லோகமாதேவியின் பதிவுகள்

Category: தாவரங்கள் (Page 11 of 15)

இரண்டாம் ஆதாம் – லின்னேயஸ்

தாவரங்களின் இருபெயரீட்டு  விதிகள், விமர்சனங்கள் மற்றும் புதிதாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட பல தாவரங்களின் பட்டியலுடன் லின்னேயஸின்  ””கிரிடிகா பொடானிகா”(Critica Botanica)  நூல் ஜூலை 1737 ல் வெளியான போது, லின்னேயஸின் ஆய்வுகளை, கடுமையாக,  வெளிப்படையாக விமர்சிப்பவரான  ஜோஹேன் சீகஸ் பெக் (johann siegesbeck)    மனமகிழ்ந்து போனார். சிலமாதங்களுக்கு முன்புதான் சீகஸ்பெக் மலர்களின் இனப்பெருக்க உறுப்புக்களின் அடிப்படையில் லின்னேயஸ் உருவாக்கிய தாவர  வகைப்பாட்டியலை மிக மோசமானதென்று வெளிப்படையாக கருத்து  தெரிவித்திருந்தார். 

ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட  சிறு மஞ்சள் மலர்களைக் கொண்டிருக்கும், அதுவரை  பெயரிட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்காத ஒரு சிறு  களைச்செடிக்கு தனது பெயரை  வைத்துSigesbeckia orientalis, என்று  லின்னேயஸ்  அந்நூலில்  பெயரிட்டிருந்தது அவரை வெகுவாக மகிழ்வித்தது.  சீகஸ்பெக்  லின்னேயஸுக்கு  நன்றி தெரிவித்து  கடிதம் எழுதினார். சில நாட்களில் லின்னேயஸிடமிருந்து பதிலுக்கு  ஒரு சிறு பொட்டலம் தபாலில் வந்தது. பொட்டலத்தின் மேல் Cuculus ingratus  என்று எழுதப்பட்டு உள்ளே  சிறு சிறு விதைகள் இருந்தன. புதிதாக பெயரிடப்பட்ட தாவரமொன்றின் விதைகளாக இருக்கலாமென்று எண்ணிய ஜோஹனும் அவற்றை வீட்டு தோட்டத்தில் விதைத்தார் அவை வளர்ந்த பின்னரே அவருக்கு தெரிந்தது தான் லின்னேயஸால் எப்படி அறிவியல்பூர்வமாக அவமதிகப்பட்டிருக்கிறோம் என்று.  

அந்த விதைகளிலிருந்து  வளர்ந்தது  அவரின் பெயரிடப்பட்டிருந்த  Sigesbeckia orientalis, எனப்படும்  மிகச்சிறிய, எந்த முக்கியதுவமும் இல்லாத மிகவும் நாற்றமடிக்கும் ஒரு களைச்செடிதான். லின்னேயஸின் வகைப்பாட்டியலின் அடிப்படையை வெளிப்படையாக விமர்சித்த தன்னை அவமதிக்கவே, அந்த நாற்றமடிக்கும் செடிக்கு தன் பெயரை வைத்தார் என்றும் அவரனுப்பிய பொட்டலத்தின் மேல் எழுதப்பட்டிருந்த  Cuculus ingratus   என்பது ””நன்றிகெட்ட குக்கூ”” என தன்னை சொன்னது என்பதையும் அவர் தாமதமாகவே தெரிந்துகொண்டார்

பின்னர் அவர் லின்னேயஸை இதுகுறித்து தொடர்பு கொள்ள எத்தனை முயன்றும், பலர் இதில் இடைபட்டும் லின்னேயஸ் அவரை சந்திக்கவில்லை மாறாக ””மிக நன்றிகெட்ட குக்கூ”” ingratissimus cuculus.என எழுதிய பொட்டலத்தில் மேலும் சில விதைகளை அவருக்கு  அனுப்பி வைத்தார்.  புகைந்து கொண்டிருந்த பகை அதன்பின்னர் தழலாட தொடங்கி   இரண்டு அறிஞர்களும் பின்னர் வாழ்நாளின் இறுதி வரை விரோதிகளாகவே இருந்தனர்.

இப்படி ஒரு விநோதமான அவமதிப்பை செய்த  லின்னேயஸ்தான்  நவீன தாவர வகைப்பாட்டியலின் தந்தை.ஒருபோதும் தன்னை விமர்சித்தவர்களை,  ஏமாற்றியவர்களை,  துரோகம் செய்தவர்களை, அவர் மன்னிக்கவே இல்லை.  அறிவியல் பெயர்களிலேயே அவர்களை  பழி வாங்கினார்.

லின்னேயஸின் சீடர்கள்1 என அறிவியல் வரலாற்றில் குறிப்பிடப்படும் அவரது  17 மாணவர்கள் மேற்கொண்ட ஆபத்தான சாகச பயணங்களின் பலனாக கிடைத்த பல தாவரங்களை கொண்டுதான் லின்னேயஸ் வகைப்பாட்டியலின் பல முக்கிய நூல்களை எழுதினார். அந்த 17 சீடர்களில் 7 மாணவர்கள் அத்தனை இளம்வயதில் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகளை செய்துவிட்டு, லின்னேயஸையும், அவரவர் குடும்பங்களையும் பார்க்காமலேயே நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தனர். வெற்றிகரமாக திரும்பியவர்களில் பலர் விசுவாசமாக  கண்டறிந்தவற்றையும் சேகரிப்புக்களையும் லின்னேயஸுக்கே சமர்பித்தனர். 

அதில் ஒருவரான டேனியல் ரோலேண்டர் (Daniel Rolander). லின்னேயஸின் வழிகாட்டுதலின் பேரில் தென்னமெரிக்காவை  அடுத்திருந்த ஒரு சிறிய நாட்டுக்கு தேடுதல் பயணம் மேற்கொண்டு ஏராளமான புதிய தாவரங்களையும் பூச்சி இனங்களையும் கண்டறிந்தார் ஆனால் அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் நாடு திரும்ப சில வருடங்கள் தாமதமானது.

கோபமடைந்த லின்னேயஸ் டேனியலுக்கு செய்துவந்த எல்லா உதவிகளையும் நிறுத்தியதோடு அவருக்கிருந்த செல்வாக்கினால் பிறரும் டேனியலுக்கு உதவி செய்யாதபடி பார்த்துக்கொண்டார் டேனியலின் மன்றாட்டுகளுக்கும் சண்டைகளுக்கும் செவிசாய்க்காத லின்னேயஸ் அவர் எந்த வேலையிலும் சேர முடியாதபடியும் அவரது ஆய்வுக்கட்டுரைகள் எங்கும் பிரசுரம் ஆகாமலும் அவர், ஒரு வீடு வாங்கி தங்கக் கூட முடியாதபடியும் கவனமாக காய்களை நகர்த்தினார்.

மழைக்காடுகளில் அலைந்து திரிந்ததால் உடல்நிலை சீர்கெட்டு, மதுவடிமையும் ஆகிப்போன டேனியல் மனம் வெறுத்து,லின்னேயஸுக்கு தான் கொண்டு வந்த உலர் தாவரங்களையும் பூச்சி இனங்களையும்  தர மறுத்துவிட்டார். கோபமுற்ற லின்னேயஸ்  டேனியல் இல்லாத போது அவரது வீட்டுக் கதவை உடைத்து கிடைத்த சேகரிப்புக்களை எடுத்துக்கொண்டார். பின்னர்  ஒரு சின்னஞ்சிறு வண்டுக்கு Aphanus rolandriஅதாவது யாருக்குமே தெரியாத/யாருமற்ற ரோலேண்டர் என்ற பொருளில் பெயரிட்டு பழிதீர்த்து கொண்டார்.  அவரது ஆணைகளை சிரமேற்கொள்ளும் மாணவர்களுக்கு எல்லா உதவிகளும் செய்த லின்னேயஸ் சிறு மீறலையோ அல்லது மறுப்பையோ கூட சகித்து கொண்டதில்லை.

 கூரான முட்களை கொண்டிருக்கும் மரமொன்றிற்கு, தனக்கு வேண்டாதவரான பிரேஸில் தாவரவியலாளர் வில்லியம் பைசோ’வின் (Willem Piso) பெயரை வைத்து பைசோனியா( Pisonia) எனவும்,    மிக கம்பீரமான ஆனால் கண்ணுக்கே தெரியாத நுண் மலர்களைக் கொண்டிருக்கும் மரத்திற்கு தான் அவ்வளவாக மதிக்காத தாவரவியல் ஆய்வுகளை செய்த ஹெர்மண்டெஸின்(Francisco Hernández) பெயரால் ஹெர்மாண்டியா எனவும் (Hernandia), விரைவில் நிறமிழந்து மங்கிப்போகும் மலர்களுடைய  முசுக்கொட்டை இனத்தாவரத்திற்கு டோர்ஸ்டினியா (Dorstenia) என தியடோர் டோர்ஸ்டன் [Theodor] Dorsten.) என்னும் தன்னை விமர்சித்த  தாவரவியலாளர் பெயரையும் வைத்தார். .பைசோ, ஹெர்மாண்டஸ் மற்றும் டோர்ஸ்டன் ஆகியோர் இந்த பெயரிடலின் போது நல்லவேளையாக உயிருடன் இல்லை. அறிவியலை பிறரை சிறப்பிக்கவும் பழி தீர்க்கவும் ஒரு கருவியாக பயனபடுத்திய முதலும் கடைசியுமான அறிஞர் லின்னேயஸாகத்தான் இருக்கும்.

1735 ல் வெளியான  இயற்கை வகைப்பாடு (Systema Naturae)என்னும் பிரபல நூலில் லின்னேயஸ் மலர்களின் இனப்பெருக்க உறுப்புகளின் அமைப்பைகொண்டு தாவரங்களை  நூதன முறையில் வகைப்படுத்தி இருந்தார். உதாரணமாக மலர்களில் மகரந்தம் கொண்டிருக்கும் 8 ஆண் உறுப்புகளையும்,  சூலகத்தில் ஒரே ஒரு முட்டையை கொண்டிருக்கும் பெண் உறுப்பையும் கொண்டிருத்த தாவரங்களை   “Octandria Monogynia” என்னும் பிரிவின் கீழ் வகைப்படுத்தினார். கிரேக்க மொழியில் octo-எட்டு, andros -ஆண,  “Monogynia”  ஒரு பெண் என்று பொருள்படும்.

மேலும் இந்த இனப்பெருக்க இயல்புகளை வெளிப்படையாக மனிதர்களின் காதல் மற்றும் கலவியுடன் இணைத்து  // ஒரு மணப்பெண்ணின் அறையில் 8 மணமகன்கள் இலைகளே படுக்கை// என்றும்,பெண் ஜனன உறுப்புக்களை மலர்களின் இனப்பெருக்க  உறுப்புக்களுடன் அப்பட்டமாக ஒப்பிட்டும் விவரித்திருந்தார். இவற்றைத்தான் பல்வேறு தாவரவியலாளர்கள் கடுமையாக விமர்சித்தார்கள்.

விமர்சனம் செய்தவர்களை அவமதிக்க மட்டுமல்ல தனக்கு உதவியவர்களை, தன் பிரியத்துக்குரிய மாணவர்களை தான் மதிப்பவர்களை சிறப்பிக்கவும் அதே அறிவியலைத்தான் பயன்படுத்தினார் லின்னேயஸ். 1753 ல் இவரது முக்கிய நூலான ”சிற்றினத் தாவரங்கள்” (Species plantarum) வெளிவர உதவிய லாசோன் (Isaac Lawson). என்பவரின் பெயரை மருதாணிச்செடியின் பேரினமாக்கினார். மருதாணிச்செடியின் அறிவியல் பெயர்  லாசோனியா இனெர்மிஸ்.(Lawsonia inermis).

லின்னேயஸின் மாணவரும், அவரது வழிகாட்டுதலின் பேரில் வடஅமெரிக்க தாவரங்களை சேகரித்தவரும், ஃபின்னிஷ் ஆய்வாளர் மற்றும் தாவரவியலாளருமான  பீட்டர் கால்ம் (1716-1779- Peter Kalm) பெயரில் சில தாவரங்களை  பெயரிட்டார். ’பரந்த இலைகளுடன்’ என்று பொருள் படும் கால்மியா லத்தீஃபோலியா(Kalmia latifolia) என்று ஒரு தாவரத்திற்கும், அதன் மற்றொரு  குறுகிய இலைகளுடன் இருக்கும் சிற்றினத்திற்கு கால்மியா ஆங்ஸ்டிஃபோலியா (Kalmia angustifolia) என்றும் பெயரிட்டார். லின்னேயஸ் என்னும் பெயரிலும் பல தாவரங்கள் பெயரிடப்பட்டது.2

மனித இனத்தை “அறிவாளியாகிய மனிதன்” என்னும் பொருள்படும் ஹோமோ-சேபியன்ஸ் என்று 1758’ல் பெயரிட்டதும் இவரே.இயற்கை வகைப்பாட்டியல் (Systema naturae) நூலில்  லின்னேயஸ் ஹோமோ சேபியன்களை ஐந்து துணைக் குழுக்களாக பிரித்திருந்தார்: ஆஃபர், அமெரிக்கனஸ், ஆசியாடிகஸ், யூரோபியஸ் மற்றும் ஹோமோசேபியன் மான்ஸ்ட்ரோசஸ். இவற்றில் ஆஃபர், அமெரிக்க மற்றும் ஆசிய குழுக்கள் “தந்திரமான”, “பிடிவாதமான” அல்லது “பேராசை” கொண்டவர்களாக  வகைப்படுத்தப்படுகிறார்கள். மாறாக யுரோபியஸ் குழுவை “கண்டுபிடிப்பாளர்கள்”, “மென்மையானவர்கள்” மற்றும் “சட்டத்தை மதிப்பவர்கள் என்று வகைப்படுத்துகிறார் லின்னேயஸ். ஒரு தீவிர மத நம்பிக்கையாளராக இருந்த,மாபெரும் விஞ்ஞானியான லின்னேயஸ் இன பேதங்களில் ஆழமான நம்பிக்கை  கொண்டிருந்தது விந்தைதான். பழமை வாதத்தில் மூழ்கி இருந்த லின்னேயஸ் தன்னிடம் ஆய்வில் சேர ஒரு போதும் பெண்களுக்கு இடமளிக்கவில்லை பெண்கள் வீட்டுக் காரியங்களை பார்த்துக்கொண்டு சமையலை திறம்பட செய்தால் போதும் என்று நம்பினார். அவரது பெண்களுக்கே கூட அரைகுறையான  கல்வியையே அளித்தார்.

உயிரினங்களின் இருபெயரிடும் முறையை (Binomial nomenclature) கண்டறிந்தவரான லின்னேயஸின் பெயரும் ஒரு சுவாரஸ்யமான வரலாறை கொண்டுள்ளது.  

 லின்னேயஸ் மே 23 1707 ல் தெற்கு ஸ்வீடன் பகுதியில்- பிறந்தார் அவரது தந்தை நில்ஸ் (Nils Ingemarsson,) தேவாலயத்தில்  உயர் பதவியில் இருந்தார், மேலும் தாவரவியலில் அதீத ஆர்வமுடையவாராகவும் மரங்களை நேசிப்பவராகவும் இருந்தார். இளம் லின்’னையும் அவருடன் எப்போதும் தோட்டவேலைக்கும் செடிகொடிகளை பார்வையிடவும், ரசிக்கவும் உடனழைத்துச் சென்றார். ஆர்வமும் துடிப்பும் நிறைந்த சிறுவனான லின் தந்தையை ஊன்றி கவனிக்கும் வழக்கம் கொண்டிருந்தான்.

1700 க்கு முன், ஸ்வீடன் மக்கள் தங்கள் தந்தை யார் என்று தெரிவிக்கும் பெயர்களையே  பயன்படுத்தினார்கள், உதாரணமாக: கார்ல் நில்’லின்  மகன் நில்சன், அல்லது ஓலாஃப் ஸ்வென்னின் மகன் ஸ்வென்சன்.   பின்னர் பல ஐரோப்பியர்கள் தங்களுக்கு பிரியமான  லத்தீன் வார்த்தைகளில் இருந்து தேர்வு செய்த கடைசி பெயர்களை தங்கள் குடும்பபெயர்களாக வைத்துக் கொண்டனர்..

 நில்ஸ் இங்கமர்சன்,(Nils Ingemarsson,) இங்கமரின் மகன் என்று பொருள்படும் பெயரில் இருந்த லின்னேயஸின் தந்தை அவரது பல்கலைக்கழக சேர்க்கைக்கு,,  ஒரு துணைப்பெயர் அவசியமானபோது, லத்தீன் மொழியில், தங்களுக்கு சொந்தமான  இடத்தில் வளர்ந்த ஒரு மிகப் பெரிய எலுமிச்சை மரமான ’’லிண்டன்’’ மரத்தை கெளரவிக்க தனது குடும்பத்திற்கான பெயராக மரத்தின் ‘லின்’ என்னும் பெயரை சேர்த்துக்கொண்டார். ஸ்வீடிஷ் மொழியில்ல்   Linnæus, என்பது linden மரத்தை குறிக்கிறது. 

தாவரங்கள் பற்றிய அறிதலையும், விருப்பத்தையும்  தந்தையிடமிருந்து பெற்றார் லின்.. ஐந்து வயது லின்’னிற்கு,  நில்ஸ் தோட்டத்தின் ஒரு சிறு பகுதியை  சொந்தமாக அவனுக்கு விருப்பமான தாவரங்களை வளர்க்கவென்று அளித்தார். அதுவே லின்னேயஸுக்கு தாவரங்களை குறித்து விளக்கமாக அறிந்துகொள்ள ஒரு தொடக்கமாக அமைந்தது. லின்’னிற்கென்றே பிரத்யேகமாக  ஒரு ஆசிரியரை அவருக்கு 7 வயதாக இருக்கையில் நில்ஸ் ஏற்பாடு செய்தார். இறையியலும், லத்தீன் மொழியும், தாவரவியலும் அவருக்கு  கற்பிக்கபட்டது.

 பள்ளி மற்றும் உயர்கல்வியிலும் அப்போது கிரேக்கம், ஹீப்ரூ, கணிதம் மற்றும் இறையியல் ஆகியவையே மிக முக்கிய பாடங்களாக கருதப்பட்டது ஆனால் லின்’னுக்கு தாவரவியலை தவிர  எதிலும் ஆர்வம் இல்லை. அவனது ஆசிரியர்களில் யாருமே லின்’னின் தாவரவியல் ஆர்வத்தை கவனத்தில் கொள்ளவுமில்லை.

லின்னேயஸின் தாயார், மகன் மருத்துவம் படிக்க வேண்டும் என்று விரும்பினார். அப்போது எல்லா ஸ்வீடன் நாட்டு மருத்துவ மாணவர்களும் ஸ்வீடனுக்கு வெளியே சென்றுதான் பட்டம் பெற வேண்டும் என்பதால் லின்’னும் நெதர்லாந்திற்கு சென்று மருத்துவப்படிப்பை முடித்தார்.மருத்துவப்படிப்பில்  மலேரியாவின் காரணங்களை ஆய்வு செய்திருந்தார். மருத்துவபடிப்பு முடிந்தபின்னரும் லின்னேயஸ் அங்கேயே மேலும் மூன்றுஆண்டுகள் தங்கி இருந்து பிரபல தாவரவியலாளர்களுடனும்,   பல்துறை அறிஞர்களிடமும் தொடர்பில் இருந்தார். அவரது பேராசிரியர்களில் ஒருவர் லின்னேயஸின் தாவரவியல் ஆர்வத்தை கவனித்து தன் தோட்டத்தில் அவரை வேலைசெய்யவும் அங்கிருந்த தாவரங்களை அறிந்து கொள்ளவும் அனுமதியளித்தார்

அங்குதான் லின்னேயஸ் மருத்துவரும் ,பேராசிரியருமான ஜான் ரோத்மேன் என்பவரை சந்தித்தார்.(Johan Stensson Rothman (1684–1763)) ரோத்மேன் லின்னேயஸுடன் இணைந்து அவரின் தாவரவியல் அறிவை பலமடங்காக்கினார்

 1730 ல் நூற்றுக்கணக்கானவர்கள் முன்னால் உரையாடும் மிக இளம் வயது பேச்சாளராகவும் இருந்தார் லின்னேயஸ். ஸ்வீடன் திரும்பிய லின்னேயஸ்  தலைநகர் ஸ்டாக்ஹோமில் மருத்துவராக தொழிலை துவங்கினார். சாராவை மணமுடித்தார் மருத்துவராக தன் பணியை மிக குறுகிய காலமே செய்தலின்னேயஸ் உப்சாலா   பல்கலைக்கழக பூங்காவின் தலைவராக  பணி மேற்கொண்டார்.

 25 வயதான லின்னேயஸ் 1732 ல் கடவுச்சீட்டும் ஸ்வீடிஷ் அரசின் பரிந்துரைக்கடிதமுமாக  ஊசியிலைக்காடுகள் செறிந்த லேப்லாந்துக்கு பயணித்தார். அங்கு  தங்கி இருந்து, அங்கிருக்கும் பழங்குடியினத்தவர்களான  ஸாமி மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த லின்னேயஸ்,  அவர்களின்  பாரம்பரிய உடைகள் மிது பெருவிருப்பம் கொண்டு அவற்றை பின்னர் விரும்பி அணிய துவங்கினார்.  இறுக்கமான ஸ்வீடிஷ் உடைகளை காட்டிலும் தளர்வான ஸாமி உடைகள் அவரை கவர்ந்தன. .அந்த நிலப்பரப்பு, அங்கு வாழ்ந்த மக்கள், அவர்களின் கலாச்சாரம், அப்பகுதியின் தாவர, விலங்கு வகைகள் குறித்து லின்னேயஸ்  எழுதிய ஆய்வுக் கட்டுரை, ஸ்வீடன் பாராளுமன்றத்தில் பரவலான கவனத்தையும் பாராட்டுக்களையும் பெற்றது. அந்த பயணத்திற்கு பிறகு அவர் பயணிப்பது குறைந்தது, அவர் சார்பாக உலகெங்கிலும் அவர் மாணவர்களே பிரயாணம் செய்தார்கள்.

மிக இளம் வயதிலிருந்தே மலர்களின் காதலனாக இருந்த லின்னெயஸுக்கு  மிகப்பிரியமான தாவரங்களில் ஒன்றாக இருந்த இரட்டையாக மலரும் மலர்களை தன் அடையாளமாகவே வைத்துக்கொண்டு அதற்கு தன்பெயரையே இணைத்து   லின்னேயா போரியலிஸ் (Linnaea borealis) என்று பெயரிட்டார். பெரும்பாலான புகைப்படங்களில் லாப்லாந்தின் ஸாமி மக்களின் பாரம்பரிய உடையில் லின்னேயஸ், அவரது தனிப்பட்ட சின்னமாக மாறிய இந்த இரட்டை மலர்களை கைகளில்  வைத்திருப்பார். 

.பின்னர் 1738 ல்ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி முழுமையாகஉருவாக காரணமாயிருந்த லின்னேயஸ் அதன் முதல்  தலைவராகவும் இருந்தார். அச்சமயத்தில்தான் ஸ்வீடிஷ் அகாடமியின் உதவியுடன் 17 மாணவர்களை உலகெங்கும் அனுப்பி தாவர வகைப்பாட்டியலை விரிவாக்கினார். பெரும் புகழும் செல்வமும் கொண்டவராக ஆன லின்னேயஸ்   மாணவர்களின் தேடல் பயணத்திலிருந்து மட்டுமே 5,900 தாவரங்களையும் 4,378 விலங்குகளையும்  கிடைக்கப்பெற்றார்.

.

உப்சாலா பல்கலைக்கழகத்தில் லின்னேயஸ் ஓலாஃப் செல்சியஸ் ( Olof Celsius ) என்னும் இறையியல் பேராசியரை சந்தித்து நட்பானார். இந்த ஒலோஃப் செல்சியஸ்  செல்சியஸ் வெப்பமானியை கண்டுபிடித்த ஆண்டர்ஸ் செல்சியஸின் (Anders Celsius) நெருங்கிய உறவினர். .ஓலாஃப் உப்சாலா பூங்காவின் அனைத்து தாவரங்களின் பெயர்களையும் லின்னேயஸ் அறிந்து வைத்திருப்பதை வியந்து பாராட்டினார். அதன்பிறகு லின்னேயஸ் உப்சாலா பல்கலைக்கழகத்தில் தங்கிக்கொள்ளவும்,பல்கலைக்கழக நூலகத்தை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதித்தார்.

 அந்த சமயத்தில்தான் லின்னேயஸ் தாவரங்களின் இனப்பெருக்க உறுப்புக்களை அடிப்படியாக கொண்டு அவற்றை  வகைப்படுத்துதல் குறித்த  ஆய்வுக் கட்டுரை எழுதி வெளியிட்டார். அக்கட்டுரையால் கவரப்பட்ட மற்றுமொரு பேராசிரியரான ஒலாஃப் ரூத்பெக் (Olof Rudbeck), லின்னேயஸை பேராசிரியராக தாவரவியல் துரையில் பணியமர்த்தினார். 

பத்து வருடங்கள் கழித்து 1748 ல் லின்னேயஸ்   தாவரவியல் தத்துவங்கள் (Philosophia Botanica)  என்னும் நூலில்  46 தாவரங்களை மலரும் காலங்களின் அடிப்படையில் வகைப்படுத்தி   horologium florae என்றழைக்கப்பட்ட மலர்க்கடிகாரத்தை3உருவாக்கினார்.

லின்னேயஸ் மும்முரமாக பல கண்டுபிடிப்புகளை செய்து கொண்டிருந்த அச்சமயத்தில் ஸ்வீடன் ரஷ்யாவுக்கு எதிரான போரிலும், நார்வே, டென்மார்க் மற்றும் ப்ரூஷியாவுடனான போர்களிலும் தோற்றிருந்தது. தோல்விகளால்  துவண்டு இருந்த.  ஸ்வீடன்,  லின்னேயஸினால் மீண்டும் புகழ்பெற்று தலை நிமிர துவங்கியது.

  1761 ல், ஸ்வீடன் அரசர் லின்னேயஸுக்கு  பிரபு பட்டம் வழங்கி கௌரவித்த பின்னர் லின்னேயஸ் கார்ல் வோன் லின் என (CARL VON LINNÉ) அழைக்கப்பட்டார் பட்டம் கிடைத்த பின்னர் லின்னேயஸ் உலக புகழ் பெற்றார். உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகளும் அரசகுடும்பத்தினரும் அவரை தொடர்பு கொண்டனர்.. ரஷ்ய பேரரசி இரண்டாம் கேத்தரீன் ரஷ்யாவிலிருந்து பல விதைகளை லின்னேயஸுக்கு அனுப்பிவைத்தார், ஆஸ்திரியாவின் லின்னேயஸ் என அழைக்கப்பட்ட தாவரவியலாளர் ஜோஹன் ஸ்கோபோலியஸ் (Johannes Antonius Scopolius)) லின்னேயஸுடன் தொடர்பில் இருந்தார்  தனது அனைத்து ஆய்வுகளையும் அவர் லின்னேயஸுடன்  பகிர்ந்துகொண்டார். உதாரணமாக லின்னேயஸ் அறிந்திருக்காத  olm என்னும் நீர்வாழ் உயிரி ஒன்றையும் dormouse எனப்படும் கொறித்துண்ணியொன்றையும் குறித்து எல்லா தகவல்களைம் விவரமாக லின்னெயஸுக்கு அனுப்பி இருக்கிறார்.. 

ஸ்கோபோலியஸின் மீது பெருமதிப்பு கொண்டிருந்த லின்னேயஸ் சொலனேசிய குடும்பத்தின் பேரினமொன்றிற்கு ஸ்கொபோலியா என்று பெயரிட்டார். .ஸ்கொபோலியா பேரினத்திலிருந்தே ஸ்கொபோலமைன் என்னும் மிக முக்கிய வேதிப்பொருள்  கிடைக்கிறது.  இவர்கள் இருவரும் ஒரு முறை கூட சந்தித்துக்கொண்டதே இல்லை . .

1764 ல்  ஸ்வீடன் பட்டத்து இளவரசர் அடால்ஃப் ஃப்ரெட்ரிக் லின்னேயஸுக்கு ஒரு ரக்கூனை செல்லப்பிராணியாக பரிசளித்தார் ஸுப் (‘Sjupp’) என பெயரிப்பட்டிருந்த அது லின்னேய்ஸின் ஆய்வுக்குறிப்புக்களில் இடம்பெரும் அளவிற்கு அவருக்கு நெருக்கமானதாக இருந்தது. பல்கலைக்கழகத்துக்கு தன்னுடன் அதை எடுத்து வருவார் லின்னேயஸ்.   ஒரு கட்டுரையில் ’’ஸுப் பிடிவதம் நிறைந்தது, அன்பானது, முட்டை, பழங்கள், இனிப்புகள், மீன், உலர் திராட்சை மற்றும் வினிகரில் தோய்த்த எதுவானாலும் விரும்பி உண்ணும்’’ என குறிப்பிடுகிறார் லின்னேயஸ். துரதிர்ஷ்டவசமாக ஸுப் ஒரு நாயால் கடித்து குதறப்பட்டு கொல்லபட்டது

உயிரின வகைப்பாட்டியலின் இருசொல் பெயரிடும் முறையின்  படிநிலைகள் உலகம், தொகுதி, வகுப்பு, துறை, குடும்பம், பேரினம், சிற்றினம் என வரிசையாக அமைக்கப்பட்டிருகிறது. இந்த பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும் லின்னேயஸ் வகைப்பாட்டியலின் படிநிலைகளின்படி இறங்கு வரிசை அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.  இவ் வகைப்பாட்டின் கீழ்நிலை அலகு சிற்றினம்(Species) ஆகும்.

சர்வதேச தாவரவியல் விதிகளின் படி, தாவரங்களுக்கு பெயரிட்டவரை அறிவியல் பெயரின் பின்னால் சுருக்கமாக குறிப்பிட வேண்டும். லின்னேயஸ் பெயரிட்ட தாவரங்களின் பெயர்களின் பின்னால் எனL.என்ற தாவரவியலாளர் பெயர் சுருக்கக் குறியீடு (author citation) இருக்கும். உதரணமாக அரசமரத்தின் அறிவியல் பெயர் Ficus religiosa L. மிகப்பழைய வெளியீடுகளில்Linn. என்றிருக்கும்

லின்னேயஸ்  உயிரினங்களை பெயரிட்டு, வகைப்படுத்தி, அறிவியலை எளிமை படுத்துவதற்கு முன்பு, தாவரங்கள் வழக்கமாக பல பெயர்களுடன்  நீண்ட விளக்கமான லத்தீன் பெயர்களைக் கொண்டிருந்தன, இவற்றை கற்பதும் நினைவில் கொள்ளுவதும்  மிக கடினமாக இருந்தது. தாவரத்தை விவரிக்கும் தாவரவியலாளரின் விருப்பத்தின் அடிப்படையில் பெயர்கள் பலமுறை மாற்றப்பட்டன. ஒவ்வொரு தாவரத்திற்கும் உலகளாவிய பெயர்களும் இல்லை, எனவே உலகெங்கிலும்  தாவரங்களின் பெயர்கள் குறித்த  பெரும் குழப்பம் நிலவியது 

லின்னேயஸுக்கு முன்பு பலரும் உயிரினங்களை வகைப்படுத்த முனைந்தார்கள் கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில். (கி மு. 384 – 322)   விலங்குகளை நடப்பன, ஊர்வன, நீந்துவன என்றும் முதுகெலும்பிகள், முதுகெலும்பற்றவைகளை குருதியுள்ளவை, குருதியற்றவைகளெனவும் எளிமையாக வகைப்படுத்தினார், தாவரங்களை, மரங்கள், புதர்கள், சிறு செடிகள் என வகைப்படுத்தினார்.  அவரால் வகைப்படுத்த முடியாதவற்றை பெயரற்றவைகளின் தொகுப்பு  என்னும் வகைக்குள் கொண்டு வந்தார். 

பாட்டனி என்னும் சொல்லை உருவாக்கியவரும் தாவரவியலின் தந்தை என்றறியப்படுபவருமான் தியோ ஃப்ரேஸ்டஸ் ((373–288 BC)) பல படிநிலைகளில் தாவரங்களை வகைப்படுத்த முயன்றிருக்கிறார். விதைகளிலிருந்து வந்தவை வேர்கள் இருந்து வந்தவை என எளிய வகைப்படுத்தல்கள்தான் அவையும்.

 ரோமானியர்கள் காலத்தில் வரலாற்றாய்வாளர்  பிளைனியும்   (Pliny the Elder, 23–79 BC)  தாவர விலங்குகளை வகைப்படுத்தி இருந்தார். மறுமலர்ச்சி காலத்தில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் வெகுவாக பிரயாணங்களை மேற்கொண்டு பல்லாயிரம் புதிய தாவர, விலங்கு, பூச்சி இனங்களை கண்டறிந்தார்கள். அக்காலகட்டத்தில் புதிய உயிரினங்களை பெயரிடுவதிலும், வகைப்படுத்துவதிலும் மிக மும்முரமாக அறிஞர்கள் ஈடுபட்டிருந்தார்கள். 

பல சொற்களால் பெயரிடும் முறையின் சிக்கல்களைத் தவிர்க்க, 1623 ஆம் ஆண்டு, காஸ்பர்டு பாகின் ( Gaspard Bauhin (1560–1624)) என்ற அறிஞர், இரு சொற்பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தினார். இம்முறையை செம்மையாக்கி,விதிகளை உருவாக்கி, பெரிதும் ஒழுங்கு படுத்தினார் லின்னேயஸ். அவ்வாறு அவர் உருவாக்கிய விதிமுறைகளைக் கொண்டே சிற்றினத்தாவரங்கள்  நூலை  இயற்றினார்.

 லத்தீன் மொழியில் உயிரினங்கள் அனைத்துக்குமான உலகப்பொதுப் பெயரை இருபெயரீடு முறையில் உண்டாக்கும் லின்னேயஸ் முறையானது, அதற்கு முன்னர் இருந்த பலபெயரீட்டு முறையின் கடினங்கள், சிக்கல்கள், ஏதும் இல்லாமல் இரண்டே இரண்டு சொற்களில் அமைக்கப்பட்ட பெயர்கள் அறிவியலை ஒரு புதிய தளத்திற்கு எடுத்து சென்றது.லின்னேயஸின் இம்முறையில் ஒவ்வொரு தாவரமும் அந்த தாவரத்திற்கான பிரத்யேக பெயரைக் கொண்டிருந்ததால் அப்பெயர்களை நினைவில் வைத்துக் கொள்வதும்  வசதியாக இருந்தது.

