லோகமாதேவியின் பதிவுகள்

Month: June 2019

Aladdin -அலாவுதீன் , சில திருத்தங்களுடன்

உலகின் பல்வேறு இடங்களில் அனைத்து மொழிகளிலும், பல்வேறு மாற்றங்களுடன் சொல்லப்பட்டு வரும் மத்திய கிழக்கு நாடுகளின் நாட்டுப்புற பெருங்கதையான ‘’ஆயிரத்து ஒரு அரேபிய இரவுகள்’  கதைகளில்  ஒன்றுதான்,  புகழ்பெற்ற  ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’. இந்தக்கதைதான் சமீபத்தில் லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் திரைப்படமாக ‘அலாவுதீன்’என்ற பெயரில் உலகம் முழுவதும் மே 24ம் தேதி வெளியானது.

1992ஆம் ஆண்டு வெளியான அலாவுதீன்  Animation படத்திற்குப்பிறகு  டிஸ்னி நிறுவனம் மீண்டும் அற்புத விளக்கைத் தேய்த்திருக்கிற்து. ஆணழகன் வில் ஸ்மித்  கவர்ச்சியும் மர்மமும் அசாராணமும் கலந்த, நீல நிறத்தில் , இடுப்புக்கு கீழே புகைப்படலமாக வரும் பிரம்மாண்டமான பூதமாக மிகச்சரியாக பொருந்தியிருக்கிறார். சிரிக்கும் கண்களும்,  மயக்கும் குரலும், கிண்டலும், கேலியும், காதலுமாக அவரின் பல்லாயிரக்கணக்கான ரசிகைகளை மீண்டும் கவர்ந்திருக்கிறார்.

படம் வரலாற்று வெற்றியைப் பெற்றிருக்கிறது; குழந்தைகளுடன் பெரியவர்களும் கொண்டாடுகிறார்கள். பல்லாயிரம் வருடங்களாக சின்னஞ்சிறு விளக்கினுள் அடைபட்டிருக்கும் பூதம், அற்புத விளக்கை தேய்த்து தன்னை விடுவித்தவர்களை மூன்று வரங்களின் மூலம் மகிழ்விப்பதுடன் , தானும் சுதந்திரமான வெளியில் உலவவும், தோழமைக்கும் காதலுக்கும்  ஏங்குவதுமாக பல்லாண்டு பழமையான ஒரு கதையில், சுவாரஸ்யமான சில திருத்தங்களுடன் திரைப்படமாக்கியிருக்கிறார்கள். நிறையகாட்சிகளில் பாடல்களின் மூலமே கதை சொல்லப்படுவதால்  இதை இசைத்திரைப்படமென்றும் சொல்லலாம்.

பெரும்பாலான சிறார் கதைகளில் வரும் ஏழையொருவன் இளவரசன் ஆவது என்னும் கதையென்பதால் அனைத்து வயதினரின் விருப்பத்துக்கும் உகந்த கதையிது.  தெருவில் சில்லறைத்திருட்டுக்கள் செய்து வாழும் யாருமற்ற இளம் நாயகன், அழகும் இளமையும் நிறைந்த இளவரசியை சந்தித்து காதல் கொள்வது, ஆட்சியை பறிக்க திட்டமிடும் வில்லன், மந்திர விளக்கு, அதிலிருந்து வரும் பூதம்,, பூதத்தின் காதல், பூதத்திற்கும் அலாவுதீனுக்குமான நட்பு  என அனைவரும் அறிந்திருக்கும்  கதையில், எதிர்பாரா அம்சங்களுடன் கதை அழகாக போகின்றது.

வில்லன் ஜாஃபர், அலாவுதீனை விளக்கை கொண்டு வரச்சொல்லுவதும், அலாவுதீன் விளக்கை தேய்த்தபின்னர் அவன் வாழ்வு மாறுவதும், அதன்பின்னரான சாகசங்களுமே கதை. மூலக்கதையைபோல இது அலாவுதீனை மையப்படுத்தாமல் பூதத்தை பிரதானமாக கொண்டிருக்கிறது

படத்தில்  மர்வான் கென்சார்நேவிட் நெகஹ்பான்பில்லி மக்னுஸ்ஸன் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். நீல பூதத்தைக்காட்டிலும் இளவரசன் அலியின் தோழனே அனைவருக்கும் பிரியமானவராக இருக்கிறார். பூதத்தின்காதலி டாலியாவாக  நாஸிம் பெடரட் மிகச்சரியான தேர்வு.

