லோகமாதேவியின் பதிவுகள்

Month: December 2025

மலையின் மறு சரிவில் இறங்குதல்!

தங்களுக்குக் கல்யாணம் ஆக வேண்டுமென்பதற்காகச் சொந்தச் சகோதரியின் 16 நாட்களேயான பெண் குழந்தையை கால்களால் மிதித்தே கொன்ற மூன்று சகோதரிகளைக் குறித்து நவம்பரில் செய்திகள் தொடர்ந்து வந்தன. எனக்கு அதற்குள் சென்று மேலும் அறிந்துகொள்ளும் துணிவில்லை.  எனினும்  இதற்கிணையான அல்லது இதைக்காட்டிலும் வன்முறையானவற்றை செய்தவர்களை இந்த வருடமும் அறிந்துகொண்டேன்.

துரோகங்களை அதிகம் மிக அண்மையில் சந்தித்தவளாதலால் கழுத்தறுபடுகையில் வெளியாகும் முதல் குருதிச்சொட்டின் பச்சை வீச்சத்தை என்னால்  உடனே தெரிந்துகொள்ளமுடியும். புதிதாக வருந்த ஏதுமில்லை என்றாலும் அதே துரோகம் மகன்களுக்கும் நடப்பதுதான் துயரளிக்கிறது. இந்த உலகில்தான் அவர்களை நான் விட்டுச்செல்லவிருக்கிறேன் என்பதும் பெருந்துயரளிக்கிறது. எதுவுமே மாறவில்லை. சுழன்று சுழன்று வந்துகொண்டே இருக்கிறது. எனக்கு நிகழ்ந்ததே மகன்களுக்கும் நிகழ்கிறது.

தருண் சிறகு கொண்டவன் அவனுக்கு உலகே வீடு என்பதால் காயங்களை அவன் பெரிதாக கவனிப்பதில்லை, சொல்லப்போனால் புதிய காயங்களுக்காக மனதை திறந்து தயாராக வைத்துக்கொள்பவன் அவன். ஆனால் சரண் வேர்கொண்டவன் அவனுக்கு குடும்பமும் வீடும்தான் உலகு. மேலும் மனிதர்கள் மீது பெரும் நம்பிக்கை கொண்டவன் அவன். அவனால் காயங்களிலிருந்து விரைவில் விடுபடமுடிவதில்லை. எப்போதும் மானசீகமாக அவன் தலைகோதும் கரமொன்று எனக்கிருக்கிறது.   ஆழமான அந்தத் தழும்புகளை அவ்வப்போது  நிரடிப்பார்த்துக் புன்னகைத்துக் கொள்ளும் மனவலிமையுடன் அவன் முற்றிலுமாக மீண்டு வரவேண்டும்  என்பதுதான் இப்போது என் ஒரே விருப்பமும் வேண்டுதலுமாக இருக்கிறது. தெய்வங்களே காத்துக்கொள்க!

வழக்கத்தைக் காட்டிலும் தீவிரமான வருடமிது. அதிகம் பயணித்த, அதிகம் வாசித்த, அதிகம் எழுதிய, அதிகம் கற்றுக்கொண்ட வருடமும் கூட. 

அதிகம் மோசமான அனுபவங்களிலிருந்து  ஆகச்சிறந்த பாடங்களைக் கற்றுக்கொண்ட வருடமும் கூட. இன்னும் அத்தகைய பாடங்களின் பொருட்டு ஆசிரியர்கள் எனக்கெதிரே  நீண்ட வரிசையில் நிற்கிறார்கள் என்றும் அறிந்திருக்கிறேன். 

மிக முக்கியமாக நான் மகிழ்ந்திருந்த வருடமும் இதுதான். தன்னறம் வெளியீடாக வந்த இரு நூல்களுக்கு ஜெ எழுதிய முன்னுரையைக்காட்டிலும் ஆகப்பெரிய அங்கீகாரம் இனி வேறு ஏதுமில்லை. நிறைய மேடை உரைகள் நிறைய நிறைய அங்கீகாரங்கள் நிறைய விருதுகள் புதிய தோழமைகள், மகிழ்வளிக்கும் சில விலகல்கள் என கலவையான வருடமிதுவும்.   

முத்தச்சிறுகிளை நூலுக்காக செந்தமிழ்க்கோதை விருது சிவகாசியில் அளிக்கப்பட்டது, இந்திய மருத்துவக்கழகம் ‘’women of wonder’’ விருதளித்தார்கள். டிசம்பர் இறுதியில் உலகத்தமிழ் பண்பாட்டுக்கழகத்தின் சிறப்பு விருதும் 50,000 காசோலையும் அளிக்கப்பட்டது. அந்தத்தேதியில் நான் வெள்ளிமலையில் (மூன்றாவது வகுப்பு இது) இருந்ததால் தருண் சென்று விருதை வாங்கிக்கொண்டான். அதே நாள் நான் திருமணத்திற்கு முன்பு இந்தத் துறையில் பணியாற்றிய  போது படித்த மாணவர்கள் எனக்கு outstanding educator award  அளித்தார்கள். அந்த நிகழ்விலும் கலந்துகொள்ள முடியாததால் அதையும் நான் திரும்ப வந்து பெற்றுக்கொண்டேன். 

வேடிக்கையாக ஒன்று நிகழ்ந்தது. திருப்பூரின் சக்தி விருது எனக்களிக்கப்பட்டிருப்பதாக அழைப்பிதழ் வந்தது. பலர் அவர்களுக்கும் செய்தி தெரிந்து வாழ்த்தும் தெரிவித்தனர். ஆனால் சம்பந்தபட்டவர்கள் என்னை இன்று வரையிலும் அழைத்து முறையாக விருது குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை. விருதுபெறுபவர்கள் விழா நடக்குமிடத்தை அழைப்பிதழிலிருந்து தெரிந்து கொண்டு நேரில் சென்று வாங்கிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. அந்த விருதை நான் பெற்றுக்கொள்ளவில்லை.

சரண் கல்லூரிக்கு வந்து ethics of AI என்று ஒரு உரையாற்றினான். அவனை உண்மையில் நான் என் கல்லூரிக்கு வரவேண்டாம் என்றுதான் சொன்னேன் ஆனால் அழைப்பு வந்தபோது ’’இல்லம்மா நான் வரேன் மாணவர்களுக்காக’’ என்று சொல்லி வந்தான். சிறப்பான உரை, அரங்கில் முன் வரிசையில் அமர்ந்து பெருமிதமாக கவனித்துக்கொண்டிருந்தேன். 

