அதழ்

லோகமாதேவியின் பதிவுகள்

Page 2 of 50

ஆலிஸ் பால்

ஆலிஸ்பால், காளிஹி மருத்துவமனையின் மிக உயரமான கம்பிவேலிக்கு வெளியே நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். உள்ளே கை, கால்களில் துணி சுற்றப்பட்டு, வெளி உலகைப் பொறுத்தவரையில் இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட தொழுநோயாளிகள் ஒரு பெரிய கூண்டு வண்டிக்கு முன்பாக வரிசையில் நிற்கவைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் ‘உயிருடன் இருப்போரின் கல்லறை’ என்று அழைக்கப்பட்ட காலாபாப்பா (Kalaupapa) தீவுக்குக் கொண்டு செல்லப்படவிருந்தார்கள். பலர் கதறி அழுதபடி இருந்தார்கள் மேலும் சிலர் தலையைக்குனிந்தபடி கம்பி வேலிக்கு வெளியே நின்று கதறிக்கொண்டிருக்கும் குடும்பத்தினர் பார்க்காமல்  கண்ணீரை மறைத்துக்கொண்டு வண்டிக்குள் ஏறினார்கள்.

மணிக்கணக்காக அங்கே நின்று இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஆலிஸ், மாலை ஆகிவிட்டிருந்தாலும் வீட்டுக்குச் செல்லாமல் ஹவாய் பல்கலைக்கழகத்தில் அவள் பணிபுரிந்துகொண்டிருந்த வேதியியல் ஆய்வகத்திற்குச் சென்றாள். தொழுநோயாளிகளை அடைத்துவைக்கும் பெரும் கதவுகளையும் கம்பிமுள்வேலிகளையுமே அரசும் பிற மருத்துவர்களும் ஆய்வாளர்களும் உருவாக்கியிருந்த அந்தக்காலத்தில், ஆலிஸ் அந்தக் கதவுகளைத் திறக்கும் சாவியைக் கண்டுபிடிக்க முனைந்தாள்.

1915-களில் ஹவாய் தலைநகர் ஹோனலுலூவின் வீதிகளில் மருத்துவ வாகனங்களின் சைரன் தொடர்ந்து ஊளையிட்டுக்கொண்டே இருந்தது. அதைக் கேட்கையிலெல்லாம் வீடுகளில் மக்கள் குழந்தைகளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு கண்ணீருடன் ஒடுங்கி அமர்ந்திருந்தார்கள். அந்த வண்டிகளில் இருந்த ‘Bounty Hunters’ எனப்படும் அரசு சுகாதாரத்துறையின் கண்காணிப்புக் காவலர்கள், குணப்படுத்தவே முடியாது என அப்போது கருதப்பட்ட தொழுநோய் மக்களுக்கு மத்தியில் பரவாமல் இருக்க, நோய் அறிகுறி தென்படும் நபர்களைத் தேடிப்பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு சிறு வெண்திட்டு சருமத்தில் தெரிந்தாலும் இரக்கமின்றி அவர்களை இழுத்துச் சென்றார்கள். சிறு குழந்தைகளும் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டார்கள். தொழுநோய் பாதிப்பிருந்தவர்கள், வெளிஉலகத்துடன் தொடர்பு கொள்ளவே முடியாத வகையில் கம்பிவேலி இடப்பட்டிருந்த காளிஹி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.

அப்போது தொழுநோய் ‘லெப்ரஸி’ என்றல்லாமல் ஹேன்சென் நோய் (Hansen’s Disease) என்று அழைக்கப்பட்டது. அந்த நோய் முன்வினைகளினாலும், செய்த பாவங்களினாலும், சுகாதாரம் அற்றோருக்கும் வரும் குணப்படுத்த முடியாத ஒன்று என்று பலகாலமாக உலகம் நம்பிக் கொண்டிருந்தபோது, நார்வீஜிய மருத்துவரான கெர்ஹர்ட் ஆன்சர் ஹேன்சென் (Gerhard Armauer Hansen), 1873-ல் தொழுநோய் ‘மைகோபாக்டீரியம் லெப்ரே’ (Mycobacterium leprae) என்னும் பாக்டீரியாவினால் உண்டாகிறது என்றும், அதைச் சிகிச்சையளித்துக் குணப்படுத்த முடியும் என்றும் அறிவித்தார்.

அந்த பாக்டீரியாவுக்கெதிரான சிகிச்சைகள் உலகெங்கிலும் பின்னர் முன்னெடுக்கபட்டாலும் எதுவும் வெற்றிபெறவில்லை. முறையான மருத்துவசிகிச்சைகள் இல்லாமல் தொழுநோய் குணப்படுத்தமுடியததாகவே இருந்தது.

மருத்துவ வரலாற்றில் 1915-ம் வருடம்  ஹவாயின் மாபெரும் தனிமைப்படுத்தலுக்கான காலமாகவே குறிப்பிடப்படுகிறது. தொழுநோயைக் குணப்படுத்த முடியாது என்று நம்பி, நோயுற்றவர்கள் குடும்பத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் ஒதுக்கிப் பிரிக்கப்பட்டு, மனிதர்கள் எளிதில் வரமுடியாத காலாபாப்பாவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். செங்குத்தான பாறைகளால் இயற்கையாகவே அரண் அமைந்திருந்த, பெரும்பகுதி நீரால் சூழ்ந்தும், பெருநிலப்பரப்புடன் நிலத்தால் இணைக்கப்பட்டும் இருந்த இடம்தான் காலாபாப்பா.

கூண்டு வண்டியில் கொண்டு செல்லப்பட்டவர்களை மீண்டும் கப்பலில் ஏற்றி காலாபாப்பாவுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். ஆனால் காலாபாப்பாவின் செங்குத்தான பாறைப்பகுதியில் கப்பல்கள் உடைந்து சேதமுறும் என்பதால், கப்பல்களைத் தொலைவிலேயே நிறுத்தி பயணிகளை மிகமிகக் குளிரான கொந்தளித்துக் கொண்டிருக்கும் கடல்நீரில் குதிக்கச் சொல்லுவார்கள். நீச்சல் தெரிந்தவர்களும், நீந்துமளவுக்கு உடலில் தெம்பு இருப்பவர்களும் கரைசேர்ந்து காலாபாப்பாவுக்குச் செல்வார்கள். பலவீனமானவர்கள் தங்களது புதிய தங்குமிடத்தைக் கண்ணால் பார்த்தபடியே கடலில் மூழ்கி மறைவார்கள். அந்த புதிய தங்குமிடத்தில் எந்த விதிகளும் கட்டுப்பாடுகளும் இருக்காது. மிகக்குறைந்த அளவு உணவும் எளிய குடிசைகளும் இருக்கும். அங்கே அவர்கள் ஒரு நோயுற்ற சமூகமாக வாழ்ந்து, தாங்கள் விட்டுவிட்டு வந்த குடும்பத்தை, உற்றார் உறவினர்களை நினைத்தபடி அங்கேயே மடிவார்கள்.

காலாபாப்பாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட கணவன் அல்லது மனைவியின் ஹோனலுலூவில் இருக்கும் இணை, விவாகரத்தானவர்களாகச் சட்டப்படி கருதப்படுவார்கள். காலாபாப்பாவில் இருப்போரின் சொத்துக்களும் சட்டப்படி அவரது குடும்பத்தினரைச் சேரும். காலாபாப்பாவில் யாரேனும் கருவுற்று குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தை உடனடியாகத் தாயிடமிருந்து பிரித்து எடுக்கப்பட்டு காளிஹி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும்.

காலாபாப்பாவில் இருந்த நோயாளிகளுக்கு மருந்தோ மருத்துவமோ எதுவுமில்லை. சில மாதங்களுக்கு ஒருமுறை வருகை தரும் மருத்துவர்கள் ஒரு கண்ணாடிக் கதவுக்குப் பின் நின்றபடி அவர்களைப் பார்த்து சில களிம்புகளை அளிப்பார்கள். அதைத் தடவிக்கொள்ள பேண்டேஜ் துணிகள் இல்லாததால், தங்களின் பழைய உடைகளைக் கிழித்து புண்களின் மீது சுற்றிக்கொள்வார்கள். 

ஜெபம் செய்விக்கவும், இறுதிப் பிரார்த்தனைக்கும் அவ்வப்போது சில கிறிஸ்தவ பாதிரியார்கள் செல்வதுண்டு. அவர்களும் தொலைவிலிருந்தபடியே அவர்களைச் சந்திப்பார்கள். இவர்களில் மிக மிகக் கருணையோடும் அன்புடனும் இருந்த இருவர் இறைப்பணியாளர் டேமியன் மற்றும் சகோதரி மரியேன் கோப் (Father Damien and Mother Marianne Cope) மட்டுமே. அங்கு அனைவரும் சக மனிதர்கள் தசை அழுகி கொஞ்சம் கொஞ்சமாகக் கண்முன்னே இறப்பதைப் பார்த்தபடி நிசப்தமாகவே இருந்தார்கள். எப்போதும் அங்கே கேட்டுக்கொண்டிருந்தது சவப்பெட்டிகள் செய்யப்படுகையில் எழும் ஒலி மட்டும்தான்.

உலகமே சிகிச்சையில்லை என்று முடிவு செய்து புறக்கணித்த அவர்களைக் காப்பாற்றத்தான்  23 வயதே ஆன  வேதியியலாளரான ஆலிஸ்பால் முடிவு செய்தாள். 

ஆலிஸ் பால் ஜூலை 24, 1892-ல் சியாட்டிலில் அறிவியலில் ஆர்வம் கொண்டிருந்த, கல்வியறிவு கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தார். ஆலிஸின் தந்தை ஒரு வழக்கறிஞர், பத்திரிகையாளர் மற்றும் புகைப்பட நிபுணர். ஆலிஸின் தாத்தா உலகப்புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர். ஆலிஸின் அன்னையும் ஒரு புகைப்படக் கலைஞர் தான், எனினும் அவர் குழந்தைகளை வளர்க்கும் பொருட்டு அந்தக்கலையிலிருந்து விலகியிருந்தார்.

ஆலிஸ் தன் தாத்தாவின் இருட்டு அறையில் சில்வர் நைட்ரேட்டும் சில அமிலங்களும் இணைந்து அழகிய புகைப்படங்கள் ஒரு மாயாஜாலம் போல உருவானதை ஆர்வமுடன் கவனித்து வளர்ந்தாள். மிக இளமையிலேயே ஆலிஸுக்கு ரசாயனங்களின் இயல்பும் வாசனையும் அத்துப்படியாகி இருந்தது. 

ஒடுங்கிய சிறிய உருவம் கொண்டிருந்த ஆலிஸ், கடுமையான ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டிருந்தார். சியாட்டிலிலேயே, அப்போது கறுப்பினப் பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்த பாடங்களாகிய கணிதமும் அறிவியலையும் போராடிப் பெற்றுப் படித்து உயர்நிலைக் கல்வியை ஆலிஸ் முடித்தாள். பள்ளிக்காலத்தில் வகுப்பறைகளில் அமைதியாக கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்தாலும், பள்ளி விழாக்களில் நாடகங்களில் ஆர்வமாக ஆலிஸ் பங்கெடுத்துக்கொண்டாள். எப்போதும் நகைச்சுவை உணர்வு நிரம்பியவராகவே ஆலிஸ் அவரது பள்ளித் தோழர்களால் நினைவுகூறப்பட்டார். பள்ளி இறுதிவிழா மலரில் ஆலிஸ், “நான் வேலை வேலை வேலையென்று தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறேன், ஆனாலும் எதுவுமே செய்யாதது போலத்தான் இருக்கிறது” என்று எழுதியிருந்தார்.

மிக மிகப் புத்திசாலியான ஆலிஸ் கல்லூரிக்குச் செல்லாமல் நேரடியாக வாஷிங்டன் பல்கலைக்கழகத்திற்குச் சென்று, 1912-ல் மருந்தாக்க வேதியியலிலும், 1914-ல் மருந்தியல் துறையிலும் இரண்டு இளங்கலைப் பட்டங்கள் பெற்றார். 1914-ல் இளங்கலை மாணவியாக இருக்கையிலேயே ஆலிஸின் 11 பக்க மருந்தியல் கட்டுரை ஒன்று பிரபல அமெரிக்க வேதியியல் நிறுவனத்தின் சஞ்சிகையான Journal of the American Chemical Society-யில் வெளியானது. 1914-களில் ஒரு கறுப்பினப் பெண் இதையெல்லாம் செய்வார் என உலகம் கற்பனை கூடச் செய்திருக்கவில்லை.

பின்னர் ஆலிஸ் கடல் கடந்து ஹவாய் கல்லூரிக்கு (இப்போது ஹவாய் பல்கலைக்கழகம்) முதுகலை படிக்கச் சென்றாள். உயர்நிலைப்பள்ளி மதிப்பெண்களினால் அவளுக்கு இளங்கலை படிக்க உதவித்தொகை கிடைத்தது. 

ஆஸ்துமாவினால் ஆலிஸ் மற்றும் அவளின் தாத்தா இருவருமே அவதியுற்றதால் ஹவாயின் காலநிலை அவர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்று ஆலிஸ் குழந்தையாக இருக்கையிலேயே ஹவாய்க்கு அவளது குடும்பம் இடம்பெயர்ந்திருந்தது. எனினும் அவளது தாத்தா சில ஆண்டுகளில் காலமானதால் மீண்டும் அவர்கள் சியாட்டிலுக்கே வந்தார்கள். பால்யகால நினைவுகளால் ஆலிஸுக்கு ஹவாயின் மீது தனிப்பிரியமிருந்தது.

1915-ல் ஹவாய் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் ஆனார் ஆலிஸ். ஆலிஸின் அதிபுத்திசாலித்தனத்தைப் பார்த்த ஹவாய் பல்கலைக்கழகம் அங்கேயே ஆலிஸுக்கு ஆசிரியையாகப் பணியாற்றவும் அனுமதி அளித்தது. 23 வயதில் ஹவாய் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய முதல் ஆப்பிரிக்க அமெரிக்கக் கறுப்பினப் பெண் என்னும் சாதனைக்கும் ஆலிஸ் உரித்தானாள்.

அந்தச் சமயத்தில்தான் ஹவாய் தொழுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவரான டாக்டர் ஹாரி டி. ஹோல்மேன் (Dr. Harry T. Hollmann), இந்திய மற்றும் சீனப் பாரம்பரிய மருத்துவ முறைகளில் தொழுநோயைக் குணப்படுத்துவதாகச் சொல்லப்பட்ட, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருக்கும் Hydnocarpus wightianus என்னும்  மரவட்டை என அழைக்கப்பட்ட மூலிகைக் குறுமரமொன்றின் விதை எண்ணெயைக் குறித்து ஆய்வுகள் செய்துதரும்படி கேட்டுக்கொண்டிருந்தார்.

‘மரவட்டை எண்ணெய்’ எனத் தமிழிலும், ‘Chaulmoogra’ என்று இந்தியிலும் அழைக்கப்பட்ட அந்த விதை எண்ணெயை இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில் தொழுநோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்பட்டது. ஹவாயில் அந்த எண்ணெய் களிம்பு போலத் தொழுநோயாளிகளின் உடலில் பூசப்பட்டது. ஆனால் அந்த எண்ணெய்க்குச் சருமத்தை ஊடுருவிச் செல்லும் திறன் இல்லாததால், சருமத்தின் அடியடுக்கில் வாழ்ந்த ‘மைக்கோபாக்டீரியம் லெப்ரே’வை அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

பின்னர் மருத்துவர்கள் நோயாளிகளைப் பலவந்தப்படுத்தித் தினந்தோறும் அந்த எண்ணெயைக் குடிக்கச் சொன்னார்கள். கடுமையான நெடியும் கசப்பும் கொண்டிருந்த அந்த எண்ணெய் பல வயிற்று உபாதைகளையும் வாந்தியையும் உண்டாக்கியது. பல நோயாளிகள் இந்த எண்ணெய் கொடுக்கும் கஷ்டங்களுக்குத் தொழுநோயின் வேதனையே பரவாயில்லை என்று முடிவு செய்து அந்தச் சிகிச்சையை ஏற்க மறுத்தார்கள். 

மேலும் சில மருத்துவர்கள் அந்த எண்ணெயை ஊசியாக உடலுக்குள்ளே செலுத்தினார்கள். ஆனால் நீரில் கரையாத இயல்பு கொண்டிருந்த அந்த எண்ணெய், ஊசி குத்தப்பட்ட இடத்திலேயே தங்கி நின்று மிகுந்த வலியை அளித்து எண்ணெய்க் கொப்புளங்களை உருவாக்கியது.

இந்த எண்ணெய் மருந்தினை உடல் ஏற்றுக்கெள்ளும் வகையில் தயாரிப்பதைக் குறித்த ஆய்வுகள் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மும்முரமாக நடந்துகொண்டிருந்த போதுதான் ஆலிஸிடம் உதவி கேட்கப்பட்டது. காளிஹி மருத்துவமனையில் தொழுநோயாளிகளின் துயரமான நிலையையும் அவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினரையும் நேரில் பார்த்து, காலாபாப்பாவின் கொடுமைகளைக் கேள்விப்பட்ட ஆலிஸ், அவர்களுக்கு எப்படியாவது உதவ நினைத்தாள். கற்பித்தலுக்கான நேரம் போக நள்ளிரவு வரையிலும், மிகச்சிறிய, மிகக்குறைந்த வசதிகள் கொண்ட, காற்றோட்டம் அவ்வளவாக இல்லாத அந்த ஆய்வகத்திலேயே ஆலிஸ் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாள்.

களிம்பாகத் தடவுவது, குடிப்பது மற்றும் ஊசி மருந்தாக்குவது ஆகிய, தோல்வியுற்ற அந்த மூன்று முறைகளையும்  ஆலிஸ் ஆராய்ந்தாள். அந்த விதை எண்ணெய் ‘ஹைட்ரோஃபோபிக்’ (Hydrophobic), அதாவது நீரை விலக்கும் இயல்பைக் கொண்டிருந்ததை அறிந்த ஆலிஸ், பிரச்சனை மனிதர்களின் உடலியங்கியலிலோ உயிரியலிலோ இல்லை, எண்ணெயின் வேதியியலில் இருப்பதை கண்டுபிடித்தாள். தொடர்ந்த பல்வேறு  ஆய்வுகளுக்குப் பின் அந்த விதை எண்ணெயில் இருந்த கொழுப்பு அமிலங்களை ஈதைல் எஸ்டர்களாக (Ethyl Esters) மாற்றி,  உலகைன் எந்த நாட்டிலும்  மிகப்பெரிய விஞ்ஞானிகளும் முயற்சி செய்துகூட  பார்த்திராத இரண்டு செய்முறைகளை ஆலிஸ் உருவாக்கினாள்.

அந்த மருந்தின் அடர்த்தியைக் குறைத்து, மிக நீர்த்த, எளிதில் உடலில் செலுத்தக் கூடிய ஊசி மருந்தாக மாற்றினாள்.

அந்த எண்ணெயை  நீரில் கரையும் வடிவத்தில் மீண்டும் மாற்றி, உடல் எளிதில் அதை ஏற்றுக்கொண்டு ரத்தநாளங்களின் வழியே பயணித்து மைக்கோபாக்டீரியாவுடன் போரிட வகை செய்தாள்.

அந்தச் செய்முறைக்கு ‘ஆலிஸ் பால் செய்முறை’ (Ball Method) என்று பெயரிட்டாள். ஆலிஸ் பாலுக்கு முன்பாகத் தகுந்த வேதி வடிவமைப்பு இல்லாததாலேயே சிகிச்சைக்குப் பலனளிக்க முடியாமல் சிறப்பட்டிருந்த அந்த மருந்தை, பல நோயாளிகளின் ரத்தநாளங்கள் வழியே பயணப்படச் செய்யும் முறையைக்கண்டறிந்தாள் ஆலிஸ்.

மாபெரும் வெற்றியான இதன் செய்முறைகளையெல்லாம் வரிவரியாகத் தனது ஆய்வுக் குறிப்பேட்டில் எழுதி வைத்த ஆலிஸ், தொழுநோய் ஆய்வு மைய மருத்துவர்களுக்கு நோயாளிகளுக்கு அந்த மருந்தை கொண்டு சிகிச்சையளிக்கச் சொல்லி சிறிதளவு மருந்தினையும் தயாரித்துக் கொடுத்தாள். அந்த மருந்து ஒரு சிலருக்கு அளிக்கப்பட்டு அவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட போது Dr. ஹாரி மேலும் மருந்துகள் தேவை என ஆலிஸிடம் கேட்டுக்கொண்டார். பெருமளவில் மருந்தைத்தயாரிக்க ஆய்வுமுடிவுகளை முறையாக அங்கீகரிக்கப்பட்ட சஞ்சிகைகளில் பிரசுரிக்க வேண்டி இருந்தது எனவே ஆலிஸ் அதில் மூழ்கி இருந்தாள்.

அச்சமயத்தில்தான் இரக்கமற்ற விதி ஆலிஸின் வாழ்வில் நுழைந்தது. வேதியியல் செய்முறை வகுப்பொன்றில் மாணவர்களுக்கு , எதிர்பாராமல் நச்சு வேதிப்பொருள் கசிகையில், முகக்கவசம் அணிவது எப்படி என்று கற்றுக்கொடுக்கையில் தவறுதலாக குளோரின் வாயுவை ஆலிஸ் சுவாசித்தாள்.

அதனால் இரண்டு நுரையீரல்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நோயுற்ற ஆலிஸ், ஆய்வை அப்படியே நிறுத்திவிட்டு விடுப்பு எடுத்துக்கொண்டு சியாட்டிலுக்குச் சென்றாள். அங்கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் கடினமாகப் போராடியும் பயனின்றி, டிசம்பர் 31, 1916-ல் 24 வயதே ஆன ஆலிஸ் மரணமடைந்தாள்.

தொழுநோய் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு ஆலிஸ் மருந்தைக் கொடுத்துவிட்டிருந்தாலும், தனது ஆய்வு முடிவை அவள் பிரசுரிக்காமலிருந்தாள். அப்போதுதான் வந்தார் ஆர்தர் டீன் (Arthur Dean) எனும் அறமற்ற ஒருவர். ஆலிஸ் அங்கு பணிபுரிகையில் ஆர்தர் டீன் ஹவாய் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார். மிக மதிக்கப்பட்ட விஞ்ஞானியான அவர், பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறைகளையும் ஆய்வகங்களையும் அவரது மொத்தக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

ஆலிஸ் விட்டுச்சென்ற குறிப்புகளையும் மருந்து தயாரிப்பதற்கான சூத்திரத்தையும் தானே எடுத்துக்கொண்ட டீன், ஏராளமான ஊசி மருந்தைத் தயாரித்து காலாபாப்பாவில் இருக்கும் நோயாளிகளுக்கு அனுப்பி, காளிஹி மருத்துவமனைக்கும் அனுப்பினார். அந்தச் செய்முறைக்கே ஆலிஸ் பாலின் பெயரை நீக்கி ‘டீன் முறை’ எனப் பெயரிட்டுப் பெரும்புகழடைந்தார். 1919-1920 களில் இது தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகளையும் தனது பெயரிலேயே அவர் பிரசுரித்தார். உலகமே ஆயிரமாண்டுகளாக மனிதகுலத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த தொழுநோய்க்கு ஹவாய் பல்கலைக்கழகத் தலைவர் ஒற்றை ஆளாக மருந்தை கண்டுபிடித்துவிட்டார் என்று கொண்டாடியது.

காளிஹி மருத்துவமனையில் 78 நோயாளிகள் காலாபாப்பாவிற்குச் செல்லுமுன்பான காத்திருக்கும் பகுதிக்கு மாற்றப்பட்டார்கள். டாக்டர் ஹோல்மேன் அவர்களுக்கு ஆலிஸ் பால் முறையில் தயாரிக்கப்பட்ட ஊசி மருந்தினைச் செலுத்தினார். அவர்களிடம் நோய் அறிகுறிகளில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்து நோய் குறையத் தொடங்கினால் மட்டுமே அவர்கள் காலாபாப்பாவுக்குச் செல்வது தடுக்கப்படும் என்றும், நோய் அப்படியே இருந்தாலோ மேலும் முற்றினாலோ அனைவரையும் போல காலாபாப்பாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் ஒரு சில மாதங்களிலேயே நோயாளிகளிடம் நல்ல முன்னேற்றம் தெரியவந்தது. அவர்களின் உடலில் இருந்த தடித்த வலிமிகுந்த வெண்திட்டுப் புண்கள் உலர்ந்து சுருங்கி மறைந்தன. ஆலிஸின் மறைவுக்குப் பின்னரும் அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

1920-ல் மருத்துவர் குழு ஒன்று காளிஹி மருத்துவமனைக்கு வந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் இருந்த அந்த 78 நோயாளிகளைக் கவனமுடன் பரிசோதித்தார்கள். அவர்களுக்கு நோய் அறிகுறி எதுவும் இல்லை என்றும், மைக்கோபாக்டீரியம் லெப்ரே அவர்கள் உடலில் இல்லையென்றும் அந்தக்குழு திட்டவட்டமாக அறிவித்தது. பல்லாயிரம் பேர் அந்த கம்பிவேலிக்குள்ளேயே இருந்து வெளி உலகைக் காணாமல் மரணமடைந்திருந்த வேளையில், அந்த 78 பேர் முதன்முதலாக அந்த கம்பிவேலியைக் கடந்து தங்கள் வீடுகளுக்குச் சென்றார்கள். அவர்களில் 1907-ல் பிடிக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட 9 வயது சிறுமி நைலிமாவும் இருந்தாள். அவளது பெயரைத்தவிர மற்றவர்களின் பெயரகளை அறிந்துகொள்ல முடியவில்லை.

மருத்துவ உலகின்  இந்த மிக முக்கியமான திருப்புமுனைச் செய்தி அமெரிக்க மருத்துவ சங்கத்தின் சஞ்சிகையான JAMA-வில் வெளியானது. பின்னர் உலகமே தொழுநோய் என்பது சிகிச்சையளித்துக் குணமாக முடிந்த ஒரு நோய் என்பதை அறிந்துகொண்டது.

1921-ல் மேலும் 94 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினார்கள். பின்னர் தொழுநோய் பாதிக்கப்பட்ட மக்கள் ‘காலாபாப்பாவுக்குப் பிடித்துச் செல்லப்படுவோம்’ என்னும் அச்சமின்றி, தங்களை மறைத்துக் கொள்ளாமல் ஆலிஸ் பால் முறையில் உருவாக்கப்பட்ட மருந்தை செலுத்திக் கொள்ள முன்வந்தார்கள்.

ஆனால் ஆலிஸின் பெயர் டீனால் முற்றிலுமாக மறைக்கபட்டது. 20-ம் நூற்றாண்டின் தொடக்க காலமான அப்போது தொழுநோய்க்கு மருந்து கண்டுபிடித்தது மாபெரும் மருத்துவச் சாதனையாகக் கருதப்பட்டு, ஹவாய் பல்கலைக்கழகத்துக்கும் டீனுக்கு தனிப்பட்ட முறையிலும் பெரும் நிதி உதவிகளும் புகழும் கிடைத்தன. 

ஆலிஸ் இதில் ஏதோ செய்துகொண்டிருந்தார் என்று ஓரளவுக்கு அறிந்திருந்தவர்கள் கூட, 24 வயதே ஆன கறுப்பினப் பெண்ணைக் காட்டிலும் அனுபவம் வாய்ந்த ஒரு வெள்ளைக்காரர் தான் அந்த கண்டுபிடிப்பைச் செய்திருக்க முடியும் என்று உடனே நம்பவும் செய்தார்கள்.

ஆலிஸிடம் முதலில் உதவி கேட்டிருந்த டாக்டர் ஹாரி ஹோல்மேன் இந்த ஆய்வுத் திருட்டை அறிந்து, 1922-ல் ஒரு ஆய்வறிக்கையாகவே ‘ஆலிஸ் பால் முறை’ எனப் பெயரிட்டு ஆலிஸின் எல்லா ஆய்வுகளையும் அதில் குறிப்பிட்டுப் பிரசுரம் செய்தார். எனினும் 84 ஆண்டுகளுக்குப் பல்கலைக்கழகத் தலைவராக இருந்த டீனின் செல்வாக்கினால் வரலாற்றில் ஆலிஸின் பெயர் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருந்தது. பள்ளி, கல்லூரிப் பாடத்திட்டங்களில் டீன் பெயர் இடம்பெற்று, ஹவாய் பல்கலைக்கழகமாக மாறிய அந்த கல்லூரியின் ஒரு மாபெரும் அரங்கிற்கு டீன் பெயர் சூட்டப்பட்டது.

ஆலிஸின் பெயரை வெளிக்கொணர டாக்டர் ஹோல்மேன் செய்த முயற்சிகள் பயனற்றுப் போயின. 1970-80களில் காளிஹி மருத்துவமனையில் பணியாற்றிய ஓய்வுபெற்ற அதிகாரியும் ஆய்வாளருமான ஸ்டான் அலி (Stan Ali) மற்றும் ஹவாய் பல்கலைக்கழகப் பேராசிரியரான டாக்டர் கேத்ரின் தகாரா (Dr. Kathryn Takara), ஆகிய இருவருமே ஆலிஸின் உழைப்பையும் உண்மையையும் வெளிக்கொண்டு வந்தார்கள்.

கேதரின் ‘ஹவாயில் கறுப்பினப் பெண்கள்’ என்னும் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அவர் ஹவாயில் அதுவரை பட்டம்பெற்ற கறுப்பினப் பெண்களின் பட்டியலைப் பார்த்தபோது, முதல் கறுப்பினப் பெண்ணான ஆலிஸின் பெயரைப் பார்த்து ஆச்சரியமடைந்தார். ஸ்டான் அலி காளிஹி மருத்துவமனை ஆவணங்களிலும், கேத்ரின் ஹவாய் பல்கலைக்கழக ஆவணங்களிலும் தோண்டித் துருவி, ஆலிஸின் அசல் ஆய்வுகளுக்கான சான்றுகளை 2000-த்தில் தேடியெடுத்து உலகின் பார்வைக்குக்கொண்டு வந்தார்கள்.

ஆதாரங்களுடன் ஆலிஸின் அரும்பணி வெளிவந்தபோது உலகெங்கும் பெரும் அதிர்வலைகள் உண்டாகியது. ஹவாய்ப்பலகலைக்கழகம் சுதரித்துக்கொண்டு பல்கலைக்கழக அளவிலான விசாரணையை தீவிரமாக முன்னெடுத்து அனைதும் உண்மை என கண்டுகொண்டது. 

நடந்த தவறுகளுக்கு பிழையீடாக 2000-த்தில் ஹவாய் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த ஒரே ஒரு சௌல்மூக்ரா (Chaulmoogra) மரவட்டை மரத்துக்கு ஆலிஸின் பெயர் சூட்டப்பட்டது. அந்த மரத்தடியிலுள்ள ஒரு வெண்கலப் பலகையில், “ஆலிஸ் பால் சௌல்மூக்ரா எண்ணெயிலிருந்து ஈதைல் எஸ்டர்களைப் பிரித்தெடுத்தாள். அவளது பால் முறை தான், சல்ஃபோன் மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் வரை பல்லாண்டுகளாகத் தொழுநோய்க்கு மருந்தாக இருந்தது” என்று பொறிக்கப்பட்டது.

2022-ல்  ஹவாய் கவர்னர், லீப் வருட பிப்ரவரி 29 ‘ஆலிஸ் பால் நாளாக’ கொண்டாடப்படும் என்று (மற்ற வருடங்களில் பிப்ரவரி 28 அந்த நாள் கொண்டாடப்படுகிறது) அறிவித்தார். ஒவ்வொரு வருடமும் அந்த நாளில் பல்லாயிரக்கணக்கானோர் அந்த மரத்திற்கு ஹவாயின் பிரபல மலர் மாலைகளைச் சூட்டி மகிழ்கிறார்கள். 2007-ல் ஹவாய் பல்கலைக்கழகத்தின் மிக உயரிய விருதான ‘ரிஜெண்ட் பதக்க விருது’ ஆலிஸுக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஹவாய்க்கு ஒரு வசந்த காலத்தில் வந்த ஆலிஸ், நூற்றாண்டுகளாக மருத்துவர்களைக் குழப்பிய ஒரு மாபெரும் மருத்துவப் புதிரை அவிழ்த்துவிட்டு, அடுத்த குளிர்காலத்திற்குள்ளேயே உதிர்ந்துபோன ஒரு அரிய மலர்.