  லின்னேயஸ்‘’என் அன்புக்குரிய தாவரவியலாளர்களான உங்களுக்கு, நான் வகுத்துள்ள  விதிகளை, என் விருப்பப்படி சமர்ப்பிக்கிறேன். அவை உங்களுக்கு தகுதியானதாக  தோன்றினால், பயன்படுத்துங்கள் இல்லையெனில்அதை காட்டிலும்   சிறந்த ஒன்றை  தயவு செய்து முன்வையுங்கள்’’என்றார்.  300 ஆண்டுகளுக்கு பின்னரும் உயிரின  வகைப்பாடு பல்வேறு தொழில்நுட்பங்கள் உதவியால் வெகுவாக முன்னேறி பெருமளவில் மாற்றங்களுக்கு உள்ளாகி இருப்பினும் லின்னேயஸின்  வகைப்படுத்தல் விதிகள் தான் சர்வதேச பெயரிடும் அமைப்பின் முதுகெலும்பாக இருக்கின்றது. 

உலகெங்கிலும் பின்பற்றப்படும் தாவர அறிவியல் பெயரிடும் முறையான அனைத்துலக பாசிகள், பூஞ்சைகள், தாவரங்களுக்கான பெயரிடல் நெறிமுறையும் (International Code of Nomenclature for algae, fungi, and plants -ICN)  , லின்னேயஸ் பெயரிடும் முறையை அடிப்படையாகக் கொண்டே செயல்படுகின்றது.தாவர , விலங்கு, மனித, பூச்சியினங்களோடு, லின்னேயஸ் நறுமணங்களையும்,, மண் வகைகளையும், தாது உப்புக்களையும்  வகைப்படுத்தி இருக்கிறார்.

அவரது காலத்தில் தாவரவியல் துறையின் தவிர்க்கமுடியாத சக்தியாக விளங்கினார் லின்னேயஸ். உலகின் எந்த மூலையில் தாவரவியல் குறித்த சந்தேகங்கள் வந்தாலும் புதிய தாவரங்கள் கண்டறியப்பட்டாலும் நேரிலோ அல்லது கடிதம் வாயிலாகவோ லின்னேயஸை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்காமல் அடுத்த நகர்வு சாத்தியமில்லை  என்னுமளவுக்கு லின்னேயஸின் செல்வாக்கு இருந்தது.

 1735 ல்வெறும் 14 பக்கங்கள் கொண்ட சிறிய நூலாக பிரசுரரமானலின்னேயஸின்  முதல் இயற்கை வகைப்பாடு நூல, . 1766-1768 ல் மூன்று தொகுதிகளாக 12 வது தொகுப்பு வெளிவந்தபோது  2300 பக்கங்களை கொண்டிருந்தது. .லின்னேயஸ் அவரது வாழ்நாளில் மொத்தம்  7,700 தாவரங்களையும், 4.400 விலங்கினங்களையும், வகைப்படுத்தி பெயரிட்டிருந்தார்  

செவ்வாய் மற்றும்  சனிக்கிழமைகளில் நூற்றுக்கணக்கான மாணர்களுடன்  லின்னேயஸ்  உப்சாலா பல்கலைகழகத்தில் நடத்திய தாவர அறிவியல் தேடல் மற்றும் பயிற்சி வகுப்புக்கள் மிக பிரபலமாயிருந்தது.

1750’ல்  உப்சாலாவை சுற்றியிருந்த ஹம்மர்பி, சாவ்ஜா மற்றும் எடிபி ஆகிய   (Hammarby, Sävja & Edeby)  ஆகிய மூன்று பண்ணைகளை லின்னேயஸ் வாங்கினார் அவையே அவரது குடும்பத்தின் கோடைவாசஸ்தலங்களாக  இருந்தன. 1766ல் நிகழ்ந்த தீ விபத்தில் உப்சாலாவின் சேகரிப்புக்களில் மூன்றில் ஒரு பங்கு எரிந்து போன பின்பு தனது ஹம்மர்பி பண்ணையின்குன்றின் பின்புறம் கருங்கற்களால் ஒரு அருங்காட்சியகம் உருவாக்கி தனது  சேகரிப்புக்களை அதில் பத்திரப்படுத்தினார் லின்னேயஸ்.. நோய்வாய்ப்பட்டிருந்த தனது இறுதிக் காலத்தில் அவர் ஹம்மர்பி  பண்ணை வீட்டில் தங்கி இருந்தார்.

சுவாசக்கோளாறு மற்றும் காய்ச்சலால் அவதியுற்ற லின்னேயஸுக்கு 1773 ல்  மாரடைப்பு ஏற்பட்டு, பக்கவாதம் உண்டானது. 1776 ல் இண்டாம் மாரடைப்பு   அவரை நினைவிழக்கச் செய்தது. டிசம்பர்  1777 ல் அடுத்த மாரடைப்பு அவரை மேலும் பலவீனமாக்கி ஜனவரி  பத்து, 1778ல் லின்னேயஸ் உயிரிழந்தார்.தன் உடலை ஹம்மர்பியில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்னும் லின்னேயஸின் விருப்பத்திற்கு மாறாக அவரது உடல் உப்சாலா தேவாலயத்தில் ஜனவரி 22ல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரது மறைவுக்கு பின்னர் லின்னேயஸின் மகன் கார்ல் தந்தையின் சொத்துக்களுக்கும் சேகரிப்புக்களும் உரிமையாளரானார். ஜோசப் பேங்க்ஸ் (Joseph Banks) என்னும் பிரபல தாவரவியலாளர் லின்னேயஸின் சேகரிப்புகளை பெரும் பொருள்கொடுத்து வாங்க  முயன்றபோது கார்ல்  மறுத்துவிட்டார்.

ஆனால் எதிர்பாராவிதமாக 1783ல் கார்ல் இறந்தபோது ஸாரா லின்னேயஸ் ஜோஸபிடம் அவற்றை விற்க முயன்றார், ஆனால் ஜோஸப் அப்போது மனம் மாறி  அவற்றை வாங்க  மறுத்துவிட்டார்.பின்னர்  24 வயதான மருத்துவ மாணவர் ஜேம்ஸ் எட்வர்ட் ஸ்மித் (James Edward Smith)லின்னேயஸ் சேகரிப்புக்களான 14,000 தாவரங்கள், 3,198 பூச்சி இனங்கள், 1,564 கிளிஞ்சல்கள், 3000 கடிதங்கள் மற்றும் 1600 நூல்களை ஸாராவிடமிருந்து வாங்கினார்.  அவையனைத்தும் ஜேம்ஸ் எட்வர்ட் ஸ்மித் தோற்றுவித்த லண்டன் லின்னேயஸ் சொசைட்டியில்  பாதுகாக்கப்படுகின்றன.

லின்னேயஸின் கொடிவழி, திருமணம் செய்து கொள்ளாமலேயே இறந்த  அவரது மகனின் இறப்புக்கு பிறகு அறுந்து விட்டது. லின்னேயஸ் பெயர் சொல்ல அவரது மகள்கள் வழி சந்ததியினர் மட்டும் இப்போது இருக்கிறார்கள்.

   1778. லின்னேயஸ் இறந்தபோது ஐரோப்பா முழுவதுமே பிரபலமானவராக இருந்தார்.  லின்னேயஸின் அனைத்து நூல்களுமே பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யபட்டன, போலி செய்யபட்டன, தழுவி எழுதப்பட்டன. 

ஏராளமான நூல்கள் எழுதிய லின்னேயஸின் மறைவுக்கு பின்னரும் அவரால் எழுதபட்ட நூல்கள் பலரால் வெளியிடபட்டன.4அவரின் இறுதிக்காலங்களில் எழுதப்பட்ட ’’இயற்கை பொருளாதாரம்’’ மற்றும் ’’இயற்கை அரசியல்’’ ஆகிய நூல்கள் மிக முக்கியமானவை அவரது மறைவுக்கு பின்னர் வெளியான ’’இறைமை கைம்மாறு’’ நூல் (Nemesis Divina) அவரது ஆழமான ஆன்மீக நம்பிக்கைகளை தெரிவித்தது .இந்நூலில் தன்னை எதிர்த்தவர்கள், தன்னிடம் சரியாக நடந்துகொள்ளாதவர்கள் என்று அவரால் கருதப்பட்டவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று விவரமாக குறிப்பிட்டிருக்கிறார். லின்னேயஸ் நம்பிய ஒழுக்க விதிகளின் நூல் என்று கூட இதை சொல்லலாம்.

 ஸ்வீடிஷ் தாவரவியலாளர், வகைப்பாட்டியலாளர், விலங்கியலாளர், மருத்துவர் மற்றும் கவிஞரான  லின்னேயஸின் பெரும்பான்மையான படைப்புக்கள் லத்தீன் மொழியில் இருந்தது. அவரது பெயரை லத்தீன் மொழியில் எழுதும் வழக்கமும் அவருக்கிருந்தது. லின்னேயஸ் உயிரியலை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச்சென்றவர்களில் முதன்மையானவராக கருதப்படுகிறார்.

 ’’ஏதேன் தோட்டத்துஆதாம் உலகின் முதல் உயிர்களை பெயரிட்டு அறிந்தான், நான் இரண்டாம் ஆதாம், உலகின் அனைத்து உயிர்களையும் வகைப்படுத்தி பெயரிட்டேன்’’என்று அறிவித்த லின்னேயஸ்  இயற்கை வகைப்பாடு  நூலின் முன்னட்டையில் இரண்டாம் ஆதாமாகவே தன்னை சித்தரித்திருந்தார்.  

 “கார்ல் லின்னேயஸ்”, “கரோலஸ் லின்னேயஸ்”, கார்ல் வொன் லின்னே, “கார்ல் லின்னே” போன்ற பல்வேறுபட்ட பெயர்களை கொண்டிருந்த, குடும்பப்பெயராக எலுமிச்சை மரத்தின் பெயரை கொண்டிருந்த , உலகின் உயிரினங்களை பெயரிட்டு வகைப்படுத்திய லின்னேயஸ் ”முதன்மையானதாவரவியலாளர் ’(Princeps Botanicorum)என்று அவர் விரும்பியபடியே பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் கல்லறையில் மகனுடன் உறங்குகிறார். 

  1. https://en.wikipedia.org/wiki/Apostles_of_Linnaeus\
  2. “Linnea”, Plants of the World Online, Royal Botanic Gardens, Kew
  3. https://en.wikipedia.org/wiki/Linnaeus’_flower_clock
  4. Carl Linnaeus bibliography – Wikipedia

இதுவரை கண்டறியப்பட்ட தாவரங்களின் அறிவியல் பெயர்களைஅறிந்துகொள்ள: International Plant Names Index (IPNI)

குன்றிமணி-கொல்லும் அழகு

Abrus precatorius, threaded seeds.

மாட்டிறைச்சிக்காக நடைபெறும் கால்நடை திருட்டு , மாட்டிறைச்சி உண்பது ஆகியவை நவீன இந்திய அரசியலில் சூடான விவாதங்களுக்கு உரியவை, எனினும் 1800’ல் இருந்து இந்தியாவில் நிகழ்ந்த கால்நடை திருட்டு மற்றும் கொலை குறித்த பழமையான வரலாறு மற்றும் அதன் பின்னால் இருந்த தாவர நஞ்சொன்றின் பங்கை குறித்து அநேகம் பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அப்போது கால்நடைகளை குறிப்பாக பசுக்களை கொல்ல இரண்டு வழிகளே அதிகம் பயன்பாட்டில் இருந்தன. ஒன்று மிக எளிதாக கிடைத்த ஆர்சனிக்கை, தீவனத்தில் அல்லது சர்க்கரையில் கலந்து கொடுப்பது. இரண்டாவது சுதாரி அல்லது சுயி (‘sutaris’ / ‘suis) ’எனப்படும் குன்றிமணி நஞ்சினால் உருவாக்கப்பட்ட ஒரு சிறு கூர் ஆயுதத்தினால் பசுவின் உடலில் காயப்படுத்துவது.

வங்காளத்திற்கான அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேஜர் ராம்ஸே 1881 இல் வெளியிட்ட, அவரது பணிக்கால விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ’’குற்ற விசாரணை தடயங்கள்’’ என்னும் நூலில், அவர் நடத்திய ஒரு விசாரணையில், கால்நடைகளைக் கொன்றதற்கும், ஆறு கொலை வழக்குகளுக்கும் தொடர்புடைய ஒரு கைதி தெரிவித்த சுதாரியைத் தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது பற்றிய விவரங்களை விளக்கமாக எழுதியிருக்கிறார்.1 அந்த கைதிக்கு தண்டனையை குறைப்பதாக வாக்குறுதி அளித்து இந்த விவரங்கள் பெறப்பட்டன. குன்றிமணி விதைகளிலிருந்து சுதாரி செய்வதை அந்த கைதி நேரடியாக செய்து காட்டினான்.

மேல் தோல் நீக்கப்பட்ட 30 அல்லது 40 குன்றிமணி விதைகள் உடைக்கப்பட்டு, பத்து நிமிடங்களுக்கு நீரில் ஊறவைக்க படுகின்றன, பின்னர் அம்மியில் எருக்கம்பால் சேர்த்து, இவை மை போல அரைக்கப்பட்டு 6 கூர் நுனி கொண்ட ஒரு இன்ச் நீளமுள்ள சிறு கூம்புகளாக கைகளால் உருட்டப்பட்டு வெயிலில் காய வைக்கப்பட்டு கடினமாக்க படுகின்றன. நீர் உட்புகாமல் இருக்க ஒரு இரவு முழுவதும் விலங்கு கொழுப்பில் அமிழ்த்தி வைக்கப்பட்ட இவை உலோகங்களை விட கடினமானதாகின்றன. பின்னர் இவை கற்களில் தீட்டப்பட்டு மேலும் கூராக்கப் படுகின்றன.

.3 அல்லது 4 இத்தைகைய கூரான நச்சு முட்களை செருகி வைத்துக் கொள்ளும் அமைப்பில் இருக்கும் 3 இன்ச் அளவுள்ள மூங்கில் அல்லது மரத்தால் செய்யப்பட்ட கைப்பிடிகளில் இவை செருகப்பட்டு கொலை ஆயுதங்களாகின்றன. செருப்பு தைக்க பயன்படும் குத்தூசிகளைபோல் இருக்கும் இவற்றால் எந்த தடயமுமின்றி கால்நடைகளும் மனிதர்களும் அப்போது கொலை செய்யபட்டிருக்கின்றனர்.

மேஜர் ராம்ஸே அந்த கைதி உருவாக்கிய சுதாரியை சோதிக்க ஒரு பசுவை வரவழைத்தார் அந்த கைதி அப்பசுவின் கொம்புகளுக்கு அடியில், மூளையை தொடும்படி ஒரு முறையும், பசுவின் நாக்கிற்கு அடியில் இரண்டு முறையும், சுதாரி ஊசி நுனிகளால். மிக விசையுடன் குத்தி, கைப்பிடியை திருகி உடைந்த முள் பசுவின் உடலில் தங்கிவிடும்படி உருவி எடுத்தான். குத்தப்பட்ட எந்த காயமும், சுவடுமின்றி அந்த பசு 34 மணிநேரத்தில் இறந்தது. குத்திய இடத்தில் சீழ் முத்தொன்றை தவிர வேறெந்த அடையாளமும் இல்லை அப்பசுவின் உடலில்

இறந்த பசுவின் உடலில் இருக்கும் குன்றிமணியின் விஷம் ஆர்சனிக்கை கண்டுபிடிப்பதை காட்டிலும் கடினமானது.ஒரு வளர்ந்த பசுவை கொல்ல சுமார் 600 மில்லி கிராம் குன்றிமணி நஞ்சு போதுமானது. மேலும் விரைவாக பசுக்களை கொல்ல வேண்டி இருக்கையில் குன்றிமணி விழுதுடன் பாதரசம், ஊமத்தை இலைச்சாறு மற்றும் ஆர்சனிக்கும் சேர்க்கப்படும்.

அப்போது ஆர்சனிக் ’’அரிசி’’ என்னும் பெயரில் கடைகளில் வெளிப்படையாகவே விற்கப்பட்டிருக்கிறது. நன்கு விளைந்த சோள விதையை குடைந்து அதில் 2 அவுன்ஸ் ஆர்சனிக் நிரப்பப்பட்டு விதையின் வெளிப்புறத்தை மூடி இவை தீவனத்தில் கலக்கப்படும்

தோலுக்காக பசுக்களையும் எருதுகளையும் மட்டுமல்லாது மனிதர்களை கொல்லவும் குன்றிமணி விஷம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.முதன்முதலாக 1854ல் வடமேற்கு இந்தியாவில் முதல் குன்றிமணியால் கொல்லபட்ட பசுக்கொலை அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது. அந்த விசாரணையின் போதுதான் பல உண்மைகள் தெரிய வந்தன

சுதாரிகளால் பசுக்கொலைகளை செய்தவர்கள் இந்திய பட்டியல் சாதிகளில் ஒரு பிரிவினரும், எண்ணிக்கை அடிப்படையில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாதியை சேர்ந்தவர்களுமான, சாமர் எனப்படுபவர்கள் (Charmar).2 இவர்கள் வட இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் அதிகம் வாழ்பவர்கள்.

இவர்களில் பெரும்பான்மையோர் தோல் பொருள் தயாரிப்பாளர்கள். கொலையான பசுக்களின் உடலை அகற்றும் சாமர்களுக்கு அப்பசுவின் தோலும் இறைசியும் சொந்தமென்பதால் தோலை அகற்றி விற்பனை செய்துவிட்டு இறைச்சியை உண்ண எடுத்துக்கொள்வார்கள். நோயுற்ற மற்றும் நஞ்சூட்டப்பட்ட மாடுகளின் இறைச்சியை உண்ட இவர்களுக்கு அதனால் எந்த உடல் கோளாறுகளும் உண்டாகவில்லை என்பதை அவர்களுடன் இருந்து கவனித்த ஆய்வாளர்கள் ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.

பிராமணர்களுக்கு இறந்த பசுக்களை தொடுவது பாவம் என்பதால் இயற்கையாக மரணிக்கும் எல்லா பசுக்களும் சாமர்களுக்கு அப்போது சொந்தமானது. அவர்கள் இறந்த அப்பசுவின் உடலை அப்புறப்படுத்திவிட்டு தோலை உரித்து பதனிட்டும், இறைச்சியை உணவாகவும் எடுத்துக்கொண்டனர்.

1850களில் இருந்து சாமர்கள் சட்டவிரோதமாக மாடுகளை குன்றிமணி நஞ்சு மற்றும் ஆர்சனிக் உபயோகித்து கொல்லத்துவங்கினர். சுதாரியால் குத்தபட்டு இறந்த பசுக்களின் உடலில் நஞ்சூட்டியதற்கான எந்த தடயமும் இருக்காது என்பதால், அவை இயற்கையாக இறந்ததாகவே நம்பபட்டது. அவற்றின் தோல் பெரும்பாலும் பாட்னா மற்றும் கல்கத்தாவை சேர்ந்த இஸ்லாமிய தோல் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வியாபாரிகளும் மாடுகளை கொல்லுவதற்கு ஆர்சனிக்கையும் , குன்றிமணி விதைகளையும் அதிக அளவில் சாமர்களுக்கு கொடுப்பதும் வழக்கமாக இருந்தது

தோல் பதனிடும் தொழிற்சாலைகளும், தோல்பொருட்களின் தொழிற்சாலைகளும் விரிவுபடுத்தப்பட்ட 1870 களுக்கு பிறகு இந்த பசுக்கொலைகள் மிக அதிகமாகி சாமர்கள் பசுவைகொல்லும் பிரிவினராகவே அறியப்பட்டனர்..3

முறைப்படுத்தப்பட்ட குற்றமாகவே இக்கொலைகள் நடைபெற்றுவந்த 1880 மற்றும் 1890 களில் மட்டும் 7 மில்லியன் மாட்டுத்தோல்கள் கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டிருந்தது. 1900-01 ல் மட்டும் சுமார் 113 மில்லியனுக்கு தோல் ஏற்றுமதி செய்யப்பட்டது.

பசுக்கொலைகளோடு மனிதர்களும் குன்றிமணி நஞ்சூட்டி கொல்லப்பட்டனர். 1880’ல் பெங்காலின் காவல்துறை ஆவணமொன்றில் 1871’ல் சுதாரியால் கொல்லப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு ஜோடி சுதாரிகளால் உடலின் பக்கவாட்டு பகுதியில் குத்தப்பட்டு இறந்தவரும், உறங்குகையில் சுதாரியால் குத்தப்பட்டு, சுதாரி நுனியை சதையை தோண்டி அகற்றிவிட்டாலும் 3 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த மற்றொருவரும், கன்னங்களில் சுதாரி குத்தப்பட்டதால் உயிரிழந்த இன்னொருவருமாக, இந்த கொலைகள் அந்த ஆவணத்தில் விளக்கமாக பதிவாகி இருக்கின்றன்.

குற்றவாளிகளான சாமர்கள் மிகுந்த வறுமையில் இக்கொலைகளை மிகக்குறைந்த கூலிக்காகவும், செய்திருப்பதும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது ஒரு கொலைக்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட கூலி 16.5 ரூபாய்கள் தான்.

1865-69 வட இந்தியாவில் மட்டும், 1462 பசுக்கள் இவ்வாறு கொல்லப்பட்டிருந்தன. வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் கொல்லப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை 1900;ல் உச்சத்தை எட்டியது. அனைத்து கொலைகளையும் சாமர் இனத்தவர்களே செய்தனர்.

அக்கொலை விசாரணைகள், பல கைதுகளுக்கு பிறகு சாமர்கள் ஆர்சனிக் மற்றும் குன்றிமணிகளை வைத்திருப்பது குற்றம் என அறிவிக்கப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். ஆயினும் பசுக்கொலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. 1899ல் பெங்காலில் 148 மாடுகள் இறந்ததை ஆராய்ந்த வேதியியல் ஆய்வாளர் இறந்தவைகளில் 75 சதவீதம் நஞ்சூட்டப்பட்டிருந்ததை தெரிவித்தார்.

இறந்த விலங்குகளின் மாமிசத்தை உண்பதாலும் அவற்றின் தோலை அகற்றி விற்பதாலும், அவர்களின் சுத்தமின்மை காரணமாக தீண்டத்தகாதவர்களாக உயர்குடியினரால் அக்காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட இனமாக இருந்த சாமர்கள் இப்பசுக்கொலை விசாரணைகளின் போது பல அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் சந்தித்தனர். காவல்துறையினரின் மிக இறுக்கமான கட்டுப்பாடுகளினாலேயே இப்பசுக்கொலைகள் மெல்ல மெல்ல குறைந்ததாக சொல்லப்படுகின்றது.

.ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் அமர் சித்ர கதா வில் வங்காளத்தில் உண்டான ஒரு பஞ்சத்தின் போது மக்களுக்கு வித்யாசாகரும் அவரது தோழர்களும் உணவு மற்றும் உணவு பொருட்களை விநியோகித்துக் கொண்டிருக்கையில் ஒரு சாமருக்கு எண்ணையை தரப்போன அவரது தோழர் மிகத் தொலைவில் நின்று அவருக்கு வழங்கியதை கண்டித்து, வித்யாசாகர் சாமரை தொட்டுத் தழுவி ’’இவரைத் தொட்டால் ஒன்றுமில்லை’’ என்று சொல்வது போல் ஒரு கதையில் சித்தரிக்கபட்டிருக்கிறது.

இந்திய தலித் பிரிவில் ஒரு துணை பிரிவான இவர்களின் பெயரான சார்மர் அல்லது சாமர் என்னும் சொல் ’’தோல் பதனிடுபவர்’’ என்று பொருள் கொண்ட சார்மகரா- ‘Charmakara’ என்னும் சமஸ்கிருத சொல்லிலிருந்து உருவானது.

இந்திய தொன்மங்களில் சாமர்களின் தோற்றம் பற்றிய கதைகள் பல உண்டு. உயர்குடியில் பிறந்த, இறந்த பசுவின் உடலை வேறு வழியின்றி அகற்றிய இளைஞன் ஒருவனே முதல் சாமர் என்றும், இறந்த எருதின் உடலை தனியே அகற்ற முடியாத உயர்குடி இளைஞன் ஒருவனுக்கு சிவன் உதவிசெய்து, இறந்த பசுவின் உடலின் மீது சிறுநீர் கழிக்க சொல்லிய போது அந்த உடலிலிருந்து எழுந்து வந்தது முதல் சாமர் என்றும் கதைகள் உள்ளன

இமாச்சலபிரதேசம், டில்லி, ஹரியானா, பீகார், பஞ்சாப் உத்தரபிரதேசம் மற்றும் நேபாளில் இவர்களுக்கு ’’சாம்பார் போளி, சாம்பாரி மற்றும் சாம்ரி எனவும் பெயர்களுண்டு. செருப்பு தைப்பது, தோல் பதனிடுதல் மற்றும் விவசாய வேலைகளை செய்துவந்த இவர்களில் ஏராளமானோர் இந்திய ராணுவத்தில் பணி புரிந்திருக்கிறார்கள் என்கிறது வரலாறு.

சுமார் 90 மில்லியன் சார்மர்கள் இந்தியாவில் இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. அதாவது மொத்த இந்திய மக்கள் தொகையில் 16 சதவீதம் சாமர்கள். தற்போது அவர்களில் பலர் மிகப்பெரிய சமூக அந்தஸ்துடன் இருக்கிறார்கள்

இப்போது பஞ்சாப்பில் இவர்கள் இரு பிரிவினராக ஆதிதர்மிகள் மற்றும் ரவிதாஸர்கள் என்று பெரும் செல்வாக்குடைய இனத்தவர்களாக இருக்கிறார்கள். பல பஞ்சாபி சாமர்கள் ராணுவத்தில் உயர் பதவியில் இருக்கிறார்கள் பஞ்சாபின் சம்கிலா உள்ளிட்ட பல பிரபல பாடகர்களும் கவிஞர்களும் இந்த பிரிவை சேர்ந்தவர்கள் .

இந்திய ராணுவத்தின் மிக புகழ்பெற்ற, ஏராளமான விருதுகளை வழக்கமாக பெற்றுக்கொண்டிருக்கும் படைப்பிரிவான சீக்கிய காலாட்படை, பெரும்பாலும் சாமர் மற்றும் மஷாபி சீக்கியர்களை கொண்டுள்ளது.

முன்னாள் இந்திய துணை பிரதமர்- ஜகஜீவன் ராம், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் கன்ஷிராம் மற்றும் நான்கு முறை உத்திரபிரதேச முதலவராக இருந்த மாயாவதி ஆகியோர் இந்த பிரிவை சேர்ந்தவர்கள்

உலகம் முழுவதும் தாவரத்திலிருந்து பெறப்படும் விஷத்தில் முதல் இடம் இந்த குன்றி மணிக்குத்தான்.4 ஒரு மனிதனைக் கொல்ல ஒரே ஒரு குன்றிமணி போதுமானது. குன்றிமணியின் பயன்களையும் நச்சுத்தன்மையையும் குறித்து உலகின் பல பாகங்களிலும் பல நூல்களிலும், ஆய்வறிக்கைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு களைச்செடி போல எங்கும் படர்ந்து வளர்ந்து இருக்கும், பட்டாணி குடும்பமான ஃபேபேசியை சேர்ந்த குன்றிமணி உறுதியான நடுத்தண்டும், மெல்லிய கிளைத்தண்டுகளும், சிறிய இளம்பச்சை கூட்டிலைகளும், அவரை போன்ற காய்களுடன் மரங்களிலும், புதர்களிலும் பற்றி படர்ந்து வளரும் ஒரு பல்லாண்டு கொடித் தாவரம்.

குன்றிமணி செடியின் தாவர அறிவியல் பெயர் Abrus precatorius. கிரேக்க மொழியில் Abrus என்பது அழகிய மென்மையான என்னும் பொருளில் இச்செடியின் அழகிய இலைகளை குறிக்கின்றது, precatorius என்பது பிரார்த்தனைக்குரிய என்று பொருள்படும். குன்றிமணி விதைகள் ஜெபமாலைகள் செய்ய பெரிதும் பயன்பாட்டில் இருந்ததால் சிற்றினத்துக்கு இந்த பெயரிடப்பட்டது. ஆப்ரஸ் பேரினத்தில் 17 சிற்றினங்கள் இருப்பினும் உலகெங்கிலும் அழகிய விதைகளின் பொருட்டு பிரபலமாயிருப்பது குன்றிமணி எனப்படும் Abrus precatorius கொடிகளே! (Abrus precatorius L.)

ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட இச்செடியின் விதைகளான குன்றிமணிகள் பல நூற்றாண்டுகளாக ஆபரணங்கள் செய்ய பயன்படுத்தப்பட்டன,.இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இத்தாவரம் ஒரு ஆக்கிரமிப்பு தாவரமாக ஹவாய், கரீபியன் தீவுகள், பாலினேஷியா மற்றும் அமெரிக்காவின் சில குறிப்பிட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்டது. ஃப்ளோரிடாவின் உயரமான மனிதர்களின் நடமாட்டமே இல்லாத ஊசியிலை மலைக்காடுகளில் கூட இவை பரவியுள்ளன

மிக ஆழத்தில் வேறூன்றி இருக்கும் குன்றிமணியின் உறுதியான வேர்கள் காட்டுத்தீயில் கூட அழியாது மாற்றடுக்கில் அமைந்திருக்கும் இறகுகளை போன்ற,மிதமான இனிப்பு சுவையுடன் இருக்கும், அழகிய கூட்டிலைகள் 8 லிருந்து 20 சிற்றிலை ஜோடிகளை கொண்டிருக்கும். 10லிருந்து 20 அடி நீளம் வளரும் இக்கொடித்தண்டுகள் முற்றிய பின்னர் நல்ல உறுதியானவைகளாக இருக்கும்.

வெள்ளையும் இளஞ்சிவப்பும் கலந்த சிறு மலர்கள் கொத்தாக மலரும்.3 செ மீ நீளமுள்ள காய்கள் 1 செ மீ அளவுள்ள 3 அல்லது 5 கடினமான பளபளப்பான அடர் சிவப்பில் கருப்பு மருவுடன் இருக்கும் அழகிய விதைகளை கொண்டிருக்கும். இவையே குன்றிமணி எனப்படுகின்றன.

குன்றிமணியின் பல்வேறு ஆங்கில பெயர்கள்; jequirity, Crab’s eye, rosary pea, paternoster pea, love pea, precatory bean, prayer bead, John Crow Bead, coral bead, red-bead vine, country licorice, Indian licorice, wild licorice, Jamaica wild licorice, Akar Saga, coondrimany, gidee gidee, Jumbie bead ratti/rettee/retty, goonjaa/gunja/goonja ,weather plant. & paternoster pea, குறுநறுங்கண்ணி, ஆவு, காகபீலி, குஞ்சி,குலாகஞ்சி குஞ்சிரம், குண்டுமணி, குந்துமணி, குன்றி, மணிச்சிகை,குன்னி குரு பவளக்குன்றி, நஞ்சி, நாய்க்கரந்தை, சிரீடம் உள்ளிட்ட பல பெயர்களால் அறியப்படும் குன்றி மணி நூற்றாண்டுகளாக சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் பல்வேறு சிகிச்சைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

இதன் வண்ணமயமான பளபளக்கும் மணிகளைப்போல இருக்கும் விதைகளால் இத்தாவரம் பரவலாக அறியப்படுகிறது .குன்றிமணி விரைவில் பல்கி பெருகும் இயல்புடையது.

குன்றிமணி விதைகளில் இருக்கும் ஆப்ரின் நஞ்சு (Abrin) 5 மனிதர்களையும், விலங்குகளையும் கொல்லும் தன்மையுடையது. ஆப்ரின் நஞ்சில் A B என இரு முக்கியமான புரதங்கள் உள்ளன. இவையே மனிதர்களின் உடலில் புரதம் உருவாகாமல் தடுத்து பிற மோசமான விளைவுகளை துரித படுத்துபவை. ஒரே ஒரு மூலக்கூறு ஆப்ரின் மனித உடலின் 1500 ரிபோசோம்களை ஒரு நொடியில் செயழிழக்க செய்துவிடும்.

ஆப்ரினின் நச்சுத்தன்மை ஆமணக்கு விதைகளில் இருக்கும் ரிசினின் நச்சுத்தன்மையை காட்டிலும் (Ricin) இருமடங்கு அதிகம் எனினும் இரண்டிற்குமான நஞ்சின் அறிகுறிகள் ஒன்றுபோலவே இருக்கும். ஆமணக்கின் கனியை கடித்து மென்று விழுங்கினால் சிகிச்சைக்கு பிறகு பிழைப்பது ஓரளவுக்கு சாத்தியம் ஆனால் குன்றிமணியை கடித்து விழுங்கினால் உயிரிழப்பு நிச்சயம் உண்டாகும் கடிக்காமல் தவறுதலாக முழுதாக விழுங்கப்பட்ட குன்றிமணி எந்த நோய் அறிகுறியையும், ஆபத்தையும் விளைவிப்பதில்லை.ஆனால் இவ் விதையை எரிப்பதனால் ஏற்படும் புகையை சுவாசிப்பதால் கூட நரம்பு மண்டலம் தொடர்பான கடுமையான சில நோய்கள் உருவாகும்..மனிதர்களின் உயரிழப்புக்கு 0.1 மி கி அளவு ஆப்ரினே போதுமானதாக இருக்கிறது, குதிரைகளும் மனிதர்கள் அளவுக்கே குன்றிமணி நஞ்சினால் பாதிப்படைகின்றன.

.குன்றிமணியை கடித்து உண்டால் வாந்தி, கடும் காய்ச்சல், தொடர்ந்து அதிக அளவில் எச்சில் ஒழுகுதல், ஈரல் சேதம், சிறுநீரக செயழிழப்பு, கண்களில் ரத்தம் வடிதல் வலிப்பு, சிகிச்சை அளிக்காத பட்சத்தில் உயிரிழப்பு ஆகியவை உண்டாகும்.

