லோகமாதேவியின் பதிவுகள்

Month: January 2023

சோமக்கொடி

பழங்குடியினத்தவர்கள் தாவரங்களுடன் கொண்டிருக்கும் நெருக்கமான தொடர்பு குறித்தான ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறேன். குறிப்பாக அவர்கள் சமயச் சடங்குகளில் பயன்படுத்தும் போதைப் பண்புகள்  கொண்ட  தாவரங்கள் குறித்து அறிய ஆர்வம் கொண்டிருக்கிறேன்.  இவை குறித்த ஆய்வுகளை கல்லூரியில் மாணவர்களுக்கு அளிப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் நான்  தனிப்பட்ட முறையில் தரவுகளை சேகரித்து கட்டுரைகள் எழுதுகிறேன்.

எந்த பழங்குடியினப் பகுதிகளுக்கு சென்றாலும் இந்த தாவரங்கள் குறித்த தகவல்களை சேகரிப்பதில் ஆர்வமுடன் இருப்பேன்.  

திரு ஜெயமோகன் அவர்கள் ஏற்பாடு செய்த, கோவை பாலு அவர்களின் பண்ணை வீட்டில் நடந்த கவிதை முகாமில் கலந்து கொள்ளும் முந்தைய நாள் தருணுடன் பரம்பிக்குளம் வனப்பகுதிக்கு புகைப்படங்கள் எடுப்பதற்காக சென்றிருக்கையில் கொஞ்சமும் எதிர்பாராமல் யானைப் புளி எனப்படும் எண்டடா ரீடி என்னும் கொடியை பார்த்தேன். அதை நேரில் பார்க்க முடியும் என்று நினைத்திருக்கவில்லை. மாபெரும் பச்சை வாட்களைபோல அவற்றின் காய்கள் தொங்கிக் கொண்டிருந்தன.  

இக்கொடியை ஆப்பிரிக்காவில் கனவுக்கொடி என்று அழைக்கிறார்கள். ஆப்பிரிக்க பழங்குடியினர் இதன் கடினமான விதைகளை உடைத்து, எரித்து அந்த போதை தரும் புகையை நுகர்கிறார்கள். இந்த புகை மறைந்துபோன முன்னோர்களிடம் தொடர்புகொள்ளவும், கடவுளிடம் பேசவும் வைப்பதாக நம்புகிறார்கள். 

அங்கிருந்த (ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃப்ரீமேன் போலவே இருந்த) பழங்குடியின முதியவர் ஒருவரின் அனுமதி பெற்று கொஞ்சம் விதைகளை எடுத்து வந்தேன். சிலவற்றை பரிசளித்துவிட்டு சில விதைகளை  என் அலுவலக மேஜையில் வைத்திருக்கிறேன்.

கொழிஞ்சாம்பாறை எனும் கேரளப் பகுதியில் சந்தித்த ஒரு பழங்குடியினத்தவர் உலர்ந்த மிளகுக்கொடிகளை துண்டுகளாக்கி இடுப்பில் கட்டி வைத்திருக்கிறார், அவ்வப்போது அவற்றை பீடி போல புகைக்கிறார். அவர்கள் இனத்தில் அது பலநூறு ஆண்டுகளாக பழக்கம் என்றார் . மிக மிக புதிதாக  அந்த உபயோகத்தை கேள்விப்பட்டேன். 

யானைப்புளி

அவர் எனக்கு சில வெள்ளை இஞ்சித் துண்டுகளை அளித்தார். அவை ஷாம்பு ஜிஞ்சர் (Zingiber zerumbet) எனப்படும் தாவரத்தின் அடிக்கிழங்குகள். சிறு கூம்பு போல அவற்றிலிருந்து உருவாகும் மலர்களில் சேகரமாகும் பிசிபிசுப்பான திரவம் தலைமுடியை அலச பயன்படுத்தப்படுகிறது என்றார். இப்போது அவை என் வீட்டில் செழித்து வளர்கின்றன.  நாங்கள் அதை பயன்படுத்திக் கொண்டும் இருக்கிறோம். நல்லதொரு ஆய்வு கட்டுரையையும் அதை குறித்து எழுதி வெளியிட்டேன்.  இதுபோல தொல்குடித்தாவரவியல் துறை அளிக்கும் சுவாரஸ்யங்கள் எண்ணற்றவை.

யானைப்புளியின் பெரிய விதைகள்

முதன்முதலாக   நான் வாசித்த பழங்குடியினத்தவர்கள் சடங்குகளில் பயன்படுத்தப்படும் போதையேற்றும், மனமருட்சி உண்டாக்கும் மற்றும் இல்பொருள் தோற்றம் உண்டாக்கும் தாவரங்களான  Enthoegens குறித்த நூல் ’’தெய்வங்களின் தாவரங்கள்’’. 

அமெரிக்க உயிரியலாளர், மனிதவியலாளர் மற்றும் நான் ஈடுபட்டிருக்கும் தொல்குடித்தாவரவியல் துறையை தோற்றுவித்தவரான ரிச்சர்ட்,  புல்லரிசிப் பூஞ்சையிலிருந்து LSD யை கண்டறிந்த  வேதியியலாளர் ஆல்ப்ரெட் ஹாஃப் மேனுடன் இணைந்து எழுதிய நூல் இது.(“Plants of the Gods: Their Sacred, Healing, and Hallucinogenic Powers -Richard Evans Schultes & Albert Hofmann Christian Hofmann)

20 ஆண்டுகளுக்கு முன்னர் இரவலாக  வாசிக்க கிடைத்த இந்த நூலே நான் ஈடுபட்டிருந்த விவசாயம் சார்ந்த தொழிற்சாலை கழிவுகளை மட்க செய்து உரமாக மாற்றி மண்வளத்தை, பயிர்களின் சாகுபடியை மேம்படுத்தும் ஆய்வுகளிலிருந்து முற்றிலுமாக வெளிவந்து Ethnobotany என்னும் தொல்குடித்தாவரவியலுக்குள் என்னை அழைத்து சென்றது.

ரிச்சர்ட் பல ஆண்டுகள் அமேஸான் பழங்குடியினருடனேயே வாழ்ந்து இந்த நூலை எழுதினார்.இந்த நூல் போதைத்தாவரங்கள் ஏற்படுத்தும் உளவியல் மற்றும் சமூகவியல் தாக்கம்,  பழமையான சமூகங்களில் உள்ள இனவியல், வரலாறு மற்றும் நரம்பு மருந்தியல் தகவல்கள் அடங்கிய  மிக  பயனுள்ள தொகுப்பு. 

“தெய்வங்களின் தாவரங்கள்”  அமேஸான் பழங்குடிகள் உள்ளிட்ட உலகின் பல பழமையான கலாச்சாரங்களின் மதச் சடங்குகள் சார்ந்த, பரவசமூட்டும், கிளர்ச்சியடையச் செய்யும், மாயத்தோற்றம் உண்டாக்கும் அல்லது மனம் பிறழச் செய்யும் பொருட்களை அளிக்கும் தாவரங்கள், அச்சடங்குகளின் தெய்வங்கள், அவற்றின் வேதிப்பொருட்கள், பிற தாவரவியல் தகவல்கள், அவை கிடைக்கும் பருவங்கள் , குணப்படுத்தும் நோய்கள், அவற்றை மருந்தாக தயாரிக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை விவரிக்கிறது. இவற்றின் பக்க விளைவுகளும் நச்சுத்தன்மையால் விளையும் ஆபத்துக்களும் கூட குறிப்பிடப் பட்டிருக்கிறது.

