லோகமாதேவியின் பதிவுகள்

சிலுவையின் நிழலில் திராட்சைக்கொடி!

தாவரங்களின் பரவலைப் பற்றி வாசித்துக்கொண்டே இருக்கிறேன். மிகேல் போலானின் ’பாட்டனி ஆஃப் டிஸையர்’ நூல் குறிப்பிட்ட சில தாவரங்களின் பரவலைக்குறித்து மிக ஆச்சர்யமான தகவல்களைப் பேசுகிறது.

காற்றில், நீரில், வெடித்துப்பரவும் வழியில் ,விலங்குகளால், பறவைகளின் எச்சத்தால், மனிதர்களால் தெரிந்தும் தெரியாமலும் என்று அவற்றின் பல வழிகளை அறிந்துகொண்டிருக்கும் போதுதான் 1492 என்னும் நூலை எழுதத் தொடங்கினேன்.

1492-ல் தொடங்கிய கொலம்பஸின் கடற்பயணத்தில் அவர் கண்டறிந்த புதிய நிலங்கள் அங்கிருந்து பழைய உலகிற்கு அவர் அறிமுகப்படுத்திய அன்னாசி, புகையிலை, பருத்தி போன்ற தாவரங்களை அவரது கடல் பயணத்துடன் விவரித்துச் சொல்லும் நூலின் அத்தியாயங்களை சொல்வனத்தில் தொடராக எழுதிக் கொண்டிருக்கிறேன் இன்று அவர் கால்வைத்த கன்னித்தீவைக் குறித்த 5 வது அத்தியாயம் வெளியாகிறது.

மனிதர்களால் பரவிய தாவரங்களைக் குறித்த தேடலின் போதுதான் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஏசுவின் ரத்தமாக கருதப்படும் திரட்சை ரசத்தை அளிக்க உலகெங்கிலுமிருந்தும் கிறிஸ்துவ இறைப்பணியாளர்கள் திரட்சைக்கொடியின் நறுக்கிய தண்டை சிலுவை மற்றும் பைபிளுடன் கடல்கடந்து எடுத்துச் சென்றது, திராட்சை வளர வழியே இல்லலாத இடங்களிலும் தேவாலயத்தோட்டங்களில் அவற்றை வளர்த்தது ஆகியவற்றைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன்.

மும்பை மெதடிஸ்ட் தேவாலயத்தில் மிஷன் கிரேப்ஸ் என்னும் தலைப்பில் சமீபத்தில் ஒரு உரையாற்றினேன்.

கிறிஸ்தவ சமயச் சடங்குகளுக்கான வைனுக்காக திராட்சைக்கொடி உலகெங்கிலும் கிறிஸ்துவப் பாதிரியார்களால் பரவியதைக் குறித்தும், ஏன் திராட்சை ரசம் மட்டும் தேவைப்பட்டது, குருதியைப் போலவே இருக்கும் மாதுளைச்சாற்றை ஏன் தேவாலயங்கள் மறுத்தன, துருவப்பகுதி தேவாலயங்கள் ரத்தம் போல திரவமாக இருக்கவேண்டிய வைனுக்கு என்ன செய்தன? இவற்றோடு மெதடிஸ்ட் பிரிவை உருவாக்கியவரான வெஸ்லே மற்றும், ஈஸ்டின் பெருகலால் புளித்துப்போகாமல் இருக்க வைனை பாஸ்டுரைஸ் செய்த லூயி பாஸ்டரின் பங்களிப்பையும் சேர்த்து எழுதுவது சுவாரசியமாக இருக்கிறது.

ஏராளமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். அகராதி முடிந்த பாடில்லை அதில் இணைத்த சித்திரங்களுக்கான credit கொடுக்காமல் அனேகமாக எழுதி முடித்தே விட்டேன். பாம்பு கடித்து பரமபதத்தின் கடைசிக்கு வந்து மீண்டும் முதலிலிருந்து தொடங்குகிறேன் இந்த credit கொடுக்கும் வேலையை. இன்று மகன்களிடம் சொன்னேன் அனேகமாக இதை என் சார்பாக நீங்கள் தான் வெளியிடுவீர்களாக இருக்கும் என.

இன்னும் இரு நூல்கள் , ஸம்பா மற்றும் பொற்சுழல்; பிழைதிருத்தி பதிப்பகங்களில் தரவேண்டி இருக்கிறது. காலச்சுவடில் மொழிபெயர்ப்பு நூல் ‘அலையிடைவெளியில்’ வெளியாக வேண்டி இருக்கிறது. திரு அரவிந்தனின் மறைவினால் அது தாமதமாகிவிட்டது.

பெரும்பாலான பதிப்பகத்தார் என் தாவரவியல் நூல்களில் அக்கறை காண்பிப்பதில்லை என்பதைப் பற்றி நான் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. அவர்களைச்சொல்லியும் குற்றமில்லை , இறையன்பு மற்றும் கவிதாசனின் தன்னம்பிக்கை நூல்கள் ஆயிரக்கணக்கில் வெளியிட்டால் லாபம் வருகிறது, யாரும் விரும்பாத தாவரவியலைப் பற்றி நூல் வெளியிட்டு தெரிந்தே கையைச்சுட்டுக்கொள்ள யார்தான் தயாராக இருப்பர்கள்?

நூலாக வராவிட்டாலும் சரிதான்.எனக்கு எழுதவேண்டி இருப்பதை எல்லாம் மகிழ்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.

1 Comment

  1. Rajeshwari Raj

    வணக்கம் Mam. நீங்கள் எழுதுங்கள் Mam. உங்களின் நூல்களைப் படிக்கக்கூடிய வாசகர்களை, இப்போது தானே உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் தொடர்ந்து படிப்போம். நன்றி Mam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