லோகமாதேவியின் பதிவுகள்

Month: August 2018

கோலமாவு கோகிலா

 

நண்பர்கள் சுரேஷும் செளந்தரும் இத்திரைப்படத்தைப்பற்றி சிலாகித்துச்சொல்லியிருந்தார்கள்.  நல்ல படம் , பார்க்கலாமென்று சுரேஷ் பரிந்துரைத்திருந்தார். செளந்தர்  விமர்சனம் எழுதியிருப்பதாய்  சொன்னார். நேற்று விபு  குழுமத்திலும் இதைக்குறித்துப்பேசினோம். சரி ஒருநாள் பார்க்கனும்னு  நினைச்சேன்.

அமேசான் ப்ரைமில் சீக்கிரம் வந்துரும்னு கூட நினைத்தென். என்னமோ  நினைத்துக்கொண்டாற்போல், விடுப்பில் வீட்டிலிருந்த சரணும் நானுமாக மதியம் திடீரெனக்கிளம்பி  பஸ் பிடித்து சென்றேவிட்டோம்.

விகடன் உள்பட  எதிலும் விமர்சனம் பார்க்கலை , கேட்கலை, செளந்தர் எழுதினதும் இன்னும் வாசிக்கலை. கிரேஸி மோகன் ஒரு நூலின் முன்னுரையில் //புத்தகத்தை வாசிக்கும் அல்லது  திரைப்படத்தை பார்க்கும் முன்னர் விமர்சனம் தெரிஞ்சுகிட்டு பின்னர் அதை வாசிக்கறப்போ அல்லது பார்க்கறப்போ என்னமோ ரெண்டாம் கல்யாணம் பண்ணிட்ட மாதிரி இருக்கும்//னு சொல்லியிருந்தது போல நான் முன்கூட்டியே தெரிஞ்சுக்காமத்தான் எப்போவும் போவேன்

படம் ரொம்ப நாளைக்கப்புறம் பார்த்த நல்ல படமா இருந்தது. அலுப்புத்தட்டாத திரைக்கதை.  திரைப்படங்களின் லாஜிக், நம்பகத்தன்மை பற்றியெல்லாம் நான் எப்போவும் மெனக்கெடுவதிலை எனவே மிகப்பிடித்திருந்தது. முதல் பாதியுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் பாதி கொஞ்சம் தொய்வுதான் அதுவுமந்த வேன் காட்சிகள் தேவைக்கும் அதிகமான நீளம்

ஆனால் striking feature of the movie  என்று சொன்னால் சந்தேகமில்லாமல் நயன்தாராதான். முழுக்க முழுக்க அவங்களை நம்பியே எடுக்கப்பட்ட படம். வாட்ட சாட்டமான நாயகன் இல்லை, டூயெட் பாடல்கள் இல்லை, காமெடியன்கள் (நல்லவேளையாக) இல்லை, 5 பாடல்களும்,  குறிப்பிட்ட இடைவெளியில் அவற்றைச்சமன் செய்ய 5 சண்டைக்காட்சிகளும் என்னும் தமிழ்சினிமாவின் மரபான   frame ற்குள்ளும் இத்திரைப்படம் வரவில்லை. இரட்டை அர்த்த வசனங்கள், குத்துப்பாடல்களும் இல்லை. இத்தனை இல்லை’களையும் ஈடுகட்ட ஒரே ஒரு நயன்தாரா இருக்கிறார் என்பதே படத்தின் பலம்

நயன்தாராவை பிடிக்கும் எனக்கும்’ னு சொல்லவேண்டியதில்லை ஏனெனில் எல்லாருடைய ப்ரியப்பட்ட  நடிகை என்றும் அவங்களைச்சொல்லலாம். அப்படி ஒரு தூய அழகு அவங்களுடையது. நயனின் அந்தரங்க வாழ்வின் அவலங்கள் துயர்கள் எல்லாம் நம் எல்லோருக்கும் தெரிந்திருந்தும் வழக்கமாக உருவாகும் கசப்பும் கீழ்மையான, தாழ்மையான அவதானிப்புகளும்  ஏளனமும், அவர் மேல் வராமல் இன்னும் எல்லா மனதிலும் அழகாக அமர்ந்திருக்கிறார். காழ்ப்புகளுக்கு அப்பாற்பட்ட தூய அழகு அவருடையது