எண்களின் மாயக்காரி எடா லவ்லேஸ்!

படுக்கையில் நகர முடியாமல் கிடந்த எடா, வயிற்றில் சுண்டி இழுத்துக் கொண்டிருந்ததோடு, உடலெங்குமே பரவியிருந்த அதிகபட்ச வலியில் பற்களைக் கடித்துக்கொண்டிருந்தாள். அருகில் அமர்ந்திருந்த அன்னா இஸ்பெல்லாவை ஏறிட்டுப் பார்த்து, “அம்மா கொஞ்சமே கொஞ்சம் அபினைத் தா, பின்னர் நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்; என்னால் வலியைத் தாங்க முடியவில்லை” என்றாள். முகத்தில் எந்த மாறுபாடுமின்றி, “நீ உன் பாவங்களுக்காக மன்னிப்பை எப்போது கேட்கிறாயோ, அப்போதுதான் உனக்கு வேண்டியது கிடைக்கும். எடா, நீ விரைவில் கர்த்தரைச் சந்திக்கவிருக்கிறாய், அப்போது நீ தூய்மையாக இருக்க வேண்டாமா? சொர்க்கத்தில் உனக்கு இடம் கிடைக்கவே நான் இவற்றைச் செய்கிறேன்” என்றாளஅன்னா.

லண்டனில் செயின்ட் ஜேம்ஸ் சதுக்கத்தில் அமைந்திருந்த அந்த பிரம்மாண்டமான மாளிகையில், எடா, அன்னாவின் அனுமதியின்றி யாருமே வர முடியாமலான வெறிச்சோடிக்கிடந்த  அவளது படுக்கையறை வாசலைப் பார்த்தபடி கண்ணீர் வழிந்த கண்களை மூடிக்கொண்டாள்.  

அன்னா இந்த வீட்டுக்கு வருவதற்கு முந்தைய நாள் வரை கர்ப்பப்பை புற்று நோயின் வலியைத்தாங்க மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்த அபினை எடா அன்றாடம் எடுத்துக்கொண்டிருந்தாள்.   நோய் முற்றி, எடா நடமாடமுடியாமல் படுக்கையில் இருக்கவேண்டி வந்து, அவளைப்பார்த்துக் கொள்ளவென்று அன்னா அங்கு வந்தபிறகு எல்லாம் அன்னாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. மகளின் உச்சவலியைக்காட்டிலும்  இளமையிலிருந்தே தனக்குள் உறைந்துபோன கிறிஸ்துவ நெறிகளுக்கே அன்னா முக்கியத்துவம் கொடுத்தாள். எடாவின் மரணத்தைச் சாக்காக வைத்தாவது  எடா தொலைத்ததாக அன்னா நம்பிய, குடும்ப கெளரவத்தை மீட்டெடுக்கவும் சொர்க்கத்தில் எடாவுக்கு இடம்கிடைப்பதை உறுதிசெய்யவும்  நினைத்தாள் அன்னா.

’’…அம்மா அம்மா…’’ என்று கெஞ்சும் எடாவின் வலி நிறைந்த குரலைப் புறக்கணித்து, அன்னா இஸபெல்லா என்னும் அந்தத்தாய் இறுகிய முகத்துடன் அறையிலிருந்து வெளியேறினாள். நோயுற்றிருந்த எடாவுக்கு வேண்டியதைச் செய்ய அங்கே  ஏராளமான பணியாளர்கள் இருந்தனர். லவ்லேஸ் குடும்பச் சீமாட்டி, கோமான் வில்லியமின் மனைவியான எடா, செல்வாக்குமிக்க பிரபுக்களின் குடும்பத்தில்தான் வாழ்க்கைப் பட்டிருந்தாள். புற்றுநோயின் வலியிலிருந்து தப்பிக்க அவளுக்குக் கஞ்சாவும் அபினும் வெகுவாக உதவின. முன்புபோலக் குதிரைப்பந்தயங்களில் ஈடுபடவும் அவளது நண்பர்களுடன் நேரம் செலவழிக்கவும் அவளால் முடியாமல் போனபோதும், வலியைத் தாங்கிக்கொள்ள அபின் கிடைத்துக்கொண்டிருந்தது. ஆனால், 1852 கோடையில் எடா நடமாட முடியாமல் போனதும், அன்னா இஸபெல்லா மகளின் வாழ்வைத் தன் கையில் எடுத்துக்கொண்டாள்.

கடுமையான  மதம் சார்ந்த ஒழுக்க நெறிகளால் இறுகிப்போன மனம் கொண்ட அன்னா, கணவனின் கிறுக்கு எடாவுக்கு வந்துவிடக் கூடாது என  இளமையிலிருந்தே மிகக் மிகக் கடுமையாக எடாவின் வாழ்வை கட்டமைத்தார்.  எடாவை வேவு பார்க்கவென்றே பல பணியாளர்களை அமர்த்தி, எடாவை ஒரு கணம் கூட சுயமாக வாழவிடாமல் தன் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முயன்றாள் அன்னா.

பெருங்கவி பைரனின் காதல் மனைவியாகத் தான் பட்ட பாட்டைத் தன் மகள் படக் கூடாது என அன்னா நினைத்ததில் தவறில்லை; ஆனால் அதை அவள் நடைமுறைப்படுத்தியது மிகக் கடுமையாக எடாவைப் பாதித்தது. அன்னாவின் விதிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் எதிரானதாகவே தன் வாழ்வை எடா அமைத்துக்கொள்ள முயன்றாள்.

வில்லியம்ஸை மணமுடித்து தன் விருப்பம் போல எடா வாழ்ந்து கொண்டிருக்கையில்தான் அன்னா அவள் வாழ்வில் குறுக்கிட முடியாமலானது. 

ஆனால் புற்றுநோய் எடாவின் வாழ்வை முற்றிலுமாக மாற்றியமைத்தது.  எடா நோயுற்றதும் அன்னா எடாவின் மாளிகைக்கே வந்துவிட்டாள். கடவுளின் மீது விசுவாசம் கொண்டிருந்தவர்கள்  என அன்னா நம்பியவர்கள் மட்டுமே அன்னாவின் அனுமதியுடன் எடாவின் அறைக்கு பணி செய்ய வந்தார்கள். வலி தாங்க முடியாத  எடா அபினுக்காக எதையும் செய்யத் தயாரானபோது, நோயும் அவளை அழைத்துச் செல்லும் அளவுக்கு முற்றி இருந்தது. 

இறப்பு அணுகிக்கொண்டிருப்பதை அறிந்த எடா, வலியில்லாமலாவது மரணத்தைச் சந்திக்க முடிவுசெய்தாள்.  அம்மாவிடம் தான் பாவமன்னிப்புக் கேட்கத் தயாராக இருப்பதாகச் சொன்னாள். “முதலில்  ஒரு மனைவியாக நீ செய்த எல்லாப் பாவங்களையும் கணவனிடம் சொல்லிவிடு, பிறகு மற்றவற்றைப் பார்க்கலாம்” என்றாள் அன்னா. கண்ணீருடன் ஒத்துக்கொண்ட எடா, அன்னா அளித்த அபினை உண்டு வலியைக் கட்டுப்படுத்திக்கொண்டு கணவனை வரச் சொன்னாள்.  

1835-ல் திருமணம் ஆனதிலிருந்து எடாவின் மீது பேரன்பு கொண்டிருந்த வில்லியம் கிங், அன்னாவின் வரவுக்குப் பிறகு எடாவைப் பார்ப்பது குறைந்திருந்தது. எடாவின் நோயை அவரும் அறிந்து துயருற்றிருந்தார். எடாவிடமிருந்து அழைப்பு வந்தபோது, அவருக்குத் தெரிந்திருக்கவில்லை எடா எத்தனை பெரிய அதிர்ச்சியை அவருக்கு அளிக்கப்போகிறாள் என்று.

படுக்கையின் ஓரத்தில் அமர்ந்து எடாவின் கையைப்பற்றிக் கொண்டிருந்த வில்லியமின்  கண்களை நேராகப் பார்த்து, குதிரைப்பந்தயத்தின் வெற்றியை கணிதவியலின்படி தீர்மானிக்க முடியும் என்று நம்பி தான் செய்த பிழையான கணக்கீடுகளால் உண்டாகிய பெரும் நஷ்டத்தையும், அதை மறைக்க லவ்லேஸ் குடும்பத்தின் பாரம்பரிய வைரங்களை அடகு வைத்ததையும் பதிலுக்கு போலி வைரங்களை அந்த இடத்தில் மாற்றியதையும் எடா சொன்னபோது வில்லியம் அதிர்ந்தார். 

ஆனால் அடுத்து எடா சொன்னதை அவர் கற்பனையிலும் நினைத்திருக்கவில்லை. குதிரைப்பந்தயக்காரரான ஜான் குரோஸுடன் தனக்கிருந்த  மணஉறவைத்தாண்டிய காதலையும் தெரிவித்த எடா, தனது பிற ஆண் நண்பர்களைக் குறித்தும் தெரிவித்துவிட்டு கண்களை மூடிக்கொண்டாள். திகைத்துப்போன வில்லியம், பாவமன்னிப்பை அளிக்கவும் மனமின்றி எடாவைப் பற்றியிருந்த தனது கைகளை என்றென்றைக்குமாக விலக்கிக்கொண்டு அந்த அறையிலிருந்து வெளியேறினார். ஒரே வீட்டிலிருந்தும் எடா மரணமடையும் வரை வில்லியம் மீண்டும் அவளைச் சந்திக்கவே இல்லை. பின்பு எடாவின் இறுதிநாட்கள் முழுக்கவே அன்னாவின் கட்டுப்பாட்டிற்கு வந்தது.

1852-ன்ஆகஸ்ட் மாதம், ஜன்னல் திரைகள் இழுத்து மூடப்பட்டிருந்த அந்த இருண்ட அறையில், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், எலும்பும் தோலுமாகப் படுக்கையில் கிடந்த எடா புற்றுநோயின் வலியை மறக்க வைத்த அபினின் மயக்கத்தில் கண்கள் செருகி, மயக்கத்துக்கும் விழிப்புக்குமிடையில் ஊசலாடிக்கொண்டிருந்தாள். வாசலில் நின்றிருந்த அன்னா இஸபெல்லாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, எடாவின் நீண்ட கால நண்பர் சார்லஸ் டிக்கின்ஸ் உள்ளே நுழைந்தார். கையில் அவர் எழுதிய ‘டாம்பி அண்ட் சன்’ (Dombey and Son) நாவல் இருந்தது. மெல்ல எடாவின் அருகில் அமர்ந்த டிக்கின்ஸ், அவளது மெலிந்த கைகளைப் பற்றினார்.

முயன்று புன்னகைத்த எடா மெல்லிய குரலில் முணுமுணுத்தாள், “சார்லஸ், நல்லவேளை நீங்களாவது என்னைப்பார்க்க வந்தீர்கள். மரணம் என்பது எண்களைப் போன்றது என்று நினைக்கிறேன். உச்ச கட்ட வலியின் போதெல்லாம் எனக்கு சுவர்களில் எண்களின் மாயத்தோற்றம் தெரிகிறது. எண்களும் கணக்குகளும் தானே துல்லியமானதும், தவிர்க்க முடியாததும்? ஆனால் என் கணினி இயந்திரம் நெய்யப்போகும் அந்த எதிர்காலப் பூக்களைக் காண நான் இருக்க மாட்டேன் போலிருக்கிறது.”

டிக்கன்ஸ் அவளது கையை அழுத்திப் பிடித்து, “எடா, உங்கள் சிந்தனைகள் அழியாதவை. அவை காலத்தைக் கடந்தவை. இப்போது எண்களைப் பற்றி யோசிக்காதீர்கள். இதோ, உங்களுக்குப்பிரியமான  நீங்கள் கேட்டுக்கொண்ட பால் டாம்பியின் கதையை உங்களுக்காக வாசிக்கிறேன்,” என்றார்.

அவர் நாவலைத் திறந்து  எடாவுக்கு பிடித்தமான அந்த நாவலின் உருக்கமான மரணக் காட்சியை வாசிக்கத் தொடங்கினார்: “மெல்ல… மெல்ல அந்த நதி கடலை நோக்கிப் பாய்கிறது…”

எடா கண்களை மூடியபடி சொன்னாள், “சார்லஸ்… உங்கள்  குரல் என் வலியைக் குறைக்கின்றது. என் தந்தை  பைரன் கவிதைகளால் உலகை வென்றார், நான் எண்களால் உலகை மாற்ற முயன்றேன். ஆனால் இப்போது, அப்பாவுக்கும் மகளுக்குமான உறவுச்சிக்கலைச்  சொல்லும் இந்தக்கதையே எனக்குப் போதுமானதாக இருக்கிறது.”

டிக்கின்ஸ் தொடர்ந்து வாசித்தார். அந்த அறையில் டிக்கின்ஸின் கணீர் என்ற குரலும், எடாவின் தட்டுத்தடுமாறும் சுவாசமும் மட்டுமே எஞ்சியிருந்தது. அன்னாவின் கட்டுப்பாடுகளைத் தாண்டி, ஒரு மேதைக்கு இன்னொரு மேதை வழங்கிய இறுதி அஞ்சலி அது.

தொடர்ந்த நவம்பரில் எடாவின் மூச்சு மெல்ல மெல்லக் குறைந்து, இன்னும் சில நாட்களில் இறப்பது உறுதியானபோது, எடா அதுநாள் வரை தனக்கு அன்னா இழைத்த எல்லா அநீதிகளுக்கும் பதிலாகத் தனது மரணத்திற்குப் பின்னதான ஒரு விருப்பத்தை கடவுளின் பெயரால் தெரிவித்தாள். அதைச் செய்யாமல் இருக்கவே முடியாதென்பதால் அன்னா அதிர்ந்துபோனாள். 

மத நம்பிக்கைகளால் இறுகிக் குளிர்ந்திருந்த அன்னா, எடா பிறந்த 5-வது வாரமே பெருங்கவி பைரனைப் பிரிந்தார். அவர் மீது காதல் இருந்தபோதும் அவரது பைத்தியக்காரத்தனம் தன் மகளுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகப் பைரனின் உருவப்படத்தைக் கூட எடா பார்க்காதபடி ரகசியமாகக் காத்தார். பைரன் அவ்வப்போது எடாவுக்கு எழுதிய கடிதங்களில் மட்டுமே அவள் தன் தந்தையை அறிந்திருந்தாள். பைரனின் கிறுக்குத்தனம், கவி மனம், தங்கை முறையுடையவளோடு அவருக்கு இருந்த காதலுறவு, கணக்கற்ற காதலிகளுடனான தொடர்பு போன்ற ஒழுக்க மீறல்கள் பைரனின் ஒரே சட்டபூர்வ மகளான எடாவுக்கு  வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அன்னா எடாவை மிகமிகக் கடுமையாக வளர்த்தாள்.

தனது அரண்மனை போன்ற தாய்வீட்டில் கருப்புத் துணியால் மூடப்பட்டிருந்த தந்தையின் உருவப்படத்தை தனது 20 வயதில்தான் முதல்முறையாகப் பார்த்தாள் எடா.

தந்தையின் கவி மனம் மட்டுமல்ல, தாயின் கணிதப் புலமையையும் பல மடங்கு அதிகமாகக் கொண்டிருந்த எடா, தன் கடைசி விருப்பமாகத் தான் 36 வயது வரை பார்த்தே இராத தனது தந்தை பைரனின் கல்லறைக்கு அருகிலேயே தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று சொல்லிவிட்டு, நவம்பர் 27,  அன்று நிரந்தரமாகக் கண்களை மூடிக்கொண்டாள். 

எடா, டிசம்பர் 10, 1815-ல் லண்டனில் பிறந்தார். இவரது தந்தை புகழ்பெற்ற கவிஞர் லார்ட் பைரன், தாய் லேடி பைரன். அடா பிறந்த சில வாரத்திலேயே அவரது தாய் கணவரைப் பிரிந்தார். அடாவுக்கு 8 வயதாக இருந்தபோது பைரன் இறந்துபோனார். 

எடாமட்டும் தான் பெருங்கவி பைரனின் சட்டபூர்வமான ஒரே ஒரு மகள். பைரனுக்கு அவரது மாற்றாந்தாயின் மகளும் தங்கையுமான அகஸ்டாவுடன் காதல் உறவு இருந்தது. எனவே தன் காதல் மனைவி அன்னாவுக்குப் பிறந்த குழந்தைக்கு ‘அகஸ்டா எடா’ என்றே பெயரிட்டார் பைரன்.(அகஸ்டா அடா பைரன் (Augusta Ada Byron).திருமணத்திற்குப் பிறகு, அகஸ்டா அடா கிங், கவுண்டஸ் ஆஃப் லவ்லேஸ் (Augusta Ada King, Countess of Lovelace).

அகஸ்டாவுடனும், மேலும் பலருடனும் பைரனுக்கு இருந்த உறவுகளையும் அவரது பைத்தியக்காரத்தனத்தையும் திருத்த முடியாது என்று அறிந்துகொண்ட அன்னா, எடா பிறந்து 5 வாரங்களானபோது பைரனை மணவிலக்கு செய்வதாக அறிவித்துவிட்டுத் தனது தாய்வீட்டிற்குப் பிரிந்து சென்றார். மாபெரும் கணித நிபுணரான அன்னா இஸபெல்லா, பைரனைப் போல எடா எந்தவிதத்திலும் வளரக் கூடாது என்பதில் மிகுந்த கண்டிப்பைக் காட்டினார். அன்னாவின் தாயும் எடாவின் பாட்டியுமானவரின் கடுமையான கண்காணிப்பில் எடா வளர்ந்தாள்.

தாயைப்போலவே எடாவுக்குக் கணிதம் இயல்பாகவே வந்தது; எனினும் அவளுக்குத் தனியே சிறப்புக் கணிதப் பாடம் எடுக்க ஆசிரியரை நியமித்திருந்தார் அன்னா. தனது 17-ம் வயதில் கணித ஆசிரியருடன் காதல்வயப்பட்ட எடா, தாயின் கண்டிப்பிலிருந்து தப்பிக்க அந்த ஆசிரியருடன் வீட்டிலிருந்து தப்பி ஓடினாள். ஆனால் காதலன் வீட்டில் அவர்களைக் கண்டுபிடித்து எடாவை மீண்டும் அன்னாவிடம் ஒப்படைத்தார்கள். அந்த நிகழ்வை அப்படியே மூடிமறைத்த அன்னா, மேலும் பலபடி எடாவைக் கடுமையாக வளர்க்க முயன்றார். தனது தாய்க்கு எடாவை  ஒருமையில் அது இது என்று குறிப்பிட்டு கடிதம் எழுதுமளவுக்கு எடாவின் ஒழுக்கக் குறைபாட்டில் அன்னாவுக்கு அதிருப்தி இருந்தது.

எடாவின் வயதொத்த பெண்கள் தையல் கலையில் ஈடுபட்டிருக்கையில்,பிறவி மேதையான எடா பறவைகள் பறப்பதைத் கூர்ந்து கவனித்துப் பறத்தலியல் (Flyology) என்னும் நூலைத் தனது பதின்மவயதில் எழுதினாள். பறவைகளின் உடல் அமைப்பு, எடை, இறகுகளின் அமைப்பு ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்து வரைபடங்கள் உண்டாக்கி, அவற்றைப்போலப் பட்டுத் துணி காகிதங்கள் மற்றும் கம்பிகளால் இறக்கைகளையும் செய்து கொண்டிருந்தாள் எடா. கணிதத்தில் நிபுணராகிய அன்னாவை விடவும் பல படிகள் முன்னேறி, “எண்களின் மாயக்காரி” எனக் கணிதவியலாளர் சார்லஸ் பாபேஜினால் செல்லப் பெயர் சூட்டுமளவுக்குக் கணிதத்தில் நிபுணத்துவம் கொண்டிருந்தாள் எடா.  பாபேஜ் மட்டுமல்லாது பல முன்னணி அறிவியலாளர்களுடன் எடாவுக்குத் தொடர்பு இருந்தது.

அக்காலத்தின் சிறந்த அறிவியலளர்களான மேரி சோமர்வில்லே மற்றும் அகஸ்டஸ் டி மார்கன் ஆகியோர் எடாவுக்குப் பாடம் கற்பித்தனர். குறிப்பாக மேரி சோமர்வில்லே எடாவுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார், அவருடன் அவர் விண்வெளி மற்றும் வானியல் குறித்து விவாதித்தார்.

எடா ஒரு உயர்குடிப் பெண் என்பதால்,  மேரி போன்ற பெண் அறிவியலாளர்களுடன் நட்பில் இருந்ததோடு அக்காலத்தின் மிகச்சிறந்த சிந்தனையாளர்கள் பலருடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தார். மின்காந்தவியல் அறிஞரான மைக்கேல் ஃபாரடேயுடன் எடா அறிவியல் கருத்துக்களை விவாதித்தார். தந்தி கண்டுபிடிப்பாளரான சார்லஸ் வீட்ஸ்டோன், கலைக்கண்ணாடியைக் கண்டுபிடித்தவரான டேவிட் ப்ரூஸ்டர் ஆகியோருடன் எடாவுக்கு அறிமுகமும் நல்ல நட்பும் இருந்தது. எடா தனது தந்தை பைரனின் “கற்பனைத் திறனையும்” தாயின் “கணிதத்தையும்” இணைத்துத் தன்னுடைய அறிவியல் அணுகுமுறையை “கவித்துவ அறிவியல்” (Poetical Science) என்று அழைத்தார்.

எடாவுக்கு 17 வயது இருக்கும்போது, மேரி சோமர்வில்லே மூலம் கணினியியலின் தந்தை எனக்கருதப்படும் சார்லஸ் பாபேஜைச் சந்தித்தார். சில வருடங்கள் அவருடன் நல்ல அறிவார்ந்த நட்பிலிருந்த எடா, பாபேஜ் உருவாக்கிய கொஞ்சம் பெரிய கால்குலேட்டர் போன்ற கணக்கிடும் இயந்திரத்தைப் பார்த்தவுடன், அதன் நுட்பத்தை உடனடியாகப் புரிந்துகொண்டார். பாபேஜ் அந்த இயந்திரத்தை வெறும் எண்களைக் கணக்கிடும் கருவியாக மட்டுமே பார்த்தார். ஆனால் எடா, அந்த இயந்திரம் எண்களைத் தாண்டி இசை, ஓவியம் மற்றும் குறியீடுகளைக் கூடக் கையாளும் என்று கணித்தார். இதுதான் இன்றைய நவீன கணினிகளின் அடிப்படைத் தத்துவம்.

இப்போது உபயோகத்தில் இருக்கும் நவீன கணினிக்கு இணையான ‘அனலிட்டிகல் என்ஜின்’ என்ற ஒன்றை உருவாக்கும் திட்டத்தை வைத்திருந்த சார்லஸ் பாபேஜ் இத்தாலியில் உள்ள துரின் பல்கலைக்கழகத்தில் தனது அந்த அனலிட்டிக்கல் இயந்திரத்தைப் பற்றி 1842-ல் ஆங்கிலத்தில் சொற்பொழிவு ஆற்றினார்.   அவருக்கு இத்தாலிய மொழி தெரியாது. அரங்கிலிருந்த இத்தாலியர்களுக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது என்பதால் பாபேஜின் நண்பர் ஜியோவானி பிளானா அந்த உரையை உடனுக்குடன் இத்தாலிய மொழியில் மொழிபெயர்த்து விளக்கினார்.

அந்த உரையைத் தழுவி இத்தாலியப் பொறியாளர் லூய்கி மெனாப்ரியா, அனலிட்டிகல் என்ஜினின் செயல்பாடுகளைப் பற்றிப் பிரெஞ்சு மொழியில் ஒரு கட்டுரையை எழுதினார். அக்காலத்தில் ஐரோப்பாவின் அறிவியல் மொழியாகப் பிரெஞ்சு இருந்தது. 

பாபேஜின் நண்பர்கள் எடாவிடம் அந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்குமாறு கேட்டுக் கொண்டனர். எடா அதை மொழிபெயர்த்தது மட்டுமன்றி, அசல் கட்டுரையை விட மூன்று மடங்கு அதிகமான நீளத்திற்குத் தனது சொந்த “குறிப்புகளை” (Notes A to G) அதில் சேர்த்தார். அந்த ‘Note G’ பிரிவில்தான் “பெர்னோலி எண்களை” அந்த இயந்திரம் எப்படிக் கணக்கிட வேண்டும் என்பதற்கான வழிமுறையை எழுதினார். இதுவே உலகின் முதல் கணினி நிரல் (First Computer Program) எனக் கருதப்படுகிறது.

எடா தனது ‘குறிப்பு G’ பகுதியில், பெர்னோலி எண்களைக் கணக்கிடுவதற்கான ஒரு படிமுறை நிரலை (Algorithm) எழுதினார். பெர்னோலி எண்கள் என்பது எண் கோட்பாட்டில் (Number Theory) பயன்படுத்தப்படும் ஒரு வரிசைமுறை எண்கள். பாபேஜின் இயந்திரம் வெறும் கூட்டல், கழித்தலை மட்டும் செய்யாமல், ஒரு சங்கிலித் தொடர் போன்ற கட்டளைகளைப் பின்பற்றி எப்படி ஒரு சிக்கலான விடையைக் கண்டறியும் என்பதை உலகிற்கு நிரூபிக்க எடா விரும்பினார். 

எடா தனது நிரலை ஒரு அட்டவணை வடிவில் உருவாக்கினார். இன்றைய நவீன புரோகிராமிங்கில் பயன்படுத்தப்படும் பல அடிப்படை நுட்பங்களை அவர் அன்றே பயன்படுத்தியிருந்தார்: இயந்திரத்தின் தரவுகளைச் சேமிக்கும் இடங்களை மாறிகள் -Variables என்று குறிப்பிட்ட எடா அவற்றை $V_1, V_2, V_3$ எனப் பெயரிட்டு அழைத்தார். ஒரு குறிப்பிட்ட கணக்கை மீண்டும் மீண்டும் செய்ய ‘சுழற்சி’ (Loops) முறை தேவை என்பதை அவர் உணர்ந்து, அதைத் தனது நிரலில் சேர்த்தார். ஒரு விடை கிடைத்தால் அடுத்த கட்டத்திற்குச் செல்வது போன்ற தர்க்க ரீதியான முடிவுகளை எடுக்கும் முறையையும் அவர் விளக்கினார்.

இதற்கு முன்னால் யாரும் ஒரு இயந்திரம் தானாகவே ஒரு கணக்கைச் செய்வதற்குத் தேவையான “வழிமுறைகளை” எழுதியதில்லை. இயந்திரம் கணக்கிடும் என்பது மட்டுமே பாபேஜின் பார்வையாக இருந்தது, ஆனால் எடா இயந்திரத்திற்கு நாம் எப்படி கணக்கிட வேண்டும் என்று “கட்டளை” இடலாம் எனக் கருதினார். 

இந்தச் சிறிய வித்தியாசம்தான் மென்பொருள் (Software) என்ற துறையை உருவாக்கியது. எடா எழுதிய அந்த முதல் நிரலில் ஒரே ஒரு சிறிய பிழை (Bug) இருந்தது. அந்தப் பிழையை அவர் வேண்டுமென்றே செய்தாரா அல்லது தற்செயலாக நடந்ததா என்று இன்றும் விவாதிக்கப்படுகிறது. ஆனால், அந்தப் பிழையைத் தவிர்த்துப் பார்த்தால், அந்த நிரல் தர்க்கரீதியாக மிகச் சரியானது. அந்த இயந்திரம் ஒருவேளை அப்போதே உருவாக்கப்பட்டிருந்தால், எடாவின் நிரல் துல்லியமாக வேலை செய்திருக்கும் என்று நவீன விஞ்ஞானிகள் கணினி மூலம் சோதித்து உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஒரு இயந்திரத்தால் எண்களைக் கையாள முடிந்து, அந்த எண்களை இசைக் குறிப்புகளாகவோ, ஓவியப் புள்ளிகளாகவோ மாற்றினால், கணினியால் தானாகவே இசையமைக்க முடியும் என்று எடா 1840-களிலேயே கணித்தார். இதுதான் இன்றைய Artificial Intelligence (AI) மற்றும் டிஜிட்டல் இசையின் தொடக்கப்புள்ளி. 

எடா ஒரு புகழ்பெற்ற உவமையைக் குறிப்பிட்டார்: “நெசவு இயந்திரம் எப்படி பூக்களை நெய்கிறதோ, அதேபோல் அனலிட்டிகல் என்ஜின் இயற்கணித வடிவங்களை (Algebraic patterns) நெய்யும்.” துணிகளில் எம்பிராய்டரி டிசைன் செய்ய அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ‘பஞ்ச் கார்டுகளை’ கணினிக்குத் தரவுகளை வழங்கப் பயன்படுத்தலாம் என்று அவர் விளக்கினார். “இயந்திரங்களுக்குச் சொந்தமாகச் சிந்திக்கும் திறன் கிடையாது; நாம் என்ன கட்டளை இடுகிறோமோ அதை மட்டுமே அவை செய்யும்.”என்றார் எடா. 

சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, நவீனக் கணினியின் தந்தை ஆலன் டூரிங் (Alan Turing), அடாவின் இந்தக் கருத்தை ஆராய்ந்து அதற்கு Lady Lovelace’s Objection என்று பெயரிட்டார். ஏனென்றால் அடா லவ்லேஸ் அந்த இயந்திரத்தை கொடுக்கப்படும் கட்டளைகளை மட்டும் செய்யும் ஒரு “கருவியாக” , ஒரு பணியாளாக மட்டுமே பார்த்தார்; அதற்குச் சொந்தமாகப் புதிய யோசனைகளை உருவாக்கும்  திறன் இல்லை என்றார். ஆனால், ஆலன் டூரிங் இயந்திரங்களுக்கு முறையான பயிற்சி அளித்தால் அவை மனிதனைப் போலச் “சிந்திக்கும் ஆற்றல்” பெற்று, புதிய முடிவுகளை எடுக்க முடியும் என்று நம்பினார். அடா இயந்திரத்தின் வரம்புகளை விளக்கியதை, டூரிங் தனது ‘சிந்திக்கும் இயந்திரம்’ என்ற கோட்பாட்டிற்கு எதிராக வந்த ஒரு தர்க்கரீதியான தடையாக (Objection) கருதினார்.

அடுத்த நூற்றாண்டு உலகமே கணினி மயமாகப் போவதை அறியாமலேயே உலகின் முதல் கணினி நிரலரான எடா லவ்லேஸ் அந்த அறையில் அன்று விடைபெற்றுக்கொண்டாள். எந்தத் தந்தையைப் பார்க்கக் கூடாது என்று அன்னா தடுத்தாளோ, அந்தத் தந்தை இறந்த 36-வது வயதிலேயே எடாவும் இறந்தாள். நேரில் சந்தித்திராத தந்தையின் கல்லறைக்கு அருகே தானும் அமைய விரும்பினாள் எடா.

நாட்டிங்ஹாம்ஷையரில் இருந்த புனித மேரி மக்தலீன் தேவாலயக் கல்லறைத் தோட்டத்தில், எளிய நிலவரையில் ஈரமான சுவர்களுடன் இருந்த பெருங்கவி பைரனின் கல்லறை திறக்கப்பட்டது. அவரது சவப்பெட்டியின் மீது போர்த்தப்பட்டிருந்த ஊதா வெல்வெட் துணி மங்கி வெளுத்திருந்தது. அந்த வெல்வெட் துணியின் மீது ஒரு வெண்கலத் தகடு வைக்கப்பட்டு, அதே குழியில் பைரனின் சவப்பெட்டிக்கு அருகிலேயே “நானும் பைரனின் குருதிதான்” என அறிவித்துவிட்டு இறந்த எடாவின் சவப்பெட்டியும் இறக்கி வைக்கப்பட்டது. ஒரு சம்பிரதாயத்திற்காகக் கூடத் துக்கத்தைக் காட்டிக்கொள்ளாமல் மனைவியின் சடங்கில் வில்லியம் கலந்துகொண்டார். 

