லோகமாதேவியின் பதிவுகள்

Month: April 2019

To-let

செழியன்,  ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘தாரை தப்பட்டை’, ‘பரதேசி’, ‘ஜோக்கர்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் ’To let’’  திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, திரைக்கதை எழுதி ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். 21 பிப்ரவரி 2019,ல் திரைக்கு வந்த இதுவே இவர் முதன்முதலாக இயக்கியுள்ள படம். பிரேமா செழியன் இப்படத்தை தயாரித்துள்ளார். 25 நாட்களில் படமாக்கி முடிக்கப்பட்ட, பாடல்கள் இல்லாத ஒரு அழகிய தமிழ்திரைப்படம் இது

மிக எளிய திரைக்கதை. திரைப்படத்துறையில் கதாசிரியனாகும் பெரும் கனவுடன் இருக்கும், தற்போது கிடைக்கும் சின்ன சின்ன திரைத்துறை சார்ந்த வேலைகளை செய்துவரும் இளங்கோ என்னும்  இளைஞன்,  வேற்று மதத்தை சேர்ந்த காதல் மனைவியுடனும் இளம் மகனுடனும் சென்னையில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார். IT துறையில்  பணிபுரிபவர்கள் அதிக வாடகை கொடுக்க முடியும் என்பதால் அவர்களுக்கு வீட்டின் உரிமையாளர் வீட்டை வடகைக்கு கொடுக்க முடிவு செய்து இவர்களை ஒரு குறிப்பிட்ட, வெகு சமீபத்திலிருக்கும் ஒரு தேதிக்குள் காலி செய்ய சொல்வதும் வீடுதேடி இவர்கள் குடும்பமாக அலைவதும், வீடு கிடைப்பது  சார்ந்த துயரங்களுமே கதை

மொத்தம் நான்கே முக்கிய கதாபாத்திரங்கள். செழியனின் உதவியாளரும் கவிஞர் விக்ரமாதித்யனின் மகனுமான  சந்தோஷ் இளங்கோவாகவும் , அவர் மனைவி அமுதாவாக நடனக்கலைஞர் ஷீலாவும்,  குட்டிப்பையன் தருணாக சித்தார்த்தும், வீட்டின் உரிமையாளராக நாடகக்கலைஞர் ஆதிரா பாண்டிலட்சுமியும் நடித்திருக்கின்றனர்.பத்திரிகையாளர் அருள் எழிலன், கவிஞர் ரவி சுப்ரமணியன், முனைவர் மருது மோகன், எழுத்தாளர் எம்.கே.மணி ஆகியோரும்  நடிப்பில் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். அவர்கள் குடியிருக்கும் மிகச்சாதாரண 3 அறைகள் இருக்கும் வீடுதான் கதைக்களம். மிகச்சிறிய பேசுபொருள் ஆனால் மிக அழகாக திரைமொழியை கையாண்டு இதை ஒரு அற்புதமான திரைப்படமாக செழியன் உருவாக்கியிருக்கிறார்.

 இப்படத்தில் பிண்ணனி இசையும் இல்லை. இயல்பான வாகனப்போக்குவரத்து ஒலிகளும் தொலைக்காட்சி, வானொலிச் சத்தங்களும், மகன் ஏதேதொ மிளற்றியவாறே விளையாடும் ஓசைகளும்  அமைதியுமே படத்தை நடத்திக்கொண்டு போகின்றது. தபஸ் நாயக்கின் ஒலிப்பதிவுக்கு மன்மார்ந்த பாராட்டுக்கள்.

குடியிருக்கும் அவ்வீட்டின் கதவு திறக்கையில் துவங்கி அதே கதவை மூடுகையில் முடிகின்றது திரைக்கதை.  சந்தோஷ் மற்றும் அமுதா தமிழ்திரையுலகிற்கு  நம்பிக்கையூட்டும் புது வரவு. ’’திட்டமாட்டியே’’ என்று தயக்கமாக துவங்கி உரையாடுவதும், அவமானத்தை கணவனிடம் கொட்டித்தீர்ப்பதுவும் வீடு வீடாக கனவுகளுடன் சென்று பார்ப்பதுமாய்  ஷீலா அசத்துகிறார். மூக்கும் முழியும் நீளப்பின்னலுமாய் லட்சணமாய் பாத்திரத்துக்கு பாந்தமாய் பொருந்தி இருக்கிறார்..

