லோகமாதேவியின் பதிவுகள்

Category: நூலறிமுகம் (Page 2 of 2)

நினைவுதிர்காலம் -யுவன்

டிசம்பர் 2019 விஷ்ணுபுரம் விருது விழாவில் ஊர்சுற்றி கானல் நதி மற்றும் நினைவுதிர்காலம் ஆகியவற்றை வாங்கி வந்திருந்தேன். கானல் நதியை பொள்ளாச்சியிலிருந்து கும்பகோணம் வரையிலான ஒரு பயணத்தில்  தொடர்ச்சியாக வாசித்து முடித்தேன். ஊர்சுற்றியை எனக்கு முன்பே வாசித்திருந்த  நண்பர்களுடன் அதைக்குறித்து அவ்வப்போது பேசிக்கொண்டும் கதையைக்குறித்து சிலவற்றை  விவாதித்துக்கொண்டும்   ஒரு வார இறுதியில்வாசித்தேன். கடந்த திங்கட்கிழமை நினைவுதிர்காலத்தை துவங்கினேன். நேற்று வாசித்து முடித்தேன்.

யாரிடமும் வாசிப்புக்குறித்து பகிர்ந்துகொள்ளக்கூட முடியவில்லை . அப்படி ஒரு நிறைவு எனக்குள்.

எந்த புத்தகம் வாசித்தாலும் கதையும் மொழிநடையும் சில வர்ணனைகளும் வாசிக்கையில் நானே கட்டமைத்துக்கொண்டசில காட்சிகளும் உள்ளே மீள மீள நிகழ்ந்துகொண்டிருக்கும். பின்னர் கதையைக்குறித்து எழுதுவேன் அல்லது யாரிடமாவது பேசுவேன்

நினைவுதிர்காலம் அப்படியல்லாது வேறுபட்ட உணர்வுநிலையில் என்னை வைத்திருக்கிறது. எனக்கே எதை நம்ப முடியவில்லை என்றால் இந்தக்கதை எனக்கு புரிந்துவிட்டதுதான். இசைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது . கொங்குபிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவள் நான். என் வாழ்வு முழுக்க இசை போன்ற நுண்கலைக்கான exposure எள்ளளவும் இன்றி காடும் தோட்டமும் வீடும் வேலையுமாய் இருந்தது.  தப்பிப்பிழைத்து எப்படியோ கல்லூரியும் பல்கலையும் போய் படித்தேன் என்றாலும் அடிப்படிஅயில் அதே கிராமத்து உழைக்கும் வர்க்கத்து மனுஷிதான் நான்.

இசைக்கும் எனக்குமான தொடர்பென்றால் எப்போதாவது திரையிசைப்பாடல்களை கேட்பதும் ’நல்லாருக்கே’ என்றோ ’சகிக்கலை இந்தப்பாட்டு’ என்றோ சொல்லுவதோடு முடிந்துவிடும். மற்றபடி இசைக்கு என்னையும் எனக்கு இசையையும் துளியும் பரிச்சயமில்லை

இந்தக்கதை முழுக்க, (இதைக்கதை என்று சொல்லலாமாவென்றும் தெரியவில்லை) இசையை , ஒரு இசைமேதையை அவரது உறவுகளை அதன் சிக்கலான பல அடுக்குகளை அவரது வாழ்வு முழுமையை இசையின் பற்பல நுட்பங்களை பல வகையான இசையை இசையாளுமைகளை சொல்லியது.  வாழ்நாளில் பள்ளிப்பருவத்தில் கணேஷ் குமரேஷின் துவக்ககால கச்சேரியொன்றைத்தவிர வேறு இசைதொடர்பான கச்சேரிகளுக்கு கூட போயிறாத என்னை இக்கதை முழுவதுமாக கட்டிப்போடுவிட்டது.

இக்கதை முழுவதையும் என்னால் அனுபவித்து ரசித்து ஆழ்ந்து வாசிக்க முடிந்ததில் எனக்கே ஆச்ச்சர்யம்தான்

ஏறத்தாழ  250 பக்கங்கள் கொண்ட முழுக்கதையையும் நேர்காணல் உரையாடல் வடிவிலேயே கொண்டு வந்திருப்பதும் எந்த இடத்திலும் சிறிதும் தொய்வின்றி கொண்டு போயிருப்பதும் சிறப்பு.

வறட்சியான ஜீவனற்ற கேள்வி பதில்களாக இல்லாமல் சாமார்த்தியமான பொருத்தமான சரியான சுவாரஸ்யமான கேள்விகளும் அதற்கு சற்றும் குறைவில்லாத பதில்களுமாய் துவக்கத்திலிருந்தே கதையுடன் ஒட்டுதல் வந்திவிட்டிருந்தது. மேலும் ஆஷாவையோ திரு ஹரிஷங்கரையோ குறித்து தோற்றம் எப்படியிருக்குமென்று எந்த அபிப்பிராயமும் இல்லாததால் அவர்களைக்குறித்து எனக்குள் ஒரு கற்பனைச்சித்திரம் உருவாகிவிட்டிருந்தது. அவரை  பல இடங்களில் நுட்பமாக வர்ணித்துமிருந்ததால் அவரின் ஆளுமைக்கு எனக்குள் சரியான வடிவமொன்று அமைந்துவிட்டிருந்தது.

