பகல்முடிந்து மாலையானதுமே நாமனைவரும் இரவின் மடியில் உறங்குவதற்கான ஆயத்தங்களை செய்யதுவங்கிவிடுகிறோம். இரவில் அணைவது என்பது நமக்கு குருதியிலேயே இருக்கும் ஓருணர்வு. செயல்பாடுகளை மெல்லமெல்ல குறைத்து பின்னர் முழுவதுமாக நிறுத்தி பாதுகாப்பாக தாழிட்டுக்கொண்ட வீடுகளுக்குள் போர்வையின் கதகதப்புக்குள் உறவுகளினருகாமையில் ஆழ்ந்துறங்குவதே நமக்கெல்லாம் இரவென்பது.

அதைதாண்டிய இரவென்றால் நாமறிந்தது இரவு நேர காவலாளிகள், திருடர்கள், பாலியல் தொழில்கள், தொழிலாளிகள், குற்றங்கள், இரவுப்பயணங்கள்,  இரவு ஷிப்ட் பணியாற்றுபவர்கள் ஆகியவற்றை மட்டுமே

 இப்படி இரவுகளில் குறிப்பிட்ட அந்தரங்க, வாழ்வியல் மற்றும் பணிச்சூழல் காரணமாக  விழித்திருப்பர்களை தவிர இரவுவாழ்வு குறித்தும் இரவுலகு குறித்தும் நாமதிகம் அறிந்திருக்கவில்லை

 ஆனால் இரவுலகை அதன் பல மர்மங்களை அதிலிருக்கும் உயிராற்றலை இன்னும் பலவற்றை சொல்லும்  பிரிட்டிஷ்  இயற்கை ஆவணப்படத்தொடரான  ‘’ Night on Earth  ’’ நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கிறது. பிரபல அமெரிக்க திரைநட்சத்திரமும், வர்ணனையாளருமான சமீராவில்லியின் கம்பீரக்குரலில் உருவாகி இருக்கும் இந்த அற்புதமான தொடரை  ப்லிம்சோலி நிறுவனம் தயாரித்திருக்கிறது. இச்சிறு தொடரின்

  • நிலவின் புலத்தில் சமவெளிகள்
  • உறைந்த இரவு
  • வனத்தின் இரவு
  • இருண்ட கடல்கள்
  • உறங்கா நகரங்கள்
  • விடியும் வரை

-ஆகிய ஆறு அத்தியாயங்களும் ஜனவரி 29,  2020ல் வெளியாகியுள்ளது.. ஒவ்வொரு அத்தியாயமும் ஒருமணி நேர நீளமுள்ளது.

ஒளிப்படக்குழுவினர் உலகின் அசாதாரணமான வாழிடங்களின் உயரங்களில் ஏறி, ஆழங்களில் இறங்கி, பனியில் உறைந்து, குளிரில் நடுங்கி, நீரில் குதித்து , புழுங்கி வியர்த்து, வன்பாலையில் வதங்கி, மழையில் நனைந்து, வெயிலில் வாடி, மிகக்குறைந்த கேமிரா வெளிச்சத்தில்,நிலவும் நட்சத்திரங்களும் அளித்த இயற்கை ஒளியிலேயே இத்தொடரை ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் என்பது பிரமிப்பூட்டுகின்றது

ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மாலத்தீவுகள் உள்ளிட்ட 30 நாடுகள்ன் பல வாழிடங்களில் படமாக்கப்பட்ட இத்தொடரில் அதிநவீன தொழில்நுட்பங்களுடைய காமிராக்களும், இராணுவத்தில் உபயோகிக்கும் தொழில்நுட்பங்களும்,  உடல்வெப்பத்தை  காட்சியாக்கும் சாதனங்களும், ட்ரோன் காமிராக்களும் பயன்படுத்தப்பட்டிருக்கிறன

பீட்டர் ஃபிசனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும், முதல் அத்தியாயத்தில்  நிலவின் புலத்தில் ஆப்பிரிக்கவின் சவன்னா புல்வெளிகளிலிருந்து பெரூவியப்பாலைகள் வரையில் தேய்ந்து வளரும் நிலவின் பாதையினூடே , அந்நிலவொளியிலேயே, கொன்று தின்னிகளையும் அவற்றின் இரைவிலங்குகளையும்,  அவ்விரு உயிர்களையும் யுகங்களாக பிணைத்திருக்கும் இப்புவியின் இரக்கமற்ற  விதியையும்  துல்லியமாக காண்பிக்கின்றது.

