லோகமாதேவியின் பதிவுகள்

Category: அனுபவம் (Page 3 of 11)

A Vacation well spent!

கல்லூரி விடுமுறை முடிந்து நாளை புதிய கல்விப் பருவத்துக்குக் கல்லூரி திறக்கிறது. இந்த விடுமுறையையும் வழக்கம்போல வாசிப்பு, எழுத்து, பாடல்கள், பயணம், மேடை உரைகள், நிகழ்வுகள் என்று செலவழித்தேன். சென்னை,பாண்டிச்சேரி, கோவை, பெருந்தலையூர் என்று பயணித்துக்கொண்டிருந்தேன். இடையில் கல்லூரியில் தேர்வுப்பணி, திருத்தும்பணி என்றும் செல்லவேண்டி இருந்தது.  

என்ன வேலையாக இருந்தாலும் எங்கு பயணித்தாலும் தமிழ்விக்கி பணியைத் தேங்க விடுவதில்லை அவ்வப்போது அதைத் திருத்தி விடுகிறேன்.

புதிதாகத் தமிழக அரசு ஆவணக் காப்பகத்தின் பழைய நூல்களிலிருந்து தமிழக மாவட்டங்களின் flora வைத் தொகுத்து திருத்தி, மேம்படுத்திப் புதிய ஆவணமாக்கிக்கொடுக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறேன். அதில் இப்போது 4 மாவட்டங்களைத் தொகுத்து முடித்து அனுப்பிவிட்டேன். மீதமுள்ளவற்றை செய்துகொண்டிருக்கிறேன்.

18-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பழைய நூல்களில் ஆவணப்படுத்தப் பட்டிருக்கும் விவரங்கள் மலைப்பேற்படுத்துகின்றன. அவற்றைப் பெரும்பாலும் முழுமையாகப் படித்துவிடுகிறேன். Hemingway , Baliga ஆகியோரின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்தையும் அத்தனை நுணுக்கமாக அலசி ஆராய்ந்து ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.

ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வு தான் மேலோங்கி இருக்கிறது படிக்கையில். அப்போது இருந்த ஜாதி அடுக்குகள், ஜாதி சார்ந்த சடங்குகள், உணவுப்பழக்க வழக்கங்கள், சமூக அமைப்பு என்று சங்கிலித் தொடர்போலச் சுவரஸ்யமாகப்  படிக்கப் படிக்க நல்லவேளை நான் இந்தப்பணியை ஒத்துக்கொண்டேன் என்று தோன்றிக்கொண்டே இருக்கும்.

 ஒரு குறிப்பிட்ட ஜாதியில் இறப்பு நிகழ்ந்தால் இறந்தவரைச் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லும் முன்பு அவரது வலதுகையை சாணத்தில் முக்கி அவர் வாழ்ந்த வீட்டின் சுவற்றில் கை அச்சைப் பதித்தபின்னரே கொண்டு செல்கிறார்கள் என்னும் தகவல், குகைஓவியங்களில் இருக்கும் கைச்சித்திரங்களை நினைவுக்குக் கொண்டு வந்தது. ரெஃபெரென்ஸ்க்கு அளிக்கப்பட்ட நூல்களை நானே வைத்துக்கொள்ளலாம் என்பது கரும்பு தின்னக்கூலி தான். 

புதிதாக மாறி இருக்கும் தாவரங்களில் பெயரைகளை மாற்றி,  பிழைகளைக் கண்டறிந்து திருத்தி, ஒவ்வொரு அறிவியல் பெயருக்கும் அந்தபெயரை வைத்தவரின் பெயரை இணைத்து. எல்லாப்பெயர்களையும் இட்டலைஸ் செய்து அட்டவணை இட்டு என ஏராளமான நேரம் ஒதுக்கி, கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது தவறு நேர்ந்துவிடாமல் கவனமாகவும் இருக்க வேண்டி இருக்கிறது என்றாலும் மிகுந்த மனநிறைவுடன் இந்தப்பணியைச் செய்கிறேன். சீமைக்கருவேலத்தின் பெயர் இப்போது ப்ரொசாஃபிஸ் ஜூலிஃப்ளோரா என்பதிலிருந்து நெல்டுமா ஜூலிஃப்ளோரா என மாற்றப்பட்டிருக்கிறது எனவே இப்படியான மாற்றங்களுக்காக ஒவ்வொன்றையும் சரிபார்த்து எழுதவேண்டி இருப்பது எனக்குப் புதிய கற்றலுக்கும் உதவியாக இருக்கிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்!

காலச்சுவடுக்காக ’’அலையிடைவெளியில்’’  மொழியாக்க நூலையும்  இரவு பகலாக எழுதிச் சரிபார்த்து முடித்து அனுப்பினேன்.  சென்ற வாரம் தருண் பெங்களூருவில் ஒரு காட்டுயிர் கருத்தரங்கில் கலந்துகொண்டு அங்கிருந்த புத்தகக்கடையில் எனக்குப்பரிசளிக்க ஒரு  நூலைத் தேடியிருக்கிறான். விற்பனையில் இருந்த பெண் ’’….உங்கள் அம்மாவுக்கு எந்த  மாதிரியான நூல் பிடிக்கும்…’’ என்று கேட்டபோது ’’…சூழல், தாவரங்கள், இயற்கை தொடர்பானவை…’’ என்று தருண் சொல்லி இருக்கிறான். 

அந்தப்பெண் ’’…அப்படியானால்  அவருக்கான மிகச்சிறந்த ஒன்றாக இதுதான் இருக்க முடியும்…’’ என்று இவான் ஏவ்ஸின் intertidal நூலை எடுத்துத்தந்திருக்கிறார், தருண் பெருமிதத்துடன் ’’…இந்த நூலை என் அம்மாதான் மொழிபெயர்த்திருக்கிறார்..’’ என்று சொல்லி அந்தப்பெண்ணை ஆச்சர்யப் படுத்திவிட்டு  ஜானகி லெனினின் எனது கணவரும் ஏனைய விலங்குகளும் இரண்டாம் பாகத்தையும், கண்ணுக்குப்புலப்படாத வைரஸ்களின் உலகம் குறித்த இன்னொன்றும் வாங்கி வந்தான். வாசிக்கத் துவங்கி இருக்கிறேன். மைந்தரால்  பொலியும் அன்னை.

தாவரவியல் அகராதிப்பணியை மீண்டும் தொடங்கி இருக்கிறேன். அதில் முழுக்கவனம் குவிக்க முடியாமல் தொடர்ந்து இருக்கும் பணிகள் அலைக்கழிக்கின்றன.

சரண் இந்தியா வந்துவிட்டிருக்கிறான் எனினும் இன்னும் வீட்டில் ஒரு நாள் கூட இருக்கவில்லை. அவன் இருந்து முடிக்க வேண்டிய முக்கியவேலை ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது.

 இரண்டு கட்டுரைத்தொகுப்புக்களை பிரசுரத்துக்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்திருந்தேன் ஆனால் முடியவில்லை. டிசம்பரில் சிலநாட்கள் விடுமுறை வருகையில் அதைச்செய்ய வேண்டும். 

விழாக்களில் அநேகமாக எல்லா நண்பர்களையும் சந்திக்க முடிந்தது பெருமகிழ்வளித்தது.

நல்ல மழை இருந்ததால் புதிய விதைகளையும் செடிகளையும் நட்டு வைத்திருக்கிறேன். சமீபத்தில் சென்ற ஒரு பயணத்தின் நினைவாக அந்த ஊரிலிருந்தே பிரகாசமான மஞ்சள் சிறு மலர்களை அளிக்கும் ஒரு புதர்ச்செடியின் செம்பு நிற உலர்வெடி கனிகளைக் கொண்டு வந்து விதைத்திருக்கிறேன். அந்த ஊரின், அந்தத் தங்கலின், அந்த நினைவுகளின், அந்த இனிமையின் சாட்சியாக அது இனி முளைத்து வளர்ந்து முதிர்ந்து மலரளிக்கவிருக்கிறது.

கல்லூரியில் இந்தப்பருவத்தில் தோட்டக்கலைப் பாடத்தையும், புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கும் தாவரங்களின் அடிப்படை இயல்புகள்குறித்த ஒரு பாடத்தையும் கற்றுக் கொடுக்கவிருக்கிறேன். மாணவர்களுக்கு எப்படியோ எனக்கு கல்லூரி திறப்பது வழக்கம்போல ஆர்வத்தைத்தான் எழுப்பி இருக்கிறது.

வகுப்பறைக்குச் சென்று சாக்பீஸ் பிடிக்காமல் இருக்கும் நாட்களின் பதட்டம் மெல்ல உருவாகி விட்டது., நாளைசரியாகிவிடும். 🙂

நினைவுகள்!

இன்று ஜெ தளத்தில் தமிழ் விக்கியில் இருக்கும் என் பக்கம் வந்திருந்தது. பலர் அழைத்துப்பாராட்டினார்கள். இன்றிருக்கும் இந்த இடத்துக்கு ஜெ வைத்தவிர வேறு யாருமே காரணமில்லை. நன்றியுடன்அவரை நினைத்துக்கொள்ளாத நாளுமில்லை.

