டிசம்பர் 2019 விஷ்ணுபுரம் விருது விழாவில் ஊர்சுற்றி கானல் நதி மற்றும் நினைவுதிர்காலம் ஆகியவற்றை வாங்கி வந்திருந்தேன். கானல் நதியை பொள்ளாச்சியிலிருந்து கும்பகோணம் வரையிலான ஒரு பயணத்தில்  தொடர்ச்சியாக வாசித்து முடித்தேன். ஊர்சுற்றியை எனக்கு முன்பே வாசித்திருந்த  நண்பர்களுடன் அதைக்குறித்து அவ்வப்போது பேசிக்கொண்டும் கதையைக்குறித்து சிலவற்றை  விவாதித்துக்கொண்டும்   ஒரு வார இறுதியில்வாசித்தேன். கடந்த திங்கட்கிழமை நினைவுதிர்காலத்தை துவங்கினேன். நேற்று வாசித்து முடித்தேன்.

யாரிடமும் வாசிப்புக்குறித்து பகிர்ந்துகொள்ளக்கூட முடியவில்லை . அப்படி ஒரு நிறைவு எனக்குள்.

எந்த புத்தகம் வாசித்தாலும் கதையும் மொழிநடையும் சில வர்ணனைகளும் வாசிக்கையில் நானே கட்டமைத்துக்கொண்டசில காட்சிகளும் உள்ளே மீள மீள நிகழ்ந்துகொண்டிருக்கும். பின்னர் கதையைக்குறித்து எழுதுவேன் அல்லது யாரிடமாவது பேசுவேன்

நினைவுதிர்காலம் அப்படியல்லாது வேறுபட்ட உணர்வுநிலையில் என்னை வைத்திருக்கிறது. எனக்கே எதை நம்ப முடியவில்லை என்றால் இந்தக்கதை எனக்கு புரிந்துவிட்டதுதான். இசைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது . கொங்குபிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவள் நான். என் வாழ்வு முழுக்க இசை போன்ற நுண்கலைக்கான exposure எள்ளளவும் இன்றி காடும் தோட்டமும் வீடும் வேலையுமாய் இருந்தது.  தப்பிப்பிழைத்து எப்படியோ கல்லூரியும் பல்கலையும் போய் படித்தேன் என்றாலும் அடிப்படிஅயில் அதே கிராமத்து உழைக்கும் வர்க்கத்து மனுஷிதான் நான்.

இசைக்கும் எனக்குமான தொடர்பென்றால் எப்போதாவது திரையிசைப்பாடல்களை கேட்பதும் ’நல்லாருக்கே’ என்றோ ’சகிக்கலை இந்தப்பாட்டு’ என்றோ சொல்லுவதோடு முடிந்துவிடும். மற்றபடி இசைக்கு என்னையும் எனக்கு இசையையும் துளியும் பரிச்சயமில்லை

இந்தக்கதை முழுக்க, (இதைக்கதை என்று சொல்லலாமாவென்றும் தெரியவில்லை) இசையை , ஒரு இசைமேதையை அவரது உறவுகளை அதன் சிக்கலான பல அடுக்குகளை அவரது வாழ்வு முழுமையை இசையின் பற்பல நுட்பங்களை பல வகையான இசையை இசையாளுமைகளை சொல்லியது.  வாழ்நாளில் பள்ளிப்பருவத்தில் கணேஷ் குமரேஷின் துவக்ககால கச்சேரியொன்றைத்தவிர வேறு இசைதொடர்பான கச்சேரிகளுக்கு கூட போயிறாத என்னை இக்கதை முழுவதுமாக கட்டிப்போடுவிட்டது.

இக்கதை முழுவதையும் என்னால் அனுபவித்து ரசித்து ஆழ்ந்து வாசிக்க முடிந்ததில் எனக்கே ஆச்ச்சர்யம்தான்

ஏறத்தாழ  250 பக்கங்கள் கொண்ட முழுக்கதையையும் நேர்காணல் உரையாடல் வடிவிலேயே கொண்டு வந்திருப்பதும் எந்த இடத்திலும் சிறிதும் தொய்வின்றி கொண்டு போயிருப்பதும் சிறப்பு.