இறுதித்தளையொன்றிலிருந்தும் விடுபட்டேன். மிகுந்த தாமதமாகிவிட்டதுதான் இருந்தாலும் என் தரப்பில் தாமதிக்கச் சில காரணங்கள் வலுவாக இருந்தன.  என்னை இந்த வெர்ஷனில் ஏற்றுக்கொள்ள பலருக்கு தயக்கமிருக்கிறது அதைக்குறித்து எனக்கெந்த ஆட்சேபணையும் இல்லை. இதுதான் நான் இப்படித்தான் இனி நான் இருக்கப்போகிறேன். ’’அறிக இவ்வுலகு இனி நான்   தனியள் தன்னந்தனியள்’’ என்று ஏதேனும் ஒரு குன்றின் மீதிருந்து கூவலாமென்றிருக்கிறது. என் இந்த வெர்ஷனை எதிர்கொள்ளச் சங்கடப்படுபவர்கள் தள்ளிநில்லுங்கள் அல்லது விலகிச்செல்லுங்கள். 

வாழ்வு மொத்தத்தையும் பொருளற்ற சடங்குகளுக்காகவும் வற்புறுத்திப் போர்த்தப்பட்ட புனிதப்போர்வைகளுக்காகவும் என்னால் பலியிடமுடியாது .என் ஆத்தா, அம்மா, அத்தைகள், சித்திகள் அண்ணிகளைப் போல ஒருகூரைக்குக்கீழ் கடித்துக்குதறப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக வாழ்ந்து சமூகத்தின் முன்னால் பட்டுப்புடவையும் கூந்தலில் பூச்சரமும் கழுத்தில் காதில் நகைகளும் முகத்தில் வரவழைத்துக்கொண்ட புன்னகையுமாய் வாழும் நாடகத்தில் எனக்கு விருப்பமில்லை. அப்படியொரு முகமூடியை நான் இதுவரை அணிந்து கொண்டதுமில்லை. நான் அன்னை மட்டுமே என்று பெருமிதமாகத்தான் என்னை எப்போதும் முன்னிறுத்திக் கொண்டிருக்கிறேன். 

மேலும் மணவுறவின் பிணக்குகள் தீர்க்கமுடியாமலாகும் போது வெளியேறி மூச்சுவிட்டுக்கொண்டு மகிழ்ந்துவாழலாம் என்பதற்கு பின்வருங்காலத்துப் பெண்களுக்கு முன்னுதாரணமாகவும் நான் இருக்க விரும்புகிறேன்.

எனக்கு என் குடும்பத்தில்  அப்படிச் சொல்லிக்கொள்ள யாருமில்லை. கழுத்தில் கயிறு இறுக்கிய அடையாளத்துடன் செத்துப்போய் சடலமாகக் கிடந்த பெண்கள் இருக்கிறார்கள், அம்மாவைப்போல் கடைசிநாள் வரை வதையனுபவித்து கண்ணீருடன் மின்மயானம் சென்றவர்கள் இருக்கிறார்கள், மனதில் ஒருவரை மறக்கவே முடியாமல் கணம் கணமாக நினைத்துகொண்டு வேறொருவருடன் வாழ்ந்து பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு செத்துப்போனவர்கள் இருக்கிறார்கள், படிப்பும் வேலையும் வெறும் ஏட்டுச்சுரைக்காயாகி இளமை, அழகு, பொருளாதாரம், ஆற்றல், ஓய்வு நேரம் என அத்தனையும் சுரண்டும் ஆணை முற்றிலும் சார்ந்து இருப்பதே குடும்ப தர்மம் என்னும் முட்டாள்தனத்தில் மூழ்கி மடிந்தவர்களும், வாழ்பவர்களுமான வரலாறு கொண்டது என் குடும்பம். நான் அவர்களில் ஒருத்தி அல்ல அல்லவே அல்ல . 

பாதிக்கப்பட்டவர்கள் பலவீனமானவர்களல்ல, மேலும் பல மடங்கு வலிமையானவர்களும்தான். என் சுதந்திரம் என்பது வேலி சாடுவதல்ல எதுவரை போகலாம் என்றறிந்திருக்கிறேன், எத்தனை உயரம் பறக்கமுடியுமோ அத்தனைக்கு  பறக்கவிருக்கும் சுதந்திரம் இது. எனக்கு பிடித்தமானவைகளை செய்தேன், செய்கிறேன் இனியும் செய்யவிருக்கிறேன்.

என்னவானாலும் மகன்களின்  கைகள் என்னை இறுகப்பற்றிக் கொண்டிருப்பதை நான் அறிவேன். நான் அவர்களைப் பற்றிக் கொண்டிருந்த காலம் முடிந்துவிட்டது. சரண் இந்தியா வந்திருக்கிறான் இந்தியாவிலேயே இனி இருப்பதாகவும் இருக்கிறான் மும்பையில் பணியாற்றவிருக்கிறான். தருண் கடைசி செமஸ்டரில் இருக்கிறான், அவனுக்கும் வேலை கிடைத்திருக்கிறது காலூன்றி விட்டார்கள் இருவரும்.

முன்பொருமுறை தருணை தோளிலும் சரணை கையிலும் பிடித்துக்கொண்டு அம்பராம்பாளையம் செல்லும் பேருந்தில் நின்றுகொண்டு பயணிக்கையில்  முழுப் பைத்தியக்காரனொருவன் (அப்படி தனித்து யாரையும் அடையாளப்படுத்த முடியாதென்றாலும்)  ஒரு பெரிய பாறாங்கல்லை வேகமாகச்சென்று கொண்டிருந்த பேருந்தின் முன்னால் போட்டுவிட்டடான். திடீரென பிரேக் பிடித்து நின்ற பேருந்திலிருந்து வாசலுக்கருகில் நின்றிருந்த நானும் மகன்களும் தூக்கி எறியப்பட்டோம். பேருந்தின் படிக்கட்டுக்கு கீழே என் பாதி உடலிருந்தது ஆனாலும் பேருந்துக்குள்ளே இருந்த சரணையும் தருணையும் கைகளால் இறுகப் பற்றிக்கொண்டிருந்தேன்.  இனியும் இப்படி பாறாங்கற்களுடன் பைத்தியக்காரர்கள் குறுக்கே வருவார்களென்னும் கவனம் எனக்கும் மகன்களுக்குமிருக்கிறது. அவர்களின் நலனைத்தவிர வேறு எதுவுமே இவ்வுலகில் எனக்கு பொருட்டல்ல அல்லவே அல்ல.

