புடவி நெசவில் மானுடர் ஒவ்வொருவருக்கான இழையையும் நெய்பவள் க்ளோத்தோ, இழையின் நீளத்தை கணக்கிட்டு அளந்து வைப்பவள் லேச்செஸிஸ்,  வாழ்நாளில் மானுடர் சந்திக்க வேண்டிய இன்னல்களை மொத்தமாகக் கணக்கிட்டு இழைகளில் அமைப்பவளும் இவளே, இவர்கள் இருவரையும் விடச் சிறிய உருவம் கொண்டவளும், மூத்தவளுமான அட்ரோபோஸ், அளந்து இணைக்கப்பட்டிருக்கும்  பிறவிச்சரடை அறுத்து மரணத்தை அளிப்பவள்.  

மரணத்தின் தேவதையான அட்ரோபோஸ் இரக்கமற்றவளாகவும் பிடிவாதக்காரியாகவும் அறியப்படுகிறாள். 

க்ளோத்தோ, லேச்செஸிஸ் மற்றும் அட்ரோபோஸ்   (Clotho, Lachesis & Atropos) ஆகிய மூன்று சகோதரிகளும் கிரேக்கத் தொன்மங்களில்  ஊழின் தேவதைகளாகக் கருதப்படுகிறார்கள்.  இவர்கள்  மூவரும் இருளின் தெய்வமாகிய எர்பஸுக்கும் (Erebus) இரவின் தேவதையான நைக்ஸுக்கும் (Nyx) பிறந்தவர்கள். 

மரணத்தையளிக்கும் மூத்த சகோதரி அட்ரோபோஸின் பெயரில் பல அறிவியல் பெயர்கள் உள்ளன. திரும்பிச் செல்ல முடியாத, மாற்றமுடியாத  என்று பொருள் கொண்ட Atropos என்னும் சொல்லைக்கொண்டு  தென்னாப்பிரிக்காவின் மலைப்பகுதியில் வாழும் விஷமுள்ள விரியன் வகைப் பாம்பொன்றிற்கு Bitis atropos என்றும், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படும்  தலைப்பகுதியில் மனித மண்டையோட்டின் வடிவத்தைக் கொண்டிருப்பதால் Death’s-head hawk moth என்றழைக்கப்படும் அந்துப்பூச்சிக்கு Acherontia atropos என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

உருளைக்கிழங்கு மற்றும் தக்காளியின் குடும்பமான சொலனேசியைச் சேர்ந்த,  இலைகளிலும் கனிகளிலும் உயிரைப் போக்கும் கடும் நஞ்சு கொண்டிருக்கும்  ஒரு தாவரம், இதே அட்ரோபோஸ் என்னும் பெயரைக்கொண்டு தாவர வகைப்பாட்டியலின்  தந்தையான லின்னேயஸினால்  Atropa bella donna என்று 1753-ல் பெயரிடப்பட்டது. bella donna  என்று இரு சொற்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது தவறு என்று பலர் கண்டனம் தெரிவித்ததால் பிற்பாடு இரு சொற்களுக்கிடையில்  ஒரு  சிறு கோடு இணைக்கப்பட்டு இதன் அறிவியல் பெயர் bella-donna  என்றாகியது. 

பெல்லடோனாவின் பிற வழங்கு பெயர்களாக  deadly nightshade, devil’s cherries, devil’s herb, divale, dwale, dwayberry, naughty man’s cherries, gray morel,  poison black cherry,  Dilber grass, bear flower, மற்றும் wolfberry ஆகியவை இருக்கின்றன. 

பெல்லடோனா மேற்கு ஆப்பிரிக்காவையும் ஐரோப்பாவையும் பூர்வீகமாகக் கொண்டது. கனடா, அமெரிக்கா மற்றும் வடஆப்பிரிக்காவின் இயற்கையான வாழிடங்களிலும் பெல்லடோனா  அறிமுகப் படுத்தப் பட்டு  வளர்கிறது. இது சுண்ணாம்புச் சத்து மிகுந்த நிழலான  நிலத்தில் நன்கு செழித்து வளரும்.  

வரலாற்றில் அட்ரோபா பெல்லடோனா

அட்ரோபா பெல்லடோனா மருந்தாக, நஞ்சாக, அழகு சாதனப் பொருளாக நீண்ட வரலாறு கொண்டிருக்கிறது. 

