லோகமாதேவியின் பதிவுகள்

Author: அதழ் (Page 1 of 15)

தந்தைப்பெருமரம்-பாவோபாப்!

ஜெ சமீபத்தில் பாவோபாப் மரங்களைக் கர்நாடகத்தில் பார்த்ததை தொனமையின் தொடரில் என்னும் கட்டுரையில் எழுதியிருந்தார்.  நானும் சில வருடங்களுக்கு முன்னர் கோவை விவசாயப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் அருங்காட்சியகத்துக்கு முன்னால்   அதிலொன்று நிற்பதைப் பார்த்தேன். இந்தியாவில் பாவோபாப்  மரங்கள்  சுமார் 1000-தான் இருக்கின்றன, இவை அரிய மரங்கள் என்பதே பலருக்கும் தெரியாது. ஜெ அதில் மிகப்பெரியவற்றை,  பாதுகாக்கப் பட்டவற்றை நேரில் பார்த்ததும் புகைப்படங்களை பிரசுரித்திருப்பதும் மகிழ்ச்சி அளித்தது. நான் அந்தப் பதிவை மாணவர்களுடன் பகிர்ந்தேன்.

கர்நாடகத்தில் பவோபாப் மரங்களிருக்கும், ஜெ சென்ற அக்கிராமம் ‘பெரிய புளி மரம்-தொட்ட ஹுன்ஸி மரா’ என்றுதான்  பெயர் கொண்டிருக்கிறது. இவை புளிய மரத்தின் வகையல்ல எனினும் இவற்றின் பலமொழிப்பெயர்கள் புளிய மரம் என்றுதான் இருக்கின்றன. தமிழில் இதன் பெயர் பப்பரப்புளிய மரம்.

(நம்மூர்ப்புளியமரமும் இண்டிகா (Tamarindus indica) என்று பெயர்கொண்டிருந்தாலும் இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்டதல்ல ஆப்பிரிகாவைச்சேர்ந்த அம்மரம் ஆசியாவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமானது, இந்தியாவைச்சேர்ந்தது என்று சொல்லிக்கொள்கிறோம் இண்டிகா என்னும் சிற்றினப்பெயரைக்கொண்டு) .

பாவோபாப் மரத்தின் தாவர அறிவியல் பெயரான  Adansonia digitata என்பதில் பேரினப்பெயர்  Adansonia என்பது செனிகல் நாட்டிலேயே வசித்து அந்த நாட்டின் இயற்கை வரலாற்றை எழுதியவரான பிரஞ்சு தாவரவியலாளர்  மைக்கேல் ஆடன்சனை சிறப்பிக்கும் பொருட்டு வைக்கப்பட்டது. (Michel Adanson 91727- 1806),  digitata  என்பது விரல்களைப் போலிருக்கும் அதன் கிளைகளைக் குறிக்கிறது.

இதன் வழங்கு பெயரான பாவோபாப் என்பது ’பலவிதைகளின் தகப்பன்’ என்னும் பொருள் கொண்ட அரபி வேர்கொண்ட லத்தீனச்சொல்லான  baho-bab என்பதிலிருந்து பெறப்பட்டது.செம்பருத்தியின் குடும்பமான மால்வேசியின் துணைக்குடும்பத்தைச் சேர்ந்த  பாவோபாப் இலை உதிர்க்கும் மரவகையைச் சேர்ந்தது.

இந்த பாவோபாப் மரம் கண்டங்கள் பிரிவதற்கு முன்னரே தோன்றியிருக்கக்கூடும் எனினும் இதன் புதைபடிவங்கள் ஏதும் இதுவரை கிடைக்கப்பெறாததால் இதன் தோற்றம் குறித்தும் பூர்வீகம் குறித்தும் தெளிவாக எந்தத் தகவலும் இல்லை.

மடகாஸ்கர் அல்லது ஆப்பிரிக்கா இதன் பூர்வீகமாக இருக்கலாம் அல்லது மடகாஸ்கரில் தோன்றி ஆப்பிரிக்காவுக்கு கடல் வழி வந்து சேர்ந்திருக்கலாம் என்னும் இரு கருத்துகள் தான் பரவலாக ஏற்கப்பட்டிருக்கிறது.

ஆடன்சோனியாவில் மொத்தம் 8 சிற்றினங்கள் உலகில் இருக்கின்றன. பல இணையதளங்களில் 9/10 சிற்றினங்கள் இருப்பதாக தவறான தகவல்கள் இருக்கிறது. இதன் இணைப்பெயர்களையும் தனிப்பெயராக கருதும் குழப்பத்தால் இந்த தவறு நேர்கிறது.

Adansonia digitata

Adansonia gibbosa as Adansonia gregori

Adansonia grandidieri

Adansonia madagascariensis

Adansonia perrieri

Adansonia rubrostipa as Adansonia fony

Adansonia suarezensis

Adansonia za

மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் ஆடன்சோனியாவின் 8 சிற்றினங்களில் 6 மடகாஸ்கரிலும், 1 ஆப்பிரிக்காவிலும்  1 ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகிறது.

ஆப்பிரிக்கா முழுவதுமிருக்கும் Adansonia digitata அங்கிருந்துதான்  இந்தியாவுக்கு வந்திருக்கக்கூடும். டிஜிடேட்டா பவோபாப் மரங்கள் இலங்கையிலும் இருக்கின்றன. Adansonia gregorii  ஆஸ்திரேலியாவிலும் பிற 6 சிற்றினங்கள் மடகாஸ்கரிலும் இருக்கின்றன.

அதிகபட்சமாக 30 மீ உயரமும் 50 மீ சுற்றளவும் கொண்டிருக்கும் பாவோபாப் மரங்கள் 32 ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கின்றன.

வறண்ட, உயிர் வாழச்சாத்தியமே இல்லாத ஆப்பிரிக்கப்பகுதிகளில் கம்பீரமான பெரும் தோற்றத்துடன் வளர்ந்து, உணவுக்காக சத்தும் சுவையும் மிக்க கனிகளையும், வறட்சிக்காலத்துக்காக சேமித்து வைத்திருக்கும் ஏராளமான நீரையும், மரப்பட்டையிலிருந்து  கயிறு, ஆடை போன்றவற்றிற்கான நாரும், பலவேறு சிகிச்சைகளுக்கான மருந்தும், வேர்களிலிருந்து சிவப்புச்சாயமும், இலைகளைக் கால்நடைத் தீவனமாகவும் அளிப்பதால்  வாழ்க்கை மரம் என அழைக்கப்பட்ட, பாவோபாப் மரங்களை ஒட்டியே ஆப்பிரிக்க பழங்குடியினரின் வாழிடங்கள் உருவாகின.

8 லிருந்து  20 வருடங்களில் பாவோபாப் மரங்கள் மலர்களைத் தோற்றுவிக்கும். இரவில் மலரும் இவற்றின் அழகிய பெரிய வெண்ணிற மலர்கள் இரவாடிகளான வவ்வால்,நாகாபிஸ், ரோஸ் வண்டு, அந்துப்பூச்சி ஆகியவற்றால் மகரந்தச்சேர்க்கை செய்யப்படுகிறது.

ஆப்பிரிக்கக் தொன்மமொன்று தனது கம்பீரமான தோற்றத்தினால் பெருமை கொண்ட பவோபாப் மரம் அகந்தை தலைக்கேறி கனியளிக்க மறந்துவிட்டதால் கடவுள் கோபித்துக்கொண்டு அதை பிடுங்கி தலைகீழாக நட்டார் என்கிறது. அதனால்தான் இம்மரம் வேர்கள் மேல்நோக்கி இருக்கும்படி தோற்றம் கொண்டிருக்கிறது என்று நம்புகிறார்கள்.

அதைப்போலவே மலரமுது நிரம்பிய இதன் வெண்ணிற மலர்களை யாரேனும் பறித்தால் அவர்கள் சிங்கத்தால் கொல்லப்படுவார்கள் என்றும் நம்புகிறார்கள்.

பவோபாப் மரம் ஒரு கம்பீரமான ஆண், மரத்தடியில் நிற்கும் கன்னிப்பெண்களை மரத்துக்குள்ளே இழுத்துக்கொண்டு விடும், உள்ளே சிக்கிக் கொண்டிருக்கும் பெண்களின் அலறல் இரவுகளில் காடுகளுக்குள்ளிருந்து கேட்கும் என்றும் பரவலாக நம்பப்படுகிறது.

பல ஆப்பிரிக்க நாடுகளில் ஆண்குழந்தைகளை பாவோபாப் மரப்பட்டையை ஊறவைத்த நீரில் குளிப்பாட்டும் வழக்கம் இருக்கிறது அப்படிச்செய்தால் அந்தக்குழந்தை பாவோபாப் மரம் போலவே கம்பீரமான உருவம் கொண்ட ஆண் மகனாக வளருவான் என நம்புகிறார்கள்

ஆப்பிரிக்கப் பழங்குடியினர் பாவோபாப் மரங்களின்  பல பாகங்களைச் சந்தைப் படுத்துகிறார்கள். 1 அடி நீளம் இருக்கும் இதன் கனிகள்  உதிராமல் மரத்திலேயே 6 மாதம் வரை இருந்து, உள்ளிருக்கும் சதைப் பகுதி முழுவதும் உலர்ந்து  அதன் பச்சையான வெல்வெட் போன்ற மேற்பகுதி   தேங்காய் கொப்பரை போல காய்ந்த பின்னர் அறுவடை செய்யப்படுகிறது.  விதைகளை (சருமப்பாதுகாப்பில் பயன்படும் ) எண்ணெய் எடுக்க அகற்றிவிட்டு கனியின் மேற்தோல் துருவப்பட்டு பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது. வைட்டமின் C, நார்ச்சத்து ஆன்டிஆக்ஸிடெண்ட் உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கிய இந்த பொடி 3-லிருந்து 4 வருடம்  வரை கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும் ஆன்லைன் வர்த்தகத்தில் இந்தப்பொடி கிடைக்கிறது.

ஆப்பிரிக்க பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் நாட்டுமருத்துவத்திலும் பாவோபாப் மரங்களின் பல பாகங்கள் பலவிதமான சிகிச்சைகளுக்கு பயன்படுகிறது.இதன் விதைகளை காப்பிக்கொட்டைகளைப்போல வறுத்து சூடான பானம் தயாரித்து அருந்துகிறார்கள். மரப்பட்டையிலிருந்து காகிதம், ஆடைகள், கூடை, கயிறு உள்ளிட்ட பல பொருட்கள் உருவாகின்றன.  இலைகள் சமைக்கப்பட்டும் சமைக்காமலும் உண்ணப்படுகின்றன, மலர்களின் மகரந்தங்களிலிருந்து ஒரு பசை தயாரிக்கப்படுகின்றது.

இந்தியாவில் ஒரு சில பாவோபாப் மரங்களே இருக்கின்றன என பொதுவாகக் கருதப்படுகிறது, ஆனால் மாபெரும் கோட்டைகள், சுல்தான்கள், மராட்டியர்கள், முகலாயர்கள் ராணி ரூப்மதி ஆகியோரை நினைவுபடுத்தும் மத்தியப்பிரதேசத்தின் தார் மாவட்டத்தின் நகரமான மாண்டுவில் ஏராளமான பாவோபாப் மரங்கள் இருப்பது பலருக்கு தெரியாது.

`மாண்டுவின் புளிய மரம்` என்ற அழைக்கப்படும் (Mandu ki Imli) இவை சாலையோரங்களிலும், விவசாய நிலங்கள், கோவில்கள்,புராதன கோட்டைகளில் எல்லாம் வளர்ந்திருக்கின்றன.  சுமார் ஆயிரம் பாவோபாப் மரங்கள் இங்கு இருக்கின்றன அவற்றை அப்பகுதியின் பில்லு பழங்குடியினர் பாதுகாக்கிறார்கள்.

