்து உபகாமத்தில் இருந்த 7 தாவரங்களைச் சொன்னதில் மகிழ்ந்ததாகச் சொன்னார். மேலும் பலர் வந்து நன்றி சொன்னார்கள்.
என் பின்னால் அமர்ந்திருந்த ஒரு மூத்த பெண்மணி என் கைகளைப் பற்றிக்கொண்டு, “நான் சி.எஸ்.ஐ பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்து, மெதடிஸ்ட் பிரிவைச் சேர்ந்த குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டிருக்கிறேன். வாராவாரம் சர்ச்சுக்கு வருகிறேன். ஆனாலும் என்ன ஏதுன்னு ஒன்றும் தெரிஞ்சுக்கிட்டதில்லை. நீங்க சொன்னது ரொம்ப நல்லா இருந்தது, நன்றி…” என்றார். இன்னொரு பெண், தன் சின்ன வயதில் தான் நட்ட பலாமரம் எப்படிப் பலருக்குப் பிரயோஜனமாக இருந்தது என்பதையும், ஒருபோதும் தான் நினைத்தேயிராத, மறந்திருந்த அந்த மரத்தை இன்று என் உரை நினைவூட்டியது என்றும் சொன்னார். இப்படிப் பலர் பேசின பின்னர் விடைபெற்றுப் புறப்பட்டோம்.
டாக்ஸி வந்துவிட்டது. காட்சனும் ஜாஸ்மினும் பலரும் டாக்ஸி புறப்படும் வரை உடன் வந்து நின்று விடையளித்தார்கள். எனக்குக் களைப்பும் தூக்கமும் பசியுமாயிருந்தது. உடல்நலக் குறைவுக்கு எடுத்துக்கொண்ட மருந்துகள் உறக்கம் வரவழைப்பவை. ஆனால், இந்த உரையின் பொருட்டுத் தூக்கத்தைப் பற்றி நினைக்காமலிருந்தேன்.
காரில் ஏறி அமர்ந்தேன்.நல்ல சொகுசுக் கார் .. எப்படி இந்த காரைச் சரண் புக் செய்தான்? மிக அதிகக் கட்டணம் இருக்குமே?” என்று நினைத்தேன் கேட்டேன். அப்படியெல்லாம் இல்லை. “நான் அடிக்கடி இந்த டாக்ஸியின் சேவையைப் பயன்படுத்துவதால், அவ்வப்போது அவர்களே இப்படி ப்ரீமியம் வண்டிகளைச் சாதாரணக் கட்டணத்தில் அனுப்புவார்கள்” என்றான்.
நான் பேசியது குறித்து அவன் அபிப்பிராயம் கேட்டேன். “நல்லா பேசினே… ஆனா ‘Rice Christians’ பத்தி சொல்லி இருக்க வேண்டாம். யாரு ஆடியன்ஸ்னு பார்த்துட்டு கவனமா பேசணும். ஒரே ஒருத்தர் கூட நம் உரையினால் புண்பட்டுடக் கூடாது” என்றான். “சரி” என்று கேட்டுக்கொண்டேன். பின்னர் நல்ல வசதியான கார் இருக்கையில் அப்படியே ஆழ்ந்து உறங்கி, ஒரு மணி நேரம் கழித்துத்தான் கண் விழித்தேன்.
வீடு வர 6 மணி ஆகிவிட்டது. கடும் பசியில் இருந்தேன். சரண் வீட்டில் சாப்பிட எதுவுமில்லை , எனக்கும் சமைத்துச் சாப்பிடும் தெம்பு இல்லை. பொதுவாகவே எனக்கு மாலை 5-6 மணிக்குப் பசிக்கும். ஒரு நல்ல ‘டார்மோனா’ தேநீரும், பிஸ்கட்டுகள் அல்லது சிற்றுண்டி ஏதாவது சாப்பிட்ட பின்னரே விளக்கேற்றப் போவேன். கல்லூரியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 12.15-க்கு உணவு இடைவேளை என்பதால் மாலை இப்படிப் பசிக்கும்.
சரண் “என்ன வேணும் சாப்பிட? நான் ஆர்டர் பண்ணறேன் என்றான். “எதாச்சும் பஜ்ஜி” என்றேன். “எதாச்சும்னா என்ன பஜ்ஜி’’? வெங்காயம், மிளகாய், வாழைக்காய்… எதாச்சும்” என்றேன். “நான் பிளிங்கிட்டில் ஆர்டர் போடறேன், நீ போய் குளி” என்றான். சரண் வீட்டுக்கு ஒரு கிருஷ்ணர் படமும் அகல் விளக்கும் கொண்டு வந்திருந்தேன். மாலை விளக்கேற்ற வேண்டும். எனவே, “சரிடா, நான் குளிச்சுட்டு வந்து டீ போடறேன். அதுக்குள் நீ ஆர்டர் போடு” என்று குளிக்கச் சென்றேன்.
குளித்து வசதியான உடை மாற்றி நான் ஹாலுக்கு வரும்போது, ஒரு அட்டைப்பெட்டியில் நல்ல சுவையான, சூடான மசாலா டீயும், இன்னொரு வெப்பம் தாங்கும் பெட்டியில் மிளகாய், வெங்காயம், வாழைக்காய் பஜ்ஜிகளும் தொட்டுக்கொள்ளச் சட்னியுடன் காத்திருந்தன. “டீயா?” என்றேன். “ஆமா, இவங்க ரொம்ப நல்லா போடுவாங்க, குடிச்சுப் பாரு” என்றான். அவனுக்கும் browni இருந்தது. விளக்கேற்றிவிட்டு வந்து, அத்தனை பசியில் அத்தனை ருசியான டீயும் திண்பண்டங்களுமாய் சாப்பிட்டேன்.
எத்தனை அவசரமான வாழ்க்கை ஆனாலும் , எத்தனை விரைவான வசதிகள் இந்த பெருநகர வாழ்வில்?
அன்று காலையும் அவனிடம் சாம் ஹிக்கின்பாதம் நூலைக் குறித்து ஒருவேளை நீண்ட நேரம் பேச வேண்டியிருந்தால் தேவைப்படுமே என 6 பக்கமிருக்கும் குறிப்புகளை பிரிண்ட் செய்ய வேண்டும் என்றேன். “வழியில் எடுத்துக்கலாம் வா” என்றான். நான் உடை மாற்றி வெளியே வரும்போது, என் கையில் ஒரு A4 அளவில் மஞ்சள் உறையை சிரித்தபடி கொடுத்தான். உள்ளே எனக்குத் தேவையான பிரிண்ட் இருந்தது. ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனேன். “எப்படிடா?” என்றேன்.
“பிளிங்கிட்டுக்கு வாட்ஸ்அப்பில் விஷயத்தை அனுப்பினா 3 நிமிஷத்தில் கொண்டு வருவாங்க. ஒரு பக்கத்துக்கு 6 ரூபாய்” என்றான். பிளம்பரோ, எலக்ட்ரீஷியனோ ரிப்பேர் வேலைகளுக்கோ ஆள் வேண்டுமென அழைத்தால், “சொல்லுங்கள் ஹுஜூர்” என்று அலாவுதீன் விளக்கு பூதமாக உடனே வந்து நிற்கிறார்கள். ஒரு மணி நேரத்துக்கு 99 ரூபாய்கள் என வீட்டு வேலைக்கும் ஆட்கள் இருக்கிறார்கள். சமைப்பதற்கோ, துணி துவைப்பதற்கோ, வீடு பெருக்கித் துடைத்துப் பாத்திரம் தேய்ப்பதற்கோ ஒரு மணி நேரத்துக்கு என்று உடனே வருகிறார்கள். மாதமொருமுறை முழு வீட்டையும் 400 ரூபாய்க்கு ஜன்னல் கம்பி வரை துடைத்துச் சுத்தம் செய்து தருகிறார்கள்.
ஆதங்கமாக இருந்தது எனக்கு, வேடசெந்தூரில் நான் இப்படியான வேலைகளை ஒன்றொன்றாக இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதும் வேலையாட்களுக்கு தொங்கு தொங்கென்று தொங்கிக்கொண்டிருப்பதையும் நினைத்துக்கொண்டேன். மேலும், இனி மகன்களுக்கெல்லாம் அம்மா, அத்தை, அக்கா வந்து உதவி செய்ய வேண்டிய அவசியமில்லாதது துயரளித்தது.
சரண் ஒரு எலக்ட்ரிக் குக்கர் வைத்திருக்கிறான். அதிலேயே தாளிப்பு, பொரித்தல், வேகவைத்தல் எனச் சகலமும் செய்யலாம். இரவு படுக்கப் போகையில் உள்ளே அரிசி, பருப்பு , காய்கறிகளை வைத்து 7 மணி நேரம் கழித்துச் சமைக்கத் தொடங்க ஆணையிட்டுவிட்டுத் தூங்கலாம். அது காலையில் நான் எழுந்திருக்கையில் சமைத்து முடித்துச் சூடாகக் காத்திருக்கிறது. 6 மணி நேரத்துக்கு வெம்மையாக வைக்கவும் அறிவுறுத்துகிறான்.
Food Processor-ல் பொடிப் பொடியாகக் காய்கறிகளை நறுக்கிக்கொள்கிறான். எனக்கென்னவோ கையொடிந்தது போல இருந்தது. இனி எதற்கு அம்மாவும் அவளின் ஒத்தாசைகளும்?
வீட்டில் தோட்டத்திற்குச் சொட்டுநீர்ப் பாசனம் போட்டபோது இப்படித்தான் உணர்ந்தேன். எனக்கும் செடிகளுக்குமான தொடர்பே போய்விட்டது போல ஏக்கமாகியது. சில மாதங்களிலேயே அந்த குழாய்களைப் பிரித்தெடுத்து மாடியில் போட்டுவிட்டு, நானே நீரூற்றத் தொடங்கினேன். 50,000 செலவு செய்த வேலையை வீணடித்த என் செடிக்கிறுக்கிற்காக பல வருடம் திட்டு வாங்கினேன்.
தாளிக்க வாணலியில் எண்ணெய் ஊற்றிவிட்டு ஆர்டர் கொடுத்தால், எண்ணெய் சூடாவதற்குள் கடுகு வந்துவிடும் போலிருக்கிறது. நொடியில் ஆட்டோவோ காரோ வாசலுக்கு வருகிறது. எல்லாம் வேகம், வேகம், வேகம்தான். வேலை செய்யவும், சம்பாதிக்கவும், வாழவும் ஏராளமாய் வாய்ப்புகள் அங்கே. ஆனால், “ஏன் இத்தனை வறுமை?” என்று கேட்டேன்.
சாதிபற்று அல்லது வெறிதான் என்றான்
அலுவலகத்திலும் வெளியே அவன் சந்திக்கும் நபர்களும் “உன் பேர் என்ன?” என்றால் “சரண்” என்பானாம். சரணுக்கு அப்புறம்? ஒரு பெயரைச் சொன்னால், “அதன்பின்னர் என்ன?” என்கிறார்கள். “அப்படி ஒன்றும் இல்லை” என்றால், சரண் தாழ்ந்த பிரிவைச் சேர்ந்தவன் போலிருக்கிறது, அதனால் குடும்பப் பெயரைச் சொல்லாமல் இருக்கிறான் என்று விலகி நிற்கிறார்களாம்.
உணவு இடைவேளையில் சரண் சைவம் என்று சொன்னதும், முகமும் மனமும் மகிழ்ந்து தோளைத் தொட்டு தழுவிப் பேசுகிறார்களாம். சைவ உணவுக்காரன் நிச்சயம் உயர்ந்த ஜாதிதான் என்னும் நம்பிக்கை இருக்கிறதுஅங்கே
’’..அடுத்த முறை ஆக்டோபஸ் வரை விரும்பிச் சாப்பிடும் தம்பியை கூட்டிட்டுப்போ, சரண்” என்றேன்.
ஒரு ஆட்டோ ஓட்டினால் எளிதாக ஒரு நல்ல குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியும். ஆனால் அந்தத் தொழிலில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டினால் பல சாதிக்காரனும் வந்து ஆட்டோவில் உட்காருவான் என்பதால் ஓட்டாமல் வறுமையில் இருப்பவர்களை அறிவேன் என்றான்.