அவர்கள் பேசிக்கொண்டிருந்த அறை அந்த வீடு  அவரின் செல்லப்பிராணிகள் சமையலுக்கு உதவும் பெரியவர் சமையலில் என்ன பதார்த்தங்கள் அதில் அவர் விரும்பி உண்ட இனிப்பு ஒரு விளக்கைபோடுவது அதை  அணைத்து மஞ்சள் விளக்கை போடுவது  பேசிக்கொண்டிருக்கையிலேயே அந்தி மாயம் போல வந்து கவிழ்ந்துவிடுவது,இடையிடையே அவர் ஓய்வறைக்கு செல்வது, ஆஷாவின்  கார் கோளாறாவது, அவ்வப்போது இடையிடும் சில விருந்தினர்கள் அங்கிருக்கும் அலமாரிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் என்று விலாவாரியான விவரிப்புக்கள் இருந்ததால் நானும் அந்த அறையில் அமர்ந்திருந்தேன் என்றே சொல்லலாம். எப்பேர்ப்பட்ட ஆளூமை அவர் என்னும் பிரமிப்பு இன்னும் அகலவில்லை

மூத்த சகோதரரின் மீது மனக்குறை இருப்பினும்  மரியாதைக்குறைச்சலோ மலினமான அபிப்பிராயமோ துளியும் அற்றவர். அவரது ஆளுமை எனக்கு அவர் மீது பெரிதும் மரியாதை கொள்ள வைத்தது.

தில்லி சுல்தானின் அரசவையில் ஆஸ்தான பாடகராக இருந்த அவரது முத்தாத்தாவின் கதை மெய்ப்புக் கொள்ள வைத்துவிட்டது. அக்கதையை வாசிக்கையில் வாசிப்பதுபோலவே இல்லை எனக்கு  ஒரு புராதன கருப்பு வெள்ளைத்திரைப்படத்தில் நானும் ஒரு பாத்திரமேற்று அங்கே அக்கச்சேரியில் இசையைக்கேட்டபடிக்கு அமர்ந்திருந்தேன்.

கிராமத்தில் அழியில் எதிர்ப்பட்டவருக்கென ருத்ரவீணை வாசித்த அவரது முன்னோர், கோளாறாகி ரயில் நின்று விட அப்போது புழுதியில் அமர்ந்து அந்த கிழவனாருடன் சேர்ந்து கச்சேரி செய்த அண்ணா, விசிலிலேயே இசைத்த நண்பர், காரணமறியா அவரது தற்கொலை, காணாமலே போன இன்னொரு தோழன் என்று ஒரு புனைவுக்கதையின் எல்லா சுவாரஸ்யங்களும் இருந்தது இதில்.  பல முக்கியமான வேலைகளை புறக்கணித்துவிட்டு தொடர்ந்து வாசிக்கச்சொன்னது கதை என்னை

தெய்வீகமான முப்பாட்டன்கள்,  நேர்மையையே முக்கியமாக கொண்டிருந்த, தகப்பனார் மாபெரும் இசைமேதையான அண்ணா அவரது சில சறுக்கல்கள், அவர் மீது  இவருகிருக்கும் ஒரு மாற்றுக்கூடகுறையாத மரியாதையும் பக்தியும் ஆஷாவின் அந்தரங்க வாழ்வைக்குறித்துத் தெரிந்துகொண்ட சில விஷயங்களுமாக நினைவுதிர்காலம் என்றென்றைக்குமாய் மனதில் வரி வரியாக நினைவிலிருக்கும் கதைகளொலொன்றாகிவிட்டது

பல பக்கங்களில்  அற்புதமான கவிதைகளை பத்திகளாக கொடுத்திருந்தது போலிருந்தது. பத்திகளின் வரிகளை மடக்கி கவிதைகளாக்குவதைத்தான்  வாசித்திருக்கிறேன் இது முற்றாக எதிராயிருந்தது. உதாரணமாக  கச்சேரி நாளன்று அவரது மனநிலையைப்பற்றி சொல்லும் பத்தியை சொல்லுவேன்

// கச்சேரி நாளில் செவிகளில் ஒருவிதக்கூர்மை அதிகரிப்பது, அதிகாலைப்பொழுதின் நிர்மலமான அமைதியின் பரப்பில் ஒவ்வொரு ஒலியாக சொட்டி குமிழிகளையும் வளையங்களையும் உருவாக்குவது, புத்தம் புதிய காகம், முதன்முறையாக காதில் விழும் சைக்கிள் ஒலி, அந்தக்கணம் தான் பிறந்து உயர்ந்தது போன்ற ஜன்னலோர மரக்கிளை//

