இன்று ஆடிப்பெருக்கு. தொடர் மழையில் ஆறு குளம் அணைக்கட்டு எல்லாம் நிரம்பி இருக்கிறது. அம்பராம்பாளையம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. ஆழியார் அணையின் கொள்ளளவை நீர் எட்டிவிட்டதால் 11 மதகுகளிலும் நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது, ஆற்றையும்அணையையும்  வேடிக்கை பார்க்க  இன்று ஏராளமானோர்  வந்து கொண்டிருக்கின்றனர்.

தென்னிந்தியா முழுக்க ஆடிப்பெருக்கு என்றால் ஓடும் நீரை பார்ப்பதும் கலந்த சாதம் சமைத்து எடுத்துச்சென்று ஆற்றங்கரைகளில் அமர்ந்து உண்பதுவும் தான் வழக்கம்

ஆனால் வேட்டைக்காரன் புதூர் ஆனைமலை கிராமங்களில் மட்டும் இன்றைய தினம் குழம் நோம்பி எனப்படும். நான் சிறுமியாக இருக்கையிலிருந்தே இங்கு மூங்கிலில் சிறிய குழல் போலச் செய்து அதில் பாப்பட்டாங்காய் எனும் சிறு மணி போன்ற காய்களை நுழைத்து ஒரு குச்சியால் அடித்து டப் என்னும் ஓசை வருவது விளையாட்டாக மகிழ்ந்து கொண்டாடப்படும்

அந்தப் பாப்பட்டாங்குழல் இன்றும் வேட்டைக்காரன்புதூரில் மட்டுமே செய்யப்படுகிறது. இதைக் கைத்தொழிலாகச் செய்துகொண்டிருக்கும் ஒரு சில வயதானவர்கள்  இதை அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் பயிற்றுவித்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் இந்தப் பண்பாடு  அழிந்துபோகக்கூடும்.

காடுகளில் மிகச்சரியாக இந்தச் சமயத்தில் பச்சைக்குண்டுகளாகக் கொத்துக்கொத்தாகக் காத்திருக்கும் பாப்பட்டங்காயை  இதற்கெனப் பறித்துக் கொண்டு வந்து இந்தக் குழலுடன் சேர்த்து விற்பார்கள்.

இந்தக் குழல் பாப்பட்டாங்குழல் இந்தக் காய் பாப்பட்டாங்காய்.

இதன் தாவர அறிவியல் பெயர் பாவெட்டா இண்டிகா.

ரூபியேசி குடும்பத்தைச் சேர்ந்த இதன் தமிழ்ப்பெயர் காட்டுக்கரணை, மலையாளத்தில் இது மல்லிகை முட்டி. மராத்தியில் பாப்பட்.தெலுங்கில் பாப்பிடி. இந்தப் பாப்பட்டாங்காய் என்பதும் பாவெட்டா என்னும் லத்தீன் பெயரின் மருவூதான். பாவெட்டா என்பது எப்படியோ வேட்டைக்காரன் புதூர்க்காரர்களுக்கு தெரிந்து இதைப் பாவட்டாங்காய் என்று அழைக்கத்துவங்கி அது இப்போது பாப்பட்டாங்காய் ஆகி இருக்கிறது. 

இப்படித்தான் ஒரைஸா என்னும் நெல்லின் லத்தீனப்பெயர் தமிழின் அரிசியிலிருந்து வந்தது.

இந்தப் பாப்பட்டாங்காய் வெடிக்கும் விளையாட்டுத் தமிழர் பண்பாட்டில் இணைந்த ஒன்று அதுவும் குறிப்பாக வேட்டைக்காரன் புதூரில் ஆனைமலையில் மட்டும்தான் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது இந்தியவில் வேறெங்கும் இது இல்லை 

இப்படி பண்பாட்டுடன் இணைந்த இது போன்ற இயற்கை கொண்டாட்டங்களை அவசியம் நாம் தொடர வேண்டும்