முதல் நூற்றாண்டைச் சேர்ந்த மருந்தியலின் தந்தையான டயாஸ்கொரிடஸ் அட்ரோபின் கொண்டிருந்த மாண்ட்ரேக்கின் சாற்றை அறுவை சிகிச்சைகளின்போது வலி நிவாரணியாகவும் தூக்கமின்மைக்கு சிகிச்சையளிக்கவும் பரிந்துரைத்திருந்தார். அட்ரோபா பெல்லடோனாவும் அட்ரோபினைக் கொண்டிருப்பதால் மாண்ட்ரேக்கைப் போலவே இதுவும் பயன்படுத்தப்பட்டது.

பண்டைய ரோமானியர்கள் நஞ்சு கொண்டிருந்த பெல்லடோனாவை உயிரி ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள். எதிரிகளின் உணவில் பெல்லடோனாவை கலந்து அவர்களைக் கொல்வது அவர்களின் வழக்கமாக இருந்தது. ஷேக்ஸ்பியரின் மேக்பெத்தில்  எதிரிகளின் மதுவில் பெல்லடோனா சாற்றைக் கலந்து ஸ்காட்லாந்த்துப் படையினர் அவர்களைக் கொன்றது சொல்லப்பட்டிருக்கும். 

4-ம் நூற்றண்டைச் சேர்ந்த தியோஃப்ராஸ்டஸ்  அட்ரோபின் கொண்டிருந்த மாண்ட்ரேக் சாற்றை பாலுணர்வைத் தூண்டும் காதல் பானமாகவும், காயங்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பரிந்துரைத்தார். அட்ரோபின் நிறைந்திருந்த எகிப்திய ஹென்பேன் தாவரத்தின் சாற்றைப் பேரழகி கிளியோபாட்ரா கண்மணியை விரிவாக்க பயன்படுத்தினாள்.

பண்டைய ரோமானிய மற்றும் உக்ரைன் பகுதிகளில் இளம் பெண்கள் மிக அழகிய தோற்றம் கொண்டிருக்கச் செய்யும் சடங்குகள் இருந்தன. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் இச்சடங்குகளில். ரொட்டியும் உப்பும் பிராந்தியும்  கொண்டுவரும் இளம்பெண் தன் தாயுடன் காட்டுக்குள் சென்று, கொண்டு வந்ததை அட்ரோபா பெல்லடோனா செடிக்கடியில் புதைத்துவைப்பாள்.  

பின்னர் தோண்டி எடுத்த அட்ரோபா பெல்லடோனாவின்  வேரை தலையில் வைத்துக் கொண்டு வீடு திரும்புவாள் வழியில் எதிர்ப்படும் யாரிடமும் எதுவும் பேசாமல் இருக்கவேண்டும் என்பதும் கட்டாயம். பேசினால் சடங்கின் பலன் கிடைக்காமல் போகும் என்று நம்பிக்கை நிலவியது

கிரேக்க மருத்துவரும், மருந்தியலின் தந்தையுமான  பெடானியஸ் டயாஸ்கொரிடஸ், அப்போது பெல்லடோனா என்று அறிவியல் பெயரிடப்பட்டிருக்காத இந்தத்தாவரத்தைக் குறித்து:

//மனிதர்களைப் பைத்தியமாக்குகிற இதன், வேர்ச்சாற்றை வைனுடன் கலந்து அருந்தினால் மனம்மயக்கி, மகிழ்ச்சியளித்து கூடவே விசித்திரமான உருவங்களைக் கண்ணில் தெரியச்செய்கிறது. வேர்ச்சாற்றின் அளவை இருமடங்காக்கினால் அருந்தியவர் இந்த உலகைவிட்டே 3  நாட்களுக்கு வெளியே சென்ற அனுபவத்தை அடைவார், நான்கு மடங்காக்கினால் உயிரிழப்பு ஏற்படும். இதைத்தான் சூனியக்காரிகள்  தங்கள் சருமத்தில் பூசிக்கொள்கிறார்கள்// என்று  அவரது மெட்டீரியா மெடிக்கா என்னும் நூலில்  குறிப்பிட்டிருந்தார்.