முழு சிவப்பிலிருக்கும், கருப்பும் சிவப்புமான மணிகள் ஆபரணங்களில் அதிகமாக இணைக்கப்படுகின்றன. இவற்றை துளையிட்டு ஆபரணங்களாக்கும் தொழிலாளிகளுக்கும் இந்த நஞ்சினால் ஆபத்துகள் உண்டாவதாக ஆதரங்களற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்ரின் நஞ்சை குறித்த மிக முக்கியமான 256 ஆய்வறிக்கைகளில் ஒன்றில் கூட குன்றிமணியை தொழில் ரீதியாக கையாளுபவர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் தெரிவிக்கப்படவில்லை

முழு வெள்ளை, சிவப்பும் கருப்பும் கலந்தது, முழு சிவப்பு, முழு கருப்பு, பச்சை, நீலம் மஞ்சள் என இம் மணிகளில் பல வகைகள் உள்ளன.அனைத்து விதைகளும் கடும் நஞ்சுள்ளவை. மருத்துவர்கள் அளிப்பதை தவிர இத்தாவரத்தின் எந்த பாகங்களையும் சுயமாக முயன்று பார்ப்பதும், மருந்தாக உபயோகிப்பதும் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

மருத்துவமனைகளில் குன்றிமணி நஞ்சினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஞ்சின் வீரியத்தை குறைக்க செயற்கை சுவாசம் அளித்து இரத்தை சுத்தம் செய்வது போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படும். குன்றிமணி நஞ்சுக்கு முறிமருந்து என்று ஏதும் இல்லை என்பதும் இதன் ஆபத்தை அதிகரிக்கிறது.

1877ல் வெளியான உதய் சந்த் தத்தின் ’’இந்துக்களின் மருந்துசரக்குகள்’’ (The Materia Medica of the Hindus) நூலில் குன்றிமணியின் விவரிப்பும் அதன் பாலுணர்வு தூண்டுதல் உள்ளிட்ட பல மருத்துவ குணங்களும் விரிவாக குறிப்பிடபட்டுள்ளது .

அமரசிம்மரின் பிரபல சமஸ்கிருத நூலான ”அமரோக்‌ஷா” வின் காடுகளிலிருந்து கிடைக்கும் மருந்து பொருட்கள் பற்றிய இரண்டாவது அத்தியாயத்தில் குன்றிமணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

1889 ல் வெளியான ஆஸ்திரேலியாவின் முக்கிய தாவரங்கள் என்னும் நூலில் இத்தாவரத்தின் பாகங்களின் பல்வேறு மருத்துவ பயன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் 99 தாவரங்களில் குறுநறுங்கண்ணி எனப்படுவது குன்றிமணியே.இவை நாளடைவில் பிற விதைகளைப்போல சுருங்குவதில்லை என்பதால் தங்க நகைகளில் இவற்றை பதிப்பது பல நாடுகளில் வழக்கத்தில் இருக்கிறது.

.

மேற்கிந்திய தீவுகளில் குன்றிமணி பதிக்கப்பட்ட கைப்பட்டைகளை அணிந்துகொள்வது தீய ஆவிகளில் இருந்து காப்பாற்றும் என்னும் நம்பிக்கை உள்ளது.

இவ்விதைகள் எடையில் மிகவும் சீரானவை, நீர் ஊடுருவ முடியாத கடின விதையுறையின் காரணமாக வெவ்வேறு ஈரப்பத நிலைமைகளின் கீழ் கூட இவற்றில் ஈரம் புகுவதில்லை. குப்பையில் இருந்தாலும் குன்றி மணி சுருங்காது என்னும்பழஞ்சொல்லும் உண்டு;

குன்றிமணி விதைகள் தங்கத்தை துல்லியமாக அளவிட முன்பு பயன்பாட்டில் இருந்தது .இந்தியாவில் குன்றிமணியை கொண்டு அளவிடும் அளவைகளுக்கு ராட்டை என்று பெயர். தோராயமாக 130 மி கி எடை கொண்டிருக்கும் ஒரு குன்றிமணி 2 கோதுமை மணிகளின் எடைக்கும், 3 பார்லி மணிகளின் எடைக்கும் 4 அரிசிகளின் எடைக்கும் 18 கடுகுகளின் எடைக்கும் சமமானதாக இருக்கும்.

8 ராட்டை = 1 மாஷா

12 மாஷா = 1 டோலா (11.6 கிராம்)

மூன்றே முக்கால் குன்றி மணி எடை ஒரு பணவெடை.

முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை ஒரு விராகன் எடை.

இரண்டு குன்றி மணி எடை ஒரு உளுந்து எடை.

பத்து விராகன் எடை ஒரு பலம்.

இவ்வாறு பொன்னை அளவிடுதல் போன்ற நுட்பமான நிறுத்தல் அளவுகளுக்கு குன்றிமணி பயன்படுத்தப்பட்டதால் தான் குந்துமணித்தங்கம் என்னும் சொற்பிரயோகம் புழக்கத்தில் இன்னும் கூட இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களிலும் நூல்களிலும் குன்றிமணி குறிப்பிடப்பட்டுள்ளது.

1915 ல் வெளியான பிரஜேந்திரநாத்தின் பண்டைய இந்துக்களின் நேர்மறை அறிவியல் என்னும் நூலில் (The Positive Sciences Of The Ancient Hindus) ஒரு பொற்கொல்லரிடம் பொன் பேசுவதாக வரும் இரு வரிகளில் ’’ நான் முதல் தரமான பொன் என் தரத்தை கருப்பு முகமுடைய மணிகளைக் கொண்டு அளவிட்டுக் கொள்ளலாம்’’என்றிருக்கிறது

திருக்குறளில் பல இடங்களில் குன்றியெனும் சொல் குன்றிமணியை குறிக்கிறது. திருக்குறளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரே விதை குன்றி மணிதான்.

“புறங்குன்றி கண்டனையரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து’

குன்றிமணியின் சிவப்பு போல் வெளித்தோற்றத்தில் செம்மையுடையவராகவும், அகத்தில் (மனத்தில்) குன்றி மணி மூக்கைப்போல் கரியர் (கறுப்பு எண்ணம் உடையவர்) ஆகவும் இருப்பார்கள் என்பது இதன் கருத்து.

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ – என்னும் மற்றொரு குறள் குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள் என்கிறது.

திருப்புகழில்,

”குன்றி மணி போல்வ செங்கண் வரி போகி கொண்ட படம்
வீசு மணி கூர்வாய் கொண்ட மயிலேறி அன்று அசுரர் சேனை
கொன்ற குமரேச குருநாதா ”

– என்னும் பாடல் வரிகள். குண்றிமணி போல சிவந்த கண்களையும் கோடுகளையும் உடைய பாம்பு படத்தை வீசும்படி, தனது அழகிய கூர்மையான வாயில் அந்தப் பாம்பை கொத்திக் கொண்ட மயிலின் மீது ஏறி, அசுரர் சேனையைக் கொன்ற குமரேசனே என்கிறது.

முழு வெள்ளையில் இருக்கும் குன்றிமணிகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பாலுணர்வு ஊக்கியாக பயன்படுகிறது. குன்றிமணி கொடியின் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் காய்ச்சலுக்கும், இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகிறது. பாரம்பரிய மருத்துவ முறைகளில் விதைகள் கொதிநீரில் இடப்பட்டு நஞ்சு நீக்கிய பின்னர் சிகிச்சைக்கு பயன்படுத்த படுகிறது.

ஆயுர்வேதம் இத்தாவர பாகங்களை விலங்குகளால் உண்டான சிராய்ப்புகள், மற்றும் காயங்களுக்கு மருந்தாக உபயோகிக்கிறது. உள்மருந்தாக வெண்குஷ்டம், ஜன்னி மற்றும் வெறிநாய்க்கடிக்கும் ஆயுர்வேதம் குன்றிமணியிலிருந்து தயாரித்த மருந்தையே கொடுக்கிறது. ஆயுர்வேதம் தலைமுடி வளர்ச்சிக்கு குன்றிமணியை உபயோகப்படுத்துகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் இவ்விதைகள் பாலில் 3 மணி நேரம் வேக வைக்கப்பட்ட பின்னரே சிகிச்சையில் பயன்படுத்தப்படும்.

குன்றிமணி விதைகளை பாலில் வேகவைத்து பின்னர் உலர்த்துவது, ஆமணக்கு எண்ணெயில் குன்றிமணி பொடியை கலந்து நஞ்சை நீக்குவது போன்ற இதன் நஞ்சினை நீக்கும் பல்வேறு வழிகளை ”சுத்திசெய்தல்” என்னும் தலைப்பில் சித்தர்கள் விவரித்துள்ளனர்.

இந்தியா, பிரேசில், ஜமைக்கா போன்ற நாடுகளின் பாரம்பரிய மருத்துவ முறைகள் குன்றிமணியை கண் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கவும் ,தேனுடன் இலைச் சாற்றை கலந்து வீக்கங்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்துகின்றன.

இந்தியாவில் பல மாநிலங்களில் குன்றிமணிகளை பூஜை அறையில் வைத்து பூசை செய்வது வழக்கம். குன்றிமணிகள் பதிக்கப்பட்ட ஆபரணங்களை அணிந்து கொள்வது தீய சக்திகள் நெருங்காது என்னும் நம்பிக்கை இந்தியாவின் பல பாகங்களில் இருக்கிறது

தென்னாப்பிரிக்காவின் ஜுலு மக்கள் குன்றிமணிகளை கொண்டு ஆபரணங்கள் செய்து பொருளீட்டுவதை முக்கிய தொழிலாகவே செய்கின்றனர்.

சுஷ்ருதர் குன்றிமணியின் மருத்துவ உபயோகங்களை குறிப்பிட்டிருப்பதால் மிகபழங்காலத்திலிருந்தே இது மருந்தாக பயன்பட்டு வந்திருக்கிறது என்பதை அறியலாம்

.இந்தியாவைப்போலவே, இலங்கையிலும் மரபு வழி நகைத்தொழில் செய்வோர் தங்கத்தின் நிறையை அளவிடுவதற்கு குன்றிமணிகளைப் பயன்படுத்துவது உண்டு. இலங்கை புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பாரம்பரிய விளையாட்டுக்கள் பலவற்றில் குன்றிமணி பயன்படுத்தப்படும். சீனாவில் இவ்விதை காதலின் சின்னமாக கருதப்படுகிறது.பல்லாங்குழி, தாயம் ஆகிய விளையாட்டுக்களிலும் குன்றிமணியை உபயொகிப்பது இன்றும் தமிழகத்தில் வழக்கமாக இருக்கிறது.

பிள்ளையார் சதுர்த்தியின் போது கைகளால் பிசைந்து வீடுகளில் செய்யப்படும் பிள்ளையாருக்கு கண்களாக குன்றிமணியை பதிப்பது இந்தியா முழுவதிலுமே பொதுவான வழக்கம். குன்றிமணிச் சம்பா என்று சற்றே தடிமனான செந்நிறமுடைய ஒரு சம்பா நெல் வகை தமிழகத்தில் இருந்தது.

கருப்பு குன்றிமணி ராஜஸ்தானில் அதிகமாக விளைகிறது. ராஜஸ்தானில் உள்ள மக்கள் முக்கியமான பூஜைகளை இந்த கருப்பு குன்றிமணி இல்லாமல் செய்யமாட்டார்கள். அங்கு காளியின் அம்சமாக கருப்பு குன்றிமணி கருதப்படுகிறது.

ராஜஸ்தானின் புகழ்பெற்ற நாட்டுபுறப்பாடலான சிர்மி பாடல் குன்றிமணியை குறித்தானது. திருமணமான பெண்ணொருத்தி தன்னை காண புகுந்த வீட்டுக்கு வரும் தன் தந்தையையும் சகோதரனையும் காண குன்றிமணி செடிகளின் மீது ஏறி நின்று பாடும் ”சிர்மி” அங்கு மிகவும் பிரபலமான நாட்டுப்புற பாடல். ராஜஸ்தானில் சிர்மி என்பது குன்றிமணியை குறிக்கும் சொல்

அரளி விதைகள், ஊமத்தை இலைகள், குன்றிமணிகள், ஆமணக்கு கொட்டைகள், செங்காந்தள் வேர் என கொடிய நஞ்சினை கொண்டிருக்கும் தாவரங்களை குழந்தைகள் தவறுதலாக கடித்தும் விழுங்கியும் உயிராபத்தை வரவழைத்துக் கொள்வது பல வளரும் நாடுகளில் மிக அதிகம் நிகழ்கிறது.

ஆச்சர்யபடும்படியாக இந்த தாவரம் மிக அதிகமாக காணப்படும் இலங்கையில் இதனால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு கடந்த பத்து ஆண்டுகளில் 9 குழந்தைகள் மட்டுமே குன்றிமணியை கடித்ததால் மருத்துவமனைக்கு வந்தவர்கள். அதேபோல் குன்றிமணி அதிகம் விளையும் கேரளாவிலும் இதனால் பாதிப்படைபவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கிறது.

கேரளா குருவாயூரில் குழந்தைகளுக்கு சோறூட்டும் அன்னபிரசன்னம் நிகழ்வில் குழந்தைகள் கைகளால் அளைவதற்கென்று உருளியில் நிறைக்கப்பட்டிருக்கும் சிவப்பு நிற மணிகள் மலையாளிகளால் சில சமயம் குன்னிக்குரு என்றழைக்கப் பட்டாலும் அவை குன்றிமணிகள் அல்ல Adenanthera pavonina என்னும் மஞ்சாடியின் விதைகள்

தாவர நஞ்சினால் உலகெங்கிலும் மிக அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே! குன்றிமணியின் ஆபத்துக்களில் முதலாவது இதை உட்கொண்ட பலமணி நேரம் கழித்தே அறிகுறிகள் தெரிவது, இரண்டாவது இதை உட்கொள்ளும் குழந்தைகள் பெரும்பாலும் வீட்டிலிருந்து தூரத்தில் இந்த தாவரம் வளர்ந்திருக்கும் இடங்களிலோ, விளையாடும் இடங்களிலோ அலல்து பள்ளியிலோ இருப்பதால் விஷயம் பெரியவர்களுக்கு தெரியவர நேரம் ஆகிவிடுகிறது மூன்றாவதும் மிக முக்கியமானதும் குன்றிமணி இத்தனை நஞ்சுள்ளதென்பது அநேகம் பேருக்கு தெரியாது என்பதுதான்.

குன்றிமணி நம் சுற்றுப்புறங்களில் மிகச் சாதாரணமாக தென்படும் ஒரு களைத்தாவரம். நம் கலாச்சாரத்தில் பல சடங்குகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்றாகவும் இருக்கும் இதன் அழகிய விதைகளை குழந்தைகள் அதிகம் கையாளும், பயன்படுத்தும் சாத்தியங்களும் அதிகமிருப்பதால் குன்றிமணியின் நச்சுத்தன்மையை தெரிந்து கொண்டால் மட்டுமே அதன் விபத்துகளை தவிர்க்க முடியும்.

பள்ளிக்கூடங்களில் சுற்றுபுறங்களில் எளிதாக காணப்படும் இதுபோன்ற நச்சுத் தாவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் உரைகளை, நாடகங்கள் நிகழ்ச்சிகளை அவசியம் நடத்த வேண்டும். A for Apple, C for Carrot என்று கற்றுக் கொள்வதோடு நம்மை சுற்றி இருக்கும் தாவரங்களையும் பள்ளியில் அடிப்படை கல்வியிலேயே கற்பிக்க வேண்டும். இதன் மூலம் தாவரங்களை குறித்த முறையான அறிவும், ஆபத்துக்களை தவிர்க்கும் அறிதலும் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே ஏற்படும்.

மேலும் தகவல்களுக்கு:

  1. Detective Footprints, Bengal, 1874-1881: With Bearings for a Future Course

Major h m ramsey dysp bengal.

2.Chamar – Wikipedia

History of Cattle Poisoning in British India – Telangana Mata

4. 10 Most Poisonous Plants in the World | Planet Deadly

5.Abrin – Wikipedia

சொல்வனம் தளத்தில்

நீலக்கற்றாழையும் டெக்கீலாவும்

மெக்ஸிகோவின் ஹாலிஸ்கோ (Jalisco) மலைப் பிரதேசமொன்றில், அட்டோடோனில்கோ நகரில், மிக வறிய குடும்பமொன்றின் தலைவர் திடீரென இறந்தபோது அன்னையையும் ஏழு சகோதர சகோதரிகளையும் காப்பாற்றும் பொறுப்பைக் குடும்பத்தின் மூன்றாவது மகனாக இருந்தாலும் மிகுந்த பொறுப்புணர்வுடன் இருந்த 15 வயதான ஹூலியோ ஏற்றுக்கொண்டான். (ஹூலியோ கொன்ஸாலெஸ் ஃப்ரௌஸ்டோ எஸ்ட்ராடா- Julio González-Frausto Estrada)1 தனது மாமாவின் கற்றாழை வயல்களிலும், வைன் திரவத்தைப் பழமையாக்கும் நிலவறைகளிலும் மிகக் கடுமையாக வேலைசெய்து ஹூலியோ பெற்ற வாரச் சம்பளமான ஒன்பது பேஸோக்கள் எட்டு நபர்களடங்கிய அவரது குடும்பத்தின் பசித்தீயை அணைக்கப் போதுமானதாக இல்லை.

மேலும் கடுமையாக உழைக்க வேண்டிய நிர்பந்தத்தில், தனிப்பட்ட முறையில் மெக்ஸிகோவில் அப்போது பிரபல பானமாக இருந்த கற்றாழை மதுவைச் சிறு மரப் பீப்பாய்களில் அடைத்து, அருகில் இருக்கும் நகரங்களுக்குக் குதிரையில் கொண்டுபோய் விற்கத் தொடங்கிய ஹூலியோவிற்கு ஒரு நாளைக்கு 9 பேஸோக்கள் கிடைத்தன. இந்தச் சிறு வணிக முயற்சியில் கற்றாழை மதுவிற்கு இருந்த தேவையும் அதன் சந்தைப்படுத்தலின் வெற்றிகரமான சாத்தியங்களும் அந்த சிறுவனுக்குத் தெளிவாக தெரிந்தன. எட்டு வயதிலிருந்தே மாமாவின் கற்றாழை வயல்களில் விவசாய வேலைகளில் உதவி இருந்த ஹூலியோ மெக்ஸிகோவின் நிலமும், மண்ணும், காலநிலையும் கற்றாழை வளர்ப்புக்கு மிகவும் ஏற்றவை என்பதையும் அறிந்திருந்தான்.

எப்படியும் முன்னுக்கு வரவேண்டும் என்னும் அனல் உள்ளே எரிந்து கொண்டிருக்கையில் அந்த நகரின் பெரும் செல்வந்தரிடம் கையில் ஒற்றை பேஸோகூட இல்லாத ஹூலியோ தனக்கு 20 ஆயிரம் பேஸோக்கள் கடனாக கொடுத்தால் தானொரு கற்றாழை வடிசாலையை வாங்க முடியுமென்று சொன்னான். அச்சிறுவனின் அசாதாரணமான துடிப்பும், வேகமும் அவனுக்கு இருபதாயிரம் பேஸோக்களை அவரிடமிருந்து பெற்றுக்கொடுத்தன. நீரூற்று என்னும் பொருள் கொண்ட ‘La Primavera’ (‘Spring’) வடிசாலையை ஹூலியோ சொந்தமாக வாங்கியபோது அவருக்கு வயது 14தான்.

அன்று ஹூலியோ விதைத்த அசல் டெக்கீலாவின் விதைதான் இப்போது மெக்ஸிகோவில் விருட்சமாகி இருக்கிறது.

1942ல் வடிசாலையை வாங்கிய ஹூலியோ, 1951 லேயே மிகச்சிறந்த டெக்கீலா சந்தைப்படுத்தலுக்காகவும், டெக்கீலாவின் தரத்துக்காகவும் ’’டான்’’ என்னும் பட்டத்தை பெற்றார். அப்போதிலிருந்து அவர் பெயருக்கு முன்னால் 2012ல், அவரின் 87 ஆம் வயதில் நிறைவாழ்வு வாழ்ந்து இறக்கும்வரை ’டான்’ என்னும் அடைமொழி இருந்தது .

நீலக்கற்றாழை சாகுபடியிலும் ஈடுபட்டிருந்த ஹூலியோ வயலில் ஒவ்வொரு நீலக்கற்றாழைகளையையும் தன் கையாலேயே நடவு செய்தார். அதற்கு முன்னதாக மெக்ஸிகோ வயல்களில் நெருக்கமாக நடவுசெய்தது போலல்லாது வரிசையாக நடப்படும் கற்றழைகளுக்கிடையேயான இடைவெளியைக் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக்கினார். இடையூறின்றி நன்கு பரவி விரிந்து பெரிதாக வளரத் துவங்கிய கற்றாழைகள் நன்கு முதிரவும் அவகாசமளித்துப் பின்னரே அறுவடை செய்தார்.

வயலில் ஆகப்பெரியதாக இருந்த நீலக்கற்றாழையின் சதைப்பற்றான அன்னாசிப் பழம் போன்ற அடிப்பகுதியை அறுவடைசெய்து, 76 மணி நேரம் சுழற்சி முறையில் வேகவைத்த பிறகு நொதிக்கச் செய்து தான் உருவாக்கிய டெக்கீலா பானத்தை (Tequila Reposado) தனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மட்டுமே அளித்தார் ஹூலியோ. அந்த டெக்கீலா அதற்கு முன்னர் உலகம் கண்டிராத சுவையும், மணமும், குணமும் கொண்டிருந்தது.

அப்போதெல்லாம் மெக்ஸிகோவில் மதுபான விடுதிகளில் மேசையில் நடுவில் இருக்கும் டெக்கீலா பாட்டில்களின் உயரம் எதிரில் இருப்பவர்களை மறைத்துக் கொண்டு இருக்குமளவுக்கு இருந்தது. இதனால் டெக்கீலா அருந்துபவர்கள் பெரும்பாலும் பாட்டில்களை மேசைக்கடியில் வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. ஹூலியோ டெக்கீலாவை நிரப்பும் பாட்டில்களின் வடிவமைப்பில் நூற்றாண்டுகளாக இருந்த மரபை உடைத்து, உயரமான பாட்டில்களுக்கு மாற்றாகச் சிறிய தட்டையான அழகிய வடிவங்களில் பாட்டில்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

1985 ல் ஒரு குடும்ப விருந்தில் ஹூலியோ தனது சொந்தத் தயாரிப்பான டெக்கீலாவை, தட்டையான, சிறிய சதுர கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விருந்தினர்களுக்கு அளித்தார். அந்த டெக்கீலா அன்றைய விருந்தின் பேசுபொருளான அந்தக் கணத்தில் துவங்கியது வெற்றிகரமான டெக்கீலா சகாப்தம். விருந்தில் கலந்துகொண்ட பெரும் தொழிலதிபரொருவர் ஹூலியோவிடம் இரண்டு வெற்றுக் காசோலைகளை கொடுத்து ’’அதை எப்போது வேண்டுமானாலும் விரும்பிய தொகைக்கு பணமாக்கிக் கொள்ளலாம், ஆனால் தனக்கு ஒரு வருடத்துக்குள் 100 பீப்பாய்கள் அதே டெக்கீலா கொடுத்துவிட வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். ஹூலியோவின் சொந்த தயாரிப்பான டெக்கீலாவும், அழகிய சதுர பாட்டில்களும் பின்னர் வெகு வெகுவாகப் பிரபலமடைந்தன.

மது விடுதிகளிலும் வீடுகளிலும் மேசைகளில் ஹூலியோ உருவாக்கிய அழகிய பாட்டில்கள் வீற்றிருப்பது பெரும் கௌரவமென்று எண்ணுமளவிற்கு அவை புகழ் பெற்றபோது, அந்நகரின் மிகப்பெரிய வடிசாலையை அமைத்தார் ஹூலியோ. அடுத்த 40 வருடங்களுமே டெக்கீலாவின் தரக் கட்டுப்பாட்டிலும் நீலக்கற்றாழை விவசாயத்திலுமே தமது முழுக் கவனத்தையும் செலவழித்தார் டெக்கீலா வர்த்தகத்தின் ’’டான் ஹூலியோ.’’

ஹூலியோவின் 60 வருட அயராத உழைப்பில் அவரது வடிசாலை உலகின் ஆகச்சிறந்த டெக்கீலா உற்பத்தி நிறுவனமாக இப்போதும் நிமிர்ந்து நிற்கிறது இளைஞனாக அவர் தொடங்கிய ‘லா ப்ரீமவேரா’ (’La Primavera’), இன்றும் வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஜான் ஹூலியோ என்ற அவரது பெயரில் இருக்கும் டெக்கீலா மெக்ஸிகோவின் அடையாளங்களில் முதன்மையானது.

மெக்ஸிகோவின் ஹாலிஸ்கோ மாநிலத்தின் நகரொன்றில் 16ஆம் நூற்றாண்டில் முதன் முதலாகத் தயாரிக்கப்பட்ட, மெக்ஸிகோவின் அடையாளங்களின் ஒன்றான டெக்கீலாவின் வரலாறும் சுவையானதுதான். 1666 வரை அதிகாரபூர்வமாக டெக்கீலா என்பது ஒரு நகரமாக நிறுவப்பட்டிருக்கவில்லை. அந்த நகரில்தான் முதல் முதலாக இந்த மதுபானம் தயாரிக்கப்பட்டது.

இந்த மது பானத்திற்கு, இரண்டு தெய்வங்களைக் கொண்டிருந்த மெக்ஸிகோவின் பழங்குடியினரான அஸ்டெக்குகள் ஏதேச்சையாக மின்னல் தாக்கிய கற்றாழைச் செடிகளிலிருந்து வடிந்த இனிப்பான திரவத்தைச் சுவைத்தார்கள். 1521ல் அந்த திரவத்தைப் புளிக்கவைத்து புல்கே (Pulque) என்னும் மதுவை அருந்திவந்தனர்.

ஆஸ்டெக்குகளின் தொன்மமொன்று கற்றாழை மதுபானங்களுக்கான பெண் தெய்வமான ‘மயாஹூவெல்’ (Mayahuel) தனது குழந்தைகளுக்கும், 400 முயல்களுக்கும் தனது ஏராளமான முலைகளால் டெக்கீலாவை அருந்தக் கொடுத்ததாக சொல்லுகிறது.

1519ல் மெக்ஸிகோவை ஆக்கிரமித்த ஸ்பெயின் தேசத்தினர், தாங்கள் கொண்டுவந்த பிராந்தியின் இருப்புக் குறையத் தொடங்கியபோது, மெக்ஸிகோவின் தாவரங்களிலிருந்து மது தயாரிக்க முனைந்தனர். அப்போது அவர்கள் கற்றாழைச் சாறைப் புளிக்கச்செய்து மெஸ்கால் (mezcal) என்னும் வைன் பானத்தை உருவாக்கினார்கள். மெக்ஸிகோவில் ஸ்பெயின் நாட்டினர் கற்றாழை மது உண்டாக்கியதற்கான ஆவணம் 1608ல் கிடைத்திருக்கிறது

17ஆம் நூற்றாண்டில் இந்தக் கற்றாழை மது தயாரிக்கப்பட்ட டெக்கீலா நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பிரபலமாகத் தொடங்கியது. 1750ல் முறையாக டெக்கீலா தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்டது ஸௌஸா குடும்பத்தினர் (Don Cenobio Sauza) 2 சாதாரண பச்சைக் கற்றாழைகளைவிட நீலக்கற்றாழைகளிலிருந்து தரமான டெக்கீலாவை உண்டாக்கலாமென்று கண்டறிந்த பின்னர் டெக்கீலா தயாரிப்பில் பெரிய புரட்சி உண்டானது.

நீலக்கற்றாழை டெக்கீலா மெக்ஸிகோவில் உள்ள குவானஹுவாடோவில் 1800ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் முதல் முறையாகப் பெருமளவிற்கு உற்பத்தி செய்யப்பட்டது.

1873ல் ஸௌஸா டெக்கீலாவின் நிறுவனரும் 1884-1885ஆம் ஆண்டுகளிலிருந்து டெக்கீலா நகராட்சித் தலைவராகவும் இருந்த டான் செனோபியோ ஸௌஸோ மூன்று பீப்பாய்களிலும், ஆறு சீசாக்களிலுமாக மெஸ்கால் டெகீலாவை மெக்சிகோவின் எல்லயைத் தாண்டி அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றதுதான் டெக்கிலாவின் முதல் ஏற்றுமதி. டான் சினோபியோ ஸௌஸாவே டெகீலாவின் தந்தை எனக் கருதப்படுகிறார். அதன்பின்னர் டெக்கீலா உருவாக்குவதை அவர்களின் முக்கியக் குடும்பத் தொழிலாகக் கொண்டார்கள்:

டான் செனோபியோவின் பேரனான டான் பிரான்சிஸ்கோ ஹாவியர் “நீலக்கற்றாழைகள் இல்லாத இடத்தில் டெக்கீலா இல்லை!” என்பதை வலியுறுத்தியதற்காக சர்வதேச கவனத்தைப் பெற்றார். உண்மையான டெக்கீலா ஹாலிஸ்கோ மாநிலத்தில் இருந்து மட்டுமே வரமுடியும் என்ற நடவடிக்கைக்கு இவருடைய முயற்சிகள்தான் முக்கிய காரணமாயிருந்தன.

டெக்கீலா நகரில் தயாரிக்கப்பட்ட நீலக்கற்றாழை மது டெக்கீலா என்ற பெயரிலேயே 1890களில் இருந்து அழைக்கப்படலாயிற்று.

1902ல் அதிகாரபூர்வமாக நீலக் கற்றாழை மது டெக்கீலா என்றும் பிற கற்றாழை மது வகைகள் மெஸ்கால் (Mezcal) என்றும் தெளிவான பெயர்களில் வேறுபடுத்தப்பட்டன.. இப்போதைய அசல் டெக்கீலா 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் மெக்ஸிகோவின் குவானாஹுவாடோவில் உருவாக்கப்பட்டது.

1974ல் டெக்கீலா மெக்ஸிகோவின் அறிவுசார் சொத்து (Intellectual Property of Mexico) என மெக்ஸிகன் அரசு அறிவித்தது அப்போதிலிருந்து டெக்கீலா மெக்ஸிகோவில் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும் என்னும் விதியும் உண்டானது. பிற நாடுகள் டெக்கீலா தயாரிப்பது சட்ட விரோத செயலாகும்.

1994ல் தோற்றுவிக்கப்பட்ட டெக்கீலா ஒழுங்குமுறை கவுன்சில் (TRC- Tequila Regulatory Council) டெக்கீலாவின் தரம் சுவை மணம் குறித்த ,தளர்வுகளற்ற கூடுதல் நியதிகளையும் உருவாக்கியது. இந்த குழுமத்தில் மெக்ஸிகன் அரசு, நீலக்கற்றாழை விவசாயிகள்,டெக்கீலா தயாரிப்பாளர்கள், மற்றும் சந்தைப் படுத்துபவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். 1377 டெக்கீலா வணிக முத்திரைகள் (பிராண்டுகள்) 137 தயாரிப்பாளர்களால் டெக்கீலா ஒழுங்குமுறை குழுமத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது

நூற்றாண்டுகளாக பிரபலமான, மெக்ஸிகோவின் அடையாளங்களில் ஒன்றான நீலக் கற்றாழை மதுவான டெக்கீலா இப்போதும் மெக்ஸிகோ நாட்டின் ஹாலிஸ்கோ மாநிலத்தின் லாஸ் ஆல்டோஸ் மேற்கு மலைத் தொடர்களில் வளரும் நீலக்கற்றாழையிலிருந்து மட்டும் பெறப்படுகிறது.

டெக்கீலா நகரைச் சுற்றியுள்ள பகுதியின் சிவப்பு எரிமலை மண் நீலக்கற்றாழையின் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது, அங்கே ஒவ்வொரு ஆண்டும் 300 மில்லியனுக்கும் மேற்பட்ட நீல கற்றாழைச் செடிகள் அறுவடை செய்யப்படுகின்றன. ஹாலிஸ்கோ மாநிலத்திலும், குவானாஹுவாடோ, மீச்சோகான், நய்யாரீத் மற்றும் டமாலிபாஸ் மாநிலங்களின் பகுதிகளில் மட்டுமே இவை தயாரிக்கப்பட வேண்டும் என்று மெக்ஸிகன் சட்டங்கள் குறிப்பிடுகின்றன

குவாடலஹாரா நகருக்கு வடமேற்கே உறங்கும் டெக்கீலா எரிமலையின் அடியிலிருக்கும் வறண்ட புழுதிக் காற்று வீசும் அந்த பள்ளத்தாக்கில் டெக்கீலா நகரம் அமைந்துள்ளது. மஞ்சளும் ஆரஞ்சும் கலந்த எரிமலை மண் நிறைந்த 35,019 ஹெக்டேர் பரப்பளவில் கூர் முள் கொண்ட இலைகளுடன் பல்லாயிரம் நீலக்கற்றாழைகள் வான் நோக்கி பச்சைப்பெருமலர்களாக விரிந்துள்ளன. இந்த வயல்கள் உலகப் பாரம்பரியக் களம் (World Heritage Site) என்னும் அந்தஸ்தை 2006 ல் பெற்றுள்ளன.

நீலக்கற்றாழை வயல்

நீலக்கற்றாழையின் தாவர அறிவியல் பெயர் Agave Tequilana- Weber variety Azul. இவற்றின் இலைகளின் நீலப்பச்சை நிறத்தினால் ’’நீலக்கற்றாழை’’ என கள்ளிகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் செய்தவரான ஐரோப்பிய தாவரவியலாளர் வேபரினால் (Frédéric Albert Constantin Weber) பெயரிடப்பட்டது..பச்சை நிறத்தில் சதைப்பற்றான, முட்கள் நிறைந்த இலைகளுடன் இருந்தாலும் இவை கள்ளி வகைகள் அல்ல பெருங்கற்றாழை வகை தாவரங்களே.. இச்செடிகளுக்கு அஸ்டெக்குகளின் தெய்வமான மயாஹூவெல்லை குறிக்கும் ’’மாஹே’’ (Maguey) என்றொரு வழங்கு பெயரும் மெக்சிகோவில் உண்டு.

8 ல் இருந்து 14 வருட வாழ்வை கொண்டிருக்கும் இந்த நீலக்கற்றாழைகளின் பேரினத்தின் அகாவெ என்பது கிரேக்க மொழியில் ’’உன்னதமான’’ என்ற பொருள் கொண்டது. சிற்றினத்தின் பெயரான டெக்கீலானா மெக்ஸிகோவின் டெக்கீலா நகரை சேர்ந்த செடி என்பதைக் குறிக்கிறது. ஆஸ்டெக்குகளின் நௌவாட் (Nahuatl) மொழியில் டெக்கீலா ’’அஞ்சலிக்கான இடம்’’ என பொருள்படுகிறது.. அகாவே பேரினத்தின் 166 சிற்றினங்களில் 125 சிற்றினங்கள் மெக்ஸிகோவில் 1964 ல் இருந்து செழித்து வளர்கின்றன.