சிறு குழந்தைகள் ஒரு ரூபாய்க்காகக் காலில் விழுந்தும், தெருவிலிருந்து அப்படியே தொற்றி கூடவே ஆட்டோவில் அமர்ந்து கெஞ்சியும் பிச்சை எடுப்பதைப் மிகுந்த வேதனையுடன் சொல்லிக் கொண்டிருந்தான். வேதனையாக இருந்தது.
இரவு வெகுநேரம் வரை பேசிக்கொண்டிருந்தோம். மறுநாள் காலை சரணுக்கு அலுவலகம் செல்ல வேண்டும் நானும் என்னைசந்திக்க கேட்ட மும்பைக்காரர் ஒருவருக்குச் சரி என்று சொல்லி இருந்தேன். சொல்லப்போனால் மும்பை வந்தது அந்த சந்திப்புக்காகவும் தான்.
இரவு எளிமையாகச் சமைத்துச் சாப்பிட்டுவிடு உறங்கப் போனோம்.காட்சனிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. ’’..ஒரு புதிய சகாப்தத்தை துவங்கிவிட்டிருக்கிறீர்கள் கத்தி மேல் நடப்பது போன்ற சவாலான உரை ஆனால் சாமார்த்தியமாக கையாண்டீர்கள் நன்றி…’’ என்றிருந்தார். பதிலுக்கு ஒரு ஸ்மைலியை அனுப்பினேன்.
டாக்ஸி பிடித்து 2 மணி நேரம் பயணித்து சரணுடன் பேசியபடி மும்பையின் பிரம்மாண்டமான கட்டிடங்களைப் பிரமிப்புடன் பார்த்தபடி பயணித்தேன். மும்பை வாழ் தமிழர்களின் மெதடிஸ்ட் தேவாலயத்திற்கு 10 மணிக்கு வந்தோம். உள்ளே ஞாயிற்றுக்கிழமைக்கான பிரார்த்தனை துவங்கிவிட்டிருந்தது.
சரண் இறங்காமல் டாக்ஸி ஓட்டுநரிடம் என்னவோ பேசிக்கொண்டே இருந்தான் . நான் காத்திருந்து காத்திருந்து சலித்துப் போய் மீண்டும் உள்ளே தலையைக்காட்டி “என்னடா” என்றேன். “இரு வரேன்” என்று மீண்டும் பேசிக்கொண்டிருந்தான். என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று புரியாமல் நிற்கையில் தாழ்வாக உணர்ந்தேன்.
பாலிவுட் படங்கள் எனக்கு ஹிந்தி தெரியும் என்பதாக ஒரு மயக்கத்தை உருவாக்கி இருக்கின்றன அல்லது ஷாருக், சல்மான், ஆமீர்கான்கள் பேசினால் புரிகிறதோ என்னவோ. சுமார் 15 நிமிடங்கள் பேசிய பின்னரே சரண் இறங்கி வந்தான். டாக்ஸி அமர்த்தும்போதே செல்லவேண்டிய இடத்திற்கான தொகையும் அவரவர் போனில் வந்துவிடுகிறது. சரணுக்கு 550 என்றும் ஓட்டுநருக்கு 850 என்றும் வந்திருந்ததால் அதைப் பேசிக்கொண்டிருந்தோம் என்றான். “எவ்வளவுதான் கொடுத்தே கடைசியா” என்றேன். வழக்கம் போல அந்தக்கேள்விக்குபதில் சொல்லாமல் “வாம்மா போலாம்” என்று உள்ளே அழைத்துச் சென்றான்.
சற்று பெரிய தேவாலயம்தான். செருப்புகள் ஏராளமாக வெளியே ஒழுங்காக விடப்பட்டிருந்தன. பெரிய பெரிய பாத்திரங்களில் வாசனையாக என்னவோ செய்து மூடி வைக்கப்பட்டிருந்தது. பிரார்த்தனை நடக்கையில் உள்ளே செல்லலாமா வேண்டாமா என்று யோசனையாக இருந்தது.
ஆனால் காட்சனின் மனைவி ஜாஸ்மின், வெள்ளையில் நீல நிறம் கலந்த புடவையைத் தோளோடு போர்த்தியபடி மகிழ்ந்து சிரித்தபடி வந்து கைகுலுக்கி வரவேற்றார். உள்ளே சென்றோம். மரபான மர பெஞ்சுகளில் ஆண்களும் பெண்களும் தனித்தனியே அமர்ந்திருந்தார்கள். சிறு பிள்ளைகள் பென்ச் வரிசைகளுக்கு முன்பாக தரையில் பிளாஸ்டிக் பாய்கள் விரித்து அமர்ந்திருந்தார்கள். காட்சன் பிரார்த்தனைக்குத் தலைமையேற்று நடத்திக்கொண்டிருந்தார். ஒரு சிவப்பு அங்கியை அவரது சாம்பல் நிறச் சட்டைக்கு மேலே அணிந்திருந்தார். அவரில் நான் விஷ்ணுபுரம் விழாக்களில் சந்தித்த நண்பர் காட்சனைத் தேடினேன் ஆனால் காணோம்.
அவருக்கு பக்கவாட்டில் மைக் பொருத்தப்பட்டஇரண்டு பெஞ்சுகளில் பதின் பருவத்தில் பெண்களும் ஆண்களும் பிரார்த்த்னையின் இடையில் அவ்வப்போது பாடல்களைப் பாடினார்கள். காட்சனின் தலைக்கு பின்னே ஒரு டிஜிட்டல் பலகையில் என்ன பாடல், எந்தக் கீர்த்தனை எனும் எண்கள் ஒளிர்ந்தன. கூடியிருந்தோர் அதைப் பார்த்து தங்களிடம் இருக்கும் வேதப்புத்தகத்தின் பக்கங்களை எடுத்துக்கொள்கிறார்கள்.
பிரார்த்தனை முடிந்து ஒரு சில வசனங்களை ஒவ்வொருவராக காட்சன் வாசிக்கச் சொன்னால் உடனே தயங்காமல் வாசிக்கிறார்கள். கிடாரும் எலக்ட்ரிக்கல் ட்ரம்ஸும் கீபோர்டும் வாசித்த மூன்று இளைஞர்களுடன் சேர்ந்து மேலும் சில கோரஸ் பாடல்கள். பிற்பாடு சிறு பிள்ளைகள் மனப்பாடமாக சில வேத வசனங்களைச் சொன்னார்கள்.
சொன்ன ஒவ்வொருவருக்கும் சிறு இனிப்பு வழங்கப்பட்டது. ஒரு சொல் திருந்தாக் குழந்தைக்கு மற்றோர் சின்ன பிள்ளை தான் ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லிச் சொல்லி, அதைத் திரும்பச் சொல்லவைத்து இனிப்பை வாங்கிக்கொண்டு சென்றது. இறுக்கமான பெரும் கட்டுப்பாடுகள் இல்லாத, இயல்பான நட்புணர்வுடன் கூடிய ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை என்று தோன்றியது. குழந்தைகள் அங்குமிங்கும் ஓடியபடி இருந்தார்கள். ஞாயிறன்று குடும்பமாக இப்படி வந்திருப்போரை நினைத்து ஆச்சரியமாக இருந்தது எனக்கு.
பிரார்த்தனையும் பாடல்களும் வசனம் சொல்லுதலும் முடிந்த பின்னர், பெண்கள் முதலிலும் பின்னர் ஆண்களுமாக காட்சன் பேசிக்கொண்டிருந்த altar-ன் விளிம்பில் அரைவட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்த செம்பட்டுத் துணியாலான சிறு மெத்தையில் முழந்தாளிட்டு அமர்ந்து அப்பமும் திராட்சை ரசமும் பெற்றுக்கொண்டார்கள். ஒரு மூதாட்டி முழந்தாளிட முடியாமல் தலைவணங்கி அப்பத்தைப் பெற்றுக்கொண்டார்.
ஜாஸ்மினிடம் திராட்சை ரசம் எப்படித் தயாரிக்கிறார்கள் என்று கேட்டு தெரிந்துகொண்டேன் . புளிக்காத ஆல்ஹகால் இல்லாத திராட்சை ரசம் செய்து விற்கப்படுகிறது அங்கு வாங்கிக்கொள்வதாகச்சொன்னார்.
பின்னர் நீண்ட கைப்பிடியுடன் கூடிய ஒரு சிறு பை போன்ற வெண்ணிறத் துணி உண்டியலில் காணிக்கை அளிக்கப்பட்டது. யார் எவ்வளவு அளிக்கிறார்கள் என்று பிறர் அறியாவண்ணம் கைகளை ஆழமாக உள்ளே விட்டு காணிக்கை அளிக்கும்படி அது வடிவமைக்கப்பட்டிருந்தது.
பத்துப் பிள்ளைகள் கூட்டாக ஒரு பாடலை இனிமையாக மைக் பிடித்துப் பாடினார்கள். பின்னர் காட்சன் இறங்கி வந்து முகமன் கூறி வரவேற்றார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு என் உரை தொடங்கும் எனச் சொன்னார்.
காட்சனின் மகன் ஆரோனைப் பார்த்தேன். காட்சனின் சமீபத்திய இழப்பு குறித்து நான் அவருக்கு நினைவூட்டக் கூடாது என்று இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஏதும் சொல்லாமலிருந்தேன். ஆரோனை மிகச்சிறிய வயதில் வேடசந்தூரில் பார்த்தது, பின்னர் இப்போதுதான் பார்க்கிறேன். உற்சாகமான இளைஞன்.
வீட்டிற்கு வெளியே நான் தேநீர் அருந்துவதில்லை.காபி மட்டும்தான். சரண் எப்போதுமே காபி, தேநீர் அருந்துவதில்லை. எனவே வெளியே நின்று சிலருடன் பேசிக்கொண்டிருந்தோம். PPT போடுவதற்கான ஆயத்தங்கள் நடந்தன.
நான் என் லேப்டாப் கொண்டு வரவில்லை. சரணின் லேப்டாப்பில்தான் என் உரை இருந்தது. அதை ஸ்கிரீனில் போட்டார்கள். முதல் ஸ்லைடே எனக்கு திகைப்பாயிருந்தது. நான் “Rooted in Grace, Growing in Christ” என்று தலைப்பிட்டிருந்தேன். ஆனால் முதல் பாதியான “Rooted in Grace” மட்டும்தான் அங்கு இருந்தது. சரணைப் பார்த்தேன். அமைதியாக அதற்கும் அவனுக்கும் தொடர்பில்லாதது போல் அமர்ந்திருந்தான். அருகில் சென்று “என்னடா” என்றேன். “நான்தான் ‘Christ’ என்று வந்த இரண்டாம் பகுதியைத் தூக்கினேன், நீ போய் பேசு” என்றான். என்ன ஆணவம்?
உரையைத் துவங்கினேன். தலைப்பைச் சொல்லி ஏன் கிறிஸ்துவர் அல்லாத நான் அவர்கள் முன்பாக நிற்கிறேன் என்பதை முதலில் விளக்கினேன். தாவரப் பரவலின் வரலாறு, 1492 என்னும் தலைப்பில் நான் எழுதவிருக்கும் நூல், மனிதர்கள் மூலமாகப் பரவியவைகளில் கிறிஸ்துவ மிஷனரிகளின் “மிஷன் கிரேப்ஸ்” மற்றும் “மிஷன் மேங்கோ”. அப்படியே தேவாலயங்கள் திராட்சை ரசம் மட்டுமே அளிக்க நினைத்தது, அளிக்க முடியாத துருவப் பகுதி தேவாலயங்களின் உலர் திராட்சைகளை வெந்நீர் ஊற்றிப் பிசைந்து சாறெடுப்பதும், கெட்டியான சிரப்பில் தூய நீர் கலந்து கொடுப்பதைப் ஜான் வெஸ்லி பரிந்துரைத்ததையும் சொல்லி ஜான் வெஸ்லிக்கு வந்தேன்.
லூயி பாஸ்டர் 1862-ல் ஒயினில் இருக்கும் ஆல்கஹாலை அப்படியே நிலையாக இருக்க வைக்கவும் அது வினிகராக ஆகாமலிருகக்வும் பாஸ்டுரைசேஷனைக் கண்டுபிடித்தார். மெதடிஸ்ட் கிறிஸ்துவரான தாமஸ் வெல்ச் (Thomas Bramwell Welch) 1869-ல் ஒயினில் இருக்கும் ஆல்கஹாலைக் கொல்லும் ஒரு வகைப் பாஸ்டுரைசேஷனைக் கண்டறிந்தார். அப்படி ஆல்கஹால் இல்லாத ஒயினைத்தான் மெதடிஸ்ட் தேவாலயங்களில் நீர் கலந்து அளிக்க ஜான் வெஸ்லி பரிந்துரைத்தார்.
