லோகமாதேவியின் பதிவுகள்

Month: September 2023

 மரியா சிபில்லா!

கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னதான அரிய நீல நிற வைரக்கல்லான  ஹோப் வைரம் உள்ளிட்ட பதினான்கு கோடி பல்துறை சார்ந்த பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் ஸ்மித்சோனியன் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தின் (Smithsonian National Museum of Natural History) ஒரு மதிய வேளை அது. அறிவியலாளரான சினிச்சி நகஹரா (Shinichi Nakahara) தனது மேசையின் இழுப்பறையை திறந்து அந்த கண்ணாடிப் பெட்டியை கவனமாக எடுத்தார்.1981 லிருந்து  அதனுள் இருந்த பதப்படுத்தப்பட்டிருந்த  பட்டாம் பூச்சியை மீண்டும் கவனமாக ஆராய்ந்தார். 

பட்டாம்பூச்சி மற்றும் அந்துப்பூச்சிகள் துறையில் வல்லுநரான நகஹராவால் அந்த பட்டாம் பூச்சியை வெகு காலமாக, 2018  டிசம்பர் மாதமான அப்போது வரை இனம் காண முடியாமல் இருந்தது. அந்த அரிய கருப்பு வண்ண ஆண் பட்டாம்பூச்சியின் உடல் பனாமாவில் கிடைத்தது. ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் மாணவன் பாப்லோ (Pablo Sebastián Padrón) அதை கண்டு பிடித்து அதன் உடலை புகைப்படம் எடுத்து நகஹராவுக்கு அனுப்பி அதை இனம் கண்டு சொல்லும்படி கேட்டிருந்தான்.  பின்னர் அது பாடம் செய்து அங்கே சேமித்துவைக்கப்பட்டது. அந்த பட்டாம்பூச்சியை இனம் காண்பது பெரிய சவாலாக அமைந்துவிட்டது நகஹராவுக்கு. மேலும் ஒரு பட்டாம்பூச்சி கிடைத்தால் ஒப்பிட்டு பார்க்க உதவியாக இருக்கும் என அவர் நினைத்துக் கொண்டு காத்திருந்தார்.

பளபளக்கும் கரிய இறக்கைகளும், இறக்கைகளின் விளிம்புகளில் பாலாடை நிறப் புள்ளிகளின் வரிசையும் கொண்ட அந்த பட்டாம்பூச்சி மிக வசீகரமாயிருந்தது. இறகுகள் இணையும் இடத்தில் இருந்த செந்தீற்றல் அதை மேலும் அழகாக்கி இருந்தது.

அதன் உடல் அமைப்பு பட்டாம்பூச்சிகளின் மிகப்பெரிய குடும்பமான பியரிடேவை (Pieridae) சேர்ந்தது என தெரிவித்தாலும் அதன் கருப்பு நிறம் சந்தேகத்துக்கு இடமளித்தது. எனவே நகஹராவும் பாப்லோவும் காத்திருந்தனர். 

Shinichi Nakahara

அதிர்ஷ்டவசமாக, இரண்டு மாதங்கள் கழித்து மிஸிஸிபி பல்கலைக்கழகத்தின் பூச்சியியலாளரான ஜான் (John MacDonald) பனாமாவிலிருந்து தன்னால் இனம் காணமுடியவில்லை என்னும் குறிப்புடன் ஒரு கருப்பு நிற பட்டாம்பூச்சியின் புகைப்படத்தை நகஹராவுக்கு அனுப்பியிருந்தார்.

புகைப்படத்தில் இருந்த பட்டாம்பூச்சி தன்னிடம் இருந்த அதே கருப்பு பட்டாம்பூச்சியை போலிருந்ததால், நகஹரா, ஜானிடம் அந்த பூச்சி உடலின் ஒரு காலை மட்டும் உடனே  அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். இரண்டின் DNA சோதனைகளையும் செய்து அவை Catasticta  பேரினத்தை சேர்ந்த  மிக அரிய வகை பட்டாம்பூச்சிகள் என்பதை கண்டறிந்தார். 

அதுவரை விவரிக்கவும், கண்டுபிடிக்கப்பட்டும் அடையாளம் காணப்பட்டுமிராத அவற்றின் வேறு மாதிரிகள் எங்கேனும் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறதா என அடுத்த 30 மாதங்களும்  14  பட்டாம்பூச்சி அருங்காட்சியங்களில் தேடிப்பார்த்த போது எங்குமே அவை இல்லை. எனவே  புதிய கண்டுபிடிப்பான அதற்கு பொருத்தமான பெயரை தேடினார் நகஹரா

அத்தனை அரிய பட்டாம்பூச்சிகளான அவற்றிற்கு 17ம் நூற்றாண்டின் பிரபல ஓவியக்கலைஞரும் பூச்சியியலில் பெரும் கண்டுபிடிப்புக்கள் செய்தவரும் பட்டாம்பூச்சிகளில் பேரார்வம் கொண்டிருந்தவருமான  மரியா சிபில்லா மெரியனின் (Maria Sibylla Merian) பெயரை வைக்க முடிவு செய்து அந்தப் பட்டாம்பூச்சிக்கு  Catasticta sibyllae என்று பெயரிட்டார்.

மரியா சிபில்லா அவர் வாழ்ந்த நூற்றாண்டின் மாபெரும் அறிவியல் மற்றும் ஓவியக்கலைஞராக அறியப்பட்டவர். 17ம் நூற்றாண்டில் பெண்கள் இருந்த நிலைக்கு மாறாக பல அரிய சாதனைகளை தாவரவியலிலும், பூச்சியியலிலும் செய்தவர்.

17ம் நூற்றாண்டின் பிரபல  தாவரவியல் ஓவியக் கலைஞரான  ஜெர்மெனியை சேர்ந்த மரியா சிபில்லா (1647-1717) மிக இளைய வயதிலேயே கம்பளிப்புழுக்கள், கூட்டுப்புழுக்கள் மற்றும் பூச்சிகளிலும் அவை வாழும், உண்ணும் தாவரங்களிலும்  வெகுவாக  ஆர்வம் கொண்டிருந்தார். மரியாவின் மாமா ஒரு பட்டுப்புழு உற்பத்தியாளர், எனவே அவருக்கு அப்புழுக்களை கவனிப்பதில் இயற்கையாகவே ஆர்வம் உண்டானது

மரியா தனது 11ம் வயதிலிருந்தே ஓவியங்கள் வரையத் துவங்கினார். அவரது பொழுதுபோக்கு இறந்த பூச்சிகளை பாடம் பண்ணுவதில்  அவரது தாய் மாமாவுக்கு உதவுவதும், அவற்றை அலமாரிகளில் அடுக்கி வைப்பதும்தான். எனவே மரியாவிற்கு பூச்சிகளின் உலகில் நல்ல பரிச்சயமுண்டானது, 

ஜான்ஸ்டன் (Jonston) உருவாக்கிய முதல் விலங்கியல் அகராதியை அவர்களின் குடும்பத்திற்கு சொந்தமான அச்சகம் மரியா சிறுமியாக இருக்கையிலேயே வெளியிட்டது. அந்த அகராதியின் அழகிய வண்ணப்படங்களால் மரியா வெகுவாக  ஈர்க்கப்பட்டிருந்தாள். 

மரியா ஃப்ராங்க்ஃபர்ட்டில் ஏப்ரல் 2,  1647 ல்  சிற்பியும் பதிப்பக உரிமையாளரும் ஓவியருமான மேத்யூஸுக்கும் (Matthaeus Merian) ஜோஹன்னாவுக்கும் (Johanna Sibylla Heim) பிறந்தார்.  ஜொஹன்னா மெரியனின் இரண்டாவது மனைவி. மரியாவுக்கு 3 வயதாக இருக்கையில் தந்தை மேத்யூஸ் இறந்த பின்னர் ஜோஹன்னா உருவப்பட ஓவியரான  ஜேகப்பை  (Jacob Marrel-1613/14 – 1681)   மணந்துகொண்டார். 

மரியா ஒவியம் வரைவதை அவரது தாய் மறுமணம் புரிந்துகொண்ட பிரபல ஓவியரும் அவளது வளர்ப்புத்தந்தையுமான ஜேகப்பிடமிருந்து  கற்றுகொண்டார் .   

ஜேகப் ஒரு மலர் ஓவியர், உருவ வரைபட நிபுணர் மற்றும் தேர்ந்த சிற்பி.

ஃப்ராங்க்ஃபர்ட்டின் பிரபல உருவ வரைபட நிபுணரான  ஜார்ஜின் (Georg Flegel -1566-1638),   மாணவராக இருந்து ஓவியக்கலையை கற்ற இவர்   Utrecht க்கு 1632 ல் குடிபெயர்ந்தார். அங்கு உயிர் ஓவியக்கலை வல்லுநரான  ஜேனின் (Jan Davidsz. de Heem -1606-1683/4) அறிமுகம் உண்டானது. அக்கலையையும் ஜேகப் கற்றுத்தேர்ந்தார்

ஜேகப்பின் படைப்புக்களில் மிகவும் பிரபலமானவை மேசையின் மீதிருக்கும் கூடைகளில் வைக்கப்பட்டிருக்கும் கனிவகைகளும், பூச்சாடிகளில் அமைக்கப்பட்டிருக்கும் மலர்களும் தான். குறிப்பாக கனிகளின் மேற்புறத்தின் நுட்பமான அமைப்புக்களை ஜேகப் துல்லியமாக வரைந்திருப்பார்.

அழகிய உலோகக் கிண்ணங்களில் வைக்கப்பட்டிருக்கும் பீச், ரத்தினக்கற்களை போன்ற விதைமுத்துக்களை காட்டிக் கொண்டிருக்கும் மாதுளை, தோல் மீதிருக்கும் மெல்லிய வெண்படலத்துடன் காணப்படும் கொத்து கொத்தான திராட்சைகள்  ஆகியவை மிக தத்ரூபமாக வரையப்பட்டிருக்கும்.

ஜேகப்பின் ஓவியங்களில் பூச்சி அரித்த இலைகளும், பழுத்து அழுகிய கனிகளும் காணப்படும். எத்தனை அழகியதாயினும் அழிவு என்பது இயற்கையில் தவிர்க்க முடியாது என்பதை அவரது ஓவியங்கள் உணர்த்தின.

ஜேகப்,  ஜெர்மனியின் பிராங்க்பர்ட்டில் பிறந்தார். எண்ணெய் ஓவியங்கள் அவரது தனித்த பிரியத்துக்குரியவையாக இருந்தன. 1641ல் ஜேகப் கேதெரினா எலியட்டை மணந்தார். 1649ல் எலியட் மரணமடைந்த பின்னர் ஃப்ராங்க்ஃபர்ட்டில் வாழ்ந்துவந்த   பிரபல சிற்பியான மேத்யூஸ் மெரியனின் (Matthäus Merian) விதவையான  ஜொஹன்னா சிபில்லாவை (Johanna Sibylla Heimius)  1651ல் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அப்போதுதான் மனைவியின் மகளான மரியாவை தனது மாணவராக்கிக்கொண்டு ஓவியக்கலையை கற்பித்தார்.

அப்போதிலிருந்து  அவர் இறந்த 1681 வரை அவர் ஃப்ராங்க்ஃபர்ட்டிலேயே பெரும்பாலும் வாழ்ந்தார்.

ஜேகப்பின் ஓவியங்களில் குறியீடுகள் மிக சிறப்பானவை. மலர்களில் பல்லியோ  பட்டாம்பூச்சிகளோ இருந்தால் அவை உயிர்த்தெழுதலையும், நத்தைகள் சோம்பேறித்தனத்தையும் குறித்தன 

கூரிய இதழ்களுடன் இருக்கும் நீண்ட ஊதா மலர்மஞ்சரிகள் தூய ஆவியை, வாடிய மலர்கள் மரணத்தை,  லில்லிகள் பணிவையும் குறித்தன. ட்யூலிப் மலர்களே அவரின் சிறப்பு ஓவியங்கள் என கருதப்படுகின்றன. ட்யூலிப் மலர்களின் ஓவியங்களும் அவற்றின் விலைகளும் குறிப்பிடப்பட்டிருந்த ஜேகப்பின் நான்கு ஓவியத்தொகுதிகள் மிக புகழ்பெற்றவை. மரியாவும் அவரை போலவே ட்யூலிப்களின் ஓவியங்களை வரைந்தார்.

ஜேகப்பின்  மறைவுக்கு பின்னர் அவரது மகனும் மரியாவின் சகோதருமான கேஸ்பர் மெரியன் மரியாவுக்கு செம்புப் பட்டயங்களில் செதுக்கோவியங்களை வரைய கற்றுக்கொடுத்தார். அக்காலத்தில் ஜெர்மனியில் பெண்கள் ஓவியம் வரைவதும் விற்பதும்  சில நகரங்களில் தடை செய்யப்பட்டிருந்தது.  ஆனால் மரியா வாழ்நாள் முழுவதும் ஓவியங்களை வரைந்தார்

மரியா  சிறுமியாயிருந்த போதிலிருந்து கர்ப்பமுற்றிருந்த போதும் , குழந்தை வளர்ப்பு காலங்களிலும், இல்பேணிக்கொண்டிருக்கையிலும் எப்போதும் வரைந்துகொண்டே இருந்தார்.

மரியாவுடன் ஓவியம் வரைய கற்றுக்கொண்ட ஜேகப்பின் மாணவரான ஜோகன்ஸைத்தான் (Johann Andreas Graff)  மரியா  1665ல்  காதல் திருமணம் செய்துகொண்டார். மரியாவின் கணவரும் கட்டிடக்கலை ஓவியங்களில் வல்லுநர். அவரது 9 பெரிய தாள்களில் வரையப்பட்ட st. பீட்டர்ஸ்  தேவாலயத்தின்  ஓவியம் மிக பிரபலமானது. ஆனால் மரியாவுடையது தோல்வியுற்ற தாம்பத்யம் .  

 1668ல் மரியா அந்நகரின் இளம்பெண்களுக்கு மலரோவியங்கள் வரையக் கற்றுக் கொடுத்தார்,  Jungferncompaney (“Company of Young Misses,”) எனப்படும் திருமணத்திற்கு காத்திருக்கும் மேல்மட்ட குடும்பப்பெண்களின்  அத்தகைய குழுமங்களில் மலர்களின்  ஓவியம் வரையக் கற்றுக்கொடுப்பது, லினென் துணிகளில் இயற்கை சித்திரங்களை எம்பிராய்டரி செய்வது, ஆகிய வகுப்புக்களின் மூலம் மரியாவுக்கு பல செல்வந்தர்களின் சொந்த தோட்டங்களுக்கு செல்ல அனுமதி கிடைத்தது. மேலும் பல பூச்சிகளை தாவரங்களை மரியா வரைய இவை உதவியாக இருந்தன

 பெரும்பாலான் ஐரோப்பிய பூச்சி இனங்களை ஆராய்ந்திருந்த மரியா எப்படி அவை பிறக்கின்றன, வளர்கின்றன,உணவுண்கின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன இறக்கின்றன என்பதை முழுமையாக ஆய்வு செய்து  ஓவியங்களாக ஆவணப்படுத்தினார். 

