சரணுக்கு நான் சொல்லி ச்சொல்லி வசந்த சார் மீது அளவற்ற மதிப்பும் பிரியமும் இருந்தது. இடையிடையே இந்தியா வரும்போதெல்லாம் தடுப்பூசியோ அல்லது சிகிச்சைகளின் பொருட்டொ சரணுக்கு ஊசி போட வேண்டி வந்தால் ஒருபோதும் வசந்த அதைச் செய்யமாட்டார் ’செல்ஸ்’ என்று குரல் கொடுப்பார் செலினாதான் போடுவார்கள்.சரணுக்கு இன்றும் ஊசி என்றால் குலை நடுங்கும். ஒரு முறை மைசூரு சென்று வந்தபோது வசந்த் சாருக்கெனச் சிறு கள்ளிச்செடி வாங்கி வந்து பரிசளித்தான் அதையும் அவன் பரிசளித்த ஒரு குட்டி பொம்மையையும் அவர் தனது மருத்துவமனை மேசையில் பல காலம் வைத்திருந்தார்.
அபுதாபியில் ஒருநாள் வீட்டைப் பகிர்ந்து கொண்டிருந்த ஒரு பெண்ணின் சகோதரியின் கணவர் காலமாகி விட்டார் என்று கேரளாவிலிருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பிற்கு அந்த ப்பெண் என்னை ’சேச்சி’ என்று கட்டிக்கொண்டு கதறியபோது சரண் அரண்டு போய் ’’என்ன என்ன’’ என்று அழுகையுடன் கேட்டான். ’’இந்த அத்தையின் சொந்தக்காரர் செத்துப்போயிட்டாரம் சரண்’’ என்று நான் சொன்னதும் அவன் என்னைக் கட்டிக்கொண்டு ’’அதான் வசந்த் டாக்டர் இருக்காரில்ல அவர் காப்பாத்துவாரு காப்பாத்துவாரு, அழுகாதே’’ என்று வீறிட்டான். இதை என்றைகாவது வசந்த் சாரிடம் சொல்லவேண்டும் என்றிருக்கிறேன்.
ஒருமுறை ஜெயந்தி கிருஷ்ணசாமி தம்பதிகளுடன் முஸாஃபாவிலிருந்து அபுதாபிக்கு சென்றிருக்கையில் இரவில் கார் கதவின் கண்ணாடி வழியே பிறைநிலவை பார்த்தபடி ’’அம்மா பாதி நிலா இங்கே இருக்கு மீதி நிலா எங்கே இருக்கு’’? என்றான் கவிதையாக.
சுட்டி விகடனில் வரும் சின்ன சின்னப் போட்டிகளை அவனுக்கு சொல்லிப் புரியவைத்து, அவன் சொல்லும் பதில்களை விகடனுக்கு எழுதிப் போடுவேன் அப்படியொரு புதிர்ப்போட்டி பதிலுக்கு அவனை ’’குட்டி ஷெர்லக் ஹோம்’’ என்று சொல்லிய ஒரு சான்றிதழ் வந்தது.
விகடன் படித்துமுடித்துவிட்டால் மேலும் கதைகள் கேட்பான் எனவே நானே இட்டுக்கட்டிய கதைகளைத் தொடர்ந்து சொல்லுவேன். தட்டிக்கொடுப்பதையும் கதையையும் எப்போது நிறுத்தினாலும் விழித்துக்கொண்டு மீண்டும் சொல்லச் சொல்லுவான்.
கணினியில் எளிய விளையாட்டுக்களை என்னுடன் சேர்ந்து என் கைகளின் மீது அவன் சிறு கையை வைத்து அவனும் விளையாடுவான். கணினி அவனுக்கு மிகப் பரிச்சயமானதும் பிடித்தமானதுமாகிக்கொண்டிருந்தது.
அருகிலிருந்த ஏர்போர்ட் பார்க்குக்கு மாலைவேளைகளில் அவனை அவன் தோழிகள் சியா, சிது அல்லது நவ்யா ஆகியோரின் குடும்பத்துடன் அழைத்துச் செல்வதுமுண்டு.சியா சிது குடும்பத்தினர் மாப்ளா முஸ்லிம்கள் எங்களுடன் வீட்டைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். என்னை ’மூத்தம்மே’ என்றழைக்கும் சியாவுக்கும் சரணுக்கும் மிகபிடித்தமான விளையாட்டு வீட்டில் இருக்கும் பெரிய காலி அட்டைப்பெட்டிகளுக்குள் அமர்ந்துகொள்வது.
முஸாஃபாவில் அப்போதுதான் அமைந்திருந்த கேரிஃபோர் பிரம்மாண்ட மாலுக்கு முதன்முறை சென்றிருக்கையில் அங்கிருந்த கூட்டத்தில் சரண் தொலைந்து போனான் வளாகம் முழுக்க அனைத்து தளங்களிலும் அறிவிப்பு செய்த பின்னர் எங்கிருந்தோ அலமாரிகளுக்கிடையில் விளையாடிக்கொண்டிருந்தவனை அரபி ஒருவர் கண்டுபிடித்து க்கொண்டு வந்தார்.
அதே கேரிபோரில் தள்ளுவண்டியில் முன்பக்க கூடையில் சரண் அமர்ந்துகொண்டிருந்த ஒருநாளில் அமைதியாய் கூடையில்நான் எடுத்துப்போடும் பொருட்களைப் பார்த்தபடி வந்துகொண்டிருந்தவன் ஃபேர் அண்ட் லவ்லி எடுத்துபோடப்பட்டதும் அலறி ’’இது வேண்டாம் வேண்டாம்’’ என அழத்துவங்கினான்
அவனை என்ன சொல்லியும் சமாதானம் செய்ய முடியவில்லை ’’இது அம்மா முகத்துக்குப் போடறதுக்குடா’’ என்றபோது வீறிடுதல் இன்னும் அதிகமானது.பின்னர் அதை எடுக்கவேயில்லை.
அடுத்த வெள்ளியன்று மாலை சன் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கையில் ஃபேர் லவ்லி விளம்பரம் வந்தது. ஆறே நாட்களில் சிகப்பழகு என்னும் அந்த விளம்பரப்பெண்ணின் முகமாறுபாடுகள் அடுக்கடுக்காகக் காண்பிக்கப்பட்டபோது சரண் அச்சத்துடன் ’’அம்மா பாத்தியா அந்த கீம் போட்டா உனக்கும் இப்படி நிறைய மூஞ்கி வந்துரும் அப்புறம் உன்னைப் பார்த்தா எனக்குப் பயமாயிரும்’’ என்றான்.
அவன் பிரியதுக்குரியவளாக ரீமா சென் இருந்தாள். சாப்பிட அடம்பிடிக்கும் சரணுக்கென்றே அவளின் ’’மே மாதம் 98ல்’’ பாடலைப் பதிவு செய்து வைத்திருந்தேன். ரயில் நிலையத்தில் ரீமா சென் கனத்த தொடைகளை தட்டிக்கொண்டு குதித்தாடத் துவங்கினால் சரணும் வாயைத்திறந்து பார்ப்பான் மட மடவென்று சாதம் ஊட்டி முடித்துவிடுவேன்.
(சரணின் 25-ம் பிறந்த நாளான 4/4/25 அன்று திருத்திய வடிவம்)
இன்று சரணின் 23 ம் பிறந்த நாள் காலம் எத்தனை வேகமாக ஓடி விட்டது என்று நினைக்கையில் பிரமிப்பாக இருக்கிறது. அபுதாபியில் உஷா என்னும் அரபி பேசத்தெரிந்த அண்டை வீட்டுப் பெண்ணுடன் அரசாங்க மருத்துவமனைக்கு சென்று கர்ப்பத்தை உறுதி செய்துவிட்டு டாக்ஸியில் வீடு திரும்பிய நாள் நேற்று போல நினைவிலிருக்கிறது.
சரண் வயிற்றில் இருக்கையில் அவனுக்கு போஷாக்கான உணவுகள் என் வழியே அளிக்க முடிந்ததில்லை என்னும் மனக்குறை இன்றும் இருக்கிறது, என்றும் இருக்கும். இளம் வயதில் அவனது உடல்நிலை சரியில்லாமல் போகும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அந்த குற்ற உணர்ச்சி என்னை கொல்லும்.
தாம்பத்யத்தின் துவக்க கால சிடுக்குகளில் சிக்குண்டு இருந்த காலத்தில் சரண் உருவாகி இருந்தான். படிப்பு, வேலை ,கனவுகள், உற்றார், உறவுகள் என அனைத்தையும் விட்டுவிட்டு கண்காணாத பாலை நிலத்துக்கு வந்த அதிர்ச்சியே விலகாத நிலையில் கர்ப்பம், அதுசார்ந்த உடல் கோளாறுகள், அதீத பசி, சமைக்க முடியாமல் இருந்தது, உதவிக்கு மட்டுமல்ல மனம் விட்டு பேசவும் யாரும் அருகில் இல்லாதது, பொருளாதார சார்பு, இப்படி பல சிக்கல்கள் என்னைச் சூழ்ந்திருந்தன. வார இறுதிகளில் வீட்டில் இருப்பவர்களுடன் பேசுகையில் எனக்கு அவர்களிடம் சொல்லிக்கொள்ள ஒன்றுமே இருந்ததில்லை. ஆனால் எந்தப்புகாரும் இன்றி என்னை எல்லாவற்றிற்கும் ஒப்புக்கொடுத்துக்கொண்டு வாழத்துவங்கி இருந்தகாலமது
வயிற்றில் சரண் துடிப்பை உணர ஆரம்பித்த நாட்களில் நான் மெல்ல மெல்ல மாறினேன், எனக்குள் ஒரு உயிர் வளர்வது பெரும் நம்பிக்கையைப், பொறுப்பைப், பிடிப்பை வாழ்வின் மீதான விருப்பை மீண்டும் அளித்தது.
எனக்கு என்னை நம்பி என் வயிற்றில் ஓருயிர் என்பதுவும் என்னால் ஒரு உயிரை தரமுடியும் என்பதுவும் பெரும் உத்வேகத்தை அந்தச் சிக்கலான சமயத்தில் அளித்தது.
சரணுக்கு நானும் அவன் எனக்கும் பரஸ்பரம் உயிர்கொடுத்துக்கொண்டோம் என்றும் சொல்லலாம்..
அச்சமயத்தில் எனக்கு மிகத் தேவையாயிருந்த ஓய்வும் பொருளாதார காரணங்களுக்காக உடன் தங்க அனுமதித்திருந்த மற்றொரு குடும்பத்தினால் முற்றிலும் இல்லாமல் போயிருந்தது. கொடுங்கனவு போலான நாட்கள் அவை.
கிருஷி விஞ்ஞான் கேந்திராவின் மூலம் கிடைத்திருந்த சணல் ஆய்வு மையத்தின் சயின்டிஸ்ட் பணியை குடும்பத்தினரால் இழந்து, கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்து , அதையும் கல்யாணத்தின் பொருட்டு ராஜி வைத்துவிட்டு வந்த இழப்பின் வலி எப்போதும் இருந்த நாட்கள் அவை. கல்யணத்துக்கு முன்பு கல்லூரியில் சேர்ந்த பிறகு எழுதவும் துவங்கி இருந்தேன். ஆதித்தனார் நினைவு போட்டிக்கென சரக்கொன்றை என்னும் முழுநாவலை கைப்பட எழுதி முடித்து அதை தட்டச்ச காத்திருந்தேன். நான் இழந்த பலவற்றில் அதுவும் ஒன்று.
கண்ணில் பசுமையே தட்டுப்படாமல் உள்ளும் புறமும் வெறிச்சோடியிருந்த பாலைவாழ்வு. மணற்புயல் ஏஸி அமைப்பின் வழியே வீடங்கும் அடிக்கடி மண்ணை நிறைத்துவிட்டு போகும் அதைச் சரிசெய்யக்கூட தோன்றாமல் மலைத்து போய் களைத்தமர்ந்திருப்பேன்.
குமட்டி வாயுமிழ்ந்துவிட்டு மீண்டும் சமைக்க வருவேன் இது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கெல்லாமே உண்டாவதுதான் எனினும் எனக்கு அருகில் உதவிக்கென யாருமற்ற நிராதரவான நிலையென்பதால் எல்லாமே அதீதமாக இருந்தது. அப்போது எனக்கு அன்புடன் உதவி செய்ததாக நான் நினைத்த ஒரு பெண் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம் தெரிய வந்தபோது தருண் பிறந்திருந்தான். அவள் வீட்டில் நான் கர்ப்ப காலத்தில் ருசித்து உண்ட உணவின் ஒவ்வொரு பருக்கையும் மனதில் செரிக்கவே இல்லை.பிரசவத்துக்கு இந்தியா வந்தேன்.
விமானப் பயணத் தகுதியையும் கடந்து 9 மாதங்கள் முடிந்த நிலையில் போலியாக ஒரு பயணத் தகுதிச் சான்றிதழ் வாங்கி ஒரு வழியாக இந்தியாவுக்கு வர விமானப்பயணம் உறுதியானது. அங்கு சென்றதிலிருந்து வியர்வை சுரக்காமல் கர்ப்பகால பருமனும் சேர்ந்து எடை கூடி விட்டிருந்தது ஆளும் உருமாறியிருந்தேன். அந்த 9 மாதங்களில் எனக்கு நிகழ்ந்தது ஆளுமைச்சிதைவென்று இப்போது நிதானத்தில் இருக்கையில் அறிய முடிகின்றது.
என்னையும் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் யாரோ எதோ செய்துவிடுவார்கள் என்னும் அச்சம் ஒவ்வொரு நொடியும் பீடித்திருந்தது. யாரும் சாப்பிட எதாவது கொடுத்தனுப்பினால் அவற்றை ரகசியமாக சின்க்கில் கழுவி ஊற்றி விடுவேன்.