அலாவுதீனாக வரும் மசாட்  ஏழைச்சிறுவனாக கடைகளில் திருடி, தாவித்தாவி தப்பித்து செல்வதும், பூதம் அவனை இளவரசனாக மாற்றியும் அவனால் அந்த வேடத்தில் பொருந்தமுடியாமல்  தவிப்பதுமாக பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

.Pink Power Ranger வேடத்தில் புகழ்பெற்ற நவாமி ஸ்கட் இதில் இளவரசி ஜாஸ்மின். மாறுவேடத்தில் அலாவுதீனை சந்திப்பதும் காதல் கொள்வதும் ஆட்சிபொறுப்பை ஏற்க விரும்புவதும், வில்லனை எதிர்ப்பதும் அழகிய குரலில் பாடுவதுமாக பலரின் விருப்பத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.  அவர் குரலில் முக்கியமான பாடலான speechless அவரை இன்னும் புகழின் உச்சிக்கு கொண்டு போகும்

படத்தில் ,குறும்புக்குரங்கும் பிரம்மாண்ட புலியும், வில்லனின் கிளியும் கணினி உபயம் வில் ஸ்மித்தின் நடிப்பு, அலாவுதீனாக நடிக்கும் மேனா மசூத்தின் மிகப்பொருத்தமான பாத்திரத்தேர்வு, ஜாஸ்மினாக வரும் நவோமி ஸ்கட்டின் தூய அழகு எல்லாம் ஈர்த்தாலும், அனிமேஷன் செட்கள் படத்தையும் டிஸ்னி ஸ்டுடியோவின் தரத்தையும் கொஞ்சம் கீழிறக்குகின்றன

 மூலக்கதையினின்றும் இத்திரைப்படம், சாதாரண மனிதனைப்போல அலாவுதீனின் நண்பனாக பூதம் வருவதிலும், இளவரசியை இளவரசன் அலி காதலிக்க பூதம் உதவி செய்வதிலும், பூதம் டேலியாவுடன் காதல் வயப்படுவதிலும், கொஞ்சம் வேறுபடுகின்றது இடைவேளையின் போது இளவரசன் அலி காதலை சொல்வதற்கு பதில் பலவகையான ஜாம்களை பட்டியலிடுவதும் பூதம் சலித்துக்கொள்வதுமாக அரங்கு சிரிப்பில் நிறைகின்றது.

.$183 மில்லியன் தயாரிப்புச்செலவில், சுமார் 5000 திரையரங்குகளில் உலகெங்கும்  வெளியான இப்படம், முதல் வாரத்திலேயே  $462.3 மில்லியன்களை வாரிக்குவித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது

சதியும் காதலும் மந்திரமும் மாயக்கம்பளமும், சாகசங்களும், பூதமுமாக, அலாவுதீன் திரும்பக்கிடைத்த பால்யம்

aladdin

Blue bonnet-state flower of Texas

டெக்சஸ் மாநில மலர்

Lupinus texensis, என்னும் தாவர அறிவியல் பெயருடைய   Texas bluebonnet  அல்லது  Texas lupine என்பது டெக்சஸ்  மற்றும் அதன் சுற்றுப்புறங்களில்  வளரக்கூடிய அழகிய அடர்நீல மலர்களை தரும் தாவரமாகும். இம்மலர்களே டெக்சஸின் மாநில மலராகவும் இருக்கின்றன Lupines எனப்படும் பேரினத்தின்,  Lupinus subcarnosus, L. havardii, L. concinnus, L. perennis, மற்றும் L. plattensis  ஆகிய 5 சிற்றினங்களுமே நீல பொன்னெட் என்றே அழைக்கப்படுகின்றன.

 கொத்துக்கொத்தாக தோன்றும் மஞ்சரிகளில் வரிசையாக அமைந்திருக்கும் மலர்களின் இதழ் அமைப்பு பெண்களும் குழந்தைகளும் அணியும் தாடைக்கு கீழ் நாடாவால் இணைக்கப்பட்டிருக்கும் bonnet என்னும் தொப்பியை போலிருப்பதால் இதற்கு blue bonnet  என பெயரிடப்பட்டிருக்கின்றது. Buffalo Clover, Wolf Flower என்னும் பெயர்களும் இதற்குண்டு  இவை பட்டாணி ,அவரைச்செடிகளின்  குடும்பமான Fabaceae (Pea Family) யை சேர்ந்தவை

5-7 பிரிவுகளாக விரல்கள்போல் விரிந்திருக்கும், கூரான நுனிகளையுடைய  பசுமைக்கூட்டிலைகளுடனும் , பீன்ஸ் பொன்ற காய்களினுள்ளே 6 அலல்து 7  மிகச்சிறிய மணிகளாக கடினமான மேலுறையுடன்  இருக்கும் விதைகளையும் கொண்டிருக்கும் இந்த ஓராண்டுத்தாவரம், அதிகபட்சமாக 3 மீட்டர் உயரம் வரை வளரும்