பில்லு பழங்குடியினரின் வாழ்வாதாரமாக பாவோபாப் மரங்கள் பன்னெடுங்காலமாக இருந்து வருகின்றன. பாவோபாப் கனிகள், பழச்சாறு, விதைகள் ஆகியவை இங்கு சந்தைகளில் ஏராளமாக  விற்கப்படுகிறது. இதன் நீர் தேக்கி வைக்கும் பண்பிற்காக முன்பு மாண்டுவை ஆண்ட சுல்தான்கள்  இதை ஆப்பிரிக்காவிலிருந்து தருவித்து அங்கு வளர்த்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது

ஜெ அந்தப்  பயணக் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதைப் போல் இங்கும் கிருஷ்ணர் ஆப்பிரிக்காவுக்கு சென்று திரும்புகையில் இதன் விதைகளை கொண்டு வந்தார் என்று பரவலாகச் சொல்லப்படுகிறது.

ஹரிவம்ச புராணத்தில் சத்யபாமாவை மகிழ்விப்பதற்காக கிருஷ்ணர் பவோபாப் மரத்தைக் கொண்டு வந்தாரென்று குறிப்பிட்டிருப்பதாகவும் இங்கு சொல்கிறார்கள்.

இது 5000 வருடம் வரை உயிர்வாழும் என ஐரோப்பியப் பயண ஆய்வாளர்கள் கருதுகிறார்கள் என்றாலும் கார்பன் கணக்கீடுகள் இவை அதிகபட்சமாக 3000 வருடங்கள் வாழும் என்கிறது.

பல்லி, குரங்கு, பலவிதப் பறவைகள்,   வறட்சிக்காலத்தில் இதன் மரப்பட்டையை உரித்துண்ணும் யானைகள்,  மலரமுதை உண்ண வரும் அந்துப்பூச்சிகள், வவ்வால்கள் என  நூற்றுக்கணக்கான உயிர்களின் புகலிடமாக பாவோபாப் மரங்கள் இருக்கின்றன.

பல தண்டுகள் ஒன்றிணைந்து பாவோபாபின் பெரிய பருத்த அடிமரம் உருவாகிறது எனவே தண்டுகளுக்கிடையில் இருக்கும் இடைவெளிகள் பொந்துகளாக அமைந்துவிடுகின்றன. பாவோபாப் மரங்களின் தனித்தன்மையாக இந்த பொந்துகளைச் சொல்லலாம்.

பழங்குடியினர் நுற்றண்டுகளாக இந்த தந்தைமரத்துடன் இணைந்து அதைப்பாதுகாத்து அதனுடன் வாழ்வை இணைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால்  காலநிலை மாற்றம் பாவோபாப் மரங்களை அழிவுக்கு தள்ளி இருக்கிறது ஆப்பிரிகாவின் 13 மிகப்பழமையான மாபெரும் பாவோபாப் மரங்களில் 9 மரங்கள் கடந்த பத்தாண்டுகளில் அழிந்க்து விட்டிருக்கின்றன.

இவற்றின் 8 சிற்றினங்களில் A. suarezensis, A. grandidieri மற்றும் A. za,  A. perrieri ஆகியவை அழியும் ஆபத்தில் இருக்கின்றன. ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் இருக்கும் A. digitata வை  2023-ல்   அழிவின் விளிம்பில் இருப்பதாக IUCN  சிவப்புப்பட்டியலில் இணைத்திருக்கிறது.

ஹைதராபாதில்  200 ஏக்கரில் உருவாகும் அரிய வகை தாவரங்களுக்கான பிரத்யேக பூங்காவிற்காக மாண்டு பகுதியிலிருந்து 11 பாவோபாப் மரங்களை  வேரோடு பெயர்த்தெடுத்துக் கொண்டு செல்ல 2022-ல் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது பில்லு பழங்குடியினர் சாலை மறியலிலும் பெரும் போராட்டங்களிலும் இறங்கினார்கள்.

`ஹைதராபாத் பூங்காவுக்கு பாவோபாப் மரங்கள் தேவைப்பட்டால் நாங்கள் முளைக்க வைத்திருக்கும் பாவோபாப் நாற்றுக்களைத் தருகிறோம், ஒருபோதும் வேரோடு மரங்களை எடுக்க அனுமதிக்க மாட்டோம்“ என போரட்டம் நடத்தினார்கள். அதன் பின்னர்தான் நவம்பர் 2022-ல்  பாவோபாப் கனிகளுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக தார் மாவட்டத்தின் தோட்டக்கலைத்துறை முயற்சிக்கிறது.

புவிசார் குறியீடு கிடைத்தால் இம்மரங்களின் பாதுகாப்பு மேலும் உறுதியாகும். 2025 பிறந்துவிட்டிருந்தாலும் அரசு இதில் நத்தைவேகம் காட்டுகிறது என்று குற்றம்சாட்டுகிறார்கள் தாவரவியலாளர்கள்.

ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இவை  எப்படி வந்திருக்கக் கூடும் என்பதை அறிய  இந்திய பாவோபாப் மரங்களின் மரபணு ஒப்பீட்டு ஆய்வுகள் நடந்திருக்கின்றன. ஆய்வு முடிவுகளில்  மாண்டுவில் இருக்கும் பாவோபாப் மரங்களும் ஆப்பிரிக்காவின் ஆடன்சோனியா டிஜிடேட்டாவும் ஒரே சிற்றினம் தான்  என்பது  நிரூபணமாகியிருக்கிறது.

பாவோபாபின் பரவல் குறித்த  இதுபோன்ற பல ஆய்வுகள்  நடந்திருக்கின்றது. ஒரு சில ஆய்வுகள் இம்மரத்தின் பரவல் மனிதர்களால்தான் நடந்திருக்க முடியுமென்கின்றன.

கடல் நீரில் அமிழ்த்தி வைக்கப்பட்ட பாவோபாப் கனிகள் 6 மாதங்களுக்குப் பிறகும் முளைத்தன என்பதால் இவை கடல்நீரில் அடித்து வரப்பட்டு கடற்கரையோர பகுதிகளில் பரவியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஆப்பிரிக்காவிற்கும் இந்தியாவுக்கும் இடையே பண்டமாற்று, குறிப்பாக சோளம், கம்பு மற்றும் கேழ்வரகு, தட்டைப்பயறு, மொச்சை ஆகியவற்றிற்கு மாற்றாக பாவோபாப் கனிகள் இந்தியர்களால் வாங்கப்பட்டிருக்கும் என்றும் ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் இவற்றிற்கு மரபியல், தொல்தாவரவியல் மற்றும் தொல் இனவியல் நிரூபணங்களோ சான்றுகளோ இதுவரை இல்லை. எனவே பாவோபாப் மரங்கள் உலகெங்கும் எப்படிப் பரவின என்பது பெரும் மர்மமாகவே இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் மாபெரும் பாவோபாப் மரத்தடியில் ஒரு மனிதர்கள் சிறு பூச்சிகளைப் போல் நிற்கும் புகைப்படம் மனிதன் எத்தனை எளியஉயிரி என்பதைக் காட்டுகிறது.

எங்கு தோன்றியது எப்படி உலகெங்கும் பரவியது என்று இன்று வரை அறிந்துகொள்ள முடியாத பாவோபாப் மரங்கள், தொன்மையின் தொடரில் கட்டுரையின் இறுதியில் ஜெ குறிப்பிட்டிருப்பதைப் போல காலமற்ற கனவுகளில் ஒன்றுதான்.

சீடையும் பீடையும்!

வீட்டில் நாங்கள் மூவருமே தினசரி காலண்டரில் தேதி கிழிக்கையில் அன்றைய ராசிபலன் பார்ப்போம். ஸ்கூல் வேனுக்குக்காத்திருக்கையில் அதைக்குறித்து விரிவாகப்பேசிக்கொள்வோம்.

எஃப் எம்ரேடியோவில் சிவல்புரி சிங்காரம் சொல்லும் ராசிபலன்களையும் கேட்டு அவர் அன்று என்ன நிறப்புடவை உடுத்தச்சொல்கிறாரோ அதைத் தேர்வு செய்து உடுத்துவதும் வழக்கம். இன்று கூடச் சிவல்புரியார் மேஷ ராசிக்கு பிரகாசமான மஞ்சள் என்றார். நான் மஞ்சளில் தான் கல்லூரி வந்தேன்.

காலண்டரில் இன்று என் ராசிக்கு பீடை என்றிருந்ததைப் பார்த்ததும் பழைய நினைவுகள் எழுந்தன

மகன்களின் பள்ளிக்கூட நாட்களில் சரணுக்குத்தமிழ் அவ்வளவாக வராது. அவன் அதிகம் திட்டு வாங்கியது அவனது தமிழாசிரியையிடம் தான். அவனுக்கு மட்டுமல்லாது பெற்றோர் சந்திப்பின்போது எனக்கும் மானாவாரியாகத் திட்டுக்கிடைக்கும்

(“நீங்களே டீச்சரா இருந்துட்டு இப்படி விட்டுருக்கீங்க?)

100 க்கு 11 என்றெல்லாம் வரலாற்றுச்சிறப்பு மிக்க மதிப்பெண்கள் வாங்கிய சரண், அந்த ஆசிரியை வேலையை விட்டுவிட்டு போனபின்பு சங்கீதா என்னும் ஒரு ஆசிரியை வந்தபின்னால் தமிழ்மகனாகி தமிழில் நல்ல மதிப்பெண்கள் பெறத்துவங்கினான்.

பின்னர் வெண்முரசு 26 நாவல் நிரைகளையும் வாசித்து நீலம் தொகுப்பை எப்போதும் மார்போடணைத்துக்கொண்டே இருப்பவனாகினான், ஜெ தளத்தில் நல்ல தமிழில் அவனது கடிதங்கள் எல்லாம் வரத்துவங்கின காலமும் வந்தது.

மகன்களின் பள்ளிக்காலத்தில் ஒருநாள் சரண் முதலில் சாமிகும்பிட வந்து காலண்டரில் தேதியைக் கிழிக்கையில் அவனுக்கான மீன ராசிக்கு பீடை என்று இருந்தது.

அவன் …….`தருணிடம் பீடைன்னா என்னடா……? என்றான்

தருணுக்கும் தமிழ் தகராறுதான். அவன் அண்ணனிடம்.

“… அது வந்து அம்மா செய்யுமே பலகாரம் ஒன்னு, குட்டியா பந்து மாதிரி கடிக்கவே முடியாம கெட்டியா இருக்குமே அதோட பேரு....“என்றான்.

நான் சமையலறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தென். சரண் மீண்டும் ….அதுவா ஆனா அதை ஏன் ராசி பலன்ல போட்டுருக்காங்க....என்றான்

தருண் ….“அப்படின்னா இன்னிக்கு உனக்கு ஸ்நேக்ஸ் அதான் கிடைக்கும்…..“ என்றான்.

பீடைக்கு என்ன பொருள் சொல்வதென்று தெரியாமல் நானும் இடைபடவில்லை அன்று

இப்போதும் இருவரையும் இந்த சீடை-பீடையை சொல்லிக்கிண்டல் செய்வேன்.