பழங்குடியின மதச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் புனிதத் தாவரங்களின் நூற்றுக்கணக்கான அழகிய வண்ணப் புகைப்படங்களும், விரிவான விளக்கங்களும் கொண்ட இந்நூல் ஒரு  அரிய தாவரவியல் பொக்கிஷம்.

இதில் மாண்ட்ரேக் கிழங்குகள், ஊமத்தை மலர்கள், கொடைக்கானலில் இப்போது கிடைக்கும் போதைக்காளான்கள், அட்ரோபா பெல்லடோனா, மெக்ஸிகோவின் பெயோட்டி போதைக்கள்ளிகள் உள்ளிட்ட பல போதைத் தாவரங்கள் விவரிக்கப்பட்டிருக்கிறது. 

இந்நூல் அளித்த ஆர்வத்தினால் hallucinogenic plants குறித்து தமிழில் ஒரு நூல் எழுதவிருக்கிறேன். அவை குறித்த தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.மெக்ஸிகோவின் நீலக்கள்ளிகளிலிருந்து கிடைக்கும் டெக்கீலா, ஜப்பானின் அரிசி மதுவான ஸாகெ, கோவாவின் முந்திரிக்கனிச்சாற்றின் ஃபெனி ஆகியவற்றை குறித்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.அவை ஒரு தொகுப்பு நூலாக வெளிவரவிருக்கின்றது.

வெண்முரசிலும் பல வகையான தாவரங்களிலிருந்து பெறப்பட்ட மது வகைகளும், சிவமூலி, அகிபீனா, சோமக்கொடி போன்றவைகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

பீமன் பாறைக்குழிவுளில் நொதிக்க வைத்து குரங்குகளுடன் அருந்தும் பழ மது, ஈச்சங்கள், பனங்கள், பிரபாச புல்லிலிருந்து வடித்தெடுக்கப்படும் மது, பீதர்நாட்டு எரி மது, யவன மது,  திரிகர்த்த நாட்டு கடும் மது, இன் தேறல்கள், தானியங்களை நொதிக்க செய்து எடுக்கும் சூரம், காட்டுக்கொடிகளை கலந்து நீரிலிட்டு கொதிக்க வைத்து எடுக்கப்பட்ட சோமகம், ஊனை புளிக்க வைத்து எடுக்கப்பட்ட துர்வாசம்.  அகிபீனாவின் இலைகளை கலந்து செய்யப்பட்ட ஃபாங்கம், மதூக மலரை அழுகச் செய்து நீரில் கொதிக்க வைத்து எடுக்கப்படும் மலர் மது,  பீமனுக்கு அளிக்கப்படும்  விஷம் கலந்த வடிநறவம் என்று பல வகைகள் வெண்முரசில் இருக்கின்றன.

பூரிசிரவஸின் நாட்டின் மத்யகீடம் என்னும் கடுமையான மலைமது இளம்சூடாக இருக்கையில்  சிறுவிரலளவான பெரிய வெண் புழுக்களை அதில் போடுவார்கள். அவை வெம்மையை அறிந்ததும் உயிர்கொண்டு எழும். விழித்த கணம் முதல் மதுவில் திளைத்து குடிக்கத்தொடங்கும். துழாவித் துடித்து உள்ளறைகளெங்கும் மது நிறைந்து தடித்து உயிரிழந்து ஊறி மிதக்க தொடங்கும்போது எடுத்து ஆவியில் வேகவைத்து அரிசி அப்பங்களின் நடுவே வைத்து உண்பார்கள்.  

கிழங்குகளிலிருந்தும் அரிசியிலிருந்தும் வாற்றி எடுக்கப்பட்ட எரியும் அனல் துளி போன்ற கடும் மது, வெல்லத்தை நீரில் ஊறவைத்து புளிக்கவிட்டு நொதித்த கலவையை மெல்லிய வெம்மை அளித்து ஆவியாக்கி அதை குளிரவைத்து எடுக்கும் மரபான மது, ஊன் புளிக்க வைத்த குமட்டும் கெடுமணம் கொண்டதும் பித்தெடுக்கவைப்பதுமான அரிதாக சிலரால் அருந்தப்பட்ட மது ஆகியவையும் வெண்முரசில் சொல்லப்படுகிறது. 

வெண்முரசின் வேள்விகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சோமக்கொடி, சோமச்சாறு, சோமரசம் ஆகியவை சடங்குகளில் பயன்படுத்தப்படும் entheogen  வகையில் வருகிறது.

இந்த சோமக்கொடி அல்லது செடி என்னவென்பது இன்னும் அவிழ்க்கப்படாத ஒரு புதிராகவே இருக்கிறது.

ராஜசூயம் போன்ற பெரு வேள்விகளில் மட்டுமல்லாது வேறு பல இடங்களிலும் சோமக்கொடியின் ரசம் வெண்முரசில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

முதற்கனலில் பொற்கிண்ணத்தில் சியாமை கொண்டுவரும் சோமக்கொடி போட்டு காய்ச்சி எடுத்த புதுமணம் கொண்ட திராட்சை மதுவை சத்யவதி அருந்துகிறாள். அதை எடுத்து மெல்லக்குடித்தபடி இருளையே பார்த்துக்கொண்டிருக்கும் சத்யவதிக்கு அவ்விருளின் துளி ஒன்றை அவளுள் ஏற்றிக்கொள்வது போல, உள்ளே விரிந்து பரவும் ஒளிக்கு மேல் இருளைப் பரப்புவதே அதன் பணி என்பதுபோல சோமம் பரவுகிறது

//நீர்ச்சுனைகளுக்கு அருகே நீரோடும் பசுங்குழாயெனக் கிடக்கும் சோமச்செடி. அதற்கு நீராழத்தின் வாசனை. நீரிலிருந்து ஆழத்தை மட்டும் எடுத்து சேர்த்துக் கொள்கிறது. நிழல்களாடும் ஆழம். அடித்தட்டின் பல்லாயிரம் மென்சுவடுகள் பதிந்த மௌனம். சோமம் உடலுக்குள் ஒரு காட்டுக்கொடியை படரவிடுகிறது. நரம்புகளில் எங்கும் அது தளிர்விட்டுப் பரவுகிறது// 

இந்த வரிகள் சத்யவதிக்குள் சோமபானம் செய்வதென்ன என்பதை சொல்லுகின்றது 

வேதங்களில் சோமரசம் எடுப்பதை குறித்து பல இடங்களில்   வெண்முரசில் சொல்லப்பட்டிருப்பது போலவே சொல்லப்பட்டிருக்கிறது. பழங்காலத்தில் சோமரசம், சோமக்கொடிகளை கல்லில் இட்டு இடித்து சாறு எடுக்கப்பட்டிருக்கிறது  பார்லியுடன் சேர்த்து வேக வைக்கப்பட்டோ அல்லது பால்/ தயிரில் கலந்தும்  தயாரிக்கப்பட்டிருக்கிறது

பன்னிரு படைக்களத்தில் இந்திரபிரஸ்த வேள்வியில் பைலர் தௌம்யரிடம் சென்று ஆணை பெற்று வைதிகர்களின் அவைக்கு வந்து வேதம் பிறந்த தொல்மொழியில் அங்கே சோமம் பிழியவிருப்பதை அறிவிக்கிறார்.பதினெட்டு இளைய வைதிகர்கள் ஈரப்பசும்பாம்புக் குஞ்சுகளைப்போல சுருட்டப்பட்டிருந்த  சோமக் கொடிகளை மூங்கில்கூடைகளில் சுமந்துகொண்டு வந்து எரிகுளங்களுக்கு முன்னால் வைக்கின்றனர்.

