த வெ க பொறுப்பேற்றபின் பெண்களின் பாதுகாப்பின் பொருட்டு சிங்கப்பெண் அதிரடிக்காவல் திட்டத்தை அறிவித்து, உடனே தொடங்கவிருந்து பின்னர் எதனாலோ தாமதமாகி பின் இப்போது தொடங்கப்பட்டிருக்கிறது. முதல் தவணையாகவே இந்தத்திட்டத்துக்கு 354 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் இந்த ஆட்சியில் மட்டுமல்ல கடந்த எல்லா ஆட்சிகளிலும், எல்லாக் காலங்களிலும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகத்தான் இருந்திருக்கிறது இருக்கிறது.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூக நிலை என்பது வரலாற்றில் ஒரே சீராக இருந்ததில்லை; அது காலத்திற்குத் தகுந்தாற்போல் பல ஏற்ற இறக்கங்களையும், முரண்பாடுகளையும் கொண்டதாகவே இருந்துள்ளது. முற்காலத்தில் பெண்கள் “முழுக்க முழுக்கப் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தார்கள்” என்பதும் உண்மையல்ல, அதே சமயம் “எப்போதும் ஒரு பொற்காலத்தில் வாழ்ந்தார்கள்” என்பதும் உண்மையல்லதான்.
பண்டைய தமிழ் சமூகத்தில், குறிப்பாக சங்க காலத்தில், பெண்களுக்குக் குறிப்பிடத்தக்க அறிவுச் சுதந்திரமும் மதிக்கத்தக்க இடமும் இருந்தது என்பதை நம் இலக்கியங்கள் காட்டுகின்றன. அவ்வையார் காக்கைபாடினியார் போன்றோரை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். பல பெண்கள் ஏராளமாக பயணத்திருக்கிறார்கள், காதல் மற்றும் இணையைத் தேர்வு செய்வதிலும் சுதந்திரம் இருந்திருக்கிறது, சமூக மதிப்பும் இருந்திருக்கிறது.
ஆனால் அதே சங்க காலத்திலும் அதற்குப் பிந்தைய காலங்களிலும், பெண்களின் “பாதுகாப்பு” என்பது பெரும்பாலும் அவர்களின் கற்பை பாதுகாப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் மூலமே உறுதி செய்யப்பட்டது.
இலக்கியங்களில் ‘இல்லிவன்பூட்டி’, ‘இறைவளை நல்லார்’ எனப் பெண்கள் வீட்டின் எல்லைக்குள்ளேயே பாதுகாப்பாக வைக்கப்படும் வழக்கம் இருந்தது. வெளியில் இருக்கும் வன்முறையைக் குறைப்பதற்குப் பதிலாக, பெண்ணை வீட்டிற்குள் வைப்பதையே சமூகம் பாதுகாப்பாகக் கருதியது.
போர் நடக்கும்போது, தோற்ற நாட்டின் பெண்களைக் சிறைப்பிடித்து வருவதும், அவர்கள் அசிங்கப்படுத்தப்படுவதும் வழக்கமாக இருந்தது.
இடைக்காலச் சமூக அமைப்பில், சங்க காலத்திற்குப் பின்பு உடன்கட்டை ஏறுதல், மொட்டையடித்தல், கைம்மை நோன்பு, கைம்பெண்களுக்கன் உணர்வுகளை மந்தமாக்கும் பிரெத்யேக் உணவுகள் (அல்லிவிதை) போன்ற சடங்குகள் தீவிரமடைந்து, பெண்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன
“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை” என்கிறது உலகப்பொதுமறையான திருக்குறள். கடவுளைக் கும்பிடாவிட்டாலும் கணவனைத் தெய்வமாகக் கும்பிட்டுவிட்டு எழுகிற பெண் ‘பெய்’ என்று சொன்னால் மழை பெய்யுமாம்.
இன்றைக்கு வரை கணவன் நீடூழி வாழ வேண்டும் என்பதற்காக மங்கலய பூஜைகளும், காரடையான் நோன்புகளும், இன்னும் பல விரதங்களும் நோன்புகளும் மிக விமரிசையாக நடத்தப்படுகின்றன. ஆனால், இதற்கு நேர்மாறாக, ஒரு மனைவியின் ஆயுளுக்காகவும், அவளது நல்வாழ்வுக்காகவும் கணவன்மார் கடைப்பிடிப்பதற்கென்று எந்தவொரு பிரத்யேக வழிபாடுகளோ அல்லது நோன்புகளோ நம் பண்பாட்டு வழக்கங்களில் உருவாக்கப்படவே இல்லை.
