பின்னலாடைத் தொழிலில் இயற்கை நாரிழைகளின் நீடிக்கும் தன்மையில் உள்ள  சிக்கல்கள், மேலும் பல புதிய இயற்கை நார் இழைகளை குறித்த  ஆராய்ச்சிகளுக்கு  வழி வகுத்துள்ளன.

உலகெங்கிலும்  பல்வேறு தாவரங்களில் இருந்து இழைகள் பெறப்படுகின்றன. கற்றாழை, வாழை, யானைக்கற்றாழை, சணல், சணப்பை, மூங்கில், பால் நார், சோளம், சோயா,  புல்நார், நிலக்கடலை ஓடு,  காபி பீன்ஸ் கழிவுகள், அன்னாசி இலைகள் மற்றும் யூகலிப்டஸ் ஆகியவை அவற்றில் சில. 

இயற்கை இழைகள் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும் பொருட்டு  ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 2009 ஆம் ஆண்டை சர்வதேச இயற்கை இழைகளின் ஆண்டாக அறிவித்தது – IYNF

samatoa

பின்னலாடை தொழிலில் மிகவும் விரும்பத்தக்க வடிவம் இறைவழிபாட்டுடன்  நெருங்கிய தொடர்புடைய தாமரை மலரின் வடிவம்தான், பிற மதங்களை காட்டிலும் இந்து மற்றும் புத்த மதம் தாமரையுடன் நெருங்கிய தொடர்பிலிருப்பவை.  புத்த மதத்தின் மிக முக்கிய குறியீடு தாமரை. பண்டைய காலத்தில் கம்போடிய புத்த துறவிகள் தாமரை நாரிழைகளால் பின்னப்பட்டு இயற்கை சாயமிடப்பட்ட ஆடைகளையே  தூய்மை, தெய்வீகத்தன்மை மற்றும் அமைதியை குறிக்க அணிந்தனர். தாய்லாந்திலும் மியான்மரிலும் தாமரை நாரிழைகளிலான ஆடைகள் மிக ஆடம்பரமான உயர்தர ஆடைகளாக கருதப்படுகின்றன.

ஒவ்வொரு நாட்டிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் செய்யப்பட்ட பாரம்பரிய  நாரிழைகளும் ஆடைகளும் உள்ளன. கம்போடியாவின் தாமரை நாரிழைகளாலான ஆடைகள் அவ்வாறான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, ஆனால் மற்ற இயற்கை இழைகளுடன் ஒப்பிடும்போது இவை மிக்குறைவாகவே  பிரபலமாயிருக்கின்றன.

தாமரை நாரிழைகளின் பயன்பாடு சுமார் 150 வருடங்களுக்கு முன்பு 1910 ல்  டா சா ஊ என்னும்  இந்த்தா (intha)பழங்குடி இனப்பெண் ஒருவரால் துவங்கப்பட்டது. (Daw Sa Oo)  அப்பெண்மணி தாமரை இலைகளின் நீண்ட காம்புகளை கத்தரித்து அவற்றிலிருந்து நார்களை சேகரித்து அடுத்த ஒருவருடம் முழுவதும் அவற்றைக்கொண்டு ஆடைகளை நெய்வதில் ஈடுபட்டிருப்பார். அருகிலிருந்த புத்த மடத்தின் துறவிகளுக்கென அவர் அந்த ஆடைகளை உருவாக்கினார்.அவரது மறைவுக்கு பின்னர் அவரது குடும்பத்தினரால் சிறிய அளவில் இத்தொழில் செய்யபடது

 தாமரை இழைகளால் உருவாக்கப்பட்ட ஆடைகளே உலகின்  ஆகச்சிறந்த சுற்றுச்சூழலுக்கு  உகந்த  மற்றும் புனிதமான ஆடை என கருதப்படுகிறது, ஒரு காலத்தில் துறவிகளுக்கு மட்டுமே பயன்பட்ட இவற்றை. இப்போது வணிகமயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்ப்ட்டிருக்கின்றன..