 “தேவர்களுக்கு இனியதும் தெய்வங்களுக்கு உரியதுமாகிய சோமச்சாறு இங்கு பிழியப்படுவதாக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று தருமன் ஆணையிட்டதும் மரத்தாலான நூற்றெட்டு உரல்களில் இளம் வைதிகர்கள் சோமக்கொடியை அவ்வுரல்களுக்குள் இட்டு வேதத்தின் சந்தத்திற்கு ஏற்ப மெல்லிய உலக்கைகளால் குத்தி நசுக்கி, அப்பசும்விழுதை எடுத்து வலக்கை கீழிருக்க பிழிந்து மரக்கிண்ணங்களில் தேக்குகின்றனர். நூற்றெட்டு கிண்ணங்களில் சேர்க்கப்பட்ட சோமச்சாறு முப்பத்தாறு எரிகுளங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.தர்ப்பையால் சோமச்சாறை தொட்டு எரியில் எழுந்த தேவர்களுக்கு அளித்து வேதம் ஓதுகின்றனர் வைதிகர்கள்.

ரிச்சர்டின்  ’’தெய்வங்களின் தாவரங்கள்’’ நூலுக்கு அடுத்து வெண்முரசில் இவற்றை வாசிக்கையில் இரண்டும் இணைந்து தொல்காலத்தில் எப்படி சடங்குகளில் இவை பயன்படுத்தப்பட்டிருக்கும் என்னும் சித்திரம் உருவானது.

வெய்யோனில் கெளரவர்கள் ஜெயத்ரதனுடனும் நடத்தும் கள்ளாட்டில் துரியோதனன் “கள் அல்ல. இமய மது அது. திரிகர்த்தர்களின் நாட்டிலிருந்து வருகிறது. சோமக்கொடியின் நீரைப் பிழிந்து அதில் நறுமணம் சேர்த்து இந்த மதுவை செய்கிறார்கள். இதை அருந்துபவர்கள் விண்ணுலகுக்குச் சென்று அங்குள்ள தேவகன்னியருடன் ஆடி மீள்வர்’’ என்கிறான் 

இமைக்கணத்தில் அர்ஜுனனிடம் இறைவைன் ’’மூன்றுவேதம் அறிந்தோர், சோம மது உண்டோர், பழியகன்றோர் என்னை வேள்விகளால் வழுத்தி வானுலகை வேண்டுகின்றனர்’’ என்கிறார்

இமைக்கணத்திலேயே உதங்கரிடம் இளைய யாதவர் சோம மதுவின் இனிமையை குறிப்பிடுகிறார் 

வெண்முகில் நகரத்தில் திருதிராஷ்டிரர் திரௌபதி நகர் நுழைகையில் ’’நகரத்தையே சோமச்சாறால் நிரப்புங்கள்’’ என ஆணையிடுகிறார்.

பல வேள்விகளில் சோமரசம் சிறு பொற்கிண்ணங்களில் பரிமாறப்பட்டு அவையமர்ந்திருந்த அரசர்கள் அனைவருக்கும் அளிக்கப்படுகிறது. 

சோமனுக்குப் பிடித்த உணவு சோமரசத்தில் ஊறவைத்த மானுட இதயங்கள் என்கிறது பிரயாகை 

இப்படி சோமக்கொடி, அது முக்கிய சடங்குகளில் இடம்பெற்றிருப்பது, சோமக்கொடியிலிருந்து சாறு பிழிவது, சோம ரசம் அருந்துவது என பல இடங்களில் வெண்முரசு சோமக்கொடியை பேசுகிறது

அதர்வ வேதம் சோமச்செடியினை போன்ற இயல்புடைய பிற செடிகளையும் குறிப்பிடுகிறது அவற்றில் கசகசா செடி, பார்லி மற்றும் தர்ப்பை ஆகியவை உள்ளன. அதர்வ வேதம் கூனைப்புல் எனப்படும் Imperata cylindrica  என்னும் நாணல் வகையையும் போதை தருவதாக குறிப்பிடுகிறது. இந்த நாணலின் தோற்றம் வெண்முரசின் பிரபாச புல்லை ஒத்திருக்கிறது.

எளிதில் எரியும் தன்மை கொண்ட, காட்டெரிக்கு காரணமாக இருக்கும், வெண்னிற மலர்க்குவையை கொண்டிருக்கும் இந்த புல்லை வெண்முரசு படைப்புல் அத்தியாயத்தில்;

//அந்நாணல் தன்னுள் நெய் நிரப்பி வைத்திருப்பது. ஆகவே செந்தழலுடன் சீறி வெடித்து எரியத்தொடங்கியது. 

’’நாணல் புல்லின் நுரை போன்ற வெண்மலரின் மகரந்தத்தையும் தேனையும் பிழிந்தெடுத்துச் செய்த மது.”

’’சதுப்பில் மலரும் பெருங்குவளை மலரின் தேனும் பொடியும் சேர்த்த மது பலராலும் விரும்பப்பட்டது. ஒருவகை கொடியின் தண்டு மதுவில் நுரையை நிறைத்தது.//

இந்த விவரிப்புக்கள் பிரபாசபுல்லென்பது  கூனைப்புல்லாக இருக்கலாம் என்று எண்ண வைக்கிறது

அதே பகுதியில் //பிரஃபாச க்ஷேத்திரத்தின் கடலோர எல்லையில் செறிந்திருக்கும் பெருநாணலின் இளந்தளிரைப் பிழிந்து சாறெடுத்து அதை மதுவுடன் கலக்கலாம் என்று கண்டுபிடித்தனர். அது மதுவின் மயக்கை மேம்படுத்தியது. அதை அருந்தினால் எண்ணங்களும் கனவுகளும் மட்டுமன்றி கண்முன் தெரியும் காட்சிகளும்கூட நொறுங்கி ஆயிரம் பல்லாயிரம் சிதறல்களாக மாறிவிடும் என்று கூறினார்கள்//. என்று சொல்லப்பட்டிருக்கும்.

மெக்ஸிகோ பழங்குடியினர் இப்போதும் பெயோட்டி கள்ளிகளை உலரவைத்து சமயச் சடங்குகளில் பயன்படுத்துகின்றனர். இந்த கள்ளியை உண்ணும் போது வெண்முரசில் சொல்லப்பட்டிருப்பதைப்போலவே  உலகம் கலைடாஸ்கோப்பின் வண்ணச்சிதறல்களாகி விடுவதாக சொல்லுகிறார்கள். மெக்ஸிகோவில் பெயோட்டிகள் நோய்களை குணப்படுத்தும் சடங்குகளிலும் உபயோகிக்கப்படுகின்றன.

வேதங்களும் புராணங்களும் , சோமக்கொடியை சுற்றி பெரும் மாயமும் தெய்வீக சக்தியும் இருந்ததாக சொல்கின்றன சோமக்கொடியே ஒரு  தெய்வமாகக் கருதப்பட்டது,   

சோமம் கடவுளாகவும் கருதப்பட்டு சோமன் என்னும் தெய்வமாகவும் வழிபடப்பட்டது. சோமன்   மண் சார்ந்த தெய்வமாகக் கருதப்பட்டான். வேதப்பாடல்கள்  பத்து  வெண்ணிறக் குதிரைகள் கொண்ட மூன்று சக்கரங்கள் கொண்ட தேரில் வரும் இவனைப் போற்றுகின்றன. “சோமலதை” எனும் ஒருவகைச் செடியிலிருந்து பெறப்பட்ட போதை தரும் பானமாக இவன் கருதப்படுகிறான்.  