இன்றென்னவோ நான் திரும்பிப் பார்த்துக்கொண்டே இருந்தேன். கடந்து வந்த காலங்களை கடினப்பாதைகளை,  விழுங்கிய கசப்புக்களை பிடுங்கப்பட்ட வாய்ப்புகளை, தலைகுப்புற தள்ளிவிடப்பட்ட படுகுழிகளை, பறிக்கப்பட்ட மகிழ்வுகளை இப்போதிருக்கும் கண்ணியமான வாழ்வை என்று வேகமாக காணொளிக்காட்சிகளை ஓட்டி ஓட்டி பார்ப்பதுபோல மனம் பார்த்துக்கொண்டது. கடந்து வந்த மனிதர்களை குறித்த புகார்கள் பெரிதாக இல்லை. அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன் என்பதால் அவர்களுக்கும் என் அன்பு . இதோ விரைவில் என்னை இறுகப்பிடித்துக்கொண்டிருக்கும் ஒரு தளையிலிருந்து முற்றாக வெளியேறவிருக்கிறேன்.

சரியான மனிதர்களுடன் வாழக்கொடுத்து வைக்காததைக் காட்டிலும் சரியில்லாதவர்களோடான வாழ்வுதான் வதையாகிவிடுகிறது. அன்னைமையும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு தளையிடுகிறது.

நான் அன்னைமையை  ஒருபோதும்உணர்ந்ததில்லை எனவே அதை அத்தனை இழக்கவேயில்லை. எனினும் அன்னையை இழந்தேன் மூன்று வருடங்களுக்கு முன்னர்.

எழுதிக்கொண்டு வாசித்துக்கொண்டு பயணித்துக்கொண்டிருக்கிறேன். முன்னைக்காட்டிலும் ஏராளம் தோழமைகள். மகன்கள் வேர்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் வெகுவிரையில் காலூன்றி கொள்வார்கள். 

இழந்துகொண்டிருக்கும் இளமையை குறித்த வருத்தமேதும் இல்லை. சரண் தருண் இருவரின்  தோளும் நெஞ்சும் அகமும் விரிந்திருப்பதில்  என் இளமையின் பங்களிப்பு இருக்கிறதே! நான் தான் அவர்களும்.

 நான் இழந்தவை  அவர்களில் மெல்ல மெல்ல நிரம்புவதை மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இளமையை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடுவதில்லை மாறாக இந்த வயதிற்கான தோற்றத்தின் கண்ணியத்திலும் கம்பீரத்திலும் கவனமாக இருக்கிறேன். i am aging gracefully. முன்னெப்போதைக்காட்டிலும் நம்பிக்கையுடன் உள்ளொளியுடன் நிறைவுடனும் இருக்கிறேன். சொல்ல மறந்துவிட்டேன். மிகுந்த மகிழ்வுடனும் இருக்கிறேன்.

வெண்முரசில் ஒரு வரி இருக்கும் மீட்டப்படாத யாழும் இசையாலானதே என்று.அப்படி எனக்குள்ளும்  நாதம் இருந்தது . நானே அதை வெகு தாமதமாக அறிந்துகொண்டேன். புழுதியில் எறியப்பட்டிருந்த நல்லதோர் வீணையை  எடுத்தேன். தூசி தும்புகளை துடைத்துச் சுத்தம் செய்தேன்  தந்திகளை சீராக்கினேன். அரிதாக மீட்டினேன் எழுந்த சுகநாதத்தை மனமகிழ்ந்து ரசித்தேன். மீட்டாதபொழுதுகளிலும் நினைவில் இருக்கும் அவ்விசையை நினைத்துக்கொண்டேன்.

அன்பு!

DTDC-பொறுப்பின்மையின் மறுபெயர்.

இந்தக்கொரியர் நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மையினால் ஏராளமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நான் வசிக்கும் வேடசெந்தூருக்கு அரை கி.மீ தூரத்தில் இருக்கும் ஒரு நிறுவனம் வீட்டில் கொண்டு வந்து கொடுக்க விதிகள் இல்லையென்பார்கள் நான் போய் நேரில்தான் வாங்கி ஆகவேண்டும். கேட்டால் ’’நான் சர்வீஸ் ஏரியாவாம்’’. அரைகிமீ தொலைவில் இருப்பது எப்படி சேவைக்கு அப்பாற்பட்ட இடமாகும்?.

முன்பே ப்ரொஃபெஷனல் கொரியரின் அலட்சியத்தைக் குறித்து எழுதி இருக்கிறேன். இருந்தாலும் அனைத்து பொறுப்பற்ற நிறுவனங்களுக்கும் நல்லபெயர் வாங்கித்தந்துவிடும் இந்த DTDC -Desk to Desk courier and cargo என்கிற நிறுவனம்.

ஆகஸ்டில் சரணுக்கு ஒருசில பொருட்கள் தேவையாக இருந்ததால் இந்த நிறுவனத்தை அணுகினேன். ’’எல்லாம் அனுப்பிடலாம் கொண்டு வாங்க’’ என்றார்கள். ஆகஸ்ட் 6ம் தேதி ’’ஓனர்’’ என்று சொல்லி எனக்குத்தரப்பட்ட ஒரு அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு ………’’அங்கே வந்து பேக் செய்யவேண்டுமா?’’….. எனக்கேட்டேன், …’’என்ன என்ன பொருட்கள் இருக்கிறது என்று ஒரு பட்டியலுடன் நீங்களே பேக் பண்ணி கொண்டு வந்துவிடுங்கள்’’…. என்றார்.

சரணுக்கு வேண்டியவற்றை கடைகடையாக அலைந்து வாங்கி ஒழுங்காகப் பேக்பண்ணி சுமார் 15 ஆயிரம் மதிப்புள்ள முறையான பிராண்டட் பொருட்களை அழகாக அடுக்கி கல்லூரியிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கும் அந்தக் கண்ணாடிச் சுவர்களும் வேலையாட்களும் ஒரு வரவேற்பாளினியும் இருந்த அலுவலகத்துக்கு ஆகஸ்ட் 7 அன்று போனேன். உள்ளே இருப்பவற்றின் பெயர் அளவுபோன்றவைகள் இருந்த பட்டியலையும் ஆதார் நகலையும் அந்த ரிஷப்ஷன் பெண் வாங்கிக்கொண்டாள்.

பார்சலை எடைபார்த்துவிட்டு 8450 ரூபாய் கேட்டாள், 5-கிலோவுக்கு மேல் இருந்தால் 10 கிலோவுக்கானதுதான் தொகை செலுத்தவேண்டும் என்றாள், சரி என்று ஜிபே செய்து விட்டு பார்சலையும் கொடுத்தேன். ரசீது கேட்டபோது வாட்ஸேப்பில் வரும் என்றாள் அந்தப்பெண்.

மறுநாள் 8 ம் தேதி ரசீது வரவில்லை. காத்திருந்துவிட்டு 9 அன்று அழைத்துக்கேட்டபோது பார்சலே ஜெர்மனிக்கு போய்ச் சேர்ந்துவிட்டது என்றாள் அதே வரவேற்பாளினி. சரி இனி எதுக்கு ரசீது என்று நானும் விட்டுவிட்டேன். சரணைக் கேட்டபோது ட்ராக் செய்து பார்த்துவிட்டு அருகிலிருக்கும் ஒருநகருக்கு வந்துவிட்டதாகவும் தன்னை இன்னும் யாரும் அழைக்கவில்லை என்றும் சொன்னான்

1 வாரமானதும் மீண்டும் ’’வந்துச்சாடா’’ என்று கேட்டேன், …’’இப்படி லேட் ஆகாது என்னன்னு தெரியலை என்றவன் மீண்டும் சரிபார்த்து குவாரண்டைனில் இருக்கு போலிருக்கு’’… என்றான். நான் மீண்டும் அந்த ஓனருக்கு அழைத்துக்கேட்டேன் …’’போயிரும் மேம் இன்னிக்கோ நாளைக்கோ’’… என்றார்.

ஆனால் செப்டம்பர் முழுவதும் இப்படியே போன் பண்ணிக்கேட்பதும் அவர்கள் எதோ சொல்லுவதுமாகவே கழிந்தது. பார்சலில் இருந்தது எல்லாம் உணவுப் பொருட்கள் வீணாகிவிடும் என்றும் எனக்குப் பதட்டமாக இருந்தது.

பிறகு அவர்கள் ஒருநாள் அழைத்து என் இமெயில் வாங்க மறந்து விட்டதால் அதை கொடுக்கச்சொன்னார்கள் கொடுத்தேன். பின்னர் 10 நாட்கள் அமைதி. செப்டம்பரே முடியும் தருவாயில் சரண் அழைத்து …’’அந்தப் பார்சல் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாக தகவல் இருக்கு, என்னையும் யாரும அழைக்கவில்லை, உன்னை அழைத்தார்களா?…’’ என்றான். இல்லை என்றேன்.

பொள்ளாச்சி DTDC கொரியர் அலுவலகத்துக்குப் போனில் கேட்டபோது அவர்களுக்குப் பார்சலைக்குறித்து எதுவுமே தெரியவில்லை. அப்படியா?திருப்பி அனுப்பிட்டாங்களா? என்று என்னைக் கேட்டார்கள். பிற்பாடு பட்டியலிட்டீர்களா? ஆதார் கொடுத்தீர்களா என்று ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டு என்னை வெறுப்பேற்றினார்கள். பின்னர் ’’அப்படியெல்லாம் திருப்பி அனுப்ப மாட்டாங்க நாங்கள் பார்க்கிறோம்’’ என்றார்கள்.