மரியாவுக்கு புழுக்கள் அழகிய பூச்சிகளாக உருமாறுவதை காண்பதில் பெருவிருப்பம் இருந்தது.  மரியா பூச்சிகளின் இனப்பெருக்க உறுப்புக்களை கவனித்து அவற்றின் ஆண் பெண்  வேறுபாட்டுடன் ஓவியங்கள் வரைந்தார்

பூச்சிகளை குறித்த பயமமேதுமில்லாமல் அவற்றை கைகளில் பிடித்து கவனமாக உற்று நோக்கி பல ஓவியங்களை அவர் வரைந்தார். பல வகையான பூச்சிகளை வீட்டில் பெட்டிகளில் வளர்த்தார்

மரியாவின் வீடு சீசாக்களிலும் பெட்டிகளிலும் அடைக்கப்பட்டு வளர்ந்த பூச்சிகளாலும் தொட்டிகளில் வளர்ந்த பல வகையான செடிகளாலும் நிறைந்திருந்தது

1679 ல் தனது இரண்டாவது மகள் பிறந்த ஒரு வருடத்தில், இரு வருடங்கள் கூர்ந்து கவனித்து வரைந்த ஓவியங்கள், தகவல்கள் அடங்கிய  ’’கூட்டுப்புழுக்களின் அதிசய உருமாற்றம்’’ என்னும் தனது    Der Raupen wunderbarer Verwandlung (the wondrous transformation of caterpillars  and their curios diet of flowers )  நூலை வெளியிட்டார். அவர் கைகளால் வரையப்பட்ட, பல வண்ணங்களில் இருந்த, வெகு அழகிய, மிக துல்லியமான பூச்சிகள், அவை அமரும் தாவரங்களின் ஓவியங்கள் அறிவியல் இலக்கியத்தின் புது வரவாக கவனம் பெற்றன,

அந்நூலில் பிற பூச்சியியல் நூல்களில் இருப்பதைப்போல செடிகொடிகளின் பின்னணியில் பூச்சிகளை வரையாமல் ஒவ்வொரு பூச்சிக்கும் அவற்றின் வாழிடத்துக்கும், உணவுக்கான தாவரத்துக்குமான தொடர்பையும் காட்சிப்படுத்தினார்.

உண்மையில் உலகின் முதல் சூழலியாளர் மரியாதான்  1683ல் இதன் இரண்டாம் படைப்பையும் மரியா வெளியிட்டார். தாவரங்களுக்கும்  விலங்குகளுக்குமான தொடர்புகளை மரியா அவரது ஓவியங்களில் ஆவணப்படுத்தியிருந்தார்.

லத்தீன் மற்றும் டச்சு மொழிகளில் சூழியல் அடிப்படைகளை தெளிவாக கொண்டிருந்த அந்நூல்கள் ஐரோப்பாவில் பெரும அதிர்வலைகளை எழுப்பியது

1681ல் தந்து வளர்ப்புத்தந்தை ஜேகப் இறந்தபின்னர் மரியா ஃப்ராங்க்ஃபர்ட்டுக்கு திரும்பி தன் அன்னையுடன் வசித்தார் அப்போதும் பல படைப்புக்களை வெளியிட்டார்

1686ல் தவளைகள் அவற்றின் முட்டைகள், தலைப்பிரட்டைகளின் ஓவியங்களுடன் மரியா வெளியிட்ட ஓவியங்களும் குறிப்புக்களும் அவருக்கு பின்னர் வந்த டச்சு நுண்ணோக்கியலாளரான ஆண்டனி வான் லூவன் காக்கின் (1632-1723)  அதேபோன்ற கண்டுபிடிப்புக்கு   வெகுவாக முன்னால் இருந்தது. மரியாவே முதன் முதலில் இருவாழ்விகளின் இனபெருக்கவியலை ஆவணப்படுத்தியவர் 

1698ல் மரியா  தனது ஓவியங்களை ஏலம் விட்டு பெருந்தொகை பெற்று பூச்சிகளை அவற்றின் வாழ்விடத்துடன் இணைத்து வரையத் துவங்கினார். அதன் பின்னர் மரியா உலகெங்கும் ஒரு தாவரவியலாளராக, பூச்சியியலாளராக ஓவியக் கலைஞராக, இயற்கையியலாலராக அறியப்பட்டார்.

 அக்காலகட்டத்தில் பிரபலமாக  இருந்த  அலங்கார ஓவியங்களைப் போலல்லாமல் தேவையற்ற  வரியோ, வண்ணமோ இல்லாமல் தன் கண்களால் கண்டவற்றை அப்படியே  கைகளால்  வரைந்தார் மரியா 

17ம் நூற்றாண்டின் பழமையான கலாச்சாரத்தளைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட மரியா பூச்சிகளின் இனப்பெருக்கவியல் குறித்த  பல ஆய்வுகள் செய்தார், ஆனால் .அக்காலத்தில் இனப்பெருக்கம் குறித்த ஆய்வு பெண்களுக்கானதல்ல  என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டார்

அப்போதிலிருந்து இன்று வரைக்கும் மரியா கலாச்சார தடைகளை உடைத்து வென்று முன்னேறிய பெண்ணாகவே அறிவியல் வரலாற்றில் கருதப்படுகிறார். மரியாவின் ஓவியங்கள் மிக துல்லியமான அறிவியல் அடிப்படைகளையும் மிகச்சரியான வண்ணங்களையும் கொண்டிருந்தன. ஒவ்வொரு பூச்சிகளையும் அவற்றின் முட்டைப் பருவத்திலிருந்து படிப்படியாக கவனித்து அவற்றின் இறப்பு வரை வரைந்து ஆவணப்படுத்தினார்

ஓவியங்களில்  இருந்த பூச்சிகள், தாவரங்கள் குறித்த இனப்பெருக்கவியல் உள்ளிட்ட பல   மிக விவரமான தகவல்களையும் மரியா எழுதினார் . மரியாவே பூச்சிகளின் வளர்சிதை மாற்றங்கள் குறித்து ஓவியங்களில் காட்சிப்படுத்தி ஆவணப்படுத்திய முதல் பெண்மணி.   

 17 வருட மணவாழ்வு 1685ல் விவாகரத்தில் முடிந்த பின் மரியா நெதர்லாந்தின்  (Friesland) மதம்  சார்ந்த  Labadists என்னும் அமைப்பில் தன் சகோதர கேஸ்பருடன்  இணைந்துகொண்டார். அவ்வமைப்பு கிருத்துவம் சார்ந்த பல சேவைகளை செய்து வந்தது. அக்குழுவின் நோக்கமும் நம்பிக்கையும் இயற்கையின் படைப்புகளை நெருங்கி அறிவதன் மூலம் அவற்றை படைத்த கடவுளை அறியலாம் என்பது.  அங்கு மரியா மேலும் ஓவியங்கள் வரையலானார் இரண்டு வருடங்களில் மரியாவின் பல ஓவியங்களின் தொகுதிகள் அவ்வமைப்பின் அச்சுக்கூடத்தில் பிரசுரமாகியது.

அந்த மத அமைப்பில்  அவரது  கணவர்  Graff தானும் இணைந்துகொண்டு மீண்டும் மரியா தன்னுடன் வாழவேண்டுமென பல தகராறுகள் செய்தார். 1692 ல் தாயும் இறந்த பின்னர்  மரியா ஆம்ஸ்டர்டாமுக்கு சென்று  மகள்களுடன் வசித்தார். அங்குதான் பெண்களும் வணிகம் செய்யலாம் என்பதை கண்டுகொண்டார்   அங்குதனது  ஓவியங்களை விற்று கிடைத்த வருமானத்தில் சுயமாக வாழ்ந்தார்.

1698ல் மரியாவும் மகள்களும் ஆடம்பரமான ஒரு வீட்டில் வாழ்ந்தனர்.

ஆம்ஸ்டர்டாமில் மரியாவின் படைப்புகள் நல்ல விலைக்கு போனது. அங்கு அவர் உலகின் பல பாகங்களிலிருந்து தருவிக்கப்பட்டிருந்த பாடமாக்கப்பட்ட  பல பெரிய பட்டாம்பூச்சிகள் அருங்காட்சியகங்களின் கண்ணாடிச்சட்டகங்களில் ஊசியால் பிணைக்கப்பட்டிருந்ததை பார்த்தார்.எனினும் அவர் அவற்றை ஒரு போதும் வரையவில்லை. பூச்சிகளை அவற்றின் இயற்கையான வாழிடங்களில் வரையவே விருப்பம் கொண்டிருந்தார்.

1699ல் ஆம்ஸ்டர்டாம் அரசு  மரியாவிற்கும் மகள் டோரதியாவுக்கும் சுரிநாம் செல்ல அனுமதி அளித்தது. அங்கு ஐந்தாண்டுகள் இருப்பதாக பயணத்திட்டம் இருந்த்து எனினும் 2 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு மலேரியா தொற்று உண்டானதால் அவர் ஆம்ஸ்டர்டாமிற்கு திரும்பினார். அந்த  பயணத்திற்கான நிதி திரட்டும் பொருட்டு மரியா தனது 255 ஓவியங்களை விற்றிருந்தார். அப்போது அறிவியல் நூல்களுக்கான மொழியாக லத்தீன் இருந்தது. எனவே மரியா லத்தீன மொழியை கற்றுக்கொண்டார்

அப்போது அதிகம் அறியப்பட்டிருக்காத அறிவியல் ரீதியான தேடலுக்கென மரியா அந்தப் பயணத்தை மேற்கொண்டார். ஜூன் 1699ல்  தனது 52வது வயதில்  மகள் டோரதியாவுடன்     தென்னமெரிக்காவின் சுரிநாமிற்கு மரியா பயணப்பட்டார். அது ஒரு மிக துணிச்சலான பயணம் அதற்கு முன்பு வரை ஆண்களால் அரசியல், பொருளாதார ராணுவ காரணத்துக்காகவே அப்படியான தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அக்காலத்தில்  அரிய பொருட்களை தேடும் பொருட்டு கடற்பயணம் மேற்கொண்ட ஆண்களில் யாரும் மரியாவை உடனழைத்துச் செல்லவில்லை.

அப்போதைய ஆணாதிக்க உலகில் ஒரு 52 வயது பெண்ணாக அவர் அறிவியல் தேடலுக்கு ஒரு பயணத்தை முன்னெடுத்தது மிகப்பெரிய ஆச்சரியம். தனது ஓவியங்களை விற்றுக்கிடைத்த நிதியை கொண்டே மரியா பயணத்தை செய்துமுடித்தார்.

சுரிநாமில் 2 வருடங்கள் மரியா தன் கைகளில் கிடைத்தவற்றை எல்லாம் சேகரித்தார். தலைநகர் Paramariboவின் பூங்காக்களில், சுரிநாம் ஆற்றின் கரைகளில், கரும்புத் தோட்டங்களில் மட்டுமல்ல அந்த ஆற்றை சிறு படகில் கடந்து மழைக்காடுகளிலும் தனியே பயணித்து அங்கு வாழ்ந்த தொல்குடிகளை சந்தித்து அவர்களிடமிருந்தும் பல பூச்சிகளை பெற்றார். பூச்சி, புழுக்கள் மூலிகைகள் குறித்த தகவல்களை சேகரித்தார்.  தொல்குடியினரும் மரியாவின் மீதான அன்பினால் காடுகளுக்குள் துணையாக வந்து அவரது ஆய்வில் உதவினார்கள்.

சுரிநாமில் இரு அடிமைப் பணிப்பெண்கள் மரியாவிற்கு உதவினர். மரியாவின் அத்தனை புகழுக்கும் இந்த அடிமைபெண்களே காரணம் என சொல்லப்படுகிறது. சில படைப்புக்களில் அவர்களிருவரின் பெயர்களை குறிப்பிடாமல் இரு இந்திய அடிமைப் பணிப்பெண்களுக்கும் தனது நன்றியை மரியா தெரிவித்திருக்கிறார்.

பல மரங்களில் மரியா ஏணியில் ஏறி உயரங்களில் வாழ்ந்த பூச்சிகளை சேகரித்தார்.  மலேரியா காய்ச்சல் வந்ததால் 1701ல் தான் மரியா மீண்டும் ஆம்ஸ்டர்டாமுக்கு திரும்பினார். இந்தப் பயணத்தின் ஆய்வு முடிவுகள் தான் மரியாவின் பெரும்படைப்பான Metamorphosis insectorum Surinamensium

 1705.ல் அவரது மிக பிரபலமான படைப்பான  ’’Metamorphosis Insectorum Surinamensium’’ வெளியானது அந்நூலில் சுரிநாமின் புழுக்கள், தேரைகள், எறும்பு, பல்லி, நாகம், சிலந்திகள் மற்றும் பலவித  பூச்சிகளின் வளர்சிதை மாற்றங்கள் தெளிவாக ஆவணப்படுத்த பட்டிருந்தன

லத்தீன் மொழியில் எழுதப்பட்ட  பல செதுக்கு ஓவியங்களுடன் கூடிய அந்த ஆடம்பரமான வண்ணமயமான  இந்த  நூலிலிருந்த மழைக்காடுகளின், தாவரங்களும், பல்லி பாம்புகள் உள்ளிட்ட பூச்சி இனங்களும் பல நாடுகளின் இயற்கை ஆர்வலர்களின் வீடுகளுக்குள் நுழைந்தன.

மலர்மஞ்சரிகளில் அமர்ந்திருக்கும் நீல பட்டாம்பூச்சிகளும், உணர்கொம்புகளை நீட்டிக்கொண்டிருக்கும் அந்துப்பூச்சிகளும், முட்டைகளும் தலைப்பிரட்டைகளும் சூழ இருக்கும் கொழுத்த தவளைகளும், பல இலைகளை தின்று கொண்டிருக்கும் வரிகளுடன் கூடிய கூட்டுப்புழுக்களும், மரங்களின் மீது ஏறிக்கொண்டிருக்கும் எறும்புகளும் இருக்கும் அவரது ஓவியங்கள் தத்ரூபமாகவும் அழகாகவும் மட்டுமல்லாது, அறிவியல் ரீதியாக மிகச் சரியாகவும் இருந்தன. பல ஓவியங்களில் மலரிதழ்களில் பூச்சிகள் உண்டாகிய துளைகளும் பாதி கடிக்கப்பட்ட இலைகளும், இதழ்களே இல்லாத மலர்களும் இருந்தன.