டயோனிசஸ்

இதுபோலவே கிரேக்க தொன்மங்களில் டயோனிசஸ் திராட்சை அறுவடை, திராட்சை ரசம், செழிப்பு, பண்டிகைகள், மதக் கொண்டாட்டங்கள், சடங்கின் போது ஒருவருக்கு ஏற்படும் ஆவேசம் மற்றும் நாடகக்கலையின் கடவுளாகக் கருதப்படுகிறார் . இவரே ரோமானிய தொன்மங்களில் பேக்கஸ் எனப்படுகிறார்.

‘’சோமா குடிப்பவருக்கான  இரவு  இன்பத்திற்கானது

 தூய  சோமத்துளிகள் தயிருடன் கலக்கப்படுகின்றன

பரிபூரண பலத்துடன் இருக்கும் இந்திரனே 

நீ சோம பானத்தை அருந்தவே உருவானவன்

வலிமை மிக்க இந்திரனே, 

இசையை நேசிக்கிறவனே, இந்த வேகமான சோமபானம்

இந்த முனிவர்களுக்குள்  நுழைந்து 

அவர்களுக்கு  ஆனந்தத்தைக் கொண்டு வரட்டும்’’

இப்படி பல நூறு பாடல்களில் சோமத்தை குறித்து சொல்லும் ரிக் வேதம்  சோமத்தாவரங்களில் பல வகைகள் இருந்ததாகவும் சொல்லுகிறது

ரிக்வேதத்தின் 9வது மண்டலம் 114 பாடல்களில் சோம ரசத்தை தூய்மைப்படுத்துவதை விவரிக்கிறது.. ஒரு பெண் தன்னை ஆண்களின் முன்பாக கவர்ச்சியானவளாக காட்டிக்கொள்ள சோமச்செடிகளை மென்று தின்றாள் என்கிறது இதே வேதம்.

சோம ரசம் பிழிகையில அதனுடன் பொன்னும் அருமணிகளும் சங்குகளும் நன்முத்துக்களும் வைடூர்யமும் கலந்து இடிக்கப்பட்டதாவும் பண்டைய நூல்களில் குறிப்புகள் உள்ளன.

சோமத்தாவரம் ஒரு கொடி, ஒரு நீர்த்தாவரம், அது தாமரை, அது அல்லி, அது ஒரு மலைப்பகுதிச்செடி,  அது ஒரு பாலை நிலத்தாவரம் என பலவகையான யூகங்கள் முன்வைக்கப்படுகின்றன எனினும் உறுதியாக சோமக்கொடி அல்லது செடி என்பது இதுதான் என இப்போது வரை எதுவும் அடையாளம் படுத்தப்படவில்லை

அரளிக்குடும்பத்தை சேர்ந்த  மலைப்பாங்கான பகுதிகளில் வளரும் கொடித்தாவரமான Asclepias acida என்னும் தாவரம்தான் இது என்று  சிலர் கருதுகிறார்கள். சோமக்கொடியின் சாற்றுடன் கஞ்சா இலை, மாதுளங்கனி, நீலத்தாமரை கொடியின் தண்டு, பால் மற்றும்  சில நச்சுக்காளான்களும் சேர்ந்ததே சோமபானம் என்பது ஒரு தரப்பினரின் கருத்து

பலர் பெர்சியாவின் தாவரமான ephedra தான் சோமக்கொடி என யூகின்றனர். எனக்கும் இக்கருத்தில் உடன்பாடு உண்டு. மலர்களை உருவாக்காமல் சூலகங்களை நேரடியாக உருவாக்கும் கீழ்நிலைத்தாவரங்களாகிய ஜிம்னோஸ்பெர்ம்ஸ் என்னும் வகையை சேர்ந்த எஃபிட்ரா தான் சோமச்செடி என கருதுகிறேன்

சோமலதை என்னும் பெயரையும் கொண்டிருக்கும் இது கொடியை போன்ற வளரியல்பு கொண்டது. சீனாவில்  ’மா ஹுவாங்’ (Ma huang) எனப்படும் இந்த செடி இந்தியா, ஈரான், மற்றும் ஆப்கானிஸ்தான் மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. இதிலிருந்து உருவாக்கப்படும் பல பானங்கள் செயலூக்கத்தை அதிகரிக்கும் (performance enhancers) பானங்களாக சந்தைப்படுத்தப் பட்டிருக்கின்றன. இந்தியர்கள் இதை சோமபானம் என்றும் ஈரானியர்கள் இதை ஹோமபானமென்றும் அழைக்கின்றனர். 

சிறு தவறுக்கு கூட தலை கொய்யும் வழக்கமுடைய மங்கோலிய மகா பேரரசர் செங்கிஸ்கான்  வீரர்களின் அணிவகுப்பை பார்வையிடுகையில், படைப்பிரிவினர் யாராவது  சோர்ந்தோ அல்லது உறங்குவதையோ பார்த்தால் அங்கேயே தலை வெட்டப்படும் என்பதால் அவரது படை வீரர்கள் அனைவரும், எப்போதும் விழிப்புடன் உற்சாகமாய் இருக்க வைக்கும் இந்த  மா ஹுவாங் தேநீரை அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர்,

சரத்துஸ்திரர்களின் புனித நூலான அவெஸ்தா (Avesta) சோமக்கொடியை சிறு கிளைகள் கொண்டது, நறுமணம் மிக்கது,  பசுமஞ்சள் நிறம் கொண்டது, மலைப்பாங்கான இடங்களில் நெருக்கமான புதராக வளரும், அழுத்தி பிழியப்படும் வகையில் மெனமையானது என்கிறது.

Ephedra

இந்த விவரிப்புகள் அனைத்தும்  ஈரானில் haoma என்றும் குறிப்பிடப்படும் சோமலதையான் எஃபிட்ராவின் இயல்பை ஒத்திருக்கிறது. பலர் இதுதான் சோமக்கொடி என்று கருதுகிறார்கள் 

Avesta

1999  ல் நெதர்லாந்தில்  நடைபெற்ற  Haoma-Soma கருத்தரங்கில், Jan E. M. Houben  என்னும் விஞ்ஞானி தனது ஆய்வுக்கட்டுரையில் ’’இனி பேசிக்கொண்டிருக்க தேவையே இல்லை,சோமக்கொடி என்பது எஃபிட்ராதான்’’ என்று உறுதியாக தெரிவித்திருந்தார்.

ஈரான் நாட்டின் மாமுனிவரும், சரத்துஸ்திர சமயத்தை உருவாக்கியவருமான சரத்துஸ்தர், அவரது பெற்றோர்கள் ஹோமா கொடியை பாலில் கலக்கி அருந்திய பின்னர் பிறந்தார் என்கிறது அச்சமய வரலாறு.

James Darmesteter, 1875 ல் எழுதிய ’அவெஸ்தாவின் தொன்மங்கள்’ என்னும் ஆய்வேட்டில் எஃபிட்ராவின் குச்சிகள் ஒருபோதும் அழிவதில்லை என்பதை குறிப்பிட்டிருக்கிறார்.

ரிக் வேதம்.சோமச்செடி நீர்நிலைகளுக்கருகில் வளரும், அவற்றிலிருந்து பால் வடியும் என்கிறது. இது எஃபிட்ராவுக்கு பொருந்தாது. எஃபிட்ரா வறண்ட மலைப் பகுதிகளில் வளர்வது, பால் இல்லாதது.

Ephedra

மேலும் சில பண்டைய நூல்கள் சோமச்செடி என்பது  அரளிச்செடியின் குடும்பத்தை சேர்ந்த Cynanchum acidum என்கிறது. இதுவும் எஃபிட்ராவை போலவே இலைகளின்றி குச்சி குச்சியான தண்டுகளுடன் இருக்கும் புதர்ச்செடிதான்.