பெல்லடோனா மற்றும் அதைப்போலவே நஞ்சு கொண்டிருக்கும்   மாண்ட்ரேக் மற்றும் ஹென்பேன் ஆகிய மூன்று தாவரங்களுமே முன்காலத்தில் மந்திர தந்திரம் மற்றும் சூனியச்செயல்களுக்குப்  பயன்படுத்தப்பட்டன. சூனியக்காரிகள் என்று சொல்லப்பட்டவர்கள் பழங்காலத்திலிருந்தே பெல்லடொனாவின் விழுதைப் பூசிக்கொள்ளும் வழக்கம் கொண்டிருந்தனர். 

வரலாற்றில் பல போர்களில் எதிரிப்படைகளை அழிக்கவும், பலர் தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டதிலும் அட்ரோபாவின் பெரும்பங்கு இருந்திருக்கிறது.

இதன்சாற்றை அம்பு நுனிகளில் தடவி வேட்டையாடுவதில் தொடங்கிய இதன் பயன்பாடு மெல்ல விரிவடைந்து பண்டைய ரோமானியப் பேரரசர்கள் மனைவிகளால் கொல்லப்படுவதற்கும் அட்ரோபா பெல்லடோனா காரணமாயிருந்தது.

பெல்லடோனா சாற்றின் உயிரைக்கொல்லும் அளவென்பது வெறும் 600 மி கி தான். ரோமானியப் பேரரசர் அகஸ்டஸ் மற்றும் கிளாடியஸ் ஆகியோர் இருவரும அவரவர் மனைவிகளால் பெல்லடோனா நஞ்சளித்துக் கொல்லப்பட்டதாக வரலாறு குறிப்பிடுகிறது.

கொலைசெய்யப்படும் அபாயம் இருந்ததால் பேரரசர் அகஸ்டஸ் அன்றாடம் அவர் கண்முன்பாகப் பறிக்கப்படும் அத்திப்பழங்களைத்தான் உண்பார். அவரது மனைவி அத்திப்பழங்களின் மீது அவை பறிக்கப்படுவதற்கு முந்தைய நாளே பெல்லடோனா சாற்றைத் தடவியதாக நம்பப்படுகிறது.

1659-களில் ரோமானியப் பேரரசில் கொடுமைக்காரக் கணவர்களைக் கொல்லவிரும்பிய பெண்களுக்கென ஒரு ரகசிய அமைப்பு செயல்பட்டது. அதில் உறுப்பினராக இருந்த குல்லியா டொஃபானா (Giulia Tofana) என்னும் பெண் தனது கணக்கற்ற கணவர்கள். இரண்டு போப்கள்  உள்ளிட்ட சுமார் 600 நபர்களை  ஆர்சனிக்கும் பெல்லடோனாச்சாறும் கலந்த திரவத்தை “Aqua Toffana,” என்று பெயரிட்டு, ஆண் பெண் இருபாலருக்கான ஒப்பனை பொருட்கள் அடங்கியது என்று    பாட்டில்களில் அளித்துக் கொலைசெய்தாள். 

“Aqua Toffana,” வின் ஓரிரு சொட்டுக்களே தடயமே இல்லாத  மரணத்தை அளித்தது.  பெல்லடோனா நஞ்சூட்டி பலரைக் கொலைசெய்த குற்றத்துக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட தன் தாயிடமிருந்து நஞ்சூட்டுதலை கற்றுக்கொண்ட குல்லியா  தொழில்முறை நஞ்சூட்டுபவளாகவே வரலாற்றில் அறியப்படுகிறாள். 

கிமு 4-ம் நூற்றாண்டிலிருந்தே பெல்லடோனாவின் சாறு அழகுக்காகப்  பயன்பாட்டில் இருந்திருக்கிறது

இத்தாலியில் பெல்லடோனா இலைச்சாறு அழகுசாதனப்பொருளாக  பலகாலம் முன்பிருந்தே புழக்கத்தில் இருந்தது. இத்தாலியப் பெண்கள் பெல்லடொனாவின் இலைச்சாற்றை ஒரு துளி கண்களில் விட்டுக்கொள்கையில் கண்மணி பெரிதாகி  வசீகரமாகியது கன்னமேடுகளை வண்ணமாக்க கனிச்சாற்றையும் அப்போது பெண்கள் பூசிக்கொண்டனர்.  எனவே இது  பெண்களுக்கான அழகுப்பொருளாகப் பெருமளவில் உபயோகப்பட்டது. 