தாய் அன்னா, எடாவின் அடக்கத்திற்கு வராமல்,  குதிரைப்பந்தயக்காரன் ஜான் குரோஸுக்கு பெருந்தொகையளித்து, எடா எழுதிய காதல்கடிதங்களை அவனிடமிருந்து வாங்கி லண்டன் சதுக்கத்தில் இருந்த அந்த மாபெரும் மாளிகையில், அவளது கடிதங்கள், கணிதக்குறிப்புகள், பறவைகளைக்குறித்த எடாவின் அவதானிப்புகள், குதிரைப்பந்தய கணக்கு வழக்குகள் மற்றும் நாட்குறிப்புகள் என எல்லாவற்றையும் தீயிலிட்டு எரித்து எடாவின் ஆன்மாவைத் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாள்.   எடாவின் சூதாட்டம், ஜான் குரோஸ் உடனான தொடர்பு மற்றும் தந்தையின் சாயல் தெரிந்த அனைத்துக் கடிதங்களையும் அவர் எரித்தார். அப்படி அழிப்பதன் மூலம் எடாவின் வாழ்வைத் தூய்மைப்படுத்தி அவளைச் சொர்க்கத்திற்கு அனுப்ப முடியும் என அன்னா நம்பினாள். 

அதிர்ஷ்டவசமாக, எடா மற்றும் பாபேஜ் பரிமாறிக்கொண்ட அனலிட்டிகல் என்ஜின் தொடர்பான முக்கியக் குறிப்புகள் பாபேஜிடம் இருந்தன. பாபேஜ் அவற்றை மிகவும் பத்திரமாக வைத்திருந்தார். ‘அனலிட்டிகல் என்ஜின்’ என்னும் கருவிக்காக எடா எழுதிய நிரல்களை, அவளின் சிந்தனை கணினி உலகில் உண்டாக்கிய தாக்கத்தை அன்னாவால் ஏதும் செய்ய முடியவில்லை.

விக்டோரியன் காலத்தில் பெண்கள் அறிவியல் அல்லது கணிதத் துறையில் ஈடுபடுவது அநாகரிகமாகக் கருதப்பட்டது. எனவே, அடா தனது கட்டுரையைத் தனது முழுப் பெயரில் வெளியிடாமல் “A.A.L.” என்ற இனிஷியலில் மட்டுமே வெளியிட்டார். இதனால் அந்த மேதை  எடாதான் என்று பலருக்குத் தெரியாமலேயே போனது. சார்லஸ் பாபேஜின்  அனலிட்டிக்கல் என்ஜின் திட்டம் நிதி நெருக்கடியால் முழுமையாக முடிக்கப்படவுமில்லை. மென்பொருள் இருந்தும் அதை இயக்க வன்பொருள் (Hardware) இல்லாததால், எடாவின் நிரல்கள் வெறும் காகிதத்தோடு நின்றுவிட்டன. 

பாபேஜ் இறந்த பிறகு, எடாவின் அந்தக் குறிப்புகள் லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்திற்குச் சென்றன. பல தசாப்தங்களாக இவை தூசு படிந்து கிடந்தன. எடாவின் மகள் ஆன் பிளண்ட் தனது தாயின் சில குறிப்புகளைப் பாதுகாத்தார். அவர் மூலமாகவே அடாவின் சில தனிப்பட்ட சிந்தனைகள் ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைத்தன. 1953-ல் பி.வி. போடென் அடாவின் குறிப்புகளை மறுபதிப்பு செய்தபோதுதான் நவீன கணினி அறிவியலாளர்கள் வியந்து போனார்கள். மின்னணு கணினிகளே இல்லாத காலத்தில் அடா எழுதிய ‘சுழற்சிகள்’ மற்றும் ‘தர்க்கங்கள்’ அப்படியே நவீன நிரலாக்க மொழிகளோடு ஒத்துப்போவதைக் கண்டு உலகமே அதைத் திரும்பிப் பார்த்தது. இன்று அடாவின் அசல் குறிப்புகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பாட்லியன் நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் “அடா லவ்லேஸ் தினம்” கொண்டாடப்படுகிறது.

தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்கள், அடாவின் சூதாட்டப் பழக்கம், கடன் சிக்கல்கள் மற்றும் அவரது மரணத்திற்குப் பிறகு அவரது தாய் எடாவின் ஆவணங்களை எரித்தது போன்றவை அவரது புகழை உலகறியாமல் செய்துவிட்டது. அடா ஒரு “விஞ்ஞானி” என்ற பிம்பத்தை விட பைரனின் கிறுக்குத்தனக்களும் ஒழுக்க மீறல்களும் கொண்ட மகள் என்ற பிம்பமே அன்னாவால் வரலாற்றில் முன்வைக்கப்பட்டது.

அடா லவ்லேஸ், லவ்லேஸ் கோமானின் குடும்பத்தைச் சேர்ந்த “சீமாட்டி” என்றாலும், அவரது நிதி நெருக்கடிக்கு பின்னால் பல காரணங்கள் இருந்தன. விக்டோரியன் காலத்தில், ஒரு பெண்ணுக்குத் திருமணமானவுடன் அவரது சொத்துக்கள் அனைத்தும் அவரது கணவருக்கே சொந்தமாகும். எடாவிடம் கணிசமான சொத்துக்கள் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்த அவர் வில்லியமிடம் அனுமதி பெற வேண்டியிருந்தது. எடா பல அறிவியல் சோதனைகளைச் செய்தார், விலையுயர்ந்த புத்தகங்களை வாங்கினார், அறிஞர்களை வரவழைத்து விவாதங்களை நடத்தினார். இவற்றிற்குப் பெரும் தொகை செலவானது. பாபேஜின் இயந்திரத்திற்கு நிதியுதவி செய்ய அவர் முயன்றதும் நிதி அழுத்தத்தைக் கொடுத்தது. ஒரு சீமாட்டியாக அவர் ஆடம்பரமான விருந்துகளை நடத்தவும், அவர் செய்ய வேண்டி இருந்த சமூகக் கடமைகளுக்கும் பணம் தேவைப்பட்டது. கடன் பழக்கம் வட்டியோடு சேர்ந்து வளர்ந்தது.

எடாவின் நிதி நெருக்கடிக்கு முக்கியமான காரணம் ஜான் குரோஸ். அவர் மூலமே எடாவுக்குச் சூதாட்டப் பழக்கம் அறிமுகமானது. குரோஸ் ஒரு ஊதாரி மற்றும் கடனாளி. எடா அவரிடம் கொண்ட நட்பின் காரணமாக குரோஸின் கடன்களையும் சேர்த்துச் சுமக்க வேண்டியிருந்தது. தனது சொந்தத் தேவைகளை விட, குரோஸ் மற்றும் அவரது குதிரைப்பந்தய முயற்சிகளுக்கு நிதி வழங்க எடா நிறைய கடன் வாங்கினாள். எடாவின் தாய் லேடி பைரன் பெரும் செல்வந்தர்; ஆனால் அவர் எடாவுக்கு வழங்கும் பணத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்தினாள். அடா அந்தச் சுதந்திரத்தைப் பெற குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முயன்றாள்.

1840-களின் இறுதியில், அடாவுக்குக் கடுமையான பண நெருக்கடி இருந்தது. அப்போது அவர் தனது கணித அறிவைப் பயன்படுத்தி குதிரைப் பந்தயங்களில் வெற்றி பெற ஒரு ‘கணித மாதிரியை’ உருவாக்க முடியும் என்று நம்பினாள். ஜான் குரோஸுடன் இணைந்து ஒரு ரகசியக் குழுவை உருவாக்கினாள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட குதிரை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளைக் கணக்கிட ஒரு சிக்கலான சூத்திரத்தைப் பயன்படுத்தினர். அந்த குதிரைதான் வெற்றி பெறும் என நம்பி அதன் பெயரில் பெருந்தொகையைப் பந்தயத்தில் கட்டினர். எடா ஒரு சிறந்த கணிதவியலாளர், ஆனால் ஒரு விஷயத்தைக் கணக்கில் கொள்ளத் தவறினாள்: கணிதச் சமன்பாட்டில் குதிரையின் வேகத்தைக் கணக்கிட முடிந்தது, ஆனால் வானிலை மற்றும் ஜாக்கிகளின் சூழ்ச்சிகளைக் கணிக்க முடியவில்லை. எடா நிபுணத்துவம் கொண்டிருந்த, அவர் பெரிதும் நம்பிய எண்கள் அவளைக் கைவிட்டன.

எடாவின் கணிதச் சூத்திரம் காகிதத்தில் சரியாக இருந்தது, ஆனால் பந்தயக் களத்தில் அது தோற்றது. அவர் மீண்டும் மீண்டும் வெல்ல முயன்று பெரும் தொகையை இழந்தார். எடா இழந்த தொகை இன்றைய மதிப்பில் பல கோடி ரூபாய் இருக்கும். அவரது கணவர் வில்லியமுக்குத் தெரியாமல் வைர நகைகளை இரண்டு முறை அடகு வைத்தார். கணவருக்கு அது தெரியாமலிருக்க போலி வைரங்களை மாற்றி வைத்தார். இறுதியில் அவர் பெரும் கடனாளியாகவே இறந்தார். 

எடா லவ்லேஸ் ஒரு “அல்காரிதம்” மூலம் எதிர்காலத்தைக் கணிக்க முயன்றவர்களில் முதன்மையானவர். இன்று நாம் பயன்படுத்தும் பங்குச் சந்தை கணிப்புகள் மற்றும் AI தரவு பகுப்பாய்வு ஆகியவற்றின் முன்னோடி முயற்சி இதுதான்.

பாபேஜ் இறந்த பிறகு, அவரது கண்டுபிடிப்புகள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன. மின்சாரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே கணினி பற்றிச் சிந்தித்த இவர்களை உலகம் “பைத்தியக்காரர்கள்” என்று கருதி மறந்துவிட்டது. 

1940-களில் இரண்டாம் உலகப் போரின்போது, ஆலன் டூரிங் எடாவின் குறிப்புகளை மீண்டும் கண்டெடுத்தார். எடா எழுதிய நிரல்களை ஆராய்ந்த டூரிங், ஒரு இயந்திரத்தால் தர்க்கரீதியாகச் சிந்திக்க முடியும் என்ற எடாவின் கருத்தை உறுதிப்படுத்தினார். 1953-இல் பி.வி. போடென் எடாவின் கட்டுரைகளை மறுபதிப்பு செய்தபோதுதான், “உலகின் முதல் புரோகிராமர் ஒரு பெண்” என்பது உலகிற்குத் தெரியவந்தது. எடாவின் கண்டுபிடிப்புகள் அவர் காலத்திலேயே அங்கீகரிக்கப்பட்டிருந்தால், கணினித் துறை இன்னும் 50 ஆண்டுகள் முன்னதாகவே வளர்ந்திருக்கும்.

அடா லவ்லேஸிற்கு மூன்று குழந்தைகள். மூத்த மகன் பைரன் கிங்-நோயல் ஒரு அமைதியான தனிமையை விரும்பும் மனிதராக இருந்தார். இராணுவத்தில் பணியாற்றினார், ஆனால் உடல்நிலை ஒத்துழைக்காமல் தனது 26-வது வயதிலேயே காலமானார். மகள் ஆன் பிளண்ட் எடாவின் குழந்தைகளிலேயே மிகவும் திறமையானவர். ஒரு சிறந்த இசைக்கலைஞர் மற்றும் ஓவியர். அரபுக் குதிரைகளின் இனத்தைப் பாதுகாப்பதில் இவர் உலகப்புகழ் பெற்றவர். தனது பாட்டி அன்னாவின் கடுமையான வளர்ப்பால், தனது தாயின் மேதைமையை விட அவரது மீறல்கள் குறித்தே அதிகம் கேள்விப்பட்டு வளர்ந்தார். இளைய மகன் ரால்ப் கிங்-நோயல் தனது குடும்ப வரலாற்றை எழுதுவதில் ஆர்வம் காட்டினார். அவர் தனது தாத்தா பைரனுக்கும் பாட்டி அன்னாவுக்கும் இடையிலான மோதல்கள் குறித்துப் புத்தகம் எழுதினார். ஆயினும் அந்த நூல் குடும்ப கெளரவத்தை பாதுகாக்காமல் பழைய குப்பையை கிளருவதாகவே அமைந்தது.

எடா இறந்த பிறகு, இந்த மூன்று குழந்தைகளும் பாட்டி அன்னாவின் கட்டுப்பாட்டிலேயே வளர்ந்தனர். எடா ஒரு “தவறான முன்மாதிரி” என்று அவர்களுக்கு தொடர்ந்து போதிக்கப்பட்டது. எடாவின் மேதமை, கணித நிபுணத்துவம் மற்றும் அறிவியல் சாதனைகளை விட, அவரது கட்டுப்பாடற்ற இயல்பும், பலரோடிருந்த காதலும் பற்றியே அதிகம் குழந்தைகளிடம் பேசப்பட்டது.  கடுமையான விதிகள் இருக்குமிடத்தில்  தவிர்க்கமுடியாமல் எழும் மீறல்கள் தான் எடாவின் வாழ்விலும் இருந்தது என்பதை அவர்கள் வளர்ந்த பிறகுதான் உணர்ந்தனர். குறிப்பாக மகள் ஆன் பிளண்ட், தனது தாயின் தனித்துவமான சிந்தனைகளையும் சிறப்புகளையும் தனது பிற்கால வாழ்க்கையில் உணர்ந்தார்.

எடாவும் பைரனும் இறந்ததிலும் வாழ்ந்ததிலும் இருந்த ஒற்றுமைகள் திகைப்பூட்டுவது. இருவருமே 36-வது வயதில் இறந்தார்கள். இருவருமே கடுமையான வலியை அனுபவித்தார்கள். இருவருமே மிகுந்த புத்திசாலிகளாக இருந்தும் உலகோரால் சரியாகப் புரிந்துகொள்ளப்படாமல் இருந்தார்கள். இருவருமே சமூகத்திற்கு எதிரான மீறல்களில் ஈடுபட்டிருந்தார்கள். பைரன் கவிதைகளிலும் எடா கணிதத்திலும் ஆழ்ந்திருந்தார்கள். நோட்டிங்ஹாம்ஷையரின் அந்த இருண்ட நிலவறையில், சமூகக் கட்டுப்பாடுகளும், வேவு பார்க்கும் ஆட்களும், விதிகளும் இல்லாத அந்த இடத்தில் இருவரும் இன்று அருகருகே துயில்கிறார்கள்.

ரோஸலிண்ட் ஃப்ராங்க்ளின்- போட்டோ 51!

ரோஸலிண்ட் தனது ஸ்கர்ட் ஜிப்பை இன்றும் முழுமையாக  போட முடியாததை ஆச்சரியத்துடன் பார்த்தாள். போன மாதம் அமெரிக்கா புறப்படுகையிலும் அப்படியேதான் இருந்தது. வயிறு கொஞ்சம் பெருத்திருக்கிறதோ என்று அவளுக்குச் சந்தேகமாக இருந்தது.

அமெரிக்காவில் இருந்த 3 வாரங்களுமே அடிவயிற்றில் அவ்வப்போது வலியும் இருந்தது. ஆனால் அங்கே சிறப்பு அழைப்பாளராகப் பல பல்கலைக்கழகங்களுக்கும் ஆய்வு நிறுவனங்களுக்கு செல்ல வேண்டி இருந்ததால் வலியைப் பொருட்படுத்தக் கூட அவளுக்கு நேரமில்லை. 1956-ம் ஆண்டின் கோடைக்காலம் தொடங்கியபோது அமெரிக்கா சென்ற ரோஸலிண்ட், கோடை முடியப் போகும் போது தான் லண்டனுக்கு திரும்பி இருந்தாள். 

ரோஸலிண்ட் TMV என்னும் புகையிலை மொசைக் நோயை உருவாக்கும் வைரஸின் வடிவமைப்பைக் கண்டறியும் ஆய்வின் உச்சகட்டத்தில் இருந்தார். அதன்பொருட்டு தான் அவர் அமெரிக்காவுக்கும் அழைக்கப்பட்டிருந்தார். ரோஸலிண்ட் பணியாற்றிய லண்டன் பல்கலைக்கழக ஆய்வு நிறுவனத்தில் அவரது ஆய்வு ஏறக்குறைய இறுதியை எட்டி இருந்தது. 

அப்போதுதான்  உயிரியல் ஆய்வில் மிக முக்கியமானதான DNA-வின் இரட்டைச்சுழல் அமைப்பைக் கண்டறிந்திருந்த ரோஸலிண்ட் அடுத்து TMV வைரஸின் வடிவமைப்பைக் கண்டறியும் ஆய்வில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். அப்போது TMV கண்டுபிடிக்கப்பட்டு அது RNA மற்றும் புரதங்களால் ஆனது என்று மட்டும் அறியப்பட்டிருந்தது. ரோஸலிண்ட் புரதமும் RNA-வும் எப்படி அமைக்கப்பட்டுள்ளன என்று, தான் நிபுணத்துவம் கொண்டிருந்த X-ray Crystallography மூலம் கண்டறிந்து துல்லியமாக அதன் வடிவமைப்பைக் காட்டும் சில படங்களையும் எடுத்திருந்தார்.

TMV-யின் நடுவில் இருந்த RNA உள்ளீடற்ற ஒரு குழாய் என்றும், அதைச் சுற்றிலும் தனித்தனியே புரதங்கள் ஒரு உறை போலச் சூழ்ந்திருக்கின்றன என்பதையும், அனைத்து TMV வைரஸ்களும் ஒரே அளவில் இருந்ததையும் ரோஸலிண்ட் கண்டறிந்தார்.

அப்போதுதான் உருவாகியிருந்த Structural Virology துறையின்  மிக அடிப்படையான பல உண்மைகளை வெளிப்படுத்தும்  கண்டுபிடிப்பாக ரோஸலிண்டின் அந்தத் துல்லியமான தெளிவான புகையிலை வைரஸின் வடிவமைப்பு இருந்தது. அதைக் கொண்டே பிற வைரஸ்களின் வடிவமைப்பையும் மற்ற விஞ்ஞானிகள் அறிய முயன்றார்கள். இந்தக் கண்டுபிடிப்பின் பொருட்டு அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்ட ரோஸலிண்ட் உலகளவில் இந்தத் துறையின் முன்னணி விஞ்ஞானியாகப் போற்றப்பட்டார். 

அமெரிக்காவில் ஆய்வகங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் தொடர் உரையாற்றிய ரோஸலிண்டின் எக்ஸ்-ரே கிரிஸ்டலோகிராபி படங்களின் துல்லியத்தைப் பார்த்துப் பிற அமெரிக்க விஞ்ஞானிகள் வாயடைத்துப் போனார்கள். ரோஸலிண்டிற்கு அது ஒரு சுற்றுப்பயணம் மட்டுமல்ல, அந்த பயணத்தின் மூலம் உலகளாவிய ஒரு வைரஸ் வலைத்தொடர்பை விஞ்ஞானிகளிடையே அவர் உருவாக்க நினைத்திருந்தார். அமெரிக்காவின் முக்கிய விஞ்ஞானிகளான ரோம்லே வில்லியம்ஸ் மற்றும் பேரி கமோனர் ஆகியோருடன் நல்ல தொழில்ரீதியான தொடர்பை உருவாக்கிய பின்னரே ரோஸலிண்ட் லண்டன் திரும்பினார்.

இந்த வயிற்று வலி அவரைத் தொடர்ந்து ஈடுபாட்டுடன் பணியாற்ற விடாமல் செய்தது. ஆய்வகத்திலும் சில தோழர்கள் “அமெரிக்கா போய் குண்டாயிட்டியே இத்தனை சீக்கிரமா” என கிண்டல் பண்ணக்கூட தொடங்கிவிட்டார்கள். அடிவயிற்றின் அந்த வலி ரோஸலிண்டை அவள் ஆய்விலிருந்து தொடர்ந்து தொல்லை செய்தது. என்னவானாலும் இன்று மாலை தன் சிநேகிதியும் மருத்துவருமான மேர் (Mair Livingstone) என்கிற மேரியைப் பார்க்க முடிவு செய்தாள் ரோஸலிண்ட்.

டாக்டர் மேரியின் அறையில் விஷயத்தைச் சொன்ன ரோஸலிண்டைக் கிண்டலாகப் மேலும் கீழுமாகப் பார்த்த மேரி, “என்ன இது வயிறு மேடிட்டு இருக்கிறது? கர்ப்பமாக இருக்கிறாய் போலிருக்கிறதே?” என்றார். ரோஸலிண்ட் புன்னகைத்தபடியே, “கர்ப்பமாக இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் ஆனால் இல்லை, நீ என்னவென்று சரியாகப் பார்” என்றார். திரைக்குப் பின்னே ரோஸலிண்டை அழைத்துச்சென்று சோதித்த மேரியின் முகம் இறுகிக் கருத்துப்போனது. ரோஸலிண்டின் இரு சினைப்பைகளிலும் புற்றுநோய் உண்டாகி முற்றிப் பிற பாகங்களுக்கும் பரவி இருந்தது. ரோஸலிண்ட் அந்தச் செய்தியைத் திடமாகக் கேட்டுக்கொண்டார். 

ரோஸலிண்ட் டி.என்.ஏ-வின் கட்டமைப்பைக் கண்டறிய ஆயிரக்கணக்கான மணி நேரம் எக்ஸ்-ரே கதிர்வீச்சுகளுடன் பாதுகாப்பு உபகரணங்கள் அவ்வளவாக இல்லாத காலத்தில் மிக அதிகமாகப் பணியாற்றினார். நீண்ட கால கதிர்வீச்சு பாதிப்பு அவருக்கு புற்றுநோயை உருவாக்கி இருக்கலாம் என்றும், அவரது குடும்பத்தில் சிலருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததால், பரம்பரையாகத் தொடரும் மரபணு மாற்றங்களாலும் புற்று நோய் உருவாகி இருக்கலாம் என்று கருதப்பட்டது.

நோய் கண்டறியப்பட்டது செப்டம்பர் 1956-ல். அதன் பிறகான 18 மாதங்களுமே ரோஸலிண்டின் வாழ்க்கையில் பெரும் போராட்டக் காலமாகவே இருந்தது. அந்த மாதமே ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்து சினைப்பைகள் அகற்றப்பட்டன. அறுவை சிகிச்சை முடிந்ததுமே லண்டனில் இருந்த ஆய்வகத்துக்குச் சென்று தனது ஆய்வைத் தொடர்ந்தார் ரோஸலிண்ட். பின்னர் மீண்டும் பல சின்னச் சின்ன அறுவை சிகிச்சைகளும் அப்போதுதான் அறிமுகமாகி இருந்த சோதனை கீமோ தெரப்பிகளும் கதிர்வீச்சு சிகிச்சைகளும் அவருக்குத் தொடர்ந்து அளிக்கப்பட்டன. என்ன உடல்நிலையாக இருந்தாலும் ஆய்வகத்துக்குச் சென்று கொண்டே இருந்தார் ரோஸலிண்ட்.  ஒரு சில சமயங்களில் நண்பர்கள் அவரை தூக்கிக்கொண்டு போய்க்கூட ஆய்வகத்தில் சேர்த்தார்கள். அரிதாக நடமாட முடியாமல் போகும்போது மட்டும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வீட்டில் நேரம் செலவழித்தார். அப்போதும் அவரைச் சுற்றிலும் ஆய்வுக் குறிப்புகளும் வைரஸின் புகைப்படங்களுமே இருந்தன.

1957-ம் ஆண்டு ரோஸலிண்ட் உடல்நிலை மிக மோசமானது. ஆனால் அந்த ஆண்டுதான் அவர் மிக முக்கியமான ஆய்வுக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். அமெரிக்காவிலிருந்து அப்போது நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த தனது லண்டன் ஆய்வகத்திற்கு 10,000 டாலர் நிதித்தொகையும் வாங்கியிருந்தார். ரோஸலிண்டுடன் ஆரோன் க்ளக் ( Aaron Klug) மற்றும்  ஜான் ஃபின்ச் (John Finch) ஆகியோரும் வைரஸ் வடிவமைப்பு ஆய்வில் ஈடுபட்டிருந்தார்கள். புகையிலை வைரஸுடன், போலியோ வைரஸ் ஆய்வையும் கையிலெடுத்துக்கொண்ட ரோஸலிண்ட், 1958-ல் ஐரோப்பாவில் Brussels-ல் நிகழவிருந்த உலகளாவிய அறிவியல் கண்காட்சியில் புகையிலை வைரஸின் ஐந்து அடி உயர மாதிரி உருவத்தை உருவாக்கி, பொதுமக்களுக்குக் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமி என்று மட்டும் அறிவியலாளர்களால் சொல்லப்பட்ட வைரஸின் அழகிய வடிவமைப்பைக் காட்ட மிகவும் முயன்று கொண்டிருந்தார்.

ஆனால் 1958-ல் ஆரம்பத்தில் அவரது நோய் மிகத் தீவிரமானது.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோஸலிண்ட் படுக்கையில் இருந்தபடியே ஆய்வுக்கான நிதி விண்ணப்பங்களையும் ஆய்வறிக்கைகளையும் அனுப்பிக் கொண்டிருந்தார். 

அத்தனை தீவிரமான ஈடுபாட்டுடன் பணியாற்றிய ரோஸலிண்டின் அறிவியல் சாதனைகள்தான் வரலாற்றில் வடிகட்டப்பட்டன.

1920 ஜூலை 25 அன்று லண்டன் நாட்டிங் ஹில் பகுதியில் , அரசியல் பலமும் செல்வச் செழிப்பும் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தார் ரோஸலிண்ட். தந்தை எல்லிஸ் (Ellis Franklin) ஒரு வங்கியில் பங்குதாரராகவும், ஆண்கள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் இருந்தார். மக்களுக்குச் சேவை செய்வதைத் தன் முதல் கடமையாகக் கொண்டவர் எல்லிஸ். ரோஸலிண்டின் அம்மா மூரியலும் (Muriel Waley) மிகச் செல்வாக்கான குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரும் சேவை மனப்பான்மை மிகுந்தவர். அவர்களது வீட்டில் போர் அகதிகளான இரண்டு யூதச்சிறுமிகள் ரோஸலிண்டுடனேயே  வளர்ந்தார்கள் 

மிகச் சிறிய குழந்தையாக இருக்கும் போதே ரோஸலிண்டடின் சிந்தனைத் திறன் மிக அதிகமாக இருப்பதை குடும்பத்தினர் கவனித்தார்கள். பொம்மைகளை வைத்து விளையாடுவது, கதைகள் கேட்பது ஆகியவற்றில் ரோஸலிண்ட் எந்த ஆர்வமும் காட்டவில்லை. புதிர்களை விடுவிப்பது மிகச் சிக்கலான கணித சூத்திரங்களை பல வடிவங்களில் எழுதி விடையைக் கொண்டுவருவது போன்றவற்றில்தான் ரோஸலிண்ட் ஆழ்ந்திருந்தாள். மேலும் கடவுள், மதம் ஆகிவற்றில் நம்பிக்கையற்றவராக இருந்தார். அவரது தாய் He என்று கடவுளைக் குறிப்பிடுகையில் எல்லாம் ’’..ஏன் she இல்லையா கடவுள்? எப்படி He என்று முடிவுக்கு வந்தாய்?…’’ என்று கேட்பாள்.

ரோஸலிண்டிற்கு 6 வயதாக இருக்கையில் அவரது அத்தை, “உனக்கு பொம்மைகள் வேண்டாம், கதைகளும் வேண்டாம், பிறகு என்னதான் வேண்டும்?” என்று கேட்டபோது, “எனக்குத் தேவை உண்மைகள்”(i need facts) என்றாள். அவர் தனது கணவரிடம் ரோஸலிண்டை ’alarmingly clever’  என்று ஒரு முறை குறிப்பிட்டார். தன்னை யாரும் ரோஸி என அழைப்பதை அனுமதிக்காமல், ரோஸலிண்ட்  என்றே முழுமையாக தான் அழைக்கப்படவேண்டும் என்று கண்டிப்பாக கூறுவாள்.

நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட மரச்சாமான்கள் செய்யும் தச்சுவேலை, தையல்கலை மற்றும் கயிற்றில்  மிகச் சிக்கலான முடிச்சுகள் போட்டு அவிழ்ப்பது ஆகிய கைவேலைகளையே மிகவும் விரும்பிச் செய்தாள் ரோஸலிண்ட். அவரது பள்ளிக்காலம் லண்டனின் St Paul’s Girls பள்ளியில் கழிந்தது. அங்கு மட்டும்தான் அக்காலத்தில் அறிவியலும் கணிதமும் ஆண்களின் பள்ளிக்கு இணையாகக் கற்றுக்கொடுக்கப்பட்டன. வேதியியல், இயற்பியல் மற்றும் லத்தீன மொழிப்பாடங்களில் யாரும் அருகே கூட வர முடியாத முன்னிலையில் இருந்த, 6 டிஸ்டிங்ஷன்களுடன் பள்ளிப்படிப்பை முடித்த ரோஸலிண்ட் தனது 15 வயதில் தான் ஒரு விஞ்ஞானி ஆகப்போவதாக முடிவெடுத்தாள் .ஃபிராங்க்ளின் குடும்பத்தினர் எல்லா விடுமுறைக்காலங்களிலும் ஆல்ப்ஸ் மற்றும் நார்வீஜிய மலைகளில் மலையேறுதலில் ஈடுபட்டார்கள். மலையேற்றத்தை மிகவும் விரும்பினார் ரோஸலிண்ட். 

1938-ல் ரோஸலிண்ட் கேம்பிரிட்ஜின் நியூஹாம் கல்லூரியில் முழு நிதி உதவியுடன் சிறப்புப் பாடமாக வேதியியலைக் கொண்டிருந்த இயற்கை அறிவியல் பட்டப்படிப்பில் சேர்ந்தார். இரண்டாம் உலகப்போர் சமயம் அது. அங்கிருந்து ரோஸலிண்ட் வீட்டிற்கு எழுதிய கடிதங்களில் தான் கேஸ் மாஸ்க் (Gas mask) அணிந்துகொண்டு வகுப்புகளுக்குச் செல்வதைக் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். அவரது ஆசிரியர்கள் அவளின் அதீத புத்திசாலித்தனத்தையும்,  கற்பித்தலில் சிறு தவறு இருந்தால் கூட அதைக் கண்டுபிடித்து வாதிட்டுச் சரி செய்பவள் என்பதையும் நினைவு கூர்கின்றனர்.

1941-ல் மிகச்சிறப்பாக ரோஸலிண்ட் பட்டப்படிப்பை முடித்தார். ஆனாலும் கேம்பிரிட்ஜ் 1948 வரை பெண்களுக்குப் பட்டம் அளிப்பதில்லை என்னும் விதியில் இயங்கிக்கொண்டிருந்ததால் ரோஸலிண்ட் பட்டம் வாங்கவில்லை. . ஆண்களுக்கு ஒரு மாபெரும் விழாவில் சான்றிதழ் அளித்த பல்கலைக்கழகம் அதே வகுப்பில் அமர்ந்து அதே காலத்தை படிப்பில் கழித்து ஆண்கள் எழுதிய அதே தேர்வை எழுதிய பெண்களுக்கு ஒரு காகிதத்தில் ’இவர்கள் இந்தப்படிப்பை முடித்தார்கள்’ என்று எழுதி முத்திரை வைத்து வீட்டுக்கு தபாலில் அனுப்புவார்கள்.

பட்டம் பெற்ற சான்றிதழ் இல்லாமலேயே அதே கேம்பிரிட்ஜில் ரோஸலிண்ட் முனைவர் பட்ட ஆய்வில் இணைந்தார். நிலக்கரி மற்றும் கார்பனின் நுண் வடிவமைப்பில் முனைவர் பட்ட ஆய்வை 1945-ல்  முடித்தார். 

அவரது ஆய்வு முடிவுகள் போர்ச் சூழலில் gas mask உருவாக்குவதில் பெரும் பங்களிப்பாற்றின. முனைவர் என்னும் தகுதியுடன் ரோஸலிண்ட் 1947-ல் போர் ஓய்ந்த பின்னர் பாரிஸின் புகழ்பெற்ற  “Labo” ஆய்வகத்தில் கிரிஸ்டலோகிராபியில் நிபுணரான  ழாக் மெரிங்கிடம் (Jacques Mering) பணியாற்றினார். ழாக் மெரிங்  ரோசலிண்டுக்கு  X ray crystallography-ல் பயிற்சியளித்து பின்னாட்களில் அவர் DNA-வையும் வைரஸ்களையும் ‘பார்க்க’ உதவினார்.