மரியாவின் நூல் ஏதேன் தோட்டம்போல அழகாக உருவாக்கப்பட்டதல்ல, இயற்கையின் விதிக்குட்பட்ட உயிரினங்கள் உள்ளபடிக்கே அதில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன

 மரியா இந்த நூலை வெளியிட்ட போது அவரது சமகால அறிஞர்கள் உயிர்களின் உயிர்களின் தன்னிச்சையான தோற்றம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அரிஸ்டாட்டிலின் காலத்திலிருந்து நம்பப்பட்ட ’’உயிர்கள் உயிரற்றவைகளிலிருந்து தன்னிச்ச்சையாக தோன்றின என்னும் கருதுகோளான spontaneous generation விவாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் மரியாவின் படைப்புக்கள் பூச்சிகளின் சிறுவிலங்குகளின் இனப்பெருக்கத்தை துல்லியமாக காட்டின. ஆண்பெண் வேறுபாட்டை இனப்பெருக்க உறுப்புக்களை துல்லியமாக விவரித்த மரியாவின் நூல் அப்போது பெரிய பேசு பொருளாக இருந்தது.

மாமிசம் உண்ணும் பூச்சிகள் அழுகும் இறைச்சியிலிருந்தும், மேலும் பல பூச்சிகள் புத்தகங்களுக்குள்ளிருந்தும், பனித்துளிகளிலிருந்து அந்துப்புச்சிகளும்,  எலிகளும் தேள்களும் பழைய நைந்து போன கம்பளியிலிருந்தும் தோன்றுவதாக  பலர் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கையில் மரியா பூச்சிகளின் இனப்பெருக்கவியலை ஓவியங்களில் ஆவணப்படுத்தினார். 

 மரியா உலகின் பல அறிவியல் அறிஞர்களுடன் தொடர்பில் இருந்தார். அவரது படைப்புக்கள் பலநாடுகளின் நூலகங்களில் பெருமைக்குரிய சேகரிப்பாக காட்சிப்படுத்தப்பட்டன. ஜெர்மனியின் மிகப்புகழ் பெற்ற கவிஞரும், பூச்சிகளின் வளர்சிதை மாற்றம் குறித்த ஆர்வம் கொண்டிருந்தவருமான  கோத்தி (Goethe) மரியாவை கலைக்கும் அறிவியலுக்குமிடையில் வண்ணமயமாக பயணித்தார் என்று புகழ்கிறார்.

 17ம் நூற்றாண்டில் பெண்கள் எளிதில் செய்துவிடமுடியாத துணிச்சலான பலவற்றை செய்தவரும் அசாதாரணமான அறிவியல் படைப்புக்களை உருவாக்கியவருமான மரியாவின் படைப்புகளின் முக்கியத்துவத்தை அந்த நூற்றாண்டில் பலரறிந்திருகக்வில்லை  

மரியா  ஓவியங்களை வரைய துவங்கி இருக்கையில் அவரது ஓவியங்களில் இருந்த பல பட்டாம்பூச்சிகள் இனம் காணப்பட்டிருக்கவில்லை. மரியாவிற்கு பூச்சிகளை இனங்கண்டு வகைப்படுத்தலில் ஆர்வமில்லை அவரே ஒருமுறை சொன்னது போல அவை எப்படி உருவாகி உருமாறி வாழ்வை முழுமை செய்கின்றன என்பதில்தான் ஆர்வமிருந்தது.  வகைப்பாட்டியலின் தந்தை லின்னேயஸ் பிற்பாடு மரியாவின் பல படைப்புக்களை பூச்சிகளின் வகைப்பாட்டின்போது உதவியாக வைத்துக்கொண்டார்.  

ஜெர்மானிய விலங்கியலாளர்  Ernst Haeckel  சூழலியல் என்று பொருள்படும்  Oecologie என்னும் சொல்லிலிருந்து ecology என்னும் சொல்லை உருவாக்கியதற்கு இரு  நூற்றாண்டுகள் முன்னரே மரியா சூழலியல் தொடர்புடைய பல நூறு ஓவியங்களை வரைந்திருந்தார்

 பல ஓவியங்களில் மரியா உணவுச்சங்கிலியையும் காட்சிப்படுத்தி இருக்கிறார். 

Metamorphosis நூலின் 18 வது ஓவியத்தில் ஒரு கொய்யா மரத்தின் இலைகளை எறும்புகளும், இலை வெட்டும் பூச்சிகளும் கடித்து தின்றுகொண்டு, தண்டில் ஏறிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் சில எறும்புகள், சிறு சிலந்தியொன்று, ஒரு கரப்பான்பூச்சியின் அருகில் ஒரு டாரன்டுலா சிலந்தி ஒரு தேன்சிட்டுவை தின்று கொண்டிருக்கிறது,  சினைப்பையுடன் ஒரு டாரண்டுலாவும் காணப்படுகிறது. 

உயிரினங்களின் வாழ்விற்கான போராட்டத்தை,  சார்லஸ் டார்வின் தனது   Origin of Species, வெளியிடுவதற்கு 150 வருடங்களுக்கு முன்னரே மரியா  தனது படைப்புகளில் விவரித்திருந்தார்.

1670 ல் அவர் வெளியிட்ட கேட்டர்பில்லர் நூலில் ஆண் பெண் பட்டாம்பூச்சிகள் கூடி முட்டை இட்டு புழுக்கள் உருவாகின்றன என்பதை முதன்முதலில் எழுதி ஆவணப்படுத்தி இருந்தார்.

மரியாவின் படைப்புகள் பிற அறிவியல் படைப்புகளில் இருந்து மிகவும் வேறுபட்டிருந்தன. உதாரணமாக வாழைமரத்தின் ஓவியத்தில் அவர் அதன் தாவரவியல் பண்புகளுடன் வாழைப்பழத்தின் சுவையையும் விவரித்திருந்தார். ஐரோப்பா அதுவரை அத்தகைய படைப்புகளை கண்டிருக்கதில்லை.

 பனையின் வேரை வெட்டி வேகவைத்து உண்ணலாம் என்னும் குறிப்புடன், அவை ஆர்டிசோக்குகளின் மையப்பகுதியை காட்டிலும் சுவையானவை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். பல ஓவியங்களில்  தாவரங்களின் மருத்துவ இயல்புகளையும் மரியா குறிப்பிட்டிருக்கிறார்.  

1715ல் பக்கவாதம் தாக்கி உடலின் ஒரு பாகம் செயலிழந்தது, அந்நிலையிலும் மரியா ஓவியங்களை வரைந்துகொண்டிருந்தார்.

மரியாவிற்கு இரு மகள்கள் ஜொஹானா மற்றும் டோரதியா (Johanna Helena Herolt Graff&    Dorotea Maria Hendriks Graff).மரியாவின் மகளான  ஜொஹானாவும் மிகப்புகழ்பெற்ற ஓவியர். ஜொஹானாவின் பல படைப்புகளில் அவளது தாயின் கையெழுத்தையும் காணலாம்’

மரியா ஜனவரி 13, 1717 ல் அவரது 70 வது பிறந்த நாளுக்கு முன்னர் இறந்த போது அவரது இறப்புச்சடங்கிற்கு வந்திருந்த  ரஷ்யப் பேரரசர் முதலாம்  பீட்டர் அலெக்சியேவிச் ரொமானோவின் தூதுவர் மரியாவின் வீட்டில் மீதமிருந்த வண்ணக்கலவைகளை பெரும் விலைக்கு பெற்றுக்கொண்டார்.

மரியாவின் இறப்புக்கு முன்னரே அவரது படைப்புகளில்  ரஷ்ய பேரரசர் பீட்டர் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது மறைவுக்குபின்னர் அவரது மீதமிருந்த பெரும்பாலான படைப்புக்களை அவரே பெருவிலை கொடுத்து வாங்கிக்கொண்டார்.  

மரியா இறந்தபின்னர் St. Petersburgல் அவரால் உருவாக்கப்பட்டிருந்த அருங்காட்சியகத்தில்  ஓவியரான டோரதியாவின் கணவர் ஜார்ஜுக்கு (Georg Gsell) நல்ல பதவியளித்து அரசவை ஓவியராகவும் வைத்துக்கொண்டார். டோரதியாவும் அங்கேயே பின்னர் வாழ்ந்தார்.

மிக சிறப்பான படைப்பாளியாக இருந்தும் உலகால் அங்கீகரிக்கப்படாத ஜேகப் மரணப்படுக்கையில் இருக்கையில் ’’இல்லை நான் முற்றிலும் உலகால் மறக்கப் படமாட்டேன், நான்தான் மரியாவின் தந்தை என உலகம் என்னை நிச்சயம் ஒரு நாள் கொண்டாடும்’’ என்றார், மரியா ஜேகப்பை காட்டிலும் பிரபலமானார்.

மரியாவின் caterpillars நூலின் மூன்றாவது  தொகுப்பை மரியாவின் மறைவுக்கு பின்னர் டோரதியா வெளியிட்டார். அவரது metamorphosis நூல் 18 ம் நூற்றாண்டில் பல  மறுபதிப்புக்கள் வெளியாகி அவர் பெயரை  உலகெங்கும் பரப்பின

சிறப்புக்கள்

மரியாவின்றப்புக்கு வெகுகாலம் கழித்தே அவரது படைப்புக்களின்  முக்கியத்துவம் உலகால் அறியப்பட்டது. 20ம் நூற்றாண்டின் இறுதியில்தான் மரியாவின் படைப்புகள் மீண்டும்  உலகின் கவனத்துக்கு வந்தன. அவரது பல படைப்புகள் அப்போது சிறப்பு செய்யப்பட்டன

  • 1905ல்  Opsiphanes cassina meriana என்னும் பட்டாம்பூச்சியும் 1967ல்  பட்டாம்பூச்சியின் துணை சிற்றினமொன்றிற்கும் postman butterfly Heliconius melpomene meriana; என்றும் மரியாவின் பெயரிடப்பட்டது.
  • க்யூபாவின் ஒரு அந்துபூச்சிக்கு  Erinnyis merianae என்றும் ஒரு  வண்ணமயமான வண்டினத்துக்கு  Plisthenes merianae என்றும் பெயரிடஒபட்டது. 
  • கும்பிடு  பூச்சியின் பேரினமொன்று  Sibylla என்றும், ஆர்கிட் வண்டினமொன்று Eulaema meriana என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.
  • Argentine black and white tegu (Salvator merianae), என்னும் வளர்ப்பு பிராணியாக வளர்க்கப்படும் பெரிய பல்லி வகைக்கும் அவரது பெயரடிப்பட்டிருக்கிறது.
  • மரியாவின் சிலந்திகள் குறித்த படைப்புகளை சிறப்பிக்கும் பொருட்டு  பறவைகளை பிடித்து உண்ணும் சிலந்தியொன்றிற்கு  Avicularia merianae  என்று பெயரிடப்பட்டது.
  • 2017ல் மற்றுமொரு சிலந்தி Metellina merianae என்று அவர் பெயரிடப்பட்டது 
  • ஒரு தேரை  Rhinella merianae என்றும் ஒரு நத்தை Coquandiella meriana  என்றும் பெயரிடப்பட்டிருக்கின்றன
  • ஆப்பிரிக சிறு பறவையினம் இன்றிற்கு Saxicola torquatus sibilla.   எனப்பெயரிடப்பட்டிருக்கிறது.
  • ஒரு தாவர பேரினத்துக்கு  Meriania எனவும், ஒரு தாவர சிற்றினம் Watsonia meriana   எனவும் பெயரிடப்பட்டது.
  • 2009  வெளியான The Year of th Flood   என்னும் நாவலில் மரியா ஒரு துறவியாக காட்டப்பட்டிருந்தார்.
  • மரியாவின் உருவப்படம் ஜெர்மனியின் 500 DM நோட்டில் சித்தரிக்கப்பட்டது
  • அதுபோலவே  0.40 DM தபால் தலையில் அவரது உருவப்படம் சித்தரிக்கப்பட்டு செப்டம்பர் 17 1987ல் வெளியிடப்பட்டது. மரியாவின் பெயரில்  ஐரோப்பாவில் பல பள்ளிகள் இருக்கின்றன,
  • மொசார்ட்டின் கச்சேரிகளில் இசைக்கருவிகளில் மரியாவின் மலரோவியங்கள் சித்தரிக்கப்பட்டன.
  • 2008ல்  பனாமாவின் அரிய கருப்பு பட்டாம்பூச்சியொன்றிற்கு Catasticta sibyllae  பெயரிடப்பட்டது.
  • 2013, ஏப்ரல் 2 ம் தேதி மரியாவின் 366 வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் டூடுல் அவரது  பூச்சிகள், பல்லிகள் தாவரங்களின் ஓவியங்களிலேயே கூகுள் என வடிவமைத்து சிறப்பித்திருந்தது .
  • ஜெர்மெனியின் இரண்டாவது  பெரிய நவீனமயமாக்கபப்ட்ட ஆய்வுக்கப்பலுக்கு   மரியாவை கெளரவப்படுத்தும் விதமாக  RV Maria S. Merian  என்று பெயரிடப்பட்டது
  • 2016ல் மரியாவின், Merian’s Metamorphosis insectorum Surinamensium  மறு பிரசுரம் செய்யபட்டது.
  • 2017ல்  மரியாவின் ஓவியங்கள் குறித்த ஒரு கருத்தரங்கு ஆம்ஸ்டர்டாமில் நிகழ்ந்தது 
  • மார்ச் 2017ல்,  ஓஹியோவின் Lloyd நூலகம் மற்றும்   அருங்காட்சியகத்தில்  மரியாவின் பல ஓவியங்களின் முப்பரிணாம  கண்காட்சியையும், பாடம் செய்யப்பட்ட பல பூச்சிகளின் கண்காட்சியையும்  ஏற்பாடு செய்திருந்தது
  • நியூயார்க் டைம்ஸின் 2017 ஜனவரி இதழில் மரியா உலகின் முதன் முதலாக பூச்சிகளை அவற்றின் வாழிடம் உணவு ஆகியவற்றுடன் வரைந்து ஒரு கூட்டு சூழலியல் தொகுப்பாக ஓவியங்களை வரைந்த முதல் ஆளுமை என ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது

மரியா அசாதாரணமான , மிக ஆர்வமுள்ள, அதிபுத்திசாலியான சுயசார்புள்ள பெண்ணாகவே அறிவியல் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறார்.

