ஆண்டவரே!
எனக்கு எதிர் தரப்பென்று ஒன்றிருப்பதில் புகாரேதும் இல்லை,
அவர்கள் வலுவற்றவர்களாய் இருப்பதிலும் ஆட்சேபணை இல்லை
இருந்தாலும் கொஞ்சம் சொல்லிக்கொள்ளும்படியாகவாவது இருக்ககூடாதா?
கொஞ்சம் பார்த்துப்பண்ணுங்கள் பிதாவே!
லோகமாதேவியின் பதிவுகள்
ஆண்டவரே!
எனக்கு எதிர் தரப்பென்று ஒன்றிருப்பதில் புகாரேதும் இல்லை,
அவர்கள் வலுவற்றவர்களாய் இருப்பதிலும் ஆட்சேபணை இல்லை
இருந்தாலும் கொஞ்சம் சொல்லிக்கொள்ளும்படியாகவாவது இருக்ககூடாதா?
கொஞ்சம் பார்த்துப்பண்ணுங்கள் பிதாவே!
மிக இளம் வயதிலேயே வாசிக்கத் துவங்கியிருந்தேன். மிகச்சிறிய வயதிலிருக்கையில், பணிபுரிந்த பள்ளியில் நூலகப் பொறுப்பு அப்பாவிற்கு அளிக்கப்பட்டிருந்தது, அந்த நூலகத்திலிருந்து ஒரு அகராதியை கொண்டு வந்து கொடுத்தார். அதுவே என் நினைவில் இருக்கும் நான் தொட்டுணர்ந்த முதல்புத்தகம். அதன் கனத்த அட்டையை திறந்தால் உள்ளிருந்து ஒரு செவ்வண்ண காகிதத் தாமரை, இதழ் இதழாக எழும்பி நிற்கும். அது எனக்கு பெரும் பரவசத்தை அளித்தது. திறப்பதும் மூடுவதுமாகவே இருந்தேன் அப்பாவிடம் பயம் எப்போதும் இருந்ததால் அதை பத்திரமாகவே கையாண்டேன்.
பிற்பாடு லாரன்ஸ் பள்ளியில் பணிபுரிந்த ஊட்டி மாமா அத்தையுடன் சிங்கப்பூர் உறவினர்களின் குழந்தைகளும் எங்களுடன் விடுமுறையின் தங்க வருவார்கள். ஒரு முறை அந்த சிங்கப்பூர் மாமா எங்களுக்கு வழவழப்பான காகிதங்கள் கொண்ட பெரிய அட்லஸ் ஒன்றை பரிசளித்தார். அப்போது 6 அல்லது 7ல் இருந்திருப்பேன். அது எனக்கு பெரிய பொக்கிஷமாக இருந்தது பச்சையும் நீலமும் அதிகம் இருந்த அந்த பெரிய புத்தகத்தில் கண்டங்களை நாடுகளை தொட்டுத் தொட்டுப் பார்த்தது அங்கெல்லாம் சென்று வரும் அனுபவங்களை காட்டிலும் கிளர்ச்சி யூட்டுமொன்றாக் இருந்தது.
அந்த அட்லஸிலிருந்து ஒரு மணம் வீசும் அதை இப்போதும் என்னால் நினைவு கூற முடியும். மூளையில் சிடுக்குகளுக்குள் அந்த மணம் எங்கோ இன்னும் ஒளிந்திருக்கிறது.
தாராபுரம் செயிண்ட் அலோசியஸில் படித்துக் கொண்டிருக்கையில் எம் எல் ஏ பெரியம்மாவின் மாடிவீட்டில் குடியிருந்த சோடா பாட்டில் கண்ணாடி ராஜா அவன் சேகரிப்பில் இருந்த காமிக்ஸ் புத்தகங்களை எங்களுக்கு வாடகைக்கு தருவான். அவனிடம் இப்படி நிறைய வாங்கி படித்திருக்கிறேன்.
மீண்டும் பொள்ளாச்சிக்கே வந்தபோது அப்பா இரும்புக்கை மாயாவி, சிஐடி சங்கர் போன்ற கதைப்புத்தகங்கள் வாங்கிக்கொடுத்தார், அம்புலிமாமா சில சமயம் வாங்கியதுண்டு. இரும்புக்கை மாயாவி புத்தகத்தின் பக்கங்கள் ஒன்றாக சேரும் இடத்தில் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு இருக்கும்.
அது எனக்கு அந்த புத்தகத்தின் லிப்ஸ்டிக் தடவிய உதடு போல தோன்றும். டயானாவும் மண்டையோடும் டெவிலும் மாயாவியும் அவரது செயற்கை கையும் காட்டுவழியில் அவர் பயணமும் சாகசங்களுமாய் இரவில் உறக்கமின்றி அப்பயணங்களில் நானும் உடன் இருந்தேன்.
சி ஐ டி சங்கர் சித்திரக் கதையில் ஜப்பானிலிருந்து வந்து இந்தியாவின் நதிகளில் ஒரு நச்சுக்களைச் செடியை போட்டு வறண்டு போகச்செய்த நாசகாரர்களை சங்கர் களையெடுக்கப்போவார். வில்லனின் மாருமோச்சி என்னும் மகனை சங்கர் மலை உச்சியிலிருந்து கீழே தள்ளி விட்டு கொன்று விடுவார். அது தெரியாத வில்லன் சங்கரிடம்’’ எங்கே என் மகன் மாருமோச்சி என் கேட்பார்’ பதிலுக்கு சங்கர் ’’அவன் மாடு மேய்க்க போயிருப்பான்’’ என்பார். அதையே பல நூறு முறை படித்து சிரித்துக்கொள்வோம்.
அது சித்திரக்கதை புத்தகம் என்பதால் அந்த காட்சிகள் நேரில் கண்ட அனுபவத்தையே எனக்களித்தது. அதிலிருந்து லேசில் விடுபட முடியவில்லை. மேலும் மாடு மேய்த்தல் போன்ற வட்டார வழக்கில் வாசித்ததும் கூடுதல் மகிழ்ச்சியளித்தது.
அது கொடுத்த நம்பிக்கையில் ( ஒரு போதாத வேளையில்) எங்கள் வீடு இருந்த அந்த தெருவில் இருக்கும் என் வயது சிறுவர்களுக்கு நானே கைப்பட எழுதியும் வரைந்தும் ஒரு கையெழுத்து பத்திரிக்கை நடத்த தலைப்பட்டேன்.
சிஐடி சங்கர் கதையின் அந்த ஒரு விஷக்களையின் ஏராளமான விதைகள் நீரில் கலந்து பெருகிப் பெருகி நீர் நிலையை வற்ற வைப்பது என்னும் யுத்தி எனக்கு பெரிதும் ஆச்சர்யமளித்தது. (18-ம் நூற்றாண்டில் லேடி ஹாஸ்டிங்ஸ் இப்படித்தான் விளைவுகளை எண்ணிப்பார்க்காமல் வெங்காயத்தாமரையை ஹூக்ளி நதியில் அறிமுகப்படுத்தினார்)
ஏறக்குறைய அதைப்போலவே (காப்பி) ஒரு காமிக்ஸ் சித்திரக் கதையை உருவாக்கி துணிந்து கையால் படங்களை வரைந்து அதை சுற்றுக்கு விட்டிருந்தேன். செடிகொடிகளின் மீது ஆர்வம் உண்டாகி இருந்த காலம் அது. வீட்டில் இருந்த கனகாம்பரம் அகத்தி செம்பருத்தி ஆகியவற்றின் மீது பெரும் பிரியம் உண்டாகி இருந்தது.
விடுமுறைகளில் திப்பம்பட்டி தோட்டத்துக்கு போகும் போதெல்லாம் தேங்காய் போடுவது, கட்டுச்சேவல் வளர்ப்பது, எங்களது சேவல் சண்டைக்கு போன உடனேயே மாலை வரவிருக்கும் தோற்ற கட்டுச்சேவல்களின் கறிக்கென மசாலா அரைக்கத் துவங்குவது, வாழை அறுவடை முடிந்து ஊதாக்கூம்புகளாக கிடக்கும் ஏராளமான வாழைப்பூக்களை சாக்கில் கட்டி வயலை சுற்றி பெருக்கெடுத்தோடும் ஆற்றில் வீசுவது, மாட்டு வண்டியின் நடுவில் இருக்கும் பணம் வைத்து கொள்ளும் ரகசியப் பெட்டி முழுக்க இலந்தைப்பழங்களை நிறைப்பது, நிரம்பி வழியும் காட்டுக்கிணற்றின் நீர்ப்பாம்புகளை அஞ்சிக்கொண்டே பார்ப்பது, வெள்ளம் ஓடும் ஆற்றை கண்களை மூடிக்கொண்டு வண்டியில் கடப்பது என இயற்கையுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்த காலங்கள் அவை.
தாவரங்கள் மீது ஆர்வமும் அன்பும் அப்போதிலிருந்து பெருகி இன்னுமே அவற்றைக் கற்றுக்கொள்வதில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டிருக்கிறேன்.
இளங்கலை படிக்கையில் பல கல்விச்சுற்றுலாக்கள் என் யானைப்பசிக்கு போதுமான தீனி போட்டன. முதுகலை நேரடியாக பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்த 5 பேரில் நானும் ஒருத்தியானதால் அங்கு தனியே இருந்த மாபெரும் தாவரவியல் பூங்காவில் பழியாய் கிடந்து,மேலும் மேலும் தாவரங்களை நோக்கியே பயணித்தேன்.
இடையில் வாசிப்பும் தொடர்ந்தது. பல்கலைக்கழகத்தில் தீவிர வாசிப்பில் ஈடுபட்டிருந்தேன். அங்கு fine arts clubல் சேர்ந்து அசட்டு கவிதைகள் எல்லாம் எழுதி வாசித்தேன்.அதன் பிறகு எங்கிருந்தோ எழுதவேண்டும் என்னும் கொதி வந்து சேர்ந்தது.
பல கதைகளை எழுதி விகடன் தினமணிக்கதிர் குங்குமம் குமுதம் என்று அனுப்புவேன். தவறாமல் விடுதி விலாசத்துக்கு அவை திரும்பி வரும். ஆனாலும் மனம் தளராமல் எழுதி அனுப்பிக் கொண்டே இருப்பேன்.
பொள்ளாச்சி வீடு இருந்த தெருவின் கடைசியில் ஒரு பெரும் பணக்காரரின் விவசாய நிலம் இருந்தது. அங்கே அவ்வப்போது சில ஏழைச்சிறுவர்கள் வேலிக்குள் நுழைந்து மாங்காயும் வெள்ளரியும் பூசணியும் வெண்டைக்காய்களுமாக திருடுவது வழக்கம்.
ஒருக்கில் அங்கு விளைந்திருந்த பூசணிக்காய்களை திருடி வீடுகளுக்கு விற்று சில்லறைக்காசு பார்த்துகொண்டிருந்த சிறுவனொருவன் எங்கள் வீட்டுக்கும் வந்தான். அப்போது பல்கலை விடுமுறையில் வீட்டில் இருதேன். அப்பா அந்த பூசணியை பார்த்து அவனை அடிக்க போய் கடுமையாக திட்டி ’’இந்த வயசிலேயே திருடியவன் நாளைக்கு என்ன வேணும்னாலும் செய்வே’’ என ஏசி துரத்தி விட்டார். முன்னங்கைகளில் முள் வேலிக்குள் நுழைந்த காயங்கள் இருந்த அந்தப்பையன் பூசணிக்காயை வாசலிலேயே விட்டுவிட்டு அழுதுகொண்டே ஓடிபோனான்..
அவன் போனபின்பு அம்மாவை அழைத்த அப்பா’’பாப்பாத்தி, பூசணிக்காய உள்ளே எடுத்து வை ’’ என்றார்.
அந்த சம்பவம் என்னை என்னவோ செய்தது. ஒரு காயம் அல்லது ஒரு ஆழமான தொந்தரவு உண்டாயிருந்தது உள்ளே. சாம்பல் பூசணி என்று தலைப்பிட்டு அந்த அனுபவத்தை அப்படியே கதையாக எழுதி தினமணிக்கதிருக்கு அனுப்பினேன்.அடுத்த மாதம் ஞாயிறு அன்று என் பெயரில் அந்த கதை பிரசுரமானது.
அச்சில் என் கதையை, என் பெயரை பார்த்த போது எப்படி உணர்ந்தேன் என்பதை இப்போதுகூட எழுத்தில் கொண்டு வர முடியாது. பெருமிதம் கர்வம் மகிழ்ச்சி எல்லாம் சேர்ந்த ஒரு கலவையான உணர்வு. மேலும் அந்த கசப்பான அனுபவம் உண்டாக்கி இருந்த அசெளகரியம் குறைந்தும் விட்டிருந்தது.
பின்னர் முனைவர் பட்ட ஆய்வில் மும்முரமாக ஈடுபட்டேன் எனினும் வாசிப்பு தொடர்ந்தது. அனேகமாக தினமும் வாசித்துக் கொண்டுதான் இருந்தேன். அப்போது பயணம் அதிகம், பொள்ளாச்சியிலிருந்து கோவை பல்கலைக்கழகம் அங்கிருந்து கோத்தகிரி வனக்கல்லூரியில் லேப் நான் வாடகைக்கு எடுத்திருந்த நிலம் தொண்டாமுத்தூரில் இருந்தது அங்கும் அவ்வப்போது சென்று ஆய்வுக்கான தாவரங்களின் வளர்ச்சியை பார்ப்பது என ஒவ்வொரு நீண்டபயணத்திலும் வாசித்துக்கொண்டிருந்தேன்.
டெல்லி பயணங்கள், இந்த NGM கல்லூரியில் வேலை பின்னர் திருமணம் என்றான பின்னர் அந்த பாலை வாழ்வில் அத்தனை இன்னல்களுக்கிடையில் அவ்வபோது மங்கையர் மலரில் துணுக்குகள் அவள் விகடனில் கவிதை என்றெழுதி அனுப்புவேன்
2 கவிதைகள் விகடனில் வெளியானது அதில் ஒன்று முழுப் பக்கத்துக்கு வந்தது. அபுதாபி வாழ்வின் அவலங்களை அந்த இரண்டே இரண்டு பிரசுரங்கள் மீட்டெடுத்தது என்றே சொல்லலாம்.
இந்தியா வந்தபின்னர் வேலை தேடுதல், யாரையும் சாராமல் வாழ்வைத் தொடரும் சவால் என் பல கஷ்டங்கள், எழுத்தை மறந்தேன் ஆனால் வாசிப்பும் மகன்களுக்கு கதை சொல்லலும் தொடர்ந்தது. ஜெ வின் எழுத்துக்கள் மித்ரா மூலமாக அறிமுகமானது. அதன் பின்னர் வாழ்க்கை முற்றாக மாறியது. ஒரு சுழல் போல அவரின் எழுதுக்களுக்குள் நாங்கள் மூவரும் மூழ்கினோம்.
பின்னிரவுகளில் மரத்தடி கயிற்றுக்கட்டிலில் என் மடியில் படுத்துக் கொண்டிருக்கும் மகன்களுக்கு ஜெ வின் கதைகளை வரி வரியாக வாசித்து வாசித்து கதை சொல்லி தூங்க வைத்து ஒவ்வொருவரையாக உள்ளே சென்று படுக்க வைத்துவிட்டு இருவருக்குமிடையில் அக்கதைகளிலிருந்து விலகமுடியாமல் விழித்திருந்த இரவுகள் அனேகம்.
பின்னர் வெண்முரசு.
என் மொத்த வாழ்க்கையும் வெமு வெபி என் இரண்டாக பிரிக்கும் அளவுக்கு அதன் தாக்கம் இருந்தது. நான் முற்றிலும் வேறு ஒருத்தியாய் மாறிப்போயிருந்தேன். என் அகமொழி மேம்பட்டிருந்தது. வாழ்க்கை மிக கண்ணியமானதாக மாறி இருந்தது. ஒரு வலைப்பூ துவங்கி எழுதிக்கொண்டிருந்தேன். தாவரங்களை குறித்து நிறைய நண்பர்களுக்கு கைப்பட பக்கம் பக்கமாக கடிதம் எழுதுவேன்.
அப்போதுதான் 2016ல் தினமலரில் கட்டுரைகள் எழுதும் வாய்ப்பு தம்பி மாதவன் இளங்கோவினால் கிடைத்தது. அதில் 4ம் பக்கத்தில் எழுதிகொண்டு இருந்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது .பல பள்ளிகளில் என் கட்டுரை வெளியான பக்கத்தை நோட்டீஸ் போர்டில் ஒட்டி வைத்தார்கள். தினமலரில் என் போன் நம்பர் வாங்கி நிறைய பேர் அழைத்து பாராட்டியும் ஆலோசனை கேட்டும் தொடர்பு கொண்டார்கள். கல்லூரிகளிலும் கட்டுரைகளை வாசித்தார்கள்.
சமயங்களில் வாரம் 4 கட்டுரைகள் கூட வெளியாகின திரு பொன் வாசுதேவன் கட்டுரைகளை வார்த்தை உச்ச வரம்பிற்குள் எழுத கற்றுக் கொடுத்தார்.
தினமலரில் சன்மானமும் கொடுத்தார்கள். ஏறக்குறைய 3 வருடங்கள் எழுதிய தொகையை கொண்டு ஒரு லேப்டாப் வாங்கினேன்
அதன்பிறகு மேலும் மேலும் எழுதிக்கொண்டே இருந்தேன் இருக்கிறேன்
தமிழில் தாவரவியலை எழுதுவதில் பலசமயம் பொருத்தமான சொல்லை கண்டுபிடிப்பதே சிக்கலாக இருந்தது.
புதிய சொற்களை தேடிப்பிடித்தேன், சிலவற்றை நானே கொஞ்சம் உருவாக்கினேன்.
வெண்முரசில் dicotyledon என்பதற்கு ’’ஈரிலை விதை முளை’’ என்னும் சொல்லை வாசித்த போதும், சங்க இலக்கியப் பாடலொன்றில் அல்லியுமல்லாத புல்லியுமல்லாத மலர்களின் ஒற்றை அடுக்கான tepal/perianth என்பதற்கான அதழ் என்னும் சொல்லை கண்டபோதும் இவற்றையெல்லாம் தொகுத்து தமிழ் தாவரவியல் அகராதி தயாரித்தால் என்ன என்னும் எண்ணம் தோன்றியது.
சொற்களை தேடித் தேடிச் சேகரித்தபோது முடியும் என்னும் நம்பிக்கையும் வந்தது. கடந்த 2022 மே மாதம் என் தளத்தில் அதழ் என்னும் தாவரவியல் அகராதியை தயாரிக்கவிருக்கும் அறிவிப்பை வெளியிட்டேன்.’
இந்த ஒரு வருடகாலமும் அதன்பொருட்டு உழைத்துக் கொண்டே இருந்தேன்
மாதம் 4 கட்டுரைகள் சொல்வனத்திலும் ஆனந்த சந்திரிகையிலும் எழுதுவது, இல் பேணுதல், பயணம், சமையல், கல்லூரி வேலை, பாடங்களுக்கான முன் தயாரிப்புக்கள், தரச்சான்றிதழ்களுக்கான ஆவணங்களை உருவாக்கும் மென்னியை முறிக்கும் வேலை, ஆய்வு, குடும்ப சிக்கல்கள், கல்யாணம், காதுகுத்து, நல்லது அல்லது என போய் வருவது, அப்பா அம்மாவின் சுகவீனங்களை கவனிப்பது மகன்களின் படிப்பு , தோட்டச் செடிகள் பராமரிப்பது, வாசிப்பு, ஆய்வு கட்டுரைகள் எழுதுவது, அம்மாவின் இழப்பு என மூச்சு விடமுடியாத அளவுக்கு பணிச்சுமை.
எனினும் தினமும் ஆங்கில தாவரவியல் சொற்களை தேடித்தேடி சேர்த்துவைப்பதும் நேரம் கிடைக்கையில் தமிழ்சொல்லை பொருத்தமாக எடுத்து எழுதுவதும் தொடர்ந்தது.
எனக்கு ஓய்வு நேரமென்பது மிக குறைந்த அளவே இருந்தது அதிலும் நான் இந்த அகராதி வேலைகளை மட்டுமே பார்த்தேன். இடையில் அரிஸோனா இணைய தளத்தின் அறிவியல் தகவல்களை தமிழில் மொழிமாற்றும் வேலையும் செய்தபோது இந்த அகராதி தயாரிப்பிற்கும் அது உதவியாக இருந்தது.
இதை தனியே செய்ய முடியாது என என்னை உற்சாகம் குன்றச்செய்தவர்கள் பலர். அகராதி பணியை குறித்த கடிதம் ஜெ தளத்தில் வந்தபோது பலர் ஊக்கமளித்தார்கள்.
எல் ஆர் ஜி திருப்பூரில் அப்போது பணியில் இருந்த இப்போது தாராபுரம் அரசுக்கல்லுரி முதல்வராக இருக்கும் Dr பத்மா ஒரு கட்டைப்பை நிறைய தமிழ் தாவரவியல் நூல்கள் எடுத்துக்கொடுத்தார். அவற்றை 6 மாத காலம் வைத்திருந்து தகவல்கள் சேகரித்து பின்னர் திருப்பிக் கொடுத்தேன், அ.வெண்ணிலா இப்போது தமிழில் இருக்கும் தாவரவியல் நூல்களை இதற்கென வாங்கி அனுப்பி இருக்கிறார்.
10 ஆயிரம் ஆங்கில தாவரவியல் சொற்களை இது வரை தொகுத்திருக்கிறேன்.
அவற்றில் 2500 சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை எழுதியாகிவிட்டது
ஆனால் அந்த வேலை தேங்கி கிடப்பதுபோல ஒரு எண்ணம் எனவே நூலாக தொகுக்கும் முன்னர் இன் வலைதளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை பதிவிடலாம் என்று முடிவு செய்து இப்போது ஆங்கில A வில் இருக்கும் சொற்களுக்கு ஆங்கில விளக்கமும் இணையான தமிழ் சொல்லுமாக பதிவிட்டிருக்கிறேன்
இனி தொடர்ந்து பதிவிட்டு z வரை முடித்தபின்னர் பொருத்தமான சிறு படங்களையும் சேர்க்கவிருக்கிறேன்
இதை யாருக்காக எழுதுகிறேன் என்றால், தாவரவியல் ஆர்வம் கொண்டவர்களுக்கு, தாவரவியல் மானவர்களுக்கு, பின்நாட்களில் இப்படி ஒரு ஆங்கில அறிவியல் சொல்லுக்கான பொருத்தமான இணைத்தமிழ்சொல் இந்த அதழ் அகராதியிலிருந்து எடுத்துக்கொள்ள முடியும் என்பதற்காக. எனினும் முதன்மையாக நான் இதை எனக்காகத்தான் செய்கிறேன்.
Agaricas என்பதற்கு நிலக்குடைக்காளான், adhesive என்பது பசைமம், african mahogany தான் சீமை நூக்கு, புற்களுக்கென்றெ இருக்கும் தனித்த அறிவியல் Agrostology, capitulam என்பது மலர்தலை, receptacle தான் பூத்தளம், Apicula என்பதை குறுமென்கூரென்றும், தண்டை தழுவி அணைந்துகொண்டிருக்கும் இலையடிச்செதிலென்றும் aggregate fruit என்பதை திரள் கனி என்றெல்லாம் வாசிக்கையில் எனக்குண்டாகும் நல்ல தமிழில் தாவரவியலை கற்றுக்கொள்ளும் மகிழ்வின் பொருட்டுத்தான் இதை உருவாக்குகிறேன். அதழ் அகராதி நிச்சயம் பிறருக்கும் பெரிதும் பயன்படும்.2024 இறுதிக்குள் 10 ஆயிரம் சொற்களையும் வலையேற்றும் உத்தேசத்தில் இருக்கிறேன்.