இதுவரையிலும் நாம் கனவிலும் கற்பனையிலும் கூட கண்டிருக்காத, காண்பதற்கான சாத்தியங்களும் இல்லாத காட்சிகளே தொடர்முழுவதும் இருப்பவை. ஒருசில காட்சிகளைத்தவிர  பிற அனைத்துக் காட்சிகளுமே இரவொளியிலும், பாலெனப்பொழியும் நிலவின் புலத்திலும், நட்சத்திரங்களின் மெல்லிய ஒளியிலும்தான் படமாக்கப்பட்டிருக்கின்றன.வேட்டைவிலங்கின் கண்களாகவும் உயிரச்சத்தில் ஓடும் இரைவிலங்கின் உடல்மொழியாகவும் இருட்டில் நமக்கு தெரியும் கமிராக்கண்கள் வழியே விரியும் நாமறியாததோர் இரவுலகு நம்மை அதிசயத்திலாழ்த்துகின்றது.

இதுவரையிலு திரையில் மிகையொளிக்காட்சிகளையே அதிகம் கண்டு பழகியிருக்கும் நமக்கு நிலவின் புலத்தில் வேட்டை விலங்கின் பசியை இரைவிலங்கின் உயிரச்சத்தை,  கொல்லுதலும், கொல்லப்படுதலும்,இரைதேடலும் இணைதேடுதலுமானதோர் இயற்கையின் ஆடலை , இரவாடிகளின் உலகினை மிக நெருக்கத்தில் காட்டுகிறார்கள், உண்மையில் திரையை நாம் காண்பது காட்டின் கண்களில்

ஒளிரும் கூழாங்கல் கண்களுடன் விலங்குகளை அவற்றின் துள்ள்லை தேடலை விண்மீன்களின் செறிவை முகில் மறைக்கும் நிலவை காட்டிதுவங்குகின்றது காட்சி மரங்களும் இருக்கும் புல்வெளிகளின் இரவு வாழ்வை சொல்லும் முதல் அத்தியாயம் சவன்னாவில் நெருக்கமின்றி வளர்ந்திருக்கும் மரங்களும் இருக்குமாதலால் பல்வகைப்பட்ட உயிர்களுக்கு அது வாழிடமாக இருக்கின்றது.அச்சூழலில் உயிர்களின் அச்சத்தை விழைவை விரைவை எப்படியும் தக்க வைத்துக்கொண்டாகவேண்டிய வாழ்வை என அனைத்தயுமே காண்கிறோம் நிலவின் மென்னொளியில்.

அந்திச்சூரியனின் செவ்வொளி மீதமிருக்கும் வானின் பின்னணியில் பகலில் மட்டுமே தனித்து வேட்டையாடுமென நம் அறிந்திருக்கும் சிறுத்தைகள் கூட்டமாக இரைதேடுகின்றன.செந்நிறஒளியில் தீப்பிடித்ததுபோல் எரியும் புல்மலர்க்குவைகளின் நடுவே விலங்குகளை காண்பது, முழுநிலவு நாளில், சூரியனைவிட 4 லட்சம் மடங்கு மங்கிய அதன் ஒளியில், பரந்துவிரிந்த புல்வெளியின் நடுவே ஒற்றைப்பெருமரமும் ஒரிடத்தில் கூட்டமாக கொன்றுதின்னிகளும் அமர்ந்திருப்பது,, அவை இரைதேட புறப்படுவது, அந்நேரத்தில் புல்லுண்ண வந்திருக்கும் மான்கூட்டங்களை அவை தேடிச்செல்வது, இரவரசனான சிங்கங்களின் இரை தேடலும்,கொண்றுண்ணலும் இரவிலேயே நிகழ்வது,கொழுத்த நீர்யானைகளின் உடளளவில் நான்கில் ஒரு பங்கே இருக்கு இளம் சிங்கங்களினால் வேட்டையை வெற்றிகரமாக நடத்தமுடியாமலாவது,கூரியமுட்களுடன் உடல் சிலிர்த்து நிற்கும் ஒரு அன்னை முள்ளம்பன்றி சூழ்ந்திருக்கும் சிங்கங்களின் முகத்தை தன் உடல் முட்களால் காயப்படுத்துவது,  அன்னைமைக்கு முன்பாக கொல்லுதல் தோற்றுப்போவது,என்று விலங்குகளின் வாழ்வின் மர்மங்கள் ஒவ்வொன்றாக கண்முன் விரிகிறது