அடுத்த வாரம் கடும் கோபத்தில் அந்த ஓனருக்கு பலமுறை அழைத்தேன் அவர் எடுக்கவேஇல்லை . அந்த அலுவலகதுக்கு நேரில் சென்றேன். அதே வரவேற்பாளினி மட்டும் இருந்தாள். ஓனர் எங்கே என்றேன். போன் பண்ணுங்க என்றாள், அவர் எடுக்கலை நீ கூப்பிடு என்றேன். அவள் அவருக்கு போன் பண்ணினதும் எடுத்தார் ஓனர், எனக்கு போனைக் கொடுத்தாள் …’’ நான் இத்தனை நேரம் போன் பண்ணினேன் எடுக்கவேயில்லையே நீங்க என்றேன், அவர் நான் பேசுவது கேட்காதது போல் ’’ஹலோ ஹல்லோ’’ என்று மீண்டும் மீண்டும் சொல்லிகொண்டிருந்தார். கடுப்பாகி சத்தமாக ‘’ஏன் நான் அத்தனை முறை கூப்பிட்டு எடுக்கவில்லை ஆனால் இப்போ ரிஷப்ஷனில் கூப்பிட்டா மட்டும் எடுக்கறீங்க ,பார்சலை திருப்பி அனுப்பினது கூட தெரியலையா உங்களுக்கு ?’’… என்று கேட்டேன்

பதிலுக்கு அந்த ஒனர் ’’… கூப்பிட்டீங்கன்னா உடனே எடுக்கனுமா என்ன? கார் ஓட்டிக்கொண்டிருக்கையில் யார் கூப்பிட்டாலும் எடுக்கும் வழக்கம் இல்லை…’’ என்றார்.

கோபம் எனக்குக் கட்டுக்கடங்காமல் போனது, ஒரு அலுவலகம் வைத்து நடத்தும் ஒருவர் வாடிக்கையாளரிடம் பேசும்முறைஅல்ல அது. கோபமாக போனை அணைக்காமலேயே அந்தப்பெண்ணின் மேசையில் வைத்துவிட்டு வந்துவிட்டேன்

அதன்பிறது அந்தத் திருவாளர் ஓனர் என்னை அழைத்து …’’பணம் கட்டினீங்கன்னா என்னவேணா செய்வீங்களா? என்றும் பார்சலை அப்படி ட்ராக் செய்து சொல்லிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் போனை அப்படியெல்லாம் கோபமாக மேசையில் வைக்கக்கூடாது என்றும் அதட்டினார். பதிலுக்கு அவரைப்போன்ற நபர்களிடம் அப்படிக் கீழே இறங்கிப்பேசும் வழக்கமில்லை என்பதால் நான் இதைக்குறித்து புகார் அளிக்கப்போகிறேன் என்று மட்டும் சொல்லி போனை கட் செய்தேன். அதன்பிறகு வேறொரு பெண் கோவையிலிருந்து அழைத்து அதிலிருக்கும் ஒரு பாக்கெட்டின் அளவு குறித்த சந்தேகத்தால் அது திருப்பி அனுப்பப்பட்டது என்றும் என் இமெயில் இல்லாததால் அதை சரிபார்க்க முடியாமலானதாகவும் சொன்னாள். நான் அவர்கள் என்னிடம் இமெயில் கேட்டு நான் அனுப்பிய தகவலை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பினேன் பிறகு மரண அமைதி.

நான் பெங்களூர் தலைமை அலுவலகத்துக்கு பல புகார் மெயில் அனுப்பியும் எந்தப் பலனும் இல்லை. ரசீது இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்றார்கள். ரசீதை மீண்டும் கேட்டு வாங்கி அனுப்பினேன். ஒரு பலனும் இல்லை, ஒரு பதில் கூட இல்லை.

நேற்று நவம்பர் 1ம் தேதி அந்தப்பார்சலை கோவையில் இருந்து பணம்கட்டி நான் மீண்டும் திருப்பி எடுத்துகொள்ளும்படி தகவல் வாட்ஸேப்பில் வந்தது.

நான் பதிலளிக்கவில்லை , சரணே இப்போது இந்தியாவுக்கு வந்துவிட்டான் அதை மீண்டும் செலவு செய்து திருப்பி எடுத்துகொள்ளும் எண்ணமும் இல்லை.

இந்தியா முழுக்க இப்படி பொறுப்பற்றவர்களால்தான் பல பெயர்பெற்ற நிறுவனங்கள் இயங்குகின்றன. பார்சலை வாங்கும்போதே என்ன என்ன தேவை எனக்கேட்டு வாங்கத்தெரியவில்லை, பார்சல் எங்கு இருக்கிறது என்று ட்ராக் செய்யவும் தெரியாமல் வாடிக்கையாளாரிடம் மரியாதையாக பேசவும் தெரியமல் பொறுப்பாக பார்சல் போய்ச்சேர்ந்ததை உறுதிப்படுத்தவும் தெரியாமல் இவர்கள் இப்படி அலுவலகம் எல்லாம் வைத்துகொண்டு இருப்பதை நினைத்தால்….

வாழ்கையில் இந்த DTDC பக்கமே இனி போகமாட்டேன். செலவுசெய்து வாங்கியவை சரணுக்குப் போய்ச்சேரவில்லை, தேவையில்லாமல் அந்த ’ஒனர்’ என்னை மரியாதைக்குறைச்சலாக பேசியதைக் கேட்டுக்கொள்ள வேண்டி வந்தது, அந்தப்பொருட்கள் எல்லாம் வீணாகியது எல்லாவற்றையும் விட அந்தப்பார்சலில் ஒரு வெள்ளை அட்டையில் அழகாக ஒரு இதயம் வரைந்து அன்பு என எழுதி அனுப்பி இருந்தேன். யாராலும் கவனிக்கப்படாமல் போன அந்த அன்பையும் நினைத்துத்தான் இப்போது மன உளைச்சல்.

பொறுப்பற்றவர்களுக்கு மத்தியில் வாழ்வதும், மூடர்களை அன்றாடம் எதிர்கொள்வதும்தான் இப்போதிருக்கும் பெரும் பிரச்சனைகள். 25 ஆயிரம் ரூபாய் யாரோ பிக்பாக்கட் அடித்துவிட்டார்கள் திருட்டுக்கொடுத்துவிட்டேன் என்று நினைத்துக்கொள்கிறேன்.

வெயில் என்பேன்!

நல்ல வெயில் இப்போதெல்லாம். இப்படி புரட்டாசியில் வெயிலடித்ததே இல்லை. பாம்புகள் வீட்டைச்சுற்றிலும் மண்ணுக்குள் இருக்க முடியாமல் வெளியே திரிகின்றன.

எப்போதும் தோட்டத்துக்குள்ளிருக்கும் அந்த பெரிய மஞ்சள் சாரை இன்று தண்ணீர்த்தொட்டிக்கருகில் தென்பட்டு திடுக்கிடவைத்தது. அதன் முழங்கை பருமனும் நெகுநெகுவென்னும் தேகமும் பொன்மஞ்சள் நிறமும் அதன் விரைவும் , நமக்குக் கண்ணில் அதிகம்படும் உடல்வடிவங்களிலிருந்து வெகுவாக அந்நியப்பட்டிருக்கும் உடல்வடிவமுமாக என்னதான் அவற்றைக்குறித்த அறிதலிருந்தாலும் திடீரெனப் பார்க்கையில் மனம் திடுக்கிட்டுவிடுகிறது. (இப்படியே என்னைக்குறித்து அந்தச்சாரையும் ’’இந்தம்மாவை தினம் பார்க்கிறோம் ஆனாலும் இன்னிக்கு நீலக்கலர் புடவையில் திடீர்னு குறுக்கே வந்ததும் பகீர்னுச்சு’’ என்று நினைத்திருக்கக்கூடும்)

பின்னர் ஆயிரங்களின் அன்னை திமுதிமுவென வளர்ந்திருக்கும் தொட்டியில் ஒரு க்க்க்க்குட்ட்ட்டிப் பச்சைக்கொடிப்பாம்பு. அதன் பெற்றோர்களையும் நானறிவேன். நம் வீட்டில்தான் ஜாகை. ஒருமுறை அவையிரண்டும் காதலின்பத்தில் மெய்மறந்து தென்னை மரத்திலிருந்து தொப் எனக் கீழே விழுந்து ஸ்தம்பித்து பின்னர் சுதாரித்துக்கொண்டு விரைந்தோடி இலைதழைப்புக்குள் மறைந்தன. அவற்றின்சாயல் (? ) இந்தகுட்டியில் எனக்குத் தெரிந்தது. என்னைபார்த்தும் பயப்படாமல் அங்கேயே அதன் குட்டியூண்டு நாக்கை நீட்டிக்கொண்டு இருந்தது.

நான் அதைப் புகைப்படம் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். அதன் அம்மாவிடம் அதற்கு இன்று நன்றாகக் கிடைத்திருக்கும். அபாயகரமான, கண்ணில் பட்டால் உயிராபத்தை உண்டாக்கும் மனிதர்களைக் கண்டால் ஓடிஒளிந்து கொள்ளும்படி அதற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தும் அது இப்படி கவனக்குறைவாக இருந்ததற்கு இன்னிக்கு உண்டு,

தென்னைமர ஓலைகள் பெருஞ்சத்தத்துடன் அவ்வப்போது விழுகின்றன, குரும்பைகளும் வெயில் தாங்காமல் உதிர்ந்து கொண்டிருக்கின்றன. மழை வருவதுபோல இடியெல்லாம் இடித்து, போக்குக்காட்டிவிட்டு ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.