ஏன் மனைவி நீளாயுளுடன் இருக்க வேண்டியதில்லையா? பொண்டாட்டி செத்தவன் புதுமாப்பிளை எனும் பழமொழி எப்படி வந்திருக்கும்?
பெண்ணின் வாழ்வும் ஆரோக்கியமும் அவளது கணவனைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்ற எண்ணமே இத்தகைய வழிபாட்டு முறைகளின் பின்னணியில் இருக்கிறது. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு, உத்தியோகம் புருஷலட்ஷணம்? இப்போது ஆண் மட்டுமா உத்தியோகத்திலிருகிறான்?
இந்த நிலை மாற வேண்டும். குடும்பம் என்பது இருவருக்குமானது, அங்கு இருவரின் ஆயுளும், ஆரோக்கியமும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற புரிதல் புதிய தலைமுறை ஆண்களுக்கும் பெற்றோர்களுக்கும் நிச்சயம் வர வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில், பெண்கள் வெளியே வந்துவிட்டனர். கல்வி, வேலைவாய்ப்பு, விண்வெளி என அனைத்துத் துறைகளிலும் சாதனை படைக்கிறார்கள்.
முன்பை விட இன்று பெண்களுக்குச் சட்டப் பாதுகாப்பும் (POCSO, உள்நாட்டு வன்முறைத் தடுப்புச் சட்டம், பணியிடப் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்), அவசர உதவிக்கான தொழில்நுட்பங்களும் அதிகம். ஆனால், பெண்கள் பொதுவெளியில் நடமாடும் சுதந்திரம் அதிகரித்துள்ளதால், அவர்கள் எதிர்கொள்ளும் வன்முறையின் வடிவங்களும் சைபர் குற்றங்கள், பொதுவெளித் தொல்லைகள் என மாறியுள்ளன.
எனவே சிங்கப்பெண் திட்டம் போன்ற முயற்சிகள் அவசியம் என்றாலும், என்னைப் பொறுத்தவரை வேரில் பூச்சிபிடித்திருக்கும் ஒரு மரத்துக்கு அதை கவனிக்காமல் கிளைகளுக்கும் இலைகளுக்கும் மருந்தடிப்பதைப் போன்றதுதான் இது.
சைபர் குற்றங்களாகட்டும், குடும்ப வன்முறைகளாகட்டும், தோல்வியுற்ற தாம்பத்தியமாகட்டும், பெண்களுக்கு எதிரான எல்லாக் குற்றங்களுக்கும் காரணமாக வேறு காரணிகள் இருக்கின்றன. அவற்றை கொஞ்சம் கொஞ்சமாகவாவது சரிசெய்ய சிங்கப்பெண் போன்ற திட்டங்களுக்கு இணையான முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும்.
பல்வேறு உலகளாவிய சமூகவியல் ஆய்வுகளின்படி, ஓருபால் திருமணங்களில் லெஸ்பியன் (பெண்-பெண்) உறவுகளில் விவாகரத்து அதிகரித்திருக்கிறது. ஒப்பிடுகையில் ஆண்-ஆண் திருமணங்களில் சட்டப்பூர்வ பிரிவுகள் குறைவாகப் பதிவாகியுள்ளன.. எல்லா வகையான உறவுகளிலும் சிக்கல் இருக்கிறது வன்முறை இருக்கிறது என்ன்னும் போது சிக்கல்களின் வேரைக்கவனிக்க வேண்டுமல்லவா?
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சிங்கப்பெண் திட்டத்தில் பல முக்கியமான முன்னெடுப்புகள் மற்றும் வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவை வெறும் தற்காப்பு அல்லது அவசரக் கால உதவிகளோடு நின்றுவிடாமல், இன்னும் ஆழமாகச் செயல்பட வேண்டியிருகிறது.
ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பது, பெண் காவலர்களுக்கு என்று பிரத்யேக உடனடி அடையாளம் காணும் வகையில் சீருடை அளித்திருப்பது, பள்ளி கல்லூரி பேருந்து ரயில் நிலையங்களில் கூடுதல் கவனிப்பும் பாதுகாப்பும் கண்காணிப்பும் அளிப்பது, தொழில்நுட்ப நிறுவன வளாகங்களிலும் பிற தொழில் நிறுவனங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, நெரிசல் மிகுந்த இடங்களிலும் பொதுப் பூங்காக்களிலும் பாதுகாப்பு அளிப்பது, சைபர் குற்றங்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பது, பின்தொடர்தல், பாதுகாப்பு அச்சம் விளைவித்தல் போன்ற குற்றங்களைக் கண்காணிப்பது, பாலியல் தொழிலுக்குப் பெண்கள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதைக் கண்காணிப்பது, பெண் கள் தொடர்பான எல்லாக் குற்றங்களுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுப்பது எனப் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன.
முழுக்க சிங்கப்பெண் தரப்பை இன்னும் நான் அறிந்துகொள்ளவில்லை எனினும் என் பரிந்துரைகள்:
108 ஆம்புலன்ஸ், 100 காவல் என்று இருப்பது போல் சிங்கப்பெண் காவலர்களை அழைக்கவென்று ஒரு தனி எண் தரப்பட வேண்டும். நான் வளைகுடா நாட்டில் இருந்தபோது, அங்கு இப்படி குடும்ப வன்முறைகளைத் தடுக்கவென்று ஒரு நாளில் பலமுறை காவல் ரோந்து வாகனம் எல்லா குடியிருப்புகளின் வழியாகவும் மிக மெதுவாகச் சென்றுகொண்டிருக்கும். மாடியிலிருந்து பார்ப்பவர்களுக்கும் தெரியும் வகையில் அந்த வாகனத்தின் மேற்கூரையிலும் மிகத் தெளிவாகக் காவலர்களைத் தொடர்புகொள்ளும் எண் பெரிதாக எழுதப்பட்டிருக்கும். மேலும், அங்கெல்லாம் உள்ளூர் தொலைபேசி சேவை முற்றிலும் இலவசம் என்பதால் அது மிக பயனுள்ளதாக இருந்தது. குடும்ப வன்முறையில் ஈடுபட அங்கு வாழ்ந்த இந்தியர்களும் இந்த ஒரு காரணத்தினாலேயே மிகத் தயங்கியதை நான் அறிவேன்.
ஆனால், இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் இவற்றுக்கெல்லாம் காரணமாக இருப்பது என்னவென்பதையும் கவனத்தில் கொண்டு, அவற்றைத் தவிர்க்கவும் சிங்கப்பெண்ணுக்கு இணையான கவனத்துடன் திட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இப்படியான குற்றங்களுக்கு அடிட்பைக்காரணம் பாலியல் வறட்சிதான். இளம் வயதினருக்கு ஒழுக்கம், விழுமியம் போன்றவற்றைக் கற்றுத்தர வேண்டிய குடும்பம் மற்றும் கல்வி நிறுவனங்கள் அதைச் சுத்தமாக மறந்துவிட்டு, மதிப்பெண் வாங்குவதற்கு மட்டும் மெனக்கெடுவது மிக முக்கியமான காரணமாகி இருக்கிறது.
பெண் குழந்தைகளுக்கு ஒருபக்கம் மிகத் தீவிரமாக கவனமும் செல்லமும், பாதுகாப்பும் அளிக்கும் குடும்பங்களும், மற்றொரு பக்கம் அவர்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை எடுக்கக்கூட நேரமில்லாமல் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் குடும்பங்களும் பெருகி இருப்பது.
ஆணும் பெண்ணும் இளம் வயதில் எதிர்பாலினரைத் தெரிந்தும் புரிந்தும் கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் செய்யும் கல்வி நிறுவனங்களும், அவற்றில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கப் போட்டி போடும் அறிவற்ற பெற்றோர்கள் இருப்பது பெரிய அவலமாகி இருக்கிறது.
குடும்ப வாழ்வில் மனைவி என்பவர் ஆணுக்குச் சமையலும் வீடு வேலையும் செய்வதற்காக இன்னொரு வீட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டவள் என்ற எண்ணத்தோடு ஆண்கள் இருப்பது.அந்த எண்ணத்தை மகன்களின் பெற்றோர்களும் நூற்றாண்டுகளாக நம்பி வளர்த்தெடுத்துக் கொண்டிருப்பது எனப் பல முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும்.
