லோகமாதேவியின் பதிவுகள்

சாம்பல் பூசணி!

மற்றுமோரு தினமணி நினைவு. என் முதல் சிறுகதை கல்லூரியில் படிக்கையில் தினமணிக்கதிரில் வெளியானது.

3-ம் வகுப்பு முடிந்து வரும் பெரிய விடுமுறையில் வெங்கடேசா காலனி வீட்டிலிருந்து ராஜா ராமண்ணா நகர் சொந்த வீட்டுக்கு குடிவந்துவிட்டிருந்தோம். அந்த வீட்டிலிருந்துதான் இப்போதிருக்கும் இந்தக்கல்லூரிக்குச் சென்றதும்.

அப்போதுதான் அந்த புறநகர் குடியிருப்பு உருவாகிக்கொண்டிருந்தது. தெருவின் எல்லையில் விவசாயநிலங்கள் இருந்தன.

நான் அப்போது கல்லூரியில் 2 ம் வருடத்திலிருந்தேன். அங்கு வந்த நாளிலிருந்தே வீடிருந்த தெரு முடியும் பிரதான சாலையில் இருந்த பாபு என்னும் பன்றி மேய்ப்பவரின் குடும்பத்தை அறிவேன். கருத்த பெரிய உடலும் மிகப்பெரிய தொப்பையுமாய் இருப்பார் பாபு. ஏராளமான பன்றிகளும் குழந்தைகளும் அவருக்கு இருந்தது நினைவிருக்கிறது.

பாபுவுக்கு மூன்று மனைவிகள். சனிக்கிழமைகளில் குடிசைக்கு முன்பாகஅவரை ஒரு கல்லில் அமரவைத்து மூவருமாக உடலெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவார்கள் கொஞ்ச நேரத்தில் வாசலில் கல்லுக்கூட்டிய அடுப்பில் பெரிய அலுமினியப் பாத்திரத்தில் மசாலாவில் வேகும் பன்றிக்கறியின் வாசனை கமகமக்கும். இப்போது நினைத்துப்பார்த்தால் பாபு சொர்க்க வாழ்வு வாழ்ந்ததை உணரமுடிகிறது.

பாபுவின் மகள்களும் மகன்களும் பல வயதிலும் இருந்தார்கள் ஒரு சிலர் என் வயதில் என் விளையாட்டுத்தோழர்களாக இருந்தார்கள் அம்மாவுக்குத்தெரியாமல் விளையாடவேண்டும் அவ்வளவுதான். சாயங்காலங்களில் சிறு தூக்குப்போசியுடன் வீடுவீடாகச்சென்று அக்குழந்தைகள் ’’..சாப்பாடுங்ங்ங்..’’ என்று ராகம் போடுவார்கள். வீடுகளில் மீந்தவற்றைக்கொடுத்தால் வாங்கிப்போவார்கள். வெகுநாட்கள் கழித்துத்தான் எனக்குத்தெரியும் அப்படி வாங்கியவற்றை அவர்கள் சாப்பிடுவதில்லை பன்றிகளுக்கு கரைத்து ஊற்றுவார்கள் என்பது. அதில் என் வயதிலிருந்த ஒருத்தி நான் இந்தக்கல்லூரியில் சேர்ந்த அன்றே அங்கே துப்புரவுப்பணியிலிருந்ததை அறிந்தேன். அங்கேயேதான் இன்றுமிருக்கிறாள். தி ஜா கதைகளின் நாயகியைபோல வாளிப்பானவள். அவளைக்குறித்து ஒரு சில நல்ல சிறுகதைகளை எழுதமுடியும் . அத்தனை சுவாரஸ்யமானவள்.

கல்லூரியில் பேராசிரியப்பணியில் சேர்ந்தபிறகு ஒரு நாள் கோ ஆப்பரேட்டிவ் ஸ்டோருக்கு எதிரில் இருந்த நடுச்சோலை மாமரத்துக்குஅடியில்( இப்போது மாமரம் இருந்த இடத்தில் வகுப்பறைகள் இருக்கின்றன) நானும் அவளுமாய் நின்று சிரித்துப்பேசிக்கொண்டு நான் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு போயிருந்த கன்னிமாங்காய் ஊறுகாயை டிபன் பாக்ஸிலிருந்து எடுத்துச்சாப்பிட்டுக்கொண்டிருந்ததை அப்போதைய கல்லூரி முதல்வர் பார்த்து என்னை அழைத்து கன்மையாக வண்டித்தார் சீ வன்மையாகக்கண்டித்தார்.(’’… லோகமாதேவி,ஒரு ப்ரொஃபெஸர் என்ன இடத்தில் இருக்கனும்னு தெரியாதா உனக்கு?…’’)