இந்தப்படத்தில் அவருக்கென்றே பிரத்யேகமாய் ஒரு காமிராவை நிறுத்தினது போல எல்லா ஃப்ரேமிலும் நயன் நயன் நயன். அவங்களை விட்டு வேறெதிலும் நம் சித்தத்தை குவிக்க முடியவில்லை. அதிலும் அந்த  மிகச்சாதாரணமான, கவர்ச்சியாக அவர்களைக்காட்டவே காட்டாத சட்டையிலும், கணுக்கால் வரையில்மட்டுமே இருக்கும் பாவாடையிலுமாக வேறு யாரும் இத்தனை கொள்ளை அழகாக இருக்கவும், தெரியவும் முடியாது. எளிய ஆயில் மேக்கப், கொஞ்சமாக நிறமேற்றபட்ட கேசம்,  gun மெட்டலில் சின்னஞ்சிறிய தோடு அவ்வளவுதான், ஆனால் திரையில், அந்த சிதிலமடைந்த மிகப்பழைய வீடும்,  மங்கின சூழலும் நயன் வந்ததும்  பிரகாசமாகிவிடுகின்றது. அவரின் பட்டுப்  போன்ற  சருமத்தின் மென்மையை பார்க்கிறவர்கள் தொட்டுப்பார்க்காமலேயே உணரமுடிகின்றது.

முகத்தில் கால்பாகமும், வெள்ளித்திரையில் பாதியளவிற்கும் இருக்கும்  நயனின் அகன்ற கண்களிலிருந்து என்னால் விடுபடவே முடியவில்லை. அதுவும் அடிக்கடி,  நீர்நிரம்பிய குளம்போல தளும்பி ஒருகணம் தயங்கி பின் சட்டென உடைந்து அகலமாக மையெழுதிய கரைகளை உடைத்துக்கொண்டு கண்ணீர் சொட்டுவது அத்தனை ரசிக்கும்படி இருக்கு, ஆம் நயன் அழுவதும் அத்தனை அழகு.

அழகென்று சொல்கையில் இன்னொன்றும் சொல்லனும்,   பொதுவாக அலங்காரச்செடிகளை நர்சரியிலோ வேறு யாருடைய வீட்டிலோ பார்க்கையில் சிலசமயம்  இதுபோல செடிகள் நம் வீட்டில் இல்லையேன்னு ஏக்கமாக வருத்தமாக இருக்கும், சிலசமயம் இதெல்லாம் நம்ம வீட்டுக்கு பொருந்தாதுன்னு தோணும், சிலதைப்பார்க்கையில் அறவுணர்வு எல்லாம் மறந்து, திருட்டுத்தனமாகவேணும் கொஞ்சம் கிள்ளியாவது எடுத்துட்டுபோய் வீட்டில் நட்டு வச்சுக்கணும்னு  தூண்டல் இருக்கும்,   ஆனால் துளசிச்செடியை  மாடத்தில் பார்க்கையில் ஒரு நிறைவு இருக்கும் நமக்கு. இதுபோல வேணும் வேண்டாம்னு எதுவும் தோணாம நிறைவு மட்டுமெ இருக்கும்

அப்படி அழகு நயனுடையது. பிற நாயகிகளைப்பார்க்கையில் அவர்களின் தளுக்கும் மினுக்கும் செயற்கையான பாவனைகளும், அதீத ஒப்பனையும்,  ஒரு ஒவ்வாமையை ஏற்படுத்தும். (எனக்கு). ஆனால் நயனைப்பார்ககையில் அவர்களின் அழகு ஒரு  divine and dignified  என்று தோன்றும். ஷோபனாவைப்பார்க்கையில் மட்டும் அப்படியிருக்கும் எனக்கு முன்னால் எல்லாம்.  Sex appeal  இல்லாத நிறைவு மட்டுமே உண்டாக்கும் அபூர்வ அழகு இது

அலியா பட் , மீரா ஜாஸ்மின் இரண்டுபேரும் கூட இப்படியான நிஷ்களங்கிகள் தானென்றாலும் அவர்களிடம் இருக்கும் அந்த சிறுமித்தனம் நயனிடம் இல்லாமல் ஒரு கண்ணியமும் முதிர்ச்சியும் இருக்கும்

ஒரு காட்சியில்  வீட்டு வாசலில் நயனும் அவள் அப்பாவும் அமர்ந்திருப்பார்கள் மிகக்குறைந்த வெளிச்சத்தில் பக்கவாட்டுத்தோற்றத்தில் அந்த சீர்மையும் கூர்மையுமான மூக்கும் , பெரிய இமைப்பீலியும் கலைந்த கேசம் நெற்றிக்கு முன்னால் வந்துவிழ உணர்வுகள் மாறி மாறி  நிழலாடிக்கொண்டிருக்கும் நயன்  ஒரு கவிதைத்துணுக்குபோலிருந்தார். அந்தக்காட்சியே ஒரு கவிதைதான்