கடும் பசியும் சில குறிப்பிட்ட உணவுகளின் பேரிலான பெரு விருப்பமும் அவற்றை உண்ண முடியாத ஏக்கமுமாக கழிந்த அந்த கர்ப்பகால ஆதங்கம் இன்னும் இருக்கிறது.
எப்பாடு பட்டாவது குழந்தையை, துர்கா என்று நான் பேர் வைத்திருந்த மகளை காப்பாற்ற வேண்டும் என்று சதா நினைப்பிருக்கும். இந்தியாவுக்கு பயணிக்கையில் அபுதாபி வந்து ராகவன் அகல்யா வீட்டில் தங்கி இருந்தேன் ஒரிரவு. அவர்களது சிறுமகனின் விளையாட்டு கார் பொம்மைகள் இனம்புரியா கிளர்ச்சியை உண்டாக்கின அச்சமயத்தில்
காலை விமானத்தில் தன்னந்தனியே வயிற்றுக் குழந்தையை தடவிக்கொண்டு அமந்திருந்தேன். அம்மா வீட்டுக்கு வருவதிலும் பெரிய ஆர்வமும் விருப்பமும் இல்லாமல் இருந்தது, இருந்தும் தாம்பத்தியத்தில் இருக்கவேண்டிய அன்பு பாசம் காதல் இவற்றைக்காட்டிலும் சம்பிரதாயங்கள் முதன்மையாக கருதப்பட்டதால் தாய்வீட்டுக்கு செல்லவேண்டி வந்தது. ஒருவகையில் அந்த பாலையிலிருந்தும் ஓயாத பணிகளிலிருந்தும் தற்காலிகமாகவேனும் விடுபட்டு வந்தது ஆசுவாசமாயிருந்தது என்னவோ உண்மைதான்.ஆனால் வாணலிக்கு பயந்து அடுப்பில் விழுந்த கதைதான் மீண்டும் நடந்தது
கோவை விமான நிலையத்தில் ஏதோ பழுது காரணமாக விமானம் ஒரு டன் செங்கல்லை போல் டமாரென்று தரையிறங்கியதும் எனக்கு இடது பக்க முகம் முழுவதும் உணர்ச்சியற்று மரத்துப்போனதுபோல ஆனது அச்சமயதில் அந்த பக்க பார்வையும் மங்கிவிட்டது. சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு தான் மீண்டும் பார்வையும் முகமும் சீரானது.
விமான நிலையத்தில் அக்கா அம்மா அப்பா விஜி காத்திருந்தனர். அனைவருக்கும் என் உடல் எடை கூடியிருந்தது பெரும் திகைப்பை உண்டாக்கி இருந்தது.
எனக்கு முகத்தில் இப்படி நேர்ந்ததை சொன்னந்தும் நேராக ஆல்வா மருத்துவமனைக்கே செல்ல முடிவானது.
ஆல்வா முதன்முறையாக நீங்க போய் பாபுவை பாருங்க என்றார்
பாபு என்றது அவரது மகன் மருத்துவர் வசந்தை
நான் வசந்தைக் குறித்து முன்னர் கேள்விப்பட்டிருக்கிறேன் என்னை விட சற்று மூத்தவர், அவரது சகோதரி மித்ராவின் பள்ளித் தோழி.
ஆனால் அவரை ஒருபோதும் சந்தித்ததே இல்லை.அதன்பிறகு பல நூறு முறை சென்று குடும்பத்தில் பலரும் உயிருடன் இருக்கக் காரணமாயிருந்த அம்பராம்பாளையம் மருத்துவமனைக்கு அன்றிரவு தான் முதன் முதலில் சென்றேன்.
வசந்த் சார் அறையில் காத்திருந்தார். ஒரு ஸ்கேன் எடுத்து விட்டு அங்கே புதிதாக வந்திருந்த பெண் மருத்துவர் பிரசித் மரியா என்று நினைவு அவரை சந்திக்கச் சொல்லி ஒரு சிறு குறிப்பை எழுதித்தந்தார்.எதிரில் அமைந்திருந்த அவரின் அறைக்கு நான் அந்த குறிப்புடன் அறையை விட்டு வெளி வருவதற்குள் மீண்டும் அழைத்து அதில் தான் எழுதியிருந்த please see logamadevi my friend என்றிருந்ததை அடித்து our family friend என்று எழுதிக்கொடுத்தார்.
செலினா என்னும் தாயைபோல் பிற்பாடு பல சந்தர்ப்பங்களில் என்னை கவனித்துக்கொண்ட செவிலியையும் அன்றுதான் சந்தித்தேன். என்னை பரிசோதித்து விட்டு மருத்துவர் எல்லாம் நலமாக உள்ளது என்றும் ஸ்கேனில் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொன்னதால் நான் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இன்னும் ஒருவாரத்தில் பிரசவம் ஆகிவிடும் என்பதை மட்டும் கேட்டுக்கொண்டு வீடு திரும்பினேன்.
வெளிநாட்டில் இருந்து வந்திருந்ததால் பலர் என்னை வந்து பார்த்தார்கள். பலகாரங்கள் பூக்களால் நிறைந்திருந்தது வீடு
ஆசிரியர் ராஜ்குமார் சாரும் அவரது மனைவியும் எனக்கு பலகாரங்கள் வாங்கி வந்திருந்தனர் மாலைநேரத்தில் அப்பாவுடன் நடந்து போய் ஒரு இளநீரை (நான் பணம் கொடுத்து) வாங்கிக் குடித்துவிட்டு வருவேன் சிலநாட்கள்
ஈரோட்டில் சிம்னி என்னும் ஹோட்டலில், வளைகாப்பு அதிலும் எனக்கு நினைவு வைத்துக்கொள்ளும்படியாக ஏதும் இல்லை. குடும்பத்து ஆண்களின் பெருமிதமும் அன்பும் காதலும் அறிவும் பண்பும் பல தலைமுறை தொடர்ச்சியாக வரவேண்டுமல்லவா எனவே எனக்கும்ஆண் குழந்தையாக பிறக்கட்டுமென்று மடியில் கொஞ்சம் வளர்ந்துவிட்டிருந்த இந்திரா அக்காவின் மகன் ப்ரதீப்பை அமரவைத்தார்கள் இன்னும் மணமாகி இருக்காத பாப்பிக்காவை நேரிட்டுப் பார்க்கச் சங்கடப்பட்டேன்
ருக்மணி அத்தை நீ படற பாட்டை பாத்தா இன்னும் ரெண்டு நாளில் பிரசவம் ஆயிரும் போலிருக்கே என்றார்கள்.
மித்ரா வழக்கம் போல பல பழைய விஷயங்களை மிகைப் படுத்திக்கொண்டு வழியெங்கும் கதறி அழுது என்னையும் அழவைத்துக்கொண்டு வந்த அந்த இரவுக் கார்ப் பயணம் மட்டும் நினைவில் இருக்கிறது. ஒரு சிக்னலில் கார் காத்திருக்கையில் ஒரு இளைஞன் என்னவோ விற்பனை செய்ய வந்தான், பட்டுப்புடவை , பூவும் நகைகளுமாய் இருந்துகொண்டு கண்ணீருடன் இருந்த என்னை பார்த்து திகைத்து விலகிச் சென்றான்.
அம்மாஅப்பா நிறைகர்ப்பிணியாயிருந்த என்னை எப்படி கவனித்துக்கொண்டார்கள் என்பதை நான் எழுத்திலும் குறிப்பிட விரும்பவில்லை.
ஒருநாள் வீட்டில் யாரும் இல்லாதபோது குனிந்து நிமிர்ந்து வீட்டை பெருக்கினால் சுகப்பிரசவம் ஆகும் சிசேரியனுக்கு செலவும் குறையும் என்னும் அம்மாவின் நிர்தாட்சண்யமான கருத்துப்படி கூட்டிப் பெருக்கிக்கொண்டிருக்கையில் அந்த ஸ்கேன் ரிப்போர்டை எடுத்து வாசித்தேன் அதில் குழந்தையின் மூளை ரத்த நாளங்களில் ஒன்று விரிவடைந்திருப்பதாக குறிப்பிட்டிருந்தது. என்னிடம் அதைக் காண்பிக்காமல் வைத்திருந்திருக்கிறார்கள்.
ஈரக்குலை நடுங்குவது என்றால் என்னவென்று அன்று உணர்ந்தேன் கதறி அழுது வீட்டுக்கு அப்பா, விஜி வந்ததும் உடனே வசந்த் டாக்டரை பார்க்கவேன்டும் என ஆர்ப்பாட்டம் செய்து புறப்பட்டேன்.அப்பாவிடம் அப்போது அம்பாஸடர் கார் இருந்தது.
வசந்த் சார் பொறுமையாக அன்று விமானம் தரையிறங்கிய அந்த அதிர்வில் இப்படி டைலேட் ஆகியிருக்கும் ஆனாலும் அதுவே சரியாகிவிடும் வாய்ப்புமிருப்பதால் கவலைப்படத் தேவையில்லை என்று தைரியம் கூறினார் அன்றிலிருந்து சரண் நலமுடன் பிறந்த 4 ம் தேதிவரை அச்சம் என்னைநிழல் போலப் பின்தொடர்ந்தது
பிரசவத்துக்கு குறிப்பிட்ட நாளும் கடந்துவிட்டதால் வசந்த் மருத்துவமனைக்கு வந்து தங்கிவிட சொன்னார்
கருப்பை சுருங்கி விரியும் அறிகுறி இல்லாததால் அதற்கான ஆக்சிடாசின் ஜெல் தடவியும் வலிவரவில்லை. தனா அக்கா உடனிருந்தார்கள் அறுவை சிகிச்சை என முடிவானது அறுவை சிகிச்சையை குறித்தும் முதல் பிரசவம் குறித்தும் எனக்கு சிறிதும் பயமேயில்லை சிசேரியனுக்கு ஆகும் செலவை எண்ணிக்கொண்டிருக்கும் அம்மாவை பார்க்கத்தான் பயமாயிருந்தது.
தலை பாதங்களில் படும்படி முதுகை வளைத்து உச்சகட்ட வலியை கொடுத்த அந்த ஊசியை முதுகுத்தண்டுவடத்தில் செலுத்தி என் கண்களை கட்டியபின் அவர்களுக்குள் பேசிக்கொண்டே அறுவை சிகிச்சை செய்தார்கள். சரணின் அழுகுரல் கேட்டது. செலினா சிஸ்டர் காதில் பையன் என்றார்கள்.
நான் அம்மா ஆகிவிட்டேன் என்று அந்த அழுகுரல் எனக்கு உணர்த்தியது. ஆனால் வேறு ஏதும் நினைக்குமுன்பே மயக்கமானேன், பிறகு வெகுநேரம் கழித்து என்னை ஸ்ட்ரெச்சரில் அறைக்கு தள்ளிக் கொண்டு போகையில் தான் தனாக்கா எனக்களிக்கப்பட்டிருந்த அறை என் 8 என்பதை கவனித்து செவிலியரை கடிந்துகொண்டு வேறு அறை அளிக்க உத்தரவிட்டார்கள்
மயக்கமா உறக்கமா என்று தெரியாமல் சிலமணி நேரம் கழிந்தபின்னரே சரணை காட்டினர்கள் பூப்போல இருந்தான் கைவிரல்களை இறுக்க மூடியிருந்தான் கண்களும் மூடி இருந்தது மிகச்சிறிய சின்னஞ்சிறிய ஓருயிர், பசி பொறுக்கமாட்டான்.
அச்சமயம் ஒரு அன்னையாகி இருப்பது என்னவென்று பெண்களுக்கு மட்டுமே புரியுமென்று நினைக்கிறேன்.அந்த பொங்கிப்பெருகும் உணர்வை எழுத்தில் கொண்டுவரமுடியாது
மித்ரா குழந்தையின் கைவிரல்கள், நகம் ஆகியவற்றில் குற்றம் கண்டுபிடித்தாள் எனக்கு அவளை நினைந்து ஆச்சர்யமாக இருந்தது ஆறுமுகம் சார் சொல்லுவாரே எஜுகேட்டெட்இல்லிட்ட்டெரேட் என்று. மறுநாளே கொசுக்கடி, வசதிகுறைவான அறையின் உறக்கம் இவற்றின் பொருட்டு மாமா அழைத்து திட்டுகிறாரென்னும் வழக்கமான பொய்யை சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றாள்
அம்மா கணக்குப்போட்டது போலவும் நான் பயந்தது போலவும் இல்லாமல் 13 ஆயிரம் ரூபாய்களே வசந்த சார் கட்டணமாக கேட்டிருந்தார். இத்தனைக்கும் நானிருந்த அறைக்கு அருகில் இருந்த மற்றொரு அறைக்கும் இடையில் ஒரு கதவு இருந்ததால் அந்த அறையும் எங்களுக்கே வசந்த் சார் அளித்திருந்தார். எனவே இரண்டு அறைகளிலும் வசதியாக தங்கிகொண்டிருந்தோம். வசந்த் என்னும் மருத்துவரை, மாமனிதரை குறித்தறிந்து கொள்ள துவங்கிய நாட்கள் அவை.
வீட்டுக்கு வந்தும் ஓய்வின்றி உடனே அபுதாபி புறப்பட ஆயுத்தங்கள் நடந்தன என்னை யாரும் ஏன் பச்சை உடம்புடன், அறுவை சிகிச்சை செய்துகொண்ட உடம்புடன் உடனே போகிறாய்? இத்தனை சிறிய குழந்தையை எப்படி வளர்ப்பாய் என்று கேட்கவில்லை நானும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு இரண்டுமே வாழ்விடங்கள் அல்ல வசிப்பிடங்கள் என்பது தெரிந்திருந்தது.