சரண் ஐந்தில் படிக்கையில் ஒருநால் நூலக அலமாரியைச் சுத்தம் செய்துகொண்டிருந்தோம் நான் ஸ்டூலில் ஏறி நின்று அடுக்கினேன் தருண் துடைத்துத்துடைத்துச் சரணிடம் தருவான்.சரண் புத்தகங்களின் பெயரச்சொல்லிச்சொல்லி என்னிடம் எடுத்துக்கொடுப்பான்

ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்த சரண் …இது வந்து சீக்கிரம் தொடு... என்றான்

நான் அதிர்ந்துபோய் .... ச்சீ அப்படி ஒரு புக்கே இல்லடா வீட்டில், கருமம் என்ன அது கொண்டு வா.... என்று வாங்கிப்பார்த்தேன்.

அந்தப் புத்தகத்தின் பெயர் சிகரம் தொடு.🙃

இன்றைய பீடை பலவற்றை நினைவுக்குக் கொண்டு வந்துவிடது

அந்தச் சீக்கிரம் தொடு சரண் இப்போது அர்த்தசாஸ்திரம் முழுமையாகப் படித்து முடித்து அதைத் தமிழில் கொண்டு வரலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறான்.

தருண் இசையின்

“நீ ஏன் அவ்வளவு தூரத்தில் இருக்கிறாய்

வந்து பார்க்கும் அளவுக்கு “

என்னும் காதல் கவிதையை எனக்கனுப்பிச் சிலாகிக்கிறான்

மகன்களுக்கு அன்பு!

இதயம் இதயம் இதயம்!

நான் வாட்ஸாப்பில் அதிகம் தொடர்பிலிருப்பவள். குறிப்பாகத் தாவரவியல் தகவல்கள், தாவரங்களின் புகைப்படங்கள், ஜெயமோகன் அவர்களின் கருத்துகள் ஆகியவற்றை அதிகம் பகிர்வதுண்டு.அதிகாலை எழுந்ததும் முக்கியமான சிலருக்கு மட்டும் காலை வணக்கம் சொல்வது வழக்கம். எனக்கு வணக்கம் சொல்பவர்களுக்குப் பதில் சொல்லிவிடுவேன்.

மிக அழகிய தாவரங்கள், மலர்கள் அல்லது கனிகளுடன் தான் என் வாழ்த்துகள் இருக்கும். மிக அழகிய தகவல்கள் புகைப்படங்கள் அனுப்புபவர்களுக்கு பதிலுக்கு அழகிய இமோஜிக்களையும் அனுப்புவேன், அதிகம் பல நிறங்களில் இதய வடிவை பாராட்டாகவோ அன்பைத்தெரிவிப்பதற்கோ அல்லது மகிழ்ச்சி என்பதை உணர்த்தவோ அனுப்புவதும் உண்டு. பச்சை இதயம் அடிக்கடி என்னிடமிருந்து அனுப்பப்படும்.

வாட்ஸாப் புழங்கும் அளவுக்கு வந்திருப்பவர்களுக்கு இமோஜிக்களின் குறியீட்டு அர்த்தம் நாட்டு நடப்பு ஆகியவை ஓரளவுக்கேனும் தெரிந்திருக்கும் என்னும் ஒரு அடிப்படையான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.(இருந்தது)

தினமும் காலை வணக்கம் சொல்லும் ஒருவரில் ஒரு ஓய்வுபெற்ற பல்கலைக்கழகப் பெரியவரும் இருந்தார். அவரை நான் சந்தித்ததே இல்லை. அவருக்கு நடந்த ஒரு பாராட்டுவிழாவின் போது அவருக்கும் எனக்கும் பொதுவான ஒரு தோழி, நான் மிகவும் மதிப்பும் அன்பும் கொண்டிருப்பவர், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கச்சொல்லி அவரது தொடர்பு எண்ணை அனுப்பினார். வாழ்த்தினேன் அதன் பிறகு அவர் எனக்கு தினசரி காலை வணக்கம் அனுப்புவதும் நான் பதில் அனுப்புவதும் வழக்கமானது. ஒரு வருடத்க்கும் மேலாகிவிட்டிருக்கும் என்று நினைக்கிறேன். பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய போலி மலர்களின் படங்களை அனுப்புவார்.

கடந்த வாரம் அழகிய நிஜ மலர்களின் புகைப்படமொன்றை அனுப்பி இருந்தார். நான் பதிலுக்கு வணக்கமும் புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த மலர்களின் நிறங்களில் இரண்டு இதயவடிவங்களையும் அனுப்பியிருந்தேன்.

இதய வடிவங்களின் குறியீட்டு அர்த்தம் அவருக்கு முற்றிலும் வேறு போலிருக்கிறது. நான் அனுப்பிய இதய வடிவங்களின் தகவலை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து யாருக்கோ புளகாங்கிதமாக லோகமாதேவி இதை எனக்கு அனுப்பி இருந்தார் என்னும் செய்தியை அனுப்ப நினைத்து, அவர் கெட்ட நேரம் அதை யாருக்கோவும் கூடவே எனக்கும் அனுப்பி விட்டார்.

அதிகம் ஒன்றும் நான் திடுக்கிடவில்லை எனினும் ஆண்களின் இந்த தன்னம்பிக்கை இருக்கிறதே அதை எண்ணி வியந்தேன். சங்ககாலப்பாடல்களில் வருமே அரசன் என்னும் ஆண் மகன் வழியில் வரக்கண்டு பேதை பெதும்பை பேரிளம் பெண்கள் என எல்லா வயதுப்பெண்களும் அவன் மீது மையல், காதல், காமம் இன்னபிறவெல்லாம் கொண்டு மேகலை நழுவி வளையல் கழன்று இம்சைப்படுவார்களல்லவா, அப்படி பெண்கள் யாராக இருந்தாலும் ஆண் என்னும் ஒரு தகுதி உடையவர்களை விரும்புவார்கள் ஏதேனும் வாய்ப்புக்கிடைத்தால் அவர்மீதுள்ள மையலை, தாங்கள் கோட்டைத் தாண்டிவரவிருக்கும் செய்தியை எப்படியாவது தெரிவிப்பார்கள் என்று நம்புகிறார்கள் அல்லவா அந்த திண்ணக்கம் தான் ஆச்சர்யப்படுத்துகிறது.

லோகமாதேவிக்கு அப்படி யாரையேனும் பிடிக்க வேண்டுமென்றால் ஆண் என்னும் ஒரு தகுதி மட்டும் போதாது என்பதுவும் அவருக்குத் தெரியவில்லை பாவம்

இந்த வகை ஆண்கள் எல்லம் தாங்கள் அமர்ந்திருக்கும் ஆணாதிக்க குதிரை, அகம்பாவக் குதிரையிலிருந்து முதலில் இறங்கி, பின்னர் அதை அவர்கள் ஓட்டிக்கொண்டிருக்கும் குண்டுச்சட்டிக்குள்ளிருந்து வெளியேறினால் மீட்புண்டு.

அந்தப் பெரியவருக்குக் கோபித்துக்கொள்ளாமல் இதயவடிவத்தை நான் அனுப்பும் பொருள் என்ன என்பதை விளக்கிவிட்டு அவரது எண்ணை தடைசெய்தேன்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ,அப்பா!

ஊசாத்து, 2- லோகமாதேவியும் லோகமாதேவியும்!

திருச்சியில் தங்கி இருந்த ரம்யாஸ் விடுதியில் complimentary breakfast இருந்தது. உப்பிட்டு வேகவைத்த நிலக்கடலை, ஆவியில் வேகவைத்த புரோக்கலி, ஸ்வீட் கார்ன், உள்ளிட்ட காய்கறிகள், பருத்திப்பால், கம்பு தோசை, முட்டை, பழங்கள், கூடவே வழக்கமான இட்லி, தோசை, பூரி,சந்தகை, ரொட்டி. கார்ன்ஃப்ளேக்ஸ், தேன், வெண்ணெய், சீஸ், பழச்சாறு, ஐஸ் கிரீம், காபி, டீ எனச் சத்தான,  விரிவான மெனு. 

7 மணிக்கு காலை உணவை முடித்து விட்டு தஞ்சைப் பெரிய கோவிலுக்குச் சென்றோம். திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலை நன்றாக இருந்தது அத்தனை போக்குவரத்தும் இல்லை. ஏறுவெயில் மிதமாகவே இருந்தது. 

எங்களுக்கு முன்னால் ஒரு டெம்போவில், திறந்திருந்த பின்பகுதியில் காரைச்சட்டி, கடப்பாரை, மண்வெட்டிகளுடன் மஞ்சள் புடவைத்தலைப்பால் முக்காடிட்டுக்கொண்டிருந்த ஒரு ராஜாஸ்தானிப் பெண் பயணித்துக்கொண்டிருந்தார். சாய்ந்து அமர்ந்திருந்த அவர் முகம் கல்போல் இறுகி இருந்தது. அமைதியாக வானை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அவர்மீது   வெயில்  விளையாடிக்கொண்டிருந்தது. அந்தச் சூரியனின் ஒளியின் வழி பயணித்து தான் விட்டுவிட்டுவந்த பாலைநிலத்தின் வீட்டை, உறவுகளை, மனிதர்களைக் குறித்தெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தாரா?

 முக்கால் மணி நேரத்தில் தஞ்சை சென்றுவிட்டோம். வெண்ணிலாவின் தோழியும் தஞ்சை பாரத் கல்லூரிகளின் தாளாளருமான புனிதா அவர்கள் கோவிலில் எங்களுக்கு  உதவ ஒரு ஓதுவாரை ஏற்பாடு செய்திருந்தார்.

கோவிலுக்கு எதிரில் இருந்த கார் நிறுத்தத்தில் காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றோம். ஏராளமான கல்லூரி, பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் வந்து இறங்கிக் கொண்டே இருந்தார்கள். மழலையர் பள்ளிக்குழந்தைகளும் கூட வரிசையாக ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.

’’….. செகண்ட் ஸ்டாண்டர்ட் எல்லாம் கீழே உட்காருங்க…..’’ என்று ஒரு ஒல்லிப்பிச்சி டீச்சர் அதட்டிக்கொண்டிருந்தார்.அன்று சனிப்பிரதோஷம் என்பதால் சிறப்பான பூஜைகள் நடந்து கொண்டிருந்தன. 

இரண்டாம் நுழைவுவாயிலில் எங்களுக்காக ஓதுவார் காத்திருந்தார். எங்களுக்குத் தரிசனத்துக்கு உதவியபின்னர், சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் அன்று நடக்கவிருந்த திருமுறை ஒப்புவிக்கும் போட்டிகளின் நடுவராகச் செல்லவிருந்தார். 

நந்தியின் அருகிலிருந்து ’’….இப்படி வாங்க….’’ என்று சொல்லி ஒரு நான்கைந்து படிகள் மட்டும் கொண்ட சிறு வாயிலைக் கடந்து உள்ளே அழைத்துச் சென்றார். 

எங்கோ செல்லவிருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு அவரைத்தொடர்ந்தேன். கருவறைக்கு மிக மிக அருகில் நின்றுகொண்டிருந்ததையும் 29 அடி கரியலிங்கம் தொட்டுவிடும் தூரத்தில் இருந்ததையும் புரிந்துகொள்ளவே சிறிது நேரமானது. முதலில் உணர்ந்தது ஒரு திடுக்கிடல் தான் அத்தனை பெரிய லிங்கம், அத்தனைஅருகில், அத்தனை விரைவில் பார்ப்பேனென்று நினைத்திருக்கவில்லை.