We are the millers  என்னும் படத்தின்  தழுவலென்று சரண் இப்போது சொல்கிறான் அதுபற்றியெல்லாம் நான் அதிகம் கவலைப்படுவதில்லை

சுமாரான திரைக்கதை ஆனால்  எல்லாவற்றையும் compensate  செய்துவிடுகிறது நயனின் இருப்பு

முதல்காட்சியிலிருந்தே மிகவும் underplay  தான் நயன் செய்வது, மிகக்கொஞ்சமாக  அவர்  பேசினாலும் மிக மிக அதிகமாக அவரின் கண்கள் பேசுகின்றது.  வசனங்களும் மிக மென்மையான மாடுலேஷனில் தன் நயனுக்கு

துவக்கக்காட்சியில் தவறாக அவரை அழைக்கும் மேலாளரிடன் நயன் பேசும் மறுமொழி நச்

சரண்யா பொன்வண்னன் மீள மீள  ஒரே மாதிரியான அம்மாவாகவே இருக்கிறார். அந்த அப்பா கதாபாத்திரம் என்னவோ எனக்கு கொஞ்சம் பொருந்தாத தேர்வெனத்தோன்றியது. வேறுயாரையாவது போட்டிருக்கலாம். டெல்லி கணேஷ் சாரைப்போல  உணர்வுகளை இயல்பாக வெளிக்காட்டும் நடிகராக இருந்திருக்கலாம். இவர் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளாமல் கடனேனு வந்துபோவது போலிருந்தது. அந்த இரண்டு காதலர்களும் ஓகே நகைச்சுவைஇல்லாத குறைக்கு இருக்கிறார்கள்.

கடத்தல் மற்றும்  பாலியல் அத்துமீறல்கள் நடக்கும் காட்சிகளிலெல்லாம் இந்துக்கடவுள்களை அதிகம் காட்டி கேவலப்படுத்துகிறாரகள்,  என்பதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுக்களையெல்லாம் நான் கவனிக்கவே இல்லை,  (அல்லது நயன் கவனிக்க விடவில்லை).  இதுபோன்ற   விதிமீறல்கள் எல்லாம் மதம் இனம் மொழியையெல்லாம் கடந்தது அல்லவா? பின்பாதியில் வேனிலேயே ரொம்பநேரம் பயணித்ததில் இடுப்பு வலித்தது, மேலும் அதிகம் இழுவை காட்சிகள்.

தலைப்பை நியாயப்படுத்த இறுதியில் நயன் கோலமாவு விற்காவிட்டாலும் எனக்கு படம் பிடித்துத்தான் இருந்திருக்கும்.

நல்ல பொழுதுபோக்குஅம்சங்களுடனான படம், வழக்கமான மொக்கைத்தமிழ் படங்களினின்றும்  மாறுபட்ட படமும் கூட

 

 

 

 

 

 

 

செல்ஃபி ஐஸ் கிரீமும் லட்டுவும்,

இன்று விடுமுறையாதலால் ஈரோடு சென்றிருந்தேன்.  கொட்டும் மழையில் , குளிரில் நடுங்கிக்கொண்டு புறப்பட்டு, வெள்ளக்காடாகியிருந்த சாலைகளில் பயணித்து, இரட்டைச்சூரியன் தகிக்கும் ஈரோட்டில் நுழைந்தது வினோதமாயிருந்தது, முற்றிலும் வேறு வேறான இரு உலகங்களுக்கிடையே பயணித்ததுபோல

அஸ்விதா ரேஷ்மா ரேஷ்மியுடன்

அங்கே காத்திருடந்த ரேஷ்மா ரேஷ்மி இரட்டைச்சகோதரிகளும் அவர்களின் குட்டி அக்காவான அஸ்விதாவின் குடும்பத்துடன் சிறிது நேரம் செலவளித்து  குழந்தைகளின் அன்பில் நனைந்துவிட்டு பின்னர் அவர்களுடன் சத்திரம் வீடு.

அங்கு லட்டு மற்றும் சிபியுடன் விளையாட்டு தற்படங்கள் காணொளிகள்,  என வழக்கமான பரிபாடிகள்  முடிந்ததும், அனைத்துக்குழந்தைகளுடனும் ஐஸ்க்ரீம் கடைக்கு சென்றேன்.

