சிறு வயதிலிருந்தே அல்லது நினைவு தெரியத்துவங்கி, கள்ளமற்ற சிறுமித்தனம் அகன்று குடும்ப நிகழ்வுகள், அப்பா என்பவரின் வன்முறைகளை எல்லாம் கவனித்து, அது உண்டாக்கிய  அச்ச உணர்வில் மனம் நிரம்பியிருந்த காலத்திலிருந்தே கனவுகள்  வருவதும் அவை அப்படியே நினைவில் இருப்பதும், மனதில் மறைந்திருக்கும் ஏராளமானவை கனவுகளாக வருகையில்,  ஒரு சில சமயங்களில் ஆழ்ந்த உறக்கத்தில்  ஆழ்மனம் விழித்துக்கொண்டு பூதாகரமாக எதிரில் அப்போது நிற்பவற்றை கண்டு அலறி விழிப்பதும், இன்று வரையிலும் வாடிக்கையாகி விட்டிருக்கிறது

 இதன் பொருட்டே வெளியாட்கள் யாருடனும் இரவு தங்குவதில்லை.  இளமையில் இருந்து  என்னை அச்சுறுத்தும் ஒரு தொடர் கனவென்றால் பொள்ளாச்சி கடைவீதிகளில் நான் அதிகம் புழங்கி இருக்கும் குறிப்பிட்ட சில தெருக்களில் மணிக்கட்டு வரை துண்டிக்கப்பட்டு இருக்கும் ஒரு மாபெரும் கையொன்று குருதி வழிய என்னை துரத்திக் கொண்டு வருவதுதான். எத்தனையோ இரவுகளின் உறக்கத்தை,  தலை தெறிக்க கண்ணீருடன்  அந்த கைக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்கும்  அதே கனவு  சிதைத்திருக்கிறது.

துரத்திக்கொண்டிருந்த அந்த கையை பல வருடங்களுக்கு பின்னர் சரண் தருணின் பிஞ்சுக் கரங்கள்  விரட்டி விட்டிருக்கின்றன,

 எல்லாக் கனவுகளும் விழித்தெழுந்த பின்னரும் மறக்காமலிருப்பதால் கனவிலிருந்து முழுமையாக விலகாமலே, பல வருட பயிற்சியால் உள்ளம் விழித்து உடலை அன்றைய தினத்துக்கு தயார் செய்து விடுகையில்,, கனவுக்கும் நனவுக்குமான இடைப்பட்ட ஒரு வெளியில் சில கணங்கள் தடுமாறுவேன்.

கனவுகளில் நிறங்கள் தெரியாது அனைத்து கனவுகளும் கருப்பு வெள்ளைதான் என   வாசித்திருக்கிறேன் ஆனால் என் கனவுகள் எல்லாம் வண்ணமயமான வைகளே. செக்கச்சிவந்த குருதியும் பல வண்ண மலர்களும், பல நிறங்களில் உடையணிந்திருப்பவர்களும் நிறைந்திருக்கும் பிறிதொரு இணை உலகில் தான் நான் கனவுகளில் திகழ்கிறேன் எல்லா கனவுகளும் எனக்கு தரும் ஆச்சரியத்தை விட,கனவுகள் நிகழும் அந்த  முற்றிலும் புதிய, நான் இதுவரை அறிந்திருக்காத இடங்கள், வீடுகள், அறைகள், மரச்சாமன்கள் கழிப்பறைகள் ஆகியவையே எனக்கு ஆச்சரியத்தையும் திகைப்பையும் அளிப்பவை.கழிப்பறைகள், மிக அசுத்தமான கழிப்பறைகள் அடிக்கடி கனவுகளில் வருகிறது

ஒரு மங்கிய ஒளி நிறைந்திருக்கும் மாலைப்பொழுதில் அத்தனை துலங்கித்தெரியாத காட்சியில் கோவில் இருக்கும் ஒரு சந்தடி மிக்க கடைத் தெருவில் சைக்கிளில் கனகாம்பர சரம் விற்றுச்செல்லும் ஒருவர் அங்கே ஸ்தூல வடிவில் நிற்கும் என்னிடம் ஒரு கனகாம்பர மலர்ச்சரத்தை  கொடுப்பதை நானே மிக உயரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் கனவு பல முறை வந்திருக்கிறது. அதைப்போல் ஒரு கோவில் தெருவை எங்கும் எப்போதும் நான் கண்டதே இல்லை.