அவர்களைப் புரிந்துகொள்ளாதவர்கள், அவர்களை ஏமாற்றுபவர்கள்  அவர்களைச் சுரண்டுபவர்கள் அவர்களுக்கு துரோகம் செய்பவர்களுக்கு என் வாழ்விலும் இடமில்லை. சட்டையில் படியும் புழுதியைத் தட்டி உதறுவதுபோல எளிதாக நான் அவர்களை ஒரு சிறு தட்டலில்  உதறிவிடுவேன்.

மனிதர்கள் குறைநிறைகளுடன் எனக்கும் தேவையாக இருக்கிறார்கள் தான். இப்படி பலரும் என் வாழ்வில் தோழமையுடன் இருக்கிறார்கள், எனினும் ஒரு கோடு இருக்கிறது எனக்கு  அந்தக்கோட்டையும் தாண்டிச்செல்பவர்களுக்கு ஒருபோதும் என் வாழ்வில் இடமில்லை.

வெட்கப்படும் விஷயங்களையும் செய்திருக்கிறேன் இந்த வருடம். எங்களது SR (service register)-ல் பணிக்காலத்து தவறுகளை கரும்புள்ளியில் குறிப்பிடும் வழக்கமிருக்கிறது. 

நான் பொதுவாக குரல் உயர்த்துவதில்லை எந்த சிக்கலான காலத்திலும் அப்படிச்செய்ததே இல்லை வருத்தத்துடன், கோபத்துடன் விலகி இருக்கிறேன் சொல்லிக்கொண்டும் சொல்லிக்கொள்ளாமல். ஒருபோதும் குரலுயர்த்திக் கத்தியதில்லை எனினும் கல்லூரியில் கடந்த செமஸ்டரில் ஒரு முக்கியமான மீட்டிங்கில்  தலைமைப் பொறுப்பிலிருந்த ஒருவர் சிக்கலை எதிர்கொள்ள முடியாத போது தப்பிக்கும் விதமாக வழக்கமாகக் கத்துவதைப் போலத்தான் என்னிடமும் கத்தினார் என்றாலும் நான் எப்படியோ பொறுமையிழந்து எல்லாக்கட்டுக்களும் தளர்ந்து பதிலுக்கு கத்திவிட்டேன். குற்றவுணர்வு கொள்கிறேன் இப்போதும் அதன்பொருட்டு. போர்ட் ரூமுக்கு வெளியே காத்திருந்த ஆங்கிலத்துறை ராதா ’’…அக்கா நீயாக்கா ஏங்க்கா…’’ என்றாள் அந்தக்கேள்வி நானே என்னைக் கேட்டுக்கொண்டதுதான் என்பதால் பதிலளிக்கவில்லை.shame on me

அதுபோலவே வீட்டில் ஒரு போன் அழைப்பு எனக்கு உண்டாக்கிய குமுறல் அடங்காமல் ’’..மீ போனை எடுக்காதே..’’ என்று தருண் சொல்லச்சொல்லவே அந்தக் கணத்தின் உணர்வுநிலையில் அடித்துச்செல்லப்பட்டு போனை எடுத்து நானும் மறுதரப்புக்கு இணையாகவே பேசிவிட்டேன். அப்படிப் பேசியது வருத்தமென்றால் அதை தருணும் கேட்டது மேலும் வருத்தம் இந்த இரண்டு நிகழ்வுகளும் இந்த வருடத்தில் எனக்கு நானே வைத்துக்கொண்ட கரும்புள்ளிகள் தான்.

வழக்கம் போல ஆர்வமாகவும் விரிவாகவும் சமையல் செய்கிறேன் சாப்பிடுகிறேன். புதிய புதிய சமையல் செய்முறைகளையும் கற்றுக்கொண்டு முயற்சிக்கிறேன். 2025-ல் வீட்டுக்கு வெளியே சாப்பிட்டதில் சொல்லிக்கொள்ளும் படி சிறப்பான உணவுகள் ஏதுமில்லை. மிக நெருங்கிய நண்பர்களுடன் சாப்பிட்ட நினைவுகளை பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கிறேன் ஆனாலும் சிறப்பான உணவு என்றால் தீபாவளிக்கு தருண் சமைத்துக் கொடுத்ததுதான்.  அன்று அழுக்குசுவாமி கோயிலுக்குபோய் விட்டு வீடு திரும்பவே மதியம் 2 மணி ஆனது அதன் பின்னர் தருண்  ஆட்டுக்கறி வறுவலும் சாதமும் உப்புப்பருப்பும் சமைத்து சாப்பிட 3,30 ஆனது நான் 1 மணிக்கப்புறமாக  சாப்பிட்டதே இல்லை எப்போதுமே பசி தாங்காதவளான நான் அன்று மிகத்தாமதமாக தருணின் அந்தச் சமையலை ரசித்துச்சாப்பிட்டேன்  இந்த வருடத்திற்கானது மட்டுமல்ல எப்போதைக்குமான மிகச்சிறப்பான அசைவ உணவு அதுதான்.

சாப்பிடுகையில் தருணைக் கல்யாணம் செய்து கொள்ளப்போகும் அந்தப் பெண்ணைக் குறித்த பொறாமை எழுந்துவந்து தழலாடியதை தவிர்க்கவே முடியவில்லை.

// தேவி கைகழுவின தண்ணியில் கறிவேப்பிலை கிள்ளிப்போட்டாக்கூட ரசம்னு ஊத்திச்சாப்பிடலாம்//போன்ற என்னைக்குறித்த அதிபுனைவுகளையெல்லாம் காற்றில்  ஊதிப்பறக்க விட்டுவிட்டான்.

விரிவாகச் சமைத்து விரிவாக பேக் செய்து கல்லூரிக்கு கொண்டு செல்கிறேன்.  பலர் என்னிடம் எதிர்பார்க்கும் ’’…ஒருத்திக்கு என்னன்னு தனியா செய்யறது எலுமிச்சைசாதம், புளிசாதம் செஞ்சு கொண்டு வந்தேன்..’’ என்று சொல்லும் தியாகத்திருவுருத் தாயெல்லாம் நானில்லை எனக்குப் பிடித்தவற்றை செய்து சாப்பிடுகிறேன்.