அபாரம்

இப்படி பல பக்கங்களில் அடிக்கோடிட்டுக்கொண்டே வாசித்தென்

சத்தியத்தில் அடிக்கோடிட்டு வாசிக்கும்படியான புத்தகங்களை அரிதாகவே கிடைக்கப்பெறுகிறேன்

ஸ்ரீஹரிஷங்கர் அவரது மனைவி ஊர்மிளாவைப்பற்றிச்சொல்லியவற்றை வாசிக்கையில் மட்டும் அங்கெயே மனம் நின்று விட்டது. அவ்வரிகளை மீள மீள வாசிப்பேன். பின்னர் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு வேறு ஏதேனும் வழக்கமான இல்பேணுதலுக்கு சென்று விடுவேன் மனம் மட்டும் கடுமதுரம் ஒன்றை சாப்பிட்ட தித்திப்பில் நிறைந்திருக்கும் எப்படியாகப்பட்ட பேரன்பு அது என்று சிலாகித்துக்கொண்டேயிருக்கும் மனம்

இருவருமாக கருப்புக்கார் ஒன்றைத்துரத்திச்செல்லும் அந்த கனவிற்கு பின்னர் உங்கள் மனைவியிடன் உங்களுக்கும் அதே போன்ற கனவே வந்ததென்று சொன்னீர்களா என்னும் கேள்விக்கு // பளிங்கு பொன்ற மனம் அது வீணாக கலக்குவானேன் . அவளை பிரியமாக அணைத்துக்கொண்டேன்//  என்கிறார் அறியமால் கண் நிறைந்தது எனக்கு வாசித்ததும்

/ மாயப்பிரசன்னத்தின் வசம் சொந்தக் கவலைகளை ஒப்படைத்துவிட்டு அடைக்கலமாகிவிடும் மார்க்கம் எவ்வளவு இதமாயிருக்கிறது//

 இவ்வரிகளிலும் மனம் சிக்கிக்கொண்டது கொஞ்ச நேரத்திற்கு

ஹிந்துஸ்தானி இசையுலகம் எனக்கு முற்றிலும் பரிச்சய்மற்றது என்பதை விடவும் அந்நியமானது என்றே சொல்லுவேன்.என்னால் இந்தக்கதையுடன் இத்தனை ஆழ்ந்துபோக முடிந்ததின் ஆச்சரயம் இன்னும் நீடிக்கிறது . ஸாரங்கியும் வயலினும் குரலிசையும் மொஹர்சிங்கும் மேண்டலினும் ஜுகல்பந்திகளும்  ராகங்களும் அதில் புகுத்தப்ட்ட புதுமைகளும் மேல் கீழ்ஸ்தாயிகளும் தாளமும் ஸ்வரமுமாக எனக்கு அறிமுகமற்ற ஆனால் மிகவும் வசீகரமான ஒரு உலகிலிருந்தேன் வாசிக்கையிலும் இதோ இப்போதும்

எதேச்சையாக கானல் நதிக்கு பின்னரே நான் இதை வாசிக்கும்படி அமைந்துவிட்டது

கானல்நதி தஞ்செய் முகர்ஜி என்னும் ஆளுமையைபற்றியது. அதில் என்னால் பெரிதாக இறங்க முடியவைல்லை

இப்படி கதையைக்குறித்து எழுதிக்கொண்டேபோனால் கதை வந்திருக்கும் 286 பக்கங்களையும் விட அதிகமக எழுதுவேன் போலிருக்கின்றது. அத்தனைக்கு இக்கதையைக்குறித்துச் சொல்ல எனக்குள் நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது.. இசையை கொஞ்சமும் அறிந்திராத ஒரு வாசகிக்கு இந்த கதை இத்தனை பரவசமளிக்குமென்றால் அதன் நுட்பங்களை அறிந்தவர்களுக்கு இது எப்படி இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்

மண்ணும் மனிதரும்

’மரளி மண்ணிகே’ என்னும் தலைப்பில் நவீன இந்தியாவின் ரபீந்திரநாத் தாகூர் என்று ராமச்சந்திர குஹாவால் புகழப்பட்ட சிவராம காரந்த் அவர்கள் கன்னடத்தில் எழுதி தமிழில் ’மண்ணும் மனிதரும் ‘ என்ற தலைப்பில்  தி.ப. சித்தலிங்கையாவால்    மொழி பெயர்க்கபட்ட நாவலில்  மூன்று தலைமுறை மனிதர்கள் வாழ்ந்த காலமும் அவர்களை வாழ்நாளெல்லாம் ஊர்விட்டு ஊர் அலைக்கழித்த சூழலையும் குறித்து இக்கட்டுரை விவரிக்கிறது.

