தாவரவியல் பூங்காக்கள் நடத்தும்  மலர் கண்காட்சிகள் மீது எனக்கு தனித்த பிரியமுண்டு. சிறுமியாய் இருக்கையில் எல்லா பள்ளி விடுமுறைகளும் ஊட்டி லவ்டேல் லாரன்ஸ் பள்ளியில் பணிபுரிந்த அத்தை மாமா வீட்டில்தான்  இருப்பேன், எனவே கோடைக்காலத்தில் மலர் கண்காட்சி பல வருடங்களாக பரிச்சயமாகி இருந்தது. பிரபல சினிமா நடிகர்கள், எஸ்பிபி, ஜானகிம்மா உள்ளிட்ட பல இசைக் கலைஞர்கள் எஸ் வி சேகரின் நாடகம் என பல விஷயங்கள் எனக்கு  ஊட்டி மலர் கண்காட்சியில்தான் அறிமுகமானது.

அதிலெல்லாம் கொள்ளை அழகாய் கொட்டிக்கிடக்கும் மலர்களை கண்களை விரித்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்த போதுதான் எனக்குள்  தாவரவியல் ஆர்வம் முளைவிட்டிருக்கக் கூடும். 

அதன்பிறகும் கல்லூரி சுற்றுலாக்களில்  ஊட்டி மலர் கண்காட்சி  அதன் தொடர்ச்சியாக தொட்டபெட்டா செல்வது என எப்போதும் என் மனதில் மலர் கண்காட்சிகளுக்கென தனித்த இடமிருந்தது.

 நான் பேராசிரியர் ஆன பின்னர் கொடைக்கானல் ஏற்காடு மூணாறு என எங்கே மலர்க்கண்காட்சி என்றாலும் உடனே மாணவர்களையும்  அழைத்து கொண்டு செல்வது வழக்கமானது

சில வருடங்களுக்கு முன்னர் கோவையில் விவசாய பல்கலைக்கழக மலர் கண்காட்சி ஏற்பாடாகியிருந்தது அப்போதும் முழுத்துறையுமே 3 பேருந்துகளில் சென்றிருந்தோம்.

 மிக இனிய நினைவு அது ஏராளம் அயல் மலர்களும் இயல் மலர்களுமாக நேர்த்தியாக ஒருகுறையுமில்லாமல் சிறப்பாக நடத்தினார்கள் அப்போது. ட்யூலிப்களும் க்ளேடியோலஸ்களும் டேலியாக்களும் ரோஜாக்களுமாக  மலர்ப்பெருங்கடல் அன்று பார்த்தது.

 மிக முக்கியமான ஸ்டால்களும் இருந்தன மகன்கள் அப்போது சிறுவர்கள் அவர்களும் உடன் வந்திருந்தனர்  அப்போது வாங்கிய ஒரு டூல் செட் இன்னும் சரண் வைத்திருக்கிறான்

இப்போதும் கோவை மலர் கண்காட்சி என அறிவிப்பு எனக்கு வந்து சேர்ந்தது.

 எனவே துறையில் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்து அனைத்து மாணவர்களையும் அழைத்துக்கொண்டு அனைத்து பேராசிரியர்களும் கண்காட்சி துவங்கும் வெள்ளி 23 /2/24 அன்று (இன்று)  செல்வது என முடிவெடுத்தேன். துரதிர்ஷ்டவசமாக  துறைக்கான AAA எனப்படும் அகடமிக் அட்மினிஸ்ட்ரேடிவ் தணிக்கை வெள்ளி என முடிவானதால் Dr Sarvalingam அதை பார்த்துக்கொள்ளட்டும் என முடிவு செய்து மீதமிருந்த அனைவருமாக புறப்பட்டோம்

அதற்கு முன்னால் இன்னும் மகள்களை வெளியூர் அனுப்ப யோசிக்கும் கொங்கு பெற்றோர்களிடம் தொண்டை வலிக்க தாவரவியலை வகுப்பறைக்கு வெளியே கற்கும் அவசியத்தை பேசி அனுமதிவாங்கி, பேருந்துக்கு ஏற்பாடு செய்து பணம் திரட்டி முதல்வரிடம் எழுத்துபூர்வ அனுமதி வாங்கி என பலகட்ட முன்னெடுப்புக்கள் நடந்தது