இளம் மூங்கில் குச்சிகளில் சிறு குழல்போலச் செய்யப்படும் இந்த விளையாட்டுக் கருவியில் சிறுகாய்கள் உடைகையில் உருவாகும் ஒலி பெருக்கிக்கேட்கவெனக் குழலின் வாய்ப்பகுதி அகலமாகப் புனல் போலச் செய்யப்பட்டிருக்கும். வண்ணக்காகிதங்களால் அந்த வாய்ப்பகுதி அலங்கரிக்கப்பட்டிருப்பதால் குழந்தைகளுக்கு இது மிகவும் பிடித்தமான விளையாட்டாக இருக்கும். பொட்டு வெடி என்னும் ஒரு பட்டாசை கல்லில் கொட்டுகையில் உண்டாகும் ஒலியைப்போலவெ இதிலும் உருவாகும் என்பதால்ல  இதைக் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் விளையாடுவார்கள். ஆடி 18 அன்று உறவினர்களின் குழந்தைகள் ஒன்றிணைந்து ஒருவர் மீது ஒருவர் இதை அடித்து விளையாடி மகிழ்வார்கள்.

ஆபத்தற்ற, சூழல் மாசுண்டாக்காத,  இயற்கையோடு இணைந்த  இந்த விளையாட்டுத்தான் எத்தனை இனிது!!

நான் ஒவ்வொரு வருடமும் மகன்கள் வீட்டில் இருந்தாலும் இல்லையெனினும் இவற்றை வாங்கி வந்துவிடுவேன். பண்டிகையன்று இதில் காய்களை நுழைத்து அடித்து விளையாடுவேன்.

இந்தப் பாவட்டா  2 லிருந்து 4 மீ உயரம் அவரை வளரும் புதர் செடி. நல்ல நறுமணமுள்ள வெண்ணிற மலர்கள் கொத்துகளாக உண்டாகும்.மலர்களைத் தேடி எண்ணற்ற பட்டாம்பூச்சிகளும் சிறு வண்டுகளும் ஈக்களும் வரும். பச்சை நிற காய்கள் தான் இந்தக் குழலில் அடித்து விளையாடப்படுகின்றன

காய்கள் பழுத்துக் கனிகையில் கருப்பு நிறமாகி விடும்.இதன் வேர் இலை மரப்பட்டை ஆகியவை பல்வேறு சிகிச்சைகளுக்குக் கைவைத்தியமாகக் கிராமங்களில் பயன்படுத்தப்படுகிறது.

ஜுலையில் மலர்கள் முதிர்ந்து சரியாக ஆடிமாதத்தில் இந்தப்பண்டிகையின்போது காய்கள் திறண்டு காத்திருக்கும். வேட்டைக்காரன்புதூரை சுற்றியுள்ள காடுகளில் இந்தப் பண்டிகை காலத்தில்  இவை ஏரளமாகக் காய்த்துக்கிடக்கும்.

எழுத்தாளர் அகரமுதல்வன் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கையில் ஈழத்தில் பாலைப்பழம் பழுக்கும் காலத்தில் காடுகளுக்குள் மொத்த கிராமமே கூட்டமாகச் சென்று பாலைப்பழம் உண்பார்களாம். இது அவர்களின் பண்பாட்டின் ஒரு பகுதி என்றார். அப்படியான பண்பாடுகளை எல்லாம் நாம் ஏறக்குறைய இழந்து விட்டிருக்கிறோம். இந்தப் பாவட்டங்காய் அடித்து விளையாடும் பண்டிகை இயற்கையுடன் இணைந்திருக்க வேண்டியதன் மகிழ்சியையும் அவசியத்தையும் உணர்த்தும் ஒன்று. இன்று சரணும் தருணும் சாம்பவியும் இல்லை எனினும் அவர்கள் எப்போது விடுமுறைக்கு  வந்தாலும் அவர்கள் விளையாட வென்று குளிர்சாதனப்பெட்டியில் காய்களைச் சேமித்து வைத்திருக்கிறேன்.

எதிர்காலத்தில் இந்த வீட்டுவாசலில் சிறு  குழந்தைகள் பாப்பட்டாங்குழலால்  ஒருவர் மீது  ஒருவர்  காய்களை அடித்து விளையாடிச் சிரித்து பூசலிட்டுக்கொள்வதை பார்க்கக் காத்திருக்கிறேன். இன்று விஜியும் ஜோதியும் வந்திருந்து விளையாடினார்கள் மாலை புதுப்புனல் காண உறவினர்களுடனும்  நண்பர்களுடனும் செல்லவெண்டும்.