சந்தோஷ் அபாரமான இயல்பான நடிப்பு. அமுதாவிடம் கடுமையாக பேசிக்கொண்டிருக்கும் ஆதிரா ‘’உங்ககிட்டெ பேசலீங்க.‘’ என்று  இவரிடம் சொல்கையில் ஆத்திரத்துடன் ’’நானும் உங்ககிட்டெ பேசலீங்க!’’ என்று கத்துவதொன்றையெ சொல்லலாம் அவரின் அருமையான நடிப்பிற்கு உதாரணமாக. பல காட்சிகள் மிக அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கின்றன. காதல் வாழ்வு, சின்ன சின்ன ரொமான்ஸ், மகனின் படிப்பு எதிர்காலம் என கவலைப்படுவது, அவ்வபோது பூசலிட்டுக்கொள்வது என அவர்களின் வாழ்வை மிக அண்மையிலென நாமும் அவ்வீட்டிலிருந்தே காண்கிறோம், ஒவ்வொரு முறை வீடு கிடைப்பதற்காக அலைபேசி ஒலிக்க காத்திருக்கையில் ’’கடவுளே, வீடு கிடைச்சுடனும்’’ என்று நாமும் பிரார்த்திக்க துவங்கிவிடுவோம். அந்த சுட்டிப்பையன் சுவற்றில் வரையும் படங்களும் அப்படியே மனதில் ஒட்டிக்கொள்கின்றது. அழகிய வீடொன்றை வர்ணங்களில் வரைந்துகொண்டிருக்கும் அச்சிறுவன் பிற்பாடு அப்பா அம்மாவுடன் பள்ளியிலிருந்து நேராக வீடு வீடாக தேடிக்கொண்டிருந்ததில் பழகிப்போய் அழகிய வீடு ஒன்றை வரைந்து அதில் to-let என்றும் எழுதுகிறான். நகர வாழ்வின் போதாமைகளும் பொருளியல் சிக்கல்களும், பெரியவர்களுடையதை மட்டுமல்லாது, வளரும் ஒரு அறியாக்குழந்தையின் கனவுகளையும்   சிதைத்து விடுவதை இயல்பாக  காட்டும் காட்சியது.

அவ்வபோது அவ்வீட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் ஒரு குருவி ஒருநாள் மின்விசிறியில் அடிபட்டு செத்துப்போவதைப்போல அவர்களின் எளிய வாழ்விலான கனவுகளனைத்தும் சொந்தமாக வீடும் பொருத்தமான வாடகைவீடும் இல்லையென்னும் காரணத்தினால் அடிபட்டுப்போகின்றது.

ஜன்னல் வழியே எதிர்வீட்டின் சிறுமியுடன் விளையாடிக்கொண்டிருப்பது, சின்ன தொட்டிகளில் செடிகளை வளர்ப்பது, விருப்பம் போல சுவற்றில் வரைந்து மகிழ்வது என்று எல்லாவற்றிலிருந்தும் வீடு மாற்றும் நிர்பந்தம் காரணமாக அச்சிறுவன் விலகிக்கொண்டெ வருவது வலிதருகின்றது. ’’அப்பா! இந்த tv  நம்மளுதா, இந்த வண்டி நம்மளுதா என்றெல்லாம் கேட்டு ஆமென்று பதில் சொல்லும் தகப்பனிடம் ’’அப்புறம் ஏம்ப்பா இந்த வீடு மட்டும் நம்பளுதில்லை? ’’ என்று கேட்கையில் அதற்கான பதில் அந்த அப்பாவிடமும் நம்மிடமும் இல்லையென்பதை வருத்தத்துடன் உணருகிறோம்

அந்த வீட்டு எஜமனியம்மாவான ஆதிராவின் கண்டிப்பும் கடுமையுமான நடிப்பு மிகப்பிரமாதம்.  அதட்டலும் அலட்சியமுமாய் அசத்துகிறார். அனைவருமே புதுமுக நடிகர்கள் என்பதை நம்பவே முடியாது, பெரிய அவமதிப்புக்களை சாதாரணமாக அவர்  நிகழ்த்துகையில் கூனிக்குறுகியபடி அமுதாவுடனேயே நாமும் படியிறங்கி வந்து அறைக்கதவை தாளிட்டுக்கொண்டு அழுவோம்.