சுதாரித்துக்கொண்டு வணங்கினோம். அங்கிருந்து  பெரிய நாயகி அம்மன் சன்னதிக்கு சென்றோம், அம்மன் கைகளில் மருதாணி இலைக்கொத்தும், காலடியில் பல வண்ணங்களில் கண்ணாடி வளையல்களும் வைக்கப்பட்டிருந்தன. தரிசனம் முடிந்ததும் எனக்கு   மருதாணிச்செடியின்  சிறு கிளையைஅளித்தார்கள் சந்தோஷமாக வாங்கிக்கொண்டேன் (உலர்ந்து பாடமாகிவிட்டிருக்கும் அது என் கைப்பையிலேயே இருக்கிறது ) தாமரை மொக்குகளும் சாமந்திகளும் விபூதி பிரசாதமும் அடங்கிய சிறப்புப் பிரசாதப் பையும் கொடுக்கப்பட்டது. 

ஓதுவாருக்கு விடைகொடுத்து அனுப்பி விட்டுப் பிரகாரம் முழுக்க 2 மணிநேரம் மெல்ல நடந்தும், உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டும் முழுக் கோவிலையும் சுற்றிப்பார்த்தோம். 

தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை ஒன்று வராகி அம்மன் சன்னதிக்குச் செல்லும் வழியில் உடைந்து தலைகுப்புறக் கிடந்தது. அதன்மீது அணில்கள் ஓடிவிளையாடின. தஞ்சையின் அடையாளங்களில் ஒன்றான அந்தப் பெரிய பொம்மையை உடைந்தபின்னர் அப்புறப்படுத்தி இருக்கலாம் அமங்கலமாக, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தினந்தோறும் வந்துகொண்டிருக்கும் நேரத்தில் ஏன்  உலகப்பாரம்பரியச்சின்னமான அந்தக்கோவிலில் அந்தச் சிலையை அப்படியே அலட்சியமாக விட்டு வைத்திருக்கிறார்கள்?  

உள்ளேயே தொல்லியல் துறையின் கலைக்கூடம் இருந்தது,சிற்பமாக 108 கரணங்கள், பாதுகாக்கப்பட்ட வண்ணச்சித்திரங்கள், கோவில் சிற்பங்களின் புகைப்படத் தொகுப்பு  ஆகியவை அங்கு இருந்தன. புணரமைக்கப்படுவதற்கு முன்னும் பின்னுமான கோவிலின் புகைப்படங்களும் இருந்தன.   கோவிலின் நந்திகள் எல்லாமே அருகு சூடியிருந்தன.

ஏராளமான வடிவங்களில், அளவுகளில் லிங்கங்கள் இருந்தன. ஆவுடையின் நீளம் அகலம் உயரம் விரிவு அலங்காரம் என ஒவ்வொன்றிலும் வேறுபாடிருந்தது.

 சச்சதுர லிங்கங்களும் இருந்தன. லிங்கங்கள் கம்பி அழிக்குள் பாதுகாக்கப்பட்டிருந்தன, பாதுகாப்புக்கு முன்னர் லிங்கங்கள் வைக்கபட்டிருக்கும் இடத்தின் எல்லா சுவர்களிலும் பல்வேறு பெயர்களில் காதல் சின்னங்கள், காதல் செய்திகள், அம்பு துளைத்த இதயங்கள் வரையப்பட்டிருந்தன. அனேகமாக இந்தியாவின் எல்லா மொழிகளிலும் காதல் கிறுக்கல்கள் இருந்தன. அச்சுவர்களில் அவை கிறுக்கப்பட்டிருந்த இடங்களில் எல்லாம் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மலரிதழ்களின் வண்ணங்களைத் தொட்டு வரையப்பட்ட அரிய சித்திரங்கள் இருந்தன. சேதமடைந்த, மங்கிய சித்திரங்களை அந்தக்கிறுக்கல்களுக்கிடையில் பார்த்தோம். 

தென்னையும் கரும்பும் பல சித்திரங்களில் இருந்தன. கொத்துக்கொத்தாக கனிகளோ அல்லது மலர்களோ இருந்த ஒரு குறுமரம் பல சித்திரங்களில் வரையப்பட்டிருந்தது.

லிங்கங்களுக்கு இணையாகவே சுற்றுப்பிரகாரத் தரையில்  பல இடங்களில் வெற்றிவேல் பிரஸ் 1959  எனச் செதுக்கப்பட்டிருந்தது.

புற்றிலிருந்து அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கும் விரிந்த படம்கொண்டிருக்கும் பெரு  நாகங்களை எதிர்த்துப்போரிடும், நீலநிற யானையானையைப் பிறையம்பால் வீழ்த்தமுற்படும் சித்திரங்கள் இருந்தன.

லிங்கங்களைக் கழுவி அழுக்கை ஸ்பாஞ்ச் துணியால் துடைத்துப் பக்கட்டில் பிழிந்துகொண்டிருந்தார் ஒரு பெண்மணி. பிச்சாண்டவர் சன்னிதிக்கு வழிகாட்டிய ஒரு முதியவள்  ’’…..மனசில் நினச்சதை நடத்திக்கொடுப்பார்….’’ என்று சொன்னார். அது தெய்வ வாக்கு என எண்ணிக்கொண்டு உள்ளே சென்று வணங்கினோம்.

கருவூரார் சன்னிதிக்கும் சென்று வணங்கினோம்.சிற்பங்களையும் ஓவியங்களையும் ஒருநாளில் பார்த்து ரசித்துவிடமுடியாது. கலையின் உச்சகட்ட வெளிப்பாடு அந்த கோவில் முழுவதுமே.

நீள் பிரகாரங்களில் இருட்டில் சின்னச்சின்னதாக பல தெய்வங்களுக்கு சன்னதிகள். எமன் சன்னிதி பூட்டப்பட்டு பூட்டில் ஒரு மலர்ச்சரம் செருகப்பட்டிருந்தது.

பல சன்னிதிகளில்  காலியாக இருட்டு மட்டுமே இருந்தது. ஒரு சிறு லிங்க சன்னதியின் வாசலில் எதிரெதிராக அமர்ந்து மும்முரமாக வாய்விட்டுப் பாடங்களை ஒருத்தி சொல்லிக்கொடுக்க ஒருத்தி கேட்டுக்கொண்டிருந்தாள், இயற்பியல் படித்துக்கொண்டிருந்தார்கள். ஆச்சர்யமாக இருந்தது சுற்றுலா வந்த இடத்தில் ஆசிரியருக்குத் தெரியாமல் ஓரிடத்தில அமர்ந்து படிக்கும் மாணவிகள்!!!! ஏலியன்களாக இருக்கக்கூடும்.

வெள்ளியில் பெரிதாக யானை, காளை, மயில் செய்யப்பட்டு கம்பிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் கண்களாக உருண்டையான கண்ணாடிக்குண்டுகள் பதிக்கப்பட்டிருந்தது, உற்றுப்பார்க்கையில் அதில் நான் சிறிதாகத் தெரிந்தேன் ? யாரை யார் பார்த்துக்கொண்டிருந்தோம்?

கோவிலின் ஆழ்கிணறு ஒன்று பாழ்கிணறாக ஏராளமான பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள், குப்பைகள் நிறைந்து இருந்தது.அதையும் எல்லாருமாக எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தோம்.

அந்தக்கோவில் உலகபாரம்பரியச் சின்னமாதலால் ஏராளமான வெளிநாட்டினரும் இருந்தார்கள். அவர்களுடன் ஆங்கிலத்தில் கோவிலைப் பற்றி விளக்கிச்சொல்லிக்கொண்டிருந்தார்கள் கோவிலின் வழிகாட்டிகள். (ஆக்சுவலி அம்மன் இஸ் த அதர் நேம் ஆஃப் பார்வதி.  யெஸ் யெஸ் சைனீஸ் ஸ்டேச்சூஸ் ஆர் ஆல்சோ ஹியர்)

ராஜராஜன் சிறுவனாக இருக்கையில் அவன் குளிக்கவென்று கட்டப்பட்ட கல்தொட்டி இருந்தது அதை மட்டும் தூக்கிக்கொண்டு வந்துவிடலாம் என்று ஆசையாக இருந்தது.

வெளிநாட்டினருக்கு கைகொடுக்கவும் அவர்களோடு நின்று புகைப்படமெடுத்துக் கொள்ளவும் கூட்டமாய் சிறுவர்கள் ஓடினார்கள். ஒருவர் தன் மனைவியுடன் கூட்டமாக இந்தியச்சிறுவர்கள் நின்று கொண்டிருந்ததை பெருமிதமாகப் புகைப்படமெடுத்துக் கொண்டிருந்தார். காவி வேட்டியுடன் சிலரும் அவர்களில் இருந்தார்கள். கோவிலின் இடிபாடுகளை பெருங்கற்களையெல்லாம் நல்லவேலையாக ஒரு பக்கம் போட்டுப் பூட்டி வைதிருந்தார்கள். சேதமடைந்த நம் வரலாறு அல்லவா அவை?

பிரகாரத்துக்குள்ளேயே இருந்த கடையில் தயிர்சாதம், அதிரசம், சந்தன விபூதி பேஸ்ட் வாங்கிக்கொண்டோம்.நிறையப் பெண்கள் தலையில் டிசம்பர் பூ சூடிக்கொண்டு எனக்குப் பொறாமையை உண்டு பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

கோவில் விமானத்தை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். ஆயிரமாண்டுகளுக்கு முன்பு இப்படி இதே இடத்தில் ராஜராஜசோழனுடன் நின்று அந்த லோகமாதேவி பார்த்திருப்பாளாயிருக்கும்.

ஊசாத்து!(1)

ஒரு கருப்பு வெள்ளைப்படம். வெகுகாலம் முன்பு வந்தது. நான் பள்ளியில் படிக்கையில், வீட்டுக்கு தொலைக்காட்சி வந்த புதிதில் பார்த்தது. திரைப்படத்தின் பெயரோ நடிகர்களோ எதுவும் நினைவில் இல்லை, ராஜா ராணி படம் அதுவும் ஒரு அறிவியல் புனைவுக் கதை என்பது  தேசலாக நினைவிருக்கிறது. 

ஒரு கண்ணுக்குத் தெரியாத அரூபக் கதாபாத்திரம்  அந்தப்படத்தில் முக்கியமாக இருக்கும், அது எல்லோரையும் தொல்லை பண்ணிக் கொண்டிருக்கும்.  அதன் அட்டகாசம் நடக்கையில் எல்லாம் ஒருவர் ’’ஆரம்பித்துவிட்டது அரூபத்தின் வேலைகள்’’ என்பார். அந்த வசனத்தைத்தான் ஜனவரியில் இந்த வருடத்துக்கான என் பயணம் தொடங்கியதும் எண்ணிக்கொண்டேன். மகனுடன் மனமகிழ்ந்து நீண்ட பயணம், அலைச்சல், பலவித மனிதர்கள், தவிர்க்க முடியாமல் சில கசப்புகள் என்று மீண்டும் தொடங்கி விட்டிருக்கிறது ஒரு புதிய வருடம்.

ஜனவரி முதல் வாரமே  கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடும் போர்டில் கலந்துகொண்டு,  முற்பகலில் மீண்டும்  அங்கிருந்து பொள்ளாச்சி புறப்பட்டு,  வழியில்  அமுத சுரபியில் அன்றைய மதிய உணவை ( நான் தான் போணி ) சாப்பிட்டு, கல்லூரிக்கு வந்து, தாவரவியல் துறையில் நடந்துகொண்டிருந்த மூலிகை மருந்துகள் தயாரிப்பதற்கான ஒரு நாள் பயிற்சியின் இறுதிக்கட்டத்தில் கலந்துகொண்டு, நன்றி நவில்ந்து, விருந்தினருடன்  புகைப்படம் எடுத்துக்கொண்டு, மறுநாள்  கல்லூரியில் நடைபெற இருந்த பொங்கல் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, அறைக்குச்சென்று  அவசரமாக தலைவாரிக் கொண்டு மார்கழி மகோத்ஸ்வத்தின் இறுதி விழாவில் ’ஆண்டாள் என்னும் பெருங்காதலி’ என்னும் தலைப்பில் உரையாற்றி, காரில் பாய்ந்து ஏறி வீடு வந்து, மறுநாள் திருச்சியில் அயல் ஆக்கிரமிப்புதாவரங்களை அகற்றுவதாக 12 ஆயிரம் பள்ளிகுழந்தைகள் ஒரே சமயத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் கின்னஸ் சாதனை நிகழ்வுக்காக செல்லவேண்டி சூட்கேஸில் எல்லாம் எடுத்து வைத்து இரவுணவு தயாரித்து சரணுடன் சாப்பிட்டு, படுக்கப்போகையில் நள்ளிரவாகி இருந்தது. 