அதிகமாக குளிரூட்டப்பட்டு மெனக்கெட்டு  செயற்கையாய் இருட்டாக்கப்பட்ட அந்த இடத்தில் வெண்கலக்கடையில் யானைபோல நாங்கள் ஆராவாரமாய் நுழைந்தோம்

முதல்சுற்றில் எல்லோரும் என்ன சாப்பிடுவதென்பது முடிவாகவே அதிக நேரமானது.  நினைத்து நினைத்து மாற்றிக்கொண்டும் கீச்சுக்குரலில் கூச்சலும் பூசலுமாக இருந்தார்கள். பில் போடும் பெண் திகைத்துப்போயிருந்தாள்

லட்டு

காம்பஸ் வைத்து வரைந்ததுபோன்ற  உருண்டை முகத்துடனும் உப்பிய கன்னங்களுடனும் இருக்கும் லட்டு என நாமகரணம் கொண்ட வைஷிகா தனக்கு‘’ செல்ஃபி’’ ஐஸ் க்ரீம் வேணும் என்றதும் நானும் திகைத்துப்போனேன். உண்மையில் அப்படி ஒன்று இருக்குமோ என்று சந்தேகத்தில் சிப்பந்திகளிடம் கேட்க அப்படியேதும் இல்லையென்றார்கள்

ஆனால் ஆவேசத்தில்  லட்டுவிற்கு சாமி வந்துவிட்டது ’’செல்ஃபி ஐஸ் கிரீம்’’ ’’செல்ஃபி ஐஸ் கிரீம் ‘’ என்று ஒரே பாட்டாக பாடிக்கொண்டிருக்க, நிலைமை தீவிரமாகிக்கொண்டிருந்தது.

இந்தப்போதாதவேளையில் புறப்பட்டு ஒரு இளைஞன் அவன் காதலியுடன் அருகில் இருக்கும் மேசையில் அமர்ந்திருந்தான். அந்தப்பெண் பேசிக்கொண்டிருக இவன் மெளனமாய் கேட்டுகொண்டு தலையை மட்டும் அவ்வப்போது சம்பிரதாயத்துக்கு அசைத்து ஆமோதித்துக்கொண்டிருத்ததை பார்க்கையில், அனேகமாக கல்யாணத்தில் முடியும் காதலைப்போலத்தான் இருந்தது.  நாங்கள் செய்துகொண்டிருந்த அமர்க்களத்தில், அந்தப்பெண், இல்லறமென்னும் அமைப்பின் மீதும் திருமணம் மற்றும் குழந்தைப்பேற்றின் மீதுமான அடிப்படை நம்பிக்கையையே இழந்துவிடுவாளென்று அஞ்சிய அந்த இளைஞன் ஆபத்பாந்தவனாக முன்வந்து ’’ஒருவேளை பாப்பா கேட்கறது ’’குல்ஃபி ஐஸ்கிரீமா இருக்குமோ என்னவோ ’’ என்றான்

சட்டென்று  மலையிறங்கிய லட்டு,  ஆமா , ’குல்ஃபிதான் எனக்கு பேரு மறந்திருச்சு’ என்று திருவாய் மலர்ந்தருளினாள்

பின்னர் ஆளாளுக்கு வேண்டியதை வாங்கி மாற்றி மாற்றி எச்சில் பன்ணிக்கொண்டும்  பரஸ்பரம் ஊட்டிக்கொண்டும் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம் இடையிடையே  செல்ஃபி ஐஸ் க்ரீம் என்னும் நாமகரணத்தை  நியாயம் பண்ணும் விதமாக  ஏராளமாய் தற்படங்கள் வேறு எடுத்துக்கொண்டோம்

திடிரென சிபிக்கு சரண் அண்ணாவிடம் பேசனும்னு தோன்றியதால் விடுதியில் இருந்த அவனை அலைபேசியில் அழைத்து 6 பேருமாக மாற்றி மாற்றி பேசினோம். குழந்தைகள் அனேகமாக ஒரே கேள்வியை பலமுறை  பல மாடுலேஷன்களில் கேட்டார்கள் இரண்டாம் சுற்றில் லட்டு போனை பிடுங்கி ’’சரண் நல்லா படிக்கணும்,  அப்பத்தான் தேவிம்மா உனக்கும் ஐஸ் கிரீம் வாங்கித்தருவாங்க’’ என்று  ஒரு உறுதிப்பாட்டினையும் அளித்தாள்.