கம்போடியாவின் தாமரை சாகுபடி செய்யப்படும் நீர்வயல்களிலிருந்து Padonma-kya என்று அவர்களால் அழைக்கப்படும் இந்திய தாமரையான Nelumbo nucifera வின் தண்டுகள் அதிகாலைகளில் நறுக்கி அறுவடை செய்யப்பட்டு சேகரிக்கப்படுகின்றன.

 அறுவடை செய்யப்படும் இலைத்தண்டுகளில் நீளவாக்கில் சுமார் 20ருந்து 30 நாரிழைகள் வரை இருக்கும், அவை உருவி எடுக்கப்பட்டு திருகித் திருகி ஒற்றை இழையாக்கப்பட்டு  பின்னர் கழுவி உலர்ந்தபின்னர் மூங்கில் தறிகளில் நெய்து ஆடையாக்கப்படுகின்றன.

தாமரை இழைகளை நெய்கையில் அவ்வப்போது நீர் தெளித்துக்கொண்டே இருக்கவேண்டும் இல்லாவிட்டால் அவை பயன்படுத்த முடியாத அளவிற்கு உலர்ந்துவிடும். தண்டுகள் அறுவடை செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் அவற்றை நெய்துவிடவேண்டும் இல்லாவிட்டால் நார்கள் வீணாகப்போய்விடும். தாமரை இழை நெய்தலில் ஒரு சிறு துண்டு நார் கூட வீணாவதில்லை நீளமான நாரிழைகள் ஆடைகளுக்கு பயன்படும் என்றால் உடைந்த சிறு நாரிழைகள் விளக்குத் திரிகளாக உபயோகிக்கப்படும் 

அறுவடையிலிருந்து ஆடை உருவாக்கம் வரை முழுக்க முழுக்க கைகளாலேயே உருவாக்கப்படும் இச்செயல் அதிக நேரத்தையும், அதிக உடலுழைப்பையும் கோருவது. சுமார் 1,20,000  தண்டுகளிலிருந்து ஒரு ஆடை உருவாக்கப்படும். அதாவது ஒரு சதுர மீட்டர் அளவிலான துணியை உருவாக்க 8000 தாமரைத்தண்டுகளும் 20 நாட்களும் தேவைப்படுகிறது.

முழுக்க முழுக்க இயற்கையான வழிகளில் இந்த நாரிழைகளிலிருந்து ஆடைகள் உருவாவதால் இவற்றிற்கு GOTS  எனப்படும் உலகின் மிக சிறந்த சூழலுக்குகந்த ஆடையிழைகள்  என்னும் அந்தஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது.   (Global Organic Textile Standard) 

தாமரை இழை ஆடைகள் புற ஊதாகதிர்களை தடுக்கும், ஈரத்தை உறிஞ்சும், காற்றை உள்ளே அனுமதிக்கும், மிக மிருதுவாகவும் செளகரியமாகவும் அணிபவர்களுக்கு இருக்கும் மேலும் இவை நீடித்தும் உழைக்கும் தாமரை இழையாடைகளில் கறை படியாது தாமரையைப் போலவே இவையும் தூய்மையானவை.

 இந்த ஆடைகளை அணிபவர்களுக்கு மனஅமைதியும் நல்ல ஆரோக்கியமும் கிடைப்பதாகவும் நம்பப்படுகிறது, பருத்தி மற்றும் லினென் துணிகளுடன் ஒப்பிடுகையில் தாமரை  இழைகளே உயர்ந்த தரத்துடன் இருக்கின்றன

 தாமரை இழைநார் ஆடைகள் மருத்துவதுறை மற்றும் விண்வெளிப் பயணங்களுக்கான உடைகளை உருவாக்க பயன்படுகிறது

 ஹாங்காங், ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் இவ்விழைகளால் உருவாக்கப்பட்ட ஆடைகளுக்கு நல்ல தேவை இருக்கிறது. புத்த துறவிகளும் இவற்றையே விரும்பி அணிகிறார்கள்