20லிருந்து 50 செ மீ  உயரமுள்ள தண்டிலிருந்து  சுமார் 50 அடர் நீல மலர்களையுடைய மிதமான வாசனையுடன் மஞ்சரி உண்டாகும். மஞ்சரியின் நுனியில் மட்டும் தூவெண் நிறத்தில் மொட்டுக்கள் காணப்படும்.  முதிர்ந்தபின் மலர்கள் ஆரஞ்சு நிறத்திலிருக்கும்.  பூக்கும்பருவம் மார்ச்சிலிருந்து ஏப்ரல் வரை, அரிதாக மே மாதத்திலும் இவற்றைக்காணலாம். புல்வெளிகளிலும் நெடுஞ்சாலை வழியின் சரிவுகளிலும், பயிரிடப்படாத திறந்த வெளிகளிலும் இவை  செறிந்து காணப்படும். மிகக்குறைவான நீரும் அதிக சூரிய வெளிச்சமும்  நீர் தேங்காத மண்ணும்  இவை செழித்து வளர தேவைப்படும்

1901 மார்ச் 7 அன்று  டெக்சஸீன் மாநிலமலராக Lupinus subcarnosus  என்னும் மற்றொரு சிற்றினமே  முதலில்அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் பெரும்பாலான டெக்சஸ் மக்களின் விருப்பத்தின்பேரில் L.texensis  மாநில மலராக மாற்றப்பட்டது. இம்மலருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்திற்கும், இவை  கொண்டாடப்படுவதற்கும் பிண்ணனியில் ஒரு முக்கியப்பெண்மணி இருந்திருக்கிறார்கள்

’’எங்கு மலர்கள் மலர்கிறதோ அங்கெல்லாம் நம்பிக்கையும் மலரும்’’ என்று அடிக்கடி சொல்லும் கல்வியாளரும் இயற்கை ஆர்வலரும் அமெரிக்காவின் 36 ஆவது அதிபரரான லிண்டன் பி ஜான்சனின் (Lyndon B Johnson) மனைவியுமான”Lady Bird” Johnson    என்பவரின் முயற்சியால்தான்  இன்று டெக்சஸின் நெடுஞ்சாலைகள் பலவண்ன வனமலர்களால் அழகுறக்காணப்படுகின்றது. 1965ல் அவரால் முன்னெடுக்கப்பட்டு கையெழுத்திடப்பட்ட HBA –  highway beautification Act  என்னும் நெடுஞ்சாலைகளை அழகுபடுத்தும் சட்டத்தின் பின்னரே இந்த செடி மிக அதிகமாக சாலியோர சரிவுகளில் பயிரிடப்பட்டது.

அதன்பின்னரே பொட்டல் வெளிகளெல்லாம் பூத்துக்குலுங்கும் ரம்மியமான இடங்களாகின  சலிப்பும் சோர்வும் தரும் நெடுஞ்சாலைப்பயணங்கள் பார்வைக்கு இனிய மலர்களின் காட்சிகளுடன் மிக இனிதான விரும்பத்தக்க பயணங்களாகியது. இதன் பொருட்டு இவருக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருதுகளான presidential Medal of Freedom   மற்றும்  Congressional Gold Medal,  ஆகியவை அளிக்கப்பட்டன. 1982:ல் ஆஸ்டினில் இவரால் உருவாக்கப்பட்ட   தேசிய வனமலர்கள் ஆராய்ச்சி நிலையம் பின்னர் 2006ல் டெக்சஸ் பல்கலையுட்ன இணைக்கப்பட்டது..

இவரது வழிகாட்டலின் பேரில் 1932ல் ஜெக் கப்பல்ஸ் (Jac Gubbels) என்னும் புகழ்பெற்ற நிலவடிவமைப்பாளரை டெக்சஸின் நெடுஞ்சாலைத்துறை  பணியிலமர்த்தி நெடுஞ்சாலைகளின் ஓரங்களிலும் சரிவுகளிலும் வனச்செடிகளை வளர்க்கத்துவங்கினார்கள், இன்றும் வருடத்திற்கு  30  ஆயிரம் பவுண்டுகள்  வனமலர்ச்செடிகளின் விதைகளை இத்துறை வாங்குகின்றது

 