பணம் தொடர்பான ஒரு சின்ன மனஸ்தாபத்தின் பின்னர் கிரைண்டரில் மாவரைத்துக்கொண்டிருக்கும் அமுதாவிடம் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு பாக்கட்டிலிருந்தும் இளங்கோ நோட்டுக்களை எடுத்துக்கொடுப்பதும், வீட்டை காலி செய்கையில் ஒட்டடை படிந்திருக்கும் மனைவியின் தலையிலிருந்து மென்மையாக அவற்றை  அப்புறப்படுத்துவதுமாய், நெருக்கடியிலும் அடுத்த கனம் என்னவென்று முன்முடிவு செய்ய இயலா வேதனையிலும் கூட அவர்களுக்கிடையேயான  காதல் இழையோடும் காட்சிகள் காட்டப்பட்டிருக்கும் விதம்அழகோ அழகு

எளிய தளத்திலியங்கும் மனிதர்களின் பிரச்சனைகளை கண் முன்னே கொண்டுவந்து காட்டி நல்லதொரு திரைப்படத்தைக் கொடுத்திருக்கும் செழியனுக்கு வாழ்த்துக்கள். பெருநகரமென்னும் இயந்திரத்தில் சின்னசின்னதான அந்தரங்க வாழ்வின் கனவுகள் எந்த மிச்சமுமின்றி நசுக்கப்படுவதை சொல்லும் படமிது. இந்தப் படத்துக்கு  2017 கொல்கத்தா திரைப்பட விழாவில், சிறந்த இந்தியப் படத்துக்கான விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இது 65வது தேசிய திரைப்படவிழாவில் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதினையும், கோவா வில் நடைபெற்ற 49வது சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் பரிந்துரை விருதினையும் பெற்றது. ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது.

 தென்னிந்திய சினிமாவின் மரபான பாடல், நடனம், நகைச்சுவை, ஆபாச வசனங்கள் என்னும் எவ்விதக்கேளிக்கைகளும் இல்லாத இத்திரைப்படம் பல ஊர்களில் திரையிடப்படவேயில்லை என்பது வருத்ததிற்குரியது. திரைமொழியை ஒரு உன்னதக்கலை என்று  உணர்ந்தவர்கள் அவசியம் தேடிப் பார்க்க வேண்டிய ஒன்று TOLETtolet

மேடைப்பேச்சு

இன்று காலை முதல்வரிடமிருந்து சிறப்பு பேச்சாளரின் உரையொன்று இருப்பதாக தகவல் வந்தது, இன்று மாணவர்களுக்கு கல்லூரியில் கடைசி நாள் எனவே முக்கியமாக ஏதேனும் பேசும்படியான ஒருவரே வந்திருப்பாரென்றெண்ணினேன். பெயரை தெரிந்துகொண்டதும் ஆச்சர்யமாயிருந்தது. அவரை பத்தி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கேன். வாரமலரில் எல்லாம் மொக்கை கவிதைகளா எழுதுவாரு சரி எழுத்துதான் அப்படி பேச்சு பேச்சாயிருக்குமோ என்னமோ,  என்னதான் பேசறாருன்னு பார்ப்போம்னு போனேன்.

நல்ல கூட்டம் அரங்கில்  MOC யில் அவரைபத்தி ஆஹா ஓஹொன்னு அறிமுகப்படுத்த துவங்கினப்போ அவர் கையை அமர்த்தலா காட்டி நிறுத்தும்படியும் சுருக்கமா சொல்லலைன்னா  அவரின் சாதனைகளின் பட்டியல் தான் பேசவே நேரமின்றி  நீண்டுகொண்டே போயிரும்னு சொன்னாரு ஆச்சர்யமா இருந்துது எனக்கு சபையில் இப்படி ஒருத்தர்  அப்பட்டமான தற்புகழ்ச்சியுடன் நடந்துக்க முடியுங்கறதை பார்த்துட்டு

நல்ல கருப்பாக்கப்பட்ட தலைமுடி, உன்னத உடை, அடுக்கடுக்கான ஒப்பனையுடன் (குழாயடியில் உட்கார்த்திவச்சு தேச்சு கழுவிறலாமான்னு ஆத்திரமா இருந்துது)  மேடைக்கு வந்தார், பல பேச்சாளர்கள் போடியத்திற்கு வந்ததும்  அவங்க உயரத்துக்கேற்றபடி மைக்கை அட்ஜஸ்ட் பண்ணுவாங்க பார்த்திருப்போம். இவர் கொஞ்சம் கூடுதலா  இரண்டு கைகளாலும் போடியத்தையே தூக்கி நகர்த்தி அட்ஜஸ்ட் பண்ணிகிட்டாரு அதாவது மேடையெல்லாம் தனக்கு தண்ணி பட்ட பாடுன்னு சொல்லறாரு போல . ஆரம்பமே எனக்கு பீதியாக இருந்துது

