லோகமாதேவியின் பதிவுகள்

கோரைப்புல்

 Sedge, nut grass, coco grass என்றெல்லாம் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற Cyperus rotundus என்னும் தாவர அறிவியல் பெயர் கொண்ட கோரைப்புல், 92 நாடுகளில் பரவி 52 வகையான உணவு மற்றும் உழவுப்பயிர்களுக்கு இடையூறு செய்யும் களைகளில் மிக முக்கியமானதாகும். ’one of the world’s worst weeds’. என்று குறிப்பிடப்படும்  மிகசுவாரஸ்யமான  களைச்செடியான இது சைப்பரசியே (Cyperaceae) குடும்பதைச் சேர்ந்தது.

புல்லினத்தைச்சேர்ந்த இக்கோரை தாவரவியலாளர்களால் ஹவாய் தீவுகளில் முதன் முறையாக 1850ல் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

பல்லாண்டுத்தாவரமான இதன் தாயகம் ஆப்பிரிக்கா, விரைவிலேயே இது தென் ஆசியா, தென் மற்றும் மத்திய ஐரோப்பா, பிரான்ஸ், சைனா மற்றும் இந்தியாவுக்குப் பரவிப்பெருகியது. தரைமட்டத்திலிருந்தே தோன்றியுள்ள தட்டையான அடர் பச்சை நிறத்தில் மூன்று வரிசைகளாக அடிப்பக்கம் இலையுறையுடன் கூடிய நீண்ட இலைகளையுடையது.   இளம்பச்சை நிறத் தண்டுகள்  முக்கோண வடிவிலிருக்கும்

 இவை பெருங்கோரை சிறுகோரை என்று இருவகைப்படும். சுமார் 150 செமீ வரைகூட பெருங்கோரை வகைகள் வளரும். சல்லிவேர்கள் மட்டும் இருக்கும் கிழங்குகளற்ற  இந்த பெருங்கோரை வகையைத்தான் வயல்களில் வளர்த்திப்பின் அதை பாயாகப் பின்னுவார்கள்

பெருங்கோரை

 மணற்பாங்கான இடம், வயல் மற்றும் வளமான நிலங்களிலும்  பயிர்களுக்கு இடையே களையாகவும் கோரை வளர்ந்திருக்கும்கிழங்குகள் வெளிப்பாகம் கறுப்பாகவும், உட்புறம் வெள்ளையாகவும் இருக்கும். இது மென் கசப்புத்தன்மையுடையது. ஆனாலும் விரும்பத்தக்க நறுமணத்துடனும் இருக்கும். இக்கோரையின் சல்லி வேர்கள் பக்கவாட்டில் பரவி அதிகமாக உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும், விதை மூலமும் உற்பத்தியாகும்.

கோரையின் கிழங்குகள் மண்ணிற்கடியிலும் பக்கவாட்டிலும் எல்லா திசைகளிலுமாக வளர்ந்து ஒரு கிழங்குத்துண்டிலிருந்து சுமார் 600 செடிகள் வரை வளர்ந்து ஒரு குழுவாக அடர்ந்து காணப்படுவதால் Colonial  grass என்றே விவரிக்கப்படுகின்றன. கிழங்குகள் சதைப்பற்றுடன் தொடர் சங்கிலிகளை போன்ற வடிவங்களில்  இருக்கும்.  கிழங்குகளின் dormancy period அதிகமென்பதால் மண்ணிற்கடியிலேயே ஆழப் புதைந்திருந்தாலும்   7 வருடங்களுக்குப் பிறகும் முளைக்கும் திறனுள்ளவை. நல்ல வளமான மண்ணில் ஒரே வாரத்தில் 20 முதல் 30 லட்சம் கிழங்குகள் வளர்ந்து விடும். கோரை 20 முதல் 90 சதமானம் பயிர்களின் விளைச்சலை குறைத்துவிடும். கோரையை முற்றிலுமாக அழிக்க முடியாது அவ்வபோது கட்டுக்குள் கொண்டுவருவது மட்டுமே பெரும் முயற்சிகளுக்கு பின்னர் சாத்தியம்.

 2000 வருடங்களாகவே இக்களை உலகெங்கும் மிக வேகமாக பரவியிருக்கிறது ஆப்பிரிக்காவிலும் சீனாவிலும் உணவு மருந்து மற்றும் நறுமணத்தைலங்கள் தயாரிக்க இக்கோரை  பல நூற்றாண்டுகளாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன கசக்கும் சுவையுடைய கிழங்குகள் பஞ்ச காலதில் உணவாகப் பயன்பட்டிருக்கின்றன. கோரைக்கிழங்குகளை பன்றிகள் விரும்பித் தின்னும். பண்டைய இந்தியாவில் கோரையைக் கட்டுப்படுத்த பன்றிகளை வளர்த்திருக்கிறார்கள்.ஒரு பன்றி 5 கிலா வரையிலும் கிழங்குகளை அகழ்ந்தெடுத்து விடுவதால் கோரைகளை இவற்ற்றின் மூலம் பெரிதும் கட்டுக்குள் கொண்டு வரமுடிந்திருக்கின்றது

கோரையைப்பற்றிய முதல்குறிப்புக்கள் சீன மருத்துவ நூலில் முதன்முதலில் கிருஸ்துவுக்கு  500வருடங்களுக்கு முன்பு குறிப்பிடப்பட்டிருக்கிறது . 