1912ல் பிறந்து பெரும்பாலான நிலப்பரப்புக்களை கொள்ளை அழகாகவும் வண்ண மயமாகவும் மாற்றிய இவர் தனது வாழ்நாளின் பிற்பாதியிலிருந்து மரணம் வரை உடல்நலக்குறைவால் கண் பார்வையின்றி இருந்தது வாழ்வின் முரண்களிலொன்று, 1912ல் பிறந்து 2007ல்  தனது 94 வயதில் இவர்  மரணமடைந்தார்

டெக்சஸ் மக்கள் அனைவருமே இம்மலர்கள் பூக்கும் பருவத்தில் குடும்பத்துடனும் வளர்ப்பு பிராணிகளுடனும் சென்று மலர்களின் இடையிலும் அவற்றின் பிண்ணனியிலும் புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்வர். டெக்சஸ் நகரவாசிகளின் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்ட இம்மலரைக்குறித்தும் அச்செடிகள் வளர்ந்து மலர தயாராகிவிட்டதாவெனவும்  கிருஸ்துமஸ் முடிந்த உடனேயே    மக்கள் பேசிக்கொள்ள துவங்குவார்கள்

1933 லேயே இம்மலர்களுக்கான பிரத்யேக பாடலொன்றும்  டெக்சஸின் சட்டமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. பாடலை இணையத்தில் காணலாம். டெக்சஸின் Chappell Hill என்னுமிடத்தில் இம்மலர்களுக்கான வருடந்திர விழா நடைபெற்று வருகின்றது

காற்று மண் மற்றும்  நீரிலிருந்து நச்சுப்பொருட்களை இவை  கிரகித்துக்கொள்ளும்.  எனவே விதைகளிலும் தாவரபாகங்களிலும் மிதமான நச்சுத்தன்மை காணப்படும். வீட்டிலும்  தொட்டிகளில் அலங்கரச்செடியாக இவற்றை வளர்க்கலாம். மே மாதத்தில் இவற்றின் காய்கள் பழுத்து  மஞ்சள் நிறமான பின்பு உள்ளிருக்கும் விதைகளை சேகரித்து ஓரிரவு முழுதும் நீரில் ஊற வைத்தோ , அல்லது  ஃப்ரீஸரில் ஓரிரவு உறைய வைத்து பின்னர் கொதிநீரில் நனைத்தோ கடின விதைஉறையை உடைத்து பின்னர் விதைக்கலாம்

இவை பூக்கும் காலத்தில் எங்கெங்கு மலர்கள் அதிகமாக  காணப்படும் என்னும் விவரங்களை மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக GPS  சேவைகளும், புகைப்ப்டமெடுக்க வழிகாட்டுதல்களும், மக்கள் கூட்டமாக நெடுஞ்சாலையில் ஆங்காங்கே வண்டிகளை நிறுத்தி இவற்றை கண்டுமகிழ்வதால் அப்போது பின்பற்றவேண்டிய போக்குவரத்து ஒழுங்குமுறைகளும் பரவலாக தெரியப்படுத்தப்படுகின்றன. இப்பருவத்தில் சுற்றுலாப்பயணிகளை வரவேற்று  அழைத்துச்செல்ல  பல சுற்றுலா குழுமங்களும் இயங்குகின்றன. கடந்த பத்து வருடங்களில் ,இப்போது 2019ல் தான் இவை மிக அதிகமாக பூத்திருப்பதாக சொல்லப்படுகின்றது .இவற்றின் புகைப்படங்களுக்கென்றே பல இணையதளங்களும் இருக்கின்றன

அயர்லாந்தின் ஷம்ராக் மற்றும் ஜப்பானின் செர்ரி மலர்களுக்கும் ஃபிரான்ஸின் லில்லிகளுக்கும் இங்கிலாந்தின் ரோஜாக்களுக்கும்  ஹாலந்தின் ட்யூலிப் மலர்களுக்கும் இணையானதாக சொல்லப்படும் இம்மலரைக்குறித்த கவிதைகளும் கதைகளும் கூட ஏராளம் இருக்கின்றன. இவை பூக்கும் காலத்தில் இவற்றின் சித்திரங்கள் தீட்டப்பட்ட உடைகளும் திரைச்சீலைகளும் அதிகம் விற்பனைக்கு வரும் டெக்சஸுக்கு இம்மலருக்காகவேனும் ஒருமுறை வரவேண்டும் என இந்தியாவிலிருக்கும் அனைவரையும் நினைக்கவைக்கும்படியான பிரமிக்க வைக்கும் அழகினைக்கொண்ட  சுவாரசியமான மலர்  இந்த blue bonnet.

செர்ரி மலருக்கு கொண்டாட்டம்!