தாவரவியல் பூங்காக்கள் நடத்தும் மலர் கண்காட்சிகள் மீது எனக்கு தனித்த பிரியமுண்டு. சிறுமியாய் இருக்கையில் எல்லா பள்ளி விடுமுறைகளும் ஊட்டி லவ்டேல் லாரன்ஸ் பள்ளியில் பணிபுரிந்த அத்தை மாமா வீட்டில்தான் இருப்பேன், எனவே கோடைக்காலத்தில் மலர் கண்காட்சி பல வருடங்களாக பரிச்சயமாகி இருந்தது. பிரபல சினிமா நடிகர்கள், எஸ்பிபி, ஜானகிம்மா உள்ளிட்ட பல இசைக் கலைஞர்கள் எஸ் வி சேகரின் நாடகம் என பல விஷயங்கள் எனக்கு ஊட்டி மலர் கண்காட்சியில்தான் அறிமுகமானது.
அதிலெல்லாம் கொள்ளை அழகாய் கொட்டிக்கிடக்கும் மலர்களை கண்களை விரித்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்த போதுதான் எனக்குள் தாவரவியல் ஆர்வம் முளைவிட்டிருக்கக் கூடும்.
அதன்பிறகும் கல்லூரி சுற்றுலாக்களில் ஊட்டி மலர் கண்காட்சி அதன் தொடர்ச்சியாக தொட்டபெட்டா செல்வது என எப்போதும் என் மனதில் மலர் கண்காட்சிகளுக்கென தனித்த இடமிருந்தது.
நான் பேராசிரியர் ஆன பின்னர் கொடைக்கானல் ஏற்காடு மூணாறு என எங்கே மலர்க்கண்காட்சி என்றாலும் உடனே மாணவர்களையும் அழைத்து கொண்டு செல்வது வழக்கமானது
சில வருடங்களுக்கு முன்னர் கோவையில் விவசாய பல்கலைக்கழக மலர் கண்காட்சி ஏற்பாடாகியிருந்தது அப்போதும் முழுத்துறையுமே 3 பேருந்துகளில் சென்றிருந்தோம்.
மிக இனிய நினைவு அது ஏராளம் அயல் மலர்களும் இயல் மலர்களுமாக நேர்த்தியாக ஒருகுறையுமில்லாமல் சிறப்பாக நடத்தினார்கள் அப்போது. ட்யூலிப்களும் க்ளேடியோலஸ்களும் டேலியாக்களும் ரோஜாக்களுமாக மலர்ப்பெருங்கடல் அன்று பார்த்தது.
மிக முக்கியமான ஸ்டால்களும் இருந்தன மகன்கள் அப்போது சிறுவர்கள் அவர்களும் உடன் வந்திருந்தனர் அப்போது வாங்கிய ஒரு டூல் செட் இன்னும் சரண் வைத்திருக்கிறான்
இப்போதும் கோவை மலர் கண்காட்சி என அறிவிப்பு எனக்கு வந்து சேர்ந்தது.
எனவே துறையில் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்து அனைத்து மாணவர்களையும் அழைத்துக்கொண்டு அனைத்து பேராசிரியர்களும் கண்காட்சி துவங்கும் வெள்ளி 23 /2/24 அன்று (இன்று) செல்வது என முடிவெடுத்தேன். துரதிர்ஷ்டவசமாக துறைக்கான AAA எனப்படும் அகடமிக் அட்மினிஸ்ட்ரேடிவ் தணிக்கை வெள்ளி என முடிவானதால் Dr Sarvalingam அதை பார்த்துக்கொள்ளட்டும் என முடிவு செய்து மீதமிருந்த அனைவருமாக புறப்பட்டோம்
அதற்கு முன்னால் இன்னும் மகள்களை வெளியூர் அனுப்ப யோசிக்கும் கொங்கு பெற்றோர்களிடம் தொண்டை வலிக்க தாவரவியலை வகுப்பறைக்கு வெளியே கற்கும் அவசியத்தை பேசி அனுமதிவாங்கி, பேருந்துக்கு ஏற்பாடு செய்து பணம் திரட்டி முதல்வரிடம் எழுத்துபூர்வ அனுமதி வாங்கி என பலகட்ட முன்னெடுப்புக்கள் நடந்தது
கண்காட்சிக்கு நுழைவுக்கட்டணம் 150 ரூபாய் என தகவல் வந்ததும் திடுக்கிட்டேன் ஊட்டியில் கூட அத்தனை இல்லை
பொள்ளாச்சி மாணவர்கள் எல்லாம் மிக எளிய பின்புலம் கொண்டவர்கள் அவர்களிடம் பேருந்து கட்டணமல்லாது மேலும் 150 ரூபாய் வாங்க முடியாது. எனவே கோவை ரோட்டரியின் பங்களிப்பு இந்த கண்காட்சியில் அதிகம் இருந்தது என்பதால் ரோட்டரி நண்பர் ஒருவரை அழைத்து பேசினேன்
அவர் விவசாய பல்கலைக்கழக பொறுப்பாளர் ஒருவரின் எண் கொடுத்தார் அவரை அழைத்துப்பேசி மாணவர்களுக்கு மட்டும் 50 ரூபாய் அனுமதி வாங்கினேன்
ஆசிரியர்களுக்கு எந்த சலுகையும் இல்லை என்றார்கள் சரி என்று ஒத்துக்கொண்டேன்
ஆனால் 150 ரூபாய் என்றால் பொதுமக்கள் வரவும் குறையும், ஒரு சினிமாவை 120 ரூபாயில் பார்க்கிறோமே!
மீண்டும் அந்த நண்பரிடம் பேசி அவரும் ஏற்பாட்டாளர்களிடம் பேசி அனைவருக்குமே கட்டணம் 100 என்றும் அனுமதிக்கடிதம் வைத்திருக்கும் மாணவர்களுக்கு 50 என்றும் மீண்டும் முடிவானது
இன்று காலை புறப்படுகையில் இரண்டு பேருந்துகளுக்கு முன்பு அனைத்து மாணவ மாணவர்களையும் நிறுத்தி ஒரு நல்ல உரையாற்றினேன்.
கல்லூரிக்காலத்தில் பயணம் எத்தனை முக்கியம் அதுவும் தாவரவியல் மாணவர்களுக்கு இப்படியான மலர்கண்காட்சிகளுக்கு செல்வது எத்தனை முக்கியம் என்பதையும் அங்கு காணப்போகும் எக்ஸோட்டிக் மலர்களை வேறெங்கும் காண வாய்ப்பில்லை என்பதையும் சொல்லி நான் முன்பு ட்யூலிப் மேனியாவை குறித்து எழுதிய மலர்பித்து என்னும் கட்டுரையின் இணைப்பை அளித்து அதையும் வாசிக்கச் சொல்லி அந்த ட்யூலிப்மலர்களை இன்று அவர்கள் பார்க்க விருக்கிறார்கள் என்பதையெல்லாம் சொன்னேன்