எனக்குத் தெரிந்து, உயர்ந்த கல்வி அளிப்பதாகச் சொல்லிக்கொண்டு பல மடங்கு கட்டணம் வசூலிக்கும் தமிழகப் பள்ளிகளில், ஆண்-பெண் இருபாலருக்கும் தனித்தனி வளாகம், தனித்தனி விளையாட்டு மைதானம், தனித்தனி படிக்கட்டுகள், தனித்தனி வகுப்பறைகள் இருக்கின்றன; இதை முதலில் தடை செய்ய வேண்டும்.
எதிர்பாலினத்தவரைப் பற்றிய அறிதலே இல்லாத இளைஞர்களை உருவாக்குவது, பிற்பாடு அவர்கள் இருவராக இணைந்து ஒரு கூரைக்கு கீழ் வாழவேண்டி வருகையில் அவர்களின் மனச்சிக்கல்களையும் உளவியல் ரீதியான கோளாறுகளையும் அதிகமாக்கிவிடுகிறது. இதுவே மணவுறவுச் சிக்கல்களுக்கும், பாலியல் வறட்சிக்கும் அடித்தளமிடுகிறது.
மேட்டுப்பாளையத்தில் ஒரு பிரபல பள்ளியில் சரணின் நண்பன் படிக்கையில், பெண்களின் விளையாட்டு மைதானத்தைத் திரும்பிப் பார்த்ததற்காக அவன் பல மணி நேரம் மைதானத்தில் முட்டிப் போட வைக்கப்பட்டான்.
கல்லூரி ஒன்றில் ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டிருந்ததற்காக, அவர்களின் அடையாள அட்டையைக் கல்லூரி முதல்வர் வாங்கி வைத்துக் கொண்டு, பெற்றோர்களை அழைத்து வரச் சொல்லியதால், அந்தப் பெண் அன்றே தற்கொலை செய்து கொண்டாள்.
இப்போதும் வானொலியில் நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். பள்ளிகளின் விளம்பரங்களில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனி வளாகம் என்பது திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. பல பெற்றோர்களும் இதை விரும்புகிறார்கள்.
12-ம் வகுப்பு முடிந்ததும் தினமலர் போன்ற நாளிதழ்களும் பிற நிறுவனங்களும் ‘இனி என்ன படிக்கலாம்?’ என்பதற்கான ஆலோசனைகளைத் தரும் வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை ஏராளமாக ஒருங்கிணைக்கிறார்கள் அல்லவா?
அப்படி இளம் வயதில் இருப்பவர்களின் குடும்பங்கள் அந்த மிகச்சிறப்பான, குழப்பங்களும் ஹார்மோன் கொந்தளிப்புகளும் மனச்சிக்கல்களும் ஏராளம் இருக்கும் வயதில், குழந்தைகளை,எப்படி நடத்த வேண்டும், வெறும் மதிப்பெண்களுக்காக அவர்கள் இளமையைத் தொலைக்க வேண்டியதில்லை, இந்த காலகட்டத்தில் அவர்களுக்குப் புரிதலும் அனுசரணையும், நல்ல ஊட்டச்சத்தும் தேவை, ஓய்வும் அவசியம் என்பதை புரிந்து கொள்ள நல்ல உளவியல் தெரிந்த பேச்சாளர்களைக் கொண்டு பல இடங்களில் பேச வைக்க வேண்டும்.
சமூக ஊடகங்களின் தாக்கமும் ஊடுருவலும் மிகத் தீவிரமாக இருக்கும் இக்காலத்தில், அப்படிப்பட்ட ஊடகச் செய்திகள் பலருக்கும் சென்று சேரவும் அரசு முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்.
‘’..இப்ப பார்த்தீங்கன்னா, ஒரு அம்மா ராத்திரி 1 மணிக்கு ‘மேக்கப் போடுது…’ என்று ஒருவர் சொன்னதுமே, அதற்குப் பின்னர் என்ன சொல்லப் போகிறார் என்று கூட யோசிக்காமல், அரங்கம் சிரித்துக் கும்மாளமிடுகிறது.
இப்படியான அசட்டு பிசட்டு நகைச்சுவைகள் அன்றாடம் எத்தனை முறை மீண்டும் மீண்டும் பரப்பப்படுகிறது! அப்படி இளைஞர்களை எப்படி உடல், மனம் போன்ற ரீதியாகக் காயப்படுத்தாமல் வாழ வைப்பது என்னும் தரமான உரைகளை ஊடகங்கள் வழியாகப் பரப்ப வேண்டும்.