செர்ரி மரங்கள்  ப்ருனஸ் என்னும் பேரினத்தை சேர்ந்தவை. wild செர்ரியான –Prunus avium என்பதே செர்ரி பழங்களுக்காக வளர்க்கப்படும் மரமாகும்.  ஜப்பானியர்கள் பல நூறு கலப்பின செர்ரி வகைககளை  அவற்றின் அழகிய மலர்களின் பொருட்டு உருவாக்கினர்.

 செர்ரி வகைகளில் மலர்கள் தூய வெண்மையிலும், இளஞ்சிவப்பிலும், இளஞ்சிவப்பும் வெண்மையும் கலந்தும் காணப்படும்.  ஐந்து இதழ்கள் ஒற்றையடுக்கிலும் பத்திலிருந்து இருபது இதழ்கள் அடுக்குகளிலும்  வகைக்கேற்றபடி காணப்படும்.

ஜப்பானியர்கள் இதை சகுரா அல்லது ஊமி மரம் (Umi) என்றழைக்கிறார்கள் ஜப்பானில் உள்ள பலவகையான செர்ரி மரங்களும் மொத்தமாக  (sato zakura)  சட்டோ சகுரா என்றும், ஒற்றையடுக்கு மலர்கள்  யோஷினோ Yoshino (Prunus x yeodensis) என்றும் பல அடுக்குகள் உடையவை  யேசகுரா (yaezakura) என்றூம் அழைக்கப்படுகின்றன.   இரட்டை அடுக்கு மலர்களுடைய மரங்களை 1862ல்  ஜப்பானிலிருந்து  வட அமெரிக்காவிற்கு G.R. Hall  என்பவர் கொண்டு வந்தபின்னர் அங்கும் இவை வளர்கின்றன.

Prunus serrulata  எனப்படும் செர்ரி சைனா, ஜப்பான், இந்தியா மற்றும் கொரியாவை தாயகமாக கொண்டது. இலைகளை உதிர்க்கும் இச்சிறுமரம்   26–39 அடி வரை (7.9–11.9 m). வளரும் மரப்பட்டைகள் மிக மிருதுவாகவும் மூச்சுத்துவாரஙகள் எனப்படும்  lenticels நிறைந்தும் காணப்படும். இலைகள்  ஓரங்களில் பற்கள்போன்ற அமைப்புடன் எதிரடுக்கில்  நீள்முட்டை வடிவிலிருக்கும். மலர்கள் ரெசீம் மஞ்சரிகளில் உருவாகும். சதைப்பற்றான பழங்கள் 8-10 மிமி அளவில் இருக்கும். ஜப்பான் முழுவதிலும் செர்ரி மரங்கள் பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள் அரண்மனைகள், கோயில்கள், சரணாலயங்கள் போன்ற பல இடங்களில்  வளர்க்கப்படுகின்றன

 

sakuramochi.jpg

இம்மரங்கள் வருடா வருடம்  பூத்துக்குலுங்கும் காலம் ஹனாமி எனப்படும் பூக்காணுதல் விழாவாக  ஜப்பானில் 3ஆம் நூற்றாண்டிலிருந்தே பெரும் கொண்டாட்டமாக நிகழ்ந்து வருகின்றது.. இறந்த மூதாதையர்களின் ஆன்மா செர்ரி மலரின் வண்ணங்களில் வாழ்கிறது என்று ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். மேலும் நல்ல அறுவடைக்கான கடவுள்களை வயலுக்கு வரவேற்கும் நிகழ்வாகவும் இந்த ஹனாமியை ஜப்பானியர்கள் கருதுகிறார்கள். மிக அழகாக பூத்துக்குலுங்கி பின்னர் சிலநாட்களிலேயே வாடி உதிரும் இவை மனித வாழ்வின் அநித்யத்தை சுட்டுவதாகவும் கருதப்படுகின்றது.

ஒவ்வொரு வருடமும்  ஜப்பானிய வானிலை தகவல் தளத்தில் பல்வேறு பிரதேசத்திலும் பூப்பூக்க தொடங்கும் தேதி அறிவிக்கப்படும்.. ஹனமியின் போது பூத்துக்குலுங்கும்  செர்ரி மரங்களுக்கு கீழ் ஜப்பானியர்கள் விருந்துபசாரம் செய்வார்கள். இரவில நடத்தப்படும் ஹனாமி யோசகுரா (இரவு நேர சகுரா) எனப்படும். இதன் பொருட்டு வண்ணமயமான விளக்குகள் பூங்காக்களில் தொங்கவிடப்பட்டிருக்கும்.

