அசோக மரங்கள்

 இந்தியா முழுவதுமே காணப்படும் Sorrowless tree- அசோகம் -சோகத்தை நீக்கும் என்ற பொருளைத்தரும் அசோக மரத்தைக்குறித்தும், அசோக மரம் என்று பரவலாக தவறாக பலரால் கருதபடும் மற்றொரு மரத்தையும் குறித்தும் அறிந்துகொள்ளலாம். அசோகு, பிண்டி, செயலை என்று வெவ்வேறு பெயர்களில் தமிழிலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட இந்த மரத்தின் அறிவியல் பெயர் சரகா அசோகா (Saraca Asoca). இது சிசால்பீனியேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. 

மகாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ள தமயந்தியின் கதையில் அசோகம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  கணவன் காணாமல் போன பின்பு, தமயந்தி கண்ணீருடன், பூத்துக் குலுங்கி நிற்கிற அசோகமரத்தின் அருகில் சென்று, அதனுடைய பெயருக்கு ஏற்றவாறு தன்னுடைய துயரத்தை நீக்கி, கணவன் மீண்டும் தன்னோடு சேர வேண்டும் என்று வேண்டுகிறாள்.  

கடவுளை வணங்குவதற்குத் தகுந்த மரமாக அசோகம் பல காலமாக இந்தியாவில் இருந்து வந்துள்ளது என்று பிரகத் சம்ஹிதை நூல் கூறுகிறது. இந்துக்களுக்கு மட்டுமின்றி சமண மதத்தினரும், புத்த மதத்தினரும்  அசோக மரத்தைப் புனித மரமாகக் கருதுகின்றனர். துர்க்கைக்கு உரித்தான ஒன்பது தாவரங்களில் அசோகமும் ஒன்று. சிவன் மட்டுமின்றி காமதேவனின் பக்தர்களும் இதைப் புனிதமாகக் கருதுகின்றனர். சமண அருகனுக்கு விருப்பமான இந்த மரத்தின் அடியில்தான், வர்த்தமான மகாவீரர் கடவுள் நிலையை அடைந்தார்.. சாக்கியமுனி அசோக மரத்தடியில்தான் பிறந்தார் எனப்படுவதால் புத்த மதத்தினரும் இம்மரத்தைப் புனிதமாகக் கருதுகின்றனர்.

பல சமஸ்க்ருத நூல்களில் அழகிய அசோகமரங்கள் அடர்ந்த இந்திய புத்தகோவில்கள் விவரிக்கபட்டிருக்கின்றன.பேங்காக்கின் பகோடாக்களில் வழிபட செல்பவர்கள் அசோக மலர்களை தவறாமல்  கொண்டு செல்வார்கள்

 நல்ல மணமுடைய இதன் தளிரையும் மலரையும் பண்டைய இந்திய மக்கள்  தலையிலும் காதிலும்   மார்பிலும் அணிந்ததாக இலக்கியக் குறிப்புகள் கூறுகின்றன.  அத்வைத வனத்திலும், இந்திரபிரஸ்தத்திலும் இந்த மரம் காணப்பட்டதாக மகாபாரதம் கூறுகிறது.

சலங்கை அணிந்த ஓர் இளம்பெண்ணின் கால்களால் மென்மையாக உதைக்கப்பட்டால் இம்மரம் பூத்துக் குலுங்கும் என்று காளிதாசர் மேகதூதத்தில் குறிப்பிட்டுள்ளார்.   சமணர்களின் ஆசாரங்க சூத்ரமும், குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழும்  அசோகத்தைக்குறித்துக் கூறுகின்றன. மத நம்பிக்கை அடிப்படையிலும், பண்பாட்டு ரீதியிலும் இந்த  அசோக மரம்  மிகப் பெரிய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

வங்காளப்பெண்கள் அசோக சஷ்டி தினத்தன்று  இம்மலரின் மொட்டுக்களை உண்ணுவதும் மலர்ச்சாற்றை குழந்தைகளின் மீது தெளித்தால் அவர்கள் துயரின்றி வாழ்வார்கள் என்று நம்புவதும் வழக்கதிலிருக்கிறது.

சமஸ்கிருதச் சொல்லான அசோகு தமிழில் அசோகம் என்றாயிற்று. சாயை, அங்கணப்பிரியை, கிருமிகாரகம் , மலைக்கருணை, தாமிர பல்லவம், வஞ்சுளம், வீத சோகம் எனவும் அழைக்கப்படும் இம்மரத்திற்கு  சரிபம், ஹேமபுஷ்பா, தாம்ரபல்லவா என வடமொழியிலும் பல பெயர்கள் உண்டு.