1840 தொடங்கி 1940 வரை வாழ்ந்த ஒரு குடும்பத்தையும் அக்குடும்பத்தின் உறவுகளை சுற்றத்தை நட்பை தொடரும் இருதலைமுறைகளை சொல்லுகிறது ’மீண்டும் மண்ணுக்கே’ என்னும் பொருள்படும் தலைப்பில் கன்னடத்தில் எழுதப்பட்ட இந்நாவல்

மிக விரிவான தளத்தில் எழுதபட்டிருக்கும் இந்நாவலின் கதை புரோகிதம் செய்துவாழும் அந்தணரான ஐதாளரின் குடும்பத்தை மையமாக கொண்டிருக்கிறது.  ஐதாளரின் தந்தை சிக்கனம் கருதி நல்ல பெருமழை பெய்யும் காலத்தில் ஐதாளருக்கு  செய்து வைக்கும் கல்யாணத்தில் நாவல் துவங்கி ஐதாளரின் பேரன் ராமனின் கல்யாணத்தில் முடிகின்றது

கழிமுகத்தில் ஒரு சிறு வீட்டைத்தவிர வேறெந்த சொத்துக்களும் இல்லாத புரோகிதம் செய்யப்போகும் இடத்திலேயே அன்றைய உணவை முடித்துக்கொள்ளும்  ஐதாளரும்  கடும் உழைப்பாளியான குழந்தைகள் இல்லா அவரது மனைவி பார்வதியும் சிறுவயதிலேயே கணவரை இழந்து குறைபட்டுபோன ஐதாளரின் சகோதரி சரஸ்வதியுமே  முதல் தலைமுறை மாந்தர்களாக  துவக்கத்தில் வருகின்றனர்.

ஐதாளர் குழந்தையின்பொருட்டு செய்துகொள்ளும் இரண்டாம் திருமணம் அதில் பிறந்து செல்லம் கொடுக்கப்பட்டு திசைமாறிப்போன லச்சன் அவன் மனைவி நாகவேணி ஆகியோர் இரண்டாம் தலைமுறை

கழிமுக வீட்டை விட்டு பெருநகரத்துக்கு  கல்வியின் பொருட்டு இடம்பெயரும் அவர்களின் மகன் ராமன்   மூன்றாம் தலைமுறை  என நீளும் கதையில் 18   மற்றும் 19  ஆம் நூற்றாண்டின் காலச்சூழலை மிக நன்றாக அவதானிக்க முடிகின்றது.

பல்வேறுபட்ட குணச்சித்திரங்கள் உள்ள பாத்திரங்களின் வாயிலாக அன்றைய மாந்தர்களுக்கு மண்ணின் மீதான பெருவிருப்பு இருந்ததையும் பெண்களின் அயராத உழைப்பால் குடும்பங்கள் தலை நிமிர்வதையும் தெளிவாக காணமுடிகின்றது

ஐதாளரின் திருமணத்திற்கு வர துணியாலான குடைபிடிப்பவர்களே ஊரின் பெருந்தனக்காரர்களென்னும் வரியிலிருந்தே அக்காலத்தின் பொருளாதார நிலையை அறிந்துகொள்ளலாம்.

ஏழை அந்தணர் வீடுகளில் உணவுப்பழக்கம் எப்படியென்பதையும் மிக சாதரணமாக சொல்லிச்செல்கிறார் கதாசிரியர் கணவர் புரோகிதம் பண்ணப்போகும் வீட்டில் சாப்பிடுவதால் பெண்களிருவரும் அவடக்கீரை தாளித்தோ அல்லது உருளைகிழங்கோ வெள்ளரிக்காய்களோ இருக்கும் மிக எளிய உணவை ஒரு பொழுது உண்டுவிட்டு இரவில் பிடி அவலை நனைத்து சாப்பிட்டுவிட்டு படுக்கின்றனர்.   கடும் உழைப்புக்கு சற்றும் பொருந்தாத ஏழ்மை.  மாவடு தேடி நல்ல வெய்யிலில் பலகிலோமீட்டர் தூரம் நடந்து கிடைத்த மாங்காய்களை  ஊறுகாய் போடுவதும் சித்தரிக்கபட்டிருக்கிறது. அவர்களுக்கு உதவி செய்யும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சூரனே சொல்லுவதுபோல ’பிராமணர்களுக்கு எதற்கு குறைவென்றாலும் நாக்குக்கு மட்டும் அப்படி  வேண்டியிருக்கிறது’