உன் உடல் முற்றிலும் கட்டுக்குலைந்து மாறிவிட்டிருந்ததைக்கூட வேறொருவர் சொன்ன பின்னர் கவனித்தேன். அதைகுறித்து எனக்கு புகாரெல்லாம் இல்லை நான் அந்த 1 வருடத்தில் எத்தனையோ மாற்றங்களுக்கு உள்ளாகி இருந்தேன் பலவற்றை இழந்திருந்தேன் குறிப்பாக என் சுயசார்பையும் தன்மதிப்பையும் எனவே உடல் மாற்றத்தை ஒரு பொருட்டாக நினைக்கவே இல்லை.
சரண் என்று பெயரிடுவதில் ஒரு சிக்கல் வந்தது ஆனால் நான் அந்த பெயர் வைக்க உறுதியாக இருந்தேன்,மருத்துவமனையிலேயெ பிறப்புச்சான்றிதழ் வாங்க வேண்டி வந்ததால் அப்பொழுதே பெயர் வைத்தாயிற்று.
அதே உடம்புடன் சரணை எடுத்துக்கொண்டு ஈரோடு செல்லும் சம்பிரதாயம் அங்கே தங்க வேண்டிய சம்பிரதாயம் அங்கிருப்பவர்களும் குழந்தையை பார்க்க வேண்டும் என்னும் சம்பிரதாயம்,
பச்சை உடம்புக்காரிக்கும் பச்சிளம்சிசுவுக்கும் சில செளகரியங்கள் அடைப்படையான வசதிகள் தேவை பயணத்தை என் உடல் தாங்குமா என்றெல்லாம் யோசிக்க யாருக்கும் நேரமும் மனமும் இல்லை. காருக்கு எரிபொருள் போடுவதிலிருந்து மருத்துவ செலவு வரை அம்மா அப்பாவையோ சரண் அப்பாவையோ சார்ந்திருக்கும் புதிய அவல நிலை என்னை கீழானவளாக உணரசெய்து கொண்டிருந்தது.
பத்திய சாப்பாடு, பால் ஊற சிறப்பு உணவு கருப்பை சுருங்க லேகியம் இவை எல்லாம் நான் இன்னும் கதைகளில்தான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு கிடைக்காதவைகள் நானிழந்தவைகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக அளிக்க சரண் வந்திருக்கிறான் என்னும் ஒரே எண்ணம் மட்டும் ஆழப்பதிந்திருந்தது.
அதே உடம்புடன் பச்சிளம் சரணை எடுத்துக்கொண்டு கோவைக்கு அலைந்து பாஸ்போர்ட் எடுத்து அவனுக்கு 21 நாள் ஆகி இருக்கையில் அவனை சரியாக பிடித்துக்கொள்ளக்கூட தெரியாத நான் கோவை விமான நிலையத்திலிருந்து அபுதாபி சென்றேன்.
விமானத்தில் ஒரு மூத்த பணிப்பெண் அவன் தலையை சேர்த்து பாதுகாப்பாக எப்படி பிடித்து கொள்வது என கற்றுக்கொடுத்தார்
இருக்கையின் முன்பாக ஒரு சிறு தொட்டில், கடைகளில் எடை பார்க்கும் சில்வர் ட்ரே போல இருக்கும் அதில் வெல்வெட் போர்த்தப்பட்டிருக்கும், அதை என் முன்னே கொண்டு வந்து வைத்தார்கள் அதில் சரணைப் படுக்க வைத்தேன் எனினும் விமானப்பயணம் எனக்கெப்போதும் அளிக்கும் அச்சத்தில் ஒருவேளை விபத்தேற்பட்டால் சரணும் நானும் தனித்தனியே பிரிய நேரிடும் என்று தீவிரமாக யோசித்து அவனை மடியில் வைத்துக்கொண்டேன்.அவன் பசியாற்றவும் விமான இருக்கையில் பெரும் சிரமம் இருந்ததுஒருவழியாக அபுதாபி சென்று சேர்ந்தேன்.
அபுதாபி வாழ்வில் தொடர்ந்த இருளிலும் சிறு சுடராக சரணே ஒளியேற்றிக்கொண்டிருந்தான்.
நல்ல உருண்டை முகமும் சுருட்டை தலைமுடியுமாக வளர துவங்கினான். டுட்டூ என்று எதோ ஒரு கதையில் வாசித்த பெயர் எனக்கு பிடித்து அதையே அவன்செல்லப்பெயராக்கினேன், விஜி அவனை டிப்பு குமார் என்று அழைப்பான்
அவனுக்கு அப்போது நல்ல உணவுகள் அளிக்க முடிந்தது. தாய் பகை குட்டி உறவென்னும் நம் மரபு வேடிக்கையானது.
ஆனால் ஒரு வயதிருக்கையில அவனுக்கு எதனாலோ ஒவ்வாமை வந்தது எப்போதும் வாயுமிழ்தலும் வயிற்றுப்போக்குமாக இருந்து மெலிந்துபோனான்
அந்த குளிருட்டப்பட்ட வீடா, மணற்புயலால் வந்துசேரும் துகள்களா அல்லது உணவா எதுவென்று தெரியவில்லை எனினும் ஒவ்வொருநாளும் அவதிப்பட்டான். ஒவ்வொரு இரவும் நிச்சயம் வாயுமிழ்வான் எனவே அவனுக்கு மூச்சுதிணறிவிடும் என்று பயந்து கண்விழித்துப்பார்த்தபடிக்கே இருப்பேன் எப்போதுமவன் வாயுமிழ்வதை பிடிக்க ஒரு பாத்திரம் படுக்கைக்கு அருகில் இருக்கும்
ஓரிரவு கூட நான் முழுக்க உறங்கி இருக்கவில்லை
கடற்கரைக்கு சென்று வந்த ஒரு நாள் ஏதோ விஷப் பூச்சி கடித்து அவன் கால்களிரண்டும் வீங்கி இறுகி விட்டது வலியில் துடிதுடித்தான், ஒரு இந்திய மருத்துவர் உடனே அவனை ஸ்பெலிஷ்டிடம் காட்ட வேண்டும் என்றார். யாருக்கும் அது என்னவென்றும் எப்படி குணமாக்குவது என்றும் தெரியவே இல்லை
இந்தியாவுக்கு எத்தனை முறை போன் முயன்றும் அன்று வசந்த உட்பட யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை, கருத்து நீலம் பாரித்த கால்களுடன் வீறிட்டு அலறிகொண்டே இருந்த சரணுக்கு ஒரு இளஞ்சிவப்பு லோஷனை தடவியபடி எல்லா கடவுள்களையும் வேண்டிகொண்டு இரவெல்லாம் சுவரில் தலைசாய்த்து மடியில் அவனை போட்டுக்கொண்டு விழிந்திருந்தேன் சரண் அழுதழுது களைத்து உறங்கிப்போயிருந்தான் காலையில் அவன் கால் வீக்கம் வடிந்து தெய்வாதீனமாக முன்பு போல சரியாக இருந்தது,
அவனை கையில் வைத்துக்கொண்டு வீட்டுவேலைகள் துணி துவைப்பது உட்பட செய்து முடித்து குளிக்கப்போகையில் மட்டும் அவனைச் சுற்றி தலையணை அமைத்துவிட்டு போவேன். என் இன்மையை எப்படியோ கண்டுபிடித்துக் கதற துவங்குவான்.
வீட்டுவேலைகளை முடித்தபின்னர் அவனை மடியிலிருத்திக்கொண்டு கணினித்திரையில் சுட்டிவிகடனில் சித்திரக்கதைகளை காட்டிக்காட்டி கதை சொல்லுவேன் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பான்
ராய் அவனை உள்ளார்ந்த அன்புடன் சரண் சிங்கே என்றழைப்பார் சரணுக்கு இரண்டு வயதாகும் போது தருண் வயிற்றில். அந்த காலகட்டம் மற்றுமோர் கொடுங்கனவு. இந்தியாவுக்கும் அபுதாபிக்குமாக பந்தாடப் பட்டேன்.
கர்ப்பமாக சிறு மகனையும் தூக்கிக்கொண்டு கல்லூரிக்கு ஒருநாள் மதிய வெயிலில் வந்தேன். செயலாளர் இப்போது மீண்டும் பேராசிரியர் வேலை தரும்படி இல்லை என்றார். மெல்ல மாடிப்படி ஏறி நான் அமர்ந்திருந்த அறை லேப் எல்லாம் எட்டிப்பார்த்துவிட்டு வந்தேன். லேபில் எனக்கு பதிலாக வந்த கண்ணன் என்பவர் என்னவோ சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தார். வீட்டுக்கு திரும்பி வந்து குளியலறையில் கதறி அழுதேன்.
சரண் ஐந்து வயதாகும் வரை அங்கிருந்தான் அதற்குள் அவனது சிறு சைக்கிளை சைக்கிளுக்கென்றமைக்கப்பட்டிருக்கும் சிறுநடைபாதையில் அவனாக ஓட்டிக்கொண்டு செல்வது வழக்கமாகி இருந்தது.
1வயது வரை அவன் பேச துவங்கவில்லை பின்னர் மெதுவே மாமா அம்மா அப்பா என துவங்கினான் எப்போதும் புத்தகங்கள் பார்த்துக்கொண்டிருப்பதில் பெருவிருப்பம் கொண்டிருந்தான்.
வண்ணப்புகைப்படங்களை கண்கொட்டாமல் பார்ப்பான் விமான பயணத்தில் கொடுத்த பஸில் விளையாட்டு அட்டைகளை அறை முழுவதும் பரப்பி வைத்து அவற்றின் வடிவங்களை பொருத்தி விளையாடுவதும் ஒரு சிறு நடைவண்டியை அதன் பல விளக்குகள் மினுங்க ஓட்டிச்செல்வதும் பிடிக்கும் அவனுக்கு.
இட்லி தட்டில் எஞ்சியிருக்கும் துணுக்குகள் அவனது விருப்ப உணவு.
2022 விஷ்ணுபுரம் விழா அமர்வுகளில் ஒன்றில்தான் முதன்முதலில் அகர முதல்வனை கண்டேன். அதற்கு முன்பு அவரைச் சந்தித்ததில்லை. ஈர நெற்றியில் திருநீற்றுப் பட்டை துலங்க, நெஞ்சு நிமிர்த்தி கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார். தொடர் கேள்விகளுக்கு அசராத தெளிவான எதிர்வினைகள், இலங்கை என்று சொல்லப்பட்ட போதெல்லாம், ஈழம் என்ற கறாரான திருத்தல்கள், பொருத்தமான இடங்களில் சைவத்திருமுறைகளின் கம்பீர முழக்கங்கள், போருக்கு எதிரானவன் என்பதை சொல்லுகையில் குரலில் இருந்த அழுத்தம் என அந்த அமர்வு முடிகையில் அகரமுதல்வனின் மீது பெரும் மரியாதையும் அன்பும் உண்டானது. அதன்பிறகு என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன்.
அவருக்கு என்னை கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற தூரன் விருது விழாவிலேயே தெரிந்திருக்கிறது
முன்பு எப்போதோ ஒரு புலம்பெயர் இலக்கியமொன்றிலிருந்த பல கவிதைகளில் ’’முருங்கைப்பூ உதிரும் முற்றம் இனி நமக்கில்லை கண்ணே’’ எனும் ஒரு வரி என்னை பல காலம் இம்சித்தது. அந்த உணர்வை, அந்த பிரிவின் வலியை, தாய் மண்ணை, அதிலிருக்கும் தாவரங்களை சொந்த பந்தங்களை, பிரிவதென்பதின் பெருவலியை அந்த வரி எனக்கு சொல்லிக் காட்டிக் கொண்டே இருந்தது.
திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து 6 வருடங்கள் கொழும்புவில் வசிக்க நேர்ந்த போது நான் கண்ட இலங்கையில் போர்ச்சூழல் தீவிரமாக இருந்தது எனினும் பாதுகாப்பான பகுதியில் இருந்ததால் அதன் குரூரங்கள் எனக்கு முழுக்க தெரிந்திருக்கவில்லை. செய்தித்தாள்கள், பிற ஊடகங்கள் செவிவழிச் செய்திகள் அளித்தவற்றையே உண்மை என கருதினேன்.அவ்வப்போது வேவு விமானங்கள் பருந்தைப்போல வட்டமிடுவதை பார்க்க முடிந்தது.
பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்திருந்தது. ஒரு சுருள் கருவாப்பட்டை வாங்கியபோது அதன் விலை எனக்கு அதிர்ச்சி அளித்தது, ஏன் அத்தனை அதிக விலை? என்று அந்த சிறு கடைக்கரரிடம் கேட்டபோது ’’எல்லாம் போரால்’’ என்றார்.
கொழும்பு வீட்டிற்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து செல்லும் வழியெங்கும் ராணுவ வீரர்கள் மணல்மூட்டை தடுப்புக்கு பின்னால் துப்பாக்கி ஏந்தியபடி நின்றிருப்பார்கள். விசேஷ நாட்களில் வெண் தாமரைகளுடன் புத்தர் ஆலயங்களுக்கு செல்லும் வழியிலும், வீட்டருகிலும் கடைவீதியிலும் எங்கும் ராணுவம் இருந்தது. ஒருமுறை கடைவீதியில் இருந்து வீடு செல்லும் வழியில் அப்படி ஒரு மணல்மூட்டை தடுப்பின் பின்னர் இருந்த கம்பிவேலி ஒன்றில் செங்காந்தள் கொடி அடர்ந்து படர்ந்து ஏராளமாக மலர்ந்திருந்தது. வழக்கமாக தாவரங்களை கண்டால் உண்டாகும் குதூகலத்துடன் ’’காந்தள் மலர்’’ என்று உரக்க சொல்லி அதை பறிக்க சென்றபோது கடுமையாக குடும்பத்தாரால் கண்டிக்கப்பட்டு வீட்டுக்கு ஏறக்குறைய இழுத்து வரப்பட்டேன். ஒரு மலரின் பெயரை சொல்லியது குற்றமாவென அன்று அது ஒரு பெரும் மனக்குறையாக இருந்தது.