கண்காட்சிக்கு நுழைவுக்கட்டணம் 150 ரூபாய் என தகவல் வந்ததும் திடுக்கிட்டேன் ஊட்டியில் கூட அத்தனை இல்லை

பொள்ளாச்சி மாணவர்கள் எல்லாம் மிக எளிய பின்புலம் கொண்டவர்கள் அவர்களிடம் பேருந்து கட்டணமல்லாது மேலும் 150 ரூபாய் வாங்க முடியாது. எனவே கோவை ரோட்டரியின் பங்களிப்பு இந்த கண்காட்சியில் அதிகம் இருந்தது என்பதால் ரோட்டரி நண்பர் ஒருவரை அழைத்து பேசினேன்

அவர் விவசாய பல்கலைக்கழக பொறுப்பாளர் ஒருவரின் எண் கொடுத்தார் அவரை அழைத்துப்பேசி மாணவர்களுக்கு மட்டும் 50 ரூபாய் அனுமதி வாங்கினேன்

ஆசிரியர்களுக்கு எந்த சலுகையும் இல்லை என்றார்கள் சரி என்று ஒத்துக்கொண்டேன்

ஆனால் 150 ரூபாய் என்றால் பொதுமக்கள் வரவும் குறையும், ஒரு சினிமாவை 120 ரூபாயில் பார்க்கிறோமே! 

மீண்டும் அந்த நண்பரிடம் பேசி அவரும் ஏற்பாட்டாளர்களிடம் பேசி அனைவருக்குமே கட்டணம் 100 என்றும் அனுமதிக்கடிதம் வைத்திருக்கும் மாணவர்களுக்கு 50 என்றும் மீண்டும் முடிவானது

இன்று காலை புறப்படுகையில் இரண்டு பேருந்துகளுக்கு முன்பு அனைத்து மாணவ மாணவர்களையும் நிறுத்தி ஒரு நல்ல உரையாற்றினேன்.

 கல்லூரிக்காலத்தில் பயணம் எத்தனை முக்கியம் அதுவும் தாவரவியல் மாணவர்களுக்கு இப்படியான மலர்கண்காட்சிகளுக்கு செல்வது எத்தனை முக்கியம் என்பதையும் அங்கு காணப்போகும் எக்ஸோட்டிக் மலர்களை வேறெங்கும் காண வாய்ப்பில்லை என்பதையும் சொல்லி நான் முன்பு  ட்யூலிப் மேனியாவை குறித்து எழுதிய மலர்பித்து என்னும் கட்டுரையின் இணைப்பை அளித்து அதையும் வாசிக்கச் சொல்லி அந்த ட்யூலிப்மலர்களை இன்று அவர்கள் பார்க்க விருக்கிறார்கள் என்பதையெல்லாம் சொன்னேன்

  அவர்களை ஒரு பேரனுபவத்திற்கு மனதளவில் தயராக்கி பின்னர்புறப்பட்டோம்

நல்ல வெயிலில் 9.45க்கு  வந்து சேர்ந்தோம்.தாவரவியல் பூங்கா இருக்கும் இடத்துக்கு பேருந்து செல்லமுடியாது நெரிசலாகும் என்று எதிரிலிருக்கும் விவசாய பல்கலைக்கழகத்துக்குள் பேருந்தை நிறுத்த சொல்லி அங்கிருந்து வெகுதூரம் நடந்து வந்து சாலையை கூட்டமாக கடக்க காவலர்கள் உதவி பின்னர் கண்காட்சி நடக்கும் இடத்துக்கு ஒருவழியாக வந்தோம்

 வாழ்க்கையை விட பல பல திருப்பங்கள்  கொண்டிருந்த மூங்கில் கழிகளால் உருவாக்கப்பட்டிருந்த தற்காலிக வழியில் நடந்து நடந்து நுழைவுச்சீட்டு கொடுக்கும் இடம் வந்ததும் UPI அல்லது பணம் இரண்டில் எது என்னும் கேள்வி, தொகையாக செலுத்துகிறேன் என்றதும் அதற்கு மேலும் சில திருப்பங்கள் செல்ல வழி காட்டினார்கள்