பெண்கள் அக்காலத்தில் செய்துகொண்டிருந்த வேலைகளை நினைக்கவும் முடியாது இக்காலத்துப்பெண்களால் வீட்டைப்பெருக்குவது பற்றுப்பாத்திரங்களை தேய்ப்பது கால்நடைகளுக்கு நீரும் தீவனமும் வைப்பது வயலில் வேலை செய்வது வண்டல் மண்ணை அரித்து சட்டி சட்டியாக கொண்டு வந்து சேர்ப்பது நீர்பாய்ச்ச ஏற்றமும்  கபிலையும்  இறைப்பது தினப்படி  வீட்டை மெழுகுவது தோட்டத்தில் விதைப்பது நாற்று நடுவது அறுப்பது புன்னைக்காய்களை சேகரித்து எண்ணை எடுப்பது பால் கறப்பது கடல் நீரைகாய்ச்சி வீட்டு சமையலுக்கு தேவையான  உப்பெடுப்பது வெள்ளத்தில் அடித்து வரும் மரக்கட்டைகளை உயிரைப் பணயம் வைத்து விறகுக்கென சேர்ப்பதென்று முடிவில்லாமல் நீள்கிறது இவர்களின் உழைப்பின் பட்டியல். அசாத்தியமான உடல்வலிமையுடன் மனவலிமையும் உள்ளவர்களாயிருந்திருக்கிறார்கள் அப்போதைய பெண்கள். வெயிலும் மழையும் வெள்ளமுமாய் ஓயாமல் வாழ்வை அலைக்கழித்தாலும் பெண்கள் யாவரும் மூன்று தலைமுறைகளிலுமே புரிதலும் சகிப்புத்தன்மையும் மன்னிக்கும் விசாலமனதும் உளளவர்களாகவே இருக்கிறார்கள்

கணவர் எந்நேரம் வீடுதிரும்பினாலும் எந்த கேள்வியும் கேட்காமலிருப்பது புத்திரபாக்கியத்துக்கென மறுதிருமணம் செய்யும் போதும் எதிர்ப்பின்றி அதை ஏற்றுக்கொள்வது அத்திருமணத்திற்கென்று அப்பளம் இடத்துவங்குவதென்று பெண்கள் அக்காலத்தில் செய்துகொண்டிருந்த வேலைகளையும் அனுபவித்துக்கொண்டிருந்த வேதனைகளையும் அவர்களுக்கு நடந்துகொண்டிருந்த அநீதிகளையும் அப்போதைய வாழ்வின் இயங்குமுறைககளாகவே சொல்லிச்செல்கிறது இந்நாவல்

அப்போது வழக்கத்திலிருந்த குறுநிலங்களில் நடைபெற்றுக்கொண்டிருந்த  பெரிய முதலீடுகள்  இல்லாத விவசாய முறைகளையும் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த முடி மணங்கு சேர் கோர்ஜி என்னும் அளவை முறைகளும் கதையில் பல இடங்களில் சொல்லப்படுகின்றன.

எத்தனை ஏழ்மையிலிருப்பினும் அந்தணர்களான அவர்களுக்கு கீழிருக்கும் தாழ்த்தபட்டவர்களோடு இணைந்தே விவசாயம் நடந்திருக்கிறதென்பதும் ஐதாளரின் குடும்பத்திற்கு சூரனும் பச்சியும் செய்யும்  பிரதிபலன் எதிர்பாராத தொடர் உதவிகளிலிருந்து புலனாகின்றது,

இறந்த மாட்டின் சவத்தை பறையர்கள் வந்து எடுத்துச்செல்லும் வழக்கமும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது

கழிமுகத்தில் அமைந்திருக்கும் ’’கோடி’’ கிராமமே கதைக்களமென்பதால் அப்பொழுது படகுகளுக்கு மஞ்சி என்னும் பெயரிருந்ததும் பாய்மரப்படகில் ஒரு வகை பத்தொமாரி என்பதும் கோடா என்பது மிகபெரிய பாய்மரப்படகென்பதும் ஐதாளரின் பார்வையில் துறைமுகப்பகுதியை விவரிக்கையில்  குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்து  இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்காத பெயர்களையும் விஷயங்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம்

பிள்ளை இல்லாதவர்கள் சுவீகாரம் எடுத்துக்கொள்வது அப்போதும் நடைமுறையிலிருந்திருப்பதை சரஸ்வதியும் பார்வதியுமாய் ஐதாளரிடம் அதுகுறித்து பேசுவதிலிருந்து தெரிகிறது. எதிர்பாரா விதமாக ஐதாளர் சுவீகாரத்திற்கு முனையாமல் சத்தியபாமையை இரண்டாம் திருமணமே செய்துகொள்வது அந்தப்பெண்களுடன் நம்மையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

 இரண்டாவதாக ஒருத்தி தன் வாழ்வில் வரப்போகும் போதும் பார்வதி அவள் கன்னடபிராமணர்களில்   ’கோட’ அல்லது ’சிவள்ளி’ இவற்றில் எந்தப்பிரிவை சேர்ந்தவளென்பதில் கவலை கொள்வதிலிருந்து அப்போது சாதிவேற்றுமைகள் மட்டுமன்றி  குடும்பங்களுக்குள் நுண்ணிய சாதீய அடுக்கின் சிக்கல்களும்  இருந்திருக்கிறதென்பதை அறியலாம்.