சென்னை புத்தக விழாவில் வாங்கி வந்த சில முக்கிய புத்தகங்களில் அகரமுதல்வனின் கடவுள் பிசாசு நிலமும் ஒன்று. அதை வாசிக்கையில்தான் அன்று அச்சூழலில் காந்தளின் பொருள் என்னவாயிருந்திருக்கும் என்பதை அறிய முடிகிறது. கண்டியின் அழகும், பேராதனை பல்கலைக்கழக தாவரவியல் தோட்டத்தின் விரிவும், ரம்புட்டான் மரங்கள் அடர்ந்திருந்த அசங்க ராஜபக்ஷேவின் அழகிய வீடும், உதய தென்னக்கோனின் நாலுகட்டு வீட்டின் விசாலமும், மஞ்சுள ரணதுங்கவின் வீட்டின் விதைகளில்லா எலுமிச்சைகளும் எனக்கு அளித்திருந்த நிறைவையும் மகிழ்வையும் கடவுள் பிசாசு நிலம் முற்றிலுமாக துடைத்து அழித்ததோடில்லாமல் அக்காலகட்டத்தில் எனக்கிருந்த மகிழ்வை காட்டிலும் பல மடங்கு அதிக குற்ற உணர்வையும் அளிக்கிறது
அப்போதிருந்த இலங்கையின், யுத்தத்தின் உண்மை நிலவரமென்ன என்பதை இத்தனை காலம் கழித்து அகரன் மூலமாகத்தான் அறிந்து கொண்டிருக்கிறேன்
முதல் பக்கத்திலேயே //ஒரு பெருவேக அழிவுச் சூழலில் விழுந்து அதிலிருந்து பண்பு நலனால் அல்லாமல் நல்லூழ் காரணமாக மீண்டு வந்தவன்// என்னும் நாஜிகள் சித்திரவதைகளுக்கு உள்ளான இத்தலிய யூதரான பிரைமோ லெவியின் வரிகள் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வரிகள் அகரனுகும் ஆதீரனுக்கும் முழுமையாக பொருந்துபவை.
போராளிகளுக்கு மரண வீட்டிலும் உணவளிக்கும் அடைக்கல மாதாவான அன்னையர், வன்முறையை தவிர்க்க வேண்டும் என அன்றாடம் பிரார்த்தனையின் போது சொல்லும் பள்ளி அதிபர், அம்புலி வளரும் இரவுகளில் சாமியாடி வாக்கு சொல்லும் பூட்டம்மா போன்ற பல வடிவங்களில் இருக்கும் கடவுளரையும், மது வெறியில் பைலா பாடல்களை கூச்சலிட்டு பாடிக்கொண்டு, கையறிகுண்டுகளை அப்பாவி சனங்களின் மண்டையோட்டுக்குள் எறியும், பல தந்திரங்கள் செய்து, அமைதி என்னும் போர்வைக்குள் பதுங்கி இருந்த, குருதி வெறி கொண்டிருக்கும் விலங்குகளா,ன அரசின் ஆர்மிக்கார பிசாசுகளையும், குருதியால் சிவந்து,ஓயாது அழுது துயர் புழுதி படிந்திருந்த நிலத்தையும் காணும், படிக்க போகாமல் ’’உந்த ஆர்மிக்காரங்களை கொழும்புக்கு அடிச்சு துரத்த போறேன்’’ என்று சொல்லும் பத்து வயது ஆதிரனின் கதையாக விரிகிறது கடவுள் பிசாசு நிலம்
ஒவ்வொரு வரியும் துயரிலும் குருதியிலும் தோய்ந்திருப்பினும் அவற்றையும் தாண்டி கொண்டு கவனிக்கச் செய்கிறது நூலை உருவாக்கி இருக்கும் அழகு தமிழ் மொழி
போராளியான அண்ணன், வீட்டிற்கு வந்து போய் கொண்டிருக்கும் மற்றொரு போராளி மருதன், அவர் மீது நேசம் கொள்ளும் பின்னர் கால ஓட்டத்தில் போராளியாகும் அக்காள் என ஆதீரனுக்கு குடும்பமே இலங்கையின் போர்ச்சூழலை முழுக்க தெரிவித்துக் கொண்டிருக்கும் அமைப்பாக இருக்கிறது.
ஆர்மிக்காரங்களை எதிர்த்துப் பேசும், எப்போதும் வீடு தங்காமல் சுற்றித் திரிந்து கண்ணில் பட்டவை, காதில் கேட்டவைகளின் மூலம் நாட்டு நடப்பை மேலும் அறிந்து கொள்ளும் ஆதீரனுக்கு இயல்பாகவே போர்க்குணம் உருவாகிறது. போராளியாக வேண்டும் என்று துடிக்கும் ஆதீரனுக்கு அண்ணனின் கைத்துப்பாக்கியின் எதேச்சையான தீண்டல் வேட்கையின் குளிரை உண்டாக்குகின்றது.
பன்னிச்சையடி கிராமத்தின் அத்தனை பேருக்கும் ஆதரவாக, ஆறுதலாக, பற்றிக்கொள்ள பிடிப்பாக, தெய்வமாக இருக்கும் பன்னிச்சை மரமும் ஒருநாள் ஷெல்லடித்து சாம்பலாகிறது. அச்சாம்பலையும் நெற்றியிலிட்டு கொள்ளும் மக்களை, அவர்களின் மரபுகளை, வேர்களை, வாழ்வின் இயங்கியலை, இடம் பெயருதலை, மரணங்களை, காதலை, நம்பிக்கைகளை, கனவுகளை காட்டுகிறது கடவுள் பிசாசு நிலம்
வாசகசாலைக்கு சென்று வாசிக்கும், போராளிகளோடு நட்பிலிருக்கும், மெல்ல வளர்ந்து வரும், போராளியாக வேண்டும் என ஒவ்வொரு கணமும் விரும்பும் ஆதீரன் பதின்மவயதில் காதல் கொள்கிறான்.
போரை, போராளிகளின் வாழ்வை, குருதியை, குப்பி கடித்தும், வெட்டியும் தூக்கிட்டும், கையறிகுண்டிலும் நிகழும் மரணங்களை போரின் துயர்களை, மேலும் பலகொடுமைகளை, இழப்பின் வலியை சொல்லும் அகரனும் அம்பிகையுடனான ஆதீரனின் காதலைச் சொல்லும் அகரனும் ஒரே ஆளுமை என்பதை சிரமப்பட்டுத்தான் நம்ப வேண்டியிருக்கிறது.
பிளவாளுமையாக இருந்தே அவற்றை அகரன் எழுதியிருக்க முடியும். யுத்தத்தின் தீவிரத்தை சொல்லும் வேகமும் உணர்வுபூர்வமும் காதலை சொல்லுகையில் பல மடங்கு அதிகரித்து விடுகிறது. அம்பிகாவிற்கும் ஆதீரனுக்குமான காதலை சொல்லுகையில் மற்றொரு அழகிய வடிவெடுத்து விடுகின்றது அகரனின் மொழி
தாகம் பெருகிய வழிப்போக்கனின் கையில் கிடைத்த செவ்விளநீர் போல காதல் ஆதீரனை கைகளில் ஏந்திக் கொள்கிறது பெண்ணின் கண் மொழியில் ஆயிரமிருக்கிறது ஆயுத எழுத்துக்கள் என்கிறான் ஆதீரன். கூழாங்கல் போல அடியாழத்தில் கிடந்து, பின்னர் மெல்ல மெல்ல ஒடும் நீரில் மேலேறி வரும் அம்பிகாவை காண்கையில் ஆதிரனுக்கு காதலைச்சொல்லவும் பொருத்தமாக சைவப்பாடல்களே தோன்றுகிறது. அப்பாடல்களை எல்லாம் அகரனின் கணீர் குரலிலேயே கேட்டேன்.
அம்பிகா எனும் கூழாங்கல்லை சுமந்து ஓடும் நதியாகிறான் ஆதீரன். அம்பிகா கூந்தலை சுழற்றுகையில் ஆதீரனின் ஞானத்தின் பசுந்தரையில் விதை வெடித்து செடி எழுகிறது.ஆதீரனால் முத்தமிடப்படும் அம்பிகா மேலும் வடிவு கொள்கிறாள்.
அம்பிகாவுடனான காதலை சொல்லும் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு எழுத்தும் இனிப்பில் தோய்ந்திருக்கிறது. இந்த நூலில் அம்பிகா ஆதீரன் பகுதிகளை மட்டும் தனியே வாசிக்க வேண்டுமென்றிருக்கிறேன், நான் வாசித்த ஆகச்சிறந்த காதல் கதைகளில் ஆதீரன் அம்பிகை கதையுமொன்று
உப்புக்காட்டில் நெடுவல் ராசனுடன் ஆதீரன் செல்லும் உடும்புவேட்டைகள் இதுவரை நான் வாசித்திராத தீவிரத்தன்மை கொண்டிருந்தன. அப்படியொரு வேட்டை குறித்து நான் முன்பெப்போதும் கேட்டிருந்ததுமில்லை
வெயிலில் காய்ந்து நாறும் உடும்பின் தோல்கள், அவற்றால் உருவாக்கப்படும் மேளம், காளி எழுந்து நின்றாடும் நெடுவல் ராசனின் தோள்கள், குப்பைத்தண்ணி வார்த்தல்,சமைந்த பெண்ணுக்கு அருந்த தரப்படும் கத்தரிக்காய் சாறு, உடன் புக்கை,புட்டும் சொதியும் அப்பங்களும், முசுறு எறும்புகள், மரவள்ளிக்கிழங்கு, மரமடுவங்கள், இதரை வாழைகளும் இலுப்பையடி சுடலைலைக்காடும், சம்பா அரிசிச் சோறும் உடும்புகுழம்பும், பச்சை மிளகாய் சம்பலும், பூவரசங்குச்சிகளும், பருப்பும், பாகற்காய் குழம்பும், மோர்மிளகாய் பொரியலுமாக நானறிந்திருக்காத இலங்கை ஆதீரனின் கண்கள் வழியே ஒவ்வொரு பக்கத்திலும் விரிந்து மலர்கிறது. பல் விழும் கனவு கண்டால் துயர்மிகுந்த ஏதோ நிகழும் என்னும் நம்பிக்கையை போல நமக்கும் பொதுவான சிலவற்றையும் ஆதீரன் மூலமறிய முடிகின்றது.
கணபதிபிள்ளையும், தணிகை மாறனும்,தவா அண்ணனும், பழமும், அரிய ரத்தினம் கோபிதனும், பவி மாமனும், தாமோதரம்பிள்ளையும், காந்தியண்ணாவும், அல்லியக்காவும், ஓவியனும், கபிலனும், ’பட்டாம்பூச்சி’ வாசிக்கும் மருதனும், சலூன் இனியனும் இலங்கைப்போரின் பல குருர பக்கங்களை காட்டுகிறார்கள். கபிர் அடிக்கும் இடங்களிலிருந்து மனிதர்கள் தொடர்ந்து இடம் பெயருகிறார்கள், எறும்புகள் கூட போரைப்பற்றியே யோசித்துக்கொண்டு மரங்களிலிருந்து கீழிறங்குகின்றன.
நிகழப்போவதை முன்பே யூகிக்கிறாள் பூட்டம்மா, குன்றிமணிகளையும் செங்கற்களையும் அரைத்து மண்ணுக்காய் நஞ்சுண்டு மடிந்த பொன்னாச்சியும் நஞ்சின் மீதியை நிலமுண்ண போகிறது என்கிறாள். வீரச்சாவும், வித்துடல்களும் விழுப்புண்களும் எரிதழல் வெளியில் ஒரு சொல்லைப்போல் அலர்கின்றன.
ஆதீரன் வீட்டிலும் அல்லியக்கா வீட்டிலும் இன்னும் பல வீடுகளிலும் மரணம் அழையா விருந்தாளியாக கதவை திறந்து வந்து கொண்டே இருக்கிறது
அமைதிப் பேச்சுவார்த்தை, சமாதான உடன்படிக்கை எனும் போர்வை களையெல்லாம் கிழித்தெறிந்துவிட்டு யுத்தம் துவங்கி விடுகிறது. யேசுதாஸ் குரலில் வளர்ந்து கொண்டிருந்த ஒரு காதல் கருகிச்சாகிறது. யார் முதலில் வீரச்சாவடைவது என்று பேசிக்கொள்ளும் இளவெயினியும் பூம்பாவையும் தூரிகையும் பெண்போராளிகளின் உலகை காட்டுகிறார்கள்.
கிபிர் தாக்குதலும், ஷெல்லடிப்பும், இயக்கத்தின் பின்னடைவும், விழுந்துகொண்டே இருக்கும் வித்துடல்களும்,அதிகரித்துக்கொண்டே இருக்கும் காயம்பட்டவர்களும், ஊரையே மூடும் கந்தகமணமுமாக ஆதீரன் காட்டும் போர் உச்சம் மனதை கலங்கடிக்கிறது. அந்த மண்ணில் அப்போது வாழ்ந்த ஆதீரன் மீது கனிவும் தனித்த பிரியமும் பொங்கிப்பெருகிறது.
யுத்தம் அமைதியை விட மேலானது என்று ஆதீரன் எழுதி வைக்கிறான். எளிய மனிதர்களின் பல வாழ்க்கை கணக்குகளை யுத்தம் தன் கோரக்கரங்களால் கிழித்தெறிகிறது.
அம்பிகையின் இறுதிச்சடங்கின் போது ஆதீரனின் தெளிவையும், பூட்டம்மா அடிவயிற்றில் மண் வைத்து நீரூற்ற சொல்வதையும், பன்னிச்சை மரத்துடனும் உப்புக்காட்டுடனும் நடுகற்களுடனும் ஆதீரனுக்கிருக்கும் உணர்வுபூர்வமான பந்தத்தையும் மனமும் கண்களும் கலங்க வாசித்தேன்.