 கனவுகளில் இறந்து போகும் உறவினர்கள் சிலர் கனவுக்கு அடுத்த நாட்களில் இறந்து போயிருக்கிறார்கள். இறந்த பலர் பின்னர் கனவுகளில் தொடர்ச்சியாக வந்து கொண்டும் இருக்கிறார்கள். 

கனவுகளுக்கு அர்த்தம் சொல்பவர்கள் என் கனவுகளின் இத்தனை வகைகளை கேட்டால்  திகைத்துப்போய் விடுவார்கள் குடும்ப உறுப்பினர்களில் மகன்களும் அடிக்கடி  வருவதுண்டு

எனக்கு பெரும் அச்சத்தை  கொடுக்கும்  ஆழமான நீர் நிலைகள், கொந்தளிக்கும் கடல், வெள்ளம் பெருக்கெடுத்தோடும் ஆறுகளும் அவற்றின் நடுவே திசையறியாது செய்வதறியாது நின்றிருக்கும் நானும் பல கனவுகளில் வருவதுண்டு.

மிக உயரமான மலைச்சரிவுகளில் விளிம்புகளை பற்றிக் கொண்டபடி நடக்கும் சாகச ஆபத்து பயணங்களும்    கனவுகளில்உண்டு

பல தெய்வ சன்னதிகள் வருவதுண்டு. சில அம்மன் கோவில்கள் அடிக்கடி வரும் எனக்கு தெரிந்த கோவில்கள் என்றால் அங்கு   கனவிற்கு பிறகு நேரில் செல்வதுமுண்டு 

பல கோவில்கள் நான் அறிந்திருக்காதவை. சமீபத்தில்  வந்த கனவொன்றில் நானும் தருணும் பேருந்தில் பயணிக்கிறோம், வேட்டக்காரன்புதூரில் என் தாத்தாவின் வீட்டை பேருந்து கடைக்கையில் ‘’ தருண், தருண் இதுதான் எங்க வீடு’’ என்று உற்சாகமாக கூச்சலிடுகிறேன். தருண் மண்  நிறத்தில் முழுக்கை சட்டை போட்டுக்கொண்டு என் அருகில் அமர்ந்திருக்கிறான் அடுத்த காட்சி (ஆம் காட்சிதான்) நாங்கள் இருவரும் ஒரு பழங்காலத்து சிதிலமடைந்த தாழ்வான ஒட்டு வீட்டின் முன்பாக நிற்கிறோம்.

 அந்த வீட்டுக்கு முன்பெப்போதோ நான் வந்திருப்பதாகவும் அந்த இடம் என்னில் ஏதோ அதிர்வுகளை உண்டாக்குவதாகவும் தருணிடம் நான் சொல்லிக் கொண்டிருக்கையில் கதவு திறக்கிறது. அது ஒரு வீடல்ல ஒரு கோவில் , உள்ளே வெகு தூரத்தில் கரிய சிலையாக அம்மனும் அவளுக்கு பூசை செய்யும் ஒரு பெண்ணும் மங்கலாக தெரிகிறார்கள்

  காற்று அதிகம் இல்லாத இருட்டான அக்கருவறை எதிரே விபூதி சிதறிக்கிடக்கும் தரையும் கம்பிகளும் இருக்கும் இடத்தில் நான் நிற்கிறேன் தருணை திரும்பி பார்க்கையில் அவன் மேல்சட்டை இல்லாமல் இருக்கிறான்.