பல நூற்றாண்டுகளாக ஜப்பான் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்ட சகுராவின் பூக்கும்  காலத்தில்,  நாட்டில் 7 முதல் 10 நாட்கள் வரை  விடுமுறை விடப்படுகிறது,  இம்மரங்களினடியில் மக்கள் உறவு மற்றும் நட்புக்களுடன் குழுமி உணவுண்டும் கவிதைகள் வாசித்தும்  ஓய்வெடுத்தும்  மகிழ்ந்து பொழுதைக் கழிப்பார்கள்,

பல இடங்களில் இணைவரிசையில் எதிரெதிராக நடப்பட்டு  வளர்ந்திருக்கும் இம்மரங்களின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு கால்களின் கீழ் இதழ்களாலான  ஒரு மென்மையான கம்பளம் விரித்த பூக்கும் நடைபாதையை உருவாக்கியிருக்கும். வசந்த காலத்தில், பசுமை போர்த்திய மலைப் பகுதியில் இலைகளற்ற மரத்தில், சகுரா மலர்கள் பூத்துக் குலுங்குவது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. இந்த அற்புதமான மலர்களைக்காண  உலகின் பிற பகுதிகளிலிருந்தும் ஜப்பானுக்கு லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்தோடு வருகை தருகின்றனர்

. இங்கு  100 யென் நாணயம் செர்ரி மலர்களுக்காக வெளியிடபட்டுள்ளது. பல நாடன் பாடல்களும் பாப் பாடல்களும் சகுராவிற்கென்றே பிரத்யேகமாக ஜப்பானில் உள்ளன. சகுரா பூக்கும் கால்த்தில் கிமானோ என்னும் தேசிய உடையிலிருந்து நோட்டுபுத்தகங்கள், குடைகள், அலங்காரப்பொருட்கள், கைப்பைகள் என பலவற்றிலும் இம்மலர்களின் சித்திரம் வரையப்பட்டிருக்கும். டாட்டூ எனப்படும் பச்சைகுத்துதலிலும் ஜப்பான் முழுக்க டிராகன் உருவத்துக்கு அடுத்தபடியாக இம்மலர்களின் வடிவமே உள்ளது. பல பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு  சகுரா என்று பெயரிடுகிறார்கள்.

ஜப்பான் மட்டுமல்லாது இந்தியா, சைனா,  வாஷிங்டன், கொரியா, ஜெர்மனி, பிரேசில், ஆம்ஸ்டர்டாம், பாரீஸ் உள்ளிட்ட உலகின்  பலபகுதிகளில் வெவ்வேறு காலங்களில் செர்ரி மலர்க்கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன

ஹனாமியின் சிறப்பு உண்வு வகைகள்

“cherry blossom sake,” – சகுரா மலர்கள் மிதக்கும் அரிசி மது

சகுரா மலர்களின் நறுமணத்துடன் தேனீர், சோயா பால் மற்றும் கோலா

Hanami bento –  ஹனாமி பெண்டோ எனப்படும்  வறுத்த மீன் துண்டு,பொறித்த காய்கறிகள், போன்றவைகள் இருக்கும் மதிய உணவுப்பெட்டி

Finger food  எனப்படும் சகுரா கலந்த உணவுகள், நறுக்கப்பட்ட பழத்துண்டுகள் இறால் , சுஷி மீன் மற்றும்  சமைத்த காய்கறிகள்

sakura mochi  எனப்படும்  சகுரா இலைகளால் சுற்றி வைக்கபட்டிருக்கும் சகுராவின் இளஞ்சிவப்பு, பனிப்பொழிவின் வெள்ளை மற்றும்   ஒரு நறுமணத்தாவரத்தின் பச்சைநிறம் என மூவண்ணத்தில் இருக்கும் அரிசிச் சோற்று உருண்டைகள்

மஞ்சள் கலந்த குடிநீர்

GULLY BOY

பாலிவுட்டின் பிரபலங்களான ஜாவீத் அக்தர் -ஹனி இராணி இணையின் மகளும் பிரபல நடிகர் ஃபர்ஹான் அக்தரின் சகோதரியுமான ஜோயாஅக்தரின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகி 2019,ல் திரைக்கு வந்து பலத்த வரவேற்பு பெற்றிருக்கும் ஹிந்திமொழி திரைப்படம் ‘’ Gully Boy’’.

இந்திய ராப் பாடகர்களான டிவைன் மர்றும் நேஜியின் (Divine and Naezy) வாழ்வின் மீதான ஈர்ப்பில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. ஆசியாவின் இரண்டாவது பெரிய குடிசைக்குடியிருப்பான (சேரி) தாராவியை சேர்ந்த ஒரு இளைஞனின்   ராப் இசைக்கனவையும் பயணைத்தையும் சொல்லும் படமிது.