அவ்வளவு நடந்தும் பெண்கள் கூந்தலில் காந்தளைச் சூடும் நாள் வரும், நிலம் விடியும் என்று கதை முடிகின்றது. தூரிகையின் பதுங்கு குழிக்குள் அசைந்தாடுகிறது ஒரு தளிர்.
நேரடியாக யுத்தத்தை சொல்லாமல், யுத்தப் பின்னணியில் அந்நிலத்தை, அம்மனிதர்களின் வாழ்வை, புலம்பெயர்தலின் அவலத்தை சொல்லும் கதை இது. இதில் எத்தனை உண்மை, எத்தனை புனைவு எத்தனை சொல்லாமல் விடப்பட்டவை என்பது ஆதிரனுக்கும் அகரனுக்கும்தான் தெரியும் எனினும் இந்நூல் ஒவ்வொரு பக்கம் வாசிக்கையிலும் அளித்த துயரம் நூறு சதவீதம் உண்மை.
இத்தனை உணர்வுபூர்வமாக புலம்பெயர்ந்தவர்களின், யுத்தத்தின் போராளிகளின், இயக்கத்தின், காதலின் கதையை வாசித்ததில்லை.அகரனின் மொழி வன்மை திகைக்க வைக்கிறது.
விஷ்ணுபுரம் விழாவில் அகரனிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர்கள் குடும்பத்துக்கு பரம்பரையாக சொந்தமாயிருந்த வாள் ஒன்றை அவரது பூட்டம்மா போர்ச்சூழலில் எங்கோ மறைத்து வைத்தாரென்றும் அதை பின்னர் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்.
அது வேறெங்குமில்லை, யுத்தகாலத்திலான தன் வாழ்வை இத்தனை கனம் கொண்ட மொழியில் சொல்லும் அகரமுதல்வனாகத்தான் அவ்வாள் கூர் கொண்டிருக்கிறது
அம்மாவின் கண்களை கொண்டிருக்கும் பொன்னாச்சி சொல்லியபடியே அகரனின் கால்கள் இனி சோர்வில்லாது நடக்கட்டும். அகரனுக்கு அன்பும் நன்றியும்.
ஆர்கிடேசி குடும்பத்தை சேர்ந்த ஆர்கிட்(orchid) மலர்கள் அவற்றின் மிக அழகிய வடிவங்களாலும் நிறங்களாலும் உலகப்பிரசித்தி பெற்றவை. ஆர்கிடேசி குடும்பத்தில் சுமார் 1000 பேரினங்களும் 25,000 சிற்றினங்களும் பல்லாயிரக்கணக்கான் கலப்பினங்களும் உள்ளன
இவற்றில் நிலத்தில் வாழ்வன, மரங்களில் மீது வளர்வன, என பலவகையான வாழிடங்களில் வளர்பவை உள்ளன.ஆர்கிடுகள் ஸ்பாஞ் போன்ற சிறப்பு வேர்களால் காற்றிலிருந்து ஈரத்தை எடுத்துக்கொண்டு உயிர்வாழும்
பிற தாவர வகைகளிலிருந்து ஆர்கிடுகள் அவற்றின் வண்ணமயமான விதவிதமான வடிவங்களில் இருக்கும் மலர்களால் வேறுபட்டு பிரபலமடைந்திருக்கின்றன. தோட்டக்கலைத்துறையில் மிக முக்கிய மற்றும் சிறப்பான இடம்பெற்றிருப்பவை ஆர்கிட்மலர்கள் .ஐஸ்கிரீம்களில் நாம் சுவைக்கும் வெனிலா ஒரு ஆர்கிடிலிருந்தே பெறப்படுகிறது
ஆர்கிட்மலர்களில் மனிதனைப்போன்றவை, வேற்றுகிரக வாசிகளை போன்றவை, பறவைகள் வண்டுகள் விலங்குகளை போன்றவை நடனமாடும் மங்கையை போன்றவை என நம் கற்பனைக்கெட்டாத வடிவங்களில் மலர்கள் இருக்கின்றன
இவற்றில் மிகs சிறப்பான ஒன்றும் இந்தியாவின் பல பகுதிகளில் ஆஞ்சனேயர் மலர் என்று வணங்கப்படுவதும் குரங்கு ஆர்கிட் எனப்படும் Dracula simia, ஆர்கிட்கள்
இவை மரங்களின் மீது தொற்றிப்படர்ந்து வளரும் ஆர்கிடுகள். மலரிதழ்கள் குரங்கின் முகத்தைப்போலவே அமைந்திருப்பது இயற்கையின் ஆச்சர்யங்களில் ஒன்று
ஒவ்வொரு பருவத்திலும் கொத்துக்கொத்தாக மலரும் இவை ஆரஞ்சின் இனிய மணம் கொண்டிருக்கும்
இந்த குரங்கு முக ஆர்கிடுகள் பெருவின் குளிர்நிரம்பிய காடுகளில் 1000திலிருந்து 2000 மீ கடல்மட்டத்துக்கு மேல் உயரமான இடங்களில் ஏராளமாக காணப்படுகின்றன
இதன் அறிவியல் பெயரின் முதல் பாதி, இதன் புல்லிகளின் இரு நீட்சிகளால் டிராகுலாவின் பற்களை நினைவூட்டுவதால் டிராகுலா என பெயரிடப்பட்டது. அறிவியல் பெயரில் இரண்டாம் பாதி சிமியா என்பது குரங்கை குறிக்கும்
குரங்கு ஆர்கிட் தாவரத்தை தாவர வகைப்பாட்டியலின் தந்தையான லின்னேயஸ் 1881ல் கண்டுபிடித்தார்.
அமெரிக்காவின் மிஸிஸிப்பி நதிக்கரையோர நகரத்தை சேர்ந்தவரும் ஆர்கிடேசி குடும்பத்தில் முக்கிய ஆய்வுகளை செய்த தாவரவியலாளருமான Carlyle August Luer, இந்த ஆர்கிடுக்கு இந்த அறிவியல் பெயரை 1978ல் வைத்தார்.
அவரால் இது பல நாடுகளுக்கு அறிமுகமாகி ஆர்கிட் மலர் விரும்பிகள் இதை உலகெங்கிலும் ஆர்வமாக வளர்க்கத் துவங்கினார்கள்
20ம் நூற்றாண்டின் துவக்த்தில் குரங்கு ஆர்கிடுகள் ஏராளமாக சாகுபடி செய்யப்பட்டு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன
பல கலப்பின சோதனைகளும் அப்போது செய்யப்பட்டு இதன் நூற்றுக்கணக்கான கலப்பின வகைகளும் அப்போது உருவாக்காப்பட்டன
இப்போதும் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பல அமெரிக்க கடைகளில் இவை விற்பனை செய்யபடுகின்றன, இவற்றை மிக எளிதாக வீடுகளில் வளர்க்லாம்
குரங்கு ஆர்கிட் மலர்கள் வெண்மை, இளஞ்சிவப்பு ஊதாமற்றும் மண் என பல நிறங்களில் இருக்கும்
The Dracula Simia ‘Taylors’ வகை மிக அழகிய ஊதா நரம்புகளோடும் இளஞ்சிவப்பு மலர்களை கொண்டது
The Dracula Simia ‘Enchantment’ வகை அடர் ஊதா நிற இதழ்களில் வெண்திட்டுக்களை கொண்டிருக்கும்
The Dracula Simia ‘Lilac Fire’ வகை மிக பிரகாசமனது இது இளஞ்சிவப்பில் வெண்கோடுகள் கொண்டிருக்கும்
The Dracula Simia ‘Mystic’ வகை மிக மிக அழகிய ஆழ்ந்த ஊதா மற்றும் இளஞ்சிவப்பு நிற இதழ்களில் வெள்ளை மற்றும் மஞ்சள் தீற்றல்களுடன் காணப்படும்
தாவரவியல் குறித்த அடிப்டை அறிவு இல்லாத சிலரும், வம்புகளையும் வதந்திகளையும், பொய்ச்செய்திகளையும் சமூக ஊடகங்களில் பரப்பும் விஷமிகளும் இந்த குரங்கு ஆர்கிட்மலர்கள் 100 வருடத்துக்கு ஒருமுறைமலரும் அபூர்வகை மலர் என்றெல்லாம் செய்திகளை பகிர்கிறார்கள். இதன் மலர்வடிவம் குரங்கின் முகம் போன்றிருப்பது மட்டும்தான் உண்மை, இவையும் பிற தாவரங்களை போலவே அவற்றிற்குரிய பருவங்களில் தொடர்ந்து மலர்பவைதான்.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் அந்நியசெலவாணி ஈட்டுதலில் மிக முக்கிய இடம்பெற்றிருக்கும், உயர்ந்து கொண்டே இருக்கும் ஆர்கிட் சந்தை 2028ல் அமெரிக்க டாலர்களில் 363.2 மில்லியனை எட்டும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
ஆர்கிட் வளர்ப்பு மிகுந்த லாபம் தரும் ஒன்றாக இருக்கும் இந்தியாவில் அருணாச்சலபிரதேசம் ஆர்கிட் சாகுபடியில் முன்னணியில் இருக்கிறது. அருணாச்சலபிரதேசம் ஆர்கிடுகளின் இந்தியசொர்க்கம் என அழைக்கப்படுகிறது. சிக்கிம்மில் இருந்து மட்டும் சுமர் 560 வகையான ஆர்கிடுகள் பிற நாடுகளுக்கு எற்றுமதியாகின்றது
மனிதர்களின் வாழ்வில் மலர்கள் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டிருக்கின்றன. பண்டைய காலத்திலிருந்தே உலகின் அனைத்து நாகரிகங்களும் இறைவழிபாட்டில், பண்டிகைகளில், மங்கல நிகழ்வுகளில் பிறப்பு,இறப்பு திருமணம் உள்ளிட்ட சடங்குகளிலும் தலையில் சூடிக் கொள்ள, மாலையாக, மருந்தாக, மகிழ்ச்சிக்காக, அழகுக்காக, பரிசளிக்க என்று பலவிதங்களில் மலர்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். மலர்களின் பொருள் என்னவென்பதை சொல்லும் மலர்மொழி உலகெங்கிலும் புழக்கத்தில் இருக்கிறது. மலர் மருத்துவமும் அனைவரும் அறிந்ததே.
இவற்றோடு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பல வகையான மலர்கள் சமையலில் சேர்த்துக் கொள்ளப்பட்டு உண்ணப்படுகிறது. ஆங்கிலத்தில் Edible Flowers-EF என்று குறிப்பிடப்படும் இம்மலர்கள் பல தாவர குடும்பங்களை சேர்ந்தவை. இவற்றில் பல சமைக்கப்படுகின்றன, ஒரு சில மலர்கள் சமைத்த பிற உணவுகளின் மீது அலங்காரம் செய்ய பயன்படுகின்றன மேலும் பல அப்படியே சமைக்காமல் உண்ணப்படுகின்றன. மருத்துவ காரணங்களுக்காகவும் அவற்றின் சுவைக்காகவும் மலர்களின் பிரத்யேக சத்துக்களின் பொருட்டும் இவை உணவாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
பண்டைய ரோமானிய கிரேக்க, சீன மூலிகை மருத்துவர்கள் மலர்களின் உணவுப் பயன்பாட்டைக் குறித்தும் அவற்றால் குணமாகக்கூடிய நோய்களையும் விளக்கி இருக்கின்றனர். தொல்குடிகளான அஸ்டெக்குகள், இன்க்காக்களும் மலர்களை உணவாக எடுத்து கொண்டிருக்கின்றனர். இந்து மதம் உள்ளிட்ட பல மதச்சடங்குகளில் மலர்கள் உண்ணப்படுகின்றன. மெக்ஸிகன் பழங்குடியினர் பலநூற்றண்டுகளாக மலர்களை உண்டு வந்திருக்கின்றனர்.
மலர் உண்ணுதலை முதன் முதலாக ‘floriphagia’ என்னும் சொல்லால் 2013ல் Lara-Cortés என்பவரின் குழுவினர் குறிப்பிட்டனர்.
சாமந்தி மலர்களை ரோமானியர்கள் உணவில் குங்குமப்பூ நிறம் கிடைக்க பயன்படுத்தி இருக்கிறார்கள். இப்போதும் சாமந்திப்பூ ’’ஏழைகளின் குங்குமப்பூ’’ என்று அழைக்கப்படுகிறது. குங்குமப்பூவில் கலப்படமாகவும் இம் மலரிதழ்கள் பயன்படுகின்றன.
ரோஜா இதழ்கள் பல பண்டைய நாகரிகங்களில் உணவுக்கு சுவை மணம் நிறம் அளிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்றும் ரோஜா பன்னீரும் குல்கந்தும் இனிப்புகளும் நம்மிடையே பிரபலமாக இருக்கிறது. செம்பருத்தி தேநீர் சில வருடங்களாக பசுமை மருத்துவத்தின் மூலம் தென்னிந்தியாவில் பிரபலமாகி வருகிறது.
17ம் நூற்றாண்டில் வயோலா என்னும் அடர் ஊதா மலர், திரவ மருந்துகளுக்கும் மதுபானங்களில் நிறமூட்டவும் பயன்படுத்தப்பட்டது.
இந்தியாவில் மட்டும் சுமார் 35 வகையான மலர்கள் உண்ணப் படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆர்டிசோக் எனப்படும் மலரரும்புகள் (Cynara scolymus). காலிஃப்ளவர் என்னும் பூக்கோசு (Brassica oleracea var. botrytis) புராக்கலி என்னும் பச்சைபூக்கோசு (Brassica oleracea var. italica), வாழைப்பூ, அகத்திப்பூ, முருங்கைப்பூ ஆகியவை பலரும் அறிந்திருக்கும் உணவில் சேர்க்கப்படும் மலர்கள். ஸ்ட்ராபெரி, கடுகு மற்றும் கொத்துமல்லி மலர்களும் உண்ணக்கூடியவையே.