ஒரு மேடையில் இளைஞர்களுக்கு என்னவெல்லாம் சொல்லவேண்டியதில்லையோ அதையெல்லாம்  உற்சாகமா சொல்லிட்டு இருந்தாரு. பல கல்லூரிகளில் 4 லட்சம் மாணவர்களுக்கு மேல் இவர் சந்தித்து உரையாடியிருக்காருன்னும் இன்னிக்கு நாங்கள்ளாம் அதிர்ஷ்டம் செய்திருப்பதால் அவரை சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கெல்லாம் கிடச்சிருக்குனு வேற அவரே சொல்லிக்கிட்டாரு. இத்தனை வெட்கம் கெட்டவரை சமீபத்தில் நான் சந்தித்திருக்கவில்லை

கிராமப்புறத்தைச் சேர்ந்த வெளியுலகம் அவ்வளவாக தெரிந்துகொள்ளும் வாய்ப்புக்கள் குறைந்த மாணவர்களிடையே, கல்லூரியின் கடைசி நாள் அன்று எப்படி அழகா அருமையா பேசலாம். இவரானா துவங்கினதுமே ’’உப்பில்லாம கூட சாப்பிட்டுரலாம் ஆனா நட்பில்லாம வாழமுடியாது’’ன்னாரு. ’’கண்ணீரை துடைப்பவனல்ல நண்பன் கண்ணிரே வராமல் பார்த்துக்கொள்பவனே நண்பன் ’’ இப்படி ஒரே நட்பு மழையா இருந்துது

ஒரே கைதட்டல், அதில்  குஷியாகிட்டாரு மீண்டும் நட்பு குறித்து தான் எழுதின மொண்ணைக்கவிதைகளா எடுத்து விட்டுகிட்டே இருந்தாரு

இடையிடையே வாட்ஸ் அப்பில் வந்த சில  நான்காம் தர ஜோக்குகள் வேறு

’ அவர் பேச வந்த தலைப்பு ’’தன்னம்பிக்கையே வெற்றி ‘’

தான் எழுதிய அரியர்ஸ் இல்லா மனிதன் அரை மனிதன் என்னும் பழஞ்சொல்லை அத்தனை மகிழ்ச்சியுடன் சொல்லிக்கிட்டாரு

பசங்களும் ஓயாம கைதட்டிகிட்டே இருக்காங்க

தானும் அரியர் வாங்கினவன்தானென்றும் பின்னர் தமிழின் மேல் உளள காதலினால்  அதை படித்துப்படித்து இப்படி உயரத்துக்கு வந்துட்டதாவும் சொன்னார். அவர் மேடையிலிருப்பதை உயரம்னு வேன்னா சொல்லிடலாம் மத்தபடி  அவர் உயரத்துக்கு வந்ததுன்னு சொல்லறதெல்லாம் மிகு புனைவு.  எல்லா பேரசிரியர்களும் சிரிச்சுட்டு கையடிச்சுகிட்டு இருக்காங்க எனக்கானா வயத்தை பிசையுது

என் தீயூழ் நான் முன்னாடி வேற உட்கார்ந்துட்டேன். கொடுமையிலும் கூடுதல் கொடுமையா அப்பப்போ என்னையும் பார்த்து ’’என்ன மிஸ் நான் சொல்லறது சரிதானே’’ங்கறார். சும்மாவே என்னை மிஸ் னு சொன்னா எனக்கு பத்திட்டு வரும் இதில் இவர் வேறெ

அப்பொவெல்லாம் என்னால அமைதியா புன்னகைக்க முடிஞ்சதுங்கறதைத்தான் நான் இன்னமும் வியந்து நினச்சுக்கறேன். எனக்கும் முதிர்ச்சி வந்துருச்சு . முதிர்ச்சி மட்டுமல்ல ஏறக்குறைய இன்னிக்கு அந்த முன்வரிசையில் எந்த உணர்வையும் வெளிக்காட்டிக்காம விண்  விண் னுன்னு தெறிக்கற தலைவேதனையை தாங்கிகிட்டு அவ்வப்பொது அவர் என்னை பார்த்து எதாச்சும் சொல்ல நான் அழகா மென்மையா புன்னகைச்சுட்டும் இருந்தேன். ஒரு மாதிரி ஊழ்க நிலை அது