உடல் எடையை கணிசமாக குறைத்து இருக்கிறேன். புதிதாக ஜப்பானிய நடைப்பயிற்சியை மேற்கொண்டிருக்கிறேன், உண்மையிலேயே பயனுள்ளதுதான். (தகவல் தேவைப்படுபவர்கள் தனியே கேட்டுக்கொள்ளவும்) அதிகாலையில் நடக்கிறேன் நானிருக்கும் தெருவில் 5 வீடுகளில் 3-ல் தான் புழக்கம், அதில் நான் சமையலை முடித்துவிட்டு,நடப்பேன் காமாட்சியின் வீட்டில் மட்டும் பருப்பும் காயும் புளியும் வேகும், சோறு வடிக்கும் மணமும் அடிக்கும்.  சமயங்களில் வீட்டிலிருக்கும் மகிழமோ பாரிஜாதமோ ட்ரசீனாவோ செண்பகமோ மணக்கும். இளையராஜா, யுவன், சங்கர் மகாதேவன், ரஹ்மான் அல்லது வித்யாசாகர் என்று குறிப்பிட்ட யாரோ ஒருவரின் பாடல்களைக் கேட்டுக்கொண்டு நடப்பேன்.  

வெள்ளிக்கிழமைதான் விளக்கேற்றனும், வியாழக்கிழமைகளில் மட்டும் சாய்பாபா, செவ்வாயில் முருகன் என்றெல்லாம் எனக்கு நாள் கால பேதமில்லை எல்லா நாளும் விளக்கேற்றுவேன், கூட்டமில்லாத நாட்களில் தோன்றினால் கோவிலுக்குப் போவேன் எப்போதும் வீட்டைத்துடைத்து சுத்தமாக அழகாக உருளிகளில் மலர்களிட்டு  அழகாக வைத்துக்கொள்வேன்,

வழக்கம்போல காலை 5-லிருந்து இரவு 11 வரை ஒருநாளுக்கான நேரமாக இருக்கிறது எனக்கு.  எழுந்ததும் ஜெ தளத்தை முழுக்க வாசிக்கிறேன். வெண்முரசை மீள மீள வாசிக்கிறேன் நேரம் கிடைக்கையிலெல்லாம்.

இந்த  வருடத்திய disaster என்றால் முதல் தளம் வீடு கட்டநினைத்து, அதை செயல்படுத்தியதுதான். மகன்கள் சிறுவர்களாக இருக்கையில் அப்போதிருந்த பொருளாதார மற்றும் வங்கிக்கடன் வாங்கும் வசதிக்கேற்ப  சமையலறை உட்பட 4 அறைகள் கொண்ட சிறிய வீட்டைக் கட்டினேன். இப்போது ஊரிலிருந்து மகன்கள் வந்தால் சூட்கேஸ் வைத்தாலே வீடு நிறைந்துவிடுகிறது இனி கல்யாணம் காட்சி என்று சொந்தங்கள் அதிகரிக்கக்கூடும் எனவே மேல்தளம் எடுக்கலாம் என நினைத்தேன்.

பலரை சந்தித்துப் பேசியும், நம்பிக்கையூட்டும் பொறியாளர்கள் அமையவில்லை எனவே தள்ளித்தள்ளிப் போனது. சரண் ஜெர்மனியில் இருந்து சில நாட்கள் விடுமுறையில் வந்திருந்து வீடு கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தத்தைப் போட்டுவிட்டு செல்லவிருந்தான் எனவே தருணின் நண்பன் இன்னொரு தருண் கட்டுமானப் பொறியாளர், அவன் பரிந்துரைத்த இரு இளைஞர்களை முழுமையாக நம்பி கட்டிட வேலையை துவங்கினேன். 

சமீபத்தில் எனக்கேற்பட்ட ஆகப்பெரிய துயரம் வருத்தம் சங்கடம் எல்லாம் அந்த இளைஞர்களை நம்பியதுதான் என்றாகிவிட்டது. அவர்களுக்கு வழக்கமாகிவிட்ட துவக்கத்தில் நம்பிக்கையூட்டும் விதமாக நடந்துகொண்டு போகப்போக தேய்வதை இவர்களும் நடைமுறைப்படுத்தினார்கள். வீட்டு வேலைகளை நிறுத்தவும் முடியாமல் ஏகப்பட்ட பணத்தை முடக்கி, தொடரவும் முடியாமல் பெரும் சங்கடமாகியது.

தனியாக வீடு கட்டுவது பெரும் சவாலென்றால் எந்தத்திறமையும் பொறுப்புமில்லாத முடிந்தவரை ஏமாற்றுபவர்களிடம் வேலையை ஒப்படைத்தால் அது எப்படிப்பட்ட சவாலாக இருக்கும்? 

மேல்வீட்டு பணியின் அதிர்வுகளை சமாளிக்க கீழ்வீடு முழுக்க பெரிய தூண்கள் நிறுவப்பட்டிருந்தன எனவே எனக்கு நடமாட்டம்  மிகச்சிக்கலானது பணியாளர்கள் வீட்டுக்கெதிரே குடிசைபோட்டு தங்கி இருந்தார்கள் மாலைவேளைகளில்  துவைக்கும் கல்லருகே அவர்கள்  குளிப்பது வழக்கமாதலால் நான நடைசெல்வது வாசலில் அமர்வது எல்லாமே நின்றுபோனது. ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு புது பிரச்சனை உருவாகும் அதைச்சரி செய்வது குறித்து  பொறியாளர்களுக்கும் வீட்டிலேயே தங்கிக்கொண்ட  மேற்பார்வையாளர் என்று அமர்த்தப்பட்டிருந்த ஒருவருக்கும் மொத்தக்குழுவினருக்குமே எதுவும் தெரியாது.

திரும்ப அவற்றை நினைத்துப்பார்க்கவே எனக்கு கஷ்டமாக இருக்கிறது.

கடைசி நாளில் மதில்சுவற்றில்  அவர்கள் அடைக்காமல் விட்டிருந்த ஒரு துளையை அடைக்கச் சொன்னதற்கு, மேற்பார்வையாளரான மேஸ்திரி, அவரது வெறும் கைகளில் சிமெண்ட் கலவையை எடுத்து அந்தத் துளையில் அப்பி அடைத்துவிட்டு கையைகழுவி விட்டுப் போன அந்த அலட்சியமாக செயல்தான் முழு வீட்டு கட்டுமானத்துக்கும் நடந்ததது. எலக்ட்ரீஷியனோ ப்ளம்பரோ மேசனோ ஒருவருக்கும் எந்த திறமையும் துறைசார்ந்த அறிவும் இல்லாமல் குழப்பி அடித்தார்கள் ஆனால் ஒப்பந்தப்படி பணம் மட்டும் சரியாக கொடுக்க வேண்டி இருந்தது.