பொதுவாக 5 அடி உயரம் வரை வளரும் இக்கற்றாழைகள் மெக்ஸிகோவின் கனிம வளம் மிக்க மண்ணில் 6 லிருந்து 7 அடி வரை வளரும். விளிம்புகளில் அடர் நிறத்தில் கூரிய முட்களை கொண்டிருக்கும், வாள் போன்ற, சதைப்பற்றான, சாம்பல் நீலப்பச்சை இலைகள் மலரடுக்கில் 4 அடி நீளம் வரை வளரும். 8 லிருந்து 12 வருடங்களில், 7 அடி உயரம் வரை வளர்ந்த கற்றாழைகள் அறுவடைக்கு தயாராகிவிடும். மலைப்பகுதிகளில் வளரும் நீலக்கற்றாழைகள் 8 வருடங்களிலும், தாழ்நிலங்களில் வளருபவை 12 வருடங்களிலும் முதிர்ந்து அறுவடைக்கு தயாராகின்றன.

8 வருடங்களான நீலக்கற்றாழைகளின் இலை அடுக்குகளின் மத்தியிலிருந்து 20 அடி உயரமுள்ள கியோட்டே எனப்படும் (Quiote) மஞ்சரித்தண்டு உருவாகி கிளைத்த மஞ்சரிகளில் பச்சை நிற மலர் கொத்துகள் தோன்றுகின்றன. பாலில்லா இனப்பெருக்கம் செய்யும் அகேவின் மலர்கள் இரவில் மலரும். அவை, மெக்ஸிகோவின் நீள மூக்கு வௌவால்களால் (Leptonycteris nivalis) மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்டு, கனிகளும் விதைகளும் உருவாகின்றன. மஞ்சரி உருவான பின்பு இலை அடுக்குகள் ஒவ்வொன்றாக அழிந்து பக்கக்கன்றுகளிலிருந்து புதிய தாவரங்கள் வளர தொடங்கும்.

கற்றாழை கருக்களான ஹிஹ்வேலோ (Hijuelo) எனப்படும் இந்த சிறு பக்கச்செடிகள் வேர்க்கிழங்குகளிலிருந்தும் செடிகளின் அடிப்பகுதியிலிருந்தும் வளருகின்றன. இவை எலுமிச்சை, ஆரஞ்சு, மற்றும் திராட்சை கனிகளின் அளவுகளைக் கொண்டு அளவிடப்படுகின்றன. இரண்டாவது வருடத்தில் இருந்து தாய்ச் செடிகளின் பக்கவாட்டில் வளரும் இவை, ஐந்தாம் வருடத்திலிருந்து எடுக்கப்பட்டு, வரிசையாக நடப்படுகின்றன. நீலக்கற்றாழையின் விதைகள் சாகுபடிக்கு பயன்படுத்தப்படுவதில்லை

2.5 ஏக்கர்களில் சுமார் இரண்டாயிரத்தில் இருந்து நான்காயிரம் நீல கற்றாழைச் செடிகள் வளர்க்கப்படுகின்றன. பிற பயிர்களைப் போலவே நீலக்கற்றாழைகளுக்கும் களையெடுத்தல் உள்ளிட்ட அனைத்து பயிர்பாதுகாப்புக்களும் தேவை. நீலக்கற்றாழைகளின் அறுவடை என்பது இலைகளின் அடிப்பகுதியில் இருக்கும் கற்றாழை இதயமான, பெருத்த, எடை கூடிய அன்னாசிப்பழத்தை போன்றிருக்கும் பீன்யாக்கள்தான். (piña). பீன்யா என்பது அன்னாசிப்பழத்தின் ஸ்பானிஷ் பெயர். மாவுச்சத்தும், சிறிதளவு சர்க்கரை சத்தும். நிரம்பிய புதிதாக அறுவடை செய்யப்பட்ட பீன்யாக்கள் உருளைக்கிழங்குகளை போல மெல்லிய நறுமணத்துடன் இருக்கும்.

இனப்பெருக்கத்தில் தனது ஆற்றலை நீலக்கற்றாழைகள் செலவழிக்க துவங்கினால் டெக்கீலாவின் தரம் குறைந்துவிடும், எனவே மலர் மஞ்சரிகள் உருவாகும் முன்பே பீன்யாக்கள் அறுவடை செய்யப்படுகின்றன. பீன்யாக்களில் சேமிக்கப்பட்டிருக்கும் இனிப்பு திரவமான அகுவாமியெலில் இருந்துதான் (aquamiel) டெக்கீலா தயரிக்கப்படுகின்றது. பீன்யாக்களின் அளவு பெரிதாகுதலும், . அடிப்பகுதியிலிருக்கும் பென்கா (Pencas) எனப்படும் இலைகள் வாடி உதிர்வதும் அறுவடைக்கான அறிகுறிகளாக கருதப்படுகின்றன.

ஹிமாடொர்கள் (Jimadors) எனப்படும் மெக்ஸிகோவின் விவசாயிகளில் ஒரு வகையினர், ஒவ்வொரு செடியிலிருந்தும், இருநூறுக்கும் மேற்பட்ட,கற்றாழையின் இலைகளை கோஆ (Coa) எனப்படும் நீண்ட கைப்பிடி உள்ள, துடுப்பு முனை போன்ற வட்டக் கத்தியால் ஒவ்வொன்றாக செதுக்கி, பீன்யாக்களை எடுப்பார்கள். மிகுந்த உடலுழைப்பை கோரும் செயல் என்பதால் ஹிமாடொர்கள் 5 லிருந்து 6 மணி நேரம் மட்டுமே வேலை அதுவும், சுழற்சி முறையில் செய்வார்கள்.

கற்றாழை சாகுபடி குறித்தும், உரிய நேரத்தில் அவற்றை அறுவடை செய்வது குறித்தும் தலைமுறை அறிவைக்கொண்டு இருக்கும் ஹிமாடொர்களின் வேலை. பீன்யாக்களைச் செதுக்குவது மட்டுமே. செதுக்கிய பீன்யாக்களை சேகரித்து, வண்டிகளில் தொழிற்சாலைகளுக்கு கொண்டு போவதை பிற பணியாளர்கள் செய்வார்கள்.

அதிகாலையிலிருந்து முன்பகல் வரை பணியாற்றும் ஒரு தேர்ந்த ஹிமாடொர் ஒரு நாளில் 100 பீன்யாக்களை செதுக்கி எடுப்பார். விஷ சிலந்திகள், நீலக்கற்றாழைகளின் நெருக்கமான இலையடுக்குகளுக்குள் மறைந்திருக்கும் நச்சுப் பாம்புகளின் ஆபத்துக்களோடு, மிகத் தேர்ந்த ஹிமாடொர்களுக்கு கூரான ’கோஆ’’வினால் கால் விரலை துண்டாக்கி கொள்ளும் ஆபத்தும் நேரிடுகிறது.

செதுக்குதலை திறம்பட செய்யாவிட்டால் பீன்யாக்களில் ஒட்டியிருக்கும் இலைகளின் அடிப்பகுதியின் மெழுகுப்பூச்சு டெக்கீலாவின் தரத்தை குறைத்துவிடும் சாத்தியம் இருப்பதால் மிகத்துல்லியமாக, இவை செதுக்கப்பட வேண்டும்.பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கும் டெக்கீலா தொழிலில் நூற்றாண்டுகளாக மாறாமல் இருப்பது ஹிமாடொர்களின் பணி மட்டுமே. ஹிமாடொர்கள் இல்லாவிட்டால் டெக்கீலா தொழிலே முடங்கிவிடும்.

வெட்டியெடுக்கப்பட்ட பீன்யாக்களில் வெட்டுக்காயங்களைப்போல இருக்கும் சிவப்புத்திட்டுக்களின் எண்ணிக்கை 5 லிருந்து 7 என்றால் அவை மிகச்சரியாக முதிர்ந்திருக்கிறதென்றும், 7க்கும் அதிகமான திட்டுக்கள் இருப்பது தேவைக்கும் அதிகமாக முதிர்ந்து, அழுகிப்போகும் பீன்யாக்களை குறிப்பதாகவும் கணக்கு உண்டு, மிகச் சரியான பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட பீன்யாக்களிலிருந்து 6 மாதங்களுக்குள் டெக்கீலா எடுக்கப்படவேண்டும்

பீன்யாக்களின் பழுத்தல் அல்லது முதிர்தல் அதிலிருந்து எடுக்கப்படும் டெக்கீலாவின் தரத்துடனும் சுவையுடனும் நேரடியாக தொடர்புடையது. சில நிறுவனங்கள் நன்கு பழுத்தவைகளையும், பிறர் பழுத்தலின் துவக்க நிலையிலும் பீன்யாக்களை பயன்படுத்துகிறார்கள். கூடுதலாகப் பழுத்த சோப்ரே மதுரோ (Sobre maduro) எனப்படும் பீன்யாக்களின் அமிலச்சுவை டெக்கீலாவுக்கு வினிகரின் சுவையை அளித்து விடுகின்றது.

பொதுவாகத் தொழிற்சாலைகளில் டெக்கீலா தயாரிக்க பீன்யாக்களில் இயற்கையாக 21 சதவீத சர்க்கரை அளவு தேவை அதற்கு அதிகமாக 45 சதவீதம் வரையிலும் கூடுதலாக சர்க்கரை அளவை கொடுக்கும் கற்றாழைச் செடிகள் உண்டு.

பீன்யாக்களின் எடை 10 லிருந்து நூறு கிலோக்கள் வரையிலும் இருக்கும். அதிகபட்சமாக 180 கிலோ எடையில் பீன்யா அறுவடை செய்யப்பட்டிருக்கிறது..தோராயமாக 7 கிலோ பீன்யாக்களிலிருந்து ஒரு லிட்டர் டெக்கீலா கிடைக்கும்

பெரும்பாலான நீலக்கற்றாழை செடிகள் மேற்கு நோக்கிய மலைச்சரிவுகளில் வளர்க்கப்பட்டு, நாள் முழுவதும் பெரும்பாலான சூரிய ஒளியைப் பெற அனுமதிக்கப்படுகின்றன. இந்தச் செடிகள் உயரமான, அகன்ற, அதிக சாறு நிரம்பியதாக இருக்கின்றன. தாழ்நிலங்களில் வளர்க்கப்படும் டெக்கீலாக்கள் மிகுந்த மண் வாசனையை பெற்றிருக்கின்றன

அறுவடை செய்யப்பட்டு தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட்ட பீன்யாக்கள் ஒரே அளவாக கோடாலிகளால் பிளக்கப்பட்டு சீராக வேக வைக்கப்படுகின்றன. பழமையான ஹோர்னோ (Horno) எனப்படும் நீராவி அடுப்புகளில் வேக வைக்கப்படுகையில் இவற்றில் இருக்கும் இனுலின் (inulin) மாவுச்சத்து சர்க்கரையாக மாற்றப்படுகின்றது..இந்த சர்க்கரையே நொதித்தலின் போது ஆல்கஹாலாகின்றது.

.இப்போது ஹோர்னோ நீராவி அடுப்புக்களுக்கு பதிலாக நவீன பிரஷர் குக்கர்களும் ஆட்டோக்ளேவ் களும் கூட உபயோகத்தில் இருக்கின்றன

24 லிருந்து 48 மணி நேரம் மெதுவாக வேக வைக்கப்பட்ட பீன்யாக்கள் அடர் பழுப்பு நிறம் அடைகின்றன. பின்னர் இவை 16 லிருந்து 48 மணி நேரம் குளிர்விக்கப்படுகிறன. குளிர்ந்த பீன்யாக்கள் கழுதைகள் அல்லது கோவேறு கழுதைகளால் இழுக்கப்படும் டாஓனா(Tahona) எனப்படும் வட்டக்கல் செக்குகளில் அரைக்கப்படுகின்றன.

தற்போது பல நவீன அரவை இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்திருந்தாலும் மெக்ஸிகோவின் 6 பிரபல டெக்கீலா நிறுவனங்கள் இன்னும் இந்த கல்செக்கைத்தான் பயன்படுத்துகின்றன. நீர் சேர்ந்து அரைக்கப்ட்ட பீன்யாக்களின் குழம்பு மாஸ்டோ (mosto) எனப்படுகிறது மாஸ்டோவிலிருந்து இனிப்பு திரவம் சக்கைகளிலிருந்து தனியே பிரித்தெடுக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் அரைத்த விழுதில் நீர் தெளித்து சக்கை பிழிந்து எடுக்கப்பட்ட திரவம் நொதித்தலுக்கு உட்படுத்தப்படுகிறது. சக்கைகளும் பயன்படுத்தப்பட்ட நீரும் கழிவுப்பொருட்களாக வெளியேறுகின்றன.

அஹுவாமியெல் (Aguamiel) எனப்படும் இந்த நீலக்கற்றாழைச் சாற்றின் சர்க்கரை அளவு துல்லியமாக கணக்கிடப்பட்ட பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட காடிச் சத்துகள் (Yeast) சேர்ககப்பட்டு திறந்த அல்லது மூடிய மரத்தொட்டிகளில் 24 லிருந்து 96 மணி நேரம் நொதித்தல் நடைபெறும். முதல் காய்ச்சி வடிகட்டுதல் முறை டெஸ்ட்ரொஸாமியெண்ட்டோ(Destrozamiento) என்று அழைக்கப்படுகிறது. அதில் கிட்டும் திரவம் 20லிருந்து 25 சதவீத ஆல்கஹால் அளவைக் கொண்டிருக்கும், இந்தத் திரவம் ஒர்தினாரியோ என்று அறியப்படுகிறது. இரண்டாவது முறை காய்ச்சி வடிகட்டும் முறைக்கு ரெக்டிஃபிகாசியோன் என்று பெயர். இப்படி காய்ச்சி வடிகட்டப்பட்ட 55 லிருந்து 75 சதவீத ஆல்கஹால் இருக்கும். இதுதான் டெக்கீலா என்று அழைக்கப்படக் கூடியது. அரிதாக சில நிறுவனங்கள் மூன்றாவது காய்ச்சி வடிகட்டலுக்கும் போவதுண்டு.

முதல் வடிகட்டலில் தேவையற்ற பொருட்கள் நீக்கப்படுகின்றது. இரண்டாம் வடிகட்டலில் மேலும் தூய்மையாக்கப்படும் திரவத்திலிருந்து கிட்டுவது ’ப்ளான்கோ’ டெக்கீலா என்று விற்பனையாகிறது. இத்தனை காய்ச்சி வடிகட்டிய பின்னரும் நீலக்கற்றாழையின் பிரத்யேக நறுமணமும் மண்ணின் மணமும் டெக்கீலாவில் அப்படியே இருக்கும்

.இறுதியாக கிடைக்கும் 100 சதவீத ஆல்கஹால் அளவிற்கு நொதிக்க வைத்த கடுமையான டெக்கீலாவில் தண்ணீரைக் கலந்து தேவையான ஆல்கஹால் அளவு நிர்ணயிக்கப்படுகிறது,. வடிசாலிகளில் கிடைக்கும் டெக்கீலா அப்படியே பாட்டில்களில் நிரப்பப்பட்டு இளமையான டெக்கீலா வாக விற்பனைக்கு வரும் அல்லது ஓக் மர பீப்பாய்களில் நிரப்பப்பட்டு பழமையாக்குதலுக்கு உட்படுத்தப்படும்.

பழமையாக்குதல் நடைபெறும் பீப்பாய்கள் உருவாக்கப்பட்ட ஓக் மரத்தின் தன்மை, இதற்கு முன்னர் அதில் நிரப்பப்பட்டிருந்த பானத்தின் இயல்பு, பீப்பாயின் வெப்பம், ஈரப்பதம், உள்ளே நிரப்பத்துவங்குகையில் டெக்கீலாவின் துவக்க ஆல்கஹால் அளவு ஆகியவை டெக்கீலாவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்கும். நெருப்பில் வாட்டி கருக்கிய ஓக் மரப்பட்டைகளை இணைத்து செய்யப்பட்ட பீப்பாய்களிலும் டெக்கீலா பழமையாக்கப்படும். இந்த வகை டெக்கீலா ‘ரெபொஸாடோ’ அல்லது ‘அன்யேஹோ’ என்று அறியப்படுகின்றன. [ரெபொஸாடோ =மென்மையான அல்லது அமைதியான; அன்யேஹோ= நன்கு பதப்பட்ட, முதிர்ந்த என்ற பொருள் தரும் சொற்கள்.)

பழமையாக்கப்பட்ட டெக்கீலாவில் ஓக், மரப்பட்டை சாறு, சர்க்கரை ஆகியவை பின்னர், பிரத்யேக நறுமணம் மற்றும் சுவையின் பொருட்டு சேர்க்கப்படுவது முண்டு

குறைந்தபட்ச ஆல்கஹால் அளவு 38 சதவீதமும் அதிகபட்சமாக 55 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்ட டெக்கீலா கரிச்சல்லடைகளில் வடிகட்டப்பட்டு உற்பத்தி நிலையத்திலேயே டெக்கீலா பாட்டில்களில் நிரப்பப்படவேண்டும் என்னும் சட்டத்தின்படி அங்கேயே விற்பனைக்கு தயாராகின்றன.

டெக்கீலாவில், 100 சதவீத ஆல்கஹால் அளவுடன் இருக்கும் அசல் டெக்கீலா மற்றும் மிக்ஸ்டோ எனப்படும் செயற்கை சர்க்கரை சேர்க்கப்பட 51 சதவீத ஆல்கஹால் அளவுள்ள மலிவான டெக்கீலா என இரண்டு அடிப்படை வகைகள் உள்ளன . இவ்விரண்டில் பழமையாக்குதலின் அடிப்படையில் பிற வகைகள் உருவாகின்றன.

வெள்ளை (பிளான்கோ), ப்ளாட்டினம் மற்றும் வெள்ளி டெக்கீலாக்கள் (ப்ளாட்டா), இரண்டு மாதங்கள் மட்டும் பழமையாக்கபட்டிருக்கும். இவை பழமையாக்கப்பட்டிருக்காதவை, இளமையானவை (Blanco, White, Plata, Platinum, or Silver)

மிக்ஸ்டோ வகையை சேர்ந்த பொன், ஓடோ அல்லது ஹோவென் டெக்கீலாக்கள் செயற்கையாக மணமும் நிறமுமேற்றப்பட்டவை, இளமையானவை (Gold, Oro, or Joven)

ரெபோஸாடோ டெக்கீலாக்கள் 2 மாதங்களிலிருந்து 1 வருடம் வரை பழமையாக்கப்பட்டவை .(Reposado )

அன்யேஹோ வகை டெக்கீலாக்கள் குறைந்த பட்சம் ஒரு வருடத்திலிருந்து மூன்று வருடங்கள் ஓக் மரப்பீப்பாய்களில் பழமையாக்கப்பட்டவை. அன்யேஹோ என்றால் லத்தீன மொழியில் ஒரு வருடம் பழமையான என்று பொருள்.

எக்ஸ்ட்ரா அன்யேஹோ டெக்கீலாக்கள் 2006 லிருந்து தயாரிக்கப்படுகின்றன இவை குறைந்தது மூன்று வருடங்களுக்கு 600 லிட்டர் மட்டுமே கொள்ளளவு கொண்ட ஓக் மரப் பீப்பாய்களில் வைத்து மித மிஞ்சி பழமையாக்கப்படுவது.

சில சமயம் டெகீலாவுடன் புதினா எலுமிச்சை ஆரஞ்சு மசாலா பொருட்கள் ஆகியவை சேர்க்கப்படும்

டெக்கீலாவை எவற்றுடன் கலக்கலாம், எவற்றுடன் கலக்கவே கூடாது டெக்கீலாவை எப்படி அருந்துவது. போன்றவற்றிற்கான வழிகாட்டுதல்களை ’’டெக்கீலா சுவை சக்கரம்’’ என்னும் சித்திரத்திலிருந்து அறிந்துகொள்ளலாம். இந்த சித்திரம் டெக்கீலா விடுதிகளிலும் சுற்றுலா தளங்களிலும் கிடைக்கும்

பொதுவாக டெக்கீலா வைன் கோப்பைகளிலும் டம்ளர்களிலும் கூட அருந்தப்பட்டாலும் டெக்கீலாவுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கபட்ட கோப்பைகளும் உள்ளன.

1924 லிருந்து டெக்கீலாவின் கற்றாழை மணத்தை போக்குவதற்காக உப்பும் எலுமிச்சை துண்டுகளும் பரப்பியிருக்கும் தட்டுக்களில் தலைகீழாக கவிழ்த்து வைக்கப்படிருக்கும் கண்ணாடிக்கோப்பைகளை எடுத்து விளிம்புகளில் ஒட்டியிருக்கும் உப்புத்தூளுடனும் எலுமிச்சை சாற்றுடனுமே டெக்கீலா அருந்தப்பட்டது. நவீன தொழில்நுட்ப மாற்றங்களினால் இப்போதைய டெக்கீலாக்கள் அனைவரும் விரும்பும் சுவையும் பிரெத்யேக மணமும் கொண்டிருக்கின்றன’

265 வருடங்களாக குடும்ப தொழிலாக நவீன கண்ணாடிக்கோப்பைகளை தயாரிக்கும் பிரபல ரீடல் நிறுவனம் (RIEDEL ) டெக்கீலாவின் சுவையையும் மணத்தையும் நாவிற்கு அசலாக அளிக்கும் பிரத்யேக டெக்கீலா கோப்பைகளை பத்து டாலர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது டெக்கீலா ஒழுங்குமுறை கவுன்சில் ரீடல் உருவாக்கிய இந்த உவர்ச்சர் டெக்கீலா கோப்பையை (Ouverture Tequila glass) 2002ஆம் ஆண்டில் “அதிகார பூர்வ டெக்கீலா கோப்பை” என்று அங்கீகரித்துள்ளது.

கூடுதல் சேர்மானங்கள் இல்லாத துல்லிய டெக்கீலா கவயீட்டோ (Caballito-ஸ்பானிஷ் மொழியில் “சிறிய குதிரை”) எனப்படும் குறுகலான கோப்பையில் நேர்த்தியாக பரிமாறப்படுகிறது, விளிம்புகளில் உப்பு அல்லது சர்க்கரை தடவப்பட்ட மார்கரீட்டா கோப்பைகள் இப்போதும் புழக்கத்தில் உள்ளன ( Margarita Glass)

2003 ஆம் ஆண்டில், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முன்னர் மெக்ஸிகோவில் தயாரிக்கப்படும் டெக்கீலா அனைத்தும் மெக்ஸிகோவில்தான் புட்டிகளில் அடைக்கப்பட வேண்டும் என்பதைக் கோரும் முன்மொழிவை மெக்ஸிகோ வெளியிட்டது. .இந்தச் சட்டம் சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களை மீறுகின்றன என்றும் உலகம் முழுவதிலுமான வழக்கமான ஏற்றுமதி நடவடிக்கைகளோடு உடன்படவில்லை என்றும் அமெரிக்காவில் உள்ள மதுபான நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்தன. எனினும் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 17 ல், அமெரிக்காவும் மெக்ஸிகோவும் அமெரிக்காவிற்குள் அதிக அளவில் டெக்கீலா இறக்குமதியை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.. இப்போது அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும், மெக்ஸிகோவின் மொத்த டெக்கீலா உற்பத்தியில் 75 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. அமெரிக்காவில் ஜூலை 24 ஆம் தேதி டெக்கீலா தினமாக கொண்டாடப்படுகிறது

மெக்ஸிகோவில் மட்டுமே ஆண்டுக்கு 500 மில்லியன் கற்றாழைக்கள் சாகுபடி செய்யப்பட்டு, 500 மில்லியன் டாலர் .மதிப்புள்ள நூற்றுக்கணக்கான மில்லியன் லிட்டர்கள் டெக்கீலா ஆண்டுதோறும் தயாராகின்றது டெக்கீலா நகரில் மட்டுமே 20 டெக்கீலா வடிசாலைகள் அமைந்துள்ளன..

ஒவ்வொரு டெக்கீலா வடிசாலையும் அவர்களுக்கான் பிரத்யேக NOM எனப்படும் (Norma Oficial Mexicana) எண்ணை கொண்டிருக்கவேண்டும். இந்த எண்கள் அந்நிறுவனத்தின் எல்லா டெக்கீலா பாட்டில்களிலும் அச்சிடப்பட்டிருக்கவும் வேண்டும்

1997 லிருந்து டெக்கீலா நகரிலிருந்து சுற்றுலா பயணிகளை நீலக்கற்றாழை வயல்களுக்கும் வடிசாலைகளுக்கும் அழைத்துச்செல்ல அலங்கரிக்கப்பட டெக்கீலா விரைவு பேருந்துகளும் மெக்ஸிகோவில் உள்ளது..

2006 ம் வருடத்திலிருந்து மெக்ஸிகோவில் டெக்கீலா சுற்றுலா மிக பிரபலமாகி வருகிறது. மிகுந்த பொருட்செலவில் ஒரு சில நிறுவனங்கள் ஹெலிகாப்டரில் டெக்கீலா வடிசாலைக்க்கும், நீலக்கற்றாழை வயல்களுக்கும் அழைத்துச்செல்லும் சுற்றுலாக்ளுக்கும் நல்ல வரவேற்பிருக்கிறது. சுமாராக ஒரு நபருக்கு இவ்வகையான சுற்றுலாக்கள் இருபதாயிரம் டாலர்களை கட்டணமாக வசூலிக்கிறது

மண்டை ஓடுகளை போல, கள்ளிச்செடிகளைப் போல, கண்ணீர்த்துளிகளை போல, இதய வடிவில் என பல வடிவங்களில் 928 வகையான டெக்கீலாக்களின் .1799 பாட்டில்களை வைத்திருந்ததற்காக , Nuestros Dulces என்னும் மெக்ஸிகோவின் டெக்கீலாவும் இனிப்புகளும் விற்பனை செய்யும் சிறிய கடை 2014ல் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. தேசிய டெக்கீலா அருங்காட்சியகமும் டெக்கீலா நகரில் அமைந்திருக்கிறது

மெக்ஸிகோவில் தயாரிக்கப்பட்டது என்னும் வாசகமான “hecho en México” பாட்டில்களில் இருப்பவையே அசல் டெக்கீலாக்கள். சில குறிப்பிட்ட டெக்கீலா பிராண்டுகள் பலநூறு ஆண்டுகளாக குடும்ப தொழிலாக இருந்து வருகின்றன.

டெக்கீலாவை குறித்த ஒரு தவறான எண்ணம் அதில் புழுக்கள் இருக்கும் என்று நம்புவது. டெக்கீலாவில் புழுக்கள் இருக்காது கடுமையான தரக்கட்டுப்பாட்டு சோதனைகளுக்கு பிறகே டெக்கீலா சந்தைப்படுத்த படுகிறது. .ஒயாக்ஸகா மாநிலத்தில் இருந்து வரும் ஒரு சில மெஸ்கல்களில் மட்டுமே புழுக்கள் இருக்கும்.

2008 ஆம் ஆண்டில், மெக்ஸிகோவின் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் டெக்கீலாவிலிருந்து செயற்கை வைரங்களை உருவாக்கி இருக்கிறார்கள் டெக்கீலாவை ஆவியாக்குவதற்கான 800 டிகிரிகள் செல்சியசுக்கும் மேலாக (1,400 டிகிரி பாரன்ஹீட்) டெக்கீலா வெப்பபப்டுத்தப்படுகையில் அதன் உட்பொருட்கள் குளிர்ந்து ஒரு சமமான தூய அடுக்காக இரும்பு அல்லது சிலிக்கான் பாத்திரங்களில் வைரத்துகள்களாக படிகின்றன. 100–400 நானோ மீட்டர் விட்டம் கொண்டிருக்கும் இந்த வைரங்கள். ஆபரணங்களை உருவாக்க முடியாத அளவிற்கு நுண்ணியவை என்றாலும் இது செயற்கை வைரங்கள் தயாரிப்பில் மிக முக்கியமான முன்னெடுப்பு.

டெக்கீலாவின் வெற்றிகரமான அமெரிக்க சந்தையில் பல துறை பிரபலங்களும் ஈடுபட்டிருக்கிறார்கள். குறிப்பாக ஹாலிவுட் பிரபலங்கள் பலர் டெக்கீலா வடிசாலைகளுக்கும் நீலக்கற்றாழை வயல்களுக்கும் உரிமையாளர்களாக இருக்கிறார்கள். அமெரிக்க பிரபல நடிகரும், மல்யுத்தவீரரும். கட்டுமஸ்தான உடலுக்கு உலகெங்கிலும் புகழ்பெற்றவருமான டுவேன் ஜான்சன் (Dwayne Johnson) உரிமையாளராக இருக்கும் ’’மண் மணம் கொண்ட பானம்’’ என்னும் பொருள் கொண்ட டெரிமானா (Teremana) 3 டெக்கீலா நிறுவனமும், அங்கு தயாராகும் டெக்கீலாக்களும் மெக்ஸிகோவின் முதல் தரமான டெக்கீலாக்களாக கருதப்படுகின்றன .மெக்ஸிகோவில் டெக்கீலா வடிசாலைகளில் உருவாகும் கழிவுப்பொருளான வினேஸ் (vinasse) சக்கையை பிற நிறுவனங்கள் எரித்து சூழல் மாசை உருவாக்குகையில் டுவேன் அவற்றை மட்க செய்து உரமாக்கி தனது நீல கற்றாழை வயலில் உரமாக உபயோக்கிக்கிறார்.. வடிசாலையின் நீர்கழிவுகளும் மறு சுழற்சி செய்யப்பட்டு இவரது வயலுக்கே பாய்கிறது.

ரெட் ராக்கர் என்று அழைக்கப்படும் அமெரிக்க பாடகரும், பாடலாசிரியரும், இசையமைப்பாளரும், தொழிலதிபருமான ராய் காஜர் அமெரிக்க எழுத்தாளரும் தொலைக்காட்சி தயாரிப்பாளரும், தொடர் உணவகங்களின் உரிமையாளருமான ’கை ராம்சே ஃபியெரியுடன் (Guy Ramsay Fieri) இணைந்து 1991 லிருந்து 30 வருடங்களாக டெக்கீலா வர்த்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்.. இவர்களின் கேபோ-வாபோ(Cabo Wabo) வணிகமுத்திரைகொண்ட டெக்கீலாவான ’’மெஸ்கீலா’’ (Mezquila) தான் உலகின் முதல் டெக்கீலா- மெஸ்கால் கலவை,

2020ல் துவங்கப்பட்ட ஓண்டா (Onda) என்னும் உலோக கேன்களில் அடைக்கப்பட்டிருக்கும் டெக்கீலாக்களை தயரிக்கும் நிறுவனத்திற்கு பிரபல நடிகையும் மாடலுமான ஷேய் மிச்செலும் (Shay Mitchell) ஒரு பங்குதாரர்.

பிரபல நடிகர் ஜார்ஜ் க்ளூனி அவர் மனைவி அமல் க்ளூனி, தொழிலதிபர் ரெண்டே கெர்பர் மற்றும் சூப்பர் மாடல் சிண்டி க்ராஃபோர்ட் ஆகியோர் இணைந்து 2013 ல் துவங்கிய டெக்கீலா நிறுவனத்தின் காஸ்மிகோஸ் (Casamigos) டெக்கீலாக்கள் வெகு பிரபலம். மிக மென்மையான இந்த டெக்கீலாக்களை உப்பும் எலுமிச்சை சாறும் சேர்க்காமல் அருந்தலாம். இந்த நிறுவனம் சுமார் 700 மிலியன் டாலர்களுக்கு 2017 இல் க்ளூனி, மற்றும் இதர பங்குதாரர்களால் விற்கப்பட்டிருக்கிறது.

’’வைன் மற்றும் பிற மதுபானங்களுக்கான சர்வதேச போட்டி” யில் 2020 ஆண்டுக்கான மிகச்சிறந்த டெக்கீலாவாக ஹாலிவுட் நடிகை கெண்டல் ஜென்னரின் (Kendall jenner) ‘’818 டெக்கீலா” அறிவிக்கப்பட்டிருக்கிறது.

டெக்கீலா பானத்தை குறித்தும், அதை அருந்தும் அனுபவங்களை குறித்தும் ஏராளமான புதுமொழிகளும், பாடல்களும் கவிதைகளும் மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவில் பிரபலமாக இருக்கிறது

உங்களுக்குள் இருக்கும் வெளித்தெரியாத திறமைகளை டெக்கீலா வெளிக்கொண்டு வரும்
வாழ்க்கை உங்களுக்கு எலுமிச்சைகளை கொடுத்தால் நீங்கள் அதனுடன் டெக்கீலாவையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
அனைவரையும் மகிழ்விக்க முயலாதீர்கள், நீங்கள் டெக்கீலா அல்லர்
இழந்த இளமையை மீட்டெடுக்க ஒரே வழி டெக்கீலா அருந்துவது
– ஆகியவை மிக அதிகமாகப் புழக்கத்தில் இருப்பவை.

டெக்கீலா குறித்த ஒரு பிரபல ஆங்கில பாடல் வரி ’’டெக்கீலா எனக்குள் சிறகடிக்கும் சிறு பறவை’’ என்கிறது. டெக்கிலாவின் சிறகடிப்பை இனி உணர்பவர்கள் டெக்கீலா பானம் கடந்து வந்திருக்கும் நீண்ட பாதையையும் நினைவில் கொள்ளலாம்.