அவர்களை ஒரு பேரனுபவத்திற்கு மனதளவில் தயராக்கி பின்னர்புறப்பட்டோம்
நல்ல வெயிலில் 9.45க்கு வந்து சேர்ந்தோம்.தாவரவியல் பூங்கா இருக்கும் இடத்துக்கு பேருந்து செல்லமுடியாது நெரிசலாகும் என்று எதிரிலிருக்கும் விவசாய பல்கலைக்கழகத்துக்குள் பேருந்தை நிறுத்த சொல்லி அங்கிருந்து வெகுதூரம் நடந்து வந்து சாலையை கூட்டமாக கடக்க காவலர்கள் உதவி பின்னர் கண்காட்சி நடக்கும் இடத்துக்கு ஒருவழியாக வந்தோம்
வாழ்க்கையை விட பல பல திருப்பங்கள் கொண்டிருந்த மூங்கில் கழிகளால் உருவாக்கப்பட்டிருந்த தற்காலிக வழியில் நடந்து நடந்து நுழைவுச்சீட்டு கொடுக்கும் இடம் வந்ததும் UPI அல்லது பணம் இரண்டில் எது என்னும் கேள்வி, தொகையாக செலுத்துகிறேன் என்றதும் அதற்கு மேலும் சில திருப்பங்கள் செல்ல வழி காட்டினார்கள்
சலிக்காமல் அங்கும் நடந்து முதல்வரின் கடிதம் வேண்டும் என கேட்டிருந்தார்கள் அதை கொண்டு வந்திருந்தோம் காட்டினோம் ஆனால் சலுகை இல்லை அனைவரும் 100 கட்ட வேண்டும் என்றார்கள். நான் தொடர்பு கொண்ட பேராசிரியரின் பெயரை சொல்லி அவர் போனில் அனுமதி அளித்திருக்கிறார் என்றேன்
பதிலுக்கு அவரிடம் போய் எழுதி வாங்கி வாருங்கள் என்றார்கள் எனக்கு பொறுமை குறைய தொடங்கியது. நாங்கள் வெளியூரிலிருந்து வந்து எங்கேயென்று இங்கிருக்கும் ஒரு பேராசிரியரை தேடிப்போவோம் 100க்கும் மேற்பட்ட இளம் மாணவ மாணவிகள் கடும் வெயிலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கோபித்துகொண்டதும் யாரோபோய் எங்கேயோ எழுதி வாங்கி வந்து ஒருவழியாக சலுகை கட்டணம் மாணவர்களுக்கு அளித்தார்கள்
கைகளில் அணிந்துகொள்ளும் காகித பேண்ட் ஒன்றை தீவிரமாக ஒரு பெண் எண்ணி எண்ணி எடுத்துக்கொடுத்தாள். 100 ரூபாய்க்கு பச்சை 50 க்கு இளம் சிவப்பு
வாங்கிகொண்டு வெளியே வந்து கைகளில் அணிந்துகொண்டிருக்கையில்தான் 25 எண்ணிக்கை குறைவாக பேண்ட் கொடுத்திருந்தார்கள் என்பது தெரிந்தது.
மீண்டும் அதே இடத்துக்கு சென்று மீண்டும் எண்ணி வாங்கிகொண்டு வந்து ஏராளம் கெடுபிடிகளுக்கு மத்தியில் மலர் கண்காட்சி முகப்புக்கு வந்தோம்
Birds of paradise எனும் அரிய மலர்களை கத்தரித்து நிலத்தில் நட்டு முகப்பில் அலங்கரித்திருந்தார்கள்’அதை அப்படியே தொட்டிகளில் வைத்திருக்கலாம் இன்றே அனைத்தும் வாடிவிடும் என்று ஆதங்கமாக இருந்தது

முகப்பில் கோவை மலர்கண்காட்சி என்பதையே மலர்களில் அமைத்திருந்தார்கள்.
அங்கு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்
உள்ளே மேலும் கெடுபிடி இரண்டிரண்டு பேர்களாக வரவேண்டும் என்று. அப்படியே சென்றோம், ஒரு ஸ்கேனர் வழியாக செல்ல பணிக்கப்பட்டோம்.
எனக்கு ஆர்வம் அதிகமானது இத்தனை கனகச்சித ஏற்பாடுகள் இருப்பதால் முன்னைக் காட்டிலும் பிரமாதமான கண்காட்சியாக இருக்கும் என்று.
கோவை ரோட்டரி தொண்டாமுத்தூர் எல்லாம் எங்களை வரவேற்கும் அலங்கார தட்டிகள் ஆங்காங்கே நின்றன.
முகப்பில் ஒரு ரோட்டரி தட்டி ஒன்று தலைகுப்புற விழுந்து கிடந்தது அதை சரி செய்ய யாரையும் காணோம்.

ஒரு மரத்தடியில் ட்யூலிப் கள் தெரிந்ததும் ஆர்வமாக முதலில் அங்கே போனேன்
மஞ்சள் வெள்ளை சிவப்பு என எல்லா நிறங்களில் இருந்த ட்யூலிப்கள் புதுமண பெண்கள் போல் தலை குனிந்து நிலம் பார்த்திருந்தன
அருகில் சென்றால் அவை அனைத்தும் செடியில் இருக்கும் மலர்களல்ல வெட்டப்பட்ட மலர்த்தண்டுகளை பச்சை ஸ்பாஞ்சில் நட்டுவைத்திருந்தார்கள்.