தேர்தலில் வெற்றி பெற எத்தனை வழிகளை ஊடகம் வழியாக உண்டாக்குகிறார்கள் அதே அக்கறையோடு இவைகளும் பரப்பப்பட வேண்டும்.
கல்வி நிறுவனங்களில் கட்டாயம் உளவியல் நிபுணர்கள் எப்போதும் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். குடும்ப வன்முறை, பின்தொடர்பவர்களால் உண்டாகும் மன அழுத்தம், பாலியல் தொல்லை போன்ற பலவற்றைப் மாணவ-மாணவிகள் பகிர்ந்து கொள்ள யாரும் இல்லாத சூழல் கல்விக்கூடங்களில் நிலவுகிறது.
ஒரு ஆசிரியர் தவறாக நடந்து கொள்கிறார் என்றால், மாணவர்கள் புகார் அளிக்க முடிவதில்லை. எனவே, அந்தந்தப் பள்ளிகள், கல்லூரிகளில் புகார் பெட்டி பல இடங்களில் இருக்க வேண்டும்.
மேலும் ‘குட் டச், பேட் டச்’ (Good Touch, Bad Touch) போன்றவற்றைச் சிறு குழந்தைகளுக்கும் தொடர்ந்து கற்றுத்தரச் சிறப்பு வகுப்புகளும், பாடத்திட்டத்திலேயே இணைக்கப்பட்டு கட்டாயமாக்கப்பட வேண்டும். அதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சில்மிஷங்களில் ஈடுபடாத ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
குடும்ப ஆண்களால் பெண்கள் பாலியல் தொல்லைகளை அனுபவிப்பதும் தொடர்ந்து நடக்கிறது. அவற்றைச் சொல்லவும் அவர்களுக்குப் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, உளவியல் நிபுணர்கள் எதேச்சையாக வரவேண்டியோ அல்லது மருத்துவ முகாம் ஒன்று நடக்க வேண்டியோ இருக்கிறது.
கோவைக்கல்லூரி ஒன்றில், ஒரு தேர்வின் போது ஒரு மாணவியைக் காணோம் என்று தேடித் தேடி அவளை மொட்டை மாடியில் கண்டுபிடித்தார்கள். அழுதுகொண்டிருந்த அவளை விசாரித்ததில், அவளது தந்தை அவளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிக்கொண்டே இருப்பதால் படிக்க முடியவில்லை என்றும், தேர்வை எதிர்கொள்ள முடியாமல் அப்படிச் செய்தாள் என்றும் தெரியவந்தது.
எங்கிருந்து பெண்களுக்குத் தொல்லை வந்தாலும் தெரிவிக்க ஒரு பிரத்யேக எண் அல்லது புகார் பெட்டி அவசியம் வேண்டும். எந்தக் கல்வி நிறுவனமாக இருந்தாலும், மாலை அல்லது காலை நேரச் சிறப்பு வகுப்புகள் இருந்தால், அங்கு கட்டாயம் ஆசிரியர் அல்லாத அல்லது பாடம் கற்பிக்காத, யாருக்கும் யாரும் எந்தத் தொல்லையும் அளிக்காமல் இருக்கிறார்கள் என்று மட்டும் கண்காணிக்கும் பெண் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
கல்வி நிறுவன வளாகங்களிலும் பள்ளிப் பேருந்துகளிலும் கட்டாயம் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். மனநல ஆலோசகர்கள் இல்லாத பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும்.
ஆண் மையச் சமூகத்தை அத்தனை எளிதாக மாற்றிவிட முடியாது என்றாலும், இந்தத் தலைமுறையினருக்காவது பாடப்புத்தகங்களில் இருக்கும் பல பேதங்களைத் தவிர்த்த பாடங்களை இணைக்க வேண்டும்.
உதாரணமாக, human என்று வரவேண்டிய இடங்களில் எல்லாம் man என்று இருக்கிறதல்லவா, அதையெல்லாம் கவனமாக மாற்ற வேண்டும்.