மரியா உயிரனங்களுக்கான தொடர்புகளை ஆவணப்படுத்திய முதல் அறிஞரும் கலைஞருமாவார் 

அப்போது உருவாகி இருக்காத சூழலியல் துறையை நிறுவியவரகவும் மரியாவே கருதப்படுகிறார் ஏனெனில் மரியாவின் ஓவியங்கள் உணவுச்சங்கிலி, உயிரினங்களின் ஒன்றுடன் ஒன்றான தொடர்பு, எவ்வாறு அவற்றின் வாழிடம் அவற்றின் வாழ்க்கையில் நேரடியாக செல்வாக்கு செலுத்துகிறது, எப்படி வாழ்விற்கான போராட்டத்தில் வலியவை வெல்கின்றன ஆகியவற்றை  காட்டுகின்றன. இவற்றின் தொகுப்பைத்தான்  இப்போது சூழலியல் என்கிறோம்

 உயிரற்றவைகளிலிருந்து தானாகவே உயிரினங்கள் தோன்றுகின்றன என்னும் கருதுகோளை முதலில் பொய்ப்பித்தவரும் மரியாதான்.

அறிவியலை தங்களது பாதையாக தீர்மானம் செய்யும் பெண்கள் மரியாவை முன்னோடியாக கொள்ளலாம், ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு பாதையேதும் இல்லாத பிரதேசங்களில் மரியா புதிய பாதைகளையும், அறிவியலுக்கும் கலைக்குமிடையேயான பாலங்களையும் உருவாக்கினார் பூச்சியியலுக்கும் தாவரவியலுக்குமான  தொடர்புகளை கண்டறிந்து ஆவணப்படுத்தினார்.

ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தின் ஆர்டிஸ் லைப்ரரி அருங்காட்சியங்களில்  லின்னேயஸ், அரிஸ்டாட்டில், சார்லஸ் டார்வின் உள்ளிட்ட 35 ஆண் அறிஞர்களின் படைப்புக்களுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஓவியங்களில்  M.S.Merian என்னும் பெயரைப்பார்த்தால் கூர்ந்து கவனியுங்கள்,  அறிவியல் வரலாற்றில் மரியா விட்டுச்சென்றிருக்கும் வண்ணச்சுவடுகள் அதில் இருக்கும்.

குரு-(Kuru)

  

பப்பா நியூ கினியின் ஒரு தனித்த கிராமமான வெய்சாவை சேர்ந்த 11 வயதான சிறுமி கிகியாவிற்கு திடீரென கால்கள்  ஊன்றி நிற்க முடியாமலாகியது. கைகால் மூட்டுகளில் தாங்க முடியாத வலி உண்டான போது, அவள் சத்தமாக கதறி அழுதுகொண்டும் இடையிடையே பயங்கரமாக சிரித்துக்கொண்டுமிருந்தாள். கிகியா அப்பகுதியின் ஃபோரே (Fore) தொல் குடியை சேர்ந்தவள்.

1930 வரை பப்பா நியூ கினியில் மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதே உலகிற்கு தெரியாமல் இருந்தது. ஆஸ்திரேலியாவின் தங்க வேட்டைக்காரர்கள் அங்கு சென்றபோதுதான் அங்கு லட்சக்கணக்கானவர்கள் வாழ்ந்து வந்தது தெரிந்தது

1950களில் ஆராய்ச்சியாளர்களும்   மானுடவியலாளர்களும் காவலதிகாரிகளும் அரும்பாடுபட்டு அவர்களுடன் தொடர்புகொண்டு, அங்கு சென்றபோது   அங்கு கிராமங்களில்  ஆயிரக்கணக்கில் தொல்குடியினர்  இருந்ததும் அவர்களில் பலருக்கு குறிப்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு விசித்திரமான நோய் இருந்ததும் நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து இறந்து கொண்டிருந்ததையும் கண்டார்கள்

அந்த நோய் அவர்கள் மொழியில் குரு என்றழைக்கப்பட்டது. அவ்வினத்தின் பெண்களும் குழந்தைகளும் மிக அதிக எண்ணிக்கையில்  கிகியாவைப்போலவே  நோய்வாய்பட்டு இருந்ததை அவர்கள்  கண்டறிந்தார்கள்

அவர்களில் பலருக்கு உடம்பு உதறி உதறிப் போடும் தீவிரமான வலிப்பு, பசியின்மை இருந்தது, உடல் அங்கங்கள் ஒத்திசைவு இன்றி நேராக நிற்கவோ நடக்கவோ முடியாமல் எலும்பும் தோலுமாக இருந்தனர். உடல் உதறிப்போடும் அறிகுறி வந்தவர்கள் அடுத்த  ஒரு வருடத்திற்குள் இறந்துபோனார்கள்.

ஃபோரே பழங்குடியினரின் மொழியில் குரியா என்னும் சொல் உடல் உதறுதல் என்னும் பொருள் கொண்டது. எனவே இந்நோய்க்கு குரு என்னும் பெயர் வந்தது.

இதற்கு  ’’நெகி நெகி’’ என்று அவர்கள் மொழியில் சிரிக்கும் நோய் என்னும் பெயரும் இருந்தது நரம்புகள் தனது கட்டுப்பாட்டை இழந்து விடுவதால் வெடித்து சிரிப்பதும் அந்நோயின் அறிகுறி .

அப்பழங்குடியினர் இந்த நோயும், வலியும், இறப்பும் சூனியம் அல்லது இயற்கையை தாண்டிய ஒன்றின் தண்டனை அல்லது தீவினை என்று நம்பினர்.

வரலாறு

ஃபோரே மக்கள் துவக்கக்தில் குரு ஒரு சூனியநோய் என்றும் அதன் மந்திரசக்தி பிறருக்கும் பரவுகிறது என்றும் நம்பினர். பின்னர் தீய ஆவிகள் பிடித்துள்ளதாக நினைத்தனர். உடல் நடுக்கத்தை குணமாக்க சில காலம் சவுக்கு மரப்பட்டை சாற்றை அருந்த கொடுத்து வந்தனர்

குரு குறித்த முதல் தகவல்கள் பப்பா நியூ கினியில்  (PNG) ரோந்து வந்த ஆஸ்திரேலிய காவலர்களால் 1950ல் பதிவு செய்யபட்டது. செவிவழிச்செய்திகள் 1910 லேயே குரு மரணங்கள் இருந்ததை தெரிவித்தாலும் அதிகாரபூர்வ ஆவணங்கள் 1950லிருந்துதான் கிடைத்திருக்கின்றன. 1953ல் ரோந்துக்காவலரான ஜான்,   (John McArthur),  தனது அறிக்கையில் குரு நோயின் அறிகுறிகளை பதிவு செய்திருந்தார். ஃபோரே இனத்தவர்களின் விசித்திரமான சடங்குகளால் உருவான குரு நோய் ஒருவகை மன நலக்கோளாறு என்று  அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். 

குரு கட்டுக்கடங்காமல் பெரிதாக பரவிய போதுதான் தொல்குடி இனமக்களே   பப்பா நியூ கினியில்  பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவ அதிகாரியான சார்லஸ் (Charles Pfarr) என்பவர் மூலம் ஆஸ்திரேலிய மருத்துவ அமைச்சகத்துக்கு    தகவலனுப்பினர்,

 1957ல்  அமெரிக்க மருத்துவர் கார்ல்டன் (Dr. Carlton Gajdusek) பப்பா நியூ கினியின் மருத்துவ ஆலோசகர் திரு வின்சென்ட் ஜிகாசினால் (Vincent Zigas) அழைத்து வரப்பட்ட போதுதான் அது என்ன நோயென்பது உலகிற்கு தெரியவந்தது

அந்நோய் குறித்த தனது முதல் மருத்துவ அறிக்கையை அவர் வெளியிட்டபோது, உலகிற்கு அதன் தீவிரம் புரியவில்லை.1957ல்  குரு குறித்த இவரது விரிவான ஆய்வுக்கட்டுரை,  Medical Journal of Australia வில் வெளியானது. அக்கட்டுரையில் அவர் குரு ஒரு மரபுவழி நோயாக இருக்கலாமென்றும் ஒரு வகை வைரஸினால் அது உருவாகிறது என்றும் தெரிவித்திருந்தார்

 1960 ல்  அடிலெய்ட் மருத்துவரான  மைக்கேல் அல்பெர் (Michael Alpers) இந்த மர்மமான நோயை குறித்து அறிய அந்த கிராமத்துக்கு வந்தார்,   Dr. கார்ல்டன் உடன் இணைந்து அந்நோயை ஆராய்ந்த அவர் தன் வாழ்நாள் முழுவதையும் குரு நோயை குறித்த ஆய்வுக்காக அர்ப்பணித்தார்

வலிப்பு நோய் என்னும் பொருளில் அவர்களின் மொழியில் குரு என்றழைக்கப்பட்ட அந்நோயை இருவரும் மிக கவனமாக ஆராய்ந்தார்கள். ஏன் அந்நோய் அந்த குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு மட்டும் தொடர்ந்து வருகிறது என்பதை துவக்க காலங்களில் இருவராலும் யூகிக்கவும் கண்டுபிடிக்கவும் முடியாமலிருந்தது

நோய் அறிகுறிகளை விரிவாக ஆராய்ந்தபோது இருவருக்கும்  200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே  ஆடுகளுக்கு இருந்து வந்த மூளை அழிவு நோயை குறித்த நினைவு வந்தது. அந்நோய் ஃப்ரான்ஸ் மக்களால்  trembling disease என்றும் ஆங்கிலத்தில் scrapie என்றும் அழைக்கப்பட்டது

குரு மற்றும் ஸ்க்ரேபிக்கு இடையே இருந்த ஒற்றுமைகளின் மூலம் குரு மூளையில் உண்டாகும் ஒரு நோய்  என்பது கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட இறந்தவர்களின் மூளையை நுண்ணோக்கியில் பார்க்கையில் மூளை பஞ்சு போல மாறிவிட்டிருப்பதையும், மூளையில் ஏராளமான நுண் துளைகள் இருந்ததும் தெரிய வந்தது.

மேலும் ஸ்க்ரேபியைபோலவே குருவும் ஒரு தொற்றுநோய் என்பதுவும் உறுதியானது

எனவே குருவின் தொற்றும் தன்மையை  இருவரும் உறுதி செய்ய நினைத்த சமயத்தில் தான் கிகியா குருவின் ஆரம்பகட்ட அறிகுறிகளுடன் நோய்வாய்பட்டிருந்தாள்

இந்த சோதனையை குரங்குகளில்  செய்ய  இருவரும் முடிவெடுக்கையில் படிப்படியாக நோய் முற்றி கிகியா  இறந்துபோனாள். கிகியாவின் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கி அவளது மூளையின் ஒரு சிறு பகுதி அமெரிக்காவின் ஆய்வமொன்றிற்கு அனுப்பப்பட்டது   

அங்கு டெய்ஸி மற்றும் சார்லெட்டி என்னும் இரு சிம்பன்ஸிகளின் மூளையில் கிகியாவின் மூளைக்கரைசல் ஊசியாக  செலுத்தபட்டபோது. இரு சிம்பன்ஸிகளுக்கும் விரைவில் குரு தொற்று உண்டானது. எனவே மூளையில் உண்டாகும் இந்நோய் அடுத்தவர்களுக்கும் பரவும் என்பது நிரூபணமானது.

 ஃபோரே தொல்குடியில்.பெரும்பாலும் பெண்களுக்கு அந்நோய் தொற்று உருவாகி பலர் இறந்திருந்ததால் சில கிராமங்களில் முற்றிலும் பெண்கள் இல்லாமல் இருந்ததை ஆய்வாளர்கள் கண்ட போதுதான் ஃபோரே இனமே அழியும் அபாயத்திலிருந்ததை உலகம் அறிந்துகொண்டது.

அதே சமயத்தில்   குரு நோயின்   தொற்று மற்றும் பரவலில் ஆய்வு செய்து கொண்டிருந்த  நியூயார்க்கின் மருத்துவ மானுடவியலாளர் ஷர்லி லிண்டென்பாம் (Shirley Lindenbaum), தனது ஆய்வின் முடிவில் புதிதாக ஒன்றை கண்டடைந்திருந்தார். 1960க்கு பிறகு பிறந்த யாருக்கும் குரு தொற்று இல்லை என்னும் அந்த முடிவு அக்காலத்துக்கு முன்பு வரை அத்தொல்குடியினரின் எதோ ஒரு வழக்கத்தின் மூலமே குரு உருவாகி தொற்று பரவி இருக்கும் என்பதை அறிவித்தது

ஃபோரே தொல்குடியினருடன் தங்கி இருந்து பல வருடங்கள் ஆய்வு செய்தவரான அவர் அவ்வினத்தவர்கள் அழிவின் விளிம்பில் இருந்ததால் எப்படியேனும் தங்கள் இனத்தை பாதுகாக்கத்தான் நினைத்தார்கள் என்று குறிப்பிடுகிறார்

ஷர்லி 1961ல் ஒவ்வொரு கிராமமாக சென்று தரவுகளை சேகரித்தார். அவற்றின் அடிப்படையில் 1960க்கு பிறகு பிறந்தவர்களுக்கு குரு தொற்று உண்டாகவில்லை என்பதை கண்டறிந்தார்,

எனவே அவர்களோடு பல காலம் இருந்து ஆய்வு செய்த ஷர்லிக்கு அவர்களின் விசித்திரமான இறப்புச் சடங்கு தான் அதற்கு காரணமாயிருக்கலாம் என்னும் சந்தேகம் இருந்தது

ஃபோரே இனத்தில் ஒருவர் மரணமடைகையில் அவரது சடலத்தை குடியினர் அனைவரும் சமைத்து பகிர்ந்துண்ணும் வழக்கம் இருந்தது. அது அவர்களின் தொல்நம்பிக்கையின் அடிப்படையில் பல ஆண்டு காலமாக நடந்து வந்தது 

நரமாமிசம் உண்பது குரு தொற்றிற்கு காரணமாக இருக்கலாம் என்னும் சந்தேகம் குருவை ஆராய்ந்த அனைத்து வல்லுநர்களுக்கும் இருந்ததெனிலும் அதற்கான அடிப்படை அறிவியல்  ஆதாரமில்லாததாலும் முன்பெப்போதும் அத்தகைய நோயை கேள்விப்பட்டிருக்காததாலும் அதிகாரபூர்வமாக குருவிற்கு நரமாமிசம் உண்பதுதான் காரனம் என 1967 வரை யாருமே பதிவு செய்திருக்கவில்லை

1967ல்  கிளாஸெ, மோரெ, ( Glasse,   more)  மற்றும் 1968 ல் மேத்யூஸ் மற்றும் லிண்டன்பாம்  (Mathews & Lindenbaum) ஆகியோரே நரமாமிசம் உண்பதால் குரு உருவாவதை ஆதாரத்துடன் தெளிவாக நிறுவினார்கள்.

இவர்களைப்போலவே  E. J. Field என்னும்  பிரிட்டிஷ் நரம்பியல் மருத்துவர்   1960s- 1970 களில் பப்பா நியூ கினியில் தங்கி இருந்து இந்த நோயை ஆராய்ந்தார்

குருவை  scrapie மற்றும்  multiple sclerosis. நோய்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து எழுதப்பட்ட  இவரது குரு ஆய்வுக்கட்டுரைகளை வாசித்த பிரிட்டிஷ் மருத்துவ கழகம் இவரை  புதிய மூளை நோய்களை ஆராயும் குழுவின் இயக்குநராக நியமித்தது.