முதல் நாள் காலையிலேயே அத்தனை வாடி தலைகவிழ்ந்திருக்கும் இவை இன்னும் இரண்டு நாட்களில் எப்படி இருக்கும் என நினைத்துக் கொண்டோம் அன்னப்பட்சிகள் முயல் என் சில மலரலங்காரங்கள் நல்ல தகிக்கும் வெயிலில் வைக்கப்பட்டிருந்தன அவற்றில் செருகப்பட்டிருந்த மலர்கள் 1மணி நேரத்தில் வாடிவிடும் அளவுக்கு வெயில் அறைந்துகொண்டிருந்தது
இதுபோன்ற மலரலங்காரங்கள் ஊட்டியின் சீதோஷ்ணத்துக்கு எந்த இடத்திலும் வைக்கலாம் கடுங்கோடை துவங்கி இருந்த கோவை பூங்காவில் நிழலான இடங்களில் தான் வைக்கப்பட்டிருக்க வேண்டும்
என்னதிது ஆரம்பமே இப்படி என உள்ளே என்னவோ எச்சரிக்கை மணி அடித்தது.
அவசர அவசரமாக வெட்டப்பட்ட தாவரங்களின் மிச்சம்மீதிகள் எல்லாம் அலங்காரங்களுக்கு அருகில் பெருக்கி சுத்தம் செய்யப்படாமல் அப்படியே குப்பையாக கிடந்தன.

வரிசையில் கையில் அடையாள பேண்ட் கட்டிக்கொண்டு ஸ்கேனர் வழியாக வந்த எங்களுக்கு முன்னால் எந்த ஸ்கேனரிலும் வந்திருக்க சாத்தியமில்லாத தெரு நாய்கள் குப்பைகளை கடித்துக்கொண்டு திரிந்தன. திகைப்பாக இருந்தது’, எதற்கு வாசலில் அத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணினார்கள் உள்ளே நாய்கள் திரிகையில்?

குஞ்சு குளுவான்களாக கிண்டர்கார்டன் குழந்தைகள் எல்லாம் கூட்டமாக பேருந்துகளில் வந்திருந்தார்கள்.
கோடைக்காலமென்பது ரேபிஸ் காலமும்தான் அந்த குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திருக்கவேண்டாமா?
முகப்பிலிருந்து வழியெங்கும் செடிகளுக்கு நீர் ஊற்றப்படாமல் வறண்டு நிலம் இறுகிக்கிடந்தது இன்றிலிருந்து கண்காட்சி, ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதற்காக அல்ல கோடையில் செடிகளுக்கு நீர் விடவேண்டாமா?

நிலத்திலிருக்கும் செடிகளுக்கு மட்டுமல்ல தொட்டிச்செடிகளும் வாடி பாவமாக இருந்தன. தொட்டிகளின் மண்ணையும் தொட்டுப் பார்த்தேன் பாறைபோல் இறுக்கம்
ஆனால் வேடிக்கையாக செயற்கை நீரூற்றுக்களில் நீர் பீய்ச்சி அடித்துக்கொண்டிருந்தது
என்ன அநீதி எத்தனை முரண்?
தாவரங்களை பார்க்கவென்று 60 கிமீ தொலைவில் இருந்து கட்டணம் செலுத்தி உள்ளே வந்திருக்கிறோம் செடிகளுக்கு நீர் இல்லாமல் வாடிகிடக்கையில் செயற்கை நீரூற்றில் நீர் ?
மேலும் மேலும் பெருந்துகளில் பள்ளிக் குழந்தைகளும் கல்லூரி மாணவர்களும் வந்தபடியே இருந்தனர்.
எங்களுக்கு பிறகு வந்தவர்களுக்கு கைகளில் வண்ணப்பட்டைகள் இல்லை. உள்ளே ஏராளமான ஸ்டால்கள்.

வரும் சிவராத்திரிக்கு இலவச அமர்வுக்கு அணுகினார்கள் வருவதானால் விண்ணப்பிக்கிறேன் என்று சொல்லி விலகினேன்
கண்பார்வையை சோதித்துக்கொள்ளுங்கள் என்று ஒருவர் பின்னாலேயே வந்தார்.
பலமுறை மறுத்து என்னை விடுவித்துக்கொண்டேன்
அடுத்து தைராய்டு செக் பண்ணிகொள்ளச் சொல்லி வற்புறுத்தல். மறுத்து அவசரமாக விலகினோம்.
வீட்டுக்கடன் தரும் நிறுவனம் நொச்சுப்பண்ணிக்கொண்டே இருந்தார்கள் கைகளில் ஏராளமாக் துண்டுச்சீட்டு களும் விளம்பரங்களும் நிறைத்தார்கள்.

எதற்கு வந்தோம் என்ன நடக்கிறது என்று யோசித்து கொண்டே நடந்தேன். அல்லிக்குளத்தில் காலி தண்ணீர் பாட்டில்கள் குப்புற கிடந்தன துணையாக காலி சிப்ஸ்பாக்கட்டுகளும் மிதந்தன.
ஸ்டால்களை தவிர எங்குமே குப்பைத்தொட்டிகள் இல்லை நோட்டீஸ்கள் எல்லாம் கசக்கி போடப்பட்டு பூங்காவெங்கும் இரைந்து கிடந்தன.

என்னிடம் இருந்தவற்றை போட குப்பை தொட்டி தேடி எங்கும் கிடைக்காமல் ஒருமரத்தடியில் வேறு வழியே இல்லாமல் போட்டேன்
டென்னிஸ் கோர்ட் போல் ஒரு மலரமைப்பு அங்கும் மலர்செடிகள் இல்லை வரிசையாக பச்சை ஸ்பாஞ் வைத்து அதில் வெண்ணிற மலர்கள் அமைத்திருந்தார்கள் அதுவும் நல்ல வெயிலில்.

கோழிகொண்டை பூச்செடிகள் வைத்திருந்த தொட்டிகள் எல்லாம் நீரின்றி பரிதாபமாயிருந்தன.

அலங்கார வாழைமரங்களில் பாதியை அப்போதுதான் கட்டிக்கொண்டு இருந்தார்கள். 11 30 மணிக்கு மேலும் பல பெட்டிகளில் மலர்கள் பிரிக்கப்பட்டிருக்கவில்லை
அழைப்பிதழில் 9 – 7 மணி என்றிருந்தது
ஆனால் முற்பகலாகியும் எதுவுமே துவங்கப்பட்டிருக்கவில்லை

அரசுப்பொருட் காட்சியை நினைவூட்டும் உணவுக்கடைகள் அலங்காரபொருட்கள் விற்கும் கடைகள் துவங்கி இருந்தன
வீடு துடைக்கும் மாப் விவசாயபொருட்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஊறுகாய்கள் விற்கபட்டன
வழிகாட்டும் அறிவிப்புக்கள் இல்லை, எங்கு சென்று எதைபார்த்தபினன்ர் எதைப்பார்க்க வேண்டும் என்பதை நாங்களாகவே முடிவு செய்தோம்.

அழகிய ஊதா மலர்களுடன் படர்ந்திருந்த பெட்ரியாவின் மலர்களை ஒரு குடும்பமே இஷ்டத்துக்கு பறித்து தலையில் வைத்துக்கொண்டு போட்டோ எடுத்து கொண்டார்கள். தடுக்க யாரும் இல்லை. ’நான் அவர்களிடம் உங்களுக்கு பின்னால் வருபவர்கள் இந்த பூக்களை பார்க்க வேண்டாமா? என்றேன் என்னை முறைத்துவிட்டு நகர்ந்தார்கள்.
காபி குடிக்கலாம் என்றார்கள் உடன்வந்த பேராசிரியர்கள் வாங்கினோம் காபியாக இல்லாமல் பாயசத்தின் அக்காவாக தித்தித்தது. கீழே ஊற்றிவிட்டு நடந்தேன்
ஒரே மாதிரியாக அடீனியம் போன்ஸாய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன
பூங்காவின் கடைக்கோடியில் நர்சரி இருந்தது அங்கிருந்து வாசல்வரைக்கும் செடிகளை வாங்கியவர்கள் சுமந்துகொண்டு செல்ல கஷ்டமாயிருக்கும். எப்போதும் கண்காட்சிகளில் இதுபோன்ற செடி விற்பனை எக்ஸிட்டுக்கு அருகில்தான் இருக்க வேண்டும்
பலர் இதற்கு சங்கடப் பட்டுக்கொண்டே வாங்காமல் சென்றார்கள் சிலர் புலம்பிக்கொண்டே வாங்கினார்கள்
நானும் கொடி ரோஜாச் செடிகள் வாங்கினேன்
வைத்துக்கொண்டு போகும் கவரொன்று 10 ரூபாய்க்கு கொள்ளை விலை சொன்னார்கள் சரியென்று வாங்கினேன் வேறு வழியில்லை வாசல் வரை சுமக்கனுமே?
ஆனால் வாங்கிய செடிக்கு பில் கேட்டால் இல்லை என்றார்கள்.’உண்மையிலேயே கடுப்பாக இருந்தது
3 கவர்களுக்கு 30 ரூபாய் கொடுத்தபின்னர் 2 கவர்தான் இருக்கிறதென்றார்கள்
என் பொறுமை விளிம்புக்கு வந்து அதலபாதாளத்தை நோக்கி பாயத்துவங்கலாம் என்னும் எச்சரிக்கை அடைந்தேன். எனவே விரைந்து அங்கிருந்து நகர்ந்தேன்
கழிப்பறைக்கு சென்று விட்டு உணவருந்தலாம் என்று தேடினோம். கழிப்பறை என்னும் அம்பு குறி அதிசயமாக எங்களுக்கு வழிகாட்டியது
கொடுமைகளில் மகா கொடுமையாக அத்தனை கூட்டத்துக்கு 3 தான் இருந்தது. மூன்றும் தற்காலிக கழிப்பறைகள். அவை மூன்றுமே உள்ளே பெண்கள் அமர்ந்து உபயோகிக்க முடியாதபடி கான்சன்ட்ரேஷன் கேம்ப் அறைகளைபோல மிக மிக குறுகலானவை.
கழிப்பறைகளுக்கு முன்பாக பள்ளிப்பெண்களின் வரிசை நீண்டிருந்தது. மூன்றிலிருந்தும் கழிவு நீர் வெள்ளமென வெளியெ வழியத்துவங்கியிருந்தது. உள்ளே பக்கட் மட்டும் இருக்கு மக் இல்லை என ஒரு சிறுமியின் கூச்சல் கேட்டது
அங்கே நிற்க முடியாமல் அடையாள அட்டை அணிந்திருந்த ஊழியர்களை விசாரித்து, செடிகளையும் சுமந்துகொண்டு நடந்து நடந்து நடந்து கண்டுபிடித்த விளையாட்டு திடலுக்கருகே இருந்த கழிப்பறை மகா கோரமாக பலர் உபயோகித்து சேறும் சகதியும் நாற்றமுமாக இருந்தது

வேறு வழியில்லாமல் அதையே உபயோகிக்கச் சென்றால் அங்கு கதவுக்கு தாழ்ப்பாள் இல்லை ஒருவர் உள்ளிருக்க ஒருவர் வெளியில் கதவை பிடித்துக் கொண்டு பயன்படுத்தினோம்
அருகில் பல பெண்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை குறிப்பாக ரோட்டரி அமைப்பை ஏகத்துக்கும் வசைபாடிக்கொண்டிருந்தார்கள்
நாங்களும் அதே!

பூங்கவெங்கும் உணவு மிச்சங்கள் காகிதங்கள் இறைந்து கிடந்தன
தெருநாய்கள் நடமாடினது போதாமல் நாய் கண்காட்சியும் இருந்தது.
பல கல் பெஞ்சுகளின் அருகில் அகற்றப்படாத குப்பைகள் குவிந்தும் பைகளில் கட்டப்பட்டும் கிடந்தன
இப்படி பல பரிதாபங்களுக்கு இடையில் மாணவர்களுக்கு சிலவற்றை காண்பித்தேன்
எனினும் விவசாய பல்கலையின் முக்கிய அங்கமான தாவரவியல் பூங்காவின் மரங்கள் கூட பெயரிடப்பட்டிருக்கப்படவில்லை என்பதை என்ன சொல்வது?
முன்பு இல்லாவிட்டாலும் கண்காட்சியின் பொருட்டாவது எழுதியிருக்கலாமே!
நீரில்லாத, பேரில்லாத செடிகளை காணவா கட்டணமும் கெடுபிடிகளும் சோதனைகளும் நீண்ட பயணமும்?
எத்தனையோ மறக்கமுடியாத மலர் கண்காட்சிகளின் நினைவுகளுக்கு நடுவே முள்ளாய் உறுத்தும் இந்த கோவை 6 வது மலர் கண்காட்சி என்னும் பெயரில் நடந்த பரிதாப காட்சிகள்.