Evolution of man, Descent of man, Stone age man என்றெல்லாம் வாசிக்கிறோமே, அப்போது பெண்கள் இல்லையா என்ன? டார்வினின் பரிணாம வளர்ச்சிப் படமான புகழ்பெற்ற ‘குரங்கிலிருந்து மனிதன் உருவான’ வரிசையில் ஆண் உடல் மட்டுமே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் இன்னும் பரிணாம வளர்ச்சியே அடையவில்லையா?
பெண் உடலை அப்படியே பள்ளிப் பாடப்புத்தகங்களில் ஜனன உறுப்புகளோடு சித்தரிக்க முடியாது என்றால், உறுப்புகளை மறைக்கும் வகையிலான கோணங்களில் (Silhouette or Stylized representations) ஏன் சித்தரிக்கக் கூடாது?
உடற்கூறியல், தசை மண்டலம், எலும்பு மண்டலம் போன்ற பொதுவான அறிவியல் வரைபடங்களில் ஆண் உடல் மட்டுமே சித்தரிக்கப்பட்டிருக்கிறது பெண்களுக்கு அந்த மண்டலங்கள் இல்லையா என்ன?
இனப்பெருக்கச் சித்தரிப்புகளுக்கு மட்டுமே பாடப்புத்தகங்களில் பெல்விக் பகுதியுடன் மட்டும் தனியே பெண் காட்டப்படுகிறாள். இதைப் படித்து வளரும் குழந்தைகளுக்குப் பெண் இனப்பெருக்கத்திற்கு மட்டுமானவள் எனும் புரிதல் மட்டுமே உண்டாகும். பாலினச் சார்பற்ற (Gender Neutral) உடலமைப்புகளைப் பாடப் புத்தகங்களில் கொண்டு வர வேண்டும். பெண் உடல் என்பது வெறும் இனப்பெருக்கத்திற்கு மட்டுமே உரியது என்று ஆண்கள் பள்ளிக்கால இளமையிலிருந்தே நம்பும் நிலையை மாற்ற வேண்டும்.
பூப்பு நன்னீராட்டு விழாக்களையெல்லாம் விளம்பரப்படுத்தாமல் இருக்கலாம். அந்தச் சின்னப்பெண்ணுக்கு அஜித்தும் விஜய்யும் தலையில் கைவைத்து ஆசியளிக்கும் பேனர்கள் ஊரெல்லாம் வைக்கப்படுகின்றன, அதற்கு முற்றிலும் எதிராக மருந்துக்கடையிலும் மளிகைக் கடையிலும் ரகசியமாகக் கஞ்சா வாங்குவது போல் நியூஸ் பேப்பரில் சுற்றப்பட்டுச் சானிட்டரி நேப்கின் வாங்குவதும் நடந்துகொண்டிருக்கும், வெளிப்படையாக கடைகளில் தனக்கு வேண்டிய ஃபெமினைன் ஹைஜின் பொருட்களை கேட்டுவாங்கலாம் என்று பெண்களும் நினைக்க வேண்டும். பெண்களை அப்படி நாம் வளர்கக்வும் வேண்டும். அது ரகசியமாக செய்யவேண்டிய திருட்டுச்செயலல்ல. இனப்பெருக்கத்திற்கு எங்கள் வீட்டுப் பெண் தயார் என்பதை பகிரங்கமாக விளம்பரப்படுத்தும் சமூகத்தில், வளர்ந்து வரும் ஆண் சமுதாயத்திற்குப் பெண்களின் மீது எப்படிப்பட்ட நல்ல அபிப்பிராயம் இருக்க முடியும்?
மாதவிலக்கு நாட்களில் பெண்களை வீட்டிற்குள் சேர்க்காமல் தீட்டு என்று சொல்லி வெளியிலோ அல்லது தனி அறையிலோ ஒதுக்கிவைக்கும் குடும்பங்கள், அடுத்த தலைமுறைக்கு என்ன மாதிரியான புரிதலைக் கொடுக்கப் போகிறார்கள்? அது பெண் குழந்தைகளுக்கே தங்களின் உடல் சார்ந்த இயற்கை நிகழ்வின் மீது ஒருவிதக் குற்றவுணர்ச்சியையும், தாழ்வுமனப்பான்மையையும் வளர்க்கும். ஆண் குழந்தைகளுக்கோ பெண் உடல் என்பது ஏதோ அசுத்தமானது, ஒதுக்கி வைக்கப்பட வேண்டியது என்ற தவறான பார்வையை விதைக்கும்.