மேல் தகவல்களுக்கு:

  1. The story of Don Julio Tequila – Master of Malt Blog
  2. Don Cenobio Sauza – Wikipedia
  3. Teremana Tequila 
  4. https://youtu.be/3ngId1AZ0TI
  5. http://uktequilaforum.co.uk/showthread.php?tid=258

சொல்வனம் தளத்தில்

தாவர நஞ்சு

பொதுவாக நஞ்சு, நச்சுத்தனமை என்றாலே நமக்கு  பாம்புகள் மற்றும்  தேள் போன்றவற்றின் நினைவுதான் வரும்.ஆனால்  இவை மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான தாவரங்கள், தங்களை உண்ண வரும் மேய்ச்சல் விலங்குகளிடம் இருந்து தப்பிக்க,  தற்காப்பிற்காக உடலில் சில கொடிய வகை விஷங்களை கொண்டுள்ளன. நச்சுத் தாவரங்களின்  பாகங்களை உண்டால் மட்டுமல்ல சிலவற்றை தொட்டாலே நஞ்சினால் நாம் பாதிக்கப்படுவோம். அப்படியான உலகின் மிக முக்கியமான நச்சு தாவரங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். இவற்றில் பல தாவரங்கள் நம்மை சுற்றிலும் சாதாரணமாக காணப்படுபவை.எனவே இவற்றின் ஆபத்துகளை குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்

1. அரளி-Nerium oleander

அரளி

கிழக்காசியாவை தாயகமாக கொண்ட பல நிற மலர்களுக்காக அறியப்படும் அலங்காரச் செடியும் பூஜைக்குரிய மலர்களுக்காக வளர்க்கப்படும் செடியுமான அரளியின் அனைத்து பாகங்களுமே, வேரிலிருந்து மலர்த்தேன் வரை நச்சுத்தன்மை கொண்டது

 இவற்றிலிருக்கும் நெரியோசைட் மற்றும் ஓல்டென்ட்ரின் (nerioside & oldendrin )  போன்ற  நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்களே இதன் அபாய தன்மைக்கு காரணம். தாவரத்தை எரிக்கும் புகை கூட நச்சுத்தன்மை கொண்டது

 தாவர பாகங்களின்  புகையை நுகர்ந்தால் வயிற்றுப்போக்கு,  வாந்தி மற்றும் இதய துடிப்புகளில் மாறுபாடு ஆகியவற்றை உண்டாக்கும்..அரளிச்செடியின் இலைகளை அல்லது மலர்களை உண்டால் இதய துடிப்பும் ரத்த அழுத்தமும் குறைந்து,  கண் பார்வை மங்குதல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உண்டாகி சிகிச்சை அளிக்காத போது உயிரிழப்பும் ஏற்படும்

2. மரண ஆப்பிள்-Hippomane mancinella 

மரண ஆப்பிள்-Hippomane mancinella

கரீபியன் தீவுகளை பிறப்பிடமாகக்கொண்ட நெல்லிக்காய் குடும்பமான யுஃபோர்பியேசியை  சேர்ந்த  manchineel tree  என்றழைக்கபடும்  மரம்தான் உலகின் நச்சுமரங்களில் மிக அதிகளவு நஞ்சை கொண்டது.பால் வடியும் இம்மரத்தின்  தண்டு, பட்டை, இலை, மலர், கனி என அனைத்து பாகங்களிலும் இருக்கும், எண்ணற்ற நச்சுப்பொருட்கள் இம்மரத்தின் பாலில் கலந்திருக்கும்.  

கண்களில் இம்மரத்தின் பால்  பட்டால் பார்வையிழப்பு உண்டாகும். மரத்தடியில் மழைக்காலங்களில் நிற்கும் கார்களின் வண்ணம் உரிந்து வந்துவிடும். அறியாமல் இம்மரத்தின் கனிகளை உண்பவர்களுக்கு குடல் புண்ணும், இரத்தப்போக்கும், கைகால் வீக்கமும் உண்டாகின்றது.

3. நீர் ஹெம்லாக்-Conium maculatum

நீர் ஹெம்லாக்

 மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த தாவரங்களில் ஒன்றான ஹெம்லாக் என்ற பெயர் கிரேக்க தத்துவத்தில் பரிச்சயமுள்ள அனைவருக்கும் சாக்ரடீஸின் நினைவை ஏற்படுத்தும். இந்த ஹெம்லாக் நஞ்சை அளித்தே சாக்ரட்டீஸ் கொல்லப்பட்டார். ஹெம்லாக்கில் உள்ள (cicutoxin and cicunol), சிகுடாக்சின் மற்றும் சிகுனால் ஆகிய நச்சுகள் வலிப்பு மற்றும் நடுக்கத்தை ஏற்படுத்தி நரம்பு மண்டலத்தை சேதப்படுதுகின்றன

  4. ஏஞ்சல் ட்ரம்பெட்-Brugmansia suaveolens

நம்மில் பலரும் இந்த அலங்கார செடிகளை பல இடங்களில் பார்த்திருப்போம்.  தென் அமெரிக்காவின் வெப்பமண்டல பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட ஏஞ்சல் ட்ரம்பெட்கள்  கவிழ்ந்து தொங்கும் நீண்ட பெரிய குழல் வடிவ அழகிய வெண்மலர்களை கொண்டிருப்ப்வை.  தாவர் பாகங்கள் அனைத்தும் மிகவும் நச்சுத்தன்மை கொண்டவை. புதர்ச்செடிகளான இவற்றின் மலர்கள் பலவித வண்ணங்களில் இருக்கும்

இவற்றின் அனைத்து பகுதிகளிலும் ட்ரோப்பேன் அல்கலாய்டுகள் ஸ்கோபோலமைன் மற்றும் அட்ரோபைன் போன்ற நச்சுகள் ( tropane alkaloids scopolamine & atropine) உள்ளன. இவற்றை உட்கொள்ளல் வயிற்றுப்போக்கு, பக்கவாதம் மற்றும்  மரணத்தை ஏற்படுத்தும்

5. வெள்ளை பாம்பு வேர் செடி / நட்சத்திர பூச்செடி

நட்சத்திர பூச்செடி

நமில் பலரும் மலை வாசஸ்தலங்களுக்கு செல்லுகையில் வழியெங்கும் புதராக செறிந்து வளர்ந்திருக்கும் இந்த களைச்செடியை பார்த்திருப்போம்.பலரின் உயிரிழப்புக்கு இச்செடியின் நஞ்சுகள்  காரணமாக இருந்திருக்கிறது. இந்த செடியின் விஷம் தான் ஆபிரகாம் லிங்கன் தாயார் நான்சி ஹாங்க்ஸ் லிங்கனின் மரணத்திற்கு காரணமாக இருந்ததது.இதன் நச்சுத்தனமைக்கு ட்ரெமெட்டோம் (Tremetome) என்ற வேதிப்பொருளே காரணம் . தாவர பாகங்களை உண்டால் கடும் வாந்தி மற்றும் சித்தப்பிரமை  போன்றவை உண்டாகும் இதன் வேர்களை பாம்பு கடிக்கு சிகிச்சையாக பயன்படுத்தப்படுவதால், இந்த பெயர் இதற்கு ஏற்பட்டது.

6. பெல்லடோனா-Atropa bella-donna

 தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு குடும்பத்தைச் சேர்ந்த இத் தாவரத்தின் அனைத்து பகுதிகளும் குறிப்பாக வேர் மற்றும் பழங்கள் நச்சுத்தன்மை கொண்டவை. தாவரத்தில் உள்ள முக்கிய நச்சுப் பொருட்கள் அட்ரோபைன், ஸ்கோபோலமைன் மற்றும் ஹியோஸ்சியமின். (atropine, scopolamine and hyoscyamine.)

இவை நரம்பு மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன. நச்சுவிளைவுகள் வெளிப்பட பல நாட்கள் ஆகும்.அதிகரிக்கும் இதயத்துடிப்புகள், மங்கலான பார்வை மற்றும் சித்தப்பிரமை ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். சிகிச்சை அளிக்காவிட்டால் மரணம் உண்டாகும்

7. அகோனைட்-Aconitum napellus

 சாத்தானின் ஹெல்மெட் என்னும் அச்சுறுத்தும் பெயரில் அறியப்படும் இந்த  அகோனைட் ‘விஷங்களின் ராணி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த தாவரத்தை  தொடுதல் கூட  கடும் தீங்கு விளைவிக்கும் தாவரத்தின் நச்சுத்தன்மைக்கு  அகோனைடைன்  என்னும் நஞ்சே காரணமாகும்.(aconitine). நச்சு விளைவுகள் உடனடியாக உள்ளன, வயிற்றுப்போக்கு முதல் சுவாச பிரச்சினைகள் வரை இதன் ஆபத்துகள் இருக்கும் சிகிச்சை இல்லாதபோது, இது மரணத்தை விளைவிக்கும்.

8.  தற்கொலை மரம் –Cerbera odollam

தற்கொலை மரம்

  கேரளாவில் மட்டும் ஆண்டுக்கு சுமார் ஐம்பது உயிரிழப்புகளை ஏற்படுத்தும் இந்த மரம் தற்கொலை மரமென்றே அழைக்கப்படுகின்றது. அதிகம் தற்கொலைக்கும் கொலைக்கும் இந்த மரத்தின் பாகங்கள் பயன்படுவதால் இந்த பெயர் வந்தது. அரளியின் குடும்பத்தை சேர்ந்த இதன் விதைகளில் செர்பெரின் (cerberin ) என்ற வலுவான நஞ்சு உள்ளது, இது இதயத்தின் தாளத்தை சீர்குலைக்கிறது.  இதன் பரவலான  பயன்பாட்டிற்கு  காரணம் , அதன் சுவையை காரமான உணவைப் பயன்படுத்தி மறைக்க முடியும் என்பதுதான். உண்டவர்கள் பிழைப்பது அரிது.

9.குன்றிமணி-Abrus precatorius

குன்றி மணி

 குன்றி, குன்றி மணி, அலங்கார பட்டாணி என பல பெயர்களால் அறியப்படும் இந்த தாவரத்தின் விதைகளே குன்றிமணிகள்.  குன்றிமணியில் இருக்கும் ஆப்ரின் (Abrin) என்னும் நஞ்சு மிக கொடியது. இந்த நஞ்சுக்கு இன்னும் முறிமருந்து கண்டறியப்படவில்லை. இவற்றை கடித்து விழுங்கினால் உயிர்பிழைப்பது கடினம். தவறாக முழுதாக  விழுங்கினால் எந்த ஆபத்தும் இல்லை. சரியான சிகிச்சை சரியாக நேரத்தில் கொடுக்கப்பட்டால் மட்டுமே இந்த நஞ்சிலிருந்து பிழைக்க முடியும். 

 10. ஆமணக்கு-Ricinus communis

ஆமணக்கு

 உணவு மற்றும் மருந்துகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஆமணக்கு  தாவரங்களின் உலகத்திலிருந்து மிகவும் சக்திவாய்ந்த விஷங்களில் ஒன்றையும் உற்பத்தி செய்கிறது. ஆமணக்கு  விதைகளில் காணப்படும் ரிசின் (Ricin) பாம்பு விஷம் மற்றும் சயனைடை விட ஆபத்தானது, இந்த நஞ்சினை உண்பது வாந்தி மற்றும்  வலிப்புக்ளை உண்டாக்கி இறுதியில் சிறுநீரக செயலிழப்பு மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கிறது.

ஸ்கோவில் அளவீடு

கோவிட் பெருந்தொற்றினால் உலகடங்குவதற்கு  முன்பாக 2019’ல் தெற்கு கரோலினாவின் ஃபோர்ட் மில் நகரில் ஒரு திறந்த வெளி மைதானத்தில் ஏற்பாடாகியிருந்த  பக்கர் பட் நிறுவனம் (Puckerbutt Pepper Company)  நடத்திய  அந்த சர்வதேச உண்ணும் போட்டியை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரளாக காத்துக் கொண்டிருந்தார்கள். காணொளி எடுப்பவர்களும் போட்டியை நடத்துபவர்களுமாக அந்த மேடை சந்தடியாக இருந்தது ஒரு சிறு மேடை.யிலிருந்த நான்கு பெண்கள் உள்ளிட்ட 11 போட்டியாளர்களும். ஒவ்வொருவராக பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.

பல வருடங்களாக இப்போட்டியில் தொடர்ந்து வெற்றி பெற்றுவரும் சித் பார்பரை பலருக்கு தெரிந்திருந்ததால், அவரை பலரும் உற்சாகப்படுத்தி கூச்சல் இடுகிறார்கள். போட்டியாளர்களும் இன்னும் பலரும் அடர் சிவப்பு மிளகாயின் சித்திரம்  இருக்கும் கருப்பு நிற சட்டை அணிந்திருக்கின்றனர்.

 போட்டியாளர்களின் முன்பு குளிர்ந்த பால் ஒரு கிண்ணமும், சிறு கூடையொன்றில் சமமான எடையில் உலகின் அதிக காரமான  மிளகாய்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆம் அது ஒரு சர்வதேசஅளவிலான  அதிக காரமான மிளகாய்கள் உண்ணும் போட்டிதான்.

மிளகாய்களின் வண்ணங்கள் மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்பு, கருப்பு, அடர்சிவப்பு என வேறு பட்டிருக்கின்றன. மொத்தம் 12 தகுதி சுற்றுக்களில் சுற்றுக்கு ஒன்றாக  குறைந்த பட்ச கார அளவிலிருந்து, மெல்ல மெல்ல அதிக கார அளவிற்கு மிளகாய்கள் போட்டியாளர்களுக்கு உண்ணத் தரப்படுகின்றன 

முதல் சுற்றில் Scotch Bonnet எனப்படும் 3,50000 SHU  கார அளவுள்ள மிளகாய்கள் . அடுத்ததாக 60000 SHU, அளவுள்ள ரீப்பர் நீரா  (Reaper Neeraa) தொடர்ந்து பூத் ஜலாக்கியா என்னும் 1000000 SHU கொண்ட  இந்திய பேய் மிளகாய், அடுத்து  மஞ்சள் நிறத்திலிருக்கும் 1,600000 SHU  கார அளவுள்ள மிளகாய் ( Yellow 7 pot), பின்னர் 2,000000 SHU, கொண்டிருக்கும் கொக்கோ லோகோ ஸ்பைசி மிளகாய் (Cocoa Loco Spicy Chile) ஆகியவைகள் கொடுக்கப்படுகின்றன.

 இரண்டாம் சுற்றில் ஒருவர் தன்னால் தொடர முடியாது என்று சொல்லி போட்டியில் இருந்து விலகுகிறார். போட்டியாளர்களுக்கு ஏராளமாக  வியர்க்கிறது, குமட்டுகிறது கண்ணில் நீர் வழிகிறது ஆனாலும் அத்தனை காரமான புதிய மிளகாய்களை கடித்து மென்று விழுங்கி கொண்டே இருக்கிறார்கள். சிலர் குளிர்ந்த பாலை அருந்தி போட்டியிலிருந்து விலகிக் கொள்கிறார்கள் 

 ஆறாம் சுற்றில் 1,6000000 SHU கார அளவுள்ள கரோலினா ரீப்பர் கொடுக்கப்படுகையில் மொத்தம் 7 போட்டியாளர்கள்தான் இருக்கிறார்கள், ஏழாம் சுற்றில்  சாக்கலேட் (Chocolate) மிளகாய்கள் 1,80000 SHU அளவில் கொடுக்கப்படுகிறது, எட்டில் 2,200000 SHU உள்ள நெஞ்செரிப்பான் (Heartburn) மிளகாய்கள் கொடுக்கப்பட்ட போது ஐந்தே போட்டியாளர்கள் மட்டும் இருக்கின்றனர்.

ஒன்பதாம் சுற்றில் 2,300000 SHU உள்ள  ஒற்றை சக்கரம் (One ring) கொடுக்கப்பட்டபோது  மற்றொரு போட்டியாளரும் வெளியேறுகிறார். அலற வைக்கும் பீச் மிளகாய்கள்  (Peaches & Scream)  கார அளவு குறிப்பிடப்படாமல் பத்தாவது சுற்றில் கொடுக்கப்பட்ட போது இறுதி போட்டியாளர்களாக சித், பெல்லா மற்றும் ஜஸ்டின் ஆகிய மூவர் மட்டுமே இருக்கிறார்கள்

 பின்னர் உலகின் மிக அதிக காரமான2,600000  SHU அளவுள்ள  பெரிய வகை மிளகாயான Giant Carolina Reaper கொடுக்கப்பட்டு 20, 10 5 என குறைந்து கொண்டே வரும்  விநாடிகளுக்குள் கொடுக்கப்பட்ட மிளகாய்கள் அனைத்தையும்   விழுங்குபவர்களே வெற்றியாளர்கள் என்று அறிவிக்கப்பட்ட சில விநாடிகளில் எதிர்பாராமல் முன்னணி போட்டியாளர் சித் தன்னால் முடியாது சைகை காண்பித்துவிட்டு குளிர்ந்த பாலை  அருந்தி விலகுகிறார். அழகிய ஒப்பனையில் இருந்த பெல்லாவும், ஜஸ்டினும் மட்டுமே மேடையில்

  கடைசி வரை அலட்டிக்கொள்ளாமல் தனக்கு பிடித்தமான சிற்றுண்டியைப் போல அத்தனை மிளகாயையும் உண்டு முடித்து வெற்றியாளராகிறார் ஜஸ்டின். அவருக்கு பரிசாக ஓராயிரம் டாலர்களுக்கு காசோலையும் உலக உருண்டையின் மீது  சிவப்பில் கரோலினா ரீப்பர் மிளகாயின் சிறு சிற்பம் இருக்கும் கோப்பையும்  கொடுக்கப்படுகிறது. 

பெல்லா இரண்டாவது வந்தாலும் பார்வையாளர்களில் ஒருவர் பெல்லாவை பாராட்டி ஓராயிரம் சன்மானம் கொடுத்ததுடன் அப்போட்டி முடிவுக்கு வருகிறது.1

 போட்டியின் போது அவசர உதவிக்கான மருத்துவ வாகனங்களும், மருந்துகளும், போட்டியிலிருந்து விலகுபவர்கள் வாயுமிழவென்றே பக்கட்டுகளும் தயாராக இருக்கின்றன. பல போட்டியாளர்களுக்கு உதடும் நாக்கும் புண்ணாகி ரத்தம் கசிகிறது. சிலர் வாயுமிழ்ந்தபடி இருக்கிறார்கள். 

இதுபோல விநோதமான காரம் கூடிய மிளகாய்களை உண்ணும் போட்டி உலகெங்கிலும் வருடா வருடம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆயிரம் டாலர் என்னும் சிறு தொகைக்காவா தங்களை இத்தனை வருத்திக்கொண்டு இந்த போட்டியில் கலந்து கொள்கிறார்கள்?   பல நாடுகளில் பரிசாக சன்மானம்  கூட கொடுப்பதில்லை மாறாக கோப்பைகளும், பல மூட்டை மிளகாய்களும், நட்சத்திர விடுதி தங்கல்களும் கூட பரிசாக கொடுக்கப்படுகிறது. இப்போட்டியின் வசீகரத்துக்காகவும் பிரபல்யத்துக்கவுமே இவை தொடர்ந்து நடைபெறுகின்றன.புதிய மிளகாய் கலப்பினங்களை உருவாக்கும் நாடுகள் தங்கள் பெருமையை பறை சாற்றிக்கொள்ளவும் இப்போட்டிகளை முன்நின்று நடத்துகின்றன..

 நாக்கை எரிய செய்து  கண்ணில் நீர் வடிய செய்யும் மிளகாய்களையும் அதன் சுவையையும்   அறிந்திருந்த உலகம், கனெக்டிசுட்டில் 1865 ஜனவரி 22ல் பிறந்த வில்பர் ஸ்கோவிலுக்கு (Wilbur Scoville) பிறகுதான் மிளகாய்களின் காரத்தை அளவிட முடியுமென்பதையும் அறிந்து கொண்டது. 

 வில்பர் ஸ்கோவில் ஒரு பிரபல வேதியியலாளரும், பல விருதுகளுக்கு சொந்தக்காரரும், மருந்தாளுமையில் பேராசிரியருமாவர். அமெரிக்க மருந்தக அமைச்சகத்தின் இரண்டாம் துணைத் தலைவராகவும் இருந்த  இவரின் The Art of Compounding என்னும்  பிரபல நூலில்தான் முதன்முதலாக ’’மிளகாய் காரத்துக்கு  முறிமருந்து பால்தான் நீரல்ல’’  என குறிப்பிட்டிருந்தார். இவரது Extracts and Perfumes  என்னும் நூலும்  வேதியியலில்  மிக முக்கியமானது

திரு. ஸ்கோவில் டெட்ராய்டில் அமைந்திருந்த பிரபல பார்க் டேவிஸ் (Parke-Davis) மருந்தகத்தின் தலைவராக இருக்கையில் மிக அதிகமாக தயாரிக்கப்பட்ட’’ ஹீட்’’ (Heet) என்னும் பெயரிலான வலிநிவாரண பசையில் முக்கிய வேதிப்பொருளாக மிளகாயின் கேப்ஸெய்சின் (Capsaisin) இருந்தது. தேவையான கேப்ஸெய்சினை பிரித்தெடுக்க ஆய்வக கருவிகள் கண்டுபிடிக்க பட்டிருக்காததால் மிள்காய்களிலிருந்தே சாறெடுத்து தயாரித்தனர். ஆனால் இதில் காப்ஸெய்சினின் அளவை துல்லியமாக மருந்தில் கலப்பதில் நடைமுறை சிக்கல்கள்  இருந்த வந்தது.

அப்போது  ஸ்கோவிலால்  கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஸ்கோவில் புலனுணர்வு சோதனை (Scoville Organoleptic Test)  எனப்படும் இந்த காரவெப்ப அளவீடு முறை.

 ஒரு காரமான பொருள் சர்க்கரை நீரில் எவ்வளவு நீர்த்துப்போக வேண்டும் என்பதை இந்த சோதனை அளவிட்டது.  இம்முறையில் ஸ்கோவில் மதிப்பீடுகள் கார சர்க்கரை- நீர்த்தல்களுக்கு மனித எதிர்வினைகளைத்தான் அடிப்படையாகக் கொண்டிருந்தன

ஸ்கோவில் சுவைப்பவர்களின் நாக்கை எரிக்காத வரை கார சர்க்கரை கரைசல்களை படிப்படியாக நீர்த்துப்போகச் செய்வார், மிகச்சிறந்த கார வெப்பத்தை அறியும் நாவினைக்கொண்ட தன்னார்வலர்களுக்கு அவற்றை ருசிக்க கொடுத்து எந்த அளவிலான நீர்த்த கலவையில் ஐந்தில் மூன்று நபர்களால் காரத்தை கண்டறியவே முடியவில்லையோ அந்த அளவீட்டை குறித்துக்கொள்ளுவார். ஒரு மிளகாயின் கார வெப்பத்தை முழுமையாக நீக்குவதற்காக அக்கரைசல் எத்தனை முறை நீர்த்துப்போகச் செய்யப்பட்டது என்பதன் அடிப்படையில் அந்த மிளகாய்க்கு ஸ்கோவில் ஒரு எண் மதிப்பீட்டை வழங்கினார். உதாரணமாக, ஜலபெனோ மிளகாய் 10,000 ஸ்கோவில் அளவீட்டை கொண்டுள்ளது, அதாவது இதன் வெப்பம் நடுநிலையாக்கப்படுவதற்கு முன்பு ஜலபெனோ கரைசல் 10,000 முறை நீர்க்கப்பட வேண்டும்.  

 இம்முறை பரவலாக பயன்பாட்டில் இருந்தது என்றாலும் ஒவ்வொரு மனிதனின் காரம் தாங்கும் திறனென்பது வேறுபடுமென்பதால் இதில் முடிவுகள் மிகத்துல்லியமாக இருக்கவில்லை.

.1980 களில் இருந்து தான்   உயர் செயல்திறன் திரவ நிறப்பிரிகை (எச்பிஎல்சி),   (High-Performance Liquid Chromatography -HPLC),  முறையில் கேப்ஸெய்சினை பிரித்து கார அளவீடுகள் கணக்கெடுக்கப்படுகின்றன.

 1912 முதல் இந்த கார அளவீட்டு முறை அதை கண்டறிந்தவரான வில்பர் ஸ்கோவிலின் பெயராலேயே  ’’Scoville Heat Units,  SHU’’ என குறிப்பிடப்படுகிறது.

அமெரிக்க மருந்து சங்கம் 1922 இல் ஸ்கோவிலுக்கு எபெர்ட் பரிசையும், 1929 இல் ரெமிங்டன் ஹானர் பதக்கத்தையும் வழங்கியது..ஸ்கோவில் தனது 77 ஆவது வயதில் 1942ல்’ மரணமடைந்தார். கடந்த 2016 ஜனவரி 22ல் வில்பர் ஸ்கோவிலின் 151 ஆவது பிறந்த நாளை சில சிறப்பு விளையாட்டுக்களுடன் கூகுள் டூடுல் உண்டாக்கி அவரை சிறப்பித்திருந்தது.2

 சமகால பயன்பாடுகள் கார வெப்பத்துக்கு பொறுப்பான  கேப்ஸெய்சினின் அளவுகளை  அளவிட பலவித  இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றன. இவை மிக துல்லியமாக ஒவ்வொரு மிளகாய்க்கும் கார வெப்ப அளவீட்டை தெரிவிக்கின்றன. உதாரணமாக குடைமிளகாய் பூஜ்ஜியத்தின் ஸ்கோவில் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது அதாவது அதில் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவில் கேப்ஸெய்சின்கள் இல்லை, அதே நேரத்தில் ஹாபனேரோ மிளகாய்த்தூள் 300,000 ஸ்கோவில் மதிப்பீட்டை  கொண்டுள்ளது,

 ஸ்கோவில் காரவெப்ப அளவீடு மிளகாய்களின் காரவெப்பத்துக்கு காரணமாயிருக்கும் காப்சினாய்டுகளின்  (Capsaicinoids) தொகுதியில் உள்ள கேப்ஸெய்சினின் அளவையே கணக்கில் எடுத்துக் கொள்ளுகிறது. கேப்ஸெய்சின் நீரில் கரையாது எனவே அதிக மிளகாயின் காரத்துக்கு நீர் குடிப்பது ஒருபோதும் நிவாரணமாகாது. நீர் கேப்ஸெய்சினை மேலும் பரவச்செய்து கார வெப்பத்தை அதிகரிக்கும். எனவே இந்த காரத்தை மட்டுப்படுத்தும் ஒரே வழி, குளிர்ந்த பால், ஐஸ்கிரீம், சோடா அல்லது எலுமிச்சை சாறு, பாலாடைக்கட்டி போன்ற அமில உணவுகளுடன் அதை கலப்பதுதான்.

கரோலினா ரீப்பரை போல காரம் கூடிய அதிக SHU அளவீடுகளை  கொண்ட ’சூப்பர் ஹாட்’ மிளகாய்களை விளைவிக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்துமே முனைப்புடன் இருக்கிறது என்றாலும், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரெலியாவுக்கிடையேதான் 1990’களிலிருந்து இதில் கடும்போட்டி நிலவுகிறது.

 மிளகாய்களின் கார அளவீடுகளை குறிக்கும் ஸ்கோவில் அளவீடு கண்டறியப்பட்ட பின்னரே சூப்பர் ஹாட் மிள்காய்கள் அதிகம் உருவாக்கப்பட்டன. பொதுவாக  1,000,000 SHU க்களுக்கு மேல் இருப்பவையே  சூப்பர் ஹாட் மிளகாய்களாக கருதப்படுகின்றன. 

1990 களுக்கு முன்பு 3,50000 SHU களுக்கு அதிகமாயிருந்தவை  ஸ்காட்ச் போனெட் மற்றும் ஹேபனேரோ ஆகிய  (Scotch bonnet & habanero) இரண்டு மிள்காய் வகைகள் தான்

 1994 ல் கலிபோர்னியா விவசாயி ஃப்ரான்க் கார்சியா Frank Garcia  ஹேபனேரோவின் உட்கலப்பினமொன்றை ’’சிவப்பு சவினா’’ என்னும் பெயரில் (Red Savina,) 570,000 SHU அளவீட்டில்   உருவாக்கியபோது அதுவே உலகின் உயர்ந்தபட்ச கார அளவாக இருக்குமென கருதப்பட்டது.

 ஆனல் 2001ல் நியூ மெக்ஸிகோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் மிளகாய் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான பால் போஸ்டாண்ட் (Paul Bosland) இந்தியாவுக்கு வந்து அஸ்ஸாமில் விளையும்  பேய் மிளகாய், பூத் ஜலாக்கியா, நாகராஜ மிளகாய் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் பிரபல மிளகாய்களை ஆய்வு செய்து அவை 1 மில்லியன் SHU க்களுக்கு மேல் காரம் கொண்டிருப்பதை கண்டறிந்தார், 

 பல வருடங்களாக உலக நாடுகள் பல மும்முரமாக புதிய கலப்பின  மிளகாய் வகைகளை அதிக கார அளவுகளில்  உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. 1994ல் சிவப்பு சவினா உலகின் காரம் கூடிய மிளகாயாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டது, 2006’ல் டோர்செட் நாகாவும், (Dorset Naga), 2007ல் பேய் மிளகாயும்,(Ghost Pepper) முந்தைய சாதனைகளை முறியடித்தன.

  2011’ல் முதலில் இன்ஃபினிட்டி மிளகாயும் ,(Infinity) பின்னர் அதே வருடத்தில்  நாக வைப்பரும்,(Naga Viper,) பின்னர்  2 மில்லியன் SHU அளவுடன் ட்ரினிடாட் ஸ்கார்பியன் புட்ச் மிளகாய்களும்,(Trinidad Scorpion Butch T pepper) அடுத்தடுத்து  சாதனைப் பட்டியலில் இடம் பெற்றன. 

  2013  நவம்பரில் இருந்து இன்று வரையிலும் உலகின் காரம் கூடிய மிளகாயாக முதலிடத்தில் தொடர்ந்து இருந்து வருவது 1,400,000 லிருந்து  2,200,000 SHU அளவுகள் கொண்டிருக்கும் கரோலினா ரீப்பர் மிளகாய்களே, (Carolina Reaper) இவற்றில் பெரிய மற்றும் சிறிய வகை மிளகாய்கள் உள்ளன, 

கரோலினா ரீப்பர்

 காரம் குரைந்த மிளகாய்கள் காரத்துக்கு கரணமான கேப்ஸெய்சினை , மிளகாயின் நடுவிலிருக்கும் பஞ்சுபோன்ற நீண்ட பகுதியில் (pith) சேமித்து வைக்கின்றன ஆனால் சூப்பர் ஹாட் மிளகாய்கள் தங்களின் பித்’திலும் சதைப்பகுதியிலும் கேப்ஸெய்சினை சேமித்துவைகின்றன. எனவே பிற மிளகாய் வகைகளில் நடுவிலிருக்கும் பித்தையும் விதைகளையும் நீக்கும் போது கார அளவு  குறையும் என்பது,சூப்பர் ஹாட் மிளகாய்களுக்கு பொருந்தாது.

பல நாடுகளின் கேள்விகளுக்கும், கண்டங்களுக்கும் இப்போட்டிகள் உட்பட்டு இருப்பினும்,.மிள்காய் சாஸ்களும் மிளகாயின் காரத்தை அடிப்படையாக கொண்ட உணவுப்பொருட்களின்  விற்பனையையும் அதிகரிக்க செய்யும் பொருட்டு இப்படியான கலப்பின வகைகளை உருவாக்கும் நாடுகள் இரக்கமின்றி தொடர்ந்து போட்டிகளை நடத்திக்கொண்டே தான்  இருக்கின்றன. 

இம்மிளகாய்களின் விதைகளும் பெரும் விலைகொடுத்து வாங்கப்படுபவதால் விதை வணிகமும் இப்போது மிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. மிளகாய் உண்ணும் போட்டிகளை நடத்தி யூ ட்யூபில் வெளியிட்டு அதில் பணம் பார்ப்பவர்களும்  பெருகிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் நாகலாந்தில் மிகப்பிரபலமான ஹார்ன்பில் திருவிழாவிலும் காரமிளகாய்களை உண்ணும் போட்டி வருடா வருடம் நடைபெறுகிறது.

கண்ணீர் புகைக்குண்டுகளைப்போல கலவரம் நடக்கும் இடங்களில் கூட்டத்தை கலைக்க அஸ்ஸாமின் பேய் மிளகாயின் தூள் நிரப்பப்பட்டிருக்கும் கையெறி குண்டுகள் இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்படுகிறது. இந்த கையெறி குண்டுகள் (Chilli Grenades) விஷமற்ற ஆயுதங்களின் பட்டியலில் வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பிருந்து, இந்த மிளகாய் கையெறி குண்டுகள் அஸ்ஸாம் படைப்பிரிவில் புழக்கத்தில் இருக்கிறது.  இந்த பேய்மிளகாய் கலவையை பெண்கள் தங்களது தற்காப்பிற்காக பயன்படுத்தும் ஸ்ப்ரேக்களில் சேர்க்கும் யோசனையும்  அரசுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது 

 இந்த காரத்தை உணர்தல் என்பது பாலூட்டிகளுக்கு மட்டுமேயான திறன் என்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பறவைகளுக்கு இந்த காரம் உரைப்பதில்லை. நாம் சாதரணமாகவே வளர்ப்புக்கிளிகள் மிளகாய்ப்பழங்களை விரும்பி உண்ணுவதை பார்த்திருக்கிறோம்.

இதனால்தான் தாவரங்களை உண்ண வரும் விலங்குகள் காரமுள்ள பழங்களை கொண்ட தாவரங்களை தவிர்த்துவிடுகின்றன,. ஆனால் பறவைகள்  காரமுள்ள பழங்களை உண்டு எந்த பிரச்சனையும் இன்றி விதை பரவலுக்கும் மகரந்த சேர்க்கைக்கும் உதவுகின்றன. இயற்கையின் அதிசயங்களில் இதுவுமொன்று

 மிக மிக அதிக காரம் விரும்பி உண்ணும் நபர்களுக்கு  “Pyro-Gourmaniac என்று பெயருண்டு. Pyro என்றால் நெருப்பென்றும் Gourmaniac என்றால் உணவின் மூலம் தன்னை வருத்திக்கொள்ளுபவர்கள் என்றும் பொருள். இவர்கள் படிப்படியாக தங்களின் கார வெப்பம் தாங்கும் அளவை அதிகரித்துக் கொண்டுவிடுகிறார்கள். இயற்கையாகவே சிலரின் ஜீன் கட்டமைப்பிலேயே அதிக காரம் தாங்கும்படியும் இன்னும் சிலருக்கு மிக குறைந்த அளவே தாங்கும் திறனும் இருக்கும் 

  ஒரு நாளின் உணவில் ஒரு நபருக்கு 50 கிராம் கேப்ஸெய்சின் என்பது பக்க விளைவுகளும் ஆபத்துமற்றதென்கிறது பல ஆய்வுகள் அதற்கு அதிகமாகும்போது உயிரிழப்போ அல்லது கடும் உடல் பிரச்சனைகளோ வராது. இரைப்பை மற்றும் உணவுக்குழாய் வீக்கம், அழற்சி, இரைப்பை புண்ணாகுதல், வாயுமிழ்தல், கண்ணெரிச்சல் மற்றும் வலி, வியர்வை பெருக்கு, வயிற்றுபோக்கு நெஞ்செரிச்சல் மற்றும் தலைவலி ஆகியவை அதிக கேப்ஸெய்சினை உட்ள்வதால் வரும் பக்கவிளைவுகள்.  நீடிக்கும் உடலாரோக்கிய பிரச்சனைகளை கேப்ஸெய்சினின் கூடுதல் அளவுகள் உருவாகுவதில்லை.  