சூரியகாந்தி குடும்பத்தை சேர்ந்த கோஷ்டம் என்ப்படும் Saussurea lappa என்னும் தாவரத்தையும் சோமக்கொடியென்று சிலர் கருதுகிறார்கள்.

சரக மற்றும் சுஸ்ருத சம்ஹிதைகள் சோமச்செடியில் நாளொன்றுக்கு என 15 இலைகள் முழு நிலவு வரை வளர்ந்து பின்னர் கருநிலவு நாள் வரை ஒவ்வொன்றாக உதிர்ந்துவிடும் என்று குறிப்பிடுகின்றன..சுஷ்ருதர் சோமச்செடிகள் என 24 வகைகளையும் அவற்றை போலவே மனம் மயக்கும் இயல்பு கொண்ட வேறு 18 தாவரங்களையும் பட்டியலிட்டிருக்கிறார் 

Psilocybe cubensis

இன்னும் சில நூல்கள் Amanita muscaria, Psilocybe cubensis, Stropharia cubensis போன்ற நச்சுக்காளான்களை சோமச்செடி என்று குறிப்பிடுகின்றன ஆனால் நிச்சயம்  அது காளானாக இருக்க முடியாது. ஏனெனில்   பல நூல்களில் சோமக்கொடி வேள்விகளில் கழுத்தில் மாலையாக அணிவது சொல்லப்பட்டிருக்கிறது.

Stropharia cubensis 

1921ல்  கஞ்சா செடி தான் சோமச்செடி என் பிரஜாலால் முகர்ஜி (Braja Lal Mukherjee)  Royal Asiatic Society யின் சஞ்சிகையில் “The Soma Plant” என்னும் கட்டுரையில் எழுதினார்.

தனது  கட்டுரைக்கு ஆதரமாக முகர்ஜிவேதக் கிரியைகள், சுக்ல யஜுர் வேதத்தோடு தொடர்புடைய வரலாறுகள் தொன்மங்கள் ஆகியவற்றை விளக்கும் சதபதபிராமணம் என்னும் நூலில் சோமச்செடி  “Usana,”  என குறிப்பிடப் பட்டிருப்பதை காட்டியிருந்தார். கஞ்சா செடியின்  சமஸ்கிருத பெயரான “Sana.” என்பதை ஒப்பிட்டு இது கஞ்சாதான் என வாதிட்டு எழுதியிருந்தார்

கஞ்சாவின் பிறமொழிப்பெயர்களான் திபெத்திய ’’சோமரஸ்தா’’ மற்றும் திபெத்–பர்மா மொழிகளில் ஒன்றான சீனப்பழங்குடியினரின் தாங்குடு மொழியின் ’’ஸ்கோமா’’ (dschoma) ஆகியவற்றையும் தனது வாதத்திற்கு துணையாக்கிக் கொண்டார். சதபதபிராமணம், சோமச்செடி கிடைக்காதபோது உபயோகிக்கலாமென்னும் மாற்றுச்செடிகளையும் பட்டியலிடுகிறது 

ரஷ்யாவின் கரா–கம் பாலைவனத்தில் நடைபெற்ற அகழாய்வில் கஞ்சா எஃபிட்ரா மற்றும் கசகசா செடிகளின் இடித்த எச்சங்கள் கிடைத்ததை கொண்டு இம்மூன்றும் சேர்ந்த கலவையே சோமபானமாக இருக்கலாம் என்றும் கருதப்பட்டது 

19 ம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்த   ஐரோப்பிய தாவர வியலாளர்கள், வேதவிற்பன்னர்கள் மற்றும் இறையியலாளர்கள்  சோமச்செடியை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டார்கள் அவர்களில்  Hillebrandt, (1891) மற்றும் Monnier- Williams (1899)ஆகிய இருவரும் மிக குறிப்பிட்டுச் சொல்லும்படியான தேடலில் ஈடுபட்டவர்கள்

20 ம் நூற்றாண்டில்  சோமச்செடியை தீவிரமாக தேடிய வாஸன் (R. Gordon Wasson-1968) ல் இது ஒரு காளான்தான் என  உறுதியாக அறிவித்த போது அவரது கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்கள் எழுந்தன

இவர்  Amanita muscaria என்னும் காளான்தான் சோமச்செடி என்று பலவருடப் பயணம் மற்றும் ஆய்வுகளுக்கு பின்ன 1968 ல் வெளியான தனது     Soma: the Divine Mushroom of Immortality. என்னும் நூலில் விவரித்திருந்தார்

இந்நூலில் ‘’ இக்காளான்களை பிழிந்து சாறெடுத்து நீரில், பாலில், தயிரில் அல்லது தேனில் கரைத்து சோம பானமாக அருந்தலாம் என்றும், அக்காளான்களை உண்டவர்களின் சிறுநீரிலும் அதன் வேதிப்பொருட்கள் இருக்குமென்பதால் அதையும் சோமபானமென்று கருதலாமென்றும் வாஸன் குறிப்பிடுகிறார்

 வாஸன் இந்திய குகை ஓவியங்களின் காளான் சித்திரங்கள், வேதங்கள், மற்றும் பல தொல் நூல்களிலிருந்து ஆதாரங்களை அளித்திருந்ததால் இந்நூல் பிரபலமாக பேசப்பட்டது.

சோமத்தாவரம் குறித்த விவரங்கள் தெளிவாக எந்த பண்டைய நூலிலும் அளிக்காப்படாததற்கு இவை அதிக போதை உண்டாக்கும் தன்மை கொண்ட,  மதம் சார்ந்த முக்கியச் சடங்குகளில் பயன்படுத்தப்பட்டது காரணமாயிருக்கலாம்.

இன்னும் சோமபானம் எடுக்கப்பட்ட தாவரம் எதுவென்று தெரியாவிட்டாலும்  ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் உரிய மனம் மயக்கும் போதை தாவரங்கள் இருப்பதால், அந்தந்த நிலப்பகுதியில் இருந்த தாவரங்கள் அப்பகுதி மக்களால்  சோமச்செடி என்னும் பெயரில் அழைக்கப்பட்டிருக்கும் சாத்தியங்களும் இருக்கிறது. . 

இன்று வரையிலும் சோமச்செடியை குறித்த தேடல்களும், கருத்துக்களும், சர்ச்சைகளும் நீடிக்கின்றன. புதிய போதை தாவரங்களும் கண்டறியப்பட்டு கொண்டிருக்கின்றன.சமீபத்தில்  சிரியாவின் தாவரமான Peganum harmala சோமச்செடியின் இயல்புகளுக்கு மிகவும் பொருத்தமானதாக இருப்பதால் இதுவே பண்டைய சோமச்செடி என்று பேசப்படுகிறது

கோவிட் தொற்றுக்கு முன்பு 2018ல் என் அமெரிக்க தோழி ஜாய்  பெரூ வில் நடக்கும் 6 நாட்களுக்கான ஆயவாஸ்கா (Ayahuasca) அனுபவத்தில் கலந்துகொண்டாள்  கட்டணம் 2000 டாலர்கள்  

தெய்வங்களின் தாவரங்கள் எழுதிய ரிச்சர்ட் தான் முதன்முதலில் ஆயவாஸ்கா என்கிற அமேஸான் பழங்குடியினத்தவர்களின் மதச்சடங்குகளிலும், குணப்படுத்தும் சடங்குகளிலும் அருந்தப்படும் சாற்றைக் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு உலகிற்கு அதை தெரியப்படுதியவர். அவருடன் இச்சடங்கு பானம் குறித்து வசியத்துயில் மருத்துவத்தையும் ஆன்மீக மரபுகளையும் இணைத்து சிகிச்சையளிக்கும் துறையின் முன்னோடிகளில் ஒருவரான கிளாடியோ பெஞ்சமினும் (Claudio Benjamín) இணைந்திருந்தார்.கிளாடியோ கடந்த 2019ல் மறைந்தார்.