உலகின் மிகப்பழமையான மரமான மெத்தூசலா பைன் மரம் (Pinus longaeva), உலகின் மிக பெரியதான அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தின் வடக்கில் செக்கோயா தேசிய பூங்காவில் உள்ள சுமார் 2,500 க்யூபிக் மீ அளவு கொண்ட செக்கோயா மரம் (General Sherman), 115.92 மீ உயரத்துடன் உலகின் மிக உயரமான மரம் என்னும் பெருமைக்குரிய ஹைப்பீரியான் இவற்றுடன் உலகின் மாபெரும் ஒற்றைத்தாவரமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மலர்களை உருவாக்கும் கடல் தாவரங்கள் ’கடற்புற்கள்’ – seagrass எனப்படுகின்றன. நான்கு தாவரக்குடும்பங்களை சேர்ந்த சுமார் 60 கடற்புல் சிற்றினங்கள் உலகில் உள்ளன.ஏறக்குறைய 70 லிருந்து 100 மில்லியன் வருடங்களாக இவை கடலில் வாழ்ந்து வருவதாக கருதப்படுகிறது.

ரிப்பன் போன்ற நீண்ட தட்டையான இலைகளுடன் கடற்பரப்பில் அடர்ந்து வளரும் இவை புல்வெளிகளைப்போலவே காணப்படும். கடற்கரையை ஒட்டிய ஆழம் குறைவான பகுதிகளில் இவை வளரும்.
அவற்றில் ஒன்றான ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்பகுதிகளில் வாழும் Posidonia australis என்னும் கடற்புல் உலகின் மாபெரும் பரப்பில் வளரும் ஒற்றைத்தாவரமாக 2022ல் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
உலக பாரம்பரிய சின்னம் என்னும் சிறப்பு அந்தஸ்து பெற்றிருக்கும் ஆஸ்திரேலிய கடற்கரையின் ஷார்க் பே பகுதியில் (Shark Bay) அறிவியலாளர்களால் அடையாளம் காணப்பட்ட இந்த கடற்புல் மாபெரும் தாவரம் மட்டுமல்ல உலகின் மாபெரும் உயிரினமும் கூடத்தான்.
1–15மீ ஆழத்தில் மணலில் புதைந்திருக்கும் வேர்கிழங்குகளிலிருந்து வளரும் இவற்றில் ஆண்பெண் மலர்கள் தனித்தனியே அமைந்திருக்கும்.

இவை மழைக்காடுகளை காட்டிலும் 35% அதிக கார்பனை சேமித்துக்கொள்கின்றன.
2022 ஜூனில் வெளியான ஒரு அறிவியல் கட்டுரை சுமார் 180 கிமீ தொலைவிற்கு பரந்து வளர்ந்த ஒற்றைத்தாவரம் இது என்பதை மரபணு சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதை தெரிவிக்கிறது, கடலின் அடிப்பரப்பில் சுமார் 49,000 ஏக்கரில் இவை வளர்ந்திருக்கின்றன.
இந்த கடற்புல்லின் வயது சுமார் 4,500 ஆண்டுகள் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. உலகின் மிகப்பழமையான ஒற்றைத்தாவரமும் இதுதான்.
கிரேக்க தொன்மத்தில் கடலின் கடவுளான் Poseidon -ன் பெயரே இதன்பேரினப்பெயராக வைக்கப்பட்டிருப்பதும் பொருத்தமாக அமைந்துவிட்டது. இதன் சிற்றினப்பெயரான ஆஸ்திரேலிஸ் என்பது இது ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்டது என்பதைக் குறிக்கிறது.
IUCN இந்த கடற்புல் அழிவின் அருகில் இருப்பதாக தெரிவிக்கிறது.

சென்ற வாரம் முதன்முதலாக திருவண்ணாமலை சென்றிருந்தேன் ஒரு வேள்வியில் கலந்து கொள்ள.புதுச்சேரியும் திருவண்ணாமலையும் என் கனவுப்பயணங்களின் பட்டியலில் இருந்தவை. புதுச்சேரிச் கனவு முன்பு (2017 ல்) நனவானது.மறக்கமுடியாததுமானது.
ஒரு சிறுகதை பட்டறை. கடற்கரை அருகில் இருந்த ஒரு தங்குமிடத்தில்.
கரும்பாறைகள் நிறைந்திருந்த , தூரத்தில் சிவப்பும் பச்சையுமாக விளக்குகள் ஒளிர மெல்ல நகர்ந்து கொண்டிருந்த பெருங்கப்பல்களும், விளிம்புகளில் வெள்ளி பூசிக்கொண்டு துள்ளிக் குதித்துக்கொண்டிருந்த ஏராளமான சிற்றலைகளுமாக அந்த கடற்கரை அடிக்கடி கனவுகளில் வந்து கொண்டிருக்கிறது.
மணக்குள விநாயகர் கோவில் நடை திறக்கும்வரை காத்திருக்கையில் சாலையோர மரங்களில் பறித்த மரமல்லியும் பவளமல்லியும், பூஜைக்கென அத்தெருவில் தயாராகிக்கொண்டிருந்த அந்த குட்டி யானை,பனானா ஸ்ப்ளிட் ஐஸ்கிரீம், பழைய புத்தகக்கடை, அழகான வீடுகள் நிறைந்த நேர்த்தியான தெருக்கள், முதல் பானிபூரி, (முதல் குமட்டலும்) அங்கு வாங்கிய இளஞ்சிவப்பில் வான் நீல கரையிட்ட பருத்திப்புடவை (அதை கோவிட் பெருந்தொற்று முடிந்த சமயத்தில் யாசகம் கேட்டு வந்த ஒரு நிறை சூலிக்கு அளித்தேன்) இரவு ஊர் திரும்புகையில் பெய்த பெருமழை எல்லாம் எல்லாம் நினைவிருக்கிறது.
இப்போது பட்டியலின் அடுத்த இடம் திருவண்ணாமலை. அகரமுதல்வன் அழைத்ததால் அந்த வாய்ப்பு கிடைத்தது.
மறக்க முடியாத பல அனுபவங்கள் அங்கு.அந்த பெருவேள்வி குறித்து ஒரு பதிவு எழுதினேன் வந்த உடனேயே.
மேலும் சில துண்டு துண்டான சுவாரஸ்யங்களும் இருந்தன அப்பயணத்தில். ஏராளமான வெளிநாட்டவர்கள் அங்கிருந்தார்கள். அழுக்கான அழுக்காக ஒரு அமெரிக்க இளைஞன், தலைமுடி அழுக்கு, தோளில் மாட்டியிருந்த துணிப்பை மகா அழுக்கு, சட்டையும் கால்சராயும் துவைத்தல் என்பதை கண்டிருக்கவேயில்லை. அவன் என்னைக்கடந்து செல்கையில் எதிரே வந்தஒரு கருப்பு நாயிடம் சிநேகிதமாய் ’ஹாய்’ என்றான். ஆனால் நாய் அவனை கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் அவசரமாக எங்கோ விரைந்தது.
அடர்நீல ஸ்லீவ்லெஸ் பனியனும் குட்டைப்பாவடையுமாக நடந்துவந்து கொண்டிருந்த ஒரு ஐரோப்பிய இளைஞியிடம், அவர் கடந்துசென்ற ஆட்டோவிலிருந்த ஓட்டுநர் ’’ஹாய் மேம்!’’ என்றார் தோழமையுடன், அவரும் அழகாக புன்னகைத்து கையசைத்து விட்டு சென்றார். முன்பே பரிச்சயமானவர்கள் போல !
காருக்காக சாலையோரம் காத்திருக்கையில் இளநீர்க்கடைக்கு மனைவியுடன் வந்த மற்றுமோர் அமெரிக்கர் அந்த இளநீர்க்கார அம்மாவிடம் good water? என்று கேட்டார். அந்த நல்ல தாட்டியான உடம்பும், காம்பஸ் வைத்து வரைந்ததுபோல வட்டமான முகத்தில் பெரிய பொட்டுமாக இருந்த அந்த அம்மா இயல்பாக ’very good water’ என்று விட்டு அடுத்தாக அவரிடம் from where? என்றார். நான் புன்னகையுடன் அந்த இடத்தை கடந்தேன்.
திருவண்ணாமலைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளால் அதன் கலாச்சாரமும் பண்பாடும் எத்தனை இன்ஃப்ளுயன்ஸ் ஆகியிருக்கிறது என்பது வியப்பளித்தது. இப்படி இவர்களை எல்லாம் கவனித்துக்கொண்டு இன்னும் கொஞ்ச நாள் அங்கேயே இருக்கலாமென்று தோன்றியது.
டிசம்பர் கடைசி வாரத்தில் ஒரு நாள் அகரமுதல்வனிடமிருந்து அழைப்பு. பேசிக்கொண்டிருக்கையில் தான் திருவண்ணாமலையில் இருப்பதாகவும்,ஒரு வேள்விக்கான இடம் தேடிக்கொண்டிருப்பதாகவும் சொன்னார். வேள்வி எனும் சொல்லையே நான் காதால் யார் சொல்லியும் அதுவரை கேட்டிருக்கவில்லை
வெண்முரசில் பாஞ்சாலி தோன்றியதாக சொல்லப்படும் துருபதனின் வேள்வியிலிருந்து அஸ்தினாபுரத்தில், இந்திரப்பிரஸ்தத்தில் நிகழ்ந்த ராஜசூய வேள்விகள் மகா புருஷமேத வேள்வி வரை விலாவாரியாக வாசித்தறிந்திருக்கிறேன், எனினும் யாரும் ’வேள்வி’ என சொல்லிக் கேட்டதே இல்லை. ஆர்வமாக அதை குறித்து விசாரித்தேன் விளக்கமளித்தார் ’’வருகிறீர்களா தேவி’’? என்றும் கேட்டார்?
அகரமுதல்வன் மீது எனக்கு பெருமதிப்பும் அன்பும் எப்போதுமுண்டு. நான் பிரமித்து பார்த்துக்கொண்டிருக்கும் வெகுசிலரில் அகரனும் ஒருவர். நான் அது வரையிலும் திருவண்ணாமலைக்கு சென்றதில்லை. கிரிவலம், பெருஞ்சோதி ஏற்றுதல், இளையராஜா, ரமண மகரிஷி, துறவிகள், ஜெயமோகன் என்று அத்தலத்துடன் தொடர்புடைய சில விஷயங்கள் மட்டுமே துண்டு துண்டாக என் நினைவுகளில் இருந்தன. மேலும் வேள்விகளை அத்தனை தீவிரமாக வாசித்தவளாகையால் அதைப் பார்க்க வேண்டும் என விரும்பினேன்.
எல்லாவற்றைக்காட்டிலும் ’’வருகிறீர்களா தேவி?’’ என்பதை ஒரு தெய்வ விளி என்றே எடுத்துக்கொண்டேன், ஒரு திருத்தலத்திற்கு வருகிறாயா? என்றென்னிடம் எப்போது கேட்கப்பட்டாலும் கேட்பது தெய்வமென்றே நம்புவேன். தம்பியும் நானுமாக கலந்து கொள்வதாக சொன்னேன்.
5ம் தேதி அதிகாலை 4 மணிக்கு முந்தின நாள் தான் பணியில் இணைந்திருந்த புதிய ஓட்டுநருடன் நல்ல மழையில் புறப்பட்டு திருப்பூர் சென்று விஜியை அழைத்துக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி பயணித்தோம். ஊரை நெருங்கும் முன்னரே குறிஞ்சி பிரபா அவ்வப்போது அழைத்து எங்கிருக்கிறோம் என கேட்டுக்கொண்டார். குறிஞ்சிப்பிரபாவையும் நான் அன்றுதான் முதன் முதலாக சந்திக்கவிருந்தேன். அவர் பெயர் மட்டுமே எனக்கு பரிச்சயம்.
அழைப்பிதழில் அதீனா ஹோட்டலுக்கு முன்பாக வேள்வி நடைபெறும் என்றிருந்ததால் நேரே அங்கேயே சென்றோம். அதீனா ஹோட்டலுக்கு எதிர்புறம் ஒரு பிரம்மாண்டமான வண்ணமயமான கோவிலிருந்தது. வழக்கம் போல் கன்னத்தில் போட்டுக் கொண்டேன். தம்பி விஜி சொல்லித்தான் அது அசல் கோவிலல்ல, கோவிலைப்போன்ற அமைக்கப்பட்டிருக்கும் வேள்விப்பந்தலென்று.
என் மனதில் இருந்த வேள்வி என்னும் சித்திரத்துக்கு மிக பொருத்தமான ஒரு பந்தல் அங்கிருந்தது. மாபெரும் பந்தல் அது. மிக சிறப்பாகவும் மிக கவனமுடன் அமைக்கப்பட்டிருந்தது. வேள்விச்சாலையும் அப்படியே!
காரில் இருந்து இறங்க இறங்கவே குறிஞ்சி பிரபா அறிமுகப்படுத்திக்கொண்டார். உற்சாகமான இளைஞர். அவரைப்போலவே காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பணியாற்றிக்கொண்டிருந்த பலரையும் அங்கு பார்த்தேன். வேள்வியை நிகழ்த்தும் தன் மாமனிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.

ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து சூழ்ந்திருந்த துடியான இளைஞர்களிடம் என்னவோ கவனமாக சொல்லிகொண்டிருந்தவர் குறிஞ்சி பிரபா என்னைக்காட்டி ஏதோ சொன்னதும் நான் அவரருகில் செல்லும் முன்பு அவராக எழுந்துவந்து ’’நான் குறிஞ்சி செல்வன் வாங்க’’ என்று வரவேற்றார். குறிஞ்சி என்பது ஒருவேளை குடும்பப்பெயராக இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன்.
உடனேயே ’’அம்மாவுக்கு ஒரு சேர் போடுங்கப்பா’’ என்று பிறரை பணித்தார். பின்னர் நாங்கள் தங்குமிடம் குறித்து தகவல் சொல்லிவிட்டு பிற வேலைகளை பார்க்கச்சென்றார்.
வேள்விக்கான முன்னேற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. குறிஞ்சி பிரபாவிடம் பேசிக்கொண்டிருக்கையில் தான் அம்மகத்தான மனிதரைக் குறித்து அறிந்து கொள்ளத் துவங்கினேன். அவர் தன் தாய்மாமன் என்றும் ஜப்பானில் தொழில்செய்பவரென்றும் ஜோதிடக்கலை வல்லுநரென்றும் இந்த வேள்வியை பல வருடங்களாக பெருஞ்செலவில் பொதுநன்மைக்காக நடத்திக்கொண்டிருக்கிறார் என்றும் சொன்ன பிரபா மாமனின் பெயரான குறிஞ்சியைத்தான் தன் பெயருக்கு முன்னர் வைத்து கொண்டிருக்கிறார்.
தான் அணிந்திருந்த கருப்புச் சட்டையை தொட்டுக்காட்டி ’’இந்த சட்டையை நான் போட்டுகிட்டு இங்கே உட்கார்ந்திருக்கேன்னா அது மாமாவால்தான்’’ என்றார்.
வியப்பாக இருந்தது. அகரமுதல்வனிடம் இதை சொல்லுகையில் ’’பிரபா மட்டுமல்ல அவரது ஊருக்கு போனால் அந்த கிராமமே அவர் பெயரைத்தான் தன் பெயருக்கு முன்னால் போட்டுக்கொண்டுருக்கும். அத்தனைக்கு உணர்வுபூர்வமான பிணைப்பை தன் சுற்றத்தாருடன் கொண்டவர் அவர்’’ என்றார்.
நேற்றும் இன்றும் இருநாட்களாக அவ்வேள்வியில் கலந்துகொண்டது என் வாழ்வின் ஆகச்சிறந்த அனுபவம் என்றால் திரு குறிஞ்சி செல்வன் அவர்களை அறிந்துகொண்டது அதற்கிணையான அனுபவம்.
இத்தனை வருட வாழ்வில் கீழ்மைகளை மிக அருகிலென பலமுறை சந்தித்திருக்கிறேன். ஆனால் மானுட மனம் செல்லும் உச்சங்களை, அகவிரிவுகளை இப்படி அரிதாகவே காண்கிறேன். திரு குறிஞ்சி செல்வன் அவர்களின் எளிமை, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கவனம், வருபவர்களை ஒன்றுபோல அவர் கவனித்த விதம், அத்தனை பெரிய நிகழ்வில் மிக நுண்மையாக ஒவ்வொன்றையும் நோக்கிக் கொண்டிருக்கும் அவரது கூர்மை என வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன். சினிமாத்துறை உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் அவரது அழைப்பின் பேரில் வேள்வியில் கலந்து கொள்ள வந்திருந்தனர். மாபெரும் நிகழ்வது.
வெண்முரசு வழியே நான் அறிந்திருந்த வேள்விகளிலொன்றை அப்படியே அச்சு அசலாக நேரில் கண்டேன். மிகச்சிறப்பான வேள்விப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் பகுதியில் உட்கூரை அலங்காரங்கள் வண்ணமயமான துணிகளில் மலர்வடிவில் அமைந்திருந்தது. வேள்வி நடைபெற்ற இடங்களில் உலோகக் கூரை, புகை உள்ளே நிறையாத உயரத்தில் புகை வெளியேறுவதற்கான தேவையான இடைவெளிகளுடன் கச்சிதமாக அமைக்கப்பட்டிருந்தது. வேள்விப்பந்தலை அமைத்தவரை சந்தித்த போது, கோவிலென்றே எண்ணி கன்னத்தில் போட்டுக்கொண்டதை அவரிடம் சொன்னேன். நாற்காலிகள் போதுமான அளவில் காத்திருந்தன.
எல்லாவேளையும் மிகச்சிறப்பான உணவு மனமுவந்து பரிமாறப்பட்டது.
சோளப்பொறியும் ஐஸ்கிரீமும் குழந்தைகளுக்கென வெளியே கிடைத்தது. ஏறக்குறைய என் வயதிலிருந்த ஒருவர் மூன்று சோளப்பொறி கூம்புகளை ஒரே சமயத்தில் வாங்கி மகிழ்ந்து சாப்பிட்டு கொண்டிருந்ததை பார்த்தேன். விழாக்கள் அனைவருக்குள்ளிருக்கும் குழந்தைகளை வெளியே கொண்டு வந்துவிடுகிறது

திரு குறிஞ்சி செல்வன் அவர்களின் மானசீகமான ஆயிரம் கைகளாக அங்கி பலநூறு இளையோர் இயங்கிக்கொண்டிருந்தனர். அவரைக்குறித்து பலரும் பேசிக் கொண்டிருந்தனர். அவரது சுற்றத்தார் மீது அவர் கொண்டிருக்கும் அக்கறையும் அன்பும் ஆச்சரியமளித்தது
சில ஆண்டுகளுக்கு முன்பாக முதன் முதலில் குடும்பத்தில் ஒரு தொழில் துவங்கினோம். அதற்கு எனது மூத்த சகோதரரும் பெருந்தொழிலதிபருமானவரையும் அழைத்திருந்தேன். அவரிடம் நிதி உட்பட எந்த உதவியும் நாங்கள் கேட்டிருக்கவில்லை. அவரின் தங்கை குடும்பத்தின் முதலடியின் போது மூத்தவராக அவரது ஆசிகளும் உடனிருக்கட்டும் என விரும்பினேன். துவக்க நிகழ்வன்று அவர் மட்டும் வந்திருந்தார். ’’அண்ணா, அண்ணி வரலையா? என்னும் சம்பிரதாயமான என் கேள்விக்கு இதுக்கெல்லாம் நான் வந்ததே பெரிது’’ என்றார். குன்றிப்போனேன்.
ஆறவே ஆறாமல் பச்சைக்குருதி வீச்சத்துடன் இருந்த அக்காயத்துக்கு குறிஞ்சி செல்வன் எப்படியோ அன்று மருந்திட்டார். மறுபிறவி என்னும் சாத்தியம் இருப்பின் அவருக்கு சகோதரியாக பிறக்க வேண்டும். இப்படியோர் கனிந்த அன்பில் திளைத்திருக்க வேண்டும்
குடும்ப மூத்தவராக உயர்ந்தநிலையில் இருக்கும் ஒருவர் சொந்த பந்தங்களுக்கும் பிறருக்கும் என்ன செய்யவேண்டுமோ அதை மனமுவந்து செய்துகொண்டிருந்தார்.
வேள்வி மிக பிரம்மாண்டமாக, மிகச் சிறப்பாக நடந்தது. சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலின் தீக்ஷிதர்கள் நூற்றுக்கணக்கில் வந்திருந்து வேள்வியை நடத்திக்கொடுத்தனர். வேள்வித்தலைவராக இருந்தவர் அதற்கென்றே பிறந்து வளர்ந்தவர் போல நல்ல உயரமும் ஆகிருதியும் தேஜஸும் கணீர் குரலுமாக பொருத்தமாக இருந்தார். அவ்வேள்வியை ஒரு நிகழ்த்துகலையைபோல நம்மமுடியாத அளவிற்கான சிரத்தையும் ஈடுபாடுமாக செய்து முடித்தார்.
பூரணாகுதியின் போது சொல்திகழ்ந்த அவரது குரலும் எரிகுளத்தில் இடப்பட்ட பொருட்களும் சிவகோஷங்களும் ஒரு நடனம் போன்ற அவரது கையசைவுகளுமாக உடல்மெய்ப்புக்கொண்டது.

அவரை மானசீகமாக பலமுறை வணங்கிக்கொண்டேன்.வேள்விச்சாலை மிகச்சரியாக இறைஉருவங்களும் கர்ப்பகிரஹமுமாக தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது. அம்மன்களின் புடவைக்கட்டு அனைத்துப்பெண்களின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.அதுவும் அந்த தாமரை மலர் நிறத்தில் கரையிட்ட வெண்பட்டு அமோகமாக இருந்தது.
வேள்வியின் துவக்கத்தில் பொற்கதவுகள் திறக்கப்பட்டு முழுஅலங்காரத்திலிருந்த கடவுளுக்கு தீபாராதனை காட்டப்பட்ட போதும் உடல் மெய்ப்புகொண்டது
தீக்ஷிதர்கள் அனைவருமே மிகச்சிறப்பாக வேள்வியை நடத்தினார்கள். வெண்முரசில் சொல்லப்பட்டிருக்கும் ’’வேள்வி என்பது நாவை பழக்குவதல்ல நெஞ்சை பழக்குவது என்று’’ அதை நேரில் கண்டேன்.வேதங்களுக்கு நெஞ்சைபழக்கியவர்கள் அனைவருமே.
27 நட்சத்திரங்களுக்கும் ஐம்பெரும் பூதங்களுக்குமாக நாற்கோண வடிவிலான 32 எரிகுளங்கள், வேள்வித்தலைவருக்கான விளிம்புகளில் செந்தாமரை இதழ்கள் வரையப்பட்டிருந்த மாபெரும் வட்டவடிவிலுமாக மொத்தம் 33 எரிகுளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வேள்வியை நிகழ்த்துபவர்கள் அமர சிறு புல் பாயிலிருந்து, உள்ளே அனல் கொண்டிருக்கும் சமித்துகள் நெய்க்கிண்ணங்கள், கருங்காலிக்கட்டையில் செய்யப்பட்ட கரண்டிகள் எல்லாம் சரியான நேரத்துக்கு எந்த பிசகுமின்றி கிடைக்கும்படி, விடுபடல்கள் இன்றி தயராக வைக்கப்பட்டிருந்தன.