பின்னர் ஜான் அவரது இளமைக்காலம், மீட்கப்பட்ட கொள்ளி,அவரது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து அவர் ஆக்ஸ்போர்டில் துவங்கிய புனிதக் குழுவைப் பற்றியெல்லாம் சொன்னேன்.
அக்குழுவினர் வாரம் இரண்டு நாட்கள் உபவாசம் இருப்பது, அன்றாடம் இறையியல் வகுப்புகள் எடுப்பது, சிறைச்சாலை சென்று கைதிகளுக்காக ஜெபிப்பது, கைதிகளின் குடும்பக் கடன்களைத் தீர்க்க புனிதக் குழுவினர் பகுதிநேர வேலை செய்து சம்பாதிப்பது, சிறையிலிருந்து வெளியே வருபவர்களுக்கு வேலை வாங்கித் தருவது போன்ற முறையான நெறிகளுடன் இயங்கினார்கள்.
பிற மாணவர்கள் இந்தப் புனிதக் குழுவின் கட்டுக்கோப்பான அமைப்பைப் பார்த்து கிண்டலாக “என்னடா உங்கள் குழுவின் மெத்தட் பலமா இருக்கே” என்றார்கள். ஜான் கோபித்துக்கொள்ளாமல் அவர் அமைத்த கிறிஸ்துவப் பிரிவுக்கே அந்தக்கிண்டலைஅடைப்படையாக வைத்து’மெதடிசம்’ எனப் பெயரிட்டார். அப்படி மெதடிசம் உருவானதை, ஜான் சென்ற 2,50,000 மைல் குதிரைப் பயணத்தை, அவர் அடிக்கடி சென்ற லண்டனின் ஒரு தாவரவியல் பூங்காவை, அப்படியான பூங்காவை அவர் மெதடிஸ்ட் தேவாலயங்கள் அனைத்திலும் அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்ததையெல்லாம் சொன்னேன்.ஜானின் தோல்வியுற்ற மணவாழ்வைக்குறித்தும் பேசினேன்.
ஜான் வெஸ்லே தனது 48-வது வயதில் மேரி வாஸெய்லைத் திருமணம் செய்தார். மேரி ஒரு பணக்கார வர்த்தகரின் விதவை மனைவி.நான்கு பிள்ளைகளுடன் அவர் ஜானை மணந்து கொண்டார்.
மேரிக்கு வெஸ்லேயின் இடைவிடாத பயணங்கள் மற்றும் பிற பெண்களுடன் அவர் கொண்டிருந்த ஆன்மீகக் கடிதத் தொடர்புகள் (Spiritual correspondence) பெரும் அதிருப்தியைத் தந்தன. வெஸ்லே ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான மைல்கள் குதிரையில் பயணம் செய்ததால், மேரி தனிமையில் விடப்பட்டார். இவர்களது திருமண வாழ்க்கை 30 ஆண்டுகள் நீடித்தாலும், அதில் பெரும் பகுதி பிரிவிலேயே கழிந்தது. மேரி பலமுறை வெஸ்லேயை விட்டுப் பிரிந்து சென்றார். இறுதியில் 1781-ல் மேரி காலமானபோது, வெஸ்லேவுக்கு அது குறித்த தகவல் கூடத் தெரியவில்லை; அவர் மேரியின் இறுதிச் சடங்கில் கூட கலந்துகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.
வெஸ்லே தனது நாட்குறிப்பில், ஒரு இறைப்பணியாளராகத் தனக்குத் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை என்பதைப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
18-ம் நூற்றாண்டில் பிரபலமாகிக்கொண்டிருந்த “Philosophy of Simple” என்பதில் ஜான் கொண்டிருந்த நம்பிக்கையையும், பல மூலிகைகளின் கலவையான மருந்துகளில் நச்சுத்தன்மை கொண்டிருக்கும் ஆண்டிமனி, பாதரசம் ஆகியவற்றை கலந்துஅளிக்கும் லத்தீனம் பேசும் மருத்துவர்களிடம் செல்லாமல், தன் குழந்தைக்கு சுகவீனம் உண்டாகையில் வீட்டுக் கொல்லைப் புறத்தில் இருக்கும் ஒரு எளிய ஒற்றை மூலிகையைக் கொண்டு அதன் மூலம் தாயே மருத்துவம் பார்க்க முடியும் என்றார் வெஸ்லி.
அப்போது பிரபலமாயிருந்த doctrines of signature என்னும் மனித உடல் பாகங்களைபோலவே தோற்றம் கொண்டிருக்கும் தாவரங்கள் அந்த உடல்பாகங்களில் உண்டாகும் நோய்களைத்தீர்க்கும் என்பதிலும் ஜான் நம்பிக்கை கொண்டிருந்தார்.
ஆயிரக்கணக்கான மூலிகை மருத்துவக் குறிப்புகள் அடங்கிய இரண்டு நூல்களையும் எழுதினார் வெஸ்லி:
Primitive Physic (1747) மற்றும் A Survey of the Wisdom of God in the Creation: Or, a Compendium of Natural Philosophy (1763).
இவற்றில் ஏராளமான மூலிகைகள், அவற்றை எதற்கு, எப்படி, எவ்வளவு பயன்படுத்துவது என்று விளக்கி இருந்தார். இவை மட்டுமல்லாது தனது வாழ்க்கையை, அந்த நீண்ட பயணத்தில் தான் கவனித்த இயற்கையின் அற்புதங்களை, பழங்குடியினருடன் நடந்த உரையாடல்களில் அவருக்குக் கிடைத்த மூலிகை சிகிச்சை விவரங்களை,கசந்த மணவுறவை, வாழ்வின் துயரங்களை மெதடிஸ்ட் பிரிவினருக்குத் துவக்க காலத்தில் உண்டான சோதனைகளை எல்லாம் விரிவாக The Journal of John Wesley என்னும் நூலில் எழுதினார். அவரது அனைத்து நூல்களும் பல பாகங்களாக, பல எடிஷன்களாக வெளியாகின.
மெதடிசத்தின் அடிப்படையான 141 சங்கற்பங்களை The “Standard Sermons” என்னும் நூலாக வெளியிட்டார், அவரது மிகப்பிரபலமான நூலான A Plain Account of Christian Perfection 1766-ல் வெளியானது. இந்த நூலின் தாக்கம் பிற்பாடு பெந்தெகொஸ்தே பிரிவிலும் இருந்தது. மேலும் பல நூல்களையும் அவர் எழுதினார்.
ஜான் வெஸ்லி , இறைப்பணியாளர் என்பவர், நற்செய்திகளைப் பிரசங்கிப்பதோடு ஒரு தாவரத்தின் தோற்றத்தில், இலையில் , மலரில்,கனியில், விதையில் இருக்கும் அற்புதங்களைக் காட்டி தேவனின் படைப்பாற்றலின் அற்புதங்களையும் மக்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்.
இதைச்சொல்லுகையில் leaf of shame என்னும் தலைப்பில் ஆதாமும் ஏவாளும் அணிந்துகொண்ட அத்தியிலைளைச்சொல்லி ஒரு இலையின் அபாரமான, மனிதர்கள் அதைப்போல வரையக்கூட முடியாத நரம்பமைப்பைக் காட்டினேன்.
இப்படி ஜான் வெஸ்லியின் வாழ்வை, அவர் உருவாக்கிய மெதடிஸக் கிறிஸ்துவப் பிரிவைச் சொல்லி அப்படியே விவிலியம் காட்டும் தாவரங்களுக்கு வந்தேன். (முழுமையான ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீண்ட உரையைத் தனியே கட்டுரையாகத் தயாரித்துக்கொண்டிருக்கிறேன்).
விவிலியம் சொல்லும் 7 முக்கிய தாவரங்களை, ஏன் அவற்றை குறிப்பாக விவிலியம் சொல்கிறது என்று உரையின் அடுத்த பகுதிக்கு வந்தேன்: பார்லி, கோதுமை, அத்தி, மாதுளை, ஆலிவ், திராட்சை மற்றும் தேன்ஆகியவை இரண்டாம் விதியாகிய உபாகமத்தில் (Deuteronomy 8:8) இஸ்ரேல் நாட்டின் செழுமையையும் வளத்தையும் குறிக்கும் ஏழு முக்கியமான நில விளைபொருட்களாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முதல் 6 தாவரங்களின் தாவரவியல் மற்றும் கலாச்சார ரீதியான முக்கியத்துவத்தையும் விளக்கினேன்.
7-வதாகச் சொல்லியிருக்கும் தேன் என்பது நிச்சயம் தேனீக்களின் தயாரிப்பான தேனாக இருக்காது என நான் நினைத்தேன். தேன் என்று உபாகமம் குறிப்பிடுவது முற்றிய பேரீச்சைக் கனிகளின் இனிப்பான சாறாகத்தான் இருக்கும். ஏனெனில் 6 தாவரப் பொருட்களுக்குப் பிறகு 7-வதாக ஒரு பூச்சியிடமிருந்து கிடைக்குமொன்றைச் சொல்லி இருக்க வாய்ப்பில்லை.. பேரீச்சையைச் சொல்லியதால் அப்படியே ஏன் குருத்தோலை ஞாயிறுக்குப் பேரீச்சையின் விரிந்த குருத்தோலை பயன்பாட்டில் இருக்கிறது என்பதையும், பேரீச்சை ஓலை கிடைக்காத பிரதேசங்களில் தென்னை, பைன், ஆலிவ் போன்ற என்னென்ன மரங்களில் இலைகளைப் பயன்படுத்துகின்றனர் என்பதையும் சொல்லிவிட்டு பைபிளில் எனக்குப் பிடித்தமான “Consider the lilies” என்பதற்கு வந்தேன்.
அத்தனை அழகாக இயற்கையில் வளர்ந்து மலர்ந்திருக்கும் அழகிய லில்லிகளைப் பார்க்காமல் ஏன் அன்றாட உணவு மற்றும் பிற உலகியல் தேவைகளுக்கான கவலையில் மூழ்கி இருக்கிறீர்கள் என்ற அந்த கவித்துவமான செய்தி எனக்கு மிகப்பிடித்தமானதொன்று.
ஏன் லில்லி? ஏன் consider the roses என்று ரோஜாக்கள் சொல்லப்படவில்லை என்பதையும், லில்லி என்பது இப்போது நாம் சொல்லும் லில்லியாக இருக்காது, செவ்விதழ்களும் கருமையான உட்பகுதியும் கொண்டிருக்கும் பாப்பி லில்லிகளாகத்தான் இருக்கும், ஏனென்றால் இந்தச் செய்தி பிரசங்கிக்கப்பட்ட மலைப்பகுதியின் அடியில் இருந்த ‘கடல்’ என்றே அழைக்கப்படும் மாபெரும் ஏரியின் கரையில் அந்த லில்லிகள்தான் வளர்ந்திருந்தன என்று உரை தொடர்ந்தது.
அதன் பின்னர் புகழ்பெற்ற “I am the vine, you are the branches and my father is the gardener” க்குச் சென்றேன். சரண் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்னும் எச்சரிக்கை உணர்வை எப்போதோ மறந்துவிட்டு நேராக இதயத்திலிருந்து பேசிக்கொண்டிருந்தேன். ஹிசோப்பும், செடாரும், நல்விதை நல்ல நிலத்தில் விழவேண்டும், சிறு கடுகு ஆனால் பெரும் விளைச்சல் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சில botanical parables-க்கு வந்து இறுதி செய்தேன்.
முடிக்கும் முன்பாக உலகில் “ஆமென்” எனும் சொல் 3000 ஆண்டுகளாக எப்படி கிறிஸ்துவுக்கு முன்பாகவே உருவாகி, ஒரு ஆசி, ஒரு தீச்சொல் அல்லது ஒரு நற்செய்தி என எது சொல்லப்பட்டாலும் “சொன்னவை நடக்கட்டும், ஆம் அவ்வாறே ஆகுக” என்னும் பொருளில் இன்று வரை தொடர்ந்து வருகிறது என்பதைச் சொன்னேன். உலகின் மிக அதிகமாக எழுத்தில் பயன்படுத்தப்படுவது “the” எனும் சொல். உரையாடலில் அதிகம் பயன்படுவது “ok”. அன்றாடம் ஒருவராலேயே பலமுறை, அதிகமுறை சொல்லப்படுவது “ஆமென்”.