மனதுக்குள் ஆரம்பித்துவிட்டது அரூபத்தின் வேலைகள் என்றுதான் எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. சரண் என் உரை மிக நன்றாக இருந்ததாக சொன்னதில் மகிழ்ந்தேன்.. வசிஷ்டர் வாயால்……….

அதிகாலை சரணும், நானும் திருச்சி நோக்கி உடுமலை வழியாக புறப்பட்டோம். வேடசந்தூரில் இருந்து முக்கோணம் செல்லும் வழி எனக்கு எப்போதும் பிரியமானது. முதன்முதலாக பழனியாண்டவர்க் கல்லூரிக்கு அந்த வழியில் பேருந்தில் செல்லும் போது வழியெல்லாம் சூரியகாந்தி பயிரிட்டிருந்தார்கள்.

 ஒரு குழந்தையின் முகம் போல பெரிதாக பிரகாசமான மஞ்சளில் மலர்களுடன் சாலையின் இருமருங்கிலும் உயரமாக, கம்பீரமாக நின்றிருந்த சூரியகாந்திச்செடிகள் வழியெங்கும் உடன்வந்த அந்தப்பயணம் ரம்மியமாக இருந்தது. அதன்பிறகு ஒரு போதும் சூரியகாந்தி அங்கு பயிரிடப்படவில்லை, அவரை, கரும்பு, வாழை என்றுதான் இருந்ததென்றாலும் அன்று மலர்ந்த சூரியகாந்தி மனசில் அப்படியே வாடாமல் நிலைத்து நின்றுவிட்டது.  எனவே அந்தச்சாலை வழியே பயணிப்பது எனக்கு மிகப்பிடித்தமானதொன்றாகி விட்டிருக்கிறது. வழியெல்லாம் எனக்கு மட்டும் அவரைச் செடியில், கரும்பில் எல்லாம் சூரியகாந்தி மலர்ந்திருந்தது.

குளித்தலையில் இருக்கும் விஷ்ணுபுரம் குழும  நண்பர்  ஷண்முகம் அவர்கள் வீட்டிற்கு மதிய உணவுக்கு அழைத்திருந்தார். எனவே குளித்தலை  வழியாகப் பயணித்தோம். 

மேக மூட்டமாக இருந்ததால் புதிதாக போடப்பட்ட பைபாஸ் சாலையில் மிக அருமையான பயணம். ஸ்பாட்டிஃபையில் குழுவாக இணைந்து கொள்ளும் வசதி இருந்தது எனவே பிடித்த பாடல்களை மாற்றி மாற்றி இருவருமாகக் கேட்டுக்கொண்டிருந்தோம்.

 நான் ’…..கங்கைக்கரைத்தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம்…..’ கேட்டால், சரண் ’…..ஹே யாரையும் இவ்வளவு அழகா பார்க்கலே, ஒன்னப்போல் எவளும் உசிர தாக்கலே…..’ கேட்பான்,  

நான் ’……நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா, அதை நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா….’ கேட்டால், அவன்’ மம்மட்டியானிலிருந்து’’….மலையுரு நாட்டாமை , மனச காட்டு பூட்டாம,உன்ன போல யாரும் இல்ல மாமா …..’’கேட்பான். 

டோல்கேட் பகுதிகளில் ஓய்வறைகள் நன்கு சுத்தமாக பராமரிக்கப்படுவது நெடுஞ்சாலைப் பயணத்தில் ஒரு சௌகரியம். 

ஒரு நெரிசலான சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டிருந்தது பலருடன் நாங்களும்  வெகுநேரமாக காத்திருந்தோம். இருசக்கர வாகனத்தில் ஒரு இளம்பெண் இடுப்புவரை பறந்த கூந்தலுடன் முறையாக ஹெல்மெட் எல்லாம் போட்டுக்கொண்டு முன்னால் இருந்தாள். வார்செருப்பிட்டிருந்தாள், பாதங்களின் விளிம்பில் சுற்றிலும் மருதாணி வரம்பிட்டிருந்தது. அந்தப் பாதங்களால் சாலையை உதைத்து உதைத்து மெல்ல முன்னேறினாள்.  தினம் மாபெரும் கரிய சக்கரங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த நெடுஞ்சாலைக்கு  மருதாணிக்கரையிட்ட அக்கால்களின் அந்த மெல்லிய உதை எத்தனை வசீகரமானதாக இருந்திருக்கும்?

ஸ்ரீ சஷ்டி நாட்டுக்கோழி விருந்து என்று ஒரு கடை பெயர்ப் பலகையைப்பார்த்தேன். வேற பேரே கிடைக்கலையா? 

திண்டுக்கல் மதுரைச்சாலையிலும் ஒரு வேடசெந்தூர் இருப்பதால் வேடசெந்தூரிலிருந்து வேடசெந்தூருக்குச் செல்லும் விசித்திரமன பயணத்திலிருந்தோம், வழியில் மைவாடி, மயிலாடி என்று அழகிய பெயர்களுடன் ஊர்கள் இருந்தன.

மதியம் 12 மணிக்கெல்லாம் குளித்தலை வந்துவிட்டோம். சரணுக்கு குணசீலம் பெருமாள் கோயிலுக்குப் போகவேண்டி இருந்தது.

கையில் வழிபாட்டுக்கு வாழையிலையில் சுற்றிய துளசியும், வாழைப்பழங்களுமாகவே வந்துவிட்ட ஷண்முகம் அவர்களுடன் நேரே  கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்திருந்த அந்த பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள்  கோயிலுக்கு சென்றோம். 

அன்று சொர்க்கவாசல் திறப்பு என்பதால் நல்ல கூட்டம்.. நடைசார்த்தும் முன்பு கடைசியாக உள்ளே அனுமதிக்கப்பட்டோம். 

இரவெல்லாம் விழித்திருந்ததில் களைத்திருந்த பட்டர்,சுருக்கமாக ஆனால் தெளிவாக செங்கோல் தாங்கி அர்ச்சாவதாரமாக மார்பில் திருமகளுடன்ன்  இருந்த பெருமாளைப் பற்றிச்சொல்லி ஹாரத்தி காட்டினார், வணங்கி வெளியே வந்து சர்க்கரைப்பொங்கல், துளசிப் பிரசாதம், தீர்த்தம் வாங்கிக் கொண்டு, வீட்டில் அவ்வப்போது  வேண்டுதலின்போது மஞ்சள் துணியில் முடிந்து வைத்திருந்த நாணயங்களை உண்டியலில் போட்டுவிட்டு வெளியே வந்தோம். கோயில் புனரமைக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் முழுமையாக கோயிலின் சித்திரம் எனக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் திருப்தியான தரிசனம்

மனநலம் பாதித்தவர்களுக்கான பிரத்யேக கோயில் இது. எனக்கு இனி எல்லாம் சரியாகிவிடும்.

கோயில் வாசலில் கூட்டமாக ஆடுகள் காத்திருந்து சர்க்கரைப் பொங்கலுக்கு முண்டியடித்தன. இரண்டு கொழுத்த ஆடுகளுக்கு பொங்கலை ஊட்டிவிட்டேன்.காருக்கடியிலும் இருந்த நாலைந்து ஆட்டுக்குட்டிகளை விரட்டிவிட்டு பயணித்தோம், 

வழியெல்லாம் ஷண்முகம் தலபுராணங்களை, வழிபாட்டு முறைகளை, திருத்தல மகிமைகளை, காவிரியின் மணல் கொள்ளையைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். நாளொன்றுக்கு 5000 லோடு மணல்  அள்ளப்பட்டது என்பதைக்கேட்கவே மலைப்பாக இருந்தது. 

 வழியெங்கும்  கிளையாறுகளும் கால்வாய்களும்  பெரிய பெரிய வாய்க்கால்களுமாக  நிரம்பித் ததும்பி ஓடிக்கொண்டிருந்தன. நீர்வளம் அப்பிரதேசத்தின் வாழ்வியலை முழுக்க முழுக்கத்  தீர்மானித்திருப்பதைக் கண்கூடாக பார்க்கமுடிந்தது. எங்கும்  நெல்லும், வாழையும் பயிராகின. 

நீர் நிறைந்து நின்ற  வயல்களில் பெருங்கோரைகள் ஆளுயரம் வளர்ந்து, பழுப்பில் மலர்க்கொத்துக்களுடன் நின்றன. வேறு பயிர்களுடன் வளர்கையில் அவை களைச்செடிகள் ஆனால் அவையே சாகுபடியாகி பலனுமளிக்கிறது. yes, weeds are right plants in the wrong place.

சாலையோரம் லாரியில் கோரைப்புல்கட்டுக்களை ஏற்றிக்கொண்டிருந்தவர்களிடம் பேசி எப்படி கோரையை பாய் பின்னுவதற்காக மெலிசாகக்கிழிப்பார்கள் என்று செய்து காண்பிக்கச்சொல்லிக் கேட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

மஞ்சக்கோரை என்று ஒரு ஊர்ப் பெயரை பார்த்தேன்,

அங்கிருந்து கோரைப்பாய்கள் விற்கும் கடைக்குச்சென்று பந்திப்பாய்கள் வாங்கினேன். 

 இங்கே கொங்குப்பகுதியில்  கோரைப்பாய்கள்கொண்டு வந்து விற்பவர்கள் நான்குமடங்கு விலைசொல்லுவது அப்போதுதான் தெரிந்தது.நல்ல நீளமானப் பந்திப்பாய் 60 ரூபாய் தான். பாயின் ஓரங்கள் ரெக்ஸின் வைத்தது. மெத்தை வைத்துத் தைத்தது,குழந்தைகளுக்கானது என்று பல விதங்களில் பாய்கள் நல்ல தரமானதாக இருந்தன.

கோரை தலவிருட்சமாக இருக்கும்  சாய்க்காட்டில் அருளும் சாயவனேஷ்வரர் கோயிலைக்குறித்து கோரைபற்றிய கட்டுரையில் முன்பு நான் எழுதியதை பற்றிக் காரில் பேசிக்கொண்டே பயணித்தோம். https://logamadevi.in/792

நீர்நிலைகள் அதிகம் இருந்ததால் கோழியிறைச்சிக் கடைகளுக்குப்பதில் ஏராளம் வாத்திறைச்சிக்கடைகளும். பன்றியிறைச்சிகடைகளும்  இருந்தன. வாழையிலை வாழைப்பழங்கள் சாலையோரங்களில் எங்கும் விற்கப்பட்டன.  வேகத்தடைகளில் எல்லாம் முளைத்த தேங்காய்க்குருத்தும் செக்கச்சிவந்த சதைப்பகுதியைக் கொண்டிருக்கும் கொய்யாக்காய்களும் விற்றார்கள்.