எனக்கும் இந்த சிகிச்சை அல்லது அனுபவத்தில் ஆர்வம் இருந்தது என்றாலும் கட்டணம் மிக அதிகம்  என்பதால் அப்போது செல்லவில்லை. 

உலகெங்கிலும் இருந்து பல நூறு பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்வின் தொடக்கத்தில் பழங்குடியினத்தவர்கள் வந்து சில பிரார்த்தனை பாடல்கள் பாடி வழிபாடுகளில் இவர்களையும் ஈடுபட சொல்லி, அனைவரையும் ஆசீர்வதித்துவிட்டு மிகக் கசப்பான மூன்று தாவரங்களின் சாற்றை கலந்து அருந்த கொடுத்திருக்கிறார்கள்

அரை மணி நேரத்தில் பலரும் வாந்தி எடுத்து அலறி கூச்சலிட்டு விழுந்து புரண்டு இருக்கிறார்கள். தானும் வாந்தி எடுத்ததாக சொன்ன ஜாய்’ யினால் அதன் பிறகு நடந்தவைகளை ஓரளவுக்கு விளக்க முயன்றாள்.

joi

அலறிக்கொண்டு கீழே பாயில் புரண்டு கொண்டிருந்த  அவளை, அவளிடமிருந்து பிரிந்து மேலே சென்ற   அவளே பார்த்துக்கொண்டிருந்தாள் என்றும் வெகு விரைவாக தான் எங்கெங்கோ பயணித்ததையும், மறைந்த தன் தந்தையுடன் பேசிக்கொண்டிருந்ததையும் சொல்லும்போது அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

இதைக்கேட்ட பின்பு போதைத்தாவரங்கள் குறித்த நூலை எழுதும் முன்பு இந்த சடங்கில் கலந்து கொள்ள வேண்டுமென்று    தோன்றியது.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இச்சடங்குகளில்  உபயோகப்படும் இந்த தாவரங்களில் ஒன்றோ அலல்து அனைத்துமோ கூட  சோமக்கொடியாக  இருக்கலாம்.  

பிக்மி பழங்குடியினர் Tabernanthe iboga, என்னும் மரத்தின் வேர்ப்பட்டைகளை மனம்பிறழவைக்கும் அனுபவத்தின் பொருட்டு சடங்குகளின் போது பயனபடுத்துகிறார்கள்.

வெண்முரசில் ’’மதுவுக்கு நம்மை அளிக்காவிட்டால் மதுவின் தெய்வம் இறங்கிவருவதில்லை” என்று துரியோதனன் கர்ணனிடம் சொல்லுவான்.

ஹரிதர் விருஷாலியிடம் ’’தன்னை தலைகீழாக்க மானுடன் கொள்ளும் உள்விழைவை தொட்டு முளைக்க வைக்கிறதா மது? தலைகீழாக நின்று இவ்வுலகையே அவ்வண்ணம் திருப்பிக்கொள்கிறார்களா?” என்று கேட்கிறார்.

கல்பொருசிறுநுரை மது வேட்கையை ’’உவகையை நோக்கிச் செல்லும் உயிரின் விழைவு அது. தன்னை மறந்தாடவும், தக்கவைத்துக்கொண்ட அனைத்தையும் கைவிடவும், அனைத்திலிருந்தும் விடுபடவும், வேறொரு வெளிக்குச் சென்று திளைக்கவும் உள்ளம் கொள்ளும் துடிப்பு’’ என்கிறது.  

கிராதம் “மதுவை நாடுபவர் அனைவரும் மதுவெனக் கொள்வது ஒன்றையே அல்ல. அஞ்சுபவர்களுக்கு அது துணை. பணிந்தவர்களுக்கு அது குரல். தனித்தவர்களுக்கு அனைத்து வாயில்களையும் திறக்கும் காற்று” என்கிறது. 

வெண்முரசு காட்டும் இதுபோன்ற மது குறித்தான செய்திகளையும், மது எழுப்பும் மெய்யிலி  உலகங்களையும், சோமம் உள்ளிட்ட தாவர மதுவகைகளையும், அவை பயன்படுத்தப்படும் தொல் சடங்குகளையும்  இணைத்து ஒன்றாக அறிந்து கொள்கையில்  கிடைக்கும் சித்திரம் மிக புதியது, மிக சுவாரஸ்யமானது..

மலர் உணவு-Floraphagia

 மனிதர்களின் வாழ்வில் மலர்கள் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டிருக்கின்றன. பண்டைய காலத்திலிருந்தே உலகின் அனைத்து நாகரிகங்களும் இறைவழிபாட்டில், பண்டிகைகளில், மங்கல நிகழ்வுகளில் பிறப்பு,இறப்பு திருமணம் உள்ளிட்ட  சடங்குகளிலும் தலையில் சூடிக் கொள்ள, மாலையாக,  மருந்தாக, மகிழ்ச்சிக்காக,  அழகுக்காக, பரிசளிக்க என்று பலவிதங்களில் மலர்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். மலர்களின் பொருள் என்னவென்பதை சொல்லும் மலர்மொழி உலகெங்கிலும் புழக்கத்தில் இருக்கிறது. மலர் மருத்துவமும் அனைவரும் அறிந்ததே.

 இவற்றோடு  இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பல வகையான மலர்கள் சமையலில் சேர்த்துக் கொள்ளப்பட்டு உண்ணப்படுகிறது.  ஆங்கிலத்தில் Edible Flowers-EF என்று குறிப்பிடப்படும் இம்மலர்கள் பல தாவர குடும்பங்களை சேர்ந்தவை. இவற்றில் பல சமைக்கப்படுகின்றன, ஒரு சில மலர்கள் சமைத்த பிற உணவுகளின் மீது அலங்காரம் செய்ய பயன்படுகின்றன மேலும் பல அப்படியே சமைக்காமல் உண்ணப்படுகின்றன. மருத்துவ காரணங்களுக்காகவும் அவற்றின் சுவைக்காகவும் மலர்களின் பிரத்யேக சத்துக்களின் பொருட்டும் இவை உணவாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

பண்டைய ரோமானிய கிரேக்க, சீன மூலிகை மருத்துவர்கள் மலர்களின் உணவுப் பயன்பாட்டைக் குறித்தும் அவற்றால் குணமாகக்கூடிய நோய்களையும் விளக்கி இருக்கின்றனர். தொல்குடிகளான அஸ்டெக்குகள், இன்க்காக்களும் மலர்களை உணவாக எடுத்து கொண்டிருக்கின்றனர். இந்து மதம் உள்ளிட்ட பல மதச்சடங்குகளில் மலர்கள் உண்ணப்படுகின்றன. மெக்ஸிகன் பழங்குடியினர் பலநூற்றண்டுகளாக மலர்களை உண்டு வந்திருக்கின்றனர்.

மலர் உண்ணுதலை முதன் முதலாக  ‘floriphagia’ என்னும் சொல்லால் 2013ல் Lara-Cortés என்பவரின் குழுவினர் குறிப்பிட்டனர்.

சாமந்தி மலர்களை ரோமானியர்கள் உணவில் குங்குமப்பூ நிறம் கிடைக்க பயன்படுத்தி இருக்கிறார்கள். இப்போதும் சாமந்திப்பூ ’’ஏழைகளின் குங்குமப்பூ’’ என்று அழைக்கப்படுகிறது. குங்குமப்பூவில் கலப்படமாகவும் இம் மலரிதழ்கள் பயன்படுகின்றன.