பேய்மிளகாய்

 உலகின் மிக அதிக மிளகாய் சாகுபடி செய்யும் நாடாக சீனாவே இருந்துவருகிறது இந்தியாவின் பங்கு மொத்த மிளகாய் உற்பத்தியில் 36 சதவீதம்தான். கடந்த 2008 ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு பெற்றிருக்கும் நாகலாந்த்தின்  பேய்மிளகாய்கள்  ஜூலை 2021ல் தான் முதன் முதலாக லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட துவங்கியிருக்கின்றன..3  சுமார் 2.71 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ஒரு $3.68 பில்லியன்) ஆக உள்ள உலகளாவிய காரஉணவுகளின்  சந்தை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக வளர்ந்துள்ளது. இது மேலும் 2028 க்குள் $4.38 பில்லியனிலிருந்து $5.95 பில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல மிளகாய் வகைகளின் ஸ்கோவில் அளவீடுகள்:

  •    Bell Pepper (0 SHU/ 0 SCU)
  •    Ghost Pepper (855,000 to 1,041,427 SHU)
  •    7 Pot Jonah (800,000 to 1,200,000 SHU)
  •    Trinidad 7 Pot Pepper (1,000,000 to 1,200,000 SHU)
  •     Infinity Pepper (1,067,286 to 1,250,000 SHU)
  •     7 Pot Primo (800,000 to 1,268,250 SHU)
  •    7 Pot Barrackpore (1,000,000 to 1,300,000 SHU)
  •   7 Pot Brain Strain (1,000,000 to 1,350,000 SHU)
  •   Naga Viper (900,000 to 1,382,118 SHU)
  •   Trinidad Scorpion “Butch T” (800,000 to 1,463,700 SHU)
  •     Naga Morich (1,000,000 to 1,500,000 SHU)
  •     Dorset Naga (1,000,000 to 1,598,227 SHU)
  •     7 Pot Douglah (923,889 to 1,853,986 SHU)
  •     Trinidad Moruga Scorpion (1,200,000 to 2,000,000 SHU)
  •      Komodo Dragon Pepper (1,400,000 to 2,200,000 SHU)
  •     Carolina Reaper (1,400,000 to 2,200,000 SHU)

வருடா வருடம் புதிய இனங்கள் கண்டு பிடிக்கபட்டு கொண்டிருப்பதால் இந்த பட்டியல் மாறிக்கொண்டே இருக்கும், இந்த வரிசையில்  இன்னும் சேர்ந்திருக்காத    சிறப்பிடம் பெற்றவை என சொல்லப்படும்  2,480,000 SHU கொண்ட  டிராகன் மூச்சு மிளகாய்களையும், (Dragon’s Breath Pepper), பெப்பர்  X எனப்படும் (Pepper X) 3,180,000 SHU கொண்ட  சூப்பர் ஹாட் மிளகாய்களையும் வெறும் கைகளால் தொட முடியாது. அவற்றை கையுறைகளை அணிந்து கொண்டு கண்களில் விதைகள் தெறித்து விடாமலிருக்க பாதுகாப்பு கண்ணாடிகளையும் அணிந்துதான் கையாளவேண்டும். 

 ஸ்கோவில் அளவீட்டு முறையில் மிளகாய்களின் காரம் மட்டுமல்ல குருமிளகின் பைப்பெரின் (Piperine) இஞ்சியின் ஜிஞ்சரோல் (Gingerol). ஆகியவற்றையும் அளவிடலாம்.

தாவரங்களிலிருந்து கிடைக்கும் வேதி பொருட்களில் மிக மிக காரமானது என்று அறியப்பட்டிருக்கும்   Resinifera Toxin  (RTX) என்னும் நச்சுப்பொருள் மொராக்கோ மற்றும் நைஜீரியாவில் வளரும் Euphorbia resiniferaஎன்னும் கள்ளிச்செடியின் பிசினில் இருந்து கிடைக்கிறது இதன் ஸ்கோவில் அளவானது மிளகாயிலிருக்கும் கேப்ஸெய்சினைவிட ஆயிரம் மடங்கு அதிகமாகும். (சுமார் 16 பில்லியன் ஸ்கோவில் யூனிட்டுக்கள்). இனி மிளகாய் சாஸ்களை வாங்குகையில் அதில் அதன் கார வெப்ப அளவீடுகள் எத்தனை SHU  என்பதை கவனிக்கலாம்.

அடிக்குறிப்புகள்:https://www.youtube.com/embed/fC0sMIue5qk?version=3&rel=1&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&fs=1&hl=ta-IN&autohide=2&wmode=transparent

  1.  2019 ல் நடந்த போட்டியின் காணொளி இணைப்பு : https://youtu.be/fC0sMIue5qk
  2. கூகுள் டூடுல்: https://www.google.com/doodles/wilbur-scovilles-151st-birthday
  3. https://www.republicworld.com/world-news/uk-news/india-exports-shipment-of-bhut-jolokia-worlds-hottest-chilli-to-england.html

துருவத்தாவரங்கள்

 தாவரங்கள் என்று  நமக்கு தெரிந்தவை எல்லாமே இலையும் கிளையும்  மலரும், வேரும் கொண்ட பெருமரங்களும், பச்சைக் கொடிகளும் பசுங்கத்திகளென இலை கொண்டிருக்கும் புற்களும், புதர்களும் செடிகளும்தான், ஒரு சிலரே பாசிகளும் பெரணிகளும் அடங்கிய  பூக்காத கீழ்நிலைத்தாவரஙகளை அறிந்திருப்பார்கள். துருவக்கரடிகளையும், பென்குவின்ப றவைகளையும், உறைபனிநீரில் மீன்பிடிக்கும் எஸ்கிமோக்களையும் மட்டுமே நம்மில் பலர் துருவப்பகுதியின் வாழ்வாக அறிந்திருப்போம் ஆனால் கடுமையான குளிர், அதிக காற்று மற்றும் மிகக் குறைந்த ஈரப்பதம் கொண்டிருக்கும் அண்டார்டிகா மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில்  -125.8 டிகிரி பாரன்ஹீட் வரை  வெப்பநிலை குறைவாக பதிவு செய்யப்பட்டிருக்கும் சுற்றுச்சூழலிலும், தாவர -விலங்கு வாழ்க்கை  இருக்கிறது. 

ஆர்க்டிக் (Arctic) என்பது பூமியின் வட முனையில் அமைந்துள்ள பகுதியாகும். இது தென் முனையில் உள்ள அண்டார்டிகாவுக்கு எதிர்ப்புறத்தில் உள்ளது. ஆர்க்டிக் பகுதியானது, ஆர்க்டிக் பெருங்கடல், மற்றும் கனடா, கிரீன்லாந்து (டென்மார்க்கின் பகுதி), ரஷ்யா, அலாஸ்கா (ஐக்கிய அமெரிக்கா), ஐஸ்லாந்து, நார்வே, சுவீடன், பின்லாந்து ஆகியவற்றின் சில பகுதிகளை  உள்ளடக்கியது.ஆர்க்டிக்கின் பெரும் பகுதி பனிக்கட்டிக் கடலையே கொண்டுள்ளது. இங்கு பொதுவாக பனிப்பகுதியில் வாழத் தகுதியான உயிரினங்களே (மனிதர் உட்பட) வாழுகின்றன. ஆர்க்டிக் பழங்குடி மக்களின் வாழ்க்கை குளிர் பிரதேசங்களின் வாழ்க்கை முறைகளுக்கு ஒத்ததாக அமைந்துள்ளது. ஆர்க்டிக் என்ற சொல் கிரேக்க மொழிச் சொல்லான ஆர்க்டிகோஸ் என்பதிலிருந்து  “கரடிக்கு அருகே,,ஆர்க்டிக், வடக்கே”என்னும் பொருளில் வைக்கப்பட்டது. 

 பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதியான அண்டார்டிகா (Antarctica) பூமியின் தென் முனையை சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும்.புவியின் தென்முனையில் அமைந்திருப்பதனால் இப்பகுதிக்கு சூரிய வெப்பம் மிகக் குறைந்த அளவே வந்து சேர்கிறது. இதன் காரணமாக கண்டம் முழுவதும்  பனிக்கட்டியினால் மூடப்பட்டிருக்கும். வருடத்தின்  ஆறு மாதங்கள் சூரிய  வெளிச்சமே இருக்காது. அண்டார்டிக்கா என்ற பெயர்  கிரேக்க மொழியில்   “ஆர்க்டிக்கிற்கு எதிரிடையான”, கரடி இல்லாத, “வடக்கிற்கு எதிரிடையாக” என்னும் பொருள்களை கொண்டிருக்கிறது.

 துருவப் பகுதிகளில் வாழ்க்கை நம்பமுடியாத அளவுக்கு கடினமாக இருக்கும். கடுமையான குளிர்ந்த காற்று நிலப்பரப்பு முழுவதும் சாட்டை போல் வீசி அடித்துக் கொண்டிருக்கும். மிக குறைந்த குளிர்கால வெப்பநிலை கொண்ட குளிர்கால இரவு பல மாதங்களுக்கு  நீடிக்கும். ஆனால் இந்த கடின, வறண்ட, வெற்று நிலப்பரப்புகளில் உயிர்கள் வாழ்கின்றன.

அண்டார்டிகாவின் பெரும்பகுதி  பனியால் மூடப்பட்டிருப்பதால், கண்டத்தின் நிலப்பரப்பில் 1 சதவிகிதம் மட்டுமே தாவரங்களின் வளர்ச்சிக்கு ஏற்றது. இச்சூழலில்  தாவரங்கள் தீவிர காலநிலையுடன் போராட பல தகவமைப்புகளைக் கொண்டுள்ளன.

துருவ நிலங்களில் இரண்டு முக்கிய தாவர மண்டலங்கள் காணப்படுகின்றன. தெற்கில், போரியல் காடுகளால் உருவாக்கப்பட்ட துணை ஆர்க்டிக் உள்ளது. வடக்கே இருக்கும் ஆர்க்டிக்கில் பொதுவாக துந்த்ரா தாவரங்கள் உள்ளன  ’’tundra’’  என்பது  “tunturia” – துந்திரியா அதாவது வெற்று நிலம் என்னும்  ஒரு திறந்த  சமவெளிக்கான ஃபின்னிஷ் வார்த்தையிலிருந்து உருவான சொல்.  துந்திரா காடுகள் உலகின் 20 சதவீத நிலப்பரப்பை ஆக்கிரமித்திருக்கிறது. ஆர்க்டிக் துந்த்ரா வில் மணிக்கு 97 கி மீ வேகத்தில் பனிப்புயல் வீசும் 

ஆர்டிக்

ஆர்க்டிக் தாவரங்கள் குறைந்த வெப்பநிலை, கோடை காலத்தில் தொடர்ச்சியான பகல், வளமற்ற மண் மற்றும் நிரந்தரமாக உறைந்த நிலம், வலுவான, வறண்ட காற்று மற்றும் வீசும், பனிப்பொழிவு உள்ளிட்ட கடுமையான சூழலுடன் போராட வேண்டும். இத்தனையும் தாங்கி வளருவதால் இத்தாவரங்கள் பெரும்பாலும் வளர்ச்சி குன்றி காணப்படும் 

இத்தாவரங்களின் வாழ்வு சுழற்சிக்காலம் மிக குறுகியது. இவற்றில் annuals எனப்படும் வருடாந்தர தாவரங்கள் மிக அரிது, Perennials எனப்படும் பல்லாண்டுத்தாவரங்களே இங்கு அதிகம் வளரும் இவையும் சிறு வேர்க்கிழங்குகள் மூலம் பாலிலா இனப்பெருக்கம் மட்டுமே   செய்யும்

 பல தாவரங்கள் துருவப்பகுதியில் மோசமான காலநிலையில் இருந்து தப்பிக்க ஒன்றுடன் ஒன்று இணைந்து மெத்தை போல கூட்டமாக வளரும் துருவப்பகுதியில் வசந்த காலமன்பது பனிப்பொழிவும் உறைபனியும்  நிலத்தை மூடியிருக்கும் போதே தொடங்கும். மலர்தளும் விதை உருவாதலும் மிக குறுகிய காலத்திற்கு, சுமார் 6 வாரங்கள் வரை இருக்கும்.  ஒரே சமயத்தில் இத்தாவரங்கள் மலர்வது மிக சிறப்பான ஒரு நிகழ்வாக இருக்கும் பனிமூடிய வெற்று நிலம் திடீரென்று வண்ணமயமாக மாயவித்தையால் மாற்றப்பட்டது போல் காட்சி தரும்

மண்ணில்லாத பனி மூடிய ஆர்க்டிக் பனிப்பாலை வெற்று நிலம் என்று பார்வைக்கு தோன்றினாலும் கூர்ந்து கவனித்தால் பல சிறு தாவரங்கள் இங்கு வாழ்வதை காணமுடியும்.

துந்திரா பகுதியில் லைக்கன்கள், mosses எனப்டும் பிரையோபைட்டுகள், சில சிறு பூக்கும் தாவரங்கள் ஆகியவை காணப்படும் பசும்புற்களும், குட்டை வில்லோ மற்றும் பிர்ச் மரங்களும் கூட  மேற்குப்பகுதியில் வளர்கின்றன. அலாஸ்காவின் வடக்குப்பகுதி வரையிலுமே இந்த தாவரங்களின் பரவலை காணமுடியும்.

துந்த்ரா காடு

பாறைகளில் திட்டுக்களாக பாசிகளும் பூஞ்சைகளும் இணைந்து வாழும் உயிரினங்களான லைக்கன்ஸ் வளர்ந்திருக்கும். இவற்றில் பஞ்சுபோல வளர்ந்திருக்கும் “rock tripe.” எனப்படும் கருப்பு லைக்கன்கள் உண்ணத்தகுந்தவை.இங்கு வரும் ஆராய்ச்சியாளர்கள் பலருக்கு  இவையே பல சமயங்களில் உணவாக இருந்திருக்கிறது பாறைப்பிளவுகளில் பிற பூக்கும் சிறு தாவரங்கள் வளரும். ஆர்க்டிக்கின் தெற்கு முனையில்  பாறைக்கூட்டங்களின் மறைவில் பனிப்புயலிலிருந்து பாதுக்காப்பாக  சிறு சிறு புதர்க்கூட்டங்களும் இருக்கும்.

கருப்பு லைக்கன்

 மித வெப்பம் இருக்கும் ஆர்க்டிக் பகுதிகளில் சிறு புதர்களும் வில்லோ, பிர்ச், ஜூனிபர் மற்றும் ஆல்டர் மரங்களும் வளர்கின்றன. தெற்கு நோக்கிய மலைச்சரிவுகளில் உயரமான வில்லோ, பிர்ச் மற்றும் ஆல்டர் மரங்கள் வளர்கின்றன. இவற்றையே எஸ்கிமோக்கள் விறகுக்காவும், பாய்களை பின்னவும் பயன்படுத்துகின்றனர்.

ஆல்டர்

துந்த்ரா தாவரங்களே இங்கிருக்கும் விலங்குகளுக்கும் உணவாகின்றன.தென் ஆர்க்டிக் பகுதியில் பனிமூடிய நிலத்தில்  பல வகை பழங்கள் ஏராளம் சிதறிக்கிடக்கும். இங்கு வசிக்கும் மக்கள் அதிகம் உண்ணுவது கருப்பு காக்காய் பழம்-  black crowberry (Empetrum nigrum), முகில் பழம்- cloudberry (Rubus chamaemorus), கருநீலப் பழம்- bilberry (Vaccinium uliginosum), மலைப்பழம்-  mountain cranberry (V. vitisidaea minus) ஆகியவற்றையே. காளான்களும் இங்கு பரவலாக வளர்கின்றன.

துணை ஆர்க்டிக் பகுதியில் துந்த்ரா காடுகளில் ஊசியிலை மர வகைகளும், அகன்ற இலைகள் கொண்ட பிர்ச் மரங்களும் உள்ளன.சுமார்  60  பூக்கும் தாவரங்கள் ஆர்க்டிக் பகுதியில் காணப்படுகின்றன. ஆர்க்டிக்கில் மட்டும் சுமார் 1700  தாவரங்கள் வளர்கின்றன. இவற்றில் பூக்கும் தாவரங்களும், ,குட்டைப் புதர்களும், சிறு செடிகளும் பிரையோபைட்டுகளும், லைக்கன்களும் அடக்கம். இங்கிருக்கும் active layer எனப்படும் மிக மெல்லிய மண் படலத்தில் இவை வளருகின்றன.

active layer

 தடித்த இலைகளின் நீண்ட வடிவத்தினால் நாக்கு செடி என அழைக்கப்படும் குட்டை புதர் ஒன்று இங்கு வாழும் குழி முயல்களுக்கும் வேறு சில விலங்குகளுக்கும் உணவாகிறது

 பாஸ்க் செடி எனப்படும் சிறு மலர்களை உருவாக்கும் செடியும், கரடிப்பழம் எனப்படும் தடித்த தோல் போன்ற இலைகளும், கரடிகளுக்கு பிரியமான சிவப்பு பழங்களையும் கொடுக்கும் புதர்களும் (Bearberry) ஊதா நிறத்தில்  நட்சத்திரங்களைப் போன்ற சிறு மலர்களை கொடுக்கும் செடியான (Purple saxifrage), அழகிய கிண்ணம் போன்ற மலர்களுடன் ஆர்க்டிக் பாப்பி செடிகள்-Arctic poppy., பருத்திப்புல் எனப்டும்  வெண்ணிற புல் வகையான Cotton Grass,.இவற்றுடன்  Reindeer lichen எனப்படும் கொம்புகளைபொன்ற அமைப்புகளுடன் இருக்கும் துருவ கலைமான் லைக்கன்களும் அதிகம் இங்கு காணப்படும்.

ஆர்க்டிக்கை விட அண்டார்டிக்கா மிக குளிரான பிரதேசம் என்பதால் நிலம் எப்போதும் உறை பனிப்பொழிவால் மூடியே இருக்கும்.

10 இன்ச்களிலிருந்து 3 அடி ஆழம் வரை பனி உறைந்திருக்கும் நிலப்பரப்பை கொண்டிருக்கும் அண்டார்டிக்காவில் மரங்கள் வளர்வது சாத்தியமில்லை எனவே கீழ்நிலைத்தரங்களே இங்கு அதிகம் காணப்படுகிறன. அண்டார்டிகாவில் பாசிகள், பூஞ்சைகளுடன், சில பாக்டீரியாக்களும், 300 வகையான  பிரையோபைட்டுகளும், லைக்கன்கள் மட்டுமே சுமார் 800 வகைகளும், 300 பாசி இனங்களும் உள்ளன.

இரண்டு மீட்டர் உயரம் வரை வளரும் டுஸாக் (Tussock) புற்களை கொண்டிருக்கும் சிறு சிறு புல்வெளி திட்டுக்களும் இங்கு உண்டு. 

டுஸாக் புல்வெளி

  சிறு சிறு  கூட்டங்களாக வளரும்  இழைப்புல் வகையும், அண்டார்டிக் முத்துச்செடியும் அண்டார்ட்டிக் பிரதேசத்துக்கு சொந்தமானவை. Antarctic hair grass (Deschampsia antarctica) & Antarctic pearlwort (Colobanthus quitensis). 

அண்டார்டிக் முத்துச்செடி

இரு துருவப்பகுதிகளிலும்  பொதுவாக வளரும் தாவரங்கள்:

  • Acaena magellanica (Prickly burr (or burnet)) 
  • Acaena tenera (Lesser prickly burr) 
  • Acaena tenera x magellanica (Hybrid prickly burr) 
  • Callitriche antarctica (Antarctic water-starwort) 
  • Colobanthus quitensis (Antarctic pearlwort) 
  • Colobanthus sublatus (Emerald bog) 
  • Deschampsia antarctica (Antarctic hair grass) 
  • Hymenophyllum falklandicum (Falkland filmy-fern) 
  • Montia fontana (Water blinks) 
  • Poa annua (Annual meadow-grass)2006ல் கண்டுஇடிகபட்ட 2006 February 20 by Jon Shanklin
  • Poa flabellata (Tussac-grass) 
  • Ranunculus biternatus (Antarctic buttercup)
  • Rostkovia magellanica (Short rush)

துருவ தாவரங்கள் அந்த கடினமான சூழலுக்கேற்ற சில தகவமைப்புக்களை கொண்டிருப்பதாலேயே அங்கு தொடர்ந்து வாழ்வை தக்க வைத்துக் கொள்கின்றன

அவை அளவில் மிக சிறியவைகளாகவும், மிக மிக குறைந்த வேர் தொகுப்பையும் கொண்டிருப்பதனால், மிக மெல்லிய மண் படலத்தில் அவற்றால் வாழ முடிகிறது

நிலத்துக்கு வெகு அருகில் குட்டையாகவே  அவை வளர்வதால், காற்றின் வேகத்தில் சேதமடையாமல் தப்பிக்கும்

இலைகளிலும் தண்டுகளிலும் மெல்லிய ரோமங்களை கொண்டிருப்பதால் பனிக்காற்றிலிருந்து கூடுதல் பாதுகாப்பை அவை பெறுகின்றன

பனி பரப்பிற்கு அடியில் மறைந்து வாழ்வது, சூரிய ஒளி மலரின் மையத்துக்கு சென்று விடும்படி கிண்ணம் போன்ற மலரமைப்புக்களை கொண்டிருப்பது, சூரிய ஆற்றலை விரைவாக கிரகிக்கும்படி அடர் வண்ணங்களில் உடல் பாகங்களை கொண்டிருப்பது ஆகியவை இவற்றின் தகவமைப்புக்களில் முக்கியமானவையாகும்

 மேலும் பல தாவரங்கள் பல்லாண்டு வாழ்வதால் வெயில் காலத்தில் மட்டுமே பூத்து காய்த்து விட்டு  பனிக்காலத்தில் உறக்க நிலைக்கு சென்று விடுகின்றன.பெரும்பாலான தாவரங்கள் விதை உருவாக்கத்துக்கு ஆற்றலை வீணாக்காமல் பாலிலா இனப்பெருக்கத்தை  மெல்லிய சிறு வேர்க்கிழங்குகள் மூலம் செய்கின்றன.

தாவரங்களுடன் துருவ கலைமான்கள்,(ReinDeer), கஸ்தூரி எருதுகள்  (musk-oxen), ஓநாய்கள், துருவக்கரடிகள், (ஆர்க்டிக் பகுதியில்), முயல்கள் மற்றும் சில கொறித்துண்ணிகள் உள்ளிட்ட   48 வகையான விலங்குகள் துந்த்ரா காடுகளில் வாழ்கின்றன, சில பறவை இனங்களும்,பூச்சி இனங்களில் கருப்பு ஈ, மான் ஈ,கொசு,ஆகியவையும் உண்டு.  பென்குவின்களும், சீல்களும் அண்டார்டிக்காவில் வாழ்கின்றன,  

மில்லியன் கணக்கான மக்கள் ஆர்க்டிக்கில் வசிக்கின்றனர், ஆனால் 1959  உடன்படிக்கையால் அண்டார்டிகா கண்டம் அமைதி மற்றும் அறிவியலுக்கு மட்டுமே பயன்படுத்துவதற்கான இடமாக  பாதுகாக்கப்படுவதால் இங்கு நிரந்தர மக்கள் இல்லை.  இருப்பினும் பல ஆயிரம் விஞ்ஞானிகள் மற்றும் உதவி ஊழியர்கள் அவ்வப்போது ஆராய்ச்சிக்காக இப்பகுதியில் தற்காலிகமாக வசிக்கின்றனர். இந்தியாவின் தக்‌ஷிண் கங்கோத்ரி, மற்றும் மைத்ரி என்னும் இரு ஆய்வகங்கள் அங்கு அமைத்துள்ளன. பாரதி என்ற மூன்றாவது ஆய்வகத்தை சுமார் 140 கோடி செலவில் அமைக்க தற்போது முயற்சிகள் நடைபெற்று வருகிறது.அண்டார்டிக்காவின்  14,000,000 km2 பரப்பளவில் 2 சதவீதமே பனியால் மூடப்படாமல் இருக்கும். எனினும் அண்டார்டிகாவும் கூட காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு  உள்ளாகி இருக்கிறது.  ஆர்க்டிக் இதனினும்  கூடுதலாக, பாதிக்கப்பட்டுள்ளது.

தக்‌ஷிண் கங்கோத்ரி

கனிமச் சுரங்கப்பணி, திமிங்கல வேட்டை, அதிக மீன் பிடிப்பு, மாசு, ஓஸோன் அடுக்கு சேதம், ஓஸோன் ஓட்டை, பசுங்குடில் வாயு வெளியேற்றம், புவி வெப்பமடைதல் ஆகிய ஆபத்துக்களை துருவப்பகுதி யின் தாவரங்களும் விலங்குகளும்  சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இந்த ஆபத்துக்களால் பனிக்கரடிகள் மற்றும் பென்குவின்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து கொண்டிருக்கிறது

மைத்ரி

அண்டார்டிக்காவின் நிலப்பகுதி பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா டென்மார்க், பின்லாந்து மற்றும் நார்வே ஆகிய 6 நாடுகளுக்கு உரியதாக இருப்பதால் எந்த நாடு பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது என்று பல ஆண்டுகள் குழப்பம் நீடித்தது. 1961 அண்டார்க்டிக் உடன்படிக்கை (Antarctic Treaty System-1961) மற்றும் பல  சர்வதேச உடன்படிக்கைகளின் வழியே சட்டங்கள் இயற்றப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய நெறிமுறை பிற நாடுகளின் சட்டப்படி பின்பற்றப்பட்டு, ஜனவரி 14, 1998 அன்று அமலுக்கு வந்தது. அதன்படி அன்டார்க்டிக்கா வின் அனைத்து சுரங்கங்களும் தடைசெய்து, அண்டார்டிக்கா “சமாதானத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்ட இயற்கை பிரதேசம்” என்று அறிவிக்கப்பட்டது. இப்போது ஆய்வுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் வேகமாக நடக்கின்றன. 

அண்டார்டிகா

ஊனுண்ணித்தாவரங்கள்

மண்ணிலிருந்து நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை  வேர்களால் உறிஞ்சிக்கொண்டு, பச்சை இலைகளால் உணவை தயாரிக்கும், நகர முடியாத, செயலற்ற உயிரினங்களாக அறியப்படும் தாவரங்களில் ஊனுண்ணுபவையும் இருக்கின்றன என்பது ஆச்சர்யமான விஷயம்.   

ஊனுண்ணித் தாவரங்கள் எனப்படுபவையும் பிற தாவரங்களை போலவே இலைகளின் பச்சையத்தினால், சூரியஒளியை கொண்டு உணவை தயாரிப்பவைதான் ஆனால் இத்தாவரங்கள் வளரும்  வளமற்ற நிலங்களில் இல்லாத சத்துக்களை பெறுவதற்காகத்தான் அருகில் வரும் பூச்சிகளையும் சிறு விலங்குகளையும் இவை பொறிகளில் பிடித்து ஜீரணித்து சத்துக்களை எடுத்துக் கொள்கின்றன. இத்தாவரங்கள் ஆங்கிலத்தில் சுருக்கமாக CPs எனப்படுகின்றன. (Carnivorous plants). பிரிடிஷ் இயற்கையாளரும் பரிணாமவியலின் தந்தையுமான சார்லஸ் டார்வின்தான் 1875 ல் insectivorous plants என்னும் இத்தாவரங்களைக்குறித்த முதல் புத்தகத்தை எழுதினார்.

பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று வகையான ஊனுண்ணித் தாவரங்கள் ஓரிடத்தில் சேர்ந்து வாழும். உதாரணமாக சாரசீனியா, டுரோசீரா மற்றும் பிங்க்யூக்குலா ஆகியவை, மிக நெருக்கமாக அருகருகே வளரும்.

இத்தாவரங்கள்  ஈரமான ஒளி நிறைந்த வளம் குன்றிய இடங்களில் தான் வாழ்கின்றன. இவை  வளரும் இடங்களின் நிலத்தில் பெரும்பாலும் நைட்ரஜன் சத்து இருக்காது அல்லது   மிகக் குறைவாகவே இருக்கும்.

வெண்ணிற இலைக்குடுவைகளுடன் சாரசீனியா லியூகோஃபில்லா

விதிவிலக்காக ட்ரோஸோஃபில்லம் லுஸிடேனியகம் (Drosophyllum lusitanicum ) மட்டுமே போர்ச்சுக்கல் மற்றும் மொரோக்கோவின் கனிம வளம் நிறைந்த மலைப்பகுதிகளில் வளருகின்றன

Drosophyllum lusitanicum

ஊனுண்ணி தாவரங்களின் பிரத்யேக மூன்று இயல்புகளே இவற்றை பிற தாவரங்களிலிருந்து வேறு படுத்துகின்றன

அவை:

  1. அருகில் வரும் இரையை அவை தப்பிக்க இயலாத படி பிடித்துக் கொள்ளுதல்
  2. சிக்கிக்கொண்ட பூச்சிகளை ஜீரணிக்க சிறப்பான அமைப்புக்களும் , நொதிகளும் கொண்டிருத்தல்
  3. இரையின் உடலில் இருந்து அவற்றிற்குதேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளுதல் 

ஊன் உண்ணும் அல்லது பூச்சியுண்ணும் தாவரங்கள் தங்களது இலைகளை இரை வந்து மாட்டிக் கொள்ளும் பொறியாக மாற்றி அமைத்து .வண்டு, தேனீ போன்ற சிறு பூச்சிகளையும் சிலந்திகள், மெல்லுடலிகள் மற்றும் நீர்வாழ் சிறு உயிரிகள், எலிகள், தவளைகள், பல்லிகள், சிறு பறவைகள் ஆகியவற்றையும் உண்ணும். 

சில இலைப்பொறிகள் இரையை கவர்ந்திழுக்க பிரகாசமான தனித்துவமான நிறங்களுடன் இருக்கும், இன்னும் சிலவற்றில் இனிப்பு திரவம் சுரக்கும் சுரப்பிகள் இருக்கும், அடர்ந்த முடிகளை போன்ற மெல்லிழைகள், குடுவை போன்ற நீட்சிகள், ஒட்டிக்கொள்ளும் பசை நுனிகளுடனிருக்கும் மொட்டுக்கள், கூரான முட்களுடன் கூடிய கிளிப் போன்ற அமைப்புகள் என்று பலவிதமான பொறிகளை இவை கொண்டிருக்கும்.

1859ல் ஜாவா தீவுகளுக்கருகிலிருக்கும் போர்மியோ தீவுகளில் மட்டும் காணப்படும் Nepenthes rajah கண்டுபிடிக்கபட்டது. இது ஒரு மிக அரிய வகை மிகப்பெரிய ஊனுண்ணித்தாவரமாகும். இதன் குடுவையில் 3 லிட்டர் வரை நொதிக்கும் திரவம் நிறைந்திருக்கும்.

Nepenthes rajah
நெபெந்தெஸ் ராஜா காணப்படும் போர்மியோ தீவுகள்

இலைகளை இரையை பிடிப்பதற்கு ஏதுவாக, தேவைகளுக்கேற்ற வடிவங்களிலும் அளவுகளிலும் இத்தாவரங்கள் மாற்றியமைத்துக் கொண்டிருக்கும். குடுவை தாவரங்கள் (Pitcher plants) இலையின் நுனியில் மூடிகளுடன் கூடிய ஆழமான குழிகள் உள்ள  குடுவைகளை கொண்டிருக்கும். குடுவையினுள் இரையாகும் பூச்சிகளை ஜீரணிக்கும் நொதிகளடங்கிய திரவம் நிரம்பியிருக்கும்.

பட்டர் வொர்ட் செடிகளின் (butterworts) இலைகளின் பரப்பெங்கும் ஒட்டிக்கொள்ளும் பிசுபிசுப்பான திரவம் இருக்கும்.   வீனஸ் பறக்கும் பொறி தாவரத்தில் இரண்டு பாகங்களாக இருக்கும் இலைகளின் ஓரத்தில் கூரிய முட்கள் இருக்கும் (Venus flytrap -Dionaea muscipula), சன் ட்யூக்களில் (sundews) சுரப்பிகளுடன் கூடிய மெல்லிழைகள் தாவர உடலெங்கும் நிறைந்திருக்கும், பிளேடர் வொர்ட்டில் (bladderwort) பைகளை போன்ற அமைப்பிருக்கும். லாப்ஸ்டர் குடுவை பொறித்தாவரமான  (Lobster-pot traps) ஜென்லிஸா பேரினங்களில் (genus Genlisea), மாட்டிக்கொண்ட் இரையை குடுவையின் ஆழத்திற்கு தள்ளிவிடும் கீழ்நோக்கி அமைந்திருக்கும் ஏராளமான் கூரிய முட்கள்  இருக்கும். 

Venus flytrap -Dionaea muscipula

மலேசியாவின் குரங்குதொப்பிசெடி எனப்படும் பெரும் நெஃபெந்தெஸ் செடிகளில் எலிகளும் பல்லிகளும் சுலபமாக சிக்கிக்கொள்ளும். கொலம்பியா மற்றும் பிரேசிலை சேர்ந்த ப்ரோச்சீனியாவின் (Brocchinia reducta) இளம் பச்சை இலைகளில் சிக்கிக்கொள்ளும் பூச்சிகளை அவை பாக்டீரியாக்களை கொண்டு ஜீரணிக்கின்றன.

Sarracenia alata

Darlingtonia மற்றும் Nepenthes போன்ற தாவரங்கள் சிக்கிக்கொண்ட இரையின் உடல் சத்துக்களை கிரகிக்க சில பாக்டீரியாக்களை சார்ந்திருக்கின்றன. சாரசீனியா அலாட்டாவில் (Sarracenia alata), ஒளிச்சேர்க்கைக்கெனவும் பூச்சிகளை பிடிப்பதற்கும் தனித்தனி இலைகள் ஒரே தாவரத்தில் அமைந்திருக்கும் 

விலங்குகளின் வயிற்றில் ஜீரணம் நடப்பது போலவே பாக்டீரியாக்களையும், நொதிகளையும் உபயோகித்து ஊனுண்ணித்தாவரங்கள் இரையை முற்றிலுமாக கரைத்து நைட்ரஜன் மற்றும் உப்புக்களாக சத்துக்களை எடுத்துக் கொள்கின்றன.

இவற்றில் மிக சிறிய டுரோசிராக்களிலிருந்து, கொடிகளாக வளரும்  நெஃபன்தஸை போல பெரிய தாவரங்களும் உள்ளன.