ஷண்முகம் அவர்களின் 15 ஏக்கர் விஸ்தீரணமான வாழைத்தோட்டத்துக்குப் போனோம். அந்தப்பிரதேசத்தின் சுவையான ஏலக்கி,  பூவன் போன்ற வாழைகள் தார் விட்டிருந்தன. சில மரங்களில் காய்கள் முதிர்ந்து மஞ்சள் பிடித்து திரண்டிருந்தன.  தூயமல்லி, பொன்னி, பாஸ்மதி என்று நெல்லும் பயிரிட்டிருந்தார்.

அந்தப்பகுதியில் எங்குமே வாழைத்தார் வெட்டியதும், கொங்குப்பகுதியில் செய்யப்படுவதுபோல வாழைமரத்தை அடியோடு வெட்டி தண்டை உரித்தெடுத்து வியாபாரம் செய்வதில்லை. அன்னைமரத்தை அடுத்த சந்ததி வளருகையில் உடன் நிற்க அப்படியே விட்டுவிடுகிறார்கள். மெல்ல அழிந்துகொண்டிருக்கும் அன்னையினருகாமையில் கன்றுகள் செழித்துவளர்கின்றன

புதிதாக இந்த முறையைக் கேள்விப்படுகிறேன்

வாழைக்காய் வியாபாரம் குறித்து வெற்றிகரமான வாழைவியாபாரியான ஷண்முகம்  சொல்லிக்கொண்டிருந்தார். வாழைக்கன்று ஒரு தோட்டத்தில் நட்டுவைக்கப்படுகையிலேயே அதன் விலையை நிர்ணயித்து, விளைந்தபின்னர்  வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் செய்துகொள்ளப்படுகிறது. 12 மாதப் பயிரென்பதால் விளைச்சலின் போது, விலைவாசியின் நிலவரத்தைப்பொறுத்து  லாபமோ நஷ்டமோ அது ஒப்பந்தம் செய்தவர்களுக்குத்தான். ஷண்முகம் ‘….மூணு சீட்டுமாதிரிதாங்க…’ என்றார்.  நூற்றாண்டுகளுக்கு முன்பு ட்யூலிப் மேனியாவும் இப்படித்தான் நிகழ்ந்தது

விவசாயத்தைக்காட்டிலும் பெரும் சூதாட்டம் வேறு இருக்க முடியாது.. ஷண்முகம் இயற்கை விவசாயி எனப்து மகிழ்வளித்தது.

சண்முகம் ஒரு தகவல் சுரங்கம், வழியெங்கும் இருந்த கட்டிடங்கள் கோயில்கள் என்று பலவற்றைக் குறித்து விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார்,

மாபெரும் கண்டெய்னர் லாரிகள் நாகப்பட்டினம்-திருச்சிச் சாலையில்  துறைமுகங்களுக்கு சென்றபடியே  இருந்தன. அங்கிருந்து  ரத்னகிரீஷ்வரர் மலைக்கோயில் அடிவாரம் வரை சென்று காரிலேயே கிரிவலம் வந்தோம். நேரம் 2 மணியைத் தாண்டி விட்டிருந்தது.

அந்த மலையில் இன்றும் மண்ணைக் கிளறினால் சிறிதும் பெரிதுமாக ரத்தினங்கள் கிடைக்கிறதாம், மழைக்காலங்களில் ஊர்மக்கள் குச்சியுடன் மலையில் அங்கும் இங்குமாக கிளறிக்கொண்டிருப்பதை பார்க்கலாம் என்றார் ஷண்முகம்.

மலையெங்கும் குரங்குக்கூட்டங்கள் . அங்கு மூன்று குரங்கு ’குரூப்’ இருப்பதாகச் சொன்னார். மலையின் கீழ்ப் பகுதியில் இருக்கும் கூட்டம் மற்றவற்றை அண்ட விடுவது இல்லையாம். குரங்குகளுக்கு அடிக்கடி வாழைப்பழங்கள் கொண்டு வந்து கொடுப்பதாகச்சொன்னார்.

குரங்குகள் ஆவலாக வாழைப்பழங்கள் உண்ணும் காணொளிகளையும் பார்த்தேன், 

மீண்டும் ஒரு கோவிலுக்குச்சென்று நடை சார்த்தும் சமயமாதலால் வெளியிலிருந்தே வணங்கிவிட்டு புறப்பட்டோம்.  பல நெல்வயல்களில் சமீபத்திய மழையினால் பொன்னாக விளைந்திருந்த நெற்ப்பயிர்கள் முழுக்கச் சாய்ந்திருந்தன. பலவயல்களில் அறுப்பு நடந்து கொண்டிருந்தது.

வழியெங்கும்  வெள்ளைவெளேரென்று நாரையிறகுபோல நாணல்கள் மென்பூக்குலைகளுடன் நீர்நிலைகளின் கரையோரம் கூட்டமாக நின்றன.

12 மணிக்குப்பிறகு நான் பசி தாங்க மாட்டேனென்பதால் சரண் திரும்பித் திரும்பி என் முகத்தைப் பார்த்துக் கொண்டே வண்டி ஓட்டினான். நான் பயண அனுபவங்களில் திளைத்து பசியை மறக்கடித்துக் கொண்டிருந்தேன்.

ஷண்முகம் அவர்களுக்கு அவரது சொந்த ஊரான தோகைமலையில்  இருந்து உறவினரின் தொலைபேசி அழைப்பு வந்தது.

அன்று மாலை ஊசாத்து இருப்தால் வந்துவிடும்படி கேட்டுக்கொண்டார் எதிர்முனையில் இருந்தவர்.

’…என்னது ஊசாத்து…?’ என்று விசாரித்தேன்,விளக்கினார்.

ஊர்ச்சாட்டுதல்தான் காலப்போக்கில் மருவி ’ஊசாத்து’ ஆயிருக்கிறது

கார்த்திகை தீபம் முடிந்ததும் மழை நிற்க வேண்டும் அதன்பிறகும் மழை தொடர்ந்தால் விவசாயம் பாதிப்பதோடு நீரினால் பரவும் நோய்களும் ஊருக்குள் பரவும் என்பதால்  மழைபோதும் என்பதற்காக நோன்பு சாட்டி ஊரின் நான்கு எல்லயிலும் ஆடு அறுத்து செய்யும் சடங்கு பலகாலமாக நடந்துவருகிறது.

ஆச்சர்யமாக கேட்டுக்கொண்டேன்.

மழை வேண்டி யாகம் செய்யும், மழையை நம்பியே வாழும் ஒரு பகுதியிலிருந்து மழை போதுமென்று வேண்டிக்கொள்ளும் நீர்வளமிக்க பகுதிக்கு வந்திருக்கிறேன்

நகருக்குள் செல்லும் வழியில் பல இடங்களில் ஷண்முகம் அவர்களுக்குச்சொந்தமான  பல வீடுகள், காம்ப்ளக்ஸ்கள், கடைகள் அலுவலகங்களைப் பார்த்தோம். நகருக்குள் அவரது பெரிய வீடு இருந்தது. கீழிருந்து பார்க்கையிலேயே  மேல்தளத்தில் இரு படுக்கையறைகளின் பால்கனிகள் உருமால்போல உருண்ட பெரிய வளைவுகளுடன் அலங்காரமாகத் தெர்ந்தன.

தேக்கும் ராஜஸ்தான் மார்பிளுமாக இழைத்து இழைத்துக் கட்டியிருக்கும் வீடு.

 அவரின் இருமகன்களையும்,மனைவியையும் அறிமுகம் செய்து கொண்டோம்

மாபெரும் உணவு மேசையில் கரும்பு, வாழைப்பழச் சீப்பு. மூங்கில் கூடைகளில் காய்கறிகள் எல்லாம் ஒருபக்கம் வைக்கப்பட்டிருந்தன. டிபிக்கல் வளமான விவசாயின் வீடு.

தலைவாழை இலையில் நல்ல ருசியான சைவ சாப்பாடு.  வாழைப்பூ வடை,மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் வறுவல்  அவரைக்காய் பொரியல், கூட்டு, அப்பளம், பாயஸம் என்று விரிவான மெனு. 

புறப்படுகையில் கார் டிக்கியில் ஒரு ஏலக்கி வாழைத்தாரை வைத்துவிட்டு எங்களுடன் ஸ்ரீரங்கம் வந்தார் ஷண்முகம். 

ஸ்ரீரங்கத்திலும் சொர்க்கவாசல் திறபபாதலால் பெருங்கூட்ட நெரிசல் இருந்தது. சாலையே மக்கள் வெள்ளத்தால் நெரிந்தது. கோயில் காளைகளும்  சாலையெங்கும் திரிந்தன.

ஏராளமான சாலையோரக் கடைகளில் மலர்களும், பெரிய பெரிய கூடைகளில் கலவைக்காய்கறித் துண்டங்களும் விற்கப்பட்டன.

ஏகாதசி அன்று கலவைக் காய்ச்சமையல் செய்வார்களாம்.

ஊரெங்கும் ரங்க விலாஸ், ரங்க மாளிகை, ரங்கா டிபன் சென்டர், ரங்கா லாட்ஜ் என்று ரங்க மயம்.  

சிறுமழைதூறிக்கொண்டிருந்தது பக்தர்களின் வரிசை நீண்ண்ண்ண்ண்டிருந்தது.  கோவிலுக்குச்செல்லும் எல்லாச்சாலைகளும் பாதுகாப்புக்கருதி  அடைக்கப்பட்டிருந்தன.  கார் நிறுத்தத்திலிருந்து வெகுநேரமாக சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தோம். அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் வந்திருந்ததால் கூடுதல் கெடுபிடி.

 என்னால் நிச்சயம் அந்த நீண்ட வரிசையில் காத்திருக்க முடியாது எனவே வெளியிலிருந்து வணங்கிவிட்டு புறப்பட்டோம். அத்தனை நீண்ட் வரிசையில் நின்றிருந்தால் நிஜமாகவே சொர்க்க வாசலையோ நரகவாசலையோ திறந்து என்னை உள்ளே அனுமதித்திருப்பார்கள்,

 கோயில் அருகில் இருந்த ஒரு காபிக்கடையில் நல்ல டிகிரி காப்பி குடித்கோம், அருமையான கள்ளிச்சொட்டு டிகாக்சன் காப்பி . அங்கிருந்து கார் நிறுத்தத்திற்கு ஆட்டோவில்தான் போகவேண்டி இருந்தது.

பின்னர் நாங்கள் திருச்சியில் தங்கவிருந்த விடுதிக்கு எங்களைக்கொண்டு வந்துவிட்டுவிட்டுத்தான் ஷண்முகம் கிளம்பிச் சென்றார்

எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகச் சொன்ன அந்த விடுதியில் அறை எப்படியோ குழப்பத்தில் இல்லாமலாகி இருந்தது.  அங்கிருந்து மீண்டும்  சாலைப்போக்குவரத்து நெரிசலில் நீந்தி நீந்திப் பயணித்து இன்னொரு விடுதிக்குச்சென்று அங்கு பினாயில் வாடையடித்த அறையைப்பார்த்து வெறுத்துபோய்த் திரும்பி மீண்டும் சாலையிலேயே நெடுநேரம் காத்திருந்து மற்றொரு விடுதிக்கு வந்து சேர்ந்தபோது பாதங்களிரண்டும் பூரிபோல வீங்கி இருந்தது.களைத்திருந்தேன்.

தொடரும்

கண்ணகியும், குஷ்பூவும்!

சரண் தருண் இருவருமே சூழலை உற்றுக்கவனிப்பவர்கள் தான். தினமும் பள்ளிக்கதைகள் வேனிலிருந்து இறங்க இறங்கவே தொடங்கிவிடும், இரவு என்னிடம் நெடுநேரம் கதை கேட்பார்கள்.