இது அழகிய தோரணம் போல கவிழ்ந்து தொங்கும் அடர்ந்த மினுங்கும் இலைகளும் மஞ்சல் கலந்த ஆரஞ்சுவண்ண மலர்க்கொத்துக்களும் செறிந்திருக்கும் ஒரு  பசுமை மாறாமரம்

கூட்டிலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். தளிரிலைகள் செம்பு நிறத்திலும் முதிர்ந்தவை மினுங்கும் பச்சைநிறத்திலும் இருக்கும். முதிர்ந்த மரப்பட்டை அடர் பச்சையில் நீலச்சாம்பல் திட்டுக்களுடன் காணப்படும். 4 லிருந்து 8 நீள் முட்டை வடிவ விதைகளுடன் இருக்கும் தோல்போன்ற தடித்த உறைகொண்ட தட்டையான கனி இருபுறமும் கூரான நுனி கொண்டிருக்கும்.

விதைகள்

அசோகம் இந்திய மண்ணில் எங்கும் சாதாரணமாக வளரக்கூடியது. குறிப்பாக, இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் அதிகம் வளர்கிறது. ஒடிசா மாநிலத்தின் கிழக்கு மலைத்தொடர் பகுதிகளிலும், கோவா, கர்நாடக மாநிலங்களின் சில பகுதிகளிலும் இயல் தாவரமாக இது காணப்படுகிறது.   இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வளர்ப்பு மரமாகவும் இருக்கிறது.     ஒடிசாவின் மாநில மலரும் அசோக மலரே.

இந்தியா இலங்கை மற்றும் நேபாளில் மிகப்புனிதமான மரமாக கருதப்பட்டு வழிபடப்படும் மரங்களில் அசோகமும் ஒன்று. புத்த மதத்திலும் இந்து மதத்திலும் தொடர்புடைய மரம் இது. ராமாயணம் உள்ளிட்ட பல புராண இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மரம் இந்த அசோகம். இந்தியாவில் இந்த மரத்துக்கு உயிரும் ஆன்மாவும் உண்டு என்றும், “மக்களின் துயரத்தில் இது துயர்கொள்ளும், மக்களின் மகிழ்ச்சியில் இது மகிழ்வு கொள்ளும்” என்றும் நம்பிக்கை நிலவுகின்றது.

அசோக மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து ஆண் பெண் இருபாலருக்கும் கொடுக்கப்படுகின்றது ஆயுர்வேதத்தில். தேக ஆரோக்கிய பலம் மற்றும் நோய் நீக்குதலில் அசோக மரப்பட்டை பெரும் பங்கு வகிக்கின்றது

 மரப்பட்டை, உலர்ந்த மலர்கள் ஆகியவற்றிற்கு  பெண்களுக்கு வரும் உடல்நிலை, மனநிலை மற்றும் கருப்பைக், கோளாறுகளை தீர்க்கும் மருத்துவ குணங்கள் உண்டு

Dysmenorrhoea எனபடும் ஒழுங்கற்ற வலியுடனான மாதவிலக்கு. Amenorrhoea எனப்படும் மாதவிலக்கு துவங்காமை, ஆகியவற்றிற்கும், மலட்டுத்தன்மையை போக்கவும் இம்மரப்பட்டைச்சாறு மருந்தாக பயன்படுகிறது.  

 இம்மரத்தின் காற்று வீசும் இடத்தில் கூட பெண்களுக்கு கருப்பை தொடர்பான எந்த நோயும் குறைகளும் வராது என்பது நம்பிக்கை. மாசி பங்குனி மாதங்களில் மலரும் அசோகமலரின் நறுமணத்தை நுகரும் பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் காரணமற்ற மனஅழுத்தங்களும் விலகும்.   ராவணன் அந்தப்புரமகளிரின் ஆரோக்கியத்தின் பொருட்டே இம்மரங்களை அங்கு வைத்திருந்தாரென்பதை இதன் மருத்துவகுணங்களினின்றும் நாம் அறிந்துகொள்ளலாம்

சரும மென்மைக்கும் மரப்ட்டைச்சாறு உதவுகின்றது, சருமத்தினடியில் தேங்கி இருக்கும் அழுக்குகளையும் நச்சுக்களையும் நீக்கி சருமத்தை பொலிவுடன் விளங்கச்செய்யும் இப்பட்டைச்சாறு.  