ரோஸலிண்டுக்கு பாரிஸ் நாட்கள் பிடித்தமானவையாக இருந்தன. அந்த ஆய்வகத்தில் ஆண் பெண் வேறுபாடு இல்லாத சமத்துவம் நிலவியது. நீண்ட  மதிய உணவு இடைவேளை, அவ்வப்போது நிகழ்ந்த மிக அறிவார்ந்த உரையாடல்கள் மற்றும் பிரெஞ்சு கலாச்சாரம் ஆகியவை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. வெகு சீக்கிரமே சரளமாகப் பிரெஞ்சு பேசக் கற்றுக்கொண்ட ரோஸலிண்ட், கூடவே சமையற்கலையிலும் நிபுணரானார். உணவுச் சுவையாளர் என்றே அறியப்படும் அளவுக்குப் பல்வேறு உணவுகளில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். 

தாவரவியலிலும் ஆர்வம் கொண்டிருந்த ரோஸலிண்ட் தாவரங்களின் வடிவங்களை ஆர்வமுடன் கவனித்து பல விதமான தாவரங்களையும் அவரது பயணங்களில் சேகரித்தார். புகைப்படக்கலையிலும் சங்கீதத்திலும் அவர் மிகுந்த ஆர்வமும் நிபுணத்துவமும் கொண்டிருந்தார்.

பாரிஸில் இருந்த ஆய்வகத்தை அவர் தனது சொந்த வீடாகவே கருதினார். மெரிங்கை ஒரு ஆசிரியராக மட்டுமல்லாமல், தனது மிக நெருங்கிய நண்பராகவும் கருதினார். அவர் மீது ரோஸலிண்டிற்கு வழிகாட்டி எனும் அபிமானத்தைக் காட்டிலும் கூடுதல் அன்பு இருந்தது. எனினும் அவரிடம் அவர் அதை வெளிக்காட்டவே இல்லை.

பாரீஸிலிருந்து வீட்டுக்கு எழுதிய பல கடிதங்களில் ’’மெரிங் ஒரு மேதை, சிக்கலான விஷயங்களை மிக எளிமையாக விளக்கும் திறன் கொண்டவர்” என்று  ரோஸலிண்ட் வியந்து எழுதியுள்ளார்.  மெரிங்குடன் சேர்ந்து பாரிஸின் தெருக்களில் நடப்பதும், நீண்ட மதிய உணவு இடைவேளைகளில் அறிவியலைப் பற்றி விவாதிப்பதும் அவருக்குப் பிடித்தமான ஒன்றாக இருந்தது. 

ஆனால் மெரிங்  ஒரே நேரத்தில் பல பெண்களுடன் உறவில் இருந்தார்.  மெரிங்கின் இந்தத் தன்மையைக் கண்டு தான் மிகவும் வருத்தப்படுவதாக மற்றுமொரு கடிதத்தில் ரோஸலிண்ட்  குறிப்பிட்டுள்ளார். அவர் மெரிங்கை நேசித்தார், ஆனால் அந்த அன்பு  ஒருதலைக்காதலாகவே இருந்தது.

ரோஸலிண்ட் ஃப்ராங்க்ளின் 1951-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரான்சில் இருந்த மிகச்சிறந்த ஆய்வகத்தை விட்டுவிட்டு, தனது சொந்த நாடான இங்கிலாந்தில் அறிவியல் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பதற்காக  லண்டனில் உள்ள கிங்ஸ் காலேஜில் சேர்ந்தார்.

ஆண்கள் மட்டுமே அறிவியல் உலகில் கால்பதிக்கவும், சாதிக்கவும் முடியும் என்னும் அடிப்படையில் இயங்கிய அந்த ஆய்வகச்சூழல் அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது.  அங்கு அவருக்கு மெரிங் போன்ற ஒரு துணையும் கிடைக்கவில்லை, பாரிஸில் இருந்த அந்தச் சுதந்திரமும் இல்லை. 

அவர் லண்டனில் இருந்து மெரிங்கிற்குப் பல கடிதங்களை எழுதினார். அதில் அறிவியலைப் பற்றிப் பேசினாலும், அவற்றுக்கிடையே  பழைய நாட்களின் ஏக்கத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.  

 ரோஸலிண்ட் இறந்த செய்தி கேட்டபோது, மெரிங் மிகவும் உடைந்து போனார். “ரோஸலிண்ட்  ஒரு சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல, என் வாழ்வின் ஒரு பகுதி” என்று அவர் குறிப்பிட்டார். 

அவரது வாழ்வின் இறுதி ஆண்டுகளில், அமெரிக்க விஞ்ஞானியான டொனால்ட் காஸ்பருடன் அவருக்கு ஒரு நெருக்கமான நட்பு இருந்தது.  தனது புற்றுநோய் சிகிச்சைகளின் போது காஸ்பருடன்தான் ரோஸலிண்ட் அதிக நேரத்தைச் செலவிட்டார். இவர்களுக்கிடையேயான உறவு காதலாக மாறியிருக்கலாம்  ஆனால், அது முதிர்ச்சியடைவதற்குள் ரோஸலிண்டின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. 

அவர் கிங்ஸ் ஆய்வகத்தில் சேர்ந்தபோது,  லண்டன் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அவருக்கு எக்ஸ்-ரே விளிம்பு விலகல் (X-ray diffraction) முறையைப் பயன்படுத்தி டி.என்.ஏ (DNA) இழைகளின் அமைப்பை ஆய்வு செய்யும் ஆய்வை மேற்கொள்ளச் சொல்லியது. அந்த ஆய்வகத்தின் துணை இயக்குநர் ஜான் ராண்டால், டி.என்.ஏ ஆராய்ச்சியை முழுமையாக ரோஸலிண்டிடம் ஒப்படைத்திருந்தார்.

ஆனால்,ரோஸலிண்ட் அங்கு  பணியில் இணைந்த போது அங்கு ஏற்கனவே பணியாற்றி வந்த மாரிஸ் வில்கின்ஸ் (Maurice Wilkins), விடுமுறையில் சென்றிருந்தார். பாரீஸைப் போலல்லாமல் லண்டன் ஆய்வகம் ஆணகள் கோலோச்சும் இடமாக இருந்தது.  பிற்பாடு மாரிஸ் பணியில் சேர்ந்த போது, புதிதாக வந்திருந்த ரோஸலிண்ட் தனக்குக் கீழ் வேலை செய்யும் ஒரு உதவியாளர் மட்டுமே என்று தவறாக நினைத்தார்.  ஏனெனில் அக்காலத்தில் தனித்து அப்படியான ஒரு முக்கியமான ஆய்வில் பெண்கள் யாரும் ஈடுபட்டிருக்கவில்லை. 

இதுவே பிற்பாடு அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு அடிப்படையாக அமைந்தது. பாரிஸில் ரோஸலிண்டுக்குக் கிடைத்த அந்த சுதந்திரமும், மதிப்பும் லண்டனில்  கிடைக்கவில்லை. ரோஸலிண்ட் அங்கு வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே (1951-1953) பணியாற்றினார். ஆனால் அந்த குறுகிய காலத்தில் அவர் செய்த ஆய்வுகள்தான் உயிரியல் வரலாற்றையே மாற்றியமைத்தன. 

ரோஸலிண்ட் தனது DNA ஆய்வில்  டி.என்.ஏ இழைகள் உலர்ந்த நிலையில் ஒரு மாதிரியாகவும், ஈரப்பதமான நிலையில் வேறு மாதிரியாகவும் இரண்டு வகைகளில் இருப்பதை கண்டறிந்தார்  (A மற்றும் B). 

‘A’ வடிவம்: உலர்ந்த நிலை (Dry form). ‘B’ வடிவம்: ஈரப்பதமான நிலை (Wet/Hydrated form). இதை அவர் கண்டறிந்த பிறகுதான், டி.என்.ஏ-வின் உண்மையான அமைப்பைத் அவரால் துல்லியமாகப் படம்பிடிக்க முடிந்தது

டி.என்.ஏ இழையை எக்ஸ்-ரே கதிர்கள் மூலம் 100 மணி நேரம் ஊடுருவச் செய்து இந்த இரு இழைகளின் அமைப்பை. 1952-ம் ஆண்டு மே மாதம், ரோஸலிண்ட் புகைப்படம் எடுத்து போட்டோ 51 என்று பெயரிட்டார்.  

அந்தப் படத்தில் இருந்த ‘X’ வடிவம், டி.என்.ஏ ஒரு இரட்டைச் சுருள் (Double Helix) என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டியது. பாஸ்பேட் முதுகெலும்புகள் (Phosphate backbones) இழையின் வெளிப்புறத்தில் இருப்பதையும் அவர் அந்தப்புகைப்படத்தின் மூலம் உறுதி செய்தார்.

ரோஸலிண்ட்  DNA வை வெறும் புகைப்படம் மட்டும் எடுக்கவில்லை, அந்தப் புகைப்படங்களில் உள்ள புள்ளிகளுக்கு இடையிலான தூரத்தை மிக நுணுக்கமாகக் கணக்கிட்டார். ஒரு சுருளின் நீளம் எவ்வளவு? இரண்டு இழைகளுக்கும் இடைப்பட்ட தூரம் என்ன? பாஸ்பேட் மூலக்கூறுகள் எங்கே அமைந்துள்ளன? இவை அனைத்தையும் அவர் கணித ரீதியாகத் தனது குறிப்பேடுகளில் பதிவு செய்திருந்தார்.
1953-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரோஸ்லிண்ட் தனது முடிவுகளை ஆய்வுக்கட்டுரையாக வெளியிடத் தயாராகிக் கொண்டிருந்தபோது ஒருநாள் விடுமுறையில் இருந்தார். அன்று அவரிடம் மாணவராக இருந்த ரேமண்ட் கோஸ்லிங், தாங்கள் எடுத்த மிகத் தெளிவான Photo 51 புகைப்படத்தை மாரிஸ் வில்கின்ஸிடம்  ரோஸலிண்டின் அனுமதியின்றி காட்டினார். மாரிஸ் வில்கின்ஸ் அந்த ‘Photo 51’-ஐ அருகில் இருந்த ஆய்வகத்தில் அதே டி என் ஏ அமைப்பை கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்த ஜேம்ஸ் வாட்சனிடம் காட்டினார். அந்தப் படத்தை ஒரு வினாடி பார்த்த உடனேயே, “என் இதயம் படபடத்தது” என்று வாட்சன் பின்னாளில் தனது புத்தகத்தில் எழுதினார்.

வாட்சன் ஒரு எக்ஸ்-ரே நிபுணர் அல்ல, ஆனால் அந்தப் படத்தைப் பார்த்தவுடனேயே அதில் இருந்த ‘X’ வடிவம் டி.என்.ஏ ஒரு இரட்டைச் சுருள் என்பதை அவருக்கு உறுதிப்படுத்தியது. 

ஆனால் புகைப்படம் மட்டும் போதாது, அதை மாதிரியாக (Model) மாற்ற துல்லியமான அளவீடுகள் தேவை. இங்குதான் இரண்டாவது  அறிவுத்திருட்டு நடந்தது. ரோசாலிண்ட் தனது ஆய்வு முடிவுகளை ஒரு ரகசிய அறிக்கையாக மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் சமர்ப்பித்திருந்தார்.அந்த அறிக்கையில் டி.என்.ஏ இழைகளுக்கு இடையே உள்ள தூரம், அதன் வேதியியல் சமநிலை போன்ற ரோஸலிண்டின் இரண்டு ஆண்டு உழைப்பின் மொத்தத் தரவுகளும் இருந்தன. அந்த மருத்துவ கவுன்சில் கமிட்டியில் இருந்த மேக்ஸ் பெரூட்ஸ் (Max Perutz), அந்த அறிக்கையை வாட்சன் மற்றும் கிரிக் கேட்டுக்கொண்டதற்காக அவர்களிடம் ரகசியமாக வழங்கினார். இதைப் பயன்படுத்தித்தான் வாட்சன் மற்றும் கிரிக் தங்களது டி.என்.ஏ மாதிரியை உருவாக்கினர்.

டின என் ஏ வின் வடிவமைப்புக் குறித்து 1953, ஏப்ரல் 25 அன்று ‘நேச்சர்’ (Nature) இதழில் மூன்று கட்டுரைகள் அடுத்தடுத்து வெளியாகின: முதலாவதாக, வாட்சன் மற்றும் கிரிக்கின் கட்டுரை (டி.என்.ஏ மாதிரியைக் கண்டறிந்ததாக). இரண்டாவதாக, வில்கின்ஸின் கட்டுரை. மூன்றாவதாக, ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின் மற்றும் கோஸ்லிங்கின்  “Molecular Configuration in Sodium Thymonucleate” என்னும் கட்டுரை.   இந்தக்கட்டுரையில் தான் ரோஸலிண்டின் போட்டோ 51 பிரசுரமானது.

 வாட்சன் மற்றும் கிரிக் தங்கள் கட்டுரையில், ரோஸலிண்டின் தரவுகளைத் தாங்கள் பயன்படுத்தியதை வெளிப்படையாகச் சொல்லவில்லை. மாறாக, “வில்கின்ஸ் மற்றும் ரோஸலிண்ட் ஃபிராங்க்ளின் ஆகியோரின் பிரசுரிக்கப்படாத ஆய்வுமுடிவுகள் மூலம் தெரியவந்த பொதுவான அறிவுச் செய்திகளுக்கு கடன்பட்டிருக்கிறோம்” என்று மட்டும்  கட்டுரையின் அடிக்குறிப்பில் எழுதினார்கள்,  இந்த அடிக்குறிப்பில் மிகக்கவனமாக பிரசுரிக்கப்படாத  மற்றும் பொதுவான என்னும் இரு சொற்கள் பயனபடுத்தப்பட்டிருந்தன

“We are also indebted to Dr. R. E. Franklin and Dr. R. G. Gosling, for the knowledge of the general nature of the unpublished experimental results and ideas of the researchers at King’s College, London.”

இந்தக்கட்டுரைகளுக்குப்பிறகு உலகம் முழுவதும் டி என் ஏ வின் இரட்டைச்சுழல் அமைப்பை “வாட்சன் மற்றும் கிரிக் கண்டுபிடித்தனர், என்ற தவறான பிம்பம் உருவானது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, “The Double Helix” என்ற புத்தகத்தில் ரோஸலிண்டை மிகவும் ஏளனமாகச் சித்தரித்த ஜேம்ஸ் வாட்சன் அதே புத்தகத்தில் “அவருடைய தரவுகள் இல்லாமல் எங்களால் மாதிரியை உருவாக்கியிருக்க முடியாது” என்பதையும் ஒப்புக்கொண்டார்.  டி என் ஏ  இரட்டைச்சுழல் அமைபை கண்டுபிடித்தற்காக  நாட்சன் மற்றும் க்ரிக்குக்கு 1962-ல்நோபல் பரிசு வழங்கப்பட்டபோது ரோஸலிண்ட் இறந்து நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தது..

இந்த அறிவுத்திருட்டை ரோஸலிண்ட் பெரிதாக எடுதுக்கொள்லவே இல்ல டி என் ஏவின் அமைப்பை கூட்டாக கண்டுபிடித்தோம் என்றே அவர் எடுத்துக்கொண்டிருக்கக்கூடும் சொல்லப்போனால் அதன்பிற்கும் கூட க்ரிக்குடனும் அவரது மனைவி ஓடிலியுடனும் அவர் கொண்டிருந்த நட்பை தொடர்ந்தார் விடுமுறைக்கு அவர்களுடன் பயணம்கூட  மேற்கொண்டார்.

நேச்சர் இதழில் கட்டுரை பிரசுரமான பின்னர் டி என் ஏ சர்ச்சையைக் குறித்து கொஞ்சமும் கவலைப்படாமல் அவர் இறப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை, 1958-ல் பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸில் நடைபெறவிருந்த உலகஅறிவியல் கண்காட்சிக்காக  புகையிலை மொசைக் வைரஸின் (TMV) பிரம்மாண்டமான 5 அடி உயர மாதிரியை உருவாக்குவதில் தீவிரமாக இருந்தார். மக்கள் வைரஸின் அமைப்பை எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதில் ரோஸலிண்ட் ஆர்வமாக  இருந்தார்.

1958-ம் ஆண்டின் தொடக்கத்தில் புற்றுநோய் அவரது உடல் முழுவதும் பரவியது. ஏப்ரல் மாதம் அவர் லண்டனில் உள்ள ராயல் மார்ஸ்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையிலும் ஆராய்ச்சி: மருத்துவமனைப் படுக்கையில் இருந்தபோது கூட, அவர் தனது ஆய்வுக் கட்டுரைகளைத் திருத்திக்கொண்டும், தனது குழுவினருக்கு ஆலோசனைகளை வழங்கிக்கொண்டும் இருந்தார். 

1958, ஏப்ரல் 16 அன்று, தனது 37-வது வயதில் ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின் உயிரிழந்தார். அவர் இறந்த அடுத்த நாள், அவர் உருவாக்கிய வைரஸ் மாதிரி உலகக் கண்காட்சியில் திறந்து வைக்கப்பட்டது. அவர் இறக்கும் போது, டி.என்.ஏ கண்டுபிடிப்பில் தனக்கு இழைக்கப்பட்ட துரோகத்தைப் பற்றி யாரிடமும் புகார் கூறவில்லை. அவரது உடல் வடமேற்கு லண்டனின்  வில்லஸ்டன் யூத கல்லறைத்தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

 அவரது கல்லறையில்:

IN MEMORY OF ROSALIND ELSIE FRANKLIN [Hebrew name] DEARLY LOVED ELDER DAUGHTER OF ELLIS AND MURIEL FRANKLIN 25TH JULY 1920 – 16TH APRIL 1958

SCIENTIST

HER RESEARCH AND DISCOVERIES ON VIRUSES REMAIN OF LASTING BENEFIT TO MANKIND

ரோஸலிண்ட் எல்சி ஃபிராங்க்ளின் நினைவாக!

எல்லிஸ் மற்றும் முரியல் ஃபிராங்க்ளின் அவர்களின் அன்பிற்குரிய மூத்த மகள்

 25 ஜூலை 1920 – 16 ஏப்ரல் 1958

அறிவியலாளர்

வைரஸ்கள் குறித்த அவரது ஆராய்ச்சியும் கண்டுபிடிப்புகளும் மனிதகுலத்திற்கு நீடித்த நன்மைகளை வழங்கக்கூடியவை.

  • என்று பொறிக்கப்பட்டது. 

கல்லறையில் அறிவியலாளர் என்று குறிப்பிடப்பட்டது  அந்தகாலத்தில் பெரும் கெளரவம் என்றாலும் வைரஸ்கள் குறித்த அவரது ஆய்வு குறிப்பிடப்பட்டிருக்கையில் ஏன் டி என் ஏ குறித்த எந்தத் தகவலும் அதில் இல்லை என்பது புதிராக இருக்கிறது.

ரோஸலிண்ட் ஃபிராங்க்ளின் டி.என்.ஏ ஆய்வுக்குப் பிறகு பிர்க்பெக் (Birkbeck) கல்லூரியில் மேற்கொண்ட வைரஸ் ஆய்வுகள், அவரை உலகளாவிய புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன. அங்கு அவருக்கு உதவியாளராகவும், மிக நெருக்கமான நண்பராகவும் இருந்தவர் ஆரோன் கிளக் (Aaron Klug). 

தனது இறுதி நாட்களில்,  ரோஸலிண்ட் போலியோ வைரஸின் கட்டமைப்பை ஆராயத் தொடங்கினார். இதுவே பிற்காலத்தில் அந்த வைரஸிற்கான தடுப்பு மருந்துகளை மேம்படுத்த உதவியது.

ஆரோன் கிளக், ரோஸலிண்டின் திறமையால் ஈர்க்கப்பட்டு அவருடன் இணைந்தவர். ரோஸலிண்டின் மறைவிற்குப் பிறகு, அவர் விட்டுச் சென்ற பணிகளை அவர் பெற்றுத்தந்த அமெரிக்க நிதியுதவியுடன் தொடர்ந்து முன்னெடுத்தார். 1982-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு ஆரோன் கிளக்கிற்கு வழங்கப்பட்டது. அப்போது அவர் தனது நோபல் பரிசு உரையில், “ரோஸலிண்ட் ஃபிராங்க்ளின் மட்டும் உயிருடன் இருந்திருந்தால், இன்று அவர் தான் இந்த இடத்தில் நின்றிருப்பார்” என்று கூறினார்.  

வரலாறு சத்தமாகப் பேசுபவர்களையே கொண்டாடுகிறது; அதனால்தான் டி.என்.ஏ என்றாலே வாட்சன்-கிரிக் நினைவுக்கு வருகிறார்கள். ஆனால், அந்த இரட்டைச் சுருள் ஏணியின் ஒவ்வொரு படியையும் கண்டு பிடித்தவர் ரோஸலிண்ட் ஃபிராங்க்ளின். வாட்சனும் கிரிக்கும்  ‘Photo 51’  அளித்த அளவீடுகளின் அடிப்படையில் ஒரு மாதிரியை (Model) மட்டும்தான் உருவாக்கினார்கள். பிற்பாடு உண்மை தெரிந்ததும் ரோஸலிண்டிற்கு “wronged heroine”, the “dark lady of DNA” the “forgotten heroine” a “feminist icon”  the “Sylvia Plath ofindf molecular biology என்றெல்லாம் பெயர் சூட்டப்பட்டது,

எனவே, டி.என்.ஏ-வைக் கண்டறிந்தவர் ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின் என்று பள்ளிப் பாடங்களிலிருந்தே ஆவணப்படுத்த வேண்டும். அப்படிச்செய்தால் மட்டுமே வருங்கால சந்ததியினருக்கு உண்மை தெரியும். இதுதான் நாம் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி.

அச்சுதனும் ரீடியும்!

கொச்சியிலிருந்த பிரம்மாண்டமான அந்த டச்சுக்கோட்டை முழுக்க உப்புக் காற்றின் ஈரம் நிறைந்திருந்தது. கொச்சி ஆளுனரான வான் ரீடி மிகுந்த மனவருத்தத்துடன் ஒரு சாளரத்தின் அருகே அமர்ந்து வெளியே விரிந்திருந்த அரபிக்கடலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.  

அது 1674-ம் ஆண்டு. ஐரோப்பிய இறைப்பணியாளர் மேத்யூவின் உதவியுடன் மலபார் பகுதியின் தாவரங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் சில ஆண்டுகளாக ஈடுபட்டிருந்த வான் ரீடி, அது ஏறக்குறைய முழுமையடைந்து  கையில் கிடைத்தபோது தாவரங்களின் வகைப்பாட்டில் பிழைகள் இருந்ததையும், பல சித்திரங்கள் துல்லியமாக இல்லாததையும் கண்டு மனமுடைந்து போனார். 

அதுவரையிலும் ஐரோப்பிய தாவரவியலாளர்களை மட்டுமே நம்பி இருந்த வான் ரீடி, மலபார் பகுதியின் தாவரங்களை  எப்படியாவது முறையாக ஆவணப்படுத்த முடிவுசெய்து, தனது நண்பரான கொச்சி அரசரின் உதவியை நாடிச் செல்ல முடிவுசெய்தார். என்ன கேட்டாலும் மறுக்கவே முடியாத உதவியொன்றை அரசருக்கு வான் ரீடி முன்பு செய்திருப்பதால், நிச்சயம் அவரிடம் உதவி கிடைக்கும் என அறிந்திருந்ததால், உடனே கொச்சி அரசரைச் சந்திக்கப் புறப்பட்டார். குதிரையில் செல்லும் வழியில் பழைய நினைவுகளை அவரது மனம் அசைபோட்டது.

1660-களில் கொச்சியில் போர்த்துகீசியர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் இடையே கடும் போர் நிலவியது. அதே சமயம் கொச்சி அரச குடும்பத்திலும் வாரிசுரிமைப் போட்டி தீவிரமாக நடந்தது. அரச குடும்பத்தினரை முழுவதுமாகக் கொல்ல போர்த்துகீசியர்கள் திட்டமிட்டிருந்தார்கள். ஒரு பழைய கோவிலில் கொச்சி ராணி கங்காதர லக்ஷ்மி ஒளிந்திருந்தார். அப்போது மிக இளைஞராக இருந்த வான் ரீடி, அந்த கோவிலுக்குச் சென்று கொச்சி ராணியை ஒரு பிராமணரின் முதுகில் சுமக்கச்செய்து டச்சு முகாமிற்கு   தூக்கிக்கொண்டு வந்து காப்பாற்றினார்.

ராணியைக் காப்பாற்றியதால், டச்சுக்காரர்களுக்கு ஆதரவாக இருந்த வீரகேரள வர்மாவை அரசராக நியமிக்கும் உரிமையை டச்சுக்காரர்கள் அடைந்தார்கள். கைம்மாறாக வீரகேரள வர்மா வான் ரீடியுடன் நல்ல நட்புக் கொண்டிருந்ததோடு, அவரைத் தனது பிரதான ஆலோசகராகவும் நியமித்துக்கொண்டார். இந்த நட்புதான் டச்சுக்காரர்கள் கொச்சியில் உறுதியாகக் காலூன்ற உதவியது.

மிளகு, லவங்கப்பட்டை வணிகத்திற்காக டச்சுக்காரர்கள் சில ஒப்பந்தங்களைக் கொச்சி அரசருடன் ஏற்படுத்திக்கொண்டார்கள். இந்த ஒப்பந்தத்தின் மூலம் வான் ரீடிக்குக் கேரளா முழுவதும் பயணம் செய்யவும், தாவரங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவும் தேவையான அதிகாரமும் பாதுகாப்பும் கிடைத்தன.

1656-ல் நெதர்லாந்தின் பிரபு குடும்பத்தைச் சேர்ந்த இளம் ராணுவ வீரரான வான் ரீடி (Hendrik Adriaan van Rheede tot Drakenstein), கப்பலில் இந்தியாவிற்கு வந்தார். போர்ச்சுகீசியர்களுக்கு எதிரான பல கடும் போர்களில் ரீடியின் தீரத்தைக்கண்ட டச்சு அரசு அவருக்கு பல  பதவி உயர்வுகள் அளித்தது, விரைவில் ரீடி மலபாரின் ஆளுநராக  வந்து சேர்ந்திருந்தார்.

இளவயதிலேயே தாய் தந்தையை அடுத்தடுத்து இழந்த ரீடி அனாதையானார். உறவினர்களால் வளர்க்கப்பட்ட அவர், இளமையில் பெரும் கலகக்காரராகவே அறியப்பட்டார். தன்னுடைய 20-வது வயதில் ராணுவத்தில் இணைந்தார். ராணுவத்திலும் அவர் துணிச்சல் மிக்க  போர்வீரராகவும், முரட்டுத் துணிச்சல் மிக்கவராகவும் அறியப்பட்டார்.

அப்போது கேரளக் கடற்கரை  முழுவதுமே ஐரோப்பியர்களால் ‘மலபார் பகுதி’ என்று அழைக்கப்பட்டது. தாவரவியலில் முறையான படிப்போ அல்லது பயிற்சியோ வான் ரீடிக்கு இல்லை என்றாலும், மலபார் பகுதியின் தாவர வளம் அவருக்கு மிகுந்த ஆர்வத்தை ஊட்டியது.  நெதர்லாந்தில் வான் ரீடியின்  தந்தை வன அதிகாரியாக இருந்ததே, ரீடிக்குத் தாவரங்களின் மீது ஈர்ப்பு உண்டாக ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கலாம். உள்ளூர்வாசிகள் பல நோய்களுக்கு எளிய மூலிகைகளைக் கொண்டு சிகிச்சை பெற்று குணமடைவதையும் அவர் கவனித்தார்.

வான் ரீடி மலபார் தாவரங்களை ஆவணப்படுத்த விரும்பியதில் அவரது ஆர்வம் மட்டுமல்லாது அரசியலும் கலந்திருந்தது. ரீடியின் மேலதிகாரி ரைக்ளாப் வான் கோயன்ஸ் (Rijcklof van Goens), டச்சு தலைமையகத்தை இலங்கையின் கொழும்புப் பகுதியில் அமைக்க விரும்பி அரசுக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார். 

அவருடன் முன்விரோதம் கொண்டிருந்த ரீடி, அதனை முறியடித்து, தனது விருப்பப்படி மலபாரில் தலைமையகத்தை அமைக்க வேண்டி, கொழும்புவைக் காட்டிலும் மலபார் வளம் நிறைந்தது என நிரூபிக்க அப்பகுதியின் அரிய தாவரங்களை ஆவணப்படுத்தி, ஐரோப்பாவிற்கு அனுப்பநினைத்தார், ஆனால் அவர் நினைத்த துல்லியம் அந்தத்தயாரிப்பில் இல்லை.

கொச்சி அரசரிடம்  ரீடி விஷயத்தைச் சொன்னதும், அவர் உடனே மற்ற குறுநில அரசர்களிடமிருந்தும், உள்ளூர் மக்களிடமிருந்தும் தாவரங்கள் மற்றும் தகவல்களைச் சேகரிக்க முழு ஒத்துழைப்பு வழங்கினார். மேலும், அரண்மனை வைத்தியர்களையும், ஈழவ சமூகத்தைச் சேர்ந்த கொச்சியின் மிகப்புகழ்பெற்ற ஆயுர்வேத வைத்தியர் இட்டி அச்சுதனையும் வான் ரீடியிடம் அவர் அறிமுகம் செய்து வைத்தார். 

அரசரின் அழைப்பின் பேரில் கோட்டைக்கு இட்டி அச்சுதன் முழு அரசு மரியாதையுடன் வரவழைக்கப்பட்டார். அவைக்கூடத்தின் அந்தச் சந்திப்பை பலர் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வான் ரீடி மிக உயரமாக, கட்டுமஸ்தான உடலமைப்புடன், ஐரோப்பியப் பட்டு அங்கியும் பொய்முடியும் அணிந்து கம்பீரமாகக் காட்சியளித்தார். அதற்கு நேர் எதிராக, கொச்சி மண்ணின் மைந்தனான இட்டி அச்சுதன் வெறும் முண்டு மட்டும் உடுத்திக்கொண்டு, கைகளில் பழைய பனை ஓலைச் சுவடிக்கட்டுகளுடன் வந்திருந்தார்.

அவர்கள் இருவருக்குமிடையில் மொழிப் பிரச்சனை இருந்ததால், துபாஷியாக (மொழிபெயர்ப்பாளராக) இம்மானுவேல் என்னும் பல மொழிகள் பேசத் தெரிந்த உள்ளூர்க்காரர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அச்சுதனின் எளிய தோற்றம், அவரது தாவர அறிவைக் குறித்த சந்தேகத்தை வான் ரீடியிடம் உண்டாக்கியது. அவர் அச்சுதனின் அறிவைச் சோதிக்க நினைத்தார்.

ரீடியிடம் இருந்த பிழைகள் கொண்டிருந்த படைப்பில் இருந்த சித்திரங்களைப் பார்த்து, அவற்றின் வாழிடம், வளரியல்பு, மருத்துவப் பண்புகள், அவை வளரும் மண் வகை மற்றும் அவற்றின் மலரும் காலம் ஆகியவற்றைப் பற்றி இட்டி அச்சுதன் மிகத் தெளிவாகக் கூறினார். தோற்றத்தை வைத்து அவரைக் குறைவாக எடைபோட்டிருந்த வான் ரீடி வாயடைத்துப் போனார். ஐரோப்பியர்கள் தாவரங்களை வகைப்படுத்துதலை இன்னும் முழுமையாக செய்து முடிக்காதிருக்கையில், இட்டி அச்சுதனின் இயற்கை அறிவும் வகைப்பாட்டியல் அறிவும் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தலைமுறைகளாக பாரம்பரிய வைத்தியர்களாக இருந்த அச்சுதனின் குடும்பத்திற்குச் சொந்தமாக ஆயிரக்கணக்கான பழைய பனை ஓலைச் சுவடிகள் இருந்தன. அவற்றில் மூலிகைத் தாவரங்களைப் பற்றிய குறிப்புகள், தாவரத்தின் எந்தப் பாகம் மருத்துவப் பயன்களைக் கொண்டது, மருந்துகளைத் தயாரிக்கும் முறை மற்றும் சிகிச்சை முறைகள் ஆகியவை விளக்கமாக எழுதப்பட்டிருந்தன. அவற்றை ரீடிக்கு அச்சுதன் விளக்கினார்.