.எனக்கு முன்பாக இருபெண்கள் அங்கு வழிபட வந்திருக்கிறார்கள் கற்பூர ஆரத்தி தட்டை கொண்டு வுந்தால் அதில் வைக்க பணம் ஏதும் கொண்டு வரவில்லை என்று பதறி ’’தருண் உன்கிட்டே பணம் இருக்கா’’ என்று கேட்கிறேன் அவனும் பர்ஸ் கொண்டு வரவில்லை என்கிறான்

இரு பெண்களில் பின் கொசுவம் வைத்த புடவை அணிந்த ஒருத்தி மட்டும் குனிந்து நெற்றியில் விபூதியிட்டு கொண்டே என்னை கடந்து வெளியேறுகிறாள்  

நான் அங்கிருந்த விபூதி கொட்டப்பட்டு கிடந்த உண்டியலின் மீது வைத்திருந்த உலர்ந்த மருகு கட்டொன்றிலிருந்து கொஞ்சம் பிய்த்து எடுத்து என் தலை பின்னலில்,வைத்துக்கொள்கிறேன்

இந்த கனவில் வெகு தெளிவாக தெரிந்தது கோவில் நுழைவாயிலில் கதவின் நிலவுக்கு வெகு அருகே மேல்பகுதி சுவற்றில் செண்பக படித்துறை அம்மன் கோவில் என்று எழுதியிருந்த வாசகங்கள் தான்.

கங்காபுரம் வாசித்த அன்று ஒரு பெரும் வணிகவளாகம் போல, அல்லது அரண்மனை போலிருக்கும் ஓரிடத்தின் அகன்ற பெரும் படிக்கட்டுகளில் அமர்ந்து யாரிடமோ பேசிக்கொண்டிருகையில் அவ்வழியே வரும் ஒரு காரில் இருந்து செல்வச் செழிப்புள்ள பெரியகுடும்பத்தை சேர்ந்தவள் என்று  தோற்றத்திலேயே தெரியும்  இளம்பெண்ணொருத்தி வுந்து காரிலிருந்து இறங்கி ’’ஓசை எழுப்ப வேண்டாம் சித்தி வந்திருக்கிறார்கள்’’ என்றாள்.

 நான்அந்த கட்டிடத்துக்கு  உள்ளே செல்கையில் தூரத்தில் ஒரு திண்ணையில் கேரள முண்டைபோல் ஒரு தந்த நிற புடவையில் ஒரு மூதாட்டி அல்லது பேரரசி அமர்ந்திருக்கிறார்கள் ஒரு காலை மடித்தும் மற்றோரு காலை தொங்கவிட்டும். அவரது வெள்ளிநிற கூந்தல் அலையலையாக படிந்திருக்கிறது. சிவப்பில் குங்குமப்பொட்டு பெரிய வட்டமாக நெற்றியில்.

 என்னை நிமிர்ந்து பார்த்து ’வா’ என்று சைகை செய்கிறார்கள் கைகளால். அருகில் சென்று காலடியில் அமர்கிறேன் அவரது சுருக்கங்கள் நிறைந்த தூய பாதங்களையும் ஒரு விரலில் கம்பி போல அணிந்திருக்கும் மெட்டியையும் பார்க்கிறேன் அவரது மடியில் தலைவைத்து பொங்கிப் பொங்கி அழுது கொண்டிருந்தேன் நெடுநேரம்.

கனவுகளை  நடுராத்திரியில்  எழுதி குறித்துக் கொள்வதும் உண்டு இறந்துபோன ராஜமத்தை  மாமா பலமுறை வந்திருக்கிறார் சமைத்து போடச்சொல்லி, சமையலைறையில் தரையில் அமர்ந்து சாப்பிட்டார் அதுவும்  பொள்ளாச்சி பழைய வீட்டில்

அந்த வீடு. துரத்தும் அந்த  கைகளைப்போன்றே எத்தனை விலக்க முயன்றும் மனதில், நினைவில். கனவில் அப்பிக்கொண்டு போக மறுக்கிறது அங்கு நானிருந்த  காலங்களின் நினைவை எப்படியாவது நீக்க, அகற்ற, அழிக்க முயன்று கொண்டே இருக்கிறேன்

 துயர் நிறைந்த ,வலி நிறைந்த அப்பா என்பவரின் ஆணவமும் வன்முறையும் கேள்வி கேட்க ஆளில்லாததால் தலைவிரித்தாடிய காலங்களில் எந்த துணையுமில்லா சிறுமிகளான எங்களிருவருக்கும் நிகழ்ந்த வன்கொடுமைகள் அவை உண்டாக்கிய  மனச்சிதைவுகளை எல்லாம் எப்படியாவது மறக்க வேண்டும் நிராதரவான இருசிறுமிகளின் துயர்களும் வலிகளும் அவமானங்களும் பசியும் நிறைந்திருக்கும் வீடு அது