ஆண் குழந்தைகள், பெண்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள், இனப்பெருக்கத்திற்கானவர்கள் ஆண்களுக்கு வேலை செய்துகொடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் மட்டுமே என நினைப்பதற்கான எல்லா அடித்தளங்களையும் இச்சமூகம் செய்துகொண்டே இருக்கையில் சிங்கப்பெண் திட்டம் எப்படி வெற்றிகரமாக இயங்க முடியும்?
எல்லாவற்றிற்கும் மேலாகக் குழந்தைகள் என்னவாக வேண்டும் என்று குழந்தைகளைத் தான் கேட்க வேண்டும். மருத்துவர்களும் பொறியாளர்களும் மட்டுமே நிறைந்த உலகமாய் மாறிப் போவதில்லை என்பதை முட்டாள் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிறப்பு வகுப்புகள் நடத்தும் நிறுவனங்களில் அவ்வப்போது அதிரடிச் சோதனை நடத்தி, வகுப்புகளின் காலம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது, வகுப்புகளால் பாதுகாப்பு எப்படி இருக்கிறது எனத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.
சமூக ஊடக விளம்பரங்களும் இந்த ஆண் ஆதிக்கச் சமூகத்தைப் பேணிக் காப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. உதாரணத்திற்கு, நெய்யிலோ இதயம் நல்லெண்ணெய்யிலோ, பிரீத்தி மிக்ஸியிலோ சுவையாகச் சமைக்கும் பெண்கள், உணவு மேஜையில் அமர்ந்திருக்கும் ஆணுக்கும் அவன் குடும்பத்திற்கும் கொண்டு வந்து கொடுக்கும் உணவுகளை அவர்கள் சுவையாகச் சாப்பிட்டுப் பாராட்டுவது போன்ற விளம்பரங்கள்.
வாஷிங் மெஷின், குக்கர், மிக்ஸி, அடுப்பு போன்ற விளம்பரங்களுக்குப் பெண்களும், ரேஸ் கார், பைக் விளம்பரங்களுக்கு ஆண்களும் வருவதைக் குடும்பத்தோடு அமர்ந்து தொடர்ந்து பார்க்கும் இளம் தலைமுறையினர்—சமையல், பரிமாறுவது, துவைப்பது எல்லாம் பெண்களுடையது என்றும், ரேஸ் கார் ஓட்டுவதுதான் ஆண்மை என்றும் நம்புவார்கள்.
அ. வெண்ணிலாவின் ஒரு கவிதை இருக்கிறது: “யார் சொல்லிக் கொடுத்தது அந்தச் சின்னப் பெண்ணுக்கு, வீட்டு வாசலில் இருக்கும் நாளிதழை அம்மாவிடமும், புத்தகத்தை அப்பாவிடமும் கொடுக்க வேண்டும் என்று?”
நான் அன்றாடம் கேட்கும் ஒரு வானொலி விளம்பரம் இருக்கிறது: மாமனார் “அம்மாடி, தினத்தந்தியோ (தினமலரோ) எங்கே?” என்பார். எழுந்துட்டீங்களா மாமா? “இதோ கொண்டு வருகிறேன்” என்பார் மருமகள். உடனே கணவன் “லதா தினத்தந்தி எங்கே?” என்பார். “மாமா படிக்கறாருங்க படிச்சதும் கொண்டு வருகிறேனே” என்பாள் மனைவி. அடுத்து ஒரு சின்னப் பெண் “அம்மா, அப்பா படித்ததும் எனக்குக் கொடுங்கள்” என்பாள்.உடனே தாய் மகிழ்ந்து “எத்தனை தலைமுறையானாலும் தினத்தந்திதான் சிறந்தது” என்பார்.