உலகளவில்  தாமரை இழைகளில் உருவாக்கபட்ட ஆண்களின் ஆடைகளில் Nomark  சட்டைகளும், பெண்களுக்கான Kyar hi கழுத்துகுட்டைகளூம் (scarf)  பிரபலம். 2012ல் யுனெஸ்கோவின் தனிச்சிறப்பான SOE முத்திரை அந்தஸ்தையும் இவ்விழையாடைகள் பெற்றிருக்கின்றன. (Seal of Excellence). Samatoa என்னும் பிரபல பெயரிலும் தாமரை இழைஆடைகள் சந்தைப்படுத்தப்படுகின்றன. 

கழுத்துக்குட்டை

  சாயமேற்றப்படாத இழைகளின் நிறம் பால் வெண்மையில் இருக்கும், இயற்கை சாயங்களில் ஆரஞ்சு மஞ்சள் நீலம் பச்சை ஆகியவையே இவ்வாடைகளுக்கு நிறமேற்ற அதிகம் பயன்படுகின்றன.

மருத்துவ காரணங்களுகாகவும், தண்டு, வேர்க்க்கிழங்கு ஆகியவற்றின் சத்துக்கள் மற்றும் சுவைக்காக உணவுக்காகவும், அழகிய தூய மலர்களுக்காகவும் மட்டும அறுவடை செய்யப்பட்டுக்கொண்டிருந்த இவற்றின் இலைத்தண்டுகள் வீணாகிக்கொண்டிருந்தன. தற்போது அவற்றிலிருந்து உலகின் மிக அதிக விலையுள்ள மிகத் தரமான ஆடைகள் உருவாககப்படுகின்றன

கம்போடியா, வியட்னாம் மற்றும் மியான்மரிலும், இந்தியாவின் மணிப்பூர் மற்றும் குஜராத்திலும் தாமரைகள் நாரிழைகளின் பொருட்டு சாகுபடி செய்யப்படுகின்றன.  தாமரை இழைகளிலிருந்து ஆடைகள் மட்டுமல்லாது ஆபரணங்களும்  உருவாக்கப்படுகின்றன.

மணிப்பூரின் பிஷ்ணூபுர் மாவட்ட்த்தைச் சேர்ந்த 27 வயது பிஜியஷாந்தி ( Bijiyashanti Tongbram) தாமரை இழையாடை தொழிலை 2019ல் அங்கு பிரபலமாக்கியவர். தாவரவியல் பட்டதாரியான அவரது வீட்டிற்கருகேதான் இந்தியாவின் வடகிழக்கு பிரதேசத்தின் மிகப்பெரிய நீர்நிலையான லோக்டாக் நன்னீர் ஏரியும் (Loktak lake) அதனை சுற்றிலும் ஆயிரக்கணக்கான தாமரைக்கொடிகள் வளர்ந்திருக்கும் பும்டி  என்கிற நூற்றுக்கணக்கான மிதக்கும் மணிபூரின் பிரெத்யேகமான சிறு தீவுத்தொடர்களும் உள்ளன.கம்போடியாவின் தாமரைநாரிழை தொழிலைக்கேள்விப்பட்டு அது குறித்தான ஏராளமான காணொளிகளையும் பார்த்து தானும் தாமரைநார் பிரித்தெடுக்கும் தொழிலில் ஈடுபட்டார் பிஜியஷாந்தி

பிஜியஷாந்தி

அவருடைய சொந்த நிறுவனமான சனாஜிங் சனா தம்பால் (‘Sanajing Sana Thambal’) தாமரை நாரிழைகளை தயாரிப்பதோடு அந்த ஊர்பெண்களுக்கும் இத்தொழிலில் வேலைவாய்ப்பும் வழங்குகின்றது. சமீபத்திய மனதின் குரல் நிகழ்வில் திரு நரேந்திர மோடி பிஜிஷாந்தியின் இம்முயற்சியை வெகுவாகப் பாராட்டினர்.

மணிப்பூரின் பும்டி மிதக்கும் தீவுகள்