பிப்ரவரியில் ஏற்பட்ட சிறு உடல்நலக்குறைவு காரணமாக, வேறு வழியின்றி மருத்துவ விடுப்பு எடுக்க வேண்டிய சூழல் உருவானது. சிகிச்சைக்கு எடுத்துக்கொண்ட மருந்துகள் நல்ல உறக்கத்தைத் தந்ததால், வீட்டில் ஓய்வெடுத்தேன். விடுமுறையின் கடைசி நான்கு நாட்களை மும்பையில் உள்ள சரண் வீட்டுக்கு போகலாம் என நினைத்தேன். சரண் ஜனவரியில் மும்பை சரஸ்வத் இன்ஃபோ டெக்கில் பணியில் இணைந்தான் பிப்ரவரி முதல் வாரத்தில்தான் புதிய வீட்டிற்கு குடிபோயிருந்தான்.
பனைகாட்சனும் நீண்ட நாட்களாக அவர்களது மும்பை மெதடிஸ்ட் சர்ச்சில் ‘விவிலியத் தாவரங்கள்’ குறித்து உரையாற்றச் சொல்லி கேட்டுக் கொண்டிருந்தார். எனவே ஒரு வெள்ளிக்கிழமை காலை விமானத்தில் பயணம் உறுதியானது. எனக்கு எப்போதும் ரயில் பயணமும், விமானப் பயணமும் அவ்வளவாகப் பிடிப்பதில்லை. அதிலும் விமானப் பயணம் கடும் ஒவ்வாமை அளிப்பதுடன், அது இயற்கைக்கு மாறானது என்ற எண்ணம் இருப்பதால் எனக்கு எப்போதும் அச்சமூட்டுவதாகவே இருக்கும். தருண் டேராடூனில் படித்தபோது அவ்வப்போது சென்றதோடு சரி, கடந்த சில வருடங்களாக விமானப் பயணமே இல்லை. இப்போது வேறு வழியின்றி இண்டிகோ விமானத்தில் பயணம் . சரண் டிக்கட் போட்டான்.
சரணுக்குச் சில பொருட்கள் கொண்டு செல்ல வேண்டியிருந்தது, 15 கிலோதான் எடுத்துச் செல்ல முடியும் என்பதால், சாம்பவியும் நானுமாகச் சேர்ந்து எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து பேக் செய்தோம்.கைப்பை 7 கிலோ இருக்க வேண்டும். அதன் அளவுகளைச் சாம்பவி டேப் வைத்துத் துல்லியமாக அளந்து, “115 x 32 x 12 இந்த அளவில்தான் பை இருக்க வேண்டும் அத்தை, இல்லாவிட்டால் மேலே வைத்து மூட முடியாது என்பார்கள்; நீங்க தனியாகப் போறீங்க, தேவையில்லாமல் டென்ஷன் ஆவீங்க” என்று அக்கறையுடன் அனைத்தையும் செய்து கொடுத்தாள்.
சரியான நேரத்திற்கு விமான நிலையம் சென்றேன். டிஜியாத்ராவில் சாம்பவி முன்பே விபரங்களை ஏற்றியிருந்ததால், சிரமமில்லாமல் உள்ளே சென்று நுழைவு வாயிலின் அறிவிப்புக்காகக் காத்திருந்தேன். எனக்கு முன் ஒரு வட இந்தியக் குடும்பம் அமர்ந்திருந்தது. வயதான பெற்றோர், மகன், மருமகள் மற்றும் இரட்டை ஆண் குழந்தைகள். உடன் அவர்களின் பெண் இருந்தார்,

அந்த இரட்டையர்களில் ஒருவன், அவன் அம்மா அலுமினியம் ஃபாயிலில் சுற்றிக் கொண்டு வந்திருந்த எதையோ எடுத்துக் கொடுத்ததும் உடனடியாகக் கண்ணீர் மல்கினான். மற்றொருவன் சமத்தாக வாங்கிக் கொண்டான். அழுதவன் பிறகு தன் குட்டிப் பையிலிருந்து குர்குரேவை எடுத்துப் பொறுமையாக வயிறு நிறையச் சாப்பிட்டான். ஒரு பாப்கார்ன் வாங்கிக்கொண்டு அவர்கள் இருவரும் விளையாடுவதைப் பார்த்தபடி நேரத்தைக் கழித்தேன்.
பின்னர் 9-ம் எண் நுழைவு வாயில் வழியாக, சிரிப்போ முகமனோ காட்டாத பணிப்பெண்களைக் கடந்து என் இருக்கைக்குப்போனேன் ஜன்னலோரம் ஒரு மிலிட்டரிக்காரர் அமர்ந்திருந்தார். அவர் காலடியில் துணிக்கடைகளில் கொடுக்கும் கட்டைப்பையைத் திணறத் திணறத் திணித்து வைத்திருந்தார். எனக்கும் அவருக்குமிடையில் இருக்கை காலியாக இருந்தது. மற்றவர்களும் நல்ல பெரிய பெரிய சூட்கேஸ்களை வைத்திருந்ததைப் பார்த்தபோது, “சாம்பவி, பார்த்தியா அநியாயத்தை?” என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டேன்.
விமானம் டேக் ஆஃப் ஆகும்போது எனக்கு எப்போதும் வயிற்றைக் கலக்கும். அச்சத்தில் கந்தசஷ்டி கவசம் சொல்லிக் கொண்டு கண்ணை மூடிக்கொள்வேன். ஆனால், இந்த முறை அருகில் ஆஜானுபாகனாக, கட்டுமஸ்தாக, தாட்டியாக, கம்பீரமாக சீருடையில் பெரிய மீசையுடன் கூடிய ஒரு ராணுவ வீரர் அமர்ந்திருந்தது எனக்குக் கொஞ்சம் நம்பிக்கையூட்டியது. விமானி மற்றும் துணை விமானி இருவருமே பெண்கள். அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டபோது கவனிக்கத் தவறியதால், அவர்களுக்கு ‘லில்லி’ மற்றும் ‘ரோஸ்’ என்று நானே பெயர் வைத்துக் கொண்டேன்.
ஓடுதளத்தில் விமானம் தறிகெட்டு ஓடியபோது, மனதில் கவசம் சொல்லியபடியே ஒரு மாரல் சப்போர்டுக்காக திரும்பி அந்த ராணுவ வீரரைப் பார்த்தேன். அவர் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு, முகம் அஷ்டகோணலாக மாறி, கையில் ஒரு ருத்ராட்ச மாலையை உருட்டியபடி ஏதோ ஜெபித்துக் கொண்டிருந்தார்! ’’…ஒன்னுமில்ல சார் பயப்படாதீங்க..’’ என்று மானசீகமாக அவருக்கு தைரியம் சொன்னேன்.
லில்லி விமானத்தை வெண்ணெய்க்கட்டியில் கத்தி இறங்குவது போல அழகாக நவி மும்பையில் தரையிறக்கினாள். பெண்களுக்கு பைக் காரெல்லாம் தான் சரியாக ஓட்டத்தெரிவதில்லை.
வெளியே காத்திருந்த சரண் ஆச்சரியத்துடன், “என்னம்மா, வீடியோ கால் கூட வரலை, நீயே தைரியமா வந்துட்டயே!” என்றான். நான் புன்னகையுடன், “ஒரு மிலிட்டரிக்காரர் ஹெல்ப் பண்ணினாருடா” என்றேன்.
தொடரும்….
Leave a Reply