சலிக்காமல் அங்கும் நடந்து முதல்வரின் கடிதம் வேண்டும் என கேட்டிருந்தார்கள் அதை கொண்டு வந்திருந்தோம் காட்டினோம் ஆனால் சலுகை இல்லை அனைவரும் 100 கட்ட வேண்டும் என்றார்கள். நான் தொடர்பு கொண்ட பேராசிரியரின் பெயரை சொல்லி அவர் போனில் அனுமதி அளித்திருக்கிறார் என்றேன்

பதிலுக்கு அவரிடம் போய் எழுதி வாங்கி வாருங்கள் என்றார்கள் எனக்கு பொறுமை குறைய தொடங்கியது. நாங்கள் வெளியூரிலிருந்து வந்து எங்கேயென்று இங்கிருக்கும் ஒரு பேராசிரியரை தேடிப்போவோம் 100க்கும் மேற்பட்ட இளம் மாணவ மாணவிகள் கடும் வெயிலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கோபித்துகொண்டதும் யாரோபோய் எங்கேயோ எழுதி வாங்கி வந்து ஒருவழியாக சலுகை கட்டணம் மாணவர்களுக்கு அளித்தார்கள்

கைகளில் அணிந்துகொள்ளும் காகித பேண்ட் ஒன்றை தீவிரமாக ஒரு பெண் எண்ணி எண்ணி எடுத்துக்கொடுத்தாள். 100 ரூபாய்க்கு பச்சை 50 க்கு இளம் சிவப்பு

வாங்கிகொண்டு வெளியே வந்து கைகளில் அணிந்துகொண்டிருக்கையில்தான் 25  எண்ணிக்கை குறைவாக பேண்ட் கொடுத்திருந்தார்கள் என்பது தெரிந்தது.

மீண்டும் அதே  இடத்துக்கு சென்று மீண்டும் எண்ணி வாங்கிகொண்டு வந்து ஏராளம் கெடுபிடிகளுக்கு மத்தியில் மலர் கண்காட்சி முகப்புக்கு வந்தோம்

Birds of paradise எனும் அரிய மலர்களை  கத்தரித்து நிலத்தில் நட்டு முகப்பில் அலங்கரித்திருந்தார்கள்’அதை அப்படியே தொட்டிகளில் வைத்திருக்கலாம் இன்றே அனைத்தும் வாடிவிடும் என்று ஆதங்கமாக இருந்தது

முகப்பில் கோவை மலர்கண்காட்சி என்பதையே மலர்களில் அமைத்திருந்தார்கள்.

 அங்கு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்

உள்ளே மேலும் கெடுபிடி இரண்டிரண்டு பேர்களாக வரவேண்டும் என்று. அப்படியே சென்றோம், ஒரு ஸ்கேனர் வழியாக செல்ல பணிக்கப்பட்டோம்.

எனக்கு ஆர்வம் அதிகமானது இத்தனை கனகச்சித ஏற்பாடுகள் இருப்பதால் முன்னைக் காட்டிலும் பிரமாதமான கண்காட்சியாக இருக்கும் என்று.

கோவை ரோட்டரி தொண்டாமுத்தூர் எல்லாம் எங்களை வரவேற்கும் அலங்கார தட்டிகள் ஆங்காங்கே நின்றன.

முகப்பில் ஒரு ரோட்டரி தட்டி ஒன்று தலைகுப்புற விழுந்து கிடந்தது அதை சரி செய்ய யாரையும் காணோம்.

ஒரு மரத்தடியில் ட்யூலிப் கள் தெரிந்ததும் ஆர்வமாக முதலில் அங்கே போனேன்

மஞ்சள் வெள்ளை சிவப்பு என எல்லா நிறங்களில் இருந்த ட்யூலிப்கள் புதுமண பெண்கள் போல் தலை குனிந்து நிலம் பார்த்திருந்தன

அருகில் சென்றால் அவை அனைத்தும் செடியில் இருக்கும் மலர்களல்ல வெட்டப்பட்ட மலர்த்தண்டுகளை பச்சை ஸ்பாஞ்சில் நட்டுவைத்திருந்தார்கள்.

