கடந்த வெள்ளிக்கிழமை ஊட்டியருகில் ஒரு கல்லூரிக்கு இன்ஸ்பெக்‌ஷனுக்கு போயிருந்தேன். சமீபத்தில் துவங்கப்பட்டிருந்த கல்லூரி அது. மேலும் மாணவர்களைச் சேர்க்க போதுமான அளவு உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா என சோதிக்க வேண்டும். நடந்து சலித்தேன் கல்லூரி முழுக்கவே. ஒரு ஆய்வகம் திறக்க சாவி வரும்வரை வராண்டாவில் காத்திருந்தோம். அது உணவு இடைவேளை. பக்கத்தில் இருந்த ஒரு வகுப்பறையின் வாசலில் கதவுநிலவின் இருபக்கமும் கைகளை வைத்துக்கொண்டு நின்றிருந்த ஒருத்தியிடம் சிவப்பு ஸ்வெட்டெர் போட்டுக்கொண்டு ஒரு ஒல்லிப்பையன் வந்து லாங்சைஸ் நோட் ஒன்றை கொடுத்தான். அவளும் அதை மறுமுனையில் பிடித்துக்கொண்டாள். இவனும் கொடுக்கவில்லை அவளும் வாங்கவில்லை. அவன் அவளிடம் ’’எப்போ திருப்பித்தருவீங்க? என்கிறான். அவள் அவனை கண்ணுக்குள்ளேயே பார்த்து ‘’ ஏன் திருப்பித்தரணுமா கட்டாயம்? என்கிறாள் அவன் ’இல்லை நீங்க திருப்பித் தருவீங்கனு நம்பித்தான் நான் இதைகொடுக்கறேன் திங்கட்கிழமை தந்துருங்க’’ என்றன் அவள் வெட்கிச்சிவந்து வெடுக்கென நோட்டைப் பறித்தபடி உள்ளே ஓடினாள். அத்தனைபேர் அங்கே கூட்டமாக ஒரு முக்கியவேலையாக நிற்பதும் அருகில் அவர்கள் கல்லூரியின் ஆசிரியர்கள் நிற்பதும் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. நான் புன்னகைத்தபடி திறக்கப்பட்ட அந்த ஆய்வகத்துக்குள் நுழைந்தேன். இசை சமீபத்தில் அகழ் இதழில் மலைச்சாரலில் மையல் யானைகள் என்று அபாரமான ஒரு கட்டுரை எழுதி இருந்தார். நான் ஒருவேளை தமிழ்த்துறை ஆசிரியராக அதுவும் இப்போது இருக்கும் நவீன இலக்கியப்பரிச்சயமே இல்லாத ஒருத்தியாக இருந்து அந்தக் கட்டுரையைப் படித்திருந்தால் நிச்சயம் குற்றவுணர்வும் அவமான உணர்வும் மேலிட தற்கொலை செய்துகொண்டிருந்திருப்பேன். அதில் சொலலப்பட்டிருக்கும் கெடுதி வினாவுதல் தான் இதுவும். நேற்று நான் அவள் அந்த நோட்டை திருப்பித்தந்திருப்பாளா அல்லது அவன் வந்து கேட்கட்டும் என்று கொடுக்காமல் வைத்திருப்பாளா என்று நினைத்துக்கொண்டேன்.