தாமரை மலரிதழ்கள் சீனா, ஜப்பான் மற்றும் இந்தியாவில் காஷ்மீரில் உண்ணப்படுகின்றன. இவற்றை தேநீர் தயாரிப்பில் அதிகம் உபயோகிக்கிறார்கள்.
தாய்லாந்தில் சாமந்தியின் ஒரு வகையான டாஜிடஸ், காகித மலர் மற்றும் கேந்தி மலர்கள் உண்ணப்படுகின்றன. அமெரிக்காவில் டாஜிடஸ், அலரி எனப்படும் ஃப்ராங்கி பானி மலர்கள் மற்றும் கற்றாழை மலர்கள் உண்ணப்படுகின்றன. பிரேஸிலில் வாழைப்பூவுடன் பூசணிப் பூவும் உண்ணப்படுகிறது.
மிகச்சாதாரணமாக பார்க்க முடிகின்ற சிறு வெண்ணிற டெய்ஸி மலர்கள் விழாக்கால விருந்துகளில் உணவுகளை அலங்கரிக்கவும் உணவுகளோடு சேர்த்து உண்ணவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
Tisanes எனப்படும் பருவ கால உலர் மலரிதழ்களில் உண்டாக்கப்படும் தேநீர் சர்க்கரை நோய் உள்ளிட் பல நோய்களுக்கான சிகிச்சையில் அதிகம் பயன்படுத்தபடுமொன்று
தென்தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் பொன்னாவாரை மலர்களில் தேநீர் தயாரித்து அருந்துவார்கள். நீலத்தேநீர் எனப்படுவது சங்கு புஷ்ப த்திலிருந்து உண்டாக்கப்படும் மருத்துவ குணங்கள் மிக்க நீலத்தேநீர். சங்கு புஷ்ப அரும்புகள் தாய்லாந்தில் அரிசியுடன் வேகவைக்கப்பட்டு நீலச்சோறு உண்டாக்கப்படுகிறது.
குங்குமப்பூவின் மூன்று சூலகமுடிகள் மட்டும்தான் குங்குமப்பூ என சந்தை படுத்தப் பட்டிருக்கிறது. சோம்பு மலர்கள் சூப்’களில் புத்தம் புதிதாக சேர்க்கப்படுகின்றன. குழந்தையின்மைக்கு தீர்வாக சிலரால் நள்ளிருள் நாறி என்றும் நிஷாகந்தி, பிரம்மகமலம் என்றும் அழைக்கபடும் மலர் உண்ணப்படுகின்றது.
கொரியாவில் Hwajeon எனப்படும் அரிசிமாவு இனிப்பொன்றில் அந்தந்த பருவ கால மலர்கள் சேர்க்கப்படுகின்றன. பிரபல நறுமணப்பொருளான கிராம்பு எனப்படுவது அம்மரத்தின் முதிரா மலர் அரும்புகள் தான், ஆக்ஸாலிஸ் எனப்படும் புளியாரைக்கீரை மலர்களும் உண்ணக்கூடியவைதான்..
அனைத்து மலர்களும் உண்ணத்தக்கவை அல்ல என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும் தாவரங்களில் பல நச்சுத்தனமை கொண்டவை எனவே நன்கு அறிந்திருந்தால் மட்டுமே புதிய தாவர வகைகளின் மலர்களை உண்ண வேண்டும். இன்னும் சில உண்ணப்படும் தாவர மலர்களில் நச்சுப்பொருட்கள் இருப்பதால் மிக குறைந்த அளவிலேயே அவை உண்ணப்படவேண்டும்.
உதாரணமாக ஆப்பிள் மலர்கள் உண்ணக்கூடியவையே எனினும் அவற்றின் சயனைட் நஞ்சைப்போன்ற நஞ்சு இருப்பதால் மிக மிக குறைவான அளவிலேயே அவற்றை உண்ணவேண்டும். அதுபோலவே வயோலா மற்றும் பொராஜ் மலர்கள் சிறுநீர் பெருக்கும் இயல்புடையவை என்பதால் கவனமாக அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் நஞ்சுகொண்டிருப்பவை மட்டுமலல்ல. குறிப்பிடட்ட சில விளைவுகளை உண்டாக்கும் வேதிப்பொருட்களை கொண்டிருக்கும் மலர்களும் இருக்கின்றன.
பல வகையான மலர்கள் உண்ணத்தகுந்தவை மேலும் பல மலர்களின் உண்ணும் தன்மை இப்போது ஆராயப்பட்டு கொண்டிருக்கிறது. காய்களையும் கனிகளையும் இலைகளியும் வேர்க்கிழங்குகளையும் போல மலர்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் அவற்றில் நஞ்சு கொண்டிருப்பவை, பல முக்கிய வேதிப்பொருட்களை கொண்டிருப்பவை எவையெவை என அறிந்து கொண்டு அவற்றை தவிர்த்துவிட்டு மற்றவற்றை உண்ணலாம்
உண்ணக்கூடிய மலர்களை குறித்து மேலும் தெரிந்து கொள்ள Monica Nelson Adrianna Glaviano ஆகிய இருவர் இணைந்து உருவாக்கிய நூற்றுக்கணக்கான உணவு மலர்களை குறித்த பிரபலமான Edible Flowers: How, Why, and When We Eat Flowers என்னும் நூலை வாசிக்கலாம்.
பழந்தமிழ் இலக்கியங்கள் சதங்கை அணிந்த இளம்பெண்கள் கால்களால் உதைத்தால் மட்டுமே மலரும் மரங்களை குறிப்பிடுகின்றன.
தன் கணவனை காணாமல் துயருற்ற தமயந்தி ஒரு மரத்திடம் தான் சென்று புலம்புகிறாள்.
தான் விளையாட்டாக மணலில் புதைத்து வைத்த புன்னை விதை முளைத்து செடியாகிவிட்டது, தனக்கு சோறூட்டுகையில் அச்செடிக்கும் ஊட்டுவதாக தாய் பாவனை செய்வாள். எனவே என்னுடன் வளர்ந்த அப்புன்னை மரம் தன் தங்கை அதனருகில் தலைவனுடன் காதல் செய்ய நாணம் கொள்கிறேன் என்னும் தலைவியொருத்தியையும் நாம் அறிவோம்
நம் முன்னோர்கள் இயற்கையுடன் கொண்டிருந்த அணுக்கமும் பந்தமும் நம்மிடையே முற்றிலும் இப்போது இல்லை
இயற்கையை அறிந்துகொள்ளுதலின் குறைபாடென்னும் (nature deficit disorder) பெருநோய் உலகை பீடித்திருக்கிறது.இதற்கு தீர்வாக பல நாடுகள் பல முன்னெடுப்புக்களை கடந்த சில ஆண்டுகளாக துவங்கி இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் மரம் தழுவுதல்.
21 மார்ச் 2017’ல் கேரளா திருவனந்தபுரத்தை சேர்ந்த 4620 மக்கள் மரங்கள் மற்றும் காடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி என் மரம் என் வாழ்வு என்னும் முழக்கத்துடன்,மரங்களை தழுவிக்கொள்ளும் பிரம்மாண்ட நிகழ்வில் ஈடுபட்டார்கள். அந்த நாள் சர்வதேச வன நாள் ஆகையால் அந்நிகழ்வு பெரும் கவனம் பெற்றது . அதில் பங்கு பெற்றோர் குறைந்தபட்சம் 60 நொடிகளாவது மரங்களை ஆரத்தழுவிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இது கின்னஸ் சாதனையாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது
இது போன்ற நிகழ்வுகளுக்கு செப்டம்பர் 12 1730’ல் நடந்த ஒரு வரலாற்று நிகழ்வு முன்னுதாரணமாக இருந்தது. வடஇந்தியாவின் தார்பாலைப்பகுதியின் ஒரு கிராமத்தில் தாவரங்களையும் காடுகளையும் வழிபடும் பிஷ்னோய் மார்க்கத்தை சேர்ந்த 294 ஆண்கள் மற்றும் 69 பெண்கள் அப்பகுதி அரண்மனை கட்டுமானத்திற்காக பாலையின் பசுமைக்கு காரணமாகவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் இருந்த பல நூறு வன்னி மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்தார்கள். அனைவரும் மரம் வெட்ட வந்தவர்ள் முன்பு மரங்களை ஆரத் தழுவிக்கொண்டு போராடினார்கள். போராட்டத்துக்கு அம்ரிதா தேவி என்னும் பெண் தலைமை தாங்கினார். மரங்களை வெட்டக் கூடாது என்று தழுவிக்கொண்டு போராடிய அம்ரிதா தேவி அவரது மூன்று மகள்கள் உள்ளிட்ட 300 போராட்ல்டகாரர்கள் அன்று வெட்டிக்கொல்லபட்டார்கள்.
அதுவே ’தழுவுதல்’ என்னும் பொருள் கொண்ட 1970களில் துவங்கிய சிப்கோ இயக்கத்துக்கும் முன்னுதாரணமாக அமைந்தது. உத்திரபிரதேசத்தில் துவங்கிய சிப்கோ இயக்கம் மர சத்தியாகிரகமென்னும் பெயரில் இந்தியாவெங்கும் வேகமாக பரவியது. இன்றும் மரம் தழுவுதல் ஒரு சிகிச்சையாகவும் வழிபாட்டு முறைகளிலொன்றாகவும் உலகின் பல பகுதிகளில் நடைபெறுகின்றது.
சிப்கோ போராட்டம்
மனிதர்களுக்குத்தான் மரம் தழுவுதல் என்பது புதிய விஷயம், ஆனால் விலங்கினங்களுக்கு மரம் தழுவுதல் என்பது இயற்கையிலேயே அவை அறிந்திருக்கும் ஒன்று.
தென்னமரிக்காவின் அசையாக்கரடி (sloth), கோலா கரடிகள், புலி, பூனை, அணில்,பாண்டாக்கள் மற்றும் ஒராங்குட்டான்கள் மரம் தழுவுதலை அறிந்திருக்கின்றன..
.
2014ல் நடந்த ஒரு ஆய்வு இவ்விலங்குகளில் கோலா கரடியே மிக அதிகமாக மரம் தழுவும் விலங்கு என்கிறது.
மர உச்சியில் வாழும் கோலா கரடிகள் தங்கள் உடலை குளிரச்செய்ய மரங்களை தழுவிக்கொள்கின்றன.
மரங்களின் உள்ளே எப்போதும் நீரும் , திரவ வடிவில் உணவும் சாற்றேற்றம் எனப்படும் தொடர் நிகழ்வாக நடந்துகொண்டே இருப்பதால், விலங்குகள் மரங்களை தழுவிக்கொள்ளுகையில் அவற்றின் உடலெப்போதும் குளிர்ச்சியாக இருக்க இது மிக உதவுகிறது. அகசிவப்பு கதிர் புகைப்படங்கள் மரங்களை தழுவிக்கொள்ளும் விலங்குகளின் உடல் வெப்பம் குறைவதை காட்டுகின்றன.
உலகின் பல்வேறு நாடுகளும் மரம் தழுவும் நிகழ்வினை சூழல் பாதுகாப்பின் பொருட்டு முன்னெடுத்து நடத்துகின்றன. இந்நிகழ்வில் பெரும்பாலும் பள்ளிக்குழந்தைகள் பங்கேற்பதில் கவனம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
மரம் தழுவுதல் என்பது ஒரு சிகிச்சையாகவும் நடைபெறுகிறது.உணர்வுபூர்வமான சமயங்களில் நம் உடலில் சுரக்கும் ஆக்ஸிடோசின் (Oxytocin) என்னும் ஹார்மோன் மரம் தழுவுகையிலும் உருவாவது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது
மரத்தை அணைத்துக் கொள்ளும் மனிதர்களின் மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி பெருகுகிறது. மரங்களை இறுக அணைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் பேரியற்கையின் ஒரு பகுதியாக அவர்களை மனப்பூர்வமாக உணர்கிறார்கள்.
வழக்கமான புத்தாண்டு கொண்டாட்டங்களான வழிபாடு, கேளிக்கை மற்றும் விருந்துகளுடன் இவ்வாண்டில் இருந்து குடும்பத்துடன் மரம் தழுவுதலையும் இணைத்துக்கொள்ளலாம்.அதுவே குடு்ம்ப ஆரோக்கியம், உடலாரோக்கியம் மற்றும் சூழலாரோக்கியதுக்கான இன்றியமையாத சிகிச்சை.
வீடுகளில் வளர்க்க முடியாதவர்கள் , மனம் இல்லாதவர்கள் சுற்றுப்புறங்களிலும், சாலையோரங்களிலும், வனப்பகுதிகளிலும் காணப்படும் பெரு மரங்களையாவது ஆரத்தழுவிக்கொள்ளலாம்.
நேபாளத்தில் 2014ல் புத்த துறவிகள், அரசியல் தலைவர்கள்,பள்ளிக்குழந்தைகள், உள்ளிட்ட 2000 பேர் மரம் தழுவினர். பல நாடுகளில் இதுபோன்ற நிகழ்வுகளை கின்ன ஸ் சாதனைப் புத்தகத்தில் குறிப்பிடுவதன் பொருட்டு விண்ணப்பிக்கிறார்கள்.
மனிதகுலம் ஏறத்தாழ 6000 வகையான பயிரிடப்பட்ட தாவர இனங்களை உணவுத்தேவைக்காக நம்பியுள்ளது, இவற்றில் வணிக ரீதியாக சாகுபடி செய்யப்படுபவை 170 பயிர்கள் மட்டுமே. இவற்றிலும் 30 பயிர்கள் மட்டுமே அதிக அளவில் மீண்டும் மீண்டும் சாகுபடி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன ஒப்பீட்டளவில் சிறிய கவனம் கூட அளிக்கப்படாத பல முக்கிய காய் கனி வகைகளை அளிக்கும் ஏராளமான பயிர்கள் உலகின் கவனத்துக்கே வராமல் இருக்கின்றன..