என் சுபாவமே மாறிப்போய் கடும் தலைவலியும், பின் கழுத்தில் வேதனையும் பாரமுமாக எப்போதுமிருந்தேன். ஒப்பந்தத் தொகைக்கும் ஆன செலவுகளுக்கும் எந்தச் சம்பந்தமுமே இல்லமாலானது. இளமையின் மீதும் கல்வியின் மீதும் எனக்கிருந்த நம்பிக்கையை முழுவதுமாக அவர்கள்  இருவருமழித்தார்கள். 

மனஅழுத்தம்  தாங்க முடியாமல் வெண்ணிலாவிடம் கண்ணீர் விட்டு அழுத நாட்களும் உண்டு. கடைசியில் கையெடுத்து வணங்கி அவர்களை அனுப்பவேண்டி இருந்தது.  இதோ இன்று வரை அவர்கள் செய்த தவறுகளை சரி செய்து கொண்டிருக்கிறேன். வீட்டுக்கு இப்போதைக்கு குடி போகவே முடியாது. 

இந்த வருடத்தின் மாபெரும் தவறு அவர்களை நம்பியதுதான் காலம்காலமாக இதை நினைத்து  வருத்தப்படப்போகிறேன்.

வீடு கட்டியதில் ஒரே ஒரு நல்ல நினைவு மற்றும் கிடைத்த உதவி என்றால் திரு பாலு மனைவி மகன்களுடன் இரண்டு நாட்கள்  செலவழித்து வீட்டுக்குத் தேவையான டைல்ஸ் போன்றவற்றை  கோவையில்  வாங்கிக் கொடுத்ததுதான். அந்த உதவியை ஒருபோதும் மறப்பதற்கில்லை. வீடுகட்டிய நினைவுகளில் மற்ற எல்லாமே மறக்க வேண்டியவை.  வாழ்நாள் முழுவதுக்குமான மிகக் கசப்பான நினைவு இதுதான். கட்டிடப்பணியின் பொது நிரந்தரமாக ல்யூகோபில்லம் ஃப்ரூட்டிகோசம், மொசுண்டா, ஒரு போன்சாய், தெபியா ஆரியா, சில ரோஜாக்கள் மற்றும் சில செம்பருத்திச்செடிகளை இழந்தேன். அன்னைமரமாக இருந்த நாவலைக் கொல்லவேண்டி வந்தது.

சில இறப்புகளும் மறக்கமுடியாதவைகள் இந்த வருடம். தாவரவியலாளர் டொனோவன் மலை உச்சியிலிருந்து தவறி விழுந்து இறந்தது பெரும் துக்கமளித்தது. 51 வயதுதான் அவருக்கு. அதிலிருந்து நான் இன்னும் மீளவே இல்லை. ஜேன் குடாலின் இழப்பும் துயரளித்தது என்றாலும் அவர் நிறை வாழ்வு வாழ்ந்து இயற்கையாக மரணித்தார்.  எனக்குப்பிரியமான மலையாளத் திரைப்பட நடிகர் சீனிவாசன் மறைந்தார்.   

கரூர் நெரிசலில் இறந்தவர்களை நினைத்து பெரிதும் வருந்தினேன். துக்கம் விசாரிக்க குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டதும்,  அவர்கள் இறப்புக்கு பணம் வாங்கிக்கொண்டதும் எனக்கு பெரும் அவமானமாக இருக்கிறது இன்றும்.

 கேரள நடிகை ஆக்கிரமிக்கப்பட வழக்கின் தீர்ப்புக்காக நானும் காத்திருந்தேன், ஆனால் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்தது . இத்தனை வெளிப்படையாக ஒருவர் சட்டத்திலிருந்து தப்பியது எனக்குத்தெரிந்து இதுதான் முதல்முறை.  தீர்ப்பு நாளில் அந்த நபரின் கைகளில் ஏகப்பட்ட நிறங்களில் கோவில் கயிறுகள் நெற்றியில் குங்குமமும் சந்தனமும். அவரைக் காப்பாற்றிய கடவுளர்கள் நடிகையை ஏன் கைவிட்டார்கள்? அந்த மனக்குமுறல் எனக்கு இன்னும் அப்படியேதான் இருக்கிறது. 

இடவேலா பாபுவும் சித்திக்கும் மொழிமாற்றியதில் எனக்கு ஆச்சர்யமேதும் இல்லை ஆனால் பிந்து பணிக்கர் செய்தது வருத்தமளித்தது ஒரு பெண்ணால் கூட நடந்த அநீதியை புரிந்துகொள்ள முடியவில்லை. 

எல்லாவற்றையும் விட தீர்ப்பை ஒரு பெருங்கூட்டம் நீதிமன்றத்தின் வாசலில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிக்கொண்டாடியதுதான் பெரும் வெட்கக்கேடாக இருந்தது . எதைக் கொண்டாடினார்கள் அப்படிக் கூட்டமாக? அந்தகூட்டத்தில் சில பெண்களுமிருந்தார்கள், குழந்தை மிதிபட்டுச் செத்துபோன அன்னை ’’..விஜய வரச்சொல்லுங்க..’’ என்று கத்தியதற்கு இணையானதுதான் அதுவும்.

இந்த வருடத்துக்கான சில  பயணங்களை திட்டமிட்டிருக்கிறேன். கோடையில் காஷ்மீர் ட்யூலிப் கொண்டாட்டத்துக்கு செல்லவிருக்கிறேன். நண்பர்கள் உடன் வரவிருக்கிறார்கள். ’’…காஷ்மீரா அங்கே போனால் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்று விடுவார்கள்…’’ என்று ஒருசிலர் பயப்படுத்தினார்கள், ட்யூலிப் தோட்டத்தில் இருக்கையில் நெஞ்சில் குண்டு பாயுமானால் அதைக்காட்டிலும் நல்லிறப்பு தேவிக்கென்ன இருக்கமுடியும்?

