![](https://i4y105.n3cdn1.secureserver.net/wp-content/uploads/2021/11/telegrah-plant.png)
தொட்டாச்சிணுங்கியை அறிந்திருக்கும் பலருக்கு தொழுகண்ணியை குறித்து தெரிந்திருக்காது. Codariocalyx motorius எனப்படும் இந்த தொழுகண்ணி சூரியனை நோக்கி அசையும் இலைகளை கொண்டிருப்பதாலும் சூரிய ஒளியில் இலைகள் வேகமாக அசைந்துகொண்டே இருப்பதாலும் உலகின் அனைத்து மொழிகளிலும் இது நடனமிடும் செடி அல்லது தந்திச்செடி என்று அழைக்கப்படுகின்றது.( இணையறிவியல்பெயர்: Desmodium motorium)
பட்டாணி குடும்பத்தை சேர்ந்த 25-35 இன்ச்உயரம் வரை வளரும் குறுஞ்செடிவகையை சேர்ந்த தொழுகண்ணி உலகெங்கிலும் வனப்பகுதிகளில் காண்படுகிறது. இவற்றின் அடர்பச்சை நீள்முட்டை வடிவ இலைகள் பெரியதும் சிறியதுமாக இரண்டு வகையிலும் காணப்படும். ஒவ்வொரு பெரிய இலையின் அடியிலும் இரண்டு சிறு இலைகள்அமைந்திருக்கும்
காயகல்ப மூலிகயான இதன் சணப்பையை போலிருக்கும் இலைகள் அசைந்து அருகிலிருக்கும் இலையுடன் இணைந்து தொழும் கைகளை போல கூப்பியும் விலகியும் அசைவதால் இதற்கு தொழுகண்ணி என்று பெயர்.
![](https://i4y105.n3cdn1.secureserver.net/wp-content/uploads/2021/11/dance-2.gif)
2 வருடங்கள் வரை வாழும் இச்செடியில்,வண்ணத்துப்பூச்சிகளை கவரும் சிறிய இளம்ஊதா நிற மலர்கள் குளிர்கால துவக்கத்தில் தோன்றும். அவரையை போன்ற இளம் பச்சை நிறக்காய்களில் சிறிய கருப்பு நிற விதைகள் இருக்கும். விதைகளிலிருந்தும், நறுக்கிய தண்டுகளிலிருந்தும் இச்செடியை வளர்க்கலாம். இவற்றின்விதைகள் கடிமான விதையுறையை கொண்டிருப்பதால் 10 லிருந்து 12 மணி நேரம் இவற்றை நீரில் ஊற வைத்தபின்னரே அவை முளைக்கும் திறனை அடையும்
![](https://i4y105.n3cdn1.secureserver.net/wp-content/uploads/2021/11/flower-of-dancing-plant.jpg)
சூரியன் உச்சியில் இருக்கும் போது இலைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்தும் பிரிந்தும் வேகமக அசைந்துகொண்டெ இருக்கும் சூரியனின் சக்தி இதற்கு அதிக ஆற்றல் அளிப்பதனால் இது நிகழலாம் என்கிறது தாவர அறிவியல். ஆசியாவை தாயகமாக கொண்ட இந்த தாவரம், சதுரகிரி மலையில் அதிகம் காணப்படுகின்றது. இந்த மூலிகை உடலில் வெட்டுப்பட்ட பாகங்களை உடனே இணைக்கும் என்று சித்தர் பாடல்கள் குறிப்பிடுகின்றன.
சூரிய ஒளி படுகையில் சிற்றிலைகள் முதலில் வேகமாகவும், அவற்றை தொடர்ந்து பெரிய இலைகள் மெதுவாகவும் அசைந்து கொண்டே இருப்பது மனிதர்களுக்கு கேட்காத சங்கீத்தின் தாளத்துக்கேற்றாற்போல் அவை நடனமிடுவது போலிருக்கும். எப்போது அசையவேண்டும் என பெரிய இலைகளுக்கு, சிற்றிலைகள் தகவல் சொல்லுகிறது என்னும் பொருளில் இவற்றிற்கு தந்திச்செடி என்றும் பெயருண்டு
அதிசயதக்க விதமாக அதிக அளவிலான ஒலியிலும் இவற்றின் இலைகள் அசைகின்றன. ஒலி மற்றும் ஒளிக்கேற்ப இலைகள் அசையும் காரணத்தை இன்னும் துல்லியமாக அறிவியலாளர்களால் கண்டறிய முடியவில்லை
Dr. ஜகதீஷ் சந்திரபோஸ் இந்த தாவரத்தில்தான் பல ஆய்வுகளை செய்தார். அசையும் தாவரங்களின் ஆற்றல் என்னும் தனது நூலில் சார்லஸ் டார்வினும் இந்த செடிகளை குறித்து விவரித்திருக்கிறார் (The Power of Movement in Plants1880.)
![](https://i4y105.n3cdn1.secureserver.net/wp-content/uploads/2021/11/pods.jpg)
இதன் வேர்கள் பாரம்பரிய மற்றும் நாட்டு மருத்துவத்தில் முடக்குவாதம், வெட்டுக்காயங்கள் மலேரியா, மற்றும் மஞ்சள் காமாலைக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது. இதன் பல வேதிச்சேர்மானங்கள் நச்சுத்தன்மை கொண்டிருப்பதால் மருத்துவர்களின் அறிவுரைப்படி மட்டுமே இதனை மருந்தாக உட்கொள்ள வேண்டும். இவை அலங்காரச்செடிகளாக உலகெங்கிலும் தொட்டிகளிலும் வளர்க்கப்படுகிறது.
இலைகளின் நடனத்தை காண: https://youtu.be/m3-LJmFZ5X4