 அந்த வீட்டை நான் என் நினைவிலிருந்து அழிக்க முயன்றுகொண்டே இருக்கிறேன் ஆனால் கனவில் அடிக்கடி வருகிறது அவ்வீடு இப்போதும்  அந்த  வீட்டின் வாடகையை ஓட்டுநர் செந்தில் அப்பா என்பவருக்காக  வாங்கப்  போகையில் நான் வீட்டிலிருந்து வெகு தூரம் தள்ளி காரை நிறுத்தச்சொல்லி வீட்டு எதிர்ப்புறமாக அமர்ந்து கொள்ளுவேன் எனினும் என் அகம் அந்த வீட்டை அந்த வீட்டில் எனக்கு நிகழ்ந்தவற்றை எல்லாம் திரும்பி வெகு நெருக்கமாக பார்த்துக்கொண்டிருக்கும் அன்றைக்கெல்லாம் இரவில் அலறிக்கொண்டே தான் எழுவேன்.

சிலநாட்களுக்கு முன்னரும் கனவில் அதே வீட்டில் நானும் மகன்களும் இருக்கிறோம் சமீபத்தில் இறந்துபோன சரண் அப்பாவின் பெரியம்மா அதே கம்பீர  உடல்வாகுடன் அதே ஈரோட்டுப்பக்கம் கைம்பெண்கள் உடுத்தும் காவி புடவையும் வெள்ளை ரவிக்கையுமாக  கைகளில் சிறு துணி மூட்டையுடன் கணீர் குரலில் ’தேவி’ என்றழைத்து கொண்டு வருகிறார்

 நான் கல்லூரிக்கு புறபட்டுக்கொண்டிருக்கிறென் அவசரமாக. துறைத்தலைவரிடம் ஒரு மணி நேரம் தாமதமாக வருவதாக அலைபேசியில்  சொல்கிறேன்.  அந்த பெரியம்மா அந்த வீட்டில் இருக்கும் சிறு பால்கனி போன்ற வெளித் திண்ணையில் படுத்துக்கொள்வதாக சொல்லி ஒரு தலையணை கேட்கிறார் கொடுக்கிறேன் அப்போது நல்ல இளங்காற்று மழை மணத்துடன் வீசுகிறது. மறு நாள் லஷ்மமி சொல்லுகிறாள் பித்ருக்களுக்கு நீர்க்கடன் செய்யும் முக்கிய நாளான மாகாளய அமாவாசை அந்த முந்தின நாளென்று

. ஜெ சில முறை கனவில் வந்திருக்கிறார் ஒரு கனவில் அவருக்கு தாளமுடியாத முதுகு வலி. அருணாவும் சிலமுறை உடன் இருந்திருக்கிறார்

கல்லூரி முகப்பில் இருக்கும் ஒரு மகிழ மரத்தடியில் ஸ்டூலில் அமர்ந்திருக்கும் எனக்கு வேண்டிய, முகம் தெளிவில்லாத ஒருவர் எனக்காக காத்துக்கொண்டிருக்கும் கனவு அடிக்கடி வரும் வெள்ளைவேட்டி சட்டையில் இருக்கும் அவர் எனக்கு முன்பே வந்து என்னை கண்டதும் எழுந்து புன்னகைத்தபடி என்னை நோக்கி வருவார்.

அதே நபர் இந்த வேடசெந்தூர் வீட்டில் சிறப்பாக வீட்டிலிருப்போரால்  உபசரிக்கப்பட்டு,  இல்லாத ஒரு கதவு  வழியே வெளியே வந்த கனவும் வந்தது

அவர் எப்போதும் வெள்ளை வேட்டி சட்டையில் வருவது வழக்கம்

நேற்றைய அல்லது இன்றைய அதிகாலை கனவு விரிவாக இருந்தது அதிகாலை வரை துண்டு துண்டாக மூன்று முறை கனவு நீண்டது.

பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தில் ஏறி மூன்று பேர் அமரும் இருக்கையில் நடுவில் அமர்கிறேன் அடுத்த பகுதியில் எனக்கு முன்னால் என் பழைய மாணவியும் அவளது காதல் திருமணத்தில் நான் இடைபட வேண்டியிருந்த போது என்னுடன்  மிக நெருக்கமாக இருந்து பின்னர் ஒரு புள்ளியில் முற்றிலுமாக விலகிய சங்கீதா,  அவளது சிறு மகன், கணவர் ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள். நான் அவர்களைச் சந்திக்க விரும்பவில்லை என்னருகில் மூன்றாவதாக அமரும் பெண் ஒரு வெள்ளை மூட்டையை காலடியில் வைக்கிறாள் அதற்கருகில் என் வீட்டில் இருக்கும் பச்சை நிற வயர் கூடையில் என் பிரிய குட்டி லேப்டாப் வைக்கப்பட்டிருக்கிறது

அந்தப் பெண் விசித்திரமாக என்னிடம் ’’ஏன் உன் காதலனை உன்னால் கல்யாணம் செய்துகொள்ள முடியவில்லை’’ என்று விசாரணை போல் கேட்கிறாள்

வீடு திரும்பி, அது ஒரு புதிய வேறு வீடு, சாம்பவியிடம் இதை சொல்லி கொண்டிருக்கையில் லேப்டாப் பையை கொண்டு வந்தேனா இல்லையா என்று சந்தேகிக்கிறேன் சாம்பவி பதட்டமாக உள்ளே போய்,  அது பத்திரமாக இருப்பதை பார்த்து சொல்லுகிறாள்

பின்னர் மித்ரா வீட்டில் இருக்கிறேன்மிகப்புதிதான ஒரு இடமது மாடிஅறையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒரு சு.ராவை  அல்லது மித்ரா மாமனாரை நினைவூட்டும் ஒரு வேட்டி சட்டையிலிருக்கும் முதியவரும் அவருக்கு எதிரில்  தரையில் சுவற்றில் முதுகை சாய்த்து அமர்ந்திருக்கும் நாகராஜுமாக இருக்கிறார்கள். நான் யாருடனும் பேசாமல் அங்கு தரையில் அமர்கிறேன் அந்த முதியவர் நாகராஜிடம் தனக்கு பிரியமான அந்த திண் பண்டம் எங்கே என்று கேட்கிறார் அந்த ’ப ’வில் தொடங்கும் பண்டத்தின் பெயர் எனக்கு மிக புதிதாக இருக்கிறது கனவிலும் அப்பெயர் மனதில் படியவில்லை அந்த பண்டம் வைக்கப்படும் சிறு பெட்டி என் முன்னால் இருக்கிறது அதை திறந்து பார்க்கிறேன் முந்திரி பருப்பின்  வடிவில் அதே அளவில் ஆனால்  அல்வாவின் அடர்சிவப்பில் மென்மையான, இனிப்பான  மூன்று துண்டங்கள்  இருக்கிறது அருகில் இருந்த சிறுமி தான் அதை வாங்கி வருவதாக சொல்லி ஓட்டமாக ஓடுகிறாள் .

நான் புறப்பட்டு ராஜமத்தையிடம் சொல்லிக்கொள்ள சமையலறைக்கு போகிறேன் அந்கு மித்ரா தலையில் ஷாம்பூ நுரையுடன் சமையலறையில் கண்ணீருடன் ஏதோ கடிதமொன்றை தேடிக்கொண்டிருக்கிறாள். அது மித்ரா என்பதை கேசம் ,குறைவாக  இருக்கும் அவளது தலையின் பின்புறத்தை கொண்டே  அடையாளம் காண்கிறேன்

அங்கு வேறு சிலரும் இருக்கிறார்கள் அனைவரும் எனக்கு முகம் காட்டாமல் முதுகை காண்பித்தபடி

வெளியில் இருட்டான ஒரு முற்றம் அங்கு நிற்கும் ராஜமத்தையிடம் விடை பெற்றுக் கொள்கிறேன் அந்த சிறுமியும் அருகில் இருக்கிறாள் அத்தை மித்ராவை  குறித்து என்னவோ இகழ்ச்சியாக சொல்லுகிறது 

என்னால் அங்கிருந்தே பிரதான சாலையை காண முடிகிறது நல்ல இருட்டு பேருந்துகளின் முகப்பு வெளிச்சமும், ஒலியும் சீறி சீறி சென்று கொண்டிருக்கிறது விரைந்து சாலையின் இருபுறமும் பார்த்தபடி கடக்கிறேன் சாலையின் ஒரு ஓரத்தில் பல ஆட்டோக்களும் அவற்றின் எதிரே ஆட்டோ டிரைவர்களும் நிற்பது மங்கலாக தெரிகிறது.