ஊனுண்ணித்தாவரங்கள் லெண்டிபுலேரியெசியே-(Lentibulariaceae), ட்ரொஸீரேசியே (Droseraceae.),  ட்ரோஸோஃபில்லேசியே (Drosophyllaceae), ஸெஃபலோட்டேசியே,(Cephalotaceae) சாரசினியேசியே (Sarraceniacea), நெபெந்தேசியே (Nepenthaceae), பைப்லிடேசியே (Byblidaceae), அன்னாசி பழத்தின் குடும்பமான புரோமீலியேசியே (Bromeliaceae) என இந்த ஊனுண்ணி தாவரங்கள் சார்ந்திருக்கும் குடும்பங்களும் ஒன்றுக்கொன்று எந்த தொடர்பும் உறவும் இல்லாதவை என்பதும் ஒரு புதிர்தான்

 

 இவற்றின் பொறிகளின் வடிவங்கள் பல வகைப்படும். பாம்பின் படம் போலிருக்கும் நாக அல்லி, (Cobra lily), சக்கரம் போலிருக்கும்   Water wheel ஆகியவற்றுடன் ஸ்பெயின், மொராக்கோ மற்றும் போர்ச்சுக்கலில்  இலைகளிலிருந்து நல்ல நறுமணத்தை பரப்பி பூச்சிகளை கவர்ந்திழுக்கும் பனிப்பைன் போன்ற (dewy pine) ஊசியிலை தாவரங்களும் உள்ளன.

பனிப்பைன்

இவற்றின் வாழிடங்கள் பொதுவாக சேற்றுப்பரப்பு மற்றும் சதுப்பு நிலங்கள், அட்ரிகுலேரியா (Utricularia) மற்றும் ஆல்ட்ரோவாண்டா (Aldrovanda)  இவையிரண்டும் நன்னீர் வாழிடங்களின் ஊனுண்ணித்தாவரங்களாகும்.

இத்தாவரங்கள் பூச்சிகளை பிடித்து கொன்று உண்ணுவதை கண்களால் பார்க்க முடிவதால் இவற்றை ஊனுண்ணிகள் என அடையாளம் காணமுடிந்தது. எனினும் இவற்றின் பிரத்யேக செயற்பாடுகள் குறித்து முழுமையான அறிதல் தாவரவியலாளர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை, டார்வினின் காலத்திலிருந்தே இவற்றைக் குறித்து  ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இத்தனை ஆண்டுகளில் இத்தாவரங்களில் இரையை ஜீரணிக்க உதவும் பலநூறு நொதிகளில் (Enzymes) Nepenthesin என்னும் ஒரே ஒரு நொதிதான் இனங்காணப்பட்டுள்ளது.

உலக நாடுகள் எல்லாவற்றிலும் காணப்படும் 600க்கும் மேற்பட்ட இந்த ஊனுண்ணித் தாவரங்கள் அண்டார்டிகா மற்றும் பசிபிக் தீவுகளில் மட்டும் இல்லை. 

பூச்சிகளை பிடிக்கும் எல்லா தாவரங்களும் ஊனுண்ணிகளல்ல. அரிஸ்டலோக்கியாவை (Aristolochia) போல சில தாவரங்கள் மகரந்த சேர்க்கைக்காக  பூச்சிகளை கவர்ந்து அவற்றை  தாவரங்களின் பாகங்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்யும். இவை ஊனுண்ணித் தாவரங்கள் அல்ல .ஏனெனில் இவை பூச்சிகளை ஒருபோதும் கொல்லுவதில்லை. மேலும் ஊனுண்ணித் தாவரங்கள் எப்போதும் அவற்றின்  மலர்களை பொறிகளாக பயன்படுத்துவதில்லை. 

இதைப்போலவே மேய்ச்சல் விலங்குகளிடமிருந்தும், பூச்சிகள் இலைகளை  தாக்காதவண்ணம் பாதுகாத்துக்கொள்ளவும் இலைகளில் பிசினைசுரக்கும் தாவரங்களும் ஊனுண்ணித்தாவரங்களல்ல. அவை தங்களின் பாதுகாப்பிற்காக பிசினில் பூச்சிகளை சிக்க வைத்தாலும், அப்பூச்சிகளை கொன்று சீரணிப்பதில்லை. உதாரணமாக ஒட்டும் தன்மையுடைய இலைகளைக் கொண்டிருக்கும் ஐபிசெல்லா லூட்டியா ( Ibicella lutea), ப்ரொபோஸிடியா லூசியானிக்கா ( Proboscidea louisianica) மற்றும் ப்ரொபோஸிடியா பார்விஃப்ளோரா( P. parviflora) ஆகியவை ஊனுண்னிகளல்ல இவற்றின் ,இலைகளில் ஒட்டிக்கொள்ளும் பூச்சிகள் அப்படியே இறந்து உலர்ந்துவிடுகின்றன. இவைகளெல்லாம் pre carnivorous plants , அதாவது ஊனுண்னுவதற்கு முந்தைய நிலையிலிருப்பவையென்று கருதப்படுகின்றன. இவை காலப்போக்கில் ஊனுண்ணுபவைகளாக பரிணாம வளர்ச்சி அடையவும் வாய்ப்புள்ளது

பூச்சிகளை கொல்லும் நொதிகளை கொண்டிருக்காததால் பூச்சிகளை இலைகளில் பிடித்து மட்டும் வைத்துக்கொண்டு, சிக்கிய பூச்சிகளை உண்ண வரும் வண்டுகளின் கழிவுகளை உறிஞ்சி  அதிலிருக்கும் சத்துக்களை கிரகிக்கும் ரோரிடூலா (Roridula) எனப்படும் ஒரு தாவரம் விளிம்புநிலை ஊனுண்ணித்தாவரமென்று அழைக்கப்படுகிறது.(Marginal Carnivorous plant). இதுவும் மெல்ல மெல்ல முழுமையான ஊனுண்ணுபவைகளாக மாறக்கூடும்

ரோரிடூலா

இரைகள் கிடைக்காதபோது இவைகளும் பிற தாவரங்களைப் போல ஒளி சேர்க்கை செய்து மெதுவாக வளர்ந்து கொண்டுதான் இருக்கும், இரைகள் கிடைத்து அவற்றை ஜீரணித்து சத்துக்களை உறிஞ்சிய பின்னர் இவற்றின் வளர்ச்சி துரிதமாகும்.

உலக இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பான ‘’பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்’’ (International Union for Conservation of Nature – IUCN),   ஊனுண்னித்தாவரங்களில் 50 சதவீதம் அழியும் ஆபத்தில் இருப்பதாக சொல்கின்றது. 

சூழல் மாசுபாடு,  வாழிடங்கள் அழிந்து கொண்டு வருவது, மனிதர்களின் செயல்பாடு போன்ற பல காரணங்களுடன் வேறு சில பிரத்யேக காரணங்களாலும் இவை அழிந்து வருகின்றன,  பல ஊனுண்ணி தாவரங்கள் மிக மெதுவாக  வளர்வதால் தொடர்ந்து விழுந்துகொண்டே இருக்கும் இலைக் குப்பைகளால் மூழ்கடிக்கப்பட்டு அழிந்துவிடுகின்றன. பிங்யூக்குலா வேலிஸ்நீரிஃபோலியா   (Pinguicula vallisneriifolia) தாவரம் தனதருகில் மகரந்தசேர்க்கைக்கென வரும் பூச்சிகளையும் இரையென நினைத்து கொன்றுவிடுவதால் அழியும் அபாயத்தில் இருக்கிறது. இந்த தவறை செய்ய கூடாதென வீனஸ் பறக்கும் தாவரம் புத்திசாலித்தனமாக தனது மலர்களை இலைகளிலிருந்து வெகு உயரத்தில் தோற்றுவிக்கிறது,

பொறிகளிலிருந்து மிக உயரத்தில் மலர்களை தோற்றுவித்திருக்கும் வீனஸ் தாவரம்

அலபாமாவில் மட்டுமே வளரும் அரிய வகை ஊனுண்ணித்தாவரமாகிய சாரசீனியா (Sarracenia Rubra ssp. Alabamensis) மிக அழகிய மரூன் நிற மலர்களை தோற்றுவிக்கும் இவற்றினழகுக்காகவே இவற்றை தேடி தேடி சேகரிப்போரால் இவை இப்போது மிக குறைந்த  எண்ணிக்கையில் அழியும் ஆபத்தில் இருக்கிறது.

Sarracenia Rubra ssp. Alabamensis

இவற்றின் பிரத்யேக வாழிடங்களினாலும், வளர்ச்சிக்கு தேவைப்படும் சிறப்பான சத்துக்களினாலும் இவற்றை அழிவிலிருந்து பாதுகாப்பது கடினமாகி விட்டிருக்கிறது. எனினும் ஒருசில ஊனுண்ணித்தாவரங்களை தோட்டக்கலைத்துறையினர்  பசுமைக்குடில்களிலும், சிறப்பாக உருவக்கப்பட்ட வாழிடங்களிலும் வளர்க்கிறார்கள். வீனஸ் பறக்கும் பொறித்தாவரம் உள்ளிட்ட சில வகைகள் ஆன்லைன் வர்த்தகத்தில் விற்பனையாகின்றன.

கொல்லுதல், கொன்று தின்னுதல் என்னும் வார்த்தை பிரயோகங்களால் தாவரங்களை குறிப்பிடுவது பொருத்தமற்றதாக கூடத் தோன்றலாம் ஆனால் பலநூறு ஆண்டுகளாக சுய தேவைக்காக உள்நோக்கத்துடன் ஒரு உயிர் மற்றொரு உயிரை கொல்லுவதென்பது கொலைதான். ஆனால் டார்வின் சொல்லியிருப்பது போல எப்படியேனும் உயிர்பிழைக்க எந்த வழியையாவது கண்டுபிடிக்கும் போதுதான் உயிரினங்களில் பரிணாம்வளர்ச்சியென்பது உருவாகின்றது. தங்களுக்கு தேவையான சத்துக்களை ஒரே இடத்தில் இருந்தபடி பலவழிமுறைகளை மேற்கொண்டு நிறைவேற்றிக்கொள்ளும் இவற்றின் புத்திசாலித்தனத்தை பாராட்டவேண்டும் தானே!

மூன்று சகோதரிகள்

 நியூயார்க்கின் வடக்கு பகுதியில் வாழ்ந்த 6 இனக்குழுக்களின் ( Cayuga,Mohawk, Oneida,Onondaga,Seneca and  Tuscarora.) கூட்டான பழங்குடியமைப்பு   இரா குயிஸ் (Iroquois)  வேட்டையாடிகளும், விவசாயிகளுமான  மக்களை கொண்டது. இவர்களனைவருக்குமான பொதுவான சட்டங்களும் வரையறைகளும் உள்ளன.

இப்பழங்குடியினரின் தொன்மங்களிலொன்று  இரட்டை ஆண்குழந்தைகளின் மகப்பேறில் இறந்த ஆகாயதேவதையின் உடலிலிருந்து மகன்களுக்கு உணவளிக்கும் பொருட்டு முளைத்த மக்காச்சோளம், பீன்ஸ் மற்றும் ஸ்குவாஷ் செடிகள், பின்னர்  அம்மக்களனைவருக்கும் உணவளித்ததென்கிறது.

 இணைபிரியாத மூன்று சகோதரிகள் பற்றிய இம்மக்களின் மற்றொரு தொன்மம்    டியோ-ஹா-கோ (Deo-ha-ko) என்றழைக்கப்படும் இச்சகோதரிகள்  இம்மூன்று பயிர்களையும் காப்பதாக சொல்லுகின்றது.

மக்காச்சோளப் பயிர் பூமியில் விளைவிக்கப்பட்ட தானியப் பயிர்கள்களில் மிகப்பழமையானது.  பலவிதமான பழங்களை அளிக்கும் ஸ்குவாஷ் கொடியின் காய்களும் கனிகளும் பலநாட்களுக்கு சேமித்து வைக்கும் படியான கடினமான வெளித்தோலை கொண்டவை. கிமு 20 ஆம் நூற்றாண்டிலேயே மெசோ அமெரிக்கர்களால் பயிரிடப்பட்ட ஆரம்பகால பழக்கப்பட்ட பயிர்களில்  பீன்ஸ் செடியும் இருக்கிறது. புரதம் நிரம்பிய இதன் காய்களும் விதைகளும் இன்றுவரையிலும் உலகெங்கிலும் மிக முக்கியமான உணவு பொருளாக இருந்து வருகிறது,

இராகுயிஸ் மக்களே மூன்று சகோதரி பயிர்களென்னும் மக்காச்சோளம் பீன்ஸ் மற்றும் ஸ்குவாஷ் பழங்களை ஒன்றாக பயிரிடும் முறையை உருவாக்கியவர்கள். ஒன்றுக்கொன்று துணையாகவும், பயனுள்ளதாகவும் இவை மூன்றும் இருந்ததால் இவை சகோதரி பயிர்கள் என அவர்களால் அழைக்கப்பட்டன. இப்பயிரிடும் முறையை பிற பழங்குடி இனங்களும் கற்றுக்கொண்டு இம்முறையை பரவலாக்கினர்

பீன்ஸ் பயிர்கள் தென்அமெரிக்காவிலும்,மத்திய அமெரிக்காவில் ஸ்குவாஷ் பயிர்களும் ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றின. இவற்றிற்கு ஆயிரமாண்டுகளுக்கு பின்பே மக்காச்சோள பயிர் உருவானது என்பதால் இம்மூன்றும் எப்போதிலிருந்து ஒன்றாக பயிரிடப்பட்டன என்று துல்லியமான கணக்குகள் கிடைக்கவில்லை. எனினும் தொல்லியல் ஆதாரங்கள் இம்மூன்று பயிர்களும் சுமார் 3500 வருடங்களுக்கு  முன்பிருந்து துணை பயிர்களாக விளைவிக்கப்பட்டதற்கான  சான்றுகளை அளிக்கிறது.

பீன்ஸ் கொடி பற்றி படர மக்காச்சோள செடி  தனது உயர்ந்து வளரும் தண்டுகளை அளிக்கிறது, பீன்ஸ் கொடி தனது வேர் முடிச்சுக்களில் இருக்கும் பாக்டீரியாக்களால் நிலத்தின் நைட்ரஜன் சத்தை அதிகரிக்கிறது, பூசணிக்காய் குடும்பத்தை சேர்ந்த ஸ்குவாஷ் செடி நிலத்தில் பரவிப் படர்ந்து தனது அகலமான இலைகளால் நிலத்தை மூடி, ஈரத்தை வேர்களுக்கடியில் சேமித்து, களைகள் முளைக்கா வண்ணம் செய்கிறது.

30 செமீ உயரமும் 50 செமீ அகலமமும் கொண்ட தட்டையாக்கப்பட்ட மண் மேடுகளின் நடுவில்  ஏராளமான மக்காச்சோள விதைகள் விதைக்கப்பட்டு அவற்றிற்கு உரமாக மீன்களும் புதைக்கப்படுகின்றன. 15 செமீ உயரத்துக்கு மக்காச்சோள பயிர்கள் வளர்ந்ததும் அவற்றின் அடியில் பீன்ஸ் மற்றும் ஸ்குவாஷ் பயிர்களின் விதைகள் அடுத்தடுத்து விதைக்கபட்டு கொத்துக்கொத்தாக இம்மூன்று பயிர்களும் வளர்க்கப்படுகின்றன. இப்பயிரிடும் முறை பல்லாயிரக்கணக்கான வருடங்களாக எந்த மாற்றமுமின்றி  பின்பற்றப்படுவருகின்றது

வடஅமெரிக்காவின் வறட்சியான பகுதிகளில் மட்டும் நான்காவது சகோதரியாக ஸ்குவாஷ் மற்றும் பீன்ஸ் பயிர்களில் மகரந்த சேர்க்கை செய்யும் வண்டுகளை கவரும் மலர்கள் கொண்ட செடியான  Cleome serrulata வையும் பயிரிடுகிறார்கள். சிலநாடுகளில்  மூன்று சகோதரிப்பயிர்களுடன் , தோட்டத்தின் வடக்குப் பகுதியில் இச்செடிகளுக்கு நிழல் தராதவாறு சூரியகாந்தி செடிகளும் வளர்க்கப்படுகிறது.

Cleome serrulata

மக்காச்சோளம் வளருகையில் மண்ணின் நைட்ரஜன் சத்தை முழுவதுமாக உறிஞ்சி கொண்டுவிடும். மண்ணில் குறையும் நைட்ரஜனை பீன்ஸ் பயிர் மீண்டும் கொண்டு வரும், மண்ணில் இருக்கும் ஈரம் காய்ந்துவிடாமல்  தனது அகலமான் இலைளால் காபந்து செய்து  கூடவே வளரும் ஸ்குவாஷ் செடிகள் மக்காச்சோளம் உண்டாக்கும் மண் அரிப்பையும் தடுக்கின்றன. பயிர் சுழற்சியால் மட்டுமே சாத்தியமாகும்  இழந்த சத்துக்களை, மண்ணில் மீண்டும் நிறைக்கும் முறையை, பயிர் சுழற்சி இல்லாமலேயே மூன்று சகோதரி பயிர்கள் கொடுக்கின்றன

கூட்டு பயிரிடும் முறையான இது இன்றளவும் உலக நாடுகள் பலவற்றில் சிறு விவசாயிகள் பின்பற்றும் வெற்றிகரமான ஒரு விவசாய முறையாக இருக்கிறது. அமெரிக்காவில் மிக பரவலாக இருக்கும் இம்முறையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு மூன்று சகோதரி பயிர்களின் சித்திரம் செதுக்கப்பட்டிருக்கும் அமெரிக்க  நாணயமொன்று 2009 ல் வெளியிடப்பட்டது.

அமெரிக்க பழங்குடியினரின் விவசாய முறையான இதிலிருந்து கிடைக்கும் மூன்று விளைபொருட்களில் மக்காச்சோளத்தில் இருந்து ஸ்டார்ச்சும், பீன்ஸில் இரருந்து புரதமும், ஸ்குவாஷ் பழங்களிலிருந்து வைட்டமின்களும் கிடைப்பதால் சரிவிகித உணவினால் உடலாரோக்கியமும் இக்கூட்டு விவசாயமுறையினால் மண்வளமும் மேம்படுகிறது. அமெரிக்க பழங்குடியினரின் இந்த முறைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்றும் அமெரிக்காவின் நன்றி தெரிவிக்கும் நாளில்  தயாரிக்கப்படும் சிறப்பான உணவுகளில் இம்மூன்று விளைபொருட்களும் கலந்து இருக்கும்.

நஞ்சை வாயிலே கொணர்ந்து! .’

அந்த சிறையறையில் கூடியிருந்தவர்கள் அனைவரும் மெளனமாகவும் துக்கத்தை கட்டுப்படுத்தியபடியும் இருந்தனர். அப்போதுதான் குளித்து விட்டு புத்துணர்வுடன் வந்த, இன்னும் சற்று நேரத்தில் விஷமருந்தி இறக்கப்போகும் அந்த மரணதண்டனைக் கைதி மட்டும் முகமலர்ச்சியுடன்  இருந்தார்.

சிறைக்காவலரின் ஆணை கிடைத்ததும். அன்றைய கொலைத்தண்டனையின் உதவியாளனாக இருந்த அடிமை சிறுவன் உள்ளே சென்று  விஷமளிக்கும் பணியாளரை அழைத்துவந்தான். கைதி அவரை நேராக நிமிர்ந்துபார்த்து ‘’ நான் இப்போது என்ன செய்யவேண்டும்‘’ என  எந்த தயக்கமும் பதட்டமுமின்றி கேட்டார். கையிலிருந்த விஷக்கோப்பையை காட்டி ‘’இதை  முழுவதுமாக அருந்திவிட்டு மெல்ல நடந்துகொண்டிருங்கள், கால்கள் கனக்க துவங்கியதும் அமர்ந்துகொள்ளலாம்’’ என்று அவர் பதிலளித்தார்.

எந்த மாறுபாடும் இல்லாத அதே மலர்ந்த முகத்துடன் ‘’நான் இதை அருந்தும் முன்பு ஏதேனும் சொல்லலாமா அதற்கு அனுமதியுண்டா’’ என்று கைதி கேட்டபோது. ’’தேவையான நேரத்தை எடுத்து கொள்ளுங்கள்’’ என்று பதில் வந்தது,

கோப்பையை கையில் எடுத்துக்கொண்டு ‘’இப்பூமியில் இருந்த மகிழ்ச்சி கல்லறைக்கப்பாலும் தொடரட்டும் என்று வேண்டிக்கொள்ளுவோம் இதுவே என் பிரார்த்தனை இது நிறைவேறட்டும்’’ என்றவர் எந்த தயக்கமுமின்றி கோப்பையிலிருந்த ஹெம்லாக் நச்சுத்தாவரத்தின் சாறான அந்த விஷத்தை அருந்தினார்

அதுவரையிலும் கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டிருந்த அவரது நண்பர்களும் மாணவர்களும் அவர் கடைசித்துளி விஷத்தையும் அருந்தி முடித்தபோது கட்டுப்பாடுகளை  இழந்து கதறி அழத்துவங்கினர்

ஒருசிலர் அழுதபடி அந்த அறையிலிருந்து வெளியேறினர், இன்னும் சிலர் முகத்தை துணியினால் மறைத்தபடி அத்தனை நல்ல மனிதரை என்றென்றைக்குமாக இழந்துவிடப் போவதை எண்ணி மீண்டும் மீண்டும் விம்மி  அழத்துவங்கினர்.  

’’என்ன இது, ஏன் இப்படி கண்ணீர் விடுகிறீர்கள்?  இப்படி நடக்கக்கூடாதென்றுதான் பெண்களை முன்பே வெளியேறச் சொன்னேன் இப்போது நீங்களும் அழுதால் எப்படி?. மரணமென்பது அமைதியாக அல்லவா நிகழவேண்டும்? என்று அவர் சொன்னதும். அருகிலிருந்த அனைவரும் தங்களை சமநிலைப்படுத்திக்கொண்டு அமைதியானார்கள்.

அந்த அறையிலேயே மெல்ல நடந்துகொண்டிருந்தவர், கால்கள் கனத்து, குளிரத் துவங்கியதும்  அங்கிருந்த பீட்த்தில் அமர்ந்தார்.  தனது முகத்தை ஒரு துணியால் மறைத்துக்கொண்ட அவரை உதவியாள், முதுகை சாய்த்து மல்லாந்து படுக்க உதவினான்.

 அவரது பாதங்களை தொட்டும் தேய்த்தும் அந்த தொடுகையை உணர முடிகின்றதா என உதவியாள் கேட்டபோது இல்லையென பதிலளித்தார். பின்னர் கணுக்காலுக்கு மேலே ஆடுசதையை மெல்ல கிள்ளியபோதும் அதை உணரமுடியவில்லை என்றவரின் முழங்காலுக்கு மேலும் குளிர துவங்கியதும் ’’இனி விஷம் நேராக இதயத்துக்கு சொன்று விடும்’’ என்றான்  அந்த அடிமை சிறுவன்.

 கை மணிக்கட்டுகளும் குளிர்ந்து விரைக்க துவங்கியபோது தன் முகத்தை மறைத்திருந்த துணியை விலக்கி ’’கிரிட்டோ, நான் அஸ்கிலிபியஸுக்கு ஒரு சேவலை நேர்ந்து கொண்டிருக்கிறேன், அதை மறக்காமல் நிறைவேற்றிவிடுகிறாயா’’  என்றார். ‘’நிச்சயம் செய்துவிடுகிறென் வேறு எதாவது சொல்ல வேண்டுமா’’ என்ற அவரது மாணவன் கிரிட்டோ கேட்ட கேள்விக்கு முழுவதும் குளிர்ந்துவிட்ட அவரிடமிருந்து பதில் வரவில்லை ,கண்கள் நிலைத்துவிட்டிருந்த்து. 

 கிரிட்டொ  அவரது வாயையும் கண்களையும் மெல்ல மூடினான். அத்துடன்  முடிந்தது ஆகச்சிறந்த மெய்யியலாளரும், மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்ந்தவரும், பகுத்தறிவாளருமான  சாக்ரடிஸின் வாழ்வு.

சாக்ரட்டிஸ் மரண தண்டனை பெற்று நஞ்சருந்தி சாகும் தறுவாயில், நடந்த நிகழ்வுகளை அப்போது உடன் இருந்த அவரது நண்பனும் மாணவனுமாகிய பீடோ உரையாடல்கள் மூலம்  எக்கிகிரேட்டஸ் என்பவருக்கு விளக்குவது போல பிளேட்டோவால் எழுதப்பட்ட நூலான ’பீடோ’வில் இவையனைத்தும் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.  ஹென்றி அரிஸ்டிபஸ் என்பவரால் 1160’ல் கிரேக்க மொழியிலிருந்து இலத்தின் மொழியிலும்,  பின்னர் ஆங்கிலம் உள்ளிட்ட உலகின் பல முக்கிய மொழிகளிலும் பலரால் மொழிபெயர்க்கப்பட்ட  இந்நூல் சாக்ரட்டீசின் மாணவர் பிளேட்டோவின் பெரும் படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.

சிறுவனாக இருந்தபோதிலிருந்தே கேள்விகள் கேட்பதை வழக்கமாக கொண்டிருந்த சாக்ரட்டிஸினால் கேள்விகள் வழியாகவே பிறரின் சிந்தனைகளை தூண்டிவிடும் ’’சாக்ரட்டிஸ்  தத்துவ முறை’’ உருவாகி இருந்தது.   அவரது மரணத்துக்கு பிறகும் அவரது உடலைப் புதைப்பதா எரிப்பதா?, இறந்த பிறகு உயிரின் நிலை என்ன? எங்கு போகும்? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

சாக்ரட்டீஸ்   (Socrates) (கி.மு 470/469 – கி.மு 399, பிப்ரவரி 15)   பண்டைய கிரேக்கத்தின் ஏதென்ஸில் பிறந்த ஒரு அறிஞர், ஆசிரியர் மற்றும் மெய்யியலாளர். 469 அல்லது 470 இவற்றில் எந்த ஆண்டு இவர் பிறந்தார் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள்  கிடைக்கப்பெறவில்லை கேள்விகளை கேட்டு சிந்தனையை தூண்டும்  அவரது சாக்ரட்டிஸ் முறையானது, தர்க்கம் மற்றும் தத்துவத்தின் மேற்கத்திய அமைப்புகளுக்கு அடித்தளமாக அமைந்தது. மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளரும் இவரே..

 சிற்பியான சோப்ரோனிஸ்கஸுக்கும் மருத்துவச்சியான ஃபீனாரீட்டேவுக்கும்  பிறந்த சாக்ரடீஸ், அடிப்படை கிரேக்கக் கல்வியைப் பெற்ற பின்பு இளம் வயதிலேயே தனது தந்தையின் தொழிலை  கற்றுக்கொண்டார்.  தனது வாழ்க்கையை தத்துவத்திற்கு அர்ப்பணிப்பதற்கு முன்பு பல ஆண்டுகள் சிற்பியாகவும் பணியாற்றினார்..

 சாக்ரடீஸ்க்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மிர்ட்டோவின் மூலம் இரண்டு மகன்கள். மிர்ட்டோவின்  மரணத்துக்குப் பிறகு அவரைக்காட்டிலும் மிக இளையவரான ஸாந்திப்பி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். ஸாந்திப்பிக்கு பிறந்த மற்றொரு மகனுமாய் லாம்ப்ரோக்கிள்ஸ், சோஃப்ரோனிஸ்கஸ் மற்றும் மெனெக்செனஸ் (Lamprocles, Sophroniscus , Menexenus) ஆகிய மூன்று மகன்களுக்கு தந்தையான சாக்ரட்டிஸுக்கு .குடும்ப வாழ்வில் அக்கறை  காட்டுவதை விட ஏதெனிய இளைஞர்களை நல்வழிப்படுத்துவதே முதன்மையாக  இருந்திருக்கிறது. இதனால் கணவர் மீது ஸாந்திப்பிக்கு மனக்குறை இருந்திருக்கிறது.

ஸாந்திப்பியுடன் சாக்ரட்டிஸ்

 ஏதென்ஸின் ஆண்கள் 18 லிருந்து 60 வயதுக்குள் எப்போது அழைத்தாலும் ராணுவத்தில் பணிபுரியவேண்டும் என்னும் சட்டமிருந்தது. சாக்ரடிஸும் முகமூடி அணிந்த கவச காலாட்படையான ஹாப்லிட்’ல் (hoplite) ல் பணிபுரிந்தார் 

Hoplite

பண்டைய கிரேக்கத்தில் மிகப்பெரிய ஆட்சிமாற்றத்தை கொண்டு வந்த ஏதென்ஸுக்கும் ஸ்பார்ட்டாவிற்கும் கிமு 431-405 வரை நடைபெற்ற பெலொபோனிஷிய போரில் ஈடுபட்டிருந்தபோது சாக்ரட்டிஸ், அல்சிபயடீஸ் என்னும் புகழ்பெற்ற  ஏதெனிய தளவபதியின் உயிரை போர்க்களத்தில்  காப்பாற்றினார் 

முடிந்தவரை அரசியல் ஈடுபாட்டைத் தவிர்த்துவந்த சாக்ரட்டிஸ், பெலொபோனிஷியப் போரின் முடிவைத் தொடர்ந்து  இருதரப்பிலிருந்தும் நண்பர்களை தேடிக்கொண்டார். கிமு 406’ல்  பண்டைய கிரேக்க ஜனநாயகமான டெமோக்ரேஷியாவின் (Demokratia) மூன்று கிளைகளில் ஒன்றான, எக்லீசியா சட்டமன்றத்தில் பணியாற்றும்படி  (Ekklesia) சாக்ரடிஸுக்கு அழைப்பு வந்தது.

அவர் அங்கு பணியாற்றுகையில், ஸ்பார்டாவிற்கு எதிரான போரில் இறந்தவர்களை மீட்கத் தவறியதற்காக ஏதென்ஸின் உயர்மட்ட ஜெனரல்களின் குழுவை குற்றம் சாட்டும் ஒரு சட்டவிரோத முன்மொழிவுக்கு சாக்ரடீஸ் தனி ஒருவராக எதிர்ப்பு தெரிவித்தார். எனினும் சாக்ரடீஸின் சட்டமன்ற சேவை முடிந்ததும் அந்த தளபதிகள் தூக்கிலிடப்பட்டனர்.

 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு,  ஏதெனியன் அரசு சாக்ரடீஸை  ’’குற்றத்தின் நிழல் கூட படிந்திருக்காத ’’ என்று பிளேட்டோவால் குறிப்பிடப்பட்ட மிக முக்கிய பிரமுகரும், நேர்மையாளருமான லியோனின் கைது மற்றும் மரணதண்டனையில் பங்கேற்குமாறு கட்டளையிட்டபோது, ​​அவர் மறுத்துவிட்டார் இதன் பொருட்டு அவருக்கு அரசின் கட்டளைகளை அவமரியாதை செய்த குற்றம் சுமத்தப்பட்டது. எனினும் சாக்ரடீஸைத் தண்டிப்பதற்கு முன்னர் கொடுங்கோலர்கள் அதிகாரத்திலிருந்து இறங்கினர்,

தத்துவ சிந்தனைகளில் தீவிரமாக ஆழ்ந்த சாக்ரட்டிஸ் பலருடன் கலந்து உரையாட துவங்கினார். ஏதென்ஸின் மூலை முடுக்குகளிலும் தெருக்களிலும் அவரது உரைகளை கேட்கவும் விவாதங்களில் பங்கேற்கவுமாக எப்போதும்  இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருந்தது. நண்பரும் நாடக ஆசிரியருமான அரிஸ்டோஃபேனியஸின் முகில் என்னும் நாடகமொன்றில் கோமாளி வேடமிட்டு  வேடிககை பேச்சுக்களை போலவே உயர்ந்த தத்துவங்களை கூறிய சாக்ரட்டிஸ்  மேலும்  புகழ்பெற்று பரவலாக அறியப்பட்டார். சாக்ரடீஸ் தினம்தோறும் இளைஞர்களிடம் உரையாடியது ஏதென்ஸ் ஆட்சியாளர்களை கோபப்படுத்தியது.

ஏதெனிய இளைஞர்களுடன் சாக்ரட்டிஸ்

399’அம் ஆண்டில் ஏதெனிய கடவுள்களை மதிக்கத் தவறியதற்காகவும், ஓரினச்சேர்க்கையாளரென்றும், இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதாகவும், இளைஞர்கள் மனதை கலைத்து, அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் 70 வயதாயிருந்த சாக்ரடீஸ் மீது அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணையின் பின்னால் அரசியல் சூழ்ச்சிகள் இருந்ததாக  பெரும்பாலான  வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.

நீதிமன்றம்

 இந்த வழக்கு ஏதென்ஸின் மையப்பகுதியில் நடந்தது, பார்வையாளர்கள் கூடியிருந்த  அக்கூடத்தில் நீதிபதிகள். சாக்ரடீஸை குற்றம்சாட்டிய அம்மூவருக்கும்  தங்கள் வழக்கை முன்வைக்க மூன்று மணிநேரம் ஒதுக்கினார்கள், அதன் பிறகு, சாக்ரட்டிஸ் தனது தரப்பினை விளக்கவும் மூன்று மணிநேரம் அளிக்கபட்டது. கிரேக்க நீதி மன்றங்களில் நேரக்கணக்கு நீர்க்கடிகாரங்களின் மூல்ம் கணக்கிடபப்ட்டது

நீர்க்கடிகாரம்

 அவர் மீது குற்றம் சாட்டியவர்கள் குற்றவாளிக்கு மரண தண்டனை அளிக்கும்படி  வாதிட்டனர். சாக்ரடீஸுக்கு தனது தரப்பை சொல்ல வாய்ப்பு வழங்கப்பட்டபோது, தனக்கு தண்டனை அளிப்பதற்கு பதில் தனது  செயல்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டும் என்ற கிண்டலான பரிந்துரையை வழங்கினார்.  சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலையே ஊட்டியது.  இருதரப்பு வாதங்களையும் கேட்டபின், நீதிக்குழுவினரிடம்  அவரது குற்றத்தின் பேரில் வாக்களிக்குமாறு கேட்கப்பட்டது.

மரணம், மன்னிப்பு என்ற இரண்டு பெட்டிகளில் வட்டுக்களை செலுத்தி வாக்களிக்கும் முறையில் நீதிக் குழுவின் 501 ஆண்களில் 220 பேர் சாக்ரடீஸை மன்னித்து விடுமாறும், 281 பேர் மரண தண்டனை அளிக்கவும் வாக்களித்தனர்.  குற்றம்சாட்டியவர்களும் சாக்ரடிஸும் அவரவர் தரப்பை தொகுத்து முன்வைத்த இறுதிக்கட்ட விசாரணையின்போது சாக்ரட்டிஸ் தனக்கு அபராதம் விதிக்கும்படியும், எதிர்தரப்பினர் மீண்டும் மரணதண்டனையையும் பரிந்துரைத்தனர். மீண்டும் வாக்கெடுப்பு நடத்தபட்டபோது, 300 வாக்குகள் மரணதண்டனையையும் 140 வாக்குகள் அபராதத்தையும் முன்மொழிந்ததால்,  குற்றவாளி என்று தீர்ப்பளிக்கபட்ட சாக்ரடீஸுக்கு நச்சு ஹெம்லாக் சாற்றை குடித்து இறக்கும்  மரணதண்டனையை அந்நீதிமன்றம் பரிந்துரைத்தது.