என்னிடம் சொல்ல வேண்டும் என்பதற்காகவே பள்ளியில் நடப்பவற்றை கவனிப்பார்கள்.

dont talk in tamil என்பதை அரிச்சுவடியிலிருந்தே கடுமையாக வலியுறுத்தும் பள்ளிதான் அதுவும். தமிழ்ப்பாடமும் வேண்டா வெறுப்பாக வைத்திருந்தார்கள். எப்படியோ எதன்பொருட்டோ பள்ளியில் ஒரு நாள் ஏதோ விழாவுக்காக ஒரு சிறப்பு விருந்தினர் தமிழில் உரையாற்றியிருக்கிறார் அதுவும் கண்ணகியைக்குறித்து.

அன்று மாலை தருண் கயிற்றுக்கட்டிலில் மூவருமாக அமர்ந்திருக்கையில் அந்த உரையைக்குறித்துச் சொன்னான். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது அப்போது தருண் 4-லிலோ ஐந்திலோதான் படித்துக்கொண்டிருந்தான். அவனுக்குக் கண்ணகியைக் குறித்து சொல்லப்பட்டது வியப்பும் சந்தோஷமும் அளித்தது.

…“ உனக்குப் புரிஞ்சுதாடா அவர் பேசினது?“… என்றேன்.

..நல்லா புரிஞ்சுதே. கோவலன் கெட்டவன், கண்ணகி பாவம் இல்லையா?…“ என்றான் எனக்கு நம்பவே முடியவில்லை.

ஈகை வான் கொடி அன்னாளான கண்ணகியை விட்டுவிட்டு மாதவியிடம் போன கோவலனை ,அறம் தவறிய மன்னனை, ஊர் விட்டு ஊர் செல்லவேண்டிய துயரத்தை எல்லாம் கண்ணகிக்கு ஊழ் அளித்ததை தருண் புரிந்துகொண்டிருக்கிறான் என்பது பெருமகிழ்வளித்தது.

ஆமாண்டா ரொம்ப ரொம்ப பாவம் அவ… என்றேன்.

…..இந்தக்கோவலன் அந்த அத்தைக்கு ஏன் சாப்பாடே போடலை?.... என்ற கேள்வியில் திகைத்து, ...``கண்ணகிக்கு கோவலன் சாப்பாடு போடலியா யார் சொன்னாங்க அப்படின்னு?…. என்றேன்

….அந்த தாத்தா பேசினாரே அவர்தான் சொன்னாரு… என்றான்

இல்ல இல்ல எதோ தப்பா புரிஞ்சுகிட்டிருக்கே தருண் சாப்பாடெல்லாம் நல்லாத்தான் கிடச்சுது அவளுக்கு ஆனா அவ பிரச்சனை வேறடா, அவளை விட்டுட்டு அந்த மாமா வேற ஒரு பொண்ணு கூட போயிட்டாரு, அதனால கஷ்டப்பட்டா அப்புறம் கோவலனை கொலைபண்ணிட்டாங்க அதனால் அவ பாவமாயிட்டா ,…. என்றேன்

அதெல்லாம் தெரியும் அந்த இன்னோரு அத்தை பேரு மாதவி… “….என்றான் அப்போது 7-ல் படித்துக்கொண்டிருந்த சரண்

அதற்குச் சில மாதங்கள் முன்பு நாங்கள் மூவருமாக HBO வில் ஒரு ஆங்கிலப்படம் பார்த்துக்கொண்டிருந்தோம் . கிளைமாக்ஸில் ஒரு நிலத்தடி அறையில் மாட்டிக்கொண்ட நாயகனையும் நாயகியையும் வெள்ள நீர் உள்ளே கொஞ்சம் கொஞ்சமாகப் புகுந்து மூழ்கடிக்கிறது கழுத்தளவுக்கு நீர் வந்தபோது இருவரும் ஆவேசமாக முத்தமிட்டுக்கொள்கிறார்கள்,

அது இறுதி முத்தமாதலால் வெகுநேரம் நீடித்தது, சரண் சந்தேகமாக என்னிடம்

அம்மா அந்த மாமாவும் அத்தையும் என்ன செய்யறாங்க?… என்றான்

நான்..“ அதுவா அந்த வெள்ளம் வந்துச்சில்ல அந்த தண்ணி நிறைய அத்தை வாயில போயிருச்சு, அதை மாமா எடுக்கறார்“…. என்றேன், வேறென்னத்தை சொல்வது.

சரண் என்னப்பார்த்து அடப்பாவமே என்னும் தொனியில் ``போம்மா, மாமா முத்தா குடுக்கறாரு அத்தைக்கு…. என்றான்

தெரியுதில்ல பேசாம படம் பாரு…. என்றேன்.

எனவே கோவலன் மாதவியைத் தேடிப்போனதால் உண்டான extra maraital affair குறித்து சரணுக்கு தெரிந்திருந்ததில் ஆச்சர்யமில்லை.

ஆனால் கண்ணகிக்கு சாப்பாடே இல்லாமல் போனதை இளங்கோவடிகள் கூட குறிப்பிடவே இல்லையே?

மீண்டும் தருண் … சாப்பாடே இல்லாம கண்ணகி பட்டினியா இருந்தாங்க அவங்கள மாதிரி யாருமே பட்டினியா இருந்ததே இல்லையாமா … தாத்தா சொன்னாரே“…. என்றான்

எனக்கு விஷயம் புரிந்தது

வீட்டில் டேக்ஸா எடுத்துட்டுவா என்று சொன்னபோது அது என்னவென்று தெரியாமல் பேய் முழி முழித்துக்கொண்டு நின்ற. ….பன்னாடி எங்கேங்கம்மா?… என்று கிராமத்துப்பெண் ஒருத்தி கேட்க ,

….பன்னாடி வெளியூர்ல இருக்காரு.. என்று நான் பதில் சொன்னதுக்கு

எதுக்கு அப்பாவ பன்னாடைன்னு அந்த அம்மாகிட்டெ திட்டினே… என்று கோபித்துக்கொண்ட தருணுக்கு “பார்தொழுது ஏத்தும் பத்தினி” என்றால் என்னவென்று தெரியாமலிருந்ததில் வியப்பொன்றும்மில்லை.

அவனுக்கு பத்தினித்தனத்தை எப்படி விளக்கிச்சொல்வதென்று தெரியவும் இல்லை.

….“அது பட்டினி இல்லடா பத்தினி, அப்படின்னா ரொம்ப நல்லவங்க, மாமா இவங்களை விட்டுட்டு வேற அத்தைகிட்டே போனாலும் கோபிச்சுக்காம இருந்தா, எப்பவந்து கேட்டாலும் கொலுசு, தோடு செயினை எல்லாம் கழட்டிக்கொடுத்தா பத்தினின்னு பேரு கிடைக்கும், கோவில் கட்டி சிலையெல்லாம் வச்சு சாமியாவே கும்பிடுவாங்க அவங்களை“… என்றேன்.

முன்பு ஜெயா டிவியில் குஷ்பூ விதம்விதமான வடிவங்களில் ஜன்னல், கதவு, வாசல் ,வாசற்படி, மாடிப்படி, வராண்டா வெல்லாம் வைத்த ஜாக்கட் போட்டுக்கொண்டு ஜாக்பாட் நிகழ்ச்சியை நடத்தினார்.

அப்போது வீட்டில் டிவி இருந்தது. தருண் என்னுடன் அமர்ந்து ஜாக்பாட் பார்ப்பான். ஒருசில வாரங்களுக்குபிறகு நிகழ்ச்சி நடந்துகொண்டு இருக்கையில் குஷ்புவைக்காட்டி

....``இந்த அத்தை பாவம்``.... என்றான்

கொளுக்மொழுக் என்று போஷாக்காக, புஷ்டியாக அழகாக இருக்கும் குஷ்புவைப் பார்த்தால் எப்படி இவனுக்குப் பாவமாக இருக்கிறதென்று தெரியவைல்லை.

ஏண்டா ? என்றேன்

…“பட்டுசாரி எல்லாம் நல்லதா வச்சுருக்குக்காங்க ஆனா ஜாக்கட்தான் எல்லாமே கிழிஞ்சுருக்கு“….என்றான்.):

தருணுக்கு தெரிந்த அத்தைகள் எல்லாமே பாவம்தான்!

இளமைக்காலம் !

கல்லூரியில் தாமிரநிற காய்களுடன் நின்றிருந்த பெருங்கொன்றை மரத்தடியில் காத்திருக்கையில் இரு மாணவிகள் என்னைக் கடந்து நடந்து சென்றார்கள்.நெருங்கிய தோழிகள்போல, இறுக்கமாகக் கைகோர்த்திருந்தார்கள்.

அதில் ஒருத்தி மற்றவளிடம் …”” நேத்து நைட் பத்தரை மணிக்குடி , எல்லாரும் டிவி பார்த்துகிட்டு இருக்கோம் எனக்குப் போன் வருது புது நம்பரிலிருந்து. அப்பா எடுத்து ஹலோங்கறாரு கட் ஆயிருச்சு அப்பா மறுபடியும் ட்ரை பண்ணினா சுவிட்ச் ஆஃப்னு வருது, நான் பேசாம டிவியையே பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்பா கொஞ்ச நேரம் பார்த்துட்டு விட்டுட்டாரு. நைட் நான் ட்ரூ காலர் போட்டுப் பார்த்தா அது நம்ம கிளாஸ் — டி……””

…””அடப்பாவி கூப்பிட்டவன் பேசவேண்டியதுதானே உங்கப்பாட்டெ தைரியமா?…”” என்றாள் அந்த மற்றொருத்தி.

….””ம்க்கும், பேசிட்டாலும், என்கிட்டே ரெக்கார்ட் நோட் கேட்கறதுக்கே ஒரு செமெஸ்டர் ஆயிருச்சே அவனுக்கு!..

…””இன்னிக்கு காலையில் கிளாஸில் என்ன பார்த்துட்டு ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி உட்கார்ந்திருக்கான் பார்த்தியா?…”” என்றாள் முதலாமவள். பின்னர் கிளு கிளுவென்று சிரித்தபடி என்னைக் கடந்துசென்றார்கள்.

இளமையின் வண்ணங்கள்!

கேளாச்சங்கீதம்- ஜெ வின் சிறுகதை!

மீண்டும் je தளத்தில் ஒரு சிறுகதையின் மீள் வாசிப்பு. கேளாச்சங்கீதம்!

பரவசமும் பழைய நினைவுகளும் மகிழ்ச்சியுமாக வாசித்தேன். கதையில் நீலி அவுரிச்செடியும் வருவதால் கூடுதல் மகிழ்ச்சி. நீலியின் பல்வேறு மருத்துவப்பயன்களில் முதன்மையானது விஷம் முறிக்கும் அதன் தன்மைதான்.

நீலி என்பது Indigofera tinctoria என்னும் அவுரிச்செடி. காடுமேடெல்லாம் தரையில் அப்டர்ந்துவளரும் இதன் இலைகளை உலர்த்திக் கொள்ளை விலைக்கு தலைமுடிக்கான இயற்கைச்சாயமாக விற்கிறார்கள். நாமே எளிதாக நமது சுற்றுபுறத்தில் கிடைக்கும் இதை எடுத்து உலர்த்திப்பொடி செய்து உபயோகிக்கலாம்.