இதுமட்டுமல்ல இன்னுமிருக்கிறதென்று மெக்ஸிகோ பாலையின் இரவுத்தாவரங்களின்  ரகசிய வாழ்வுக்குள் நம்மை அழைத்துச்செல்கின்றது கேமிரா. அவ்விடத்தின் கள்ளிகள் பெரும்பாலும் இரவில் மலருகின்றன .இரவாடிகளான மெக்சிகோவின் நீளநாக்கு வெளவால்கள் தங்களின் மீயொலி(ultra sound)  அலைகளை கணக்கிட்டு மலர்களை அடைந்து உடலின் நீளத்திற்கு இணையாக இருக்கும் நாக்குகளால் தேனருந்தி ஒன்றிலிருந்து மற்றோரு மலருக்கு செல்லுகையில் எடுத்துச்செல்லும் மகரந்தந்ததுகள்களால் மகரந்தசேர்க்கையையும் செய்கின்றன. வெளவால்களுக்கு உணவு, கள்ளிகளுக்கு இனவிருத்தி இரண்டும் ஒரிரவில் நிலவொளியில் நடைபெறும் காட்சிகள் அத்தனை துல்லியமாக, அத்தனை தெளிவாக, அத்தனை அழகுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இவ்வாறான் பகி்ர்வாழ்வினால்தான் பாலையும் உயிர்ப்புடனிருக்கின்றது, இப்படி தேனும் மலரும் மகரந்தமுமாக அழகு மட்டுமல்லாது,கொடிய நஞ்சுடைய கிலுகிலுப்பை பாம்புகளும்,விஷச்சிலந்திகளும் அதே பாலையின் அவ்விரவில்தான் நடமாடுகின்றன. பகலின் வெப்பம்மிக அதிகமானதால் இவை அனைத்துமெ இரவில்தான் வெளியே வருகின்றன.

தேள்களின் உடல்ரோமங்கள் கூட தெளிவாக தெரியும்படியான காட்சிகளுக்கு படப்பிடிப்பு குழுவினருக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். மிகப்பெரிய அடர்ரோமங்களுடைய உடல்கொண்ட தேள்கள் புற ஊதாகதிரொளியில் மின்னுவது ஏனென்று அறிவியலாலேயே விளக்கமுடியாத புதிர்தான்   இணைசேர்ந்துகொண்டிருக்கும் தேள்களிரண்டை உண்ணவரும் பாலையின் சின்னஞ்சிறிய எலி. தேளின் கொடும் நஞ்சு எலியை ஒன்றும் செய்வதில்லை என்பதும் ஆச்சர்யமே.

ஓருயிர் இணை சேர இரவில் வெளியே வந்தால் இன்னோர் உயிர் இரைதேட வருகின்றது . இயற்கையின் இப்படியான பல அதிசயங்களை இத்தொடர் நமக்கு காட்டியபடியே இருக்கின்றது.

அந்த பெருவிய பெரும்பாலை கொடும்பாலைதான் எனினும் பாலை பசிஃபிக் பெருங்கடலை சேருமிடத்தில் மற்றோரு உலகம் இயங்குகின்றது.அங்கு வாழும் நீர்நாய்களின் வாழ்வும் காட்டப்படுகின்றது..நீர்நாய்களின் குட்டிகள் இரவில் வேடடையாடுகின்றன  ரத்தம் குடிக்கும் வெளவால்களும் கடல்சிங்கங்ளும். இரவின் மிகக்குறைந்த ஒளியில் ஆயிரக்கணக்கில் மேய்ந்துகொண்டிருக்கும் விலங்குளை அவற்றின் ஒளிரும் கண்களுடன் காண்பது ஒரு பெரும் அனுபவமென்றால் ஒற்றையாக அவற்றிலொன்றை ஒரு பெண்சிங்கம் வேட்டையாடுவதை பார்ப்பது அதனினும் பெரிய அனுபவமாகிவிடும்.

 நிலவேயில்லா நாளொன்றில் நிலவொளியை காட்டிலும் 200 மடங்கு மங்கிய ஒளியை கொண்டிருக்கும் நட்சத்திரங்களின் மெல்லொளியிலும் நிகழ்கிறது தேடல் நிறைந்த அவற்றின் வாழ்வு.

வெறும் மூன்று செமீ அளவுள்ள சின்னஞ்சிறிய சிலந்தியொன்று தொட்டுவிடாலாமென்னும் அண்மையில் தெரியும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் செறிந்தொளிரும் வானின் கீழ் பரந்துவிரிந்த ஒழுங்கான மணல்வரிகளுடன் இருக்குமந்த பாலையில் 400 மீட்டர்கள் கடந்துசென்று தன் இணையை தேடுவதும் அதற்குள் அதை இரையாக்க வரும் இன்னொன்றுமாக ஒரு மர்மத்திரைப்டத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாத உண்மை காட்சிகள் நிறைந்துள்ள தொடர் இது.

மகாபாரதக்கதையை சொல்லுகையில் ’’இப்புவியில் எக்கதையும் புதிதல்ல ’’என்பார்கள்,  அவ்வாறே இவ்விரவுலகக் கதைகளும் , நிகழ்வுகளும் புதியவைகளல்ல, யுகங்களாக நிகழ்ந்துகொண்டேயிருந்து உலகின் சமநிலைக்கு காரணமாயிருப்பவை, நாமிதுவரை அறியாதவைகளும் காணாதவைகளுமான இவை, நாமனைவருமறிந்து கொள்ளவேண்டியவையும் கூட. இரவுலகைஅறிவதென்பது இயற்கையின் இன்னொரு முகத்தை அறிவதுதான்,