வான் ரீடி தயாரிக்கவிருந்த மலபாரின் தாவர ஆவணத்திற்காகத் தயாரித்து வைத்திருந்த லத்தீன் மொழியிலான அட்டவணைகளையும் பட்டியல்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, முழுக்க முழுக்க அச்சுதனின் தாவரவியல் அறிவை மட்டுமே சார்ந்திருக்க அன்றே முடிவு செய்தார்.

வான் ரீடி இட்டி அச்சுதனுக்கு முழு அதிகாரமும் முழு மரியாதையும் அளித்து, அவருக்குத் தேவையான குழுவையும் முறையாக உருவாக்கிக் கொடுத்தார். ஐரோப்பியர்கள் இந்தியர்களை இப்படி நடத்தியது அக்காலத்தில் மிக அரிதாகவே நடந்தது. காலனித்துவ வரலாற்றாளர்களால் வியந்து பேசப்படும் ஒரு விஷயம்  வான் ரீடிக்கும் இட்டி அச்சுதனுக்கும் இடையே நிலவிய மிகச் சிறப்பான இந்த அறிவார்ந்த நட்புத்தான்.

17-ம் நூற்றாண்டின் கடுமையான சாதியக் கட்டமைப்புகள் மற்றும் நிறவெறி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில், இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த பரஸ்பரப் புரிதலும் நட்பும் மிகுந்த ஆச்சரியத்திற்குரியது.

இது அக்காலத்தில் பெரும் விவாதத்திற்கு உள்ளானது; ஏனெனில், அச்சுதன் அக்காலக் கேரள உயர்சாதியினரால் ஒதுக்கப்பட்ட ஈழவ சமூகத்தைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய வைத்தியர். இப்போது ‘சேர்த்தலா’ என்று அழைக்கப்படும் முந்தைய ‘கடகரைப்பள்ளி’ என்னும் கடற்கரை கிராமத்தில் பிறந்தவர். பிராமண அறிஞர்கள் மற்றும் ஐரோப்பிய அறிஞர்கள் இருந்த அதே குழுவில், அவர்களுக்கு இணையான இடத்தில் அச்சுதனை வான் ரீடி அமர வைத்தார். ஒரு  வைத்தியரை, ஆதிக்கச் சமூக அறிஞர்களுக்குச் சமமாக  ஒரு உயர்பதவியிலிருந்த ஐரோப்பியர் அங்கீகரித்தது, 17-ம் நூற்றாண்டின் சமூகச் சூழலில் ஒரு புரட்சிகரமான செயலாகக் கருதப்படுகிறது.

அச்சுதன், தனது குடும்பச் சொத்தாகத் தலைமுறை தலைமுறையாக வைத்தியர்களாக இருந்து வந்த தனது முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த பனையோலைச் சுவடிகளிலிருந்து, வான் ரீடிக்குத் தேவையான அனைத்துத் தாவரவியல் தரவுகளையும் வழங்கினார். அந்தப் பனையோலைகளில் இருந்த மருத்துவ ரகசியங்களே ‘ஹோர்டஸ் மலபாரிகஸ்’ உருவாக முக்கிய அடிப்படையாக அமைந்தன.

அக்காலத்தின் கடுமையான சமூகக் கட்டுப்பாடுகளைக் காட்டிலும், இட்டி அச்சுதனின் ஆழமான அறிவின் மீது வான் ரீடி பெரும் மரியாதை கொண்டிருந்தார். வான் ரீடியும் அச்சுதனும் இந்த ஆவணப்படுத்துதல் பணிக்காக, மலபாரின் சதுப்பு நிலங்களிலும் அடர் காடுகளிலும் இணைந்து பயணித்தனர். பல நாட்கள் காடுகளிலேயே தங்கி, அங்கிருந்த அரிய வகைத் தாவரங்களைச் சேகரித்து, அவற்றின் மருத்துவக் குணங்களை ஆராய்ந்து ஆவணப்படுத்தினர்.

வான் ரீடி அமைத்த அந்த ஆய்வுக்குழுவில் ரங்க பட், விநாயக பண்டிட் மற்றும் அப்பு பட் ஆகிய மூன்று கொங்கணி பிராமண அறிஞர்களும் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் மூவரும் வான் ரீடியும் அச்சுதனும் தொகுத்த தகவல்களைத் தங்களின் அறிவுப்புலத்தைக் கொண்டு சரிபார்த்து உறுதி செய்தனர்.

வான் ரீடியின் நண்பரான யோகன்னஸ் காசேரியஸ் (Joannes Casearius) முழு ஆவணப்படுத்துதலையும் மேற்பார்வையிட்டார். குழுவினர் அடர் காடுகளில் தேடி அலைந்து நேரிடையாகத் தாவரங்களைக் கொண்டு வந்தனர். இட்டி அச்சுதன் அவற்றின் அடையாளங்களைக் கண்டு பெயரிட்டு, பிற தகவல்களையும் அளித்தார். அவருடன் இத்தாலிய கத்தோலிக்க இறைப்பணியாளரான பாதர் மேத்யூஸ் (Father Matheus) இருந்தார். இவ்வாறு பல்வேறு சமூகப் பின்னணியைக் கொண்ட அறிஞர்கள் ஒன்றிணைந்து ஒரு அறிவியல் ஆவணத்திற்காக உழைத்தது அந்த காலத்தின்மிக அரிதான ஒரு நிகழ்வு.

தாவரங்களைப் பறித்துச் சென்று உலர வைத்து (Herbarium) அவற்றை பார்த்து வரைவதற்குப் பதிலாக, வான் ரீடி, தாவரங்கள் வளரும் இடத்திற்கே ஓவியர்களை அழைத்துச் சென்றார். குழுவினர் அடர் காடுகளில் தேடி அலைந்து நேரிடையாகத் தாவரங்களைக் கொண்டு வந்தனர். இட்டி அச்சுதன் அவற்றின் அடையாளங்களைக் கண்டு பெயரிட்டு, பிற தகவல்களையும் அளித்தார்.

மலபாரைச் சேர்ந்த ஓவியர்கள் தாவரத்தின் கிளைகள், இலைகளின் அமைப்பு மற்றும் பூக்கள் விரியும் விதம் ஆகியவற்றை மிகத் துல்லியமாக வரைந்தனர். தாவரத்தின் நிஜமான அளவை (Life-size) அப்படியே காகிதத்தில் கொண்டு வர அவர்கள் முயன்றனர். இதற்காகப் பெரிய அளவிலான காகிதங்கள் பயன்படுத்தப்பட்டன.

 அச்சுதன் மலையாளத்தில் சொல்லச் சொல்ல, பலமொழி அறிஞர்கள் அவற்றை அவரவர் மொழிகளில் எழுதிக்கொண்டனர். 15-க்கும் மேற்பட்ட வைத்தியர்களும் தாவரவியலாளர்களும் அக்குழுவில் இருந்தனர்.

200 நபர்கள் தாவரங்களைத் தேடிக் கொண்டு வரும் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். அப்படிச் சேகரித்தவற்றின் பல விதைகள் டச்சு அரசிற்கு அனுப்பப்பட்டு, அங்கு அவை அறிமுகப்படுத்தப்பட்டு வளர்ந்தன. அவற்றில் பல தாவரங்கள் மிக அரியவை என ஐரோப்பியத் தாவரவியலாளர்களால் அடையாளம் காணப்பட்டன.

ஹோர்டஸ் மலபாரிகஸ் நூலின் தாவர வரைபடங்கள் முதலில் செப்புத் தகடுகளில் செதுக்கப்பட்டன. பின்னர், அந்தத் தகடுகளின் மீது மை தடவப்பட்டு, கையால் தயாரிக்கப்பட்ட உயர்தரக் காகிதங்களை அவற்றின் மீது வைத்து அழுத்தம் கொடுத்து அச்சுகள் எடுக்கப்பட்டன. இந்த ‘காப்பர் பிளேட் என்க்ரேவிங்’ (Copper Plate Engraving) முறை காரணமாகவே, 350 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தத் தாவரங்களின் இலை நரம்புகள் முதல் வேர் முடிச்சுகள் வரை மிகத் துல்லியமாக நம்மால் காண முடிகிறது  இம்முறை Intaglio printing  எனப்பட்டது. ஒவ்வொரு செப்புத் தகடு அச்சிலும் அந்தத்தாவரத்தின் பெயர் நான்கு மொழிகளில் (லத்தீன், மலையாளம், தமிழ் மற்றும் அரபி) பொறிக்கப்பட்டது.

17-ம் நூற்றாண்டின் தமிழ் மற்றும் மலையாள எழுத்துருக்கள் அச்சில் ஏறிய முதல் நூல் இதுதான்.   

ஆவணத்திற்காக வான் ரீடி செலவழித்த பெருந்தொகை, அவருடைய உயர் அதிகாரிகளால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. நிர்வாக ரீதியாக அவர் கண்டிக்கப்பட்ட போதும், தான் செய்யும் அந்தச் செலவு அச்சுதனின் அனுபவ அறிவை நம்பியே செய்யப்படுவதாகவும், இந்தப் பணி வெற்றிகரமாக முடியும் என்றும் ரீடி உறுதியாகப் பதிலளித்தார்.

ரீடியின் பார்வையில், அச்சுதன் உலகின் ஒட்டுமொத்தத் தாவரங்களையும் அறிந்துவைத்திருந்த ஒரு மாபெரும் அறிஞராகத் தெரிந்தார். அதேபோல், அச்சுதனுக்கு வான் ரீடி என்பவர், தனது குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமாக இருந்த மூலிகை ரகசியங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வந்த ஒரு அறத்தூதராகத் தோன்றினார்.

மிகத் துல்லியமான 794  சித்திரங்களுடனும், 742 தாவரங்களைக் குறித்த விளக்கங்களுடனும்  ஹோர்டஸ் மலபாரிகஸ் முழுமையாக உருவானது.

12 தொகுதிகள் கொண்ட, ‘மலபாரின் தோட்டம்’ என்று பொருள்படும் ஹோர்டஸ் மலபாரிகஸ் (Hortus Malabaricus), 17-ம் நூற்றாண்டின் ஒரு மாபெரும் தாவரவியல் பொக்கிஷம். இந்தியத் தாவரங்கள் குறித்த ஆவணங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த மாபெரும் படைப்பை உருவாக்கி முடிக்க சுமார் 30 ஆண்டுகள் (கிட்டத்தட்ட 1674 முதல் 1703 வரை ) ஆனது. தாவரங்களைச் சேகரித்தல், அவற்றை ஓவியங்களாக வரைதல், உள்ளூர் அறிஞர்களான இட்டி அச்சுதன் போன்றவர்களிடம் இருந்து தகவல்களைப் பெறுதல் மற்றும் அவற்றை லத்தீன் மொழிக்கு மொழிபெயர்த்தல் என மிக நீண்ட உழைப்பு இதில் அடங்கியுள்ளது.

இதன் முதல் தொகுதி 1678-ல் வெளியானது. மொத்தம் 12 தொகுதிகள் கொண்ட இந்த வரிசை 1703 வரை தொடர்ந்து வெளியிடப்பட்டது

பல்லாண்டு கால உழைப்பில் உருவான ஹார்டஸ் மலபாரிகஸில் 794 செப்புத் தகடு சித்திரங்கள்  இடம்பெற்றுள்ளன.  இது இந்தியாவின் மலபார் கடற்கரைப் பகுதியில் (இன்றைய கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு பகுதிகள்) காணப்பட்ட தாவரங்களைப் பற்றிய உலகின் மிக விரிவான மற்றும் பழமையான அறிவியல் ஆவணம்.

ஹோர்டஸ் மலபாரிகஸின் முன்னுரையில் உள்ளூர் மக்களின் தாவரவியல் அறிவு தன்னைப் பிரமிக்க வைத்ததாக ரீடி குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் உள்ளூர் மக்களை வெறும் “தகவல் தருபவர்கள்” (Informants) என்று குறிப்பிடாமல், அவர்களை “நூலாசிரியர்கள்” (Authors/Masters) என்றே கௌரவித்துக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நூலின் மிக முக்கியமான வரலாற்று அம்சம், அதன் முதல் தொகுதியில் இடம்பெற்றுள்ள சான்றொப்பங்கள் (Declarations) தான். இதில் இட்டி அச்சுதன் தனது கைப்பட எழுதிய சான்றொப்பம் உலகப் புகழ்பெற்றது. முதல் தொகுதியில் (Volume 1) இட்டி அச்சுதனின் சான்றொப்பம் இடம்பெற்றுள்ளது. இட்டி அச்சுதன் இதனைத் தனது சொந்த மொழியான மலையாளத்தில், அக்காலகட்டத்தின் வரிவடிவமான ‘கோலெழுத்து’ முறையில் எழுதினார்.

 1675 ஏப்ரல் 20-ம் தேதியிட்ட அந்தச் சானறொப்பத்தில், வான் ரீடியின் வேண்டுகோளின்படி மலபார் காடுகளில் உள்ள தாவரங்களின் மருத்துவக் குணங்களையும், பெயர்களையும் தனது குடும்பப் பாரம்பரிய வைத்திய ஏடுகளின் அடிப்படையில் உண்மையாகத் தெரிவித்துள்ளதாகக் இட்டி அச்சுதன் கையொப்பமிட்டுள்ளார். இட்டி அச்சுதனின் அந்த எழுத்துதான், ஒரு இந்தியத் தாவரவியலாளரின் அறிவு ஐரோப்பிய அறிவியல் நூலில் முறையாக அங்கீகரிக்கப்பட்ட முதல் நிகழ்வாகும்.

அச்சுப்பிரசுரம் அறிமுகமாகியிருந்த அந்தத் தொடக்கக் காலத்தில், அவருடைய கையொப்பமும் குறிப்புகளுமே அந்தப் பிரம்மாண்டமான நூலில் முதல் மலையாள அச்சுப் பதிவுகளாக அமைந்தன.

இட்டி அச்சுதனுடன் பணியாற்றிய மற்ற மூன்று கொங்கணி பிராமணர்களும் அதே முதல் தொகுதியிலேயே தங்களது சான்றொப்பங்களை சமஸ்கிருத மொழியில், தேவநாகரி வரிவடிவத்தில் எழுதியிருக்கின்றனர்.

ஹார்டஸ் மலபாரிகஸ் எத்தனை பிரதிகள் உருவாக்கப்பட்டன என்னும் துல்லியமான எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், ஐரோப்பாவின் முக்கிய  நூலகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் டச்சு கிழக்கு இந்திய கம்பெனியின் உயர் அதிகாரிகளுக்காகச் சில நூறு பிரதிகள் அச்சடிக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இன்று உலகம் முழுவதும் உள்ள முக்கிய அருங்காட்சியகங்கள் மற்றும் தாவரவியல் ஆய்வு மையங்களில் இதன் அசல் பிரதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அந்த 12 தொகுதிகளில் பல  ஐரோப்பாவின் டச்சு இளவரசர்கள், ஆம்ஸ்டர்டாம் நகர மேயர்கள் மற்றும் டச்சு கிழக்கு இந்திய கம்பெனியின்  உயர்மட்ட அதிகாரிகளுக்குச் சமர்ப்பிக்கப்பட்டன. இது அக்காலகட்டத்தின் அரசியல் மற்றும் நிதி ஆதரவைப் பெறுவதற்காகச் செய்யப்பட்டது.  

முதல் தொகுதி  டச்சு குடியரசின் ஆட்சியாளர்களுக்கும் மற்றும் இளவரசர் வில்லியம் III அவர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. இரண்டாம் தொகுதி ஆம்ஸ்டர்டாம் நகரின் மேயர்களுக்கும்  டச்சு கிழக்கு இந்திய கம்பெனியின் இயக்குநர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. முதல் தொகுதியின் ஒரு பிரதி, திருவனந்தபுரத்தில் உள்ள அவிட்டம் திருநாள் நூலகத்தில் (Sri Chithira Thirunal Granthasala) இன்றும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வான் ரீடி தனது நூலின் மூன்றாவது தொகுதியை  கொச்சி ராஜா வீர கேரள வர்மாவுக்கு அர்ப்பணித்தார். இந்த மூன்றாம் தொகுதியில்தான் வான் ரீடி, மலபார் காடுகளின் அழகு மற்றும் அங்குள்ள தாவரங்களின் பன்முகத்தன்மை குறித்து மிகவும் உணர்ச்சிகரமான ஒரு முன்னுரையை எழுதியிருக்கிறார்.

‘ஹார்டஸ் மலபாரிகஸ்’ எந்த அளவுக்குத் துல்லியமாக இருந்தது என்றால், பிற்காலத்தில் தாவர வகைப்பாட்டியலின் தந்தை எனக் கருதப்படும் கார்ல் லின்னேயஸ், தனது வகைப்பாட்டியலை உருவாக்கியபோது இந்த நூலைப் பயன்படுத்திக் கொண்டார். அதைக் கொண்டே நூற்றுக்கணக்கான தாவரங்களுக்கு அவர் இருசொற் பெயரிட்டு (Binomial Nomenclature) வகைப்படுத்தினார். ஒரே ஒரு பக்கத்தில் அந்தத் தாவரத்தின் இலை, மலர், கனி, விதை ஆகியவற்றைப் படம் வரைந்து காட்டியதன் மூலம், ஐரோப்பிய தாவரவியலாளர்களுக்கே தாவரங்களை ஆவணப்படுத்துதலில் ஒரு வழிகாட்டுதலையும் அந்த ஆவணம் செய்தது. 

காலனி ஆதிக்கத்திற்குப் பல்லாண்டுகள் முன்பாகவே, இந்தியாவில் இருந்த தாவரங்கள் குறித்த மரபார்ந்த அறிவுக்கும் மேற்கத்திய அறிவியலுக்கும் ஒரு பாலமாக ‘ஹார்டஸ் மலபாரிகஸ்’ திகழ்ந்தது. வரலாற்றிலேயே மலையாள மொழி முதன்முதலில் அச்சில் ஏறியது இந்த நூலின் மூலமாகத்தான். தாவரவியல் ரீதியாக மட்டுமல்லாமல், மொழியியலாளர்களுக்கும் 350 ஆண்டுகளுக்கு முன்பாகப் புழக்கத்தில் இருந்த மொழியைப் பற்றிய ஒரு நேரடி ஆவணமாக ‘ஹார்டஸ் மலபாரிகஸ்’ இன்றைக்கும் இருக்கிறது.

‘ஹார்டஸ் மலபாரிகஸ்’ நூலை அடிப்படையாகக் கொண்டு கேரளாவில் அமைக்கப்பட்டுள்ள ஹார்டஸ்மலபாரிகஸ் பூங்கா திருச்சூர் மாவட்டத்தில் உள்ள செருதுருத்தி என்ற இடத்தில் அமைந்துள்ளது. சுமார்  30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தாவரவியல் பூங்கா, அந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ள 742 தாவரங்களைச் சேகரித்துப் பாதுகாப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 இங்கு 1,700-க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் உள்ளன. குறிப்பாக, அந்த 12 தொகுதிகளில் இட்டி அச்சுதன் அடையாளம் காட்டிய பெரும்பாலான மூலிகைகள் மற்றும் மரங்களை இங்கே நேரிடையாகக் காணலாம

7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அடர்ந்த காடு போன்ற  ரீடியம் என்னும் பகுதி பறவைகளைப் பார்ப்பதற்கும் இயற்கையை ரசிப்பதற்கும் ஏற்றது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அரிய வகைத் தாவரங்களைக் கொண்ட பழமையான பகுதி மலபார் தோட்டம் எனப்பெயரிடபட்டிருக்கிறது.

இந்தியாவின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளையும் இயற்கையுடனான தொடர்பையும் விளக்கும் ஒரு பகுதியாக இப்பூங்காவில் .யோகினி கோயில் அமைந்திருக்கிறது.  

இந்த யோகினி கோவில், வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல;  தாவரவியலையும் கலாச்சாரத்தையும் இணைக்கும் ஒரு அற்புதமான இடமாகும். அங்கே அவ்ழிபடு தெய்வமாக தஷபுஷ்பதேவதைகள் இருக்கிறார்கள்.

தசபுஷ்பம் என்பது கேரளாவின் பாரம்பரியத்தில்  பத்து மூலிகைத் தாவரங்களின் தொகுப்பாகும். இவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்துடன் தொடர்புடையவை .(கருக , முயல் செவியன் , திருதாளி , நிலப்பனை, கைய்யுண்ணி, விஷ்ணுகிராந்தி, பூவாங்குருன்னல், முக்குட்டி , உழிஞை ,செருபூளை.)

இந்தப் பூங்காவின் நுழைவாயிலில் அந்தமானுக்குச் சொந்தமான கொடிமூங்கில் படர்ந்திருக்கும் மாமரத்தடியில், வான் ரீடியின் மார்பளவு சிலை இருக்கிறது. 14 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்தப் பூங்காவின் ஒரு பகுதி வான் ரீடியின் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த டச்சு-ஜெர்மன் தாவரவியலாளரான கார்ல் லூத்விக் ப்ளூம் (Karl Ludwig Blume), ஒரு முக்கியமான ஒப்பீட்டை முன்வைத்தார். 17-ம் நூற்றாண்டிலேயே லின்னேயஸ் (Linnaeus) போன்ற உலகப் புகழ் பெற்ற தாவரவியலாளர்களுக்கு இணையான அறிவை அச்சுதன் கொண்டிருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டி, உலகம் லின்னேயஸைத் “தாவர வகைப்பாட்டியலின் தந்தை” என்று கொண்டாடும் வேளையில், அதற்கு நிகரான அறிவைக் கொண்டிருந்த அச்சுதனை வரலாறு மறைத்துவிட்டதை அல்லது மறந்துவிட்டதை ஒரு வரலாற்றுத் துரோகம் என்றார் அவர்.

அச்சுதனின் பெருமையை நிலைநாட்ட விரும்பிய ப்ளூம், ஒரு தாவரப் பேரினத்திற்கு ‘அச்சுடேமியா’ (Genus Achudemia) என்று பெயரிட்டு அவரை கௌரவித்தார்.

கடந்த 2012-ம் ஆண்டில், சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பாக ஹோர்டஸ் மலபாரிகஸ் நூலில் குறிப்பிடப்பட்டிருந்த தாவரங்களைத் தேடும் பணியைத் தாவரவியலாளர்கள் மேற்கொண்டனர். நவீன டி.என்.ஏ பார்கோடிங் (DNA Barcoding) தொழில்நுட்பத்தின் உதவியுடன் அந்தத் தாவரங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக அடையாளம் கண்டறியப்பட்டன.  

ஹோர்டஸ் மலபாரிகஸ் ஆவணத்தைத் சுமார் 30 ஆண்டுகள் கடுமையாக முயன்று, லத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளில் முழுமையாக மொழிபெயர்த்த டாக்டர் கே. எஸ். மணிலால் அவர்களின் பணி மிகுந்த பாராட்டுக்குரியது. இந்த மாபெரும் படைப்பை அவர்  அந்த மூல ஆவணத்தின் நாயகனான இட்டி அச்சுதனுக்கே சமர்ப்பணம் செய்திருந்தார். அந்த மொழிபெயர்ப்பு நூலின் முதல் பிரதியானது, இட்டி அச்சுதனின் பூர்வீகமான சேர்த்தலையில் வசிக்கும் அவருடைய நான்காவது தலைமுறை வாரிசுகளிடமே வழங்கப்பட்டது. ஒரு எளிய வைத்தியரின் அறிவுக்கு, நூற்றாண்டுகள் கடந்த பிறகு ஒரு நவீன கால அறிஞர் செய்த மிகச்சிறந்த கௌரவம் இது.

இட்டி அச்சுதனின் இறுதிக்காலம் கொச்சியில்தான் கழிந்தது என்றாலும், அவரது மறைவு குறித்த எந்தத் தகவலும் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அவரது சொந்த கிராமமான கடக்கரைப்பள்ளியில், அவர் டச்சுக்காரர்களால் கப்பல் வழியாக நெதர்லாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பயண வழியில் கப்பல் விபத்தில் உயிரிழந்தார் என்றும்;  அவர் ஐரோப்பா சென்றடைந்து அங்குள்ள கடும் குளிரால் நோய்வாய்ப்பட்டு அங்கேயே இறந்தார் என்றும் இருவேறு கருத்துகள் சொல்லப்படுகின்றன.  ஆனால், 1675 முதல் 1700 வரையிலான  ஐரோப்பாவிற்குச்சென்ற கப்பல் பயணிகளின் பட்டியலில் ‘இட்டி அச்சுதன்’ என்றோ அல்லது ‘வைத்தியர்’ என்றோ ஒரு பெயரும் இல்லை என்பதை மணிலால் தெரிவிக்கிறார். எனவே, அவரது மரணம் இன்றும் ஒரு மர்மமாகவே இருக்கிறது.

 ஓலைச் சுவடிகளையெல்லாம் ஒரு பெரிய பிரம்புக் கூடையில் போட்டு, தன் பக்கத்து வீட்டிலிருந்த கொங்கணி பிராமணக் குடும்பத்திடம் பத்திரமாகப் பாதுகாக்கும்படி சொல்லிவிட்டு, தான் தேசாந்திரம் போவதாகச் சொல்லிச் சென்றவர், பின்னர் ஊர் திரும்பவே இல்லை என்றும்  கொச்சிப்பகுதியில் தகவல் சொல்லப்படுகின்றது.

ஒருவேளை ‘ஹார்டஸ் மலபாரிகஸ்’ உருவாக்கப்பட்ட பிறகு, மேலும் தாவரங்களைத் தேடி  அச்சுதன் ஒரு நீண்ட பயணம் சென்றிருக்கலாம் அல்லது ஏதேனும் அடர் காட்டில் மூலிகைகளைத் தேடிச் செல்கையில் உயிரிழந்திருக்கலாம். ஆனால், அவருக்குப் பிறகு அக்குடும்பத்தின் வைத்திய மரபின் சரடு அறுந்து போனது.

வான் ரீடிக்கு அச்சுதன் உதவிய பனை ஓலைச் சுவடிகள் 1963-ல் முற்றிலுமாக அழிந்தன. ஆனால், அதிர்ஷ்டவசமாக பிரம்புக் கூடையில் அவர் பக்கத்துவீட்டுக்குக் கொடுத்தனுப்பிய ஓலைச் சுவடிகள் மட்டும் பாதுகாக்கப்பட்டிருந்தன.

இட்டி அச்சுதனுக்குத் திருமணம் நடந்ததா, அவரது மனைவி மற்றும் மக்கள் யார் என்பது போன்ற தகவல்களை இன்று வரை அறிந்து கொள்ள முடியவில்லை. 

இட்டி அச்சுதனின் சொந்த வீட்டையும், மூலிகைப்பூங்கா அமைந்திருந்த  நிலத்தையும், அவரது  நான்காம் தலைமுறை வழித்தோன்றலான புஷ்கரன் கடன் சுமையின் காரணமாக இரண்டு வங்கிகளில் அடமானம் வைத்திருந்தார். நிலத்தை மீட்க முடியாமல் புஷ்கரன் தற்கொலை செய்து கொண்டார். புஷ்கரனின் மனைவி உமாயம்மாவும் குழந்தைகளும் இப்போது கடனில் இருக்கும் அந்த நிலத்தின் பின்புறமாக வசிக்கிறார்கள்.

300 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மருந்துகள் தயாரித்துக் கொண்டிருந்த  குரியால எனபப்டும் அந்தச் சிறு குடிசையின் முன்பாக, அவருக்கென்று ஒரு அகல் விளக்கு நாள்தோறும் அவரது அடுத்தடுத்த தலைமுறை உறவினர்களால் இன்றளவும் மாலையில் ஏற்றப்படுகிறது.

சிறிய மரவீடான அது மிகவும் சிதைந்து போய் அழியும் விளிம்பில் இருக்கிறது.

உமாயம்மாவிற்கு ‘ஹோர்டஸ் மலபாரிகஸ்’ என்னும் பெயரைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம், அவரது முன்னோர்களில் ஒருவர் 300 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய புகழ்பெற்ற வைத்தியராக இருந்து, வெளிநாட்டவர்களால் அழைத்துச் செல்லப்பட்டு, கப்பல் பயணத்தின் போது இறந்தார் என்பது மட்டும்தான் இன்றும் நெதர்லாந்திலிருந்து பல சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள் என்கிறார் உமாயம்மா

வான் ரீடி திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், பிரான்சினா (Francina) என்னும் டச்சு-மலபார் பெண்ணை மகளாகத் தத்தெடுத்துக் கொண்டார். பிரான்சினா, ரீடியின் இறுதி காலம் வரை அவருடன் இருந்தார். ரீடி மரணமடைந்து அவரது உடல் சூரத்தில் அடக்கம் செய்யப்பட்டபோது பிரான்சினா உடனிருந்தார்.

இலங்கையிலிருந்து சூரத்திற்கு வந்து கொண்டிருந்த ஒரு கடற்பயணத்தின் இடையில், வான் ரீடி 1691-ம் ஆண்டு டிசம்பர் 15 அன்று மும்பைக் கடற்கரைக்கு அருகே கப்பலில் மரணமடைந்தார். அதிகாரபூர்வமாக அவரது திடீர் மரணத்திற்குக் காரணம் அம்மை நோய் என்று சொல்லப்பட்டாலும், நேர்மையாக இருந்து பலரின் எதிர்ப்புகளைச் சம்பாதித்துக்கொண்ட ரீடிற்கு, கப்பலில் நஞ்சூட்டப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

சூரத்தின் மாபெரும் டச்சுக் கல்லறைத்தோட்டத்தில் உள்ள மிகப்பெரிய கல்லறையில், ‘இந்தியத் தாவரவியலின் தந்தை’ எனச் சொல்லுமளவிற்குத் தாவரங்களை ஆவணப்படுத்திய   ரீடிஉறங்குகிறார்.

இட்டி அச்சுதனும் ரீடியும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தாவரங்கள் மீதான ஆர்வம் அவர்களை நண்பர்களாக்கியது. ஒருவரிடம் அனுபவ அறிவும், இன்னொருவரிடம் அதை உலகிற்குச் சொல்லும் வசதியும் இருந்ததால் இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய ஹார்டஸ்மலபாரிகஸ் என்னும் அரிய தாவரவியல் தொகுப்பு காலத்தைக் கடந்த ஒரு வரலாற்றுப் பொக்கிஷமாக இருக்கிறது. இவர்கள் இருவரின்  மரணமும்  மர்மமாகவே இருக்கிறது.

செம்பருத்தி செம்பருத்தி!

1760-களின் இறுதியில் HMS Endeavour கப்பல் தென்பசிஃபிக் கடலின் மனிதவாசம் படாத பிரதேசங்களையெல்லாம் கடந்து சென்றுகொண்டிருந்தது. அந்தப்பயணத்தினூடே பழங்குடியினரின் வாழ்விடங்களில் மட்டும் இருந்த செம்பருத்திச் செடியின் விதைகளும் மேற்கத்திய உலகிற்குப் பயணித்தன. 

நம் வீடுகளில் எளிமையாக வளர்ந்து கொண்டிருக்கும் செம்பருத்தி வெறும் தாவரவியல் அற்புதம்  மட்டுமல்ல; அது மனிதத் தேவைகளுக்கும், அந்தத் தேவைகளைத் தீர்ப்பதன் மூலம் தாங்களின் வாழ்வையும் பரவலையும் உறுதிசெய்துகொண்ட  தாவரங்களின் நுண்ணறிவிற்கும் இடையே காலம் காலமாக நிகழ்ந்து வரும் ஒரு உயிரியல் ஒப்பந்தமும் கூட.

1769-ல் கேப்டன் ஜேம்ஸ் குக்கும் அவரது கப்பலின் தாவரவியலாளரான ஜோசப் பேங்க்ஸும் தஹிதி தீவில் நுழைந்தார்கள். அவர்களுக்கு அழகிய செம்பருத்தி மலர்களால் ஆன மாலைகளை அணிவித்து அத்தீவின் பழங்குடியினர் வரவேற்பு அளித்தார்கள். மலர்களில் அழகென்றால் ரோஜாதான் என்று அறிந்திருந்த அவர்களுக்கு, இரத்தச் சிவப்பில் மிகப்பெரியதாக இருந்த, மலரின் நடுவில் இருந்து சிறு கம்பி போல நீட்டிக்கொண்டிருந்த மகரந்தக் குழாயுடன் கூடிய அந்த அழகிய மலர் பெரிய தாவரவியல் அதிசயமாகத் தெரிந்தது.