இதனால்தான் இந்தத்தாவரத்தின் சிற்றினப்பெயர் இத்தாலிய மொழியில் அழகிய பெண் என்று பொருள் படும் பெல்ல-டோனா என்று வைக்கப்பட்டது. இன்றும் அட்ரோபைன் ஆல்கலாய்டு கொண்டிருக்கும் பெல்லடோனாச்சாறு கண்மணியைப் பெரிதாக்க கண் அறுவைசிகிச்சைகளில் பயன்படுகிறது.

130,000  பங்கு நீருக்கு 1 என்னும் அளவில் இருக்கும் பெல்லடோனாச் சாற்றின் அளவே கண்மணியை விரிவாக்கப் போதுமானது. பெல்லடோனாவின் குடும்பமான சொலனேசியைச் சேர்ந்த மாண்ட்ரேக் மற்றும் ஹென்பேன் தாவரங்களிலுமே அவற்றிலுமிருந்த அட்ரோபினுக்காகப் பன்னெடுங்காலமாகவே அழகுச்சாதனப் பொருளாக  உபயோகத்தில் இருந்தன.

கண்மணியைப் பெரிதாக்க இது நஞ்சு என தெரிந்தும்   14, 16-ம் நூற்றாண்டுகளில் இத்தாலிய பெண்கள் மிக அதிகமாக இதை  உபயோகப் படுத்தினார்கள்.  தொடர்ந்த உபயோகத்தால் பார்வையிழப்பு,  நரம்புச்சிக்கல்கள் போன்ற அபாயங்கள் ஏற்பட்டும் இந்தப் பயன்பாடு  பல்லாண்டு காலம் புழக்கத்தில் இருந்தது

காபியிலிருக்கும் காஃபின் ஆல்கலாய்டை கண்டறிந்தவரான ஜெர்மானியத் தாவரவியலாளர் ஃப்ரெட்லிப் (Friedlieb Ferdinand Runge) தான் பெல்லடோனாவின் கண்மணியை விரிவாக்கும் இயல்பையும அறிவியல் பூர்வமாக நிருபித்தவர்.

பெல்லடோனா என்னும் பெயர் வெகுவாகப் புழக்கத்தில் இருந்ததால் 1597-ல் மூலிகை மருத்துவரான ஜான் (John Gerard)  தனது ’தாவர வரலாறு’ என்னும் நூலில் இதன் பெயரைப் பெல்லடோனா முதன் முதலாகக் குறிப்பிட்டிருந்தார்.  

16-ம் நூற்றாண்டில் தான் பெல்லடோனா தாவரவியல் ரீதியாக விவரிக்கப்பட்டு அதன் சித்திரங்கள் வெளியாகின.

இதன் முதல்  பெயரான Solarium horrense nigrum என்பது 1532-ல் Traps J என்பவரால் பாரிஸில் பிரசுரமான் ஒரு நூலில் குறிப்பிடப்பட்டது . பின்னர் 1542- ல்  Fuchso என்பவரால்  Solanum somniferum,  என்று பெயரிடப்பட்டு விவரிக்கப்பட்டது

1753-ல் தான் லின்னேயஸ் அட்ரோபா பெல்லடோனா என்று இதன் பேரின மற்றும் சிற்றினப்பெயர்களை அதிகாரபூர்வமாகப் பிரசுரித்தார்.

லண்டன் பார்மகோபியாவில் அட்ரோபா பெல்லடோனாவின் இலைளின் மருத்துவ இயல்புகள் 1809-ல் வெளியாகின. 1860-ல் இதன் வேர்களின் மருத்துவப் பண்புகள்    விவரிக்கப்பட்டு பிரிட்டிஷ் மருந்துத்துறையில் இணைக்கப்பட்டது.

1831- ல் ஜெர்மானிய மருந்தாளுநர் ஹெம்ரிச் (Heinrich F. G.) இந்தத் தாவரத்திலிருந்து தூய அட்ரோபினை (atropine) குருணைகளாகப் பிரித்தெடுத்தார்.