காலை 9 மணி வெயிலில் ’அக்கா அக்கா’வென ஒரு தீனக்குரல் பின்வாசல் கதவுக்குவெளியே ஒரு கருத்த, ஏறு வெயிலில் தளர்ந்த 23/24 வயதிருக்கும் ஒருத்தி நின்றாள். கழுத்தில் எண்ணெய்ப் பிசுக்ககேறிய சரடு மட்டும் , கைகளில் கண்ணாடி வளை. அழுக்குச்சுரிதார். உடன் ஒரு 3 வயதுகூட நிரம்பி இருக்காத சிறுமகன். இன்னும் மொட்டை அடிக்கவில்லைபோல முடி பிடரிவரை நீண்டிருந்தது, உச்சியில் ஒரு குடுமி.

கையில் இருந்த வயர்க்கூடையில் பிளாஸ்டிக் பாட்டில்களில் வண்ணத்திரவங்கள் இருந்தன. ’’அக்கா மகளிர் சுய உதவிக்குழுவிலிருந்து வரேங்க்கா, இது டைல்ஸ் வாஷ்பேசின் கறையெல்லாம் சுத்தமா எடுத்துரும் நான் வேணா எடுத்துக்காமிக்கறேன் அதுக்கு காசுவேண்டாம் பார்த்துட்டு பிடிச்சா வாங்குங்கக்கா’’ என்றாள்.

நான் அப்படியான பொருட்களை வாங்குவதில்லை. எனவே ’’வேண்டாம்மா’’ என்று சொல்லிவிட்டென் எனினும் அந்த வெயிலில் தலைக்கு வைக்கப்பட்டிருந்த எண்ணெய் முகத்தில் வழிய ஒரு பழைய சிறு செருப்புப்போட்டுக்கொண்டிருந்த, அம்மாவுடன் இன்று நாள் முழுவதும்,தெருத்தெருவாக அலையவிருக்கிற கூட நின்ற அந்தக்குழந்தையைப்பார்த்து மனம் கலங்கியது.

‘’ எவ்வளவும்மா’’? என்று கேட்டேன், அவள் 120 ரூபாய்க்கா என்று சொல்லச் சொல்லவே அந்தக் குழந்தையும், கேட்டுக்கேட்டுப் பழகி விட்டிருக்கும் போல மழலையில் ’’நூயிருபது’’ என்று மிழற்றியது. கண்ணீரை மறைத்தபடி அவசரமாக ஒரு பாட்டிலை வாங்கிக்கொண்டேன். மீண்டும் பணம் கொடுக்கச்செல்லுகையில் அந்தக்குழந்தையை கவனமாகப் பார்க்காமலிருந்தேன். சீக்கிரமே அவனை ஸ்கூலுக்கு கொண்டு விடும் காலத்தில் அந்தகுழந்தை இப்படி அலைய வேண்டி இருக்காது என்று என் மனதை நானே சமாதானம் செய்துகொண்டேன்.

வாழ்வென்னும் வதை.

அமேஸானில் நான் ஆர்டர் செய்திருந்த ஒன்று வந்திருப்பதாக ஒரு அழைப்பு வந்தது. ’’நான் வீட்டிலிருக்கிறேன் வீடு தெரியுமா’’வெனக் கேட்க ’’தெரியுங்க்கா’’ என்று பதில் வந்தது.

கொஞ்ச நேரத்தில் மீண்டும் அழைப்பு நான் எடுக்க ’’அக்கா வாசலில் நிற்கிறேன்’’ என்றான் அவன். போனேன் வியர்த்து வழிந்தபடி பைக்கிலிருந்து இறங்கி கையிடுக்கில் ஹெல்மெட்டை வைத்துக்கொண்டு என்னிடம் பார்சலைக் கொடுத்தான் நன்றி சொல்லிவிட்டு நான் திரும்ப எத்தனிக்கையில் ’’அக்கா ஒன்னு கேட்டா கோவிச்சுக்க மாட்டீங்கதானே’’? என்றான்.

திரும்பி நின்று நேராக அவனைப்பார்த்து ’’இல்லை சொல்லு’’ என்றேன்.

’’உங்கபோனில் வச்சிருக்கற அந்தப்பாட்டை நான் இதுவரைக்கும் கேட்டதே இல்லைக்கா, ரொம்ப ரொம்ப நல்லா இருந்துது அதான் மறுபடியும் கூப்பிட்டேன்’’ என்றான்

புன்னைகைத்து ‘’அப்படியா அந்தப் பொன் என்பேன் எனக்கு ரொம்பப்பிடிச்ச பாட்டு. நான் பிறக்கறதுக்கு முன்னாடி வந்த பாட்டு அது, இதேதான் ரொம்ப வருஷமா வச்சிருக்கேன்’’ என்றேன். மறுபடியும் தயங்கி ’’அக்கா, அது எந்தப்படத்திலன்னு சொன்னீங்கன்னா நானும் அதையே வச்சுக்குவேன்’’ என்றான்.

’’போலீஸ்காரன் மகள்’’ என்று சொல்லிவிட்டுத் திரும்பினேன் பின்னாலிருந்து ’’அக்கா ரொம்ப நல்லா இருக்கு பாட்டு’’ என்று குரல் கேட்டது. தேங்ஸ் என்றேன்

வெயில் முகத்தில் அறைந்தது.

புரோட்டா!

சமீபத்தில் வெண்ணிலாவும் நானுமாகக் கோவையில் ஷாப்பிங் சென்றிருந்தோம். சென்னை சில்க்ஸில் வெண்ணிலா எனக்கு top & bottom ஒன்றே போலிருக்கும் சில உடைகளை வாங்கித்தந்தார். இரவுடையைப் போலல்லாமல் பயண உடையென்று சொல்லும்படியானது அது. தளர்வாகவும் வசதியாகவும் இருந்தது.

அப்படியொரு உடையை நான் அப்போதுதான் முதன்முதலில் பார்க்கிறேன். தூரத்திலிருந்த வெண்ணிலா கடைச்சிப்பந்தியிடம் கோஹார்ட் என்று அந்த உடையைக்குறிப்பிட்டதாக எனக்குக் காதில் விழுந்தது. அல்லது அப்படி நான் நினைத்துக்கொண்டேன்.

இன்று அந்த உடையை அணிந்துகொண்டிருந்தேன். மகன்களுடன் வழக்கமாக அன்றாடம் வீடியோ அழைப்பில் பேசுவதால் அந்த உடையைச் சுட்டிக்காட்டி தருணிடம் ….’’இது கோஹார்ட் வெண்ணிலா அத்தை வாங்கிக்கொடுத்தது நல்லாருக்கா….’’என்றேன். கோபமாக …’’அதுக்குப்பேரு கோஹார்ட் இல்லை co-ord மேலும் கீழுமாக மேட்சிங்காக இருப்பதால் “coordinate set” என்பதுதான் கோஆர்ட்….’’ என்றுவிட்டு…’’ஒரு டீச்சரா இருந்துட்டு நீ இப்படி தப்பா சொல்லலாமா ….’’? என்று கோபித்துக்கொண்டான்.

அந்த உடையைப் பற்றி நான் வசிக்கும் இந்தக்குக்கிராமத்தில் இன்னும் பேசப்பட்டிருக்காததாலும் எனக்குப் பெண்பிள்ளைகள் இல்லாததாலும் அந்தத் தவறைச்செய்துவிட்டேன் என்றுசொல்லி திருத்திக்கொண்டேன். ….’’எது புதுசா கேள்விப்பட்டாலும் அதைச்சொல்லறதுக்கு முன்னாடி முழுக்க தெரிஞ்சுக்கனுமில்ல…’’ என்று மேலும் ஒரு சின்ன அறிவுரையும் கொடுத்தான், ஏற்றுக்கொண்டேன்.

தருண் மிக இளமையிலிருந்தே பொதுவான உச்சரிப்பிலும் பெயர்களைச் சரியாகச் சொல்வதிலும் கவனம் கொண்டவன்.

சரண் ப்ரிகேஜி சென்ற, தருண் இன்னும் பள்ளிக்குச் சென்றிருக்காத காலத்தில் அப்பாவின் வீட்டில் ஒருவருடகாலம் வரை தங்கி இருக்கவேண்டிய கஷ்டமான சூழல் இருந்தது.

அப்போது அந்த மாடிப்போர்ஷனின் குறுகிய முன் வாசல் வராண்டாவின் கம்பிஅழியை பிடித்தபடி நின்றுகொண்டு தெருவை எந்நேரமும் வேடிக்கை பார்ப்பான் தருண். மாலையில் அவனது அண்ணன் சரண் வழக்கமாக வரும் ’சிவா ஆட்டோ’வின் சத்தம் கேட்டதும் நின்ற இடத்திலேயே மகிழ்ச்சிக் கும்மாளமிடுவான். அவன் வந்ததும் அண்ணனுக்குக் காலிலிருந்து ஷூக்களை கழட்டுவதும், சாக்ஸை உருவுவதும், பேக்கில் இருப்பவற்றை எடுத்துவைப்பதுமாக ராமனுக்கு லஷ்மணன் செய்த பணிவிடைகளை எல்லாம் பொருளற்றதாக்கிவிடும் சேவைகளை மனமுவந்து செய்வான்.