அதை தஹிதி தீவுவாசிகள் ‘கட்டுமர மலர்’ என அழைத்தார்கள். அவர்களின் முன்னோர்களின் கடற்பயணங்களில் கட்டுமரங்களில் அவர்களின் பயணத் துணையாக எப்போதும் இருந்ததால், அம்மலருக்கு அப்பெயர் வந்திருந்தது.

அக்காலத்தில் கடற்பயணங்களில்  உணவுக்காக சேம்பு, கறிப்பலா, மற்றும் வாழை  ஆகியவற்றைப் போலவே,  மருத்துவ உபயோகங்கள் கொண்டிருந்த, அடர்நிறச்  சாயம் அளித்த செம்பருத்தியும்  தவறாமல் கொண்டு செல்லப்பட்டது. கடற்பயணங்களில், கரையொதுங்கிய பல  தீவுகளிலிருந்த  மலர்ச் செடிகளில் செம்பருத்திச்செடியின் ஆதிப்பயிர் கடற்பயணிகளால்  கலப்பினச் சோதனைகளுக்கு உட்பட்டிருக்கலாம்.  நீண்டகாலப்பயணத்துக்குப்பிறகு இவை இந்தியா மற்றும் சீனாவை வந்து சேர்ந்தபோது, மனிதர்களால் முழுமையாக மேம்படுத்தப்பட்ட ஒரு பயிரிடு வகையாக (Cultigen) இப்போதிருக்கும் செம்பருத்திச்செடியாக  மாறியிருக்கக் கூடும்.

குக்கும் பேங்க்ஸும் அந்த மலர்ச்செடி அந்தத் தீவின் காடுகளில் எங்கும் வளர்ந்திருக்கவில்லை என்பதை அறிந்தார்கள். அந்தத் தீவுவாசிகளால் எங்கிருந்தோ கொண்டுவரப்பட்டு, அவர்களின் அன்றாட வாழ்வில் மிக முக்கியப் பங்கை வகிக்கும் ஒரு மலராக அது இருந்ததையும் அவர்கள் கவனித்தார்கள்.

கப்பல் குழுவினர் தஹிதியில் தங்கியிருந்த காலத்தில், அத்தீவுவாசிகள் மரவுரி ஆடைகளில் பிற தீவினரைப் போல சாயக் கற்கள் அல்லது கரியைக் கொண்டு சாயமிடாமல், செம்பருத்தியின் செவ்விதழ்களைக் கற்களுக்கடியில் வைத்து நசுக்கிப் பிழிந்து கிடைக்கும் சிவப்புச் சாற்றை, சிறிது நேரத்தில் ஆழ்ந்த பழுப்பு நிறம் கொண்டு விடும்போது அதைக்கொண்டு மரவுரிகளுக்குச் சாயமிடுவதை குக்கின் குழுவினர் அதிசயமாகக் கவனித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அதே சாயத்தைப் பெண்கள் புருவங்களுக்கும் தலைமுடிக்கும் சாயமிட்டுக்கொள்வதும் குக்கினால் ஆவணப்படுத்தப்பட்டது.

குக் மற்றும் பேங்க்ஸ் வரைந்த நேர்த்தியான செம்பருத்திச் செடியின், மலரின் சித்திரங்களும், அவர்கள் சேகரித்த செம்பருத்திச் செடியின் உலர் தாவரங்களும், விதைகளும் கியூ ராயல் தாவரவியல் பூங்காவிற்கு வந்து சேர்ந்தன. பின்னர் உலகின் பல பாகங்களுக்கும் செம்பருத்தி அறிமுகமானது.

செம்பருத்தி மலர் ஐரோப்பிய தாவரவியலாளர்களுக்கு ஒரு சவாலாக இருந்தது. அந்த அழகிய மலர்ச்செடி பசிஃபிக் பகுதியினரின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்பதையும், செம்பருத்தி ஒரு ‘மனிதப்பயிரிடு வகை’ என்பதையும், மனிதர்களால் அவர்களின் தேவைக்கேற்ப மறுசீரமைப்பு செய்யப்பட்டு, தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வளர்க்கப்படும், காட்டு மூதாதையர்கள் ஏதுமில்லாத ஒரு தாவரம் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.

சீனா, இந்தியா மற்றும் ஆப்பிரிக்கக் காடுகள் எதிலும் செம்பருத்தியின் காட்டு மூதாதையர்கள் இல்லை. எனவே, இவை இந்தியாவையோ அல்லது அந்த நாடுகளையோ பூர்வீகமாகக் கொண்டிருக்க முடியாது. இந்தியப் பெருங்கடல் தீவுகளில் இருந்த H. liliiflorus மற்றும் H. schizopetalus ஆகிய இரு இனங்களின் அழகிய மலர்களைக் கண்ட பண்டைய மாலுமிகள், கலப்பினச் சோதனைகள் மூலம் உருவாக்கியவையே இன்றைய செம்பருத்தியின் மூதாதையர்களாக இருக்கக்கூடும். காட்டு மூதாதையர்கள் மட்டுமல்ல, புதைபடிம எச்சங்களும் (Fossils) செம்பருத்திக்கு இல்லை என்பது, இது ஒரு பயிரிடு வகை (Cultigen) என்பதற்குச் சான்றாகும்.

ஜேம்ஸ் குக்கினால் கண்டுபிடிக்கப்பட்ட செம்பருத்தி, பின்னர் வெகுவேகமாக உலகெங்குமே பெருகிப் பரவியது. தொடக்க நாட்களில் குக் ஆவணப்படுத்தியதிலிருந்து, கடற்பயணத் துணையான செம்பருத்தியின் பயன் உலகெங்குமே பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தது.

விழியை இழந்த தாவரவியலாளர் ஜார்ஜ் ஈபர்ஹார்ட் ரம்பீயஸ் (Georg Eberhard Rumphius), 17-ம் நூற்றாண்டில் செம்பருத்திச் சாற்றை அம்போன் தீவுப் பெண்கள் கண் புருவம் மற்றும் தலைமுடிக்குச் சாயமேற்றப் பயன்படுத்துவதைத் தனது Herbarium Amboinense என்னும் நூலில் பதிவு செய்திருக்கிறார்.

செம்பருத்தி அக்காலத்தில் அழகுத் தாவரமாக மட்டுமல்லாமல், அதன் மருத்துவக் குணங்கள் கொண்ட பிசுபிசுப்பான திரவம், சாயம் மற்றும் தண்டின் நார் போன்றவற்றுக்காகச் சாகுபடி செய்யப்பட்ட ஒரு பணப்பயிராகவே இருந்தது.

உண்மையில் செம்பருத்தி குக்கினால் கண்டுபிடிக்கப்பட்டு உலகளாவிய பயன்பாட்டுக்கு வந்தது என்பது வெறும் தற்செயலான ஒரு தாவரக் கண்டுபிடிப்புத்தான். உண்மையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து தாவரப் பொறியியல் மற்றும் கலப்பினச் சோதனைகள் மூலம் உருவாக்கப்பட்ட, அழகுக்கும் தாவரஅறிவியலுக்குமான உலகளாவிய குறியீடாகவே செம்பருத்தி இன்றுவரை இருக்கிறது. மனிதகுல வரலாற்றில் செம்பருத்திக்கென மிகத் தனித்துவமான ஒரு இடம் இருக்கிறது.

கூடவே செம்பருத்தித் தாவரத்தின் புத்திசாலித்தனமும் வியக்கவைக்கும் ஒன்று. மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, நறுக்கப்பட்ட தண்டு (Stem cuttings) மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, இயற்கையாகவே வளர்ந்த செம்பருத்திச் செடிகள் மலர்களை உருவாக்கி, மகரந்தச் சேர்க்கையாளர்களைக் கவர்ந்து, பாலினப் பெருக்கம் செய்து விதைகளை உருவாக்கின. விதைகளை உருவாக்கச் செம்பருத்திச் செடிக்கு, பிற செடிகளைப் போலவே ஏராளமான ஆற்றல் தேவைப்பட்டது. உருவாகும் விதைகளைப் பல இடங்களுக்கும் பரவச் செய்து, சந்ததிகளின் வாழ்வை உறுதிப்படுத்தவும் ஆற்றல் தேவைப்பட்டது.

ஆனால் செம்பருத்தி ஒரு பயிரிடு இனமாக மனிதர்களால் மாற்றப்பட்ட பிறகு, அது பாலினப் பெருக்கத்திற்குச் செலவழித்த, 20 விதைகள் கொண்ட கனியை உருவாக்குவதற்குத் தேவையான ஆற்றல்  அப்படியே மீதமானது. பலமுறை கலப்பினச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதால், 4, 6 அல்லது சில சமயங்களில் 8 ஜோடி குரோமோசோம்களைக் (Polyploidy) கொண்ட செடியாக இருந்ததால், வீரியம் அதிகமுள்ள அதிக வெப்பம் உள்ளிட்ட பல சூழல் சிக்கல்களுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டிருந்த ஒரு செடியாக மாறிய செம்பருத்திக்கு  விதைகள் உருவாகாத மலட்டுத்தன்மையும் உண்டானது.

தானாகவே மலட்டுத்தன்மையை உருவாக்கிக்கொண்ட செம்பருத்திச் செடியிலிருந்து முளைதிறன் இல்லாத விதைகள் சிறிது காலம் உருவாகின. பிற்பாடு தனது புத்திசாலித்தனத்தினால், முளைக்காத விதைகளை அளிக்கத் தேவைப்பட்ட ஆற்றலை, மலர்களை மிக அழகாகவும் மிகப் பெரியதாகவும் உருவாக்குவதற்குச் செலவழித்து கனிகள் உருவாக்கத்தை நிறுத்திக்கொண்டது செம்பருத்தி. 

மனிதர்களின் மலர்களுக்கான ஆசையைத் தூண்டி, அதன் மூலம் தனது இனப்பெருக்கத்தையும் சந்ததிப்பரவலையும் உறுதி செய்துகொண்டது செம்பருத்தி.

செம்பருத்திச் செடி தனது அழகான, பெரிய வண்ணமயமான மலர்களையும், மருத்துவப் பயனுள்ள வழுவழுப்புத் தன்மையையும் மனிதர்களைத் தன்பக்கம் ஈர்ப்பதற்கான ஒரு உத்தியாகக் கையாண்டது. 

“நான் உங்களுக்கு அழகையும் பயன்களையும் தருகிறேன்; பதிலுக்கு நீங்கள் என்னை அழிந்துபோகாமல் அடுத்தடுத்த இடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்” என்னும் ஒரு உயிரியல் ஒப்பந்தத்தின் மூலம் இன்றுவரை உலகின் மிக விரும்பப்படும் பாலிலா இனப்பெருக்கம் மூலம் பரவும் செடியாகச் செம்பருத்தி இருக்கிறது.

தனது இனப்பெருக்கத்திற்கு விதைகளை நம்பியிருக்காமல் மனிதனின் தேவையையும் ஆசையையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உலகெங்கும் பரவிய தாவரங்களில் செம்பருத்தி முதன்மையானது. கடற்பயணங்களில் தேவைப்படும் மருந்துகளுக்கும் சாயத்துக்கும் மிக அவசியமானதொரு செடியாக இருந்ததன் மூலம் தனது கடல்வழிப் பயணத்தையும் செம்பருத்தி உறுதி செய்துகொண்டது.

இதன் புத்திசாலித்தனத்திற்கு இன்னும் ஒரு உதாரணமாகச் செம்பருத்திச் செடி ஒரு ‘பேக்-அப்’ (Back-up) உத்தியையும் வைத்திருக்கிறது. ஒருவேளை மனிதர்களுக்குச் செம்பருத்தியின் மீதான ஆசையோ தேவையோ அற்றுப் போனாலும், மீண்டும் பழையபடி விதைகளை உருவாக்கும் திறனையும் தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது. இதை அவ்வப்போது நம் வீடுகளில் இருக்கும் செம்பருத்திச் செடிகள் கனிகளை உருவாக்குவதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

செம்பருத்தி எப்படி விதைகளை உருவாக்குவதை நிறுத்திவிட்டுத் தண்டுகள் மூலம் பரவி உலகின் ராணியாக இருக்கிறதோ, அதேபோல மக்காச்சோளமும் மிகத் தடிமனாகவும், பல அடுக்குகளாகவும் இருந்த தனது கதிர் உறையை மெலிதாகவும். எண்ணிக்கை குறைவாகவும் மாற்றி, அதற்குத் தேவைப்பட்ட ஆற்றலைக் கதிர்மணிகளின் நிறம் மற்றும் அளவை அதிகரிக்கப் பயன்படுத்திக்கொண்ட பயிர். மக்காச்சோளமும் மனிதர்கள் இல்லாவிட்டால் உலகெங்கும் பரவ முடியாத ஒரு பயிர். தனித்தன்மை வாய்ந்த மிகப்பெரிய விதைகளைக் கொண்டிருந்த காட்டுச் சோளத்தை (Teosinte), பலநூறு ஆண்டுகளாக மனிதர்கள் தொடர்ந்து கலப்பின ஆய்வுகளுக்கு உட்படுத்தியதால், விதைகளுக்கான சதவீதத்தை அதிகரித்துக் கொண்ட ஒரு பயிர் இது. 

கடினமான பெரிய விதைகளைக் கொண்டிருந்த காட்டு வாழைப்பழங்களிலிருந்துதான் மனிதர்கள் தொடர்ந்து கலப்பின சோதனைகள் செய்து பார்த்து, மிகச்சிறிய மென்மையான விதைகளும் அதிக சுவையான சதைப்பகுதியையும் கொண்டிருக்கும் இன்றைய வாழைப்பழத்தை உருவாக்கினார்கள். சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ப்ரோக்கலி, என்று இப்படியான கல்டிஜென்களுக்கு பல உதாரணங்கள் உள்ளன.

இந்தத் தாவரங்களின் உயிரியல் ஒப்பந்தம் அவற்றின் தாவரப் புத்திசாலித்தனத்தின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. தங்களுக்கென இருக்கும் பிரத்யேக உயிர்வாழும் உத்தியினால் மனிதர்களுடன் இணைந்து, அவர்களின் வாழ்வியலில் ஒரு தனித்துவமான, பிரத்யேகமான, நிரந்தரமான இடத்தைப் பிடித்துள்ளன இந்தத் தாவரங்கள்.

Hibiscus rosa-sinensis என்னும் தாவரவியல் பெயர் கொண்டியிருக்கும் செம்பருத்தி, இப்போது உலகளாவிய அங்கீகாரம் பெற்ற ஒரு சாகுபடி மலர். ‘சீனச் செம்பருத்தி’ அல்லது ‘ஷூ பிளாக் பிளாண்ட்’ (Shoeblack plant) என்று அழைக்கப்படும் செம்பருத்தி, பருத்தியின் குடும்பமான மால்வேசியை (Malvaceae) சேர்ந்தது. இது 1.5 முதல் 3 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய ஒரு பசுமைமாறாப் புதர்ச் செடி. மிக வளமான நிலங்களில் ஒரு குறுமரமாகவும் வளரும் இயல்பு கொண்டது.

பல்லாண்டுகளாகச் செம்பருத்தி இதழ்களின் வழுவழுப்பான சாற்றைக் கொண்டு, செயற்கை பாலிஷ் கண்டுபிடிக்கப்படும் வரை ஷூக்களைப் பாலிஷ் செய்யப் பயன்படுத்தியதால், இந்தச் செம்பருத்திக்கு ‘ஷூ பிளாக் பிளாண்ட்’  என்று பெயர் வந்தது.

இதன் இலைகள் பளபளப்பாகவும், முட்டை வடிவிலும், விளிம்புகளில் ரம்பம் போன்ற அமைப்பையும் கொண்டவை. இதன் மலர்கள் பொதுவாகச் சிவப்பு மற்றும் பல அழகிய வண்ணங்களில் கிடைக்கின்றன. மலர்கள் 10–15 செ.மீ விட்டம் கொண்டவை; ஐந்து இதழ்கள் மற்றும் ஒரு நீளமான மகரந்தத் தூணைக் (Staminal column) கொண்டவை.

இது ஆண்டு முழுவதும் பூத்தாலும், அரிதாகவே கனிகளை உருவாக்குகிறது. அவ்வாறு உருவாகும் முட்டை வடிவக் கனிகள், ஐந்து பகுதிகளாகப் பிரிந்து, 20 விதைகள் வரை கொண்டிருக்கும். வெப்பமண்டலக் காலநிலையில் செழித்து வளரும் இத்தாவரம், முழுமையான சூரிய ஒளியை விரும்புகிறது. 

ஐரோப்பிய ஆய்வாளர்கள் சீனக் கோவில்களுக்கு அருகில் இதன் பல சாகுபடி வகைகளைக் கண்டறிந்தனர். எனவே இதன் பூர்வீகத்தை உறுதி செய்துகொள்ளாமல், தாவர வகைப்பாட்டியலின் தந்தை எனக் கருதப்படும் கார்ல் லின்னேயஸ், 1753-ம் ஆண்டில் (லின்னேயஸின் Species Plantarum வெளியானது 1753-ல் தான்) இதற்கு அதிகாரப்பூர்வமாக Hibiscus rosa-sinensis என்று பெயரிட்டார்.

இந்த பிழையான பெயரிடலை 18-ம் நூற்றாண்டின் கடற்பயணங்கள் எப்படி நவீனத் தாவரவியலை வடிவமைத்தன என்பதைப் புரிந்துகொள்ள ஒரு சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். லின்னேயஸ் ஒருவேளை மலர்ந்த புத்தம் புதிய செம்பருத்தியைப் பார்த்திருப்பாரேயானால், அதன் மகரந்தத் தூணைப் பார்த்து அது ரோஜாக்களில் ஒன்றல்ல என்பதை எளிதில் கண்டறிந்திருக்கலாம்.

ஆனால், சீனத் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல்களில் வந்த தாவரங்களில் ஒன்றாகச் செம்பருத்தி இருந்ததாலும் அவரிடம் வந்து சேர்ந்த போது மலர்கள் வாடித்துவண்டு போயிருந்ததாலும், லின்னேயஸ் அதைச் சீனாவைப் பூர்வீகமாகக் கொண்ட தாவரம் எனக் கருதினார். பிற்பாடு அறிவியலாளர்கள் இதன் கொடிவழியைத் தேடிச் சென்று, செம்பருத்தி மொரிஷியஸ் தீவுகளுக்கு அருகில் இருக்கும் மஸ்கரீன் தீவுகளைச் (Mascarene Islands) சேர்ந்தது என்று கண்டறிந்தார்கள்.

அந்தத் தீவுகளிலிருந்துதான் கடற்பயணங்களின் வழியாக, ஐரோப்பியத் தாவரவியலாளர்கள் மற்றும் கடற்பயணிகளால் பார்க்கப்படுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தியா மற்றும் சீனாவிற்கு இது அறிமுகமாகியிருக்க வேண்டும்.

கேப்டன் குக்கிற்குப் பிறகு, 1731-ல் பிலிப் மில்லர் (Philip Miller) இதனை இங்கிலாந்திற்கு அறிமுகப்படுத்தினார். பின்னர் இதன் உலகளாவியப் பரவல் வேகம் எடுத்தது. 1810-ல் ஜான் ரீவ்ஸ் (John Reeves) சீனக் கலைஞர்களைக் கொண்டு இதன் பல்வேறு வகைகளை ஆவணப்படுத்தினார்.

1900-களின் தொடக்கத்தில் புதிய கலப்பினங்களை உருவாக்குவதில் ஹவாய் முக்கியப் பங்காற்றியது. 1923-இல் செம்பருத்தி ஹவாயின் மாநில மலராக மாறியது. 1950-களில் ‘அமெரிக்கன் ஹைபிஸ்கஸ் சொசைட்டி’ (American Hibiscus Society) உருவாக்கப்பட்ட பிறகு, இதன் வகைகள் தரப்படுத்தப்பட்டு இன்று உலகம் முழுவதும் 6,000-க்கும் மேற்பட்ட வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இன்றைய நவீன செம்பருத்திகளின் மரபணுத் தளம் எட்டு அசல் இனங்களைக் கொண்டது. இவற்றிலிருந்தே ஆயிரக்கணக்கான செம்பருத்தி வகைகள் உருவாக்கப்படுகின்றன:

  • மொரிஷியஸ்: H. fragilis, H. genevii, H. liliiflorus
  • மடகாஸ்கர்: H. schizopetalus
  • ஹவாய்: H. arnottianus, H. kokio
  • பிஜி: H. storckii
  • சீனா/இந்தியா: H. rosa-sinensis

அலங்கார அழகைத் தாண்டி, இது இயற்கைச் சாயத்துக்காகவும், பாரம்பரிய மருத்துவத்திலும், தேநீர் தயாரிப்பிலும், நிலப்பரப்பு வடிவமைப்பிலும் (Landscaping) பயன்படுகிறது. இந்தியாவில் காளி தேவிக்கு உகந்த புனித மலராகவும், ஹவாயில் அழகின் அடையாளமாகவும், பல்வேறு கலாச்சாரச் சடங்குகளிலும் இது ஆழமான இடத்தைப் பெற்றுள்ளது.

பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளில், மனநலம் குன்றியவர்களுக்கு அதன் இயற்கையான அமைதிப்படுத்தும் (Natural Calmative), பதற்ற எதிர்ப்பு (Anti-Anxiety) மற்றும் மனச்சோர்வு எதிர்ப்பு (Antidepressant) இயல்புகளினால் செம்பருத்தி மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. எனவே, கேரளாவில் “காதில் செம்பருத்தி வைப்பது” (செவியில் செம்பருத்தி வைப்பது) என்பது, தமிழில் “தலையில் எலுமிச்சை தேய்த்துக்கொள்வது” என்னும் சொலவடையைப் போல, மனநலம் குன்றியதைக் குறிக்கும் கிண்டலாக இருக்கிறது.

1958-ல் மலேசியா சுதந்திரம் அடைந்த பின்னர், தேசிய மலரைத் தேர்வு செய்ய மல்லிகை, தாமரை மற்றும் செம்பருத்தி உள்ளிட்ட ஏழு மலர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இவற்றில் அனைத்து வீடுகளிலும் எளிதாக வளரும், மிக அழகிய மலர்களைக் கொண்டிருப்பதோடு, மக்களையும் இணைக்கும் ஒரு காரணியாகச் செம்பருத்தி இருந்ததால், அதுவே தேசிய மலராக அறிவிக்கப்பட்டது. மலேசிய நாட்டின் ஐந்து முக்கியக் கொள்கைகளுக்கான குறியீடாக செம்பருத்தியின் ஐந்து இதழ்கள் கருதப்படுகின்றன. “Bunga Raya” என்பது மலாய் மொழியில் தேசிய மலரான சிவப்புச் செம்பருத்தி மலரைக் குறிக்கும்.

பல பண்டைய இந்திய நூல்களில் செம்பருத்தி ‘ஜப புஷ்பம்’ (Japa Kusuma) எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சூரியக் கடவுளுக்கான ‘ஆதித்ய ஹ்ருதயம்’ நூலின் முதல் வரி:

“Japa Kusuma Sankarsham” – “செம்பருத்தியைப் போல் ஒளிர்பவனே!” எனச் சூரியனைப் போற்றுகிறது.

பல பண்டைய சமஸ்கிருத நூல்களில் சிவனுக்கான மலராக ‘ருத்ர புஷ்பம்’ எனச் செம்பருத்தி குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஐந்தாம் நூற்றாண்டில் உருவான சுஸ்ருத மற்றும் சரக சம்ஹிதைகளில், செம்பருத்தி ‘பித்த தோஷ’ சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. பண்டைய சித்த மருத்துவ நூல்களும் தலைமுடி அலசிக் குளிக்கவும், தலைமுடி கருப்பாக இருக்கவும் செம்பருத்தியைப் பரிந்துரைக்கின்றன.

பண்டைய சீனத்தில் மண்பாண்டங்களில் செம்பருத்தியின் சித்திரங்கள் அதிகமாக வரையப்பட்டன. சீனக் கவிதைகளிலும் செம்பருத்திக்கு முக்கியமான இடமிருந்தது.  பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு 16-ம் நூற்றாண்டில் (1578-ல் நிறைவுபெற்ற) சீன மருத்துவ வரலாற்றின் மிக முக்கியமான மற்றும் விரிவான தாவரவியல் கலைக்களஞ்சியமான ‘பென்காவ் காங்மு’ (Bencao Gangmu), புகழ்பெற்ற மருத்துவர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளரான லி ஷிஜென் (Li Shizhen) என்பவரால் தொகுக்கப்பட்டது. இந்த மூலிகை மருத்துவ நூலில், ஐரோப்பியர்களால் ஆவணப்படுத்தப்படுவதற்கு முன்பே செம்பருத்திச் சாற்றின் கூந்தல் ஆரோக்கியம் மற்றும் நிறம் தரும் பண்பு குறித்துக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இதன் இதழ்களைச் சாப்பிடுவது இளமையைத் தக்கவைக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது

தாவரமும் மனிதனும் ஒன்றையொன்று சார்ந்து பரிணாம வளர்ச்சி அடைவதைக் குறிக்கும் இணைப் பரிணாமக் கொள்கைக்கான (Co-evolution) மிகச்சிறந்த உதாரணம் செம்பருத்திதான். ஒரு தாவரம் தனது உயிர்வாழ்தல் மற்றும் பரவலுக்காக மனிதனைப் பயன்படுத்துகிறது; மனிதன் தனது தேவைக்காகத் தாவரத்தைப் பயன்படுத்துகிறான். இது ஒரு உயிரியல் ஒப்பந்தம் மட்டுமல்ல, “கொடுத்தல்-வாங்கல்” (Mutualistic contract) ஒப்பந்தமும்கூட.

விதைகளை நம்பியிருக்காமல், தாவரத்தின் தண்டுப்பகுதியைக் (Stem cuttings) கொண்டு புதிய செம்பருத்திச் செடிகள் உருவாக்கப்படுவதால், அந்தத் தாவரத்தின் அசல் மரபணுக்கள் மாறாமல் அப்படியே பாதுகாக்கப்படுகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு கடற்பயணி தனது கட்டுமரத்தில் எடுத்து வந்த அதே செம்பருத்தியின் மரபணுவை, இன்று நம் தோட்டத்தில் உள்ள செடியிலும் காண முடியும்.

“பரவுக” என்னும் கட்டளை ஒவ்வொரு தாவரத்திற்கும் இயற்கையால் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டளையின்படி, சொந்த நிலமற்ற ஒரு மலர்ச்செடி  மனிதர்களை உபயோகித்துக்கொண்டு உலகெங்கிலும் பரவி இருப்பது எப்பேற்பட்ட ஒரு ஆச்சரியம்.

சரண் 26!

சரணுக்கு இன்று 26-ஆவது பிறந்தநாள். நாட்கள் ஒன்றும் அத்தனை வேகமாகச் சென்றுவிடவில்லை; மிக மெதுவாகத்தான் நகர்ந்திருக்கிறது காலம். ஒன்பது மாதங்கள் முடிந்து, வான்வழிப் பயணத்திற்கான சட்டபூர்வ நாட்களும் கடந்த பின்னால், பொய்ச்சான்றிதழ் வாங்கித்தான் நிறைமாதக் கர்ப்பிணியாக அபுதாபியிலிருந்து கோவை விமான நிலையம் வந்தேன். கர்ப்பகாலம் முழுவதுமே கொந்தளிப்பான கால மாகத்தான் இருந்தது. வயிற்றில் இருப்பது பெண் என்று எப்படியோ நான் நம்பினேன்; ‘துர்கா’ எனப் பெயரும் இட்டிருந்தேன்.

ஏப்ரல் 4, 2000 அன்று சரண் ஆனைமலை அம்பராம்பாளையம் வசந்த் மருத்துவமனையில் பிறந்தான். கர்ப்பகாலத்தில் நான் நல்ல உணவைச் சாப்பிட்டிருக்கவில்லை என்கிற குற்றவுணர்வு, சரணுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும்போதெல்லாம் என்னைக் கஷ்டப்படுத்தும். புதிய தேசம், புரியாத பாஷை, மிகச் சிக்கலான தாம்பத்தியம், பொருளாதார ரீதியான சார்பு நிலை, கர்ப்பகாலச் சிக்கல்கள் என அனைத்திற்கும் மேலாக, வயிற்றில் இருக்கும் குழந்தையை யாரேனும் ஏதேனும் செய்துவிடுவார்களோ என்னும் அச்சம் என்னை நிரந்தரமாகப் பீடித்திருந்தது. ஊரிலிருந்து கொடுத்து அனுப்பப்பட்ட ஒரு பெரிய கண்ணாடி பாட்டில் நிறைய இருந்த குலோப் ஜாமூனை, அவ்வப்போது எடுத்து வாஷ் பேசினில் கரைத்துக் கரைத்துத் தீர்த்தேன். அதில் வயிற்றுக் குழந்தைக்கு ஆபத்தான ஏதோ இருக்குமென அஞ்சினேன்.

கடுமையான  வீட்டு வேலைகள்அப்போது இருந்தன; ஓய்வென்பதே ஒரு நிமிடம் கூட உடலுக்கு இல்லாத காலம். வீட்டில் ஒரே அறையில் குடித்தனம்; மற்றொரு படுக்கையறையும் சமையலறையும் உள்வாடகைக்கு விடப்பட்டிருந்தன. எனக்கென உறங்கும் நேரமோ, தனிமையோ, ஓய்வோ எதுவுமே இல்லாத, பெரும்பாலும் பசியுடன் இருந்த மாதங்கள் அவை. பிரசவத்திற்கு ஊருக்கு வருவதிலும் எனக்குப் பெரிய ஆர்வம் இருக்கவில்லை. ‘வாணலிக்குத் தப்பி அடுப்புக்கு வரும் கதை’தான் அதுவும் என்றாலும் வந்தேன்; எங்கும் போக இடமில்லாத நிலை அது.

வழக்கம்போல வீட்டிலும் அப்பா என்பவரின் வன்முறை. ஆனால், திருமணத்துக்குப்பிறகு  உடல்ரீதியான துன்புறுத்தல்  இல்லை; இருப்பினும் மனோரீதியான வன்முறை கட்டுக்கடங்காமல் இருந்தது. திருமணத்திற்கு முன்பிருந்தே வேலைக்குப் போய்ச் சம்பாதித்துக் கொண்டிருந்ததால், அப்போது கைகளில்  சுத்தமாகப் பணமில்லாமல் இருந்தது பெரும் சுமையாக இருந்தது. இரண்டு பக்கமும் மனித உணர்வு, உறவு, மனிதாபிமானம் ஆகிய எல்லாவற்றையும் விடப் பணத்திற்கே முக்கியத்துவம் கொடுத்த ஆட்களே இருந்தார்கள்.

எப்போதாவது மாலை காற்றாட நடைக்கையில் அப்பா என்பவரும் உடன் வருவார். முனிசிபல் ஆபீஸ் முனையில் இருக்கும் இளநீர்க்கடையில், அந்த அம்மாவிடம் இளநீர் வாங்கி குடித்துவிட்டு நான் பணம் கொடுப்பதை அப்பா உணர்ச்சியின்றிப் பார்த்துக்கொண்டிருப்பார்.  சரண் ஐரோப்பா செல்லும் முன்பு அந்த இளநீர்க்கார அம்மாவிடன் அவனை அழைத்துச்சென்று அவன் வயிற்றில் இருக்கையில் அவர்வெட்டித்தந்த இளநீரை அவன் குடித்திருக்கிறான் என்று சொன்னேன். அவரது கால்தொட்டு வணங்கிவிட்டுத்தான் புறப்பட்டான். அந்த அம்மா அவனுக்கு கண் நிறைந்து ஒரு இளநீர் வெட்டித்தந்தார்கள்.

கர்ப்ப காலத்தில் அம்மா என்னை எப்படி நடத்தினார் என்று சொல்ல இன்னும் மனது வரவில்லை. அன்னைமை குறித்த ஒரு மாயை உலகில்  இருக்கிறதல்லவா, அது அப்படியே இருக்கட்டும். 

நல்ல பசியில் ஒருவாய் அதிகமாகச் சாப்பிட்டால், உடனே அம்மா, ‘அதிகமா சாப்பிட்டா குழந்தை ஊறிப் பெரிசாகும், அப்புறம் சுகப்பிரசவம் ஆகாது; சிசேரியனுக்கெல்லாம் இங்கே பணமில்லை…’ என்பார்கள். இதை மட்டுமே என்னால் வெளியே சொல்ல முடியும். 