பெல்லடோனாவின் தாவரவியல் பண்புகள்

அட்ரோபா பெல்லடோனா ஒரு பல்லாண்டுத் தாவரம். சதைப்பற்றான நன்கு கிளைத்த வேர்த்தொகுதியும். உருளைவடிவ நிமிர்ந்த  இரண்டிரண்டாகக் கிளைத்த, தடித்த 3 அடி உயரமுள்ள தண்டுப்பகுதியையும் கொண்டது. 

இரண்டிரண்டாகப் பக்கவாட்டில் அமைந்திருக்கும் நீண்ட இலைகள் புகையிலையின் இலைகளைப் போலிருக்கும். இலைக்காம்பு குறுகியது. இலைகள்  கீழ்ப்பகுதியில் மாற்றடுக்கிலும்,மேல்பகுதியில் எதிரடுக்கிலும் அமைந்திருக்கும்

பெல்லடோனாவின் ஊதா நிற மணி வடிவ மலர்கள் மிக  அழகியவை. காம்பு கொண்டிருக்கும், தனித்த அழகிய மணி வடிவ  ஐந்து மடிப்புகள் கொண்ட இம்மலர்கள்  பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கை செய்யப்படுகின்றன. 

பெல்லடோனா மணத்தக்காளியின் கருப்புக்கனிகளைப் போலவே  ஆனால் அளவில் சற்றுப் பெரிதாக இருக்கும் தனித்த கனிகளைக் கொண்டிருக்கும். அடர் ஊதா அல்லது ஆழ்ந்த கருப்பு நிறத்தில்  சாறு நிரம்பிய, 2 அறைகள் கொண்ட கருப்புக்கனிகள்  தேய்த்தால் கெடுமணம் அளிப்பவை. கனிகளில் சிறுநீரக வடிவில் பல நுண் விதைகள் நிறைந்திருக்கும். இவை  விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்பவை.

அட்ரோபா பெல்லடோனாவின் வேதிச்சேர்மானங்கள்

அட்ரோபாவின் கனிகளிலும், இலைகள் மற்றும் வேரிலும் 20 வகையான கடும் நச்சுத்தன்மை கொண்ட வேதிச் சேர்மங்கள் உள்ளன. இலைகளிலும் வேர்களிலும் சக்திவய்ந்த  பெல்லடோனா ஆல்கலாய்டுகள் 0.13 to 0.70 % வரை அடங்கியிருக்கின்றன,

பெல்லடோனாவில் hyoscyamine, atropine, atropamine, belaplomine மற்றும் scopolamine, போன்ற ஆல்கலாய்டுகள் எல்லாத் தாவரப்பாகங்களிலும் இருக்கின்றன. இலைகள் மற்றும் கனிகளில் இவை மிக அதிக அளவில் இருக்கின்றன. 

பெல்லடோனாவின் ஆல்கலாய்டுகளில் மிகவும் சக்திவாய்ந்தவை அட்ரோபைன் மற்றும் ஸ்கோபோலமைன் இரண்டும் தான். (Atropine & scopolamine). இவ்விரண்டும் அட்ரோபா பெல்லடோனாவில் மட்டுமல்ல ஊமத்தை போன்ற சொலனேசி குடும்பத்தின் பிற தாவரங்களிலும் காணப்படுகின்றன. 

பெல்லடோனா விழுதை உடலில் பூச்சிக்கொள்கையிலும், அருந்துகையிலும் மனமயக்கம், இல்பொருள் தோற்றம் உண்டாகுதல், உடல் எடை குறைந்து பறக்கும் உணர்வு தோன்றுதல் ஆகியவை உண்டாகிறது. மிக அதிக அளவில் உட்கொள்ளுகையில் பெல்லடோனா கண் விழித்திருக்கையிலேயே மாயத்தோற்றங்களை உருவாக்கி மனம் பிறழச்செய்து கோமா அல்லது இறப்புக்குக் கொண்டு செல்கிறது.

இதயநோய், ஆஸ்துமா, வலிப்பு நோய் மற்றும்  பார்கின்ஸன் சிகிச்சைகளில்  பெல்லடோனாவின் அட்ரோபைன் ஆல்கலாய்டு (Atropine) இப்போது பயன்படுகிறது. பல்வேறு வகையான நஞ்சுகளுக்கு பெல்லடோனா முறிமருந்தாகவும் பயனாகிறது. 