அந்தமான் செல்லவேண்டும் என்னும் விருப்பம் பல ஆண்டுகளாக இருக்கிறது அதை இந்த வருடம் செயலாக்கவேண்டும்

அடுத்து லவ்டேலுக்கு சென்று நான் சுற்றிய தெருக்களை, நீலப்பச்சை இலைகள் கொண்டிருக்கும் யூகலிப்டஸ் மரங்களை, பனிக்கட்டிபோல சில்லிட்டிருக்கும் சிற்றோடைகளை வழியெங்கும், குட்டிக்குட்டிப் பட்டுதலையணைகளைபோல மலர்ந்திருக்கும் ஹைட்ராஞ்சியாக்களை எல்லாம் மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு வரவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஏன் அதை ஒத்திப்போடவேண்டும் இப்போதே போகலாம் என்று மகன்கள் சொன்னதால் விஷ்ணுபுரம் விழாவிலிருந்து அப்படியே சாம்பவியையும் அழைத்துக்கொண்டு லவ்டேல் சென்றோம்.

எனக்கு பால்யத்தின் சொல்லிக்கொள்ளும்படியான நினைவுகளென்றால் அது லவ்டேலில் மட்டும்தான் இருந்தது. எல்லா பள்ளி விடுமுறைகளும் லவ்டேலில்தான் இருந்தேன். அத்தையின் அன்பு, லாரன்ஸ் பள்ளியின் ஆடம்பரம், அருமையான உணவு, கட்டுப்பாடுகளற்ற சுதந்திரம் என்று மகிழ்ந்திருந்தேன் அங்கு.

பிள்ளையில்லாத அபயமத்தை அந்தக்குளிரில் அண்டாவில் வெந்நீர் வைத்து அத்தனை தலைமுடிக்கும் அரப்பு போட்டுக் குளித்துவிட்டது, அப்போதுதான் அறிமுகமாயிருந்த கோன் ஐஸ்கிரீமை  பெரிய பெரிய பாத்திரங்களில் வாங்கிவந்து சாப்பிட்டுவிட்டு, தனியே கோன் பிஸ்கட்டுகளை சேர்த்துவைத்து சாப்பிட்டது, 1 ரூபாய்க்கு கிடைக்கும் கோழிமுட்டை மிட்டாயை பலவண்ணங்களில் வாங்கி வாயில் அதக்கிக்கொண்டே திரிந்தது,  பள்ளி சமையலறையில் எண்ணெய் சட்டியில் முட்டையை உடைத்து ஊற்றி பூரி போல ஆம்லெட் போடுவதையும், கஸ்டர்ட் என்று ஒன்றிருப்பதையும் தெரிந்துகொண்டது, தினந்தோறும் கஸ்டர்டுடன் விரிவான மதிய உணவு சாப்பிட்டது, அங்கே எனக்கென நான் தெரிவு செய்து வைத்துக்கொண்ட நீலவிளிம்பு கொண்ட குழிவான வெள்ளை பீங்கான் தட்டு(இன்னும் அப்படி ஒரு தட்டை தேடிக்கொண்டிருக்கிறேன்), மாலைவேளைகளில் புல்வெளியில் நாற்காலி போடப்பட்டு வெள்ளுடைப்பணியாளர்கள் பரிமாறிய தேநீரும் வாட்டிய ரொட்டியும், கமல் ,ஸ்ரீதேவி, தர்மேந்திரா, ஹேமமாலினி, அமிதாப் என தினமும் ஷுட்டிங் பார்த்தது. மலைரயில் பயணம், பொட்டானிக்கல் கார்டன் செல்வது, பெரிய பெரிய வெள்ளைப் பொத்தான்கள் வைத்த வான் நீலத்தில் ஒரு ஸ்வெட்டரை சேரிங் கிராஸ் நடைபாதைக்கடையில் வாங்கிப்போட்டுக்கொண்டது, பொட்டனிக்கல் கார்டனின் ரோலிங் க்ராஸிலிருந்து உருண்டு உருண்டு சரிந்து விளையாடியது என லவ்டேலின் நினைவுகளை மீண்டும் ஒருமுறை அங்கு சென்று பார்க்க ஆசையாக இருந்தது.

லாரன்ஸ் பள்ளியை மீண்டும் பார்த்தது அத்தனை பரவசமளித்தது.  நான் விளையாடிய லவ்டேல் ரயில்வே ஸ்டேஷனில் நின்று புகைப்படமெடுத்துக்கொண்டேன்.

லவ்டேலில் தங்கி இருந்த வில்லாவில் காரை விட்டு இறங்கியதுமே புல்வெளி எங்கும் மலர்ந்துகிடந்த வெள்ளைக்ளோவரை பார்த்துவிட்டேன். அதைபறித்து முகர்ந்ததும் எனக்கு தெரிந்தது என் நினைவில் எங்கேயோ ஆழத்தில் இருந்த லவ்டேலின் வாசனை அந்த க்ளோவரின் வாசனைதான் என்று.  எத்தனையோ மலைப்பிரதேசங்களுக்கு சென்றிருக்கும் நான் இதுவரை லவ்டேலில் அல்லாமல் அந்த க்ளோவரை வேறெங்குமே பார்க்காமலிருந்ததும் விநோதம்தான். க்ளோவர் மலர்களை தலையிலும் வைத்துக்கொண்டேன். நான் லாரன்ஸ் பள்ளி வளாகத்தின் பக்கவாட்டு எல்லையிலிருந்து சறுக்கி கீழிறங்கி ஒருபெட்டிக் கடைக்கும் செல்லும் வழியும், அந்தக்கடையும் இருந்தது அருகில் ஒரு பஸ் நிலையம் கூடுதலாக.

லாரன்ஸ் பள்ளியில் அத்தை மாமாவின் மரவீட்டுக்கருகே இருந்த வீட்டில் அப்பள்ளியின் ஃப்ரெஞ்ச் ஆசிரியரின் வீடு இருந்தது.  அங்கேயும் சென்று விளையாடுவேன். அந்த வீட்டுப்பெண் நல்ல பருமனாக வெள்ளை வெளேரென்று இருப்பார் பெயர் நினைவிலில்லை. அவர் கணவர் தான் பிரஞ்ச் ஆசிரியர் மஞ்சள் நிறத்தில் இருப்பார் எப்போதும் ஏதோ எழுதிக்கொண்டும் வாசித்துக்கொண்டுமிருப்பார். அவரின் மயிரடர்ந்த புறங்கை எனக்கு நினைவிருக்கிறது. அடிக்கடி அந்தப்பெண் என்னை அதிகாலைகளில் அழைத்துக்கொண்டு பல ஏக்கரில் பரந்து விரிந்திருந்த லாரன்ஸ் பள்ளியின் பின்புறம் இருந்த பல  சிற்றோடைகளின் கரையிலிருக்கும்   கேலா லில்லிகளை

(சதைப்பற்றான புனல் வடிவ வெள்ளை இதழ்களைக் கொண்டிருக்குமே அது ) பறிக்க அழைத்து செல்வார். 