முதல் நாள் காலையிலேயே அத்தனை வாடி தலைகவிழ்ந்திருக்கும் இவை இன்னும் இரண்டு நாட்களில் எப்படி இருக்கும் என நினைத்துக் கொண்டோம் அன்னப்பட்சிகள்  முயல் என் சில மலரலங்காரங்கள் நல்ல தகிக்கும் வெயிலில் வைக்கப்பட்டிருந்தன அவற்றில் செருகப்பட்டிருந்த மலர்கள் 1மணி நேரத்தில் வாடிவிடும் அளவுக்கு வெயில் அறைந்துகொண்டிருந்தது

 இதுபோன்ற மலரலங்காரங்கள் ஊட்டியின் சீதோஷ்ணத்துக்கு எந்த இடத்திலும் வைக்கலாம் கடுங்கோடை துவங்கி இருந்த கோவை பூங்காவில் நிழலான இடங்களில் தான் வைக்கப்பட்டிருக்க வேண்டும்

என்னதிது ஆரம்பமே இப்படி என உள்ளே என்னவோ எச்சரிக்கை மணி அடித்தது.

அவசர அவசரமாக வெட்டப்பட்ட தாவரங்களின் மிச்சம்மீதிகள் எல்லாம் அலங்காரங்களுக்கு அருகில் பெருக்கி சுத்தம் செய்யப்படாமல் அப்படியே குப்பையாக கிடந்தன.

வரிசையில் கையில் அடையாள பேண்ட் கட்டிக்கொண்டு ஸ்கேனர் வழியாக வந்த எங்களுக்கு முன்னால் எந்த ஸ்கேனரிலும் வந்திருக்க சாத்தியமில்லாத தெரு நாய்கள் குப்பைகளை கடித்துக்கொண்டு திரிந்தன. திகைப்பாக இருந்தது’, எதற்கு வாசலில் அத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணினார்கள் உள்ளே நாய்கள் திரிகையில்?

குஞ்சு குளுவான்களாக கிண்டர்கார்டன் குழந்தைகள் எல்லாம் கூட்டமாக பேருந்துகளில் வந்திருந்தார்கள்.

கோடைக்காலமென்பது ரேபிஸ் காலமும்தான் அந்த குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திருக்கவேண்டாமா?

முகப்பிலிருந்து வழியெங்கும் செடிகளுக்கு நீர் ஊற்றப்படாமல் வறண்டு நிலம் இறுகிக்கிடந்தது இன்றிலிருந்து கண்காட்சி, ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதற்காக அல்ல கோடையில் செடிகளுக்கு நீர் விடவேண்டாமா?

நிலத்திலிருக்கும் செடிகளுக்கு மட்டுமல்ல தொட்டிச்செடிகளும் வாடி பாவமாக இருந்தன. தொட்டிகளின் மண்ணையும் தொட்டுப் பார்த்தேன் பாறைபோல் இறுக்கம்

ஆனால் வேடிக்கையாக செயற்கை நீரூற்றுக்களில் நீர் பீய்ச்சி அடித்துக்கொண்டிருந்தது

என்ன அநீதி எத்தனை முரண்?

தாவரங்களை பார்க்கவென்று 60 கிமீ தொலைவில் இருந்து கட்டணம் செலுத்தி உள்ளே வந்திருக்கிறோம் செடிகளுக்கு நீர் இல்லாமல் வாடிகிடக்கையில் செயற்கை நீரூற்றில் நீர் ?

மேலும் மேலும் பெருந்துகளில் பள்ளிக் குழந்தைகளும் கல்லூரி மாணவர்களும் வந்தபடியே இருந்தனர்.

எங்களுக்கு பிறகு வந்தவர்களுக்கு கைகளில் வண்ணப்பட்டைகள் இல்லை. உள்ளே ஏராளமான ஸ்டால்கள்.

வரும் சிவராத்திரிக்கு இலவச அமர்வுக்கு அணுகினார்கள் வருவதானால் விண்ணப்பிக்கிறேன் என்று சொல்லி விலகினேன்

கண்பார்வையை சோதித்துக்கொள்ளுங்கள் என்று ஒருவர் பின்னாலேயே வந்தார்.

பலமுறை மறுத்து என்னை விடுவித்துக்கொண்டேன்

அடுத்து  தைராய்டு செக் பண்ணிகொள்ளச் சொல்லி வற்புறுத்தல். மறுத்து அவசரமாக விலகினோம்.

வீட்டுக்கடன் தரும் நிறுவனம் நொச்சுப்பண்ணிக்கொண்டே இருந்தார்கள் கைகளில் ஏராளமாக் துண்டுச்சீட்டு களும் விளம்பரங்களும் நிறைத்தார்கள்.

