இல்லை இல்லை விமர்சனக்கட்டுரை இல்லை.
துல்கரின் லோகாவை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்க்கமுடியவில்லை. பொள்ளாச்சியில் வெளியானதாகக்கூட தகவலில்லை. கோவைக்குத் தனியே சென்று பார்ப்பதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமே இல்லை. ஆனால் நீலியின் கதை என்றதும் அதைக்காண கொதியாகிவிட்டிருக்கிறது. ஜெ வின் பல கதைகளில் ,அவருடைய அம்மாவைபற்றிய பதிவுகளில் எல்லாம் வரும் நீலிகள் எனக்கு மிகவும் பரிச்சயமானவர்கள் பிரியத்துக்குரியவர்கள்.

இந்த வேடசெந்தூர் வீட்டின் பல மரங்களில் சமையலைறைக்கு வெளியே சமையலறை ஜன்னலிலிருந்து பார்த்தால் தெரிவது போலச் செண்பக மரமொன்றும் நிற்கிறது.
பலாச்சுளைகள் போலிருக்கும் அதன் பொன்னிற மலர்களை பறித்துச்சூடிக்கொண்ட காலமிருந்தது ,இப்போது அதன் உச்சி வெகு உயரத்துக்குபோய்விட்டதால் மலர்களைப்பார்க்கக்கூட முடிவதில்லை. ஆனால் என் இறப்பிற்குப்பிறகு அதில் தான் செண்பகமரத்து யட்சியாக வாழ(?) உத்தேசம்.
தருண் ‘’ இருந்துக்கோ ஆனா இறங்கி வந்து பயப்படுத்தக்கூடாது ’’ என்றிருக்கிறான்.
எனவே இந்த யட்சிக் கதையைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். சரண் கல்யாணியின் படங்களைப் பிரத்யேகக் காரணமொன்றினால் தவறவிடுவதில்லை. எனவே ஜெர்மெனியில் வெளியானதுமே அதைப்பார்த்துவிட்டு விடீயோ அழைப்பில் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தான். தியேட்டரில் அத்தனைசிரிப்பொலியாம்.
’’கல்யாணி வரும் காட்சிகளிலெல்லாம் யட்சிப்பாலைமரமும் அதன் மலர்களும் காட்டினாங்க யாரெல்லாம் கவனிச்சாங்களோ?’’ என்றான். மேலும் மகிழ்ச்சியடைந்தேன்.யட்சிப்பாலை என்னும் அல்ஸ்டோனியா ஸ்காலாரிஸ் என் பிரிய மரங்களில் ஒன்று அதைச் சரண் திரையில் கவனித்தது அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது. அம்மையுட மோன். யட்சிகள் அந்த மரத்தில் வாழ்வதைப்பற்றி நிறையப்பேசி இருக்கிறோம் நாங்கள்.
முன்பெல்லாம் இந்தியப்பல்கலைக்கழகங்களில் இதன் ஸ்காலாரிஸ் என்னும் சிற்றினப்பெயரே அறிவுடையவர்களுக்கான மரம் என்னும் பொருளில் வைக்கப்பட்டிருந்ததால் பட்டமளிப்பின்போது யட்சிப்பாலை என்னும் இந்த ஏழிலைப்பாலையின் சிறு கிளையொன்றையும் உடனளிப்பார்களாம்.
முனைவர் பட்ட ஆய்வின் துவக்க காலத்தில் தனி அழைப்பின் பேரில்புது தில்லியின் வன மற்றும் சூழல் அமைச்சகத்துக்குள்ளே அதன் இயக்குனரான திரு அட்ரியைக்காண 25 வயது இளம்பெண்ணாகத் தயக்கத்துடன் நுழைந்து, அந்தப்பிரம்மாண்டமான கட்டிடங்களுக்குள்ளே நீண்ட நடைபாதையின் இருபுறமும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு மூச்சடைக்கும்படியான நெடியுடன், கொத்துக்கொத்தாக மலர்களுடன் நின்றிருந்த ஏழிலைப்பாலைகளை முதன்முதலில் பார்த்ததை நினைத்துக்கொண்டேன். லோகா என்று படத்தின் பெயர் இருப்பதிலும் கூடுதல் மகிழ்ச்சி
Leave a Reply