வறட்சியான ஜீவனற்ற கேள்வி பதில்களாக இல்லாமல் சாமார்த்தியமான பொருத்தமான சரியான சுவாரஸ்யமான கேள்விகளும் அதற்கு சற்றும் குறைவில்லாத பதில்களுமாய் துவக்கத்திலிருந்தே கதையுடன் ஒட்டுதல் வந்திவிட்டிருந்தது. மேலும் ஆஷாவையோ திரு ஹரிஷங்கரையோ குறித்து தோற்றம் எப்படியிருக்குமென்று எந்த அபிப்பிராயமும் இல்லாததால் அவர்களைக்குறித்து எனக்குள் ஒரு கற்பனைச்சித்திரம் உருவாகிவிட்டிருந்தது. அவரை  பல இடங்களில் நுட்பமாக வர்ணித்துமிருந்ததால் அவரின் ஆளுமைக்கு எனக்குள் சரியான வடிவமொன்று அமைந்துவிட்டிருந்தது.

அவர்கள் பேசிக்கொண்டிருந்த அறை அந்த வீடு  அவரின் செல்லப்பிராணிகள் சமையலுக்கு உதவும் பெரியவர் சமையலில் என்ன பதார்த்தங்கள் அதில் அவர் விரும்பி உண்ட இனிப்பு ஒரு விளக்கைபோடுவது அதை  அணைத்து மஞ்சள் விளக்கை போடுவது  பேசிக்கொண்டிருக்கையிலேயே அந்தி மாயம் போல வந்து கவிழ்ந்துவிடுவது,இடையிடையே அவர் ஓய்வறைக்கு செல்வது, ஆஷாவின்  கார் கோளாறாவது, அவ்வப்போது இடையிடும் சில விருந்தினர்கள் அங்கிருக்கும் அலமாரிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் என்று விலாவாரியான விவரிப்புக்கள் இருந்ததால் நானும் அந்த அறையில் அமர்ந்திருந்தேன் என்றே சொல்லலாம். எப்பேர்ப்பட்ட ஆளூமை அவர் என்னும் பிரமிப்பு இன்னும் அகலவில்லை

மூத்த சகோதரரின் மீது மனக்குறை இருப்பினும்  மரியாதைக்குறைச்சலோ மலினமான அபிப்பிராயமோ துளியும் அற்றவர். அவரது ஆளுமை எனக்கு அவர் மீது பெரிதும் மரியாதை கொள்ள வைத்தது.

தில்லி சுல்தானின் அரசவையில் ஆஸ்தான பாடகராக இருந்த அவரது முத்தாத்தாவின் கதை மெய்ப்புக் கொள்ள வைத்துவிட்டது. அக்கதையை வாசிக்கையில் வாசிப்பதுபோலவே இல்லை எனக்கு  ஒரு புராதன கருப்பு வெள்ளைத்திரைப்படத்தில் நானும் ஒரு பாத்திரமேற்று அங்கே அக்கச்சேரியில் இசையைக்கேட்டபடிக்கு அமர்ந்திருந்தேன்.

கிராமத்தில் அழியில் எதிர்ப்பட்டவருக்கென ருத்ரவீணை வாசித்த அவரது முன்னோர், கோளாறாகி ரயில் நின்று விட அப்போது புழுதியில் அமர்ந்து அந்த கிழவனாருடன் சேர்ந்து கச்சேரி செய்த அண்ணா, விசிலிலேயே இசைத்த நண்பர், காரணமறியா அவரது தற்கொலை, காணாமலே போன இன்னொரு தோழன் என்று ஒரு புனைவுக்கதையின் எல்லா சுவாரஸ்யங்களும் இருந்தது இதில்.  பல முக்கியமான வேலைகளை புறக்கணித்துவிட்டு தொடர்ந்து வாசிக்கச்சொன்னது கதை என்னை

தெய்வீகமான முப்பாட்டன்கள்,  நேர்மையையே முக்கியமாக கொண்டிருந்த, தகப்பனார் மாபெரும் இசைமேதையான அண்ணா அவரது சில சறுக்கல்கள், அவர் மீது  இவருகிருக்கும் ஒரு மாற்றுக்கூடகுறையாத மரியாதையும் பக்தியும் ஆஷாவின் அந்தரங்க வாழ்வைக்குறித்துத் தெரிந்துகொண்ட சில விஷயங்களுமாக நினைவுதிர்காலம் என்றென்றைக்குமாய் மனதில் வரி வரியாக நினைவிலிருக்கும் கதைகளொலொன்றாகிவிட்டது

பல பக்கங்களில்  அற்புதமான கவிதைகளை பத்திகளாக கொடுத்திருந்தது போலிருந்தது. பத்திகளின் வரிகளை மடக்கி கவிதைகளாக்குவதைத்தான்  வாசித்திருக்கிறேன் இது முற்றாக எதிராயிருந்தது. உதாரணமாக  கச்சேரி நாளன்று அவரது மனநிலையைப்பற்றி சொல்லும் பத்தியை சொல்லுவேன்