மருத்துவப் பயனுடைய கோரைக்கிழங்குகள் பழந்தமிழ் இலக்கியங்களில் முத்தக்காசு எனக்குறிக்கப்பட்டுள்ளன. இதன் இலக்கியபெயர் எருவை, சேற்று நிலத்தில் சண்டையிட்டுக்கொள்ளும் எருமைகளின் காலில் மிதிபட்டு கோரைகள் மடியும் என்கிறது பெரும்பாணாற்றூப்படை

(கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை,விளைந்த செறுவில் தோன்றும் நாடன்,)

. கோரைப்புல்லில் பாவைகளை செய்யும் வழக்கமும் முன்பு இருந்திருப்பதை குறிப்பிடும் ஐங்குறுநூறு இதனை பைஞ்சாய் என்கிறது

பைஞ்சாய் பாவை ஈன்றனென் யானேஐங் 155/5 (நான் பஞ்சாய்க் கோரைப் பாவையாகிய பிள்ளையை ஏற்கனவே பெற்றுவிட்டேன்)

தலைவன்பள்ளத்து நீரில் வளரும் பைஞ்சாய்க் கோரைத் தண்டின் அடிப்பகுதியை ஒத்த ஒளிரும் பற்கள் பொருந்திய பவளம் போன்ற வாயினைக்கொண்டவன் எனிறாள் தலைவி   அகநானூற்றில்,

அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன

நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்அகம் 62/1,2

கோரை புல் மூலம், பொதுமக்கள் உறங்க பயன்படுத்தும் பாய்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. கோரைப் பாய் உடலின் சூட்டை குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தருவதால் நல்ல உறக்கம் கிடைக்கும். மேலும், கான்கீரிட் அமைக்கவும், திரைச்சீலை அமைக்கவும் கோரை புல் பயன்படுகிறது

 ஒருமுறை சாகுபடி செய்து விட்டால் , குறைந்த பட்சம் 20 ஆண்டு வரை, ஆறு மாதத்துக்கு, ஒருமுறை அறுவடை செய்யலாம். அதிகளவில் தண்ணீர், உரம் மற்றும் பராமரிப்பு செலவில்லாத கோரைப்புல், கரூர் அமராவதி மற்றும் காவிரியாற்று பகுதிகளில் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எல்லா வகையான காலநிலையிலும் கோரையை வளர்க்கலாம்.

சாயவனேஸ்வரர்

 நாகப்பட்டினம் மாவட்டம் திருச்சாய்க்காட்டில் கோச்செங்கட்சோழன் கட்டிய குயிலினும் இனிமொழியம்மை உடனுறை சாயாவனேஸ்வரர் திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது கோரையாகும். இது ஒரு புல் வகையெனினும் தலமரமாகவே குறிக்கப்படுகின்றது.

தாவரவியலில் களை ,என்பது a right plant in a wring place . இத்தனை செழித்து வளரும், மருத்துவப்பயன்களுள்ள இக்கோரையை கிழங்குகளின் மருத்துவ பயன்களுக்காக தனியே சாகுபடி செய்கிறார்கள் ஆயுர்வேதத்தில் பல முக்கியமான மருந்துகள் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவத்தில் முஸ்தக் அல்லது முத்தா என்றழைக்கப்படும் இக்கிழங்கில் எண்ணிலடங்கா வேதிச்சேர்மானங்கள் உள்ளதால் பல  வகையான நோய்களுக்கு இதிலிருந்து  மருந்துகள் பெறப்படுகின்றன

கோரைக்கிழங்கிலும் தாவரத்திலுமுள்ள முக்கிய வேதிப்பொருட்கள்:

Cyperene terpene, flavonoids,sitosterol, ascorbic acid , cyperene. Alpha-cyperone, Alpha-rotunol, Beta-cyperone, Beta-pinene, Beta-rotunol, Beta-selinene, Calcium, Camphene, Copaene, Cyperene, Cyperenone, Cyperol, Cyperolone Cyperotundone Dcopadiene, D-epoxyguaiene, D-fructose, D-glucose, Flavonoids, Gamma-cymene, Isocyperol, Isokobusone, Kobusone, Limonene, Linoleic-acid, Linolenic-acid, Magnesium, Manganese, C. rotunduskone, Myristic-acid, Oleanolic-acid, Oleanolic-acid-3-oneohesperidoside, Oleic-acid, P-cymol, Patchoulenone, Pectin, Polyphenols, Rotundene, Rotundenol, Rotundone, Selinatriene, Sitosterol, Stearic-acid, Sugeonol, Sugetriol.

 களையென கருதப்படும் ஆனால் இத்தனை வேதிப்பொருட்கள் கொண்டிருக்கும் கோரை என்னும் மூலிகை  தோல்நோய்களை குணப்படுத்துகிறது. வியர்வை நாற்றத்தை போக்குகிறது. தோலுக்கு மென்மை, பொலிவு கொடுக்கிறது. மூட்டுவலி, தசைவலி, வயிற்றுக் கோளாறு குணமாக உதவுகிறது. சீன, இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் இது  அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