அப்படியொரு நாள் கம்பியைப் பிடித்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். நானும் அவனைக் கண்கொத்திப்பாம்பு போல (அச்சச்சோ பாம்பு கண்ணைக்கொத்தாதுன்னு உனக்கு எத்தனை தரம் சொல்லி இருக்கேன்னு இதுக்கும் சண்டைக்கு வருவானே பாம்புகளின் காவலன்!) பார்த்தபடி முன்னறையில் கையெட்டினால் அவனைப் பிடித்துவிடும் தொலைவில் இருந்தேன்.

அப்போது பொள்ளாச்சியில் பரோட்டா, இட்லி மாவு, சந்தகையெல்லாம் தெருவிலேயே கொண்டு வந்து கூவிக் கூவி விற்கத்தொடங்கி இருந்தார்கள்.

….’’புரோட்டா, புரோட்டா, புரோட்டா…..’’ என்று ஒரு இளைஞன் சைக்கிளில் விற்றுக்கொண்டு வந்தான். தருண் ஒரு கையால் கம்பியை இறுகப்பற்றிக்கொண்டு மற்றொரு குட்டிக்கையை அசைத்து …..’’மாமா, மாமா, இங்கே வாங்க ….’’என்றழைத்தான்.

நான் ஒருவேளை பரோட்டா வாங்க நினைக்கிறானோ என்னவோ என்று கவனித்துக்கொண்டிருந்தேன். அந்த இளைஞன் மகிழ்ந்து போய் வாசலில் ஒரு காலை ஊன்றிச் சைக்கிளை நிறுத்தி …’’தங்கம் புரோட்டா வேணுமா…’’? என்றான்.

குட்டித்தருண் ….’’இல்லை வேண்டாம் ஆனா நீங்க விக்கறது புரோட்டா இல்லை பரோட்டா….’’ என்றான். உண்மையிலேயே அந்த இளைஞன் பேயறைந்தது போலாகி அங்கிருந்து நகர்ந்தான். பிறகு வெகுநேரத்துக்கு அவன் குரலே கேட்கவில்லை.

இப்படி பல மாமாக்களை அவன் காவு கொடுத்திருக்கிறான். நல்ல கூட்ட நெரிசலான ஒரு பேருந்துப்பயணத்தில் நானும் சரணும் நின்றுகொண்டிருக்கையில், ஒரு ’மாமா’ தருணை வாங்கி மடியில் வைத்துக்கொண்டார். கொஞ்ச தூரம் கூட பேருந்து நகர்ந்திருக்கவில்லை ,அவர் மடியில் உட்கர்ந்தபடியே என்னைப்பிறாண்டத்தொடங்கினான்.

…’’ என்னடா…’’ என்றதும் ….’’அம்மா இந்த மாமா வாயில என்னமோ நாத்தம் அடிக்குது,நான் இறங்கி உன் கூடவே நின்னுக்கறேன்…’’ என்றான். அந்த ‘’மது’’ மாமா வெட்கி அவனை இருக்கையில் அமர வைத்துவிட்டு அவசரமாக அடுத்த நிறுத்தத்தில் இறங்கிச்சென்றுவிட்டார்.

நண்பர்களுடன் ஒரு முறை வால்பாறை சென்றிருக்கையில் கம்யூனிஸ்ட் பச்சைச் செடியைக் காண்பித்து…’’ இது யுபடோரியம் ஓடொரேட்டம்…’’ என்று நான் சொல்லிக்கொண்டிருக்கையில். டேராடூனில் காட்டியல் படித்துக்கொண்டிருந்த தருண் இடைமறித்து …’’இதுக்கு குரோமோலீனா ஓடோரேட்டானு பேரு மாத்தினதுகூட உனக்குத் தெரியலையா….’’ என்றான்.

அம்மாவை மிஞ்சிய மகன்.

அவன் பிறந்தபோது ஜாதகம் எழுதியவர், தருண் எழுத்து அல்லது சொல் தொடர்பான் ஏதோ ஒரு, அப்போது அவரால் கணித்துச்சொல்ல முடியாத ஒரு துறையில் மிகப்பிரபலமானவனாக வருவான் என்றார். காட்டியல் படித்து வணிக மேலாண்மையும் படிக்கும், காட்டிலாகா அதிகாரியாக வரவிரும்பும் தருணின் எதிர்காலம் எதிலென்று தெரியவில்லை.

ஆனால் அவனைக் கல்யாணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணை முன்பே பார்ப்பேனாயானால்…’’ கொஞ்சம் நல்லா பேசிப்பழகிட்டு அப்புறமா வீட்டுக்கு வாம்மா மின்னல்…’’ என்று சொல்லிவிட வேண்டும். சொல்லின் செல்வனாயிற்றே கல்யாணம் செய்துகொள்ளப்போகிறவன்.

தருணுக்கு அன்பு!

ஒரு பைத்தியக்காரன்

பொள்ளாச்சியில் இட்லி மாவை அரைத்தும் சந்தகையை பிழிந்தும் விற்பது சாதாரணமாகவும் மிக அதிகமாகவும் நடக்கும் ஒரு குடிசைத்தொழில். விருந்தினர்கள் வருகையின்போது அங்கு சென்று பிழிந்த சந்தகையை சூடாக வாங்கிக்கொள்வேன்.

மிகச்சுத்தமாகவும் சோடா உப்பு சேர்க்காமலும் தயாரிப்பார்கள் என்பதால் வழக்கமாகவே அங்கு நல்ல கூட்டம் நெரியும். சமீபத்தில் அந்தக் கடைக்காரரின் மகளுக்கு 100 சவரன் நகை கொடுத்துத் திருமணம் செய்துகொடுத்தார்கள். அத்தனை ஓட்டம் கடையில்.

அறக்கல்வி வகுப்புகளுக்காக ஈரோடு மற்றும் திருப்பூருக்குச்சென்று விட்டுக் களைத்துப்போய் திரும்பிய அன்று இட்லி மாவு வாங்கச்சென்றபோது கூட்டத்தில் காத்திருக்கும்படியானது. கொஞ்சம் தள்ளி ஒருவர் கையில் கார்ச்சாவியுடன் நின்றிருந்தார். வெள்ளைக் குட்டிக்காரொன்றும் சாலையோரம் நின்றது. அவரின் கீழுதட்டில் கொஞ்சமாக வைத்திருந்த ஆட்டுத்தாடி அல்லது பிரெஞ்சுத்தாடி எப்போதும் ஏன் எனக்குக் கடும் ஒவ்வாமையை உருவாக்குகிறது என்பது ஆய்வுக்குரியது.

இப்போதுமட்டுமல்ல எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அந்த ஒவ்வாமை இருக்கிறது என் கல்லூரித்தோழி ஷர்லி சொல்லுவாள்

’’ டீ நான் ஒரு கிறுக்கனை, முடவனை, குருடனை ஏன் ஒரு தொழுநோயாளியைக்கூட கல்யாணம் பண்ணிக்குவேன் ஆனா சுருட்டைமுடிக்காரனைமட்டும் பண்ணிக்கவே மாட்டேன்’’ என்று. எனக்கும் அப்படித்தான் இந்தக் குறுந்தாடிக்கரர்களைக் குறித்த அபிப்பிராயமிருந்தது. (அச்சச்சோ எழுத வந்ததை விட்டுவிட்டு எங்கெங்கோ மனக்குதிரை பாய்கிறதே.)

இதோ வருகிறேன்.

அவர் மனைவியிடம் அலைபேசியில் அழைத்துப்பேசிக்கொண்டிருந்தார் . பேசிக்கொண்டிருந்தது மனைவியிடம் தான் என்பது ’பைத்தியக்காரி’ என்னும் அவரது விளியில் இருந்து தெரிந்துகொண்டது.

சந்தகை வாங்கட்டுமா என்று கேட்டிருக்கிறார். பதிலுக்கு மனைவி இரவில் வழக்கம் போல அவர் சாப்பிடும் சாதமும் வேண்டுமா என்று கேட்டதற்குத்தான் அந்தப்பேச்சு. அத்தனை கடுமையாக அத்தனை உரக்க அத்தனை கோபமாக.

’’பைத்தியக்காரி மாதிரி உளறக்கூடாது சந்தகை வேணுமான்னு கேட்டா ஆமா இல்லைன்னு மட்டும்தான் சொல்லனும் நைட் சாப்பாடு வேணுமான்னெல்லாம் தேவையில்லாம பேசக்கூடாது’’ என்று கத்திக்கொண்டிருந்தார். காரெல்லாம் வைத்திருக்கிற, (குறுந்தாடிகூட) அவர் வெறும் 40 ரூபா சந்தகைக்காகப் பொது இடத்தில் எப்படி அத்தனை தரம் தாழ்ந்து நடந்துகொள்ளமுடிகிறது?

இதுவே அவருக்கு கல்யாணம் நிச்சயமான போதோ அல்லது கல்யாணமாகி கொஞ்ச நாளிலோ நடந்திருக்காது. சில வருடங்களானபின்னர் என்ன செய்தாலும் எத்தனை அநீதி இழைத்தாலும் எப்படி தாழ்வாக நடத்தினாலும் மனைவி வீட்டையோ மணவுறவையோ விட்டுவிட்டு போக வாய்ப்பே இல்லை அவள் உணவுக்கும் உடைக்கும் மற்ற எல்லவற்றிற்கும் முழுக்க முழுக்க தன்னைத்தான் சார்ந்திருக்கிறாள் அவளை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்பதை தெள்ளத்தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரே இதுவெல்லாம் தொடங்குகிறது.