16-ம் நூற்றாண்டில் இருந்துதான் நச்சுத்தாவரமான இதன்  மருத்துவ உபயோகங்கள் பரவலாகின.1700-த்தில் மருந்துச்சரக்குகள் குறித்த பிரசுரங்கள் அனைத்திலுமே பெல்லடோனாவின் பெயர் இடம்பெற்றிருந்தது

1813-ல் இந்தத்தாவரத்திலிந்து அட்ரோபைன் ஆல்கலாய்டு தனியே பிரித்தெடுக்கப்பட்டது. 

1950-களில் இருந்து பெல்லடோனா ஆல்கலாய்டுகள் தடவப்பட்ட பிளாஸ்டர்கள் அதிகம் புழக்கத்துக்கு வந்தன. அவை முடக்குவாதத்திலிருந்து சுவாச அழற்சி வரை பல்வேறு மருத்துவப் பயன்பாடுகள் கொண்டிருந்தன.

தன்னியக்க நரம்பு மண்டல (autonomic nervous system) சிகிச்சைகளில் இதன் ஆல்கலாய்டுகள் பயன்படுகின்றன. கால்நடை சிகிச்சைகளிலும் அட்ரோபா பெல்லடோனா பயன்படுத்தப்படுகிறது

இப்போது அட்ரோபினின் உபயோகம் அத்தனை அதிகமில்லை என்றாலும் கண் மருத்துவத்தில் கண்மணியைப் பெரிதாக்க மிககுறைந்த அளவில்  இந்த ஆல்கலாய்டு மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது. 

ஆனால் இயற்கையாக இவை வளர்ந்திருக்கும் இடங்களில் இவற்றின் நச்சுத்தன்மையை அறியாமல் அதன் கனிகள் தவறுதலாக உண்ணப்படும் அபாயம் உலகெங்கிலும் இருக்கிறது. 

நத்தைகள்,முயல்கள் மற்றும் பறவைகள் அட்ரோபாவின் கனிகள்  மற்றும் இலைகளை உண்கின்றன. எனினும் பறவைகளுக்கு மட்டும் அட்ரோபா நஞ்சினால் பாதிப்பு உண்டாவதில்லை.   அட்ரோபா பெல்லடோனாவின் இலைகள் கனிகளை உண்ட முயல் போன்ற சிறு விலங்குகளின் இறைச்சியை உண்பதாலும்  பெல்லடோனா ஆல்கலாய்டுகளின் பாதிப்பு உண்டாகிறது. அரிதாக பெல்லடோனா ஆல்கலாய்டுகள் போதை உண்டாக்கவும், தற்கொலைக்கும், கொலை செய்யவும் பயன்படுகின்றன. 

பல நாடுகளின் பாரம்பரிய மருத்துவமுறைகளில் பெல்லடோனா   வலி நிவாரணியாக, வீக்கங்களுக்கெதிராக,மாதவிடாய்க்கோளாறுச் சிகிச்சைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

ஹோமியோபதியில் பெல்லடோனா

ஹோமியோபதி மருத்துவமுறையை தோற்றுவித்தவரான சாமுவேல் ஹானிமேன். பெல்லடோனாவை  பலவிதமான நோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தினார். ஹோமியோபதி மருந்துகளில் பயன்படுத்தப்படும் தாவரப்பொருட்களின் அளவு பல்லாயிரம் முறை நீர்க்கச்செய்யபடுவதால் அதன் விளைவுகள் பெரிதாக இல்லை.

அமெரிக்காவிலும் கனடாவிலும் இயங்கும் ஹைலேண்ட்ஸ் ஹோமியோபதி மருந்து நிறுவனத்தின் அட்ரோபா பெல்லடோனாவின் ஆல்கலாய்டுகள் கலந்திருக்கும் குழந்தைகளுக்கு பல் முளைக்கையில் உண்டாகும் வலிநிவாரண மாத்திரைகள் 2004-லிருந்து உலக அளவில் இரண்டாம் இடத்தில் பிரபலமாக இருந்தன. 

ஆனால் 2010-ல் FDA அந்த மருந்துகளில் அபாயகரமான அளவில் அட்ரோபா பெல்லடோனாவின் ஆல்கலாய்டுகள் இருப்பதாக தெரிவித்தது. ஹைலேண்ட்ஸ் தனது மருந்துகளைத் திரும்பப் பெற்று வேறு புதிய மருந்துகளைச் சந்தைப்படுத்தியது. 