அசோக மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் அசோகரிஷ்டம், அசோகாதிவடி, அசோகாதி குக்குலு மற்றும் அசோகாதிசூரணம் ஆகியவை மலட்டுத்தன்மை மற்றும் கருப்பை நோய்களுக்கு பரிந்துரைக்கப்படும். பட்டைசாறு கர்ப்பஷ்ய ரசாயனம் எனப்படுகிறது

அசோக மரத்துப் பூக்களை சேகரித்து நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிப்பதால் அடிபட்ட காயம், அதனால் மனநிலையில் ஏற்பட்ட பாதிப்பு ஆகியன குணமாகும். அசோக மரத்துப் பூவின் தேநீர் ஆழ்மனத்தில் கவலை, பதட்டமான உணர்வு ஆகியவற்றையும் கட்டுப்படுத்தக்கூடியது.


  புராணங்களில் இம்மரங்களில் யட்சிகள் வாழ்வதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.இந்திய சிற்பங்கள் பலவற்றில் அசோகமரத்தினை பற்றிக்கொண்டிருக்கும் யட்சிகளைக் காணலாம். மலட்டுத்தன்மை நீக்கி காமம்பெருக்கும் குணமுள்ள அசோக மலர் காமனின் கரும்பு வில்லின் ஐந்து மலர்கணைகளில் ஒன்று.

சில இடங்களில் நெட்டிலிங்கம் என்னும் நெடிதுயர்ந்து வளரும் மரங்களை (Manoon longifolia-False Asoka tree) தவறாக அசோக மரம் எனக்கூறும் வழக்கம் இருந்து  வருகின்றது. இது  தவறு.

அசோகமும் நெட்டிலிங்கமும்

 அசோகமரம் என்பது Saraca asoka என்னும் அசோகமே. நெட்டிலிங்கம் உயரமான பெரும்பாலும் கிளைகளற்ற ஆப்பிள் பச்சை வண்ண மலர்கொத்துக்களையும் நாவற்பழம் போன்ற கனிகளையும் கொண்டிருக்கும் அன்னோனேசியே குடும்பத்தாவரம். இதன் இலைகள் நீளமாக ஓரங்களில் அலையலையான அமைப்புடன் காணப்படும், மரங்கள் நீளவாக்கிலான கூம்புகளைபோல காணப்படும், இவை அசோகமல்ல

இத்தாலிய சைப்ரஸ் மரங்கள்

.இவை பிரிட்டிஷ் இந்தியாவில் பிரிடிஷாருக்கு பிரியமான  உயரமான இத்தாலியன் சைப்ரஸை நினைவூட்டியதால்  இந்தியாவில் பரவலாக வளர்க்கபட்டது. இம்மரங்கள் இந்தி மொழியில் அஷோக் எனபடுகின்றன. அப்பெயரே தவறாக தமிழிலும் அசோகம் என்றாகிவிட்டது

முன்பு மேற்கு மற்றும் கிழக்கு மலைத்தொடர்களிலும் கிழக்கு இமாலய மலைப்பிரதேசங்களிலும் செறிந்து வளர்ந்திருந்த அசோக மரங்கள் இப்போது மிக மிக குறைந்த எண்ணிக்கையில் பூங்காக்களில் காணப்படுகின்றது.

ராமனை பிரிந்து அரண்மனைச்சிறையிலிருக்க மறுத்து அசோக வனச்சிறையிலிருந்த சீதையை, அந்த அமைதியான வனமும் கொத்துக்கொத்தாக மலர்ந்திருந்த ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் கருஞ்சிவப்பு மஞ்சரிகளும், அடர்த்தியான  அவற்றின் நீடித்த, மென்மையான நறுமணமும் நிச்சயம் வசீகரித்திருக்கும். அடர் ஆரஞ்சுசிவப்பு நிற கூம்புக் கோப்பைபோன்ற மஞ்சரிகளின் மலர்களின் உள்ளே இருக்கும் ஊதா நிற மகரந்த காம்புகள் ஒவ்வொரு மலரிலிருந்தும்  வெளியே வந்திருப்பது  வானவேடிக்கை போல இருக்கும்.  மலர்களை தேடி ஏராளமான் பறவைகளும் பட்டாம்பூச்சிகளும் வந்தபடி இருக்கும்.

கங்கையின் துணை ஆறுகளில் ஒன்றான கோஷியாற்றங்கரையிலிருந்த அசோக வனம் இலங்கையிலிருந்து திரும்பிய பின்னர் சீதைக்கு மிகவும் பிரியதுக்குரியதாக இருந்ததாக புராணங்கள் சொல்லுகின்றன. ஸ்கந்த புராணம் சீதை ராமனிடம்’’ .இது வைகாசி மாதம் நாம் இந்த வனத்திலேயே தங்கி இருந்து இந்த ஆற்றீல் நீராடலாம் ‘’ என்று சொன்னதாக குறிபிடுகிறது. இப்போது இந்த ஆற்றுக்கே சீதா பானி என்று பெயர். அசோகமரம் சீதா அசோகம் என்றும் அழைக்கப்படுகிறது.