சத்துக்கள் நிறைந்த இத்தகைய உலகளாவிய அளவில் புறக்கணிக்கப்பட்டதாகக் கருதப்படும் பயிர்கள் தேசிய அல்லது பிராந்திய அளவில் பிரதானமானவை. அவற்றில் ஒன்றுதான் செள செள காய்.
பூசணிக்காய் குடும்பமான குக்கர்பிட்டேசியின் சுரைக்காய், புடலை, பீர்க்கன், தர்பூசணி, பாகல் போன்றவை அதிகம் புழக்கத்தில் இருப்பவை. அதே குடும்பத்தில் இருக்கும் செள செள எனப்படும் காய் தென் தமிழகத்தில் அரிதாகவே உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.
ஆங்கிலத்தில் cho cho , choko, mirliton, chayote என்று அழைக்கப்படும் இதன் அறிவியல் பெயர் Sechium edule.
இதய வடிவ இலைகளும், பற்றுக்கம்பிச்சுருள்களும், வேர்க்கிழங்குகளும் கொண்ட செள செள ஒரு ஏறுகொடித்தாவரம். ஆண் மலர்கள் கொத்தாகவும் பெண் மலர் ஒற்றையாகவும் தனித்தனியே ஒரே கொடியில் அமைந்திருக்கும். தண்டுகளில் நார் நிரம்பியிருக்கும்.
உணவுக்காக சந்தைப்படுத்தப்படும் செள செள காய்கள் எனப்படுவது இதன் கனிகளே. இவை ஒழுங்கற்ற பேரிக்காய் வடிவில் இளம் பச்சை நிறத்தில் இருக்கும். பொதுவாக கனிகளில் முட்கள் காணப்படும். முட்களின்றியும், அடர்பச்சையிலும், வெளுத்த மஞ்சள் நிறத்திலும், அளவில் சிறிதாகவும் கூட காய்கள் இருக்கும். நீர் நிரம்பிய, சதைப்பற்றான காய்கள் இனிப்புச்சுவையுடைய பெரிய ஒற்றை விதை கொண்டிருக்கும்.
மெக்ஸிகோவை சேர்ந்த பல்லாண்டுத்தாவரமான இதன் ஒரு கொடி வருடத்திற்கு 80லிருந்து 100 காய்களையும் 25 கிலோ வேர்க்கிழங்குகளையும் கொடுக்கும்.
உலகெங்கும் இதன் பல வழங்கு பெயர்கள் புழக்கத்தில் உள்ளன. chayote, christophene, vegetable pear, mirliton, merleton choko ( ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில்), starprecianté, citrayota, citrayote (எக்குவடோர் மற்றும் கொலம்பியா), chuchu (பிரேசில்), machucha, caiota, pipinela (போர்ச்சுக்கல்), chow chow (இந்தியா), cho cho (ஜமைக்கா), Sayote (பிலிப்பைன்ஸ்), güisquil (குவாத்தமாலா), pear squash / iskus(நேபாள்).
இவை சௌசௌ / பெங்களூர் கத்தரிக்காய் / மேராக்காய் / சீமை கத்தரிக்காய்/சொச்சக்காய் என்றும் தமிழில் அழைக்கப்படுகின்றன. Custard marrow என்னும் இதன் ஆங்கிலப்பெயர்களில் ஒன்றுதான் தமிழில் மேராக்காய் ஆகி இருக்கிறது
இதன் அறிவியல் பெயரின் பேரினப்பெயரான ’Sechium’ என்பது வெள்ளரிக்காயை குறிக்கும் பண்டைய கிரேக்கச் சொல்லான ’síkyos’ என்பதிலிருந்து பெறப்பட்டது. சிற்றினப்பெயரான ’edule’’ என்பது உண்ணத்தகுந்த என்று பொருள்படும்.
செள செள உற்பத்தியில் மெக்ஸிகோவும் பிரேசிலும் முதலிடத்தில் இருக்கின்றன. இந்த நாடுகளில் அவகேடோ, தக்காளி மற்றும் காபிக்கொட்டைகளுக்கு அடுத்த படியாக செளசெள அதிகம் விரும்பப்படும் நான்காவது உணவுப்பொருளாக இருக்கிறது.
இது அதிக நீர்ச்சத்தும் குறைந்த கலோரியும்கொண்ட சுவையான காய்களும்,“Quelites” எனப்படும் இதன் தளிரிலைகளும் “chayotextle” எனப்படும் வேர்க்கிழங்குகளும் இங்கு விரும்பி உண்ணப்படுகிறது
இதன் இலைகளிலும், வேர்க்கிழங்குகளிலும், காயிலும் ஏராளமான கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்களும் பல வைட்டமின்களும் உள்ளன.
இவை வேகவைத்தும், ஊறுகாய்களாகவும், அவித்தும், எண்ணையில் பொரித்தும் உண்ணப்படுகின்றன. காயின் அனைத்துப்பகுதிகளுமே உண்ணத்தகுந்தவை என்பதால் இதன் மெல்லிய தோலையும் விதையையும் நீக்க வேண்டியதில்லை. செள செளெவின் தோல் மற்றும் விதையையும் சேர்த்து சமைத்தும், சமைக்காமல் பச்சையாகவும் உண்ணலாம்
இக்கொடியின் காய் உள்ளிட்ட அனைத்துபாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டவை
இவை சிறுநீர் பெருக்கும், சிறுநீரக கற்களுக்கும் வீக்கங்களுக்கும் எதிராக செயல்புரியும், இருதயத்தை பாதுகாக்கும், குருதிக்கொதிப்பை கட்டுப்படுத்தும் மற்றும் உடலை வலுப்படுத்தும்.
செளசெள முளைவிட்ட காய்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. காய்கள் கொடியில் இருக்கும் பொழுதே அதனுள் இருக்கும் விதை முளைத்துவிடுகிறது. தண்டின் வெட்டுத் துண்டுகளையும் சாகுபடிக்கு பயன்படுத்தலாம்
பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு வருங்காலத்திற்கான ஊட்டச்சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் உணவு அடிப்படையிலான அணுகுமுறைகளில் புறக்கணிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத இனங்களின் (Neglected and underutilized species-NUS) பரவலான மீள் உபயோகங்கள் அதிக கவனம் பெற்றிருக்கின்றன.
செள செள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த, அனைத்துக் காலநிலைகளிலும் வளரும் இயல்பு கொண்ட, நோய் எதிர்ப்புதிறன் மிக்க, லாபம்அளிக்கும், உள்நாட்டில் கிடைக்கக்கூடிய எளிதில் வளர்க்க முடியும் பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்வதும், அவற்றின் நுண்சத்துக்கள் நிறைந்த காய்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வதும் வருங்காலத்துக்கான உணவுசார்ந்த அணுகுமுறைகளில் மிக முக்கியமானவை.
மிளகாய்களை உலகெங்கும் அறிமுகம் செய்த பெருமை கிரிஸ்டோஃபர் கொலம்பஸைத்தான் சேரும். அவரே மெக்ஸிகோவிலிருந்து அவற்றை பல நாடுகளுக்கு அறிமுகப்படுத்தினார் என்கிறது வரலாறு.
மிளகாய்களின் பிறப்பிடம் மெக்ஸிகோ என்று சொல்லப்பட்டாலும். தாவரவியல் ஆய்வாளர்கள் மிளகாய்கள் மெக்ஸிகோவிலிருந்து அல்ல பொலிவியாவிலிருந்தே தோன்றின என்றும் அங்கிருந்து அவை பறவைகளின் மூலம் மெக்சிகோவிற்கு அறிமுகமாகியிருக்கும் என்றும் கருதுகிறார்கள். மிளகாயின் காரம் மனிதர்களைப் போல் பறவைகளுக்கு உரைப்பதில்லை என்பதும் இயற்கையின் அதிசயங்களில் ஒன்று.
தக்காளி உருளைக்கிழங்கின் குடும்பமான சொலனேசியை சேர்ந்த மிளகாய் ஆங்கிலத்தில் chillies, chiles அல்லது peppers என அழைக்கப்படுகின்றன
கிரிஸ்டோஃபர் வருமுன்னரே பழங்குடிகளான அஸ்டெக்குகள் மற்றும் மாயன்களின் கலாச்சாரத்துடன் பிரிக்கமுடியாதபடி ஒன்றி இருந்தது மிளகாயும் அதன் காரமும்.
மிளகாய்கள் உணவுக்கான உபயோகங்களுக்கு மட்டுமல்லாது அவற்றின் மருத்துவ குணங்களுக்காகவும், பூச்சிகள் அண்டாமல் இருக்க வீடுகளுக்கு புகை போடவும் மெக்ஸிகோவில் பெரிதும் உபயோகத்திலிருந்தன. மெக்ஸிகோவின் டெவாகனா பள்ளத்தாக்கில் (Tehuacán Valley) மிளகாய்கள் கிமு 50000 வருடங்களுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்தற்கான அகழ்வாய்வு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
மெக்ஸிகோவின் உணவுகளில் மிளகாய் பிராதான இடம்பெற்றிருக்கிறது உலர்ந்தவைகளும் புத்தம் புதியவைகளுமாக பலநூறு மிளகாய் வகைகள் மெக்ஸிகோவில் விளைந்து,பயன்பாட்டிலும் உள்ளன. மெக்ஸிகோவின் வறண்ட, வெப்பம் மிகுந்த காலநிலை மிளகாய்களின் வளர்ச்சிக்கு ஏதுவாகவும் அவற்றின் பூச்சித்தாக்குதலுக்கு எதிராகவும் இருப்பதால் அங்கே மிளகாய்கள் அதிகம் விளைகின்றன
மெக்ஸிகோவில் மிளகாய்கள் அனைத்துவிதமான உணவுகளிலும் சேர்க்கப்படும் சாக்கலேட்டுகளிலும், பானங்களிலும், இனிப்புகளிலும் மட்டுமல்லாது ஊறுகாய்களாகவும், பசையாகவும் பொடிகளாகவும் இவை கிடைக்கின்றன
மெக்ஸிகொ பழங்குடிகள் மிளகாய்கள் உலர்ந்திருக்கையில் அவற்றை சேமித்து வைக்கவும் தொலைதூரங்ககளுக்கு எடுத்துச் செல்லவும் வசதியாக இருப்பதை கண்டறிந்திருந்தார்கள் அவ்வாறு உலர்ந்த மிளகாய்களை கட்டு கட்டாக சேமித்து வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். அவ்வழக்கம் அவர்களின் வளமையின் குறியீடாகவே காலப்போக்கில் மாறிப்போனது.
இன்றளவிலும் மெக்ஸிகோ நகரின் பொது இடங்களில். அலங்கார வளைவுகளில், வணிக வளாகங்களில், வீடுகளின் முகப்புகளில் என்று பார்வையில் படும்படி உலர்மிளகாய்களின் நீண்ட கொத்துக்களை கயிற்றில் அல்லது நாரில் கட்டி அலங்காரமாக தொங்கவிடும் பழக்கம் தொடர்கிறது.
இதுபோன்று அலங்காரமாக தொங்கவிடப்பட்டிருக்கும் மிளகாய் கொத்துக்கள் ஆங்கிலத்தில் Ristras எனப்படுகின்றன. இவை வரவேற்புக்காகவும், வளமை மற்றும் செல்வத்தின் அறிகுறியாகவும் அதிர்ஷ்டம் தரும் என்னும் நம்பிக்கையின் பேரிலும் இப்படி பார்வைக்கு வைக்கப்படுகிறது. இவ்வாறு ரிஸ்ட்ராக்களாக்கப்பட்ட மிளகாய்கள் தீய சக்திகளை விரட்டும் என்றும் அடுத்த வருட விளைச்சலை பெருக்கும் எனவும் மெக்சிகோ மக்களிடம் நம்பிக்கை நிலவுகிறது
ரிஸ்ட்ரா என்றால் ஸ்பானிய மொழியில் ’ கோர்த்த மணி’ என்று பொருள் தென்மேற்கு அமெரிக்காவின் அடையாளங்களாக கருதப்படும்’ சகுரா கள்ளி, கெளபாய் பூட்ஸ்’ இவற்றுடன் மிளகாய் ரிஸ்ட்ராக்களும் இருக்கின்றன.
தரமான தேர்ந்தெடுத்த மிளகாய்களை நன்கு வெயிலில் உலர வைத்து கயிறுகளில் இறுக்கமாக மாலை தொடுப்பதுபோல் கட்டி பல வடிவங்களில் வட்டமாகவும், நீளமாகவும், தனித்தனி கொத்துக்களாகவும், பலகொத்துக்களை ஒன்றிணைத்தும் ரிஸ்ட்ராக்கள் உருவாக்கப்படும். இவற்றை பல வருடங்களுக்கு சேமித்து வைக்க முடியும்.
பல வீடுகளில் இவ்வாறு உலர செய்து ரிஸ்ட்ராக்களாக இருக்கும் மிளகாய்களை தேவைப்படும்போது சமையலுக்கும் பயன்படுத்துவதுண்டு.
உலகின் பல பகுதிகளிலும் இப்படி ரிஸ்ட்ராக்கள் காய்,கனிகளை கொண்டு உருவாக்கப்படுகின்றன. பூண்டு ரிஷ்ட்ராக்கள் தென்னிந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் உள்ளன. ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் முற்றிய மக்காச்சோளக்திர்களிலும், இலங்கையில் நிலக்கடலை மற்றும் பூண்டிலும் இந்தியாவில் கேரளாவில் முற்றிய நெற்கதிரிலும் தமிழ்நாட்டின் கொங்கு பகுதியில் நெற்றுத்தேங்காய்களிலும் ரிஸ்ட்ராக்கள் உருவாக்கப்படுகின்றன.
மெக்சிகோவிற்கு இனி செல்பவர்கள் மிளகாய் ரிஸ்ட்ராக்களை அவசியம் கவனித்து பார்க்கலாம்,
நாமனைவருமே அந்தந்த பிரதேசத்தின் பிரபல காய்கறிகளை உலர செய்து ரிஸ்ட்ராக்களை உருவாக்கலாம். இணைய வர்த்தகத்திலும் ரிஸ்ட்ராக்கள் விற்பனையாகின்றன.