எதற்கு வந்தோம் என்ன நடக்கிறது என்று யோசித்து கொண்டே நடந்தேன். அல்லிக்குளத்தில் காலி தண்ணீர் பாட்டில்கள் குப்புற கிடந்தன துணையாக காலி சிப்ஸ்பாக்கட்டுகளும் மிதந்தன.

ஸ்டால்களை தவிர எங்குமே குப்பைத்தொட்டிகள் இல்லை நோட்டீஸ்கள் எல்லாம் கசக்கி போடப்பட்டு பூங்காவெங்கும் இரைந்து கிடந்தன.

என்னிடம் இருந்தவற்றை போட குப்பை தொட்டி தேடி எங்கும் கிடைக்காமல் ஒருமரத்தடியில் வேறு வழியே இல்லாமல் போட்டேன்

டென்னிஸ் கோர்ட் போல் ஒரு மலரமைப்பு அங்கும் மலர்செடிகள் இல்லை வரிசையாக பச்சை ஸ்பாஞ் வைத்து அதில் வெண்ணிற மலர்கள் அமைத்திருந்தார்கள் அதுவும் நல்ல வெயிலில்.

கோழிகொண்டை பூச்செடிகள் வைத்திருந்த தொட்டிகள் எல்லாம் நீரின்றி பரிதாபமாயிருந்தன.

அலங்கார வாழைமரங்களில் பாதியை அப்போதுதான் கட்டிக்கொண்டு இருந்தார்கள். 11 30 மணிக்கு மேலும் பல பெட்டிகளில் மலர்கள் பிரிக்கப்பட்டிருக்கவில்லை

அழைப்பிதழில் 9 – 7 மணி என்றிருந்தது

ஆனால் முற்பகலாகியும் எதுவுமே துவங்கப்பட்டிருக்கவில்லை

அரசுப்பொருட் காட்சியை நினைவூட்டும் உணவுக்கடைகள் அலங்காரபொருட்கள் விற்கும் கடைகள் துவங்கி இருந்தன

வீடு துடைக்கும் மாப்  விவசாயபொருட்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஊறுகாய்கள் விற்கபட்டன

வழிகாட்டும் அறிவிப்புக்கள் இல்லை, எங்கு சென்று எதைபார்த்தபினன்ர் எதைப்பார்க்க வேண்டும் என்பதை  நாங்களாகவே  முடிவு செய்தோம்.

அழகிய ஊதா மலர்களுடன் படர்ந்திருந்த பெட்ரியாவின் மலர்களை ஒரு குடும்பமே இஷ்டத்துக்கு பறித்து தலையில் வைத்துக்கொண்டு போட்டோ எடுத்து கொண்டார்கள். தடுக்க யாரும் இல்லை. ’நான் அவர்களிடம்  உங்களுக்கு பின்னால் வருபவர்கள்  இந்த பூக்களை  பார்க்க வேண்டாமா? என்றேன் என்னை முறைத்துவிட்டு நகர்ந்தார்கள்.

காபி குடிக்கலாம் என்றார்கள் உடன்வந்த பேராசிரியர்கள் வாங்கினோம் காபியாக இல்லாமல் பாயசத்தின் அக்காவாக தித்தித்தது. கீழே ஊற்றிவிட்டு நடந்தேன்

ஒரே மாதிரியாக அடீனியம் போன்ஸாய்கள்  அடுக்கி வைக்கப்பட்டிருந்தன

 பூங்காவின் கடைக்கோடியில்  நர்சரி இருந்தது அங்கிருந்து வாசல்வரைக்கும் செடிகளை வாங்கியவர்கள் சுமந்துகொண்டு செல்ல கஷ்டமாயிருக்கும். எப்போதும் கண்காட்சிகளில் இதுபோன்ற செடி விற்பனை எக்ஸிட்டுக்கு அருகில்தான் இருக்க வேண்டும்

பலர் இதற்கு சங்கடப் பட்டுக்கொண்டே வாங்காமல் சென்றார்கள் சிலர் புலம்பிக்கொண்டே வாங்கினார்கள்

நானும் கொடி ரோஜாச் செடிகள் வாங்கினேன்

வைத்துக்கொண்டு போகும் கவரொன்று 10 ரூபாய்க்கு கொள்ளை விலை சொன்னார்கள் சரியென்று வாங்கினேன் வேறு வழியில்லை வாசல் வரை சுமக்கனுமே?