 நான் கடக்கையில் சாலையில் ஒரு வாகனம் கூட இல்லை எதிர்ப்புறம் சென்று நின்று கைப்பையிலிருந்து சில்லறை காசுகளை எடுக்க எத்தனிக்கையில் ஒரு ஒல்லியான   30 வயதிலிருக்கும் ஒரு பச்சை நிறபுடவைக்காரி என்னை அவசரப்படுத்தி ’’ஏறு  ஏறு’’ என்று அப்போது வந்து நிற்கும் ஒரு பேருந்தில் ஏற சொல்லிவிட்டு அவள் எனக்கு முன்பாக ஏறியும் விடுகிறாள் நான் பேருந்தின் முதற்படியில் காலை வைக்கையில் உள்ளிருந்து கண்டக்டர் ’’காந்திபுரம் காந்திபுரம்’’ என்று கூவும் சத்தம் கேட்கிறது உடனே நான் காலை பின்னால் எடுத்து விடுகிறேன் ’’நான் உக்கடமல்லவா போகனும் பொள்ளாச்சி போக’’  என்று மனதில் கனவில் நினைத்துக்கொள்கிறேன்

.

இறங்கி கைப்பையில் இருந்து  5 ரூபாய் நாணயமொன்றை கையில் எடுக்கையில் முன்பு வந்தவளை காட்டிலும் இளையவளாக  வட்டமுகம் கொண்ட இன்னுமொரு பச்சைப் புடவைக்காரி ’’இந்த பஸ்ஸில்ஏறு’’  ஏன்று கட்டளைபோல சொல்லிவிட்டு அப்போது வந்து நிற்கும் பஸ்ஸில் ஏறி விடுகிறாள் பஸ் உக்கடம் செல்லும் என்று எனக்கு எப்படியோ தோன்றி நானும் ஏறிக்கொள்கிறேன் 

அந்த பேருந்து மிக விசாலமாக உள்ளே ஒரு தடுப்புசுவருடன் இரு பகுதிகளாக பிரிந்திருக்கிறது எனக்கு முன்னே ரோஸ் கலரில் பத்திக் டிஸைன் போட்ட புடவையில் ஏறிய ஒரு பெண்ணிடம் கண்டக்டர் அந்த இன்னொரு பகுதியிலிருந்து, கிண்டலாக ’’பஸ் 2 மணிக்குதான் புறப்படும் இறங்குமா’’ என்கிறார்  அவர்கள் முன்பே பரிச்சயக்காரர்கள் போல,  அவள் சிரித்துக்கொண்டு ’’நானென்ன  சொல்லிட்டேன் இப்போ’’ என்கிறாள்

 நானும் உள்ளே வந்துஅங்கே உட்கார இருக்கைகளே இல்லாமல் நிற்க மட்டும் இடம் இருப்பதை  பார்க்கிறேன் மேலிருந்த கம்பியிலிருந்து கை பிடித்துக்கொள்ளும் கயிறுகள் ஏராளமாக தொங்குகின்றன. நிறைய  இளம்பெண்கள் நிற்கிறார்கள்

அத்தனை பேரும் சிவப்பில் உடை அணிந்திருக்கிறார்கள். சீருடை போலல்ல, விதம் விதமான சிவப்பு உடைகளில்.  என் எதிரே நின்ற ஒருத்திக்கு மிக சின்ன செப்பு உதடுகள் யாரையோ கோபமாக திட்டிக்கொண்டிருக்கிறாள். நான் அவளிடம் இந்த  பஸ் உக்கடம் போகுமா?  என்று கேட்டதை அவள் கவனிக்கவே இல்லை அவனருகில் இருந்த இன்னொருத்தி புன்னகையுடன் ’’உக்கடம் போகும் ‘’ என்கிறாள்.