அவரது கைகளில் சிறிய ஆனால் மிகக்கூரிய கத்தி இருக்கும், பத்துப் பதினைந்து மலர்களை அவற்றின் நீளக்காம்புகளுடன் நறுக்கி இருவருமாக எடுத்துக்கொண்டு வருவோம். அவர் உடைந்த தமிழில் பேசுவார் ‘’..உறக்கத்துக்காக அதிகாலைகளை தவறவிடக்கூடாது..’’ என்பார் என்னிடம்.  கண்ணாடிக் குடுவைகளில் நீர் நிரப்பி பூக்களை அதில் இருவருமாக அடுக்குவோம், 

அடிக்கடி தங்கச் சரிகை சுற்றிய சாக்லெட்டுகள் தருவார் அருமையாக இருக்கும். அவருடன் நடக்கையில் எனது நீலவார்களிட்ட ஹவாய்செருப்புகள் புல்லின் மீதிருக்கும் பனியில் ஒட்டிக்கொண்டு நடக்க சிரமப்பட்டது நினைவுக்கு வருகிறது.

அந்த நினைவுகளின் நீட்சிதான் நான் இன்று வீட்டில் மலர்களை அமைக்கிறேன் போலும்.

வழக்கம் போல வேடசெந்தூரில் மழையும்,வெயிலும்,குளிரும் இருந்தது.இந்த வருடம் ஏராளமாக சீம்பால் இனிப்பு சாப்பிட்டு ரத்தச் சர்க்கரை அளவைக் கூட்டினேன். வீட்டு மரங்களின் மாம்பழங்ளை கணக்கு வழக்கில்லாமல் ருசித்தேன். எனக்கு மிகப் பிரியமான முந்திரி நிறைந்த ஜப்பான் கேக்கை இந்த வருடம் சாப்பிடவே இல்லை, எப்படியோ தவறவிட்டுவிட்டேன்.

நான் மலையடிவாரத்திலிருந்து இத்தனையாண்டு காலமாக மெல்ல மெல்ல மேலேறி வந்துகொண்டிருந்தேன். வழியில் பல வகையான அனுபவங்கள், கைகோர்த்து இறுதிவரை உடன் பயணிப்பதாகச் சொன்னவர்கள் காணாமல் போனார்கள், பயணத்துணையாக சேர்த்து வைக்கப்பட்டவர்கள் லாயக்கில்லாதவர்களாக இருந்தார்கள், கடந்துசென்ற குளிர்மேகங்களைப் போல சிலர் இனிய நினைவுகளுடன் பிரிந்து போனார்கள், சிலர் முதுகுக்கு பின்னாலிருந்து தள்ளிவிட்டார்கள், சிலசமயம் நானே காலிடறி விழுந்திருக்கிறேன், தலைகுப்புற விழுந்த அனுபவங்களும், ஆழம் தெரியாமல் கால்விட்ட  சம்பவங்களும் கொல்விலங்குகளிடமிருந்து மயிரிழையில் தப்பித்த, பிரியமான மலர்மரங்களுக்கருகில் மகிழ்ந்து கழித்த சமயங்களும் உண்டு. 

இந்தப்பயணத்தில் இந்த வருடம் ஒரு சில மயிலிறகுகளையும் சேகரித்து  மனப்பக்கங்களுக்கிடையே பத்திரமாக வைத்திருக்கிறேன். சமீபத்தில் கருக்கிருட்டில் சென்ற ஒரு   கார்ப்பயணத்தில் அப்படியொரு மயிலிறகை எடுத்து வைத்துக்கொண்டேன். சென்னைத் தெருக்களில்  7 மணி நேரம் காரில் பிடித்த பாடல்களைக் கேட்டுக்கொண்டு கூடவே  பாடிக்கொண்டு being judged என்னும் கவனமோ கவலையோ இல்லாமல் மகிழ்ந்து பயணித்த மற்றொரு கார்ப்பயணமும்  நான் பாடம் பண்ணியிருக்கும் என்றைக்கும் வண்ணம் குறையாத மயிலிறகு.  பூமார்க்கெட்டுக்குள் சுற்றிவந்த  நாளொன்று, என சில மயிற்பீலிகள் என்றென்றைக்குமாக பாடமாகி பொக்கிஷமாக மனதிற்குள் இருக்கின்றன. மேலும் சில வண்ணச்சிறகுகளும் கூழாங்கற்களும் மினுங்கும் காக்கைப்பொன்னும் கண்ணாடிச்சில்லுகளுமாக மனதின் மூலையிலல்ல, நட்டநடுவிலொரு சிறு பெட்டியில் சேகரித்துவைத்திருக்கிறேன்.

பொதுவாகப் பரிசுகளை ஏற்றுக்கொள்வதில்லை என்றாலும் வழக்கத்துக்கு விரோதமாக இந்த வருடம் சில பரிசுகளை பெற்றுக்கொண்டேன். ,அதில்  புடவைகள், புத்தகங்கள், மலர்ச்சரங்கள், இனிப்புகள் அடக்கம்.  

எனக்கு மிகப்பிரியமான ஜகரண்டாவின் இளம் ஊதா நீறப்புடவையொன்று பரிசளிக்கப்பட்டது. மனமுவந்து பெற்றுக்கொண்டேன்.  எங்கள் குடும்பங்களில் பெண்களின் சடலத்தின் மீது அவர்களுப்பிரியமான அல்லது  வளைகாப்பு, கல்யாணப் புடவையைப் போர்த்திய பின்னரே எரிக்க எடுத்துச்செல்வது வழக்கம். அப்படி அம்மாவுக்கு   பிரியமான புடவையை கட்டிவிட முயன்று, உடல் விரைத்துவிட்டதால் தோற்று உடம்பில் சுற்றிக்கட்டிவிட்டோம். அந்தப்புடவை சுற்றப்பட்டிருந்த அம்மாவின் மீதுதான் விஜி மின்மயானத்தில் கற்பூரக்கட்டியை ஏற்றினான்.