’’ஆலை இல்லா ஊரில் இலுப்பை பூ சர்க்கரை’’ என்னும் முதுமொழியை இலுப்பை மரத்தின் இனிப்புச் சுவை கொண்ட மலர்களால் தான் புழக்கத்தில் வந்த்து ,
இலுப்பை மரம், இருப்பை, குலிகம் என்னும் பெயர்களாலும் அறியப்படுகிறது. சப்போட்டேசி குடும்பத்தை சேர்ந்த இம்மரத்தின் ஆங்கில பொதுப்பெயர்; Butter tree, mahwa,, தாவர அறிவியல் பெயர்; Madhuca longifolia, இணைப்பெயர்கள்;.Bassia longifolia, Madhuca indica
இதன் தாயகம்; இந்தியா( தமிழகம்). இம்மரங்களின் மலரும் காலம் – மார்ச்- ஏப்ரல்
இந்தியா முழுவதும் இலையுதிர் காடுகளில் பரவலாக காணப்படும், இம்மரங்கள் ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார், வட மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளிலும், மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் காணப்படுகிறது.
மிக உயராமாக நூறு அடிக்கு மேல் வளரும் இலுப்பைமரம் கோடை காலத்தில் இலைகளை உதிர்த்து விடும். அச்சமயத்தில் சாறு நிரம்பிய அழகிய வெண்ணிற மலர்கள் அதிக இனிப்புச் சுவையுடன் இருக்கும்.
இரும்பை மகாளேஸ்வரர் கோயில், இலுப்பைப்பட்டு நீலகண்டேஸ்வரர் கோயில், திருச்செங்கோட்டில் உள்ள திருக்கொடிமாட செங்குன்றூர் மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல்வேறு கோயில்களின் புனித மரமாக இலுப்பை மரம் உள்ளது. வள்ளுவர் மயிலாப்பூரில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள இலுப்பை மரத்தின் கீழ் பிறந்தார் என்று நம்பப்படுகிறது, எனவே ஏகாம்பரேஸ்வரர் கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட வள்ளுவர் சன்னதியின் கருவறை மரமாகவும் இந்த இலுப்பை மரமே உள்ளது.
மஹுவா மரத்தின் பொருளாதார முக்கியத்துவம் காரணமாக, பிரிட்டிஷ் இந்தியாவின் வன நிர்வாகிகள் அதை வெட்டுவதற்கு தடை விதிதிருந்தார்கள். ஆது இன்றும் கடைபிடிக்கப்படுகிறது. இதன் விளைவாக, மஹுவா மரங்கள் இந்திய வயல்களிலும் காடுகளிலும் மிக அதிக அளவில் இருக்கின்றன. இந்திய வன மரங்களில் இவை மிகப் பழமையானவை மற்றும் மிகவும் பொதுவானவையும் கூட.
இவை குட்டையான அடித்தண்டை கொண்டிருக்கும். சொற சொறப்பான இலைகள் நீள் முட்டை வடிவில் கூர் நுனியுடன் இருக்கும். மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில், இந்த மஹுவா மரம் என்றூம் அழைக்கப்படும் இலுப்பை சிறிய உருண்டையான . பச்சை-வெள்ளையில் மலர்களை உருவாக்கும். சிறிய அழகிய மணிகளை போல நறுமணம் கொண்ட மலர்கள் கொத்துக்கொத்தாக மலரும். முட்டை வடிவ சதைப்பற்றான கனிகள் 1 லிருந்து 4 தட்டையான எண்ணெய் நிரம்பிய பழுப்பு விதைகளை கொண்டிருக்கும்
விதைகளிலிருந்து எடுக்கப்படும் மருத்துவ உபயோகங்கள் கொண்ட .இலுப்பை எண்ணெய் அடுப்பு மற்றும் விளக்குகள் எரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது..இலுப்பை புண்ணாக்கு நல்ல உரமாகவும் பயனாகிறது. “மஹுவா எண்ணெய் தோல் நோய், வாத நோய் மற்றும் தலைவலி ஆகியவற்றின் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது. இலுப்பை எண்ணெய் பசு நெய்யில் கலப்படம் செய்யப்படுகிறது.
டஸ்ஸர் பட்டை (tassar silk), உருவாக்கும் அந்துப்பூச்சிகளுக்கு (Antheraea paphia) இலுப்பை இலைகள் தான் உணவாகின்றன இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் கால்நடை தீவனமாகவும் பயனாகின்றன
மஞ்சள் நிற கனிகளும் உண்ணத்தவையே. .கனிகள் சமையலிலும் உபயோகப்படுத்தப்ப்டும்.
மஹுவா இந்தியப் பழங்குடியினரிடையே புனிதமான மரமாக கருதப்படுகிறது. இது ‘வாழ்க்கை மரம்’ என்று அழைக்கப்படுகிறது. மலர்கள் மட்டும் அல்ல, மரத்தின் ஒவ்வொரு பகுதியும் பயன்படுகிறது. பழத்தின் ஓடு கூட சில பழங்குடி இனங்களில் இறுதிச் சடங்குகளின் போது பயன்படுத்தப்படுகிறது.
இனிப்புசாறு நிறைந்திருக்கும் இம்மலர்களுடன் வங்காளத்தில் மட்டும் விளையும் gobindo bhog என்னும் அரிசிச்சோற்றை கலந்து சுவையான பாயசம் பண்டிகைக்காலங்களில் செய்யப்படும்.
mahua butter
மலர்ச்சாற்றை பிற மூலிகைகளுடன் நொதிக்க வைத்து உண்டாக்கப்படும் மஹுவா மது பல ஆந்திர மற்றும் தமிழக கிராமங்களில் புழக்கத்தில் உள்ளது .3 அல்லது 4 மணி நேரத்தில் மஹுவா மலர் மது கிரமவாசிகளாலும் பழங்குடியினரலும் எளிதாக உருவாக்கப்படுகிறது.
மஹுவா மலர்கள் பழங்குடியினரால் பறிக்கப்படுவதில்லை இரவில் மரங்களுக்கடியில் விரிக்கப்பட்டிருக்கும் துணிகளிலும் வைக்கப்பட்டிருக்கும் கூடைகளிலும் உதிரும் மலர்களை அதிகாலையில் சேகரித்துக்கொள்வார்கள்
கல்கத்தாவில் மஹுவா மலர்கள் அடைக்கப்பட்ட பூரிகளும் மஹுவா மலர்களை உலர்த்திப்பொடித்த மாவில் செய்யப்படும் இனிப்புக்களும் பிரசித்தம். சில கிராமங்களில் மலர்களிலிருந்து ஜாமும் ஊறூகாயும் தயரிக்கப்படுகின்றன.
மருத்துவ ரீதியாகவும் இம்மரம் மிகவும் மதிப்பு வாய்ந்தது. தொழுநோயைக் குணப்படுத்தவும், காயங்களைக் குணப்படுத்தவும் மரப்பட்டை பயன்படுகிறது, இருமல், பித்தம் மற்றும் இதயக் கோளாறுகளைப் போக்கமலர்கள் உபயோகிக்கப்படுகின்றன.
உலர் மஹுவா மலர்கள் அமேஸான் உள்ளிட அனைத்து ஆன்லைன் வர்த்தகத்திலும் கிடைக்கின்றது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளின் மிக முக்கிய புரத உணவாக இருப்பது கொண்டைக்கடலை எனப்படும் chick pea . பட்டாணிக்குடும்பமான ஃபேபேசியை சேர்ந்த இதன் அறிவியல் பெயர் Cicer arietinum. சென்னா, கடலை, கொண்டைக்கடலை, சுண்டல் கடலை என்று தமிழில் அழைக்கப்படும் இதன் பிறமொழிப் பெயர்கள் chole, gram, Bengal gram, garbanzo, garbanzo bean , Egyptian pea, ceci, cece & channa.Kichererbsen
உலகின் மிகப்பழமையான பயறு வகை தாவரங்களிலொன்றான கொண்டைக்கடலையின் 7500 வருட பழமையான தொல்எச்சங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் கிடைத்திருக்கின்றன. 10000 வருடங்களுக்கு முன்பிருந்தே கொண்டைக்கடலை தாவரம் துருக்கியில் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மேற்கு ஆசியா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இவை பயிராகிக்கொண்டிருக்கின்றன. மொத்த உலக உற்பத்தியில் 70 சதவிதத்தை அளிக்கும் இந்தியாவே கொண்டைக்கடலையின் உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது.
உலகின் மூன்றாவது முக்கிய பயறு வகையான இவற்றில் அளவில் சிறிய அடர் நிறம் கொண்டவை நாட்டு ரகங்கள் (Cicer arietinum desi varity). முதிராக்காய்களின் கடலைகள் அதிக சத்துக்களுடன் சிறியதாக பச்சை நிறத்திலும் கிடைக்கின்றன.
அளவில் பெரிய நாட்டு வகைகளைக்காட்டிலும் சற்று மென்மையான, வெளுத்த ஆஃப்கானிஸ்தானிலிருந்து வந்தவகை காபூலி வகை எனப்படும்.Cicer kabulium -( kabuli variety)
பல்லாண்டுகளாக இவை இரண்டுமட்டுமே புழக்கத்தில் இருந்தன . தற்போது தெற்கு இத்தாலியில் மட்டும் விளைவிக்கப்படும் Ceci neri என்னும் அறிவியல் பெயருடைய கருப்பு கொண்டைக்கடலைகளும் சந்தையில் உள்ளன.
Ceci neri
இவற்றை வேகவைத்தும், வறுத்தும், கடலைமாவாக பொடித்தும் தாயாரிக்கப்படும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பல வகை உணவுகள் உலகெங்கும் மக்களின் விருப்ப உணவுகளாக இருக்கின்றன..
இவற்றை தோல் நீக்கி உலரவைத்து இரண்டாக உடைத்ததுதான் கடலைப்பருப்பு. வறுத்து உடைத்தவையே வறுகடலை அல்லது பொட்டுக்கடலை
வறுத்து அரைக்கப்படும் கொண்டைக்கடலை காபியாகவும் அருந்தப்படுகிறது முதல் உலகப்போரின் போது உண்டான காபி தட்டுப்பாட்டினால் இவை காபிக்கொட்டையை போலவே வறுத்தரைக்கப்பட்டு காபி தயாரிக்கப்பட்டது. இந்த பானம் இன்றும் உலகின் பல நாடுகளில் புழக்கத்தில் இருக்கிறது.
அனைத்து விதமான மண் வகைகளிலும் வளரும் இவை வறட்சியையும் தாங்கும் திறன் கொண்டவை. 20 லிருந்து 60 செமீ உயரம் வரை வளரும் இவை இறகுக்கூட்டிலைகளையும் வெள்ளை அல்லது சிவப்பு சிறு மலர்களையும் கொண்டிருக்கும். சிறு படகு போன்ற பச்சைக்காய்களில் ஒன்று அல்லது மூன்று விதைகள் எனப்படும் சிறு அலகு போன்ற நீட்சியை உடைய கொண்டைக்கடலைகள் காணப்படும். தாவரம் முழுக்க மென்மையான ரோமம் போன்ற வளரிகள் காணப்படும் .இப்பயிர் சுமார் 100 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். வளிமண்டல நைட்ரஜனை நிலத்தில் நிறுத்தி நிலவளத்தையும் இவை பாதுகாக்கின்றன.
கொண்டைக்கடலையில் இரும்பு மற்றும் செம்புச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் இக்கடலையில் மாங்கனீஸ், தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்களும் நிறைந்துள்ளன. கொண்டைக்கடலையில் குறைவான கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்றும் மிக அதிக அளவில் நார்ச்சத்துக்களும், புரதமும் இருக்கின்றது.
கொண்டைக்கடலையின் இளம் காய்களும், இலைகளும் பச்சையாக உண்ணப்படுகின்றன புரதச்சத்துக்காக இவை கால்நடைகளுக்கும் தீவனமாக அளிக்கப்படுகின்றன
hummus
தென்னிந்தியாவில் கடலைமாவில் செய்யப்படும் பஜ்ஜி, மைசூர்பாக்கை போலவே உலகளவில் வேகவைத்து மசித்த கொண்டைக்கடலையுடன் ஆலிவ் எண்ணெயும், எலுமிச்சைச்சாறும்,அரைத்த எள்ளும் கலந்து செய்யப்படும் Hummus வெகு பிரபலம்.
குறைந்தது எட்டு மணி நேரம் ஊறவைத்து மிருதுவாக்கப்பட்ட கொண்டைக்கடலையை வேகவைக்கையில் அதிலிருக்கும் ஒவ்வாமையை அளிக்கும் சில பொருட்கள் நீங்கிவிடுகின்றன. இவை 2 லிருந்து 3 நாட்கள் வரை ஊறவைத்து ,முளைவிட்டதும் உணவில் சேர்க்கப்படுகையில் கூடுதலான சத்துக்கள் கிடைக்கின்றன. ஒருபோதும் கொண்டைக்கடலையை ஊற வைத்த, வேகவைத்த நீரை உணவில் சேர்க்கக்கூடாது. அந்த நீரில் கொண்டைக்கடலையின் ஒவ்வாமையை உருவாக்கும் (antinutritinal substances) கரைந்திருக்கும். வேகவைப்பதால் கொண்டைக்கடலையின் சத்துக்கள் அதிகமாகின்றன. இந்தியாவின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நவராத்திரி விழாக்களின் கொலு பூஜைகளின் போது கொண்டைக்கடலை பிரசாதம் கட்டாயம் இருக்கும்.
மேலதிகமாக இவற்றைக்குறிது அறிந்து கொள்ள;https://toriavey.com/the-history-science-and-uses-of-chickpeas/