Gully_Boy_poster

முராத் ஆக ரன்வீர் சிங்கும், சஃபீனாவாக அலியாபட்டும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்

தாராவியின் நெரிசலான தெருக்களில் ஒன்றில் வசிக்கும், கல்லூரி இறுதியாண்டு படிக்கும், ராப் இசையின் மீதான காதலுடன் இருக்கும் முராத் நாயகன்.அவன் தந்தை மகனை விட இளைய ஒருபெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு வருகிறார்.  முராதுடன் தீவிர காதலில்  மருத்துவம் படிக்கும் சஃபீனா.அடிக்கடி ரகசிய சந்திப்பும் முத்தங்களுமாக காதல் தொடருகிறது. முராதின் ராப் இசையின் மீதான  ஆர்வத்தை  அப்பா கண்டிக்கிறார்.  ஒரு செல்வந்தரின் கார் ஓட்டுநராக இருக்கும் அப்பாவிற்குக்கு காலில் அடிபட்டதையடுத்து தற்காலிக ஓட்டுநராக அங்கு செல்லும் முராத் வாழ்வின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், மன அமைதிக்கும் மகிழ்வுக்கும் பணம் ஒருபொருட்டாக இல்லாமலிருப்பதையும், மிக அண்மையிலென காணும் அந்நாட்களில் அவ்வனுபவங்களையும், வாழ்வின் முரண்களையும்,  இவையனைதிற்குமிடையில் துளிர்க்கும் நம்பிக்கைகளையும்  பாடல்களாக சந்தங்களுடன் எழுதத்துவங்குகிறான்

MC Sher  என்னும் பெயரில் ராப் இசைப்பாடகனாக புகழ்பெற்றிருக்கும் ஒருவனின் நட்புடன் முராதும் தன் பாடல்களை மெட்டமைத்து யூ ட்யூபில் பதிவேற்றுகிறான்.அது புகழ்பெறுகின்றது. போஸ்டன் இசைக்கல்லூரியில் பயிலும் ஸ்கை  (கல்கி கோச்லின்) ஒரு புதிய பாடலை தாராவியில் MC Sher மற்றும் முராத்தின் ராப் இசை, மற்றும் நடனத்துடன் பதிவுசெய்து  வெளியிட,அதுவும் மிகப்பிரபலமாகின்றது. Gully Boy என்னும் பெயரில் முராத் ராப் இசைப்பாடகனாக புகழ்பெறுகிறான்

தவிர்க்கமுடியாமல் ஒருமுறை இரவில் ஸ்கையுடன் நெருக்கமாக இருந்துவிடும் முராத் இதை சஃபீனாவிடன் மறைக்கிறான்.உண்மை தெரிந்து காதலியுடன்  மனக்கசப்பு,   அதே சமயத்தில் மாற்றாந்தாய் வந்தபின்னால் அம்மாவுக்கு ஏற்படும் அவமானங்களால் வீட்டை விட்டு தாயுடன் முராத் வெளியேறும் நிலை.  இசைக்கனவை மூட்டைக் கட்டி தூர வைத்துவிட்டு வாழ்வின் நிதர்சனங்களை ஏற்கும்  கட்டாயத்தில் தன் மாமாவிடம் வேலைக்கு சேருகிறான் முராத்

படத்தின் இறுதிக்காட்சிகளில் அமெரிக்க ராப் இசைப்பாடகரான  நாஸ் (Nas) மும்பையில் நடத்தும் ஒரு இசைப்போட்டியில் கலந்துகொள்ளும் முராத் இறுதிசுற்றுக்கு வருகிறாரா, வெல்கிறாரா, காதலியுடனான கசப்பு மறைந்ததா என்பதே மீதிக்கதை

இசையை அடிப்படையாக கொண்ட படமென்பதால்  நிறைய பாடல்கள் இருக்கின்றன.  டிவைன், நேஜி, மற்றும் அமெரிக ராப் பாடகர் நாஸ் உடன் ரன்வீர் சிங்கும் பல ராப் இசைக்கலைஞர்களும் இணைந்து பாடி படத்தின் இசையனுபவத்தை மறக்கமுடியாததொன்றாக்கி இருக்கிறார்கள். ’’அப்னா டைம் ஆயகா’’  இப்போது  பெரும்பாலான இளைஞர்களின் விருப்பப்பாடல்.