இளமையில் நல்ல புடவை உடுத்திக்கொண்டோ, தலைக்குக் குளித்து நீளமான அடர்த்தியான கூந்தலை ஆயிரங்கால் ஜடை பின்னிக்கொண்டோ, ஜிமிக்கி போட்டுக்கொண்டோ, தலை நிறையப் பூச் சூடிக்கொண்டோ கல்லூரிக்கோ பல்கலைக்கழகத்திற்கோ செல்கையில், அம்மாவின் கண்ணில் ஒரு கனல்புள்ளி தெரியும். கட்டாயமாக ஏதோ ஒன்று சுருக்கென்று சொல்வார்கள்; ஏதோ ஒரு குறை சொல்லியோ அல்லது அப்பா என்பவர் என்னை கடுமையாக பேசும்படியாக ஒரு சூழலை வேண்டுமென்றே  உண்டாக்கியோ என் முகம் வாடிப்போன பின்னரே நான் அங்கிருந்து இறங்கிச் செல்வதை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.. ‘காடு’ நாவலில் கிரியின் சம்பளத்தைக் கேட்டதும்  அவன் அப்பாவின் உணர்வுகளை ஜெ சொல்லியிருப்பார்; அப்போது நான் அம்மாவைத்தான் நினைத்துக்கொள்வேன். உண்மையிலேயே நான் வேறெங்கோ வேறு யாருக்கோதான் பிறந்திருக்கவேண்டும் எப்படியோ அந்த வீட்டுக்கு நான் கொண்டு வரப்பட்டிருக்கவேண்டும் என்று ஆழமாக இப்போதும் நம்புகிறேன்.

இன்றைக்கும் நான் எப்போதும் மிக விரிவாக, தேவைக்கும் அதிகமாகவே சமைப்பதற்கும், யார் வந்தாலும் திருப்தியாகச் சமைத்துப் போடுவதற்கும் அப்போதைய என் பசிதான் காரணம். பிரசவத்திற்குப் பிறகும் பத்திய உணவோ, வயிறு சுருங்கப் பிரத்யேக உணவோ, ஏன் பாலூட்டுவதற்கான உணவோ கூட எனக்கு அளிக்கப்படவில்லை. சரணுக்கு 21 நாட்களானபோது, நான் அவனைச் சரியாகப் பிடிக்கக்கூடத் தெரியாமல் ஷார்ஜா விமான நிலையத்தில் இறங்கியிருந்தேன். எனக்கு ஓய்வு வேண்டும், அறுவை சிகிச்சைக் காயங்கள் ஆற வேண்டும் என்றெல்லாம் என் தரப்பில் யோசிக்கக்கூட  யாரும் இல்லை.

என் வாழ்வைத் திரும்பிப் பார்க்கையில் எனக்கு மிக ஆச்சரியமாக இருப்பதெல்லாம், நான் இன்னும் உயிருடன் இருப்பதுதான். சரண் பிறந்தபோது, ‘ஆண் குழந்தை’ என்னும் டாக்டர் வசந்தின் குரல் என் காதில் விழுந்த பின்னரே நான் நினைவிழந்தேன். அன்றிலிருந்து இந்த நிமிடம் வரை அவனும் சின்னவனும் உடனிருக்கிறார்கள் என்னும் ஒன்றே என் பிடிப்பாக இருக்கிறது.

அபுதாபியில் அவனுடன் பேசிக்கொண்டே இருப்பேன். அவனுக்கு நான் பேசுவது புரியாத மிகச்சிறு வயதிலிருந்தே என் கண்ணீரையும் குரலையும் அவன் கேட்டுத்தான் வளர்ந்தான். அவனுக்காகத்தான் இந்த கிராமத்து வீட்டைக் கட்டி இங்கு வசிக்க வந்தேன். அவனால்தான் இன்று நான் இருக்கிறேன்.

மிகச் சிக்கலான ஒரு காலகட்டத்தில், சரண் ஸ்கூல் வேனிலிருந்து கீழே இறங்கும்போது, தெருவின் எதிர்ப்பக்கத்தில் இருந்த எனக்கு அவனது பெரிய ஷூ அணிந்த கால்கள் தெரிந்தது அத்தனை நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. சரணுக்கும் தருணுக்கும் தெரியாது; அவர்கள் இருவரும் என் வாழ்வை எப்படியெல்லாம் நேராக்கி, நான் இன்று உயிருடன் இருக்க உதவியிருக்கிறார்கள் என்று.

 கண்பட்டதுபோல, தவிர்க்கவே முடியாமல் வேறு ஒரு தரப்பிலிருந்து உண்டான காரணத்தினால்  சரணுக்கு இப்போதிருக்கும் ஒரு சிறு துயர் மறைந்து, அவன் அதை மறந்து, குடும்பமும் குழந்தைகளுமாக என் கண்முன்னே வாழவேண்டும் அவன் ஒரு தொடக்கம்தான் பின்னாலேயே தருணும் சாம்பவியும் அவனைப்போலவே நலமாக இருப்பார்கள் . அது மட்டுமே இப்போது என் ஒரே ஒரே ஒரே ஆசை. தெய்வங்களே காத்துக்கொள்க! 

பிறந்தநாள் வாழ்த்துகள் சரண் குட்டி.

மாதொருபாகன் மிளகாய்!

சமீபகாலங்களில் இணையச் செய்திகள் பரவும் வேகம் மிக மிக அதிகமாக இருக்கிறது. இணைய ஊடகங்களுக்கு அடிமையாவதும் மிக விரைவாக நடக்கிறது. எல்லோரும் எல்லாத் துறைகளிலும் கருத்துச் சொல்லி, அது பரவி ஆயிரக்கணக்கிலான அந்தச் செய்தியின் நம்பகத்தன்மை குறித்து எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லாமல் அது நம்பவும், கடைபிடிக்கப்படவும் செய்கிறது. தாவரவியல் பிழைகளில் மட்டும் நான் ஒருசில சமயங்களில் தாங்க முடியாமல் இடைபடுகிறேன்.

காந்தள் மலர்ச் செடியின் (Gloriosa superba) ஆங்கில V வடிவக் கிழங்குகளின் நச்சுத்தன்மையைக் குறித்து எதுவுமறியாத யாரோ ஒருவர், அதன் கிழங்குகளைச் சமைத்துச் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என வாட்ஸ்அப்பில் சொல்ல, அதை நம்பிய ஓர் ஆம்பூர் இளைஞர் போன வருடம் அப்படியே செய்து உயிரிழந்தார்.

நான் இளங்கலை தாவரவியல் படிக்கையில் என்னுடன் இருந்த சில நண்பர்கள் ஒரு புலனக்குழுமம் (whats app Group) தொடங்கி அதில் என்னையும் இணைத்திருந்தார்கள். ஒரு சமயம் ஒரு நண்பர் அதில் சைகஸ் (Cycas) ஆண் கூம்பின் படத்தைப் பகிர்ந்து, இது மேருமலையில் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரும் “சிவலிங்க மலர்”, அனைவரும் வழிபட்டு தொழுது முடிந்த வரை பலருக்கும் பகிரவும் என்னும் செய்தியைப் படத்தோடு (அவருக்கு எங்கிருந்தோ வந்ததை) பகிர்ந்திருந்தார்.

நான் சும்மா இருக்க முடியாமல், “அது நாமெல்லோருமே படித்த ஜிம்னோஸ்பெர்ம் (Gymnosperm) வகையைச் சார்ந்த, ஒரு கூம்புத் தாவரமான சைகஸின் மேல் கூம்பு (Male cone). நம் லேபில் கூட ஃபார்மலினில் ஊறிக்கொண்டு அது இன்னும் இருக்கிறது” என்று சொல்லி, அப்படிச் சிவலிங்கப் பூ என்று ஒன்றுமில்லை என்றும், உலகில் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பூக்களும் எங்குமில்லை என்றும் விளக்கினேன். தாவரங்கள் Annual, Biennial, Perennial, Monocarpous வகைகள்தாம் என்று விளக்கிய பின், குழுவில் மரண அமைதி.

பிற்பாடு அவர்கள் என்னிடம் பேசுவதை மெல்ல மெல்ல நிறுத்திவிட்டார்கள். நான் துறைத் தலைவரானதற்கு சம்பிரதாயமாக ஒரு விருந்து கேட்டார்கள். நான் மகிழ்ந்து அளிப்பதாகச் சொன்ன பின்னரும், அவர்கள் என்ன காரணத்தாலோ அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏதேதோ சாக்குபோக்கு சொல்லி அதை தவிர்த்தார்கள் நானும் விட்டுவிட்டேன்.அறிதலுக்கான வாயில்கள் அனைத்தையும் மூடிப் பூட்டி, சாவியை எங்கோ வீசி எறிபவர்களிடம் நான் என்னதான் சொல்வது?

இப்போது இன்ஸ்டாவில் யார் யாரோ தவறான தாவரவியல் தகவல்கள், அற்புதங்கள், மருந்துகள், சடங்குகளைச் சும்மா போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறார்கள்.

ஒரு தாத்தா பயங்கர ‘டாக்ஸிக்’ (Toxic). எருக்கின் பயன்களை எல்லாம் சொல்லிவிட்டு, அதன் காயை அரைத்துக் குடிக்கலாம் என்று ஒருநாள் சொன்னார். கமெண்ட்டில் “தாத்தா, ஏன் கொலைப்பழிக்கு ஆளாகிறீர்கள்? எருக்கை உள்மருந்தாக அப்படிப் பயன்படுத்தவே கூடாது” என்று பதிவிட்டேன். யாரும் கவனித்தார்களா என்று தெரியவில்லை.

ஜகஜ்ஜோதியாக ஒரு அம்மா பட்டுப்புடவை, பெரிய மூக்குத்தி, நகைகளுடன் வருவார்கள். வீட்டுக்கு முன்னால் எந்தச் செடியெல்லாம் வைக்கக்கூடாது, எது ‘நெகட்டிவ்’ ஆற்றல் அளித்து வாழ்வை நாசமாக்கும் என்று சொல்லுவார்கள். நான் பார்த்த அன்று வெற்றிலைக்கொடி வைத்தால் வீடு பாழாய்ப்போகும் என்றார்கள். என்னென்னவெல்லாம் சொல்கிறார்கள் பாருங்கள்! கம்பிகட்டும் கதையெல்லாம் .

இப்போது இன்ஸ்டாவில் அதிகமாக வருவது குடைமிளகாயின் ஆண்-பெண் வித்தியாசம் என்னும் ஒரு புளுகு. நான்கு மடிப்புகள் இருக்கும் மிளகாய் பெண்ணாம், அது இனிக்குமாம், அதைச் சாலட்களில் அப்படியே சாப்பிடலாமாம்; மூன்று மடிப்புகள் இருப்பது ஆணாம், அதைச் சமைத்துச் சாப்பிட வேண்டுமாம்.

குடைமிளகாய் என்னும் கனி, இருபால் மலரொன்று கருவுற்று உருவாவது. மலரில்தான் பாலினமெல்லாம் கனிகளில் அப்படி எதுவும் இல்லவே இல்லை. மேலும் கனியில் அதில் எத்தனை மடிப்புகள் இருந்தாலும் சுவையோ சத்தோ வேறுபடாது. நான்கு மடிப்புகள் இருக்கும் மிளகாய்களில் அதிக இடமிருப்பதால் அதிக விதைகள் இருக்கும், அவ்வளவுதான் வித்தியாசம். எப்படி இப்படியெல்லாம் யோசித்துப் புளுகுகிறார்கள்?

தாவரவியல் ரீதியாக, குடைமிளகாயின் இந்த மடிப்புகளின் (Lobes) எண்ணிக்கை மிளகாய்க்கு மிளகாய் மாறுபடுவதற்குப் பாலினம் காரணம் அல்ல; மலரின் சூலக இலைகளின் எண்ணிக்கைதான் (Carpels) காரணம்.

குடைமிளகாயைக் குறுக்காக வெட்டிப் பார்த்தால், உள்ளே விதைகள் ஒட்டியிருக்கும் அறைகளைக் (Chambers) பார்க்கலாம். பூவின் பெண் பாகமான சூலகத்தில் உள்ள “சூலக இலைகள்” (Carpels) எனப்படும் பகுதிகளே இந்த அறைகளாக மாறுகின்றன. ஒரு பூ உருவாகும்போதே அதன் சூலகத்தில் எத்தனை இலைகள் இணைகின்றனவோ, அத்தனை மடிப்புகள் கனியில் உருவாகும். பூவில் 3 Carpels இருந்தால் 3 மடிப்புகளும், 4 Carpels இருந்தால் 4 மடிப்புகளும் உருவாகும்.

மேலும், மடிப்புகளின் எண்ணிக்கை பெரும்பாலும் அந்த குறிப்பிட்ட மிளகாய் விதையின் வகையைப் பொறுத்தது. அமெரிக்கா போன்ற நாடுகளில் 4 மடிப்புகள் கொண்ட பெரிய, சதுர வடிவிலான குடைமிளகாய்களுக்கே அதிக வரவேற்பு உள்ளது. எனவே, பெரும்பாலான விவசாயிகள் 4 மடிப்புகள் தரும்படி மரபணு ரீதியாக உருவாக்கப்பட்ட (Bred) விதைகளையே அதிகம் பயிரிடுகின்றனர். சிறிய குடைமிளகாய் வகைகளில் இயற்கையிலேயே 2 அல்லது 3 மடிப்புகள் மட்டுமே இருக்கும்.

ஒரே செடியிலேயே 3 மடிப்புகள் கொண்ட மிளகாயும் காய்க்கலாம், 4 மடிப்புகள் கொண்ட மிளகாயும் காய்க்கலாம்! (இந்தச் செடிக்கு நம் புளுகு மூட்டைகள் ‘மாதொருபாகன் மிளகாய்’ என்று பெயர் வைத்தாலும் வைக்கக்கூடும்).

இதெல்லாம் தப்புத்தப்பாக நன்றாகச்செய்வார்கள் ஆனால் பப்பாளியின் ஆண் மரத்தை மலட்டுமரமென்று வெட்டிவீசுவார்கள் ஒரு பெண் அந்த மலட்டு? மலர்களை முட்டைப்பொரியல் போல் செய்து சாப்பிடும் ரெசிபியை இன்ஸ்டாவில் சொல்லிக்கொடுக்கிறார். அநியாயத்துக்கு அளவேயில்லை,

அப்பாடா! ஒரு இன்ஸ்டா புளுகுக்கே ஒரு பதிவு போட வேண்டும் என்றால், தினம் எத்தனை போடுவது? முடியலை!

கல்லெழும் விதை-என்னுரை

என் பால்யம் இப்போது  முழுமையாக நகரமயமாகி விட்டிருக்கும் நகரத்திலல்லாமல் சுற்றிலும் சிறு சிறு கிராமங்கள் சூழ்ந்திருந்த, இயற்கை எழில் நிறைந்த பசிய பொள்ளாச்சியிலும், எனது பூர்வீக கிராமமான வேட்டைக்காரன் புதூரிலும் கழிந்தது. அதிர்ஷ்ட வசமாக இணையமும் தொலைக்காட்சியும் கணினியும் அப்போது அறிமுகமாகாததால் இயற்கையோடு இணைந்த இளமைப்பருவம் வாய்த்திருந்தது.  மரத்தடி வகுப்புகளில் பள்ளிப்பாடங்கள் கற்றுக்கொள்ள முடி ந்தது. விடுமுறைகளில் வேப்பமுத்து சேகரிக்கவும், பருத்தி, மிளகாய் பறிக்கும் அத்தைகளுடன் இருக்கவும் கொடுத்து வைத்திருந்தது.

பள்ளிப்படிப்புக்காக தாராபுரம், பொள்ளாச்சி என அடிக்கடி ஊர் மாறினாலும் எங்கேயும் என்னுடன் இயற்கை இருந்துகொண்டே இருந்தது.  முருங்கைப்பிசினை  சுரண்டித் தின்பதும், கள்ளிப்பழங்கள் கனியும் வரை காத்திருந்து அதன் முட்களோடு வாயிலிட்டுச் சுவைத்ததும், வேர்க்கடலை எப்படி கண்ணுக்கு தெரிந்து மலர்ந்து நிலத்தடியில் காய்க்கிறது என்று வியப்பதும், சீனிப்புளியங்காயை மரமேறிப்பறிப்பதுமாக எந்நேரமும் செடிகொடி மரங்களுடன் இருந்த அந்த இளமைக்காலத்தில் என் அகத்திலும் இயற்கையின் தீண்டல் நிகழ்ந்திருந்தது. 

பள்ளி முடிந்து வீட்டுக்கு வராமல் எங்கேனும் காடுகளில் சுற்றித்திரிந்து கொண்டிருக்கும் என்னை தேடிக்கண்டுபிடிக்கவே வீட்டில் ஆள் வைத்திருந்தார்கள். 

எப்பொதும் பசுமை சூழவே இருந்தேன் சமையலறைத் தேவைகளுக்கான சிறிய வீட்டுத்தோட்டத்திலும், தென்னை நகரென்பதால் தோப்புகளிலும் வயல்களிலுமாகவே என் இளமைப்பருவம்  இருந்தது.

பள்ளிப்படிப்புக்கு பின்னர் இளங்கலையில் எனக்கு பிடித்த தாவரவியல்  படிப்பையே தேர்ந்தெடுத்தேன்.  நல்லாசிரியர்கள் வகுப்பில் கற்றுக்கொடுத்ததோடு  களத்தாவரவியலுக்கென்று (Field Botany) பல இடங்களுக்கு அழைத்துச் சென்று இயற்கை மீதான என் ஆர்வத்தை மேலும் ஊக்கப்படுத்தினார்கள்.  இளங்கலை இறுதியாண்டில்  தொட்டபெட்டா மலைச்சிகரத்திலிருந்து மலைச்சரிவெங்கும் நீலக்கம்பளம் போல் விரிந்திருந்த குறிஞ்சியை மாணவியாக பார்த்த பரவச அனுபவமும், தமிழக, கர்நாடக காடுகளுக்குள்ளும் அமைதிப்பள்ளத்தாக்கிலும் செலவழித்த நாட்களும் மேலும் மேலுமென என்னைத்  தாவரங்களை நோக்கிச் செல்ல வைத்தது. 

பிறகு முதுகலை தாவரவியலை நேரடியாக மேற்குமலைத் தொடர்ச்சியின் அடிவாரத்தில் இருந்த கோவைப் பல்கலைக்கழகத்தில் தங்கிக் கற்கும் வாய்ப்பும் கிடைத்தது. மருதமலைச்சரிவுகளில் தாவரவகைப்பாட்டியலையும், ஊட்டி வெலிங்டன் கோதுமை வயல்களில்  தாவர மரபியலையும் குருசடைத்தீவுகளில் கடற்பாசிகளையும் நேரடியாகக் கற்றுக்கொண்ட பொற்காலமது.  பல்கலைக்கழகத்தின் மாபெரும் நூலகத்தில் இலக்கியப்பரிச்சயமும் அப்போதுதான் உண்டானது.  தி.ஜானகிராமனையும், தியடோர் பாஸ்கரன் உள்ளிட்ட இயற்கை ஆர்வலர்களையும் அப்போதிலிருந்துதான் அறிந்துகொண்டேன்.

நாட்குறிப்புகளாக  தாவரங்களைக் குறித்து எனக்கே எனக்கென்று கொஞ்சமாக எழுதத்துவங்கி இருந்தேன். முதுகலை படிக்கையில்தான் எனக்கான ஆய்வுத்துறை தொல்குடித் தாவரவியல் என்று தெய்வாதீனமாக முடிவானது. மாணவர்களுக்கு முன்னால்  துறைகளின் பெயர் எழுதிச்சுருட்டப்பட்ட காகிதங்கள் இருக்கும் யார் எதை எடுக்கிறோமோ அதுவே அவர்கள் ஆய்வைத் தொடரவேண்டிய துறையாகும். என் கைகள்  Tribal pulse lab என எழுதியிருந்த அந்தக் காகிதச் சுருளை தேர்ந்தெடுத்த போது ஏதேனும் ஒரு அறியாத்தெய்வம் உடனிருந்திருக்கக்கூடும்.

அப்போது ஆய்வின் பொருட்டு சந்தித்த பழங்குடியினரின் தாவரங்கள் குறித்த தொல்லறிவு பிரமிப்பேற்படுத்தியது மட்டுமல்லாமல் ஆவணப்படுத்தப்பட்டிருக்காத அவ்வறிவு வேகமாக அழிந்து கொண்டிருக்கும் ஆபத்தும் புரிந்தது.

பின்னர் முனைவர் பட்ட ஆய்வை இந்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிதிநல்கையுடன் தொடர்ந்தேன். நிதிநல்கை அளிக்கப்பட்டிருந்ததால் 6 மாதங்களுக்கு ஒருமுறை புதுதில்லி சென்றதும் அப்படிச் சென்றிருந்த ஒரு சமயத்தில் நகரெங்கும் மலர்ந்து நறுமணத்தால் மூச்சுத்திணற வைத்த ஏழிலைப் பாலைமரங்களுக்கருகில் கழித்த நாட்களும் இப்போதும் ஆய்வுக்காலத்தைத் திரும்பிப்பார்கையில் மனமெங்கும் வாசனை வீசுபவை.

தாவர உலகின் அற்புதங்களைக் கவனித்துக் குறிப்பு எடுக்கத் தொடங்கிய காலமது.

பொள்ளாச்சியில் அப்போது சூழல் மாசை உருவாக்கிக் கொண்டிருந்த தென்னைநார்க்கழிவை மட்கச்செய்து இயற்கை உரமாக்கும்  முனைவர் பட்ட ஆய்வை மூன்றே வருடங்களில் முடித்து கைவசம் பல சர்வதேச சஞ்சிகைகளில் வெளியான ஆய்வுக்கட்டுரைகளும் இருந்ததால்  பொள்ளாச்சி கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக பணியில் இணைந்தேன். 

பணியில் இருந்த 2- வது வருடம் திருமணமாகி வேலையை விட்டுவிட்டு வளைகுடா நாடொன்றில் 6 வருட வாழ்வு. பொள்ளாச்சிப் பசுமையில்  இருந்தவளுக்கு அந்த பாலை அளித்த வெறுமையைச் சொல்லவே முடியாது.

பேரீச்சை மரங்களின் வரிசைக்கு இடையில் எப்போதாவது கண்ணுக்கு தெரியும் வேப்பமரங்கள் நெருங்கிய உறவினர்களை எதிர்பாராமல் சந்தித்ததுபோல கண்ணை நிறைத்துவிடும்.

இருமகன்கள் பிறந்து அவர்கள் பள்ளிக்குச் செல்லும் வயதில் இந்தியாவுக்குத் திரும்பி வால்பாறை மலையடிவார குக்கிராமொன்றில்  துண்டு  நிலம் வாங்கி  செடிகொடி மரங்களுக்கும் இடமிருக்கும் ஒரு தோட்ட வீட்டைக் கட்ட முற்பட்ட போது ஒரே ஒருவர் கூட என் முடிவை ஆதரிக்காததோடு மூர்க்கமாக எதிர்க்கவும் செய்தார்கள். உலகமே நகரமயமாக்கலின் பின் மண்டியிட்டுத் தொழுது பின் செல்கையில் நான் கிரமப்புறமொன்றிற்கு செல்வதை பெரும் முட்டாள்தனமென்று கண்டித்தார்கள்.

 வளரும் பருவத்தில் இருந்த மகன்களின் கராத்தே, அபாகஸ், கணிதம் போன்ற சிறப்பு வகுப்புகளுக்கு கிராமத்தில் வாய்ப்புகள் இல்லாமல் போவதையும், என் தாவரக்கிறுக்கினால் மகன்களின் எதிர்காலம்  கேள்விக்குரியதாகி விடுவதும் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் நான் மகன்கள் இயற்கையுடன் நெருங்கி வளரவேண்டும் என்பதில்  கவனாமகவும் பிடிவாதமாகவும் இருந்து அந்த வீட்டை கட்டி முடித்தேன். வீடு கட்டி முடிக்கப்பட்ட போது சுற்றிலும் பசுமை சூழத்துவங்கி இருந்தது.

மகன்களுடனேயே மரங்களும் வளர்ந்தன. சுற்றிலும் பசுமரங்கள் சூழ இருந்த நான்கே அறைகள் கொண்ட சிமிழ் போல் ஒரு சிறுவீடு. தொலைக்காட்சிப்பெட்டி இல்லததால் மகன்கள் தோட்டத்தில் விளையாடியும்,  செடிகொடிகளை பராமரித்தும்  மேலும் மேலுமென இயற்கையை அறிந்துகொண்டார்கள். 

அந்தியில் கிளிகளும் மயில்களும் வரும் தோட்டமிருக்கும், அதிகாலையில் குயில் கூவி கண் விழிக்கும் , தென்னையும், பலாவும் மாவும், புன்னையும், புங்கையுமாக நிறைந்திருக்கும் வீட்டில் மகன்கள் வளர்ந்ததில் நான் மகிழ்ந்திருந்தேன்.

கல்லூரியில் தாவரவியல் கற்பிப்பதோடு தொல்குடித்தாவரவியல் ஆய்வுகளும் செய்துகொண்டிருந்தேன். என் வழிகாட்டுதலில் ஆய்வு மாணவர்கள் கோவில் காடுகளைக் குறித்தும், வளர்ப்பு யானைகளுக்கு  பழங்குடியினப் பாகன்கள் அளிக்கும் தாவரமருந்துகள் மற்றும் மகப்பேறியலில் தொல்குடிகள் உபயோகப்படுத்தும் மூலிகைகள் குறித்தும் ஆய்வுகள் செய்தார்கள்

மியாவாக்கி அடர்வனம் அமைக்கவும், பெரு நிறுவனங்கள், வீடுகள் மற்றும் தங்கும்விடுதிகளில் தோட்டக்கலை (landscape gardening) அமைக்கவும் நான் பரிந்துரைகள் அளிக்கத் தொடங்கினேன். மரமோ செடியோ கொடியோ புதரோ கொடியோ அதன் வளரியல்பின்படி எப்படி வளரும் , எத்தனை இடைவெளி இருக்கலாம், என்ன நிறத்தில் மலர்கள் உருவாகும், எதற்கு எவ்வளவு சூரிய ஒளி தேவை, எங்கெங்கு என்ன வைக்கலாம், வைக்கக்கூடாது போன்ற பரிந்துரைகளை பலவருட தாவரவியல் கற்பித்தல் மற்றும் கற்றலில் இருந்து அறிந்து கொண்டிருந்தேன். பரிந்துரைகளோடு  தேவையான மரக்கன்றுகளும் நாற்றுகளும் எங்கு கிடைக்கும் என்பதையும்  தெரிவித்துவிடுகிறேன்.

வலைப்பூவில் மட்டும் எழுதிக்கொண்டிருந்த போது 2016-ல் தினமலரில் தொடர்ச்சியாக தாவரங்களைக் குறித்து எழுத வாய்ப்பு வந்தது. அப்போது எழுதத்துவங்கி, இன்றுவரை பல ஊடகங்களில் இணையப்பத்திரிகைகளில் தாவர உலகின் அற்புதங்களை, அவற்றைக் கவனித்து பாதுகாக்க வேண்டிய அவசியத்தை, ஒவ்வொரு தாவரத்துடனும் இணைந்திருக்கும்  சுவாரஸ்யமான கதைகளை  தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.

கட்டுரைகளின் தொகுப்பு முதல்பிரசுரமாக இந்திய அரசின் விஞ்ஞான் பிரசார் வெளியீடாக வந்தது. பின்னர் விஷ்ணுபுரம், அகநி, மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், NCBH  ஆகிய பதிப்பகங்களில் பிரசுரமானது.

ஒரு சில கட்டுரைகளை, நேர்காணல்களை மொழியாக்கமும் செய்துகொண்டிருக்கையில் தான் அரிஸோனா பல்கலைகழகத்தின் (Arizona State University, Arizona, United States.) இணையதளத்தில்  அறிவியல் கட்டுரைகளை தமிழாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அந்த இணையத்தளத்தில் வெளியான முதல் தமிழாக்கம் நான் செய்தது தான். 

ஜெர்மானியக் காட்டியலாளர் பீட்டரின் ‘’The hidden life of trees’’ என்னும்  பிரபல நூலின் தமிழாக்கம்  ’’மரங்களின் மறைவாழ்வு’’ என்னும் காலச்சுவடிலிருந்தும், மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தின் 3-வது நூலாக ’’நுண்ணுயிருலகு’’ என்னும் கட்டுரைத் தொகுப்பும் வெளியாகியிருக்கிறது.

லின்னேயஸ் , ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர், எட்மண்ட் ஆல்பஸ் போன்ற தாவர அறிவியலில் பெரும் சாதனைகளைச் செய்த ஆளுமைகளைக் குறித்து  ’’இரண்டாம் ஆதாம்’’ என்னும் நூலை எழுதி முடித்திருக்கிறேன். அதை அடுத்ததாக வெளியிடவேண்டும்.

தற்போது Plant arithmetic என்னும் தாவரக்கணக்கீட்டு அறிவு குறித்து ஆர்வம் கொண்டிருக்கிறேன்.  பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தோம், எங்களில் கணிதமேதைகள் இருக்கீறார்கள் என்றெல்லாம் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருக்கும் நமக்கு, பல லட்சம் வருடங்கள் முன்பு தோன்றிய தாவரங்களில்,  மலரிதழ்கள் ,இலைகள், கணுக்களின் நீள அகலம் எப்படி மிகச்சரியான அளவுகளில் அமைந்திருக்கிறது,  branching architecture-ன் துல்லியம், ராமனெஸ்கோ பச்சைப் பூக்கோசின் பின்ன வடிவமைப்பு (Fractal design), சூரியகாந்திப் பூவின் தங்கக்கோண அமைப்பு என ஒவ்வொன்றும் அளிக்கும் ஆச்சர்யம் அளவற்றது. அதைக்குறித்து ஒரு நூல் எழுதும் உத்தேசம் இருக்கிறது. இப்போது ஈடுபட்டிருக்கும் தாவரவியல் அகராதித் தயாரிப்பு ஏராளமான நேரத்தை எடுத்துக் கொள்கிறது அதை முடித்தபின்னர் இந்த நூலை எழுதவிருக்கிறேன்.

மரங்கள் சூழஇருக்கும் இந்த வீட்டில் வளர்ந்த மகன்கள் இருவரும் வீட்டுத் தோட்டத்தைப் போலவே வளர்ந்துவிட்டிருக்கிறார்கள். மூத்த மகன் சரண் ஐரோப்பாவில் முதுகலை  சைபர் பாதுகாப்பு முடித்து ஜெர்மனியில் அரசு வேலையில் இருக்கிறான். வளரும் நாடுகளுக்கு சைபர் பாதுகாப்பு தொழிநுட்பத்தை அளிக்கும் ஐரோப்பாவின் திட்டமொன்றில் ஆய்வாளராகப் பணிபுரிகிறான். இளையவன் தருண் டேராடூனில் காட்டியல் முடித்துவிட்டு இந்திய வனத்துறைத் தேர்வெழுதவிருக்கிறான்.  காட்டுயிர்ப் புகைப்பட நிபுணரான தருண் பாம்புகளைப் பிடிக்கும் சிறப்புப்பயிற்சிகளும் பெற்றிருப்பதால் அவன் அறிவுக்கும் கண்ணுக்கும் எட்டியவரையில் எந்தப்பாம்பையும் அடித்துக்கொல்ல விடுவதில்லை. எப்படியும் போராடி அவற்றைக் காப்பாற்றி காடுகளில் விட்டுவிடுகிறான். 

மேலும் பாம்புகளைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் பொறுப்புடன் காட்டுயிர்ப் புகைப்படமெடுப்பது  (Responsible wildlife Photography) குறித்தும் மேடைகளில்  உரையாற்றுகிறான். காட்டுயிர்கள் குறித்து ஆங்கிலக்கட்டுரைகளும் எழுதுகிறான்.  இயுற்கை எழில் சூழ வளர்ந்ததினால் நகர்ப்புற இளைஞர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை இழந்தாலும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இலக்கியப்பரிச்சயமும் மனிதநேயமும் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

தாவரங்களின் மகத்துவத்தை, தாவர உலகின் அற்புதங்களைச் சொல்லும் கட்டுரைகளின் இந்தத் தொகுப்பு தன்னறம் வெளியீடாக வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கட்டுரைகளின் வாசிப்புவழியே இலைகளையும் கொடிகளையும் மலர்களையும் கடந்து வருபவர்களுக்கு நிச்சயம் தாவரங்கள் மீதான அபிமானம் உண்டாகி இருக்கும்.  

