விஷ்ணுபுரம் விழாவில் வாங்கிய ஜேனிஸ் பரியத்தின் ‘ நிலத்தில் படகுகள் ‘’ கதைத்தொகுப்பை இன்று  2 மணிநேரத்தில் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். சமீபத்தில் வாசித்ததில் மிகவும் கவர்ந்த கதைகள்னு இதிலிருக்கும் எல்லாவற்றையுமே சொல்லலாம். வழக்கத்தைக்காட்டிலும் மெதுவாக வாசித்தேன்.

கதைக்களமும், கதாபாத்திரங்களின் பெயர்களும், உணவு வகைகளும், பானங்களும், கலாச்சாரமும், மொழியும், நம்பிக்கைகளும், அவர்களின் இடர்களும், துயர்களும், வாழ்வுமுறையும் மிக வேறுபட்டது நான் இதுவரையிலும் வாசித்தவற்றிலிருந்தும் என் வாழ்வுமுறையினின்றும். அதுவே மிகவும் வசீகரித்தது.  ஜேனிஸ் மண்மகள்தான்.  வாழ்ந்த இடத்தின் ஆன்மாவை இப்படி எழுத்தில் உள்ளபடியே கொண்டுவருவது அவருக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. திரு விஜயராகவன் துவங்கி  திரு.சிறில் அலெக்ஸ் வரையில் மொழிபெயர்த்தவர்கள் கதைகளின் ஆன்மாவை கொஞ்சமும் சிதைக்காமல் மெருகேற்றியிருப்பதும் வியப்பளித்தது.

நீர்த்துளிகளைக்கொண்டிருக்கும் கூரிய ஊசியிலைகளுடனிருந்த  பைன் மரஙக்களுக்கிடையிலும், ரோடோடென்ரான் மலர்க்கொத்துக்களை பார்த்தபடிக்கும், வாசற்படிக்கு இருபுறமும் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் ஆர்க்கிட்களை கடந்தும், மலைச்சரிவெங்கும் அடுக்கடுக்காக  தெரியும் வயல்வெளிகளிலும்,  வெடிக்க காத்திருக்கும் அடர் ஊதா ஜகரண்டா  மரங்களை தாண்டியும்,  ஷில்லாங்கிலும்,  போம்ரெங் குக்கிராமத்திலும், லிக்குமீரிலும், சந்த்பாரியின்  விஸ்தாரமான தேயிலைத்தோட்டங்களிலும் நடந்துகொண்டும், விடுதிகளில் நூடுல்ஸும், பன்றி இறைச்சியும், கிரீம் பன்களும் சாப்பிட்டுகொண்டும் கதைகளை வாசித்துக்கொண்டிருந்தேன் அல்லது நானும் அக்கதைகளுக்குள்ளேயே, கனவுகளில் வரும் எண்களிலிருந்து சூதாட்டத்தில் வெற்றிபெறுவதை கணிக்கும் தையல்காரர் சுலைமானாகவும், தங்க மாஸிர் மீன்களை பிடித்துக்கொண்டிருக்கும்  மாமா கின்னாகவும் குளிர்காயும் கரி அடுப்பின் கங்குகள் அணையும் வரை மகனுக்கு பழங்கதைகளை சொல்லிக்கொண்டிருக்கும் அம்மாவாகவும், பயணப்பைக்குள் சிவப்பு சம்பா அரிசியை மறைத்து வைக்கும் பாரிஷாவாகவும், கிராம்பும் சிகரெட்டும் மணக்கும் தோழியாகவும் இன்னும் பலராகவும் இருந்தேன்

முதல்பக்கத்திலிருந்தே கதைகளுக்குள் ஆழ்ந்து மூழ்கிவிட முடிந்தது. மந்திரங்கள், நீர்த்தேவதைகள், விசித்திரமான  நம்பிக்கைகள், குதிரைகள் பாய்ந்துவிழுந்து இறக்கும் ஏரிகள், மணக்கும் தேவதாரு மரங்கள் என பக்கத்துக்குப்பக்கம் மிகப்புதிய நான் இதுவரையிலும் வாசித்து அறிந்திராத பிரதேசங்களில் நடக்கும் கதைகளென்பதால் புத்தகத்தை கீழே வைக்கவே இல்லை

நேரில் விழாவில் சந்தித்து பேசியிருந்ததாலென்று நினைக்கிறேன், பல இடங்களில் ஜேனிஸையும் அவரது பால்யம் மற்றும் பதின்மவயது நினைவுகளையும் என்னால் அடையாளம் காணமுடிந்தது

இஸ்ரேலுக்கு கணவன் விட்டுச்சென்ற இரவில் பள்ளிப்பருவத்து காதலனைதேடிச்செல்பவள் , விடுமுறைக்கு செல்கையில் தனது காதலனை வேறு யாரும் அபகரித்துக்கொள்ளாலிருக்கனும் என்று விசனப்படும்  சிறுமி, புதிய லினன் துணியைபோல மணக்கும் பள்ளித்தோழி, காதலனை சடுதியில் மாற்றிக்கொள்ளும் இன்னொருத்தி, ஒரேயொரு மதியநேர பைக்பயணத்தில் விடுதலையை அறிந்துகொள்ளும் மற்றுமோர் சிறுமி, சாரா கிரேஸ், மெல்வின் என்று ஜேனிஸ்  அறிமுகபடுத்தும் பெண்கள் மிக வசீகரமானவர்கள், இனி என்றும் மறக்கமுடியாதவரகளும் கூட

மந்திரங்களும், நம்பிக்கைகளும், நோயும், கலவரமும், மலைத்தொடர்ச்சிகளும், செழிப்பான மண்ணும், தாவரங்களும், துயரங்களும், காதலும், பிரிவும், மர்மங்களும், முத்தங்களும், இறப்பும் இக்தைகளெங்கும்  தூவியிருப்பது போலிருந்ததுது. இப்படி nativityயுடன் கதைகளை படித்து வெகுகாலமாகிவிடது

எல்லாக் கதைகளுமே மிகச்சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டிருகின்றன என்றாலும் ஆகச்சிறந்ததென்று விஷால்ராஜாவின் கதையைச்சொல்லுவேன்

கதைகளுக்குள் ஆழ்ந்துவிட்டதால் வாசித்து முடிந்து சமையலறைக்கு இரவுணவு தயாரிக்கச் செல்கையில் என் வீடே எனக்கு மிகப்புதிதாக தெரிந்தது கதைக்களங்களிலிருந்து  என் மனம் இன்னும் விலகவேயில்லை சமைக்கபிடித்திருந்த  கரண்டி வழவழப்பான செதில்களை உடைய கா பாவாக தோன்றியது,  விளக்கு வெளிச்சத்தில்  ஜன்னல் வழியே கூரிய நுனிகள் கொண்ட பைன் மரமாக  இருந்தது என் பிரியத்துக்குரிய புன்னை

  இக்கதைகளில் வரும், பிடித்துவிட்டால் பிறகு ஒருபோதும் விடவே விடாத நீர்த்தேவதையைப்போல என்னை இந்த கதைகளும்  ஒரேயடியாக பிடித்துக்கொண்டு விட்டன