அடுத்த சுற்றுக்கும் எல்லோருமாய் அவனிடம் பேச தயாரனபோதுதான்  சரண் குரல் கம்ம, தனக்கு மறுநாள் கணக்கு பரீக்‌ஷை இருப்பதால் நண்பர்களுடன் தேர்வுக்கு படித்துக்கொண்டிருப்பதாகவும் இனி போனில் அழைக்கவேண்டாமென்றும் கேட்டுக்கொண்டதால் அருள் கூர்ந்து பேச்சுவார்த்தையை அத்துடன்  முடித்துக்கொண்டோம்

சுதந்திர தினத்தன்று விடுப்பு எடுக்க முடியாமல் வேலைக்கு வந்திருந்த அந்த கடைச் சிப்பந்திகள், நாங்கள் சீக்கிரம் கடையிலிருந்து கிளம்பவேண்டி அவரவர் குலசாமிக்கு நேர்ந்துகொண்டிருக்கக்கூடும். ஒரு வழியாக நாங்கள் புறப்பட்ட பின்னர் அந்த இடம் போர் முடிந்த போர்க்களம் போல் இருந்திருக்ககூடும். ஒரு யூகம்தான் ஏனெனில் நாங்கள், திரும்பிப்பார்க்கவில்லை

பின்னர்  ஜவுளி நகரம் எனப்படும் ஈரோட்டிற்கு வந்துவிட்டு புடவை எடுக்காமல் திரும்புவதை மூதாதையர்களும் தெய்வங்களும் கூட மன்னிக்க மாட்டார்கள் என்பதால்  அத்தகைய  அறப்பிழை  ஏதும் செய்யாமல்   துணிக்கடைகளுக்கு சென்றோம்.6ம் 6 மாய் மொத்தம் 12 மணி நேர ரயில் பயணத்தில் அங்கு வந்திருந்த, சரண் அப்பாவையும் விசாலமனதுடன் உடன்  அழைத்துக்கொண்டோம்.

மோஹனாவும் நானுமாய் உற்சாகமாய் புடவைகளைத்  தொட்டும், தடவியும், சிலவற்றை வாசனைகூட பார்த்தும் தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தோம். ’’எதற்கு இத்தனை புடவைகள்? உனக்கு மட்டும்தானே ஷாப்பிங்? கொஞ்சநாள் முன்னாடி வாங்கினெதெல்லாம் என்னாச்சு? போன்ற, ஒரு போதும்  பதிலளிக்கப்படாத  கேள்விகளின் பொருளின்மையை சரண் அப்பா துவக்க வருடங்களிலேயே உணர்ந்திருந்ததால் அதுபோன்ற வீண் முயற்சிகளில் எல்லாம் இப்போது ஈடுபடுவதில்லை

புதுமணப்பெண் போல குனிந்தபடியே  வாட்ஸ் அப்பிலோ, அன்றி உள்ளத்தின் உணர்ச்சிகள் எதையும் வெளிக்காட்டாத நிர்மலமான பளிங்குப்பரப்பினைப்போன்ற முகத்துடனோ அங்கு இருக்கும் நாற்காலியில் அமர்ந்திருப்பார். அரைமணிக்கொருமுறை ஒருவேளை முடிதிருபோமா என்னும் நப்பாசையில் தலையை உயர்த்தி பார்த்துக்கொள்ளுவதும் உண்டு. ஜென் துறவிகளின் நிச்சலன முகத்தை பார்க்காதவர்கள் அச்சமயங்களில் அவர் முகத்தை பார்த்துக்கொள்ளலாம்.

ஒருவழியாக எல்லாம் முடிந்து அவரை ரயிலடியிலும் குழந்தைகளை அவரவர் வீட்டிலுமாய் விட்டு விட்டு நான் பொள்ளாச்சிக்குப் புறப்பட்டேன்

இரவாகிவிட்டது, விடுமுறைதானென்றாலும் அதிகம் போக்குவரத்து  இல்லாமல், எப்போதாவது, ஒளிரும் சிவப்பு விளக்குகளுடன் கடந்துசெல்லும் இருசக்கர வாகனங்களைத்தவிர வேறு சஞ்சாரமற்ற  நீண்ட கரிய  நனைந்திருந்த காங்கேயம்  பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் பயணிக்கையில் காலை நண்பர் செளந்தருடன் பேசிக்கொண்டிருந்த மகிழ்ச்சியும்,, ரேஷ்மா ரேஷ்மி நான் புறப்படுகையில் முழங்கால்களை இருபுறமும் கட்டிக்கொண்டு ’’அத்தை போகாதே! என கதறியழுததின் துக்கமும், காரின் பின் சீட்டிலிருந்து கமழ்ந்துகொண்டிருந்த புதுத்துணிகளின் வாசனையுமாய்   கலவையான மனநிலையிலிருந்தேன்.

இன்று இன்னுமோர் அருளப்பட்ட நாள்  எனக்கு,15/8/18

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