இவரின் ஆய்வு முடிவுகளை ஆதாரமாகக் கொண்டுதான்  1970 BBC Horizon  நர மாமிசம் உண்பது தொடர்பான மிக முக்கியமான ஆவணப்படமாகிய New Guinea வை உருவாக்கி வெளியிட்டது

மானுடவியலாலர்களும் மருத்துவர்களும் ஆய்வாளர்களும் பப்பா நியூ கினிக்கு வரும் முன்னரே நரமாமிசம் உண்பது அங்கு சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தது, எனினும் இவர்களின் முயற்சியினால் உலகம்  , குரு என்னும் நரமாமிசம் உண்பதால் வரும் நோயை  முதன் முதலாக அறிந்து கொண்டது

  பிறகும் பல ஆராய்ச்சிகள் அதில் நடந்து ஒரு வைரஸ் இந்த குரு நோய்க்கு காரணமாக இருக்கிறது என கண்டுபிடித்து அதற்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது

 ஆனால் அது வைரஸோ பாக்டீரியாவோ பூஞ்சையோ அல்ல வெறும் புரதம், நோய் உருவாக்கும் வீரியமுள்ள புரதம் என பிற்பாடு கண்டறியப்பட்டது,

வைரஸ்கள் என்பவை மிக எளிய உடலமைப்பை கொண்டவை.ஒரு புரத அடுக்கு அதனுள்ளிருக்கும் நியூக்ளிக் அமிலம் அவ்வளவுதான் ஒரு வைரஸ், சில வைரஸ்கள் வெறும் நியூக்ளிக் அமிலம் மட்டுமே உடலாக கொண்டவை மேலும் சில வெறும் புரத அடுக்கு மட்டுமே வைரஸாக இருக்கும் அவையும் நோய்க்கிருமிகள்தான். அப்படியான ஒரு வெறும் புரத வைரஸ்தான் பிரையான் என்பது. 

குருவை உண்டாக்கும் அந்த புரதமும் தவறாக திருகிய அமைப்பை கொண்டிருந்த பிரையான்கள் தான்  (prions).  அவை மூளையின் செல்களை தாக்கி அழிக்க வல்லவை. அப்படி அழிந்துவரும் மூளையில் பல துளைகள் உருவாகிக்கொண்டிருக்கும்

இந்த தொற்று  ஃபோரே இனத்தின் Creutzfeldt-Jakob Disease, எனப்படும் நரம்பு அழிதல் நோயினால் இறந்த ஒருவரின் சடலத்தை பிறர் உண்டதால் உருவாகி இருக்கலாம் என்று யூகிக்கப் பட்டது 

ஃபோரே இனத்தவர்களில் இறப்பு நிகழுகையில் இறந்தவர்களின் உடலை சமைத்து உறவினர்கள் அனைவரும் உண்ணுவது வழக்கமாக இருந்தது. இவ்வழக்கம் வெளி உலகிற்கு தெரியவரவே வெகு காலமாகியது பின்னர் 1959ல் அரசு தலையிட்டு இறந்த உடலை உண்ணுவதை சட்டப்படி தடை செய்து அவர்களை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு வந்தது.

Endo cannibalism அல்லது ritual cannibalism என்னும் இவ்வகை நரமாமிசம் உண்ணுதலின் பின்னணியில்  ஃபோரே இனத்தவர்களின் நம்பிக்கைகள் மற்றும் தொன்மங்கள் இருந்தன.

 ஃபோரே இனத்தின் பிரபஞ்சவியல்

ஃபோரே இனத்தவர்கள் தொல்மொழியில்   அவர்கள் வாழும் பூமியை உயிருள்ளது என்று பொருள்படும் பகினா (bagina) என்று அழைத்தனர்.

 நிலப்பரப்பை  முழுமையாக உருவாக்கி முடித்த பகினா, மக்களை உருவாக்கி, மக்கள் தொகை பெருகிய பின்னர்  இனத்தின் பாதுகாவலர்களான இ அமனி (e amani) யை உருவாக்குகிறது.

இ அமனி என்பவை மலைகள் ஏரிகள் பைன் மரங்கள் மற்றும் பனைக்காடுகள். இவற்றை கடந்த பின்னர் நீத்தோருக்கான் உலகம் என அழைக்கப்பட்ட குகைகள் நிரம்பிய   வெலனந்தமுண்டி என்னும் பிரதேசம் (kwelanandamundi) இறந்தவர்களின் ஆன்மா சென்று சேரும் இடமாக தனியே வகுக்கப்பட்டிருந்தது

ஃபோரேக்களின் ஐந்து ஆன்மாக்கள்

ஃபோரேக்களின் நம்பிக்கைப்படி ஒவ்வொரு மனிதருக்கும் ஐந்து ஆன்மாக்கள் முறையே அவுமா, அமா, க்வெலா,அவோனா மற்றும் யெசெகி  ( auma, ama, kwela, aona&  yesegi ) என இருக்கின்றன. 

மரணத்தருவாயில் கடைசி மூச்சின் போது உடனடியாக உடலை விட்டு வெளியேறுவது அவுமா. அது உடனே உயிர்  நீத்தோருக்கென தனியே வகுக்கப்பட்டிருக்கும்  வெலனந்தமுண்டி  பிரதேசத்துக்கு சென்று விடுகிறது .இந்த ஆன்மா ஒரு மனிதனின்  புண்ணியங்களுக்கானது.அது தான் வாழ்ந்த பகினாவுக்கு விடை சொல்லிவிட்டு உடனடியாக உடலை நீங்கிச் சென்று விடும்.

அவுமா பாதுகாவலர்களான இ அமானியிடம் சென்று தான் இறந்த காரணத்தை தெரிவிக்கிறது. அதை கேட்ட பாதுகாவலர்கள் நீத்தோருக்கான் இடமாகிய வெலனந்தமுண்டிக்கு செல்ல ஆன்மாவிற்கு வழி காட்டுகிறார்கள்.

நீத்தோருக்கு உறவினர்கள் படையலிடும் உணவும் நீரும் செல்லும் வழியில் அவுமாவால் எடுத்துக்கொள்கிறது.

நீத்தோருலகில் வாசலில் இருக்கும் சிவப்பு ஆற்றை அடையும் அவுமா அக்கரையில் காத்திருக்கும் முன்னோர்களின் ஆன்மாவினால் வரவேற்கப்படுகிறது, அங்கு காத்திருக்கும் அவுமா, அமா என்னும் எலும்புகளின் ஆன்மாவும், க்வெலா என்னும் தசைகளின் ஆன்மாவும் வந்துசேர காத்திருக்கிறது. அவை வந்து சேர்ந்த பின்னரே தன் மூத்தோர்களிலொருவராக அது மறுபிறப்பெடுக்கும். ( ama (bones) & kwela (flesh))  

அமா (Ama) என்னும் ஆன்மா ஏறக்குறைய அவுமாவை போலத்தான் ஆனால் அதை காட்டிலும் சக்தி வாய்ந்தது. அது சடலத்துக்கு சடங்குகள் முறைப்படி செய்யப்படுகின்றனவா என கண்காணித்தபடி பூமியிலேயே காத்திருக்கும். உறவினர்கள்  மரணச்சடங்குகளை முறையாக செய்ய வழிகாட்டி, ஒருவேளை இறப்பு எதிரிகளால் நிகழ்ந்திருந்தால் அவர்களை தண்டிப்பதாக  அமா வஞ்சினம் உரைக்க செய்யும்.

இறந்தவர்களின் உடலை உறவினர்கள் உண்ணும் போது அமா அவர்களை ஆசிர்வதிக்கிறது. சடலத்தை உண்பவர்களின் ஆன்மாவாகிய அவோனா அப்போது அதிகரிக்கிறது. உடல் முழுக்க மிச்சமின்றி உண்டு முடிக்கப்பட்டதும் அமா விடைபெற்றுக்கொண்டு நீத்தோருலகிற்கு செல்லும். அங்கிருந்து பூமியிலிருக்கும் குடும்பத்தாருக்கு தேவைப்படும் உதவிகளை அமா செய்யும்

இறந்தவரின் அவோனா தனக்கு குடும்பத்தில் இருக்கும் பிரியமான குழந்தையின் உடலுக்குள் சென்று விடுகிறது. இப்படி அவோனா நுழைந்த குழந்தை நல்ல வேட்டைக்காரராகவும், அள்ள அள்ள குறையாமல் உணவை அளிப்பவராகவும் பின்னாட்களில் இருப்பார் என்றும் நம்பிக்கை உண்டு

  க்வெலா  ஆன்மா காற்றில் பயணித்து  மறைந்து நின்று கவனித்து மரணச்சடங்குகளை சரியாக செய்யாதவர்களை தண்டிக்கிறது

உடல் அழுகி கொண்டிருக்கையில் உடலிலிருக்கும் க்வெலா மிக சக்தி வாய்ந்தது என்பதால் கிராமத்தில் வாழிடங்கள் இருக்கும்  இடங்களுக்கு மிகத் தள்ளி இருக்கும் இடங்களில் தான் உடல் கிடத்தப்படும்

உடல் புதைக்கப்படுகையில் க்வெலா சக்தி குறைந்து காணப்படும். உடல் உண்ணப்படுகையில் க்வெலா, உடலை உண்ட பெண்களின் கர்ப்பப் பையில் தங்கி விடுகிறது. அங்கு அதன் பெயர் அனக்ரா ( anagra)  

உடல் சமைக்கப்படுகையில் வெப்பம் அதிகமாகும் போதுதான் க்வெலா விலகி நீத்தோருலகிற்கு செல்லும்

யெசெகி  ஆன்மா இறந்தவரின் சருமத்தில் தங்கி இருந்து க்வெலா கருப்பைக்குள் செல்லும் வரை உடன் இருந்துவிட்டு பின்னரே விடைபெற்றுக்கொள்ளு.ம் யெசெகி ஆன்மாவானது   இறந்த மனிதர், பெரும் வேட்டைக்காரராகவும், சக்திவாய்ந்தவராகவும் வாழ காரணமாக இருப்பது.

இவ்வாறான நம்பிக்கைகளின் அடிப்படையில்  முறையாக  செய்யப்படும் மரண சடங்குகள் மூலமாக  இறந்த மூத்தோர் மீண்டும் அவர்களுக்கே பிறந்து வாழ்க்கை சுழற்சி தொடர்ந்து நடக்கும் என ஃபோரே குடியினர் நம்புகிறார்கள்.

இறந்த உடலை கையாளும் முறை

(இந்த பகுதி சிலருக்கு வாசிக்க ஒவ்வாமையை உண்டாக்கலாம்) 

மரணத்தருவாயில் இருப்பவர் சில சமயம் தனது உடல் எவ்வாறு கையாளப்படவேண்டும் என்பதை சொல்லிச்செல்வது உண்டு. இல்லாவிட்டால் உடலை என்ன செய்வது என்பதை குடும்பத்தினர் முடிவு செய்வார்கள்

இறப்பு நிகழ்ந்த உடனே உடல் முழுக்க, பித்தப்பையை தவிர  பங்குபோட்டு சமைத்து உண்ணப்படும்  அல்லது சில நாட்கள் புதைத்து வைத்து மீண்டும் வெளியே எடுத்து உடலில் இருக்கும் புழுக்கள் தனியாகவும், உடல் தனியாகவும் சமைத்தும் உண்ணப்படும். 

சில சமயம் உடல் ஒரு மேடையில் கிடத்தப்பட்டு மாமிசத்தை   சிறு பூச்சிகள் (maggots) உண்ணும்படியும் வைக்கப்படும்.

ஃபோரே தொல்குடியினர்  அவர்களுடன் வாழ்ந்து மறைந்த  பிரியமானவர்களின் உடலை இப்படி புழுக்களும்,பூச்சிகளும் உண்பதை காட்டிலும் அவர்களுக்கு விருப்பமான குடும்ப உறவினர்கள் உண்ணுவதே சிறந்தது என்று நம்பினார்கள்.

இப்படி உண்ணப்படுகையில் மிகுந்த சக்திவாய்ந்த க்வெலாவின் ஆபத்துக்களிலிருந்து தப்பி அதை கர்ப்பத்தில் அடுத்த சந்ததியாக தக்கவைத்துக்கொள்வது பெண்களுக்கு மிக முக்கியமான சடங்காக கருதப்பட்டது.

இறந்தவர்களின் மீதான அன்பை, அவர்கள் இழப்பை குறித்த துக்கத்தை உடலை உண்பதன் மூலம் காண்பிக்க முடியும் என அவர்கள் நம்பினார்கள். எனவே பெரும்பான்மையான ஃபோரே உட்பிரிவினங்கள் உடலை சமைத்து உண்டார்கள்.

இறந்த உடல் ஒரு கூடையில் வைக்கப்பட்டு மூங்கில், கரும்பு அல்லது சவுக்கு காடுகளுக்குள் உறவினர்களால் எடுத்துச்செல்லப்படும்

காடுகளில், துக்கம் அனுஷ்டிப்பவர்களுக்கு நிழல் இருக்கும், இறந்த உடலின் ஆன்மாக்கள் காடுகளில்தான் மகிழ்ந்திருக்கும் என்பதால் உடல் காட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.

உடலை வெட்டித் திறந்ததுமே, பூமி உள்ளிருக்கும் ஆன்மாக்களை வாழ்த்தி வரவேற்கிறது. ஒரு உயரமான மேடையில் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் கீரைகள் காய்கறிகள் கிழங்குகளின் மீது விரிக்கப்பட்டிருக்கும் வாழை இலையின் மீது உடல் கிடத்தப்படும் . 

இடைவெளியில்லாமல் நிரப்பப்பட்டிருக்கும் காய்கறிகளின் மீது உடல் வெட்டப்படும்போது சிந்தும் திரவங்கள் வீணாகாது என்பதால் இப்படி செய்யப்படுகிறது. உடல் பாகங்களும் திரவங்களும் சிந்தி வீணானால் க்வெலாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் கசப்பு நிறைந்த பித்தப்பையை தவிர ஒரு துளி உடல் பாகமும் வீணாகாமல் அச்சடங்கு நடத்தப்படும் 

முதலில் உடலை பெண் மற்றும் ஆண் உறவினர்களுக்கிடையே சரிசமமாக பங்கு போட்டுக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

குழந்தைகளை அங்கிருந்து விலக்கி வைப்பார்கள் எனினும் சில குழந்தைகள் மரங்களின் மீதிருந்து சடங்கை வேடிக்கை பார்ப்பதுண்டு

 கைக்குழந்தைகள் க்வெலாவின் கோபத்திற்கு ஆளாக கூடாது என்பதால் அவர்கள் 4 கிமீ தள்ளி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பார்கள். 