இந்த கட்டுரைகளை மெய்ப்புப் பார்ப்பதிலிருந்து எல்லா உதவிகளையும் செய்த மீனாட்சி ரவீந்திரன் தம்பதிகளுக்கும் சிவராஜுக்கும், குக்கூ காட்டுப்பள்ளி அமைப்பினர் அனைவருக்கும் எனது தனித்த பிரியங்களும் அன்பும்.

இந்த நூலை  எங்கள் குடும்ப மருத்துவரும் இயற்கை ஆர்வலருமான திரு. வசந்த் ஆல்வா அவர்களுக்குச் சமர்பிப்பதில் மகிழ்கிறேன்.

பசுமை; மாறாததும், மாறியதும்!

அகராதிப்பணியின் நிறைவில் இருக்கிறேன். ஒரு சில பொருத்தமான எளிய சித்திரங்களையும் ஆங்காங்கே கட்டங்களிட்டு முக்கியத்தகவல்களையும், சில சொற்களுக்கிடையேயான வேறுபாடுகளையும் இணைத்துக்கொண்டிருக்கிறேன்.

தினமும் மிகப்புதிதான அறிதல்கள் கிடைக்கின்றன. அப்படி இன்றைய அறிதல் evergreen x ailophyllus என்பது குறித்தது.

பொதுவாகவே கூம்புக்காடுகளின் பூவாத்தாவரங்களான பைன் , ஃபிர், ஜூனிபர், குப்ரெஸெஸ் , யூ செடார் போன்றவற்றை இதுநாள் வரையிலும் evergreen என்றே குறிப்பிட்டிருக்கிறேன் ஆனால் மிகச்சரியாகச் சொல்லவேண்டுமென்றால் அவை எவர்க்ரீன் வகைமரங்கள் அல்ல.

Ever green என்பவை மாமரம் போல வருடம் முழுவதும் அதன் canopy எனப்படும் இலைப்பரப்பு முழுவதுமாக ’இல்லாமல் போகாமல்’, முற்றிலும் வெறுமையாகாமல் வருடா வருடம் பழைய முதிர்ந்த இலைகள் உதிர உதிர, புதுத்தளிர்கள் உருவாகிக்கொண்டெ இருக்கும் வகை மரங்கள்,

பைன் போன்றவைகளை ever green என்றல்லாமல் Aiophyllous என்றே குறிப்பிடவேண்டும். அவற்றின் ஊசி இலைகள் பல்லாண்டுகள் வாழும். இந்தச்சொல் மரத்தின் இலையுதிர்க்கும் இயல்பை அல்லாமல், நீண்ட காலம் உயிர்வாழும் இலையின் இயல்பைக்குறிப்பிடுவது.

உதாரணமாக பைன் மரத்தின் ஊசியிலை சுமார் 30 வருடங்கள் வரை அந்தக் கிளையில் ஒளிச்சேர்க்கையையும், நீர் கடத்துதலையும் ஆரோக்கியமாகச்செய்தபடி உயிருடன் இருக்கும். எனவே ஊசி இலைகளின் இந்த நீடித்திருக்கும் இயல்பு தாவரவியல் ரீதியாக அம்மரத்தை Aiophyllous என்கிறது.

இதோடு இன்னுமொரு திருத்தமும் இருக்கிறது. பண்டைய கிரேக்கச்சொல்லான Aio என்பதற்கு “always” அல்லது “ever.” என்று பொருள். உண்மையில் Aiophyllous என்னும் சொல்தான் சரியானது. எப்படியோ மொழியியல் பிழையினால் இது Ailophyllous ஆகியிருக்கக்கூடும். ஏனெனில் Ailo என்பது Allo என்னும் கிரேக்கச்சொல்லின் மருவூ. Allo என்பது மாற்று அல்லது மற்ற – other என்று பொருள் கொண்டது.

ஏறக்குறைய 35 ஆண்டுகளாக பசுமைமாறாதவை பைன் மரங்கள் என்றும் gymnosperms are evergreen என்றும் கொண்டிருந்த அறிதல் உடைந்து அத்தனுடன் கூடவே குறிப்பிட அதற்கென Ailophyllous என்னும் பிரத்யேகச் சொல் இருப்பதை அறிந்துகொண்டதில் பெரும் ஆச்சர்யம் உண்டாயிருக்கிறது.

எனவே கூம்புத்தாவரங்களை Evergreen என்று மட்டுமல்ல இலைகளின் நீடித்திருக்கும் இயலபைக்குறிப்பிட்டு Ailophyllous என்றும் குறிப்பிட வேண்டும்.

Evergreen vs. Ailophyllous: Botanical Leaf Cycles

Evergreen: This is a general ecological term for a plant that appears green throughout the year by replacing its leaves gradually. The canopy is never bare, but individual leaves may only live for a single year before being swapped for new ones.

Example: The Mango tree (Mangifera indica). It maintains a green canopy year-round, but it is constantly shedding old leaves and growing new ones in a continuous cycle.

Aiophyllous: This is a specific botanical term for a plant whose individual leaves are biologically long-lived, often persisting for several years or even decades. It refers to the “permanent” nature of the leaf itself rather than just the look of the tree.

Example: The Bristlecone Pine (Pinus longaeva). Not only is it evergreen, but its specific needles (leaves) are truly aiophyllous, as a single needle can remain functional and attached to the branch for 20 to 30 years.

Correct Term: Aiophyllous (ai + phyll + us) — “Always-leaved.”

Common Error: Ailophyllous — This would literally translate to “other-leaved” or “different-leaved” (which would actually be Allophyllous).

இன்னுமொன்றும் குறிப்பிடுகிறேன். phyllous -phyllus இந்த இரண்டு சொற்களும் எங்கெங்கு எப்படி குறிப்பிடப்படவேண்டுமென்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

phyllous if you are describing how a plant grows (the trait);\

“The aiophyllous trees of the Western Ghats remain vibrant throughout the year.”

-phyllus if you are writing the scientific name of the plant (the identity);

“The researcher identified the specimen as Rhododendron microphyllus.”

’’கற்றல் எல்லையற்றது. கற்கப்படுவது எதுவாயினும் எந்நோக்கம் கொண்டதாயினும் கல்வி என எழுந்து வந்து முன்னிற்பது முடிவிலியாகிய பிரம்மமே” – வெண்முரசு.

செர்ரி மலருக்குக் கொண்டாட்டம்!

JMC எனப்படும் ஜப்பான் வானிலைக் கூட்டுஸ்தாபனம் (Japan Meteorological Corporation) ஒவ்வொரு வருடமும் செர்ரி மலரும் காலம் மற்றும் இலையுதிர் கால வண்ணங்கள் போன்றவற்றை முன்னறிவிக்கிறது. இந்த முன்னறிவிப்புகள் ஜப்பானிய மொழியில் மட்டுமல்லாது, தமிழ் போன்ற பிற மொழிகளிலும் வெளியாகிறது.

இந்த வருடத்திற்கான செர்ரி மலர்கள் மலரத் துவங்குகிற, மரம் முழுவதும் மலர்ந்திருக்கும் காலங்களை ஜப்பானின் முக்கிய நகரங்களில் கணித்து, 23.1.26 அன்று செர்ரி மலரும் முன்னறிவிப்புப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வருட வெப்பம் சற்று உயர்ந்திருப்பதால் வழக்கத்தைக் காட்டிலும் முன்னதாகவே செர்ரி மலர்க் கொண்டாட்டங்கள் துவங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

செர்ரி மலர்களின் peak flowering காலம் 7-லிருந்து 10-நாட்கள் வரைதான் இருக்குமென்பதால் உலகெங்கிலும் இருந்து ஜப்பானுக்கு செர்ரி மலர்க் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வரும் சுற்றுலாப் பயணிகள் பயணத்தைத் திட்டமிட வசதியாகத்தான் இந்த முன்னறிப்பு வெளியிடப்படுகிறது.

பொதுவாக மார்ச், ஏப்ரலில் நிகழும் செர்ரி கொண்டாட்டத்துக்குச் சற்று முன்னதாக, பிப்ரவரியில் Kawazu-zakura என்றழைக்கப்படும் அடர் சிவப்பு செர்ரி மலர்கள் மட்டும் டோக்கியோவின் தென் பகுதிகளில் மலர்ந்திருக்கும்.

உலகெங்கிலும் அனைத்து நாகரீகங்களிலும் வசந்த கால மலர்க் கொண்டாட்டங்கள் வெறும் காட்சி இன்பத்திற்காக மட்டுமன்றி, நல்ல அறுவடை, செழுமை மற்றும் இயற்கையின் மறுபிறப்பை உறுதிப்படுத்தும் முக்கியச் சடங்குகளாகவே பண்டைய காலத்திலிருந்து நடைபெறுகின்றன.

பண்டைய தமிழ் நாள்காட்டிகளில் சித்திரை மற்றும் வைகாசி மாதங்கள் ‘இளவேனில்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தன, பல்வேறு கொண்டாட்டங்களும் அக்காலத்தில் நிகழ்ந்தன. சங்கப் பாடல்கள் வேங்கை மலர்வதைத் திருமணத்திற்கு உகந்த நேரமாகக் குறிப்பிட்டன. ஈழத்தில் பாலைமரங்கள் மலர்வதைக்காண்பது ஒரு பண்பாட்டு நிகழ்வாகவே இருக்கிறது.

மல்லிகை ஏராளமாக மலர்கையில் நடக்கும் மதுரையின் பிரபல சித்திரைத் திருவிழா, வாழ்க்கையின் சுவைகளை உணர்த்தும் தமிழ்/தெலுங்குப் புத்தாண்டின் வேப்பம்பூ பச்சடி மற்றும் நிலத்தின் வெப்பத்தைத் தணிக்க அம்மனுக்குக் கோடைக்காலங்களில் செய்யப்படும் பூச்சொரிதல் விழா ஆகியவை பண்டைய மலர்த்திருவிழாக்களின் நீட்சியாகத்தான் இன்றும் தொடர்கின்றன.

பண்டைய ரோமானிய மற்றும் ஐரோப்பியச் சடங்குகள்

ரோமானியர்கள் பயிர்களைக் காக்க மலர் தேவதைகளை வழிபட்டனர் :

புளோராலியா (Floralia) என்னும் விழா அவர்களின் மலர்த் தேவதையான ‘புளோரா’வுக்காக ஏப்ரல் இறுதியில் நடத்தப்பட்டது. மக்கள் பல வண்ண ஆடைகளை அணிந்து, மலர்களைச் சூடிக்கொண்டு செழுமையின் அடையாளமாக முயல்களை வீதிகளில் ஓடவிட்டும், அறுவடை நன்கு நடைபெற பீன்ஸ்களைத் தெருவில் வீசி எறிந்தும் கொண்டாடினார்கள்.

ரோசாலியா (Rosalia) என்னும் மற்றுமோர் கொண்டாட்டம் ரோஜாக்கள் ஏராளமாக மலர்கையில் முன்னோர்களை நினைவுகூர நடத்தப்பட்ட வழிபாட்டுடன் இணைந்த கொண்டாட்டமாக அங்கு இருந்தது.

இவற்றோடு பண்டைய கிரேக்கத்தின் மது மற்றும் மலர் விழாவான ஆன்தெஸ்டீரியா, கெல்டிக் மக்களின் நெருப்பு மற்றும் நெருப்பு வண்ண மஞ்சள் மலர் வழிபாடான பெல்டேன் மற்றும் தார்கேலியா ஆகியவையும் முக்கியமானவை.

ட்யூலிப் மலர்த் திருவிழா

இன்று நெதர்லாந்துடன் இணைத்துப் பேசப்படும் ட்யூலிப் மலர்களின் பூர்வீகம் மத்திய ஆசியா மற்றும் துருக்கி… துருக்கிய சுல்தான்கள் தங்கள் தலைப்பாகையில் (Turban) அணிந்ததால், பாரசீகச் சொல்லான ‘டல்பாண்ட்’ என்பது மருவி ‘ட்யூலிப்’ ஆனது.

1634–1637- ல் நெதர்லாந்தில் ஒரு ட்யூலிப் கிழங்கின் விலை ஒரு மாளிகையின் விலைக்கு நிகராக உயர்ந்தது. இதுவே வரலாற்றின் முதல் பொருளாதாரக் குமிழியாகக் கருதப்படும் ட்யூலிப் மேனியா. 1949-லிருந்து நெதர்லாந்தின் பிரம்மாண்ட மலர் பூங்காவான கியூகென்ஹாஃப்-ல் ஒவ்வொரு ஆண்டும் நவீன ட்யூலிப் திருவிழா நடைபெறுகிறது.

1953-லிருந்து கனடாவில் இரண்டாம் உலகப் போரில் உதவியதற்காக நெதர்லாந்து கனடாவிற்கு வழங்கிய நன்றிப் பரிசான ஒரு மில்லியன் ட்யூலிப் மலர்களுக்கான நன்றி தெரிவிக்கும் ட்யூலிப் விழா கோலாகலமாக நடைபெறுகிறது.

இந்தியாவின் காஷ்மீரில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய ட்யூலிப் தோட்டத்திலும் வருடா வருடம் பிரமாண்டமாக ட்யூலிப் விழா கொண்டாடப்படுகிறது.

பண்டைய காலத்தில் ஒரு சிறு பனிப்பொழிவு கூட விளைச்சலைப் பாதிக்கும் என்பதால், மலர்களைப் பாதுகாப்பது வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதாகக் கருதப்பட்டது. இன்று அவை சுற்றுலா மற்றும் நட்புறவின் அடையாளமாக மாறினாலும், அவற்றின் அடிப்படை நோக்கம் இயற்கையின் செழுமையைக் கொண்டாடுவதுதான்.

ஜப்பானில் வசந்த காலத்தில் செர்ரி மலர்கள் (Cherry Blossoms) பூத்துக் குலுங்குவதைக் கொண்டாடும் நிகழ்வு ‘ஹனாமி’ (Hanami) என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானிய மொழியில் ‘ஹனா’ என்றால் மலர், ‘மி’ என்றால் பார்ப்பது என்று பொருள். இது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, ஜப்பானிய கலாச்சாரத்தின் ஆன்மாவோடு கலந்த ஒரு பாரம்பரியம்.

சகுரா கொண்டாட்டத்தின் வேர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை: இம்மரங்கள் வருடா வருடம் பூத்துக்குலுங்கும் காலம் ஹனாமி எனப்படும் பூக்காணுதல் விழாவாக ஜப்பானில் 3ஆம் நூற்றாண்டிலிருந்தே பெரும் கொண்டாட்டமாக நிகழ்ந்து வருகின்றது. இறந்த மூதாதையர்களின் ஆன்மா செர்ரி மலரின் வண்ணங்களில் வாழ்கிறது என்று ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். மேலும் நல்ல அறுவடைக்கான கடவுள்களை வயலுக்கு வரவேற்கும் நிகழ்வாகவும் இந்த ஹனாமியை ஜப்பானியர்கள் கருதுகிறார்கள். மிக அழகாகப் பூத்துக்குலுங்கிப் பின்னர் சிலநாட்களிலேயே வாடி உதிரும் இவை மனித வாழ்வின் அநித்யத்தைச் சுட்டுவதாகவும் கருதப்படுகின்றது.

கி.பி. 710–794 இல் ஜப்பானியர்கள் சீனக் கலாச்சாரத்தின் தாக்கத்தால் ப்ளம் மரங்களின் ‘உமே’ (Ume) மலர்கள் மலருகையில் அந்தக் காலத்தைச் சிறு விழாவாகக் கொண்டாடினர்.

ஹீயன் காலத்தில்தான் (794–1185) சகுரா மலர்கள் முக்கியத்துவம் பெற்றன. கி.பி. 812-ல் பேரரசர் சாகா கியோட்டோவில் உள்ள அரச மாளிகையில் முதன்முதலில் சகுரா மலர் பார்க்கும் விருந்தை நடத்தினார். அதுவே இன்றைய ஹனாமி திருவிழாவின் தொடக்கமாக அமைந்தது.

பண்டைய ஜப்பானிய விவசாயிகள், செர்ரி மரங்களில் ‘காமி’ (Kami) எனப்படும் தெய்வங்கள் வசிப்பதாக நம்பினர். மலர்கள் பூப்பதை வைத்து அந்த ஆண்டின் அறுவடை எப்படி இருக்கும் என்று அவர்கள் கணித்தனர்.

சகுரா மலர்கள் மிகக் குறுகிய காலமே (சுமார் ஒரு வாரம்) பூத்திருக்கும். இது மனித வாழ்க்கையின் நிலையற்ற தன்மையைக் குறிப்பதாக சாமுராய்கள் கருதினர். “வாழும் போது அழகாக வாழ்ந்து, வீழும் போது கௌரவமாக வீழ வேண்டும்” என்ற தத்துவத்தை இம்மலர்கள் அவர்களுக்கு உணர்த்துவதாக நம்பப்பட்டதால் ஹனமி கொண்டாட்டம் ஜப்பானின் பிரிக்கமுடியாத அங்கமானது.

இன்று சகுரா திருவிழா ஜப்பான் முழுவதும் ஒரு தேசியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது :

செர்ரி மரங்கள் ப்ருனஸ் என்னும் பேரினத்தைச் சேர்ந்தவை. காட்டுச்செர்ரியான–Prunus avium என்பதுதான் செர்ரிப் பழங்களுக்காக வளர்க்கப்படும் மரம். ஜப்பானியர்கள் செர்ரியின் காட்டு மூதாதைகளிடமிருந்து பல நூறு கலப்பின செர்ரி வகைகளை அவற்றின் அழகிய மலர்களின் பொருட்டு உருவாக்கினர். (ப்ளம் மரங்களான Prunus mume செர்ரி மரங்களிலிருந்து வேறுபட்டது, இரண்டும் ஒன்றல்ல).

செர்ரி வகைகளில் மலர்கள் தூய வெண்மையிலும், இளஞ்சிவப்பிலும், இளஞ்சிவப்பும் வெண்மையும் கலந்தும் காணப்படும். ஐந்து இதழ்கள் ஒற்றையடுக்கிலும் பத்திலிருந்து இருபது இதழ்கள் அடுக்குகளிலும் வகைக்கேற்றபடி காணப்படும்.

ஜப்பானியர்கள் இதை சகுரா என்றழைக்கிறார்கள் ஜப்பானில் உள்ள பலவகையான செர்ரி மரங்களும் மொத்தமாக (sato zakura) சட்டோ சகுரா என்றும், ஒற்றையடுக்கு மலர்கள் யோஷினோ Yoshino (Prunus x yeodensis) என்றும் பல அடுக்குகள் உடையவை யேசகுரா (yaezakura) என்றும் அழைக்கப்படுகின்றன. இரட்டை அடுக்கு மலர்களுடைய மரங்களை 1862-ல் ஜப்பானிலிருந்து வட அமெரிக்காவிற்கு G.R. Hall என்பவர் கொண்டு வந்த பின்னர் அங்கும் இவை வளர்கின்றன.

Prunus serrulata எனப்படும் மலர்களுக்கான செர்ரி சைனா, ஜப்பான், இந்தியா மற்றும் கொரியாவைத் தாயகமாகக் கொண்டது. இலைகளை உதிர்க்கும் இச்சிறுமரம் 26–39 அடி வரை வளரும். இம்மரத்தின் மரப்பட்டைகள் மிக மிருதுவாகவும் மூச்சுத்துவாரங்கள் (lenticels) நிறைந்தும் காணப்படும். இலைகள் ஓரங்களில் பற்கள் போன்ற அமைப்புடன் எதிரடுக்கில் நீள்முட்டை வடிவிலிருக்கும்.

மலர்கள் ரெசீம் மஞ்சரிகளில் உருவாகும். சதைப்பற்றான பழங்கள் 8-10 மி.மீ அளவில் இருக்கும். ஜப்பான் முழுவதும் செர்ரி மரங்கள் பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள் அரண்மனைகள், கோயில்கள், சரணாலயங்கள் போன்ற பல இடங்களில் வளர்க்கப்படுகின்றன.

சகுரா மலர்கள் என்றாலே இளஞ்சிவப்பு நிறம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், ஜப்பானில் 200-க்கும் மேற்பட்ட சகுரா வகைகள் உள்ளன. சில பூக்கள் வெண்மையாகவும், சில அடர் சிவப்பாகவும், ‘கியோய்கோ’ (Gyoiko) என்ற வகை சகுரா பச்சை நிறத்திலும் பூக்கும்.

ஜப்பானில் பள்ளி மற்றும் அலுவலகங்களின் ‘புதிய ஆண்டு’ ஏப்ரல் மாதத்தில்தான் தொடங்குகிறது. சகுரா மலர்கள் பூக்கும் அதே நேரத்தில் இந்தப் புதிய தொடக்கமும் அமைவதால், இது மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஒரு நம்பிக்கையான சூழலை உருவாக்குகிறது. பகலில் மலர்களைப் பார்ப்பது ஒரு ரகம் என்றால், இரவில் பார்ப்பது தனி அழகு. பூங்காக்களில் ஆயிரக்கணக்கான காகித விளக்குகள் (Paper Lanterns) ஏற்றப்படும். நிலவொளியிலும், செயற்கை விளக்கு ஒளியிலும் சகுரா பூக்கள் மின்னுவதை ’யோசகுரா’ (Yozakura – இரவு அழகு) என்று அழைக்கிறார்கள்.

ஜப்பானில் ஒரு பிரபலமான பழமொழி உண்டு: “ஹனா யோரி டாங்கோ”. இதன் பொருள், “மலர்களை ரசிப்பதை விட, அங்கு விற்கப்படும் இனிப்புப் பலகாரங்களை (Dango) உண்பதிலேயே மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்” என்பதாகும். கொண்டாட்டங்களில் உணவிற்கு இருக்கும் முக்கியத்துவத்தை இது குறிப்பிடுகிறது.

ஹனாமி சிறப்பு உணவுகள்

  ஹனாமி டாங்கோ (Hanami Dango): இது இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் இருக்கும் இனிப்பு உருண்டைகள். இவை வசந்த காலம், பனிக்காலம் மற்றும் வரவிருக்கும் கோடை காலத்தைக் குறிக்கின்றன.

  சகுரா மோச்சி (Sakura Mochi): இளஞ்சிவப்பு நிற அரிசி மாவினால் செய்யப்பட்டு, உள்ளே இனிப்பு பீன்ஸ் பேஸ்ட் வைக்கப்பட்டிருக்கும். இது உப்பில் நனைக்கப்பட்ட சகுரா இலையினால் சுற்றப்பட்டிருக்கும்.

  சகுராவின் இளஞ்சிவப்பு, பனிப்பொழிவின் வெள்ளை மற்றும் ஒரு நறுமணத்தாவரத்தின் பச்சைநிறம் என மூவண்ணத்தில் இருக்கும் அரிசிச் சோற்று உருண்டைகளும் இதே பெயரில் இருக்கின்றன.

  ஜப்பானியர்கள் ‘சாகே’ (Sake) எனப்படும் அரிசி மதுவில் செர்ரி மலர்களை மிதக்கவிட்டு அருந்திக் கொண்டே மலர்களை ரசிப்பார்கள்.

  சகுரா மலர்களின் நறுமணத்துடன் தேநீர், சோயா பால் மற்றும் கோலா.

  Hanami bento – ஹனாமி பெண்டோ எனப்படும் வறுத்த மீன் துண்டு, பொறித்த காய்கறிகள், போன்றவை இருக்கும் மதிய உணவுப்பெட்டி.

  Finger food எனப்படும் சகுரா கலந்த உணவுகள், நறுக்கப்பட்ட பழத்துண்டுகள் இறால், சுஷி மீன் மற்றும் சமைத்த காய்கறிகள்.

  மஞ்சள் கலந்த குடிநீர்.

சகுரா இதழ்கள் காற்றில் விழுவதைப் பார்ப்பதற்கு “இளஞ்சிவப்பு பனிப்பொழிவு” (Sakura Fubuki) போல இருக்கும். ஜப்பானியக் கவிதைகளில் இது வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கும் ஒரு அழகான குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக ஜப்பான் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்ட சகுராவின் பூக்கும் காலத்தில், நாட்டில் 7 முதல் 10 நாட்கள் வரை விடுமுறை விடப்படுகிறது.

ஹனமியின் போது பூத்துக்குலுங்கும் செர்ரி மரங்களுக்குக் கீழ் ஜப்பானியர்கள் விருந்துபசாரம் செய்வார்கள். ஹனமி கொண்டாட்டத்தின் போது பிரபலமான பூங்காக்களில் இடம் பிடிப்பது மிகவும் கடினம். அலுவலகத்தின் இளநிலை ஊழியர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் அதிகாலையிலேயே சென்று ‘ப்ளூ ஷீட்’ எனப்படும் நீல நிற விரிப்பை விரித்து இடம் பிடித்துக் காத்திருப்பார்கள்.

ஹனாமி பெண்டோ எனப்படும் பிரத்யேகமான உணவுப் பெட்டிகள் தயார் செய்யப்படும். இதில் வண்ணமயமான சுஷி, காய்கறிகள் மற்றும் மீன் உணவுகள் இருக்கும். இம்மரங்களினடியில் மக்கள் உறவு மற்றும் நட்புக்களுடன் குழுமி உணவுண்டும் கவிதைகள் வாசித்தும் ஓய்வெடுத்தும் மகிழ்ந்து பொழுதைக் கழிப்பார்கள்.

பல இடங்களில் இணைவரிசையில் எதிரெதிராக நடப்பட்டு வளர்ந்திருக்கும் இம்மரங்களின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு கால்களின் கீழ் இதழ்களாலான ஒரு மென்மையான கம்பளம் விரித்த பூக்கும் நடைபாதையை உருவாக்கியிருக்கும். வசந்த காலத்தில், பசுமை போர்த்திய மலைப் பகுதியில் இலைகளற்ற மரத்தில், சகுரா மலர்கள் பூத்துக் குலுங்குவது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. இந்த அற்புதமான மலர்களைக் காண உலகின் பிற பகுதிகளிலிருந்தும் ஜப்பானுக்கு லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்தோடு வருகை தருகின்றனர்.

இங்கு 100 யென் நாணயம் செர்ரி மலர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. பல நாடன் பாடல்களும், பாப் பாடல்களும் சகுராவிற்கென்றே பிரத்யேகமாக ஜப்பானில் உள்ளன. சகுரா பூக்கும் காலத்தில் கிமானோ என்னும் தேசிய உடையிலிருந்து நோட்டுப்புத்தகங்கள், குடைகள், அலங்காரப் பொருட்கள், கைப்பைகள் என பலவற்றிலும் இம்மலர்களின் சித்திரம் வரையப்பட்டிருக்கும். டாட்டூ எனப்படும் பச்சைகுத்துதலிலும் ஜப்பான் முழுக்க டிராகன் உருவத்துக்கு அடுத்தபடியாக இம்மலர்களின் வடிவமே உள்ளது. பல பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு சகுரா என்று பெயரிடுகிறார்கள்.

நதிகள் மற்றும் ஏரிக்கரைகளில் உள்ள சகுரா மரங்களை ரசிக்க மக்கள் படகு சவாரி செய்வார்கள். உதாரணமாக, டோக்கியோவின் சிடோரிகாபுச்சி (Chidorigafuchi) போன்ற இடங்களில் படகில் சென்று கொண்டே மலர்களைப் பார்ப்பது மிகவும் பிரபலம்.

ஜப்பானியர்கள் கொண்டாட்டத்தின் போதும் சில விதிகளைத் தவறாமல் பின்பற்றுவார்கள் :

  தங்களின் குப்பைகளைத் தாங்களே வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் அல்லது ஒதுக்கப்பட்ட இடங்களில் போட வேண்டும்.

  மரக்கிளைகளை ஒடிக்கவோ அல்லது பூக்களைப் பறிக்கவோ கூடாது. மரங்களின் வேர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவற்றின் மீது மிதிக்காமல் அமர வேண்டும். ஆகியவை மிக அடிப்படையான விதிகள்.

ஜப்பான் மட்டுமல்லாது இந்தியா, சைனா, வாஷிங்டன், கொரியா, ஜெர்மனி, பிரேசில், ஆம்ஸ்டர்டாம், பாரீஸ் உள்ளிட்ட உலகின் பலபகுதிகளில் வெவ்வேறு காலங்களில் செர்ரி மலர்க் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் மேகாலயாவில் Prunus cerasoides வகைச் செர்ரிமரங்களின் மலர்தல் நவம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

சகுரா மலரும் ஹனமி கொண்டாட்டம் முடிந்த பிறகு, ஜப்பானின் நிலப்பரப்பையே இளஞ்சிவப்பு நிறமாக மாற்றும் மற்றொரு பிரமாண்டமான மலர்க் கொண்டாட்டமான ஷிபாசகுரா நடைபெறுகிறது. ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத் தொடக்கத்தில் ஜப்பான் சென்றால், இந்த ஷிபாசகுரா திருவிழாவைக் கண்டு மகிழலாம்.


ஷிபாசகுரா விழாவில் கொண்டாடப்படுவது ‘மாஸ் பிளாக்ஸ்’ (Moss Phlox) என அழைக்கப்படும் Phlox subulata என்னும் தரையை ஒட்டி அதிகபட்சமாக 10 செ.மீ உயரம் மட்டுமே வளரும், ஒரு கம்பளம் போலப் படர்ந்து வளரும் ஒரு தரை படர்த் தாவரத்தின் இளஞ்சிவப்பு மலரைத்தான். இந்தத் தாவரம் ஜப்பானைப் பூர்வீகமாகக் கொண்டதல்ல; இது வட அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டது.

ஜப்பானிய மொழியில் ‘ஷிபா’ என்றால் புல்வெளி என்று பொருள். இந்த மலர்களும் மரங்களில் பூக்கும் சகுரா மலர்களைப் போலவே இருப்பதால், இது ‘புல்வெளி சகுரா’ என்று அழைக்கப்படுகிறது.

இந்தத் திருவிழாக்களில் சுமார் 8-வகை பிளாக்ஸ் மலர்கள் கொண்டாடப்படுகின்றன. உதாரணமாக:

  McDaniel’s Cushion: அடர் இளஞ்சிவப்பு நிறம்.
  Mont-blanc: தூய வெள்ளை நிறம்.
  Autumn Rose: மென்மையான ரோஜா நிறம்.
  Oakington Blue-eye: நீல நிறச் சாயல் கொண்ட மலர்.

இது ஜப்பானின் இயல் தாவரமில்லையென்றாலும் இந்த மலர்தலும் ஜப்பானின் வசந்த கால அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஹனமி கொண்டாட்டங்களின் போதே வயோலா மலர்களும் ஜப்பானியப் பூங்காக்களில் நிறைந்து மலர்ந்து கண்ணைக் கவரும்.

பண்டைய ரோமின் ஆரவாரமான ‘புளோராலியா’ முதல் ஜப்பானின் அமைதியான ‘ஹனாமி’ மற்றும் நவீன கால ‘ட்யூலிப்’ திருவிழாக்கள் வரை, மனிதகுலம் மலர்களை வெறும் அழகிற்காக மட்டும் கொண்டாடவில்லை; அவை வாழ்வின் நம்பிக்கையையும், மறுபிறப்பையும் குறிக்கும் குறியீடுகளாகவும் இருக்கின்றன. காலப்போக்கில் இந்தச் சடங்குகளின் தீவிரம் குறைந்து அதன் வடிவங்கள் மாறிவிட்டிருந்தாலும், இயற்கையின் அழகிய மாற்றங்களை ரசிப்பதும், நிலத்தின் வளமைக்கு நன்றி செலுத்துவதும் இன்றும் மாறாமல் உள்ளன.

2026-ல் நிகழவிருக்கும் சகுரா மற்றும் ஷிபாசகுரா போன்ற திருவிழாக்கள், மனிதர்களுக்கும் இயற்கைக்குமான ஆழமான பிணைப்பை மீண்டும் புதுப்பிக்கும் ஒரு பாலமாக அமைகின்றன. மலர்ந்து உதிரும் ஒவ்வொரு இதழும் நமக்குச் சொல்லும் பாடம் ஒன்றுதான்—வாழ்க்கை நிலையற்றது, எனவே மலரும் ஒவ்வொரு கணத்தையும் முழுமையாகக் கொண்டாடுவோம்!

« Older posts Newer posts »

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