என் வாழ்வில் இந்த 2 மணி நேரமே என்னால் தாங்க முடியாது என்னும் எல்லையையும் தாண்டி நான் தாங்கிட்டும் சகிச்சுட்டும் இருந்த காலம்

உயரமென்றால் எவெரெஸ்ட் நீ உயரனும்னா நெவர் ரெஸ்ட் இல்லைனா யு வில் ரஸ்ட் அண்ட் பிகம்  ஏ  டஸ்ட் என்னும் பழமொழியை

இறக்கை இருக்கும் வரையிலும் பட்டாம்பூச்சிக்கு பாஸ்போர்ட் தேவையில்லை என்னும் தான் எழுதிய பிரபல கவிதையை

சாகும் போதும் கைதட்டல் வாங்கிட்டு சாகும் கொசுவைப்போல் இருக்கனும்னு அறிவுரைகளை

தான் எழுதியிருக்கும் சிகரங்களை தொட்டுவிடு என்னும் (தலைப்பையே மாற்றி மாற்றி வைத்து வெளியிட்டிருக்கும் ) 67 புத்தகங்களை

அவற்றை வாங்கி மாணவர்கள் படிச்சு உலக வாழ்வில் உய்ய வேண்டியதன் அவசியத்தை

கலாமுடன் தனக்கிருந்த நெருக்கத்தை ,சில பல அவருக்கு மனப்படமாகி இருந்த திருக்குறள்களை

இப்படி தாளிச்சுக்கொட்டிட்டு இருந்தார்

பேசும்போது கைகளை பலமாக  ஆட்டுக்கல்லில் மாவாட்டி தோண்டி எடுப்பது போலவும், பெரிய கிரைண்டரின் குளவிக்கல்லை தூக்க முடியாமல் தூக்குவது போலவும் கரகரவென்று எதையோ  கையில்  வைத்து சுற்றுவது போலவும், கம்பிகளில் சிக்கிக்கொண்ட மாஞ்சா கயிற்றை விடுவித்து பட்டத்தை எடுப்பது போலவும் செய்கைகளும் அல்லது சேஷ்டைகளும் செய்துகொண்டிருந்தார்

குரலையும் அவ்வபொது MR ராதா போல திடீரென்று உயர்த்தி உச்சஸ்தாயியிலும், பின்னர் கிசுகிசுப்பாக காதலனிடமோ காதலியிடமோ ரகசியமாய் பேசும் குழைவான கொஞ்சும் குரலிலும் திடீரென்று முழங்கியும் மாடுலேஷனில் வித்தியாசம் வேறு காட்டிக்கொண்டிருந்தார்

 இவையனைத்துக்கும் மேல் அவ்வபோது முஷ்டியை மடக்கி போடியத்தை படார் படாரென பலமாக் குத்திக்கொண்டும் ஆவேசமாகவும் பேசிக்கொண்டிருந்த போதெல்லாம் எனக்கு வயிற்றில் உப்பு புளி காரம் எல்லாம் சேர்த்து கலக்கினாற்போலிருந்தது

இறுதியாக என்பதையே பலமுறை சொல்லிக்கொண்டிருந்தாரே ஒழிய அந்த இறுதியே  பேச்சில் வரக்காணோம். இந்த லட்சணத்தில் மேஜர் சுந்தரராஜனை போல தமிழில் சொன்னதையே ஆங்கிலத்திலும் அடுத்தடுத்து சொல்லி ரெண்டிற்கும் கைதட்டல் வேறு வாங்கிக்கொண்டிருத்னார்

’’செத்த மீனைத்தான் ஆற்றுத்தண்ணீர் இழுத்துக்கொண்டு போகும் உயிருள்ள மீன்தான் நீரை எதிர்த்துச்செல்லும் எனவே’’  எனற போது அவர் முடிச்சுட்டாரென்றெ நான் உளம் மகிழ்ந்தேன்

ஆனால் அதான் இல்லை ’’எனவே, எப்படி எதிர்த்து வாழ்வதென்று’’ கற்பிக்க துவங்கிவிட்டார்