இத்தனை ஆண்டுகளாகியும் எந்த மொழியாக்கமும் செய்யப்படாமல் சேதமின்றி அசலாகவே நீடித்திருக்கும்அந்தச் சொல்லை விளக்கி, முற்காலத்தில் பெரும் கட்டிடங்கள் தூண்கள் எழுப்பப்படுகையில் அவற்றை நிறுவி ஆமென் சொல்லும் வழக்கமிருந்தது என்பதைச் சொல்லி “நண்பர்களே, நான் இன்று பகிர்ந்துகொண்ட நற்செய்திகள் அனைத்தும் உங்களுக்கும் பயன்படட்டும் ஆமென்” என்று உரையை முடித்தேன்.
ஒர் சமயச்சடங்கு வைன் அளிக்கப்பட்டு முடிக்கப்படுவதைப் போல் ஒரு உரை அல்லது பிரார்த்தனை ஆமென் என்று சொல்லபட்டுத்தான் நிறைவுறுகிறது. ஆமென் என்பது ஒரு spiritual seal. ஒரு குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டிருக்கும் செவிலியின் உருவம் ஆமென் என்னும் சொல்லுக்கான சித்திரமாக முன் காலத்தில் புழக்கத்திலிருந்தது.
மதியம் கடலைக்கறியும் பருப்புமாக எளிய ஆனால் சுவையான உணவு அளிக்கப்பட்டது. காட்சன் பனையோலையில் அவர் கைப்படச் செய்த அழகிய திராட்சைக் கொத்து, ஊதா வண்ணமேற்றப்பட்டு எனக்குப் பரிசளிக்கப்பட்டது. ஒரு சிறு தொகையும் உறையிலிட்டு அளித்தார்கள். உணவு இடைவேளையில் பிள்ளைகளுக்குத் தமிழ் எழுதப் படிக்கவும், பாடல் பாடவும் தன்னார்வலர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது.
மதியம் வெளியே தோட்டத்தில் நின்று தாவரங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். மீண்டும் உள்ளே சென்று மேடையேறி சாம் ஹிக்கின்பாதமின் ’ கலப்பையும் நற்செய்தியும்’ நூலை நான் தமிழில் மொழியாக்கம் செய்வதைச் சொல்லி, ” கோதுமையை விளைவிப்பவனே நற்செய்தியைப் பிரசங்கிப்பவனைக் காட்டிலும் கர்த்தருக்கு நெருக்கமானவன்” என்று சாம் சொல்லியிருப்பதைச் சொல்லி உரையை முழுமை செய்தேன். களைத்திருந்தேன், ஆனாலும் நிறைவுற்றிருந்தேன்.
பாண்டிச்சேரியிலிருந்து பாரதி செந்தூர் எனக்கு அஸ்ஸாமின் நெய் மிளகாய் விதைகளை அனுப்பி இருந்தாள். அந்தச் செடி இங்கு வளருமா என எனக்குச் சந்தேகம் இருந்தது. ஆனாலும் ஒரு சிறு பாத்தி பிடித்து அதை விதைத்தேன். பத்து பன்னிரண்டு செடிகள் முளைத்து அதில் சில பிழைத்து 4 செடிகள் மட்டும் வளர்ந்தன. அதில் பூக்கள் பூத்ததும் மகிழ்ந்து போனேன். சின்ன பிஞ்சுகளைப் போட்டோ எடுத்து வைத்துக்கொண்டேன். உலகின் மிகக் காரமான மிளகாய்களில் ஒரு வகை வீட்டில் வளர்வதில் பெருமையாக இருந்தது
.
சில நாட்களுக்கு முன்பு மும்பையிலிருந்து வந்ததும் போய்ப் பார்த்தேன். இரண்டு காய்கள் நன்றாக மூத்துத் திரண்டிருந்தன.. இன்று காலை கொஞ்சம் மேகமூட்டமாக இருந்தது. மழை வருமென நினைத்து மயில்கள் அகவிக்கொண்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமைதானே, மதியம் சுடுசாதம் சாப்பிடுகிறேன் எனவே கொஞ்சம் ஸ்பெஷலாகச் சமைக்கலாம் என்று அந்த மிளகாய்களைப் பறிக்கப் போனேன்.
தோட்டத்தில் சில மயில்கள் குஞ்சுகளுடன் குப்பையைக் கிளறிக்கொண்டிருந்தன. என்னைக் கண்டால் அவை அஞ்சுவதில்லை. நான் மயில்கால் சூப் சாப்பிடமாட்டேன் என எப்படியோ அவற்றிற்குத் தெரிந்திருக்கிறது.
நான் மிளகாய்ச் செடிகளைப் பார்த்து நடக்கையிலேயே ஒரு பெண் மயில் அந்தச் செடி அருகில் போய் இரண்டு சிவந்த மிளகாய்களையும் கொத்தி வாயிலிட்டு என் கண் முன்னாலேயே லபக் என விழுங்கியது.
கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை கதைதான். “பொக்” எனப் போய்விட்டது. “அடீ மயிலே, அஸ்ஸாம் நெய் மிளகாயேதான் வேணுமா உனக்கு? பக்கத்துப் பாத்தியில் சம்பா மிளகாய் நீள நீளமாய் இருந்ததே பார்க்கலையா நீ? என்ன அநியாயம்!”
பாண்டிச்சேரியிலிருந்து பார்சலில் வந்த மிளகாய் விதைகளில் எல்லாம் அல்லா அந்த மயில் பேரை எழுதி வைத்திருப்பார் போல. அந்த மயிலின் பேர் என்னவாக இருக்கும்?
இன்னும் நாலைந்து பிஞ்சுகள் இருக்கின்றன அதிலொன்றிலாவது லோகமாதேவி என்னும் பெயர் இருக்குமாவென்று அல்லாவுக்குத்தான் தெரியும்.
காலையிலேயே பெருங்கூச்சல் கேட்டது. சமையலறை ஜன்னலிலிருந்து பார்த்தால் தெரியும் தோட்டத்தின் உரிமையாளரின் காட்டுச்சாலை, வடக்கில் நம் வீட்டுச் சமையலறை ஜன்னலைப் பார்த்துத்தான் இருந்தது. ராசுக்கவுண்டர் பெரிதாகச் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்.
‘’.. போடு, கீழே போடு, இருக்கறது பூரா நீ வழிச்சுட்டுப் போயிட்டா நான் ஒரத்துக்கு என்ன பண்ணறது? அதுவும் கேட்கறதுமில்ல; என்னமோ கொப்பனூட்டிலிருந்து எடுக்கறவளாட்டம் போடு கீழே ..’’
முருங்கை இலைகளை பருப்பில் போட்டதும் அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு ஜன்னலில் எட்டிப்பார்த்தேன். ராசுவின் எதிரில் கையில் அள்ளிய சாணியுடன் மாரியம்மாள் தலை குனிந்து நின்றிருந்தாள். விளிம்பு நிலை மக்களில் ஒருத்தி மாரியம்மாள். சனி ஞாயிறுகளில் அடுத்த நிறுத்தத்தில் இருக்கும் ஏராளமான கடைகளின் வாசலில் ஒன்றிரண்டில் சாணி போட்டு வழித்துவிட்டால் நூறோ இருநூறோ கிடைக்கும். அவ்வப்போது இப்படி அருகிலிருக்கும் தோப்புகளில் சாணியை பலர் இப்படி எடுத்துக்கொள்வார்கள். அது ஒரு உபரி வருமானம்.
மாரியம்மாள் இன்று ராசுக்கவுண்டரிடம் அதற்குத்தான் திட்டு வாங்கிக்கொண்டிருக்கிறாள்.
ராசுக்கவுண்டர் தனி ஆள். ஒரு வகையில் எனக்கு உறவினரும் கூட. அவரின் நங்கையின் வகையில் ஒரு பெண்தான் என் அண்ணன் ஒருவர் கல்யாணம் செய்துகொண்டிருக்கிறார். ஆனால் நான் ராசுவிடன் பேசியது கூட இல்லை. ஒரு பழைய சைக்கிளில் நான் கல்லூரிக்குச் செல்கையில் என்னை கடந்து அவர் பால் ஊற்றச் செல்கையில் அவ்வபோது பார்த்திருக்கிறேன். ஏனோ அவர் திருமணம் செய்துகொள்ளாமல் அந்த கோடிக்கணக்கான பெறுமதி உள்ள வீட்டில் ஓலைச்சாலையில் வசிக்கிறார். மாடும் கன்றும் எருமையும் ஆடும் கோழியும் தேங்காயும் மாங்காயுமாகச் செழிப்பான தோட்டம் அது.
சாணி அள்ளியதற்கு கொஞ்சம் அதிகமாகவே திட்டு , சத்தமும் அதிகமென்பதால் அக்கம்பக்கத்து ஆட்கள் எட்டிப் பார்த்தார்கள். ராசு மேலும் மகிழ்ந்து குரலுயர்த்தி, “எடுபட்ட சிறுக்கி, இனி தோட்டத்துப் பக்கம் வந்தீன்னா காலை முறிச்சுப்புடுவேன், போடி!” என்று கத்தினார்.
மாரியம்மாள் ஒதுங்கி ஓரமாகச் சென்று சாணியைக் கீழே போட்டுவிட்டுத் திரும்பி நடந்தாள். பின்னால் “சிறுக்கி மக” என்ற ராசுவின் குரல் எனக்கும் கேட்டது.
கோவிட் தொற்று முடிந்து கல்லூரி திறந்து சில மாதங்களில் ஒருநாள் ஏற்காட்டுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. கல்லூரியிலிருந்தே காலை 5.30-க்குப் பேருந்து புறப்படுவதாக ஏற்பாடு. நான் வேடசந்தூரிலிருந்து புறப்படும் 5 மணி முதல் பேருந்தைப் பிடிக்க கருக்கிருட்டில் டார்ச் அடித்தபடி வெளியே வந்தேன். 200 அடிகள் பேருந்து நிறுத்தத்திற்கு நடக்க வேண்டும்.
தாத்தாரப்புச்சி மரத்திற்கருகில் ஏதோ ஒரு அசைவு, அப்படியே திடுக்கிட்டு நின்று விட்டேன். திரும்பி வீட்டுக்குச் செல்வதும் முடியாது. முதுகுக்குப் பின்னால் அந்த அசைவு மேலும் பயமுறுத்தும். அந்நேரத்துக்கு எந்த நடமாட்டமும் இல்லை, மையச் சாலையில் ஒரே ஒரு பைக் வெளிச்சமாக அகன்று போனதைத் தவிர.
தலையில் முக்காடிட்டுக்கொண்டிருந்த மாரியம்மாள் மெல்ல வெளியே வந்து என்னைச் சாதிப் பெயர் சொல்லி அழைத்து – “ச்சி நாந்தானுங்க” என்றாள்.
ஆச்சரியமாக இருந்தது, அந்த இருட்டில் அவள் அங்கே ஒளிந்திருந்தது. “என்ன மாரியம்மா, இந்நேரத்துல இங்கே?” என்றேன்.
அவள் சற்று நகர்ந்து முன்னே வந்து முக்காட்டை எடுத்துவிட்டாள். பொழுது துலங்கிக்கொண்டிருக்கையில், அவள் முகம் கொஞ்சமாகத் தெரிந்தது. தலையில் நெற்றியைச் சுற்றிப் போடப்பட்டிருந்த வெள்ளைநிறக் கட்டில் ரத்தம் ஊறிக்கசிந்திருந்தது.
சில நாட்களுக்கு முன் தான் அவள் புருஷன் மாரி அவள் மீது சந்தேகப்பட்டு பாட்டிலில் ஓங்கி தலையில் அடித்த ரத்தப் பெருக்கோடு அப்பா வீட்டிற்குப் பஞ்சாயத்துக்கு வந்தார்கள். சமாதானம் செய்து அம்பரம்பாளையம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தபோது போட்ட கட்டுதான் அது.
மாரியம்மாள் அந்தச் சமூகத்திலேயே கொஞ்சம் வெளுப்பும் லட்சணமுமாக அழகி. மாரி வழக்கமான புருஷன்மார்களைப் போலத்தான், ஊதாரி, குடிகாரன். ஆனால் மாரியம்மாள் மீது எப்போதும் சந்தேகம். இரண்டு பிள்ளைகள் வேறு.