பின்னர் நான் ஏதோ ஒரு ரயில் நிலையத்திலிருந்து வெளியே வருகிறேன் தோளில்  ஒரு பையுடன்

ரயில்நிலைய வாசலில் மகாபாரத நாடகம் நடந்து நான் வரும் போது நிறைவுறுகின்றது கையில் புல்லாங்குழலும் முகத்தில் நீல ஒப்பனையிலுமாக கிருஷ்ணராக வேடமிட்டவரை வியந்து பார்த்துக் கொண்டிருக்கையில் இன்னொரு நடிகர் கைகளில் நிறைய கருப்புக்கயறுகளை கொண்டு வந்து பொதுமக்களுக்கு வினியோகிக்கிறார் நான் அவருக்கு மிக அருகில் இருக்கிறேன் அதிலொன்றை தருணுக்கு வாங்கிக்கொண்டு போய் அவன் கைகளில் கட்ட நினைக்கிறென் தருணைக்குறித்து கொஞ்ச நாட்களாகவே சுகக்கேடு எதோ வந்துவிடுமென்று இனம்புரியா அச்சத்தில் பீடிக்கபட்டிருபபதை கனவிலும் நினைத்துக்கொள்கிறேன்

அவர் எனக்கு இரண்டாவதாக கயிற்றை கொடுத்தாலும் நடந்த தள்ளுமுள்ளு களில் அக்கயிறு கீழே விழுந்து விடுகிறது மீண்டும் வெகுவாக முயற்சிக்கிறேன் நிறைய கயிறுகள் கீழே விழுகின்றன அவற்றிலொன்றை எடுக்கமுற்படுகையில் நான் எடுக்கும் அதே கயிற்றை இன்னுமொரு பச்சைப்புடவை மாமியும் எடுக்கிறார் நான் முந்திக்கொண்டு அதை எடுத்துக்கொள்கிறேன் மாமிக்கு அதை தரக்கூடாது எனக்கே வேண்டும் என்னும் வேகத்தில் இருக்கிறேன் ஆனால்  மாமி புன்னகையுடன் ’’பாக்கியம் உண்டாகட்டே’’ என்கிறாள்

பின்னர் தென்னம்பாளையம் சாலையில் செல்கிறேன் எனக்கு முன்னால் இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவர்,  வழியில் விபத்துக்குள்ளாகி கிடக்கும் ஒரு பைக்கை காண்பித்து, எதோ பேசியபடி கடக்கிறார்கள்.நானும் பார்க்கிறேன் யாருமற்று, கவிழ்ந்து கிடக்கும் ஒரு பைக்கின் அருகில் கருப்பு சட்டை பேண்டில் ஒரு இளைஞன் முகம் குப்புற கிடக்கும்படி அசைவின்றி கிடக்கிறான்.

அதன் பின்னர் எங்கோ ஏதோ ஒரு கூட்டம் நானும் அங்கிருக்கிறேன் ஏனோ கூட்டத்தின் பின்பகுதியில் படுத்துக்கொண்டிருக்கிறேன். ஒருவர்  வந்து என் உடை ஈரமாகி இருப்பதை சுட்டிக்காட்டுகிறார் குர்த்தி அணிந்திருக்கிறேன் அதை இழுத்து ஈரத்தை மறைக்கிறேன். அவர் அருகில் நின்று ’ஏன் பதட்டமா இருக்கே,  நிமம்தியா தூங்கு’’என்கிறார்  அவர் கைகளை எடுத்து என்   காதுக்க ருகில் வைத்துக்கொண்டதும் கிடைத்த  பாதுகாப்பு உணர்வில் ஆழ்ந்து உறங்குகிறேன். 

 எதோ ஒரு பிரபல வாரப்பத்திரிக்கையில் தாவர ’’அதிகாரம்’’ என்று நான் எழுதி இருக்கும் கட்டுரை பிரசுரமாகி இருக்கிறது ஆர்வமாக பிரித்துப் பார்க்கிறேன்

இந்த பல கட்டங்களாக, பல காட்சிகளாக நிகழ்ந்த கனவுகளுக்கிடையில் நான்  விழித்து தண்ணீர் குடித்து,  கனவுகளின் குறிப்புகளையும் எழுதிக்கொண்டேன்.

காலையில் எப்படி நிஜம் போலவே கனவு வந்தது என்றல்ல. இத்தனையும் கனவா நிஜமில்லையா? என்னும் திதைப்பே என் முன்னால் நின்றது