உடல் மூங்கில் கத்தியால் வெட்டப்பட்டு, மீண்டும் சதை சிறுசிறு துணுக்குகளாக வெட்டப்பட்டு சிறு குவியல்களாக கறிப்பலா இலைகளில் குவித்து வைக்கப்படும்

உடலின் கீழ்ப்பகுதி வெட்டப்படுகையில்   பெண்களும் இளையவர்களும் இனப்பெருக்க உறுப்புக்களை பார்க்கக்கூடாது என்பதற்காக வயதான பெண்கள்  வட்டமாக நின்று மனிதத்திரை உண்டாக்குவார்கள்

உடலை வெட்டி முடித்ததும் கைகளை வாழை நார், மூங்கில் குருத்துக்கள் கொண்டு துடைத்து சுத்தம் செய்துகொண்டு  மாமிசம் வேகவிருக்கும் அடுப்பு நெருப்பில் துடைத்த நாரையும் குருத்துக்களையும் போடுவார்கள். கடைசியாக பெண்கள் கைகளை அவர்களது புல்லாடையில் துடைத்துக் கொள்வார்கள்

மூங்கில் குழாய்களில் அடைத்து நெருப்பில் வேக வைக்கப்பட்ட மாமிசம் வாழையிலைகளில் கொட்டப்படும்.

முதல் உணவு துக்கம் விசாரிக்க வந்திருக்கும் ’எனாமே’ எனப்படும் வெளியூர் உறவினர்களுக்கு குச்சிகளில் குத்தப்பட்டு வாயில் நேரடியாக அளிக்கப்படும்.

அவர்கள் உணவை கைகளால் தொடக் கூடாது என்பது நெறி. அவர்கள் ஊர் திரும்பி செல்கையில் வெஸா (wesa) என்னும் செடியின் இலைகளை மென்று நர மாமிசம் உண்ட வாயை சுத்தம் செய்து கொள்வார்கள் 

ஃபோரே குடியினரின் உட்பிரிவான அடிக்மா என்னும் அடிகமனா மொழிபேசும் உட்பிரிவில் இறந்த ஆணின் இனப்பெருக்க உறுப்புக்கள் விதவையான அவரின் மனைவிக்கு அளிக்கப்படும்.   (Atigina – atikamana),   ஆனால் தெற்குப் பகுதியின் பிரிவான பமுசாகினா (Pamusagina) குடியினரிடம் இவ்வாறான பழக்கம் இல்லை.

பிரையான்களால் அழுகி இருக்கும்   மூளை ஒரு கூரான மூங்கில் குச்சியால் நெம்பி எடுத்து வேகவைக்கப்பட்டு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அளிக்கப்படும். ஒருபோதும் 6 வயதுக்கு மேலான ஆண் குழந்தைகளுக்கு இது அளிக்கப்படமாட்டாது, ஆனால் எல்லா வயதிலும் பெண்கள் இதை உண்ணலாம்

குடிசையை விட்டு வந்திருக்காத, துக்கத்தில் இருக்கும் பெண்களுக்கு நரமாமிச உணவு கொண்டு போய் கொடுக்கப்படும்.

எலும்புகளில் பெரியவையும் மண்டை ஓடும் சில பிரிவு மக்களால் இறந்தவரின் குடிசையின் முன்பாக சாக்குப் பைகளில்  கட்டி தொங்கவிடப் படுவதும் உண்டு.  

மறுநாள் காலையில் உடல் சமைக்கப்பட்ட இடத்துக்குச் செல்லும் சில பெண்கள் மீதமிருக்கும் எலும்புகளைக் இகாகி எனும் காட்டுப்புல்லில் சுற்றி நெருப்பில் வாட்டி அவற்றை மேலும் கீழுமாக கறிப்பலா இலைகளால் மூடி கற்களால் பொடித்து மிச்சமின்றி உண்பார்கள். உடலின் எந்த பாகமும் வீணாகி விடக்கூடாது என்பதால் கவனமுடன் இருப்பார்கள்.

மாமிசம் வேகவைக்கப்பட்ட கருகிய மூங்கில் குழாய்களின் சாம்பலும் பொடித்து காய்கறிகளில் கலந்து உண்ணப்படும்

பின்னர் சமைப்பதற்கும் உடலை வெட்டுவதற்கும் உபயோகப்பட்ட அனைத்துப் பொருட்களையும் நெருப்பிலிட்டு அழிப்பார்கள். விதிவிலக்காக தாடை மற்றும் கழுத்தெலும்புகள் மட்டும் சிறுமிகளின் கழுத்தில் தாயத்தாக அணிவிக்கப்படும்.  

உடல் முழுமையாக உண்ணப்பட்டதும் இறந்தவரின் குடிசையின் வெளியே இருந்து புகை இடப்பட்டு குடிசை தூய்மையாக்கப்படும் பின்னர் பெரிய விருந்து ஏற்பாடு செய்யப்படும்

பெண்கள் எலிகளையும் சிறு விலங்குகளையும் வேட்டையாடி பிடித்து வருவார்கள் அவற்றைக் கொன்று, ரோமத்தை விதவையின் வீட்டு நெருப்பில் பொசுக்கி விதவையின் உடலில் இருக்கும் க்வெலாவை அந்த நாற்றதினால் வெளியேற்றிவிட்டு பின்னர் இறந்த விலங்குகளின் மாமிசத்தை   சமைத்து பெண்கள் மட்டும் உண்ணும் சடங்கு நடைபெறும்

பின்னர் துக்கம் விசாரிக்க வரும் உறவினர்கள் கீரை, புல் போன்ற இலை உணவு மட்டுமே உண்ணும் கவுண்டா (kavunda), என்னும்  மரணச்சடங்கின் நீட்சியான உணவுச் சடங்கு  நடைபெறும். இந்த சைவ உணவுச்சடங்கு பொதுவாக  மனிதர்கள் உண்ணக்கூடாத நரமாமிசத்தை உண்டதன் பிழையீடாக நடக்கும்.  

பின்னர் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கூட்டாக வேட்டைக்குச் என்று விலங்குகளை கொண்டுவந்து சமைத்து விருந்துண்ணுவார்கள்,  

இறந்தவரின் மனைவி மறுமணம் செய்து கொள்ளாவிட்டால் இறந்தவரின் க்வெலா அவளை பாதுகாத்துக்கொண்டு அருகில் இருக்கும். ஒருவேளை மறுமணம் செய்துகொண்டால் க்வெலாவிடம் அவள் விடைபெறும் சடங்கும் நடக்கும்.

இச்சடங்குளினால் தான் நடுக்கநோய் எனப்படும் குரு அவர்களுக்கு உண்டாகிறது என்று தெரிய வந்தபின்னர் அவர்கள் நரமாமிசம் உண்பதை நிறுத்திக்கொண்டனர். கிருஸ்துவ மிஷனரிகளும் நரமாமிசம் உண்ணக்கூடாது என்னும் விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தினர். 

நோய் அறிகுறிகள்

துவக்க அறிகுறிகளாக உடல் நடுக்கம் வலிப்பு, நிலையில்லாமை, உடல் பாகங்களின் ஒத்திசைவின்மை ஆகியவை தோன்றும். கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்கும் அறிகுறியும் இருந்தது.

நோய் முற்றும் போது வலிப்பு அடிக்கடி தீவிரமாக வருவதும்,  தாங்க முடியாத உடல் வலி, நடக்க முடியாமல் சிரமப்படுதல், பேச்சு குளறல்,தலைவலி ஆகியவை உண்டாகும். கடைசி நேரங்களில் விழுங்க , பேச முடியாமல் கோமா, தொடர்ந்து மரணம் ஆகியவை நேரும் 

குரு நோய்க்கு சிகிச்சை என ஏதும் இல்லாததால், தொற்று உண்டாகி 6 லிருந்து 12 மாதங்களில் இறப்பு நிகழும்

குரு மிக அரிதான நோய், பிரையான்கள் எனப்படும் நோய் உண்டாக்கும் புரதங்களால் இவை உருவாகி மூளையை பாதித்து இறப்பை உண்டாக்கும். 3 லிருந்து 50 வருடங்கள் வரை இந்த கிருமியின் நோயரும்பும் (incubation) காலம் இருக்கும்

 குரு மருத்துவ அறிவியல்

ஃபோரே இனத்திலும் அவர்களுக்கு அருகாமையில் வசித்த சில தொல்குடி இனங்களிலும் 1900 த்தில் குரு பரவலாக இருந்தது, 1940-50 வரையில் ஆயிரத்தில் 35 பேர் என்னும் அளவில் இறப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது.

அதிலும் குறிப்பாக மூளையை உண்ணும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்  தசைகளை உண்ணும் ஆண்களை விட அதிக தொற்று உருவாகி இருந்தது

குரு ஒரு Transmissible spongiform encephalopathies (TSEs),  வகையை சேர்ந்த நோய் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.பிரதானமாக இது சிறுமூளையை பாதிக்கிறது.

குரு தொற்றிற்கு சிகிச்சை மருந்து என எதுவும் இல்லை. மூளையில் இருக்கும் பிரையான்களை ஃபார்மால்டிஹைடில்  வருடக்கணக்காக சேமித்து வைத்திருக்கையிலும் நோய் உண்டாகும் வீரியத்தை அவை  இழக்காமலிருக்கிறது 

PrP என குறிப்பிடப்படும் பிரையான்களில் இரு வகைகள் உள்ளன  PrPc என்பது சரியான மடிப்புக்கள் கொண்ட புரதம்,  PrPsc, என்பது தவறாக திருகிய மடிப்புகள் கொண்ட குரு உருவாக்கும் வீரியமான புரதம் 

PrPsc காலப்போக்கில் PrPc புரதத்தின் மடிபுக்களை தவறாகக் திருகச்செய்து அவற்றையும் நோய்க்கிருமி ஆக்கி இருக்கலாம் என்னும்  சாத்தியத்தையும் ஆய்வாளர்கள் முன்வைத்திருக்கிறர்கள்

ஜுலை 1996 லிருந்து ஜூன் 2004 வரை நடைபெற்ற தீவிரமான ஆய்வில் 11 குரு தொற்றுக்கள் மட்டுமே  கண்டறியப்பட்டன

2005க்கு பிறகு புதிய தொற்றுக்கள் ஏதும் இல்லை, 1957ல் 200 குரு மரணங்கள் நிகழ்ந்தன, ஆனால் 2010க்குபிறகு குரு மரணங்கள் முற்றிலும் இல்லை. எனினும் பிரையான்களின் வீரியமும் நோயரும்பும் காலமும் மிக அதிகம் என்பதால் மருத்துவத்துறை குரு குறித்த எச்சரிக்கை உணர்வுடன் தான் இருக்கிறது. 

funerary cannibalism. அல்லது rithual cannibalism எனப்படும் இறப்பு சடங்கில் சடலத்தை உண்ணும் ஃபோரே மக்களின்  Endocannibalism  என்னும் வழக்கத்தினால் குரு உருவானது இவ்வாறுதான் பலரின் அர்ப்பணிப்புள்ள ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டது

நரமாமிசம் உண்பது எல்லா சமூகத்திலும் பயங்கரமானதும் விலக்கப்பட்ட ஒன்றுமாகவே இருந்திருக்கிறது. பண்டைய ரோமில் கிருஸ்துவர்கள் பலருக்காக தியாகம் செய்த ஒருவரின் உடல் ரகசியமாக சமைத்துண்ணப்படுவதாக வதந்திகள் உலவின. 

நற்கருணை எனப்படும் கிருஸ்துவின் கடைசி இரவு உணவின்  குறியீடாக திராட்சை மதுவும் அப்பமும் கிருஸ்துவின் ரத்தமும் சதையுமாக கருதப்பட்டு உண்ணப்படுவதன் மிகைப்படுத்தப்பட்ட வதந்திதான் அது​

போராளி இனங்களான  Iroquois  மற்றும் Fijians எதிரிகளின் சக்தியும் தங்களுக்கு கிடைக்குமென எண்ணி    தாங்கள் வென்ற எதிரிகளை சமைத்து உண்டனர்.  தென்னமெரிக்க பழங்குடியினரான  வாரிகளும்(wari) இவ்வாறு எதிரிகளை உண்பது வழக்கத்திலிருந்து .இது Exo cannibalism எனப்படுகிறது.  

​1979ல் வெளியான ’’நரமாமிசம் உண்பது என்னும் கட்டுக்கதை’’ என்னும் நூலில்   (Man-Eating Myth)   W. Arens அப்படியான ஒன்று எந்த காலத்திலும், எந்தச் சமூகத்திலும் நிகழ்ந்திருக்காது என்கிறார். ஒருவேளை கடும் பஞ்சத்தில் அப்படி நிகழ்ந்திருக்கலாமே தவிர மனிதர்களை மனிதர்களை எப்போதும் உண்டதில்லை என்று சொல்லும் அவர் 6 விரிவான அத்தியாயங்களில் நர மாமிசம் தொடர்பான கதைகள் நாட்டுப்பாடல்கள்  தொன்மங்கள் ஆகியவற்றை விவரித்திருக்கிறார்

  1986 ல் Peggy Reeves Sanday  என்பவர்  ’’Divine Hunger: Cannibalism as a Cultural System’’ என்னும் தனது நூலை வெளியிட்டார் அதில் நரமாமிசம் உண்பதற்காக நடைபெற்ற கொலைகளையும், மனித மாமிசம் ஊட்டச்சத்துக்களுக்காக உண்ணப் பட்டதையும்,  சில பழங்குடியினர் இயல்பாக நரமாமிசம் உண்பதையும் குறிபிட்டு எழுதி இருந்தார். cannibalism  தொடர்பான நூல்களில் இது முக்கியமான தரவுகளை கொண்டதாக இன்றளவும் கருதப்படுகிறது

 Michael Alpers, என்னும் ஆஸ்திரேலியாவின் மருத்துவ ஆராய்ச்சியாளர் குரு நோயைக் குறித்து பல ஆண்டுகள்  2012 வரையிலும் தொடர்ந்து ஆய்வு செய்து குருவினால் நிகழ்ந்த  கடைசி  இறப்பை தெரிவித்தார். மேலும்  குரு முற்றிலும் இல்லை என உலகிற்கு அறிவித்தார்.

குருவிற்கான நோபல் பரிசுகள்

  • 1976-அமெரிக்க மருத்துவர்  Daniel Carleton Gajdusek- குரு தொற்றை கண்டறிந்ததற்காக
  • 1977-அமெரிக்க நரம்பியல் மருத்துவரும்,  வேதியியலளருமான Stanley Ben Prusiner  – பிரையான்களின் ஆய்விற்காக
  • ஸ்விஸ் வேதியியலாளரும் உயிரி இயற்பியலாளருமான Kurt -பிரையான்களின் புரத அமைபை கண்டுபிடித்தற்காக.