மாரியம்மாளிடம் “இங்கே வா, என்ன இந்நேரத்தில் இங்கே இருக்கே? என்ன?” என்றேன்.
திகைப்பாய் இருந்தது. கீழ் சாதி மேல் சாதி எல்லாம் இந்தச்சுரண்டலுக்கு இல்லை போலிருக்கிறது. “என்ன மாரிம்மா? முதல்லயே வீட்டில் உனக்குப் பிரச்சனை, இப்படிப் பண்ணலாமா? மாரிக்குத் தெரிஞ்சா இன்னும் சண்டை ஜாஸ்தியாகுமில்ல?” என்றேன்.
’’..சரி வீட்டுக்குபோ யாராச்சும் பார்ப்பாங்க..’’ என்று சொல்லிவிட்டு விலகி பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தேன். அன்று முழுவதும் மாரியம்மாளின் கீழுதட்டில் ரத்தம் கசிந்த காயம் நினைவிலேயே இருந்தது.
அந்த மாரியம்மாள் தான் அதே ராசுக்கவுண்டரிடம் இன்று திட்டுவாங்குகிறாள் இருட்டில் நடப்பது யாருக்கும் தெரியாதுதான் என்றாலும் ஊரறிய இப்படி வேஷம்போட்டால் ,சந்தேகமும் வராதல்லவா?
அங்கிருந்து வீட்டை நோக்கி வந்த மாரியம்மாள் பின் வாசலில் நின்றிருந்த என்னைப்பார்த்து’’.. லீவுங்களாங்க –ச்சி?,,’’ என்றாள் . ’’..ஆமா மாரிம்மா என்றேன்..’’சிரித்தபடி அவளது மாட்டை இழுத்துக்கொண்டு போனாள். நெற்றியில் மாரி பாட்டிலில் அடித்த காயம் தழும்பாகி இருந்தது.
உள்ளே வந்தேன். அலைபேசியில் ஏராளமான மகளிர் தின வாழ்த்துக்கள் வந்திருந்தது. எல்லோருக்கும் ’’ஹேப்பி வுமன்ஸ் டே ’’என்று பதில் சொல்ல வேண்டும்.
சாமுவேல் மற்றும் சூசன்னா வெஸ்லே தம்பதியினருக்கு 19 பிள்ளைகள்.
19 பிள்ளைகளை வளர்ப்பதைக் குறித்துச் சிந்திப்பதை விட அத்தனை கர்ப்பகாலத்தையும் 19 பிரசவங்களையும் கற்பனை செய்யவே நடுக்கமாக இருக்கிறது. அதுவும் இப்போதிருக்கும் எந்த நவீன மருத்துவ வசதிகளும் இல்லாத காலத்தில்.
சாமுவேல் இறைப்பணியாளர். சூசன்னா இல்பேணுநர். ஆனால் சூசன்னாதான் மெதடிஸப் பிரிவின் தாய் என்று குறிப்பிடப்படுகிறார். அப்படி ஒரு கட்டுக்கோப்பான முறையில் குடும்பத்தை அவர் நடத்தினார். 19-ல் 10 பிள்ளைகள் பல காரணங்களால் இறந்து போனார்கள் 9 பேரை நன்கு வளர்த்து ஆளாக்கினார்.
மூன்று தளங்கள் கொண்ட வசதியான பெரிய வீடு அவர்களுடையது. ஆனால் அந்த வீடு தேவாலயத்தால் அவர்கள் வசிக்க அளிக்கப்பட்டது, அவர்களுடைய சொந்த வீடு அல்ல. அது மரப்பலகைகளும் வைக்கோலும் கொண்டு கட்டப்பட்ட, எடையற்ற எளிதில் தீப்பிடிக்கும் படியான வீடு. அக்காலத்தில் இறைப்பணியாளர்கள் மேல்மட்டவாசிகளைப் போல இருக்க வேண்டும் என்று தேவாலயங்கள் எதிர்பார்த்தன. எனவே சாமுவேல் அந்த வீட்டில் வசித்து, கண்ணியமான உயர்ந்த ஆடைகள் அணிந்து குழந்தைகளை ஆக்ஸ்போர்டு பள்ளியில் படிக்க அனுப்ப வேண்டியிருந்தது. அத்தனை வசதியில்லாத அவர் அதன் பொருட்டு பல கடன்களிலும் சிக்கி இருந்தார்.
அவர்கள் வசித்த Epworth என்னும் ஒருசதுப்பு நிலமும் சிறு சந்தைப்பகுதியையும் மையமாகக் கொண்ட சிறு நகரத்தில் இருந்த மக்கள், அயலவரை எதிர்கொள்வதில் பரிச்சயமற்றவர்களாகவும் அவர்களிடம் கடுமை காட்டுபவர்களாகவும் இருந்தனர். உள்ளூர்வாசிகளும் கிறிஸ்தவர்கள் தான் என்றாலும் அவர்கள் சாமுவேல் வெஸ்லே சார்ந்திருந்த கிறிஸ்தவப் பிரிவைச் சாராதோர்.
1700-களில் அங்கிருந்த அனைவருமே கிறிஸ்தவர்கள் தான் என்றாலும் அதில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என இரு பிரிவுகள் இருந்தனர். சாமுவேல் வெஸ்லே உள்ளூர்வாசிகளிடம் வரி வசூலிக்கும் தேவாலயத்தைச் சேர்ந்தவராக உயர்ந்த பிரிவிலும், பிற உழைக்கும் உள்ளூர் வாசிகள் தாழ்ந்த, தேவாலயங்களுக்கு வரி செலுத்தும் பிரிவிலும் இருந்தனர். மேலும் சாமுவேல் மிகுந்த கண்டிப்பான இறைப்பணியாளராக இருந்து உள்ளூர்வாசிகள் மது அருந்துவது, சுகாதாரமின்றி இருப்பது ஆகியவற்றைப் பாவம் எனக் கண்டித்தார்.
தேவாலயங்களுடன் அரசும் இணைந்து கொண்டு வழிபாடுக்கான விதிகளை மக்களிடையே திணித்தது. எனவே, வெளியூரிலிருந்து வந்து நம்மைக் கண்டித்து, விதிகளுக்குட்படச் செய்து, வரி வசூலித்து, எப்படி வழிபட வேண்டுமென வகுப்பெடுப்பவர்கள் என அந்தப் பிரிவின் மீது உள்ளூர்க்காரர்களுக்கு வெறுப்பு உண்டாகி அது சாமுவேலின் மீதான வெறுப்பாக வளர்ந்து கொண்டிருந்தது.
சாமுவேலின் நாயைக் கல்லெறிந்து கால் ஒடித்தார்கள். சாமுவேல் வீட்டுப் பசுக்களுக்கு நஞ்சூட்டிக் கொன்றார்கள். இரவுகளில் பலமுறை வீட்டின் மீது கல்லெறியப்பட்டது. மிகச் சிறிய தீ விபத்து இரண்டு முறை உண்டாக்கப்பட்டு அப்போதே கவனிக்கப்பட்டதால் அணைக்கப்பட்டது. சாமுவேல் குடும்பத்தினர் மீது உள்ளூர்க்காரர்களுக்கு ஒரு புகைச்சல் இருந்தது.
எப்வொர்த் நகரிலிருந்து சிறு குளங்களும் நதிகளும் இணைந்த மாபெரும் சதுப்புநிலத்தை நம்பியே அங்கிருந்தோர் வாழ்ந்தனர். அந்தச் சதுப்புநிலத்திலேயே நாணலைக் கொண்டு எடையற்ற வீடுகளைக் கட்டிக்கொண்டு மீன் பிடித்தும் பறவைகளை வளர்த்துக்கொண்டுமிருந்தார்கள்.மழையற்றுப்போய் சதுப்பு நிலம் வறண்டபோது அங்கு கால்நடைகளை மேய்த்தார்கள்.
ஆனால் முதலாம் சார்லஸ் மன்னர் காலத்தில் அரசு டச்சு பொறியாளர்களை வரவழைத்து “Draining the fens” என்னும் முரண்பாடுகள் அதிகமிருந்த ஒரு பொறியியல் முறையை அறிமுகம் செய்து, அதை நடைமுறைப்படுத்தி அந்தச் சதுப்புநிலத்தின் நீரை முழுக்க வெளியேற்றி அங்கு மண்ணைக்கொட்டி மேடாக்கி கோதுமை வயல்களை உருவாக்கினார்கள். புதிய வயல்கள் பெரும் பணக்காரர்களுக்கும் , சாமுவேல் உள்ளிட்ட இறைப்பணியாளர்களுக்கும் அளிக்கப்பட்டு அங்கு விளைந்த தானியம் அரச குடும்பங்களுக்கு அனுப்பப்பட்டது.
நகர மேம்பாட்டுத் திட்டம் என்னும் பெயரில் இது நடந்ததால் உள்ளூர்க்காரர்களின் வாழ்வாதாரம் முழுக்கப் அழிந்தது. சாமுவேல் இந்த நகர மேம்பாடு என்னும் அரசின் திட்டத்தை ஆதரித்ததாலும் அவர் மீது உள்ளூர் மக்களுக்கு விரோதம் வந்தது. சாமுவேலுக்குச் சொந்தமான வயல்வெளி முழுக்கத் தீயிட்டு எரிக்கப்பட்டது. அவரது வீடும் மீண்டும் தீக்கிரையாக்கப்பட்டது.
சாமுவேல் fenland மக்கள் என அழைக்கப்பட்ட அந்த சதுப்பு நில மக்களின் சுகாதாரமின்மையை இந்த வளர்ச்சித் திட்டம் மேம்படுத்துமென நினைத்தே அதற்குச் சாதகமாக நடந்துகொண்டார்.
உண்மையில் அந்த நகரவாசிகள் எதிர்த்தது சாமுவேல் என்னும் தனிமனிதரையல்ல, அரசையும் , வளர்ச்சித் திட்டங்கள் என்னும் பெயரில் அவர்கள் வாழ்வாதாரத்தை அழித்த அரசாங்கத்தையும், இழந்த பொருளாதாரத்திற்கான பழிவாங்கலாகவுமே அவர்கள் சாமுவேலை எதிர்த்தார்கள். அரசியல் பொருளாதாரம் மற்றும் இறையியல் காரணங்கள் அவர்களின் எதிர்ப்போடு பின்னப்பட்டிருந்தன.
சூசன்னா குழந்தைகளை மிகவும் கட்டுக்கோப்புடன் வளர்த்தார். அனைவருக்கும் இறையியல், லத்தீன் மற்றும் கிரேக்க மொழிப் பாடங்கள் பள்ளிப் பாடங்களுடன் அன்றாடம் வீட்டிலேயே நடந்தது. மிகக் கண்டிப்பாக மணி அடித்தால் சாப்பாடு என்பார்களே அப்படி உணவுக்கான காலம் கடைப்பிடிக்கப்பட்டது. இரவு உணவு மாலை 6 மணிக்கே முடிந்து அனைவரும் படுக்கைக்குப் போக வேண்டும் என்னும் நெறியையும் சூசன்னா கட்டாயமாக்கி இருந்தார்.
எந்தப் பொருள் வேண்டுமென்றாலும் கம்பீரமாக வந்து அதைக் கேட்டுப் பெற வேண்டும்; ஒருபோதும் அழுது அடம்பிடிக்கக்கூடாது. அப்படி அடம்பிடித்தால் அந்தப் பொருள் கிடைக்கவும் கிடைக்காது என்பதை சூசன்னா நடைமுறைப்படுத்தி இருந்தார். இரவுகளில் ஒவ்வொரு குழந்தையின் அருகிலும் அவர் அமர்ந்து ஜெபித்தோ அல்லது கதைகள் சொல்லியோ பாடல்கள் பாடியோ உறங்கச் செய்து பின்னர் அடுத்த படுக்கைக்கு வருவார். இப்படி சூசன்னாவின் கட்டுப்பாடான முறைமைகளுக்குட்பட்ட வாழ்க்கை முறைதான் பின்நாட்களில் ஜான் வெஸ்லே மெத்தடிஸம் என்னும் பிரிவைத் துவங்க அடித்தளமிட்டது.