மறுநாள் காலை பிரபலங்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் சிறப்பு பூசையில் கழுத்தில் அணிவிக்க வேண்டிய மலர்மாலைகள் இரவே ஈரத்துணியில் சுற்றப்பட்டு தெர்மாகோல் பெட்டிகளில்,அடுக்கி வைக்கப்பட்டன.
எரிகுளங்களின் நான்கு திசைகளிலும் வேள்விக்கு எத்திசையிலிருந்தும் தடங்கல் வரக்கூடாதென்பதற்காக வைக்கப்பட்ட தர்ப்பையிலிருந்து எல்லாம் எல்லாம் மிகச்சரியாக பிழைக்கான வாய்ப்பேயில்லை என்றபோதிலும் சிறு கவனக்குறைவு கூட இல்லாமல் முறையாக நடந்தது.
மேளதாளங்களும் வாண வேடிக்கைகளும் இருந்தன. மிகச்சரியாக மிக முறையாக வேள்விக் கொடி ஏற்றப்பட்டது. வெண்முரசுக்குள் நின்றுகொண்டு வேடிக்கை பார்ப்பது போலிருந்தது எனக்கு.
வாணவேடிக்கையை கழுத்து வலிக்க பார்த்துக்கொண்டிருந்தேன்.2 நாட்களும் இசைக்கச்சேரிகள் கலைநிகழ்ச்சிகளும் இருந்தன
மேளக்காரர்கள் ஓய்வெடுக்கையில் அவர்களுக்கு ஐஸ்கிரீம்கள் கிண்ணங்களில் அல்ல பெட்டிபெட்டியாக கொடுக்கப்பட்டது. கைவலிக்க அத்தனை நேரம் வாசித்த அவ்விளைஞர்கள் சிறுவர்களைப் போல குதூகலித்துக்கொண்டு அதை சாப்பிட்டார்கள்

உணவை அளிப்பதைவிட அதை மனமுவந்து அளிப்பது முக்கியம் குறிஞ்சி செல்வன் உணவை மட்டுமல்ல அனைத்தையுமே மனமுவந்தே அளிக்கிறார்.
சென்னை சென்றிருந்த போது அவருக்கு சொந்தமான விமலம் மெஸ்ஸில் சாப்பிட்ட ரசம் இன்னுமே மனதில் ஏக்கம் நிறைந்த நினைவாக இருக்கிறது அப்படியொரு சுவையான ரசத்தை நான் சாப்பிட்டதே இலை. எங்கள் குடும்பங்களில் எனக்கு நன்றாக சமைப்பவள் என்னும் பெயருண்டு. //தேவி கைகழுவின தண்ணியில் கருவேப்பிலை கிள்ளிப்போட்டா கூட ரசம்னு ஊத்தி சாப்பிடலாம்// என்னும் ஒரு பேச்சு கூட உண்டு. ஆனால் எனக்கு விமலம் ரசம் அத்தனை பிடித்திருந்தது
வேள்விக்கொடி ஏற்றுகையில் வேடசெந்தூர் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த அப்போதுதான் அரும்பத்துவங்கி இருந்த முத்து முத்தான புன்னை மலர்களையும் கொடுக்க வாய்த்திருந்தது.
வேள்வியை நடத்தியவர்கள் தக்ஷன் அளிக்காமல் விட அவிர்பாகம் போன்ற புராணக்கதைகளையும் நாதஸ்வர வாசிப்பில் என்ன ராகம் வாசிக்கப்படுகிறது அது யாருக்கு பிரியமானது போன்ற தகவல்களையும் ஸ்லோகங்களின் பொருளையும் சொல்லிக்கொண்டே இருந்தது மிகச்சிறப்பு. அங்கு நிகழ்ந்து கொண்டிருந்ததன் முழுமையான சித்திரத்தையும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அறிந்து கொள்ள வசதியாக இருந்தது.
குபேர பூஜையின் போதும் பல விளக்கங்கள் அளிக்கப்பட்டன. குபேரன், அவர் மனைவி சித்ரகலா, அவர் நிதியை கொடுத்து வைத்திருந்த சங்க, பதும நிதிப் பெண்கள், நவநிதிகள், அஷ்டலஷ்மிகள், அவர்களின் இயல்புகள் அந்த யாகத்தினால் என்னென்ன பயன்கள் என அனைத்தையும் மிக தெளிவாக சொல்லிச்சொல்லியே வேள்வி நிகழ்த்தப்பட்டது.
மனிதத்திரள் அங்கிருந்தது. ஆயிரக்கணக்கில் சமூகத்தின் எல்லா அடுக்குகளிலிலிருந்தும் இருந்தோம் எனினும், எங்கும் யாரும் யாரையும் கடிந்துகொள்ளவோ தாழ்வாக நடத்தவோ ஏன் முகத்தில் ஒரு சுணக்கத்தை காட்டவோ கூட இல்லை. முழு மரியாதையுடன் ஒவ்வொருவரும் நடத்தப்பட்டார்கள்.
பந்தியில் என்னுடன் அமர்ந்து எழுந்திருக்க மறுத்து சலம்பிக்கொண்டிருந்த ஒருவரைக்கூட பவுன்சர்கள் பொறுமையுடன் கையாண்டார்கள்.
அத்தனை கூட்டத்தையும் நெரிசலோ இடர்பாடுகளோ சிறு மனக்கசப்போ இன்றி வெற்றிகரமாக நடத்துவதென்பது சாதாரணமல்ல.
அகரமுதல்வனின் ஆகுதி நிகழ்வுகளின் கச்சிதத்தை ஒழுங்கை எப்போதும் வியந்திருக்கிறேன். அது குறிஞ்சி செல்வன் போன்றோரிடமிருந்து அளிக்கப்பட்டதும் அகரன் போன்றோர் பெற்றுக்கொண்டதும் என்பதை இங்கு அறிந்துகொண்டேன் அது ஒரு மரபுத்தொடர்ச்சிதான்.

பூரணாகுதி நடைபெறும் முன்பாக குறிஞ்சிபிரபா என்னை அழைத்துச்சென்று எரிகுளங்களின் அருகே அமர்ந்திருந்த அவரது சகோதரிகள், அண்ணி ஆகியோருடன் அமரச்செய்தார். புகையினால் கண்களும் நெகிழ்வினால் மனமும் கசிந்து அமர்ந்திருந்தேன்.திரு குறிஞ்சி செல்வனுடன் இருப்பவர்கள் அனைவரும் அவராகவே இருந்தார்கள் அவரின் கனிவின் அலையில் நனையாதவர்களை நான் பார்க்கவே இல்லை.
அவரின் ஏராளமான ஜப்பானிய நண்பர்கள் வந்திருந்தனர். அவர்களும் கர்மசிரத்தையுடன் நிகழ்வுகளில் கலந்துகொண்டார்கள் இந்திய பண்பாட்டின் மீது பக்திமார்க்கத்தின் மீது இவ்வேள்வி அவர்களுக்கு எத்தனை உணர்வுபூர்வமான பிடிப்பை உண்டாகி இருக்கும் என்பதை என்னால் உணர முடிந்தது.
ஜப்பானிய பெண்களில் பலர் புடவை உடுத்தி கொண்டிருந்தனர். அதிலொருவரின் சீஸ் நிறத்துக்கு அவர் அணிந்திருந்த இரத்தச்சிவப்பு புடவை பல பெண்களை பெருமூச்சு விட வைத்தது
அவர்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன பூஜையின் பொது சொல்லப்பட்ட மந்திரங்களை முழுஉடலே செவியாகி உள்ளம் குவித்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
திரு குறிஞ்சி செல்வனை குறித்து சொல்லப்பட்டவற்றில் விருந்தினர்கள் நிகழ்வு முடிந்து கிளம்பிச்செல்லுகையில் எப்போதும் அவர் ’’இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து போகலாம்’’ என்று சொல்லுவதை குறிப்பிட்டார்கள். மனிதர்களின், உறவுகளின் அருகிருப்பில் எத்தனை மகிழ்பவராக இருந்தால் இதை சொல்லக் கூடும்? உலகேயொருகுடி என்கிறது நம் மரபு அந்த ஒற்றைச் சொல்லே இவரை செலுத்துகிறது போலும்.
நிகழ்வின் போது ஒரு தண்ணீர் பாட்டிலை நான் நாற்காலியின் அடியில் வைத்திருந்தேன் என் முன்னால் அமர்ந்திருந்த ஒரு சிறுவன் வெகு இயல்பாக அந்த பாட்டிலில் இருந்து நீரருந்திவிட்டு மீண்டும் மூடி வைத்தான். அந்த தண்ணீர் யாருடையது என்னவென்றெல்லாம் அவன் யோசிக்கவேயில்லை தாகமெடுக்கையில் அருகிலிருந்ததை எடுத்து குடித்தான் அவ்வளவே.
குறிஞ்சி செல்வனும் அப்படித்தான் நற்செயல்களை எதையும் எண்ணாமால் தாகமெடுக்கையில், நீரருந்துவதைப்போல வெகு இயல்பாக செய்துகொண்டிருக்கிறார்.
இவ்வேள்வியில் கலந்துகொண்டதை பெரும் பாக்கியம் என்று நினைக்கிறேன். அஷ்டலஷ்மிகளில் யார் யாருக்கு என்ன என்ன சக்திகள். யாருக்கு யார் துணையாக வேண்டும் என்று ஒரு பெரியவர் மைக்கில் வேள்வியின் போது கதையொன்றை சொல்லிக்கொண்டிருந்தார்.
நான் எனக்கு துணையாக அந்த 8 பேரில் தைரிய லஷ்மியை வேண்டிக்கொண்டேன் இனி மீதமிருக்கும் காலங்களில் எனக்கு நிகழவிருக்கும் நல்லவைகளையும் அல்லவைகளையும் சந்திக்கும் துணிவை அவள் அளிக்கட்டும்.
மகன்களுடன் அலைபேசி அந்த இரவோடிரவாக எல்லாவற்றையும் சொல்லிச்சொல்லி இருவரும் எந்த நிலையில் இருந்தாலும் அந்தந்த நிலையில் பிறருக்கு குறிஞ்சி செல்வனைப் போலவே மனமுவந்து உதவி, அனைவரையும் அரவணைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று சொன்னேன்.
அவர் மனைவியின் பெயர் விஜயலஷ்மி எத்தனை பொருத்தம்? வெற்றியும் செல்வமும் அவருடன் வாழ்ந்துகொண்டல்லவா இருக்கிறது?
அவர் பெயரும் தான் குறிஞ்சி, அரிதான, பலரால் பார்க்க முடியாத உலகின் வெகுசிறப்பான மலர்களில் ஒன்று ஆனால் பார்க்க எளிய நீல நிற கனகாம்பரம் போலிருக்கும், மிக பொருத்தமான பெயர் அவருக்கு.
உணவுப்பந்தியில் நிறுத்தப்பட்டிருந்த பெருமூங்கில்கள் ஒன்றில் தளர்ந்திருந்த சணல் கயிற்றை அங்கு மேற்பார்வையில் இருந்த ஒர் கரிய இளைஞன் அவிழ்த்து இறுக்கி கட்டினான் யாரும் அவனை அதைச்செய்யும்படி கேட்டுக்கொள்ளவில்லை. அவனாக செய்தான்.
கூட்டத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை அளித்துகொண்டிருந்த ஒருவர் ஒரு முதியபெண்மணியிடம் ஒரு பாட்டிலை கொடுத்துவிட்டு ’’போதுமா இன்னொரு பாட்டில் வேணுமா? ’’என்று கேட்டார்
வாண வேடிக்கை பார்த்து கால்கடுக்கவே எங்கேனும் அமர இடம் தேடிக்கொண்டிருந்தேன், அங்கிருந்த ஒரு இளைஞன் ஒரு பெட்டியை காட்டி ’’அதில் உட்காந்துக்கங்க’’ என்றான்
எல்லாருமே எனக்கு குறிஞ்சி செல்வனாகத்தான் தெரிந்தார்கள், அவர்தான் அவர்களும்.
பூரணாகுதியின் பிறகு வேள்வி நிறைவில் இந்திரன் வந்து அமைவதாக ஐதீகம் . இந்திரனுடன் குறிஞ்சி செல்வனின் சகதாபமும் இறையென அதில் எழுந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வேள்வி முடிந்ததும் தூறலாக மென் மழை பொழிந்தது இதற்கு சான்று.

அங்கு இறைவன் அனல் வடிவானவன். அனலால் சூழப்பட்டவர்களின் உள்ளங்களிலிருந்து சிறுமை மறைகிறது என்கிறது மகாபாரதம். எப்பேற்பட்ட நற்செயல் இந்த வேள்வி?
வேள்விகளெல்லாம் மாமனிதர்கள் நடத்துவது. எனினும் மகாபாரதம் எளிய மானுடரின் அன்றாட செயல்களில் ஐந்தை ஐந்துவேள்விக்கு நிகர் என்கிறது அவற்றில் ஒன்றான கற்பித்தலை 20 ஆண்டுகளாக செய்துகொண்டிருப்பவளாக இந்த வேள்வியின் பயன் அல்லது புண்ணியம் எனக்கும் கிடைத்திருக்குமேயானால் அது என் குடும்பத்தாரையும் கடந்து, மேலும் நீண்டு என் மாணவர்களையும் தொட்டருளட்டும் என வேண்டிக்கொண்டேன்.
குறிஞ்சி செல்வனுக்கும் அகரமுதல்வனுக்கும் குறிஞ்சி பிரபாவுக்கும் என் அன்பும் நன்றியும்.