 குரு நோயுற்றவர்களின் மூளையை உண்ட பிறருக்கு நோய் வருவதும், பைத்தியக்கார பசு நோய் (Mad Cow disease) நோயுற்ற பசுவை உண்பவர்களுக்கும் வருவதும் அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்பட்டுவிட்டது.

 மேலும் பிரையான் நோய்கள் இனி உண்டாகுமா? மான் வேட்டையாடி அதன் இறைச்சியை உண்ணும் வேட்டைக்காரர்களுக்கும், பிற நோயுற்ற காட்டுவிலங்குகளை உண்பவர்களுக்கும் இனிமேல் பிரையான் நோய் வரும் சாத்தியம் இருக்கிறதா?

இதுகுறித்துத்தான் வட அமெரிக்காவில் தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்

சமீபத்தில் வட அமெரிக்காவில் மர்மமான முறையில் உணவுண்ன முடியாமல் பட்டினி கிடந்து இறக்கும் மான்களின், எல்க்குகளின் உடலில் மூளையில் பிரையான்கள் இருப்பதை கண்டறிந்திருக்கிறார்கள் அந்த பிரையான்கள் மூளையில் மட்டுமல்ல இறந்த விலங்குகளில் உடல் முழுக்க இருந்தது

 எனவே மான்களின் இறப்பு விகிதம் இப்போது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

நோய் தடுப்பு மையமான CDC இப்போது வேட்டைக்காரர்களுக்கு பிரையான் நோய் இருக்கிறதா என்று தீவிரமாக கண்காணிக்க தொடங்கி இருக்கிறது 

உலகெங்கும் நர மாமிசம் உண்ணுதல் (Cannibalism) என்பது மானுடவியல் மற்றும் இறையியல் ரீதியாக அணுகப்படும் ஒன்றாகவே இருக்கிறது. கடவுளின் ரத்தம் சதை என உருவகப்படுத்தி அப்பமும் மதுவும் உண்ணப்படுவதும் சடங்கு ரீதியான நரமாமிசம் உண்பதின்  (Ritual cannibalism) ஒரு வடிவம் தான்

Anthropophagy  என்பது மனிதன் மனிதனை உண்ணுவது, Theophagy என்பது கடவுளின் உடல் என்று நம்பி உருவகப்படுத்திக்கொண்ட  உணவை உண்பதன் மூலம் கடவுளின் சக்தியை அருளை ஆசியை பெறலாம் என்று நம்புவதும் உண்பதும்.

ஐரோப்பாவின் மருத்துவ நரமாமிச உண்ணுதல் medical cannibalism எனப்படுகிறது. பட்டினிக் காலங்களில் உயிர்பிழைக்கும் கடைசி வாய்ப்பாக இறந்தவர்களை  உண்ணுவது Starvation cannibalism, விமான ப்பயணம் அல்லது கடல்வழி பயணங்களில் விபத்துக்களில் சிக்கி உணவுப்பொருள் தீர்ந்த போது உயிர்பிழைக்க சடலங்களை உண்பது survival Cannibalism. இப்படி பலவகையான நரமாமிசம் உண்ணும் வழக்கங்கள் உலகெங்கிலும் இருந்தன, இருக்கின்றன.

ஐரோப்பாவில்  மனித உடல்பாகங்களை மருத்துவக் காரணங்களுக்காக  உண்டவர்களை பற்றிய  ஆய்வுகள் நடந்திருக்கின்றன. ஸ்விஸ் மருத்துவர்  பாராசெல்சஸ் (Paracelsus-1493/4-1541)  மருத்துவ காரணங்களுக்காக மட்டுமல்லாது  அரசர்களும் புனித தந்தைகளும் கூட பல காரணங்களுக்காக நரமாமிசம் உண்டதை எழுதினார்.

எனினும் இன்னுமே பிடிவாதமாக உலகின் எந்த பகுதியிலும் நரமாமிசம் உண்ணுதல் என்பது நடக்கவே இல்லை என்று வாதிடும் மானுடவியலாளர்கள், வரலாற்றாய்வாளர்கள்  இருக்கிறார்கள்.

பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நாவல்களில் திரைப்படங்களில், நாடகங்களில், வீடியோ விளையாட்டுக்களில்  நரமாமிசம் உண்பது, குரு நோய் ஆகியவை சித்தரிக்கப்பட்டிருக்கிறது, உதாரணமாக: 

குரு இப்போது முற்றிலும் இல்லை. ஆனால் நரமாமிசம் உண்பது   முற்றிலும் கட்டுக்கதை அல்ல. இறந்த உடல்களின் குவியல்களின் மீது அமர்ந்து தியானம் செய்தால் அசாதாரண சக்தி கிடைக்கும் என்று நம்பிய திபெத் புத்தபிட்சுக்களை, காசியில் எரியும் பிணங்களின் உடலை தின்னும் அகோரிகளை நாம் அறிந்திருக்கிறோம்.  கடந்த 2022ல் கேரளாவில் நரபலி கொடுத்து நரமாமிசம் உண்டால் புதையல் கிடைக்கும் என்பதற்காக கொல்லப்பட்டு உண்ணப்பட்ட இரு பெண்களை குறித்த செய்திகளையும் அறிந்திருக்கிறோம்.

இந்த விக்கிபீடியா இணைப்பில் (https://en.wikipedia.org/wiki/List_of_incidents_of_cannibalism#:~:text=Accounts%20of%20human%20cannibalism%20date,the%20practice%20to%20this%20day3.) நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நரமாமிசம் உண்ட நமது நியாண்டர்தால் மூதாதைகளிலிருந்து, கணவனை, மனைவியை குழந்தைகளை, அந்நியர்களை, காதலியை கொன்று சமைத்து உண்டவர்களை பற்றிய தகவல்கள் 2022ன் கேரளா சம்பவம்  வரை இருக்கிறது. 

சந்திராயன் நிலவுக்கு சென்று சேர்ந்திருக்கும் இந்தக்காலத்தில் இவை நடக்கிறது என்னும் போது 1900களில் வெளி உலகத் தொடர்பில்லாத ஃபோரே தொல்குடியினர் இறப்புச் சடங்கில் நரமாமிசம் உண்டதில் வியப்பொன்றும் இல்லை.  

 மேலதிக தகவல்களுக்கு:

Alpers, Michael P. The epidemiology of kuru: monitoring the epidemic from its peak to its end. Philos Trans R Soc Lond B Biol Sci. 2008; 363(1510): 3707–3713.

Lindenbaum, Shirley “Kuru, Prions, and Human Affairs: Thinking About Epidemics”. Annual Review of Anthropology. 2001; 30 (1): 363–385

Shirley Lindenbaum (14 Apr 2015). “An annotated history of kuru”. Medicine Anthropology Theory.

Whitfield, Jerome T.; Pako, Wandagi H.; Collinge, John; Alpers, Michael P. “Mortuary rites of the South Fore and kuru”. Philos Trans Royal Society B Biol Sci. 2008: 363 (1510): 3721–3724.

“When People Ate People, A Strange Disease Emerged”. NPR.org. Retrieved 2018-04-08. 

தன் வாழ்வை முற்றிலுமாக குரு நோய் குறித்த ஆய்விற்கு அர்ப்பணித்த  Michael Alpers குறித்து வாசிக்க: https://cosmosmagazine.com/science/biology/the-man-who-linked-kuru-to-cannibalism/

சென்னையில் விஜி!

(விஜயரகுநாத பாஸ்கர சேதுபதி தொண்டைமான் பூபதி காளிங்கராய சுப்ரமண்ய சுந்தரவடிவேல் தனது சென்னை விஜயம் குறித்தும் அகரனுடனான நட்பைகுறித்தும் எழுதிய (முதல் எழுத்துப்) பதிவு)

எழுதுவதில் உள்ள சிக்கல் எழுதுவது அல்ல, துறை சார்ந்த வேலைகளும், நேரமின்மையும், நமக்கு எழுத்து முதிர்ச்சி இருக்குமா என்ற  ஐயப்பாடு இவையெல்லாம் தான். பிரதிபலன் பாரா பேரியற்கை எப்படி நமக்கு வேண்டுவனவற்றை வாரிவழங்கிக்கொண்டுள்ளதோ அப்படியே நம் சமூகமும். நாம் கவனிக்கவில்லையே, கிரகிக்கவில்லையே தவிர, வழங்குதல் என்றுமே வற்றுவதில்லை வரண்டுவிடுவதில்லை. எல்லோருக்கும் வாழ்வை வரையறுக்கும், வெற்றிடமாக்கும், திசைமாற்றும் புள்ளி என்று ஒன்று உண்டு,

ஓரு பேரிழப்பு, பெருந்துயரம், அவமானம், வெறுமை, பெருஞ்சுழல், பயணம், ஓர் சந்திப்பு அந்தப்புள்ளியை அணுப்பிளவாகவும் மாற்றும் அல்லது மிக எளிமையாக தடயங்களே இல்லாமல் அழித்துவிடும்.

ஒரு தனிமனிதனின் சிறப்பாளுமை, ஒரு சந்திப்பு மீளாஅற்புதங்களை நிகழ்த்தும் என்று கண்டுகொண்டேன்.

சென்னைக்கு ஒரு இலக்கிய அமர்வுக்கு சென்ற போது அகரமுதல்வன் என்ற அகரன் எப்படி ரயில் நிலையம் வந்து தன்னை அழைத்தது முதல் அரசியல் கட்சி கூட்டத்திற்கு ஆள் பிடித்துச்சென்று கட்சிக்கூட்டம் முடிந்தபின் ஆதரவற்றவர்களை கைவிட்டு வருவது போல இல்லாமல், திரும்ப பாதுகாப்பாக வழியனுப்பி வைத்த அகரனுடனான முழு பயன அனுபவத்தை என் மூத்தசகோதரி லோகமாதேவி என்னிடம் கூறினார்.

பேராசிரியையாக உள்ளதால் பொதுவாகவே நிகழ்வுகளை நேர்த்தியான விவரிப்புடன் கூறுவார் என் சகோதரி. எல்லா சந்திப்புகளும், உரையாடல்களும் பெரும்பாலும் உள்நோக்கத்துடன் தான் இருக்கும், அமையும் என்று திடமாக நம்புபவன் நான். சில சுயநலத்துடனும் சில இயற்கை விதிப்படியும் சில காரணகாரியங்களுக்காகவும் அமையும்.  ஆனால் விதிவிலக்குகள் உண்டு என அகரனை குறித்து கேள்விப்பட்டபோது உணர்ந்தேன்

தன்னை தேடி வரும் அனைவரையும் இவ்வாறே அகரன் அழைத்து, அனுசரித்து திரும்ப அனுப்பிவைப்பதாகவும் கூறினார். கூடவே அகரனின் ஈழப்பிறப்பிடம் பற்றியும் “ கடவுள் பிசாசு நிலம்” பற்றியும் கூறினார். வெகு சில நாட்கள்  நான் ஈழத்தில் வேலை செய்திருக்கின்றேன். வெகு இயல்பான என்கொடியுறவு என்பதாலும் என் இனக்கீற்று அவன் என்பதாலும் ஒரு பிணைப்பு ஏற்ப்பட்டதில் வியப்பில்லை. ஈழம் எப்போதுமே ஈர்ப்புதான் எனக்கு.

அடுத்தமுறை சென்னைக்கு சென்றால் நிச்சயம் அகரனை நான் சந்திக்க வேண்டும் என்றும்,அல்லது இதற்க்காகவே செல்ல வேண்டும் என்று கூறினேன்.ஆச்சரியத்தோடு பார்த்தாள் அக்கா. நீ அவனை பார்த்ததே இல்லையே பின் எதற்க்கு இத்தனை ஆர்வம்? என்றாள் தெரியவில்லை என்றேன்,

இரண்டொரு மாதம் கழித்து அகரன், லக்ஷ்மணன், மூர்த்தி, மணி நால்வரும் பொள்ளாச்சியை அடுத்த வேடசெந்தூரில் உள்ள எங்களது வீட்டிற்க்கு வந்தார்கள். இரண்டொருமணி நேரம் கதைத்ததில் சற்றே அறிமுகம் கிடைத்தது நால்வருக்கும். நால்வரும் ஒவ்வொரு ஆளுமை. பார்ப்பதற்க்கு வெகு இயல்பாகவும் இனிமையாகவும் இருந்தனர்.உணவு இடைவேளையின் போது இலக்கியம் மற்றும் திரைப்படம் சார்ந்தும், பகடிகளோடு அன்று பகல் போனது. மிக சிறிய சந்திப்பு அது.

கடந்த வாரம் நடைபெற்ற திரு. எம் கோபாலகிருஷ்ணன் அவர்களின் ஒரு நாள் கருத்தரங்கிற்கு அகரனிடமிருந்து அழைப்பு வந்தது. நானும் எனது சகோதரியும் சென்னைக்கு சென்றோம். முன்னிரவு விலாசம் தொடங்கி நிலப்படம் வரை மிகச்சரியான வழிகாட்டுதலோடு தகவல் வந்து சேர்ந்தது.

இலக்கியமும் திரையுலகம் இரு வேரு ஆளுமைகளைக் கொண்ட துறைகள்.

இலக்கியத்திற்கும் திரையுலகிற்கும் மொழி ஆளுமை, கற்பனை, பயணம், வாசிப்பு, புனைவு பற்றிய அடிப்படைகள், துறை சார்ந்த அறிவு, அனுபவம் எனப் பல விதிகள் பொதுவில் உண்டு, ஆனால் அதில் பயணிப்பவர் வேறு வேறு அடையாளங்களைக் கொண்டிருக்க வேண்டும்.   திரையுலகில் உள்ளவர் பெரும்பாலும் இலக்கியம் சாராமலே இருப்பர். முதல் நாள் முழுவதும் திரைத்துறை நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தார் அகரன். அணைவரிடமும் ஒரே மாதிரியான பாவனையில் இணைந்திருந்தார். அவர் பேசிய உலகத்திரைப்படம் அனைத்தும் போர்ச்சூழல், புலம்பெயர்தல், மனித உணர்வுகள் மற்றும் மனஎழுச்சி என்றே கட்டமைக்கப்பட்டிருந்தது.

ஆங்கில அமெரிக்க ஐரோப்பிய பொழுதுபோக்குப் படங்களையே பார்த்து வளர்ந்த எனக்கு அகரனினுடைய விவாதம், திரைப்படங்களைப் பற்றிய பார்வை, படத்தேர்வு, காட்சி நுகர்வு, திரை அரசியல் எனப் பல நுண்மைகளை கவனிக்க கற்றுத்தந்தது. என்னுடைய விவாதம் நிச்சயம் சிறுபிள்ளைத்தனமாகவே இருந்திருக்கும். என் வயது மற்றும் என் துறை சார்ந்த அனுபவத்திற்காக மட்டுமே அகரன் அமைதிகாத்தார் என்றே நம்பிக்கொண்டேன்.