1709 பிப்ரவரி 9-ம் தேதி இரவில் சூசன்னா உடல்நலமின்றி அவரது படுக்கையறையில் இருந்தார். சாமுவேல் அவரது அறையில் உறங்கிக்கொண்டிருந்தார். குழந்தைகள் அனைவரும் நர்சரி என அழைக்கப்பட்ட இரண்டாம் தளத்தில் இருந்த அவர்களுடைய படுக்கையறையில் இருந்தார்கள். அப்போது வீட்டின் கூரையில் சாமுவேலுக்கு எதிரானவர்களால் தீ வைக்கப்பட்டது.
புகையில் விழித்துக்கொண்ட வேலைக்காரப் பெண் சாமுவேலையும் சூசன்னாவையும் எழுப்பினார். கூரையிட்டிருந்த காய்ந்த வைக்கோலில் தீ மளமளவெனப் பற்றி எரிந்ததால் சாமுவேல் மனைவியையும் மற்ற குழந்தைகளையும் தோட்டத்துக் கதவு வழியாகவும் ஜன்னல் வழியாகவும் விரைந்து காப்பாற்றி அழைத்துச் சென்றார். அத்தனை பேரும் வெளியே வந்தபோதுதான் தெரிந்தது, அப்போதுதான் 5 வயது முடிந்திருந்த ஜான் வெஸ்லே அங்கு இல்லை என்பது. சாமுவேல் பலமுறை மீண்டும் வீட்டுக்குள் நுழைய முயன்றும் தீக்கொழுந்துகளின் வேகம் அவரை நுழைய விடவில்லை. படிக்கட்டுக்கள் முழுவதுமாக எரிந்து விழுந்துவிட்டிருந்ததால் மேல் தளத்துக்குச் செல்ல வழியே இல்லை.
இரண்டாம் தளத்தின் ஜன்னல் வழியே அழுதுகொண்டு எட்டிப் பார்த்த ஜானைக் கண்ட உள்ளூர்வாசிகள் சிலர் (அவர்களில் நெருப்பு வைத்தவர்களும் இருந்தார்கள் எனினும் ஒரு குழந்தை நெருப்பில் இறப்பதை அவர்கள் விரும்பவில்லை), ஒருவர் தோள் மீது ஒருவர் நின்று ஒரு மனித ஏணியை உருவாக்கி ஜானைக் காப்பாற்றினார்கள். ஜானை ஒருவர் தனது தோளில் தாங்கிக்கொண்ட மறு வினாடி வீட்டின் கூரை முழுவதுமாக எரிந்து கீழே சரிந்து சாய்ந்தது.
சூசன்னா, ஜான் உயிர்பிழைத்தது ஒரு அற்புதம் என்றும், ஏதோ ஒரு பெரிய காரணத்திற்காகவே அவர் அந்தத் தீ விபத்திலிருந்து பிழைத்திருப்பதாகவும் நம்பினார்.
‘பைபிளில் குறிப்பிட்டிருக்கும்’ “இது அக்கினியிலிருந்து தப்புவிக்கப்பட்ட கொள்ளிக்கட்டையல்லவா?” “The Lord rebuke you, O Satan! The Lord who has chosen Jerusalem rebuke you! Is this not a brand plucked from the fire?” (Zechariah 3:2) என்னும் வசனத்தைச் சொல்லி, ஜான் அப்படி முழுமையாக எரிந்து சாம்பலாகப் போகும் ஒரு நெருப்புத் தணலிலிருந்து, ஒரு துண்டு விறகை மட்டும் கடைசி நேரத்தில் கையை விட்டு எடுப்பதைப் போலக் கடவுளால் காப்பாற்றப்பட்டவன் என்றார். இது ஜானின் மனதில் ஆழப் பதிந்தது.
ஜான் வெஸ்லே தன் வாழ்நாள் முழுக்க இந்த வாசகத்தை மறக்கவில்லை. ஒரு “மீட்கப்பட்ட கொள்ளிக்கட்டை”யான தான், தனக்குக் கிடைத்த இந்த மறுவாழ்வை மக்களுக்காகவும் இறைவனுக்காகவும் செலவிட வேண்டும் என்று கருதினார். பிற்காலத்தில் அவர் வரைந்த தனது அதிகாரப்பூர்வ ஓவியத்தில், பின்னணியில் எரியும் வீட்டையும், கீழே இந்த வாசகத்தையும் இடம்பெறச் செய்தார்.
தீவிபத்திற்குப் பிறகு சாமுவேல் வீட்டைப் புதுப்பிக்க 400 டாலர்கள் வரை தேவாலயத்திலிருந்து கடன் பெற்றார். ஏற்கனவே இருந்த பல கடன்களுடன் அதுவும் சேர்ந்துகொண்டு அவரை மரணம் வரை பெருங்கடனாளியாக்கியது. ஆனால் வீட்டை மீண்டும் அவர் புதுப்பித்தார்.
1711-1712 காலப்பகுதியில், சாமுவேல் வெஸ்லே லண்டனில் நடந்த ஒரு முக்கிய மதக் கூட்டத்திற்குச் சென்றிருந்தார். அவருக்குப் பதிலாகப் பொறுப்பேற்ற தற்காலிகப் பாதிரியார் திறமையாகப் பிரசங்கம் செய்யவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த சூசன்னா, தனது குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் வீட்டிலேயே வேதாகமப் பாடங்களை நடத்தத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் சூசன்னாவின் குழந்தைகளும் உறவினர்களும் பணியாட்களும் கலந்துகொண்ட ஒரு குடும்ப வழிபாடாகத்தான் அது இருந்தது. ஆனால், இதைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தினர் மெல்ல மெல்ல வர ஆரம்பித்தனர். விரைவில் சூசன்னாவின் சமையலறையில் 50 பேர், பிறகு 200 பேர் என மக்கள் குவியத் தொடங்கினர். இடமில்லாமல் பலர் வாசலுக்கு வெளியேயும் நின்று கவனித்தனர். அந்தக் காலத்தில் ஒரு பெண் பொதுமக்களுக்கு மதப் போதனை செய்வது என்பது மிகப்பெரிய புரட்சியாகவும், சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டது.
ஊர் திரும்பிய சாமுவேல் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தேவாலயம் நிச்சயமாக இதை விரும்பாது என சூசன்னாவைக் கண்டித்துப் பிரசங்கக் கூட்டத்தை உடனே நிறுத்தச் சொன்னார்.சூசன்னா இதற்கு இப்படி ஒரு பதிலைச்சொன்னார்.
“நீங்கள் இதை நிறுத்தச் சொன்னால், நான் நிறுத்திவிடுவேன். ஆனால், இந்த மக்களின் ஆன்மீகத் தேவையை முறையாக நிறைவேற்றாததற்காகக் கடவுள் கேட்கும் கேள்விக்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும். தீர்ப்பு நாளில் என்னை விடுவித்து, உங்கள் மீது அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக நீங்கள் எழுதிக் கொடுத்தால், நான் நிறுத்திவிடுகிறேன்.”
சாமுவேல் அதன்பினன்ர் மறுபேதும் சொலல்வில்லை
சாமுவேல் வெஸ்லே 1735 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 அன்று, தனது 72-வது வயதில் எப்வொர்த் நகரில் காலமானார்.
அவர் இறக்கும் தருவாயில் அவரது மகன்கள் ஜான் மற்றும் சார்லஸ் வெஸ்லே அவர் அருகில் இருந்தனர். அவர் தனது பிள்ளைகளை ஆசீர்வதித்து, அமைதியான முறையில் உயிர் நீத்தார்.அவர் இறந்தபோது குடும்பம் கடும் கடன் சுமையில் இருந்தது. அவரது மனைவி சூசன்னாவின் கையில் ஒரு பைசா கூட இல்லை. அடக்கச் செலவுக்காகவும் கடன்களை அடைக்கவும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சாமுவேல் வெஸ்லே 40 ஆண்டுகள் பணியாற்றிய எப்வொர்த் புனித ஆண்ட்ரூ தேவாலய முற்றத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்.
பிற்காலத்தில் மெதடிச பிரிவை உருவாக்கிய காரணத்தால் தேவாலயங்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட ஜான் வெஸ்லே புனித ஆண்ட்ரூ தேவாலயத்துக்கு வந்தபோது, தேவாலயத்திற்குள் பிரசங்கிக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கல்லறைத்தோட்டத்தில் அவர் தனது தந்தையின் கல்லறையின் மீது நின்றுகொண்டே அங்கு கூடிருந்த மக்களுக்குப் பிரசங்கம் செய்தது மிகக் குறிப்பிடத்தக்க ஒரு வரலாற்று நிகழ்வு.
சூசன்னா ஜூலை 23,1742-ல் இறக்கும் தருவாயில் பிள்ளைகளிடம் தன் உயிர் உடலைவிட்டுப்பிரிகையில் தேவைனைப்போற்றிப் பாடலொன்றை பாடும்படி கேட்டுக்கொண்டார். அப்படியே பாடப்பட்டது.
ஆகஸ்ட் 1, 1742 அன்று லண்டனில் ஒரு கல்லறைத் தோட்டத்தில் நடந்த தாயின் அடக்க ஆராதனைக் கூட்டத்தில் வழக்கமாக சம்பிரதாயமாக வாசிக்கப்படும் இரங்கல் செய்திக்கு மாற்றாக ஜான், தாய் தங்களை எப்படி வளர்த்தினார் என்பதை கூடியிருந்த ஆயிரக்காணோருக்கு முன்பாக வாசித்துச்சொன்னார். கூடவே கடவுளின் இறுதித்தீர்ப்பை, வெள்ளை நிற அரியாசனத்தில் வீற்றிருக்கபோகும் தேவனை, கிரியைகளின் புத்தகங்களும் ஜீவபுத்தகங்களும் திறககப்படுவதைக் குறித்தும் நீண்ட உரையாற்றினார்.
தனது தாயார் ஒரு முன்மாதிரியான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்ந்தவர் , அவருடைய பெயர் “ஜீவ புத்தகத்தில்” நிச்சயம் இருக்கும் என்பதை கூடியிருந்த மக்களுக்கு உணர்த்தவே இந்தப் பகுதியை ஜான் உரையாற்றத் தேர்ந்தெடுத்தார்.
எனக்கும் கிறிஸ்துவுக்குமான அணுக்கமென்பது பள்ளிக்காலத்திலிருந்தே இருக்கிறது. கிறிஸ்துவத்துடனல்ல, கிறிஸ்துவுடன் மட்டும்தான். Son preference உள்ள குடும்பத்தில் பிறந்தது மட்டுமல்லாது பெண்குழந்தைகளை பாரமாகவும் பெரும் சுமையாகவும் நினைத்து பாரபட்சமாக நடத்தும் குடும்பத்தில் பிறந்ததால் நானும் மித்ராவும் பெரும்பாலும் உதாசீனப்படுத்தப்பட்டோம். வீட்டுவேலைகள் செய்ய எங்களைப் பயன்படுத்திக்கொண்டார்கள், அவ்வளவுதான். நல்ல உடை, போதுமான உணவு, கவனிப்பு, அன்பு, ஆதரவு எதுவுமில்லை.
அப்பாவைக் குறித்து பெரும் அச்சம் நிரம்பி இருந்த பால்யமாகையால், வீட்டிலிருந்து தப்பித்து பள்ளிக்குச்செல்வது பெரும் விடுதலையாக இருந்தது. வகுப்பறைகளில் நானே உருவாக்கிக்கொண்ட ஒரு கற்பனைக்குடும்ப வாழ்க்கையில் மூழ்கி இருப்பேன். அப்போதெல்லாம் அரசு இலவசமாகக் கொடுக்கும் நோட்டுப்புத்தகங்கள் தான். அதில் கடைசிப்பக்கத்தில் மனதில் துயர் நிரம்பி இருக்கையில் அல்லது அவரது முறம் போன்ற கையால் அடிவாங்கி மூக்குச்சில்லுடைந்து ஈரக்கர்சீப்பை மூக்கில் வைத்துக்கொண்டு வரும் நாட்களில் என் கற்பனை அப்பாவுக்கு கடிதம் எழுதுவேன். அப்பாவுக்கு மட்டும்தான். அம்மா என்னிடம் அன்பாக இருந்ததில்லையெனினும், அப்பாவைப் போல அச்சுறுத்துதலும் மிரட்டலும் அம்மாவிடம் இல்லை. எனவே ஒரு அன்பான, அடிக்காத, கார்க் குண்டுகள் போட்ட துப்பாக்கியைக் காட்டி சுட்டுக்கொன்று விடுவதாய் மிரட்டும் அப்பாவுக்கு மாற்றாக மனதில் கற்பனை செய்து வைத்திருந்த அந்த அப்பாவுக்கு “ஏன் என்னை இங்கே கொண்டு வந்து விட்டீர்கள்? எப்போ வந்து கூட்டிப் போறீங்க? என்னால் இங்கே இருக்கவே முடியவில்லை” என்றும், பல சமயங்களில் ’ரொம்ப பசிக்குதுப்பா’ என்றும் கடிதம் எழுதுவேன்.