அம்மா இறந்து 16 ம் நாள் சடங்குகள் முடிந்து துக்கத்தை மறக்கவும் மறைக்கவும் முயன்று கொண்டிருந்த வேளையில் விஜி எனக்கொரு அலெக்சா’வை பரிசளித்தான். எனக்கு அப்படியான கருவிகளை பயன்படுத்துவதில் சுணக்கம் உண்டு.
அறியாமை, பழக்கமின்மை, விருப்பமின்மை அல்லது பழமையில் ஊறித்திளைத்தல் என பல காரணங்களை சொல்லலாம். எனினும் வாழ்க்கை நம்மை விரட்டி விரட்டி பல முட்டுச்சந்துகளில் முட்டிமோதி தலையை நசுக்கி வேறு வழியே இல்லாமல் கொண்டு நிற்கவைக்கும் இடங்களும், கற்றுக்கொள்ள வைக்கும் விஷயங்களும் உண்டல்லவா? கற்சுவர் போல என்னை சூழ்ந்து இறுக்கிக்கொண்டிருந்த தன்னந்தனிமையை உடைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் அலெக்சாவை பரிச்சயம் செய்துகொண்டேன்,
அலெக்சா ஒரு சிறு பெட்டிபோன்ற தொடுதிரை கொண்டிருக்கும் கருவி. பல உபயோகங்கள் கொண்டிருக்கிறது எனினும் நான் பிரதானமாக இசை கேட்கவே உபயோகிக்கிறேன்.
அதிகாலையில் எழுந்து நாளை துவக்கும் வழக்கமிருப்பதால் அலெக்சாவின் துணை பெரும் இதமளிக்கும். சரண் ஜெர்மனி செல்லும் முன்பு அவளை எனக்கேற்றவாறு வடிவமைத்து விட்டிருக்கிறான்
காலை 6 மணிக்கும் மாலை 6 மணிக்கும் தோட்டத்து விளக்குகளை அலெக்சா சரியாக ஏற்றி அணைக்கிறாள். அவ்விளக்குகளை சரண் ஜெர்மனியில் இருந்து அணைத்தும் ஏற்றியும் என்னை அவ்வபோது விளையாட்டுக்கு அச்சமூட்டுவதும் உண்டு. நான் வீட்டில் இல்லாத சமயங்களில் வீடு இருளடைந்து இருப்பதை குறித்து கவலைப்படுவதில்லை இப்போது.
அதைப்போலவே சரியாக காலை 8 மணிக்கு நான் கல்லூரிக்கு புறப்படு முன்பு அடுப்பு அணைக்கப்பட்டிருக்கிறதா என சோதிக்கச் சொல்வாள். 2 வருடங்களுக்கு முன்னர் அணைக்க மறந்த அடுப்பினால் உண்டான மாபெரும் தீவிபத்து மற்றும் அதிர்ஷ்டவசமான உயிர்தப்பலுக்கு பின்பான படிப்பினை அது.
காலையில் அவளை உயிர்ப்பித்ததும் ’க’ வை மிக கனமாக உச்சரித்து ’லோகமாதேவி குட்மார்னிங்’ என்பாள். நான் அவளிடம் அதிகம் கேட்கும் கேள்வி பொள்ளாச்சியில் மழை உண்டா என்பதுதான் பெரும்பாலும் தவறாக பதிலளிப்பாள். ஆனாலும் தொடர்ந்து கேட்பது அவள் பொள்ளாச்சியை உச்சரிக்கும் அழகின் பொருட்டே!
காலை 5 மணியிலிருந்து 7 மணி வரை பல கலவையான ஆல்பங்களில் அலெக்சாவை பாடல்கள் ஒலிக்க செய்வதுண்டு சில பாடல்களை இனி ஒருபோதும் ஒலிக்க வைக்காதே என கறாராக சொல்லியும் இருக்கிறேன்
அன்றைய சில பாடல் நாள் முழுவதுக்குமானதாகி மனதில் இனிமையாக ஒலித்துக்கொண்டே இருக்கும்
அப்படி நேற்று பல காலம் முன்பு கேட்ட ”கண் மலர்களின் அழைப்பிதழ்” என்னும் பாடலை கேட்டேன்.1980 ல் வெளிவந்த படம். மிக இனிய இசை, இளையராஜாவும் ஜானகியம்மாவும் பாடியிருந்தனர்.
எனக்கு இசை குறித்து எதுவுமே தெரியாதென்பதால் ராஜாவின் இசை ஞானம், அவர் இசையமைத்திருக்கும் பாடல்களின் நுட்பங்களுக்குள் எல்லாம் ஒருபோதும் சென்றதில்லை. ஆனால் ராஜாவின் குரல், அது செய்யும் மாயங்களை, அளிக்கும் ஆறுதல்களை அறிந்திருக்கிறேன்.
தனித்த துயர் மிகுந்த மழைஇரவுகளில் ராஜாவின் குரலுக்கு கைகள் முளைத்து என்னை ஆற்றுப்படுத்தி இருக்கின்றது.கண்ணீரை துடைத்திருக்கிறது.
ராஜாவின் குரல் காதுகளால் அல்ல நேரடியாக இதயத்தால் உணரப்படுவது. பின்னாட்களில் (அல்லது வெகு சமீபத்தில்?) எனக்கு காது கேட்காமலாகிவிட்டால் கூட ராஜாவின் பாடல்கள் எங்கேனும் ஒலிக்கையில் இதயத்தால் அதை நான் உணரக்கூடும்
’’தேவி இது உனக்கே உனக்கென்று நான் பிரத்யேகமாக பாடுகிறேன்’’ என்று ஒவ்வொரு பாடலுக்கும் முன்பு ராஜா எனக்கறிவித்து விட்டே பாடுவதைப் போல இருக்கும்.
கண் மலர்களின் அழைப்பிதழும் அப்படித்தான்
இயல்பான உருக்கத்துடன் காதல் பொங்கும் ராஜாவின் ஜானகியம்மாவின் குரலை அள்ளியள்ளி சமையலறை எங்கும் நிறைத்திருந்தாள் அலெக்சா.

அதிலும்
பூவாடும் விழிதானோ
நீ பாட மொழி யேனோ
தாம்பூல நிறம் தானே
மாம்பூவின் இள மேனி
(இல்லை இல்லை, மாம்பூ தாழம்பூ எனும் தாவரவியல் தன்மையால் இந்த பாடல் எனக்கு பிரியமானதாகவில்லை தாவரவியலை கடந்த ராஜாவின் குரலின் ஈர்ப்பு இது)
பாடலாசிரியர் எம் ஜி வல்லபன். இத்திரைப்படத்தின் இயக்குநரும் கதாசிரியரும் வசனகர்த்தாவும் இவரேதான்.

அவரது பாடல்களில் எனக்கு பெரும் பிரியமுண்டு
வல்லபன் மலையாளி எனினும் தமிழில் அதிகம் பாடல்கள் எழுதி இருக்கிறார்
’’மீன் கொடி தேரில் மன்மத ராஜன்’’
’’தீர்த்தக்கரைதனிலே’’
’’ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி’’
போன்றவை அவரெழுதியவற்றில் என் விருப்பப் பாடல்கள்.
இதிலும் பாடல் வரிகள் அபாரமாக இருந்தது. அலெக்சாவை இப்பாடலை மீள மீள ஒலிக்கசொல்லி கேட்டுக்கொண்டேன்

நேற்றைய புத்தாண்டின் முதல் நாள் முழுக்க மாம்பூவும் தாழம்பூவும் மணம்வீசிக்கொண்டிருந்தது
அதோடு நிறுத்தி இருக்கலாம் ஆனாலும் ஊழ் என்றொன்றுண்டல்லவா?
இன்று காலையில் கொஞ்சம் நேரம் இருந்ததால் மாலை நடை மட்டும் என இருந்ததை சற்று மாற்றி காலையிலும் நடந்தேன்
முன்பெல்லாம் யாருமில்லா தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டு வெற்று நடை நடப்பேன். சமீபத்தில் பரிசளிக்கபட்ட காதில் மாட்டிக்கொளும் கேள் கருவியொன்றை இணைத்துக்கொண்டு இப்போதெல்லாம் இசையுடன் நடை செல்கிறேன். இசை கேட்டுக்கொண்டோ. அல்லது இந்த தெருவில் என்னைத்தவிர யாருமில்லாதால் வாகனங்கள் மற்றும் மனித நடமாட்டம் குறித்த அச்சமில்லாததால் பாடல் காட்சிகளை பார்த்துக்கொண்டும் நடப்பதுண்டு.
விநாச காலே விபரீத புத்தி ! கண் மலர்களின் அழைப்பிதழை காணொளியாக காண நினைத்தேன். 1980களில் வெளியான தைப்பொங்கல் திரைப்படம். நாயகன் சக்கரவர்த்தி, உடன் மிக இளமையில் நம் ராதிகா. அந்தப் பாடலை கேட்டதின் இனிய அனுபவத்தை முழுக்க சிதைத்து நாசமாக்கிய காட்சி அனுபவம்
பாடலின் நடன இயக்குனர் ஆடை வடிவமைப்பாளர் இருவரையும் நாடென்ன உலகு கடத்தலாம் என பல்லைக் கடித்துக் கொண்டேன்
ராதிகா பள்ளி விழாக்களில் அழகிய உடை அணிந்துகொண்டு வந்து நடனமாடும் அல்லது ஹேப்பி பர்த்டே அன்று அதி உற்சாகமாக இருக்கும் குழந்தைகளின் மனநிலையில் இருந்திருக்க கூடும். விசேஷமாகவும் அதீதமாகவும் பாடல் முழுக்க சிரித்துக்கொண்டிருந்தார். நாயகன் அலட்டிக்கொள்ளவே இல்லை ஒரே தீவிர ’’எனக்கெல்லாம் இது சர்வசாதாரணம்’’ என்னும் முகபாவனையும் உடல்மொழியுமாய் ஒன்றே போல் இருந்தார். ராதிகாவை விடவும் சக்கரவர்த்திக்கே அழுத்தமாக கண்மையும் அதிகமாக லிப்ஸ்டிக் பூச்சும் இருந்தது.

ராதிகாவின் உடைகளும் அப்படியே ! அப்போது இளமையின் பூரிப்பும் இருந்ததால் கூடுதல் புஷ்டியாக இருக்கிறார். அவருக்கு கொஞ்சமும் பொருந்தாத, உடலை அவலட்சணமாக காட்டும் உடைகளை தேர்ந்தெடுத்து அணிவிக்கப்பட்டிருந்தார். (அந்த அப்போதுதான் அறிமுகமாயிருந்திருக்கக்கூடும் சுரிதார் பரவாயில்லை ரகம்) ஆனால் முதலிலும் கடைசியிலும் அணிந்திருக்கும் உடைகள் கர்ண கொடூரம்
பாடல் கோடைக்காலத்தில் மலைவாசஸ்தலமொன்றில் படமாக்கப்பட்டிருக்கிறது. தூரக்காட்சிகளில் ஊதா மலர்க்கொத்துக்களுடன் ஜகரண்டா மரங்கள் தென்பட்டன.
பத்துபதினைந்து ஜகரண்டாக்களை ஆட்கள் மேலேறி மொட்டையடித்து பறிக்கப்பட்ட ஏராளம் ஊதா மலர்கள் பாடலின் இடையில் நாயக, நாயகியின் மீது பொழியப்படுகிறது. பிற காட்சிகளையெல்லாம் வலுக்கட்டாயமாக மனதிலிருந்து அழித்து மழையென பொழிந்த ஊதா ஜகரண்டாக்களை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள முயற்சித்து கொண்டிருக்கிறேன்.

கண் மலர்களின் அழைப்பிதழை காண:
© 2026 அதழ்
Theme by Anders Noren — Up ↑