ரோஜா இதழ்கள் பல பண்டைய நாகரிகங்களில் உணவுக்கு சுவை மணம் நிறம் அளிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்றும் ரோஜா பன்னீரும் குல்கந்தும் இனிப்புகளும் நம்மிடையே பிரபலமாக இருக்கிறது. செம்பருத்தி தேநீர் சில வருடங்களாக பசுமை மருத்துவத்தின் மூலம் தென்னிந்தியாவில் பிரபலமாகி வருகிறது.

17ம் நூற்றாண்டில் வயோலா என்னும் அடர் ஊதா மலர், திரவ மருந்துகளுக்கும்  மதுபானங்களில் நிறமூட்டவும் பயன்படுத்தப்பட்டது.

இந்தியாவில் மட்டும் சுமார்  35 வகையான மலர்கள் உண்ணப் படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆர்டிசோக் எனப்படும் மலரரும்புகள் (Cynara scolymus). காலிஃப்ளவர் என்னும் பூக்கோசு (Brassica oleracea var. botrytis) புராக்கலி என்னும் பச்சைபூக்கோசு (Brassica oleracea var. italica), வாழைப்பூ, அகத்திப்பூ, முருங்கைப்பூ ஆகியவை பலரும் அறிந்திருக்கும் உணவில் சேர்க்கப்படும் மலர்கள்.  ஸ்ட்ராபெரி, கடுகு மற்றும் கொத்துமல்லி மலர்களும் உண்ணக்கூடியவையே.

 தாமரை மலரிதழ்கள் சீனா, ஜப்பான் மற்றும் இந்தியாவில் காஷ்மீரில் உண்ணப்படுகின்றன. இவற்றை தேநீர் தயாரிப்பில் அதிகம் உபயோகிக்கிறார்கள்.

 தாய்லாந்தில் சாமந்தியின் ஒரு வகையான டாஜிடஸ், காகித மலர் மற்றும் கேந்தி மலர்கள் உண்ணப்படுகின்றன. அமெரிக்காவில் டாஜிடஸ், அலரி எனப்படும் ஃப்ராங்கி பானி மலர்கள் மற்றும் கற்றாழை மலர்கள் உண்ணப்படுகின்றன. பிரேஸிலில் வாழைப்பூவுடன்  பூசணிப் பூவும் உண்ணப்படுகிறது.

மிகச்சாதாரணமாக பார்க்க முடிகின்ற சிறு வெண்ணிற டெய்ஸி மலர்கள் விழாக்கால விருந்துகளில் உணவுகளை அலங்கரிக்கவும் உணவுகளோடு சேர்த்து உண்ணவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Tisanes எனப்படும்  பருவ கால உலர் மலரிதழ்களில் உண்டாக்கப்படும் தேநீர் சர்க்கரை நோய் உள்ளிட் பல நோய்களுக்கான சிகிச்சையில் அதிகம் பயன்படுத்தபடுமொன்று

தென்தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் பொன்னாவாரை மலர்களில் தேநீர் தயாரித்து அருந்துவார்கள். நீலத்தேநீர் எனப்படுவது சங்கு புஷ்ப த்திலிருந்து உண்டாக்கப்படும் மருத்துவ குணங்கள் மிக்க நீலத்தேநீர். சங்கு புஷ்ப அரும்புகள் தாய்லாந்தில் அரிசியுடன் வேகவைக்கப்பட்டு நீலச்சோறு உண்டாக்கப்படுகிறது.

குங்குமப்பூவின் மூன்று சூலகமுடிகள் மட்டும்தான்  குங்குமப்பூ என சந்தை படுத்தப் பட்டிருக்கிறது. சோம்பு மலர்கள் சூப்’களில் புத்தம் புதிதாக சேர்க்கப்படுகின்றன. குழந்தையின்மைக்கு தீர்வாக சிலரால் நள்ளிருள் நாறி என்றும் நிஷாகந்தி, பிரம்மகமலம் என்றும் அழைக்கபடும் மலர்  உண்ணப்படுகின்றது.

கொரியாவில் Hwajeon எனப்படும் அரிசிமாவு இனிப்பொன்றில் அந்தந்த பருவ கால மலர்கள் சேர்க்கப்படுகின்றன. பிரபல நறுமணப்பொருளான கிராம்பு எனப்படுவது அம்மரத்தின் முதிரா மலர் அரும்புகள் தான், ஆக்ஸாலிஸ் எனப்படும் புளியாரைக்கீரை மலர்களும் உண்ணக்கூடியவைதான்..

அனைத்து மலர்களும் உண்ணத்தக்கவை அல்ல என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும் தாவரங்களில் பல நச்சுத்தனமை கொண்டவை எனவே நன்கு அறிந்திருந்தால் மட்டுமே புதிய தாவர வகைகளின் மலர்களை உண்ண வேண்டும். இன்னும் சில உண்ணப்படும் தாவர மலர்களில் நச்சுப்பொருட்கள் இருப்பதால் மிக குறைந்த அளவிலேயே அவை உண்ணப்படவேண்டும்.

உதாரணமாக ஆப்பிள் மலர்கள் உண்ணக்கூடியவையே எனினும் அவற்றின் சயனைட் நஞ்சைப்போன்ற நஞ்சு இருப்பதால் மிக மிக குறைவான அளவிலேயே அவற்றை உண்ணவேண்டும். அதுபோலவே வயோலா மற்றும் பொராஜ் மலர்கள் சிறுநீர் பெருக்கும் இயல்புடையவை என்பதால் கவனமாக அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் நஞ்சுகொண்டிருப்பவை  மட்டுமலல்ல. குறிப்பிடட்ட சில விளைவுகளை உண்டாக்கும்  வேதிப்பொருட்களை  கொண்டிருக்கும் மலர்களும் இருக்கின்றன.

பல வகையான மலர்கள் உண்ணத்தகுந்தவை மேலும் பல மலர்களின் உண்ணும் தன்மை இப்போது ஆராயப்பட்டு கொண்டிருக்கிறது. காய்களையும் கனிகளையும் இலைகளியும் வேர்க்கிழங்குகளையும் போல மலர்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் அவற்றில் நஞ்சு கொண்டிருப்பவை, பல முக்கிய வேதிப்பொருட்களை கொண்டிருப்பவை எவையெவை என அறிந்து கொண்டு அவற்றை தவிர்த்துவிட்டு மற்றவற்றை உண்ணலாம்

  • உண்ணக்கூடிய மலர்களை குறித்து மேலும் தெரிந்து கொள்ள Monica Nelson Adrianna Glaviano ஆகிய இருவர் இணைந்து உருவாக்கிய நூற்றுக்கணக்கான உணவு மலர்களை குறித்த பிரபலமான Edible Flowers: How, Why, and When We Eat Flowers  என்னும் நூலை வாசிக்கலாம்.
  • மேலதிக தகவல்களுக்கு:https://www.healthline.com/nutrition/edible-flowers#TOC_TITLE_HDR_6

மரம் தழுவுதல்

பழந்தமிழ் இலக்கியங்கள் சதங்கை அணிந்த இளம்பெண்கள் கால்களால் உதைத்தால் மட்டுமே மலரும் மரங்களை குறிப்பிடுகின்றன.

தன் கணவனை காணாமல் துயருற்ற தமயந்தி ஒரு மரத்திடம் தான் சென்று புலம்புகிறாள்.