கடிதம் எழுதி அந்த காகிதத்தை கிழித்து டெஸ்க்கிற்கு உள்ளே வைத்துவிடுவேன். அப்படி உள்ளே போட்டுவைத்த அந்த கடிதம் அந்த கற்பனை அப்பாவிடம் போய் சேர்ந்துவிடும் என்று எப்படியோ நம்பி, பதில் வருமென்று கூட காத்திருந்திருக்கிறேன். முற்றிலுமாக மனம் சிதைந்திருந்த நாட்கள் அவை . அப்படி கடிதம் எழுதுகையில் எல்லாம் சொட்டுச்சொட்டாக தாளில் விழும்படி கண்ணீருடன்தான் எழுதுவேன். இவையெல்லாம் 7, 8 வகுப்புகளின் போது.
9-ல் படிக்கையில் ஒருநாள் மாலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருக்கையில், முறையாக அனுமதி பெற்ற கன்னியாஸ்திரீகள் சாம்பல் நிற அங்கியும், நீளமான சங்கிலியில் தொங்கும் சில்வர் சிலுவையுமாக வந்திருந்து, அழகிய சிறிய பைபிளை எங்களுக்கு இலவசமாகக் கொடுத்தார்கள். அத்தனை நல்ல உள்ளங்கை அளவிலான, விளிம்பில் ஆரஞ்சு வர்ணம் தீட்டிய, தோலட்டை போடப்பட்ட, மிக வசீகரமான என்னவோ வாசனை அடிக்கும் ஒரு புத்தகத்தை இலவசமாகக் கொடுத்தது பெரிய விஷயமாக இருந்தது. அந்த பைபிளை பொக்கிஷமாக ஆனால் வகுப்பறையிலேயே வைத்துக்கொண்டேன்.
வீட்டுக்குக்கொண்டு போனால் அடிவிழும் என்று எப்படியோ தெரிந்திருந்தது. அந்த பைபிளை மறுநாள் திறந்து பார்க்கையில், அதனுள்ளே கர்த்தரின் ஒரு வண்ணப்படம் இருந்தது. ஒரு கையை ஆசீர்வதிப்பதுபோல் உயர்த்தி, சிலுவை அணிந்து, பிடரி வரை புரண்ட பொன்னிற கூந்தலும், நீலக்கண்களும், தலைக்கு பின்னே வானிலிருந்து பாய்ந்த ஒளிவெள்ளமுமாய் இருந்த அவரது புகைப்படத்திற்குக் கீழே ‘’பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்’’ என்று எழுதியிருந்தது. அந்த வாசகமும், அந்த புகைப்படமும், கருணை நிரம்பிய அந்த கண்களும் எனக்களித்த ஆசுவாசத்தையும், நம்பிக்கையையும் சொல்லவே முடியாது.
முரட்டு மீசையும் அரிவாளும் அலட்டலும் கட்டுச்சேவல் சண்டையும் ஜாதிவெறியுமாக இருந்த குடும்பத்து ஆண்களுக்கு மாற்றாக, கருணை ததும்பும் புன்னகைக்கும் நம்பியூட்டும் கர்த்தரே பதின்மவயதில் நான் கண்ட முதல் ஆணழகன். அந்தக் கைகைளை மானசீகமாக பற்றிக்கொண்டேன்.
அந்தப் புகைப்படத்தை லட்சக்கணக்கானமுறை எடுத்துப் பார்த்திருப்பேன். அதன் பிறகு அந்த கற்பனை அப்பாவுக்கு கடிதங்கள் ஏதும் எழுதியதில்லை. கர்த்தர் உடனிருக்கிறார் நான் தனியாக இல்லை எதற்கும் பயப்படவேண்டாம் என எப்படியோ ஒரு குழந்தைத்தனமான தைரியம் வந்துவிட்டிருந்தது..
பைபிளின் எழுத்துக்கள் பொடிப்பொடியாக இருந்ததால் சரியாக வாசிக்க முடியவில்லை. எனினும் அந்த புகைப்படம் எனக்கு மிக மிக நெருக்கமானதாக இருந்தது. பல வருடங்களுக்குப் பின்பு11-ம் வகுப்பிற்கு பள்ளி மாறுகையில், அதை வீட்டிற்கு கொண்டு வந்து அப்பாவிற்குத் தெரியாமல் ஒளித்து வைத்தது மட்டும் நினைவில் இருக்கிறது. பின்பு அது காணாமல் போனது.
அப்படி எனக்கும் கர்த்தருக்கும் ஒரு நல்ல தொடர்பு இருந்தது. பிற்பாடு கல்லூரியில் பைபிள் வாசித்திருக்கிறேன். ஒரு கிறிஸ்மஸ் தினத்தன்று பக்கத்து வீட்டு ஸேவியரின் மகள் பாரதியுடன் அவர்களது கத்தோலிக்க திருச்சபைக்குச் சென்று முழங்காலிட்டு அப்பமும் திராட்சைரசமும் பல் படாமல் விழுங்கி இருக்கிறேன். பசித்தவனுக்கு ரொட்டி தருவதைவிட மீன்பிடிக்கக் கற்றுக்கொடு என்று சொன்ன ரேஷனலிஸ்டாக தேவனை வெகுவாகப் பிடித்திருந்தது. ஒரு சில பைபிள் வசனங்களும் மனதில் நினைவிலிருந்தது, அவ்வளவுதான்.
இப்போது இந்த மெதடிஸ்ட் திருச்சபைக்கு வந்தது ஒரு அற்புதம்தான். பல நாட்களாக நானும் காட்சனும் பைபிள் தாவரங்களைக் குறித்து பேசியிருக்கிறோம். எனினும் அதில் ஈடுபட்டு வாசிக்க எனக்குப் பொழுதே இல்லாமலிருந்தது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு தாவரங்களின் உலகளாவிய பரவலைக் குறித்து, அதன் வரலாறுகளை வாசித்துக்கொண்டிருக்கையில், காற்றில், நீரில், பறவைகளால், விலங்குகளின் உடலில் ஒட்டிக்கொண்டு இப்படிப் பரவியது போலவே மனிதர்களாலும் தாவரங்கள் பரவியிருந்ததை வாசித்தேன்.
அதிலும் intentional, accidental என்று இரண்டு வகை. Accidental வகையில், மலையேற்றத்தில் ஈடுபடுபவர்களின் உடல்களில், செருப்புகளில் ஒட்டிக்கொண்டும், சர்வதேச விளையாட்டு வீரர்களின் பைகளிலும், செருப்புகளில் ஒட்டும் விதைகள் வழியாகவும் பல தாவரங்கள் பரவியிருக்கின்றன.
ஆனால் intentional வகையில் 1492-க்கு பிறகு கொலம்பஸ் பல நாடுகளுக்கும் பல கண்டங்களுக்குமிடையே தாவரங்களைக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தியதனால், 1492 என்னும் வருடம் Columbian exchange என்னும் பரவலில் மிக முக்கியமானதாக இருந்தது. நான் எழுதும் கட்டுரைகளின் தொகுப்பை வெளியிட எந்தப் பதிப்பாளர்களும் முன்வருவதில்லை. எனினும் நான் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறேன். 1492 என்னும் தலைப்பில் தாவரப் பரவலைக் குறித்து விரிவாக ஒரு நூல் எழுத, மீண்டும் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தேன்.
என் குருதி என திராட்சை ரசத்தை தேவனே கடைசி விருந்தில் சொல்லியதால் உலகெங்கிலும் தேவாலயங்கள் திராட்சை ரசம் மட்டும்தான் அளிக்க நினைத்தன ஆனால் எல்லா நாடுகளிலும் திராட்சைக்கொடி வளரவில்லை. எனவே கிறிஸ்துவ மிஷனரிகள் திராட்சைக்கொடியின் நறுக்கிய தண்டுகளை கப்பல் பயணங்களில் கொண்டு சென்று பல்வேறு நாடுகளிலும் திராட்சை வளர்ப்பைத் துவங்கி அது ‘Mission Grapes’ என்று அழைக்கப்பட்டதை அறிந்து, அதன்பின்னேயே பல மாதங்கள் சென்று தரவுகள் சேகரித்தேன்.
திராட்சைக்கொடி வளர்க்க காலநிலை ஏதுவாக இல்லாத நாடுகளில், திராட்சை ரசம் அளிக்க முடியாதபோது என்ன செய்வது என்னும் பிரச்சனைக்கு அளிக்கப்பட்ட பலவிதமான பரிந்துரைகளில், கெட்டியான திராட்சை சிரப் கொண்டு வந்து அதை நீரில் கலந்து அளிக்கலாம் என்னும் யோசனை, மெதடிஸ்ட் கிறிஸ்துவ பிரிவை உருவாக்கியவரான ஜான் வெஸ்லேயும் சொல்லியதை வாசித்தேன்.
மீண்டும் காட்சன் அழைத்தபோது நான் மும்பை வர விருப்பதாகச் சொல்லி, அங்கே ஒரு ஞாயிறு உரையாற்றுவதாக முடிவானது. ஜான் வெஸ்லே இரண்டு தாவரவியல் நூல்கள் எழுதியிருந்தார். மேலும், பல பழங்குடியினர் தாவரங்களை எப்படி, எதற்குப் பயன்படுத்தினார்கள் என்பதை அவரது 2,50,000 மைல் தூர குதிரைப் பயணத்தில் கவனித்து எழுதியதையும் அறிந்தேன். காட்சன் சார்ந்திருந்ததும் மெதடிஸ்ட் தேவாலயம் என்பது எனக்கு பெரும் ஆச்சரியமளித்தது.
நான் வெஸ்லேவின் நூல்களைக் கொஞ்சமாகக் குறிப்பிட்டுவிட்டு, கிறிஸ்துவின் மீது விசுவாசம் கொள்வது மண்ணில் விதையை நடுவதுபோல் என்று துவங்கி, வேர்பிடித்து வளர்ந்து, மலர்ந்து, கனியளித்து அறுவடை செய்வது என்று என் உரையைத் தயாரித்தேன். பின்பு பைபிள் சொல்லும் 7 தாவரங்களை , Consider the lilies மற்றும் I am the vine, you are the branches, குருத்தோலை ஞாயிறுக்கு ஏன் பேரீச்சையின் குருத்தோலை மட்டும்,என்று தொடர்ந்து, கர்த்தர் எப்படி இந்த பூமியென்னும் தோட்டத்திற்குத் தோட்டக்காரராகவும், தாவரவியலாளராகவும் இருக்கிறார் என்பது போன்ற உரையைத் தயாரித்திருந்தேன். The duel role of christ as a gardener and botanist என்னும் அந்தத்தயாரிப்பைத்தான் கருணையின்றி சரண் முற்றிலும் மாற்றச் சொல்லிவிட்டான்.
சனியன்று நள்ளிரவு வரை அமர்ந்து ஜான் வெஸ்லேயின் இறையியல் எப்படி தாவரங்களை அறிவதன் மூலம் படைத்தவனின் அற்புதங்களை அறியச் சொல்கிறது என்று புதிதாகத் தயாரித்தேன். உண்மையிலே முதல் உரை நான் தயாரித்தது, இரண்டாவது உரை நான் உணர்ந்து பேசியது. எனவே தேவாலயத்திற்குச் செல்கையில் மிகுந்த மனநிறைவுடன் சென்றேன்
மறுநாள் நான்காவது சனிக்கிழமை சரணுக்கு விடுமுறை, காலை 10 மணிக்கு மேல் எழுந்து வந்து நான் சமைத்திருந்த அடையை வெண்ணெய் வைத்துச் சாப்பிட்டான். மதியமும் உப்புப்பருப்பு, கோஸ் கறி, ரசம், புதினா துவையல், குழல் வடகம் என்று விரிவாகச் சாப்பிட்டு ஓய்வெடுத்தோம். மாலை ஒரு மாலுக்குப் போய் சும்மா சுற்றிப் பார்த்துவிட்டுச் செருப்பு, ஷூ வாங்கிவிட்டு ஹல்திராமில் சோலே பட்டுராவும் பனீர் தோசையும் சாப்பிட்டோம்.