திருமண ஊர்வலத்தில் ஒவ்வொருவர் கையிலும் இரண்டு பந்தங்களை கொடுத்து கூட்டம் அதிகமானதுபோல் காட்டுவது பாட்டியன்னம் என்னும் பாட்டிமை அன்று மணமகளுக்கு நடக்கும் சடங்கு  தாசிகள் பொன் பெற்றுக்கொண்டு சலாமிடுவது பெரும் அந்தஸ்தாக கருதப்படுவது  போன்ற விவரணைகளிலிருந்து அப்போதிய திருமணங்களின் போது   நடக்கும் பலவகையான முறைமைகள் வழக்கங்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடிகின்றது.

 லச்சன் பிறந்த பிறகு அவனை பள்ளிக்கூடம் சேர்ப்பது குறித்தான பிரச்சனையில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் அவனை சேர்ப்பதென்பது இழிவு என்று பெரியவர்கள் யாவரும் ஒன்றே போல அபிப்பபிராயப்படுவதிலிருந்து தீண்டாமை 18 ஆம் நூற்றாண்டு முடியும் தருவாயிலும் மிகத்தீவிரமாக நிலவி வந்திருப்பதை உணரலாம்.

மெல்ல மெல்ல வட்டிக்கு பணம் கொடுக்கும் வழக்கம் வருவதை, ஆடம்பரத்துக்கு விருப்பப்படும் குடும்பங்கள் பெருகுவதையெல்லாம் சீனப்பன், சீனப்பய்யராக மாறுவதுபோன்ற நுட்பமான கதாபாத்திர மாற்றங்களின் மூலம் சொல்லத் துவங்குகிறார் கதாசிரியர்.

 காட்சிகள் மாறிக்கொண்டே வந்து லச்சன் தட்டுக்கெட்டு திசைமாறி தீய வழக்கங்களுக்கு அடிமையாகி, அவனால் அவன் மனைவியின் உடல்நிலையும் பாழாவதை பார்க்கிறோம், 500 ரூபாய் பணம் கொடுத்தால் மணியக்காரர் பதவி கிடைக்கும் என்னும் வரிகளில்  லஞ்சம் கொடுக்கும் சூழல் 19 ஆம் நூறாண்டில் மெல்ல துவங்கியிருப்பதை உணரலாம்

பீட்ஸா இந்தியக்குக்கிராமங்களிலும் புழக்த்திலிருக்கும் இக்காலகட்டத்தில் நாவலில் காப்பி என்னும் பானம் மெல்ல கலாச்சாரத்துக்குள் நுழைவதையும் பல ஆச்சாரமான குடும்பங்கள் அதை வீட்டுக்குள்ளே  அனுமதிக்காமலிருந்ததையும் வியப்புடன்  வாசிக்க முடிகின்றது.

காலங்கள் மாறி  வருகையில் லச்சனின் மனைவியான நாகவேணி சரஸ்வதியை, பார்வதியை போலல்லாமல் தன்னந்தனியே கணவனின்றியும் வாழ்த்துணிகையில் பெண்களின் மனோநிலையும் மாறிக்கொண்டு வருவதை நாம் அறியலாம்.

 சுதந்திரப்போரட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு செல்லும் ராமன் அப்போதைய சுதந்திர உணர்வெழுச்சி மிக்க இளைஞர்களின் பிரதிநிதியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறான்

எத்தனையோ க‌ஷ்டகாலங்கள் மாறி மாறி வந்தாலும் மீண்டும் மீண்டும் மூன்று தலைமுறைப்பெண்களும் அந்த ஓட்டு வீட்டுக்கே திரும்புகிறார்கள் அம்மண்ணே அவர்களை  பிணைக்கிறது வாழ்வுடன் ’’மீண்டும் மண்ணிற்கே’’ என்னும் கன்னட தலைப்பும் ’’மண்ணும் மனிதரும்’’ என்னும் தமிழாக்க தலைப்பும் மிகபொருத்தமாக கதையின் மூன்று தலைமுறை மாந்தர்களையும் நமக்கு காட்டித்தருகின்றது

வேளாண்மையும் தொற்றுநோயின் இறப்புக்களும் ஏழ்மையுமாக முதல் தலைமுறை ஆங்கிலக்கல்வியும் புதிய கலாச்சாரமும் கிடைக்கப்பெறும் இரண்டாம் தலைமுறை  பெருநகரங்களுக்கு கல்வியின் பெயரால் இடம்பெயரும் அங்கு வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்கொள்ளும் மூன்றாம் தலைமுறை என மாறிவரும் தலைமுறைகளின் மூலம் மாறி வந்திருக்கும் இந்திய சமூக வாழ்வினையும்   சொல்லும் இந்நாவல் இறுதியில்  ராமன் சரஸ்வதி என்னும் அவனின்  பாட்டியின் பெயருடன் துடைப்பமும் கையுமாக வீட்டுப்பொறுப்பை நிர்வகிக்க வல்லவள் என்னும் சித்திரத்தைக் கொடுக்கும் பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்வதுடன் நிறைவடைகிறது.   

இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் குழந்தைக்காக ஐதாளர் மறுதிருமணம் செய்துகொள்ளுவதும் பின்னர்  சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபடும் மூன்றாம் தலைமுறைக்காரனான நவீன சிந்தனையுளவனான ராமனும் பிற காரணங்களை விட வீட்டுபொறுப்பில் உள்ள பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக காட்டியிருப்பதும்  காலங்கள் எத்தனை மாறினாலும் பெண்களின் இடமென்று ஆண்கள் நிர்ணயம் செய்துவைத்திருப்பது சமையலறையும் படுக்கையறையும் தானென்பதையும் அன்றும் இன்றும் என்றும் இது ஆண்களின் உலகே என்பதை இந்நாவலும் காட்டும் இடமென்பதாகவும் கொள்ளலாம்

இந்நாவல் நமக்கு அக்காலத்திலிருந்த  சாதீய அடுக்குகள் தீண்டாமை தொற்று நோய்கள் பெண்களின் வாழ்வு முறை ஆண்களின் அதிகாரம் புதுக்கலாச்சாரங்கள் மெல்ல மெல்ல சமுகத்தில் நுழைவது என பலவற்றைச் சொல்கிறது.

சிவரம காரந்தின் பாட்டி தனது தள்ளாத வயதில் விருப்பு வெறுப்புகளின்றி இக்கதையை  அவருக்கு சொல்லியதால் கதையிலும் எந்த பாரபட்சமும் சார்பும் இன்றி கதை மாந்தர்கள்  அனைவரும் நடுநிலையுடன்  சித்தரிக்கபட்டிருக்கின்றனர்

மண்ணும் மழையும் பெண்களும் ஏழ்மையும் இசையும் இயற்கையுமாக அழகிய நாவல் இது. ராமனும்  அவன் தாயும் ஓர் இரவில் பொழியும் நிலவின் புலத்தில் நனைந்தபடி  கடற்கரையில் அமர்ந்திருக்கும் ஒருகாட்சி  சம்சாரம் ஒரு நரகமென்றாலும் அதிலும் ரசிக்கத்தக்க விஷயங்கள் சம்பவங்கள் நிகழ்வுகள் இருக்கும் என நமக்கு இக்கதை உணர்த்தும் ஒரு அழகுச்சாட்சி. அக்காட்சி  ஒரு கவிதையையைப்போல  கதையில் தீட்டப்பட்டிருக்கும்.

ஞானபீட விருது சாகித்ய அகாடமி விருது என பலவற்றைப் பெற்ற அறிஞரான சிவராம காரந்தின் கன்னட மொழிவளத்திற்கு சற்றும் குறையாமல் தமிழில் மிகசிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கும் திரு தி ப சித்தலிங்கையாவிற்கு வாசிக்கும் அனைவரின் நன்றிகளும் கட்டாயம்  உரித்தாகும்

நிலத்தில் படகுகள்

விஷ்ணுபுரம் விழாவில் வாங்கிய ஜேனிஸ் பரியத்தின் ‘ நிலத்தில் படகுகள் ‘’ கதைத்தொகுப்பை இன்று  2 மணிநேரத்தில் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். சமீபத்தில் வாசித்ததில் மிகவும் கவர்ந்த கதைகள்னு இதிலிருக்கும் எல்லாவற்றையுமே சொல்லலாம். வழக்கத்தைக்காட்டிலும் மெதுவாக வாசித்தேன்.

கதைக்களமும், கதாபாத்திரங்களின் பெயர்களும், உணவு வகைகளும், பானங்களும், கலாச்சாரமும், மொழியும், நம்பிக்கைகளும், அவர்களின் இடர்களும், துயர்களும், வாழ்வுமுறையும் மிக வேறுபட்டது நான் இதுவரையிலும் வாசித்தவற்றிலிருந்தும் என் வாழ்வுமுறையினின்றும். அதுவே மிகவும் வசீகரித்தது.  ஜேனிஸ் மண்மகள்தான்.  வாழ்ந்த இடத்தின் ஆன்மாவை இப்படி எழுத்தில் உள்ளபடியே கொண்டுவருவது அவருக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. திரு விஜயராகவன் துவங்கி  திரு.சிறில் அலெக்ஸ் வரையில் மொழிபெயர்த்தவர்கள் கதைகளின் ஆன்மாவை கொஞ்சமும் சிதைக்காமல் மெருகேற்றியிருப்பதும் வியப்பளித்தது.