பின்னர் போன ஜென்மத்து குரு சிஷ்ய ஜோக்குகளை எடுத்து விட்டார்

கேள்விகளை வேறு மாணவர்களிடம் கேட்டுக்கொண்டுஇருந்தார் இடைக்கிடைக்கு

’’ஒரு வரிதான் வாசிக்க முடியும்னா ஆத்திசூடி  படி

இரண்டென்றால் குறள்  படி

மூன்றென்றால் விவேகானந்தரின் பொன்மொழிகள்   படி

நான்கு வரிகளே வாசிக்க முடியும்னா நாலடியார்  படி

எதுவுமே வாசிக்க முடியலைனா செத்து மடி’’

இதை அவரெழுதியதாகச்சொன்னதில் எனக்கு விரோதமெல்லாமில்லை என்ன என்னவோ யார் யாரோவெல்லாம் எழுதறாங்களே இப்போல்லாம் ஆனா இதை அவர் எழுதின கவிதைங்கறாரே? அதைத்தான் தாங்கவே முடியாம கண்ணில் ஜலம் வச்சுக்கிட்டேன். செய் அல்லது செத்து மடிங்கறதை மகாத்மாவுக்கு அடுத்து தானே சொல்லியிருப்பதாகவும் உபரித்தகவலை சொன்னார்

இதை மட்டும் 3 முறை திரும்ப திரும்ப சொல்லிவிட்டு நான்காவது முறையாக  முதல் பாதி இவரும் மறுபாதி மாணவர்களுமா சொல்லச்சொல்லி fill in the blanks  விளையாட்டு வேற நடத்தினார்

நான் கைதட்டவேயில்லை எனபதை அவவ்போது ஓரக்கண்ணால் கவனித்தார் எனினும் என் முகத்திலிருந்த மந்தகாச புன்னகையில் அவரை நான் மதிக்கிறேன் அல்லது ரசிக்கிறேன் என்றே அவர் யூகித்துக்கொண்டிருந்தார்

இந்தம்மா நம்ம பேச்சை ரொம்ப கவனமா ஆழ்ந்து கவனிக்கறாங்க என்றும் புளகாங்கிதமடைந்திருக்கக்கூடும்

ஒருவழியாக அவரின் பலத்த கைதட்டல்களுக்கிடையேயான பேச்சு முடிந்ததும் நான் முதல் ஆளாக வெளியெ வந்து லேபில் இருந்த முதலுதவி பெட்டியிலிருந்து பஞ்சு எடுத்து காதில் வழிந்துகொண்டிருந்த ரத்தத்தை துடைத்து சுத்தம் செய்துகொண்டேன்

21 அன்று நடக்கும் ஜெ வின் கட்டணக்கூட்டதிற்கு எப்படியும் இடம் கிடைக்கனும் என்றும் கிடைத்தால் இன்றைய பேச்சாளரின் பேச்சை  ரசித்துக்கொண்டிருந்த பேராசிரியர்களில் யாருக்காவது மொட்டை போடுவதாகவும் குலசாமிக்கு வேண்டிக்கொண்டேன்

ஜெ வின் பேச்சைக்கேட்பதுதன் இன்னிக்கு நடந்த அநீதிக்கான  ஆகச்சிறந்த பிழையீடு அல்லது பிராயசித்தமாக இருக்கும்

அலுவலக்தில் பேச்சாளருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கவரினுள்ளே எத்தனை  சன்மானமிருந்ததுன்னு கேட்கலமான்னு நினச்சுட்டு உடன் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். தெரிஞ்சுகிட்டேன்னா ரொம்ப காலத்துக்கு  தூக்கம் வராது எனக்கு

ஜெ சொல்லுவாரில்லியா தீயூழ்னு அடிக்கடி. இன்னிக்கு அந்த தீயுழை மிக அருகில் முன்வரிசையில் அமர்ந்து பார்த்துகிட்டு இருந்தேன்.

பி கு

 இந்த பேச்சாளரின், எழுத்தாளரின் நூல்களில் பன்முகத்தன்மைன்னு ஒரு முனைவர் பட்ட ஆய்வும் நடந்திருக்காம்

கலி முத்திடுச்சுன்னு கேட்டுருக்கோம் இப்போதான் நிதர்சனமா தெரியுது இதெல்லாம் எழுதினப்புறம் தான் நெஞ்சில் என்னவோ கல்லாட்டம் ஒண்ணு அடைச்சுகிட்டு இருந்தது அதை இறக்கி வச்சாப்பல இருக்கு

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