என் கல்லூரிக்காலத்தில் தெரு முடிந்த இடத்திலிருந்த , முள்கம்பி வேலியிட்ட நிலத்தில் சாம்பல்பூசணிகள் விளைந்திருந்தன. ஒரு ஞாயிறன்று பாபுவின் சிறுமகன்கள் இருவர் அந்த முள்கம்பிக்குள் நுழைந்து சட்டையணிந்திருக்காத உடலைக்கிழித்துக்கொண்டு ஒரு சில பூசணிக்காய்களைத் திருடி வந்து வீடுகளில் விற்றார்கள் அப்படி அடிக்கடி அவர்களும் மேலும் சிலரும் வயல்களில் விளைபவற்றை திருடிவிற்று சில்லறைக்காசுகளை வாங்கிச்செல்வது உண்டு.

அன்று வாசலில் நாங்கள் தேங்காய் போட்டு எண்ணி எடுத்த்து வைத்துக்கொண்டிருந்தோம். அப்பாவுமிருந்தார் . ஆளுக்கொரு பூசணிக்காயுடன் சிறுவர்கள் இருவரும் அப்பாவிடம் வந்து ’’..சார் பூசணிக்காய் வேணுமா..’’ என்றார்கள்.

அப்பா வழக்கமான உருட்டல் மிரட்டலுடன் ’’…ஏண்டா இந்த சின்ன வயசிலேயே திருடிப்பழகறீங்களா? நான் யார் தெரியுமா? போலீஸ், பிடிச்சு ஜெயில்ல போடட்டா? உங்கப்பன் பாபுவை வரச்சொல்லி இதைசொல்லட்டுமாடா?..’’ என்றதும் அவர்கள் பயந்துபோய் பூசணிக்காய்கள் இரண்டையும் வாசலிலேயே போட்டுவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிப்போனார்கள். அப்பா சாவதானமாக அம்மாவிடம் ’’..பாப்பாத்தி பூசணிக்காயை எடுத்து உள்ளே வை..’’ என்றார்

நான் அந்தசிறுவர்களின் தோளிலும் முதுகிலும் வரிவரியாக இருந்த ரத்தக்கீறல்களை பலநாட்கள் நினைத்துக்கொண்டே இருந்தேன். கல்லூரி நூலகத்தில் தினமணிக்கதிரில் இருந்த முகவரிக்கு என் கிறுக்கல் கையெழுத்தில் நடந்ததை அப்படியே ஒரு சின்னக்கதைபோல சாம்பல்பூசணி என்று தலைப்பிட்டு எழுதிப்போட்டேன். அடுத்த சிலவாரங்களிலேயே அது பிரசுரமாகி கல்லூரி முகவரிக்கு சன்மானமும் வந்தது.

ஆனால் கதைப்புத்தகங்கள் வாசித்தாலே அப்பாவிடம் அடிகிடைக்கும் ஆம் கல்லூரிக்காலத்திலும் அடிப்பார். அவரது முறம்போன்ற கையால் அடிவாங்கி பலநாட்கள் எனக்கு மூக்குச்சில்லு உடைந்து ரத்தம் கொட்டும், இப்படி பத்திரிக்கையில் எழுதியதற்கு இன்னமும் அதிகமாக அடிகிடைக்கும் அதிலும் அவரை, அவர் செய்த தவறைக்குறிக்க சாம்பல் பூசணி என்று குறிப்பிட்டு எழுதியது தெரிந்தால் ரத்தக்களறிதான் என்பதால் பிரசுரம் குறித்து யாரிடமும் சொல்லவேஇல்லை.

அந்த முதல் பிரசுரத்தை இன்று நினைக்கையில் அப்போதும் தலைப்பில் தாவரவியல் இருந்திருக்கிறது என்று சந்தோஷப்பட்டுக்கொள்கிறேன்.

3 Comments

  1. phokbet88

    Okay, phokbet88 is now on my radar. Heard some good things. Maybe tonight’s the night I score big? Give it a shot: phokbet88

  2. ph68jl

    Ph68jl, ang mura ng bet! Kaya pwede tumaya kahit low budget. Try nyo rin! Dito na kayo: ph68jl!

  3. aaajiliapp

    Aaajiliapp, ang dali i-download! At ang bilis pa. Perfect para sa mga on-the-go. Download now: aaajiliapp!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