காதலர் தினத்தன்று உலகிங்கிலும் சுமார் 4000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு  தயாரிப்புச்செலவான 84 கோடிக்கு மேல்  234 கோடியை வசூலித்து, இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற இத்திரைப்படம், 8 mile  என்னும் 2002ல் வெளியான ஆங்கிலத் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி எனும் சர்ச்சையிலும் சிக்கியுள்ளது

ரன்வீர் மற்றும் அலியாவின் நடிப்பிற்கு இணையாக ஜோயாவின் இயக்கமும்  விஜய் மெளரியாவின் வசனங்களும் படத்தின் மிகப்பெரும் பலங்களென்று சொல்லலாம். தாராவியின் நெரிசலான தெருக்களிலும், அடைசலான தீப்பெட்டிகளை கலைத்துக்கட்டியது போன்ற வீடுகளுக்குள்ளும் நம்மை அநாயாசமாக அழைத்துசெல்கிறார் ஒளிப்பதிவாளர் ஜே ஒஸா, நிதினின் படத்தொகுப்பும் வெகுவாக பாராட்டப்படவேண்டியது

கள்ளத்தனமும் குறும்பும் நிறைந்த அலியா நாயகி. மர்மமான சிரிப்பும் ,படபடவென பொரியும்  பேச்சும் , துள்ளலும் துடிப்பும், ஸ்கையை பாட்டிலில் அடித்து மண்டையை உடைக்கும் ஆங்காரமும், தீவிரக்காதலும் அப்பா அம்மாவிடம் சர்வசதாரணமாக காதலின் பொருட்டு சொல்லும் பொய்களுமாக மிக மிகப்பொருத்தமான, அலியாமட்டுமே இயல்பாக செய்யவும் பொருந்தவும் முடிகின்ற பாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது அவருக்கு. பொங்கித்ததும்பும் இளமையும் நிஷ்களங்கமான  அழகுமாக அலியா வருகையில் திரையே  கூடுதலாக ஒளிர்கின்றது.

ராப் இசைக்கனவு, மாற்றாந்தாயுடனிருக்கும் கண்டிப்பான அப்பா, வறுமை, துயரிலிருக்கும் தாய், நண்பன், கூடுதல் பிடிப்புடனிருக்கும் காதலி, இப்படி கலவையான விஷயங்களால் அலைக்கழிக்கப்படும் சேரிப்பகுதியைச்சேர்ந்த இளைஞனாகவே வாழ்ந்திருக்கும் ரன்வீரை எத்தனை பாராட்டினாலும் தகும்,

வேலைக்காரனின் மகன் வேலைக்காரன்தான் ஆகவேண்டும் என அடிக்கடி முராதின் மாமா சொல்லும் அவ்விதியை கடின உழைப்பும் அதிர்ஷ்டமும் கூடிவந்ததால் மாற்றியமைத்து, விரும்பிய கனவை நனவாக்கும் ஒரு சேரிப்பகுதி இளைஞனின் கதையை மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் படம் இது.

தெருவிலிருக்கும், எளிய, சாதாரண பையன் என்னும் பொருள்படும் Gully Boy  என்னும் பெயரில்  இத்திரைபப்டம் கனவுகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு வாழ்வின் பின்புலங்களும் வசிப்பிடமும் பொருளாதாரமும் ஒரு பொருட்டல்ல என்று சொல்கிறது.

 Under play செய்திருக்கறார் என்றுகூட  சொல்லும் அளவிற்கு ரன்வீரும் மிக மென்மையான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். கூச்சமும் தயக்கமுமாக அவர் தன் முதல்பாடலை பாடுவதும், நெருக்கமான காட்சிகளில் அலியாவின் கை சற்றே மேலோங்குகையில் அவற்றை கண்களில் காதலுடன்  ஆமோதித்து எற்றுக்கொள்வதும் நண்பர்களுடன் இயல்பாய் கூடிக்கொள்வதும் தன் சொந்த சேரி மக்களின் வாழ்வை படம்பிடித்து  உலகிற்கு காட்டியதில் பெருமிதம் அடைவதுமாய் நடிப்பில் மிளிர்கிறார்

ராப் இசையையே பிரதானமாக சொல்லும் படமென்றாலும் வழக்கத்தைக்காட்டிலும் கொஞ்சம் நீளமான இப்படம் எந்தவிதத்திலும் சலிப்புபூட்டாமல் அழகாக  நகர்கின்றது.. இசை, காதல்,  பிறிதொரு காதல் ,கூடல், ஊடல், கடின உழைப்பு குடும்பப்பிரச்சினைகள், நட்பு என்று பல உணர்வெழுச்சிகளுடனான கண்ணிகளால் பிணைக்கப்பட்டிருக்கும் ஒருவனின் வாழ்வையும் கனவையும் சொல்லும் இப்படம்  அமேசான் பிரைமிலும் தற்போது வெளியிடபட்டிருக்கிறது.

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