// கச்சேரி நாளில் செவிகளில் ஒருவிதக்கூர்மை அதிகரிப்பது, அதிகாலைப்பொழுதின் நிர்மலமான அமைதியின் பரப்பில் ஒவ்வொரு ஒலியாக சொட்டி குமிழிகளையும் வளையங்களையும் உருவாக்குவது, புத்தம் புதிய காகம், முதன்முறையாக காதில் விழும் சைக்கிள் ஒலி, அந்தக்கணம் தான் பிறந்து உயர்ந்தது போன்ற ஜன்னலோர மரக்கிளை//

அபாரம்

இப்படி பல பக்கங்களில் அடிக்கோடிட்டுக்கொண்டே வாசித்தென்

சத்தியத்தில் அடிக்கோடிட்டு வாசிக்கும்படியான புத்தகங்களை அரிதாகவே கிடைக்கப்பெறுகிறேன்

ஸ்ரீஹரிஷங்கர் அவரது மனைவி ஊர்மிளாவைப்பற்றிச்சொல்லியவற்றை வாசிக்கையில் மட்டும் அங்கெயே மனம் நின்று விட்டது. அவ்வரிகளை மீள மீள வாசிப்பேன். பின்னர் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு வேறு ஏதேனும் வழக்கமான இல்பேணுதலுக்கு சென்று விடுவேன் மனம் மட்டும் கடுமதுரம் ஒன்றை சாப்பிட்ட தித்திப்பில் நிறைந்திருக்கும் எப்படியாகப்பட்ட பேரன்பு அது என்று சிலாகித்துக்கொண்டேயிருக்கும் மனம்

இருவருமாக கருப்புக்கார் ஒன்றைத்துரத்திச்செல்லும் அந்த கனவிற்கு பின்னர் உங்கள் மனைவியிடன் உங்களுக்கும் அதே போன்ற கனவே வந்ததென்று சொன்னீர்களா என்னும் கேள்விக்கு // பளிங்கு பொன்ற மனம் அது வீணாக கலக்குவானேன் . அவளை பிரியமாக அணைத்துக்கொண்டேன்//  என்கிறார் அறியமால் கண் நிறைந்தது எனக்கு வாசித்ததும்

/ மாயப்பிரசன்னத்தின் வசம் சொந்தக் கவலைகளை ஒப்படைத்துவிட்டு அடைக்கலமாகிவிடும் மார்க்கம் எவ்வளவு இதமாயிருக்கிறது//

 இவ்வரிகளிலும் மனம் சிக்கிக்கொண்டது கொஞ்ச நேரத்திற்கு

ஹிந்துஸ்தானி இசையுலகம் எனக்கு முற்றிலும் பரிச்சய்மற்றது என்பதை விடவும் அந்நியமானது என்றே சொல்லுவேன்.என்னால் இந்தக்கதையுடன் இத்தனை ஆழ்ந்துபோக முடிந்ததின் ஆச்சரயம் இன்னும் நீடிக்கிறது . ஸாரங்கியும் வயலினும் குரலிசையும் மொஹர்சிங்கும் மேண்டலினும் ஜுகல்பந்திகளும்  ராகங்களும் அதில் புகுத்தப்ட்ட புதுமைகளும் மேல் கீழ்ஸ்தாயிகளும் தாளமும் ஸ்வரமுமாக எனக்கு அறிமுகமற்ற ஆனால் மிகவும் வசீகரமான ஒரு உலகிலிருந்தேன் வாசிக்கையிலும் இதோ இப்போதும்

எதேச்சையாக கானல் நதிக்கு பின்னரே நான் இதை வாசிக்கும்படி அமைந்துவிட்டது

கானல்நதி தஞ்செய் முகர்ஜி என்னும் ஆளுமையைபற்றியது. அதில் என்னால் பெரிதாக இறங்க முடியவைல்லை

இப்படி கதையைக்குறித்து எழுதிக்கொண்டேபோனால் கதை வந்திருக்கும் 286 பக்கங்களையும் விட அதிகமக எழுதுவேன் போலிருக்கின்றது. அத்தனைக்கு இக்கதையைக்குறித்துச் சொல்ல எனக்குள் நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது.. இசையை கொஞ்சமும் அறிந்திராத ஒரு வாசகிக்கு இந்த கதை இத்தனை பரவசமளிக்குமென்றால் அதன் நுட்பங்களை அறிந்தவர்களுக்கு இது எப்படி இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்