தான் விளையாட்டாக மணலில் புதைத்து வைத்த புன்னை விதை முளைத்து செடியாகிவிட்டது, தனக்கு சோறூட்டுகையில் அச்செடிக்கும் ஊட்டுவதாக தாய் பாவனை செய்வாள். எனவே என்னுடன் வளர்ந்த அப்புன்னை மரம் தன் தங்கை அதனருகில் தலைவனுடன் காதல் செய்ய நாணம் கொள்கிறேன் என்னும் தலைவியொருத்தியையும் நாம் அறிவோம்

நம் முன்னோர்கள் இயற்கையுடன் கொண்டிருந்த அணுக்கமும் பந்தமும் நம்மிடையே முற்றிலும் இப்போது இல்லை

இயற்கையை அறிந்துகொள்ளுதலின் குறைபாடென்னும் (nature deficit disorder) பெருநோய் உலகை பீடித்திருக்கிறது.இதற்கு தீர்வாக பல நாடுகள் பல முன்னெடுப்புக்களை கடந்த சில ஆண்டுகளாக துவங்கி இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் மரம் தழுவுதல்.

21 மார்ச் 2017’ல் கேரளா திருவனந்தபுரத்தை சேர்ந்த 4620 மக்கள்  மரங்கள் மற்றும் காடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி என் மரம் என் வாழ்வு என்னும் முழக்கத்துடன்,மரங்களை தழுவிக்கொள்ளும் பிரம்மாண்ட நிகழ்வில் ஈடுபட்டார்கள். அந்த நாள் சர்வதேச  வன நாள் ஆகையால் அந்நிகழ்வு பெரும் கவனம் பெற்றது . அதில் பங்கு பெற்றோர் குறைந்தபட்சம் 60 நொடிகளாவது  மரங்களை ஆரத்தழுவிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இது கின்னஸ் சாதனையாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது

இது போன்ற நிகழ்வுகளுக்கு செப்டம்பர் 12  1730’ல் நடந்த ஒரு வரலாற்று நிகழ்வு முன்னுதாரணமாக இருந்தது. வடஇந்தியாவின் தார்பாலைப்பகுதியின் ஒரு கிராமத்தில் தாவரங்களையும் காடுகளையும் வழிபடும் பிஷ்னோய் மார்க்கத்தை சேர்ந்த 294 ஆண்கள்  மற்றும் 69 பெண்கள் அப்பகுதி அரண்மனை கட்டுமானத்திற்காக பாலையின் பசுமைக்கு காரணமாகவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் இருந்த  பல நூறு வன்னி மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்தார்கள். அனைவரும் மரம் வெட்ட வந்தவர்ள் முன்பு மரங்களை ஆரத் தழுவிக்கொண்டு போராடினார்கள்.  போராட்டத்துக்கு அம்ரிதா தேவி என்னும் பெண் தலைமை தாங்கினார். மரங்களை வெட்டக் கூடாது என்று தழுவிக்கொண்டு போராடிய அம்ரிதா தேவி அவரது மூன்று மகள்கள் உள்ளிட்ட 300 போராட்ல்டகாரர்கள் அன்று வெட்டிக்கொல்லபட்டார்கள்.

 அதுவே ’தழுவுதல்’ என்னும் பொருள் கொண்ட 1970களில் துவங்கிய  சிப்கோ இயக்கத்துக்கும் முன்னுதாரணமாக அமைந்தது. உத்திரபிரதேசத்தில் துவங்கிய சிப்கோ இயக்கம் மர சத்தியாகிரகமென்னும் பெயரில் இந்தியாவெங்கும் வேகமாக பரவியது. இன்றும் மரம் தழுவுதல் ஒரு சிகிச்சையாகவும் வழிபாட்டு முறைகளிலொன்றாகவும் உலகின் பல பகுதிகளில் நடைபெறுகின்றது.

சிப்கோ போராட்டம்

மனிதர்களுக்குத்தான்  மரம் தழுவுதல் என்பது புதிய விஷயம், ஆனால் விலங்கினங்களுக்கு மரம் தழுவுதல் என்பது இயற்கையிலேயே அவை அறிந்திருக்கும்  ஒன்று.

தென்னமரிக்காவின் அசையாக்கரடி (sloth), கோலா கரடிகள், புலி, பூனை, அணில்,பாண்டாக்கள் மற்றும்  ஒராங்குட்டான்கள் மரம் தழுவுதலை அறிந்திருக்கின்றன..

.

2014ல் நடந்த ஒரு ஆய்வு இவ்விலங்குகளில் கோலா கரடியே மிக அதிகமாக  மரம் தழுவும் விலங்கு என்கிறது.

மர உச்சியில் வாழும் கோலா கரடிகள் தங்கள் உடலை குளிரச்செய்ய மரங்களை தழுவிக்கொள்கின்றன.

மரங்களின் உள்ளே எப்போதும் நீரும் , திரவ வடிவில் உணவும் சாற்றேற்றம் எனப்படும் தொடர் நிகழ்வாக நடந்துகொண்டே இருப்பதால், விலங்குகள் மரங்களை தழுவிக்கொள்ளுகையில் அவற்றின் உடலெப்போதும் குளிர்ச்சியாக இருக்க இது மிக உதவுகிறது. அகசிவப்பு கதிர் புகைப்படங்கள் மரங்களை தழுவிக்கொள்ளும் விலங்குகளின் உடல் வெப்பம் குறைவதை காட்டுகின்றன.

உலகின் பல்வேறு  நாடுகளும் மரம் தழுவும் நிகழ்வினை சூழல் பாதுகாப்பின் பொருட்டு முன்னெடுத்து நடத்துகின்றன. இந்நிகழ்வில் பெரும்பாலும் பள்ளிக்குழந்தைகள் பங்கேற்பதில் கவனம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மரம் தழுவுதல் என்பது ஒரு சிகிச்சையாகவும் நடைபெறுகிறது.உணர்வுபூர்வமான சமயங்களில் நம் உடலில் சுரக்கும் ஆக்ஸிடோசின் (Oxytocin) என்னும் ஹார்மோன் மரம் தழுவுகையிலும் உருவாவது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது 

மரத்தை அணைத்துக் கொள்ளும்  மனிதர்களின் மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி பெருகுகிறது.  மரங்களை இறுக அணைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் பேரியற்கையின்  ஒரு பகுதியாக அவர்களை மனப்பூர்வமாக உணர்கிறார்கள். 

வழக்கமான புத்தாண்டு கொண்டாட்டங்களான வழிபாடு, கேளிக்கை மற்றும் விருந்துகளுடன் இவ்வாண்டில் இருந்து குடும்பத்துடன் மரம் தழுவுதலையும் இணைத்துக்கொள்ளலாம்.அதுவே குடு்ம்ப ஆரோக்கியம், உடலாரோக்கியம் மற்றும் சூழலாரோக்கியதுக்கான இன்றியமையாத சிகிச்சை.

வீடுகளில் வளர்க்க முடியாதவர்கள் , மனம் இல்லாதவர்கள் சுற்றுப்புறங்களிலும், சாலையோரங்களிலும், வனப்பகுதிகளிலும் காணப்படும் பெரு மரங்களையாவது ஆரத்தழுவிக்கொள்ளலாம்.

நேபாளத்தில் 2014ல் புத்த துறவிகள், அரசியல் தலைவர்கள்,பள்ளிக்குழந்தைகள், உள்ளிட்ட 2000 பேர் மரம் தழுவினர். பல நாடுகளில் இதுபோன்ற நிகழ்வுகளை கின்ன ஸ் சாதனைப் புத்தகத்தில் குறிப்பிடுவதன் பொருட்டு விண்ணப்பிக்கிறார்கள்.

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