அதன் பிறகும் அந்த மருந்துகளின் தொடர்ந்த பயன்பாட்டில் பத்துக் குழந்தைகளின் இறப்பு மற்றும் சுமார் 400 குழந்தைகளுக்கு உண்டான உடல்பாதிப்பு மீண்டும் இந்தப் பிரச்சனையை எழுப்பியபோது ஹைலேண்ட்ஸ் நிறுவனம் அந்த மருந்துக்கும் குழந்தைகளின்   இறப்புக்கும் எந்தத் தொடர்புமில்லை என வாதிட்டது 

எனினும் 2017-ல் மீண்டும் ஆதாரபூர்வமாக அந்த பல்வலி மருந்துகளில் பெல்லடோனாவின் அளவு அபாயகரமாக இருந்தது FDA-வால் நிரூபிக்கப்பட்டபோது அந்த மருந்துகள் தடை செய்யப்பட்டவையாக அறிவிக்கப்பட்டன.

பெல்லோடா நஞ்சின் அறிகுறிகள்

• பேச்சுக் குழறல் மற்றும் குழப்பமான மனநிலை

• மாயத்தோற்றங்கள் உண்டாகுதல்

• மனநிலை பிறழ்தல் 

• கட்டுப்படுத்தமுடியாத வன்முறைச்செயல்பாடுகள் வலிப்பு

• கோமா நிலை 

• கண்மணி விர்வடைதல் 

• சிறுநீர் கழிக்க முடியாமை

• அதிகரிக்கும் இதயத்துடிப்பு 

• ரத்த அழுத்த மாறுபாடுகள்

அஞ்சல்தலைகளில் பெல்லடோனா

அட்ரோபா பெல்லடோனா 1957 மற்றும் 1965-ல்  வெளியிடபப்ட்ட  யூகோஸ்லேவியாவின் இரண்டு அஞ்சல் தலைகளில் இடம்பெற்றது

போலந்தில் 1980-ல். ஆஸ்திரியாவில் 2022-ல் அட்ரோபா பெல்லடோனா வின் சித்திரம் அஞ்சல் தலைகளில் சித்தரிக்கப்பட்டு வெளியானது

ஸ்விட்சர்லாந்து 1974-ல் காடுகளில் இருக்கும் நச்சுத்தாவரங்களின் வரிசையில் அட்ரோபா பெல்லடோனாவின் சித்திரத்தை  அஞ்சல்தலையில் வெளியிட்ட்டது

அல்பானியாவும் 1976-ல் அட்ரோபா பெல்லடோனாவின் சித்திரத்தை  அஞ்சல்தலையில் வெளியிட்டது. 

இந்த அஞ்சல்தலைகள் அட்ரோபா பெல்லடோனாவின் உலகளாவிய முக்கியத்துவத்துக்குச் சான்றளிக்கின்றன.  

தற்போது மருந்துத் தயாரிப்புக்கென பெல்லடோனா சாகுபடி ஐரோப்பா, பாகிஸ்தான், வட அமெரிக்கா மற்றும் பிரேஸிலில் சட்டபூர்வமாகவே நடக்கிறது.

ஜெர்மனியில் மருந்துக்கடைகளில் பெல்லடோனாவின் வேர் மற்றும் இலைகள் மருத்துவரின் பரிந்துரைகளின் பேரில் கடைகளில் கிடைக்கின்றன 

அமெரிக்காவில் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பெல்லடோனா ஆல்கலாய்டுகளைக் கொண்டிருக்கும் மருந்துகள் கிடைக்கின்றன. அதற்கு இணையாகவே  இருமல் சளி நிவாரணியாக 0.2 மி கி அளவில் பெல்லடோனா மருந்துகள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படாத மருந்துகளாகவும் கிடைக்கின்றன. 

ஊழின் தெய்வங்களான மூன்று சகோதரிகள் பிறப்பையும் இறப்பையும் முடிவு செய்வதுபோல  சிகிச்சையளிக்கவும் உயிரைப்போக்கவுமான இயல்பினை கொண்டிருக்கும் அட்ரோபா பெல்லடோனாவும் ஊழின் தெய்வங்களில் ஒன்றுதான்.