ஏன் அத்தனை தலைமுறையாயினும் ஆண்கள் நாளிதழைக் கூடத் தாங்களாக எடுத்துக் கொள்ளாமல் பெண்களை ஏவுகிறார்கள்? இதை தினமௌம் கேட்டுபார்த்துத்தான் வளருகிறது எதிர்கால தலைமுறையொன்று. திரும்பத் திரும்ப ஒரு ஆண் ஆதிக்கச் சமுதாயத்தைக் கட்டமைத்து வளர்த்துவிட்டு, சிங்கப்பெண், புலிப்பெண் திட்டங்களை முன்னெடுப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
பெண்களை கிள்ளுக்கீரையாக நடத்தலாம் பெண்கள் காம இசைக்காக படைக்கப்பட்டவர்கள் பெண்கள் ஆண்களைவிட தாழ்ந்தவர்கள் பெண்களை எப்படிவேண்டுமானாலும்நடத்தலாம் என்று சமூகம் ஆண்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. இதனால் தான் திரும்பத்திரும்ப பெண்கள் மீதான வன்முறையும் பாலியல் சீண்டல்களும் அவமதிப்புகளும் எத்தனை தண்டனை கொடுத்தாலும் நடந்துகொண்டே இருக்கிறது.
ஆண்கள் தேநீர் தயாரித்துக் களைத்து வரும் பெண்களுக்குக் கொடுக்கும் ஒரு தேநீர் விளம்பரம் இருக்கிறதா? நல்ல நெய் ஊற்றித் தோசை சுட்டு மனைவிக்குக் கணவன் கொண்டு வந்து தரும் ஒரு விளம்பரமாவது இருக்கிறதா? பெண்கள் கார் ஓட்டிக்கொண்டு போகும் ஒரு கார் விளம்பரம் தான் இருக்கிறதா? ஏன் இல்லை?
எல்லா நிறுவனங்களிலும் சிங்கப்பெண் புகார் பெட்டி வைக்கப்பட்டு, அதில் வரும் புகார்களை சிங்கப்பெண் அதிகாரிகள், காவலர்களே குறிப்பிட்ட கால இடைவெளிகளில் திறந்து பார்த்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவற்றைஎல்லாம் செய்தால்தான் இந்தத் திட்டம் உண்மையில் பயனுள்ளதாக இருக்கும். இல்லாவிட்டால் ஆயிரக்கணக்கான பெயரளவுத் திட்டங்களைப் போல இதுவும் ஆகிவிடும்.
இந்த திட்டத்தில் காவலர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்கள், பெற்றோர்கள், உளவியல் நிபுணர்கள், கல்வியாளர்கள், மாணவப்பிரதிநிதிகள், உயர்கல்விதுறை அமைச்சகத்தினர், மேடைப் பேச்சாளர்கள் இன்ஸ்டா பக்கத்தை உருவாக்குபவர்கள் என பலதரப்பினரும் இருக்கவேண்டும்
சிங்கப்பெண் காவலர்களுக்கும் பணியில் ஈடுபடுவதற்கு முன்பே உளவியல் ஆலோசனைகளும் சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும்.
பொள்ளாச்சி வீட்டில் இருக்கையில், அருகில் பெண்களுக்கென்று பிரத்யேகக் காவல் நிலையம் இருந்தது. அதில் வேலை பார்த்த தலைமைக்காவலர் எங்கள் குடும்பத்திற்கு வேண்டியவர். அவர் மிகக் கடுமையான அணுகுமுறைகளைக் கொண்டிருந்தவர் என்பதால், அங்கு விசாரணைக்கு வரும் குடும்ப வன்முறை வழக்குகளில் ஆண்களுக்குத் தண்டனை நிச்சயமாக இருந்தது.
வேலைக்குப் போகாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்து மனைவியைச் சந்தேகப்பட்டுக்கொண்டிருந்த அந்தத் தலைமைக் காவலரின் கணவர், ஒருமுறை சண்டையில் அக்காவலரின் கையை அடித்து உடைத்துவிட்டார். பல மாதங்கள் கட்டுப்போட்டுக் கொண்டு காவல் நிலையத்திற்கு அவர் வந்துகொண்டிருந்தார்.
சிங்கப்பெண்களுக்கு உண்மையில் தாங்கள் எதைப் பாதுகாக்கவிருக்கிறோம், தங்களுக்குத் தங்கள் வீடுகளிலும் இணையரிடமும் பாதுகாப்பு இருக்கிறதா, சமூகத்தில் தங்களின் இடம் என்ன என்ற புரிதலும் இருக்க வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, சிங்கப்பெண் திட்டத்தை ஆண்களுக்கு எதிராகப் பயன்படுத்திக்கொள்ளும் பெண்களைக் குறித்த கவனமும் அவர்களுக்கு இருக்க வேண்டும்.









