நீர்த்துளிகளைக்கொண்டிருக்கும் கூரிய ஊசியிலைகளுடனிருந்த  பைன் மரஙக்களுக்கிடையிலும், ரோடோடென்ரான் மலர்க்கொத்துக்களை பார்த்தபடிக்கும், வாசற்படிக்கு இருபுறமும் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் ஆர்க்கிட்களை கடந்தும், மலைச்சரிவெங்கும் அடுக்கடுக்காக  தெரியும் வயல்வெளிகளிலும்,  வெடிக்க காத்திருக்கும் அடர் ஊதா ஜகரண்டா  மரங்களை தாண்டியும்,  ஷில்லாங்கிலும்,  போம்ரெங் குக்கிராமத்திலும், லிக்குமீரிலும், சந்த்பாரியின்  விஸ்தாரமான தேயிலைத்தோட்டங்களிலும் நடந்துகொண்டும், விடுதிகளில் நூடுல்ஸும், பன்றி இறைச்சியும், கிரீம் பன்களும் சாப்பிட்டுகொண்டும் கதைகளை வாசித்துக்கொண்டிருந்தேன் அல்லது நானும் அக்கதைகளுக்குள்ளேயே, கனவுகளில் வரும் எண்களிலிருந்து சூதாட்டத்தில் வெற்றிபெறுவதை கணிக்கும் தையல்காரர் சுலைமானாகவும், தங்க மாஸிர் மீன்களை பிடித்துக்கொண்டிருக்கும்  மாமா கின்னாகவும் குளிர்காயும் கரி அடுப்பின் கங்குகள் அணையும் வரை மகனுக்கு பழங்கதைகளை சொல்லிக்கொண்டிருக்கும் அம்மாவாகவும், பயணப்பைக்குள் சிவப்பு சம்பா அரிசியை மறைத்து வைக்கும் பாரிஷாவாகவும், கிராம்பும் சிகரெட்டும் மணக்கும் தோழியாகவும் இன்னும் பலராகவும் இருந்தேன்

முதல்பக்கத்திலிருந்தே கதைகளுக்குள் ஆழ்ந்து மூழ்கிவிட முடிந்தது. மந்திரங்கள், நீர்த்தேவதைகள், விசித்திரமான  நம்பிக்கைகள், குதிரைகள் பாய்ந்துவிழுந்து இறக்கும் ஏரிகள், மணக்கும் தேவதாரு மரங்கள் என பக்கத்துக்குப்பக்கம் மிகப்புதிய நான் இதுவரையிலும் வாசித்து அறிந்திராத பிரதேசங்களில் நடக்கும் கதைகளென்பதால் புத்தகத்தை கீழே வைக்கவே இல்லை

நேரில் விழாவில் சந்தித்து பேசியிருந்ததாலென்று நினைக்கிறேன், பல இடங்களில் ஜேனிஸையும் அவரது பால்யம் மற்றும் பதின்மவயது நினைவுகளையும் என்னால் அடையாளம் காணமுடிந்தது

இஸ்ரேலுக்கு கணவன் விட்டுச்சென்ற இரவில் பள்ளிப்பருவத்து காதலனைதேடிச்செல்பவள் , விடுமுறைக்கு செல்கையில் தனது காதலனை வேறு யாரும் அபகரித்துக்கொள்ளாலிருக்கனும் என்று விசனப்படும்  சிறுமி, புதிய லினன் துணியைபோல மணக்கும் பள்ளித்தோழி, காதலனை சடுதியில் மாற்றிக்கொள்ளும் இன்னொருத்தி, ஒரேயொரு மதியநேர பைக்பயணத்தில் விடுதலையை அறிந்துகொள்ளும் மற்றுமோர் சிறுமி, சாரா கிரேஸ், மெல்வின் என்று ஜேனிஸ்  அறிமுகபடுத்தும் பெண்கள் மிக வசீகரமானவர்கள், இனி என்றும் மறக்கமுடியாதவரகளும் கூட

மந்திரங்களும், நம்பிக்கைகளும், நோயும், கலவரமும், மலைத்தொடர்ச்சிகளும், செழிப்பான மண்ணும், தாவரங்களும், துயரங்களும், காதலும், பிரிவும், மர்மங்களும், முத்தங்களும், இறப்பும் இக்தைகளெங்கும்  தூவியிருப்பது போலிருந்ததுது. இப்படி nativityயுடன் கதைகளை படித்து வெகுகாலமாகிவிடது

எல்லாக் கதைகளுமே மிகச்சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டிருகின்றன என்றாலும் ஆகச்சிறந்ததென்று விஷால்ராஜாவின் கதையைச்சொல்லுவேன்

கதைகளுக்குள் ஆழ்ந்துவிட்டதால் வாசித்து முடிந்து சமையலறைக்கு இரவுணவு தயாரிக்கச் செல்கையில் என் வீடே எனக்கு மிகப்புதிதாக தெரிந்தது கதைக்களங்களிலிருந்து  என் மனம் இன்னும் விலகவேயில்லை சமைக்கபிடித்திருந்த  கரண்டி வழவழப்பான செதில்களை உடைய கா பாவாக தோன்றியது,  விளக்கு வெளிச்சத்தில்  ஜன்னல் வழியே கூரிய நுனிகள் கொண்ட பைன் மரமாக  இருந்தது என் பிரியத்துக்குரிய புன்னை

  இக்கதைகளில் வரும், பிடித்துவிட்டால் பிறகு ஒருபோதும் விடவே விடாத நீர்த்தேவதையைப்போல என்னை இந்த கதைகளும்  ஒரேயடியாக பிடித்துக்கொண்டு விட்டன

Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