இப்படித்தான் இங்கு லட்சக்கணக்கான குடும்பங்கள் ஒரே கூரையின் கீழ் வாழ்கிறார்கள். பரஸ்பர புரிதலும் மரியாதையும் அன்பும் காதலும் கத்தரிக்காயுமெல்லாம் இங்கு இல்லவே இல்லை. இதைப்பார்த்து வளரும் ஆண் பிள்ளைகள் அப்பாவைப்போலவே அம்மாவை நடத்தலாம் என்பதை கற்றுக்கொள்கிறார்கள் அவர்களின் மனைவியரையும் அப்படியேதான் நடத்த வேண்டும் என்பது அவ்ர்களின் ஆழ்மனதிலும் பதிந்து விடுகிறது.

பெண்பிள்ளைகளும் இதே கீழ்மை அவர்களுக்கும் பின்னர் நடக்கையில் அது எதிர்க்கப்படவேண்டிய கண்டிக்கப்படவேண்டியதொன்று என்பதைக் கூட அறியாமல் வழி வழியாக அதை இயல்பாக ஏற்றுக்கொண்டு அதே வாழ்க்கையிலுழன்று மாய்கிறார்கள். ஏனென்றால் அவர்களின் அம்மாவும் அத்தையும் அப்பத்தாவும் அக்காவும் அப்படியே வாழ்ந்ததை அவர்கள் பார்த்து வளர்ந்திருந்திருந்திருப்பார்கள்.

அந்த தாடிக்காகவும் அந்த நடத்தைக்காவும் பளாரென ஒரு அறையை மானசீகமாகக்கொடுத்துவிட்டு வந்தேன்.வேடிக்கை என்னவென்றால் மும்முரமாக மனைவியின் மீதான தன் ஆணவத்தைக்காட்டிக் கொண்டிருந்தவர் சந்தகை அப்போதுதான் அடுப்பில் இருந்தது அது தயாராக இன்னும் 1மணி நேரமாகும் என்று சொல்லபட்டதை காதிலேயே கேட்டுக்கொள்ளவில்லை.

லோகா!

இல்லை இல்லை விமர்சனக்கட்டுரை இல்லை.

துல்கரின் லோகாவை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்க்கமுடியவில்லை. பொள்ளாச்சியில் வெளியானதாகக்கூட தகவலில்லை. கோவைக்குத் தனியே சென்று பார்ப்பதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமே இல்லை. ஆனால் நீலியின் கதை என்றதும் அதைக்காண கொதியாகிவிட்டிருக்கிறது. ஜெ வின் பல கதைகளில் ,அவருடைய அம்மாவைபற்றிய பதிவுகளில் எல்லாம் வரும் நீலிகள் எனக்கு மிகவும் பரிச்சயமானவர்கள் பிரியத்துக்குரியவர்கள்.

இந்த வேடசெந்தூர் வீட்டின் பல மரங்களில் சமையலைறைக்கு வெளியே சமையலறை ஜன்னலிலிருந்து பார்த்தால் தெரிவது போலச் செண்பக மரமொன்றும் நிற்கிறது.

பலாச்சுளைகள் போலிருக்கும் அதன் பொன்னிற மலர்களை பறித்துச்சூடிக்கொண்ட காலமிருந்தது ,இப்போது அதன் உச்சி வெகு உயரத்துக்குபோய்விட்டதால் மலர்களைப்பார்க்கக்கூட முடிவதில்லை. ஆனால் என் இறப்பிற்குப்பிறகு அதில் தான் செண்பகமரத்து யட்சியாக வாழ(?) உத்தேசம்.

தருண் ‘’ இருந்துக்கோ ஆனா இறங்கி வந்து பயப்படுத்தக்கூடாது ’’ என்றிருக்கிறான்.

எனவே இந்த யட்சிக் கதையைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். சரண் கல்யாணியின் படங்களைப் பிரத்யேகக் காரணமொன்றினால் தவறவிடுவதில்லை. எனவே ஜெர்மெனியில் வெளியானதுமே அதைப்பார்த்துவிட்டு விடீயோ அழைப்பில் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தான். தியேட்டரில் அத்தனைசிரிப்பொலியாம்.

’’கல்யாணி வரும் காட்சிகளிலெல்லாம் யட்சிப்பாலைமரமும் அதன் மலர்களும் காட்டினாங்க யாரெல்லாம் கவனிச்சாங்களோ?’’ என்றான். மேலும் மகிழ்ச்சியடைந்தேன்.யட்சிப்பாலை என்னும் அல்ஸ்டோனியா ஸ்காலாரிஸ் என் பிரிய மரங்களில் ஒன்று அதைச் சரண் திரையில் கவனித்தது அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது. அம்மையுட மோன். யட்சிகள் அந்த மரத்தில் வாழ்வதைப்பற்றி நிறையப்பேசி இருக்கிறோம் நாங்கள்.

முன்பெல்லாம் இந்தியப்பல்கலைக்கழகங்களில் இதன் ஸ்காலாரிஸ் என்னும் சிற்றினப்பெயரே அறிவுடையவர்களுக்கான மரம் என்னும் பொருளில் வைக்கப்பட்டிருந்ததால் பட்டமளிப்பின்போது யட்சிப்பாலை என்னும் இந்த ஏழிலைப்பாலையின் சிறு கிளையொன்றையும் உடனளிப்பார்களாம்.

முனைவர் பட்ட ஆய்வின் துவக்க காலத்தில் தனி அழைப்பின் பேரில்புது தில்லியின் வன மற்றும் சூழல் அமைச்சகத்துக்குள்ளே அதன் இயக்குனரான திரு அட்ரியைக்காண 25 வயது இளம்பெண்ணாகத் தயக்கத்துடன் நுழைந்து, அந்தப்பிரம்மாண்டமான கட்டிடங்களுக்குள்ளே நீண்ட நடைபாதையின் இருபுறமும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு மூச்சடைக்கும்படியான நெடியுடன், கொத்துக்கொத்தாக மலர்களுடன் நின்றிருந்த ஏழிலைப்பாலைகளை முதன்முதலில் பார்த்ததை நினைத்துக்கொண்டேன். லோகா என்று படத்தின் பெயர் இருப்பதிலும் கூடுதல் மகிழ்ச்சி

சண்டே சொல்லு!

“Having too much on my plate”என்று சொல்லப்படும் நிலையில் இருக்கிறேன். பாதியிலிருக்கும் அக்டோபரில் முடித்தாக வேண்டிய ஒரு மொழியாக்கம், தமிழக மாவட்டங்களின் flora வை ஆவணப்படுத்தும் அரசுவேலை,வெளியாகிக்கொண்டிருக்கும் உணவு குறித்த தொடருக்கான கட்டுரைகளை எழுதுவது, அதற்கென வாசிப்பதும், தயாரிப்பதும்,காத்திருக்கும் ஒரு நூலறிமுகம், கல்லூரி வேலை, வீட்டு பராமரிப்பு, ஓணவெயில் காலமாதலால் தோட்டத்துக்கு நீரூற்றுதல், சமையல், பயணம், கடைவீதி ,விழாக்கள். இந்த வருட முடிவிற்குள் முடித்தாகவேண்டிய குடும்பச் சிக்கலொன்று,அதன்பொருட்டு நடக்கும் நாடகங்களை எதிர்கொள்வதும் சகித்துக்கொள்வதும், அடுத்து நடக்கவிருக்கும் அறக்கல்விக்கான வகுப்புக்களுக்கு (அரைத்த மாவையே அரைக்கக்கூடாது என்பதற்காக) கூடுதலான தகவல்களைச் சேகரிப்பது, என்று கண்ணைக்கட்டுகிறது.

நேற்று கல்லூரியில் தேர்வுப்பணி முடித்து அங்கிருந்து யான்அறக்கட்டளை துவங்கவிருக்கும் ஒரு முக்கிய நிகழ்சிக்கான முன்தயாரிப்புப் பேச்சுவார்த்தைக்கென கோவை சென்று விட்டு மாலை வீடு திரும்பி இரவு வெகுநேரம் எழுதிக்கொண்டிருந்து விட்டு பின்னிரவில்தான் உறங்கினேன்.

காலை 5 மணிக்கு வழக்கம்போல கண்ணைப்பிரிக்க முடியவில்லை. பள்ளியில் சேர்ந்த புதிதில் குட்டிச்சைது சொல்வதைப்போல இன்று வியாழன் என்று நினைவு வந்ததும் நானே மனதிற்குள் சண்டே சொல்லு சண்டே சொல்லு என அடம் பிடித்து ,உடனிருந்து தேற்ற யாருமில்லாததால் நானே சமாதானமாகி எழுந்து புறப்பட்டு, இதோ கல்லூரியில் இருக்கிறேன்.

இன்னும் இரண்டு நாட்களில் சண்டே சொல்லலாம்!

பறந்து போ!