நான் இதன் நீலச்சாயம்குறித்தும் ஜீன்ஸ்துணிகளின் நீலநிறம் குறித்தும் விரிவாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்

கேளாச்சங்கீதம் வாசிக்கையில் நானே கதைசொல்லியாக, அணைஞ்சபெருமாளின் கூட வந்தவராக, கொச்சன் வைத்தியரிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டு இருந்தேனென்றும், இல்லையில்லை நான்தான் கணேசனென்றும் ஒரே சமயத்தில் தோன்றியது

கணேசனைப்போல,அன்பெனும், நேசமென்னும், காதலென்னும், பிரியமெனும் பிடியில் அகப்பட்டுக்கொண்டிருக்காதவர்கள், அந்த நஞ்சை அருந்தாதவர்கள்  இருக்கமுடியாதல்லவா? எவ்வளவு  விஷம் உள்ளே  போனதென்பதில்தான் வேறுபாடு இருக்க முடியும்

 “தேனுதான் தேனீயை ஒண்ணாச் சேந்து ஒற்றைக்கூடா வச்சிருக்குது. தேனீ தேனிலே பிறந்து வளருது. தேன் தேடி அலையுது. தேனிலே சாவுது… அந்த தேனுதான் இது. இது அமிர்த மதுரம். நோயா வரும். சாவா வரும். அப்பமும் இது மதுரம்தான்

நெஞ்சில் விஷம் நிறைந்து பூத்திருக்கிற, பெரும்பாறைகளை உச்சிமலையில் கட்டிவைத்திருக்கும் கொலைப்பகவதியின்  பூட்டில் சிக்கிக்கொண்டிருக்கும் கணேசனை பிரியமாக பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படி இனிய துயரில் இருப்பதும் ஒரு கொடுப்பினைதான்.லக்‌ஷ்மி மணிவண்ணன் சொல்லி இருப்பார் ஒரு கவிதையில்  தூய அன்பென்னும் துயர் என்று.

இப்படி ஒரு சம்பவம் என் வீட்டிலும் நடந்தது.  ஒரு பெண்ணின் பிரியத்தில் விழுந்த உறவுக்கார இளைஞர் ஒருவரை வீட்டுப் பெரியவர்கள் யாரோ  கைவிஷம் வைத்து விட்டதாக நம்பினார்கள். மருந்து வைப்பது என்று இங்கு சொல்வார்கள்

என் அப்பாவின் ஆசிரியரான ஒரு பெரியவரின்  குடும்பத்துக்கு சொந்தமான  இரட்டைக்குளம் பகவதி கோவிலில்  இதைக் கண்டுபிடிக்க முடியும் என்றுசொல்லப்பட்டது. சம்பந்தப்பட்டவரைத் தவிர மற்ற  எல்லோருமாக போனோம்.

கேரளாவில் ஒரு சின்னக் கிராமத்தில் கோவில். பெரியவருக்கு தள்ளாத வயது, ஆனாலும் கோவிலில்தான் இருந்தார். அவர் மகன் அங்கு பூசை செய்து கொண்டிருந்தார். தீர்த்தம் வழங்குகையில் எனக்கு மட்டும் செம்பிலிருந்த சிறு நந்தியாவட்டை மலர் கையில் விழுந்தது. ’’என்ன நட்சத்திரம் நீ’’ என்று அவர் என்னை அப்போது கேட்டது நினைவிருக்கிறது. பரணி என்றேன்

. …””நல்லாருப்பே. தேவி அருள் இருக்கு உனக்கு””….. என்றார்.

கோவில் பிரகாரத்தில் இருந்த சின்னச் சிலைக்கு பாலாபிஷேகம் செய்கையில் பாலின் நிறம் நீலமாக மாறினால் கைவிஷம் வைத்தது உறுதியாகும்.

வீட்டிலிருந்து பால் கொண்டு போயிருந்தோம் அது முருகன் சிலை என்றுதான் நினைவு பலவருடங்கள் ஆகிவிட்டன. எங்களுக்கு முன்பாக அதன் மீது வேறு சிலரும் வீட்டிலிருந்து கொண்டு வந்த பாலை ஊற்றினார்கள் வழிந்து அப்படியே  நிறம் மாறாமல் கீழே வந்தது. எங்களுக்கும் அப்படியேதான் வரும் என்று நினைத்திருந்தேன், கொஞ்சம் அசுவாரசியமாகக் கூட இருந்தேன் என்றும் சொல்லலாம். ஆனால் அந்த நின்ற கோலத்திலிருந்த சிறு கரிய சிலை மீதிருந்து   நாங்கள் கொண்டு வந்திருந்த பாலை ஊற்றுகையில நீலமாக கீழே வழிந்தது.

நம்பவே முடியாமல் திகைத்துபோய் பார்த்துக் கொண்டிருந்தேன் ’’அவரை அவர் வழியிலேயே விட்டுவிடுவதை தவிர வேறு வழியில்லை ’’என்று பெரியவர் சொன்னார். வாடகைக்காரில் போயிருந்தோம். வீடு திரும்பும் வரை சம்பந்தபட்டவரின் அம்மா ஒருவார்த்தை கூட பேசாமல் கண்ணீருடன் அமர்ந்திருந்தார்.

கேளாச்ச்சங்கீதம் கேட்டவரை அப்படியேதான் விட்டுவிட்டோம் .

பேய்மிரட்டி!

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பெரிய காரியம் . துக்கம் விசாரிக்க பொன்னாண்ட கவுண்டனூர் சென்றிருந்தேன். திரும்பி தொண்டாமுத்தூர் வழியே வரும்போது சாலையோரம் பேய்மிரட்டி என்கிற Anisomeles malabarica புதர்கள்அடர்த்தியாக வளர்ந்திருந்தன. காரை நிறுத்தி இறங்கினேன்.

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் இந்தச்செடியை மாணவர்களுக்கு கொடுக்க நீலகிரிசென்று பைக்காரா அணைக்காட்டுக்கருகில் இருந்து எடுத்து வருவோம். இப்போது வாய்க்கால் வரப்போரங்களில் எங்கும் காணமுடிகிறது.

தும்பைக்குடும்பத்தைச்சேர்ந்த இதன் இலைகள் வெகுட்டல் வாடை கொண்டவை. அதனாலேயே இதற்கு பேய்மிரட்டி, பேய் விரட்டி என்று பெயர். இது பெருந்தும்பை என்றும் அழைக்கப்படுகிறது.

மாந்த்ரீக பூஜைகளில் ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டிருக்கும் ஒரு மருத்துவரின் அலுவலக அறையில் இதன் காய்ந்த குச்சிகள் ஒரு சிறு கட்டாக பூசைமாடத்தில் வைக்கப்பட்டிருந்ததை ஒருமுறை பார்த்திருக்கிறேன்,

பலர் இந்தச்செடியை தோட்டத்தில் வளர்த்தாலோ அல்லது இதன் காய்ந்த பாகங்களை வீட்டில் வைத்துக்கொண்டாலோ தீய சக்திகள் அண்டாது என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். நான் வீட்டுத்தோட்டத்தில் இதை ஒரு மூலிகைத் தாவரமாகத்தான் வைத்திருக்கிறேன். தீய சக்திகள் அண்டாமலிருக்க மனிதர்களே இல்லாத தீவிலல்லவா வசிக்க வேண்டும்?

பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகளில் இது ஒரு காய்ச்சல் நிவாரணியாகவும், பசியுணர்வை தூண்டுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. (மருத்துவரின் அனுமதியும் பரிந்துரையுமில்லாமல் இதை நாமாக மருந்தாக எடுத்துக்கொள்ளவே கூடாது)

இதன் பசிய இலைகளின் கூர் நுனியை பஞ்சுத்திரியைப்போல அகல்விளக்குகளில் வைத்து எண்ணெய் ஊற்றி விளக்கேற்றலாம். பச்சையின் சடசடப்பே இல்லாமல் திரியைபோலவே மணிக்கணக்கில் நின்றெரியும். இந்த சுடர் எரியும் வரைக்கும் கொசுபோன்ற பூச்சிகள் வருவதில்லை.

தொடர்ந்து பயன்படுத்தினால் ஆளையே கொல்லும் ஆல் அவுட் நச்சுத்திரவங்களைக் காட்டிலும் இப்படியான இயற்கைப் பூச்சி விரட்டிகளை நாம் எளிதில் பயன்படுத்தலாம்.

வீட்டில் இருப்பது ஒரே ஒரு சிறு செடி என்பதால் விளக்கெற்றவென்று இந்தப்புதர் கூட்டத்திலிருந்து இலைகளை எடுத்துக்கொள்ள நினைத்தேன். காரில் எப்போதும் காகிதக் கவர்களும் கத்தரி, கத்தி ஆகியவைகளும் இருக்கும். ஒரு கவரில் நானும் கார் ஓட்டுநருமாக பேய்மிரட்டி செடிகளை கத்தரித்துச் சேகரித்துக் கொண்டிருந்தோம்.

அந்த வழியே டி வி எஸ் 50-யில் குதிரை மசால்கட்டுகளுடன் வந்த ஒருவர் வண்டியை எங்களருகில் நிறுத்தினார். நீலத்தில் பொடிக்கட்டமிட்ட லுங்கியும் முழங்கைவரை சுருட்டிவிட்டிருந்த சிவப்பு முழுக்கைச்சட்டையுமாக இருந்தார். எங்களிடம்

….. ’’’’ இதை எதுக்கு பொறிக்கறீங்க? இது களைச்செடி, நாத்தமடிக்கும்’’’’……..

என்றார்.

…..’’’’ இந்த இலையை திரிமாதிரி அகல்விளக்கில் போட்டு ஏத்தினா எரியுங்க, கொசுவும் வராது, அதான் பறிக்கிறேன்’’’ ……… என்றேன்.

அசந்துபோனவர் ஒரு கெட்ட வார்த்தையைச்சொல்லி, வான் நோக்கி கைகைக்காட்டி

…..”” தக்காளி! என்னன்னவெல்லாம் குடுத்துருக்கான் பாருங்க நம்மளுக்கு!’’…. என்றபடி வண்டியை கிளப்பிக்கொண்டு போனார்.

அந்தக் கெட்டவார்த்தை இல்லாமல் நானும் அதைத்தான் எப்போதும் நினைக்கிறேன், என்ன என்னவெல்லாம் நமக்கென கொடுக்கப்பட்டிருக்கிறது? நாம் தான் அறிந்துகொள்வதில்லை அளிக்கப்பட்டவைகளின் அருமைகளை.

இளமை!

காலையில் கல்லூரியின் அறிவியல் ஆய்வகமொன்றின்  முன்பிருந்த இடைநாழியில் ஓர் இளைஞனும், யுவதியும்.

அன்றைய செய்முறைத்தேர்வுக்காக தூண்களின் இடையில் இருந்த திட்டில் அமர்ந்து மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்த அவளிடம் அவன் ’’ப்ளீஸ் ரெகார்டு  எழுதிக் கொடுடி’’ என்று கெஞ்சிக் கொண்டிருந்தான்  அவள் எரிச்சலுடன் ’’ஆமா நீ ஊர் சுத்தப்போவே நான் உட்கார்ந்து 22 பக்கம் இப்போ எழுதிதரனுமாக்கும் போடா’’ என்றாள். 

அவன் பத்தெட்டுக்கள் பின்புறமாகவே நடந்துசென்று, மண்டியிட்டு கைகளை அகலமாக விரித்தபடி ‘’ வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும் அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் உன்னைச்சேரும்’’ என்று பாடியபடி முன்னே வந்து மீண்டும் மண்டியிட்டு கைகளை பக்கவாட்டில்  எம் ஜி யார்போல  வீசிக்காண்பித்தான். அவள் சிரித்தபடி  ’’எருமை மாடு, எழுதித்தொலைக்கறேன்’’ என்றாள்

« Older posts

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