வீடு வந்து இரவு மீண்டும் புறப்பட்டு மும்பை IKEA சென்றோம். போகும் போதே இரவு 9 மணி, 11 வரை இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் 10 மணிக்கெல்லாம் அடைத்துவிடுவோம் என ஒருத்தி ஸ்பீக்கரில் கொஞ்சிக் கெஞ்சிக்கொண்டிருந்தாள். சரணுக்கு வேண்டிய ஒரு சிலவற்றை வாங்கினோம். பாய் போலவே ஆனால் ஜமக்காளம் போலக் கெட்டியில்லாமல் மெஷினில் துவைக்கும் ஒரு தரை விரிப்பு வாங்கினோம். எனக்கென்னவோ பெங்களூரு ஐகியா அளவுக்கு மும்பை ஐகியா இல்லை எனத் தோன்றியது. அதைச் சொன்னால் சரண் சண்டைக்கு வருவான், எனவே சொல்லவில்லை.
மாலிலும் சரி ஐகியாவிலும் சரி பெண்கள் அத்தனை அழகிகளாகக் கண்ணில் படவே இல்லை. எல்லோரும் கூடுதல் வெளுப்பு, மேலும் வெளுப்பாக்க வெள்ளை மேக்கப் அதுவும் திகட்டத் திகட்டப் போட்டு அவர்களின் இளமையின் இயற்கையான அழகை மேக்கப்பால் முழுக்க மறைத்திருந்தார்கள். ரத்தச் சிவப்பில் லிப்ஸ்டிக் தவறாமல் எல்லோரும் போட்டுக்கொண்டிருந்தார்கள். எல்லோரையும் கூட்டிப்போய் ஒரு குழாயடியில் உட்கார வைத்து தேய்த்து கழுவிவிடலாம் போல ஆத்திரமாக் இருந்தது. எதற்காகஅழகை மறைக்கும் மேக்கப்? எனக்குப்புரியவேயில்லை. அழகை துலக்கிகாட்டும் மேக்கப்பை அளவாகப் போட்டால் என்னவாம்? ரூபம் செம்மை செய்னுதானே சொல்லி இருக்கு?
சாலையைக் கூட்டிக்கொண்டிருந்த பெண் ஒருவர் பாதியில் பெருக்குவதை நிறுத்திச் சுரிதார் பாக்கெட்டில் இருந்து லிப்ஸ்டிக் எடுத்துத் தடவிக்கொண்டதைப் பார்த்தேன். பெண்கள் எல்லோரும் உடலைக் காட்டும் நவீன உடைதான், ஆனாலும் உடல் வாகுக்கேற்ப உடையை பெரும்பாலும் யாரும் போடவில்லை. ஒரே ஒருத்தி, நல்ல வறுத்த கோதுமை நிறத்தில், உயரமாக, வட்ட முகத்தில் அளவாக மேக்கப் போட்டுக்கொண்டு மிகப்பொருத்தமான நவநாகரீக உடையில் காதலனுடன் சிரித்துப் பேசியபடி கடந்து சென்றாள். அவள் கொண்டையில் செருகி இருந்த பன்பின் (Bun pin) வசீகரமாயிருந்தது.
மால் நுழைவு வாயிலில் நடக்க முடியாதவர்கள் உபயோகித்துக்கொள்ள நிறையச் சக்கர நாற்காலிகளும் குழந்தைகளை அமர வைத்துத் தள்ளிச் செல்லும் பிராம்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நான் இதை இங்கெல்லாம் பார்த்ததாகவே நினைவில்லை. நல்ல யோசனை, நிச்சயம் உபயோகமாக இருக்கும், பலர் பயன்படுத்திக்கொண்டார்கள். மற்றபடி வடக்கிலும் தெற்கிலும் எல்லா மால்களும் ஒரே ஜாடையில் தான் இருக்கின்றன.
டாக்ஸி ஓட்டுநர்கள் கடிந்துகொள்வதில்லை, எங்குமே அமைதியாகக் காத்திருக்கிறார்கள், புக் செய்தவர்கள் வரும் வரை அது வீட்டு வாசலானாலும் மால், கடை வீதியானாலும். ஆட்டோக்காரர்களுமே அப்படித்தான்; எரிச்சலோ சிடுசிடுப்போ இல்லவே இல்லை. முக்கியமாகக் காரில், ஆட்டோவில் பாட்டுப் போடுவதில்லை, அமைதியாக ஓட்டுகிறார்கள். நானும் ஆம்புலன்ஸ் ஒலியை அங்கு இருந்தபோது கேட்கவே இல்லை.
டேராடூனில் ஒருமுறை அதிகாலைக் குளிரில் எழுந்து முசோரிக்குச் சென்றோம். டாக்ஸி டிரைவர் குடிபோதை விலகாமல் செக்கச்சிவந்த கண்களும் கலைந்த தலையுமாக மிக மிகச் சத்தமாக “நீ இத்தனை சுந்தரமாக இருந்தால் நான் என்ன செய்வேன், என்ன செய்வேன்” (மே க்யா கரூ, க்யா கரூ) என்று ஆணும் பெண்ணும் மாற்றி மாற்றிப் பாடும் பாடலைத் தூக்கத்தை விரட்டவோ என்னவோ கேட்டுக்கொண்டும், கூடவே பாடிக்கொண்டும், தலையை அவ்வப்போது பலமாக ஆட்டிக்கொண்டும் கலவரமாக மலைப்பாதையில் வண்டி ஓட்டினார். அன்று நான் வேண்டாத தெய்வமில்லை.
மும்பையில் மிக அமைதியாகப் பொறுமையாக ஓட்டுகிறார்கள். சாலையெங்கும் காவிச்சாமியர்களின் போட்டோ இருந்தது எல்லா போஸ்டர்களிலும் பிழிந்து பிழிந்து கொடியில் துணி காயப்போட்டதைப்போல எதையோ எழுதி இருந்தார்கள்.
எனக்கு மும்பை பிடிக்கவில்லை. முதல் காரணம் அத்தனை தூசும் மாசும்; அடுக்ககங்களும் பிடிக்கவில்லை. அடுத்த முக்கிய காரணம் மகனும் அவனுடன் இருப்பவர்களும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது அறவே புரியாமல் இருப்பதை மிக மிகத் தாழ்வாக உணர்ந்தேன். அனுமானிக்கவும் முடியவில்லை. பெங்களூருவில் கன்னடம் கொஞ்சம் சமாளித்துக்கொண்டேன், ‘எஷ்டு’, ‘சாக்கு’, ‘பேக்கு’! பஞ்சதந்திரம் படத்தில் கொஞ்சம் சொல்லிக்கொடுத்தார்கள். ஆனால் ஹிந்தி சுத்தம். பாலிவுட் சினிமாக்களும் பாடல்களும் புரிகிறதே என்பதும் விந்தைதான்.
ஐகியாவில் சரணுக்கு ஒரு காற்றைத் தூய்மையாக்கும் கருவி வாங்கினோம், 6 ஆயிரம் ரூபாய். எல்லோரும் அவரவர் வீடுகளில் இதை பெரும்பாலும் வைத்திருக்கிறார்கள். என்ன கொடுமை இது? அறிவியல் புனைவுக் கதைகளில் எதிர்காலத்தில் முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர் மாட்டிக்கொள்வது என்று படிப்போமே, அதேதான் இதுவும். சனிக்கிழமை அந்தக்கருவியை மின்சாரத்தில் இணைத்து ஓடவிட்டுவிட்டுத் தூங்கினோம். அன்று சரண் தொண்டை கறகறப்பு இல்லாமல் உறங்கினான். இன்னொன்று வாங்கிக்கூடத்திலும் வைத்துக்கொள்ளச் சொன்னேன்.
மறுநாள் நகரின் காற்று மாசுக்கான காரணங்களை சரண் சொல்லிக்கொண்டிருந்தான். நகரெங்கும் ராட்ஷச கட்டுமானங்கள் தொடர்ந்து நடக்கின்றன. அதிலும் லோதா, கோத்ரெஜ், ஓபராய் போன்ற பெரு நிறுவனங்கள் அசுர வேகத்தில் ஆயிரக்கணக்கில் அடுக்ககங்களைக் கட்டுகின்றன.ஆனால் தூசி வெளியே பரவாமல் இருக்கச் சுற்றிலும் போர்த்தப்பட வேண்டிய பச்சைத் துணியைச் சும்மா கண் துடைப்புக்காக ஆளுயரத்திற்குக் கட்டிவிட்டு 25, 30 மாடிகளைக் கட்டுகிறார்கள். நகரமே புழுதிக்காடாக இருக்கிறது. கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுக்கவேண்டியதைக் கொடுத்துவிட்டுத் கட்டிடத்தைக் கட்டிக்கொண்டே இருக்கிறார்கள். வந்து 2 மாதங்கள் கூட ஆகவில்லை சரண் இவற்றையெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறான் என்பது ஆச்சர்யமளித்தது.
கட்டி முடிக்கப்படும் அடுக்ககங்களின் சிறு மாதிரி அடுக்ககங்கள் ஆங்காங்கே இருக்கின்றன. அதைப் போய்ப் பார்த்துப் பிடித்திருந்தால் வீட்டை புக் செய்து அட்வான்ஸ் கொடுக்கிறார்கள்.
ஞாயிறன்று காலை வெளியே மாசு குறைவாக, அந்த அலையாத்திக் காட்டின் மறு எல்லையில் மாபெரும் கட்டிடங்களோடு ஒரு நகரம் தெளிவாகத் தெரிந்தது. ’’..அதுதான் மும்பை, நாம இருக்கிறது நவி மும்பை..’’ என்றான் சரண். எப்படி அன்று மட்டும் தூசி குறைவாக இருக்கிறது என்று தேடிப் பார்த்தான். அன்று யாரோ ஒரு வெளிநாட்டு அதிபர் மும்பை வருகிறார், எனவே 1000 மெகா கட்டுமானங்களை அரசு அன்று மட்டும் நிறுத்தி இருந்தது. அன்று காற்று மாசு 85 இருந்தது. என்ன அநியாயம்! ஒரே ஒரு நாள் வரும் வெளிநாட்டவர்களுக்காக நிறுத்தி வைக்கப்படும் பணிகள் முறையாக நடந்தால் அங்கே வாழ்பவர்களுக்கு எத்தனை நன்றாக இருக்கும்? அறத்தின் பேரில் இருப்பவர்கள் பெரிய இடங்களில் இல்லவே இல்லை என்பதுதான் நம் அனைவரின் பிரச்சினையும்.
ஞாயிறன்று மும்பை மெதடிஸ்ட் சர்ச்சில் விவிலியம் காட்டும் தாவரவியலை குறித்து உரையாற்ற விருந்தேன்,. நான் மகாப்பெருமையாக அந்த உரைக்கு ஸ்லைட் போட்டுக்கொண்டு வந்து சரணிடம் காண்பித்தேன். ’’…எல்லாத்தையும் தூக்கிட்டு புதுசா போடனும் நீ எதுக்கு கிறிஸ்துவத்தைபத்தி பேசறே நீ தாவரவியலை மட்டும் தான் பேசனும். கிறைஸ்ட் என்று வரும் சொல்லைக்கூட நீ பயன்படுத்ததே கத்தி மேல் நடக்கறமாதிரி இது அறியாமையில் எதுவும் பேசி பிரச்சனை ஆயிரும்..’’ என்று சரண் கடுமையாக சனிக்கிழமை சொன்னான். பதட்டமாகி இரவெல்லாம் விழித்து மீண்டும் புதிதாக எல்லாம் தயாரித்தேன். ஞாயிறு காலை வெண் பொங்கல் சாப்பிட்டு விட்டு மும்பைக்கு இரண்டு மணி நேரப்பயணத்துக்கு டாக்ஸி பிடித்துப் புறப்பட்டோம். வழியெங்கும் எனக்கும் கிறிஸ்துவுக்குமான அணுக்கத்தை, என் பால்யத்தையெல்லாம் சரணிடம் சொல்லிக்கொண்டு வந்தேன்.