வாக்களிக்க பயன்படுத்தப்படும் வட்டுக்கள்

டிலோஸ் என்னுமிடத்தில் ஏதென்ஸின் தெய்வங்களுக்கு திருவிழா நடந்துகொண்டிருந்த நேரத்தில்தான் இந்த மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழாவில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளின் தொடர்ச்சியாகத்தான் பின்னாளில் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது. பூசைக்குரிய புனிதப் பொருட்களுடன் ஏதென்ஸில் கிளம்பியிருந்த கப்பல் டிலோஸ் சென்று திரும்பி வரும் ஒரு மாத நோன்புக் காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் வழக்கம் இல்லாததால் மரணம் ஒரு மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டு, சாக்ரடீஸ் அருகிலுள்ள சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்,.

சாக்ரட்டிஸ் இருந்த சிறை

 அந்த சமயத்தில் அவரது நண்பர்கள் சாக்ரட்டிஸை  ஏதென்ஸிலிருந்து தப்பிக்கவைக்க   காவலர்களுக்கு லஞ்சம் கொடுக்கவும் முயன்றார்கள் ஆனால் தான்  அரசின் இந்த தீர்ப்பை மதிப்பதாகவும் இறுதிவரை சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகனாகவே இருக்க போவதாகவும் கூறிய  சாக்ரட்டீஸ் அதற்கு உடன்படவில்லை. தனது கடைசி நாட்களிலும் அவரது உடல்மொழியிலும் நடவடிக்கைகளிலும், பேச்சிலும் எந்த அச்சமும் கலவரமும், கவலையும் இல்லாமல் இயல்பாகவும் மகிழ்வுடனும் அவர் இருந்ததாக  பிளேட்டோ கூறுகிறார்.

பிளேட்டோ தனது  Apology of Socrates * நூலில்  விசாரணையின் போது தனது நற்பண்புகளையும், தான் குற்றமற்றவரென்பதையும் உணர்வுபூர்வமாக   நடுவர் மன்றத்தின் முன் விவரித்த சாக்ரட்டீஸ், இறுதியில் அவர்களின் தீர்ப்பை அமைதியாக ஏற்றுக்கொண்டதை குறிப்பிடுகிறார். இந்த விசாரணையின் போதுதான். சாக்ரடீஸ் இப்போது புகழ்பெற்றிருக்கும் சொற்றொடரான “ஆய்வு செய்யப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது” என்று கூறினார்

 ஏதென்ஸ் அரசியலில் பழைய கணக்குகளை தீர்க்கவும், தனிமனித மேம்பாட்டுக்கும், கைதிகளை கொல்லவும், தற்கொலைக்கும் அப்போது ஹெம்லாக் நஞ்சே பயன்படுத்தபட்டது.  கேரட் குடும்பமான ஏபியேசியேவை சேர்ந்த ஹெம்லாக்கின்  தாவர அறிவியல் பெயர் கோனியம் மேகுலாட்டம். (Common Hemlock; Conium maculatum). கோனியம் எனும் சொல்லுக்கு கிரேக்க மொழியில் தலைசுற்றல் என்று பொருள் இந்த செடியின் நஞ்சு உடலில் தோற்றுவிக்கும் விளைவுகளில் பிரதானமானதை  இது குறிப்பிடுகின்றது மேகுலாட்டம் என்பது புள்ளிகள் என்ற பொருளில் செடியின் மீதுள்ள ஊதா புள்ளிகளை குறிப்பிடுகிறது.

நச்சு ஹெம்லாக் என்று அழைக்கப்படும் இத்தாவரம்  வளர்ந்த இரண்டாம் வருடம் மலர்களை கொடுக்கும் பையென்னியல்  (Biennial)   வகையை சேர்ந்தது முதல் வருடத்தில்   கொத்துமல்லியை போல் இருக்கும் இலைகள் மட்டுமே செழித்து வளரும், சதைப்பற்றான வேர்கள் பழுப்பு நிறத்தில் கேரட் வடிவில் இருக்கும். .உள்ளே வெற்றிடமாக இருக்கும் தண்டுகளின் மேல் சிவப்பு கலந்த ஊதா நிறத்தில் புள்ளிகளும், தீற்றல்களும் காணப்படும். அந்த ஊதாநிறமே இச்செடியின் நச்சுத்தன்மையை சொல்லுவது போலிருக்கும்

 இரண்டிலிருந்து மூன்று மீட்டர் உயரம் வரை வளரும் இச்செடியின்  தட்டையான குடை போலிருக்கும் மஞ்சரியில் சிறு வெண் மலர்கள் செறிந்திருக்கும்.  ஒவ்வொரு செடியும், கடும் நஞ்சுள்ள  நுண்விதைகளை ஏராளமாக உருவாக்கும் .

ஹெம்லாக் செடி

 மத்திய தரைக்கடல் பகுதியில் தோன்றிய, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் நியூசிலாந்தில்  பரவியிருக்கும் இச்செடி நீர்நிலைகளின் அருகிலும் சாலையோரங்களிலும் ,தரிசு நிலங்களிலும் சாதாரணமாக காணப்படும். இது மனிதர்களுக்கு மட்டுமல்லாது விலங்குகளுக்கும் நஞ்சு.

எல்லா பாகங்களிலும் நஞ்சு நிறைந்திருக்கும்  இந்த தாவரத்தின்  எட்டு முக்கியமான ஆல்கலாய்டுகளில்  கொனைன், சி-கொனிசைன், கொன்ஹைட்ரைன், சூடோகொன்ஹைட்ரின் மற்றும் என்-மெத்தில் கொனைன் ஆகிய ஐந்தும் மிகவும் நச்சுத்தன்மை கொண்டவை. (coniine, c-coniceine, conhydrine, psuedoconhydrine and N-methylconiine.). புகையிலையின் நிகோட்டினுக்கு இணையான வேதிக்கட்டமைப்பை கொண்டிருக்கும் கொடிய நஞ்சான  கொனைன் மிகச்சிறிய அளவிலேயே மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி, சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில்   மூச்சுதிணறலில் மரணத்தை உண்டாக்கும் .

இவை வளரும் நாடுகளில் மிகச் சாதாரண   களைச்செடிகளைப்போலவே காணப்படும் இவற்றை குறித்த அடிப்படை அறிதலாவது இருப்பது அவசியம். இலைகள் கசக்கப்படுகையில், ஒவ்வாமை அளிக்கும் நாற்றம் உண்டாகும். இவற்றை  தொட்டாலோ, இதன் மகரந்ததுகள்களை நுகர்ந்தாலோ, இதன் வாசனையோ  முகர்ந்தாலோ எந்த கெடுதலும் ஏற்படுவதில்லை. இவை கேரட் அல்லது பார்ஸ்லி என்று தவறாக அடையாளம் காணப்பட்டு உணவாக எடுத்துக்கொள்ளும் அசந்தர்ப்பங்களில் தான் ஆபத்தாகின்றது.

நீர் ஹெம்லாக் எனப்படும் மற்றோரு தாவர இனமான சிகுட்டா தாவரங்கள்  (water hemlocks-Cicuta species) நச்சு ஹெம்லாக்கை போலவே இருந்தாலும் அவற்றின் இலைநரம்பமைப்பை கொண்டு அவற்றை வேறுபடுத்தலாம் நீர் ஹெம்லாக்குகளும் நஞ்சு நிறைந்தவையே. 

 சாக்ரட்டிஸ் நஞ்சூட்டி கொல்லப்பட்ட நிகழ்வு  வரலாற்று ஆய்வாளர்களுக்கு எத்தனை முக்கியமானதோ, அதற்கு இணையாக  இது மருத்துவ உலகிலும் சர்ச்சைக்குரியதாவே இருக்கின்றது

சாக்ரடிஸுக்கு அளிக்கபட்ட நஞ்சு ஹெம்லாக் தாவரத்தின் சாறு அல்லது அதன் இலைகளை காய்ச்சி எடுத்த பானமென்றுதான் பிளேட்டோவின்  நூலிலிஉர்ந்து அறிந்துகொள்ள முடிகின்றது. பீடோ  நூலில்  சாக்ரட்டிஸின் மரணத்தருவாயை பற்றிய விளக்கங்களில் முதலில் அவரின் கால்கள் கனத்து, விரைத்து, குளிர்ந்துபோவதும், பின்னர் உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து தசை செயலிழப்பு மேல் நோக்கி செல்வதுமாக, மிகச்சரியாக  ஹெம்லாக்  நஞ்சின் விளைவுகள்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது.   

  இந்த நூல் சாக்ரடிஸின் மரணத்திற்கு சில மாதங்களுக்கு பின்னர் அப்போது 29 வயதாயிருந்த அவரது மாணவரான  பிளேட்டொவினால் எழுதப்பட்டது.ஆனால் சாக்ரடிஸ் விஷமருந்தி மரணித்த போது பிளேட்டொ அவரருகில் இருக்கவில்லை அப்போது உடனிருந்த அவரது சகமாணவரான பீடோ மற்றூம் கிரிட்டோ ஆகியோரின் விவரணைகளை அடிப்படையாக கொண்டே பிளேட்டோ அந்நிகழ்வை எழுதினார்.

 கிரேக்க மொழியில் எழுதப்பட்டு லத்தீன மொழியாக்கம் செய்யப்பட்ட  அதன் சில பத்திகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டபோது , இறப்பின் போது நிகழந்தவையும் நஞ்சின் பெயரும் கிரேக்க மொழியின் உபயோகப்படுத்தப்பட்டிருந்த  அதே சொற்களின் பொருளில் மொழியாக்கம் செய்யபட்ட்து.

விஷம் அளிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மரணம் சம்பவித்ததும், உயிரிழப்பிற்கு முந்திய கணம் வரை சாக்ரட்டிஸ் நினைவுடன் இருந்ததும், கைகளை அசைத்து முகத்தின் துணியை அகற்றியதும்,  பேசிக்கொண்டிருந்ததும் எல்லாம் ஹெம்லாக் நஞ்சின் இயல்புகளைத்தான் காட்டுகின்றது

 ஆனால்  சாக்ரட்டிஸுக்கு கடும் வலியோ, குமட்டலோ,  வாயுமிழ்தலோ, வலிப்போ வந்ததாக பிளேட்டொ  குறிப்பிட்டிருக்கவில்லை என்பதால், அவருக்கு அளிக்கப்பட்டது ஹெம்லாக் சாறாக இருக்க வாய்ப்பில்லை என்று ஒருதரப்பும் அப்போது கிரேக்க அரசியல் கொலைகளில் பலவற்றிற்கு காரணமாயிருந்த ஹெம்லாக்தான் சாக்ரட்டிஸுக்கும் அளிக்கபட்டிருக்கும் என்று இன்னொரு தரப்பும் விவாதித்தார்கள்.

  சாக்ரட்டிஸுடன் அப்போது உடனிருந்தவர்கள் அவரது இறப்பை மிக கெளரவமாக உலகிற்கு காட்ட வேண்டி குமட்டல், வலி போன்ற அறிகுறிகளை பதிவுசெய்யாமல் இருந்திருக்கலாமென்றும், விரும்பத்தகாத  விளைவுகளை ஹெம்லாக் உண்டாக்குமென்பதை அறிந்து அவருக்கு அந்நஞ்சுடன் அதிக அளவில் ஓபியம் கலந்திருக்கலாமென்றும் கருதப்பட்டது.

 ஹெம்லாக் தாவரத்தின்  வளர்பருவங்களுக்கேற்றபடி, நஞ்சின் அளவிலும் இயல்பிலும் மாற்றமிருக்குமென்பதால், ஹெம்லாக் நஞ்சூட்டப்பட்ட  எல்லா கொலைக்கைதிகளின் இறப்பு அறிகுறிகளும் ஒன்றெபோலிருக்காதெனவும் ஒரு வாதம் இருக்கிறது

சாக்ரடிஸின் வாழ்விலிருந்த அழகியலும் பெருமையும் அவரது மரணத்திலும் இருக்கவேண்டும் என அவரது மாணவர்களும் நலம் விரும்பிகளும் நினைத்து அவரது மரண நிகழ்வை புனிதப்படுத்தி விட்டார்கள், அவரது இறப்பு திரித்து சொல்லப்பட்டுவிட்டது, சில உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டன  என  இரண்டாயிரமாண்டுகளுக்கு பின்னும் விவாதங்கள் நடந்துகொண்டே இருந்தன.

1970 ல்களில் பண்டைய சிந்தனைகள் மற்றும் தத்துவ ஆராய்ச்சியாளரான கிறிஸ்டோஃபர் கில்’லும்  (Christopher Gil ) நோயியல் நிபுணரான வில்லியம் ஓபரும் பிளேட்டொ   வேண்டுமென்றேதான் சில அறிகுறிகளை பதிவுசெய்வதை  தவிர்த்துவிட்டு சாக்ரடிஸின் இறப்பை புனிதப்படுத்திருக்கிறார், ஹெம்லாக் நஞ்சு நிச்சயம் கடும் விளைவுகளை ஏற்படுத்தி இருக்கும் என உறுதியாக தெரிவித்தார்கள். 1, 2

 மீண்டும் 1991’ல் இதே சர்ச்சை தலைதூக்கிய போது  பிளேட்டோ அவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லையென்றும் சாக்ரட்டிஸின் மரணம் ரகசியமாக நடக்கவில்லை, அவரருகில் அப்போது ஏராளமானோர் இருந்திருக்கின்றனர். எனவே பிளேட்டோ  நேர்மையாகத்தான் பதிவுகளை எழுதியிருக்கிறார் என்று அப்போதும் விவாதங்கள் எழுந்தன.

பிளேட்டோ அவரது பதிவில் எங்குமே ஹெம்லாக் என்று குறிப்பிட்டிருக்கவில்லை கிரேக்க மொழியில்’’kôneion’’ மருந்து என்ற பொருளிலேயே கோப்பையில் இருந்த திரவத்தை  அவர் குறிப்பிட்டிருக்கிறார்.  கிரேக்க மொழியின்  kôneion லத்தீன மொழியாக்கத்தில்  cicuta ’வாக மாறி பின்னர் ஆங்கிலத்தில் hemlock ஆகிவிட்டிருக்கலாமென்றும் கருதப்பட்ட்து

எந்த ஹெம்லாக், எத்தனை அளவில், எப்படி தயாரிக்கப்பட்டு அளிக்கப்பட்டதென்பதையெல்லாம் இன்றும் தாவரவியல், நோயியல், மெய்யியல், மொழியியல் என்று பல கோணங்களில் .விவாதத்திற்குரியவையாகி விட்டிருக்கின்றன.

 ஹெம்லாக்கின் கொல்லும் தன்மை மற்றும் செயல்புரியும் வேகம் ஆகியவை  ஓபியம் போன்ற மூலிகளுடன் கலக்கப்படுகையில அதிகரிப்பதாக  தாவரவியல்துறையின் தந்தையான தியோஃப்ரேஸ்டஸ் குறிப்பிட்டிருக்க்கிறார். சிலமணிநேரங்களிலேயே மரணம் நிகழ்ந்த்தால் சாக்ரடிஸுக்கு நஞ்சினை தயாரித்தவர் இதை செய்திருக்கும் சாத்தியமும் இருக்கிறது.

19ஆம் நுற்றாண்டின் மருத்துவர்களும், விஞ்ஞானிகள் பலரும் ஹெம்லாக் நஞ்சின் வீரியத்தை பல்வேறு வழிகளில் சோதித்தார்கள். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நோயாளிகளுக்கும் ஹெம்லாக் நஞ்சினை வேறு வேறு அளவுகளில் கொடுத்து விளைவுகளை கண்காணித்ததுடன், பல நச்சியலாளர்கள் தாங்களே அதை அருந்தி சோதித்ததும் நடந்திருக்கிறது . இவர்களிள் ஜான் ஹெர்லி  (John Harley ) குறிப்பிட்டு சொல்லும்படியானவர். ஹெம்லாக் சாறை பல அளவுகளில் அருந்தி அதன் விளைவுகளை கவனித்து அவற்றை  புத்தகமாகவே எழுதியிருக்கிறார். சாவின் விளிம்பு வரையிலும் சென்று மீண்டு ஹெம்லாக் நஞ்சினை குறித்து எழுதிய இவரின் கட்டுரைகள் மிக முக்கியமானவையாக் கருதப்படுகின்றன.3

 ஆனால் துரதிர்ஷ்டவசமாக பலர் இறந்துமிருக்கிறார்கள். ஒரு ஸ்காட்டிஷ் தையல்காரரான கெள 1845’ல்  ஹெம்லாக்கை பார்ஸ்லி என்று நினைத்து அதைக்கொண்டு உண்டாக்கிய  ஒரு சாண்ட்விச்சை உண்ட 3 மணி நேரத்தில் உயிரிழந்தார். அவரை மரணத்துக்கு இட்டுச்சென்ற அறிகுறிகள் அனைத்துமே சாக்ரட்டிஸின் மரணத்தில் இருந்ததாக பிளேட்டோ எழுதியவைகளுடன் ஒத்துப்போனது. கெள’விற்கும் கடைசி வரை நினைவிருந்தது அவருக்கும் வலியோ, வாயுமிழ்தலோ, குமட்டலோ வலிப்போ இல்லை. கால்களிலிருந்து செயலின்மை துவங்கி  உடலின் மேல்பாகங்களுக்கு பரவி பின்னர் மூச்சுத்திணறலால் மரணம் சம்பவித்தது

 எடின்பர்க் மருத்துவமனையில் கெள உயிரிழந்தபோது அங்கு  ஜான் ஹூக் பென்னெட் மருத்துவராக பணியிலிருந்தார். அப்போது பெரிய விவாத ப்பொருளாக இருந்த சாக்ரட்டிஸின் இறப்புடன் தொடர்புடைய கெள’வின் இறப்பின் அதிமுக்கியத்துவம் பென்னெட்டுக்கு தெரிந்தது. கெள’வின் இறப்பின் போது  உடனிருந்தவர்கள், அந்த சாலையில் அப்போது  பயணித்தவர்கள்.  அவரை மருத்துவமனையில் அனுமதித்தவர்கள் என அனைவரிடமும் விரிவான விசாரணைகளை மேற்கொண்டார். பின்னர் கெள’வின் பிரேதப்பரிசோதனையையும் அவரே நடத்தி கெள உட்கொண்டது கோனியம் மேகுலேட்டமென்னும் ஹெம்லாக்தான் என்பதையும் உறுதிசெய்தார்.பென்னெட் சாக்ரடிஸின் மரணத்தை கெள’வின் மரணத்துடன் ஒப்பிட்டு எழுதிய ஆய்வுக்கட்டுரைகள்  மிக முக்கியமானதாக இன்றளவிலும் கருதப்படுகின்றது.4

  தாவரவியல், நோயியல் மற்றும் மொழியியல் மர்மங்கள் விலகி சாக்ரடீஸின் மரணம் குறித்த பலநூற்றாண்டுகால , தொடர்ச்சியான சர்ச்சை இவ்வாறாக  பண்டைய மற்றும் நவீன ஆய்வுகளுக்கும் விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் இடையில் முன்னும் பின்னுமாக பயணித்து முடிவை எட்டியது.

 பிளேட்டோ சொன்னது போலவே சாக்ரடீஸ் ஹெம்லாக் விஷமருந்தி,  அமைதியாக இறந்தார். பிளேட்டோ அம்மரணத்தின் உண்மையை மருத்துவ துல்லியத்துடன்தான் பதிவுசெய்திருக்கிறார். ஏசு கிருஸ்துவுக்கு சிலுவையைப்போல, சாக்ரட்டிஸின் மரணத்துடன் ஹெம்லாக் நஞ்சு அழிவின்றி உடனிருந்து கொண்டிருக்கிறது.

வரலாற்றில், ஹெம்லாக் நஞ்சளித்து கொல்லப்பட்டவர்களில் ஏதென்ஸின் அரசியலாளரும், தளபதியும், பெலொபோனிஷிய போரின் இறுதிப்பகுதியில் பெரும்பஙகாற்றியவருமான திராமினிஸூம், நல்லவர் என்று செல்லப்பெயரிடப்பட்டிருந்த  நேர்மையாளரும் புகழ்பெற்ற அரசியலாளருமான ஃபோசியானும்  முக்கியமானவர்கள்.

1.Christopher Gill (’The Death of Socrates’, Classical Quarterly, 23, 1973, pp. 25-8) 

2. William Ober (’Did Socrates Die of Hemlock Poisoning?’, New York State Journal of Medicine, 77.1, Feb., 1977, pp. 254-8) 

3. Harley, J., The Old Vegetable Neurotics: Hemlock, Opium, Belladonna and Henbane, Macmillan, 1869) 

4. Bennett, J. H., Clinical Lectures on the Principles and Practice of Medicine, Samuel & Wood, New York, 1860, pp. 413-8.

*.Apology of Socrates- கிரேக்க மொழியில் Apology என்பது மன்னிப்பென்றல்ல . ’’defence’’ என்னும் பொருள் கொண்டிருக்கிறது

மரவளைய காலக்கணக்கீட்டியல்- Dendrochronology

18ஆம் நூற்றாண்டின் இறுதியில் துவங்கி  19 ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை, அமெரிக்காவின் பிரபல வானியல் நிபுணரான ஆண்ட்ரூ டக்ளஸ் (Andrew Ellicott Douglass,-1867-1962,) முதிர்ந்த மரங்களின் ஆண்டு வளையங்களையும், சூரிய சுழற்சி எனப்படும் 11 ஆண்டுகால சூரியனின் மாற்றத்தையும்  ஒப்பிட்டு ஆய்வு செய்து, மரங்களின் வயதை  கணக்கிடும் மரவளைய காலக்கணக்கீட்டு துறையை உருவாக்கினார்.

 ஆங்கிலத்தில் Dendrochronology எனப்படும் இந்த அளவீட்டின்படி  மரங்களின் வயதை கணக்கிடுவதன் மூலமாக  வரலாற்றின் காலநிலை மாற்றங்கள், சூழல் மாற்றங்கள், புராதனப்பொருட்களின் காலம் ஆகியவற்றையும் அறிந்துகொள்ள முடியுமென்பது அறிவியலில் ஒரு  மிகப்பெரிய திறப்பாக அமைந்தது. பண்டைய கிரேக்க சொல்லான  dendron மரத்தையும், khronos என்பது காலத்தையும் குறிக்கின்றது.

டக்ளஸ்

 இளம் வானிலை ஆய்வாளராக அரிஸோனாவின் லோவெல் வானிலை ஆய்வுக்கூடத்தில் (Lowell Observatory) பணியாற்றிக்கொண்டிருந்த டக்ளஸுக்கு சூரியனை அறிந்துகொள்வதில் பெரும் ஆர்வமிருந்தது. குறிப்பாக சூரிய மேற்பரப்பில் காணப்படும் சூரிய புள்ளிகளின் எண்ணிக்கையில் உள்ள மாறுபாடுகளின் அடிப்படையில் அளவிடப்படும் சூரிய சுழற்சியின் மாறுபாடுகளை அவர் தீவிரமாக ஆராய்ந்துகொண்டிந்தார்.

அவ்வாய்வின் போதுதான் மரங்களின் ஆண்டுவளையங்களின் அளவிற்கும், அவை வாழுமிடத்தின் காலநிலைக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை அவர் முதன்முதலாக கண்டறிந்தார். அரிஸோனா பல்கலைக்கழகத்தில் ஒரு மர வளைய ஆய்வகத்தையும் உருவாக்கி,  மரங்களின் ஆண்டுவளையங்களின் அடுக்குகளைக்கொண்டு அவை கடந்துவந்த காலங்களை, அக்காலங்களின் முக்கிய நிகழ்வுகளை, இடர்பாடுகளையெல்லாம் கண்டறியும் இம்முறையையும் இவர் உருவாக்கினார். cross-dating எனப்படும் ஒரு மரத்தின் ஆண்டுவளையங்களை பிற மரங்களின் ஆண்டு வளையங்களுடன் ஒப்பிட்டு காலநிலையின் வரலாற்றை கணிக்கும் அடிப்படை ஆய்வு முறையையும் இவரால் உருவாக்கப்பட்டதுதான்.

மரவளையங்களை முதன் முதலில் கண்டறிந்தவர் தாவரவியலின் தந்தையான தியொஃப்ரேஸ்டஸ், லியோ நார்டோ டாவின்ஸி துவங்கி  மேலும் பலர்  மரவளையங்களை குறித்து  நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பதிவு செய்திருக்கின்றனர்.

ஒரு மரத்தின் உயரமானது அதன் வாழ்விடத்தின் மண் வளம், மண்ணின் நுண்ணுயிரிகள் மற்றும் கடல் மட்டதுக்கு மேலான அச்சூழலின் உயரம் ஆகியவறினால் நிர்ணயிக்கப்படுகின்ற்து. எனினும், மரங்களின் பருமனானது பெரும்பாலும் காலநிலை காரணிகளாலேயெ உண்டாகிறதென்பதால் மரங்களின் வயதை மரவளையங்களின் இயல்பைக்கொண்டு கணக்கிடுவது மிகச்சரியான கணக்கீட்டு முறையாக இருக்கின்றது 

நாம் சாதாரணமாக பயன்படுத்தும் மரம் அல்லது கட்டை என்ற சொல் முதிர்ந்த மரங்களின் நடுவிலிருக்கும் கழி எனப்படும்  xylem’ பகுதியை குறிக்கிறது. ஒரு மரத்தின் வளர்பருவத்தில், இரண்டாம் நிலை வளர்ச்சி பல ஆண்டுகளாக நடைபெறும்  பொழுது, வெளிறிய நிறத்திலிருக்கும் வெளிப்பகுதி சாற்றுக்கட்டை (Alburnum) அல்லது மென்கட்டை (early wood) எனவும். கருமையான நிறத்திலுள்ள மையப்பகுதி வைரக்கட்டை  (Duramen) அல்லது மென்கட்டை (late wood)  எனவும் அழைக்கப்படுகிறது இவையிரண்டிற்கும் முறையே Heart wood, sap wood என்றும் பெயருண்டு.

மரம் வளருகையில், இவ்விரண்டு கட்டைகளுமாக சேர்ந்து வளையங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கும். மரங்கள் ஒவ்வொரு ஆண்டும் பருவத்துக்கேற்றபடி வசந்த காலத்தில் வெளுத்த நிறத்திலிருக்கும் வளையங்களையும், இலையுதிர்காலத்தில் அடர்நிறத்தில் வளையங்களையும், குளிர்காலத்தில் மிகத்துல்லியமான  வளையங்களையும் உருவாக்குகின்றன.

இவ்வாறு பெருமரங்கள் வாழ்நாளில் கடந்துவந்த காலங்களை அவற்றின் வளையங்களிலிருந்து கணக்கிட்டு மரங்களின் வயது கணக்கிடப்படுகின்றது, ஈரப்பதம் மிக அதிகமாகவும், நீண்ட வளர்பருவமும் இருக்கையில் அகலமான ஆண்டு வளையங்களும், வறட்சியான வருடங்களில் மெலிதான வளையங்களும் உருவாகும்

 பொதுவாக மர வளையங்களின் இயல்பு மரங்களின் வாழிடங்களை பொருத்து மாறுபடும். மலையுச்சியில் வாழும் மரத்தின் அகலமான வளையம் வெப்பமான காலத்தையும், மெல்லிய வளையம் குளிர்நிரம்பிய காலத்தையும் காட்டுகின்றது 

 இறந்த மரங்களில் மட்டுமல்லாமல் உயிருடன் இருக்கும் மரங்களிலும் அவற்றை சேதப்படுத்தாமல் வளையங்கள் கணக்கிடப்படுகின்றன. ஒரு பென்சிலின் அளவுள்ள மரத்தின் உட்பகுதி, பிரத்யேகமாக இக்கணக்கீடுகளுக்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கும்  increment borer   என்னும்,  சிறிய விட்டம் கொண்ட ஒரு எளிய உலோக துளைப்பானை, மரத்தின் நடுப்பகுதி வரை செலுத்தி நீண்ட உருளைகளாக சேகரிக்கப்படுகின்றது. இதனால் மரங்களில் உண்டாகும் சிறு காயம் இயற்கையாகவே  விரைவில் ஆறிவிடும். 

Incremental borer

இக்கணக்கீட்டில்,  இவ்வாறு எடுக்கப்பட்ட உட்பகுதி உருளை குச்சிகளின் வளையங்களை, அதே வாழிடத்தை சேர்ந்த இறந்த மற்றும் உயிருள்ள மரங்களின்  பலநூறு மாதிரி வளையங்களுடன் ஒப்பிடுவதன் மூலம் உயிருள்ள மரங்களின் வயது  கணக்கிடப்படுகிறது.  இறந்த மரங்களின் குறுக்கு வெட்டு பகுதியின் வளைய அளவுகளை ஒரு வரைபடத்தாளில் குறிப்பிட்டு  கணக்கிடுகையில், அம்மரத்தின்   ஒவ்வொரு வளையத்தையும், அவை எந்த ஆண்டு உருவானதென்று கணக்கிட முடியும், இது  crossdating முறை என்ப்படுகின்றது 

 புராதன மரப்பொருட்களின் வயதை கணக்கிடுவதற்கும், வரலாறு, தொல்லியல், கலை உள்ளிட்ட பல துறைகளிலும் இக்கணக்கீடு பெரிதும் உதவியாக இருக்கிறது.

இறந்த மரங்களின் வயது, அவை வாழ்ந்த காலத்தின் முக்கிய சூழல் நிகழ்வுகள், மரங்களுக்கு உண்டான இடர்பாடுகள் என பலவற்றை இக்கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக  வளையங்கள்  மிக மெல்லியதாக அதிக இடைவெளியுடன் இருப்பது கடும் வறட்சியான காலத்தையும், மெல்லிய, அடுக்கடுக்கான, நெருக்கமாக அமைந்திருக்கும் ஏராளமான வளையங்கள் அம்மரம் வறட்சியிலிருந்து மீண்டு வந்ததையும் காட்டுகிறது.

வளையங்களின் நிறம் அளவு மட்டுமல்லாது, வேதியியல் சோதனைகளும், கதிரியக்க  கரிம காலக்கணக்கீட்டியல் எனப்படும் ரேடியோ கார்பன் டேட்டிங் (Radio Carbon Dating) முறைகளும் இணைந்து, இக்கணக்கீட்டு முறையின்  பயன்பாட்டை  மேலும் பல துறைகளில் முன்னெடுத்து செல்கின்றது. 

  கலிஃபோர்னியாவின்  மெதுசில்லா பகுதியின் பிரிஸ்டில் கோன் பைன்மரம் இம்முறையில் கணக்கிடப்பட்டபோதுதான், அது 4852 வருடங்களுக்கு முன்பிருந்தே வளர்ந்துவரும் உலகின் மிகப்பழமையான உயிருள்ள மரமென்று அறியப்பட்டது. 

 இத்துறையின் உட்பிரிவுகளான  காலநிலைமாற்றங்களை கணக்கிடும் Dendroclimatology  , சூழல் மாற்றங்களை ஆய்வு செய்யும்  Dendroecology, பனிப்பாறை  உருகிய வண்டல்கள், பனிப்பாறை விரிவாக்கம், அவற்றின் பின்வாங்கல் மற்றும் கீழிறங்கும் நிகழ்வுகளை குறித்த  ஆய்வுகளுக்கு இக்கணக்கீட்டினை பயன்படுத்தும் முறையான Dendroglaciology , தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகளை சோதிக்கும்  Dendroarchaeology ஆகியவற்றில் மிக முக்கியமான ஆய்வுகள் நடைபெறுகின்றன.

 வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தின் புனரமைப்புத்துறையில் (Paleo environmental reconstruction) இக்கணக்கீடு மிகவும் நம்பத்தகுந்த துல்லியமான காலக்கணக்குகளை தெரிவிக்கிறது.

 நெருப்பிலிருந்து தப்பிய மரங்களின் தீத்தழும்புகளை சுற்றி புதிய வளையங்கள் உண்டாகி இருக்கும். இவற்றைக் கொண்டு அம்மரங்கள் வாழ்ந்த காலத்தின்  தீ விபத்துக்களை பற்றி அறிந்துகொள்ளலாம். இருபதாம் நூற்றாண்டின் இறுதிகளின்  எரிமலை வெடிப்புக்கள், பூகம்பங்கள், நிலச்சரிவுகள், பனிச்சரிவுகள், காட்டுத்தீ, பெருவெள்ளம், போன்ற  பல சூழல் முக்கியத்துவமுள்ள காரணிகளை ஆய்வுசெய்ய இம்முறை பெரிதும் பயன்பட்டது.. 

 மரத்தடயவியல் (Wood forensics) ஆய்வுகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் இக்கணக்கிட்டினால் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததென்று நம்பப்பட்டு வந்த, லண்டன் அருங்காட்சியகத்திலிருந்த ஸ்காட்லாந்தின் அரசி மேரியின் ஓவியத்தின் மரச்சட்டத்தின் வயதை கணக்கிட்டபோதுதான் அது 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததென்று கண்டுபிடிக்கப்பட்டது.

அகழ்வாய்வாளர்கள், பன்னெடுங்காலத்துக்கு முன்பு ஜெர்மனியில் விபத்துக்குள்ளாகி இருந்த ஒரு கப்பலின் மரக்கட்டைகளின் வளையங்களை கணக்கிட்டபோது அவை 1448-1449 ஆண்டுகளின் குளிர்காலத்தில்  வெட்டப்பட்ட மரங்கள் என தெரிய வந்தது. இப்படி பலநூறு முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு இத்துறை உதவி வருகின்றது.

1990’லிருந்து அமெரிக்காவில் இயங்கி வரும் சர்வதேச மரவளைய தகவல் வங்கி ( The International Tree-Ring Data Bank (ITRDB)) உலகெங்கிலும் இருக்கும் மரவளைய ஆய்வாளர்களுக்கு  தேவையான தகவல் உதவிகளை அளித்து வருகின்றது.

தாவர அறிவியலில், மரவளையங்களைக்கொண்டு காலங்களுக்கிடையில்  முன்னும் பின்னுமாக   பயணித்து   பல முக்கிய  கண்டுபிடிப்புக்களை அளிக்கும்  இத்துறை மிக முக்கியமானதும் சுவாரஸ்யமானதும் கூட. அறிவியல் தொழிநுட்ப முன்னேற்றங்களுடன் இணைந்து இன்னும் பற்பல கண்டுபிடிப்புக்களுக்கான  சாத்தியஙகளையும் இத்துறை தற்போது அளித்திருக்கிறது.

« Older posts Newer posts »

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