ஆனால் வாங்கிய செடிக்கு பில் கேட்டால் இல்லை என்றார்கள்.’உண்மையிலேயே கடுப்பாக இருந்தது

3 கவர்களுக்கு 30 ரூபாய் கொடுத்தபின்னர் 2  கவர்தான் இருக்கிறதென்றார்கள்

 என் பொறுமை விளிம்புக்கு வந்து அதலபாதாளத்தை நோக்கி பாயத்துவங்கலாம் என்னும் எச்சரிக்கை அடைந்தேன். எனவே விரைந்து அங்கிருந்து நகர்ந்தேன்

கழிப்பறைக்கு சென்று விட்டு உணவருந்தலாம் என்று  தேடினோம். கழிப்பறை என்னும் அம்பு குறி அதிசயமாக எங்களுக்கு வழிகாட்டியது

கொடுமைகளில் மகா கொடுமையாக அத்தனை கூட்டத்துக்கு  3 தான் இருந்தது. மூன்றும் தற்காலிக கழிப்பறைகள்.  அவை மூன்றுமே உள்ளே பெண்கள் அமர்ந்து உபயோகிக்க முடியாதபடி கான்சன்ட்ரேஷன் கேம்ப் அறைகளைபோல மிக மிக குறுகலானவை. 

கழிப்பறைகளுக்கு முன்பாக பள்ளிப்பெண்களின் வரிசை நீண்டிருந்தது.  மூன்றிலிருந்தும் கழிவு நீர் வெள்ளமென வெளியெ வழியத்துவங்கியிருந்தது. உள்ளே பக்கட் மட்டும் இருக்கு மக் இல்லை என ஒரு சிறுமியின் கூச்சல் கேட்டது

அங்கே நிற்க முடியாமல் அடையாள அட்டை அணிந்திருந்த ஊழியர்களை விசாரித்து, செடிகளையும் சுமந்துகொண்டு நடந்து நடந்து நடந்து கண்டுபிடித்த  விளையாட்டு திடலுக்கருகே இருந்த கழிப்பறை மகா கோரமாக பலர் உபயோகித்து சேறும் சகதியும் நாற்றமுமாக இருந்தது

  வேறு வழியில்லாமல் அதையே  உபயோகிக்கச் சென்றால் அங்கு  கதவுக்கு தாழ்ப்பாள் இல்லை ஒருவர் உள்ளிருக்க ஒருவர் வெளியில் கதவை பிடித்துக் கொண்டு பயன்படுத்தினோம்

அருகில் பல பெண்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை குறிப்பாக ரோட்டரி அமைப்பை ஏகத்துக்கும் வசைபாடிக்கொண்டிருந்தார்கள்

நாங்களும் அதே!

பூங்கவெங்கும் உணவு மிச்சங்கள் காகிதங்கள் இறைந்து கிடந்தன

தெருநாய்கள் நடமாடினது போதாமல் நாய் கண்காட்சியும் இருந்தது.

பல கல் பெஞ்சுகளின் அருகில் அகற்றப்படாத குப்பைகள் குவிந்தும் பைகளில் கட்டப்பட்டும் கிடந்தன

 இப்படி பல பரிதாபங்களுக்கு இடையில் மாணவர்களுக்கு சிலவற்றை காண்பித்தேன்

 எனினும் விவசாய பல்கலையின் முக்கிய அங்கமான தாவரவியல் பூங்காவின் மரங்கள் கூட பெயரிடப்பட்டிருக்கப்படவில்லை என்பதை என்ன சொல்வது?

  முன்பு  இல்லாவிட்டாலும் கண்காட்சியின் பொருட்டாவது எழுதியிருக்கலாமே!

நீரில்லாத, பேரில்லாத செடிகளை காணவா கட்டணமும் கெடுபிடிகளும் சோதனைகளும் நீண்ட பயணமும்?

எத்தனையோ மறக்கமுடியாத மலர் கண்காட்சிகளின்  நினைவுகளுக்கு நடுவே முள்ளாய் உறுத்தும் இந்த கோவை 6 வது மலர் கண்காட்சி என்னும் பெயரில் நடந்த பரிதாப காட்சிகள்.