ஒரு முறை என் சகோதரியின் மற்றுமொரு அறிமுகமான் சதீக்ஷ் என்பவரிடம் இதே போல  உரையாடிக்க்கொண்டிருந்த போது அதுவும் பிதாமகன் காந்தியைப்பற்றி கதைத்தபோது அவர் பாவம் பொறுமை இழந்து, பற்றிக்கொண்டு எரிந்தார், அவரின் உடல் மொழிசிதைந்து, அகமெய் அலறியஹை முகத்தில் காணமுடிந்தது. நரம்பு புடைக்க ஆற்றாமையை அடக்க முடியாமல் வயதின் வரம்பு மீறி …..…ஒன்றும் செய்ய இயலாததால் கூடுதலாக இரண்டு சுருட்டு புகைத்து விட்டு கூடுமானவரை வேகமாக அங்கிருந்து தன் காதலியுடன் தூர விலகி விட்டார். பாவம்

அகரன் அமைதியானவர், விருந்தின் வினயம் கருதி விவாதத்தை தொடர்ந்தார். அந்த மனசுதான் “ கடவுள்”. அனுபவமில்லாத துறைசார்ந்த பேச்சும், நகைப்பும், பகடியும் ஆளுமைகளால் பெரும்பாலும் சகித்துக்கொள்ளமுடியாது, அகரன் அப்படியல்ல என்பதை தெரிந்துகொண்டேன்.

சென்னையிலிருகும் அகரனின் இல்லதிற்கு சென்றோம் காலை உணவிற்கு. என்னதான் ஈழ எழுச்சி என்றாலும் சாய்விருக்கையில் புலித்தோல் விரிப்பு அமைக்கப்பட்டு இருந்தது. ஆச்சரியமாக கேட்டதற்கு நகைச்சுவையாக இல்லை, ஆமாம் என்று பதில் வந்தது. யோசனையூடே அவரின் தாய் என்னை எடை போட்டுக்கொண்டே இருந்தார். அவர் கடந்து வந்த பாதையை என் அக்கா முன்பே கூறி இருந்தார். மரியாதையூடே ஒரு பயத்துடன் அமர்ந்திருந்தேன். அகரனின் மனைவி ப்ரபா மிக மிக எளிமையானவர், அவர் ஈழத்தமிழில் பேசுவதை கேட்பதற்கு கொடுப்பினை வேண்டும். நாம் மறந்த ஒரு அழகு தமிழ் நடை. தமிழகம் முழுவதும் வாசிப்பில், நட்பில், இயல்பில், மரபில் இப்படி பேசினால் எப்படி இருக்கும் என்று யோசித்துக்கொண்டே அவர்கள் சமைத்த புட்டு, பருப்பு மற்றும் முட்டையை சுவைத்தோம். அகரனின் அன்பு மைந்தன் ஆதீரன் , இருவரின் கலவை. தமிழில் மைனா பாடல்களை கேட்டுக்கொண்டு இருந்தான். மைனாவை அவன் மைய்யா என்றது இனிமை.

அகரனை சிறிது வேலை செய்ய விடுவோம் என்று நானும் எனது அக்காவும் நீரதிகாரம் வெண்ணிலாவின் வீட்டிற்க்குச் சென்றோம். அவரது தாயும் இரட்டை மகள்களில்களில் ஒருவரான அன்பு மட்டும் இருந்தனர் வீட்டில்.  என்னுடன் அதிகமாக என் அக்கா பேசியது திரு ஜெயமோகன் மற்றும் திருமதி. வெண்ணிலா அவர்கள் பற்றி மட்டுமே. அவரின் மகள் அசல் என் மகள் சாம்பவியின் ஜாடையை ஒத்து இருந்தார்.  சிறிது நேரத்தில் வெண்ணிலாவும் கதிரும்(அவர் பெயர் தீபக் ஆனால்  எனக்கு கதிர் என்ற பெயர் அவருக்கு ஒத்திருந்தாக நினைக்கிறேன்) வந்தனர். பல நாள் பேசிப்பழகிய உணர்வுடன் உண்மையாக இயல்பாக உள்நோக்கமில்லாமல் பேசுவது எளிது என்று அவர்கள் குடும்பத்தைப்பார்த்து தெரிந்து கொண்டேன். இது எனக்கு புதிது. நான் அவர்களில் வேறல்ல என்பதை ஒவ்வொரு உரையாடல்களிலும் இயல்பாக்கிக்கொண்டே வந்தார்கள்.  வெகு குறைவான நேரமே அங்கிருந்தோம்.

மதியம் ஒரு புது உணவகத்திற்க்கு அழைத்துச்செல்வதாக அகரன் கூறி இருந்தார். பிரபாவுடன் இணைந்து நால்வரும் விமலம் மெஸ் சென்றோம். தீர்கசுத்த அசைவ உணவகம். பசிக்காக அல்லாமல் எங்களை மகிழ்விக்க, புதிய உணவனுபவத்தை தருவதற்க்காகவே அகரன் அங்கு அழைத்து வந்தார் என்பதை பிறகு புரிந்து கொண்டோம். வெகுசிறப்பான அனுபவம்.

மறுநாள் அகரன் நடத்தவிருந்த திரு எம்.கோபலகிருஷ்ணனின்  கருத்தரங்கிற்கு  கூட்டிச்சென்றார். அவரின் தோழமைகள் கட்டளையின்றி வேலை செய்துகொண்டிருந்தார்கள். சில சிறப்பு மேற்பாற்வைகள் செய்துவிட்டு ஒரு தமிழ்த்திரைப்பட முன்னோட்டக் காட்சிக்கு ஆயத்தமானோம்.

”நூடில்ஸ்” என்ற படம். முதன் முறையாக நானும் அக்காவும் சென்றோம்.  அன்று முழுவதும் பேரலைச்சலாக இருந்ததால் முன்னூடே அகரன் எங்களிடம் முக்கிய ஒப்பந்த விதிகளை அறிவுருத்தினார். கண்டிப்பாக தூங்க கூடாது, குறட்டையேதும் மறந்தும் விட்டுவிடக்கூடாது, நல்ல விமர்சனமாக இருக்க வேண்டும்(திரைப்படம் கவலை மறந்து ஈடுபாட்டுடன் ரசிக்கும்படியாக இருந்தது).  வழி நெடுக கலைஞர்கள் வரவேற்றார்கள். சிறிய அரங்கம். அகரனைத்தெரியாதவர்கள் மிகச்சிலரே. சில நபர்களை அறிமுகம் செய்து வைத்தார். இரண்டு மணி நேரத்திற்க்கும் குறைவாக ஓடக்கூடிய நகைச்சுவைப் படம். 

ஞாயிறு காலை நானும் எனது அக்கா மற்றும் நீரதிகாரம் வெண்ணிலா அனைவரும் திரு எம்.கோபாலகிருஷ்ணனின்  கருத்தரங்கிற் கு சென்றோம். காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடக்கம். வெண்ணிலா அவர்கள் முதலில் பேசுவதாக நிகழ்ச்சி நிரலில் அறிவிக்கப்பட்டிருந்தது, சென்னையில் 8.30 க்கு தொடங்கி மண்டபம் வருவதற்க்குள் 10.20 ஆகி விட்டிருந்தது. மிகுந்த பதற்றத்தினூடே உள்சென்றோம், அது வரையில் அகரன் எங்களிடம் கைபேசியில் அழைக்கவில்லை,நாங்கள் எங்கிருக்கிறோம் என்று கேட்கவில்லை. மிகவும் இயல்பாக எங்களை வரவேற்று அமரச்செய்தார். ஒரு 11 மணிக்கு நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம் என்று தகவல் கூறிச்சென்றார். எப்படி ஒருவர் மிகப்பெரும் ஆளுமைகள் கலந்து கொள்ளும் ஒரு கருத்தரங்கத்திற்க்கு நேரம் தவறியதற்கு பெரிய பதட்டம் ஏதுமில்லாமல் எரிச்சலில்லாமல் நிகழ்வை நேர்மறையாக கொண்டுசெல்ல முடியும்?

25 – 30 வருடத்திற்கும் குறையாமல் இலக்கிய பங்களிப்பை செய்து வருகிறார் திரு. எம்.கோபாலகிருஷ்ணன். 1994 ல் சிறுகதை எழுத ஆரம்பித்தார், 2002க்கு பிறகு தொடர்ச்சியாக எழுத்துலக பணிகளை செய்கிறார். பொதுவில், வளரும், வளர்ந்துவரும், அரியப்படாத இளம் இலக்கியவாதிகளை பெரும்படைப்பாளர்கள் முன்னிருத்துவது வழக்கம். புலம்பெயர் ஈழத்தமிழர் இளந்தமிழர் ஒருவர் , இலக்கியவட்டத்தில் , திரைத்துறையில், வேரூன்றிக்கொண்டிருக்கும் வேளையில் தன்னுடைய படைப்புகளை தரவேற்றிக்கொள்ளவே முனைவார்.   ஆனால் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை என்று திரு எம்.கோபலாகிருஷ்ணனை சிறப்பிக்கும் விதமாக, தமிழில் தற்போது பிரபலமடைந்துவரும், முறையே பங்களிப்பாற்றிவரும், திறமைமிகுந்த இளம் எழுத்தாளர்களை, பேச்சாளர்களை திரு. எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் முக்கிய படைப்புகளை படித்தறிந்து கருத்தரங்கில் பேச அழைத்திருந்தார்.

திரை விமர்சனம் போலவே திரு. எம்.ஜி யின் படைப்புகளை பகுப்பாய்வு செய்தனர் இளம் பேச்சாளர்கள். மொத்தம் ஆறு தலைப்புகள், ஒவ்வொறு தலைப்பிற்கும் இரண்டு பேச்சாளர்கள். ஒரே தலைப்பில் ஒருவர் மட்டுமே வாசிப்பை செய்தால் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டுவிடும் அபாயம் இருப்பதால் இரண்டு பேரை கூராய்வு செய்ய அமர்த்தியிருந்தார் அகரன். 

சிற்றொளியில் வீற்றிருந்த  மூலவரை பேரொளியில் உற்சவமூர்த்தியாக உலவச் செய்யும் முயற்சி என்று அகரன் முதலுரையாய் பேசும்போதே கைதட்டல் முழங்கியது.  அது உண்மையும் கூட. பன்னிரண்டு பேரும் பகுத்தாய்ந்து பேசியதை ரசிகர்களுடன் சேர்ந்து தன் முதல் திரைப்படத்தை கான வந்த இயக்குநர் போல சலனமில்லாமல் உற்சவமூர்த்தி பார்த்துக்கொண்டிருந்தது. யாரும் ஒருவரை ஒருவர் போல் இல்லாமல் தங்கள் இயல்பில்  தனித்துவமாக பேசியது வியப்பும், மகிழ்வாகவும் இருந்தது. முதல் நூலாக “அம்மன் நெசவு” நீரதிகாரம் வெண்ணிலா மற்றும் திரு. விக்னேஷ் இருவரால் பேசப்பட்டது.

அடுத்த உரை தொடங்குமுன்னே பலரும் அம்மன் நெசவு புத்தகங்களை வாங்க வரிசைகட்டியதே முதல் வெற்றியைக்காட்டியது. ஒவ்வொரு உரையின் தொடக்கத்தில் முன்னுரை வழங்கிவிட்டு தேநீர் ஏற்பாட்டினை செய்யச்சென்றார் அகரன். உரை முடிந்ததும் வாழ்த்துரை வழங்கி பின் அடுத்த உரையை தொடங்கி விட்டு மதிய உணவிற்கான ஏற்ப்பாட்டிற்கு சென்றார் .  

ஒவ்வொருவருக்கும் தனித்தனியே விருந்துபச்சாரம் செய்து முடித்து மதிய அரங்கு ஆரம்பித்தது. பன்னிரண்டு ஆய்வுகள் முடிந்தவுடன், சிறப்பு அழைப்பாளர்கள் தங்கள் பங்கினைச் செய்ய  முடிவாக திரு எம்.ஜி அவர்கள் பேசினார். நிறைய இடங்களில் நெகிழ்ந்து, கண்பணித்து தனது இதயபூர்வமாண நன்றிகளை நெகிழ்வுடன் கூறினார்,  மிகச்சுருக்கமான பேச்சு.

ஞாயிற்றுக்கிழமை, சென்னை கூட்ட நெரிசல், மதிய அசைவ உணவு, ஒருநாள் விடுமுறை போன்ற பல காரணங்களைத் தாண்டி அகரனின் அன்பிற்கும்,  திரு. எம்.கோபாலகிருஷ்ணனின் தன்னலமற்ற இலக்கிய அர்ப்பணிப்பிற்கும், இதுபோல் கருத்தரங்கிற்கு இசைவாகாமல் இருப்பது எதிர்கால இலக்கிய  உலகிற்கு கேடு என்று வருகை தந்து அரங்கை நிறைத்த சொந்தங்களுக்கும் நன்றி கூறி விடை கொடுத்தது அந்நாள்.

போர்ச்சூழலில் பிறந்து, துயரங்களால் தத்தெடுக்கப்பட்ட தம்பி அகரன். புலம்பெயர்ந்தவர்கள் பொதுவில் தன்னை தன் குடும்பத்தை தன் சுற்றத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதிலேயே கவனமாக இருப்பர்.  பிறப்பிடத்திலிருந்து முற்றிலுமாக வெளியேற்றப்படுதலின் தாங்கொணாத்துயர் புதிய முயற்சிகளுக்கும், பெறிய முன்னேற்றத்திற்கும், துணிந்த பரிசோதனைகளுக்கும் தடையாகவே இருக்கும். அதற்கு நாம் திருப்திகொள்ளும் வகையில் சப்பைக்கட்டுகள் நிறைந்து கிடக்கும். திருமணத்தில், வேலையில், சமூகத்தில் நமது போரட்ட வைபவங்கள் மாறி மாறி அமையப்பெற்று நம்மைச் சமூகப்போராளியாக மாற்றுவது போல இல்லை இந்த வாழ்விடப்பெரும்பெயர்ச்சி. மிகச்சரியான திட்டமிடல், எளிய பணிவான வாழ்வு, கடும் பயிற்சி, தொடர் முயற்சி, நன்றியுணர்வு,  தாய்மொழிப்பற்று, வாசித்தல், நட்புபாரட்டுதல், பயணம், பக்தி என்று பலதுறைகளில் தன்னை அர்ப்பணிப்பவருக்கு மட்டுமே அருளப்படும். அகரன் அருளப்பட்டவன்.  அகரனின் நட்பை நான் பொக்கிஷமாக பாதுகாப்பேன்.

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