இன்று ott யில் பறந்துபோ வெளியாகி இருந்தது. கடும் பணிச்சுமையில் இருக்கிறேன், கல்லூரியில் முதல் அகமதிப்பீட்டுக்கான தேர்வுகள் நெருங்குவதால் பாடங்களை முடிக்க வேண்டும், இப்போதும் மாணவர் சேர்க்கை நடக்கிறது,அதைப் பார்க்கவேண்டும். இந்தத்துறை சுவாரஸ்யமானதுதான் என்பதை தெரிவிக்க வாரா வாரம் ஏதேனும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது,வழக்கமான கட்டுரைகள் எழுதிச் சமயத்துக்கு அனுப்புவது, என்னவானாலும் தவறாமல் வாசிப்பது, புதிதாக ஏற்றுக்கொண்டிருக்கும் அரசுசார்ந்த எழுத்துப் பணி ஒன்று, வீட்டுவேலை, தோட்டவேலை, விளக்கேற்றுவது என்று அடுத்தடுத்த வேலைகளின் கவனத்தில். இரவு 11மணிக்கும் உறக்கம் வராமல் மனம் விழித்துக்கொண்டிருக்கிறது. நானே வலிய இணையத் தொடர்பை நிறுத்திவிட்டு உறங்கச்செல்கிறேன்.

இத்தனை இருந்தும் அகரமுதல்வன் உள்ளிட்ட பல நண்பர்கள் சிலாகித்திருந்ததால் இந்தப்படத்தை கொஞ்சநேரம் பார்க்க நினைத்தேன். ஆனால் துவங்கி கொஞ்ச நேரத்திலேயே என்னால் தொடரமுடியாமல் பழைய நினைவுகளின் எடையில் மூச்சுத்திணறயது.

படத்தை நிறுத்திவிட்டு வாசலில் துளசி மாடத்தில் காற்றில் துடிக்கும் தீபச்சுடரை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அந்தக் குட்டிப்பையனை வீட்டைப்பூட்டி உள்ளே விட்டுவிட்டு அம்மாவும் அப்பாவும் வேலைக்குச்செல்லும் காட்சி எங்கள் வாழ்வில் நடந்ததை ஒப்பிட்டால் உண்மையில் வீரியம் குறைவானது. சரணையும் தருணையும் அப்படி எத்தனயோ காலம் வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டுப் போயிருக்கிறேன். பாவம்.

எல்லோராலும் கைவிடப்பட்டிருந்த நிர்க்கதியான காலமது.(இப்போதும் எங்கள் உலகில் நாங்கள் மூவர் மட்டும் தான் ஆனால் மகிழ்ந்திருக்கிறோம்) கல்லூரி விடுமுறைகளும் பள்ளி விடுமுறைகளும் வேறு வேறு மாதங்களில் இருக்குமென்பதால் அவர்கள் இருவரையும் வீட்டில் விட்டுவிட்டு கம்பி அழிபோட்ட வெளிகேட்டைப்பூட்டி சாவியை அவசரத்தேவைக்காக அவர்களிடமே கொடுத்துவிட்டு கல்லூரிக்குப்போவேன் .

வீட்டில் ஒரு லேண்ட் லைன் அப்போது இருந்தது வகுப்பு முடிந்ததும் அடித்துப்பிடித்து போன் செய்து இருவரிடமும் பேசிச் சண்டைகளைச் சமரசம் செய்து கொஞ்சி, கெஞ்சி அம்மா சீக்கிரமே வீடு வந்துவிடும் சத்தியங்களை அளித்து மாலை ஆட்டோவில் வந்திறங்கி ஓட்டமாக ஓடி வருவேன். சமயங்களில் சரணோ தருணோ அழைத்து ’’அம்மா எப்போ வருவே போரடிக்குது’’ என்பார்கள். கல்லூரியில் மாணவர்கள் முன்னிலையில் அழக்கூடாது என்பதற்காக மிகுந்த கஷ்டப்படவேண்டியிருக்கும் அப்போதெல்லாம்

மதிய உணவை விரிவாகச்சமைத்து கூடம் முழுவதும் நாளிதழ்களைப் பரப்பி அதில் தட்டு டம்ளரிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துவைத்துவிட்டுப் போயிருப்பேன். இருவருமாகச் சாப்பிட்டுவிட்டு குப்பையாகப் போட்டுவைத்திருப்பார்கள். மாலை அவற்றை அப்படியே சுற்றி எடுத்துத் தோட்டத்தில் இருக்கும் ஒரு ட்ரம்மில் நெருப்பு வைத்துவிட்டு வழக்கமான வீட்டுவேலைகளை மூவருமாகச் செய்வோம். இன்று இருவருமே கோலமிடுவதிலிருந்து சமைப்பதுவரை அதனால்தான் இஷ்டமாகச்செய்கிறார்கள்.

முக்கியமான அறுவை சிகிச்சைபிற்பாடு செய்யவேண்டி இருந்ததால் என் உடல்நிலையும் சரியில்லாமல் இருந்த அந்தகாலத்தில் எனக்குள் எதிர்மறை நினைவுகள் ஏதும் வந்துவிடக்கூடது என்பதில் மிகக்கவனமாக இருந்திருக்கிறேன். கூடவே மகன்களை எப்படியும் வளர்த்து ஆளாக்கவேண்டும் என்னும் உறுதியும் கொண்டிருந்தேன்.

வீட்டில் தொலைக்காட்சி இணைப்பு இல்லை எனவே எங்களுக்குள் பேசிக்கொள்ள ஏராளமாக நேரம் கிடைத்தது. மாலையே இரவுணவை சமைத்து வைத்துவிட்டு மூவருமாகத் தெருமுனையில் புளிய மரத்தடியில் நின்றுகொள்வோம். இருட்டில் பளிச்சிடும் முகப்பு விளக்குகளோடு விரையும் வாகனங்களைப் பார்த்துக்கொண்டு யாருக்கு கார், யாருக்கு லாரி, யாருக்கு பஸ் என்னும் விளையாட்டு விளையாடுவோம்

நன்றாக இருட்டியபின்னர் வீடு திரும்புகையில் யாருடைய வாகனம் அதிக எண்ணிக்கையில் கடந்துசென்றதோ அவர் வெற்றியாளர் என்பதை நாங்களே அறிவித்துக்கொண்டு வெற்றிபெற்றவர்களுடன் மற்ற இருவரும் சேர்ந்து இனிப்பை எடுத்துக்கொள்வோம். எப்போதும் இனிப்பு இருக்கும் வீட்டில்.

மீண்டும் கதை சொல்லிக்கொண்டோ பாடல்கள் கேட்டுக்கொண்டோ மூவருமாக எதாவது பாடலைப்பாடிக்கொண்டோ சாப்பிடுவோம். இரவு வெகுநெரம் என் இரண்டு பக்கமும் படுத்திருக்கும் இருவருக்கும் தட்டிக்கொடுத்து கதைகள் சொல்லி உறங்க வைத்துவிட்டு பின்னர் எழுந்துவந்து கூடத்தில் இருந்து கல்லூரி வேலைகளைப்பார்ப்பேன். நிறைந்த இளமையில் வெறும் அன்னையாக மட்டும் இருக்க கற்றுக்கொண்டகாலமது.

உண்மையில் அவர்கள் சிறைப்பட்டதுபோலத்தான் இருந்தார்கள். ஒருநாள் தருண் அலமாரியின் தட்டுக்களைப்பிடித்து மேலே எறி முதுகு தரையில் படக் கீழே விழுந்துவிட்டான். சரண் பின் வீட்டிலிருக்கும் பெண்ணுக்குத் தகவல் சொல்லி அவள் வந்துபார்த்து எனக்குத் தகவல்வந்தபோது நான் வகுப்பில் இருந்தேன்.

அது அரசு வேலைக்குச் சேர்ந்த முதல் வருடம் எந்தக்காரணத்தைக்கொண்டும் விடுப்பு எடுக்கக்கூடாது கண்ணீருடன் முதல்வரிடம் அனுமதி வாங்கி ஓட்டமாகக் கல்லூரி வாசலுக்கு வந்தபோது நான் அறிமுகம் கூட அப்போது செய்துகொண்டிருக்காத ஹென்றி என்னும் கல்லூரியின் ஃப்ரெஞ்ச் பேராசிரியர் பைக்கில் கல்லூரிக்குள்ளே வந்துகொண்டிருந்தார் அவரிடம் விஷயத்தைச்சொல்லி என்னைப் பேருந்து நிறுத்ததில் கொண்டு விடும்படி கேட்டுக்கொண்டேன். மறுபேச்சில்லாமல் கொண்டு விட்டார். அன்று ஆட்டோவில் செல்லக் கையில் போதுமான பணம் இல்லை. அரசு வேலை கிடைத்து முதல் இரண்டரை வருடங்களுக்குச் சம்பளமே இல்லை எல்லாம் மொத்தமாகப் பிற்பாடு கொடுக்கப்பட்டது. அந்தக் கஷ்டப்பாட்டைச் சொன்னால் பெரியநாவலே எழுதவேண்டிவரும்.

பேருந்தில் அன்று நல்ல கூட்டம் கம்பியைப் பிடித்தபடி தாரைதாரையாகக் கண்ணீருடன் வீடுவந்தேன். தருண் கீழே படுக்கவைக்கப்பட்டிருந்தான். அந்த வீதியிலப்போது ஒரு கட்டிடம் கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த மேசனிடம் சென்று அவசரமாக ஹாஸ்பிட்டல் போகவேண்டும் என்று உதவி கேட்டேன். உடனே ஒத்துக்கொண்டார்.