இந்தப்பிரியத்துக்குரிய புடவை என் நெஞ்சின் மீதிருக்கையில்தான்,என்மீது உள்ளங்கை அகலக் கற்பூரக்கட்டி  வைக்கப்பட்டு சிதைநெருப்பு ஏற்றப்படவேண்டும்.  மகிழ்ந்தெரிந்து மறைவேன்.

இனி மலையுச்சியிலிருந்து மறுசரிவில் இறங்கும் காலமெனக்கு. மிக நல்ல நண்பர்கள் அமைந்திருக்கிறார்கள் அவர்களின் தோழமையில் இந்த இறங்குமுகப் பயணத்தை மகிழ்ந்து செல்லவிருக்கிறேன்.

‘’…ஏன் நானழைத்தபோது போன் எடுக்கவில்லை..’’ என்று குறைப்பட்டுக்கொண்டது  ’’…தேவி என்னை ஒருமுறை அழைத்து நான் எடுக்கவில்லை என்றால் இரண்டாவது முறை அழையுங்கள் எடுக்கவில்லை என்றால் மூன்றாவது முறை அழையுங்கள் அப்போதும் எடுக்கவில்லை என்றால் நான் எடுக்கும்வரை தொடர்ந்து விடாமல் அழைத்துக்கொண்டே இருங்கள்…’’ என்று சொல்லும் நண்பர்,  ஏழு பேருந்துகள் மாறி மாறி ஊரிலிருந்து கோவை வந்து வீட்டுத்தோட்டத்துக்கு கொடுக்கவென உலர்ந்த வாழையிலைச் சருகுகளில்  பாதுகாப்பாகச் சுற்றப்பட்டு மண்ணில் பொதியப்பட்ட 8 வாழைக்கன்றுகளை சுமந்துகொண்டு வந்து கையளித்த நண்பர்,  ஒன்றுமே சொல்லாமல் திடீரென ஒரு இடத்துக்கு அழைத்துச்சென்று பவோபாப் மரத்தைக்காட்டி நான் அதை வாயை பிளந்துகொண்டு வேடிக்கை பார்க்கையில் பின்னிருந்து என்னை புகைப்படமெடுத்து கொடுத்த நண்பர், நான் மிகப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உணரும் அண்மையை அளிக்குமொருவர், ’’…அம்மா வீட்டுக்குவர லேட் ஆயிருச்சு இங்கே ஒருபக்கம் பயணத்தில் இருக்கேன் என்று சொல்லுகையில்’’.. ஜாலியா இருடா மெதுவா வா ஒன்னும் பிரச்சனை இல்லை..’’ என்று சொல்லும் சரண்,’’… நீ ஏன் பாண்டிச்சேரி போகமுடியலைனு வருத்தப்படறே நான் இன்னிக்கே நைட் புறப்பட்டு வரேன் நான் கூட்டிட்டுப்போறேன்..’’ என்று  கவனமாக இருக்கும் தனது அட்டெண்டன்ஸ் குறித்து கவலைப் படாமல் புறப்பட்டு வரும் தருண்,  என் மகிழ்ச்சியான வெர்ஷனாக நானே திரும்பப் பார்த்துக்கொள்ளும் சாம்பவி, லடாக்கில் இருந்து எனக்கென wind chimes வாங்கி வந்த, நான் வருடங்களாக தேடிக்கொண்டிருந்த காலையில் தூய வெள்ளையில் மலர்ந்து மாலை அது இளஞ்சிவப்பாகி, மறுநாள் குருதிச்சிவப்பாகும் மலர்களை அளிக்கும் ஹைபிஸ்கஸ் ம்யூட்டாபிலிஸ் செடியையும் வாங்கிக்கொடுத்த நண்பர்,  எந்தெந்த நாடுகளில் இருந்தோ இலைகளையும் மலர்களையும் பார்த்த உடனே எனக்கு புகைப்படமெடுத்து அனுப்பும் தோழமைகள் என்னுடன் இருக்கிறார்கள்.

எனக்குப் பிடித்தமான நான்  தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கும் இந்த தாவரவியல் துறை இன்னும் வாசிக்க வேண்டிய எழுதவேண்டியவைகள் என்று இப்போது மலையின் மறு சரிவிலிறங்குகையிலும் ஏராளம் பணிகள் காத்திருக்கின்றன.

புதிய வருடத்திற்கான  தீர்மானங்கள் ஏதுமில்லை

வாழ்க்கை அத்தனை இனியது அத்தனை துயர் மிக்கது எப்படியாகினும் அதை மகிழ்ந்து வாழவிருக்கிறேன்.

என்னுடன் இருந்தவர்களுக்கும்,  என்னவானாலும் உடன் நிற்பவர்களுக்கும், விலகிச்சென்றவர்களுக்கும், இனி இணைந்து பயணிக்க விருப்பவர்களுக்கும்,  புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்பு!

மன்மத ஏசு!!!!

ஆண்டவரே!

உங்கள் மீதான பக்திப்பாடல்களில் கானா வடிவப்பாடல்கள் பல வருடங்களாகவே புழக்கத்தில் இருக்கின்றன. அம்மாடி ,இதுதான் காதலா மெட்டில்

``மாதாவை வணங்கிட வாருங்க அஹ அஹ ஹ அஹஹா!

செம்பருத்தி செம்பருத்தி பூவைப்போல பெண்ணொருத்தி மெட்டில் ``ஏத்திவச்ச மெழுவத்தி எரியுதம்மா வூட்டைசுத்தி

இந்தப்பாடல்களையெல்லாம் நீங்களும் கேட்டிருப்பீர்கள் உங்களுக்கும் ஆட்சேபணை இருந்திருக்காது என்று நம்புகிறேன் .

இந்த கிருஸ்துமஸ் காலத்தில், சமீபத்தில் பிரபலமான காந்தா ஞானும் வரான் திருச்சூரு பூரம் காணாம் பாடலை சாந்தா, ஞானும் வராம் திருச்சூரு கரோல் காணாம் “என்று மாற்றி மெட்டமைத்ததும் கூட நன்றாகத்தான் இருந்தது என்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்

ஆனாலும் மன்மத ராசா மெட்டில் மன்மத ஏசு மன்மத ஏசு'' கொஞ்சம் வரம்பு மீறிவிட்டதுதானே ? இதையெல்லாம் கொஞ்சம் தட்டிக்கேட்கக்கூடதா?

பிதாவே இந்தப்பாவிகளை மன்னிக்காதீர்கள் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