சரணை வீட்டில் தனியே விட்டுவிட்டு அவரது டிவிஎஸ் 50 வண்டியில் அவருக்குப்பின்னால் தருணைத் தோளில் போட்டுக்கொண்டு அம்பராம்பாளையம் சென்றேன், நல்லவேலை வசந்த் இருந்தார் முதுகெலும்புக்கு ஒன்றும் அடியில்லை என்று சொல்லி சிகிச்சை அளித்தார். இப்படி பலவிஷயங்கள் நடந்தன பள்ளி விடுமுறைக்காலத்தில்

சில சமயம் கல்லூரிக்கு அழைத்துச்சென்றுவிடுவேன், சரண் சமத்தாக லைப்ரரியில் படித்துக்கொண்டிருப்பான். தருண் கல்லூரிமுழுக்க அவனே தனியாகக் கையில் கிடைத்தவற்றை வைத்து விளையாடிக்கொள்வான். சில சமயம் வகுப்புக்கு முன்னிருந்த ஒரு மைதானத்தில் இருவரும் விளையாடுவார்கள் அவர்களை ஒரு கண் பார்த்துக்கொண்டே கரும்பலகையில் எழுதிக்கொண்டிருப்பேன்.

சரணுக்கு கடும் காய்ச்சல் இருந்த ஒரு நாள் எனக்குத் தேர்வுப்பணி. அவனை லைப்ரரி மேசையில் மருந்துகொடுத்துப்படுக்க வைத்து ஒரு துண்டில் போர்த்திவிட்டு நான் 3 மணி நேர தேர்வுப்பணிக்கு போனேன். லைப்ரரி ஜோதி பார்த்துக்கொண்டாள் நான் வரும்வரை.

பேருந்தில் கதையான கதைபேசிக்கொண்டு திரும்பவருவோம் மூவருமாக. கஷ்டப்பாடுதான் என்றாலும் எங்களுக்குள் இருந்த பிணைப்பு மிக உறுதியானதும் அந்தக்காலத்தில்தான்.

கோவை காளப்பட்டியில் அப்போது பணிபுரிந்த ப்ரியா சில விடுமுறைகளில் உடன் வந்து இருந்து மகன்களை நான் வரும்வரை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறாள், அதை எந்நாளும் மறப்பதில்லை. திருமணத்துக்கு முந்தின இரவு காரில் ரோஜாப்பூக்கள் ஒட்டி இருக்கவில்லை என்னும் பிரச்ச்னை எழுந்தபோது அப்போது மணமாகி இருக்காத ப்ரியா நள்ளிரவு வரை டேப் கொண்டு ரோஜாக்களை ஒட்டிக்கொண்டிருந்தாள். அவளைத்தவிர வேறு யாரும் வந்திருந்து மகன்களைப் பார்த்துக்கொண்டதேயில்லை.

ஆனால் எல்லாக் கல்லூரி விடுமுறைகளிலும் வேன் வைத்துக்கொண்டு கூடக் கூட்டமாக வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள். முகம் சுளிக்காமல் அனைவரையும் பார்த்திருக்கிறேன் எங்களை யாரும் ஒருபோதும் விடுமுறைக்கு வரச்சொன்னதில்லை அதில் எங்களுக்குக் குறையொன்றுமில்லை நாங்கள் எங்களுக்குள்ளேயே இன்று வரை மகிழ்ந்துதான் இருக்கிறோம்.

எத்தனை முயன்றும் என்னிலிருந்து உதிர்க்கவேமுடியவில்லை இந்த நினைவுகளை. சரண் தருணுக்கு இந்த விஷயங்களெல்லாம் பிற்பாடு நினைவுக்கு வந்து துயருற்றுவிடக்கூடாது என்பதை இப்போதெல்லாம் அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன்

மகன்கள் தனிமையில் இருந்துவிடக் கூடாது என்பதற்காக வார இறுதி விடுமுறைநாட்களிலும் அதிகாலையில் எழுந்து மதியத்துக்கும் சேர்த்து சமைத்து வைத்துவிட்டு குளித்து வீட்டுவேலைகளை முடித்து அவர்கள் தூங்கி எழுந்திருக்கும் போதிலிருந்து இரவு வரை வேறெந்த அறைக்கும்கூடப் போகாமல் உடனிருப்பதை இன்று வரையிலுமே தொடர்கிறேன்.அவர்கள் கல்யாணம் வரை நான் இதைச்செய்யலாம்.

இதோ வளர்ந்து வலிதாகி இருக்கிறார்கள். இலக்கியப்பரிச்சயமும் இயற்கைமீது அக்கறையும் கொண்ட, அறத்தின் பால் நிற்கும் இளைஞர்கள் இப்போது சரணும் தருணும்.அவர்கள் குடும்பமும் குழந்தைகளும் உறவினர்களுமாகச் கூடி இருந்து வாழ்வதைப்பார்க்கக் கொதி இருக்கிறது எனக்கு.

இந்த நல்லபடத்தை என்னால் பார்க்கமுடியாமல் போனது வருத்தமளிக்கிறது. யாராவது குழந்தைகளை வைத்துக்கொண்டு வேலைக்கும் போகும், உடனிருக்க மனிதர்களற்ற அன்னையைப்பற்றி படம் எடுக்கவிருந்தால் என்னைச்சந்திக்கலாம். மிக உணர்வுபூர்வமான கணணீர் வரவழைக்கும் காட்சிகளுக்கு நான் உத்திரவாதம்.

இளமைக்காலங்கள்!

இன்று காலை வழக்கத்தைவிடச் சீக்கிரமாகவே கல்லூரிக்குச்சென்றுவிட்டேன். வெள்ளிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு சிறப்பு நிகழ்வு இருக்கும்படி இந்தப் பருவத்தைக் கழிக்கவேண்டும் எனத் துறையில் முடிவு. எந்நேரமும் வகுப்பெடுத்துக்கொண்டிருந்தால் மாணவர்கள் சலிப்படையக்கூடும் எனவே துறைசார்ந்த சிறு சிறு நிகழ்வுகளை வாரா வாரம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறேன்

இன்று பருத்திப்பைகளை உபயோகிப்பது, ப்ளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பது என்பது குறித்த விழிப்புணர்வு அளிக்கத் துறையில் அனைவரும் துணிப்பைகளை கொண்டு வந்தோம். அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க சற்றுமுன்னதாகவே சென்றேன்.

வழியில் ஒரு வகுப்பறையின் முன்பு எனக்கு முன்னதாகவே வந்து எதிரெதிரே நின்று கொண்டிருந்தார்கள் ஒரு பெண்ணும் ஆணும். இன்று வெள்ளிக்கிழமையாதலால் அவள தலைக்குக்குளித்து இடைவரை யக்‌ஷி போல நீண்டிருந்த முடியில் சின்ன வண்ணத்துப்பூச்சியின் வடிவிலிருந்த கேட்ச் க்ளிப் மட்டும் போட்டிருந்தாள். கூந்தலின் நீர் சொட்டி அவளது இளஞ்சிவப்பு சுடிதாரின் கீழ்ப்புறம் ஈரமாகி இருந்தது.

அவனோ அவசரத்தில் புறப்பட்டிருப்பான் போல, கசங்கிய சட்டை, கலைந்த தலை. தூரத்திலேயே அவன் அவளிடம் ’’ஏய். சாரிடி. போன் அடிச்சது கேட்கலை,தூங்கிட்டேன் இதுக்குப்போய்க் கோவிச்சுப்பியா?’’…. என்று சொன்னது கேட்டது.

அவள் கண்களில் கனலும் கண்ணீருமாக, சில நோட்டுப்புத்தகங்களை மார்போடு சேர்த்து அணைத்துப்பிடித்துக்கொண்டு அவனைப்பார்க்காமல் எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தாள். அழகாகப் பட்டையாக மையெழுதிய கண்கள்.

‘’ நான் என்ன சொன்னேன் இப்போ? இனிமே உன்னைக் கூப்பிடலைனுதானே சொன்னேன், அதுக்கெதுக்கு சாரிகேட்கற? போய் வேலையைப்பாரு’’…. என்கிறாள்.

இவன் மீண்டும் பாவமாக ’’சாரி சொல்லிட்டனில்லடி, நீ ராத்திரி 12 மணிக்குக் கூப்பிடுவேன்னு எனக்குத் தெரியலை தூங்கினது குத்தமா’’ என்கிறான். அவள் ’’அய்யோ குத்தமில்லை சாமி நல்லா போத்திட்டுத்தூங்கு. நான் தான் இனி கூப்பிடமாட்டனே’’…. என்கிறாள். இதைச்சொல்லுகையில் அவள் குரல் உடைகிறது.

நான் அவர்களைக் கடந்துவிட்டேன். ’’சரிடி, இனிமே நான் தூங்கவேமாட்டேன், நீ எப்போ கூப்பிட்டாலும் போன எடுக்கறேன்’’… அன்று அவனும், பதிலுக்குச் சீற்றத்துடன் ’’ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்னு கூப்பிட்டா நீ போனே எடுக்கலை எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா?’’… என அவள் மலை இறங்கி வந்ததையும் கடைசியாகக்கேட்டேன். புன்னகைத்துக்கொண்டே முதல் தளத்தில் இருக்கும் என் துறைக்கான படிகளில் ஏறினேன்.

அன்பு வளரட்டும்!

« Older posts Newer posts »

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